-செண்பக ஜெகதீசன் 

நிலைமக்கள் சால வுடைத்தெனினுந் தானை
தலைமக்க ளில்வழி யில்.

திருக்குறள் -770(படைமாட்சி)

புதுக் கவிதையில்…

களத்தில் உறுதியாய் நின்று
போரிடும்
வல்லமை மிகு வீரர்கள்
பலர் இருப்பினும்,
முன்னின்று வழிநடத்தும்
தகுதி வாய்ந்த
தலைவன் இல்லாதபோது
படைக்குப் பெருமையில்லை
நிலைத்தும் நிற்காது…!

குறும்பாவில்…

நிலையான வீரர்கள் பலரிருப்பினும்,
வழிநடத்தும் தலைவனில்லாத படைக்குப்
பெருமையில்லை நிலைக்காது…!

மரபுக் கவிதையில்…

நிலையாய்க் களத்தினில் நின்றேதான்
நன்றாய்ப் போரிடும் படைவீரர்
பலரும் படையி லிருந்தாலும்,
போரில் வெல்ல முன்னின்று
தலைமை யேற்றுப் படைநடத்தத்
தக்க தலைவன் இல்லையெனில்,
நிலைமை மிகவும் மோசமாகி
நிலைப்ப தில்லை படைச்சிறப்பே…!

லிமரைக்கூ..

போரிடுவோர் நிலையாய் நின்று
வீரர் பலரிருப்பினும், தலைவனில்லாப் படையின்
பெருமை நிலைக்காது வென்று…!

கிராமிய பாணியில்…

படவேணும் படவேணும்
போருல ஜெயிக்கணுண்ணா
நல்ல படவேணும்..

போர்க்களத்தில நெலயா நின்னு
தெறமயா சண்டபோடுற வீரனுங்க
நெறய இருந்தாலும்,
மொறயா முன்னால நின்னு
படநடத்துற தலைவன் இல்லண்ணா,
படைக்கு வராது பெரும
போருல ஜெயிச்சி..

அதால
படவேணும் படவேணும்
போருல ஜெயிக்கணுண்ணா
நல்ல படவேணும்…!

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *