Month: August 2016

  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    ”MIRA KE PRABHU”
    ———————————–

    kesav

    ’’கிரிதரன், கோபாலன், காற்றினிலே கீதன்,
    கரிதரன், மீராவின் காதல் -வெறிதரன்,
    வெண்ணை உறிதரன், வீரம் புரிதரன்(பாரதப் போர்)
    கண்ணன் சிரிதரன்(ஸ்ரீதரன்) காண்’’….கிரேசி மோகன்….!

    “காதலுக்குக் கண்ணில்லை, கண்ணனின் பக்திக்கண்
    காதலி மீராவை கண்டுகொள்ள:-ஆதலினால்
    காதலிப்பீர் கண்மூடி காற்றிசைக்கும் கீதத்தை;
    யாதுமான யாதவனே யாப்பு”….!

    யாப்பு-Grammar….

    “மறைந்திருந்து பார்க்கின்றாள் மர்மமாக மீரா,
    கரைந்துருகி கானக்கண் கொண்டு; -உறைந்தபனி
    நெஞ்சிலே பக்தி நெருப்பைக் கொளுத்திவிட,
    மஞ்செழில் வண்ணன் மெழுகு”….கிரேசி மோகன்….

    மஞ்சு-மேகம்…

    Share
  • நான்மாடக்கூடல் நாயகி!

    பவள சங்கரி

    அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் ஆலயம் – மதுரை

    am1

    அன்னை மீனாட்சியின் ஆட்சியின் அருமைப் பெருமைகள் அனைத்தும் தெள்ளத் தெளிவாகக்காட்டும் அற்புத ஆலயம் இது.

    am
    இமைகளற்ற மீன் தன் முட்டைகளை கண் பார்வையின் சக்தி கொண்டே பொரிக்கச்செய்து காத்து வருவதைப்போன்று மீன் போன்று அழகிய வடிவுடை நயனங்களைப் பெற்ற அன்னை மீனாட்சி இப்புவி மக்களை கண்ணிமைக்காது காத்து வருகின்றாள். இதன் காரணமாகவே அன்னை மீனாட்சி என்ற திருநாமமும் கொண்டாள்! அன்னை எழுந்தருளியிருக்கும் புனிதத் தலம் மதுரை மாநகர். பாண்டிய மன்னன் குலசேகரப் பாண்டியனின் கனவில் சிவபெருமான் தோன்றியதால் கடம்பவனம் என்ற வனத்தை அழித்து மதுரை மாநகரையும் இந்த சிவசக்தி தலத்தையும் அமைத்ததாகக் கருதப்படுகிறது. மீனாட்சி அம்மன் கோவிலைச்சுற்றி நான்கு மாடங்கள் அமைந்துள்ளதால் நான்மாடக்கூடல் என்ற அழகிய பெயரும் மதுரைக்கு உண்டு.

    am5

    45 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் 14 கோபுரங்களும், 5 வாயில்களும் கொண்ட மீப்பெரும் தலம் இது. சுந்தரேசுவரர் ஆலயம் இரண்டு விமானங்களைக் கொண்டது. 32 சிம்மங்களும், 64 சிவகணங்களும், 8 வெள்ளை யானைகளும் இந்த கருவறை விமானங்களைத் தாங்குகின்றன என்பது சிறப்பு.

    மதுரையில் சிவபெருமானின் முதல் திருவிளையாடலாக இந்திரனுக்கு சாபவிமோசனம் தந்த நிகழ்வு அமைந்தது. சுந்தரேசுவரரின் மேலமைந்த விமானம் இந்திரன் தம் பாவத்தைப் போக்கிக்கொள்ள சுயம்புவாகத் தோன்றிய சுந்தரேசுவரரை வழிபட்டு, தம் பாவம் நீங்கப்பெற்று இவ்விமானத்தை அமைத்ததாகப் புராணங்கள் தெரிவிக்கின்றன. இத்திருவிளையாடல் சித்ரா பௌர்ணமியின்போது நடைபெறுகிறது. இதன் காரணமாக இதே நாளில் உச்சிக்காலத்தில் சிவன் சன்னதி எதிரில், இந்திரன் சிலையை வைத்து சிவனுக்கு தீபாராதனை செய்கின்றனர். இந்த பூசையை இந்திரனே செய்வதாக ஐதீகம்.

    am3

    தாமரை மொட்டு மலர்ந்தது போன்று ஐந்து புறங்களும் இதழ் விரித்த நிலையில், மத்தியில் மொட்டாக ஆலயமும் சுற்றிலும் இதழ்களாகச் சாலைகளுமாக அழகிய வடிவில் விரிந்து கிடக்கும் பல நூற்றாண்டுக்கால பழமையான ஆலயம், மீனாட்சி சுந்தரேசுவரர் ஆலயம்.

    am2

    பூவுலகக் கயிலை என்று போற்றப்படும், விலைமதிப்பற்ற பச்சை மரகதத் திருமேனி கொண்ட அன்னை எழுந்தருளியிருக்கும் இவ்வாலயம் 45 ஏக்கர் (180,000 சதுர மீட்டர்கள்) பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. 254 மீட்டர் நீளமும் 237 மீட்டர் அகலமும் கொண்டுள்ள இவ்வாலயம் வரலாற்றுத் தொன்மையும் பிரமிக்கவைக்கும் அற்புதமான சிற்பக்கலை நுணுக்கமும் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஆலயத்தின் உட்பகுதியில் ஒரு ஏக்கர் பரப்பளவில் அழகாக மலர்ந்திருக்கும் பொற்றாமரைக் குளமும், தல விருட்சமான கடம்ப மரமும் ஆலயத்திற்கு அழகு சேர்ப்பவை. குளத்தைச் சுற்றி சிவபெருமானின் அறுபத்து நான்கு திருவிளையாடல்களும் அழகுச் சித்திரமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. கருவறை எழுப்பிய பாண்டிய மன்னனின் உருவம் இக்குளத்தின் வடகரையில் உள்ள தூணில் பொறிக்கப்பட்டுள்ளதோடு இப்படித்துறை “பாண்டியன் படித்துறை’ என்றும் அழைக்கப்படுகிறது. குளத்தின் தென்கிழக்கு மூலையிலிருந்து சுவாமி மற்றும் அம்மன் சன்னதிகளின் தங்க கோபுரங்களை வழிபடலாம்.

    மீனாட்சிஅம்மன் கோயில் தோன்றிய காலத்தில் இத்தலம் கடம்ப மரங்கள் நிறைந்த வனமாக இருந்ததாக திருவிளையாடற் புராணம் கூறுகிறது. தனஞ்செயன் எனும் வணிகன் கடம்பமரத்தின் அடியில் சொக்கநாதரை தரிசித்ததாக தல வரலாறு கூறுகின்றது. இதற்கு ஆதாரமாக இன்றளவிலும் சுவாமி சன்னதியில் உட்பிரகாரத்தில் துர்க்கை அம்மன் சன்னதியின் எதிரில் காய்ந்து போன நிலையில் மிகப்பழமையான கடம்ப மரம் ஒன்று இருப்பதைக் காணமுடிகிறது.

    600 வருடங்களுக்கும் மேலான கட்டுமானத் திட்டத்தின் மூலம் உருவாகிய இவ்வாலயத்தில் நம்மை அதிசயிக்கவைக்கும் எண்ணற்ற கலையம்சம் மிக்க வேலைப்பாடுகள் நிறைந்த கிட்டத்தட்ட 3 கோடி சிற்பங்கள் உள்ளன. தற்போது நவீன வர்ணப்பூச்சுகளால் இக்கோவில் அலங்கரிக்கப்பட்டிருந்தாலும் பழமையின் சுவடுகள் மாறாமல் மலையென நிமிர்ந்து நிற்பது கண்கொள்ளாக் காட்சி!

    தமிழகத்தின் தூங்காநகரம் என்று பேறுபெற்ற மதுரை மாநகரில் அமைந்துள்ள பிரம்மாண்டமான ஆலயம் இது. இக்கோவிலின் மூலவர் சுந்தரேசுவரர் என்றாலும் மீனாட்சி அம்மையே இங்கு ஆட்சி செய்கிறாள் என்பது ஐதீகம். ஆம், சிவபெருமானுக்கு உகந்தது சிதம்பரம் கோவில் என்பதுபோல், மீனாட்சி அம்மனுக்கு பெருமை சேர்ப்பது மதுரை. 2500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இவ்வாலயம் சிவபெருமான் நடராசராக நடனம் ஆடிய பேறுபெற்றவைகளுள் ஒன்று. வெள்ளி சபை என்று குறிக்கும் வகையில் இக்கோவில் நடராசர் திருமேனி வெள்ளியால் ஆனவர். திருஞான சம்பந்தரால் பாடல்பெற்ற தலம் இது.

    மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு
    சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு
    தந்திர மாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு
    செந்துவர் வாயுமை பங்கன் திருவால வாயான் திருநீறே

    என்று திருநீற்றுப் பதிகம் பாடிய பேறுபெற்ற ஆலயம் இதுதான். எவராலும் தீர்க்கமுடியாத, கூன் பாண்டியனின் வெப்பு நோய் அகலற்பொருட்டு, குலச்சிறையாரின் ஆலோசனையின் பேரில் திருஞானசம்பந்தப் பெருமானாரை வேண்டி அழைத்துவருகின்றனர். அவன் வெப்பு நோயை விலக்க அனல் வாதம் புனல் வாதம் செய்து, பாண்டி நாட்டில் சைவத்தை நிலைபெறச் செய்யும்பொருட்டு பாடியருளியது இத் திருநீற்றுப் பதிகம் .

    இது காரணம்கொண்டே சிவன் சன்னதி எதிரேயுள்ள கொடிமரத்தில் வழக்கமாக பொறிக்கப்படும் விநாயகர், நந்தி உருவங்களுக்குப்பதிலாக சம்பந்தர் உருவம் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. திருநீற்றுப்பதிகம் பாடி மடைப்பள்ளி சாம்பலை கொண்டே கூன் பாண்டியனின் வெப்பு நோயைக் குணமாக்கிய பேறுபெற்றவர். இந்த வகையில் சமண மதத்தினருடன் போட்டியிட்டு மீண்டும் சைவ சமயத்தை நிலைநாட்டி மதுரையில் சிவ வழிபாடு தழைப்பதற்கு காரணமாக இருந்தவர் சம்பந்தர் என்பதாலேயே சுவாமி சன்னதி கொடிமரத்தில் சம்பந்தரை வடித்துள்ளனர்.

    ஆடி வீதிகளில் நாற்புறங்களும் ஒன்பது நிலைகளைக்கொண்ட நான்கு உயர்ந்த கோபுரங்களும் வெவ்வேறு காலகட்டங்களில் கட்டப்பட்டுள்ளன. தெற்கு கோபுரம் 160 அடியில் நெடிதுயர்ந்து நிற்பதைக் காணலாம். கிழக்குக் கோபுரம் கி.பி. 1216 – 1238 ஆண்டிலும், மேற்கு கோபுரம் கி.பி. 1323 ஆம் ஆண்டிலும், தெற்கு கோபுரம் கி.பி. 1559 ஆம் ஆண்டிலும், வடக்கு கோபுரம் கி.பி. 1564 – 1572 ஆம் ஆண்டிலும் கட்டப்பெற்று முடிக்கப் பெறாமல், பின்னர் 1878 ஆம் ஆண்டில் தேவகோட்டை நகரத்தார் சமுதாயத்தைச் சேர்ந்த வயிநாகரம் குடும்பத்தினரால் முடிக்கப்பட்டதாகவும் வரலாறு மூலமாக அறிய முடிகிறது.

    ஏனைய பிற ஆலயங்களுக்கு இல்லாத ஒரு பேறு மீனாட்சியம்மன் கோயிலுக்கு உண்டு. அதாவது தமிழ் மாதங்களில் நடக்கும் விழாவின்போது, சுவாமியும், அம்மனும் எந்தெந்த வீதிகளில் எழுந்தருளுகிறார்களோ அந்தந்த வீதி, அம்மாதத்தின் பெயரிலேயே அழைக்கப்படுகிறது. ஆடி, சித்திரை, ஆவணி, மாசி வீதி என கோயிலைச் சுற்றி நான்கு வீதிகள் இருக்கின்றன. சிவபெருமானின் சிறப்பான திருவிளையாடல்களில் ஒன்றான “பிட்டுக்கு மண் சுமந்த லீலை’ நடந்த ஆவணி வீதி மட்டும், மூல நட்சத்திரத்துடன் இணைந்து ‘ஆவணி மூல வீதி’ என அழைக்கப்படுகிறது. இவ்விழாவின் போது சுவாமி வீதியைச் சுற்றி வலம் வருகிறார்.

    மீனாட்சி அம்மன் ஆலயத்தில் சொக்கநாதர் கருவறை 48 ஆண்டுகளாக மூடப்பட்டு இருந்ததாக வரலாறு கூறுகின்றது. 1330ஆம் ஆண்டு அன்னியர் படையெடுப்பின் போது மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் திருவுருவங்களை நாசம் ஏற்படுத்த முயற்சி நடந்திருக்கிறது. இதன் காரணமாக கருவறையில் இருந்த சிவலிங்கத்தை மூடி அதன்மேல் கிளிக்கூண்டு ஒன்றை அமைத்து மணலைப் பரப்பி, கருவறை வாசலை கற்சுவர் கொண்டு மூடியும்விட்டனர். பின் கருவறைக்கு முன்னால் அமைந்துள்ள அர்த்த மண்டபத்தில் வேறொரு சிவலிங்கத் திருமேனியை அமைத்து வைத்துள்ளனர். அன்னியர்கள் அந்தச்சிலைதான் சுந்தரேசுவரர் என நினைத்து அதைச் சிதைக்க முற்பட்டனர். சிதைக்கப்பட்ட அந்த சிவலிங்கமும் தற்போது சுவாமி சன்னதியை ஒட்டி உள்ளதைக் காணலாம். சுந்தரேசுவரர் கருவறை கிட்டத்தட்ட 48 ஆண்டுகள் தொடர்ந்து அடைக்கப்பட்டு பூசை செய்யப்படாமல் இருந்த நிலையில், கம்பண்ணர் என்ற வீரர் அன்னியர்களை வென்று மீண்டும் கருவறையைத் திறக்க ஏற்பாடு செய்துள்ளார். 48 ஆண்டுகளுக்குப் பிறகு கருவறையை திறந்தபோது, முன்பு பூசப்பட்ட சந்தனத்தின் மணம் மாறாமல் இருந்ததோடு, சிவலிங்கத்திருமேனியின் இருபுறமும் ஏற்றி வைக்கப்பட்ட வெள்ளி விளக்குகள் அணையாமல் எரிந்துகொண்டு இருந்ததாகக் கூறப்படுகிறது. இது இவ்வாலயத்தின் அதிசயிக்கத்தக்கதொரு செய்தி.

    அம்மன் சன்னதி நுழைவு வாயிலை ஒட்டி உள்ளது ஊஞ்சல் மண்டபம் . ராணி மங்கம்மாள் இதை உருவாக்கியுள்ளார். ஊஞ்சல் மண்டபத்தின் எதிர்புறம் தெப்பக்குளத்தின் மேற்குக் கரையில் மங்கம்மாள் மற்றும் நாயக்க அரசர்களின் தளபதியாகிய ராமப்ப அய்யர் போன்றோருக்குச் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    அருகில் உள்ள சங்கிலி மண்டபத்தில் சுக்ரீவன், வாலி, கிராதார்ச்சுனர் ஆகியோரின் சிலைகள் உள்ளன. சுவாமி சன்னதிக்கு வெளியே, கொடிமரத்தின் அருகே அமைந்துள்ள, தற்போது தியான மண்டபமாக உள்ள நூறு தூண்கள் கொண்ட நூற்றுக்கால் மண்டபம் உள்ளது. 1526ஆம் ஆண்டில் சின்னப்ப நாயக்கர் என்பவர் இதைக் கட்டியுள்ளார். நடராசப்பெருமானின் திருநடனக் காட்சியையும் இங்கு காணலாம்.

    கிழக்கு கோபுரத்தின் வழியாக அம்மன் சன்னதிக்குள் நுழையும்போது முதலில் வரும் மண்டபம் அட்டசக்தி மண்டபம். இதில் உள்ள எட்டு தூண்களில் கவுமாரி, ரௌத்ரி, வைசுணவி, மகாலட்சுமி, எக்குரூபணி, சியாமளா, மகேசுவரி, மனோன்மணி ஆகிய எண்சக்திகள் காட்சியளிப்பது சிறப்பு. அட்டமா சக்திகளையும் வழங்கும் அன்னையர் இவர்களே.

    இதனை அடுத்து அமைந்துள்ளது 160 அடி நீளம் கொண்ட மீனாட்சி நாயக்கர் மண்டபம். இங்கு ஆறு வரிசைகளாகத் தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. திருமலைநாயக்க மன்னரின் அமைச்சரான மீனாட்சி நாயக்கர் என்பவர் கட்டியதால் இம்மண்டபம் மீனாட்சி நாயக்கர் மண்டபம் என்று வழங்கப்பெற்றுள்ளது. அடுத்து, கடந்தை முதலியார் என்பவர் கட்டிய முதலி மண்டபம். இங்கு சிவபெருமான் பிட்சாடணராக திருக்காட்சியளிக்கிறார். மோகினியின் சிற்பத்தில் ஆடை மடிப்புகள் மிக அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளவை குறிப்பிடத்தக்கது.

    கிழக்கு கோபுரத்தின் எதிரே, 133 அடி நீளமும் 105 அடி அகலமும் கொண்ட புது மண்டபம், 25 அடி உயரமுள்ள 500 தூண்களுடன் கட்டப்பட்டுள்ளது. “வசந்த மண்டபம்”என்றும் இதைக் கூறுகிறார்கள். கோடைக்காலத்தில் இந்த மண்டபத்தின் இரு பக்கமும் உள்ள பள்ளங்களில் குளிர்ந்த நீரை நிரப்புவதால் மண்டபத்திற்கு உள்ளே அமர்ந்திருப்பவர்களுக்கு வெப்பம் நீங்கி குளிர்க்காற்று வீசும்.

    சுந்தரேசுவரர், பிரம்மன், இந்திரன், அர்த்தநாரீசுவரர், ஊர்த்துவதாண்டவர், சங்கரநாராயணர், அதிகார நந்தி, கருங்குருவிக்கு உபதேசித்த லீலை போன்ற எண்ணிலடங்காச் சிற்பங்கள் கண்ணைக்கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல சுவாமி சன்னதியின் இரண்டாம் பிரகாரத்தில் உள்ள கம்பத்தடி மண்டபத்தில் கயிலாசரூடர், சந்திரசேகர், இடபாந்திகர், லிங்கோத்பவர், சாமதகனர், நடராசர், சுகாசனர், காலசம்காரர், மார்க்கண்டேயர், சோமசுந்தரர், தட்சிணாமூர்த்தி போன்ற பல திருவுருவத்திருமேனிகள் கோலாகலமாகக் காட்சியளிக்கின்றன.

    மீனாட்சி அம்மன் கோயிலில் மிக முக்கியமாகக் கருதப்படும் ஆயிரங்கால் மண்டபம் நாயக்க மன்னர்களின் தளவாயாக இருந்த அரியநாத முதலியார் என்பவரால் அமைக்கப்பட்டுள்ளது. இது ஒரு கலைக்கூடமாக, அதாவது தொன்மையான பொருட்களின் களஞ்சியமாகவே இருக்கிறது. உலகப்பிரசித்தி பெற்ற இசைத்தூண்கள் இங்குதான் அமைந்துள்ளன.

    முக்குறுணி விநாயகர்

    amv

    மீனாட்சி அம்மன் ஆலயத்தில் திரும்பிய புறமெங்கும் ஏராளமான விநாயகர் சிலைகள் இருப்பினும் முக்குறுணி விநாயகரே உருவத்தால் பெரியவர். ஒரு குறுணி என்பது 4 படி, அதாவது 6 கிலோ. இந்த விநாயகருக்கு விநாயகர் சதுர்த்தி நாளில், 18 கிலோ பச்சரிசி மாவால் அதாவது மூன்று குறுணி பச்சரிசி மாவினால் ஆன கொழுக் கட்டை படைக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதனாலேயே இவருக்கு முக்குறுணி விநாயகர் என்ற பெயரே நிலைத்துவிட்டது. திருமலை நாயக்கர் வண்டியூர் எனும் இடத்தில் தெப்பக்குளம் வெட்டியபோது பூமிக்குள் இந்த விநாயகர் சிலையை கண்டெடுத்துள்ளனர். அதை மீனாட்சியம்மன் கோயிலில் நிறுவச் செய்துள்ளார். இதற்கு ஆதாரமாக இந்த விநாயகர் முன்பு உள்ள நிலை விளக்குகளில் திருமலை நாயக்கர் மற்றும் அவரது குடும்பத்தினரின் உருவங்களைக் காணமுடிகிறது. 1877 ஆம் ஆண்டில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மிகப்பெரும் அளவில் குடமுழுக்கு நடந்துள்ளது குறித்து டாக்டர் உ.வே.சாமிநாத அய்யர் குறிப்பிட்டுள்ளார்.

    தெற்கு கோபுரத்தைக் கடந்து உள் நுழையும் இடத்தில் பக்தர்கள் திருநீறு கொண்டு அர்ச்சனை செய்யும் விபூதி விநாயகர் அருள்பாலிக்கிறார். மீனாட்சியம்மன் சன்னதிக்கு இடதுபுறத்திலும் பிரகாரத்திலும் இரட்டை விநாயகர் சன்னதி இருக்கிறது.

    இரணியனைக் கொன்ற நரசிம்மர் கோபம் தணியாமல் இங்குமங்கும் அலைந்தார். நரசிம்மரின் கோபாவேசத்தைத் தணிக்கும்படி தேவர்கள் சிவபெருமானை தொழுது நின்றபோது, பெருமான் மனிதன், மிருகம், பறவை என்று பல்வேறு உருவங்களுடன் வந்து நரசிம்மரைத்தழுவி அமைதிப்படுத்துகிறார். இவ்வழகிய காட்சிகள் திருக்கல்யாண மண்டபத்திற்கு எதிரில் உள்ள தூணில் மிகச்சிறப்பாக ஓவியமாக தீட்டப்பட்டுள்ளன.

    அன்னையின் மீது பிள்ளைத்தமிழ் பாடிய குமரகுருபரருக்கு குழந்தை வடிவில் காட்சி கொடுத்து தம் முத்து மாலையையும் பரிசாக அளித்த அருட்கடலான அன்னையின் அற்புதக்கோலங்கள் அழகிய ஓவியமாக அம்மன் ஆலயத்தின் முன்புள்ள ஆறு கால் மண்டபத்தில் காணலாம்.

    பல நூற்றாண்டுகளுக்கு முன்பே, தொழில்நுட்பம் பெரிதும் வளர்ச்சியடையாத அந்த காலகட்டத்திலேயே தமிழக சிற்பக் கலைஞர்களின் தனித்திறமையை வெளிப்படுத்தும் வகையில், மீனாட்சிசுந்தரேசுவரர் ஆலயத்தில் வெகு நேர்த்தியான வடிவமைப்பு ஆச்சரியமேற்படுத்தக்கூடியது. இந்த ஆலயம் 8 கோபுரங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. 8 கோபுரங்களும், நான்கு முனை சதுர வடிவில் அமைக்கப்பட்டுள்ளன. ஆலயத்தின் கிழக்கு கோபுரத்தின் நடுவிலிருந்து மேற்கு கோபுரம் நோக்கி ஒரு கோடு கிழித்தால், அது சரியாக சிவலிங்கத் திருமேனியின் நடு உச்சி வழியாக போகுமாம். அதேபோன்று வடக்கு தெற்கு கோபுரங்களுக்கு கோடிட்டுப் பார்த்தால் சுவாமி சன்னதியை இரண்டாக பகிர்ந்து செல்லுமாம்.

    6ஆம் நூற்றாண்டில் ஆட்சிபுரிந்த பாண்டிய மன்னன் குலசேகரன் உருவாக்கிய மதுரை நகரில் அமைந்துள்ள மீனாட்சி கோவில் பாண்டியர் ஆட்சியில் உருவாக்கபட்ட போதிலும் தற்போது இருந்து வரும் இக்கட்டிட அமைப்பு நாயக்கர் ஆட்சிக்கு உட்பட்ட 17ம் -18ம் நூற்றாண்டில் கட்டிமுடிக்கப்பட்டதாகவே இத்தலத்தின் வரலாறு குறிப்பிடுகின்றது. தொன்மையான இவ்வாலயம் திராவிட நாகரீகத்திற்கும், சிற்பக் கலைக்கும் ஓர் எடுத்துக்காட்டாக விளங்குவதே நிதர்சனம். கோவிலின் தலவரலாற்றை எடுத்துரைக்கும் முக்கிய நிகழ்ச்சி என்றால் அது மிகப்பிரபலமான சித்திரைத் திருவிழா என்பதும் உண்மை. ஆனி மாதம் ஊஞ்சல் உற்சவம், ஆவணி மூலம், நவராத்திரி விழா, கார்த்திகை தீபத்திருவிழா, மார்கழி உற்சவம், தை தெப்பம், பங்குனி உத்திரம் ஆகிய திருவிழாக்களும் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.

    தல வரலாறு:

    குழந்தையில்லாத மலையத்துவச பாண்டியனும் அவன் மனைவி காஞ்சனமாலையும் புத்திர யாகம் செய்த போது தீயிலிருந்து பார்வதி தேவி குழந்தையாகத் தோன்றுகிறாள். ஆனால் பார்வதிக்கு மூன்று மார்பகங்கள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியுற்றான் பாண்டிய மன்னன். அந்த நேரத்தில் அசரீரியாக ஒரு குரல் ஒலித்தது. அவள் தன் கணவனைக் காணும் அத்தருணமே அந்த மூன்றாவது மார்பு மறைந்துவிடும் என்றது அக்குரல் . சமாதானமடைந்த பாண்டிய மன்னன் மனமகிழ்ச்சியுடன் அக்குழந்தைக்கு தடாகை என்று பெயரிட்டு வளர்த்து வந்தான். போர்க்கலை,சிற்பக்கலை, குதிரையேற்றம் போன்ற ஆய கலைகள் அறுபத்து நான்கையும் சிறப்புறக் கற்றுத் தேர்ந்தாள் அவள். தடாகைக்கு முடிசூட்ட நினைத்த பாண்டிய மன்னன் அக்கால வழக்கப்படி தடாகை, பிரம்மனின் சத்தியலோகத்தையும், திருமாலின் வைகுந்தத்தையும், கைலாயத்தையும் வென்றுவர அனுப்பிவைத்தான். முதல் இரண்டு உலகையும் வென்றுவந்த தடாகை கைலாயத்திற்கு சென்றபோது சிவபெருமானைக் கண்டு நாணிநின்ற நேரம் அவளுடைய மூன்றாவது மார்பு மறைந்துவிட்டது. இதன் காரணத்தை அறிந்த தடாகை, தான் பார்வதி தேவியின் மறுவடிவம் என்பதையும் உணர்ந்து கொண்டாள். பின் சிவபெருமானுடன் மதுரை வந்து முடிசூட்டிக்கொண்டு சிவபெருமானை மதுரையம்பதியில் திருமால் தலைமையில் மணந்துகொள்கிறாள்.

    2500 ஆண்டுகால பழமை வாய்ந்த இக்கோவிலின் மூலவரான சிவபெருமான் நடராசராக திருநடம் புரிந்த ஆலயங்களுள் இதுவும் ஒன்று. இது வெள்ளி சபை. இக்கோவில் நடராசர் திருமேனி வெள்ளியால் ஆனவர்
    . பல இடங்களில் இடது கால் தூக்கி ஆடிய சிவபெருமான், மதுரையில் பாண்டிய மன்னனுக்காக வலது கால் தூக்கி ஆடினார். மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணத்திற்கு வந்திருந்த வியாக்ரபாதர், பதஞ்சலி ஆகிய முனிவர்கள் விருந்து சாப்பிடவில்லை. காரணம் இவ்விருவரும் சிதம்பரத்தில் நடராசரின் திருநடனம் கண்டபின்பே உண்ணும் வழக்கமுடையவர்கள். இதனையேற்று சிவபெருமானார் அங்கேயே சிவதாண்டவக் காட்சியளித்து அவர்களை மகிழ்வித்து விருந்து உண்ணச்செய்தார்.

    இக்கோவிலில் மட்டுமே வலதுகாலை தூக்கி ஆடிய கோலத்தில் இருக்கும் நடராசப் பெருமானை தரிசிக்க முடியும் என்பது சிறப்பு. அதாவது சிவத்தலங்களில் இங்கு மட்டுமே சிவனின் பாதத்தை தரிசிக்கலாம் என்பது விசேசம். மதுரையை ஆண்ட ராசசேகர பாண்டியன் தன்னுடைய நடனக்கலை பயிற்சியை வெற்றிகரமாக முடித்துவிட்டு ஐயனிடம் ஆசிபெற வந்தவன், சில காலம் நடனம் பயின்ற தமக்கே இத்துணை சிரமமும், வலியும் இருக்கும்போது, காலம் முழுவதும் காலைத் தூக்கியவண்ணம் வைத்திருக்கும் பெருமானுக்கு எத்துணை துன்பம் இருக்கும் என்று மனமுருக வேண்டி, ஈசன் தம் திருப்பாதம் மாற்றி ஆடவேண்டும், இல்லையேல் தாம் உயிர் துறப்பது நிச்சயம் என்று வீழ்ந்தபோது அம்மன்னனை ஆட்கொள்ளும்பொருட்டு தம் வலப்பாதம் தூக்கி ஆடுகிறார்.

    தருமி என்ற புலவருக்காக, சிவபெருமானே நேரில் வந்து தரிசனம் தந்து தமிழ் மொழியின் புகழையும் நிலைநாட்டிய திருத்தலமும் இதுதான். நக்கீரர் வாழ்ந்த புண்ணிய பூமியும் இதுதான். இராமர், இலக்குவண் மற்றும் பல தேவர்களும், முனிவர்களும் தவம் புரிந்த புண்ணிய தலமும் இதுவே. மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம், பரஞ்சோதி முனிவர் அருளிய திருவிளையாடற்புராணம், அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் போன்றவைகள் இத்தலம் குறித்த சிறப்பான பதிகங்கள்.

    1981 ஆம் ஆண்டு 14.5 அடி உயரமான, உரூ.14,07,093.80, (அப்போதைய மதிப்பில்) உருவாக்கப்பட்ட மீனாட்சியம்மையின் தங்க இரதம் காண்போரை தம் வசம் இழக்கச் செய்யக்கூடியது என்றால் அது மிகையில்லை.

    ககோளம் – பூகோளம்

    amk

    மீனாட்சி அம்மன் ஆலயத்தின் பழைய திருமண மண்டபத்தில் ககோளம், பூகோளம் என்ற இரண்டு ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. இந்த ஓவியங்களைக் காணும்போதும், இதன் விளக்கங்கள் குறித்து அறியும்போதும் ஆச்சரியத்தில் நம் கணகள் விரியாமல் தவிர்க்கவியலாது. இந்த ஓவியங்களில் பாற்கடல், தயிர்க்கடல், நெய்க்கடல், தேன்கடல், சுத்த நீர் கடல் போன்றவைகளைக் காணும்போது இதன் அடிப்படை தத்துவங்கள் மற்றும் அறிவியல் காரணங்கள் குறித்து எண்ணற்ற கேள்விகள் எழாமல் இல்லை. இதற்கான விளக்கங்கள் ஆய்வுக்கு உட்பட்டவை என்றே எண்ணத்தோன்றுகின்றது.

    ககோளம் : சூரிய மண்டலம் 9 ஆயிரம் யோசனை (ஒரு யோசனை என்பது 24 கி.மீ.) பரப்பளவு கொண்டதாக இருந்திருக்கிறது. அதைச்சுற்றி இரண்டாயிரத்து எழுநூறு யோசனை பரப்பு கொண்ட வளையம் இருந்ததாம். நாம் வாழும் பூமி 50 கோடி யோசனை பரப்பளவு உடையதாக இருந்திருக்கிறது. இந்த பூமியின் நடுவில் ஜம்புத்வீபம் என்ற தீவு இருந்திருக்கிறது. அந்தத் தீவில்தான் மேருமலை அமைந்திருந்ததாம்.

    இந்த மேரு மலைக்கு கிழக்கே இந்திர பட்டணமும், தெற்கில் எமபட்டணமும், மேற்கில் வருண பட்டணமும் இருந்தனவாம். இந்த பட்டணங்களில்தான் உலகைக்காக்கும் தேவர்கள் வசிப்பார்களாம். மேலும் இந்த மண்டலங்களில் வேறு எந்தெந்த தீவுகள், வீதிகள் இருந்தன என்பன குறித்த விவரங்களும் இந்த ககோள ஓவியத்தில் பதியப்பட்டிருப்பது ஆச்சரியத்தின் உச்சம். இதைத்தான் தேவலோகம் என்றார்கள் போல் உள்ளது. அசுவினி, பரணி, கிருத்திகை, மிருகசீரிஷம் ஆகிய நான்கு நட்சத்திரங்களைக் கொண்ட நாகவீதி, புனர் பூசம், பூசம், ஆயில்யம் ஆகிய நட்சத்திரங்கள் அடங்கிய ஐராவத வீதி, ஆர்ஷ வீதி, கோ வீதி, திருவோணம், அவிட்டம், சதயம் ஆகியவை இணைந்த ஜரத்துருவ வீதி, அஸ்தம், சித்திரை, சுவாதி அடங்கிய மற்றொரு நாகவீதி, விசாகம், ஜேஷ்டம், அனுஷம் ஆகியவை அடங்கிய மிருகவீதி, மூலம், பூராடம், உத்திராடம் ஆகியவை அடங்கிய வைஸ்வாநர வீதி உள்ளிட்ட பல வீதிகள் இந்த ஓவியங்களில் பதியப்பட்டுள்ளன.

    பூகோளம் : சுவேதத்வீபம் என்னும் கிரகத்தில்தான் பாற்கடல் உள்ளது என்றும் பூமியில் உப்புநீர் கடல் உள்ளதுபோன்று ஏனைய மற்ற கிரகங்களில் பலவகைப்பட்ட சமுத்திரங்கள் இருப்பதாக வேத இலக்கியங்களிலிருந்து அறிய முடிகிறது. இந்த கடல்களுக்குள் கசேறு, இந்திர தீவு, தாமிரபரண தீவு, கபஸ்திமம், நாகத்தீவு, சவுமிய தீவு, காந்தர்வ தீவு, பாரத்தீவு ஆகியவைகள் இருந்தனவாம். இவை பற்றிய மேலதிகத் தகவல்களும் இந்த ஓவியங்கள் மூலம் அறியலாம்.

    அடுத்த முறை மீனாட்சியம்மன் சன்னதிக்குச் செல்லும்போது தவறாமல் இந்த ஓவியங்களைக் கண்டுகளித்து வாருங்கள்!

    மாணிக்க மூக்குத்தி அணிந்த மரகதவல்லி!

    ame

    அன்னை மீனாட்சி மதங்களுக்கு அப்பாற்பட்டு அன்பிற்கு மட்டுமே கட்டுப்பட்டவள்!

