சரித்திரத்தில் பதிந்த முத்தே சங்கத்தமிழ் கண்ட முத்தே பொறுப்புடனே கவிதை சொல்லும் புகழ்மிக்க வைர முத்தே
கறுத்தநிற வைர முத்தே கவித்துவத்தின் உயர்ந்த முத்தே செருக்குடனே கவிதை சொல்லும் சிறந்த நல்ல தமிழின்முத்தே
கண்ணதாசன் வாலி ஒடு கவிதை நின்று போச்சுஎன கவலை கொண்ட மனத்தையெலாம் களிப்புக் கொள்ள வைத்தாயே
எண்ண எண்ண இனிப்பதற்கு ஏற்றவகையில் கவிதை தந்து வர்ணஜாலம் செய்து நிற்கும் வைரமுத்து வாழ்க வாழ்க
மீசை கொண்ட பாரதியாய் மிடுக்கொண்ட வைர முத்து ஆசைகொண்டு தமிழை ஆண்டு அனைவரையும் அணைத்து விட்டார்
வெள்ளுடையில் வந்து நிற்பாய் தெள்ளுதமிழ் தந்து நிற்பாய் துள்ளுநடை ஓடி வரும் சுவையுடனே கவிதை வரும்
அள்ள அள்ளக் குறையாத அழகுதமிழ் பாய்ந் தோடும் அனைவருமே நீந்தி அதில் ஆனந்தம் பெற்று நிற்போம்
தேசிய விருதை வென்றாய் திசையெலாம் பயணம் செய்தாய் காவியம் இயற்றி நின்றாய் கவிதைகள் பலவும் தந்தாய்
பாவிலே பயணம் செய்தாய் பட்டங்கள் பலவும் பெற்றாய் ஓவியக் கவிதை தந்த உயர்முத்தே வாழ்க வாழ்க
படித்த பின் புலம் பாட்டில் தெரியும் எடுத்த பொருளும் எளிதில் புரியும் தடித்த குரலால் தமிழைத் தருவாய் வெடித்த சிரிப்பு விரிந்தே பரவும்
அடுக்கு மொழியும் அள்ளித் தருவாய் மிடுக்கு நடையும் விட்டு விலகாய் தொடுத்த கவிதை சுவையாய் தருவாய் தெறித்துச் சிதறும் தீந்தமிழ் அங்கே
கல்வியில் பட்டம் பெற்று கவிதையால் பட்டம் வென்று நல்லதோர் நிலையில் நிற்கும் நற்றமிழ் கவிஞ்ஞரே நீர் வல்லமை பெற்று நாளும் வையத்தில் வாழ்க என்று நல்லதாய் வாழ்த்து கின்றேன் நானும் ஓர் ரசிகனாவேன்
பேராதனை பல்கலைகழக தமிழ் சிறப்புப் பட்டதாரி.அத்தோடு, கல்வியியல் துறையில் டிப்ளோமா, சமூகவியல் துறையில் டிப்ளோமா,கற்பித்தல் நுணுக்கத்தில் முதுகலை தத்துவமானி பட்டங்களையும் பெற்றவர்.கல்வித்திணைக்களத்தில் உதவிக் கல்விப் பணிப்பாளராகவும்,வட இலங்கை புனித பிரான்சிஸ் சேவியர் செமினறியில் பகுதி நேர தமிழ், இந்துகலாசார விரிவுரையாளராகவும், யாழ்/ பேராதனை பல்கலைக்கழகங்களின் வெளிவாரி பட்டப்படிப்புப்பிரிவில் தமிழ் விரிவுரையாளராகவும்,இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தில் அறிவிப்பாளராகவும், நாடகத்தயாரிப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார். மாற்றம்,உதயன்,ஈழ நாடு, சிந்தாமணி, உதயசூரியன் இந்துசாதனம், மெல்லினம், உதயம்,பத்திரிகைகளில்.. கவிதை, கட்டுரை,சிறுகதை,விமர்சனம், ஆகியவற்றை எழுதியுள்ளார்.10க்கு மேற்பட்ட நூல்களையும்,100 ஓரங்க நாடகங்களையும்,10க்கு மேற்பட்ட வில்லுப்பாட்டுக்களையும்,20க்கு மேற்பட்ட நாட்டிய நாடகங்களையும், எழுதியுள்ளதோடு.. “முதற்படி” என்னும் குறுந்திரைப்படத்துக்கு கதை வசனம் எழுதி நடித்து 2007ல் அவுஸ்த்திரேலியாவில் மெல்பேண் நகரில் வெளியீடும் செய்யப்பட்டது.ஈழத்தில் பல ஸ்தலங்களுக்கு ஊஞ்ஞல் பாடியுள்ளதோடு.. அண்மையில் மேற்கு அவுஸ்த்திரேலியா பேர்த் மாநகரில் கோவில்கொண்டிருக்கும் பாலமுருகப்பெருமான் மீதும் ஊஞ்ஞல் பாடியுள்ளார்.2008ல் மதுரைமாநகரில் நடைபெற்ற அகில உலக சைவ சித்தாந்த மாநாட்டில் புராணப்பகுதிக்கு தலைவராகவும், ஆய்வுக் கட்டுரையாளராகவும் விளங்கியுள்ளார்.அண்மையில் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்று அங்கெல்லாம்.. தமிழ்,கலாசாரம், இந்துசமயம்,சம்பந்தமாக விரிவுரைகள் ஆற்றியுள்ளார்.லண்டனில் ஜி.ரி.வி. நிலையத்தார் சமயம்,தமிழர்பண்பாடுசம்பந்தமாக இரண்டு தினங்கள் பேட்டி கண்டு நேரடியாக ஒளிபரப்புச்செய்தனர்.
தற்போது மெல்பேண் தமிழ்ச்சங்கத்தின் ஆலோசகராகவும்,விக்டோரியா இந்து கல்விமையத்தின் ஆலோசகராகவும், தமிழ் அவுஸ்த்திரேலியன் சஞ்சிகையின் இணை ஆசிரியராகவும் விளங்குகிறார்.
பூர்வீகம் தமிழ்நாடு தாராபுரம். வளர்ந்தது, படித்தது, வேலை பார்த்தது, யாவுமே இலங்கையில்..தற்போது குடியுரிமை பெற்றிருப்பது அவுஸ்த்திரேலியாவில்.
இன்றொருவர் பிறந்தநாள் என்பது மட்டுமல்ல..
இன்பத்தமிழ்க் கவிஞரின் 75வது பிறந்தநாள்..
என்பதனைக் கருத்தில்கொண்டு வடித்தகவிதை!
எண்ணமெலாம் தித்திக்க வைத்ததே!!
மென்பொருளாம் கணிணியிலே தமிழே ஆள..
மெல்போர்னிலிருந்து சொல்வளமே கூடிவர..
கண்ணிமைக்கும் நொடியில்கூட கவிதையாக்கும்..
என்னினிய நண்பரிவர் என்பதிலே பெருமை!
எழுதுகோலெடுத்து எழுதுவது அக்காலம்..
தொடுவிரலால் எழுத்துக்களைக் கோர்ப்பது இக்காலம்
சடசடவென கவிச்சரமே தொடுக்கின்றார்..
ஜெயராம்ஐயரிவர் செந்தமிழில் செழிக்கின்றார்!!
உள்ளமெல்லாம் உவகையுடன் உன்கவிதை ஓடிவர..
சொல்லழகும் சுவையழகும் கலந்திருக்கும் அமுதமென..
ஒவ்வொரு முறையும் பரிமாறும் கவியே.. உன்
வண்டமிழை வரவேற்க.. காத்திருப்பேன்..இனியே!
அன்புடன்
காவிரிமைந்தன்