Month: July 2014

  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    கிரேசி மோகன்

     

    crazy

    “யாரிதுசின் னப்பொண்ணு! யாதுமாகி நின்றிடும்,
    பாரதி கண்ணம்மா போலிருக்கு ! -நேரெதிர்,
    கண்டாயோ கேசவா, கண்ணனில் காளியை !
    விண்டாயே வண்ணத்தில் வார்த்து”….

    “சீட்டிப்பா வாடை, சிமிழ்வாய் சிரிப்புடன்,
    மாட்டிடையன் போட்டியாய் மாதங்கி; -கோட்டினால்,
    கண்ணனைக் காளியைக், கேசவ் அடைத்தனன்,
    வண்ணச் சிறைக்குள் வளைத்து”….கிரேசி மோகன்….

    Share
  • நான் பாடும் முன்னே

     

    இசைக்கவி ரமணன்

     

    உனக்கே உனக்காக  (9)

     

    நான் பாடும் முன்னே

    (பாடல்)

     

    images
    நான் பாடும் முன்னே நீ பறவையாகிறாய்
    நான் தேடும் போதோ தொடு வானமாகிறாய்
    நான் வாடும்போதோ கன்னம் வருடும் தென்றலாகிறாய்
    இமை மூடும்போதோ உற்றுப்பார்க்கும் கண்களாகிறாய்

    நீ பாதையா நான் பயணமா
    நான் பயணமா நீ மலர்களா
    நீ மலர்களா நான் பரிதியா
    நான் பரிதியா நீ வானமா

    உயரே உயரே என்னை ஏற்றி உயரச் செல்லும் பெண்ணே
    உயிரின் நிலைமை முழுதும் மாற்றும் உலகம் காணாத கண்ணே
    மண்ணா விண்ணா சொல்லேன் கண்ணா (பாடும் முன்னே)

    இரு கண்களில் பல கனவுகள்
    பல கனவினில் சில காலைகள்
    சில காலையில் சுப வேளைகள்
    சுப வேளையில் வரும் பாடல்கள்

    பாடல் நடுவே பல்லவி மறந்து சரணம் தேடும் போது
    பனிச்சதங்கையில் பாரிஜாதங்கள் காதில் கேட்காது
    காதில் விழுந்தது போலே உன்முன் (பாடும் முன்னே)

    Share
  • KEPLER, JOHANNES

    Su. Ravi

    This drawing of astronomer KEPLER JOHANNES by me is dedicated to Dr Sesha Srinivasan who contributed a detailed write up on the Astronomer in VALLAMAI.

    We owe a lot to the German Astronomer who brought a paradigmn shift in the history of astronomy – identifying the orbital path of the heavenly bodies as elliptical.

    For paarkka, rasikka…

    572ACFBA-E85F-4DAE-9B56-A89F85168AE2

    Su.Ravi

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

     

    கிரேசி மோகன்

    andal

    கோதைக்குள் கீதை

    “ஆடவரில் உத்தமன், ஆழ்வாரில் உத்தமி,
    பாடவரும் மார்கழி பாசுரத்தால் ,-தேடுவரம்,
    பட்டர்முன் பெண்ணுருவில் போயந்த ரங்கனையே,
    கட்டுறேன் என்றானோ K(சவ்)….!!!!கிரேசி மோகன்….

    ஆடவரில் உத்தமன்-புருஷோத்தமன்….

    Share
  • தாலாட்டும் அன்பினிலே

    இசைக்கவி ரமணன்

     

    உனக்கே உனக்காக  (8)

     

    தாலாட்டும் அன்பினிலே

    (கேட்டு மகிழ)

    woman-poster-GO37

    தாலாட்டும் அன்பினிலே, நின்று
    தள்ளாடும் பூங்கொடியே! தென்றல்
    காலாட்டும் கீற்றினிலே, நீ
    கள்ளூறும் நிலவல்லவலோ!

    சேலாடும் உன் விழியில், நின்று
    நூலாடும் என்னுயிரே! என்னைத்
    தோளோடு நீ அணைத்தால், நான்
    தொல்லைக்குத் தொடுவானே!

    நானென்ன சொல்வேனம்மா? மெளன
    நாதங்கள் பொல்லாதம்மா! நீ
    தேனென்றபின் எனதே என்றபின், இன்னும்
    நீங்காத திரையென்னவோ? மனம்
    நில்லாமல் வலை பின்னவோ?

    தேனூறும் பூவிருக்க, மணம்
    திசையெங்கும் பாய்விரிக்க, இங்கு
    நானோடு நான் துன்பம் தானோடு தான், இதில்
    நாளென்ன பொழுதென்னவோ? என்று
    நான்மட்டும் வலைபின்னவோ?

    பேசாமல் வந்துவிடு! மறு
    பேச்சின்றித் தந்துவிடு! என்னை
    நானாக வாழவிடு, இல்லை
    நீயாக மாற்றிவிடு

     

    படத்திற்கு நன்றி

     

    Share
  • வந்தனமாயிரம் பதமலர் சமர்ப்பணம் நீலாயதாக்ஷி!

    -நாகை வை. ராமஸ்வாமி

    neela

    சுந்தரி, ஷ்யாமளி, மதுர மனோஹரி, ஹ்ருதயேஸ்வரி
    கந்த மாதா, காதம்பரி, கனக தாரேஸ்வரி, காரோணேஸ்வரி
    எந்தனுள்ளம் வந்தமர் பூர்ணேஸ்வரி ஸ்ரீ சக்ரேஸ்வரி
    வந்தனமாயிரம் பதமலர் சமர்ப்பணம் நீலாயதாக்ஷி!

    தந்த முகனும் தம்பியும் தவறா ஆசி தர
    நந்தி வாகனன் காரோணன் நலமுற அருளிட
    புந்தியில் போற்றினனே புன்னகை அரசியே
    சொந்த மெனையேற்று வந்தருள் நல்குவளே!

    சிந்தனை சிதறாது நினதடி போற்றவும்
    வந்தவர் நின் சன்னிதி வளமுடன் மகிழவும்
    பந்தங்கள் சொந்தங்கள் பலவும் பெறவும்
    எந்தனையாண்டு என்றென்றும் காத்திடுவாய்!

    சர்வேஸ்வரப் ப்ரியே, சர்வலோக மாதா
    சர்வோத்தமி, சர்வநாமகான காரணி
    சர்வ பாப நாசினி, சர்வாலங்கார பூஷணி
    சர்வரக்‌ஷகி சர்வமயீ நீலாயதாக்ஷி!

    சர்வத்திலும் நினைக் காண
    சற்குணம் தந்தருள்வாய்
    சர்வ ஜனனமும் நின்னடி போற்றிட
    சர்வ காருண்ய நீலாயதாக்ஷி வரமருள்வாய்!

    Share
  • ஒரே திசை

    -சேசாத்ரி பாஸ்கர்

    எல்லா இடத்திலும் உயிர்
    தாங்கும் மரத்தில்
    தூங்கும்  ஆந்தையில்
    கழுத்து நோக நிற்கும் பறவையில்
    கனம் தாங்காத  புல்லில்
    அந்த நீரின் ஓட்டத்தில்
    குதிக்கும் அலையின் ஆட்டத்தில்
    மிதிபடும் மணலில்
    மற்றும் என் மூச்சில்
    இந்தப் பிரபஞ்ச இயக்கத்தில்
    எல்லாம் ஒரே உயிர்
    உயிர்த்துக்கொண்டே மரிக்கும்
    பிறந்தோர் பயணிப்பர்
    திசை எல்லாம் ஒன்றே!

    Share
  • ஆடிப்பூர நாயகியே!

    பவள சங்கரி

    10410743_284757875043571_8764516859868651313_n

    ஆடிப்பூரத்தில் அங்கமெல்லாம் மின்னும் பொன்னாய்
     ஆடிப்பாடி வருகிறாள் மின்னிடையாள் ஆனந்தமாய்
    கொஞ்சுதமிழும் பஞ்சு மெல்லடியும் பாந்தமாய்
    பொருந்திவர நஞ்சுண்ட கண்டனின் நாயகியாய்
    அபயமளிக்கும் நற்றுணை வேதமே அன்னையாய்
    பட்டொளிவீசும் பரிமளமாய் பயத்தில் பக்கத்துணையாய்
    நித்தமும் நின்னை நினைந்துருகும் வரமருள்வாய்
    வாரணாம்பிகையே! வாயுதேவியே! வாகீசநாயகியே!
    போற்றி போற்றி!! அன்னையே அகிலாண்டநாயகியே!!
    அஞ்சேலெனும் மந்திரமருளும் மாதவச் செல்வியே!!
    வணங்குகிறேன் நிதம் நின்னையே! எனதன்னையே!!