    நம் இந்தியா பிரித்தானியர் ஆட்சியில் கட்டுண்டு இருந்த காலம் அது. 1812ஆம் ஆண்டு ரஸ் பீட்டர் என்பவர் மதுரையின் ஆளுநர் பொறுப்பில் இருந்தார். நல்ல மனமும் நேர்மையான குணமும் கொண்ட ஆட்சியாளர் அவர். மக்கள் கொலை, கொள்ளை, திருட்டு போன்ற அச்சங்கள் இன்றி நிம்மதியாக வாழ்ந்த காலமும் அதுதான் என்பதால் மக்கள் அவரை அன்போடு “பீட்டர் பாண்டியன்” என்று அழைத்தனர். ஒரு நாள் இரவு நேரம். இடி மின்னலுடன் மழை கொட்டிக்கொண்டிருந்தது. பீட்டர் ஏதோ ஆழ்ந்த யோசனையில் இருந்தார். இந்த நேரத்தில் சிற்றாடை கட்டிய ஒரு அழகிய சிறுமி மழையில் நனைந்தவாறு மளமளவென்று பீட்டர் இருந்த அறைக்குள் வந்தவள் கண்களில் பேரொளி மின்னியவாறு இருந்தது. அவள் அணிந்திருந்த மூக்குத்தியோ அதனோடு போட்டி போட்டு மின்னிக்கொண்டிருந்தது.

    இச்சிறுமியைக் கண்டவுடன் சற்றே ஆச்சரியப்பட்டவர், அவளுக்கு ஏதோ பிரச்சனை போலும், இந்த அகால இரவில் தம்மைத் தேடி வந்திருக்கிறாளே என்றே எண்ணியிருந்தாராம். அவளிடம் என்ன பிரச்சனை என்றும் கேட்டாராம். ஆனால் அவளோ பதில் ஏதும் சொல்லாமல் அவர் கையைப்பிடித்து இழுத்து தரதரவென வெளியே அழைத்து வந்துவிட்டாளாம். அப்போதும் அவள் தன் பிரச்சனைக்காக எங்கோ அழைத்துச் செல்கிறாள் என்றே நினைத்தாராம் அவர்.

    அந்த மாளிகையை விட்டு அவர்கள் வெளியே வந்ததுதான் தாமதம், ‘டமார்’ என்ற பேர் இரைச்சலுடன் கண்கள் கூசும் பெரும் மின்னல் ஒளியும் வெட்டியதாம். திடுக்கிட்டு சத்தம் வந்த திசையில் பார்த்தவர் அதிர்ச்சியில் அப்படியே வாயடைத்துப் போனாராம். காரணம் பெரும் மின்னலும் இடியும் தாக்கி அவர் இருந்த அந்த மாளிகை தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்ததாம். சற்று நேரத்தில் அவர் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அக்கட்டிடம் மொத்தமாக இடிந்து தரை மட்டமானதாம்.

    அதிர்ச்சியில் உறைந்து நின்றவர் மீண்டு வந்து சுய உணர்வு பெற்று திரும்பிப் பார்த்தபோது அந்தச் சிறுமி அங்கே இல்லை.அவர் சுற்றும் முற்றும் தேடிப் பார்த்தபோது அவள் வெகு தூரத்தில் சென்று கொண்டிருந்ததைப் பார்த்தவர் வேக வேகமாகப் பின் தொடர்ந்தார். ஆனால் அந்தச் சிறுமியோ ரஸ் பீட்டர் எட்டிப் பிடிக்க முடியாதபடி வேகமாக சென்று கொண்டிருந்தாள். இப்படியே இருவரும் மதுரை மீனாட்சியம்மனின் மேலைக் கோபுர வாயிலை அடைந்திருக்கின்றனர். முன்னால் சென்ற சிறுமியோ ரஸ் பீட்டரை சற்றே திரும்பிப் பார்த்தவள், மெல்ல புன்னகைத்தாள். பின் கோவிலுக்குள் நுழைந்தவளைக் காணாமல் தேடிக்கொண்டே கோயிலுக்குள் நுழைந்தார் ரஸ் பீட்டர். சத்தம் போட்டு கூப்பிட்டும் அவள் வரவில்லை. எங்குமே அவள் தென்படாமல் மாயமாகிவிட்டிருந்தாள் அவள்.வெகுநேரம் ஆலயத்தில் அமர்ந்தவாறே காத்திருந்த ரஸ்பீட்டர் பின்னர்தான் உணர்ந்தார், சிறுமியாக வந்து தன் உயிரைக் காத்தது அந்த மீனாட்சியம்மைதான் என்பதை. அன்னை மீனாட்சியின் திருவருளை எண்ணி வியந்தவர் அவள்மீது தீவிர பக்தி கொண்டார். அந்த அன்பின் காரணமாக மீனாட்சி அம்மனுக்கு பல ஆபரணங்களைக் காணிக்கையாக்கினார். ரஸ் பீட்டர் தன்னுடைய இறுதிக் காலத்திலும் அன்னையின் பார்வையிலேயே இருக்கவேண்டும் என்று வேண்டினார். அது போலவே ரஸ் பீட்டர் இறந்த பின்பு அவரது உடல் செயிண்ட் பீட்டர் தேவாலயம் அருகே நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. அன்னை ஆலயத்தை நோக்கியவாறு இருக்குமாறு அவர்தம் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இன்றும் மதுரையில் ரஸ் பீட்டரின் சமாதியை செயிண்ட் ஜார்ஜ் தேவாலயத்தில் காணலாம். அன்னைக்கு அணிவிக்கப்படும் அவரது நகைகளையும் காணலாம்.

    கிளி ஏந்திய அன்னை!

    ame1

    அன்பே உருவான அன்னையின் கையில் ஏன் இந்த கிளி எப்போதும் இருக்கிறது தெரியுமா? பக்தர்கள் மனமுருகி அம்மனிடம் வைக்கும் வேண்டுதல்களை இந்தக் கிளி திரும்ப திரும்பச் சொல்லி நினைவூட்டிக்கொண்டே இருக்குமாம். அன்பே உருவான அன்னையும் விரைவில் தம் பக்தர்களின் துயர் களைகிறாள்.

    மதுரை மீனாட்சியம்மன் ஆலயம் ஏழு உலக அதிசயங்களில் ஒன்றாகத் தேர்வு செய்யப்படுவதாக இருந்தது என்பதும் சிறப்பான தகவல். இதன் மூலம் இவ்வாலயத்தின் தனிப்பெரும் சிறப்புகளை உணரமுடிகிறது.

    நன்றி – சொற்கோயில் ஆன்மீக இதழ்

    Share
  • படக்கவிதைப் போட்டி (78)

    பவள சங்கரி

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

    14194241_1081118968608968_1196525621_n

    santhy-mariappan5சாந்தி மாரியப்பன் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை என் விருப்பத்திற்கிணங்க நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன் தன் படங்களில் ஒன்றை தேர்ந்தெடுத்து அளித்துள்ளார். அவருக்கு என் நன்றி.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (03.09.2016) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும், தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி. மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014-ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுக்களும், பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்.

    பி.கு. நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன் அவர்கள் பயணத்தில் இருந்ததால் திங்களன்று வரவேண்டிய இந்த அறிவிப்பு சற்று கால தாமதமாக இன்று வந்துள்ளது. நண்பர்கள் வழமைபோல் தங்கள் சிறந்த படைப்புகளை பின்னூட்டமாக உள்ளிட்டு உற்சாகமளிக்க வேண்டுகிறோம். நன்றி.

    Share
  • ஆறுமுகன் அருட்பா (மூன்றாம் பகுதி)

    க. பாலசுப்பிரமணியன்

    lord-murugan-BC49_l

    21

    போற்றுதும் போற்றுதும் செந்தூரான் சேவடிகள்

    போற்றுதும் போற்றுதும் தணிகையான் தாள்கள்

    போற்றுதும் போற்றுதும் பரங்குன்றத்துப் பாதங்கள்!

    போற்றுதும் பழனிவாழ் கருணையினை !\

    22

    கருணைக்குக் கந்தா !  காத்திடக் கடம்பா !

    கலியினைத் தீர்த்திடும் கயிலையின் மைந்தா !

    காவடி தூக்கினேன்  கைகளைக்  கூப்பினேன்

    கொடியுடன் வருவாய் குமரா !

    23

    குமரனோ ? கிழவனோ? துடித்தது உள்ளம்

    கொடியிடிடை வள்ளியின் காதல் நெஞ்சம்

    கோலங்கள் மாற்றியே தினைவனம் வந்தாய்

    கோடிகள் தந்திடும் குபேரா !

    24

    குபேரனின் பொருளும் கோதையின் அருளும்

    குறைவில்லா மனமும் குறைவின்றித் தருவாய்

    குன்றினில் அமர்ந்தே  குறைகள் தீர்த்திடும்

    குமரா! குணக் குன்றே !

    25

    குன்றினைத் தேடிடும் அடியவர் கூட்டம்

    குடங்களில் பாலினைச் சுமந்தே கூடும்

    காவடி தூக்கியே ஆடிடும் மனங்கள்

    காத்திடும் ஓமெனும் ஆதியே !

    26

    ஆதியும் அந்தமும் உன்னிரு விழியே !

    அகிலமும் தேடிடும் உன்னிரு அடியே !

    அணையா விளக்கே! அன்பே! அருளே!

    ஆருயிர் தேடிடும் அமுதே!

    27

    அமுதினும் இனிய தமிழின் தலைவா  !

    அழகா! அறிவே! ஐங்கரன் இளையனே!

    அன்பின் அகரமே! அருளின் சிகரமே!

    அருள்வாய் நித்தம் அமைதியே !

    28

    அமைதியைத் தேடிடும் அடியவர் நெஞ்சம்

    சுமைகளை விலக்கியே சுகமாய் வாழ்ந்திட

    இமைகள் காக்கும் விழிகள் போலே

    இன்னல்கள் இனிதே மாற்றிடு !

    29

    மாற்றியே உருக்கொண்ட மாயவான் சூரனை

    கூரிட்ட பாதியில் குதித்தது மயிலும் :

    கூவிட்ட சேவலைக் கொடியினில் கொண்டே

    குவலயம் காக்கும் குமரா !

    30

    குமரனை நினைத்ததும் குறைகள் நீங்கிடும்

    குலங்கள் தழைத்து ஊழ்வினை விலகிடும்

    குறையின்றி வாழ்வில் நலமே பெருகிடும்

    குறவள்ளிக் காதலனே சரணம் !

    சரணம்

    சரணமென்று சொல்லியே சன்னதிக்கு வந்தவரின்

    கரணமிடும் வாழ்வோடு மரணத்தையும் நீக்கியே

    தருணத்திலே காத்துத் தன்னருளைப் பொழிகின்ற

    வருணனே! வணங்குகின்றேன் சரணமென்றே!

     

    Share
  • ’’குமார சம்பவம்’’….!

    கிரேசி மோகன்
    ———————————

     

    ”தேவர்கள் பிரம்மனைத் துதித்தல்’’….!
    ————————————————————————-

    காட்சிக்கு சாங்கியம் கூறும் பிரகிருதி
    சாட்சிக்கு சுத்தபுரு ஷோத்தமன் -ஆட்சிக்(கு)
    அகப்பட ஜீவனாய் ஆகிடும் நீரே
    சுகப்படுவீர் ஆன்மனில் சேர்ந்து….(72)….

