Category: வரலாறு

  • பழந்தமிழக வரலாறு – 7

    பாலன் நாச்சிமுத்து

     

    பண்டைய தக்காண அரசுகள்

                 (சாதவாகனர்களும் காரவேலனும்)

    சாதவாகனர்:

            அசோகருக்குப் பின் மகத அரசு சிதைந்து போனது. கி.மு.230 அளவில் சாதவாகனர்கள்(SATAVAHANA) தமிழரசுகளின் ஆதரவோடு தக்காணப் பகுதியில் தங்களது தனி ஆட்சியை நிறுவினர். கி.மு.230 முதல் கி.பி.220 வரை சுமார் 450 ஆண்டுகள் அவர்கள் தக்காணத்தை ஆண்டனர். சாதவாகனர்களை, தமிழில் நூற்றுவர் கன்னர் அல்லது சாதவ கன்னர்(சாதவ என்பது சதம், அதாவது நூறு ஆகும்) என்பர். இவர்கள் தமிழ், பிராகிருதம் ஆகிய இரு மொழிகளையும் ஆட்சி மொழிகளாகக் கொண்டு ஆட்சி செய்தனர். இவர்கள் வெளியிட்ட நாணயங்களில் ஒரு பக்கம் தமிழும், மறுபக்கம் பிராகிருதமும் இருந்தன(1).        சாதவாகனர் சங்ககாலத்தின் ஆரம்பம் முதல் இறுதிவரை தமிழகத்தோடு போர் செய்ததாகவோ, வெற்றி பெற்று தமிழகப் பகுதிகளைப் பிடித்துக் கொண்டதாகவோ தகவல் இல்லை. அவர்கள் தமிழ் அரசுகளின் கூட்டணி ஆட்சியின் கீழ் இருந்த தக்காணப் பகுதிகளைத் தாக்கி வென்றிருக்கலாம். ஆனால்  உடனடியாகத் தமிழ் அரசுகளால் அவை திரும்பக் கைபற்றப்பட்டது. கிருட்டிணா நதிக்குக் கீழ் அவர்கள் வரவில்லை. சங்ககாலம் வரை தமிழ் அரசுகள் மிக வலிமையோடு இருந்தன. கி.பி. 2ஆம் நூற்றாண்டின் இடைக்கால வாக்கில் இந்நிலை மாறியிருக்கலாம். சாகர்கள், மேற்கு சத்ரப் அரசுகள், மகத அரசு போன்ற பிற வடநாட்டு அரசுகளோடு தான் சாதவாகனர்கள் போர் புரிந்ததாக அவர்களது கல்வெட்டுகளும், அவர்களைப்பற்றிய இன்ன பிற குறிப்புகளும் கூறுகின்றன.

         டாக்டர் கே. கே. பிள்ளை,  ஆர். எசு. சர்மா ஆகிய இருவரும் தங்களது நூல்களில் சிமுகா(கி.மு. 230-207), சதகர்னி(கி.மு. 180-124),  கௌதமிபுத்ர சதகர்னி(கி.பி 106-130), வசிட்திபுத்ர புலுமாயி(கி.பி 130-160), யாஜன சதகர்னி(கி.பி. 170-199)  ஆகிய ஐந்து சாதவாகன அரசர்களை மட்டுமே குறிப்பிட்டுள்ளனர்(2). கி.பி.2ஆம் நூற்றாண்டில் ஆண்ட மூன்று முக்கிய அரசர்கள் குறித்துத்தான் ஓரளவு தரவுகள் உள்ளன. பிற அரசர்களின் ஆண்டுகள் புராணங்கள் தரும் ஆண்டுகளை வைத்தே தரப்பட்டுள்ளன. கி.மு. 180-124 வாக்கில் ஆண்ட சதகர்னி குறித்து கலிங்க மன்னன் காரவேலன் தனது அத்திக்கும்பா கல்வெட்டில் குறித்துள்ளான்.சாதவாகனர்கள் தங்கள் ஆட்சி மொழியாகத் தமிழ், பிராகிருதம் ஆகிய இரு மொழிகளையும் கொண்டிருந்தனர். தமிழர்களின் கடற்படை வலிமையை, அவர்களது ஐக்கிய கூட்டணியின் வலிமையை, பொருள் உற்பத்தி, தொழிநுட்ப மேன்மை, வணிகம் ஆகியவற்றில் தமிழர்களின் உயர்நிலையை சாதவாகனர்கள் அறிந்ததன் காரணமாக, தமிழ் அரசுகளோடு அவர்கள் ஆரம்பம் முதல் இறுதிவரை பகைமை பாராட்டாமல் இருந்தனர் எனலாம். சாதவாகனர்கள் அரசு அழிந்த உடன் தமிழகமும் களப்பிரர்களால் கைப்பற்றப்பட்டு விட்டது.

    மொழிபெயர் தேயம்:

        தமிழ்மொழி இருக்கிற நிலையில் இருந்து பெயர்ந்து கொடுந்தமிழாக மாறியிருந்த நிலையை மொழி பெயர்ந்தநிலை எனவும் அவ்வாறு மொழி பெயர்ந்த நிலையில் உள்ள கொடுந்தமிழைப் பேசும் பகுதியை மொழிபெயர் தேயம் எனவும்  பண்டைய தமிழர்கள் குறிப்பிட்டனர். கி.மு.4-ஆம், 3-ஆம் நூற்றாண்டு வாக்கில் அல்லது அதற்கு முன்பு தக்காணம் முழுவதும் கொடுந்தமிழே பேசப்பட்டு வந்தது. வடக்கே பிராகிருதமும், தெற்கே தமிழும் செல்வாக்கு பெற்றிருந்தன. அதனால் தமிழர்கள் இடைப்பட்ட பகுதியை, தமிழ்மொழி தேய்ந்து, கொடுந்தமிழே பேசப்பட்ட பகுதியை, மொழிபெயர் தேயம் என்றனர். இந்த மொழிபெயர் தேயம் தமிழ் மூவேந்தர்களால் பாதுகாக்கப்பட்ட பகுதியாக இருந்து வந்தது என்பதை மாமூலனாரின் அகம் 31 ஆவது பாடல் உறுதிப் படுத்துகிறது. மொழிபெயர் தேயம் தமிழ் மூவேந்தர்களின் பாதுகாப்பின் கீழ் இருந்து வந்தது என்றால் மூவேந்தர்கள் ஒன்று சேர்ந்து செயல்பட்டிருக்க வேண்டும். அவர்கள் அவ்வாறு ஒன்று சேர்ந்து செயல்பட அவர்களிடையே ஒரு ஐக்கிய கூட்டணி இருந்திருக்க வேண்டும் என்பது உறுதியாகிறது.

    கலிங்க மன்னன் காரவேலன்:

               கலிங்க மன்னர் காரவேலனின் அத்திக்கும்பா கல்வெட்டு தமிழர்களின் ஐக்கிய கூட்டணி குறித்துப் பேசுகிறது. அத்திக்கும்பா கல்வெட்டின் காலம் கி.மு.165 ஆகும். அதன் 11வது மற்றும் 13வது வரிகள் தமிழரசுகள் குறித்துப் பேசுகிறன.

    Hathigumpha inscription: Sadananda Agrawal has prepared the text in Sanskrit, which has been published in his book Śri Khāravela, 2000.

    Line 10-11 – And in the eleventh year [His majesty] secured jewels and precious stones from the retreating [enemies]. [His Majesty] caused to be cultivated Pithunda, founded by former kings of Kalinga, with ploughs drawn by asses. Also [His Majesty] shattered the territorial confederacy of the Tamil states having populous villages, that was existing since thirteen hundred years.

     Line 13 – [His Majesty] caused to erect towers with strong and beautiful gateways at the cost of two thousand coins. [His Majesty] obtained horses, elephants and jewels losing strange and wonderful elephants and ships. The King of Pandya caused to be brought here Kalinga various pearls, jewels and precious stones hundred thousand in number(3).

    11வது வரி :     11ஆம் ஆட்சியாண்டில், 1300 ஆண்டுகளாக இருந்து வந்த, மக்கள்தொகை நிறைந்த ஊர்களையும், நகரங்களையும் கொண்ட, தமிழரசுகளின் கூட்டணியை உடைத்து முந்தைய கலிங்க மன்னர்களால் உருவாக்கப்பட்ட, “பித்துண்டா” என்ற நகரத்தைப் பிடித்து, அதனை கழுதை கொண்டு உழுது, பின் வாங்கிய எதிரிகளிடம் இருந்து விலை மதிப்பற்ற ஆபரணங்களையும், கற்களையும் கைப்பற்றிக் கொண்டேன்.”

    13வது வரி :     “12ம் ஆட்சியாண்டில் பாண்டிய அரசன் நூறு ஆயிரம் அளவிலான, விலை மதிப்பற்ற கற்களையும், முத்துக்களையும், ஆபரணங்களையும் கலிங்கத்தின் தலை நகருக்கே கொண்டு வந்து ஒப்படைக்கும் சூழ்நிலையை உருவாக்கினேன்” என்கிறான் கலிங்க மன்னன் காரவேலன்

    பித்துண்டா நகரம்:

          “பித்துண்டா” என்கிற நகரம் முந்தைய கலிங்க மன்னர்களால் உருவாக்கப்பட்ட நகரம் என்பதைத் தெளிவாகக் காரவேலன் கல்வெட்டு குறிப்பிடுகிறது. கலிங்கத்தில் இருந்த முந்தைய கலிங்க மன்னர்களால் உருவாக்கப்பட்ட இந்நகரம் (பித்துண்டா நகரம்)  தமிழக ஐக்கிய கூட்டணி அரசுகளின் நகரமாக, அவர்களின் காவல் அரணாக இருந்து வந்துள்ளது என்கிற செய்தி, தமிழகத்தின் வட எல்லையில் இருந்து கலிங்கத்தின் தென் எல்லை வரையான கடலை ஒட்டிய இன்றைய ஆந்திரப் பகுதி முழுவதும் தமிழக ஐக்கிய கூட்டணி அரசுகளின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்து வந்துள்ளது என்பதை மறைமுகமாகத் தெரிவிக்கிறது எனலாம். அதன் மூலம் மொழிபெயர் தேயம் என்பது தமிழ் மூவேந்தர்களின் பாதுகாப்பின் கீழ் தான் இருந்து வந்தது என்கிற மாமூலனார் அவர்களின் செய்தி, இக்கல்வெட்டின் மூலம் உறுதிபடுத்தப்படுகிறது.

    தமிழக அரசுகளின் ஐக்கியக் கூட்டணி :

        மேலும் இந்நகரம் மீண்டும் தமிழக ஐக்கியக் கூட்டணி  அரசுகளின்கீழ் வந்து விடக் கூடாது என்பதற்காக, அது தரை மட்டமாக்கப்பட்டு கழுதைகொண்டு உழப்பட்டுள்ளது. டி.என். சன்பக் (D.N.Shanbhag) அவர்கள், தமிழக ஐக்கியக் கூட்டணி  அரசுகள் பலமுறை கலிங்க அரசுக்கு தொல்லைகள் கொடுத்து வந்ததாகவும், காரவேலன் வடநாட்டின் மீது படை எடுத்துச் சென்ற போது, அவை கலிங்கத்தை தங்கள் காவல் அரணான பித்துண்டா நகரத்தைத் தலைமை இடமாகக் கொண்டு தாக்கியதாகவும், அதற்குப் பதிலடி தரும் விதமாகத்தான் காரவேலன் பித்துண்டா நகரத்தைத் தாக்கி, தமிழரசுகளின் நீண்ட கால ஐக்கியத்தை உடைத்து, விலை உயர்ந்த பொருட்களை கைப்பற்றியதாகவும், பித்துண்டா என்பது ஒரு துறைமுக நகரம் எனவும் குறிப்பிடுகிறார்(4).

         சன்பக் அவர்கள் தரும் செய்திகள், பித்துண்டா என்பது கலிங்கத்தின் தென் கிழக்கு எல்லையில் கடலோரத்தில் இருந்த தமிழக அரசுகளின் துறைமுகக் காவல் அரண் என்பதை உறுதி செய்கின்றன. தமிழக அரசுகள் மகதத்துக்கு அருகிலுள்ள வலிமையான, காரவேலனின் கலிங்க அரசுக்கு அடிக்கடி தொல்லை கொடுக்கும் அளவு வலிமை மிக்கவனாக இருந்தன என்ற அவரது செய்தி, தமிழ் அரசுகளிடையே ஐக்கியக் கூட்டணி இருந்தது என்பதை, மொழிபெயர் தேயப் பகுதிகள் இக்கூட்டணி அரசுகளின் கீழ் இருந்தன என்பதை சந்தேகமின்றி ஆதாரத்தோடு உறுதிப் படுத்துகின்றன.

         அடுத்த வருடம் (13வது வரியில்), காரவேலனின் வலிமையை உணர்ந்த பாண்டிய அரசன் தொடர்ந்து வட நாடுகளோடு வணிகம் செய்ய, காரவேலனின் ஒத்துழைப்பும் ஆதரவும் அவசியம் என்பதை உணர்ந்து , அவனோடு சமாதானம் செய்து கொள்ளும் பொருட்டு, பெரும் அளவிலான பரிசுப் பொருட்களை அனுப்பி, காரவேலனோடு நட்புக் கொண்டுள்ளான். அதைத்தான் காரவேலன் பாண்டியனே எனக்கு நிறைய பரிசுப்பொருட்களை அனுப்புமாறு நான் செய்வித்தேன் என்கிறான். மாமூலனாரின் பாடல்களும்  காரவேலனின் அத்திக்கும்பா கல்வெட்டும் தமிழக அரசுகளிடையே ஐக்கிய கூட்டணி ஒன்று மிக நீண்ட காலமாக இருந்து வந்தது என்பதையும், மொழிபெயர்தேயப் பகுதிகளான ஆந்திரம், கர்நாடகம் முதலியன தமிழக அரசுகளின் கூட்டணியின் கீழ் பாதுகாக்கப்பட்டு வந்தன என்பதையும் உறுதிபடுத்துகின்றன.  இந்த பித்துண்டா நகரம் குறித்து, ஒரிசாவின் பொருளாத வரலாறு என்கிற நூலும், விக்கிபீடியாவும் தரும் தகவல்களைக் காண்போம்.

         பண்டைய கலிங்கத்தின் மிக முக்கிய நகரம் பித்துண்டா((PITHUNDA) ஆகும். மகாவீரர் (கி.மு. 599-527) காலத்தில், இந்தப் பித்துண்டா நகரம் கலிங்கத்தின் மிக முக்கிய நகர் மையமாக இருந்துள்ளது என உத்தரதயான சூத்திரம் (UTTARADHAYANA  SUTRA) என்கிற சமண நூல் குறிப்பிடுகிறது. இந்த பித்துண்டா துறைமுக நகரம் குறித்து டாலமி(கி.பி. 90-168) தனது புவியியல் நூலில்(GEOGRAPHY OF PTOLEMY) குறிப்பிட்டுள்ளார். இந்தப் பித்துண்டா துறைமுகம், பண்டைய கலிங்கத்தின் கிழக்குக் கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள முக்கியத் துறைமுகம் எனவும் இரண்டாவது பெரிய துறைமுகம் எனவும் விக்கிபீடியா குறிப்பிட்டுள்ளது. இந்த நகரத்தைக் காரவேலன் தமிழ் அரசுகளின் கூட்டணியிடமிருந்து கைப்பற்றிக் கழுதைகளைக் கொண்டு உழுதான் என்ற தகவலும் தரப்பட்டுள்ளது. காரவேலனின் ஆண்டு கி.மு. 209-170 எனச் சொல்லப்பட்டுள்ளது(5).

         நிகார் இரஞ்சன் பட்னாய்க் அவர்களும், விக்கிபீடியாவும் தரும் செய்திகள் இந்தப் பித்துண்டா நகரம் கலிங்கத்தின் பண்டைய இரண்டாவது பெரிய துறைமுக நகரம் என்பதையும், கலிங்கத்தின் கிழக்குப் பகுதியில் அமைந்திருந்த துறைமுக நகரம் என்பதையும் தமிழரசுகளின் கூட்டணியிடமிருந்து கலிங்க மன்னன் காரவேலனால் இந்நகரம் கைப்பற்றப்பட்டு கழுதை கொண்டு உழப்பட்டது என்பதையும் உறுதி செய்கின்றன. டாலமியின் புவியியல் நூலும் இந்நகரம் குறித்துக் குறிப்பிட்டுள்ளது என்கிற செய்தி இந்நகரம் முன்பிருந்தே ஒரு புகழ் பெற்ற துறைமுக நகரமாக இருந்துள்ளது என்பதை உறுதி செய்கிறது.

    பார்வை:

    1.இந்து ஆங்கில நாளிதழ், ஐராவதம் மகாதேவன், “An epigraphic perspective on the antiquity of Tamil”, நாள்: 24/6/2010.

    2.பண்டைக்கால இந்தியா, ஆர். எசு. சர்மா-தமிழி மாஜினி,  ஜூன் 2004, பக: 260-264.  2.தென் இந்திய வரலாறு, டாக்டர் கே. கே. பிள்ளை, 8ஆம் பதிப்பு, 2011    பக்: 34-37) 3. விக்கிபீடியா(SATAVAHANA DYNASTY).

    3.www.jatland.com/home/Hathigumpha– inscription & சதானந்த அகர்வால் அவர்கள் சமற்கிருதத்தில் எழுதிய “சிரி காரவேலா” என்கிற நூலில் இருந்து இணையதளம் வழியாக இப்பகுதி எடுக்கப்பட்டுள்ளது.

    4.சன்பக் (D.N. Shanbhag), www.freeindia.Org/biographies/kharavela/index.htm.

    5.ஒரிசாவின் பொருளாதார வரலாறு-நிகார் இரஞ்சன் பட்னாய்க், பக்: 22, 24, 131, 137. (ECONOMIC  HISTORY OF ORISSA BY  NIHAR RANJAN  PATNAIK, PAGES – 22, 24, 131,137) & பித்துண்டா(PITHUNDA)-விக்கிபீடியா

    Share
  • பழந்தமிழக வரலாறு – 6

     

     

             மூலச்சிறப்புடைய தமிழ்ச்சிந்தனை மரபு

     

                                          கணியன்பாலன்

    பண்டைய சங்ககாலத் தமிழகத்தின் தத்துவார்த்த, அறிவியல், கலை சார்ந்த அனைத்துச் சிந்தனைகளையும் “மூலச்சிறப்புடைய தமிழ்ச் சிந்தனை மரபு” எனலாம். இந்தச்சிந்தனை மரபு 1000 ஆண்டுகளுக்கும் மேலான மிக நீண்ட நெடிய காலத்தைக்கொண்டதாகும். இந்த மூலச்சிறப்புடைய தமிழ்ச்சிந்தனை மரபு ‘பொருள் முதல்வாத மெய்யியல் சிந்தனை’ என்கிற ஒரு உறுதியான அடித்தளத்தைக் கொண்டிருந்தது. அதில் சாங்கியம்(எண்ணியம்), உலகாயதம், பூதவாதம், வைசேடிகம்(சிறப்பியம்), ஆசிவகம், நியாயவாதம் எனப்பலவிதமான மெய்யியல் சிந்தனைகள் இருந்தன. கடவுள் மறுப்பும், வைதீக எதிர்ப்பும்  பொருள் முதல்வாத மெய்யியல் சிந்தனையில் உறுதியாக நிலை கொண்டிருந்தது. கிட்டத்தட்ட 1200 ஆண்டுகளாகச் சங்கம் மருவிய காலம் முடியும்வரை(கி.மு. 1000-கி.பி. 200), இந்தப் பொருள்முதல்வாத மெய்யியல் சிந்தனைகள்தான் தமிழ் சமூகத்தின் அடித்தளக் கருத்தியலாக இருந்து வந்தன.

    முனைவர். கா. இராசன் அவர்கள் தான் எழுதிய தொல்லியல் நோக்கில் சங்ககாலம் என்கிற நூலில் கி.மு. 1000 வாக்கில் தமிழகத்தின் தென் பகுதியில் நுண்கற்கருவிகள் பண்பாட்டிலும், வடபகுதியில்புதிய கற்காலப் பண்பாட்டிலும் வாழ்ந்த மக்கள் இருவரும் இணைந்து ஒரு மிகப்பெரிய பண்பாட்டுப் புரட்சிக்கு வித்திட்டனர் எனவும், அன்றே அவர்கள் ஒருவகையான வரிவடிவத்தைத் தமது கருத்துப்பரிமாற்றத்திற்குப் பயன் படுத்தினர் எனவும், இவர்களே ஒரே வகையான மொழி, வரிவடிவம் என்ற கட்டமைப்பை உருவாக்கி அதன் மூலம் தமிழ்ச் சமுதாயம் என்ற  அமைப்பை ஏற்படுத்தவும், தமிழகத்தின் சங்ககால எழுச்சிக்கும் வித்திட்டவர்கள் என்கிறார்-(1).   தென்பகுதியில் நுண்கற்கருவிகள் பண்பாட்டைச் சேர்ந்த ஆதிச்சநல்லூர் அகழாய்வின் காலம் சுமார் கி.மு. 2000 என அறிவியல் ஆய்வு உறுதி செய்துள்ளது என்கிறார் முனைவர் அ. இராமசாமி-(2). ஆதிச்சநல்லூர் கி.மு. 1500 வாக்கில் ஒரு தொழில் நகரமாக இருந்தது எனவும் அங்கு உயர் தொழில்நுட்பமிக்க உயர்தரமான இரும்பு எஃகும், பிற உலோகங்களும் தயார் செய்யப்பட்டன எனவும், வெண்கலப் பொருட்கள் தயாரிப்பில் அவர்கள் மிக உயர்ந்த தொழில்நுட்ப அறிவைப் பெற்றிருந்தனர் எனவும் முனைவர் அ. இராமசாமி குறிப்பிடுகிறார்-(3).  ஆகவே இப்பண்பாட்டுப்புரட்சி தென்பகுதியில் கி.மு. 1000க்கு முன்பே நடந்து, பின் வடபகுதியோடு இணைந்து மேலும் வலிமை பெற்றது எனலாம். இந்த மிகப்பெரிய தொழிநுட்பப் பண்பாட்டுப் புரட்சியின் தொடர்ச்சியாக உருவாகியதுதான் பொருள்முதல்வாத மெய்யியலை அடிப்படையாகக் கொண்ட  ‘மூலச்சிறப்புடைய தமிழ்ச்சிந்தனை மரபு’ ஆகும்.