    படத்திற்கு நன்றி

     

    Share
  • சங்கடம் கொள்ளவேண்டாம்!

    -எம்.ஜெயராமசர்மாமெல்பேண்

    சர்க்கரை வியாதி வந்தால்
    சந்தோ
    ஷம் பறந்தே போகும்
    சாப்பாட்டைக்
     கண்டு விட்டால்              sweet
    சலனமே
    மனதில் தோன்றும்!

    எப்பவும் இனிப்பை எண்ணும்
    எதையுமே
    உண்ணப் பார்க்கும்
    அப்படி
    உண்டே விட்டால்
    அதுதொல்லை
    ஆகி நிற்கும்!

    திருமண வீடு சென்றால்
    தித்திப்பு
    நிறைந்தே நிற்கும்
    வகைவகை
    உணவை அங்கே
    வரிசையாய்க்
    கண்கள் காணும்!

    அவையெலாம் உண்ணும் ஆசை
    அளவிலா
    மனத்தை ஆளும்
    நினைவெலாம்
    உணவாய் நிற்கும்
    நிம்மதி
    பறந்தே போகும்!

    கொண்டாட்டம் வந்து விட்டால்
    குதூகலம்
    நிறைந்தே நிற்கும்
    குலோப்ஜான்
    லட்டு எல்லாம்
    குறைவின்றி
    இருக்கு மங்கே!

    நாக்கிலே நீரும் ஊறும்
    நரம்பிலே
    முறுக்கும் ஏறும்
    ஆர்க்குமே
    தெரியா வண்ணம்
    அனைத்தையும்
    தின்னத் தோணும்!

    விரைந்தோடி நிற்கும் வெட்கம்
    விரும்பிமனம்
    உண்ண நிற்கும்
    வேண்டியதை
    உண்டு விட்டு
    விழி
    பிதுங்கி நிற்போமே!

    இனிப்புகள் உள்ளே சென்று
    இரத்தத்தில்
    கலந்து நின்று
    முறைத்துமே
    எம்மைப் பார்க்க
    முகமெலாம்
    கலங்கி நிற்போம்!

    மனைவியும் மகளும் சேர்ந்து
    மங்களம்
    பாடித் தீர்ப்பார்
    மளமள
    வென்று சென்று
    மருந்தினை
    விழுங்கி நிற்பேன்!

    விளம்பரம் ஒன்றைப் பார்த்து
    விரைவுடன்
    படித்து நின்றேன்
    விருப்பமாய்ச்
    செய்தி அங்கே
    விந்தையாய்
    இருந்த தங்கே!

    சர்க்கரை உள்ளோர் எல்லாம்
    சங்கடம்
    கொள்ள வேண்டாம்
    சரியான
    உணவு எல்லாம்
    சந்தையில்
    இருக்கு இப்போ!

    செயற்கையாய் இனிப்புச் சேர்த்து
    தின்பண்டம்
    இருக்கு இப்போ
    வருத்தமே
    படவே வேண்டாம்
    வந்துமே
    வாங்கித் தின்பீர்!

    அளவுடன் உண்ண வேண்டும்
    அதைநிதம்
    பேண வேண்டும்
    அனைவரும்
    மனதில் கொண்டால்
    ஆனந்தம்
    வருமே நாளும்!

    தினமுமே நடந்து சென்றால்
    தீராத
    நோயும் தீரும்
    நடவுங்கள்
    எந்த நாளும்
    நன்மைகள்
    உம்மைச் சேரும்!

    சர்க்கரை வியாதி கண்டு
    சஞ்சலம்
    கொள்ள வேண்டாம்
    சாப்பாடு
    எடுக்கும் போது
    சமமாக
    எடுக்க வேணும்!

    உடற் பயிற்சி செய்திடுங்கள்
    உணவு
    எலாம் மாற்றிடுங்கள்
    மனத்தினிலே
    உறுதி கொண்டு
    மாற்றிடுங்கள்
    பழக்கம் எலாம்!

    சோம்பல் நிலை மாற்றிடுங்கள்
    சுறுசுறுப்பை
    ஏற்றிடுங்கள்
    நாங்கள்
    வாழ வேண்டுமென்று
    நாளும்
    எண்ணி நின்றிடுங்கள்!

    சர்க்கரை வியாதி தன்னைச்
    சலிப்புடன்
    நோக்க வேண்டாம்
    எப்பவும்
    உங்கள் வாழ்வில்
    இனிப்புகள்
    தேவை அன்றோ!

    தப்புடன் இனிப்பை உண்டால்
    தலையிடி
    வந்தே தீரும்
    எப்பவும்
    அளவாய் உண்டால்
    எவர்க்குமே
    விளைவு நன்றே!

    மருந்தினை விருந்தாய் உண்போம்
    விருந்தினை
    மருந்தாய் உண்போம்
    வருந்திநாம்
    நிற்க வேண்டாம்
    வாழ்வெலாம்
    இன்பம் காண்போம்!

    வெளிச்சத்தைக் கொண்டு வந்த
    விளம்பரச்
    செய்தி தன்னால்
    சர்க்கரை
    வியாதி பற்றி
    சங்கடம்
    அகன்றே போச்சு!

    Share
  • அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்! (33)

    அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்! பெரானாக்கான் அருங்காட்சியகம்(2), சிங்கப்பூர்

     

     

    சுபாஷிணி ட்ரெம்மல்

    ​மலேசியா-சிங்கை வாழ் மக்களைத் தவிர ​பெரானாக்கான் சமூகத்தைப் பற்றி ஏனைய பலர் அறிந்திருக்க அதிகம் வாய்ப்பில்லை. இந்தச் சமூகம் ​மலேசியா-சிங்கை கடல் வணிகப் பகுதியை மையமாகக் கொண்ட நிலப்பகுதியில் மட்டுமே அதிகமாக உருவாகி வளர்ந்த ஒரு சமூகம் என்பதே இவர்களின் தனித்துவம்.

    14ம் நூற்றாண்டின் இறுதிக்குப் பின் படிப்படியாக 15ம் நூற்றாண்டில் அன்றைய மலாயாவின் வர்த்தக மையமாக மலாக்கா வளர்ச்சியுற்றது. அரேபிய வணிகர்கள், சீன வணிகர்கள் என இப்பகுதிக்கு வந்து செல்லும் வேற்று நாட்டினர் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கிய காலகட்டமது. சோழ சாம்ராஜ்ஜியம் மலாக்காவுக்கு மேலே வடக்கு மானிலத்தில் கடாரத்தில் மையமிட்டு மலாயா தீபகற்பம் முழுமைக்கும் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக, அதாவது 9ம் நூற்றாண்டு முதல் 10ம் நூற்றாண்டு ஆரம்பம் வரை ஹிந்து சமயப் பின்னனியுடன் அமைந்த ஒரு சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியிருந்தது. இந்தோனேசிய தீவுகளில் ஆட்சி செய்த ஸ்ரீவிஜயா மன்னர்களும் ஹிந்து சமயம் தழுவி ஹிந்து சமய சாம்ராஜ்ஜியத்தை நடத்தி வந்த காலம் அது.

    பினாங்கு, மலாக்கா, சிங்கை ஆகிய பகுதிகளில் பெரானாக்கான் மக்களின் குடியிருப்பைக் காட்டும் வரைபடம் பினாங்கு, மலாக்கா, சிங்கை ஆகிய பகுதிகளில் பெரானாக்கான் மக்களின் குடியிருப்பைக் காட்டும் வரைபடம்

    ஆயினும் 11ம் நூற்றாண்டில் மலாயா தீபகற்பம் வந்த அரேபியர்களின் தாக்கத்தால் மலாயா இஸ்லாமிய நாடாக கொஞ்சம் கொஞ்சமாக மாற்றம் கண்டு கொண்டிருந்தது. கடாரப் பகுதியில் அரச பரம்பரையினர் 12ம் நூற்றாண்டு வாக்கில் இஸ்லாமிய மதத்தைத் தழுவி இஸ்லாமிய சமயம் சார்ந்த அரசாட்சி செலுத்திக் கொண்டிருந்தனர். ஆயினும் அவர்களது ஆட்சி என்பது மலாயா முழுமைக்கும் என்றில்லாது இன்றைய பெர்லிஸ், கெடா, பினாங்கு ஆகிய பகுதிகளில் அடங்கியதாக மட்டுமே இருந்தது.

    15ம் நூற்றாண்டு மலேசிய வரலாற்றில் மிக முக்கியமாகக் கருதப்படுவது. அதுவே ஆங்கிலேய ஆட்சிக்கு முந்தைய ஒரு மலாய் அரசாட்சியின் தொடக்ககாலம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மலாய் ஆட்சிக்கு வித்திட்டவர் பரமேஸ்வரா.

    சிங்கபுரம் என்ற சிங்கப்பூரை ஆட்சி செய்து கொண்டிருந்த ஸ்ரீ மஹாராஜாவிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டு அவரது மகன் பரமேஸ்வரா (1344-1414) தனது ஆட்சியைத் தொடங்கினார். இது நிகழ்ந்த ஆண்டு 1389. அடுத்த பத்து ஆண்டுகளில் இந்தோனேசிய தீவுகளில் ஒன்றான மஜபாஹிட் தீவில் தனியாட்சி செய்து வந்த ஒரு குழு சிங்கப்பூர் தீவைக் கைப்பற்ற செய்த முயற்சியில் அத்தீவு அவர்கள் வசம் விழ, பரமேஸ்வரா தனது ஆதரவாளர்கள் சிலருடன் தப்பித்து மலாயாவின் மெர்போக் நதிக்கரைக்கு அருகில் உள்ள ஒரு பகுதிக்கு கடல் மார்க்கமாக வந்து சேர்கின்றார். மலாக்கா பசுமை வளம் நிறைந்த கடற்கரை பகுதி நகரம். இத்தகைய அருமையான பகுதியில் தலைமைத்துவம் இன்றி இருக்கும் அப்பகுதிக்கு தானே தன்னை தலைவனாக்கிக் கொண்டு பின்னர் மன்னராக முடிசூட்டிக் கொண்டு அங்கே மலாக்காவின் அரச பரம்பரைக்கு ஒரு தொடக்கத்தை வைக்கின்றார் பரமேஸ்வரா

    பரமேஸ்வரா பின்னர் வணிக நோக்கத்துடன் மலாக்கா வரும் பெர்ஷிய குழுவினருடன் அணுக்கமான உறவினை வளர்க்கும் பொருட்டு பெர்ஷிய இளவரசி ஒருவரை மணந்து பின்னர் இஸ்லாமிய மதத்தையும் தழுவுகின்றார். தன் பெயரையும் ஸ்ரீ இஷ்கந்தர் ஷா என மாற்றிக் கொள்கின்றார். இதுவே மலாயா அதிகாரப்பூர்வமாக ஒரு இஸ்லாமிய மதம் சார்ந்த நாடாக உருவாகக் காரணமாக அமைந்த முக்கியச் சம்பவம்.

    அதன் பின்னர் சீனாவுடன் சிறந்த வர்த்தகத் தொடர்பை ஏற்படுத்திக் கொள்கிறார் பரமேஸ்வரா. இதன் பொருட்டு சீனாவில் ஒரு பகுதியின் அரச குடும்பத்துடன் தொடர்பு வைத்துக் கொண்டு இளவரசி ஹங் லீ போவை திருமணம் செய்கிறார். சீனாவிற்கும் வர்த்தகத்தை விரிவாக்கும் பொருட்டு கடல் பயணம் செய்தவர் இவர்.

    இக்கால கட்டத்தில் சீனாவிலிருந்து மலாக்காவிற்கு வந்து சேரும் வர்த்தகக் குழுவினரில் பலர் உள்ளூரிலேயே தங்கிவிட அவர்களில் பலரும் படிப்படியாக உள்ளூர் மக்களை மணந்து அங்கேயே ஒரு புதிய இன உருவாக்கத்திற்கு அடித்தளம் அமைக்கின்றனர். இதுவே பெரானாக்கான் சமூகம் உருவான சரித்திரம்.

    ​பெரானாக்கான் இனமக்கள் - ஒரு குடும்பப் படம்: பாரம்பரிய உடையில்
    ​பெரானாக்கான் இனமக்கள் – ஒரு குடும்பப் படம்: பாரம்பரிய உடையில்

    இப்படி உருவான பெரானாக்கன் சமூகத்தினர் குறிப்பாக மலாக்காவிலும் அதற்கடுத்த வகையில் சிங்கையிலும் பினாங்கிலும் மட்டுமே குடியிருந்தனர். கடல் வணிகம் என்பது முக்கியமாக மையம் கொண்டிருந்த துறைமுகப் பகுதிகள் இவை மூன்றும் என்பதை இங்கு குறிப்பிட வேண்டும். மலாக்கா அரச குடும்பத்தின்அரது ஆதரவும் இம்மக்களுக்கு அமைந்திருந்தது. அடிப்படையிலேயே வர்த்தகமே இச்சமூகத்தினரின் அடிப்படை தொழிலாக அமைந்ததால் இச்சமூகத்தினர் ஆரம்ப காலம் தொட்டு செல்வச் செழிப்புடன் வாழும் சமூகமாகத் திகழ்கின்றனர்.

    சீன ஹொக்கிய சமூகம் மலாய் இன மக்களோடு திருமண உறவின் வழி கலந்ததின் விளைவாக உணவு, உடை, பேச்சு மொழி ஆகியன மலாய் அடிப்படையிலும் மருத்துவம், பெயர், கலாச்சாரம், பண்பாடு , திருவிழாக்கள் ஆகியன சீன சமூகத்தின் வழக்கத்தின் அடிப்படையிலும் அமைந்திருப்பவை. இவர்களது சமயம் சீனாவில் பாரம்பரியமாக இவரகள் வழிபாட்டு சமயமாக அமைந்த தாவோயிஸம். சிலர் புத்த மத வழிபாடும், கிறிஸ்துவர்களாக மதம் மாறியோர் சிலர் கிறிஸ்துவ மதத்தைப் பின்பற்றுவோராகவும் இருக்கின்றனர். திருமணச் சடங்குகள் எனும் போது அது சீன பாரம்பரியத் திருமணச் சடங்கு முறையை அடிப்படையாகக் கொண்டதாகவே அமைந்துள்ளது.

    ​சிங்கையில் உள்ள பெரானாக்கான் அருங்காட்சியகம் செல்லும் போது படங்களுடன் இம்மக்களைப் பற்றிய மேலும் பல தகவல்களை வருகையாளர்கள் அறிந்து கொள்ளலாம். இந்த அருங்காட்சியகம் வாரத்தின் ஏழு நாட்களும் திறந்திருக்கும். இந்த அருங்காட்சியகத்தின் அதிகாரப்பூர்வ வலைப்பக்கத்தை இங்கு காணலாம் http://www.peranakanmuseum.org.sg/. சிங்கை செல்பவர்கள் சென்று கண்டு வர வேண்டிய அருங்காட்சியகங்களின் பட்டியலில் இடம்பெற வேண்டிய ஒரு அருங்காட்சியகம் இது.

    இத்தொடரின் எனது அடுத்த பதிவில் வேறொரு நாட்டில் மற்றுமொரு அருங்காட்சியகத்திற்கு உங்களை அழைத்துச் செல்கிறேன். காத்திருங்கள்..!

    தொடரும்

    Share
  • ஒரு பஸ் பயணம்

    — மாதவ. பூவராக மூர்த்தி.

    bus

    “அப்பா டிரெயின்ல தட்கால் கூட கிடைக்கல உனக்கு ஸ்லீப்பர் பஸ்ல டிக்கட் ஆன் லைன்ல புக் பண்ணிடறேன்” என்றான் என் மகன். வேறு வழியில்லை மறுநாள் சென்னையில் ஒரு படப்பிடிப்பிற்கு வந்தாக வேண்டிய கட்டாயம். அப்பர் பெர்த் ரெயிலைவிட ஏ/சி பஸ் மேல் என்று சரியென்றேன். எனக்கு பொதுவாக பயணம் என்றால் பயம் அதிலும் பஸ் என்றால் இன்னும் பயம். நல்ல சாலைகள், நல்ல பஸ் நல்ல இருக்கைகள் எல்லாம் சரி எங்கேயும் எப்போதும் படமெல்லாம் பார்த்து மனதில் இன்னும் நடுக்கம்.

    பஸ்ஸூக்கும் டிரெயினுக்கும் இன்னொரு வித்யாசம் டிரெயினில் டிரைவர் நம் கண்ணுக்கு விழுவதில்லை. பஸ்ஸில் நாம் காணக் கிடைக்கிறார். டிரெயினில் எப்போதாவதுதான் நம் லைனிலே  டிரெயின் வரும அபாயம் உண்டு.  பஸ்ஸில் எந்த பக்கத்திலிருந்தும் பஸ், லாரி, கார் எதுவும் வரும். சில சமயங்களில் நம் டிரைவர் பயணிகள் தூங்கும்போது நாம் கொஞ்சம் தூங்கினால் என்ன என்று கண் அசரும் அபாயம் நான் சில முறை பார்த்திருக்கிறேன். இரவு பகல் மழை வெயில் பாராமல் எப்படி பட்ட வண்டியை கொடுத்தாலும் அந்த மனித தெய்வங்களை குறை கூற இந்த பதிவு இல்லை. கொஞ்சம் வார்ம் அப் பண்ண ஒரு இரண்டு பாரா எழுதினேன்.

