Month: August 2019

  • படக்கவிதைப் போட்டி 221-இன் முடிவுகள்

    படக்கவிதைப் போட்டி 221-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    சாந்தி மாரியப்பன் எடுத்திருக்கும் இப்படத்தை வல்லமை பிளிக்கர் குழுமத்திலிருந்து தேர்ந்தெடுத்து வழங்கியிருக்கின்றது வல்லமை இதழ்.

    வீதிக்கு வந்துவிட்ட நைந்த பஞ்சணையும் அதில் முகம்புதைத்துத் தூங்கும் ஞமலியும் நமக்கு நவிலும் செய்தி என்ன என்று கண்டுபிடித்துச்சொல்லும் பொறுப்பை நம் வித்தகக் கவிஞர்களிடம் விட்டுவிடுவோம்.

    *****

    ”வாழ்க்கையே சகடம்போன்று சுழல்வதுதான்; அதில் உச்சத்தில் இருந்தவனும் ஒருநாள் ஆய்விடுவான் துச்சமாய்; ஆகவே நிதானமாய் வாழ்ந்திடு!” என்றுரைக்கின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

    நிதானமாய்…

    வாழ்க்கை யென்பது சக்கரம்தான்
    வந்து போகும் மேல்கீழாய்,
    வாழ்ந்து வந்தவன் உச்சத்தில்
    வந்து விடுகிறான் துச்சமாய்,
    பாழ்படும் பகட்டு வாழ்வதுவும்
    பஞ்சு மெத்தையும் பன்றிநாய்க்கே,
    வாழ்ந்திடு கொஞ்சம் நிதானமாயே
    வராது பெரிதாய் அடியதுவே…!

    இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தேர்வாகியிருப்பது அடுத்து…

    அடடே! வயது முதிர்வு கொண்டதனால் வீதி…
    இளமையில் நீ தந்த அன்பும் அடைக்கலமும் முதுமையில் நீ பெறுவாய் என நினைத்தாயோ…?
    வீதிவரை வந்தும் இன்னமும் பிடிபடவில்லையா? மடையனே!
    சுயநலமே சூழ்ந்து வாழும் நிலையில் பெற்றவராயினும் அந்நியரே…
    முதுமை உணர்த்தும் உனக்கு ரூபாயின் மதிப்பை ஊட்டி வளர்த்ததால் வந்த வினை என்று…
    நீயும் இந்தப் பஞ்சுமெத்தை போலத்தான்…
    உழைப்பைச் சுரண்டிவிட்டு..
    உதவாத போது வீதி வரத்தான் வேண்டும்…!

    பொருள் புதிதாய் இருக்கும் வரையில் பயன்படுத்தும் மக்கள், அது சற்றே பாழ்பட்டாலும் கழித்துக்கட்டி விடுவர். அதுபோல், இளமையும் வளமையும் இருக்கும்வரை மனிதனைக் கொண்டாடும் சுற்றமும் நட்பும், அவனுக்கு முதுமையும் வறுமையும் வந்துவிட்டால் அவனைத் தெருவில் திண்டாட வைத்துவிடும் என்ற எதார்த்த உண்மையைத் தன் கவிதையில் பேசியிருக்கும் திரு.  செல்வபாரதியை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென்று அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

     

     

    Share
  • படக்கவிதைப் போட்டி – 222

    படக்கவிதைப் போட்டி – 222

    அன்பிற்கினிய நண்பர்களே!

    கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    நித்தி ஆனந்த் எடுத்த இந்தப் படத்தை, வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் திங்கட்கிழமை (02.09.2019) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

    Share
  • குழவி மருங்கினும் கிழவதாகும்- 10.1

    குழவி மருங்கினும் கிழவதாகும்- 10.1

    -மீனாட்சி பாலகணேஷ்

    குழவி மருங்கினும் கிழவதாகும்- 10.1

      (ஊசற்பருவம்) 

    பெண்பால் பிள்ளைத்தமிழில் அடுத்த பருவமாக நாம் காண்பது ஊசல் பருவம். வேகமும் விறுவிறுப்பும் நிறைந்த விளையாட்டுகள், ஓடியாடும் சிறுவர் சிறுமியர்களுக்கு மிகவும் விருப்பமானவை. ஊசலில் உட்கார்ந்து கொண்டு, தோழியர் உந்தி விட, காலால் தரையை எம்பி உதைத்து , உயரே உயரே எழுந்து வீசியாடுவது ஊசற் பருவம். இப்பருவம் ஐந்தாண்டிலிருந்து ஒன்பது ஆண்டுகள் வரை நிகழ்வதாகக் கூறப்படும். ஊசலாடி மகிழ்வது பெண்பிள்ளைகளுக்கே உரித்தான ஒரு விளையாட்டு அனுபவம். வளரும் பெண்மக்களுக்கு இது ஆரோக்கியமான உடற்பயிற்சியுமாகும்.

    மயில்கள் தோகைவிரித்து நடனமாடும், குயில்கள் கீதமிசைக்கும் அழகானதொரு மலர்ச்சோலையில் மயில்போன்ற பெண்கள் சிலரும் தமது குயில் குரலில் பாடியவாறு ஊஞ்சல்கட்டி இன்பமாக ஆடுகின்றார்கள். புங்கமரம் ஒன்றின் தாழ்வான கிளையில் வலுவான கொடிகளைக் கொண்டு கட்டிய அழகான ஊ(ஞ்)சல். அதில் அன்றலர்ந்த தாமரை போல அமர்ந்து கால்களால் உதைத்து எழும்பி வீசியாடுகிறாள் ஒரு சிறுபெண். கொடி போன்ற உடலும், நீண்ட கூந்தலும் ஆடைகளும் அணிகலன்களும் உடன்வீசி இயைந்து ஆடுகின்றன. 

    இந்த  இளம்பெண்கள் தமது அரசனைப்பற்றி பெருமையாகப் பாடுகிறார்கள். இவர்கள் பாடுவது ஊசல்வரி; இது சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் தீட்டும் காட்சி: 

    ஐந்துபேர் பஞ்ச பாண்டவர்கள்; நூற்றுவரான கௌரவர்கள்; இவர்கள் தமக்குள் பகைகொண்டு பெரும்போர்செய்தபோது, அந்தப்போரில் இருவருடைய படைகளுக்கும் அள்ள அள்ளக்குறையாது உண்பதற்குச் சோற்றினைக் கொடுத்தவன் பெருஞ்சோற்று உதியன் சேரலாதன் எனும் சேரமன்னனாவான். அவனுக்கு ‘பொறையன்’, ‘மலையன்’ எனும் பெயர்களும் உண்டு. “அவனுடைய பெயர்களைக் கூறி, அவன் புகழினைப்பாடி நாம் ஊசலாடலாமா?” என்று ஒருத்தி தோழிகளைக் கேட்கிறாள். “நமது கருமுகில் போன்ற குழல் காற்றில் அலைந்தாட, அந்தக் கடம்ப நாட்டினை வெற்றிகொண்ட அவனுடைய புகழைப்பாடி ஊசல் ஆடலாமே,” என அடுத்தவள் மறுமொழி கூறுகிறாள். 

    ஓரைவ ரீரைம் பதின்மர் உடன்றெழுந்த

    போரிற் பெருஞ்சோறு போற்றாது தானளித்த

    சேரன் பொறையன் மலையன் றிறம்பாடிக்

    கார்செய் குழலாட ஆடாமோ வூசல்

    கடம்பெறிந்த வாபாடி ஆடாமோ வூசல்1

    இவ்வாறு தங்கள் அரசனான சேரனையும் அவன் பரம்பரையையும் போற்றிப்பாடி மகிழ்ச்சியாகப் பெண்கள் ஊசலாடுகின்றனர். சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்குக் கோவிலெடுத்த திருவிழாவில் இவர்கள் இவ்வாறு பாடி ஆடுகிறார்கள்! 

    மனம்மகிழ்ந்து உவகை ஊற்றெடுக்கும்போது, எண்ணங்கள் சிறகடித்து வானில் பறக்கும்போது, ஊசலில் அமர்ந்தாடினால் அது உயரே ஆகாயத்தின் அருகே கொண்டுபோவது போல ஒரு ஆனந்தமான அனுபவம் உண்டாகும். விண்ணை எட்டிவிட்டது போன்றதொரு மயக்கத் தோற்றம்.

    ஊசலைப்போலாடும் தொட்டிலிலோ தூளியிலோ உறங்கவைத்தால் குழந்தை ஆனந்தமாக, அமைதியாக உறங்குகிறது. சிறார்களுக்கு ஊசலாடி விளையாடுவது இன்பகரமான ஒரு அனுபவம். இளம்பெண்களுக்கும் ஊசலாடும்போழ்தில் தங்கள் கனவுகளும், காதல், மணவாழ்வு பற்றிய இனிமையான எண்ணங்களும் உருப்பெற்று, வலுப்பெற்று, நனவாகும் 

    சங்ககால மகளிர் ஆலமரம், வேங்கைமரம், புங்கமரக்கிளைகளில் ஊசல்கட்டி ஆடினார்கள். தினைப்புனம் காக்கும் பெண்கள் தாம் இருக்கும் பரண்மீதே ஊசல்கட்டி விளையாடினார்கள். அவர்கள் காதலர்களும் ஊசலை ஆட்டிவிடுவதற்கென அருகில்வந்து நின்றார்கள். 

    பெண்கள் மரங்கள் இல்லாதபோது இரு வேல்களை நாட்டி, அவற்றிடையே ஒரு கயிற்றைக்கட்டியும் ஊசலாடினார்கள்!

    இவ்வாறு காதல் விளையாட்டுகளிலும், மற்ற திருவிழாக் கொண்டாட்டங்களிலும் பெரும்பங்கு வகித்த ஊஞ்சல் விளையாட்டுகளில் பெண்கள் இறைவன் புகழைப் பாடி மகிழவும் வகைசெய்தவர் மாணிக்கவாசகர். 

