எம். ஜெயராமசர்மா .. [மெல்பேண் ]
சரித்திரத்தில் பதிந்த முத்தே
சங்கத்தமிழ் கண்ட முத்தே
பொறுப்புடனே கவிதை சொல்லும்
புகழ்மிக்க வைர முத்தே
கறுத்தநிற வைர முத்தே
கவித்துவத்தின் உயர்ந்த முத்தே
செருக்குடனே கவிதை சொல்லும்
சிறந்த நல்ல தமிழின்முத்தே
கண்ணதாசன் வாலி ஒடு
கவிதை நின்று போச்சுஎன
கவலை கொண்ட மனத்தையெலாம்
களிப்புக் கொள்ள வைத்தாயே
எண்ண எண்ண இனிப்பதற்கு
ஏற்றவகையில் கவிதை தந்து
வர்ணஜாலம் செய்து நிற்கும்
வைரமுத்து வாழ்க வாழ்க
மீசை கொண்ட பாரதியாய்
மிடுக்கொண்ட வைர முத்து
ஆசைகொண்டு தமிழை ஆண்டு
அனைவரையும் அணைத்து விட்டார்
வெள்ளுடையில் வந்து நிற்பாய்
தெள்ளுதமிழ் தந்து நிற்பாய்
துள்ளுநடை ஓடி வரும்
சுவையுடனே கவிதை வரும்
அள்ள அள்ளக் குறையாத
அழகுதமிழ் பாய்ந் தோடும்
அனைவருமே நீந்தி அதில்
ஆனந்தம் பெற்று நிற்போம்
தேசிய விருதை வென்றாய்
திசையெலாம் பயணம் செய்தாய்
காவியம் இயற்றி நின்றாய்
கவிதைகள் பலவும் தந்தாய்
பாவிலே பயணம் செய்தாய்
பட்டங்கள் பலவும் பெற்றாய்
ஓவியக் கவிதை தந்த
உயர்முத்தே வாழ்க வாழ்க
படித்த பின் புலம்
பாட்டில் தெரியும்
எடுத்த பொருளும்
எளிதில் புரியும்
தடித்த குரலால்
தமிழைத் தருவாய்
வெடித்த சிரிப்பு
விரிந்தே பரவும்
அடுக்கு மொழியும்
அள்ளித் தருவாய்
மிடுக்கு நடையும்
விட்டு விலகாய்
தொடுத்த கவிதை
சுவையாய் தருவாய்
தெறித்துச் சிதறும்
தீந்தமிழ் அங்கே
கல்வியில் பட்டம் பெற்று
கவிதையால் பட்டம் வென்று
நல்லதோர் நிலையில் நிற்கும்
நற்றமிழ் கவிஞ்ஞரே நீர்
வல்லமை பெற்று நாளும்
வையத்தில் வாழ்க என்று
நல்லதாய் வாழ்த்து கின்றேன்
நானும் ஓர் ரசிகனாவேன்


Leave a Reply