    பண்டையத் தமிழ்ச் சமூகம்:

    தமிழ்ச் சமூகம் பண்டையகாலத்திலிருந்து மெய்யியல்,  அறிவியல், தொழிநுட்பம், பொருள்உற்பத்தி, வேளாண்மை, வணிகம், இயல், இசை, நாட்டியம் ஆகியவற்றில் ஒரு புகழ்பெற்ற மரபைக்கொண்டிருந்தது. கி.மு. 1000க்கு முன்பிருந்து நிறையச் சிறு சிறு நகர்மைய அரசுகள் தமிழகத்தில் தோன்றி வளர்ந்தன. நறுமணத் திரவியங்களின் உலகத்தேவையும் அதன் வணிகமும், தமிழர்களைப் பெரும் கடலோடிகளாக மாற்றியமைத்தன.  இவையெல்லாம் கி.மு. 1000 க்கு முன்பிருந்து நடந்து வருகிறது எனினும் கி.மு. 7ஆம் நூற்றாண்டிலிருந்து தமிழக வணிகம் தொடர்ச்சியாகவும் உலகளாவிய அளவிலும் நடைபெற்றது. தமிழகத்தில் தனித்தனி வேந்தர்கள், அவர்களின் குடும்ப உறுப்பினர்கள், கிளைஅரசர்கள்,  சிறுகுறு மன்னர்கள், வேளிர்கள் எனப் பலதரப்பட்ட அரசுகளின் கீழ் நிறைய சுதந்திரமான  நகர்மைய அரசுகள் இருந்தன. அவை தனித்தனியான ஆட்சியாளனின் கீழ் சுதந்திரமான வணிக நகர்மைய அரசுகளாகவும் பரிணமித்தன. பொருள் உற்பத்தியும், தொழில் நுட்பமும் வணிகமும் பெருகி வளர்ந்து கொண்டிருந்தன. இந்தச் சிறு குறு நகர்மைய அரசுகளே பொருள்முதல்வாத மெய்யியல் சிந்தனைக்கும் அறிவியல், தொழிநுட்பம், பொருள்உற்பத்தி, வேளாண்மை, வணிகம், இயல், இசை, நாட்டியம் ஆகியவற்றின் வளர்ச்சிக்கும் காரணகர்த்தாக்களாக இருந்தன. ஆதலால் கி.மு. 8ஆம் நூற்றாண்டு வாக்கிலேயே மூலச்சிறப்புள்ள தமிழ் மெய்யியல் சிந்தனை ஒரு சிறப்பு வடிவத்தைப்(தொல்கபிலரின் எண்ணியம்)  பெற்றுக்கொண்டது.

    திரு. வி. கிரபிவின் அவர்கள் “உலகத்தைப்பற்றிய பொருள்முதல் வாதக்கண்ணோட்டம் புராதன காலத்திலேயே தோன்றி வேரூன்றி விட்டதாகும். அது எகிப்து நாட்டிலும், பாபிலோனியாவிலும் கி.மு. மூவாயிரம் ஆண்டின் முடிவிலும், கி.மு. இரண்டாயிரம் ஆண்டின் தொடக்கத்திலும் உருப்பெற்றது” என்கிறார்-(4). அக்காலகட்டத்தில் எகிப்திலும் பாபிலோனியாவிலும் நகர அரசுகள் தோன்றி வளர்ந்து உற்பத்தி பெருகி வணிக நகர அரசுகளாக அவை மாறிக்கொண்டிருந்தன. ஆதலால் நகர அரசுகள் தோன்றி உற்பத்தி பெருகி வணிக நகர அரசுகளாக அவை வளர்கிற போது  பொருள்முதல்வாதக் கண்ணோட்டமும் தோன்றி வளர்கிறது எனலாம். கிரேக்கத்தில், கிரேக்க நகர அரசுகள் தோன்றி உற்பத்தி பெருகி, அவை வணிக நகர அரசுகளாக வளர்ந்த போது பொருள்முதல்வாதக் கண்ணோட்டமும் தோன்றி வளர்ந்தது.  மறுமலர்ச்சிக்கால ஐரோப்பாவில், இத்தாலியின் வெனிசு போன்ற நகரங்களில் ஏற்பட்ட சிந்தனை வளர்ச்சிதான் மறுமலர்ச்சியைக் கொண்டுவந்தது. ஆகவே சுதந்திரமான வணிகநகரங்கள் முற்போக்கான அறிவியல் கண்ணோட்டம் உடைய சிந்தனைகளின் வளர்ச்சிக்கான காரணிகளாக இருந்துள்ளன என்பதை வரலாறு பலவிதங்களிலும் உறுதிப்படுத்தியுள்ளது.

    இந்த வணிக நகர அரசுகள் பேரரசுகளாக மாறும்பொழுது பொதுமக்களையும் அடிமைகளையும் கட்டுப்படுத்தி வைக்கப் பொருள் முதல்வாத மெய்யியலை அழித்து அவ்விடத்தில் கருத்துமுதல்வாத மெய்யியலைக் கைக் கொள்கின்றன. வட இந்தியாவில் 16 ஜனபதங்கள் எனப்படும் நகர்மைய அரசுகள் உருவாகி வணிகம் பெருகி வளர்ந்துகொண்டிருந்தபொழுதுதான் கி.மு. 8ஆம் 7ஆம் நூற்றாண்டுகளில் பொருள்முதல்வாதச்சிந்தனையை  ஏற்றுக்கொள்ளும் சூழ்நிலை உருவாகியது. அதன் விளைவாகவே பல்வேறு பொருள்முதல்வாதச் சிந்தனைபள்ளிகள் அங்கு வளர முடிந்தது. கி.மு. 6ஆம் நூற்றாண்டிலிருந்து அந்நிலை மாறி அங்கு பேரரசுகள் உருவாகத்துவங்கின. பேரரசுகளின் உருவாக்கம் பொருள்முதல்வாத மெய்யியல் வளர்ச்சியைத்தடுத்துவிடும் என்பதால் வட இந்தியாவில் ஓரிரு நூற்றாண்டுகள் மட்டுமே பொருள்முதல்வாத மெய்யியல் சிந்தனைபள்ளிகள் வளர முடிந்தது. ஆனால் தமிழகத்தில் முன்பு கூறியவாறு கி.மு. 1000 க்கு முன்பிருந்து நகர்மைய அரசுகள் தோன்றி வளர்ந்து, கி.மு. முடிய, 1000 வருடங்களுக்கும் மேலாக கிரேக்க, உரோம நகர அரசுகளைப்போன்ற வளர்ச்சிபெற்ற வணிக நகர அரசுகளாகப் பண்டைய தமிழக நகர்மைய அரசுகள் இருந்து கொண்டிருந்தன. அதனால்தான் சாங்கியம், போன்ற மூலச்சிறப்புள்ள பொருள்முதல்வாத மெய்யியல் சிந்தனை மரபு தோன்றி வளர முடிந்தது. தமிழகத்தில் எண்ணியம் மட்டுமின்றி பூதவாதம், சிறப்பியம், ஆசிவகம், கடவுள் மறுப்புச் சிந்தனையான நாத்திகம் போன்ற பலவகையான பொருள்முதல்வாத மெய்யியல்சிந்தனைகள் தோன்றி வளர்ந்தன. இந்தச் சிந்தனைகள்தான் இந்தியா முழுவதும் பரவின. எண்ணியம், சிறப்பியம் ஆகியவற்றின் மூலவர்களான தொல்கபிலர், கணாதர் ஆகிய இருவர் குறித்து, இந்திய மெய்யியல் வள₹₹ர்ச்சியடைவதற்குக் கபிலரும், கணாதரும் முன்னொடிகளாக இருந்தனர் எனவும், இருள் சூழ்ந்திருந்த இந்திய வானில் ஒளிவீசும் விண்மீன்களாக இந்த இரண்டு மாமனிதர்களும் தோன்றினார்கள் எனவும் கூறுகிறார் பிரேம்நாத் பசாசு(5). தமிழ்ச்சிந்தனை மரபின் மூலவர்களான தொல்கபிலர், கணாதர், பக்குடுக்கை நன்கணியார், பூரணகாயபர், நரிவெரூத்தலையார் போன்றவர்கள் தமிழர்கள்தான் என உறுதிப்படுத்தியதில் க.நெடுஞ்செழியன் அவர்களின் பங்கு மகத்தானதாகும்.

     

    தமிழகத்தில் இருந்த ஆட்சியாளனின் அரச அதிகாரம் பொதுமக்கள் சபைகளால் ஒரு கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்பட்டு இருந்தது என கி.மு. 4ஆம் நூற்றாண்டு கிரேக்கத் தூதுவரான மெகத்தனிசு அவர்கள் கூறுவதாகக் கூறுகிறார் நேரு அவர்கள்-(6). மெகத்தனிசுவின் கருத்தைக் கணக்கில் கொள்வதன் மூலம் தமிழகத்தின் பண்டைய நகர அரசுகளின் அமைப்பை ஓரளவு புரிந்துகொள்ள முடியும். நகரங்களிலும், ஊர்களிலும் குடவோலை முறையில் நகர, ஊர்ச் சபைகளின் பிரதிநிதிகளையும், பல்வேறு துறைகளுக்கான வாரியப் பொறுப்பாளர்களையும் நியமிக்கத் தேர்தல்கள் நடைபெற்றன என்பதை மருதன் இளநாகனாரின் பாடல்(அகம்-77) தெரிவிக்கிறது.  இதன் காலம் கி.மு. 2ஆம் நூற்றாண்டாகும். ஆகவே சங்ககாலத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நகரச் சபைகளும், ஊர்ச்சபைகளும், வாரியப் பொறுப்பாளர்களும் இருந்தனர் என்பதும் அவர்கள் பலவிதங்களில் அரசனுடைய அதிகாரத்தைக் கட்டுப்படுத்தினர் என்பதும் மேற்கண்ட மெகத்தனிசின் கூற்று மூலமும், மருதன் இளநாகனார் தரும் தேர்தல் முறை மூலமும் உறுதிப்படுத்தப்படுகிறது. ஆகவே தனித்தனியான ஆட்சியாளனின் கீழ் மிக நீண்ட காலமாக இருந்து வந்த சுதந்திரமான பலவகைப்பட்ட வணிக நகர, நகர்மைய அரசுகள் தான் மூலச்சிறப்புள்ள பொருள்முதல்வாத மெய்யியல்சிந்தனைகள் தமிழகத்தில் தோன்றி வளர்ந்ததற்கான அடிப்படைக் காரணம் ஆகும். 3000 ஆண்டுகளுக்கும் முந்தைய, மூலச் சிறப்புடைய தமிழ்ச்சிந்தனை மரபானது, பொருள் முதல்வாத மெய்யியல் சிந்தனையைத் தனது அடித்தளமாகக் கொண்டு, வளர்ச்சி பெற்ற வணிக நகர அரசுகளைக் கொண்டிருந்த பண்டைய தமிழ்ச் சமூகத்தில், 1000 வருடங்களுக்கும் மேலாக மிகப்பெரும் செல்வாக்குடனும், புகழுடனும் இயங்கி வந்துள்ளது.

    பார்வை:

    1. முனைவர் கா. இராசன் அவர்கள், ‘தொல்லியல் நோக்கில் சங்ககாலம்’ உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், 2010, பக்: 74, 75, 76.

    2.அ. இராமசாமி, தொன்மைத்தமிழர் நாகரிகவரலாறு, டிசம்பர்-2013, பக்:62.

    1. “ “    பக்: 52-64.

    4.’இயக்கவியல் பொருள்முதல்வாதம் என்றால் என்ன?’  இரசிய நூல், முன்னேற்ற பதிப்பகம், மாஸ்கோ பக்:43.

    5.இந்திய வரலாற்றில் பகவத்கீதை, பிரேம்நாத் பசாசு, தமிழில் கே.சுப்ரமனையன், விடியல் பதிப்பகம், சனவரி-2016, பக்:131.

    6.சவகர்லால் நேரு, உலகச் சரித்திரம், தமிழில் ஒ.வி. அளகேசன், முதல் பாகம், 2006, பக்: 153.

    ஆதார நூல்: பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும், கணியன்பாலன், எதிர்வெளியீடு, சூன்-2016, பக்: 777-818.

     

     

     

     

     

    Share
  • பழந்தமிழக வரலாறு – 5

     

     

             தமிழக வரலாற்றில் நகர்மைய அரசுகள்

     

                                         -கணியன்பாலன்

    மனித இன நடவடிக்கைகள் குறித்தக் காலவரிசைப் படியான வரலாற்றுத்தரவுகளின் தொகுப்பே வரலாறு ஆகும். மொழிக்கு எழுத்து உருவான காலம் முதல் வரலாறு தொடங்குவதாகக் கருதப்படுகிறது. நமது பழந்தமிழகத்தை எடுத்துக்கொண்டால், அதன் வரலாறு சங்க காலத்திலிருந்து(கி.மு.750-50). தொடங்குகிறது. சங்ககால இலக்கியங்கள், மதச் சார்பான பல பாடல்களைக் கொண்டிருந்த போதிலும், பெரும்பாலான பாடல்களில் பொருள் முதல்வாத மெய்யியல் கருத்துக்கள் உள்ளன. சங்ககாலத்திலும், சங்க காலத்திற்கு முன்பும் பாடப்பட்ட பல பொருள் முதல்வாத மெய்யியல் கருத்துக்களைக் கொண்ட பாடல்கள் சங்க இலக்கியத் தொகுப்புகளில் இடம்பெறவில்லை. சங்ககாலத்தில் இருந்த வளர்ச்சிபெற்ற தொழில்நுட்பம் மற்றும் உற்பத்தித் திறன், உலகளாவிய வணிகம், தமிழர்கள் வணிகத்துக்காகப் பிறநாடுகளில் சென்று தங்கியது, அவர்களிடம் இருந்த மிகப்பரவலான கல்வியறிவு, எழுத்தறிவு போன்ற பல தரவுகள் சங்க இலக்கியத்தில் இடம்பெறவில்லை. தொல்லியல், நாணயவியல், கல்வெட்டியல், மொழியியல், மனித இனவியல் போன்றவற்றில் நடைபெற்று வரும் தற்போதைய ஆய்வுகள் அதனை உறுதிப்படுத்துகின்றன.

    அரசு உருவாக்கமும் நகர உருவாக்கமும்:

    ஆரம்பகால அரசு உருவாக்கம் என்பது நகர உருவாக்கத்தோடு தொடர்பு உடையதாகும். வேளாண்மையை அறிந்தபின் மனிதன் ஓரிடத்தில் தங்கி வாழத் தொடங்கினான். வேளாண்மையில் ஏற்பட்ட வளர்ச்சி சிற்றூர்களையும், பேரூர்களையும் தோற்றுவித்தது. வேளாண்மையில் கிடைத்த உபரி உற்பத்தியோ, கைத்தொழில், பட்டறைத்தொழில், வணிகம் முதலியவற்றை வளர்த்தெடுத்தது. சொத்துடமை வர்க்கம் உருவாகி வளரத் தொடங்கியது. சொத்துடமை ஆணாதிக்கத்தைக் கொண்டு வந்தது. ஆணாதிக்கம் இன்றையக் குடும்ப முறையைக் கொண்டு வந்தது. குடும்பத்தில் பெண் ஆணுக்கு அடிமையாக்கப்பட்டாள். பெண்ணின் கற்பு புனிதமாக மாற்றப்பட்டது. கைத்தொழில்களிலும், பட்டறைத்தொழில்களிலும், வணிகத்திலும் ஏற்பட்ட வளர்ச்சி சிற்றூர்களையும் பேரூர்களையும் சிறு நகரங்களாகவும், பெரு நகரங்களாகவும் மாற்றத்தொடங்கின. நாளடைவில் நகரத்தில் இருந்த சொத்துடமை வர்க்கம் ஒன்றினைந்து தன்னையும், தனது சொத்துக்களையும் பாதுகாத்துக் கொள்வதற்காக ஒட்டுமொத்த நகரத்தையே பாதுகாப்பவனாகவும் பராமரிப்பவனாகவும் தன்னை நியமித்துக் கொள்கிறது. இதன் காரணமாக நகர மக்களுக்கு மேம்பட்ட ஒன்று உருவாக்கப்பட்டு, அது அரசாக வடிவமெடுக்க வழிவகை செய்யப்படுகிறது. இவ்விதமாக நகர அரசுகள் உருவாகி நிலைபெறத்தொடங்கின எனலாம்.

    தொடக்கத்தில் உலகெங்கும் அரசு உருவாக்கம் நகரங்களில்தான் தொடங்கியது. உலக வரைபடத்தில் ஆரம்பத்தில் உருவான அனைத்து நாகரிகங்களிலும் முதலில் நகர அரசுகள் உருவாவதை நாம் காண முடிகிறது. கிரேக்கத்தில், உரோமில், கார்த்தேஜில் முதலில் நகர அரசுகளே தோன்றின. மெசபடோமியாப் பகுதியில் உருவான சுமேரியா நாகரிகமும், பிற நாகரிகங்களும் முதலில் நகர அரசுகளையே தோற்றுவித்தன. சுமேரியா நாகரிகம் என்பது உண்மையில் நகர அரசுகளின் நாகரிகமே. அங்கு இன்றைக்கு கி.மு 3500 வாக்கில் ‘ஊர்’ என்ற நகர அரசு உருவாகியிருந்தது. அது ஒரு மிகப் புகழ்பெற்ற நகர அரசாக இருந்தது. சுமேரியர்களின் வீழ்ச்சிக்குப்பின் பாபிலோனிய நகர அரசு அங்கு முக்கியத்துவம் பெற்றது.  பின் இந்த நகர அரசு பிற நகர அரசுகளை வென்று ஒரு பேரரசாக உருவாகியது. எகிப்திலும் கி.மு. 3000 வாக்கில் சிறு சிறு நகர அரசுகளே தோன்றின-(1). பின் அவை ஒன்று சேர்ந்து எகிப்தியப் பேரரசு உருவாகியது.

    நமது சிந்துவெளி நாகரிகத்திலும் முதலில் நகர அரசுகளே தோன்றின. அந்நாகரிகம் பல நகர அரசுகளின் நாகரிகமே. ஆரிய வருகைக்குப் பின் உருவான வட இந்திய நாகரிகத்தில் கூட முதலில் 16 ஜனபதங்கள் எனப்படும் நகர்மைய அரசுகளே தோன்றின. இந்த நகர்மைய அரசுகளிடையே ஏற்பட்ட போட்டிகளாலும், போர்களாலும் கி.மு. 6ம் 5ம் நூற்றாண்டு வாக்கில் மகத அரசு பிற நகர்மைய அரசுகளை வென்று ஒரு பேரரசாக உருவெடுத்தது. எனவே உலகெங்கும் ஆரம்பகால நகர உருவாக்கம் என்பது அரசு உருவாக்கத்தின் தொடக்கமாக இருந்துள்ளது. அதன்பின் இந்த நகர அரசுகள் பிற நகர அரசுகளை வென்று பெரிய அரசுகளாக, பேரரசுகளாக உருவாகின.

    சங்ககாலத்தில் அரசு உருவாக்கம்:

    பழந்தமிழகத்தில் கி.மு. 1500 வாக்கிலேயே சிறு சிறு நகரங்களும், நகர்மையங்களும் உருவாகத்துவங்கி, பின் அவை நாளடைவில் நகர்மைய அரசுகளாகப் பரிணமித்தன. கி.மு 8ஆம் நூற்றாண்டு வாக்கில் சேர, சோழ, பாண்டிய நகர அரசுகள் வலிமை பெற்று இந்த நகர்மைய அரசுகள் பலவற்றை வென்று ஒன்று சேர்ந்துப் பெரிய அரசுகளாக உருவெடுத்தன. அதன் பின்னரும் சேர, சோழ, பாண்டிய அரசுகளின் உறவினர்களால் இந்த நகர்மைய அரசுகள் ஒவ்வொன்றும் தனித்தனியாகவே ஆளப்பட்டு வந்தன. “ஐந்து பாண்டியர்களால் ஆளப்பட்ட ஐந்து பாண்டிய அரசுகள் இருந்தன” என்பது ஒரு தொன்மக்கருத்தாகும். பாண்டியர்கள் பலர் பல நகர்மைய அரசுகளை ஆண்டு வந்தனர் என்பதை இக்கருத்து உறுதிப்படுத்துகிறது. பாண்டியர்களைப் போன்றே சேர சோழ அரசுகளும் பல நகர்மைய அரசுகளைக் கொண்டிருந்தன.

    சேர, சோழ, பாண்டிய அரசுகள் போக பல குறுநில மன்னர்களும், வேளிர்களும் பல சிறு சிறு நகர்மைய அரசுகளை ஆண்டு வந்தனர். அவர்கள் அந்தந்தச் சிறு சிறு நகர்மைய அரசுகளின் நகரங்களைக் கொண்டே அழைக்கப்பட்டு வந்தனர். பாழிநகர் நன்னன், வியலூர் நன்னன், போஓர் பழையன், மோகூர் பழையன், எயில் ஊர் ஆந்தை, நீடூர்த் தலைவன் எவ்வி, உறையூர் தித்தன், காமூர்த் தலைவன் கழுவுள், இருப்பையூர் வீரான், ஊனூர் தழும்பன், ஆர்க்காட்டு அழிசி எனப் பல குறுநில மன்னர்களும், வேளிர்களும் அவரவர்களின் நகரங்களைக் கொண்டே அழைக்கப்பட்டு வந்துள்ளனர்.          சேர, சோழ, பாண்டியர்கள் கூட தொண்டி அரசன், கொற்கைப் பாண்டியன், புகார்த்தலைவன் என நகரங்களைக் கொண்டே அழைக்கப்பட்டு வந்துள்ளதைக் காணமுடிகிறது. ஆக நகரங்கள் அன்று அரசின் மிக மிக முக்கிய அங்கமாக இருந்தன என்பதை இவை தெரிவிக்கின்றன. மூவேந்தர்கள் தவிர அதியன், நன்னன் போன்ற அரச பரம்பரைகளும் ஒருசில நகர்மைய அரசுகளை வென்று, பெரிய அரசுகளாக ஆக முயன்றுள்ளன. ஆனால் அம்முயற்சி மூவேந்தர்களால் முறியடிக்கப்பட்டது. மூவேந்தர்கள் உருவாகிய பின்னரும், நகர்மைய அரசுகள் முழுச் சுதந்திரத்தோடு தனி அரசுகளாகவே செயல்பட்டு வந்துள்ளன. வேந்தன் ஒரு பெரிய நகர்மைய அரசை ஆண்டான் எனில், அவனது கிளை உறவினர்கள் பிற நகர்மைய அரசுகளை ஆண்டனர். இவைபோக குறுநில மன்னர்களும், வேளிர்களும் இருந்தனர். எனவே தமிழகமெங்கும் நகரங்கள் பல ஊர்களைக் கொண்ட தனித்தனி அரசுகளாக இயங்கி, தனித்தனி அரசர்களால் ஆளப்பட்டன.