    “நாராயணனும் கண்டறியாத இறைவனின் திருப்பாதங்களை எமக்கு அந்த ஈசன் மிக எளிதாகக் காட்டியருளினான். வேல்போன்ற கண்களையுடைய பெண்களே! அந்த உத்தரகோசமங்கை இறைவனின் புகழைப்பாடி பொன்னூசலில் அமர்ந்தாடுவீர்களாக,” என அன்போடும் ஆவலோடும் வேண்டுகிறார். 

    அவருடைய விருப்பப்படியே அவர்களும், “தோழிகளே! ஈசனின் புகழினைப் பாடுகிறோமல்லவா? அப்போது நாம் ஆடும் ஊசலும் அழகு மிகுந்ததாகவும், சிறப்புடையதாகவும் இருக்க வேண்டும். ஆகவே, பவளத்தூண்களைக் கால்களாக நடுவோம்; பருத்த முத்துக்களை இணைத்துக் கோர்த்துக் கயிறாக்கிப் பயன்படுத்துவோம்,” எனத் தோழிகளிடம் கூறுகிறார்கள். ஒருபெண் பொற்பலகை ஒன்றினை அதில் இணைக்க, ஒவ்வொருவராக அதில் ஏறியமர்ந்து பலவிதமாக ஈசன் புகழைப்பாடியாடி மெய்சிலிர்க்கிறார்கள். 

    இந்தத் தத்துவம் மிக எளிதாகப் புரிவது. கோவிலில் தெய்வத்தை வணங்கச் செல்லும்போதும், அரசனைக் காணச்செல்லும்போதும் நல்ல அணிமணிகள், பட்டாடைகளை அணிந்துகொண்டு செல்வதுண்டல்லவா? அதேபோல, இறைவன் பெருமைகளைப் பாடுவோரும் அழகாக உடையணிந்து, அழகான ஊசலில் அமர்ந்து அவனைப் பாடவேண்டும் எனும் ஆவல் இதிலும் விளங்குகிறது. பாடகர்கள் கச்சேரிகளில் அழகாக அலங்கரிக்கப்பட்ட மேடைகளில் கண்கவரும் ஆடைகள் அணிந்து அமர்ந்து பாடுகிறார்களல்லவா? அலங்கரிக்கப்பட்ட திருப்பொன்னூசலில் அமர்ந்து இறைவன் புகழைப் பாடுவதும் அப்படிப்பட்டதே!

    சீரார் பவளக்கால் முத்தம் கயிறாக

    ஏராரும் பொன்பலகை ஏறி இனிதமர்ந்து

    நாராயணன் அறியா நாள்மலர்த்தாள் நாய் அடியேற்கு

    ஊராகத் தந்தருளும் உத்தரகோச மங்கை

    ஆராவமுதின் அருள்தாள் இணைபாடி 

    போரார்வேல் கண்மடவீர் பொன்னூசல் ஆடாமோ2.

    திருப்பேரூரில் எழுந்தருளியுள்ள பட்டீசுவரப் பெருமானைக் கண்டு போற்றித் துதித்துவிட்டு வரும் பெண்கள் வழியிலுள்ள ஒரு மலர்ச்சோலையில் விளையாட நுழைகின்றார்கள். வழக்கமாக அவர்கள் ஆடும் ஊசல்கள் அங்கே மரக்கிளைகளிலிருந்து தொங்குகின்றன. சிலர் அவற்றிலேறி வீசியாட முற்படுகிறார்கள். ஆடும் வேகத்தில் அள்ளிமுடித்த நறுங்குழல் அவிழ்ந்து அலைந்தாடுகின்றது; கழுத்திலணிந்த முத்துமாலைகளும் பொன்னணிகளும் ஆடுகின்றன; மலர்ச்சோலையல்லவா? இவர்கள் ஊசலாடும் வேகத்தில் மலர்களில் தேனுண்ணும் வண்டுகளும் எழுந்தும் தாழ்ந்தும் ஆடுவனபோல் காட்சியளிக்கின்றன! விசையாக ஆடுவதால், பிறைபோன்ற நெற்றியில் வியர்வை அரும்பிப் படர்கிறது; தொங்கும் துளைச்செவியானதும் ஆடுகின்றது (அக்காலத்து மகளிர் காதில் பாம்படம் போன்ற பெரிய  அணிகளை அணிவதற்காக, காதுத்துளைகளை நீளமாகத் தக்கை முதலியனவற்றால் வளர்த்துக்கொண்டு அழகு செய்துகொள்வார்கள்; இதனை ‘வடிகாது’ என்பார்கள்). அக்காதிலணிந்த குழைகளும் கூடவே ஆடுகின்றன. கொடியிடையும், கைவளைகளும் ஆடிட, கோலமயில் போலும் பெண்களே நீங்கள் ஊசலாடுவீர்களாக! முத்தைப்பழிக்கும் புன்னகை கொண்டவர்களே! பால்போலும் இனிய சொல் பேசுபவர்களே! பட்டீசர் புகழைப் பாடி ஆடுவீராக!” எனப்பாடிய வண்ணம் ஒருவரை ஒருவர் ஊசலில் ஊக்கியபடி இவர்கள் ஊசலாடும் அழகு நமது கண்முன் காட்சியாகத்தோன்றி மகிழ்விக்கிறது. இறைவனின் அல்லது அரசனின் புகழைப்பாடும் ஒருவகைச் சிற்றிலக்கியம், பலவிதமான பாடல்வகைகளைக்கொண்டு, கலம்பகம் எனப்பெயர் பெற்றது. நடேசகவுண்டர் இயற்றியுள்ள திருப்பேரூர்க் கலம்பகத்தில் உள்ளதுதான் இந்த அழகான ஊசற்பாடல்:

    ஏலநறுங் குழலாட மாலை யாட

    இமிர்ந்தினவண் டாடமதி நுதல்வே ராடச்

    சாலவடி காதாடக் குழைக ளாடத்

    தளர்ந்துகொடி யிடையாட வளைக ளாடக்

    கோலமட மயிலனையீ ராடீ ரூசல்

    குளிர்முத்த மணிநகையீ ராடீ ரூசல்

    பாலனைய மொழிமடவீ ராடீ ரூசல்

    பட்டீசர் பேர்பாடி யாடீ ரூசல்3.

    இதில் ஊசலாடும்போது உண்டாகும் இன்பமும்,  இன்னும் என்னவெல்லாம் பெண்களுடன் ஊசலாடும், எனவும் அழகுற விளக்கப்பட்டுள்ளன.  அழகான இளம்பெண்கள் ஊசலில் ஆடுவதைக் கண்ட கவிஞர்கள் அன்னை தெய்வத்தின் மீதான பிள்ளைத்தமிழ்ச் சிற்றிலக்கியங்களில் ஊசல்பருவத்தை இணைத்துப்பாடி மகிழ்ந்தனர். மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழிலிருந்து இலக்கியச்சுவையும், பக்திரசமும் ததும்ப, அன்னை ஊசலில் ஆடுவதனாலேயே உலகங்கள் இயங்குகின்றன எனும் பிரபஞ்ச இயக்கத் தத்துவத்தினைக் குமரகுருபரனார் ஊஞ்சல் விளையாட்டுடன் இணைத்துக்கூறும் நயம் மிக அருமையானது:

    ‘மீனாட்சியாகிய இளமங்கை சுவைமிகுந்த பாடல்களை அமுதம் ஒழுகப் பாடியபடி பொன்னூசலில் ஆடுகின்றாள். அதனைக் கேட்ட சிவபிரான் மகிழ்ந்து தனது திருமுடியை அசைக்கின்றார்; அவருடைய முடிமீது பாம்புகளுக்கெல்லாம் அரசனான ஆதிசேடன் உள்ளான்; உலகங்களையெல்லாம் தாங்கும் அவனுடைய தலையும்  இதனால் அசைகின்றது. தலையசைந்தால் தலைமீதுள்ள உலகங்களும் அசைய வேண்டியதுதானே! அகில சராசரங்களும் அசைந்தாடுகின்றன; சொக்கநாதரின் திருவழகிற்கு இணையான கொடிபோன்ற இவள் ஊசலில் அசைந்தாடுவதனால் அண்டமும் அண்டபகிரண்டமும் ஆடுவதைப் போலத் தோன்றுகிறது,’ எனும் பாடல் நம்மை நெகிழ வைக்கிறது. 

    ‘சேர்க்குஞ் சுவைப்பாடல் அமுதொழுக ஒழுகுபொன் 

                திருவூசல் பாடியாடச் 

    சிவபிரான் திருமுடிஅசைப்ப 

          ……………………. தம்மனையசைந் 

     தாடலால் அண்டமும் அகண்டபகி ரண்டமும் 

      அசைந்தாடு கின்றதேய்ப்ப4

    தாம் எப்போதும் அகக் கண்ணில் கண்டு மகிழும் அன்னை மீனாட்சியின் திருவூசல் காட்சியில்  குமரகுருபரருக்கு இந்த அண்ட சராசரமே அசைந்து ஆடுவது போலத் தோன்றுகிறது; அருள் பெற்ற தமது தெய்வவாக்கினால் இதனை அழகுற விவரிக்கின்றார்: 

    அரசியின் ஊஞ்சலல்லவா? அதன் கால்கள் சிறந்த ஒளியுடைய பவளத்தால் செய்தவையாம்; பொங்கிப் பெருகி ஒழுகும் ஒளியையுடைய வைரங்களால் விட்டம் அமைந்துள்ளதாம்;  குளிர்ச்சி பொருந்திய செழித்த நிலவொளி பெருகி விழுந்தது போன்ற ஒளி பொருந்திய முத்து வடங்களைக் கட்டியுள்ளனர். ‘தண்’ணென்ற பௌர்ணமி இரவில் சந்திரனின் கிரணங்கள் ஊடுருவி அழகு செய்வது போல அவை தோன்றுகின்றன. மாணிக்கப் பலகையால் செய்த இருக்கையும் ஒளி வீசுகின்றது; எத்தனை அள்ளினாலும் திரும்பவும் பெருகி  நிறைந்து வழிந்து ஒளி பொங்குகின்ற அருண ரத்தினப் பலகையாம் அது!

