Month: November 2021

  • வாரியார் சுவாமிகள் வாழ்கிறார்!

    வாரியார் சுவாமிகள் வாழ்கிறார்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா 

    வீணை படித்திருந்தால் வித்துவானாய் மேடைகளில் இசை நிகழ்சிகள் செய்த படியேதான் இருந்திருக்க வேண்டி வந்திருக்கும். ஆனால் இறைவனின் ஆணை வேறாக இருந்ததால் பாதை மாறியது. பயணமும் மாறியது. சைவமும் தமிழும் கைபிடித்து நின்றது. கலியுகத் தெய்வம் கந்தப் பெருமான் தன்னுடைய   கடைக்கண் பார்வையில் வைத்திருக்கும் நிலையும் உருவாகியது. இப்படி யெல்லாம் யாருக்கு நேர்ந்தது  என்று எண்ணிடத் தோன்றுகிறதல்லவா! வேறுயாருமல்ல….. பேச்சாலும், எழுத்தாலும், கதைகளாலும், இசையாலும்எம்மையெல்லாம் தன்பக்கம் ஈர்த்து நின்ற வாரியார் சுவாமிகளே!

    கிருபானந்த வாரியார் என்னும் பெயரினை நாங்கள் சாதாரணமாகவே பார்க்கிறோம். அந்தப் பெயருடன் சுவாமிகள் என்பதையும் சேர்த்து அழைத்து விட்டு அத்துடன் நின்று விடுகிறோம். ஆனால் அந்தப் பெயரின் அர்த்தத்தை நாங்கள் எவருமே எண்ணியே பார்ப்ப தில்லை. கிருபை ‘ என்றால் கருணை; ‘ ஆனந்தம் இன்பம்;  ‘வாரி‘ என்றால் பெருங்கடல்இப்பொழுது – “கிருபானந்த வாரியார் ” என்னும் பெயரினை எண்ணிப் பாருங்கள். மலைப்பாக இருக்கிற தல்லவா! இவருக்கு இப்பெயர் கருவிலேதான் உருவாகி இருக்க வேண்டும் என்றுதான் எண்ண வேண்டி இருக்கிறது. கருணையே உருவமாகக் கொண்டே அவர் விளங்கினார். கருணை உருவில் இருந்தே பிரசங்களை ஆற்றினார். அனைவரையும் கட்டிப் போட்டார். கருத்துக்களை வழங்குவதில் கடலாகாவே இருந்தார். அவரின் செய்கைகள் அத்த னைக்கும் ஏற்றதாக அவரின் பெயரும் அமைந்து வந்திருக்கிறதல்லவா! இதைத்தான் – ‘ நினையாது முன்வந்து நிற்கினும் நிற்கும் – எனை யாளும் ஈசன் செயல் ‘ என்பதா!

    திருவருட்செல்வர்களாக இருந்தவர்களைப் போற்றி தெய்வத் தமிழ்ச் சேக்கிழார் பெருமானால் பெரிய புராணம் பாடப்பட்டது. அந்தப் புராணத்தின் நாயகர்கள் அறுபத்து மூவர் ஆவர். அனைவருமே ஆண்டவனுக்குப் பலவிதத்தில் தொண்டாற்றியவர்களாகவே இருக்கிறார்கள். அறுபத்து மூவருடன் நின்று விடாமல் அந்த எண்ணிக்கையில் வாரியார் சுவாமிகளுக்கும் இடம் இருக்கிறது என்னும் சிந்தனையைப் பலரும் சொல்லுவதைக் கேட்கக் கூடியதாக இருக்கிறது. ஆகையால் வாரியார் சுவாமிகளையும் சேர்த்து திருவருட் செல்வர்கள் அறுபத்து நான்கு என்று அழைப்போமா! உடன்படுவீர்கள் என்று எண்ணுகிறேன். பத்தொன்பது வயதில் இல்லறத்தினுள் இணைகின்றார். அவருக்குக் குழந்தைப் பாக்கியம் கிடைக்கவில்லை. இளமையில் இல்லறத்தில் இணைந்தவர் – சிற்றின்பக் கடலினுள் மூழ்கிவிட நாட்டங் கொண்டவராய் இருக்கவில்லை. ஒரு குறிப்பிட்ட காலத்தின் பின் இல்லறத்தை நல்லறமாகவே கருதி – மனைவி இருந்த போதும் – சிற்றின்பம் என்பதை மறந்து – இல்லறத்திலே ஒரு துறவியாகவே வாழ்ந்தார் என்பதை மனமிருத்தல், அவசியமாகும். இப்படி இருப்பதுதான் உண்மையான துறவாகும். பொருள்கள் வந்து குவிந்தாலும் – அருளின் வசமே அவரின் மனம் இருந்த காரணத்தால் – இல்லற ஞானியாகவே வாரியார் சுவாமிகள் விளங்கினார் என்பதுதான் அவரின் தனித்துவத்தைக் காட்டி நிற்கிறது எனலாம்.