    அரசும் எழுத்தும் :

    கி.மு. 6ஆம் நூற்றாண்டில் உரோம் நகர அரசு உருவாகி நிலை பெற்ற பின்னர்தான் இலத்தின் மொழிக்கு எழுத்து உருவானது. எகிப்து, சுமேரியா போன்ற இடங்களிலும் நகர அரசுகள் உருவாகி நிலை பெற்ற பின்னர்தான் எழுத்துக்கள் உருவாகின. சீனாவில் அரசு உருவாகியபின் கி.மு 15ஆம் நூற்றண்டு வாக்கில் எழுத்து உருவானது. இந்தியாவில்  அசோகர் ஆட்சியில்தான் அசோகன் பிராமி எழுத்து பயன்படுத்தப்பட்டது(2). எனவே எழுத்து உருவாகிவிட்டது எனில் அங்கு அரசு உருவாகி நிலைபெற்றுவிட்டது என்பதுதான் உலகெங்கும் இருந்த நிலையாகும். கிரீட்(CRETE) தீவின் மினோன்(MMIMINOAN) எழுத்துக்களைக் கிரேக்கத்தில் இருந்த மைசீனியர்களின் (MMYCENAEANS) நகர அரசுகள் கி.மு. 13ஆம்  நூற்றண்டு வரை பயன்படுத்தினர். அதன் பின் கிரேக்கத்தில் இருந்த மைசீனியர்களின் நகர நாகரிகம் அழிந்து போனதால் அவர்கள் எழுத்தும் இல்லாது போயிற்று. அதன் பிந்தைய மூன்று, நான்கு நூற்றாண்டுகள் கிரேக்க வரலாற்றில் இருண்ட காலமாகும். கி.மு. 8ஆம் நூற்றாண்டில், மீண்டும் கிரேக்க நகர அரசுகள் உருவாகி நிலைபெற்ற பொழுதுதான் பொனிசியன்(PHOENICIAN) எழுத்துக்களை அடிப்படையாகக் கொண்ட கிரேக்க எழுத்து முறை உருவாகியது(3).

    ஆகவே அரசுகள் உருவாகி நிலைபெற்ற பின்னர்தான் எழுத்துக்கள் உருவாகின்றன என்பதற்கு கிரேக்க வரலாறே ஒரு சான்றாகத் திகழ்கிறது எனலாம். தமிழகத்தில் தமிழி எழுத்தின் காலம் கி.மு. 8ஆம் நூற்றாண்டு. கி.மு. 1500 முதல் கி.மு. 1000 வரையான காலகட்டத்தில் தமிழர்கள் குறியீடுகளை எழுத்துக்களாகப் பயன்படுத்தினர். ஆதலால் கி.மு.1500 முதல் கி.மு. 1000 வரையான காலகட்டத்தில் தமிழகத்தில் சிறு சிறு நகர அரசுகள் உருவாகி இருந்தன. சங்ககாலத்திற்கு முன், கி.மு. 8ஆம் நூற்றாண்டு வாக்கில் அவை வளர்ந்து, நிலைபெற்ற நகர அரசுகளாக ஆகியிருந்தன.

    தமிழகத்தின் வளர்ச்சி:

    தமிழகச் சேர சோழ பாண்டிய அரசுகளின் ஆட்சிக்கும், வட இந்திய மகதப் பேரரசின் ஆட்சிக்கும் பல வேறுபாடுகள் இருந்தன. மிகப்பெரிய, பரந்து விரிந்த பேரரசுகளின் நகரங்களை பேரரசின் மண்டல அதிகாரிகளே ஆட்சி செய்து வந்தனர். பேரரசுகளில் படிப்படியான அதிகாரவர்க்க நிர்வாகமுறை இருந்து வந்தது. அதனால் பேரரசின் நகரங்களும் பிற பிரதேசங்களும் போதிய சுதந்திரம் இல்லாதவைகளாக இருந்தன. பேரரசரால் மண்டல அதிகாரிகள் அடிக்கடி மாற்றப்படவும் வாய்ப்பிருந்தது. இந்நிலைமை பாரசீகப் பேரரசிலும், இந்தியாவில் மகதப் பேரரசிலும் இருந்தது. ஆனால் தமிழக நகர்மைய அரசுகள் பெரும்பாலும் மூவேந்தர்களின் கிளை அரசர்களால் ஆளப்பட்டன. அல்லது குறுநில மன்னர்களாலும், வேளிர்களாலும் ஆளப்பட்டன. அவை அனைத்துமே தங்கள் நகர்மைய அரசுகளை நிர்வகிப்பதில் முழு சுதந்திரம் உடையவைகளாகவும், தனித்தனி அரசர்களால் ஆளப்பட்டவைகளாகவும் இருந்தன. மிக நீண்ட காலமாக ஆளப்பட்டு வந்தன. மக்கள் பிரதிநிதிகளால் கட்டுப்படுத்தப்பட்டு ஆளப்பட்டன. இவைகளின் காரணமாக தமிழகத்தின் பண்டைய நகர அரசுகள் பலவிதங்களிலும் நன்கு வளர்ச்சி அடைந்தவனாக உருவாகின.

    தமிழ் அரசுகள் மக்களின் பிரதிநிதிகளால் கட்டுப்படுத்தப் பட்டவைகளாக இருந்தன என கிரேக்கப்பயணி மெகத்தனிசு அவர்கள் கூறியுள்ளார் என்கிறார் சவகர்லால் நேரு அவர்கள். “அரசியல் துறையில் தென்னாட்டு சனப்பிரதிநிதி சபைகள் அரசர்களின் அதிகாரத்தை ஒரு கட்டுக்கு உட்படுத்தி வைத்திருந்தன என கிரேக்க யாத்திரிகரான மெகத்தனிசு கூறுகிறார்” என அவர் குறிப்பிட்டுள்ளார்(4). ஐம்பெருங்குழு, எண்பேராயம் போன்ற வேளிர்கள் அல்லது பிரபுக்கள் குழுக்களும் இன்னபிற மக்கள் பிரதிநிதிக்குழுக்களும் அரசை கட்டுப்படுத்தி வந்திருக்கவேண்டும். அதன் காரணமாக அரசனின் அதிகாரம் வரம்பற்றதாக இல்லாமல் கட்டுப்படுத்தப் பட்டதாக இருந்தது. அதனைத்தான் மெகத்தனிசு தனது குறிப்பில் கொடுத்துள்ளார். இவை தமிழக நகரங்களின் வளர்ச்சிக்கு ஒரு மிக முக்கியக் காரணமாக இருந்தது எனலாம்.

    சங்ககாலத்தில் இருந்த அளவு எழுத்தறிவும், கல்வியறிவும் வடஇந்தியாவில் இருக்கவில்லை. பிற தொழில்நுட்பமும், உற்பத்தித்திறனும், வணிகமும்கூட பழந்தமிழகத்தில் இருந்த அளவு வட இந்தியாவில் இருக்கவில்லை. பழந்தமிழகத்தில் இருந்து உலகம் முழுவதும் பெரிய அளவில் வணிகம் நடைபெற்றது. இவ்வளர்ச்சிகளால்தான் கி.மு. 3ம் நுற்றாண்டின் தொடக்கத்தில் தமிழக அரசுகளின் ஐக்கியக் கூட்டணி மௌரியப் பேரரசைத் தோற்கடிக்க முடிந்தது. சங்க இலக்கியம் போன்ற செவ்வியல் இலக்கியங்களை உருவாக்க முடிந்தது. மகதப் பேரரசு காலத்தில் வட இந்தியாவில் செவ்வியல் இலக்கியம் எதுவும் உருவாகவில்லை என டி. டி. கோசாம்பி குறிப்பிடுகிறார். உலக அளவில் நடந்த பண்டைய இந்திய வணிகம் பெருமளவு தமிழகம் வழியேதான் நடந்தது என்பதைப் பல்வேறு ஆய்வுகள் இன்று உறுதி செய்துள்ளன. சங்ககாலத் தமிழ் மக்கள் மிக அதிக அளவில் எழுத்தறிவு கொண்டிருந்தனர் என ஐராவதம் மகாதேவன் குறிப்பிடுகிறார். ஆகவே மிக நீண்டகாலத்திற்கு முன்னரே தமிழகத்தில் நகர அரசுகள் உருவாகி அவை ஒப்பீட்டளவில் பண்டைய கிரேக்க, உரோம நகர அரசுகளைப் போன்ற வளர்ச்சி பெற்ற நகர அரசுகளாக ஆகியிருந்தன.

    பார்வை:

    1. The World Book Encyclopedia, 1988 USA. vol-4, pages : 578-580

    2.விக்கிபீடியா: Greek_alphabet,  Latin_alphabet  & ’இன்றைய இந்திய இலக்கியம்’ சாகித்திய அக்காதெமி வெளியீடு, பக்; 87, 185;

    3.The World Book Encyclopedia, 1988 USA.  vol-8, pages : 396

    4.சவகர்லால் நேரு,  ‘உலக சரித்திரம்’  தமிழாக்கம்- ஓ.வி. அளகேசன், 3ஆம் பதிப்பு, அக்டோபர்- 2006, பக்: 153.

    ஆதார நூல்:

    பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும், கணியன்பாலன், எதிர்வெளியீடு, சூன்-2016, பக்: 261-269

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

    Share
  • பழந்தமிழக வரலாறு -4

     

     

                 தமிழக அரசகுடி மரபின் சிறப்பு

                                        கணியன்பாலன்

    பண்டைய தமிழக அரசகுடிகளான சேர, சோழ, பாண்டிய அரச குடிகள் 2000 ஆண்டுகளாக இருந்து வந்துள்ளன. உலகில் வேறு எந்த நாடுகளிலும் எந்த அரச குடியும் 1000 ஆண்டுகள் கூட இருந்ததில்லை. கி.மு. 8ஆம் நூற்றாண்டு தொடங்கி, கி.பி. 12ஆம் நூற்றாண்டு முடியம்வரை தமிழக அரச குடிகள் இருந்தன. பெரும்பாலும் சேர, சோழ, பாண்டிய அரச குடிகளால் தமிழகம் ஆளப்பட்டபோது மட்டுமே தமிழ் மக்களின் ஆட்சியாக அது இருந்தது, இல்லையெனில் அது அந்நிய ஆட்சியாகவே பிறமொழி ஆட்சியாளர்களின் ஆட்சியாகவே அது இருந்தது. தமிழக அரசகுடும்பங்களில் அரச பதவிக்காக ஒருவரை ஒருவர் கொல்வது என்பது இருக்கவில்லை. வேறுபல மேன்மைகளும் இருந்தன. அதற்குப் பண்டைய தமிழக அரசகுடிகள் பின்பற்றிய மரபுவழி சிறப்பு அரசுரிமைமுறைதான் காரணமாகும். பாண்டியர்களை முதுகுடிகள் என்கிறது சங்க இலக்கியம்.

    பண்டைய தமிழக அரசுகளை, அசோகர் தனது கல்வெட்டுகளில் சோழர்கள், பாண்டியர்கள், சதிய புத்திரர்கள், கேரள புத்திரர்கள் எனப் பன்மையில்தான் குறிப்பிட்டுள்ளார். சங்ககாலத்தில் மூவேந்தர்கள் ஒவ்வொருவரிலும் பலர் இருந்து ஆண்டு வந்துள்ளனர். அதாவது சேரர்களில் மூன்று நான்கு பேரும், பாண்டியர்களில் மூன்று நான்கு பேரும், சோழர்களில் மூன்று நான்கு பேரும் இருந்து ஆண்டு வந்துள்ளனர். சேரர்கள் வஞ்சி, கரூர், போன்ற இடங்களிலும், பாண்டியர்கள் கொற்கை, மதுரை, போன்ற  இடங்களிலும், சோழர்கள் உறையூர், பூம்புகார், போன்ற  இடங்களிலும் மூன்று நான்கு சேர, சோழ, பாண்டிய அரசர்கள் ஆண்டு வந்துள்ளனர்.

    சான்றாகச் சேரன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் வடக்கிருந்தபோது,  அவனது தம்பி பல்யானைச் செல்குழுகுட்டுவன், அவனது மூத்த மகன் களங்காய்கண்ணி நார்முடிச் சேரல், அவனது நடு மகன் கடற்பிறக்கோட்டிய செங்குட்டுவன், அவனது தாயாதித்தம்பி சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன், அவனது கிளை வம்சத்தை சேர்ந்த பொறையர் குல அரசர்களான பாலைபாடிய பெருங்கடுங்கோவும், மாந்தரன் பொறையன்  கடுங்கோவும் என ஆறு பேர் ஆண்டு வந்துள்ளனர். ஆனால் பல்யானைச் செல்குழுகுட்டுவன் மட்டுமே வேந்தனாக இருந்துள்ளான். சேரன் செங்குட்டுவன் 9 சோழக்கிளை அரசர்களை வென்றான் என பதிற்றுப்பத்து பதிகம் கூறுகிறது. இதே போன்றுதான் பாண்டிய அரசும் இருந்தது. அதனால்தான் அசோகர் தனது கல்வெட்டுகளில் தமிழக அரசுகளைப் பன்மையில் குறிப்பிட்டுள்ளார். மூவேந்தர் அரசகுலங்கள் ஒவ்வொன்றிலும் ஒரே சமயத்தில் பல அரசர்கள் இருந்த போதிலும், ஒவ்வொரு குலத்திலும் ஒரு சமயத்தில் ஒரு வேந்தர் மட்டுமே இருந்தார். ஆனால் அனைத்துச் சேர, சோழ, பாண்டிய அரசர்களையும் சங்க இலக்கியம் வேந்தர்கள் என்றே அழைத்தது. ஆனால் நாம் வேந்தர்களையும் அரசர்களையும் வேறுபடுத்திப் பார்ப்பது அவசியமாகிறது. இவைகளைப் புரிந்து கொள்ள அன்றைய சேர, சோழ, பாண்டிய அரசுகள் எப்படித் தனது அரசர்களையும், வேந்தர்களையும் உருவாக்கிக் கொண்டன என்பதை அறிவது முக்கியமாகும்.

    தந்தைக்குப் பின் அவனுடைய மூத்த மகன், அவனுக்குப் பின் அவனுடைய மூத்த மகன் என வரும் அரசியல் தாயமுறை(Primogenituro) தமிழ் நாட்டில் இருக்கவில்லை. அதற்குப் பதில் வேறு விதமான ஒரு சிறப்பு முறையைத் தமிழக அரசகுலங்கள் பின்பற்றின. ஒரு அரசனுக்கு இரண்டு மூன்று புதல்வர்கள் இருந்தாலும், அவனுக்குத் தம்பிகள் இருந்தாலும் அவர்கள் அனைவருமே உரிய வயது வந்தபொழுது அரசர்களாக ஆக்கப்பட்டு ஒவ்வொருவரும் ஒவ்வொரு நகர்மைய அரசை ஆள அனுமதிக்கப் பட்டனர். இவர்கள் அனைவரும் அவனுகுக்குக் கீழ்ப்பட்ட அரசர்களாக இருந்தனர். அவன் இறந்தபின் இருக்கும் அரசர்களில் மூத்தவன் எவனோ அவன் வேந்தனாவான். பெரும்பாலும் அவனது தம்பி வேந்தன் ஆவான். பின் அவன் இறந்தபின் மீண்டும் அரசர்களில் மூத்தவன் எவனோ அவன் வேந்தனாவான். தமிழரச குலங்களில் இம்முறையே இருந்து வந்தது. ஆனால் அனைவரும் வேந்தர்கள் என்றே அழைக்கப்பட்டனர்.

    வேந்தர்களின் மகன்களும், அரசர்களின் மகன்களும் உரிய வயதில் அரசர்களாக்கப்பட்டு ஏதாவது ஒரு நகர்மைய அரசை ஆட்சிசெய்து வந்தனர். இதன் விளைவாக அரசின் ஒவ்வொரு நகர்மைய அரசும் வேந்தனின் ஏதாவது ஒரு  கிளைஅரசனால் ஆளப்பட்டது. எல்லாருக்கும் மூத்தவன் வேந்தனாக இருந்தான். சான்றாக உதியஞ்சேரலாதன் வேந்தனாக இருந்த பொழுது அவனது இரு மகன்கள் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனும், பல்யானைச் செல்குழு குட்டுவனும் அரசர்களாக இருந்தனர். பின் உதியன் இறந்த பிறகு மூத்தவனான இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் வேந்தன் ஆனான். இவனது தம்பி பல்யானைச் செல்குழு குட்டுவன் அரசனாக ஆனான். இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் இறந்த பிறகு அரசர்களில் மூத்தவனும் இவனது தம்பியுமான பல்யானைச் செல்குழு குட்டுவன் வேந்தன் ஆனான். இமயவரம்பனின் மகன்களான களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரலும், செங்குட்டுவனும் அரசர்களானார்கள். அதன் பின் நார்முடிச் சேரலும், பின் செங்குட்டுவனும், அதன்பின் ஆடுகோட்பாட்டு சேரலாதனும் முறையே ஒருவர் பின் ஒருவராக வேந்தர்களாகினர். இம்முறை  இனக்குழு நிலவிய காலத்தில் இருந்து உருவான ஒரு இரத்த உறவுமுறை வடிவமாகும்.

    இதே முறைதான் பிற சோழ, பாண்டிய அரச குடிகளிலும் பின்பற்றப்பட்டது. பிற்காலச் சோழர்களும் இதே முறையைத்தான் பின்பற்றினர். சான்றாக முதற்பராந்தகனுக்கு  இராசாதித்தன், கண்டராதித்தன், அரிஞ்சயன், உத்தமசீலி என மக்கள் நால்வர் இருந்தனர். அவர்களுள்  இராசாதித்தன், பராந்தகன் இருக்கும்போதே இறந்தான். அதனால் பராந்தகனுக்குப்பின் கண்டராதித்தன் சோழ வேந்தனாய் முடிசூட்டிக் கொண்டான். அவனுக்குப்பின் அரிஞ்சயன் முடிவேந்தனானான். அவனுக்கு முன்பே உத்தமசீலி இறந்து போனான். கண்டராதித்தனுக்கு உத்தம சோழன் என்றொரு மகனும் அரிஞ்சயனுக்குச் சுந்தர சோழன் என்றொரு மகனும் இருந்தனர். அவ்விருவருள், சுந்தரசோழன் மூத்தவனாதலால் முதலில் அவனும், அவனுக்குப் பின் உத்தம சோழனும் முடி வேந்தராயினர். உத்தம சோழனுக்குப்பின் சுந்தர சோழனின் மக்களுள் மூத்தவனான ஆதித்த கரிகாலன் தந்தையிருக்கும்போதே இறந்ததால், இளையோனான முதல் இராசராச சோழன் முடிவேந்தனாய் ஆனான்.

    இந்த முறைதான் பண்டைய தமிழக மூவேந்தர்கள் மரபு வழியாக பின்பற்றிய அரசுரிமை முறையாகும். இம்முறை அரச குடிகளில் இருந்த பல சிக்கல்களைத் தீர்த்தது. ஒரு அரசனின் இழப்பு அல்லது ஏன் ஒரு வேந்தனின் இழப்பு கூட மிக எளிதாகச் சமாளிக்கப்பட்டது. நகர்மைய அரசுகள் இந்த வேந்தர் வழி வந்த அரசர்களால் ஆளப்பட்டதால் அவை சுதந்திரமான தன்னரசுகளாக இருந்ததோடு நன்கு வளர்ச்சி அடைவதற்கான சூழ்நிலை உருவானது. இம்முறையினால் அதிகாரவர்க்கப் படிமுறை என்பது தமிழகத்தில் தடுக்கப்பட்டு அதன் தீமைகள் தவிர்க்கப்பட்டன. இம்முறையின் காரணமாக, பிறநாட்டு அரச குடும்பங்களில் இருந்த கொலைகளும் சூழ்ச்சிகளும் தமிழக அரச குடும்பங்களில் இல்லாது போயின.

    முசிறி, தொண்டி, வஞ்சி, கரூர், நறவு, மாந்தை என்பன சேர வேந்தர்கள் பொறுப்பில் இருந்த சில முக்கிய நகர்மைய அரசுகள் ஆகும்.  இவை ஒவ்வொன்றையும் தனித்தனி சேர அரசர்கள் ஆண்டனர். இந்த அரசமுறையைப் பின்பற்றி தமிழக நகர்மைய அரசுகளும், வேந்தர்களும் இருந்ததால், போர்கள் பல நடந்தாலும், இழப்புகள் பல ஏற்பட்டாலும் சேர, சோழ, பாண்டிய அரச குலம் நீடித்து நிலைத்து இருந்து வந்தது. இந்த அரசமரபு பல தடவை மீறப்பட்டதும் உண்டு. இம்முறையை முழுமையாக கடை பிடிக்காததும்கூட சங்ககால மூவேந்தராட்சி வீழ்ச்சி அடைய ஒரு காரணமாகும். இந்த அரசுரிமை முறையைப் பின்பற்றாததால் வீழ்ந்து போனதற்கு பிற்காலப் பாண்டியராட்சி ஒரு சிறந்த சான்றாகும்.

    ஆதார நூல்:    பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும், கணியன்பாலன், எதிர்வெளியீடு, சூன்-2016, பக்: 270-273..

     

    Share
  • தமிழ் எழுத்தின் பழமை-1

    கணியன்பாலன்

     

    தமிழ்மொழியும் அதன் இலக்கியங்களும் மிகப் பழமையானது என்பதற்கு அதன் ‘தமிழி’ எழுத்துத் தோன்றிய காலத்தை அறிதலே போதுமானது. தமிழகத்தில் பழனி அருகே உள்ள பொருந்தல் என்ற இடத்தில் நடந்த அகழாய்வின்போது  கிடைத்த மட்பாண்டங்களில் இருந்த இருநெல் மாதிரிகள் அமெரிக்காவில் உள்ள பீட்டா ஆய்வு நிலையத்தில், அறிவியல் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு (Accelerator Mass  Spectrometry  by the Beta Analytic Lab , USA ), அவைகளின் காலம் கி.மு.490, கி.மு. 450 எனக் கணிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு நெல் மாதிரிகளுமே, பொருந்தல் அகழாய்வில் கிடைத்த, இரு வெவ்வேறு மட்பாண்டங்களிலிருந்து எடுக்கப்பட்டவைகளாகும்.