    ‘ஒள்ளொளிய பவளக் கொழுங்கால் மிசைப்பொங்கும்

    ஒழுகொளிய வயிர விட்டத்து

    ஊற்றும் செழுந்தண் நிலாக்கால் விழுந்தனைய

    ஒண்தரள வடம் வீக்கியே5‘ என்கிறார்.

    ‘இத்தகைய அற்புதமான ஊஞ்சலில் அமர்ந்து ஆடுகின்ற உன் தோற்றம் தாயே, அந்தச் சூரிய மண்டலத்தில் வளர்கின்ற அரிய பெரிய சுடர் ஆகிய ஒளியை ஒத்திருக்கிறதே!’ என நெகிழ வைக்கிறார் புலவர்.

    ‘தன்’னை வென்று பரம்பொருளில் ஆழ்ந்து விட்ட பெரியோருக்கு அனைத்தும் இறை மயமாகத்தான் தெரியும்! ஆதி சங்கரரும் ‘உத்யத்பானு ஸஹஸ்ரகோடி ஸத்ருசாம்6,’ என்று மீனாட்சியின் ஒளிமயமான தோற்றத்தைப் போற்றியுள்ளார். உதிக்கின்ற ஆயிரம் கோடி சூரியர்களின் காந்தி பொருந்தியவளாம் அண்ட சராசரங்களுக்கும் முதல்வியான நம் அம்மை! இவள் குடியிருக்குமிடம் எதுவென்று தாம் உணர்ந்ததை எளியவர்களாகிய நமக்கும் விளக்குகிறார் குமர குருபரர். 

    உள்ளத்தில் திருவருள் நிரம்பியதால் அடியார்கள் ஆனந்தச் செருக்கு நிறைந்து விளங்குகின்றனராம்! தெய்வப் பேரருளை உணர்ந்தமையால், அதனால் விளைந்த பரமானந்த அலைகள் பொங்கும் கடலில் அவர்கள் மூழ்கித் திளைக்கின்றனர். ‘தெள்ளு சுவையமுதம் கனிந்த ஆனந்தத் திரைக்கடல் மடுத்து உழக்கும் செல்வச் செருக்கர்கள்7,’ என இத்தகைய அடியார்களைப் பெருமைப் படுத்துகின்றார். திருவருள் செல்வத்தினால் மெய்யடியார்களுக்கும் செருக்குண்டாகுமாம்! 

    ‘இறுமாந்திருப்பன் கொலோ, ஈசன் பல்கணத்து எண்ணப்பட்டுச் 

    சிறு மான் ஏந்தி (சிவபிரான்) தன் சேவடிக் கீழ்ச் சென்று அங்கு 

    இறுமாந்திருப்பன் கொலோ8,’ என திருநாவுக்கரசரும் இறைவனடியில் பணிந்து பெற்ற பேரருள் செல்வத்தால் தாம் இறுமாப்பு அடைந்ததைப் பாடியுள்ளார்.

    இத்தகைய அடியார்களின் மனத்தாமரையில் நெகிழ்ந்த  பூம்பஞ்சணையில் குடியிருக்கிறாள் மீனாட்சியன்னை. இங்ஙனம் இவள் இங்கு குடியிருப்பதனை உலகத்தினருக்கு அறிவிப்பது போல, அவர்கள் ஓதுகின்ற வேதம் எனப்படும் பறவைகள் ஒலியெழுப்புகின்றன. அன்னையும் அத்தனும் வேதத்தின் உட்பொருள்; ஆகவே, ஆகமப் பொருளாகி நிற்பவள் இவள் என்கிறார் குமரகுருபர அடிகளார்.

    இதனை முற்றுணர்ந்தவர்களாக, ‘பழ வேதமாய் அதன் முன்னுள்ள நாதமாய் விளங்குமிந்த வீரசக்தி வெள்ளம்9,’ என்று மகாகவி பாரதியார் கூறுகிறார்.

    ‘நானாயோகி முனீந்த்ர ஹ்ருந்நிவஸதீம்10 (யோகிகளும் முனிவர்களும் ஆகியோரின் நெஞ்சத் தாமரையில் உறைபவள்)’ என ஆதி சங்கரரும் கூறியுள்ளார்.

    ‘இவ்வாறு அடியார்களின் மனமாகிய தாமரையில் உறைபவளே, சுந்தரவல்லியே, பொன்னூசலில் ஆடியருளுக! 

    ‘…………………….பழையபாடல்

    புள்ளொலியெழக் குடிபுகுந்த சுந்தரவல்லி

    பொன்னூசல் ஆடியருளே

    புழுகுநெய்ச் சொக்கர் திரு அழகினுக்கு ஒத்தகொடி

    பொன்னூசல் ஆடியருளே11.!’ என்பது பாடல்.

    பொன்னூஞ்சலில் அமர்ந்துள்ள தடாதகையின் திருக்கோலத்தை மனக்கண்ணில் கண்டு மேலும் பாடுகிறார் புலவர்: “தேரிலேறிய போர்க் கோலத்தில் உன்னைக் கண்ட சிவபிரானின் உள்ளத்தில் முதலில் சினம் பொங்கியெழுந்தது! ஆனால் உனது அழகுத் திருக்கோலத்தைக் கண்டு சினத்தீ தணிந்து உள்ளத்தில் பற்றி எரியும் காமக்கனல் வளர்ந்து எழுந்தது! அந்தத் தீயின் கொழுந்து போன்றது அவரது சிவந்த சடை. உன்மேல் கொண்ட காதலால் அவர் உள்ளம் உருகியது போலவே, அவர் கையிலிருந்த வில்லான பொன்மேருவும் உருகியோடியது! (வில் அவர் கையை விட்டு நீங்கியது). அவர் முடியிலிருக்கும் சந்திரனும், அவர் ஏறும் காளைவாகனத்தின் மணி ஓசையும் அவர் கொண்ட காதல் நோயால் அவருக்கு மிகுந்த துன்பத்தைத் தந்தன!” என்கிறார்.

    இன்னும் கூறுகிறார்: “அழகான மேகத்தின் நீலமும் கருநிறமும் பொருந்திய கழுத்தை உடைய அப்பெருமான், உன்னைப்  போரில் எதிர்த்து வருந்தினார் அம்மையே! நீ அவர் மேல் கண்களாகிய அம்புகளைக் கரிய புருவங்களாகிய வில்லிலிருந்து செலுத்தினாய்; ஒரு கையில் போருக்கு வில்லையும் வளைத்து ஏந்தி நின்ற உந்தன் அழகுக் கோலத்தில் ஐயன் மயங்கினார்; அந்தப் போர்க்கோலமே உனக்கு திருமணக் கோலமான பெண்ணே, பொன்னூசலாடியருளுக,” என்கிறார்.

    ‘கண்கணை துரக்கும் கரும்புருவ வில்லொடொரு

    கைவில் குனித்து நின்ற

    போர்க்கோலமே திருமணக் கோலமான பெண் 

    பொன்னூசல் ஆடியருளே,’ என்பன பாடல் வரிகளாகும்.

    அன்னை ஊசலாடும்போது சுற்றும் புடை சூழ நிற்கும் இனிய தோழியரில் சிலர் பாடல்களை இசைக்கின்றனர்; இன்னும் சிலர் பரிகாசச் சொற்களைப் பேசி கேலி செய்கின்றனர். உயிர்த் தோழியான திருமகள், தரையைக் காலால் உந்தி உயர்ந்தெழும் ஊஞ்சலில் அமர்ந்துள்ள மீனாட்சியின் தாமரைத் திருவடிகளைப் பார்க்கிறாள்; வளைந்த பிறைத் தழும்பு அதில் தெரிகிறது. “வாணி, இதைப் பாரடி! என்ன இது இவள் மலரடியில், வலம்புரிச் சங்க ரேகையோ?” என்று கூவிப் பரிகசித்து முத்துப்பல் தோன்றச் சிரிக்கின்றாள்; ஊடல் காலத்தில் சிவபெருமானின் திருமுடியிலுள்ள பிறைநிலா அழுந்தியதால் வந்த தழும்பல்லவா அது? தோழியர் முகங்களில் குறும்புப் புன்னகை விகசிக்கின்றது! மீனாட்சிக்கு நாணம் மிகுகிறது. வணங்காத அவள் முடிக்கு அப்போது அந்த நாணம் ஒரு வணக்கத்தை வழங்குகின்றதாம்.

     ‘……………………மலர்மகள் அம்மை 

    உள்ளடிக் கூன்பிறை தழீஇ 

    மல்கும் சுவட்டினை வலம்புரிக் கீற்றிது கொல் 

    வாணி என்று அசதியாடி 

    மணிமுறுவல் கோட்ட12 என்பன பாடல் வரிகள். அசதியாடல் என்றால் பரிகசித்தல் எனப் பொருள். 

    குமரகுருபர அடிகளாரின் கவிநயமும் பொருள் நயமும் மிகுந்த பாடல், மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் என்ற செந்தமிழ்ச் சொல்லோவியத்தின் நிறைவுப் பாடலாக அமைந்துள்ள பாடல், ஊசற் பருவத்தின் பத்தாவது பாடல், அன்னையின் பாதாதி கேச வர்ணனைப் பாடலாக அமைந்துள்ளது. மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் என்ற தெய்வச் சிற்றிலக்கியத்திற்குத் திலகம் போன்று இப்பாடல் திகழ்கிறது.