    ஆனால் இந்த சிட்டி பஸ் களிலும் வெளியூர்களிலும் சமீப காலங்களில் நான் காணும் மிகப் பெரிய வேற்றுமைகளை உங்களிடம் பகிர்ந்து கொள்வதுதான் இந்த பதிவின் நோக்கம்.

    பிராட்வே, மயிலாப்பூர் டேங், தி. நகர், வடபழனி ஐயப்பந்தாங்கல் இப்படி பஸ் புறப்படும் இடங்களில் நீங்கள் பயணத்தைத் துவக்கியிருந்து கவனித்திருந்தால் அந்த மாறுதல் தெரியும். ஒரு 5B 12B 17M 18K 12 13 45B 5E இப்படி எதாவது பஸ் என்று வைத்துக் கொள்ளுங்கள்.ஒரே நம்பரில் இரண்டு பஸ்கள் நிற்கும். நாம் பூவா தலையா போட்டு ஒன்று முதலில் புறப்படும் என்று நம்பி அதில் ஏறி அமர்வோம். நம்மைப் போல் பலர் அந்த வண்டியில் இருப்பார்கள். நம் கண் எதிரில் டிரைவர் கண்டக்டர்கள் நின்று பேசிக்கொண்டிருப்பார்கள்.

    வரும்போது வரட்டும் என்று நாம் உட்கார்ந்திருக்கும் போது எங்கிருந்தோ ஒரு டிரைவர் வந்து நாம் உட்காராத பஸ்ஸில் ஏறி உடன் அதனை இயக்கி வேகமாக புறப்பட்டுவிடுவார். நாம் பிடித்த ஜன்னல் சீட்டை தியாகம் பண்ணிவிட்டு தலை தெறிக்க ஓடி கையிலிருந்த பொருட்களை ஞாபகமாக எடுத்தோமோ என்று பார்த்து ஏறி இடத்தில் உட்காருவோம். கண்டக்டர் வந்தாரா பஸ்ஸில் இருக்காரா ரைட் என்று விசில் கொடுக்கிறாரா என்பதெல்லாம் இப்போது டிரைவர் கவலைப்படுவதில்லை. ஒரு உலுக்கு உலுக்கி பஸ் எடுத்து விடுவார். ஏறினவரை லாபம்தான்.

    கண்டக்டரும் நான் கவலைப்படுகிற அளவு கவலைப்படுவதாக தெரியவில்லை. கண்டக்டர் டிக்கட் , சில்லறை இருக்கா, பத்துரூபா, அம்பது ரூபா நூறு ரூபாயா எடுத்துகிட்டு எல்லாரும் வந்து உட்கார்ந்திடுங்க, போவாது, இறங்கு, இடம் இருக்குல்ல முன்ன போ. இதை தவிர யாரிடமும் எதுவும் பேசுவதுமில்லை பயணிகளும் அவரிடம் எதுவும் கேட்பதுவுமில்லை. அவரவர்களுக்கு காதில் சொருகியிருக்கும் ஹியர் போனில் பாட்டு கேட்பதற்கும், கடலைப் போடுவதற்கும், போனில் பொய் சொல்வதற்கும்தான்  நேரம் சரியாக இருக்கிறதே.

    சென்னையில் அரசு பஸ்தான் ஒரே ஒரு தனியார் பஸ் 54 பூந்தமல்லி –பிராட்வே. நான் தனியார் பஸ் கோலோச்சிய காலத்திற்கு உங்களை அழைத்துச் செல்ல விரும்புகிறேன். என்னோடு வாருங்கள். இடம் மாயவரம். அந்த காலத்தில்  ஶ்ரீராமவிலாஸ் (S.R.V.S) கும்பகோணத்திலிருந்து இயக்கப்பட்டது. அடுத்தது சத்தி விலாஸ் பொரையார், ராமன் & ராமன் (கும்பகோணம்) . இந்த ராமன் ராமன் கம்பெனி பஸ்களில் 54 இருந்தது. ஒவ்வொரு பஸ்ஸூக்கும் ஒரு ராமன் பெயர் கல்யாண ராமன், கோதண்ட ராமன், சீதா ராமன். கடைசி பஸ் மட்டும். ராமனில்லை தாசரதி.

    அது ஒரு கட்டுக்கோப்பான காலம். மாயவரத்திலிருந்து கும்பகோணம், சிதம்பரம் புதுப்பட்டினம் இப்படி நிறைய ஊர்களுக்கு அந்த பஸ் செல்லும். என்னால் மறக்க முடியாதவர் டிரைவர் சம்பந்தம் பிள்ளை. நான் சிறுவனாக அவரை சந்தித்த போது அவர் நாற்பதுகளில் இருப்பார். அப்போது காக்கி அரை டிராயர் தான் காக்கி சட்டைதான் டிரைவர் யூனிபார்ம். கம்பீரமாக இருப்பார். திறமையாக ஓட்டுவார்.

    கண்டக்டரும் ரொம்ப திறமையாக இருப்பார். டிக்கட் போடுவதே ஒரு அழகு. அடியில் அலுமினியப் பலகையில் சீட்டு புக் இருக்கும். கார்பன் பேப்பரை இரண்டு பக்கமும் வைத்து பென்சிலால் அல்லது பால் பென்னால் எழுதி டிக்கட் போட்டு கிழித்துக் கொடுப்பார். பஸ் புறப்படுவத்ற்கு முன் டிக்கட் போடுவார். சின்னப் பையன் என்றால் அரைடிக்கட் தீர்மானம் பண்ண படியில் ஒரு உயரம் இருக்கும் அதன் அருகில் நிற்க வைப்பார். அப்போதெல்லாம் ½ டிக்கட் பத்து வயது வரைக்கும். உயரம் முதலில் தீர்மானிக்கும். நான் என் உயரத்தினால் 14 வயது வரை ½ டிக்கட் வாங்கி பயணித்திருக்கிறேன். பல சமயம் தம்பி அந்த அம்மா பக்கத்தில உட்காருங்க என்பார். நான் வெட்கத்தோடு போய் உட்காருவேன்.

    புறப்படும் நேரம் வரும்போது சம்பந்தம் வருவார். வண்டியில் கம்பீரமாக உட்கார்ந்து கொண்டு  டவலால் முகத்தைத் துடைத்துக் கொள்வார். பொறுமையாக உட்காருவார். போலாமா தம்பி என்று கண்டக்டரைக் கேட்பார். போலாண்ணே என்பார். பிறகு தான் வண்டி எடுப்பார். விசிலுக்கு கட்டுப்பட்டு பஸ் ஓட்டுவார்.

    கண்டக்டர் பயணிகளோடு உரையாடி வருவார். நிறைய வேடிக்கைகள் நடக்கும். யாராவது டிக்கட் இன்னும் வாங்கணுமா என்பார். எல்லாரும் பேசாமல் இருப்பார்கள். தலையை எண்ணுவார். இன்வாய்ஸ் சரி பார்ப்பார். வண்டியை ஓரங்கட்டுங்கண்ணே என்பார். வண்டி ஓரமாக நிறுத்தப் படும். கண்டக்டர் எல்லாரிடமும் சீட்டைக் குடுங்க என்று ஒவ்வொருவராக கேட்டுக் கொண்டுவருவார். இருபது பேருக்கு மேல் செக் பண்ணினபிறகு ஜன்னல் ஓரம் ஒருவர் தூங்கிக் கொண்டிருப்பார். ஐயா டிக்கட் என்றவுடன் அவர் தூங்கி எழுந்து வைத்தீஸ்வரன் கோயில் ஒண்ணு குடுங்க என்று இப்போதுதான் கண்டக்டர் கேட்பது போல் டிக்கட்டுக்குப் பணம் கொடுப்பார்.

    கண்டக்டர் கோபம் வந்தாலும் ஏன்யா டிக்கட் வாங்கிட்டு  தூங்க கூடாதா என்பார். போலாண்ணே என்று விசில் கொடுத்துவிட்டு டிக்கட் கொடுப்பார். பஸ் மறுபடியும் பயணம் தொடரும். மாயவரம் சீர்காழி பஸ் சாலை வேடிக்கையாக இருக்கும். அந்த காலத்தில் சோழ நாட்டில் எதிரிகள் படை எடுக்க வந்தால் நேர் பாதையாக இருந்தால் வேகமாக முன்னேறுவார்கள் என்பதால் வளைந்து வளைந்து சாலைகள் இருக்கும். இன்னும் இன்றும் அப்படியே இருக்கிறது. அதனால் வண்டி ஓட்டுவது கஷ்டம். பஸ் ஸ்டாப் ஊர் பெயரும் இருக்கும். சில இடங்களில் ஒத்தகடை, பஞ்சாயத்து போர்டு, மதகடி, புளியந்தோப்பு, அய்யனார் கோவில், சாவடி, ஆத்துப் பாலம் இப்படி.