    இந்த மட்பண்டங்களில் தமிழி எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளது. இதன் அகழாய்வு இயக்குநர் பாண்டிச்சேரிப் பல்கலைக்கழகப் பேராசிரியர், முனைவர் கா.இராசன் அவர்கள், இந்தக்காலக் கணிப்புகளின்படி, தமிழ் பிராமியின்(தமிழி) காலம் கி.மு. 5ஆம் நூற்றாண்டு என்கிறார். மேலும் தமிழ்பிராமி எழுத்து அசோகர் பிராமிக்கு இரு நூற்றாண்டுகள் முற்பட்டது என்பதோடு, அசோகர் பிராமியில் இருந்து தமிழ் பிராமி(தமிழி) உருவாக வில்லை என்பதும் நிரூபிக்கப்படுகிறது என்கிறார்(1).

    பொருந்தலும், ஆதிச்சநல்லூ ரும்:

    இந்த 5ஆம் நூற்றாண்டுப் பொருந்தல் எழுத்துக்கள் குறித்து டாக்டர் சுப்பராயலு அவர்கள் 29-8-2011 இந்து நாளிதழுக்குக் கொடுத்த தகவலில், இந்த எழுத்துக்கள் ஐராவதம் மகாதேவன் அவர்களின் கணிப்புப்படி இரண்டாம் நிலைத் தமிழி எழுத்துக்கள் ஆகும் எனவும், ஆகவே அதன் காலத்தை கி.மு 490 க்குக் கொண்டுபோக முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார். இதனை அவர் குறிப்பிட்ட பொழுது ஒரு மட்பாண்ட நெல் மாதிரி மட்டுமே அமெரிக்காவில் உள்ள பீட்டா ஆய்வு நிலையத்தில் அறிவியல் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு அதன் காலம் கி.மு 490 என கண்டறியப்பட்டிருந்தது.  அதன்பின் இரண்டாவது நெல் மாதிரியும் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டு அதன் காலம் கி.மு. 450 என கண்டறியப்பட்டது.  ஆகவே பொருந்தல் தமிழி எழுத்துக்களின் காலம் கிமு. 5ஆம் நூற்றாண்டு என்பது சந்தேகத்திற்கு இடமின்றி இரண்டு மாதிரிகளின் அறிவியல் ஆய்வு மூலம் இன்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

    தமிழி(தமிழ் பிராமி) எழுத்துக்களை அதன் எழுத்தமைதி, வடிவம், எழுதும்விதம் ஆகிய பல காரணிகளைக் கொண்டு ஐராவதம் மகாதேவன் அவர்கள் மூன்று நிலைகளாகப் பிரித்துள்ளார். ஒவ்வொன்றுக்கும் இடையே சில நூற்றாண்டுகள் இடைவெளிகள் இருந்துள்ளன என்கிறார் அவர். ஐராவதம் மகாதேவன் அவர்கள் பிரித்த மூன்று நிலை தமிழி எழுத்துகளில், பொருந்தல் தமிழி எழுத்துக்கள் இரண்டாம் நிலை தமிழி எழுத்துக்கள் என்கிறார் டாக்டர் சுப்பராயலு அவர்கள்(2). ஆதலால் முதல் நிலை தமிழி எழுத்துக்கள் இந்த இரண்டாம் நிலை தமிழி எழுத்துக்களுக்குச் சில நூற்றாண்டுகள் முந்தையவையாக இருந்தாக வேண்டும். இரண்டாம் நிலை தமிழி எழுத்துக்களான பொருந்தல் தமிழி எழுத்துக்களின் காலம் கி.மு. 5ஆம் நூற்றாண்டு என்பதால் முதல்நிலை தமிழி எழுத்துக்களின் தொடக்க காலம் அதற்கு இரண்டு மூன்று நூற்றாண்டுகள் முந்தையவையாக இருந்தாக வேண்டும். அதன் அடிப்படையில் கி.மு. 5ஆம் நூற்றாண்டுக்கு முன் இரண்டு, மூன்று நூற்றாண்டுகள் எனில் முதல்நிலை தமிழி எழுத்துக்களின் தொடக்க காலத்தை கி.மு. 8ஆம் நூற்றாண்டு எனக் கொள்ளலாம்.

    கொற்கையில் தமிழி எழுத்துக்கள்:

    1970ல் நடந்த கொற்கை அகழாய்வில் மௌரியர் காலத்து மட்பாண்டங்கள் கிடைத்தன. அத்துடன் தமிழி எழுத்துக்களைக் கொண்ட மட்பாண்டங்களும் கிடைத்தன. அவைகளின் காலம் கி.மு. 3ஆம் 2ஆம் நூற்றாண்டு என ஆய்வாளர் திரு ஆர். நாகசுவாமி அவர்கள் குறிப்பிட்டுள்ளார். அவருடைய அறிக்கை அத்துடன் அதன் அடியாழத்தில் அதாவது 2.69 மீட்டர் ஆழத்தில் ‘கேஆர்கே-4’ என்கிற குழியில் கரித்துண்டு மாதிரிகள் கிடைத்தன எனவும் அதனை கார்பன்-14 ஆய்வுக்கு உட்படுத்தி அதன் காலம் கி.மு. 850க்கும் 660க்கும் இடையே கி.மு. 755 என கண்டறியப் பட்டது எனவும் தெரிவிக்கிறது. மேலும் அதே குழியில் தமிழி எழுத்துப் பொறிப்புகளுடன் கூடிய மட்பாண்ட ஓடுகள் கிடைத்துள்ளன. ஆதலால் ஆய்வுக்கு அனுப்பப்பட்ட கரித்துண்டின் காலம்தான் இந்த எழுத்துப் பொறிப்பின் காலம் என்பதால், கொற்கை அகழாய்வின் அடியாழத்தில் கிடைத்த எழுத்துப் பொறிப்பின் காலம் கி.மு. 755, அதாவது கி.மு.8 ஆம் நூற்றாண்டு என ஆகிறது-(3).

    ஆதிச்சநல்லூர்-தமிழிஎழுத்து:

     

    ஆதிச்சநல்லூரில் நடைபெற்ற அகழாய்வின் இயக்குநர்                                                    சத்தியமூர்த்தி அவர்கள், அங்கு கிடைத்தத் தமிழி  எழுத்துப் பொறிப்பின் காலம், அறிவியல் ஆய்வின் படி (PRELIMINARY  THERMO  LUMINESCENCE  DATING), கி.மு.1500 முதல் கி.மு.500 வரை எனவும், குறைந்த பட்சம் கி.மு.500 க்கும் முற்பட்டதாக இருக்க வேண்டும் எனவும் கூறுகிறார்-(4). அதே   ஆதிச்ச நல்லூரில் நடைபெற்ற அகழாய்விlல் கி.மு 800ஆம் ஆண்டு தமிழி எழுத்துப் பொறிப்பு கிடைத்ததாக 26.5.2004 இந்து நாளிதழ் தெரிவித்துள்ளது-(5).  ஆகவே இந்த ஆதிச்சநல்லூர் தமிழி எழுத்துப் பொறிப்பின் காலத்தைக் குறைந்தபட்சம் கி.மு.800 எனக் கொள்ளலாம். ஆதிச்சநல்லூரில் முழுமையான ஆய்வுகள் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. ஒரு விழுக்காட்டிற்கும் குறைவான ஆய்வுகளே அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆதிச்சநல்லூரில் முழுமையான ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்பொழுது தமிழி எழுத்துப் பொறிப்புகளின் காலம் கி.மு. 800 அல்லது அதற்கும் முன் கொண்டு செல்லப்படும் என்பது உறுதி.

    ஆதிச்சநல்லூர் – காலம்:

     

    பண்டைய ஆதிச்ச நல்லூரின் காலத்தை அறிய மணிப்பூர் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பேராசிரியராக உள்ள முனைவர் இராசு கிசோர் கார்சியாவின் தலைமையில் இருந்த அறிவியலாளர்கள், புதிய அறிவியல் தொழிநுட்ப முறைப்படி(OPTICALLY STIMULATED THERMO  LUMINESCENCE  TEST) ஆதிச்ச நல்லூர் மட்பாண்டங்களின் பாகங்களை ஆய்வு செய்து, அதன் காலத்தை கண்டறிந்தனர். அதன்படி தாழி எண் 10இன் காலம் 3400+700 (அல்) 3400-700 எனவும், தாழி எண் 29இன் காலம் 1920+350 (அல்) 1920-350 எனவும் கண்டறியப்பட்டுள்ளது. அதாவது ஆதிச்சநல்லூரின் காலம் கி.மு. 1750 முதல் கி.மு. 270 வரை என உறுதி செய்யப்பட்டுள்ளது. இங்கு கிடைத்த மிகப் பழமையான மட்பாண்டங்களின் காலம் கி.மு. 4000 என எசு. பத்ரி நாராயணன்(S.BADRINARAYANAN) அவர்கள் தெரிவிக்கிறார். ஆதிச்ச நல்லூரில் இருந்த சுரங்கத் தொழிற்சாலையின் காலம் கி.மு 1500 என பி. சசிசேகரனும் (B.SASISEKARAN et al.) அவருடன் ஆய்வு செய்தவர்களும் தெரிவிக்கின்றனர். ஆகவே ஆதிச்சநல்லூர் நாகரிகத்தின் காலம் கி.மு. 2000 அளவில் என உறுதியாக முடிவு செய்யலாம் என்கிறார் முனைவர் இராமசாமி அவர்கள்-(6).

    ‘தமிழி’ அசோகர் பிராமிக்கும் முற்பட்டது: 

    1.நடன காசிநாதன்:

    பொருந்தல் அகழாய்வு, ஆதிச்சநல்லூர் அகழாய்வு போன்ற ஆய்வுகளுக்கு முன்னரே தமிழி எழுத்துக்கள் அசோகன் பிராமிக்கு முற்பட்டது எனப் பல ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். “தமிழ்பிராமி பற்றி அண்மைக்காலம்வரை வெளிவந்துள்ள பல்வேறு ஆய்வுக்கருத்துக்களை ஒப்பிட்டு ஆராய்ந்து, தமிழ்பிராமிக் கல்வெட்டுக்கள் தமிழுக்கே உரியவை என்றும் இவ்வெழுத்து அசோகன் பிராமியிலிருந்து கடனாகப் பெறப்பட்டது அல்ல என்றும், இது கி.மு. 6ஆம், 5ஆம் நூற்றாண்டுகளுக்கு உரியது என்றும் 2004ஆம் ஆண்டிலேயே முன்னாள் அகழாய்வு இயக்குநர் நடன காசிநாதன் அவர்கள் தெரிவித்துள்ளார்-(7).

    2டாக்டர் கிப்ட் சிரோமணி:

    டாக்டர் கிப்ட் சிரோமணி அவர்கள் 1983 வாக்கிலேயே தமிழி எழுத்து அசோகன் எழுத்துக்கு முந்தையதாக இருக்க வேண்டும் என்கிற கருத்தை வெளியிட்டுள்ளார். ஐராவதம் மகாதேவன் அவர்கள் தமிழி(தமிழ் பிராமி) எழுத்தை மூன்று நிலைகளாகப் பிரித்துள்ளார் எனவும் பட்டிப்பொருளு என்பது இன்னொரு வகை எனவும் இந்த நான்கும் இல்லாத வேறொரு வகைதான் அசோகன்பிராமி எனவும் அவர் குறிப்பிடுகிறார். அசோகன் பிராமியில் ஒரேநிலைதான் இருக்கிறது எனவும், தமிழியில் பலநிலைகள் இருக்கிறது எனவும் ஆதலால் தமிழி எழுத்து தான் முதலில் தோன்றியிருக்க வேண்டும் எனவும் முதல்நிலை தமிழி எழுத்து அசோகன் பிராமிக்கு முற்பட்டது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஒன்று புதிதாகத் தோன்றுகிற போது பல நிலைகளை கடந்த பின்னரே புதியதாக உருவாகும். தமிழி தமிழகத்தில் தோன்றியதால்தான் இங்கு தமிழியில் பல நிலை எழுத்து வகைகள் இருக்கின்றன. அசோகன் பிராமி புதியதாகத் தோன்றியதல்ல. அது மற்றதைப் பார்த்து உருவாக்கப்பட்டது என்பதால் அங்கு பல நிலைகள் இல்லை என்பதே டாக்டர் கிப்ட் சிரோமணி அவர்களின் அடிப்படை வாதமாகும். இந்தக் கருத்து ஏற்றுக்கொள்ளக் கூடியதும் சரியானதுமாகும்.

    சம்பை கல்வெட்டில் உள்ள ‘சதியபுதோ’ என்கிற சொல்லில் உள்ள எழுத்துகளும் அசோகன் கல்வெட்டில் உள்ள ‘சதியபுதோ’ என்கிற சொல்லில் உள்ள எழுத்துகளும் எந்தவித வேறுபாடும் இன்றி ஒரே மாதிரி உள்ளன என்கிறார் அவர். ஆதலால் சேரன் செங்குட்டுவன், அதியமான் போன்றவர்கள் அசோகனின் சமகாலத்தவர்களா அல்லது 400வருடங்களுக்குப் பிறகு வந்தவர்களா என்கிற அடிப்படையான கேள்வியை 1983 வாக்கிலேயே  டாக்டர் கிப்ட் சிரோமணி அவர்கள் எழுப்பியுள்ளார். சேரன் செங்குட்டுவன், அதியமான் போன்றவர்களின் காலம் கி.பி. 2ஆம் நூற்றாண்டு என தற்போதைய வரலாற்று மாணவன் கருதுகிறான். அது உண்மையானால் சம்பை கல்வெட்டின் காலம் கி.பி. 2ஆம் நூற்றாண்டு என ஆகிறது. ஆனால் கி.பி. 2ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த புகழ்பெற்ற சாதவ கன்ன அரசன் சதகர்ணியின் நாணயங்களில் உள்ள தமிழி எழுத்துகளுக்கும் சம்பை கல்வெட்டு எழுத்துகளுக்கும் இடையே மிகப்பெரிய வேறுபாடு இருக்கிறது.

    தற்பொழுது தமிழி எழுத்தின் அடிப்படையில் தரப்படும் காலத்திற்கு வலிமையான அடிப்படை எதுவும் இல்லை. ஆதலால் மாங்குளம், சம்பை ஆகிய கல்வெட்டுகளிலுள்ள தமிழி எழுத்தின் அடிப்படையில் பாண்டியன் நெடுஞ்செழியன், அதியமான் ஆகியவர்களுக்கு தற்போது தரப்பட்டிருக்கும் காலத்தை மறு பரிசீலனை செய்யவேண்டும் என்கிறார் அவர். அவருடைய கருத்துப்படி அசோகனும், அதியமானும், சேரன் செங்குட்டுவனும் சம காலத்தவர்கள். தற்போது அவர்களிடையே இருக்கும் 400 ஆண்டுகள் இடைவெளி நீக்கப்படவேண்டும் என 1983 லேயே அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்-(8). நமது ஆய்வு அதனைத்தான் செய்துள்ளது. அதியமானும் சேரன் செங்குட்டுவனும் நமது கணிப்புப்படி கி.மு. 3ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்கள், அதாவது அசோகன் காலத்தைச் சேர்ந்தவர்கள்.

    தொல்லியல், கல்வெட்டியல், நாணயவியல், மொழியியல் போன்ற பல்வேறு சான்றுகளின் அடிப்படையில் தமிழி எழுத்து அசோகன் பிராமிக்கு முற்பட்டது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அசோகன் பிராமிக்கு சுமார் 500 ஆண்டுகள் முந்தைய தமிழி எழுத்தை அசோகன் பிராமியில் இருந்து உருவானது என இன்றும் சில அறிஞர்கள் சொல்லி வருகின்றனர். இது குறித்து “தமிழகத்தில் சுமார் 500 ஆண்டுகளுக்கும் மேலாக வழக்கில் இருந்த ஒரு வரிவடிவம் அசோகர் காலத்திற்குப் பின்பு, சமணர்களால் அல்லது சமண வணிகர்களால் தமிழகத்தில் புகுத்தப்பட்டது போன்ற கருதுகோள்களை உரசிப்பார்க்க வேண்டியதுள்ளது” என்கிறார் முனைவர் கா. இராசன்-(9)

    இறுதியாக தமிழகத்தில் கிடைக்கும் தொல்லியல், கல்வெட்டியல், நாணயவியல், மொழியியல் தரவுகளின் அடிப்படையிலும், மண்ணடுக்கு ஆய்வின் அடிப்படையிலும், தமிழகத்தில் கிடைக்கின்ற பல்வேறு வகைப்பட்ட பண்பாட்டுக்கூறுகளின் தோற்றம், வளர்ச்சி, பரவல் ஆகியவற்றின் அடிப்படையிலும், குறியீடுகளின் அமைப்பு, எழுதும்முறை, எண்ணிக்கை, பரவல் ஆகியவற்றின் அடிப்படையிலும், தமிழகத்திற்கும் பிற பகுதிகளுக்கும் இடையே காணப்படுகின்ற பண்பாட்டு உறவுகளின் அடிப்படையிலும் தமிழகத்தில் கிடைக்கும் பழந்தமிழ் வரிவடிவங்களான தமிழ்பிராமிக் கல்வெட்டுகள் அசோகர் காலத்திற்கும் முற்பட்டவை என்பதில் எவ்வித ஐயப்பாடும் இல்லை என்கிறார் முனைவர் க.இராசன் அவர்கள்-(10).

    சங்கச் செவ்வியல் இலக்கியம்:

    சங்ககாலச் செவ்விலக்கியம் கி.மு 6ஆம் நூற்றாண்டு முதல் கி.மு. முதல் நூற்றாண்டு வரை(கி.மு. 550-50) படைக்கப்பட்டு வந்துள்ளது எனத் தற்போதைய நமது கணிப்பு வெளிப்படுத்துகிறது. இந்த சங்ககாலச் செவ்விலக்கிய படைப்பாக்க காலத்திற்கு இரண்டு மூன்று நூற்றாண்டுகளுக்கு முற்பட்டதாகத் தமிழி எழுத்தின் தொடக்க காலம் இருந்திருக்கவேண்டும். அதன் அடிப்படையில் தமிழி எழுத்தின் தொடக்ககாலத்தை கி.மு 8ஆம் நூற்றாண்டு எனக் கணிக்கலாம். பொருந்தல் அகழாய்வு, கொற்கை அகழாய்வு, ஆதிச்சநல்லூர் அகழாய்வு ஆகிய மூன்று அகழாய்வு இடங்களிலும் கிடைத்த தமிழி எழுத்துப் பொறிப்புகளின் காலம் அறிவியல் ஆய்வு முடிவுகளின்படி கி.மு. 8ஆம் நூற்றாண்டு எனக் கண்டறியப்பட்டுள்ளது.

    சங்ககால செவ்வியல் இலக்கியப் படைப்பாக்க காலத்தின் அடிப்படையிலும் தமிழி எழுத்தின் காலம் கி.மு 8ஆம் நூற்றாண்டு எனக் கணிக்கப்பட்டுள்ளது. ஆதலால் மேற்கண்ட பல்வேறு தரவுகளின் படி, தமிழி எழுத்தின் தொடக்க காலத்தைக் கி.மு. 8ஆம் நூற்றாண்டு என உறுதிபடக் கூறலாம்.  தமிழ் இலக்கியத்தின் தொடக்ககாலம் கி.மு. 750 என முன்பே கண்டறிந்துள்ளோம். ஆதலால் அதற்குச் சில நூற்றாண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் எழுத்து வடிவத்தைப் பயன்படுத்தியிருக்கவேண்டும். தமிழகத்தில் கி.மு. 1000 வக்கில் குறியீடுகள் ஒரு எழுத்து வடிவமாக பயன்படுத்தப்பட்டுள்ளது என அறிய முடிகிறது. ஆதலால் தமிழகக் குறியீடுகள் குறித்து அறிதல் அவசியமாகிறது.

     

    குறியீடுகள்(GARAFFITI SYMBOLS):

     

    தமிழகத்தின் புதிய கற்கால கட்டத்திலும் அதற்குப் பிந்தைய முதுமக்கள் தாழி மற்றும் பெருங்கற்படை காலகட்டத்திலும் உருவான ஓவிய வரைவுகளில், மட்பாண்டங்களில், காசுகளில், அணிகளில், முத்திரைகளில், கல்வெட்டுகளில் இறுதியாகத் தமிழ் எழுத்துகள் இடையேயும் கூட ‘குறியீடுகள்’ இடம்பெற்றுள்ளன. தமிழகக் குறியீடுகளில் பல, பண்டைக்கால சுமேரிய, எகிப்திய, சீன, கிரேக்க, யப்பான் நாட்டுக் குறியீடுகளோடும், முக்கியமாகச் சிந்து வெளிக் குறியீடுகளோடும் ஒப்புமை உடையனவாக உள்ளன. அவைகளின் தரவுகள் இங்கு கீழே தரப்பட்டுள்ளன-(11).

    1.சுமேரியன், அக்கேடியன், இட்டடைட் ஆகிய மூன்று தொன்மையான மொழி எழுத்து மரபுகளுடன் பெருங்கற்காலத் தமிழகக் குறியீடுகளின் வடிவங்கள் ஒப்புமை உடையனவாக உள்ளன(பக்:237).

    2.சுமேரிய-எகிப்து மொழியில், இலினியர்(Linear-B)  எழுத்துமுறை கலந்திருக்கிறது. இலினியர் எழுத்துக்களில் 87 குறியீடுகள் உயிர்மெய் எழுத்துக்கள். அந்த 87 எழுத்துக்களும் தென்னிந்தியக் குறியீடுகள், வரிவடிவங்களோடு ஒப்புமை உடையனவாக உள்ளன(பக்: 248).

    3.தமிழகத்தில் கண்டறியப்பட்ட பண்டைய குறியீடுகளையும், சிந்து வெளிக் குறியீடுகளையும்  தொகுத்துக் காணும் பொழுது அவற்றிற்கு இடையே காணப்படும் வரைவு ஒற்றுமைகளும், மொழி, எழுத்து குறித்த சிந்தனைகளும் ஒரு தொடர்ச்சியான வரலாற்றைப் பெற்றுத் திகழ்கின்றன என்பதை  அறிய முடிகிறது(பக்:252). மேலும் சிந்துவெளிக் குறியீடுகளின் எழுத்துரு அமைப்பில் தமிழின் தொடர்பையும், தொல்குறியீடாகிப் பின்னர் மொழியாக்கம் பெற்ற தமிழியில் சிந்துவெளிக்குறியீடுகளின் ஒப்புமையையும் காணமுடிகிறது (பக்:253).