    இரு திருவடிகளிலும் அணிந்துள்ள மென்மையான ஒலி எழுப்புகின்ற கிண்கிணியான சதங்கையும், முறையீடு செய்வது போன்று ஒலிக்கின்ற பரல்களையுடைய சிலம்புகளும் அணிந்த அம்மையின் மென்மையான மலர் போலும் திருவடிகளில் தேவரும் மூவரும் பணிந்து கிடக்கின்றனர். இவர்களுடைய முடிகளிலுள்ள கிரீடங்கள் அவர்கள் பணியும் போது அன்னையின் மெல்லிய திருவடிகளை அழுத்தி வருத்துகின்றன. இதனால் தான் திருவடிகளின் சார்பாகச் சிலம்புகள் வருத்தத்தை வெளியிட்டு முறையீடு செய்கின்றனவோ?

    ‘இருபதமும் மென்குரல் கிண்கிணியும் முறையிட்டு

    இரைத்திடும் சுரிச்சிலம்பும்13′

    காப்பிட்டு, செங்கீரையாடி, தாலாட்டி, சப்பாணி கொட்டி, முத்தம் தந்து, குறுநடை நடந்து, அம்புலியோடு ஆடி, அம்மானை விளையாடி, வைகை நீரிலாடி மகிழ்ந்து, அழகு பொங்க வளர்ந்து இன்று பொன்னூஞ்சலில் ஆடி நிற்கும் அன்னையின் திருவழகைக்கண்டு உள்ளம் பூரிக்கின்றது.

    ‘தடாதகையின் மென்மையான கொடி போன்ற இடையானது இற்றுப் போகுமே என்று அவ்விடையில் அணியப்பட்டுள்ள மேகலை இரங்கிப் புலம்புகின்றது. பொற்சரிகையால் சித்தரிக்கப்பட்ட பட்டாடை இவளுடைய சிறந்த மெல்லிடையை அலங்கரிக்கின்றது. மேலாடையும் ஒட்டியாணமும் அணிந்து சிவந்த கையில் பசுங்கிளியை ஏந்தி இருக்கிறாள்! இவளது அழகிய மார்பகங்களை முத்தாலாகிய மேலாடை அலங்கரிக்கின்றது. ஈசன் அணிவித்த மங்கலத் திருநாண் அதன் மீது திகழ்கின்றது. அழகு பொங்க நின்று அருளைப் பொழியும் நிலவு போன்ற திருமுகம்; முகமாகிய மதியினின்று  நிலவின் நீண்ட கிரணங்கள் போல அரும்பி வரும் புன்சிரிப்பும் கொண்டவள் இப்பெண்மணி,’ எனப் படிக்கும்பொழுதில் நமது கண்களில் ஆனந்த வெள்ளம் பெருகுகின்றது.

    இன்னும் மேலே போய் ‘சொல்லும் பொருளும் என நடமாடும் இறைவருடன் புல்லும் பூங்கொடி’யான அம்மை மீனாட்சியை வர்ணிக்கிறார் குமரகுருபர அடிகளார். ‘ஞானமாகிய ஆனந்தம் என்னும் கடலில் மூழ்கியவள் இவள்,’ என்கிறார் . அதாவது ஞானமே வடிவாகிய சிவபிரானுடன் இரண்டறக் கலந்தவள் என்பது பொருள். காளிதாசர் ‘ரகுவம்ச’த்தில், ‘வாகர்த்தா இவ சம்ப்ரக்தௌ14 எனச் சொல்லையும் பொருளையும் போலப் பார்வதியும் பரமேஸ்வரனும் இணைபிரியாதவர்கள் என்பார்.

      ‘இத்தகைய பெருமை பொருந்திய தாயே! காதிலணிந்துள்ள மகரக் குழைகளுடன் கயல்மீன்களாகிய கண்கள் போர்செய்கின்ற ஒப்பற்ற அழகு பூத்த சுந்தரவல்லியே! பொன்னூசல் ஆடியருளுக; புனுகு எனப்படும் நறுமண நெய் பூசியிருக்கும் சொக்கநாதரின் திருவடிவிற்குப் பொருத்தமான கொடி போன்ற பெண்ணே! பொன்னூசல் ஆடியருளுகவே,’ எனப் பாடி வாழ்த்தி நூலை நிறைவு செய்கின்றார்.

    ‘……………………ஞான

    ஆனந்த மாக்கடல் குடைந்துகுழை மகரத்தொடு

    அமராடும் ஓடரிக்கண்

    பொருகயலும் வடிவழகு பூத்தசுந் தரவல்லி

    பொன்னூசல் ஆடியருளே

    புழுகுநெய்ச் சொக்கர்திரு அழகினுக் கொத்தகொடி

    பொன்னூசல் ஆடியருளே16.

    அடுத்த பகுதியில் மற்ற பிள்ளைத்தமிழ் நூல்கள் காட்டும் நயங்களைக் கண்டு மகிழலாம்.

    ***************

    பார்வை நூல்கள்

    1. சிலப்பதிகாரம்- ஊசல்வரி- இளங்கோவடிகள்
    2. திருவாசகம்- திருப்பொன்னூசல்- மாணிக்கவாசகர்
    3. திருப்பேரூர்க் கலம்பகம்- கு. நடேச கவுண்டர்
    4. மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்- குமரகுருபரர்
    5. மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்- குமரகுருபரர்
    6. மீனாட்சி பஞ்சரத்தினம்- ஆதிசங்கரர்
    7. மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்- குமரகுருபரர்
    8. தேவாரம்- திருநாவுக்கரசர்.
    9. பாரதியார் பாடல்கள்- சுப்ரமணிய பாரதியார்
    10. மீனாட்சி பஞ்சரத்தினம்- ஆதிசங்கரர்
    11. மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்- குமரகுருபரர்
    12. மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்- குமரகுருபரர்
    13. மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்- குமரகுருபரர்
    14. ரகுவம்சம்- காளிதாசன்
    15. மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்- குமரகுருபரர்

     

     

     

    _

     

    Share
  • சொர்க்கத்துக்குப் போய் வந்தேன் – 1

    சொர்க்கத்துக்குப் போய் வந்தேன் – 1

    -நிர்மலா ராகவன் 

    “நீங்கள் கண்டிப்பாக சொர்க்கத்திற்குப் போயிருப்பீர்கள்!” அமெரிக்காவில் பலரும் என்னை இதையே கேள்வியாகக் கேட்டார்கள்.

    `என்னைப் பார்த்தால் செத்துப் பிழைத்தவள் மாதிரியா இருக்கிறது!’ என்று விழித்துப் போனேன்.

    தென்கிழக்காசிய நாடாகிய மலேசியாவிலிருந்து வந்தவள் என்பதால்தான் அக்கேள்வி பிறந்தது என்று பின்புதான் புரிந்தது. இரு நாடுகளுக்குமிடையே விமானப் பயணம் மூன்று மணிக்கும் குறைவுதான்.

    அவர்களைப் பொறுத்தவரை, இந்தோனீசியாவிலுள்ள பாலித் தீவுதான் சொர்க்கம்.

    “பாலியில் அப்படி என்ன இருக்கிறது?” என்று அவநம்பிக்கையுடன் என்னைக் கேட்டார் அங்கேயே பிறந்து வளர்ந்த ஒருவர்.

    இயற்கை எழிலும், கலை நயமும் ஒருபுறமிருக்க, வேறு ஏதோ யுகத்திலிருந்து வந்தவர்கள் போன்று, நம்பவே முடியாத அளவுக்கு மனிதாபிமானம் நிறைந்த மனிதர்கள்தாம் இதற்குக் காரணம் என்று ஓரிரு நாட்களிலேயே தோன்றிப் போகிறது.

    மலேசியாவில் பணிபுரியும் இந்தோனீசியர்களிடம், `நான் இந்தோனீசியா போயிருக்கிறேன்’, என்றால் ஜாவா அல்லது சுமத்ராவைத்தான் குறிப்பிடுவதாக எடுத்துக்கொள்வார்கள். ஏனெனில், இந்த இரண்டு தீவுகளிலும் இஸ்லாம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. பாலியின் வடக்குப் பகுதியிலும், மேற்குப் பகுதியிலும் மட்டும் சிறுபான்மை முஸ்லிம்கள்.

    “நாங்கள் இந்துக்கள். ஆனால், எங்கள் இந்து மதம் வித்தியாசமானது!” என்கிறார் வழிகாட்டி தேவா.

    130 X 90 கிலோமீட்டர் பரப்புகொண்ட சிறிய தீவு பாலி. அதனுள் 300 கிராமங்கள்.

    ஒரு கிராமத்திலுள்ள அனைவரும் ஒரு குறிப்பிட்ட தொழிலையே செய்கிறார்கள். தச்சு வேலை, சித்திரம் வரைவது, சிமெண்டுப் பலகைகளில் பூ வேலைப்பாடு (சுவரிலோ, தரையிலோ பதிப்பது), பெரிய காத்தாடிகள் செய்வது, வெள்ளி நகைகள் செய்வது என்று பல. கைத்திறன் கொண்டு செய்வது.

    மரத்தாலான சிலைகள் செய்யுமிடத்திற்குப் போனேன். `இச்சிலைகளுக்குப் பயன்படுவது இந்தச் செம்பருத்தி மரம்’ என்று அங்கே இருந்த ஒன்றைக் காட்டினார்கள். மரத்தின் இலை மெல்லியதாக, கிட்டத்தட்ட செம்பருத்தி போல்தான் இருந்தது.

    மிக அழகான வேலைப்பாட்டுடன், ஒன்றரையடி உயரமுள்ள சரஸ்வதி சிலை ஒன்றை ஆசையுடன் கையில் எடுத்தேன். அதன் விலையைக் கேட்டதும் மூச்சு நின்றுவிடும்போல் ஆகிவிட்டது. 3,000 அமெரிக்க டாலர்கள்!