    அதுவுமில்லாமல் புதுசாக வந்தவர்கள் ஊரில் பெரிய புள்ளிகளைச் சொன்னால் தலைவர் ஐயா வீட்டிற்கு போகணும் என்றால் ஓத்த கடையில இறங்கி வடக்கே போங்க தோப்புக்கு அடுத்த தெரு என்பார். சில சமயம் பயணிகளை பாத்து நாளாயிட்டு ஊர்ல இல்லையா என்பார்.

    அவர்களும் அவர்கள் வீட்டு வைபவங்களுக்கு அழைப்பிதழ் கொடுப்பார்கள். சில பேர் தீபாவளிக்கு பொங்கலுக்கும் வேஷ்டி சட்டை வாங்கி கொடுப்பார்கள். கண்டக்டர் வெற்றிலைப் பாக்கு புகையிலை போடுவார்.

    இன்னொரு காட்சி டிரைவர் கண்டக்டர் வீடுகள் அவர்கள் பாதையில் இருக்கும். மதிய சாப்பாடு அவர்கள் வீட்டுக்கு அருகில் நிறுத்தி வீட்டிலிருந்து மனைவியோ மகனோ மகளோ கொண்டுவந்து கொடுப்பார்கள்.

    திருமண வீடுகளுக்கு வரும்போது வேஷ்டி சட்டையில் வருவார்கள். இவரை எங்கோ பார்த்த மாதிரி இருக்கும். பிறகுதான் அவருக்கு காக்கி டிராயர் சட்டைப் போட்ட பிறகுதான் டிரைவர் கண்டக்டர் என்று மனதிற்குள் பளிச்சிடும்.

    பஸ்களும் முடிந்த வரை சரியான அளவுதான் டிக்கட் கொடுப்பார். ½ டிக்கட் கூட அதிகம் கொடுக்க மாட்டார்கள். அடுத்த வண்டியில வாங்க போலாம் ரைட்டு என்று விசில் அடிப்பார். பஸ்கள் பொதுவாக அசோக் லைலெண்ட், ஃபார்கோ, டாஜ் இருக்கும் டாடா பின்னாளில் வந்த்து. மாயவரத்தில் 1 நம்பர் டாட  பஸ் முன் பக்கம் கொஞ்சம் புடைத்துக் கொண்டிருக்க்கும். நாங்கள் அதை தொப்பை பஸ் என்போம். டிரைவர் நாகராஜன் ரொம்ப நாள் அந்த வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தார்.

    கண்டக்டர்கள் ஓயாமல் பேசிக்கொண்டு வருவார்கள். ஒரு சிலர் வேடிக்கையாக பேசி பயணக் களைப்பில்லாமல் செய்வார்கள். ஒரு கண்டக்டர் எவ்வளவு கூட்டமிருந்தாலும் டிக்கட் கொடுப்பார். டிக்கட் வாங்கிக்கிங்க. அம்மா வாங்கராங்கனு ஐயா சும்மா இருந்துடுவார், ஐயா வாங்கிடுவாருன்னு அம்மா சும்மா இருந்துடுவாங்க. கேளுங்க கேட்டு வாங்கிடுங்க. செக்கர் வந்தா மாட்டிகிடுவீங்க என்பார். அம்மா ஏற பக்கம் ஐயா ஏறாதீங்க ஐயா ஏற பக்கம் அம்மா ஏறாதீங்க என்பார். கடலங்குடி வரை செல்லும் 1 நெம்பர் பஸ்ஸில் ஒரு இளைஞர் கண்டக்டர். அவர் மிக வேடிக்கையாக பேசுவார். நல்ல தமிழ் தெரிந்தாலும் கிராமத்து மக்கள் பயணம் செய்யும் வழித்தடம் என்பதால் அவர்கள் பாஷையில் பேசுவார். நிறுத்தங்கள் பெயரை சொல்வதில் வேடிக்கையாக இருக்கும். ஆ தேரடி இருக்கா இறங்கு கைவிடு முன்பக்கம் பாத்து குதி, மதுவு கொண்டல் மதுவு, இந்தா ஏறு என்னா வேடிக்கை. போவாது கையை விடு. யாருய்யா புகையிலை துப்பறது வண்டி நிப்பாட்டினப் பிறகு துப்பு. இப்படி வழி முழுக்க கமெண்ட் அறிவுப்பும், அன்பும் கிண்டலும் கேலியும் கலந்து தருவார். திடீரென்று விசில் இல்லாமல் வாயாலே குருவி மாதிரி விசில் அடிப்பார். பணியில் இல்லாத நேரம் அவர் சாதாரணமாக பேசுவார். விநோதமான மனிதர். இன்னும் என் நினைவில் இருப்பவர். இப்போது அவருக்கு வயது எழுபதுக்கு மேல் இருக்கும்.

    கல்லூரி பகுதிக்கு செல்லும் டவுன் பஸ் பயணிகளும் டிரைவர் கண்டக்டர்களுக்கும் தினம் சண்டைதான். இருந்தாலும் மாணவர்கள் அவர்களுக்கு கட்டுப் பட்டு நடப்பார்கள். டிரைவர்கள் முடிந்த வரை இடமிருந்தால் ஸ்டாபிங்க் இல்லாத இடத்தில் கூட நிறுத்தி ஏற்றிக் கொள்வார்கள். வழக்கமாக வருபவர்களிடம் ஒரு நட்பும் நெருக்கமும் இருக்கும்.

    இப்போது அதையெல்லாம் நாம் இழந்து விட்டோம். இருந்தாலும் இன்னும் ஒரு சிலர் அதையெல்லாம் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். நான் எங்கள் வீட்டில் ஏறும் 5E வரும். பல வருடங்களாக அந்த பகுதியில் இருந்து பஸ்ஸில் பயணம் செய்வதால் ஒரு நல்ல டிரைவர் நண்பரை கொடுத்திருக்கிறது. அவர் திரு ஆறுமுகம். அவர் மத்யான நேரத்தில் வீட்டில் இருக்கும்போது என் தொலைக்காட்சி சீரியல்கள் பார்த்திருப்பார் போல நான் பஸ் ஏறிய உடன் வாங்க ஸார் எங்க இந்த நேரத்துல? என்பார். நல்லா நடிக்கிறீங்க. உட்காருங்க என்று இடம் கொடுத்து பேசிக்கொண்டிருப்பார். நான் வேறு பஸ்ஸூக்கு நின்றால் அவர் டூட்டியில் வந்தால் வணக்கம் சொல்வார்.

    இப்போது ஆயிரம் ரூபாய் டிக்கட் மாதாந்திர சலுகை கட்டணம் வாங்கியிருக்கிறேன். அதனால் கண்டக்டரிடம் பேசும் அவசியம் இல்லை. சில்லறை பிரச்னைகள் இல்லை. சில சமயம் பாஸ் என்று கை காட்டினால் என்ன பாஸ் காட்டுங்க என்பார்கள். காட்டிவிட்டு பயணம் தொடரலாம். நிறைய பஸ்கள், நிறைய வசதி. ஆனால் நெருக்கம் இல்லை. எல்லாம் மாறிவிட்டது. இது மட்டும் மாறாமல் இருக்குமா?

    அடுத்த முறை பஸ் பயணத்தில் என்னை நினைத்துக் கொள்ளுங்கள் உங்களுக்கு நினைவும் நேரமும் இருந்தால்.

    படம் உதவிக்கு நன்றி: http://www.skyscrapercity.com/showthread.php?t=907864&page=1668

    Share
  • காற்று வாங்கப் போனேன் (26)

    கே.ரவி

    “புரியுது தம்பி. நளவெண்பா, முத்தொள்ளாயிரம், கலிங்கத்துப் பரணி, பாரதிதாசன் என்று தொடங்கி, ஷெல்லி, கீட்ஸ், பைரன், வொர்ட்ஸ்வொர்த், கோல்ரிட்ஜ் போன்ற ஆங்கிலக் கவிஞர்களின் படைப்புகளில் தோய்ந்து, நா.பா., ஒளவை நடராஜன் போன்ற சமகாலத்து இலக்கிய ரசிகர்களால் செப்பனிடப்பட்டு, சுரதா, முருகுசுந்தரம் போன்ற தற்காலக் கவிஞர்களாலும் பாதிக்கப்பட்டு உன் கவிதை உருப்பெற்று, வளர்ந்தது என்று…..” சிகாமணி முடிக்குமுன் நான் குறுக்கிட்டேன்: “மிக முக்கியமானதை விட்டு விட்டாயே சிகா, தண்டமிழ்க் கொண்டலால் தட்டி எழுப்பப்பட்டு, பாரதியால் தடுத்தாட்கொள்ளப்பட்டு!”