    4.தமிழகப் பெருங்கற்காலக் குறியீடுகளுக்கும், கி.மு. 500 – கி.பி. 200 ஆம் காலத்திய யப்பானிய யாயோய்(Yayoi)  பண்பாட்டு மட்பாண்டக் குறியீட்டு வரைவுகளுக்கும் இடையே தெளிவான வடிவ ஒற்றுமை இருக்கிறது(பக்:230).

    5.சீனம், எகிப்து, இலங்கை, யப்பான், கிரேக்கம் ஆகிய நாடுகளின் 130 பழங்காலக் குறியீடுகள் தமிழகப் பெருங்கற்காலக் குறியீடுகளுடன் ஒப்பிடப்பட்டுள்ளன(பக்:239-244). அதில் எகிப்து நாட்டுக் குறியீடுகளோடு 121 குறியீடுகளும், சீனத்தோடு 103 குறியீடுகளும், யப்பானோடு 94 குறியீடுகளும், கிரேக்கத்தோடு 64 குறியீடுகளும் ஒப்புமை கொண்டுள்ளன என்பது கணக்கிட்டு அறியப்பட்டது.

    6.பண்டைய உலக நாகரிகங்களின் சமகாலத்துப் பண்பாட்டிற்கு இணை -யாகவே சங்ககாலத் தமிழகம் திகழ்ந்தது என்பதை, உறுதி செய்யும் வண்ணம் இப்பெருங்கற்காலக் குறியீடுகள் அமைகின்றன(பக்:262).

    மேலே தரப்பட்ட தரவுகள் கி.மு.3000 முதல் கி.மு.1500 வரையும், கி.மு.800 முதல் கி.மு. 200 வரையுமான இரு காலத்தைக் கொண்டவை. இதில் எகிப்து, சிந்து, சீனம், சுமேரியா போன்ற பண்டைய நாகரிகங்கள் முதல் காலத்தையும், இலங்கை, யப்பான், கிரேக்கம் போன்ற நாடுகள் இரண்டாம் காலத்தையும் சார்ந்தவை-(12). பண்டைய நாகரிக நாடுகளின் குறியீடுகளோடு கொண்டுள்ள இந்த ஒப்புமையைத் தற்செயலானவை எனக் கருத இயலாது.  பண்டைய தமிழகம் இந்த நாடுகளோடு பண்டையகாலம் முதல் வணிகப் பண்பாட்டுத் தொடர்பைக் கொண்டிருந்தன என்பதற்கு இக்குறியீடுகளின் ஒப்புமை ஒரு ஆதாரமாகத் திகழ்கிறது எனலாம்.

    குறியீடுகள்-எழுத்து வரி வடிவம்:

     

    அகழாய்வுகளின், கீழ் அடுக்கில் உள்ள மட்பாண்டங்களில், அதிக அளவு குறியீடுகளும், குறைந்த அளவு தமிழி எழுத்துக்களும் உள்ளன. அதே சமயம் மேல் அடுக்குகளில் உள்ள மட்பாண்டங்களில், அதிக அளவு தமிழி எழுத்துகளும் குறைந்த அளவு குறியீடுகளும் உள்ளன. அதாவது அகழாய்வுகளில் தமிழி எழுத்துகள் கிடைக்கத் தொடங்கியவுடன் குறியீடுகளின் எண்ணிக்கை குறையத் தொடங்குகிறது எனலாம். இதன் காரணமாகவும், தமிழி எழுத்துகள் இடையே இக்குறியீடுகள் இடம்பெறும் தன்மை காரணமாகவும், தமிழி எழுத்து பயன்பாட்டுக்கு வருவதற்கு முன்பு, கருத்துப் பரிமாற்றத்திற்கான வரி வடிவமாக, தமிழர்களால் இக்குறியீடுகள் பயன்படுத்தப்பட்டன எனலாம். “தமிழகத்தில் அகழாய்வு செய்யப்பட்ட அனைத்து இடங்களிலும் இக்குறியீடுகள் கிடைப்பதாலும், தமிழ் வரிவடிவங்களைப் போன்றே இவையும் இடமிருந்து வலமாக எழுதப்பட்டுள்ளதாலும், தமிழ் பிராமி (தமிழி) வரி வடிவம் வழக்கில் வந்தவுடன் இக்குறியீடுகளின் பயன்பாடு குறைந்து வருவதாலும், பானை ஓடுகள், நாணயங்கள், கல்வெட்டுகள் மற்றும் மோதிரங்கள் என எண்ணற்ற ஊடகங்களின் வாயிலாக இவை வெளிப்படுவதாலும், சங்க காலத்திற்கு முன்பிருந்தே அதாவது சிந்து சமவெளிப் பண்பாடு தொட்டு, சில வடிவ மாற்றங்களுடன் தொடர்ந்து இவை இருந்து வந்துள்ளதாலும், தமிழ் பிராமி (தமிழி) வரி வடிவம் தமிழகத்தில் பயன்பாட்டிற்கு வருவதற்கு முன்பாக இக்குறியீடுகள் சங்ககால மக்களின் எண்ணங்கள் அல்லது கருத்துப் பரிமாற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்ட ஒருவகை வரிவடிவமே என எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது” என்கிறார் முனைவர் கா.இராசன் அவர்கள்-(13).

    தனது ‘பண்டையத் தமிழக வரைவுகளும் குறியீடுகளும்’ என்கிற நூலில் “குறியீடுகளின் எண்ணிக்கைகளும் பயன்பாடும் மிகுதியாக இருக்கும் காலத்தில் எழுத்துகளின் பொறிப்புக் குறைவாகவும், எழுத்துப் பொறிப்பு மிகுதியாகும் பொழுது குறியீடுகளின் பொறிப்புக் குறைந்தும் அமைகின்றன என்பது இந்த ஆய்வால் உறுதி செய்யப்படுகின்றது. இந்த ஆய்வு முடிவினைக் காணும் பொழுது குறியீடுகளை முதலில் ஒலி எழுத்துகளாகவோ, பொருள் வெளிப்பாட்டு வரைவுகளாகவோ அக்காலத்தில் பயன்படுத்தி வந்துள்ளனர் எனக் கருதலாம்“ என்கிறார் முனைவர் இராசு.பவுன்துரை அவர்கள்-(14)

    மேலும், இக்குறியீடுகளின் வளர்ச்சி தந்த பங்களிப்பு தான், எழுத்துருவாக்கமும் மொழியாக்கமும் என்பதோடு, தமிழகப் பெருங்கற் காலத்து மட்பாண்டக் குறியீடுகள், தமிழி அல்லது பிராமி எழுத்துத் தோற்றத்தையும் அதன் வளர்ச்சிக் கூறுகளையும் அறிய உதவும் அடிப்படைச் சான்றுகளாகவும் உள்ளன என்கிறார் அவர். இறுதியாக “தமிழ் மொழியின் வளர்ச்சியில், குறியீடுகளின் பங்களிப்பு தனிச் சிறப்பிற்குரியதாகவும், எழுத்துச் சான்றுகளாக மாற்றம் பெறுவதற்கு முன்னர் வலுவான வரைவுடன் கூடிய தகவல் தொடர்புச் சாதனமாகவும், குறியீடுகள் திகழ்ந்தன எனக் கருதலாம்“ என்கிறார் முனைவர் திரு. பவுன்துரை அவர்கள்-(15). திரு. இராசன் மற்றும் திரு. பவுன்துரை ஆகியவர்களின் கருத்துப்படி தமிழி எழுத்துக்கு முன்பு, தமிழகத்தில் இக்குறியீடுகள் மிக நீண்ட காலமாக கருத்துப் பரிமாற்றத்திற்கு பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன என்பது உறுதியாகிறது. மேற்கண்ட இருவரும் சிந்துவெளி எழுத்துகளுக்கும் தமிழக குறியீடுகளுக்கும் இடையே நல்ல ஒப்புமை உள்ளது என்பதையும் தங்கள் நூல்களில் தெரிவித்துள்ளனர். பண்டைய தமிழ் மக்கள் கி.மு.1000 ஆண்டு வாக்கிலேயே ஒருவகையான எழுத்துப்பொறிப்புகளை அல்லது வரிவடிவத்தை தமது கருத்துப் பரிமாற்றத்திற்குப் பயன்படுத்தினர். தமிழகத்தில் இக்குறியீடுகள் பரவலாகக் கிடைப்பதால் இந்நிலையை அடையப் பல்லாண்டு காலம் ஆகியிருக்கவேண்டும் என்கிறார் முனைவர் கா. இராசன் அவர்கள்-(16).

    பார்வை:

    1. Porunthal Excavations prove existence of Indian scripts in 5th century BC : expert , News paper Dated 15.10.2011,

    2.PALANI EXCAVATION  TRIGGERS  FRESH DEPATE- THE HINDU  News paper Dated  29-8-2011.

    3.முன்னாள் அகழாய்வுத் துறை இயக்குநர் நடனகாசிநாதன் அவர்கள், ஏப்ரல்-2006, Tamils Heritage, Page:31.

    4.Rudimentary Tamil-Brahmi Script  unearthed at adichanallur, THE HINDU Newspaper Dated 17.2.2005

    5.Three of them(human skeletons), which may be 2,800 years old, bear inscriptions that resemble the early Tamil Brahmi script: , THE HINDU  Newspaper Dated 26.5.2004.

    6.அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் முனைவர் அ. இராமசாமி அவர்கள் நூல்: தொன்மைத்தமிழர் நாகரிக வரலாறு, டிசம்பர் 2013, பக்: 61, 62;    D. VENKAT RAO  et al.,  RECENT  SCIENTIFIC  STUDIES  AT  ADICHANALLUR:  A PRE HISTORIC MINING SITE  IN  SANGAM:  NUMISMATICS  AND CULTURAL  HISTORAY  CHENNAI- 2006,    PP.  150-151;         .S.BADRINARAYANAN, OP.CIT., P-38;     B.SASISEKARAN et al. ADICHANALLUR:  A PRE HISTORIC MINING SITE IN INDIAN JOURNAL OF HISTORY OF SCIENCE, 45. 3, 2010,  P-383. &  adichanallur: a prehistoric mining site – Indian National … http://www.insa.nic.in/writereaddata/UpLoadedFiles/IJHS/Vol45_3_3_BSasisekara.pdf

    7.தொகை இயல்-பேராசிரியர் அ. பாண்டுரங்கன், பக்: 193; Date of early Tamil Epigraphs: Journal of Tamil Studies No. 65, June, 2004.

    8.கிப்ட் சிரோமணி அவர்களின் இணையதளப் பக்கம். “WWWDR. GIFT SIROMONEY’S HOME PAGE”.

    9, 10.முனைவர் கா. இராசன் அவர்கள், ‘தொல்லியல் நோக்கில் சங்ககாலம்’ உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், 2010, பக்: 77.

    11.முனைவர் இராசு பவுன்துரை அவர்கள், “பண்டையத்தமிழக வரைவுகளும் குறியீடுகளும்” உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், 2004, பக்: 237, 248, 252, 253, 230, 239-244, 262.

    1. “ “ பக்:263.

    13.முனைவர் கா. இராசன் அவர்கள், ‘தொல்லியல் நோக்கில் சங்ககாலம்’ உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், 2010, பக்: 55, 56.

    14.முனைவர் இராசு பவுன்துரை அவர்கள், “பண்டையத்தமிழக வரைவுகளும் குறியீடுகளும்” உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், 2004, பக்: 257.

    1. “ “ பக்: 263.

    16.முனைவர் கா. இராசன் அவர்கள், ‘தொல்லியல் நோக்கில் சங்ககாலம்’ உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், 2010, பக்: 74, 56.

     

    Share
  • அருள்மிகு நாகேசுவர சுவாமி திருக்கோயில், கும்பகோணம்

    சேசாத்திரி சிறீதரன்

     

    தஞ்சையை விட அதிக விறுவிறுப்பும், பரபரப்பும் கொண்டு இயங்கும் நகரம் கும்பகோணம் என்பதை காண்பவர் யாவரும் உணருவர். இதற்கு காரணம் இங்குள்ள பாடல் பெற்ற தளங்கள் தாம். அதிலும் கும்பகோணத்தை சுற்றியுள்ள கோவில்கள் பலவும் 12 ராசிக்குரிய அதிபதிகளை, சிறப்பாக 9 கோள்களை முதன்மைப்படுத்தும் வகையினவாக உள்ளன. இவை எல்லாம் கும்பகோணத்தை சுற்றி 40 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து உள்ளன. இதனால் 9 கோள்களின் தோஷம் நீங்க பரிகாரம் செய்யவேண்டி பலவேறு ஊர்களிலிருந்து மக்கள் நாள்தோறும் வருவதால் கும்பகோணம் ஒரு ஆன்மீகத் திருச்சுற்றுலா தலமாக உள்ளது. அதன் காரணமாகவே இவ்வூரில் பல தங்கும் விடுதிகள், கடைகள் என சுற்றுலாவினால் தொழில்வளமையும் பொருளியல் வளமையும் பொங்குகிறது. திருச்செலவு தான் இவ்வூர் இயக்கத்திற்கு உயிர்நாடி.

    இவ்வூரில் பல கோவில்கள் அமையப்பெற்றாலும் கல்வெட்டு, சிற்பம் பழமை ஆகியவற்றில் முதன்மையானது என குறிக்கத்தக்க பெருமை உடைய கோவில் .அருள்மிகு நாகேசுவர சுவாமி திருக்கோயில்.. ஆதி கும்பேசுவரர் கோவில் போல் மிகப் பெரிதாக இல்லாவிட்டாலும் மக்கள் கூட்டம் நிரம்பி இராவிட்டாலும் சிறப்பு என்னவோ இந்த கோவிலுக்கு தான்.

    பொதுவாக கும்பகோணத்தை சுற்றியுள்ள கோவில்களில் கருவறையையோ அல்லது மண்டபத்தையோ ஒட்டி தேர்ச்சக்கரங்கள் பொருத்தி குதிரை பூட்டி இழுப்பது போலவும் யானை இழுப்பது போலவும் கட்டி இருக்கிறார்கள். இது கட்டடபாணி பிற்கால சேர்கையாக இருக்குமோ என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது. தொண்டைமண்டல கோவில் தூண்களில் புடைப்பு சிற்பம் இருப்பது போல இக்கோயில்களில் புடைப்பு சிற்பம் அவ்வளவாக காணப்படாமல் பூக்கோலம், மரம், கொடி போன்றவையே அதிகமாக பொதுவாக வடிக்கப்பட்டுள்ள்ளன. மேலும் பல மண்டபத் தூண்கள் கருநாடக கோவில் கட்டட அமைப்பை கொண்டுள்ளதானது இவை விசயநகர ஆட்சியில் 14 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்க வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்குகின்றன, அதிக எண்ணிக்கையில் பணியாளர்களை அமர்த்தி இக்கோயில்கள் நன்றாகக் பேணப்பட்டு வருகின்றன..

    பேருந்து நிலையத்திலிருந்து கோவில்கள் 2 கிலோ மீட்டர் தொலைவில் அருகருகே அமைந்துள்ளதானது இவ்வூர் முன்பு 2 கிலோமீட்டர் பரப்பளவிற்கும் குறைவாக இருந்திருக்கும் என்பதை காட்டுகிறது. இனி படங்கள் காண்போம்.

     

    இளமை குலுங்கும் இளவரசி அல்லது இளைய அரசி
    தாலி அணிந்த வேந்தி /அரசி
    நகையணி துறந்து பூணூல் மட்டுமே அணிந்து நோன்பு கோலத்தில் வேந்தர்

    கருவறை புறச்சுவரை சுற்றிலும் சோழ வேந்தர், வேந்திகளின் சிலைகள் கண்கொட்டாமல் பார்க்கும்படியாக அழகுற செதுக்கி வடிவமைக்கப்பட்டுள்ளன. கச்சை இல்லா முலைமார்பு பல்லவர் உருவங்கள் தாமோ என மதிமயக்குகின்றன. எனினும் சிலைகளுக்கு அருகிலேயே வடிக்கப்பட்டுள்ள கல்வெட்டுகளைக் கொண்டு இவற்றின் காலத்தை அறியமுடியும் பல்லவரா/ சோழரா? என்றும் அறிய முடியும் என நம்பலாம்.

    காதில் குழையுடன் நோன்பிருந்த வேந்தன் இப்போது ஒயிலாக நிற்கிறான்
    சோழ வேந்தருக்கே உரிய தலைமயிர்கட்டு அணி. சிவப்பு கல்லில் இருந்து மாறுபட்ட பழுப்பு கல் பிறப்பட்டதோ
    உலகப் பேரழகு தோற்கும் இந்த வேந்தியிடம்
    பேரமைதி தவழும் தோற்றம்
    வேந்தனுக்கு உரிய மிடுக்கு

     

    3 & 4 படங்கள் ஒரே ஆளுடையன. பிற வெவ்வேறு  ஆள்களுடையவை .
    தேராக மாற்றப்பட்ட மண்டபம். சக்கரத்தில் 12 ராசிக்கு உரிய அதிபதிகள் புடைப்பு சிற்பம்

    Share
  • பழந்தமிழக வரலாறு -3

     

     

               காலகட்டக் கணிப்பும், துல்லியமும்

     கணியன்பாலன்

                  வரலாறு என்பது தற்செயலான நிகழ்வுகளால் ஆனது போல் தோன்றினாலும் அது தனக்கென வகுத்தளிக்கப்பட்ட விதிப்படிதான் இயங்கி வருகிறது. சமூகத்தின் பொருளாதார உற்பத்தி முறைதான் வரலாற்றின் திசைவழியை நிர்ணயிக்கிறது.  மனித வரலாற்றில் ஆண்-பெண் உறவு நிலையை எடுத்துக்கொண்டால், காட்டுமிராண்டி காலத்தில் குழு மணமும், அநாகரிக காலத்தில் இணை மணமும் இருந்தது. நாகரிக காலத்தில் குடும்பமும், ஒருதார மணமும் உருவாகியது. நிலப்பிரபுத்துவக் காலத்தில் இருந்த கூட்டுக்குடும்பம் முதலாளித்துவம் வளர்ந்தபின் தனிக்குடும்பம் என ஆனது. நவீன முதலாளித்துவத்தின் அதீதத் தொழில்நுட்ப வளர்ச்சி, தனிக்குடும்பத்தைக் கேள்விக்குள்ளாகி உள்ளது.

    வேளாண்மை உற்பத்தியை அடிப்படையாகக் கொண்ட நிலப்பிரபுத்துவ காலத்தில் நிலவிய அரசர்களின் ஆட்சி என்பது தொழில் புரட்சிக்குப்பின் ஏற்பட்ட முதலாளித்துவ காலத்தில் இல்லாதுபோய், மக்கள் ஆட்சி என்கிற சனநாயக ஆட்சி உருவானது. ஆனால் நவீன முதலாளித்துவத்தில் உருவான பன்னாட்டுக்குழுமங்களின் வளர்ச்சி, சனநாயகத்தை கேள்விக்குள்ளாக்கி, அதன் நிறுவனங்களைச் சீரழித்து, பணநாயகத்தை கொண்டுவந்துள்ளது. ஆகவே ஒவ்வொரு காலகட்டமும் அதற்கேயுரிய, பொருளாதார உற்பத்தி முறை, சமூக நிறுவனங்கள், சமூகச் சிந்தனைகள் முதலியனவற்றை ஒன்றிணைத்து அந்தந்த காலகட்டத்துக்குரிய வரலாற்றைப் படைக்கின்றன. ஆகவே அறிவியல் அடிப்படையில், தனக்கான விதிகளுக்குட்பட்டு வரலாறு இயங்குகிறது, என்பதுதான் இங்கு கவனம் பெறவேண்டிய மிகமுக்கிய விடயமாகும். நமது பழந்தமிழக வரலாறும் அதற்கு விதிவிலக்கல்ல. கி.மு. 750 முதல் கி.மு. 50 வரையான சங்ககாலப் பாடல்களில், கி.மு. 350க்கு முந்தைய சங்ககாலப் பாடல்கள் மிகக் குறைவு என்பதோடு அதில் ஆட்சியாளர்கள் குறித்த வரலாற்றுக் குறிப்புகள் எதுவும் இல்லை. ஆகையால் கி.மு. 350க்கு முந்தைய வரலாற்றைக் கட்டமைக்க இயலவில்லை.

    சங்க இலக்கிய நூல்களான குறுந்தொகை(401), நற்றிணை(399), அகநானூறூ(400), ஐங்குறுநூறு(500), புறநானூறு(398), பதிற்றுப்பத்து(80), பரிபாடல்(22+11=33), கலித்தொகை(150) ஆகிய எட்டுத் தொகையின் 2361 பாடல்களும் பத்துப்பாட்டின் 10 பாடல்களும் சேர்ந்து மொத்தம் 2371 பாடல்கள் ஆகின்றன. இதனை 473 புலவர்கள் பாடியுள்ளனர். இவற்றில் பரிபாடல் (22+11=33), கலித்தொகை(150), பத்துப்பாட்டில் 2 பாடல்கள் என 185 பாடல்கள் போக, சங்ககாலகட்டத்தைச் சேர்ந்த தகடூர் யாத்திரை(48), முத்தொள்ளாயிரம் (108+22=130) ஆகியவற்றின் 178 பாடல்களைச் சேர்த்து மொத்தம் 2364 பாடல்கள் மட்டுமே ஆய்வு செய்யப்பட்டன.

