ஜோதிர்லதா கிரிஜா
அன்பு மிக்க பவளா அவர்களுக்கு.
வணக்கம்.
எனது இம்மடலை வல்லமையில் வெளியிடுமாறு கேட்டுக்கொள்ளுகிறேன்.
ஆண் – பெண் நட்புறவு கட்டுரை
வல்லமைக் குழுவினரில் செல்வன் எனும் அன்பர் எனது “ஆண்-பெண் நட்புறவு” எனும் கட்டுரைக்குச் செய்திருந்த விமரிசனத்தையும் அதன் கீழே உங்கள் முத்தாய்ப்பையும் கண்டு வருந்தினேன். திரு செல்வன் அவர்களின் எதிரொலி என்னை வியாபுறச் செய்யவில்லை. யாரேனும் இப்படி எழுதுவார்கள் என்பது நான் எதிர்பார்த்ததுதான். நான் பெண்ணியவாதி என்பதால், என்னைத் தாக்கும் வாய்ப்புக்குச் சிலர் காத்திருப்பார்கள் என்பது அனுபவ வாயிலாக நான் அறிந்ததே! தாக்கட்.டும். அது அவர் உரிமை. ஆனால், சம்பந்தாசம்பந்தமில்லாமல் கருத்துச் சொல்லலாமா? என் கட்டுரைக்கும் பெண்ணுரிமைக்கும் என்ன சம்பந்தமாம்?
கட்டுரையோடு தொடர்பற்ற முறையில் இப்படிச் சிலர் எழுதுவார்கள் என்பது எனது அனுபவமாதலால், நம் முன்னோர்கள் ஆண்-பெண் நட்பைக் காலங்காலமாக எதிர்த்து வந்துள்ளது முழுவதுமாய் ஏற்கத்தக்கதன்று என்றும், ஆணுக்கு எதிராய் நான் சொல்லப்போகும் கருத்தை ஏற்கெனவே இருக்கக்கூடிய என்னைப்பற்றிய கணிப்பின் அடிப்படையில் விமர்சித்தல் சரியாக இருக்காது என்பதையும் அதன் முதல் பாராவிலேயே குறிப்பிட்டிருந்தேன்.
அப்படியும் இப்படி ஒரு விமரிசனம்! “ஆண்வெறுப்புத்தான் பெண்ணியம் எனும் நிலை மாறவேண்டும்” எனும் அர்த்தமற்ற தலைப்பு! பெரும்பாலான ஆண்களின் குரூர ஆதிக்கத்தையும், ஒருதலைப்பட்சமான சட்டங்களையும் எதிர்த்து நான் எழுதிவருவது பல ஆண்களுக்குப் பிடிக்காமல் போவதில் வியப்படைய ஏதுமில்லை!
”ஆண் நண்பர்கள் அனைவரும் வன்னுகர்வு செய்பவர்கள் என்பது போல் எழுதி இருப்பது சரியல்ல” என்று இந்த அன்பர் எழுதுகிறார். அப்படி எங்கே சொன்னேன்?! அப்படி ஒரு கருத்தே எனக்குக் கிடையாது. அதனால்தான் நல்ல ஆண்களின் மனம் புண்படும் எனக்கருதி, ‘இதுதான் பொதுவாக ஆண்களின்இலட்சணம்” என்று சொன்னேன். ‘பொதுவாக’ என்றால், அனைவரும் என்று பொருளா? நற்சிந்தனையும் உயரிய எண்ணங்களும், பெண்களை நுகர்பொருளாய்ப் பார்க்காமல் சகமனிதர்களாய்ப் பார்க்கும் நியாய உணர்வும் கொண்ட சிலருக்கு இந்த உண்மை கசக்கும்தான் என்றும் கட்டுரையின் இறுதியில் கூறியும் உள்ளேன். ஆபத்தில் இருக்கும் பெண்ணைக் காப்பாற்றத் தங்கள் உயிரையே தியாகம் செய்யும் ஆண்களும் உண்டு என்றும் குறிப்பிட்டிருந்தேனே!
என்கட்டுரை பெண்ணுரிமை பற்றியதே இல்லையே.
அடுத்து, பவளா அவர்களே, உங்கள் முத்தாய்ப்புக்கு வருவோம்.
“உண்மைதான், செல்வன். பெண்ணியம் என்பதற்கு ஆண்வெறுப்பு என்பதல்ல பொருள். தகப்பன், கணவன், சகோதரன், மகன் என்ற உறவுகளுடன்தான் ஒரு பெண் பாதுகாப்பாக, அமைதியாக வாழ முடியும் என்பதே சத்தியம். மொத்த ஆண்களையும் குறை சொல்லுவது நியாயமில்லை என்பதே என் கருத்தும்” என்கிறீர்கள். “ஆணாதிக்க வெறுப்பு” என்பது அநீதியாக ஆதிக்கம் புரியும் ஆண் மீதான வெறுப்பாகத்தானே மாறும்? அவ்வாறு செய்யாத ஆண்களை ஏன் வெறுக்க்ப் போகிறார்களாம்? பெண் மீது தகாத முறையில் ஆதிக்கம் செய்பவர்கள்தானே பெண்ணியம் என்பதற்கே ஆட்சேபிப்பார்கள்?
அடுத்து, என் கட்டுரையில் எங்கேனும், தகப்பன், கணவன், சகோதரன், மகன் ஆகியோரின் பாதுகாப்பு ஒரு பெண்ணுக்குத் தேவையில்லை என்று சொல்லியிருக்கிறேனா? நீங்களே சொல்லியுள்ளது போல் இவர்களுடன் வாழ்வதுதான் பாதுகாப்பானது. துளியும் ஐயமில்லை. ஆனால், யாரிடமிருந்து பாதுகாப்பு, பவளா அவர்களே? பிற ஆண்களிடமிருந்துதானே! உங்களையும் மீறி உண்மை வந்துவிட்டது.
எந்தப் புற்றில் பாம்பு இருக்கும், எதில் எறும்பு. இருக்கும் என்பது தெரியாதாகையால், ஒரு பெண் ஆண் நண்பர்களைத் தொலைவில் வைத்துப் பழகவேண்டும் என்றுதானே சொன்னேன்? இதில் என்ன தப்பைக் கண்டீர்கள்?
வாசகர்கள் எப்படி வேண்டுமானாலும் விமர்சிக்கட்டும். அது பற்றிய கவலை எனக்குக் கிடையாது. ஆனால் அவ்விதழின் ஆசிரியர் பொறுப்பில் உள்ளவர் பொருத்தமற்ற தலைப்பில் கூறப்பட்ட – சம்பந்தமே இல்லாத – கருத்துக்குத் தமுக்கு அடிப்பதும், நான் எழுதவே எழுதாத ஒன்றைக் கற்பித்து அதற்குப் பதில் சொல்லுவதும் முறைதானா? செல்வன் அவர்களின் கருத்தோடு நிறுத்தி யிருந்தால், கணினி முன் இடுப்புக்கடுக்க உட்கார்ந்துகொண்டு இதை எழுதும் தொல்லையை மேற்கொண்டிருந்திருக்கவே மாட்டேன். நீங்களும் அதை அங்கீகரித்து, என் கட்டுரையோடு தொடர்பே அற்ற கருத்தைச் சொன்னதால்தான் இந்தக் கடிதம்.
இதை வரி விடாமல் வெளியிட்டால் நல்லது. சுருக்குவதாயின் போடவே வேண்டாம்.
என்றென்றும் நட்புடன்
ஜோதிர்லதா கிரிஜா
—

Leave a Reply