திருமால் திருப்புகழ் (141)
கிரேசி மோகன்

கண்ணன் திருப்புகழ்(வெண்பா)….
———————————————————-
’’கண்ணன் வெண்பாக்கள்’’
———————————————–
ஓணத்தின் போது எழுதியது….
————————————————


பொன்னாழி வெண்மைப், புரிசங்கு கையிருக்க,
கண்ணா யிரச்சேடன் கட்டிலில், -பெண்ணாழி,
மார்பில் பதித்து, மலரும்கண் மாலவனின்
சார்பாக கண்ணன் ஜனிப்பு….(364)
சேணம் பிடித்தைவர், சேனை ஜெயித்திட,
வானத்து வைகுண்டம் விட்டகன்ற, -ஓணத்தன்,
வாத புரீசன், வடமதுரா மன்னவன்,
கீதகோ விந்தந்தாள் காப்பு….(365)
களித்தெமுனா, தீரத்தில், கோபியர் சூழ,
குளித்தவர் காமத்தைக் கொன்று, -அளித்தனன்,
ஞானத்தை; அந்தநந்த, நீலத்தை நாம்வணங்கி,
ஓணத்தில் கொள்வோம் உவப்பு….(366)
வானத்தை, மண்ணை, வரமாய் பலிதந்த,
தானத்தை அன்றளந்த தெய்வத்தை, -ஓணத்து,
வாமனக் குட்டனை, வாத புரீசனை,
நீமனக் கட்டில் நிறுத்து….(367)
ஆச்சு அறுபது, ஆண்டு களுருண்டு,
போச்சாழி வண்ணா பரந்தாமா, -தாச்சு,
உறங்கி எழுந்துண்டு, ஊர்கதை பேசும்,
குரங்கிதை மாருதியாய்க் கொள்….(368)
எழுத்தில் பிழையிருந்தும், ஏற்றுக்கொள் கண்ணா,
வழுத்த வழியறியேன் வேறு, -பழுத்த,
கவியாக்கு என்னை, குறையொன்றும் இல்லா,
புவிவாழ்வை கோவிந்தா போடு….(369)
—————————————————————————————————————–
படங்களுக்கு நன்றி
http://kamadenu.blogspot.in/2013_09_01_archive.html