    இந்த ஆய்வின்படி 450க்கும் மேற்பட்ட புலவர்களில், கி.மு. 350 முதல் கி.மு. 50 வரையான காலகட்டத்தைச் சேர்ந்த 126(109+14=3) புலவர்கள் மட்டுமே வரலாற்றுக் குறிப்புகளைத் தந்துள்ளனர் என்பது கண்டறியப்பட்டது. இதில் 109 பேர் மட்டுமே புலவர்கள் ஆவர். மீதியுள்ள 17 பேரும் அரச குலத்தைச்சேர்ந்த கவிஞர்கள் ஆவர். அந்த 17 பேரில் பெருங்கோப்பெண்டு, பாரி மகளிர், தொண்டைமான் இளந்திரையன் ஆகிய மூவர் அரசர்கள் கணக்கில் சேர்க்கப்படவில்லை. “பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும்” என்ற எனது நூலில் உள்ள தரவுகளின் அடிப்படையில் காலகட்டம் வாரியாக இந்த 126 புலவர்கள், அவர்களது பாடல்கள் குறித்த எண்ணிக்கை அட்டவணை தயாரிக்கப்பட்டு கீழே தரப்பட்டுள்ளது. இந்த அட்டவணைப்படி 126 புலவர்கள் மொத்தம் 1517 பாடல்களைப் பாடியுள்ளனர். தகடூர் யாத்திரையில் பாடியவர்கள் இந்த 126 புலவர்களில் அடங்குவர். கி.மு. 350 முதல் கி.மு. 50 வரையான காலகட்டத்தைச் சேர்ந்த இந்த 126 புலவர்கள் போக வேறு புலவர்களும் இருக்கலாம். ஆனால் அவர்களின் பாடல்களில் வரலாற்றுக் குறிப்புகள் இல்லாததால் அவர்களின் காலத்தைக் கண்டறிய இயலவில்லை. எனினும் சுமார் மொத்தமுள்ள 473 புலவர்களில் நான்கில் ஒரு பங்கு புலவர்களின்(126) காலமும், சங்ககால மொத்தப் பாடல்களில்(2364) மூன்றில் இருபங்கு(1517) பாடல்களின் காலமும் காலகட்டம் வாரியாகக் கணிக்கப்பட்டுள்ளது. “தகடூர் யாத்திரை” நூலின் 48 பாடல்கள் 6ஆம் காலகட்டத்தைச் சேர்ந்தவையாகும். முத்தொள்ளாயிரத்தின் 130 பாடல்கள் பத்தாம் கால கட்டத்தைச் சேர்ந்தவையாகும்.

    புலவர்கள், கவிஞர்கள், பாடல்கள் குறித்த அட்டவணை.:

    காலகட்டம்    புலவர்கள்     கவிஞர்கள்     மொத்தம்      பாடல்கள்

    முதல்            5               –             5              28

    இரண்டாம்       11               2            13              95

    மூன்றாம்        8                1            9              238

    நான்காம்        7                2            9               56

    ஐந்தாம்         14               1            15              255

    ஆறாம்          16              2             18             293

    ஏழாம்           16              2             18             113

    எட்டாம்         16              3             19              170

    ஒன்பதாம்        7              2             9               37

    பத்தாம்          9              2             11              184

    தகடூர் யாத்திரை (ஆறாம் காலகட்டம்)           –              48

    மொத்தம்       109             17             126            1517.

     

    ஆகவே இந்த 126 புலவர்களின் 1517 பாடல்கள் மட்டுமே நமது காலகட்டக் கணிப்பு குறித்த ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. மேற்கண்ட சங்ககாலப் பாடல்களில் உள்ள வரலாற்றுக் குறிப்புகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட கோட்டியல் வரைபட முறையின் மூலம் கணிக்கப்பட்ட காலகட்ட ஆண்டுகள், கல்வெட்டுகள், நாணயங்கள், அகழாய்வுகள், இந்தியத் தமிழகத் தத்துவ வரலாறு, வெளிநாட்டார் குறிப்புகள், வட இந்திய வரலாறு, உலக வரலாறு, சிவப்பிந்திய, கிரேக்க, இரோம், ஆரிய இனக்குழு வரலாறுகள் போன்ற பிற வரலாற்று ஆய்வுகளின் காலக்கணிப்புகளோடு பொருத்தமாக இணைக்கப்பட்டுள்ளதன் காரணமாக, காலகட்ட அடிப்படையில் கணிக்கப்பட்ட ஆட்சியாளர்கள், புலவர்கள், வரலாற்று நிகழ்வுகள் ஆகியவற்றின் ஆண்டுகள் ஓரளவு துல்லியமானவை எனலாம். இவ்வாறு கணிக்கப்பட்ட காலத்தை அடிப்படையாகக் கொண்டுதான் “பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும்” என்ற எனது நூல் கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதை முன்பே குறிப்பிட்டோம். பெரும்பாலான சங்ககாலப் பாடல்களின் காலகட்ட ஆண்டுகள் நமக்குக் கிடைத்துள்ளது என்பதால் எதிர்காலத்தில் அவைகளைக் காலகட்ட அடிப்படையில் ஆய்வு செய்வதற்கான வாய்ப்பு நமக்குக் கிடைத்துள்ளது.

    பொதுவாக ஒரு தலைமுறை  என்பது சராசரியாக 25 ஆண்டுகள் ஆகும். ஒரு புலவர் சாதாரணமாகத் தனது தலைமுறை போகத் தனக்கு முந்தைய ஒரு தலைமுறை, தனக்கு பிந்தைய ஒரு தலைமுறை என மூன்று தலைமுறைப் புரவலர்களைப் பாட முடியும். அதற்கு மேல் பாடுவது என்பது சாதாரணமாக இயலாது. ஆகவே ஒரு காலகட்டத்துக்கான காலத்தை மூன்று தலைமுறைகள் எனக் கொண்டு 70 முதல் 80 ஆண்டுகளை, அதாவது சராசரியாக 75 ஆண்டுகளை ஒருகாலகட்டம் எனக் கணக்கில் கொள்ளப்பட்டுள்ளது. அதே சமயம் ஒரு காலகட்டத்துக்கும் இன்னொரு காலகட்டத்துக்கும் இடையே உள்ள இடைவெளி என்பது  20-30 ஆண்டுகள்தான் இருக்கும். சான்றாக முதல் மூன்று காலகட்டங்கள் வருமாறு 1.கி.மு. 350-270; 2.கி.மு. 330-250; 3.கி.மு. 300-230. இவ்விதமாக 10 காலகட்டங்களுக்கான காலங்களும் கணிக்கப்பட்டன.

    ஒவ்வொரு காலகட்டமும் ஒரு தலைமுறைக் காலத்தை(25 ஆண்டுகள்) மட்டுமே கொண்டது எனினும், இக்காலகட்டங்களிடையே குறிப்பிடத்தக்கச் சில சிறப்பு விடயங்கள் இருப்பதை நாம் காண முடிகிறது.

    1.முதல் காலகட்டத்தில் உதியன் சேரலாதனுடைய தலைமையில் கருவூரேரிய ஒள்வாட் கோப்பெருஞ்சேரல் இரும்பொறை கொங்குக் கருவூரைக் கைப்பற்றி அங்கு பொறையர்களின் சேர ஆட்சியை நிறுவினான். இதன் விளைவாக கரூரையும் அதைச்சுற்றியுமுள்ள கொங்குப் பகுதிகளையும் கொண்ட ஒரு புதிய சேர அரசு உருவாகி இருந்தது. கரூர் சோழர்களின் மேற்கு எல்லையில் இருக்கும் ஒரு முக்கிய ஊர் ஆகும். அங்கு ஒரு புதிய சேரகுல அரசு உருவாகி இருப்பது சோழர்களுக்குச் சேரர்களின் மேல் அச்சத்தையும் பகைமையையும் உருவாக்கி இருந்தது. இதன் விளைவாக முதல் காலகட்டத்தில் சோழன் பெரும்பூட் சென்னி நடத்திய கழுமலப்போர் தொடங்கி 9ஆம் காலகட்டத்தில் சோழன் குளமுற்றத்துத்துஞ்சிய கிள்ளிவளவன் நடத்திய கரூர்ப் போர் வரை சேரர்களுக்கும் சோழர்களுக்கும் இடையே பகைமையும் போரும் தொடர்ந்து நடந்து வந்தது. இதற்குக் கொங்குப்பகுதியில் சேரர்கள் உருவாக்கிய பொறையர்களின் சேர அரசுதான் முக்கியக் காரணமாகும். 9ஆம் காலகட்டக் கரூர்ப் போருக்குப்பின் சேரமான் மாக்கோதை கிள்ளிவளவனோடு சமாதானம் செய்து கொண்டான். அதன் பிறகு அப்பகைமை முடிந்து சேர, சோழர்கள் 10ஆம் காலகட்டம் வரை நட்போடு இருந்தனர்.

    2.சேரர்கள் முதல் காலகட்டம் தொடங்கி 6ஆம் காலகட்டம்வரை சோழ பாண்டியர்களைவிட வலிமையோடும் பெரும்புகழோடும் இருந்தனர். 3ஆம் காலகட்டத்தில் முதல் கரிகாலன் காலத்தில் மட்டும் அவர்களின் வலிமை ஓரளவு குன்றியிருந்தது. ஆனால் 7ஆம் காலகட்டத்தில் நடந்த தலையானங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனின் தலையாலங்கானத்துப் போர் இந்நிலையை அடியோடு மாற்றியமைத்தது. தலையாலங்கானத்துப்போரும், அதன்பின் நடந்த முசிறிப்படையெடுப்பும் சேரர்களை 10ஆம் காலகட்டம் வரை வலிமை குன்றியவர்களாக ஆக்கியது.  முதல் காலகட்டம் முதல் 6ஆம் காலகட்டம் வரை வலிமை குன்றியவர்களாக இருந்த பாண்டியர்கள் இப்போருக்குப்பின் 10ஆம் காலகட்டம் வரை ஓரளவு வலிமை மிக்கவர்களாக ஆனார்கள்.

    3.சென்னிகுலச்சோழர்களும், பாண்டியர்களும் முதல் காலகட்டம் முதல் 10ஆம் காலகட்டம் வரை நட்பு கொண்டவர்களாகவே இருந்து வந்துள்ளனர். கிள்ளிகுலச் சோழர்களுக்கும் பாண்டியர்களுக்கும் மட்டுமே அவ்வப்பொழுது பகைமை இருந்து வந்தது. ஆனால் 7ஆம் காலகட்டத்துக்குப்பின் 10ஆம் காலகட்டம் வரை இரு குலச்சோழர்களும் பாண்டியர்களோடு நட்பு கொண்டவர்களாக ஆனார்கள். இதற்கு 7ஆம் காலகட்டத்தின் மாபெரும் வேந்தர்களாக இருந்த இரண்டாம் கரிகாலனுக்கும், தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனுக்கும் இடையே நிலவிய நட்புதான் காரணம் ஆகும். இரண்டாம் கரிகாலன் சென்னிகுலச் சோழன் எனினும் கிள்ளிகுலச் சோழர்களையும் தம் மக்களாக அரவணைத்து ஆதரித்ததும் ஒரு முக்கியக் காரணம் ஆகும். இவன் கிள்ளிகுலச்சொழர்களின் பாழடைந்து போயிருந்த உறையூரைப் புகார் நகர் அளவுக்குப் புதுப்பித்து ஒரு பெரு நகராக ஆக்கினான். அதன் காரணமாக அதன்பின் வந்த சோழ வேந்தர்கள் உறையூரை சோழவேந்தர்களின் தலைநகரமாக ஆக்கினார்கள். இரண்டாம்கரிகாலனின் நடவடிக்கையால் இவனுக்குப்பின் சென்னி குலமும் கிள்ளி குலமும் இரண்டறக்கலந்துவிட்டது எனலாம்.

    4.சிறு, குறு அரசுகளும் வேளிர்குல அரசுகளும் அழிக்கப்பட்டு அவைகளை வேந்தர் ஆட்சியில் இணைத்துக்கொள்ளும் பேரரசுக்கொள்கை சார்ந்த நடவடிக்கைகள் 5ஆம் காலகட்டத்தில் இருந்து சிறிது சிறிதாக தமிழகத்தில் இடம்பெறத் தொடங்கின. அதன் விளைவாக முதலில் ஓரியின் கொல்லிமலை சேரர்களின் ஆட்சிக்குள் கொண்டுவரப்பட்டது. அதன்பின் பாரி, அதியமான் போன்றவர்களின் ஆட்சிப்பகுதிகளும் மூவேந்தர் ஆட்சிக்குள் கொண்டுவரப்பட்டன. 10ஆம் காலகட்டத்துக்குள் பெரும்பாலான சிறுகுறு அரசுகள் அழிக்கப்பட்டு மூவேந்தர் ஆட்சியில் இணைக்கப்பட்டன. பேரரசுக்கொள்கையின் காரணமாக சேர, சோழ, பாண்டியர்களின் கிளை அரசர்களும் நீக்கப்பட்டனர். வேந்தர்களின் வேறு வேறு குலங்கள் ஒன்றாக ஆக்கப்பட்டு 10ஆம் காலகட்டத்தில் ஒருகுலம், ஒருவேந்தர் ஆட்சி உருவாகியது. சோழர்களின் சென்னி குலமும், கிள்ளி குலமும் ஒன்றாக ஆக்கப்பட்டு நலங்கிள்ளி சேட்சென்னி என்பவன் சோழ வேந்தனாக ஆனான். அதுபோன்றே குட்டுவன், கோதை ஆகிய சேர குலங்கள் ஒன்றாக ஆக்கப்பட்டு சேரமான் குட்டுவன் கோதை என்பவன் சேர வேந்தனாகவும், மாறன், வழுதி ஆகிய பாண்டிய குலங்கள் ஒன்றாக ஆக்கப்பட்டு பாண்டியன் கூடகாரத்துத்துஞ்சிய மாறன்வழுதி என்பவன் பாண்டிய வேந்தனாகவும் ஆனான். இவர்கள் மூவரும் 10ஆம் காலகட்ட இறுதிச் சங்ககால வேந்தர்கள் ஆவர்.

    5.ஓரியைக்கொன்று கொல்லிமலையைச் சேரர்களுக்கு 5ஆம் காலகட்டத்தில் வழங்கிய மலையமான்  காரியும் அவனது வாரிசுகளும் ஆறுமுதல் 8ஆம் காலகட்டம்வரை சோழர்களுக்கு ஆதரவாக இருந்தார்கள் எனினும் 9ஆம் காலகட்டச் சோழ வேந்தன், பேரரசுக்கொள்கையின் காரணமாக மலையமான்  காரியினுடைய வாரிசுகளின் குறுநில அரசை அழித்து அதைத் தனது வேந்தர் ஆட்சியோடு சேர்த்துக்கொண்டான்.

    6.பாரி, ஓரி, காரி, நள்ளி, ஆய் அண்டிரன், எழினி, பேகன் ஆகிய ஏழு வள்ளல்களும் 5ஆம், 6ஆம் காலகட்டத்தைச்சேர்ந்தவர்கள் ஆவர். இவர்களைப் பாடிய பெருஞ்சித்திரனார் 7ஆம் காலகட்டம். ஏழாம் காலகட்டக் குமணன், 10ஆம் காலகட்ட நல்லியக்கோடன் ஆகிய இருவரையும் சேர்த்து மொத்தம் 9 வள்ளல்கள் எனலாம்.

    7.மூன்றாம் காலகட்டக் கழார்த்தலையார் 5ஆம் காலகட்டக் கபிலராலும், 4ஆம் காலகட்டப் பரணர் 6ஆம் காலகட்ட ஔவையாராலும், 5ஆம் காலகட்டக் கபிலர் 7ஆம் காலகட்ட நக்கீரராலும் பாடப்பட்டுள்ளனர். ஆகவே இத்தரவுகள்  3ஆம் காலகட்டம் முதல் 7ஆம் காலகட்டம் வரையான ஒரு வரலாற்றுத்தொடர்ச்சியை உறுதி செய்கிறது எனலாம். இவர்கள் போக 9ஆம் காலகட்ட கோட்டம்பலத்துத்துஞ்சிய மாக்கோதை என்ற சேர வேந்தன் முதல் காலகட்ட உதியஞ்சேரலாதனையும், 10ஆம் காலகட்ட இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் 6ஆம் காலகட்ட ஔவையாரையும் பாடியுள்ளார்.

    8.புராணக் கதைகளை பாடலில் பாடுவதும், கடவுளோடு வேந்தனை ஒப்பிடுவதும், அவனை தெய்வநிலைக்கு உயர்த்துவதும் ஆகிய பேரரசுக் கொள்கை சார்ந்த பாடல்கள் எட்டாம் காலகட்டத்தில் இருந்து அதிகமாகின எனலாம். வேந்தனை தெய்வநிலைக்கு உயர்த்தும் இந்தச் சிந்தனை பத்தாம் காலகட்டத்தில் உச்சநிலையை அடைந்து. முத்தொள்ளாயிரம் போன்ற பாடல்கள் உருவாகி வேந்தனை நகர மகளிர் அனைவரும் ஒருதலைக் காதல்கொள்வது போன்ற கைக்கிளைப் பாடல்களும் அதிகமாகின. எட்டாம் காலகட்டப் பாண்டியன் நன்மாறனை, நக்கீரர், மருதன் இளநாகனார் போன்ற பெரும்புலவர்கள் கடவுள்களோடு ஒப்பிட்டார்கள். முதல் காலகட்டத்தில் இருந்து ஏழாம் காலகட்டம்வரை இதுபோன்ற பாடல்கள் சங்க இலக்கியங்களில் மிகமிகக் குறைவு எனலாம்.

    9.பாண்டியர்களின் மதுரை என்கிற கூடல் நகரம் தமிழுடன் தொடர்பு கொண்டதாக ஏழாம் காலகட்டத்தில் இருந்து மாறத்தொடங்கியது. ஏழாம் காலகட்ட தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனின்  பாண்டிய அரசில் இருந்த “புலவர்கள் அவை“ யின் தலைவராக பெரும்புகழும் சிறந்த அறிவும் உடைய மாங்குடி மருதனார் என்கிற புலவர் இருந்தார். அதுமுதல் பாண்டிய நாட்டில் தமிழ் புலவர்களுக்கு மிக அதிக மதிப்பும் மரியாதையும் வழங்கப்பட்டு வந்தது என்பதோடு மிக அதிகமான புலவர்கள் பாண்டிய நாட்டையும் மதுரை நகரையும் சேர்ந்தவர்களாக இருந்தனர். இவைகளின் காரணமாக ஏழாம் காலகட்டம் முதல் மதுரை நகரானது தமிழ் மதுரையாகக் கருதப்பட்டது. எட்டாம் காலகட்டப் பாண்டியன் உக்கிரப் பெருவழுதி அகநானூறைத் தொகுப்பித்தான். பத்தாம் காலகட்டப் பாண்டியன் கூடகாரத் துஞ்சிய மாறன் வழுதி நற்றிணையைத் தொகுப்பித்தான். இப்படி மதுரையானது தமிழ் வளர்த்த மதுரையாக ஏழாம் காலகட்டத்தில் இருந்து மாறிப்போனதால் மதுரையைத் ‘தமிழ்மதுரை’ என்று அழைக்கும் வழக்கம் உருவானது. அதனால்தான் பத்தாம் காலகட்ட நல்லூர் நத்தத்தனார் மதுரையைக் குறித்துப் பாடும் பொழுது “தமிழ் நிலைபெற்ற மதுரை” என்கிறார். ஆறாம் காலகட்டம்வரை தமிழை மதுரையோடு இணைத்துச் சொல்லும் வழக்கம் இருக்கவில்லை.

    10.தமிழரசுகளிடம் ஐக்கியக் கூட்டணி மிக நீண்ட காலமாக இருந்து வந்துள்ளது என்பதை காரவேலன் கல்வெட்டும், மாமூலனாரின் அகம் 31ஆம் பாடலும் உறுதி செய்துள்ளன. மூவேந்தர்களிடையே பகைமையும், போரும் இருந்து வந்தாலும் தமிழர் அல்லாத பிற அரசுகளோடு போர் புரியும் பொழுது தமிழரசுகள் ஒற்றுமையாக இருந்து செயல்பட வேண்டும் என்பதும் தமிழ் அரசுகளிடையே கடற்போர் நடக்கக் கூடாது என்பதும் ஒரு மீறப்படாத உடன்படிக்கையாகும். சங்ககாலத்துவக்கம் முதல் தமிழரசுகள் பெரும் கடற்படைகளைக் கொண்டிருந்தபோதிலும் அவைகள், கடம்பர், பரதவர் போன்றவர்களை அடக்கவும், தமிழர் அல்லாத பிரதேசங்களின் கடற்கரை நகரங்களைக் கொள்ளையடிக்கவும், அவைகளைத் தங்கள் கட்டுப்பாட்டின்கீழ் வைக்கவும், தமிழர்களின் கடல்வணிகத்தைப் பாதுகாக்கவும் பயன்படுத்தப்பட்டதே ஒழிய தமிழரசுகள் தங்களுக்குள் போரிட்டுக் கொள்ளவும், ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்ளவும் பயன்படுத்திக் கொள்ளப்படவில்லை.

    இம்மரபு 7ஆம் காலகட்டத்தில் கி.மு. 175-170 வாக்கில் முதல் முறையாக மீறப்பட்டு, சேரர்களின் முசிறித் துறைமுகத்தை பாண்டியர்களின் கடற்படை தாக்கிக் கொள்ளையடித்துச் சென்றது. இதன் விளைவாக கலிங்க மன்னன் காரவேலன் தமிழர்களின் காவல் அரணாகக் கலிங்கத்தில் இருந்த பித்துண்டா நகரத்தைத் தாக்கிக் கைப்பற்றிக்கொண்டதாகவும் 1300 ஆண்டுகாலமாக இருந்துவந்த தமிழரசுகளின் ஐக்கியக் கூட்டணியை உடைத்து விட்டதாகவும் தனது அத்திக்கும்பா கல்வெட்டில்(கி.மு. 165) பொறித்து வைத்தான். முதல் காலகட்டம் முதல் பத்தாவது காலகட்டம் வரை, இந்த ஒருமுறை மட்டுமே கடற்படை கொண்டு மூவேந்தருக்குள் தாக்கிக்கொள்ளக்கூடாது என்ற மரபு  மீறப்பட்டு முசிறி தாக்கப்பட்டது. அதன்பின் அந்த மரபு மீறப்படவில்லை.

    11.வடநாட்டுப்படையெடுப்பு, வடதிசைப் படையெடுப்பு ஆகியவற்றின்போது தமிழரசுகளிடையே ஒற்றுமை இருந்து வந்துள்ளது. அது சில சமயங்களில் வலிந்து திணிக்கப்பட்ட ஒற்றுமையாகவும் இருந்தது. சான்றாக முதல் கரிகாலன், சேரன்செங்குட்டுவன் ஆகியவர்காலத்தில் ஏற்பட்ட ஒற்றுமை வலிந்து திணிக்கப்பட்ட ஒற்றுமை எனலாம். ஆனால் இப்படையெடுப்புகள் அனைத்துத் தமிழ் அரசுகளுக்கும் நன்மை தருவதாக இருந்ததால் அவை இப்படையெடுப்புகளை ஆதரித்தன என்பதோடு விருப்பத்தோடு அதில் அவை பங்குகொண்டன எனலாம். பத்து காலகட்டங்களில் 6, 8 ஆகிய இரு காலகட்டங்களைத்தவிர பிற காலகட்டங்களில் இப்படையெடுப்புகள் நடந்தன. இமயவரம்பன், சேரன்செங்குட்டுவன், நலங்கிள்ளி ஆகிய மூவரும் வடநாட்டுப் படையெடுப்புக்களை நடத்தினர். இதர ஐந்துபேர் வடதிசைப் படையெடுப்புகளை நடத்தினர். தமிழரசுகளிடையே இருந்த ஐக்கிய கூட்டணியும், தமிழர் அல்லாத பிற அரசுகளோடு போர் புரியும் பொழுது தமிழரசுகள் ஒற்றுமையாக இருந்து செயல்பட வேண்டும்; தமிழ் அரசுகளிடையே கடற்போர் நடக்கக் கூடாது போன்ற மரபுகளும் தான் தமிழரசுகள் மௌரியப்பேரரசை தோற்கடித்ததற்கும், வடநாட்டு, வடதிசைப் படையெடுப்புகளை வெற்றிகரமாக நடத்தியதற்கும் காரணம் எனலாம்.

    12.பதிற்றுப்பத்தும், ஐங்குறுநூறும் ஏழாம் காலகட்டச் சேரன் யானைக்கண் சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறையால் தொகுப்பிக்கப்பட்டது. அகநானூறு எட்டாம் காலகட்டப் பாண்டியன் கானப்பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதியால் தொகுப்பிக்கப்பட்டது. ஆதலால் பதிற்றுப்பத்து, ஐங்குறுநூறு ஆகியவற்றைப் பாடிய புலவர்கள், அவர்களால் பாடப்பட்ட வேந்தர்கள், அரசர்கள், இதர ஆட்சியாளர்கள் முதலானோர் 8 முதல் 10 வரையான காலகட்டங்களைச் சேர்ந்தவர்களாக இருக்க மாட்டார்கள். அது போன்றே அகநானூறு எட்டாம் காலகட்டத்தைச் சேர்ந்தது என்பதால் அதில் பாடிய புலவர்களும், பாடப்பட்ட புரவலர்களும் 9ஆம், 10ஆம் காலகட்டத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க மாட்டார்கள். அகநானூறு எட்டாம் காலகட்டம் என்பதால் ஒரு சில 9ஆம் காலகட்டத்தைச் சேர்ந்தவர்கள் இடம்பெற வாய்ப்புள்ளது. ஆனால் கண்டிப்பாக 10ஆம் காலகட்டத்தைச் சேர்ந்தவர்கள் இடம்பெற மாட்டார்கள்.

    தமிழக வரலாற்றில் ஒரு காலகட்டத்தில் நடந்த நிகழ்வு அடுத்த காலகட்டங்களில் ஏற்படுத்திய விளைவுகள், ஒரு சில காலகட்டங்களில் இருந்த தொடர்ச்சி வேறு சில காலகட்டங்களில் இல்லாது போனது, தமிழக அரசுகளிடம் இருந்த ஐக்கியக் கூட்டணி, வேந்தர் குலங்களிடையே இருந்த நட்பும், பகைமையும் ஒரு சில காலகட்டங்களுக்குத் தொடர்ந்து இருந்து வந்திருப்பது முதலியன குறித்து மேலே தரப்பட்ட விடயங்கள் பேசுகின்றன. இவ்விடயங்கள் சில முடிவுகளைத் தருகின்றன. சான்றாக 1.ஏழாம் காலகட்டத்திலிருந்து பாண்டியர்கள் வலிமை மிக்கவர்களாகவும், சேரர்கள் வலிமை குன்றியவர்களாகவும் ஆனார்கள். 2.வேந்தனைக் கடவுளோடு ஒப்பிடும் பாடல்கள் முதல் ஏழு காலகட்டப் பாடல்களில் அதிகளவு இருக்காது. 3.பதிற்றுப்பத்துப் பாடல்களில் பாடப்பட்ட வேந்தர்கள் 8 முதல் 10ஆம் காலகட்டத்தைச்சேர்ந்த வேந்தர்களாக இருக்க மாட்டார்கள்.  4.அகநானூற்றில் 10ஆம் காலகட்டத்தைச் சேர்ந்த புலவர்களோ, புரவலர்களோ இருக்கமாட்டார்கள். 5.பத்து காலகட்டங்களிலும் சென்னிகுலச்சோழ வேந்தர்களுக்கும் பாண்டியர்களுக்கும் இடையே போர் நடந்திருக்காது போன்றவை சில முடிவுகளாகும். ஆகவே இதுபோன்ற பல முடிவுகளை எடுக்கக் கூடிய அளவு நமது காலகட்டங்களும் அதில் நடந்த நிகழ்வுகளும் அவைகளுக்கான ஆண்டுகளும் ஓரளவு துல்லியமாகக் கணிக்கப்பட்டுள்ளன எனக்கருதலாம்.

    ஆதார நூல்:    பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும், கணியன்பாலன், எதிர்வெளியீடு, சூன்-2016, பகுதி – 4, பக்: 381–681.

     

     

     

     

     

     

     

     

     

     

     

    Share
  • பழந்தமிழக வரலாறு -2

    காலமும்  வரலாறும்

     கணியன்பாலன்

    காலம் குறித்தப் புரிதலோ, காலம் குறித்தத் தெளிவோ இன்றி எழுதப்படும் வரலாறு, ஒரு முழுமையான வரலாறாக இருக்க முடியாது. கி.பி. 17ஆம் நூற்றாண்டு உலகத்துக்கும், கி.பி. 21ஆம் நூற்றாண்டு உலகத்துக்கும் இடையே மலைக்கும் மடுவுக்குமிடயேயான வேறுபாடுகள் உள்ளன. இந்த இரண்டு காலகட்ட உலகமும் வேறு வேறானவை. அதில் வாழ்ந்த, வாழ்ந்து வருகிற மனிதர்களும் வேறு வேறானவர்கள். இவர்கள் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்வது என்பது இயலாத காரியம். சான்றாக 17ஆம் நூற்றாண்டு தமிழன் ஒருவனால், 21ஆம் நூற்றாண்டுத் தமிழனின் வாழ்வை கற்பனை கொண்டுகூட பார்க்கமுடியாது. இரண்டு வாழ்வுக்குமிடையேயான வாழ்க்கை, வசதிகளும், சமூகத் தனிமனித உறவுமுறைகளும், அரசியல், பொருளாதாரம் கலை, இலக்கியம் போன்றவைகளும் கற்பனையிலும்கூட காணமுடியாத அளவு மாற்றம் அடைந்துள்ளன. ஆகவே வரலாற்றில் காலம் மிகமிக முக்கியத்துவம் பெறுகிறது என்பதை நாம் உணர்ந்து கொண்டாகவேண்டும். நவீன இயற்பியலில் வெளி, காலம்(SPACE & TIME) ஆகிய இரண்டும் அனைத்து அறிவியலுக்குமான அடிப்படையாகக் கருதப்படுகிறது. வெளி-காலம் ஆகியவற்றால் ஆன பொருளாக நமது அண்டம் இருக்கிறது எனவும், காலம் என்பது நமது அண்டத்தின்(UNIVERSE) நான்காவது பரிமாணமாக(FOURTH DIMENSION) இருக்கிறது எனவும் நவீன அறிவியல் கூறுகிறது. நவீன இயற்பியலின் மிகச்சிறந்த அறிவியலாளரான ஸ்டீஃபன் ஆக்கிங் அவர்கள் எழுதிய “காலம்” என்ற நூல் அண்டம், காலம் முதலியன குறித்த விரிவான விளக்கத்தைத்தருகிறது என்பதோடு காலத்தின் முக்கியத்துவத்தையும் நமக்கு உணர்த்துகிறது.

    பழந்தமிழர் மரபும் காலமும்:

    “முதலெனப் படுவது நிலம்பொழு திரண்டின்

    இயல்பென மொழிப இயல்பு உணர்ந்தோரே” என்கிறார் தொல்காப்பியர் (தொல்காப்பியம், அகத்திணையியல்-4). இங்கு ‘நிலம்’ என்பது இடம் அல்லது வெளி என்ற பொருளிலும், ‘பொழுது’ என்பது காலம் என்ற பொருளிலும் சொல்லப்பட்டுள்ளது. நமது பழந்தமிழக மரபுப்படி, முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் ஆகிய மூன்றிலும் முதற்பொருள் என்பது அனைத்திற்கும் அடிப்படையாகக் கருதப்பட்டது. நவீன அறிவியல், வெளி, காலம் ஆகிய இரண்டையும் அனைத்திற்கும் அடிப்படையாகக் கருதுவதுபோன்றே தொல்காப்பியரும் இடம், காலம் என்பதை அனைத்திற்கும் அடிப்படையான முதற்பொருள் எனக் கூறியுள்ளார். அதனால்தான் மொழியியல் அறிஞர் டாக்டர் கபில் சுவெலபில் அவர்கள், “மனித அறிவாற்றல் எவ்வளவு வியத்தகு உச்சநிலை எய்தக்கூடும்”(one  of  the finest  monuments of human intelligence) என்பதைக் காட்டும் சிறந்த சான்றுகளுள் ஒன்று தொல்காப்பியம்” எனக்கூறியுள்ளார் எனலாம்(1).

    எண்ணியம் என்கிற சாங்கியத்தைத் தோற்றுவித்தத் தொல்கபிலர் ஒரு தமிழர் ஆவார் என்பதோடு அவர் ஒரு பொருள்முதல் மெய்யியல் அறிஞரும் ஆவார். அவர் வெளி, காலம், இயக்கம் ஆகியன பருப்பொருளின் கூறுகள் எனவும், அவை பருப்பொருளிலிருந்து பிரிக்கப்பட முடியாதவை எனவும் கூறியுள்ளதாகக் கூறுகிறார் கிரபின் என்கிற உருசிய அறிஞர்(2). இந்த எண்ணியச்சிந்தனையை அடிப்படையாகக்கொண்டுதான் இடம், காலம் ஆகியவற்றின் இயல்புகள்தான் முதற்பொருள் என்கிறார் தொல்காப்பியர். ஆகவே நமது முன்னோர்கள் காலத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்திருந்தார்கள் என்பதற்கு தொல்கபிலரும்,  தொல்காப்பியருமே  சிறந்த எடுத்துக்காட்டுகள் ஆவர். அறிவியல், மெய்யியல் ஆகியவற்றில் காலம் எந்தளவு முக்கியமானதோ அதைவிட ‘வரலாறு’ என்பதில் காலத்திற்கு முக்கியத்துவம் உண்டு. ஆகவே காலம் பற்றிய தெளிவு இன்றி படைக்கும் வரலாறு ஒரு முழுமையான வரலாறாக இருக்காது.

    பழந்தமிழக வரலாற்றில் காலம்:

    பழந்தமிழக வரலாற்றில் காலம் குறித்தத் தெளிவு இதுவரை உருவாகவில்லை என்றுதான் சொல்லவேண்டும். சேரன் செங்குட்டுவன், பரணர், அதியமான் போன்றவர்கள் கி.மு. மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்கள் ஆவர். ஆனால் அவர்களை கி.பி. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்களாகக் கருதுகிற அவலநிலை இருந்துவருகிறது. இரண்டுக்குமிடையே நான்கு நூற்றாண்டுகள் கால இடைவெளி இருக்கிறது. முன்பு கூறியதுபோல் கி.பி. 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்களை கி.பி. 21ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்களாகக் கருதுவதுபோல்தான் இதுவுமாகும். “பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும்” என்ற எனது நூல் சங்க இலக்கியங்கள், கல்வெட்டுகள், நாணயங்கள், அகழாய்வுகள், இந்தியத் தமிழகத் தத்துவ வரலாறு, வெளிநாட்டார் குறிப்புகள், வட இந்திய வரலாறு, உலக வரலாறு, இனக்குழு வரலாறு & நகர அரசு உருவாக்கம் போன்ற பலதளங்களில், பலகோணங்களில் ஆய்வு செய்து நமது பழந்தமிழக வரலாற்றின் காலத்தை ஓரளவு துல்லியமாகவே உறுதி செய்துள்ளது.

    அதன்படி சங்ககாலம் என்பது கி.மு. 750 முதல் கி.மு. 50 வரையான காலகட்டம் என வரையறை செய்யப்பட்டுள்ளது. சங்க இலக்கியத்தில் சொல்லப்பட்ட வேந்தர்கள், வேளிர்கள் போன்ற ஆட்சியாளர்களின் காலகட்டம் என்பது கி.மு. 350 முதல் கி.மு. 50 வரையான காலகட்டமாகும். சங்க இலக்கியங்களான பதிற்றுப்பத்து, ஐங்குறுநூறு, அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு ஆகிய ஆறு தொகை நூல்களும், பத்துப்பாட்டில் 2 முதல் 9 வரையான எட்டு பாடல்களும், தகடூர் யாத்திரை, முத்தொள்ளாயிரம் முதலியனவைகளும் சேர்ந்து ஆகமொத்தம் உள்ள 2000க்கும் மேற்பட்ட பாடல்கள் ஆய்வு செய்யப்பட்டு நமது வரலாறு கட்டமைக்கப்பட்டுள்ளது.

    தொல்கபிலர் காலம்:

    எண்ணியம் என்கிற சாங்கியம் மிகப் பழங்காலத்தைச் சேர்ந்தது எனவும் மகாபாரதத்திலேயே சாங்கியம் சநாதமானது(காலங்கடந்தது) எனக் கூறப்பட்டுள்ளது எனவும், உபநிடதங்கள் கூட சாங்கியம் அவற்றுக்கு முந்தையது எனக்காட்டுகின்றன எனவும் சாங்கியம் புத்தருக்கு முந்தையது எனக் கார்பேயும், கெச்.பி. சாத்திரியும் வாதிடுகின்றனர் எனவும் சட்டோபாத்தியாய கூறுகிறார்(3). மேலும் மெய்யியல் அறிஞர்கள் பலர் சாங்கியம் கிட்டத்தட்ட வேதத்துக்கு முந்தைய ஆரியமில்லாத சிந்தனைப்போக்கு எனக் கருதுகின்றனர் எனவும்(4), கி.மு. 7ஆம் நூற்றாண்டு என்கிற தொன்மை உபநிடதங்களின் காலத்தைக்குறிக்கிறது எனவும் ‘இந்தியாவில் மெய்யியல்’ என்கிற நூல் கூறுகிறது(5). சாங்கியம் என்கிற எண்ணியத்தின் மூலவர் வடமரபுப்படி கபிலர் எனவும் சங்க இலக்கியங்களைப் பாடியுள்ள தொல்கபிலரே சாங்கியத்தின் மூலவர் எனவும்  அவர் தமிழர்தான் எனவும் பல கோணங்களில் ஆய்வு செய்து உறுதி செய்கிறார் முனைவர் க. நெடுஞ்செழியன்(6). ஆகவே மிகப்பழங்காலத்தைச் சேர்ந்த, மகாபாரதத்துக்கும் உபநிடதங்களுக்கும் முந்தைய சாங்கியம் என்கிற எண்ணியத்தின் காலம் கி.மு. 8ஆம் நூற்றாண்டு என்பதால் சாங்கியத்தின் மூலவரான தொல்கபிலரின் காலம் கி.மு. 750 ஆகும்.

    தொல்கபிலர் பாடிய ஆறு பாடல்கள் சங்க இலக்கியத்தில் உள்ளன. தொல்கபிலரது தொன்மையையும், அவரது சிறப்பையும் குறிக்கும் விதத்தில்தான் சங்க இலக்கியம் இவரைத் தொல்கபிலர் எனக் குறித்துள்ளது. இந்திய மொழிகளில் சாங்கியம் என்கிற எண்ணியத்தின் கடவுள் மறுப்பிற்கும், ஆசிவகத்தின் கடவுள் மறுப்பிற்கும் எடுத்துக்காட்டாகக் காட்டப்படுவது பக்குடுக்கை நன்கணியாரின் புறம் 194ஆம் பாடல் ஆகும். சங்ககாலப் புலவரான இவர் மகாவீரர், புத்தர் ஆகியோரின் சம காலத்தவராக, அதாவது கி.மு. 6ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவராகக் கருதப்படுகிறார்(7). ஆகவே தொல்கபிலர், பக்குடுக்கை நன்கணியார் ஆகியவர்களின் காலங்களைக் கொண்டு சங்ககாலம் என்பது கி.மு. 750 முதல் தொடங்குகிறது என்பது உறுதி செய்யப்பட்டது.

    நலங்கிள்ளியின் உச்சயினி படையெடுப்பு:

    முத்தொள்ளாயிரம் என்கிற நூல் பாண்டியன் மாறன் வழுதி, சோழன் நலங்கிள்ளி, சேரன் குட்டுவன் கோதை ஆகிய மூன்று சமகால வேந்தர்களைப் பற்றிப் பாடுகிறது என்பது எமது ஆய்வில் கண்டறியப்பட்டது. அந்நூலின்படி சோழன் நலங்கிள்ளி உச்சயினிவரை படையெடுத்தான் என்பதும் அறிந்து கொள்ளப்பட்டது. டி.டி. கோசாம்பி அவர்கள் கி.மு. முதல் நூற்றாண்டில் தெற்கேயிருந்து வந்த சாதவாகனர்கள் உச்சயினியைத் தாக்கி சுங்கவம்சத்தின் வலிமையான கட்டமைப்பைத் தகர்த்தனர் என்கிறார்(8). சுங்கவம்சத்தின் ஆட்சிக்காலம் என்பது கி.மு. 187 முதல் கி.மு. 75 வரை ஆகும். சாதவாகன அரசுகள் பற்றிய ஆய்வில் கி.மு.180-124 வரை சதகர்ணி என்பவன் ஆண்டான் எனவும், அதன் பின் வந்தவர்கள் பலவீனமானவர்கள் எனவும் அதற்குப்பின் வலிமையாக இருந்தவன் புலுமாயி(கி.மு.30-6) என்பவன் எனவும் அறியப்பட்டது. ஆகவே கி.மு. 124 முதல் கி.மு. 30வரை சாதவாகனர்கள் மிகவும் பலவீனமாக இருந்தார்கள்(9). ஆதலால் அவர்களால் கி.மு. முதல் நூற்றாண்டின் துவக்கத்தில்(கி.மு.100-75) உச்சயினியைத் தாக்கியிருக்க முடியாது என்பது அறியப்பட்டது. எனவே தெற்கேயிருந்து வந்த வேறுயாரோதான் உச்சயினியைத் தாக்கி சுங்கவம்சத்தின் வலிமையான கட்டமைப்பைத் தகர்த்தார்கள் என முடிவு செய்ய முடிந்தது.

    தலைவடிவ நாணயங்களை வெளியிட்ட பாண்டியன் வெள்ளியம்பலத் துஞ்சிய பெருவழுதி, சேரமான் மாக்கோதை ஆகியவர்களுக்குப் பின் வந்தவர்கள்தான் முறையே பாண்டியன் மாறன்வழுதி,   சேரமான் குட்டுவன் கோதை ஆகிய வேந்தர்கள் ஆவர். இந்தத் தலைவடிவ நாணயங்களை வெளியிட்டவர்களின் காலம் கி.மு. 2ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதி என்பதால் அதன்பின் ஆட்சிக்கு வந்த   பாண்டியன் மாறன்வழுதி,   சேரமான் குட்டுவன்கோதை ஆகியவர்களின் ஆட்சிக்காலம் கி.மு. முதல்நூற்றாண்டின் துவக்கம் ஆகும். பாண்டியன் மாறன்வழுதி,   சேரமான் குட்டுவன்கோதை ஆகிய இருவரும்  முத்தொள்ளாயிரத்தில் இடம்பெற்ற  சோழன் நலங்கிள்ளியின் சமகாலத்தவர்கள் ஆவர். மேலும் குட்டுவன் கோதை வெளியிட்ட நாணயம் கி.மு. முதல் நூற்றாண்டு என முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆதலால் சோழன் நலங்கிள்ளியின் ஆட்சிக்காலம் கி.மு. முதல்நூற்றாண்டின் துவக்கம்(கி.மு.100-75) என முடிவு செய்யப்பட்டது. அவன் உச்சயினி மீது படையெடுத்தான் என முத்தொள்ளாயிரம் குறிப்பிட்டுள்ளது. ஆகவே சோழன் நலங்கிள்ளிதான் கி.மு. முதல் நூற்றாண்டின் துவக்கத்தில்(சுமார் கி.மு.85-80), உச்சயினி மீது படையெடுத்து சுங்கவம்சத்தின் வலிமையான கட்டமைப்பைத் தகர்த்தவன் என முடிவு செய்ய முடிந்தது.

    இறுதிக்காலம்:

    நலங்கிள்ளிக்குப்பின் ஆட்சிக்கு வந்த அவனது மகன் இலவந்திகைப் பள்ளித்துஞ்சிய நலங்கிள்ளி சேட்சென்னிதான் சங்ககால இறுதிச் சோழவேந்தன் ஆவான். இவனது ஆட்சிக்காலம் கி.மு. 75-50 வரையான ஆண்டுகள் ஆகும். சேர, பாண்டிய வேந்தர்களின் ஆட்சிக்காலமும் கி.மு. 50க்குள் முடிவடைகிறது. இவர்களுக்குப்பின் வந்த வேந்தர்கள் குறித்தக் குறிப்புகள் சங்ககாலப் பாடல்களில் இல்லை. ஆகவே சங்ககாலத்தின் இறுதிக்காலம் என்பது கி.மு. 50 என வரையறை செய்யப்பட்டது. ஆகவே தொல்கபிலர் காலம் சங்ககாலத்தின் தொடக்ககாலம் என்பதால், சங்ககாலம் என்பது கி.மு.750 முதல் கி.மு.50 வரை என முடிவு செய்யப்பட்டது.  இந்த சங்ககாலத்தில் இருந்த ஆட்சியாளர்களின் காலத்தை(கி.மு.350-50) பத்து காலகட்டமாகப் பிரித்து, அவர்களின் காலகட்டங்களையும், ஆண்டுகளையும் துல்லியமாகக் கண்டறிந்து, அவர்களின் காலவரிசைப்படியான  வரலாற்றை “பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும்” என்ற எனது நூலில் கட்டமைப்பதற்குக் கீழ்கண்ட சில சிறப்பம்சங்கள் அடித்தளமாக இருந்துள்ளன.