    இப்பொழுது – காணுமிடமெல்லாம் பல அமைப்புகள். ஒவ்வொரு அமைப்புக்கும் ஒவ்வொரு தலைவர். ஒவ்வொரு தலைவருமே தம்மைச் சாமியார் என்று முத்திரை குத்திக்கொண்டு – செய்யக்கூடாத அத்தனை இழிவான காரியங்களையும் செய்கிறார்கள். ஏமாற்றிப் பிழைக்கின்றார்கள். அவர்களுக்கு என்று தரகர் கூட்டமோ இன்னொரு பக்கம். பொருள் குவிகிறது. அருள் அறுகிறது. ஆடம்பரம் தலைவிரித்து ஆடுகிறது. அங்கு சென்று அகப்பட்டு அல்லல்படுகிறார்கள் அநேகம் பேர்! இப்படி ஏமாற்றிப் பிழைப்பவர்களை சுவாமிகள் என்று அழைப்பது எத்தகைய மதியீனம்மனைவி இருந்தும் – இல்லறத்தை துறவறமாக்கி வாழ்ந்த வாரியாரைத்தான் சுவாமிகள் என்று அழைப்பது மிகவும் பொருத்தமாய் இருக்கிறதல்லவா! “பசித்திரு, தனித்திருவிழித்திரு” என்பதை வாரியார் சுவாமிகள் நன்கு உணர்ந்தவர். அதனால் அவர் எல்லாவற்றிலும் விழித்தே இருந்தார்.

    பள்ளிக்கூடத்தைத் தொட்டிராதவர் வாரியார். நிழலுக்கும் அந்தப் பக்கம் போகாதவர் வாரியார். அவரைப் பல்கலைக்கழகங்களும்பல்கலைக்கழகப் பேராசிரியர்களும் பாராட்டிக் கெளரவித்தார்கள். பல்கலைக் கழகங்கள் வாரியாரை வரவழைத்து அவரின் உரைகளை  – கற்றிடும் மாணவரையும்பேராசிரியர்களையும் கேட்கவைத்த நிலையினை எண்ணிப் பார்க்கையில்யாவும் இறையின் திருவருள் என்றுதானே எண்ண வேண்டும். பள்ளிக்குச் சென்று சாதாரண கல்வியினைக் கற்காதவர்புராணங்களையும், இதி காசங்களையும்வேதக்கருத்துக்களையும்சைவசித்தாந்தக் கருத்துக்களையும்தமிழ் இலக்கியஇலக்கண மரபுகளையும்எப்படித் துன்னுள் தேக்கி வைத்திருந்தார் என்று நினைத்துப் பார்க்கவே பெரும் வியப்பாக இருக்கிறதல்லவா!

    மூன்று வயதில் வாரியாரின் வித்தியாரம்பம் ஆரம்பிக்கிறது. தந்தைதான்  அவரின் ஆத்மார்த்த குரு. ஐந்து வயதாக இருக்கும் பொழுதே ஏட்டினைப் படிக்கும் அளவுக்கு கற்றலில் முன்னிற்கிறார். எட்டு வயதில் வெண்பாபாடும் அளவுக்கு துலங்கி நிற்கிறார். பாக்களிலே வெண்பா பாடுவது என்பது மிகவும் கடினமானது. சட்டதிட்டங்களுடன் பாடப்பட வேண்டிய யாப்பினைக் கொண்டதுதான் வெண்பா. அப்படியான “வெண்பாவினை” எட்டு வயதில் வாரியார் பாடினார் என்றால் “வாணி அவர் நாவில் அமர்ந்து விட்டாள்” என்று தானே எண்ணிட வைக்கிறதல்லவா! அத்துடன் அவரின் ஆற்றல் நின்று விடவில்லை. தன்னுடைய பனிரெண்டாவது வயதிலே பனிரெண்டாயிரம் பாடல்களையே மனனம் செய்திருக்கிறார் என்றால் நம்புவீர்களாஆம் …. இது வெறும் புகழ்ச்சி அல்ல! இது உண்மைஇப்படி ஒரு பிள்ளை வளர்ந்து வந்ததென்றால் அதற்குப் பின்னால் அந்த ஆண்டவனும் கூடவே வந்திருக்கிறான். எந்த நேரமும் அந்தப் பிள்ளையை அரவணைத்த படியே இருந்திருக்கிறான் என்பதுதானே அர்த்தமாகும். இதைத்தான் “கருவிலே திருவுடையார்” என்றார்கள்.

    “இவன் தந்தை என்நோற்றான்” என்னும் நிலையில் வாரியார் பிள்ளையாய் வாய்திருக்கிறார். ‘நோற்றான்’  என்றால் நோன்பு இருந்தான் என்பதுதான் அர்த்தமாகும்.வாரியார் தந்தையார் மல்லையாதசர் அந்தப் பரம்பொருளை வேண்டி பக்திசிரத்தையுடன் நோன்பு நோற்ற காரணத்தால்த்தான் – வாரியார் ஒளி விட்டுப் பிரகாசித்தார் என்பது பொருத்தமாய் இருக்கிறதல்லவா! வள்ளுவம் காட்டுகின்ற,

    “தந்தை மகற்காற்று நன்றி அவையத்து
      முந்தி இருப்பச் செயல்”

    “மகன் தந்தைக்கு ஆற்றும்உதவி இவன்தந்தை
      என்னோற்றான் கொல்எனும் சொல்”

    இந்த மொழி – வாரியாருக்கும் அவரின் தந்தையாருக்கும் எத்துணை பொருத்தமாய் அமைகிறது பாருங்கள்!   

    வேத நெறி தளைத்தோங்க மிகு சைவத்துறை விளங்க” ஒரு பிள்ளை பிறந்தது. அந்தப்பிள்ளை ஞானப் பால் உண்ட பிள்ளை. அந்தப்பிள்ளை தன்னை நற்றமிழ் வல்ல ஞான சம்பந்தன்” என்றது. இன்னுமொரு பெரியவர் “தமிழோடு இசை பாட மறந்தறியேன்” என்றார். அப்பெரியார்தான் அப்பர். இந்தத் திருவடியார்கள் வழியில் பயணத்தை ஆரம்பிக்கிறார் எங்கள் வாரியார் சுவாமிகளும். அவரும் “தமிழையும் இசைய யும்” துணையாகக் கொள்ளுகிறார். திருவடியார்கள் ஊர்கள் தோறும் சென்று இறைவனைப் பாடிப் பரவி மக்களை ஆன்மீகத்துக்குள் வரச்செய்தார்கள். எங்கள் வாரியார் சுவாமிகளும் ஊர் ஊராய்நாடு நாடாய் சென்று சன்மார்கத்தை நன் மார்க்கமாய் காட்டி நிற்கிறார். ஆதலால் அறுபத்து நான்காவது திருவடியார் என்று அழைப்பது மிகவும் பொருத்தமாய் இருக்கிறது அல்லவா.  

    நல்லைநகர் தந்த நாவலர் பெருமான் சொன்னபடியே செய்தார். சொல்லிவிட்டு மட்டும் நின்று விட வில்லை. நாவலர் பெருமான் ஈழத்தின் ஞானவிளக்கு. தமிழையும், சைவத்தையும் தன்னுடைய இரு கண்களாகவே அவர் கருதிச்செயற்பட்டார். பொருளைவிட அருளையே அவர் பெரிதும் நம்பினார் – துணையாக்கினார். அவரும் எழுதினார். பேசினார். புராணங்களையெல்லாம் பக்தி சிரத்தையுடன் கையிலெடுத்தார். விளக்கினார். அவரை இன்றும் நினைக்கிறோம். என்றுமே நினைத்துக் கொண்டே இருப்போம்.

    அவரின் வழியில் வாரியாரையும் பார்ப்பது பொருத்தமாய் இருக்கும் என்று கருதுகிறேன். நாவலர் பெருமான் ஆசார அனுட்டானங்களைச் சொல்லி விட்டுப் போகாமல் தானும் அதன் வழி மிகவும் இறுக்க மாகவே நின்றார். வாரியாரும் தன் வாழ்நாள் எல்லாம் ஆசார அனுட்டானங்களைக் கைவிடாதவராகவே வாழ்ந்தார். “நீறில்லா நெற்றி பாழ்” என்னும் தமிழ் மூதாட்டியின் வார்த்தைகளை இருவருமே வாழ்வெல்லாம் போற்றி நின்றார்கள். நாவலர் பெருமானின் படங்கள் அத்தனையும் நெற்றியில் நிறைந்த திரு நீற்றின் மூன்று குறிகளுடனேயே காணப்படும். வாரியார் என்றதும் அவரின் திருநீறு நிறைந்த அகன்ற நெற்றியே ஒளி விட்டு மனத்தில் வந்து நிற்கும். கூடாதது அத்தனையும் கூடாதது என்று எண்ணியே இருவரும் வாழ்ந்திருக்கிறார்கள் என்பதை மனமிருத்துவது சாலப் பொருந்தும் என்று கருதுகிறேன்.