    விண்ணத் தனையும் விழுந்து வணங்கிடும்
    தென்னத் திசையோர் துதித்திடும் -அன்னத்(து)
    அயனே (OR) அயன்நீர் மரீசி செயலாம் சிருஷ்டிக்
    குயவன் களிமண் கரம்….(73)

    யாகம்நீர் யாகஅவிர் பாகம்நீர் பாகமுண்ணும்
    தேகம்நீர் திவ்வியங்கள் தந்தருள்நீர் -மேகம்நீர்
    தேர்ந்த பொருட்கள்நீர் தேர்ச்சிநீர் தேர்வும்நீர்
    நேர்ந்ததுவாய் நின்றீர் நினைத்து….(74)

    வரஸ்துதியாய் வேண்டாது வாக்கில் பொருளில்
    சுரஸ்துதியின் சீரால் சிலிர்த்து -சரஸ்வதி
    ஆசை மணாளன் ஆர்வம் மிகவுற்று
    பேசப் புகுந்தான் பதில்….(75)

    வேதம் வடித்ததால் ஆதிகவி ஆனவன்
    போது கமலமெப் போதும்வாழ் -நாதனுரை
    நான்கு முகத்தினால் நான்கு முகமாக
    வான்குவிந்தோர் காதில் விருந்து….(76)

    வண்டி நுகத்தடியாய் வாய்த்தநீள் கைகளும்
    அண்டர் பதவியும் ஆளுமையும் -கொண்டிருந்தும்
    கூடியிருந்து இங்கு குறைவற்ற நீங்களென்
    வீடடைந்தீர் வாழ்க வரவு….(77)….கிரேசி மோகன்….

    ‘’பிரம்ம விசாரணை’’
    —————————————-
    காயும் முழுநிலவும் கண்சிமிட்டும் தாரகையும்
    மேயும் பனித்திரையால் மங்குதலாய் -நீயுமுன்
    கூட்டமும் கொண்டஇவ் வாட்டமேன் வஜ்ஜிரா
    பாட்டன் எனக்குப் பகர்….(78)

    விருத்திரன் மாய வரைகள் சாய
    நிறத்தினால் வானவில் நாண -கரத்திருந்த
    வச்சிரம் வாடி வளைந்துமுனை தேய்ந்துவெறும்
    குச்சியாய் ஆனதேன் கோன்….(79)

    மந்திரத்தால் கட்டுண்ட மாசுணமாய்க் கைப்பாசம்
    தன்திறம் விட்டுத் தவழ்வதேன்-உன்தரப்பு- காரணம என்னவோ கார்முகில் காவலா
    வாருணா கூறுவாய் விட்டு….(80)

    சுபாவமாய் கையிருக்கும், சத்ருவைக் கொல்லும்
    அபார கதாயுதம் அற்ற -குபேரா
    கிளையிழந்து கொம்பாய் கரதலம் கூனி
    களையிழந்தீர் கூறும் கலி….(81)

    துள்ளிக் குதித்தவுணர் தொல்லை தகர்த்தவரைக்
    கொல்லும் தண்டத்தை கேலிசெய்தல் -கொள்ளித்
    தடியால் தரைதனில் கோடிடுதற்(கு) ஒத்த
    படியாம் எமனேன் பயம்….(82).

    வீசுமொளி போனதால், தேசு குறைந்ததால்
    கூசிடாது பார்க்க குளிர்ச்சியாய் -பூசிய
    சீலையின் ஓவியமாய் சூரியர்காள் பன்னிருவர்
    வேலையற்றுக் கொண்டதேன் வேர்ப்பு….(83)….கிரேசி மோகன்….!

    Share
  • காத்துவிட வருவீரா !

     எம் . ஜெயராமசர்மா… மெல்பேண் … அவுஸ்திரேலியா 

     

    வீரத்துறவியே நெஞ்சிலே ஆன்மீக

    சாரத்தை நிறைத்தவரே

    பாருக்கு வேராகி பக்குவத்தை

    ஊருக்கு உரைத்தவரே

    ஞானத்தின் திருவுருவே வாழ்வில்

    மோனத்தைக் கண்டவரே

    நால் வேதத்தை உள்வாங்கி

    நல்வாழ்வுக்கு அளித்தவரே !

     

    பாரதத்தாய்  ஈன்றெடுத்த பண்புளமே

    பார்வியக்க பலபகன்ற பகலவரே

    ஊரலைந்து நெறிவளர்த்த உத்தமரே

    உண்மையினை உணரத் துடித்தவரே

    சீரான குருதேடித் திருந்தவரே

    சிறப்புடனே உபதேசம் பெற்றவரே

    பாரைவிட்டு விரைவாக சென்றவரே

    பார்பிழைக்க அழைக்கின்றோம் வருவீரா !

     

    சமயநெறி அத்தனையும் பார்த்துவிட்டு

    சரியான நெறிதேர்ந்து சொன்னவரே

    சராசரி சாமியார் தமைவெறுத்து

    சன்மார்க்க தொண்டனாய் நின்றவரே

    உலகினுக்கு புதுக்கருத்தை உரைத்தவரே

    ஒவ்வாத அத்தனையும் வெறுத்தவரே

    நிலவுலகில் நிலையாக நிலைத்தவரே

    நீழ்புவியை காத்துவிட  வருவீரா !

    Share
  • சுகவனம் 5

    இன்னம்பூரான்
    29 08 2016

     

    sukavanam 5

     

    ‘சுகவனம்’ தொடரின் முதல் ஐந்து பதிவுகள் ஒரு அறிமுகத்தொடர் என்க. ஐந்தாவது ‘புள்ளி வைத்து அடிக்கும்’ ரகம். புள்ளியியல் துறை குறி வைத்தபடி பணி செய்தால், உண்மை சவுக்கடி போல் வெளிவரும். பொய்ச்சான்றுகள் கூற, அதே புள்ளியியலை துஷ்பிரயோகம் செய்வது எளிது. மெத்த கெட்டிக்காரர்கள், புள்ளி விவரத்தைத் தாமதம் செய்து அளித்து, முழுப்பூசணிக்காயைச் சோற்றில் வைத்து மறைக்க முயல்வதும் உண்டு.

    இந்தியமக்களின் சுகவனம் பொருட்டான புள்ளி விவரங்கள் பத்து வருடங்களுக்கு பிறகு 2013-14 வரையான காலகட்டத்துக்கு இந்த வாரம் வெளியிடப்பட்டன. அவையாவன:

    1. 2013-14 வது வருடம் மக்களின் சுகவனத்துக்குச் செலவிடப்பட்ட5 லக்ஷம் கோடி ரூபாய், ஜிடிபியின் 4% மட்டுமே;
    2. நமது தேசீயச் சுகாதாரக் கோட்பாடே, இது போதாது, உலகெங்கும் 5-6% செலவிடப்படுகிறது என்கிறது;
    3. அதுவும் பெரும்பாலும் அரசு செலவு என்று ஒப்புக்கொள்கிறது;
    4. அந்த5 லக்ஷம் கோடி ரூபாயில் 93% தற்காலச் செலவுக்கும், 7% முதலீடுகளுக்கும் செலவாயின;
    5. அதிர்வு தரும் புள்ளி விவரம் யாதெனில்: மற்ற நாடுகளைப்போல் இல்லாமல், ஏழையோ, பாழையோ, செல்வந்தரோ, அவரவர்கள் செய்யும் கைவிட்டு செய்யும் செலவு 69%;
    6. மேற்படி ஆதாரம் மிகுந்த புள்ளி விவரங்கள் படைத்தவர்களில் ஒருவரான டாக்டர் சக்திவேல் செல்வராஜ், இந்த தண்டச் செலவை பற்றி அதிகம் கவலைப்பட்டு, மியான்மரைத் தவிர, வேறு எங்கும் இந்த நிலை தென்படுவதில்லை என்கிறார்;
    7. இதற்கு அடிப்படைக் காரணம், அரசின் மெத்தனம், கருமித்தனம்: 1.15% தானே அவர்கள் செய்யும் செலவு;
    8. அதை அதிகப்படுத்துவது சிக்கல் அவிழ்க்காது; தேவை இல்லை என்ற கருத்தும் நிலவுகிறது;
    9. சரி. இவ்வாறு செலவு செய்த பணம் எங்கு போகிறது என்று கேட்டால்: மருந்துக்கடைக்கு7%, 21% தனியார் ஆஸ்பத்திரிகள், 9.9% அரசு மருத்துவமனைகள், 6.7% மருத்துவப் பரிசோதனைகளில்:
    10. சுகாதாரத்துறையில் வருமுன் காப்போன் திட்டங்கள் மிகவும் பலன் அளிப்பவை. ஆனால், அவற்றுக்காக6% மட்டுமே அரசு செலவு செய்கிறது;
    11. நோயாளிகளை அழைத்து செல்லும் வாஹனம் வகையில்5% மட்டுமே செலவு; அதாவது மக்கள் தன் கையிலிருந்து செலவு செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் எழுகிறது;
    12. சுத்திகரிப்பும், பரிசுத்தமான குடிநீரும் சுகவனத்தின் அஸ்திவாரம்; ஆனால், அந்தச் செலவை பற்றி இங்கு பேச்சில்லை.

    முகவுரைத் தொடர் முற்றிற்று. பிற பின்னர்.

    ***

    உதவியது:

    http://www.thehindu.com/eae-logger/Logger?rt=1&ctxId=1721&pubId=4&cat=&objId=9042742&title=Health+in+India%3a+Where+the+money+comes+from+and+where+it+goes%3f&url=news%2c2016-08-28+15%3a33%3a26.0%2chttp%3a%2f%2fwww.thehindu.com%2fdata%2fsamarth-bansal-on-health-finance-health-in-india-where-the-money-comes-from-and-where-it-goes%2farticle9042742.ece&type=article&meta=ns

    ***

    சித்திரத்துக்கு நன்றி:

    http://media.newindianexpress.com/Report.JPG/2014/07/18/article2335955.ece/binary/original/Report.JPG

    ***

    இன்னம்பூரான்
    http://innamburan.blogspot.co.uk
    http://innamburan.blogspot.de/view/magazine
    www.olitamizh.com

     

     

    Share
  • அவனவன் வாழ்க்கை

    ரா.பார்த்தசாரதி

     

    மழைத்துளிக்கு தெரியாது விழப்போவது நதியிலா, சேற்றிலா ?

    வீழ்ந்தபின்தான்  அதன்  விதி என்னவென்று  தெரிகிறது,

    ஆற்றில் விழுந்தால்  அனைவரது தேவையை தீர்க்கும்,

    சேற்றில் வீழ்ந்தால் துர்நாற்றத்துடன் பயனற்று போகும்!

     

    பூக்கும் மலருக்கு தெரியுமா,  சேருவது மணமாலையா, மரணமாலையா?

    அதன் விதி விற்பனை ஆகும்போதுதான் தெரிகின்றது,

    மணமாலையானால் எல்லோராலும் ஆசிர்வதிக்கப்படுகின்றது

    மரணமாலையானால் மிதிபட்டு மக்கி நாசமாய்  போகின்றது !

     

    மதிக்கும் பாதையில் செல்பவன் மகத்தான செயல் புரிகின்றான்

    மாபெரும் புகழுடன் சான்றோர்  போற்ற வாழ்கின்றான்

    மிதிக்கும் பாதையில் செல்பவன் மீளா தீமை அடைகின்றான்

    மிகுந்த வேதனைக்கு  ஆளாகி அனலிலிட்ட புழுவென துடிக்கின்றான் !

     

    மனிதனின் பிறப்பை  கணிக்கப்படுவது விதியின் தலை எழுத்தா?

    மனிதனின் குடிப்பிறப்பையும், சேரின்னத்தைச்  சேர்ந்ததா ?

    அவன் பிறந்த ஜாதகத்தினால் விதி  கணிக்கப்படுகிறதா ?

    அவனவன் வாழ்க்கை, அவனவன் கையில்தான் எனக் கூறுவதா?

     

     

    Share
  • மகனும் தாயும்

    ரா.பார்த்தசாரதி

     

    பிறந்த மேனியுடன் வெளியுலகிற்கு  வந்தேன்

    உனக்கு நான் மட்டற்ற மகிழ்ச்சி தந்தேன்

    எனக்காக  கண்விழித்து தூக்கத்தை மறந்தாய்

    உன் குருதியை எனக்கு பாலாகப் பொழிந்தாய்

    தோளையே  தூளியாக்கி  என்னை சுமந்து சென்றாய்

    கேட்டால், பிறக்கும்போது ஏற்பட்ட சுமையும், வலியை விடவா என்கிறாய் !

    உனக்கோ ஆயிரம்  பிரச்சனை  இருக்கும்

    என்னை கட்டியணைப்பதில் தான் ஆனந்தம் இருக்கும் !

