அம்மா என்றழைக்காத உயிரில்லையே…

1

–கவிஞர் காவிரிமைந்தன்

mannan song

கண்கள் பனிக்கும்! கருவறையில் உன்னைச் சுமக்கும் நொடி முதலாக தன்னை மறக்கும்! உன்னை நினைக்கும்! வண்ணக் கனவுகள் ஆயிரம் கண்டு உன்னை வளரத்திடும் பெண்மையின் பூரணம் தாய்!  கடவுள் ஒவ்வொரு வீட்டிலும் எடுக்கின்ற அவதாரம் ‘தாய்’ என்பதும் மிகையில்லை!  கருணை, அன்பு, பாசம், நேசம் என்று எத்தனையோ சொற்கள் தாயிடம்தானே குடிகொண்டுள்ளன.

“அம்மா” என்கிற ஆதாரச் சொல்லிலே அன்பின் அடையாளங்கள்!  ‘அம்மா’ என்று அழைக்கும்போதே.. நமக்குள் எத்தனை சுகஸ்வரங்கள்?  பூமியைக்கூட தாய் என்றுதானே நாமும் அழைக்கிறோம்!  அறிவியல் ஆயிரமாயிரம் கண்டுபிடிப்புகளைத் தந்து இந்த பூமியை சொர்க்கபுரியாக்கலாம்!  ஆனால் அவையெல்லாம் தாயின் மடியில் தலைவைத்து படுக்கும்போது கிடைக்கின்ற நிம்மதி சொர்க்கத்தைவிட மேலானதல்லவா?
VaaliilayarajaKJY
கவிஞர் வாலியின் கருத்து முத்துக்கள் தாயைப் பற்றி ‘மன்னன்’ என்கிற திரைப்படத்தில் வெளியான பாடலில் இசைஞானி இளையராஜாவின் இசையில் பத்மஸ்ரீ கே.ஜே.யேசுதாஸ் குரலில் – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நடிகை பண்டரிபாய் நடிப்பில்..

http://www.youtube.com/watch?v=9CKTKjIYXLw

காணொளி: http://www.youtube.com/watch?v=9CKTKjIYXLw

படம் : மன்னன்
இசை: இளையராஜா
பாடல்: வாலி
குரல்: கே.ஜே.யேசுதாஸ்
நடிப்பு: ரஜினிகாந்த், பண்டரிபாய்

அம்மா என்றழைக்காத உயிரில்லையே
அம்மாவை வணங்காது உயர்வில்லையே
அம்மா என்றழைக்காத உயிரில்லையே
அம்மாவை வணங்காது உயர்வில்லையே
நேரில் நின்று பேசும் தெய்வம்
பெற்ற தாயன்றி வேறொன்று ஏது
அம்மா என்றழைக்காத உயிரில்லையே
அம்மாவை வணங்காது உயர்வில்லையே

அபிராமி சிவகாமி கருமாயி மகமாயி
திருக்கோயில் தெய்வங்கள் நீதானம்மா
அன்னைக்கு அன்றாடம் அபிஷேகம் அலங்காரம்
புரிகின்ற சிறுத்தொண்டன் நான்தானம்மா
பொருளோடு புகழ் வேண்டும் மகனல்ல தாயே உன்
அருள் வேண்டும் எனக்கென்றும் அது போதுமே
அடுத்திங்கு பிறப்பொன்று அமைந்தாலும் நான் உந்தன்
மகனாகப் பிறக்கின்ற வரம் வேண்டுமே
அதை நீயே தருவாயே

அம்மா என்றழைக்காத உயிரில்லையே
அம்மாவை வணங்காது உயர்வில்லையே

பசும் தங்கம் புது வெள்ளி மாணிக்கம் மணிவைரம்
அவை யாவும் ஒரு தாய்க்கு ஈடாகுமா
விலை மீது விலை வைத்துக் கேட்டாலும் கொடுத்தாலும்
கடைதன்னில் தாயன்பு கிடைக்காதம்மா
ஈரைந்து மாதங்கள் கருவோடு எனைத்தாங்கி
நீ பட்ட பெரும்பாடு அறிவேனம்மா
ஈரேழு ஜென்மங்கள் எடுத்தாலும் உழைத்தாலும்
உனக்கிங்கு நான் பட்ட கடன் தீருமா
உன்னாலே பிறந்தேனே

அம்மா என்றழைக்காத உயிரில்லையே
அம்மாவை வணங்காது உயர்வில்லையே
நேரில் நின்று பேசும் தெய்வம்
பெற்ற தாயன்றி வேறொன்று ஏது
அம்மா என்றழைக்காத உயிரில்லையே
அம்மாவை வணங்காது உயர்வில்லையே
அம்மா என்றழைக்காத உயிரில்லையே
அம்மாவை வணங்காது உயர்வில்லையே…

அட்சர வாசகங்கள் வார்த்தைக் கோலங்களாய் விழ.. அந்த அர்த்தப் புஷ்பங்களை கானமழைபொழியும் யேசுதாஸ் குரல் மெருகேற்றித்தர.. கண்களைப் பனிக்க வைக்கும் அரிய பாடலாய் காதில் விழுகிறது!

இது குறித்து கவிஞர் வாலி அவர்களைச் சந்தித்து நெஞ்சாரப் பாராட்டிய நாளில்.. திரைப்படத்தில் இடம்பெறும்போது ஒருபாடல் எப்படி மக்களைச் சென்றடைகிறது என்பதைச் சுட்டிக்காட்டினார்.

இதைவிட 72 முறை ‘தாய்’ என்கிற சொல் பயன்படுத்தப்பட்டு தனிக் கவிதையில் தான் படைத்த தாய் கவிதைச் சரத்தை மடமடவென்று  உச்சரித்தார்!  (குமுதம் இதழில் வெளிவந்ததாக அறிகிறேன்)  மண்ணிலென்ன தோன்றக்கூடும் மழையில்லாதபோது.. மனிதனோ மிருகமோ தாயில்லாமல் ஏது என்கிற கவிஞர் வாலியின் வரிகளே மீண்டும் நெஞ்சில்!!

இன்னுமொரு செய்தி.. திருச்சியின் மையப்பகுதியில் அமைந்துள்ள ஐயப்பன் திருக்கோயிலில் பளிங்குக்கல்லில் பதிக்கப்பட்டிருக்கிறது இந்தப் பாடல்..அம்மா என்றழைக்காத உயிரில்லையே..

 

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “அம்மா என்றழைக்காத உயிரில்லையே…

  1. ஆம் இந்தப்பாட்டை சூப்பர் சிங்கரில் யார் பாடினாலும் நாம் மனம் நெகிழ்ந்து அழுதுவிடுவோம் .அத்தனை சக்தி இந்தப்பாடலுக்கு. . கோயிலில் இந்தப்பாடல் இடம் பெற்றது மிகவும் சரியானதே . தாயில் சிறந்ததோர் கோயிலுமில்லை  ……இந்தப்பாடலை விவரித்ததற்கு மிக்க நன்றி 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.