    “மறக்கலே தம்பி. நான் அதுக்கு வரதுக்குள்ள ஒனக்குப் பொறுக்கலே, அவசரம்” என்றான் சிகா.

    “அது சரி, முன்னே அண்ணே என்றாய், இப்பொழுது தம்பி என்கிறாயே?” கேட்டேன்.

    சிகா சொன்னான்: “நீதான் பாடிட்டியே, எதைநான் முதுமை என்பேன், இதைப்போய் இளமை என்றேன், என்று.”

    என் துட்டையே எனக்குத் திருப்பித் தருகிறான், சிகாமணி.

    எப்படியோ, பலமுனைத் தாக்குதல்களுக்கு இடையில், வளைந்து, நெளிந்து, வளர்ந்து என் கவிதைச் சுடர் அணையாமல் பிரகாசித்துக் கொண்டிருந்தது.

    திருமணம் ஆனவுடன், நான் சட்டம் படித்துக் கொண்டே ஒரு பணியிலும் இருந்தேன். வேலைப் பளு அதிகம். நேரமும் கிடைக்கவில்லை. இருந்தாலும் நேரம் கிடைத்த போதெல்லாம் ஷோபனாவுடன் கவிதைகளைப் பகிர்ந்து கொண்டது மட்டுமின்றி, அவளுடன் சேர்ந்து அமர்ந்து கவிதை யோகத்தில் ஈடுபட்டேன். ஆம், அவள் வீணை வாசிப்பாள். அதற்கு ஏற்ப நான் பாடுவேன். அப்படி வந்த சில பாடல்களில் சில இன்னும் நினைவில் உள்ளன. 1974-75 ஆண்டுகளில் வந்தவொரு பாடல்:

    shoba2

    யாழில் மிதக்கும் விரல்களோ

    தண்ணீரில் தளும்பும் நிலவின் துகள்களோ

    யாழில் மிதக்கும் விரல்களோ

    உனது பார்வை எனது நெஞ்சில்

    ஒலியும் ஒளியும் சேர்க்குமோ

    அனிச்ச மலரின் அருகில் வந்த தென்றலோ

    பனிசுமந்த நதிவிழுந்த சாரலோ

    உன்கரங்கள் தீண்டும் போது என்வதனம்

    குழையும் சிலிர்க்கும் காதலோ

    யாழில் மிதக்கும் விரல்களோ

    விண்மீன்கள் தூளாகி விழுமொலியோ

    கடலிசையில் மனமயங்கிக் கருமேகக் கூட்டங்கள் முறியும் ஒலியோ

    உன்

    சதங்கையோடென் இதயமும்

    துடிக்கும் துவளும் பாவமோ

    யாழில் மிதக்கும் விரல்களோ

    அந்தப் பாடல் வந்த நேரம், தொலைக்காட்சியில் ‘ஒலியும் ஒளியும்’ என்ற நிகழ்ச்சி வரத்தொடங்காத காலம்!

    இன்னொரு பாடல், சற்று வினோதமான சூழ்நிலையில் பிறந்தது. திரைப்படக் காட்சிபோல் ஒரு சூழ்நிலையைக் கற்பித்துக் கொண்டு அந்தச் சூழ்நிலையில் பாடுவதற்கு ஏற்ற பாடலாக ஏதேனும் எழுதிப் பாடுவது என்று ஷோபனாவும் நானும் முடிவு செய்தோம். காதலன், காதலி அல்லது கணவன், மனைவி இடையே சின்ன சின்ன கருத்து வேற்றுமைகள் வந்தாலும் அவை காதலுக்குக் குறுக்கே வரத் தேவையில்லை என்பதுபோல் பாடல் அமைய வேண்டும் என்று திட்டமிட்டோம். ஷோபனாவிடம், “ஏதாவது ஒரு ராகத்தை வீணையில் மீட்டு” என்று சொன்னேன். திடீரென்று ஒரு பல்லவி தோன்றியது.

    ஆரோகணம் அவரோகணம்

    வேறாக இருந்தாலும் விளைவாகும் ஒரு ராகம் சுகமே தரும்

    ஆரோகணத்தில் வரும் எந்த ஸ்வரமும், அவரோகணத்தில் வராத வண்ணம், ஆரோகணமும், அவரோகணமும் முற்றிலும் வேறாக இருப்பதாக அமைந்த ஒரு ராகத்தில் ஷோபனா அந்தப் பல்லவியை வீணையில் வாசித்ததும் நான் நெகிழ்ந்து போனேன்.

    பாடல் தொடர்ந்தது:

    மாறாத இருட்டுக்கு மடியைக் கொடுத்தாலும்

    நீராகி விடும் போது நிலம் வாழ்த்தும் கருமேகம்

    போல் வந்திடும் ஊடற்களம்

    போதென்ற மயல்சாய்ந்து நிலவென்ற பூவந்து கூடல்தரும்

    ஆரோகணம் அவரோகணம்

    வேறாக இருந்தாலும் விளைவாகும் ஒரு ராகம் சுகமே தரும்

    ravi

    ஷோபனாவுக்கும் எனக்கும் இடையில் எந்தக் கருத்து வேறுபாடு வந்தாலும், நிறைய வரும், இந்தப் பாடலைத்தான் நினைத்துக் கொள்வேன். “காதலர் இருவர் கருத்தொருமித்து” என்றெல்லாம் சொல்லப்பட்டாலும், கருத்துக்கும் காதலுக்கும் சம்பந்தம் இருப்பதாகத் தோன்றவில்லை. எப்படிக் கருத்துக்கும், கவிதைக்கும் சம்பந்தம் கிடையாதோ அப்படித்தான் கருத்தும் காதலும்.

    இப்படி இசையும் கவிதையுமாய்க் கலந்து என் வாழ்க்கை சென்று கொண்டிருந்த காலக் கட்டத்தில், சில ஆண்டுகளுக்கு முன் சந்தித்துப் பிரிந்துவிட்ட நண்பன் வ.வே.சு. மீண்டும் சென்னைக்கே வந்து சேர்ந்ததால் எங்கள் தொடர்பு நெருங்கிய நட்பாக வளர்ந்து என் இசையார்வத்தை மேலும் தூண்டிய செய்தியை முன்பே சொல்லிவிட்டேன்.

    அதற்கு ஆறேழு ஆண்டுகளுக்கு முன், அதாவது, 1966-67 ஆண்டுகளில் வானொலியில், மன்சாஹே கீத், மனோரஞ்சன் நிகழ்சிகளில் தினம் தவறாமல் நான் கேட்ட பழைய ஹிந்திப் பாடல்களே என் கொஞ்ச நஞ்ச இசை ஞானத்துக்கும் முழுப்பொறுப்பு. ஓ.பி.நய்யர், நெளஷத், மதன்மோஹன், சலீல் செளத்ரி, சங்கர் ஜெய்கிஷன் போன்ற இசை மேதைகளே என் குருநாதர்கள்.

    ஏற்கனவே சொன்னதுபோல் பள்ளியில் அரங்கேறிய நாட்டிய நாடகப் பாடல்களால் நான் பெற்ற இசையனுபவங்கள், ஹிந்தித் திரைப் பாடல்களைத் தினமும் கேட்டு லயித்த ரசனை, வ.வே.சு.வின் நட்பு, எல்லாவற்றுக்கும் மேல் பாரதியின் இசைப் பாடல்களின் தாக்கம், இவற்றோடு ஷோபனாவின் இசைத் தேர்ச்சியால் கிடைத்த ராகப் பயிற்சி, எல்லாம் கலந்து, இசையையும், கவிதையையும் என் நெஞ்சின் இருகண்களாகத் திறந்து விட்டன.

    “இரண்டு கண்கள் இரண்டு காட்சி காண முடியுமா” என்று கவிஞர் கேட்டதுபோல், இசை, கவிதை ஆகிய என்னிரண்டு அகக்கண்களும் இணைவாகவே இயங்கின. என் கவிதைகளில் பெரும்பாலானவை மெட்டோடும், தாளக் கட்டோடும் பிறந்தன. பின்னணி இசையும் கூடவே ஒலிக்கும். எப்பொழுதும் என் மனத்தின் ஓரிழையில், அதாவது, ஒரு சேனலில், ஏதாவது ஓர் இசைப்பாடல் உதித்து, ஒலித்துக் கொண்டே இருக்கும். ‘எப்பொழுதும்’ என்றால் தூங்கும் போதும் என்று கூட அர்த்தம் கொள்ளலாம். நிறைய பாடல்கள் உறக்கத்தில் உதித்துள்ளன. சில பாடல்கள் துயில் கலைந்ததும் மறந்து போகும். பிறகு, பல நாட்கள், அல்லது ஆண்டுகள் கழித்து நினைவுக்கு வரும். என் கவிதைகளில் பல கவிதைகளைப் பாடிப் பாடிப் பல மாதங்களுக்குப் பிறகே ஏதாவது துண்டுக் காகிதத்தில் எழுதி வைத்ததும் உண்டு; தொலைத்ததும் உண்டு.

    “போதுமய்யா உன் சுய புராணம்” என்று அலுத்துக் கொண்ட சிகாவை அடக்குகிறேன்: ஏம்பா, இந்தத் தொடரே என் சுய புராணம் தானேப்பா!

    கவிதை எப்போது உதிக்கும், எப்போது சொற்களாக உருவெடுத்து வெளிப்படும் என்று என்னால் முன்கூட்டிச் சொல்லவே முடியாது.

    சில நிகழ்சிகளை மட்டும் சொல்கிறேன்.

    1988-ஆம் ஆண்டில் ஒருநாள், சென்னை உயர்நீதி மன்றத்தில் அன்றைய நீதியரசர் சாமிக்கண்ணு அவர்களுடைய மன்றில் அமர்ந்திருக்கிறேன். என் வழக்குக்கு முந்தைய வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. மணி சுமார் பகல் பன்னிரண்டரை இருக்கக் கூடும். பேசிக் கொண்டிருந்த வழக்குரைஞரின் இளவர், அதாவது, ஜூனியர் வழக்கறிஞரிடம் அவருடைய சீனியரின் வாதம் இன்னும் எவ்வளவு நேரம் நடக்கும் என்று மெல்ல வினவுகிறேன். பகல் இடைவேளை வரைக்கும் போகும் என்று அவர் சொன்னதும், ஓ அப்படியானால், நான் பிற்பகல் வந்தால் போதுமோ என்று கேட்கிறேன். “பிற்பகல் நீதிமன்ற அமர்வு கிடையாது, ஏனென்றால் அன்று சிவன் ராத்திரி என்று அவர் பதில் சொன்னதுதான் தெரியும், உடனே, ‘சிவன்’ என்ற சொல்லில் இருந்து ஒரு மின்னல் வெடித்துச் சிதறி என் அகத்திரையைத் தாக்குகிறது. கடகடவென்று பாடல்கள் நெஞ்சில் பெருக்கெடுக்க, எதிரே இருந்த காஸ் லிஸ்ட், அதாவது, வழக்குப் பட்டியல் அச்சாகித் தினசரி வருகின்ற தாளின் பின்புறத்தில் கிறுக்குகிறேன்.

    ஆசையில் அலைந்து கெட்டேன் அனுபவம் பழுது பட்டேன்

    ஓசையில் உழன்று நொந்தேன் ஒருகணம் உனைநினைந்தேன்

    நீசனென் றெள்ளிடாமல் நீயெனைத் தேடி வந்தாய்

    ஈசனே எம்பிரானே என்னை ஆளுடைய கோவே

    மொத்தம் பன்னிரண்டு பாடல்கள். எழுதி முடித்து, நிமிர்ந்து பார்க்கிறேன், வழக்கு மன்றம் காலியாக இருக்கிறது. நீதியரசர், நீதிமன்ற அலுவலர், நான் ஆகிய மூவர் மட்டுமே இருக்கிறோம். நீதியரசர் சாமிக்கண்ணு சொல்கிறார், “உங்களுக்கு முந்தைய கேஸ் முடிந்து உங்கள் கேஸ் அழைக்கப் பட்ட போது, நீங்கள் ஏதோ மும்முரமாக எழுதிக் கொண்டிருந்தீர்கள். தொந்தரவு செய்ய வேண்டாம் என்று தான் காத்திருக்கிறேன்”.

    இப்படிப் பல அனுபவங்கள்!

    ஒருநாள், வானத்து மின்னலே வந்து என்னகத்தை ஊடுருவிச் சென்று, அங்கே கவிதை நிலவை மலரச் செய்த அனுபவத்தைப் பிறகு சொல்கிறேன்.

    (தொடரும்)

    Share
  • அன்புள்ள அத்தான் வணக்கம்!

    — கவிஞர் காவிரிமைந்தன்

    anbulla atthan
    கைராசி திரைப்படத்திற்காக கண்ணதாசன் எழுதித்தந்த பாடல்!  இப்பாடலைக் கேட்கும் நேரமெல்லாம் திரையில் தோன்றும் கதாநாயகி மனக் கண் முன்னே மறக்காமல் காட்சி தரும் அற்புதப் பாடல்! இலக்கியத் தமிழைக்கூட சில நேரங்களில் அப்படியே எடுத்தாள்வதும்.. சினிமா என்கிற ஊடகத்தில்கூட ஆங்காங்கே அதற்கான பதிவுகளும் கண்ணதாசனால் கையாளப்பட்டதற்கு இப்பாடல் சாட்சி!  ஆம்.. ஆயிழை என்கிற சொல் வழக்கத்தில் இல்லை.. இலக்கியத்தில் உண்டு!  கற்பனையில் மேடைகட்டி.. அதற்கேற்ப இசையுமிட்டு வார்த்தைகளை வழங்கினால் வருகின்ற சராசரிப் பாடலாய் இல்லாமல்.. கவிஞர்தம் அற்புத நினைவுச்சுரங்கத்துள்ளிருந்து எடுக்கப்பட்ட வைரக்கற்களாய்.. வரிகள்!

    அன்புள்ள அத்தான் வணக்கம்
    உங்கள் ஆயிழை கொண்டாள் மயக்கம்
    தென்னவர் கையிருக்கும் திருவாளைப் போலிருக்கும்
    கண்ணிருந்தும் இல்லை உறக்கம்

    தென்னவர் கையிருக்கும் திருவாளைப் போலிருக்கும்
    கண்ணிருந்தும் இல்லை உறக்கம்..
    மறக்க முடியாத மாணிக்க வரிகள்!  கண்களில் உறக்கமில்லை என்று சொல்ல வந்த கவிஞருக்கு.. கற்பனையும் உவமையும் எப்படிக் கை கொடுக்கிறது பாருங்கள்!

    பருவம் நிறைந்திருந்தும் எனக்கென்ன சுகமே
    பருகும் இதழிரண்டும் இருந்தென்ன பயனே
    கரங்கள் இரண்டிருந்தும் அணைப்பதற்கில்லை
    கண்ணா இனி நான் பொறுப்பதற்கில்லை

    பெண்மை இப்படி முன்வந்து சொல்லாத வார்த்தைகள் முழுமையாக வருகின்றன என்றால் எண்ணிப் பாருங்கள்.. அவள் மனம் எல்லைகள் கடந்து வருகிற அழகைக் கவிதையில் தருகிறார் கேளுங்கள்! அழகைக் கொடுக்கிறது பாருங்கள்!

    பொன் மணிமேகலை பூமியில் விழும்
    புலம்பும் சிலம்பிரண்டும் என்னை விட்டு ஓடும்
    கைவளை சேர்ந்து விழும் கண்களும் மூடும்
    காண்பவர் உங்களைத்தான் பழி சொல்ல நேரும்

    தனிமையும் பிரிவும் தன்னைப் படுத்தும் பாடு ஒரு பக்கம் இருக்கட்டும்! அதிலும் தலைவன் பெயரல்லவா கெட்டுவிடும் என்கிற எச்சரிக்கையில் எவ்வளவு அழகு இறைந்திருக்கிறது பாருங்கள்!