    மன்னிப்பு கேட்கும் தோரணையில், அசடு வழியச் சிரித்தேன். பலரும் அப்படித்தான் செய்திருப்பார்கள் போலும்! கடை விற்பனையாளரான பெண் என் சங்கடம் புரிந்து, தலையாட்டினாள்.

    இப்படிப்பட்ட ஒன்றைப் படைக்க, அனுபவமும் தேர்ச்சியும் மிக்க ஸ்தபதி ஒருவர் ஒரு மரத்தைத் தேர்ந்தெடுத்து, மூன்று மாத காலம் தியானம் செய்வாராம். அப்போது, `இந்த மரத்தால் எந்த கடவுளின் உருவை நான் செய்ய வேண்டும்?’ என்று கேட்டுக்கொள்வார். இடைவெளி விட்டு விட்டு இப்படி ஒரு சிலையைச் செய்ய மூன்று மாத காலம் ஆகிறதாம்.

    மரத்தின்மேல் அனுமானமாக சித்திரம் வரைந்து கொள்வதெல்லாம் கிடையாது. ஒருவித மோன நிலையில் கை தன்பாட்டில் வேலை செய்யும். ஒரு சிறு தவறு நிகழ்ந்தால்கூட அதற்குப்பின் மரம் பிரயோசனப்படாது.

    எங்கும் தெய்வீக மணம்

    எல்லா முச்சந்திகளிலும் இருபதடி உயரச் சிலைகள். சரஸ்வதி, ராமர், அவர் எதிரே அனுமன் — இப்படி. பணக்கார வீடுகளின் வெளிச்சுவர் பண்டைக் கால அரண்மனையில் இருப்பதுபோல் கலைநயத்துடன் மிளிர்கின்றன.

    “ஒவ்வொறு கிராமத்திலும் ஒரு `சிறிய’ கோயில் இருக்கிறது,” என்று தேவா தெரிவிக்க, `இதையா சிறியது என்கிறார்!’ என்று எனக்கு ஆச்சரியம் எழும் வகையில் அமைந்திருந்தன அவை.

    பனை ஓலையில் செய்யப்பட்ட தொன்னையில் பற்பல வண்ணங்களைக் கொண்ட மலர்கள் பூஜைக்காக வைக்கப்படுகின்றன. இவற்றை எங்கும் காணலாம். பேரங்காடி கல்லாவின்மேல், ஹோட்டலில் வழி நெடுக, மற்றும் தரையில், ஒவ்வோர் அறைக்கும் முன்னால் என்று காணும் இடமெல்லாம் பூக்கள் இறைந்து கிடக்கின்றன. பெரும்பாலும், காசித்தும்பை பயன்படுத்தப்படுகிறது. தினந்தோறும் காலையில் செய்யும் பூஜைக்கெனவே பெரிய நிலப்பரப்புகளில் இதனைப் பயிரிடுகிறார்கள்.

    பிரம்மாவிற்குச் சிவப்பு வண்ண மலர்கள், சிவனுக்கு மஞ்சள் அல்லது வெள்ளை, விஷ்ணுவிற்கு நீலம் என்ற முறை இருக்கிறது. அவற்றைக் குறிப்பிட்ட திசையில்தான் வைக்க வேண்டுமாம்.

    கலைகளில் மிகுந்த ஈடுபாடு இருப்பதால் சரஸ்வதியைக் கொண்டாடுகிறார்கள். அண்மையில்தான் `கணேஷா’ என்று பிள்ளையார் சிலைகளைச் செய்கிறார்களாம். (அங்கேயே வசிக்கும் வேற்று நாட்டுக்காரரின் கணிப்பு).

    `இந்தியாவில் பிரம்மாவுக்கு நிறைய கோயில்கள் கிடையாதாமே! ஏன்?’ என்று அதிசயப்பட்டார் தேவா.

    -தொடரும். 

    Share
  • ஐயப்பன் காவியம் – 4

    ஐயப்பன் காவியம் – 4

    -கவிமாமணி இலந்தை சு. இராமசாமி 

    நகரப்படலம்

    கடல்கோளுக்கு முன்னிருந்த தென்மதுரை

    காய், காய், காய், காய் மா, தேமா- அறுசீர் விருத்தம்

    அம்மைதிரு மீனாக்ஷி அரசாண்ட தென்மதுரை அகில மீதில்
    செம்மைநகர் எனப்புகழைச் சேர்த்தநகர் சிறந்தநகர், தினமு மங்கே
    பொம்மெனவே புதுப்புதிதாய் மக்கள்வந்து பொலியுந கர், புனித மாகச்
    செம்மொழியாம் செந்தமிழின் முதலரங்கம் அந்நகரில் திகழ்ந்த வன்றே! 33

    தமிழ்வளர்க்கும் பஃறுளியும் தழைத்தோங்கப் புதுவெள்ளம் தாவிப் பாயும்
    அமிழ்தமெனும் அதன்நீரைப் பருகுவதால் உடல்நலத்தில் அந்நாள் மக்கள்
    நிமிர்ந்திருந்தார், இளங்காலை புலர்கையிலே மக்களெலாம் நேரே சென்று
    குமிழியிடும் அந்நதியில் குளித்திடுவார் மீனாட்சி கோவில் செல்வார் 34

    தொழிலறிந்தே உழைத்தவர்கள் இருந்ததனால் சோம்பேறிக் கூட்ட மில்லை
    உழவர்களின் ஏர்முனையின் கீறல்களால் ஊர்ப்புறத்தே நஞ்சை புஞ்சை
    செழுமைபெறும், பயிர்செழிக்கும், உணவிற்குச் சிறிதேனும் பஞ்ச மில்லை
    விழவெடுக்கும் திருநகரில் எந்நாளும் விழாக்கோலம் விளங்கு மன்றே! 35

    சோறடுவோர் தெருவினிலே விட்டகஞ்சி சூழ்ந்தெங்கும் கூடி வந்தே
    ஆறெனவே ஓடிவரும் அதில்நடக்கும் யானைகளின் அடிவ ழுக்கும்
    வீறுடைய மல்லர்களின் போட்டிகளும் விறல்களத்தில் மிகவும் உண்டு
    கூறுபுகழ் அறிஞர்களின் விவாதங்கொள் கொலுமேடை நிறைய உண்டே 36

    நாட்டியங்கள் பயில்வோர்கள் இதமாக நடமாட நடன மேடை
    பாட்டியற்றும் புலவர்கட்கும் பாட்டெழுத உதவுகிற பயிற்சி மேடை
    தீட்டுகிற ஓவியங்கள் கற்போர்க்குச் சித்திரங்கள் தீட்டும் மேடை
    நாட்டமுடன் இசைக்கலையைப் பயில்வோர்க்கு நல்லபல நாத மேடை 37

    நல்லபடி விலைகூறி நியாயமுடன் விற்கின்ற நாளங் காடி
    அல்லினிலும் பசியாற்றும் உணவகங்கள் நிறைந்திருக்கும் அல்லங் காடி
    சொல்வலர்கள் நூல்களினை அரங்கேற்றம் செய்கின்ற சூழ ரங்கம்
    வில்முதலாம் போர்க்கலையில் பயிற்சி பெற அங்கங்கே வீர மேடை 38

    மாலைகளைக் கட்டுபவர் கிள்ளியங்கே போட்டமலர் மலையாய்ச் சேரும்
    காலையிலே கோவிலுக்குப் போகிறவர் திருக்கூட்டம் கருத்தை ஈர்க்கும்
    மாலையிலே சோலைகளில் மலர்வாசம் நுகர்ந்திருக்கும் மக்கள் கூட்டம்
    ஓலையிலே எழுதுபவர் இலக்கியங்கள் படியெடுப்பர் ஒதுக்க மாக! 39

    மழைபொழியும் நீர்வீணாய்ப் போகாமல் வழித்தடாகம் வந்து சேரும்
    வழிகிறநீர் வாய்க்காலில் ஓடியங்கே பஃறுளியில் வந்து கூடும்
    பொழில்நிறைந்த ஊருக்குள் பூவாசம் மூக்குகளில் புளகம் ஏற்றும்
    விழிதிறந்து காதலர்கள் பேசிடுவர் களவுநெறி விதிக்குள் செல்லும் 40

    பசியென்ப தங்கில்லை, பட்டினியாய் இருப்பவர்கள் இன்மை யானே
    நசித்தவர்கள் அங்கில்லை நகரெங்கும் வறுமையென்ப தின்மை யானே!
    வசித்தவர்கள் அங்கில்லை வீடின்றி வாழ்ந்தவர்கள் இன்மையானே
    நிசிப்பயமே அங்கில்லை நெஞ்சத்தில் பயமறிந்தார் இன்மை யானே! 41

    கற்றவர்கள் அங்கில்லை, கல்லாதார் இல்லாத கார ணத்தால்
    அற்றவர்கள் அங்கில்லை ஆனவர்கள் ஆயிருந்த கார ணத்தால்
    உற்றவர்கள் அங்கில்லை எவருமங்கே உறவான கார ணத்தால்
    இற்றவர்கள் அங்கில்லை எல்லோர்க்கும் எல்லாமாம் கார ணத்தால். 42

    Share
  • மழை வரும் நேரமடா

    மழை வரும் நேரமடா

    -கவிஞர் வெ.விஜய்

    பட்டம் பறந்திடும் வானத்திலே – எனைப்
    பார்த்துச் சிரிக்குது வட்டநிலா
    கட்டி யிழுத்திடத் தோனுதடா – இந்தக்
    காலம் மழைவரும் காலமடா

    கொட்டும் மழைவரும் நேரத்திலே – அட
    கோடி இசைவரும் வானத்திலே
    சட்டச் சடசட சத்தத்திலே – மனச்
    சாவி கிடைத்திடும் மொத்தத்திலே! (பட்டம்)