    சிறப்பம்சங்கள்:

    1.திட்டவட்டமான சான்றுகளைக்கொண்ட உலக வரலாற்றுக்காலத்தை அடிப்படையாகக்கொண்டு தமிழக வரலாற்றுக்காலத்தை கணித்துக் காலநிர்ணயம் செய்தது. கிரேக்க வீரன் அலெக்சாந்தரின் இந்தியப் படையெடுப்பு ஆண்டுகளைக் கொண்டும், மகத அரசில் ஏற்பட்ட நந்தர்-மௌரியர் ஆட்சி மாற்ற ஆண்டுகளைக் கொண்டும், அசோகனின் கல்வெட்டு ஆண்டுகளைக்கொண்டும், மாமூலனாரின் காலத்தையும், செருப்பாழிப் போரின் ஆண்டையும் கணித்துக் காலநிர்ணயம் செய்தது.

    2.பதிற்றுப்பத்து, ஐங்குறுநூறு, அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு ஆகிய ஆறு தொகைநூல்களையும் பத்துப்பாட்டில் 2-9 வரையான எட்டு பாடல்களையும், தகடூர் யாத்திரை, முத்தொள்ளாயிரம் ஆகியவற்றின் ஒரு சில விடயங்களையும் மட்டும் பயன்படுத்திக் கொண்டது; சிலப்பதிகாரம், கலித்தொகை, பரிபாடல் ஆகிய பிற்கால நூல்களில் உள்ள விடயங்களை, மேலே குறிப்பிட்ட ஆதார இலக்கியங்களின் தரவுகளோடு இணைந்து போகும்பொழுது மட்டுமே பயன்படுத்திக்கொண்டது.

    3.சங்ககாலப் புலவர்கள் பெரும்பாலும் நிகழ்கால நிகழ்வுகளையே தங்கள் பாடல்களில் பாடியுள்ளனர் என்பதைக் கண்டறிந்து அதனை சங்க காலத்துக்கான காலவரிசைப்படியான வரலாற்றைக் கணித்துக் கால நிர்ணயம் செய்யப் பயன்படுத்திக் கொண்டது.

    4.புலவர்கள் பாடிய தலைவர்கள், தலைவர்களைப் பாடிய புலவர்கள் என்கிற தலைவர்கள்-புலவர்கள் தொடர்பை ஒரு முறைப்படுத்தி, வரையறுத்துத் தொகுத்து, அதனைக்கொண்டு கோட்டியல் வரைபடமுறையை உருவாக்கி, தலைவர்கள்-புலவர்களின் கால கட்டங்களையும், அவர்களின் ஆட்சி ஆண்டுகளையும் கணித்துக் கால நிர்ணயம் செய்து தமிழக வரலாற்றைக் காலவரிசைப்படி தொகுத்தது.

    5.இனக்குழு நிலையில் இருந்து அரசு உருவான காலகட்டம் வரையான வரலாற்றுக்கு முந்தைய காலகட்டத்தை மார்கன், ஏங்கெல்சு, டாங்கே ஆகியவர்களின் நூல்களில் உள்ள சிவப்பிந்திய, கிரேக்க, உரோம, இரிக் வேதகால இனக்குழுக்களின் வரலாற்றுக்கு முந்தைய காலத்தை தமிழக சங்ககாலத்துக்கும் அதற்கு முந்தைய காலத்துக்கும் ஒப்பிட்டு சங்ககாலம் என்பது அரசு உருவாகி நிலைபெற்ற காலம் என்பதை நிறுவியது.

    6.அசோகன் கல்வெட்டு, காரவேலன் கல்வெட்டு, புகளூர்க் கல்வெட்டு, சம்பைக் கல்வெட்டு போன்றவைகளின் ஆண்டுகளையும், முதுகுடுமிப் பெருவழுதி நாணயம், தலைவடிவப் பெருவழுதி நாணயங்கள்,  கொல்லிப்பொறை, மாக்கோதை, குட்டுவன் கோதை நாணயங்கள் போன்றவைகளின் ஆண்டுகளையும், இரண்டாம் தூமகேது தோன்றிய ஆண்டையும் நமது சங்ககால இலக்கியக் கணிப்பு ஆண்டுகளோடு பொருந்திப் போகச் செய்து, தமிழக வரலாற்றைக் காலவரிசைப்படி வரையறுத்து நிர்ணயித்திருப்பது.

    7.தொன்மங்கள், புராணங்கள், வாய்மொழிக்கதைகள் போன்றனவற்றை வரலாற்றுச் சான்றாதாரமாகக் கொள்ளாது, முழுமையாக அவைகளைத் தவிர்த்திருப்பது, பிற சான்றாதாரங்களுக்கு ஆதரவாக இருந்தால் மட்டும் அவைகளை மிகக் குறைந்த அளவில் பயன்படுத்தியிருப்பது; பதிகம், பாயிரம், அடிக்குறிப்புகள் போன்றனவற்றைப் பிற சான்றாதாரங்களோடு இணைத்துப் பயன்படுத்தியிருப்பது.

    பார்வை:

    1.உலக அறிஞர்கள் பார்வையில் தமிழ்-பி.இராமநாதன், தமிழ்மண் பதிப்பகம், 2009,  பக்: 64, 68-71.

    2.’இயக்கவியல் பொருள்முதல்வாதம் என்றால் என்ன?’ வி.கிரபின், இரசிய நூல், முன்னேற்றப் பதிப்பகம், 1987, மாஸ்கோ பக்:45, 46..

    3.இந்தியத் தத்துவம் ஓர் அறிமுகம், தேவி பிரசாத் சட்டோபாத்தியாய, தமிழில் வெ. கிருஷ்ணமூர்த்தி, 2010, பக்: 196.

    4,5.இந்தியாவில் மெய்யியல், மிருணாள் காந்தி காங்கோபாத்யாயா, தமிழில் சா. செயராஜ், டிசம்பர்-2011, NCBH, பக்: 23, அணிந்துரை-XII.

    6.க.நெடுஞ்செழியன், தமிழர் இயங்கியல் – தொல்காப்பியமும் சரக சம்கிதையும், 2009, பக்: 21.

    7.க.நெடுஞ்செழியன், ‘சங்கஇலக்கியக் கோட்பாடுகளும், சமயவடிவங்களும்’ இரண்டாம்பதிப்பு, 2009, பக்: 21

    8.டி.டி. கோசாம்பி, பண்டைய இந்தியா, தமிழில்-ஆர்.எசு. நாராயணன், செப்டம்பர்-2006, NCBH,  பக்:388.

    9.பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும், கணியன்பாலன், எதிர்வெளியீடு, சூன்-2016, பக்: 275, 310-313.

    Share
  • பழந்தமிழக வரலாறு -1

    கணியன்பாலன்

     

            சங்க இலக்கியமும் பழந்தமிழக  வரலாறும்

     

    கி.மு. 2ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மதுரை மருதனிள நாகனார் என்கிற சங்ககாலப்புலவர் பொருள் தேடி ஆழ் கடலில், மிகப்பெருங்கப்பலில் நீண்ட பயணம் செய்த சங்க காலத்தலைவன் குறித்துப்பாடிய அகம் 255ஆம் பாடல், “உலகுகிளர்ந்தன்ன உருகெழுவங்கம்” எனத்தொடங்கி “வருவர் மன்னால்-தோழி!” என முடிகிறது. இப்பாடலில்,

    ‘புலால் மணமுடைய கடலின் அலைகளில், உலகமே பெயர்ந்து வந்தது போன்று அச்சம்தரும் மிகப்பெரிய கப்பலை, இயற்கையான பருவக் காற்று வீசி, இரவு பகல் பாராது, எங்கும் நிற்காது, வேகமாக அதனைக் கொண்டு செல்ல, அப்பெருங்கப்பலை இயக்குபவனாகிய நீகான், கடற்கரைத் துறை முகத்தில் இருக்கும் உயர்ந்த கட்டிடத்தின் மீதுள்ள கலங்கரை விளக்கத்தின் ஒளிகண்டு திசை அறிந்து அதனைச் செலுத்த, பொருள் ஈட்டும் பணி காரண மாக அக்கப்பலில் நெடு நாட்களுக்கு முன்சென்ற நமது தலைவர் மேலும் அதிக நாட்கள் அங்கு தங்காது, நமது துன்பம் நீங்குமாறு விரைவில் திரும்பி வருவார்’ எனத் தனது தோழியிடம் கூறி ஆறுதல் பெறுகிறாள் ஒரு சங்ககாலத் தலைவி. தலைவனின் இப்பிரிவு கடலிடைப் பிரிவு என்றே சொல்லப்பட்டுள்ளது. இப்பாடல் அன்று தமிழர்கள் மிகப்பெருங் கப்பல்களில் வெளிநாடுகள் சென்று வணிகம் புரிந்து பொருள் ஈட்டினர் என்பதை மிகச் சிறப்பாக வெளிப்படுத்துகிறது.

    இறங்கு குடிக் குன்ற நாடன் என்கிற புலவர், வட நாட்டுக்குப் போர்ப் பயணம் செய்த ஒரு தமிழ்த்தலைவன் குறித்து தனது அகம் 215ஆம் பாடலில் பாடியுள்ளார். அதில், ‘உயர்ந்த குறுக்கிடும் இமயம் போன்ற பெரிய மலை உச்சிகளைத் தாண்டி உள்ள, பலமொழி பேசுகிற நாடுகளுக்கு, விரும்பிய செயலைச் செய்வதற்காக, உறுதியும் வலிமையும் மிக்க நெஞ்சமோடு, சிறந்த வேலினை ஏந்தி போருக்குச் செல்கிற, மாட்சிமை மிகுந்த தலைவனை வெற்றி பெற வாழ்த்தி விடை தருதல் தான் நன்று’ எனச் சங்ககாலத்துத்தலைவி ஒருத்தி தனதுதோழியிடம் கூறுவதாகச் சொல்கிறார். வேந்துவினை இயற்கை என்கிற வேந்தன் தன் பகைவன் நாட்டைக் கைப்பற்றச்செல்கிற பொருளியல் சூத்திர உரையில் இப்பாடல் இடம் பெற்றுள்ளது. இந்தப் பாடல் தமிழக வேந்தன் ஒருவன் பெரிய மலை உச்சிகளைத் தாண்டி உள்ள பலமொழி பேசுகிற வடநாட்டைக் கைப்பற்றச் சென்ற போது அவனுடன் போருக்குச் சென்ற படைத்தலைவன் அல்லது குறுநில மன்னன் ஒருவன் குறித்துப் பாடிய பாடலாகத் தோன்றுகிறது. இந்த மலைஉச்சிகள் விந்திய, சாத்பூரா மலை உச்சிகள் ஆகும். தமிழ் வேந்தர்கள் வட நாட்டுக்கு படையெடுத்துச் சென்றார்கள் என்பதற்கு இப்பாடல் ஒரு உறுதியான சான்றாக இருக்கிறது எனலாம்.

    புறம் 400ஆம் பாடலில் தமிழர்களின் சங்ககாலத்துக் கடல்வணிகம் குறித்தும், அதனால் தமிழரசுகள் பெற்ற வருமானம் குறித்தும், “ஆற்று நீர் கடலில் கலக்கும் துறைகளைச் செம்மை செய்து உருவாக்கப் பட்டிருக்கும் கடற்கரைத் துறைமுகநகர் தோறும் கடலில் செல்லும் வங்கம் எனப்படும் பெருங் கப்பல்கள் மூலம் சென்று வணிகம் செய்யும் நல்ல ஊர்களையும் வணிகத்தையும் உடையவன் சோழன் நலங்கிள்ளி. இவன் நாடு அக்கடல் வணிகம் மூலம் கிடைக்கும் வருவாயை உடையது” எனக் கூறுகிறார் கோவூர்கிழார். அதாவது கடலோரமாக இருக்கும் நகர்களில் எல்லாம் இவனது நாட்டுப்பெருங்கப்பல்கள் மூலம் வணிகம் நடைபெறுகிறது எனவும் அதனால் கிடைக்கும் வருவாயை உடையவன் இந்தச் சோழன் நலங்கிள்ளி எனவும் கூறுகிறார் கோவூர்கிழார் என்கிற கி.மு. 2ஆம், 1ஆம் நூற்றாண்டு சங்ககாலப் புலவர். இந்தியாவின் கிழக்குக் கடற்கரையில் கங்கைமுதல் தென்கிழக்காசிய நாடுகள் முழுவதும், மேற்கே பாரசீகவளைகுடா உட்பட செங்கடல் வரையிலும் இவனுடைய பெரும் கப்பல்கள் சென்று வணிகம் புரிந்து வந்தன. இவன் பெரும் கடற் படைகொண்டு இவ்வணிகத்தைப் பாதுகாத்து வந்தான். இவன் வடக்கே உச்சயினிவரையிலும், கிழக்கே ஈழத்தின் மீதும் படையெடுத்து வெற்றி பெற்றவன் என்கிறது முத்தொள்ளாயிரம்.

    பக்குடுக்கை நன்கணியார் என்கிற சங்ககாலப்புலவர், தனது புறம் 194ஆம் பாடலில்இந்த உலகைப் படைத்த இறைவன் சிறிதும் பண்பில்லாதவன் எனக் குற்றம் சாட்டுகிறார். அப்பாடல் “இனிய காண்க, இதனியல்புணர்ந் தோரே” என முடிகிறது. அப்பாடலில் அவர், “ஒரு வீட்டில் சாவு; இன்னொரு வீட்டில் மணவிழா; சாவு வீட்டில் துக்கம்; மணவீட்டிலோ மகிழ்ச்சி. இவ்வாறு இன்பமும் துன்பமும் கொண்டது தான் வாழ்க்கை. இதனைப் படைத்தவன் பண்பில்லாதவனே! எனினும் வாழ்க்கையின் இந்த இயல்பை உணர்ந்தவரே அதில் இனிமையைக் காணமுடியும்” எனக் கூறுகிறார் இவர் இந்திய அளவில், தொல்கபிலர் உருவாக்கிய ‘எண்ணியம்’ என்கிற சாங்கியக் கோட்பாட்டின் தலைவராக கி.மு. 6ஆம் நூற்றாண்டில் இருந்தவர். இந்திய மொழிகளில் எண்ணியத்தின் கடவுள் மறுப்பிற்கும், ஆசிவகத்தின் கடவுள் மறுப்பிற்கும் எடுத்துக்காட்டாகக் காட்டப்படுவது இவரின் இந்தப் புறம் 194ஆம் பாடலே என்பது வியப்பூட்டும் விடயமாகும். பொருள்முதல்வாத மெய்யியல் தமிழகத்தில் மிக ஆழமாக வேரூன்றி இருந்தது என்பதற்கு இவர் போன்றவர்களே காரணமாவர்.

    கி.மு. முதல் நூற்றாண்டுக்கு முன் வாழ்ந்த பாண்டியன் ஏனாதி நெடுங் கண்ணன் என்கிற பாண்டியர் தலைவன் குறுந்தொகையில் பாடிய தனது 156ஆம் பாடலில், “பார்ப்பன மகனே! பார்ப்பன மகனே! இதுதான் காதல் பிரிவால் ஏற்படும் பெரும் மனச்சோர்வு என்பதோ? முள் முருங்கை மரத்தில் கிளைகளைக் களைந்து செய்த சிறு தடியோடு, பிச்சைப் பாத்திரத்தையும், விரத உணவையும் உடைய பார்ப்பன மகனே! எழுத்தில் எழுதப்படாத, வாய்மொழிமூலம் கற்பிக்கப் படக்கூடிய உனது வேதத்தில் பிரிந்துவிட்ட காதலர்களை ஒன்று சேர்க்கும் மருந்து ஏதாவது உண்டா? சொல்!” எனப்பொருள் படும் சங்ககாலப்பாடலைப் பாடியுள்ளான். காதலுக்காக, பார்ப்பனர்கள் புனித நூலாகக் கருதும் வேதத்தைக் கேள்விக்கும், கேலிக்கும் உள்ளாக்குகிறான் ஒரு பாண்டியர் தலைவன். இதுதான் அன்றைய சங்ககால வாழ்வில் பார்ப்பனர்களுக்கும் வேதத்திற்கும் இருந்த நிலை. ஆனால் இந்நிலை கி.மு. வுக்குப்பின் மாறிவிடுகிறது.

    கி.மு. 3ம் நூற்றாண்டைச் சேர்ந்த படுமரத்து மோசிகீரனார் என்கிற சங்ககாலப் புலவர் தனது 75ஆம் குறுந்தொகைப்பாடலில்

    “நீ கண்டனையோ? கண்டார்க் கேட்டனையோ?

    ஒன்று தெளிய நசை யினம்: மொழிமோ!

    வெண்கோட்டு யானை சோணை படியும்

    பொன்மலி பாடலி பெறீஇயர் –

    யார்வாய்க் கேட்டனை, காதலர் வரவே?” எனப் பாடியுள்ளார்.

    பாணன் ஒருவன் தலைவன் வந்து கொண்டுள்ளான் எனத் தலைவியிடம் கூறிய போது அதனால் மகிழ்ந்த தலைவி, “என் காதலர் வரவை நீ பார்த்தாயோ, பார்த்தவர் சொல்லிக் கேட்டனையோ, என் அன்புக்குரிய அவர் வரவைப்பற்றித் தெளிவாகச் சொல்!, எனது காதலர் வரவு குறித்து யார் யார் சொல்லி நீ அதனைக் கேட்டாய்! வெண்மையான தந்தங்களை உடைய யானைகள் நிறைய உலவும் சோனை ஆற்றின் கரையிலிருக்கும் பொன்போன்ற பாடலிபுத்திர நகரையே உனக்குப் பரிசாகத் தருகிறேன்!” என அவனிடம் கூறுகிறாள். தனது காதலன் வரவைச் சொன்னதற்காக, அன்றைய உலகின் மிகப்பெரும் நகரங்களில் ஒன்றான பாடலிபுத்திர நகரையே பரிசாகத் தருவதாகக் கூறுகிறாள் நமது சங்ககாலத்தலைவி. சோணை ஆறு கங்கை ஆற்றின் கிளை நதியாகும். பெரும்பாலோருக்குப் பாடலிபுத்திர நகர் கங்கை நதியின் கரையில் இருப்பதாகவே தெரியும். ஆனால் கி.மு. 3ஆம் நூற்றாண்டு வாக்கிலேயே அந்நகர் கங்கையின் கிளைநதியான சோணை ஆற்றின் கரையில் இருப்பதை அறிந்து இந்தத் தமிழ்ப்புலவர் பாடியுள்ளார். தமிழர்கள் பாடலிபுத்திரம்வரை சென்று வணிகம் புரிந்தனர் என்பதற்கு இப்பாடல் ஒரு சான்றாக உள்ளது எனலாம். சங்கப்பாடல்கள் பெருமித உணர்வைத் தூண்டும் வல்லமை கொண்டன என்பதற்கும் மிகச்சிறந்த தரவுகளைக்கொண்டன என்பதற்கும் இப்பாடல் ஒரு சான்றாகும்.

    இப்பாடல்கள் சங்கஇலக்கியம் என்பது மிகச்சிறந்த தரவுகளைக் கொண்ட ஒரு தங்கச்சுரங்கம் என்பதை உறுதிப்படுத்துகின்றன. இந்தச் சங்க இலக்கியத்தை அடித்தளமாகக் கொண்டுதான், “பழந்தமிழ்ச்சமுதாயமும் வரலாறும்” என்ற எனது நூல் கட்டமைக்கப்பட்டது. அந்நூல் ஆறு பகுதிகளைக்கொண்டது. அதில் 3 – 5 வரையான பகுதிகளில் உள்ள தமிழக வரலாற்றின் முக்கிய விடயங்கள் இங்கு சுருக்கித்தரப்பட உள்ளன என்பதோடு ஒரு சில புதிய விடயங்களும் சேர்க்கப்பட உள்ளன.

    ஒவ்வொரு சமூகத்துக்கும், ஒவ்வொரு தேசிய இனத்துக்கும் வரலாற்றுப்பெருமிதம் வேண்டும். ஜெர்மன் தேசியஇனம் குறித்தப் பெருமிதம்  மார்க்சு அவர்களிடம் ஆழமாகவே இருந்தது. முதலாளித்துவ வளர்ச்சிக் கட்டத்தில் இந்தச் சிந்தனை இருக்கவே செய்யும். நமது தமிழ் தேசிய இனம் உண்மையாகவே ஒரு நெடிய பாரம்பரியத்தையும்,  மிக நீண்ட வரலாற்றையும், சீர்மிகு மரபையும், தனக்கேயான தனித்துவத்தையும் கொண்ட ஒரு சிறப்புமிக்க தேசிய இனமாகும். அதன் மொழியான தமிழ் மொழியோ, பழமையும் சிறப்பும் மிக்க ஒரு செவ்வியல்மொழியாகும். ஆகவே தமிழர்களாகிய நாம், நமது தமிழ்தேசிய இனம் குறித்து, வரலாற்றுப் பெருமிதம் கொள்வதற்கு  வேறு எந்த தேசிய இனத்தைக் காட்டிலும் பேரளவான காரணங்கள் இருக்கின்றன. ஆனால் நமது தமிழ்தேசிய இனம் குறித்த வரலாற்றுப்பெருமிதம் நம்மிடம் இல்லை.  அதற்கு, நமது தமிழ் தேசிய இனத்தின் வரலாற்றை அதன் வரலாற்றுப் பெருமிதங்களை அடையாளம் காட்டக்கூடிய அறிவியல் அடிப்படையிலான, மறுக்க முடியாத சான்றுகளைக்கொண்ட ஒரு முழுமையான வரலாறு நம்மிடம் இல்லை என்பது ஒரு பெருங்குறையாகும். அப்பெருங்குறையைப் போக்குவதற்கான தொடக்கக் கட்ட ஒரு சிறு முயற்சிதான் “பழந்தமிழ்ச்சமுதாயமும் வரலாறும்” என்ற எனது நூலாகும். அந்நூலில் உள்ள சங்க இலக்கியம், கல்வெட்டுகள், நாணயங்கள், தொல்லியல் ஆதாரங்கள், வெளிநாட்டு அறிஞர்களின் குறிப்புகள் போன்றனவற்றை அடிப்படையாகக் கொண்டு உருவான பழந்தமிழக வரலாற்று ஆய்வு விடயங்களின்  சுருக்கமே இங்கு தொடர் கட்டுரைகளாகத் தரப்பட உள்ளன.

    ஆதார நூல்: பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும், கணியன்பாலன், எதிர் வெளியீடு, சூன்-2016. பக்: 37-47.

     

     

    Share