    உனது மடியும், இருகால்களுமே எனக்குத்  தொட்டில்

    உனது மூச்சே எனக்கு அடைக்கலம் !

    நான் தவறு செய்தாலும் என்னிடம் அன்புடன் நேசிக்கும்

    நீயே  எனது கண்கண்ட தெய்வமாகும் !

     

     

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    kesav
    ”காவென்(று) அடைக்கலம் கொள்ளுது கன்றுகள்
    கோவிந்தன் கைகளால் கோதிட: -பூவொன்றின்
    பக்கத்(து) இலைகளாய் பசுங்கன்று கள்முளைத்து
    சொர்கத்தில் சேரும் சுகம்’’….கிரேசி மோகன்….!

    கா- காத்தல்….!
    பஜ கோவிந்தம்….
    —————————–

    சாவிந்த மேனியை சந்திக்கும் வேளையில்
    காபந்து செய்யுமோ கற்றகல்வி -கோவிந்த
    நாமத்தில் மூட நினைவே நிலைத்திரு
    ஷேமத்தில் சேர்க்கும்மச் சொல்….

    வேறு
    ——-

    சொல்கோவிந்தம் சொல்கோவிந்தம்
    சொல்கோவிந்தம் புல்மனமே
    வல்லான் காலன் வருகின்ற நேரம்
    தொல்காப்பியமா துணையாகும்….!கிரேசி மோகன்….!

     

    கேசவ்வின் இந்த ஓவியம் பார்க்கையில் ஏனோ ‘’பொறந்தாத்து’’ சமேதராய்(பலரார்-சுபத்ரா) ஜகன்னாத் புரியில்(பூரி என்று பாடலுக்காக வைத்துள்ளேன்) எழுந்தளியிருக்கும் கண்ணன் நினைவு வந்தது….!கண்ணன் & அண்ணா பலராமர் & தங்கை சுபத்ரா(இரண்டு கன்றுகளாய்) சமேத ‘’பெருமாள் திருப்புகழ்’’….!

    தனனதன தானதத்த தனனதன தானதத்த
    தனனதன தானதத்த -தனதான

    பூரி ஜகன்னாதர்
    ——————–
    “மனமதனின் ஆணவத்தை உதியுமிட மேவொடுக்க
    மலையருணை வாசமுற்ற -ரமணேசர்
    அருவியென வேவுரைத்த இருயிருப தானயுக்தி
    உளமதனில் நானகற்றி -உயர்வாக
    அனுதினமு மேஜபிக்க திடவுறுதி தாயெனக்கு
    கடல்கடையும் நாளுதித்து -சபரீசன்
    பெறவுதர பாரமுற்ற ,புலிமுதுகில் ஏறவிட்ட
    கிளரொளியில் மோகினிப்பெண் -அவதாரா
    பணமுடியில் ஏறிநச்சு உமிழவுயிர் தானெடுத்து
    நடனமிடு காளியத்து -விடராசா
    மழலையிவன் ஞானபக்தி கருமமதில் ஆகசித்தி
    கவிதைவடி வாயெனக்கு -அருள்வாயே
    ஜனகமக ளேவொருத்தி ஒருவனிவ னேவுரைக்க
    சிவதனுசை போய்முறித்த -ரகுநாதா
    ஜனனமர ணாதிவட்ட சகலபரி பாலனத்தில்
    ஜகமதனில் பூரிநிற்கும் -பெருமாளே (OR ) ஜெகன்னாதா”….

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    kesav

    ”வாழப் பழத்தோலை வாத்ஸல் யமா(ய்)உரித்து
    வாழப் பழம்கீதை வாயூட்டீ: -கோழையந்த
    குந்திசேய்க்கு வீரம் கவுரவம் தந்தவர்
    மந்திக்கும் மார்ஜர மால்’’….!கிரேசி மோகன்….

    மார்ஜரம் -பூனை(பூனைக்க்குட்டி ந்யாயம்-அம்மா பாத்துப்பா….!
    மற்கடம் -குரங்கு(குரங்க்குக் குட்டி ந்யாயம்-கிளை தாவுகையில் நீதான்(குரங்குக்குட்டி அம்மாவைப் பிடித்தவண்ணம் உன்னைப் பாத்துக்கணும்….!)
    மற்கடத்துக்கே(குரங்கு) மார்ஜரம்(பூனை) மால்….!

    மார்ஜர, மற்கட ந்யாயம் ஆச்சார்யாள் அருள் வாக்கு படித்து விட்டு அப்பாலே எழுதுகிறேன்….!

     

    மனம் ஒரு குரங்கு….!
    —————————————-
    ”தாய்ப்பூனை கண்ணாநீ தோளிரெண்டைக் கவ்விச்சென்(று)
    ஆய்க்குடி யில்காவல் ஆட்படுத்து, -பேய்க்குடி(குடித்தனம்)
    பாழகந்தை பூமியில், கூழாட்பட் டானேன்பொய்,
    வாழ்விக்க வாயாத வா’’….!கிரேசி மோகன்….!

    Share
  • அருங்காட்சியகம் ஓர் அறிவுக்கருவூலம் – 69

    தேசிய அருங்காட்சியகம், சூரிச், சுவிச்சர்லாந்து

    (நிக்கலஸ் கோப்பர்னிக்கஸ்)

    முனைவர்.சுபாஷிணி

    உலக அருங்காட்சியகங்களில் மிக முக்கியமான அருங்காட்சியகங்களின் பட்டியலில் இடம் பெறும் ஒன்று சுவிச்சர்லாந்தின் சூரிச் நகரில் உள்ள நேஷனல் மியூசியம். பொதுவான அருங்காட்சியக அமைப்பு அல்லது புது உலகக்கட்டிட கட்டுமான அமைப்பு, அல்லது கிரேக்க அக்ரோபோலிஸ் வகை கட்டுமான அமைப்பு என்றில்லாமல், பிரஞ்சு மறுமலர்ச்சிக்கால கட்டுமான வடிவில், ஒரு மாளிகையைப் போன்ற அமைப்பில் இந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு குட்டி அரண்மனையோ என வியக்க வைக்கும் அழகிய கட்டிடம் இது. இக்கட்டிடத்தை 1898ம் ஆண்டில் கட்டுமானக் கலைஞர் குஸ்தாவ் கல் (Gustav Gull ) வடிவமைத்துள்ளார். இவர் 19ம் நூற்றாண்டின் சுவிச்சர்லாந்தின் புகழ்மிக்க கட்டிடக்கலைஞர்களில் ஒருவர். இக்கட்டிடம் தவிர்த்து சூரிச் நகரில் அமைந்திருக்கும் உரானியா கட்டிடம், லிண்டன்கோஃவ் மலை, மூன்ஸ்டர்ஹோவ், வைசன்கோவ் சூரிச், சூரிச் பிரேடிகெர் தேவாலயம் ஆகிய சூரிச் நகரின் மையக் கட்டிடங்களை வடிவமைத்தவர் என்ற பெருமைக்குரியவர் இவர்.

    as1

    ஏனைய அருங்காட்சியகங்களைப் போன்றே, நிரந்தரக் கண்காட்சியும் சிறப்புக் கண்காட்சியும் இங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. உலக வரலாற்றில் கடற்பயணங்கள், புவியியல் துறை, வானவியல் ஆராய்ச்சி, புதுயுகத்தை உருவாக்கிய புத்தகப் பதிப்புத்துறை புரட்சி, என மட்டுமல்லாது ஐரோப்பிய கலை வளர்ச்சி, கிறிஸ்துவ சமய வரலாற்றுச் சின்னங்கள் என பல்வேறு வகையான சேகரிப்புக்களுடன் வருவோருக்குத் தகவல் களஞ்சியமாகத் திகழ்கின்றது இந்த அருங்காட்சியகம். இங்கிருக்கின்ற ஆவணங்களும் வரலாற்றுச் சின்னங்களும் உலக வரலாற்றில் முக்கிய இடம் வகிப்பவை என்பதால் ஒரு சில குறிப்பிட்ட விஷயங்களைத் தனித்தனிப் பதிவாக விவரித்து எழுதுவது வாசிப்போருக்கு உதவும் எனக் கருதுகின்றேன்.

    as2

    அந்த வகையில் இந்தப் பதிவில் நிக்கோலஸ் கார்ப்பர்னிக்கஸ் அவர்களைப் பற்றிய சில தகவல்களைப் பகிர்ந்து கொள்கிறேன்.

    நிக்கோலஸ் காப்பர்னிக்கஸ் (1473 – 1543) இன்றைய போலந்து நாட்டில் பிறந்தவர். இலத்தீன், போலந்து, ஜெர்மனி, இத்தாலி, கிரீக் மொழிகளைப் பேசக்கூடிய ஆற்றல் வாய்ந்தவர். தனது கல்வியைப் போலந்து தலைநகரம் கிராக்கோவிலும், இத்தாலியிலும் கற்று பின்னர் வெகு தீவிரமாக வானவியல் துறையில் தனது ஆய்வுகளை மேற்கொண்டவர். அவரது நூலான On the Revolutions of the Celestial Spheres மிகப்புகழ்பெற்ற நூல் என்பதுடன், இத்துறையில் மிக முக்கிய ஆய்வு நூல் என்ற சிறப்புத்தகுதியைப் பெறுவதும் இந்நூல்தான். பூமியைச் சுற்றி ஏனைய கோள்கள் வலம் வருகின்றன என ஏனையோர் நினைத்து ஆய்வுகளைச் செய்து கொண்டிருந்தபோது அச்சிந்தனைக்கு மாற்றாக, சூரியனைச் சுற்றித்தான் பூமியும் ஏனைய கோள்களும் வலம் வருகின்றன என்று கூறி வானவியல் ஆய்வில் முத்திரைப்பதித்தவர் நிக்கோலஸ் கார்ப்பர்னிக்கஸ்.

    as3

    புதிய சிந்தனைகளை உலகுக்குப் படைப்போரையும், மாற்றுக் கருத்துக்களை முன்வைப்போரையும் உலகம் உடனடியாக ஏற்றுக் கொள்வதில்லை. மாறாக அவர்களின் கருத்துக்களையும் ஆய்வுகளையும் திட்டித்தீர்ப்பதும், குறைகூறி மறுப்பதும் உலக வரலாற்றில், அதிலும் குறிப்பாக கருத்துக்களத்திலும் இயல்பே. இதே நிலை இன்றும் தொடர்வதுதான். நிக்கோலஸ் கார்ப்பர்னிக்கஸின் ஆய்வு வெளியீடுகள் அவரது காலத்தில் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. 17ம் நூற்றாண்டில் கலீலியோவின் ஆய்வுகளுக்குப் பின்னரும் ஜொகான்னெஸ் கெப்லரின் வானவியல் ஆய்வுகளுக்குப் பின்னரும் நிக்கோலஸ் கார்ப்பர்னிக்கஸ் புவியியல் கோட்பாடு அதாவது சூரியனை மையமாக வைத்து கோள்கள் வலம் வருதல் எனும் கோட்பாடு ஏற்றுக் கொள்ளப்பட்டது.

    as4

    இந்த சூரிச் அருங்காட்சியகத்தின் வானவியல் ஆய்வுக்கூடப்பகுதியில் நிக்கோலஸ் காப்பர்னிக்கஸின் இந்த குறிப்பிட்ட வானவியல் ஆய்வுத்துறையில் புரட்சியை ஏற்படுத்திய ஆய்வினை விளக்கும் அவரது கையெழுத்துப் பிரதியைக் கொண்ட 17ம் நூற்றாண்டு நூல் பாதுகாக்கப்படுகின்றது. அதே போல மேலும் நிக்கோலஸ் காப்பர்னிக்கஸின் தன் கையில் ஒரு மூலிகைச் செடியை வைத்திருப்பது போன்று தோற்றமளிக்கும் அவரது வரைபடமும், அவரது வரலாற்றுச்செய்தியும் ஆய்வுச் செய்தியும் அடங்கிய 17ம் நூற்றாண்டு நூல் ஒன்றும் இங்கே பாதுகாக்கப்படுகின்றது. இவை இரண்டும் எவ்வகையில் இந்த அருங்காட்சியகத்திற்குக் கிடைக்கப்பெற்றன என்ற தகவல்கள் கிடைக்கவில்லை.

    as5

    இந்த சூரிச் தேசிய அருங்காட்சியகத்தில் உள்ள மேலும் சில அரும்பொருட்களையும் ஆவணங்களையும் பற்றிய விளக்கங்களை அடுத்த பதிவில் தொடர்கின்றேன். தொடர்ந்து வாருங்கள்.