    இப்படியெல்லாம் ஒரு காதல் பாடலில்.. தனிமையைப் பற்றி விவரிக்கும் பாடலில்.. எத்தனை விதமான ரசங்கள்! பாவங்கள்! நளினங்கள்!  முத்திரைகள்!  கவியரசே.. நீ எழுத எழுத.. நான் வரவா.. நான் வரவா என்று தமிழ்ச்சொற்கள் வந்து நிற்குமாமே.. உண்மையா சொல் என்று உன்னைக் கேட்க வேண்டியதில்லை.. உன் கவிதைகள்தான் உன்னையே காட்டிக் கொண்டிருக்கின்றனவே!!  விஸ்வநாதன் ராமமூர்ததி இசையமைப்பில் கைராசி பாடல்.. அன்புள்ள அத்தான் வணக்கம்!

    http://youtu.be/PQ0Bfm1gF7I

    காணொளி: -http://youtu.be/PQ0Bfm1gF7I

     

    படம்: கைராசி
    இயற்றியவர்: கண்ணதாசன்
    இசை: விஸ்வநாதன் ராமமூர்ததி
    நடிகை: சரோஜாதேவி

    அன்புள்ள அத்தான் வணக்கம்
    உங்கள் ஆயுளைகொண்டாள் மயக்கம்
    தென்னவர் கையிருக்கும் திருவாளைப் போலிருக்கும்
    கண்ணிருந்தும் இல்லை உறக்கம்
    (அன்புள்ள ….

    மாலைபொழுது வந்து படைபோல் கொல்லும்
    வருவார் வருவார் என்ற சேதியை சொல்லும்
    ஆலிலை போன்ற உடல் ஆசையில் துள்ளும்
    அந்தியிலே இயற்கை என்னையும் வெல்லும்
    (அன்புள்ள ….

    பருவம் நிறைந்திருந்தும் எனக்கென்ன சுகமே
    பருகும் இதழிரண்டும் இருந்தென்ன பயனே
    கரங்கள் இரண்டிருந்தும் அணைப்பதற்கில்லை
    கண்ணா இனி நான் பொறுப்பதற்கில்லை
    (அன்புள்ள ….

    பொன் மணிமேகலை பூமியில் விழும்
    புலம்பும் சிலம்பிரண்டும் என்னை விட்டு ஓடும்
    கைவளை சேர்ந்து விழும் கண்களும் மூடும்
    காண்பவர் உங்களைத்தான் பழி சொல்ல நேரும்
    அன்புள்ள அத்தான் வணக்கம்
    திருமணம் ஆகுமுன் வேண்டாம் குழப்பம்

    Share
  • பெண்களுக்கெதிரான குற்றங்கள்

    — பி.எஸ்.டி.பிரசாத்.

    women life

    ​மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா ! – என்று கவிமணி பாடிய நம் மண்ணில் சமீப காலமாக பெண்களுக்கெதிரான வன்முறைகள் தொடர்ந்து அதிகரித்து வருவது அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்துகிறது.

    “தாயருகில் சேயாகி, தலைவனிடம் பாயாகி, சேயருகில் தாயாகும் பெண்ணே !” – என்று கவியரசு வைரமுத்து அவர்கள் திரையிசையில், பெண்ணின் வாழ்க்கைச் சக்கரத்து மாற்றங்களை அருமையாகப் பாடியுள்ளார். ஆனால், வயிற்றில் இருப்பது பெண் குழந்தை என்று தெரியப்படுகின்ற அந்த நேரம் முதல், எல்லாக் கட்டத்திலும், தன் வாழ்வில் துன்பங்களை சந்திக்க வேண்டியுள்ளது ஒரு பெண்ணால். சேயாக இந்த பூமியில் பிறக்கும் முன்பே கொன்றுவிடும் கூட்டம் – குழந்தை பருவத்திலே சிறுமியாக இருக்கும்போது, பாலியல் உட்பட பல்வேறு வகையான குற்றங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இதையும் தாண்டி குமரிப் பருவம் வந்தால் கேட்கவே வேண்டாம். இரைக்கு அலையும் கழுகுகளின் பார்வையிலிருந்து தப்பித்து கற்பைக் காத்து வளர்வது…அம்மம்மா !  Eve teasing, கற்பழிப்பு, கொலை….இன்னும் எத்தனை எத்தனை குற்றங்கள்…

    அலுவல்களுக்குச் செல்லும்போது, வேலை செய்யும் இடத்தில் பெண்கள் நடத்தப்படும் விதம் பல இடங்களில் விவாதிக்கப் படக் காணலாம். இதையும் தாண்டி அடுத்தக் கட்டத்தை அடைந்து வீட்டில் தனியாக இருக்கும் போது பொருளற்ற வாழ்வு வாழும் கொள்ளையர்கள், உயிரை மாய்த்து பொருளை சுருட்டிக் கொண்டு ஓடுகின்றனர். நினைத்துப் பாருங்கள்…என்னதாங்க நடக்குது? !

    தாடகையின் தொல்லை தாங்காது ரிஷிகளும், முனிவர்களும் அவதிப் பட்டுக்கொண்டிருந்த போது விஸ்வாமித்ரர் அவர்கள், ஸ்ரீ ராம பிரானிடம், தாடகையை வதம் செய்யச் சொன்னாராம். அதற்கு, ஸ்ரீராமன், “அவள் ஒரு பெண்…அவளை என்னால் கொல்ல இயலாது” என்று சொல்லி தயங்கியதாகவும், பிறகு விஸ்வாமித்ரர், ஸ்ரீ ராமனுக்கு பல காரணங்களைச் சொல்லி தாடகையை வதம் செய்ய வைக்கப் பெரும் பாடு பட்டார் என்றும் ராமாயணம் சொல்கிறது. இது போன்ற ராமாயணம் மற்றும் மகாபாரதக் கதைகளை தொலைக்காட்சியில் ஆர்வமுடன் பார்ப்பவராக இருந்தும், காட்சியில் வரும் தத்துவங்களையும், சொல்லப்படும் கருத்துக்களையும் மனதில் எடுத்துக் கொள்ளதவராய் இருக்கிறோம் என்பது மிகவும் வருந்தத் தக்கது. ஒரு அரக்கி, அழிக்கப் பட வேண்டியவள், அவளை கொல்வதற்கு, ‘அவள் ஒரு பெண்’ என்ற ஒரே காரணத்திற்காக  தயக்கம் காட்டிய ஸ்ரீராமனை முன்னுதாரணமாய் கொள்ள வேண்டாமா?

    காசும், பணமும் பெருகப் பெருக, மேலும் பணம் சம்பாதிப்பதற்கான குறுக்கு வழிகளிலும், பெண் போதையிலும் தான் மனம் அலைகின்றது.”கடமை, கண்ணியம், கட்டுப்பாடு” என்றக் கோட்பாடுகள் எல்லாம் காற்றோடு போய் கட்டுப்பாடற்ற நாகரீகத்தை நோக்கி பயணித்து வருகிறோம் என்பது கசப்பான உண்மையாகும்.

    “மகளிர் தினம்” கொண்டாடுவதால் பெண்களை போற்றுவோர் ஆக மாட்டோம். அந்த நாள் கூட பலருக்கு, வியாபார ரீதியாக “தள்ளுபடி விற்பனை” செய்வதற்கான வாய்ப்பாகத் தான் கருதப்படுகிறது. பெண்களுக்கு நிகழ்த்தப் படும் கொடுமைகளுக்குத் தள்ளுபடி செய்தபாடில்லை ! உண்மையிலேயே, உரத்த சிந்தனை தேவைப்படுகிறது …இந்த பிரச்சனையை எதிர் கொண்டு சமாளிக்க…வாருங்கள்…சிந்திப்போம் !

     

     

    படம் உதவிக்கு நன்றி:   http://eluthu.com/images/poemimages/l/112934.gif

    Share
  • யார்மனத்தில்

    கே.ரவி

     

     யார்மனத்தில்

    (பாடல் – எஸ்.பி. பாலசுப்பிரமணியம்)

    151_002

    யார்மனத்தில் நீயிருந்து தேர்செலுத்துகின்றாய்

    யாருயிர்க்குள் நீநுழைந்து குழலிசைக்கின்றாய்

     

    யார்விழிக்குள் நீநிறைந்து வண்ணம் சேர்க்கின்றாய்

    யார்மொழிக்குள் கையளைந்து வெண்ணை கேட்கின்றாய்

     

    யார்புனைந்த மாலைக்காகத் தோள் அசைக்கின்றாய்

    யார்விரித்த குழல்முடிக்கப் போர் நடத்துகின்றாய்

    எங்கிருந்தோ பாஞ்ஜசன்யம் நீ முழக்குகின்றாய்

    இங்கெனக்குள் உன்நினைப்பை ஏன் விதைக்கின்றாய் – எனை

    ஏன் வதைக்கின்றாய்

     

    நீநடத்தும் நாடகத்தில் நான் நடிக்கின்றேன்

    நீயியக்கும் கருவியாக வரத்துடிக்கின்றேன்

    நீயும் நானும் வேறுவேறா கூறுவாய் கண்ணா

    நீபிரிந்தென் உள்ளும்வந்து சேருவாய் கண்ணா – பதில்

    கூறுவாய் கண்ணா

     

     

     

     

    Share