    மண்ணின் மனம்வரும் காற்றினிலே – கரு
    வானம் கிடந்திடும் ஊற்றினிலே
    பெண்ணின் சலங்கையைப் போலவொலி – உடன்
    பேசிச் சிரிப்பதாய்க் கொட்டும்மழை! (பட்டம்)

    மின்னல் விழுந்திடும் வானத்திலே – அதை
    மேகம் தழுவிடும் காதலிலே
    சன்னல் கதவுகள் வெட்கத்திலே – தனைச்
    சாத்தி இணைந்திடும் சொர்க்கத்திலே! (பட்டம்)

    கொட்டும் இடியெனும் மேளமடா – உடன்
    கோடி மழைத்துளித் தாளமடா
    கட்டி யணைத்திடும் தென்றலுடன் – மரம்
    காதல் புரிந்திடும் காலமடா! (பட்டம்)

    மோன நிலையினில் வானமடா – அதை
    மோதிக் கிழிப்பது மேகமடா
    தான தருமமும் போதுமடா – மழைத்
    தண்ணீர்க் கிணையெது வாகுமடா! (பட்டம்)

    மாரி பொழிந்திடும் நேரமெலாம் – உடல்
    மையல் புரிந்திடத் தோனுமடா
    யாரும் இதையறி யாமலில்லை – இந்த
    அண்டம் அதற்குளே ஓடுதடா! (பட்டம்)

    29-08-2019

    Share
  • சிக்கெனப் பிடிப்போம் வாரீர்

    சிக்கெனப் பிடிப்போம் வாரீர்

    -மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா …. மெல்பேண் … அவுஸ்திரேலியா

    கந்தனை நினைத்தால் நெஞ்சில்
    கவலைகள் பறந்தே போகும்
    வந்திடும் வினைகள் யாவும்
    வழியிலே மறைந்தே போகும்
    அந்தமில் இன்பம் வந்து
    ஆனந்தம் தந்தே நிற்கும்
    கந்தவேள் பாதம் தன்னை
    கட்டியே அணைத்து நிற்போம் !

    சூரர்கள் போல எம்மை
    சூழ்ந்திடும் பகைமை எல்லாம்
    வேலவன் பெயரைக் கேட்டால்
    விரைவிலே ஒழிந்து போகும்
    வாழ்விலே வசந்தம் வீச
    வள்ளி மணாளன் தன்னை
    நாளெலாம் தொழுது நிற்போம்
    நம்வாழ்வு உய்யும் அன்றோ!

    சேவலாய் மயிலும் ஆக்கி
    சிந்தையை திருத்த வைத்த
    வேலவன் முகத்தைக் கண்டால்
    விரைவிலே திருத்தம் காண்போம்
    காலனும் நாட மாட்டான்
    கடுநோயும் அணுக மாட்டா
    சீலமாம் கந்தன் பாதம்
    சிக்கெனப் பிடிப்போம் வாரீர்!

    Share
  • சேக்கிழார்   பா நயம் – 44

    சேக்கிழார்   பா நயம் – 44

    -திருச்சி  புலவர் இராமமூர்த்தி 

    ——————————————-

    திருவாரூரில்  இறைவனின் திருமுன் அட்டாங்க பஞ்சாங்கமாக  வணங்கியபின், சுந்தரர் இறைவனைப் போற்றி  ஒரு பதிகம் பாடினார். அப்பொழுதே  அவர் கேட்க, திருவாரூர்ப் புற்றிடங்கொண்ட  பெருமான் வாக்காக ஒரு வானொலி எழுந்தது! அவ்வொலி,  ‘’சுந்தரனே! யாம் நம்மை உனக்கு நெருக்கமான தோழனாகத்  தந்தோம்.‘’ என்ற நற்செய்தியைக் கூறியது! அத்துடன் ‘’முன்பு திருவெண்ணெய்  நல்லூரில் திருமணத்தில் உன்னைத் தடுத்து ஆட்கொண்டோம்! , அப்போது நீ கொண்ட  திருமணக் கோலத்துடன் இனி எப்போதும் விளங்குக! இந்தக் கோலத்துடன் உன் விருப்பங்களை  அடைந்து விளையாடுக! ‘’ என்று இறைவன் கூறினார்!    

    இப்பாடல்  ‘வாழிய’ என்றசொல்லால் தொடங்குகிறது!  இதற்கு உயிர்கள் வாழும் பொருட்டு என்று பொருள் கொள்ள வேண்டும்! ‘’மாமறைப் புற்று இடம் கொள்’’ என்ற தொடர்  ‘’பெருமை மிக்க வேதமாகிய புற்றினைத் தம் உறைவிடமாகக் கொண்ட‘’ என்று  பொருள்படும். இங்கே மறைப்புற்று என்பது, ‘இறைவன் திருமேனியை மறைத்து எழுந்த  புற்று’ என்றும் பொருள் கொண்டு புற்றிடங் கொண்டார் என்ற பொருளில் விளங்கும் வன்மீக நாதர் என்ற  திருப் பெயரை விளக்குகின்றது. அவர் வேதத்துள் மறைந்துள்ளவர் என்றும், புற்றில் மறைந்துள்ளவர் என்றும்  இதற்கு இருவகைப் பொருள் கூறலாம்! ‘’வாழிய மாமறை’’ என்ற தொடரில் உலகம் உய்தி பெரும்பொருட்டு , வேதத்துள் மறைந்து தோன்றுபவர்  என்றும் பொருள் கொள்ளலாம்! 

    இறைவனின் சிறப்பினை உணர்த்தும் அளவைகளாகிய பிரமாணங்கள் ஆட்சி,  ஆவணம், காட்சி ஆகியவை என்பர். ‘’இந்தப் பிரமாணங்களின் தேவையின்றி தாமே பிரமாணமாக உள்ளார்‘’   என்பதைக்காட்டும் .தமக்குமேற் பிரமாணமில்லாமல் 

    தமக்குத்தாமே பிரமாணமாயுள்ளது. வேதங்களாகிய புற்று. என்பர் பெரியோர்!  உள்ளிருக்கும் பொருளை மறைத்துப் பொதிந்து மேல் மூடியிருப்பது புற்றினது இயல்பு. அவற்றை இறைவனது இருப்பிடமாக உணராதார்க்கு அவை உண்மைப்பொருளை உணர்த்தாமையின் மறைப்புற்று என்றார். 

    “வேதம் ஓதிலென்? சாத்திரங் கேட்கில்என்?
    நீதி நூல்பல நித்தல் பயிற்றில் என்?
    ஓதி அங்கம்ஓர் ஆறும் உணர்த்தின்என்?
    ஈசனை  யுள்கு   வார்க்கன்றி  இல்லையே!’’

    என்ற  அப்பர் தேவாரம்  இங்கே சிந்திக்கத் தக்கது. இறைவனாகிய மன்னவனார் இதனை அருளினார்!  சுந்தரர் தமக்கு இறைவனின் தோழமையைப் பெற்றதை அவர்தம் தேவாரங்களில் பல இடங்களில் கூறுகிறார்! அவர்,

    ‘’ஏழிசையாய் இசைப்பயனாய் இன்னமுதாய் என்னுடைய தோழனுமாய்’’  என்றும், ‘’என்றனையாள் தோழனை’’ என்றும், ‘’தோழமை அருளித் தொண்டனேன்   செய்த துரிசுகள் பொறுக்கும் நாதனை’’ என்றும் சுந்தரர் பாடியுள்ளார்! இக்காரணத்தாலேயே சுந்தரர்   ’’தம்பிரான் தோழர்’’ என்று போற்றப் பெற்றார். சைவ நெறிகளாகிய அடிமைநெறி, மகன்மைநெறி, தோழமைநெறி, ஞானநெறி ஆகியவற்றுள் சுந்தரரைத் தோழமை நெறியை விளக்க வந்தவர் என்பர்! 

    இங்கே ‘’நம்மைத் தந்தனம்!’’என்ற  தொடருக்கு  ‘அவனருளாலே அவன்றாள் வணங்கி’ என்றும், ‘தந்ததுன் றன்னை’ என்றும் அருளியபடி அவரே தாராவிடில் உயிர்கள் பெறுமாறில்லை; ஆதலின் நம்மைத் தந்தனம் என்றார்.’’ என்றுவிளக்கம்கூறுவர்!  

    எவ்வுயிர்க்கும் ஈசன் தோழனாய் உடனிருப்பார்; ஆயினும், “தாவியவனுடனிருந்தும் காணாத தற்பரன்“ என்றபடி உயிர்கள் அவனை அறிவதில்லை. அவ்வாறன்றி இவர் அறியும்படி தந்தது இவர் பெருமையை உலகறிந்து உய்வதற்கு என்க. இறைவன் தம்மையே ஆரூரருக்குத் தோழமையாகத் தந்துவிட்டாராதலின் பின்னர்ப் பரவையார் திருமணம், சங்கிலியார் திருமணம், பரவையார் ஊடல் தீர்த்தல் முதலியவற்றில் பாங்கற் கூட்டம் முதலிய அகப்பொருட்டுறைகளிலே சரித நிகழ்ச்சிகளின் அமைவு காணப்பெறும். பின்னும் இதனாலே நம்பிகள் செயல் தோழர் செயலேயாதலுமாம். இனி,  இப்பாடலை  முழுமையாகப்  படித்துப் பயில்வோம்! 

    ‘’வாழிய  மாமறைப் புற்றிடங்கொள்
    மன்னவனார்  அருளால் ஓர் வாக்கு
    ‘’தோழமையாக   உனக்கு நம்மைத்
       தந்தனம் .  நாம்முன்பு தொண்டுகொண்ட
    வேள்வியில்  அன்றுநீ கொண்ட கோலம் 

    என்றும் புனைந்துநின்  வேட்கைதீர
    வாழிமண்  மேல்விளை யாடுவாய்’’என்று
       ஆரூரர் கேட்க எழுந்த தன்றே ‘’

    என்ற  இப்பாடலில், முன்பு சுந்தரரைத் தடுத்தாட்கொண்ட திருமண வேள்வியில், அக்காலத்தில் அவ்வூரில் ‘’மன்னவர் திருவும் தங்கள் வைதிகத் திருவும் பொங்க“க் கொண்ட திருமணக் கோலம். என்பதை  ‘’அன்றுநீ கொண்டகோலம்’’ என்றார்.