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் .. (19)

    நிர்மலா ராகவன்

    சிரிப்புத்தான் வருகுதையா!

    நலம்-1-2-2

    `சிரிப்பு ஆன்மாவை சுத்தப்படுத்தும்’ என்கிறது யூதர்களின் பழமொழி.

    `பெண் சிரிச்சாப் போச்சு..!’ தமிழர்களுக்குப் பழக்கமான பழமொழி.

    `பெண்குழந்தைகள் அதிகமாகச் சிரிக்கக்கூடாது. அப்புறம், வாழ்க்கையே சிரிப்பாச் சிரிச்சுப்போயிடும்!’ முதிய பெண்டிரின் அறிவுரை.

    `எப்பவும் கஷ்டம்தான். சிரிக்க என்ன இருக்கிறது?’ பொதுமக்கள்.

    இதனால் எல்லாம் சிரிப்பு என்று ஒரு மருந்து இருப்பதே மறந்து போய்விட்டது நம்மில் பலருக்கும். சிரிப்பதற்காகவென ஏற்படுத்தப்பட்ட அமைப்புகளில் சேர்ந்து, உடல் நலத்திற்காக பூங்கா போன்ற பொது இடங்களில், காரணமின்றி `ஹாஹ்ஹா` என்று சிரிக்கிறார்கள் இவர்கள்.
    `எதற்காகச் சிரிக்க வேண்டும்? அதனால் பிரச்னைகள் தீர்ந்துவிடுமா?’ என்பவர்களுக்குப் பதில்: பிரச்னைகள் தீராவிட்டாலும், அவைகளை ஏற்கும் பக்குவம் வரும். இதோ ஒரு உதாரணம்.

    என் தோழி மிஸஸ். ஃபாங் தானே கார் ஓட்டுவாள். எப்படி என்றெல்லாம் கேட்கக்கூடாது. `இவளுக்கு யார் லைசன்ஸ் கொடுத்தார்கள்!’ என்று பிற வாகன ஓட்டிகளை அயரவைக்கும் அவளுடைய திறமை.

    ஒரு நாள் காலை, மிஸஸ். ஃபாங் கோபமாக வந்தாள் நாங்கள் வேலை பார்த்த இடத்திற்கு. தானே ஆரம்பித்தாள். “நேற்று என் கணவர் பக்கத்தில் உட்கார, நான் காரை ஓட்டிப்போனேன்,” என்று ஆரம்பித்ததுமே நாங்கள் புன்னகைக்காமல் இருக்கப் பாடுபட்டோம். மனைவி காரை ஓட்டிப் போகும்போது, எந்தக் கணவர்தான் திட்டாமல் இருக்கிறார்! அதிலும், இவளுடைய காரோட்டும் திறனோ — கேட்கவே வேண்டாம்!

    மரியாதை குறித்து, “அவர் ஏதாவது திட்டினாரா?” என்று விசாரித்து வைத்தேன்.

    “திட்டினால்தான் தேவலையே! நான் சரியாக ஓட்டும்போதே, எதுவும் பேசாமல் பெருமூச்சு விட்டுக்கொண்டே இருந்தாரா! கார் நின்றுவிட்டது!” தொடர்ந்து, “உணர்வுபூர்வமாக நம்மைத் தூண்ட ஆண்களில்லாமல் நாம் என்னதான் செய்யப்போகிறோம்!” என்றாளே பார்க்க வேண்டும்!

    அதற்கு மேலும் எங்களால் சிரிப்பை அடக்க முடியவில்லை. அவளும் சேர்ந்து சிரித்தாள்.

    `துன்பம் வருங்கால் நகுக’ என்று இதற்குத்தானோ சொல்லிப் போனார் திருவள்ளுவர்?

    தான் செய்வதில் ஓயாது குற்றம் கண்டுபிடிக்கும் கணவரை எண்ணி எதற்காக மனைவி வருந்தவேண்டும்? இல்லை, பார்ப்பவர்களிடமெல்லாம் ஆதங்கத்துடன் சொல்லி, அவர்கள் ஆதரவை நாட வேண்டும்? அவர் செய்ததையே வேடிக்கையாக நினைத்து, உற்ற பிறருடன் பகிர்ந்தபடி சிரித்துவிட்டால், மனப்பளு குறையுமே!

    வர வர, சிறுநீர் கழிப்பதெல்லாம் வேடிக்கை என்று நம்மைச் சிரிக்க வைக்க முயல்கிறார்கள் தமிழ்ப்படங்களில். பிறரது தோற்றதைக் கேலி செய்வதும் நகைச்சுவைதான் என்றும் அவை காட்டுகின்றன.

    பிறரைக் கிண்டல் செய்வது எளிதுதான். ஆனால், கேலி செய்யப்படுவது தாமாக இருந்தால் ஒருவரால் ஏற்க முடியுமா?

    பொதுவாக, பெண்களால் பிறர் தம்மைக் கேலி செய்வதை எளிதில் ஏற்க முடியாது. தாமே தம்மைச் சிறுமைப்படுத்திக்கொள்வதுபோல் பேசுவதும் அவர்களால் முடியாத காரியம். அதனால்தான் பெண்கள் நகைச்சுவை எழுத்தாளர்களாகவோ, நடிகைகளாகவோ இருப்பதில்லை என்று முன்பு ஒரு பத்திரிகையில் படித்தேன். தமிழில் மனோரமா, அமெரிக்காவில் லூசில் பால் (Lucile Ball) , காரல் பர்னெட் இவர்கள்தாம் குறிப்பிடத்தக்கவர்கள். பிறர் மற்றவரைக் கிண்டல் செய்து, எரிச்சல் மூட்டுவதோடு சரி.

    `அவன்மேல் உனக்கு எப்படி காதல் வந்தது?’ என்று கேட்டால், `அவன் என்னைச் சிரிக்க வைக்கிறான்!’ என்று பதிலளிப்பார்கள் அனேகப் பெண்கள்.

    பிறரிடம் எளிதாக நட்பு கொள்ள சிரிப்பு ஒரு நல்ல வழி.

    சமீபத்தில் ஒரு மருத்துவமனையில் நான் கண்டு ரசித்த காட்சி:

    “அங்கிள்! நீங்கள் அரசாங்க உத்தியோகத்தில் இருந்தவரா?” கேட்டவர் குண்டாக இருந்த ஒரு சீனர். ஐம்பது வயதிருக்கும்.

    மலாய்க்கார முதியவர் ஆமென்றார்.

    “உங்களுக்கென்ன! மருந்து, சிகிச்சை எல்லாவற்றிற்கும் அரசாங்கமே கொடுத்துவிடுகிறது! என்னைப்போலவா! கைவிட்டு அழ வேண்டியிருக்கிறது!” என்றார் மிஸ்டர். குண்டு.

    “நீங்கள்தாம் பணக்காரர் ஆயிற்றே!” (பெரும்பாலான சீனர்கள் வியாபாரம் செய்வதால் அவர்களிடம் நிறையப் பணம் புழங்குகிறது என்பது பொதுவான கணிப்பு. ஆனால் உண்மை அதுவல்ல).

    “எங்கே! அரசியல்வாதிகளின் மனைவிகளிடம்தான் எல்லாப் பணமும்!”
    சுற்றி உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த எல்லாரும் பலக்க சிரித்தோம்.

    “எனக்கு எத்தனை வயது தெரியுமா? எண்பத்து இரண்டு! இருதய சிகிச்சை நடந்து இருபது வருஷங்களாகி விட்டன!” பெருமையுடன் தெரிவித்தார் முதியவர்.

    “உங்களுக்கென்ன! இப்போதும் மாப்பிள்ளைமாதிரிதான் இருக்கிறீர்கள்!” என்று பாராட்டிவிட்டு, “அந்த அக்கா சம்மதித்தால், நீங்கள் அவர்களைக் கல்யாணம் செய்துகொள்ளலாம்!” என்று சற்று தூரத்திலிருந்த பெண்மணியைக் காட்டினார்.

    “ஹேய்! நான் அவர் மருமகள்!” என்று அவள் சிரிப்புடன் எதிர்க்க, அங்கிருந்த நோயாளிகள் தம்மை மறந்து சிரித்தனர். நினைத்து நினைத்துச் சிரித்தபடி இருந்தார்கள். அவர்களால் நோயின் கடுமையைத் தாற்காலிகமாக மறக்க முடிந்தது.

    சிரிப்பும் புளிப்பும் சில காலம்தான். பதின்மவயதுப் பெண்கள் ஒன்று சேர்ந்தால், அவர்களுக்குக் காரணமின்றி சிரிப்பு பொங்கும். அந்த வயதாக இருந்தபோது, `நான் இன்று ரொம்ப சிரிக்கிறேன். ராத்திரி அழப்போகிறேன்!’ என்று அஞ்சுவாள் என் தோழி பத்மஜா.

    சிரிப்பும், அழுகையும் பகலும், இரவும்போல. ஒன்றையடுத்து ஒன்று வரத்தான் செய்யும். அதற்காக சிரிக்காமல் இருப்பார்களா, யாராவது!

    சிரிப்பதற்கு முகத்திலுள்ள பதினேழு தசைகள்தாம் தேவை. (சிடுசிடுப்புக்கோ நாற்பத்து மூன்று தசைகள்). மனம்விட்டுச் சிரியுங்கள். அப்படியாவது அழகு வளர்ந்துவிட்டுப் போகட்டுமே!

    தொடருவோம்

    Share
  • சுகவனம் 4

    இன்னம்பூரான்
    28 08 2016

     

    ematharman

     

    ஏழை பாழை என்றால், அதுவும் கிராமத்தான் என்றால், இளப்பம் தான். சென்னைக்கு அருகே உள்ள திருவள்ளூர் மாவட்டம் காய்ச்சலில் தவிக்கிறது. அந்த ஊரின் அரசு ஆஸ்பத்திரியில் ஒரு படுக்கையில் இரண்டு நோயாளிகள். டெங்கு போன்ற உயிர்கொல்லி காய்ச்சல்களுக்கு  இது வரப்பிரசாதம்.  காய்ச்சலுடன் யார் வந்தாலும், ஆஸ்பத்திரியில் பரிசோதனை தொடங்கி விடுகிறார்கள். டெங்கு மட்டுமல்ல. டைஃபாய்டு, எலிவிஷஜுரம் எல்லாம் அங்கு அடைக்கலம் நாடுகின்றன.

    அந்தோ பரிதாபம்! போனவாரம்  எழும்பூரில் உள்ள குழந்தைகள் ஆஸ்பத்திரியில். திருவள்ளூரிலிருந்து போன ஐந்து குழந்தைகள் இறந்து விட்டன. ‘அதுவோ! இதுவோ!’ என்று காரணங்கள் பல கூறப்பட்டாலும், மாண்டார் மீண்டு வருவாரோ?

    சுகாதாரப் பின்னணியை நோக்குவுமாக. திருவள்ளூர் மாவட்டத்தின் ஜனத்தொகை  37 லக்ஷம் மக்கள்; அடர்த்தி தான். மாவட்டம் முழுதுமே சுற்றுச்சூழல் சுகாதாரம், ஸ்வச்ச பாரத் ஆகியவற்றை அறியாதவர்கள் போலும்! மக்களே இந்த அவலத்துக்குக் காரணம் என்கிறார், சுகாதாரத்துறையின் உயர் அதிகாரி ஒருவர்.

