-சச்சிதானந்தம்
வாழைக் குருத்தாகச் சுருண்டிருக்கும் மனதை,
வாடைக் காற்றாக மென்மையாய்த் தீண்டி,
விரிந்தகன்ற வாழ்வாக மெல்லமெல்ல விரித்து,
வாரிக் கருணை வழங்கிடும் வேலன்! 66
ஆமணக்குக் காய்போல முட்கள் முளைத்து,
ஆந்தைகளின் அலறல்கள் அகத்தை அறுத்து,
ஆரிருளுக் கடிமையாகிப் பேரிருளில் வாழ்ந்தவனை,
ஆறுமுகன் அரவணைத்து அருளளித் தானே! 67
இச்சை என்னும் பறவையின் சிறகை,
இம்மைப் பிறவியில் முழுதாய் உதிர்த்துப்,
பிச்சை பெற்றுப் பெற்ற பிறவியைப்,
பெற்றவ னிடமே பணிவுடன் படைப்போம்! 68
வாழ்வை வெறுத்துத் தோற்றுத் துவண்டு,
வாழும் வழிமுறை தெரியா தவர்க்கு,
வாழும் வாய்ப்பை மீண்டும் கொடுத்து,
வையகக் கடைமை செய்திடச் செய்வான்! 69
வாழ்வை முழுதாய் வாழ்ந்து களித்து,
வாழ்வின் பொருளை உணர்ந்த மனிதரை,
வாழ்த்திப் போற்றி வாவென் றழைத்து,
வேலவன் தன்னுள் கலந்திடச் செய்வான்! 70


Leave a Reply