    அதனை இனி  வருங்காலத்தில்‘’என்றும் புனைந்து நின் வேட்கை தீர  வாழி ‘’ என்று இறைவன் அருளினார் ! அதனால் பிற்காலத்தில் என்றும் சுந்தரர் திருக்கோலம், ‘மணமகன் திருக்கோலம்’ பெற்றே விளங்குகிறது!    பின்னர் இறைவன் ‘’என்மேல் கொண்ட பக்தியாகிய ‘’வேட்கை தீர, மண்மேல் விளையாடுவாய்’’ என்றார். இதனால் கைலையில் கொண்ட வேட்கைதீர, சுந்தரர் பரவையார், சங்கிலியாரை மணந்து  கொண்டு இறைவனுடன் தோழமை விளையாடல் புரிந்ததையும் குறிப்பிட்டார்! ‘’விளையாடு ‘’ என்ற சொல், பயனைக் கருதாத பக்தியைக் குறித்து சேக்கிழாரின் பாடல் நயத்தை விளக்குகின்றது!   

    Share
  • குறளின் கதிர்களாய்…(264)

    குறளின் கதிர்களாய்…(264)

    -செண்பக ஜெகதீசன் 

    நிலைமக்கள் சால வுடைத்தெனினுந் தானை
    தலைமக்க ளில்வழி யில்.

    திருக்குறள் -770(படைமாட்சி)

    புதுக் கவிதையில்…

    களத்தில் உறுதியாய் நின்று
    போரிடும்
    வல்லமை மிகு வீரர்கள்
    பலர் இருப்பினும்,
    முன்னின்று வழிநடத்தும்
    தகுதி வாய்ந்த
    தலைவன் இல்லாதபோது
    படைக்குப் பெருமையில்லை
    நிலைத்தும் நிற்காது…!

    குறும்பாவில்…

    நிலையான வீரர்கள் பலரிருப்பினும்,
    வழிநடத்தும் தலைவனில்லாத படைக்குப்
    பெருமையில்லை நிலைக்காது…!

    மரபுக் கவிதையில்…

    நிலையாய்க் களத்தினில் நின்றேதான்
    நன்றாய்ப் போரிடும் படைவீரர்
    பலரும் படையி லிருந்தாலும்,
    போரில் வெல்ல முன்னின்று
    தலைமை யேற்றுப் படைநடத்தத்
    தக்க தலைவன் இல்லையெனில்,
    நிலைமை மிகவும் மோசமாகி
    நிலைப்ப தில்லை படைச்சிறப்பே…!

    லிமரைக்கூ..

    போரிடுவோர் நிலையாய் நின்று
    வீரர் பலரிருப்பினும், தலைவனில்லாப் படையின்
    பெருமை நிலைக்காது வென்று…!

    கிராமிய பாணியில்…

    படவேணும் படவேணும்
    போருல ஜெயிக்கணுண்ணா
    நல்ல படவேணும்..

    போர்க்களத்தில நெலயா நின்னு
    தெறமயா சண்டபோடுற வீரனுங்க
    நெறய இருந்தாலும்,
    மொறயா முன்னால நின்னு
    படநடத்துற தலைவன் இல்லண்ணா,
    படைக்கு வராது பெரும
    போருல ஜெயிச்சி..

    அதால
    படவேணும் படவேணும்
    போருல ஜெயிக்கணுண்ணா
    நல்ல படவேணும்…!

     

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . (299

    இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . (299

    சக்தி சக்திதாசன்

    அன்பினியவர்களே!

    அன்பான வணக்கங்களைத் தாங்கி வருகிறது எந்தன் அடுத்த மடல்உள்ளத்தின் கதவுகளைத் திறந்து வெள்ளமாய் இருக்கும் எண்ணங்களின் சிலதுகள்களை அள்ளித் தெளிப்பதில் ஆனந்தமடைகிறேன்.

    கடுகதி வேகத்தில் காற்றைப்போல் பறந்து செல்கிறது காலம்இந்தக் காலக் காற்றினுள் அகப்பட்ட சருகுகளாக அடித்துச் செலப்பட்டுக் கொண்டிருக்கிறோம்ஆனால் அத்தகைய சூறாவளிக்குள் சிக்கப்பட்ட நிலையிலும், வசதியான ஒரு வாழ்வைத் தக்க வைத்துக் கொள்வதற்காக உலகின் ஒரு பக்க மக்களும்அன்றாடத் தேவைகளையே தீர்க்க முடியாமல் அல்லலுறும் உலகின் மற்றொரு பகுதி மக்களும் வாழ்கின்ற நிலை.

    இந்நிலையில் இவ்விரு வகையான மக்களின் வாழ்க்கையையும் நிர்ணயிக்கின்ற பொறுப்புகளில் அந்நதந்தப் பகுதிகளில் அரசியல் நடத்தும் தலைவர்களும் அவர்கள் வழி வந்தவர்களும் தங்கள் கொள்கைகளை நியாயப்படுத்தும் வகையில் தம்பக்க பிரச்சாரங்களுக்குள் மக்களை மூழ்கடிக்கும் நோக்கத்தோடு செயலாற்றும் நிலை.

    பசிபஞ்சம்பட்டினிமரணம் என்பன எப்படி ஜாதிமதஇனநிற வேறுபாடு காட்டுவதில்லையோ அதேபோல செல்வம் மகிழ்ச்சி,வாழ்வுஆடம்பரம் என்பனவும் இவ்வேறுபாடுகளைக் காட்டுவதில்லைஇருப்பினும் இன்றைய உலகில் இப்படிபஞ்சம்பட்டினி அகால மரணங்கள்தேவையற்ற யுத்தங்கள் என்பன வசதி குறைந்தபொருளாதாரச் சிக்கல்கள் நிறைந்த Developing countries அதாவது முன்னேற்றமடைந்து வரும் நாடுகள் என்று அழகாகக் குறிப்பிடப்படும் நாடுகளிலேயே நிகழ்கின்றன.

    முன்னேற்றமடைந்துவரும் நாடுகளின் முன்னேற்றத்துக்கு உதவுகிறோம் என்று அதற்கொரு கொள்கையையும்,அக்கொள்கையைச் செயற்படுத்துவதற்கென்று அமைச்சர்களையும்வாரியத்தையும் நியமித்து செயற்படுகிறது தம்மை முன்னேற்றமடைந்து விட்ட நாடுகள் கூறும் மேற்குலக வல்லரசு நாடுகள்ஆயினும் இவர்களின் முன்னேற்றமடையாத நாடுகளுக்கான உதவிகளின் அடிப்படையில் தான் இவர்களது பொருளாதர வீரியம் தங்கியுள்ளது என்பது உண்மையேஎந்தநாடும் தமது நாட்டின் நன்மையை கருத்திற் கொண்டுதான் எந்தவொரு திட்டத்தையும் நடைமுறைப்படுத்தும்அதுவே அந்நாட்டு மக்களின் எதிர்பார்ப்பும்யதார்த்தமும் கூடஆனால் அனைத்துக்கும் பின்னால் மறைந்து நிற்கும் அரசியல் லாபங்களின் உண்மை வடிவங்கள் சாதாரண மக்களுக்கு காட்டப்படுவதில்லை.

    வசதி குறைந்த நாடுகளுக்கு உதவுவது மனித தர்மமே ஆனால் உதவி எனும் பெயரில் தமது ஆதிக்கத்தைதாம் எவ்வழியில் அந்நாடு போகவேண்டும் என்று எண்ணும் வழியில் அந்நாடு நடக்கவேண்டும் என்று எண்ணி அந்நாட்டிற்கு ஏற்புடையதல்லாத வழியில் போகவைக்க எத்தனிப்பது உண்மையான உதவியாகுமாஎன்பது இன்றைய உலகின் ஒரு முக்கியமான கேள்வியாகிறது.

    இத்தகைய வழியில் ஒரு வல்லமை கூடிய நாடு உதவி எனும் பெயரில் மற்றொரு நாட்டினை மறைமுக ஆதிக்கத்துக்கு உள்ளாக்குவதற்கு அவ்வல்லமை மிக்க நாடு மட்டும்தான் காரணமாஇல்லை அவர்களிடம் உதவியை ஏற்றுக் கொள்ளும் அவ்வசதி குறைந்த நாட்டினை வழி நடத்துகிறோம் என்றுகூறி அதிகாரத்திலிருக்கும் அரசியல் தலமைகளின் சுயநலமான மனப்போக்கே காரணமாகிறதுமுன்னேற்றம் அடைந்துவரும் நாடுகளை முன்னேற்றமடையவிடாத நிலையில் வைத்திருப்பதனால் தமக்கு இலாபம் எனும் கணக்கீட்டினால் அரசியல் வியாபாரகி விட்ட ஒரு சூழலே இதற்கு மூலகாரணமாகிறது.