    குதிரை திருடு போனபின் லாயத்தை பூட்டுவதைப் போல், வருடக்கணக்காக திறந்த சாக்கடைகள், துர்நாற்றம் வீசும் சாக்கடைகளை போன வாரம் சுத்திகரித்து, குழாய்கள் மூலம் சாக்கடைகளை மூடினாலும், அசுத்தமான நீர்தான் அளிக்கப்படுகிறது என்கிறார், ஒரு உயர் அதிகாரி. போதாக்குறையாக, கட்டுமானப் பணிகள் சென்னையின் பல பகுதிகளில் நடப்பதால், ஏழை பாழை கூலிகள் அங்குமிங்குமாகச் சோத்துக்கு அலைந்து திரிவதே ஒரு அபாயம் என்க.

    அதிகாரிகள் டெங்கு எதிர்பாராதபோது வரக்கூடும் என்று அஞ்சுகிறார்கள். அதிவேகமாகப் பரிசுத்தப் பயணம் நடக்கும் என்கிறார்கள் அதிகாரிகள். அங்கன்வாடி ஊழியர்களைக் கவனமாகக் காய்ச்சல் செய்தி கிடைக்கப் பயிற்சி அளிக்கப்படுகிறது. போலி டாக்டர்கள் கைது செய்யப்படுகிறார்கள்.

    பொன்னேரியிலும் இதே கதிதான். மருந்து சீட்டு இல்லாமல் வரும் நோயாளிகளுக்கு தெய்வமே துணை.

    இதற்கெல்லாம் நடுவில் ஒரு ஜோக். அமைச்சர் பார்வையிட வந்தபோது மட்டும்  கொடுக்கப்பட்ட போர்வைகள், அவர் தலைமறைந்தவுடன், பிடுங்கப்பட்டன!

    ***

    Printable version | Aug 28, 2016 8:17:29 PM | http://www.thehindu.com/news/cities/chennai/fever-in-tiruvallur-the-why-and-the-how/article9040905.ece
    © The Hindu

    சித்திரத்துக்கு நன்றி:

    http://1.bp.blogspot.com/-jD1u-OrKXAc/TvOVp9UFQiI/AAAAAAAAHOY/BWZHbYMCnzc/s1600/ematharm+an.jpg

    ***

    Chittoor: Expressing serious concern over ill-functioning of government and corporate hospitals, Chairman of Public Accounts Committee (PAC) of AP Legislature B Rajendranath said that his panel would review the functioning of the government hospitals.

    Speaking to the media at Roads and Buildings Guest House here on Wednesday, Rajendranath said that a report would be submitted to the government after ascertaining facts about the government hospitals. He stated that Chief Minister N Chandrababu Naidu has a strategy for ensuring effective functioning of government hospitals.

    Rajendranath said that the government has proposed to construct the super specialty hospitals in the State and the PAC panel would seek public opinion in this regard. “The quality of medical services in government hospitals has been coming down due to various reasons despite allocating huge funds in the budget,” he opined. He stressed on the need for strengthening government and private hospitals in the State.

    He stated that the PAC would also examine the Comptroller and Auditor General (CAG) report of 2013-14 to know about utilization of funds for construction of the government hospitals and the maintenance of the medical institutions. He asked private hospitals to be accountable while providing medical services to the people.

    The PAC panel members, MLA Chevireddy Bhaskar Reddy and others were present. It is learnt that the proposed PAC meeting with the district officials slated on Wednesday was cancelled as they were assigned duties for Krishna Pushkaralu.

    http://www.thehansindia.com/posts/index/Andhra-Pradesh/2016-08-24/Public-Accounts-Committee-to-review-functioning-of-government-hospitals/250294#.

    http://images.elections.in/political-corner/2014/04/Role-of-Public-Accounts-Committee-in-India.jpg

    ***

    இன்னம்பூரான்

    http://innamburan.blogspot.co.uk
    http://innamburan.blogspot.de/view/magazine
    www.olitamizh.com

     

    Share
  • கற்றல் ஒரு ஆற்றல் -42

    க. பாலசுப்பிரமணியன்

    இளமையில் கல் – ஏன் ?

    education

    கற்றல் – புரிதல் பற்றிய பலவித ஆராய்ச்சிகள் பல்லாண்டுகளாக நடைபெற்று வருகின்றன. இவற்றில் சில கருத்துக்களும் கோட்பாடுகளும் கண்டுபிடிக்கப்பட்டு, மீண்டும் மறுக்கப்பட்டு, மாற்றியமைக்கப்பட்டு உள்ளன. இதனால் மூளையில் கற்றல் நிகழ்வு ஏற்படும் செயல்கள் புதிதாகவும், சில நேரங்களில் மிக விந்தையாகவும் அறியப்பட்டுள்ளன.

    மைகேல் மெர்ஸினிச் (Micheal Merzenich) என்ற மூளை- நரம்பியல் விஞ்ஞானி இந்த ஆராய்ச்சிகளில் மிகவும் ஆர்வம் காட்டியவர். ஒரு முறை ஒரு உயிரின் வளரும் மூளையில், கற்றல் என்னும் நிகழ்வு  எவ்வாறு நடைபெறுகின்றது என்ற ஆராய்ச்சியை மேற்கொண்டபொழுது, ஒரு பூனையை ஆராய்ச்சியின் மையப் பொருளாக எடுத்துக்கொண்டார். அந்தப் பூனையின் கண்களிருந்து மூளைக்குச் செல்லும் நரம்புகள் எவ்வாறு பார்வையில் இருக்கும் பொருள்களின் உள்ளீட்டுக்களை மூளைக்கு அனுப்புகின்றன; மற்றும் மூளை அவைகளை எவ்வாறு அறிந்துகொள்கிறது,  தக்கவைத்துக்கொள்கின்றது என்று ஆராய்ந்தார். அவ்வமயம் அதன் வலது கண்ணினிலிருந்து மூளைக்குச் செல்லும் நரம்புகள் தங்கள் பதிவுகளை ஓரிடத்திலும், இடது கண்ணினிலிருந்து செல்லும் நரம்புகள் மற்றோர் இடத்திலும் பதிவு செய்தாலும் இரண்டும் ஒருங்கிணைந்து செயல்பட்டு பொருளையும் கருத்துக்களையும் உருவாக்குவதை அறிந்தார். உடனே, அந்தப் பூனையின் இடது கண்ணை மூடி ஊசியால் தைத்துவிட்டு, ஒளிக்கதிர்கள் செல்லாதவாறு நிறுத்திவிட்டு அப்போது மூளையில் அந்தக் கண்ணைலிருந்து வரும் ஒளிக்கதிர்களை பதிவு இடத்தில்  என்று ஆராய்ந்தார்.  அவருக்கு ஒருஅதிசயம்    காத்திருந்தது !

    அந்த ஒளிக்கதிர்களை தக்கவைக்கும் மூளையின் பகுதிக்கு இப்போது வலது கண்ணின் ஒளிக்கதிர்கள்  கொண்டிருந்தன. சில நாட்களுக்குப் பிறகு அந்தப் பூனையின் இடது கண் முழுவதுமாகப் பார்வையை இழந்ததால் அந்தகே கண்ணின் ஒளிக்கதிர்களுக்குப் பதில் வலது கண்ணின் கதிர்களை அது பதிவு செய்து சிறப்பாக வேலை பார்த்துக்கொண்டிருந்தது.

    தன்னுடைய ஆராய்ச்சியின் முடிவில் அவர் ஒவ்வொரு மூளையிலும் ஒவ்வொரு தனிப்பட்ட கற்றலுக்கு ஒரு சிறப்பான கற்றல் பகுதி (Crtical Learning Area ) இருப்பதாகவும், அது உபயோகத்தில் இல்லாவிட்டால் அது  பலமிழந்து விடுவதாகவும் அறிந்தார். ஆகவே இளம் வயதில் கற்கப்படுபவை நினைவில் அதிகமாக இருப்பதையும் திறனுள்ள கற்றலாக அமைவதையும் சுட்டிக்காட்டினார். “இளமையில் கல் ” வெறும் பழமொழியாக இல்லாமல் அறிவியல் மூலமாகவும் உண்மையுள்ள கருத்தாக அமைகின்றது.

    இந்தக் கருத்தை மேலும் ஆராய்ந்த  கல்வி  ஆய்வாளர்கள் ஒருவர் இளம் வயதில் கற்கும் தாய் மொழி (Mother Tongue) எவ்வாறு ஒரு தனிச்சிறப்பான இடத்தைப் பெறுகிறது என்றும், அதன் வல்லமை எவ்வாறு ஒளிர்கிறது என்றும் விளக்கினர். இதனால் தான் இரண்டாம் மொழியாக (Second language ) மற்றொரு மொழியை வயது முதிர்ந்தபின் கற்றுக்கொள்ளும் பொழுது அதில் குறைந்த திறனும் வல்லமையும், மற்றும் தாய்மொழியாகக் கொண்டவர்களைப் போன்று பேசமுடியாத நிலையும் உண்டாகின்றது என்பதைச் சுட்டிக்காட்டினர். ஆகவே இளம் வயதில் பல மொழிகளைக் கற்றுக் கொள்வதில்  சங்கடங்கள் மிகக் குறைவு.

    “If two languages are learned at the same time, during the critical period, both get a foothold. Brain scans, says Merzenich, show that in a bilingual child all the sounds of its two languages share a single large map, a library of sounds from both languages. ‘

    அது மட்டுமல்ல .. நீதிக்கருத்துக்கள்,  வாழ்க்கை நெறிகள் ஆகியவையும் இளம் வயதில் கற்றுக்கொள்ளும் பொழுது அவை மனதில் ஆழப்பதிந்து உள்ளூட்டத்தையும் மேம்பட்ட சிந்தனைகளையும் தருகின்றன. I

    இதைப் பற்றி நார்மன் டோய்ட்ஜ் , என்ற மற்றொரு -உளவியல்- நரம்பியல் வல்லுனரின் கருத்துக்கள் இதோ :

    “நம்மில் பலரும் மூளையை ஏதோ ஒரு பாத்திரத்தைப் போல கருதுகிறோம்; தேவைப் பட்ட பொழுது அதனுள் பொருள்களை வைப்பதுபோல்.கருத்துக்களை வைக்கலாம்  என்ற எண்ணத்தில். ஆனால் ஒரு கெட்ட பழக்கம் நமக்கு ஏற்படும் பொழுது, அது நமது மூளையில் தனக்கென ஒரு வரைபடத்தைத் தயாரித்து வைத்துக்கொள்கிறது. மீண்டும் மீண்டும் அதைப் பற்றி சிந்திக்கும்பொழுது அந்த வரைபடம் வலுப்பெற்று விடுகிறது. அந்தக் கற்றலை மூளையின் வலைத்தளத்திலிருந்து நீக்குவது மிகவும் கடினமான செயல். ஆகவேதான், குழந்தைகளுக்கு இளமையில் கற்றல் அதிக முக்கியயத்துவம் வாய்ந்ததாக அமைகிறது. கெட்ட பழக்கங்கள் முந்திக்கொண்டு நல்ல பழக்கங்களுக்குள்ள இடத்தைப் பிடித்துக்கொள்ளாமல் இருப்பதற்காக. “

    Most of us think of the brain as a container and learning as putting something in it. When we try to break a bad habit,  it takes over a brain map  and each time we repeat it, it claims more control of that map and prevents the use of that space for “good habits” That is why “unlearning” is often more harder than learning and why child education is so important – it is best to get it right early, before the “bad habit” gets a competitive advantage.  (Dr. Norman Doidge)

    மூளையின் கற்றல் திறன்களின் ஆராய்ச்சியின்படி இளம்பிராயத்தில் குழந்தைகள் மூன்று அல்லது நான்கு மொழிகளை சுலபமாகக் கற்றுக்கொள்ளலாம். ஆனால், இவைகளில் தாய் மொழிக்குத்தான் கற்றலில் என்றும் முன்னுரிமை அளித்தல் அவசியம்.

    (வளரும்)

    Share