    இத்தகைய மக்களின் வாழ்வோடு விளையாடும் அரசியல் நடத்துவோரால்தான் இன்று இனவிரோத மனப்பான்மையை நியாயப்படுத்தி அதனைப் பாப்பியூலசிம் எனும் உணர்ச்சி மிக்க தீவிரவாத அரசியல் நிலைப்பாடாகக் காட்டும் அரசியல் தலைவர்களுக்கான ஆதரவு மேற்குலக நாடுகளில் பெருகி வருவதைக் காண்கிறோம்சோசலிஸம்கப்பிட்டிலஸம்கம்யூனிசம் எனும் வகை அரசியல் முறைகளைப் பல்வேறு நாடுகள் கடைப்பிடித்து வந்தனஅவற்றில் பல அவ்வகை அரசியலினால் தமது பொருளாதார வளத்தைப் பெருக்கிக் கொண்டனசுற்றிவரும் ராட்டினத்தில் மேலிருக்கும் பகுதி கீழே வருவதும்கீழிருக்கும் பகுதி மேலே போவதும் சகஜம்அதேபோல் இப்பொருளாதார மேம்பாடு கண்டவர்களின் வாழ்வாதாரத்தில் வீழ்ச்சி ஏற்பட்டதும் அதற்குக் காரணமாக இலகுவாக கண்முன்னே தோன்றுவது வெளிநாட்டிலிருந்து வந்து குடியேறிவவர்களேஅதுவும் அவர்கள் வேற்றினத்து,வேறு நிறத்துடையவரானால் அது இன்னும் வெளிப்படையாகத் தோன்றும்இப்பொருளாதார வீழ்ச்சிக்கு இனவாதத் துவேஷங்களை விளக்கமாக்கும் யுக்தியைக் கையாளுவதே பல அரசியல்வாதிகளுக்கு இலகுவான காரியமாகத் தென்பட்டது.

    விளைவு !

    இன்றைய மேற்குலக நாடுகளில்அதாவது வெள்ளை இனத்தவரைப் பெரும்பான்மையாகக் கொண்ட நாடுகளில்வேற்றினத்து குறிப்பாகக் கறுப்பின மக்களின் மீதான வெறுப்புணர்வின் பலத்தில் தமது அரசியல்கோட்டைகளைக் கட்டிக்கொள்ளப் பலர் முனைவதைக் காண்கிறோம்இதற்கு பற்பல காரணங்களுக்காக புலம்பெயர்ந்து வாழும் மக்களின் நடவடிக்கைகளும் துணை போகின்றன என்பதும் மறுக்க முடியாத உண்மையே நாம் புலம்பெயர்ந்து வந்தபோது எம்மை அரவணைத்துஎமக்கான வாழ்வொன்றை ஏற்படுத்திக் கொடுத்த நாட்டை வாடகை வீடு போன்றும்எந்தநாட்டில் வாழமுடியாமல் விட்டு ஓடி வந்தோமோ அந்நாட்டினைச் சொந்த வீடு போன்றும் கருதும் மனப்பான்மையினால் கூறப்படும் கருத்துக்கள்செயற்படுத்தும் நடவடிக்கைகள் எமக்கு அடைக்கலம் கொடுத்தவர்கள் மனதில் ஆறாத வடுக்களை ஏற்படுத்துவது சகஜமே !

    புலம்பெயர்ந்த நாடுகளின் அமைப்புகளில் அரசியல் நீரோட்டத்தில் தம்மை இணைத்துக் கொண்டு அதன் அங்கங்களாகச் செயற்படும் பல்வேறு இனங்களைச் சேர்ந்த மக்களை அவர் இனத்தினைச் சேர்ந்தவர்களே எதோ தமது இனத்துக்கு துரோகம் செய்வோர்கள் என்பது போன்ற மனப்பான்மையில் பார்ப்பது கூட சில இடங்களில் நடப்பதைக் கண்கூடாகப் பார்க்கிறோம்.இங்கேதான் தாய்நாடு” , “தாய்மொழி” என்பதன் அர்த்தங்களின் புரிதல்களின் வித்தியாசங்கள் ஏற்படுத்தும் தாக்கங்கள் புலனாகின்றனஅந்நியமொழியைக் கற்று அதனில் புலமை பெறுவதென்பது தாய்மொழி“யை மறப்பதன்று எனும் உண்மை பலருக்குக் கசப்பாக இருக்கிறது என்பது வியப்புக்குரியதொன்றாக இருக்கிறதுஅவ்வகையில் தாம் அந்நியமொழியில் பெற்ற புலமையின் பலத்தால் தன்னை ஈன்றெடுத்த தாய் பேசும் மொழியின் சிறப்பான இலக்கியங்களை மொழிமாற்றம் செய்து தமதுதாய்மொழியின் சிறப்பினை அந்நியமொழி பேசுவோருக்கும் புலப்படுத்துவது கூட ஒரு சிறப்பான தாய்மொழிப் பற்று என்பதனை மறந்து விடுக்கிறோம்.

    மதம் என்பது ஒரு மனிதனின் அணிகலனே அன்றி ஆடையாகாதுஅம்மதத்தின் மூலம் நாம் கற்றுக் கொண்ட நல்வாழ்வுக்குரிய நற்பண்புகளை வளர்த்துக் கொள்வது தவறாகாதுஆனால் மதத்தின் மீது கொண்ட பற்று எனும் காரணம் நாம் மனிதனாக வாழ்வில் முன்னேறும் படிகளில் தடைக்கற்களாக்கிக் கொள்வது தவறுஇன்றைய பிரிட்டன்  பல்லினமக்களைக் கொண்ட  பலகலாச்சார நாடாகும்மத வேறுபாடுகளைக் கடந்துநிற வேறுபாடுகளைக் கடந்து மனிதரென்னும் அடிப்படையில் அடுத்தவரின் உரிமைகளை மதிப்பது ஒன்றே இந்நாட்டின் அமைதியான வாழ்வுக்கு அடிப்படையாகும்.

    இன்றைய பிரிட்டன் அமைச்சரவையில் கிறீஸ்தவர்யூதர்இந்துஇஸ்லாம் என பல்வேறு மதப்பின்னணிகளைக் கொண்டவர்கள் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்இவர்களில் முக்கிய அமைச்சர்கள் இருவர் ஆசியப் பின்னணியைக் கொண்டவர்கள்இவர்கள் வெறும் ஆசியர்கள் எனும் காரணத்தினால் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று பல்வேறு காரணங்களுக்காக இன்றைய பிரதமரையும்அரசினையும் எதிர்க்கும் வெள்ளை இனத்தவர் மட்டுமல்ல பல ஆசியர்களுமே ஆங்காங்கே முனகுவதைக் காண்கிறேன்.

    மக்களே உங்கள் முன்னால் வைக்கப்பட வேண்டிய முக்கிய கேள்வி இதுதான்இவைகள் எல்லாவற்றையும் கடந்து ஏன் அவர்கள்,அவர்களின் திறமையின் அடிப்படியில் நியமிக்கப்பட்டிருக்கக் கூடாதுபுலம் பெயர்ந்து வந்து இம்மண்ணிலே தமது திறமையை நிலைநாட்டியவர்கள்அவர்கள் என்பதில்நாமும் புலம் பெயர்ந்தவர்கள் எனும் அடிப்படியில் நாம் பெருமை கொள்ளக்கூடாதா?பதவியலமர்த்தப்பட்டு சில தினங்களே ஆகிறது அதுக்குள்ளாகவே நாம் அவர்களின் செயற்பாடுகளின் நீதிபதிகளாவது முறையாகுமா?

    ஒரே கேள்வி ஒரே கேள்வி என் நெஞ்சிலே

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்

    சக்தி சக்திதாசன்

    Share
  • வல்லமைத் தளம் மீண்டது

    வல்லமைத் தளம் மீண்டது

    அண்ணாகண்ணன்

    37 நாள்கள் இடைவெளிக்குப் பிறகு வல்லமைத் தளம் (http://www.vallamai.com) இன்று மீண்டது. இதன் வழங்கியை (சர்வர்) மாற்றியுள்ளோம். இதில் நிறையக் கோப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன. இவற்றை நீக்க வேண்டும் அல்லது சரிசெய்ய வேண்டும். இதன் MySql தரவுகளின் அளவைக் குறைக்க வேண்டும். வடிவமைப்பை மாற்றியமைக்க வேண்டும். மேலும் புதிய அம்சங்களைச் சேர்க்க வேண்டும். இன்னும் பற்பல பணிகள் உள்ளன. ஆயினும் தளத்தை இப்போது எவரும் அணுகலாம் என்பது சற்றே ஆறுதல் அளிக்கிறது.

    இந்த இடர்மிகுந்த காலத்தில் வல்லமைக்கு நன்கொடை வழங்கிய எழுத்தாளர்கள் நிர்மலா ராகவன், ஜெயபாரதன், மேகலா இராமமூர்த்தி, நன்கொடை வழங்க இசைந்துள்ள கவிஞர் வித்யாசாகர், பேராசிரியர் செ.இரா.செல்வகுமார், முனைவர் நா.கணேசன், திருச்சி புலவர் இராமமூர்த்தி உள்ளிட்டோருக்கு உள்ளம் நிறைந்த நன்றிகள்.

    வல்லமைக்கு இதுவரை தமது வழங்கியில் இடமளித்த ஆமாச்சு (ஸ்ரீராமதாஸ்), தொழில்நுட்ப ஆதரவும் ஆலோசனையும் வழங்கிய செல்வ.முரளி, ஸ்ரீநிவாசன், கார்த்திக் நரசிம்மன் ஆகியோருக்கு முதன்மை நன்றிகள். அக்கறையுடன் தொடர்ந்து விசாரித்த நண்பர்களுக்கும் வாசகர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் மிக்க நன்றி.

    வல்லமைத் தளம், திடமாகத் தொடர்வதற்கு அனைவரின் ஒத்துழைப்பும் தேவை. வல்லமை இதழ்ப் பணிகளுடன், வல்லமை அறக்கட்டளைப் பணிகளையும் முன்னெடுக்க வேண்டும். இயன்றோர் நன்கொடை வழங்கி ஆதரியுங்கள். நிதியாதரவு மட்டுமின்றி, துணை ஆசிரியர்களும் தேவை. நேரம் ஒதுக்கிப் பங்களிக்கக் கூடியவர்கள் தொடர்புகொள்ளுங்கள்.

    நிறையப் படைப்புகள் காத்திருக்கின்றன. இனி, முழு வீச்சில் தொடர்வோம். எப்போதும்போல் இணைந்திருங்கள்.

    Share