    நாவலர் பெருமான் சிவதீட்சை பெற்றிருந்தார். விபூதி உருத்திராக்கத்தை உயிராகப் போற்றிக் காத்து வந்தார். வாரியாருக்கு ஐந்து வயிலே திருவண்ணாமலை பாணிபத்ர மடத்தில் “சிவலிங்க தாரணம்” நடத்தப்பட்டது. அத்துடன் இவரின் தந்தையாரால் “சடாஷர மந்திரமும்” உபதேசிக்கப்பட்டது. தந்தையாரின் உபதேசத்துடன் மதுரை திருப்புகழ் சுவாமியினால் “சூட்சும சடாஷர” மந்திரமும் உபதேசிக்கப்பட்டது. அது மட்டு மன்றி வாரியாரின் கனவில் பாம்பன் சுவாமிகள் தோன்றி “சடாஷர மந்திரத்தை” திரும்பவும் உபதேசித்தார் என்றும் அறிய முடிகிறது. நாவலர் பெருமான் கால்பட்ட இடங்களெல்லாம் வாரியாரின் கால்களும் பட்டிருக்கின்றன. நாவலரின் சிந்தனைகள் பரவிய இடமெல்லாம் வாரியாரும் சென்று தன்னுடைய சிந்தனைகளைப் பரப்பினார் என்பதும் நோக்கத்தத்தது. நாவலர் பிரமச்சாரியத்தை மேற்கொண்டார். வாரியார் இல்லறத்தில் இருந்து கொண்டே பிரமச்சரியத்தை மேற்கொண்டு வந்தார் என்பதும் கருத்திருத்த வேண்டியதே. நாவலரை இலங்கை அரசாங்கம் கெளரவித்து முத்திரை வெளியிட்டது. வாரியாரை இந்திய அரசாங்கம் கெளரவித்து முத்திரை வெளியிட்டதுசைவத்தையும்தமிழையும் காத்தவ ர்களை நாடும் போற்றியது. நாட்டு அரசாங்கங்களும் போற்றின.

    நூற்று ஐம்பதுக்கு மேற்பட்ட நூல்களையும்ஐஞ்ஞூறுக்கு மேற்பட்ட கட்டுரைகளையும் வாரியார் சுவாமிகள் சமுதாயம் பயனுறும் வகையில் வழங்கி இருக்கிறார். அவரின் நூல்கள் பல பதிப்புக்களைத் தொட்டு யாவர்மத்தியிலும் சென்று இன்றும் வாழ்ந்து கொண்டே இருக்கிறது. எதனை எழுதினாலும் அதனை யாவரும் விளங்கும் படியே எழுதுவார். இராமாயாணம் பற்றி எழுதினார். பாரதம் பற்றி எழுதினார். கந்தபுராணம் பற்றி கற்றவரும் மற்றவரும் விளங்கும் வகையில் “கந்தவேல் கருணை” என்னும் மகுடத்தில் எழுதினார். பெரிய புராணத்தை யாவரது  மனதில் பதியும் வகையில் தனக்கே உரித்தான தமிழ் நடையில் “சிவனருட் செல்வர்” என்னும் பெயரில் வழங்கினார். யாருமே தொட முடியாத ஒரு பெரும் எழுத்துப் பணியினை இவர் மேற்கொண்டார். அதுதான் வாக்குக்கு அருணகிரி என்று போற்றப்படும் அருணகிரியின் ஆன்மீகப் பனுவல் திருப்புககழ் தொடர்பான பணியாகும். வேலூர் மாவட்டத்தில் பிறந்தததால்  வேலவன் வசமானார். காங்கேய நல்லூரில் பிறந்ததால் காங்கேயப் பெருமான் திருவடியைப் பற்றினார். அந்தக் காங்கேயனின் அருள் பெற்ற அருணகிரியின் திருப்புகழ் பாடல்கள் வாரியாரை வசப்படுத்தின. “முத்தைத்தரு” என்று எம்பருமான் கந்தப் பெருமானால் அடியெடுத்துக்கொடுத்த திருப்புகழ் என்னும் என்னும் அமுதத்தை தான் மட்டும் பருகினால் போதாது என்று கருதினார் வாரியார். அதனால் ஆயிரத்து தொழாயிரத்து முப்பத்து ஆறாம் ஆண்டில் “திருப்புகழ் அமிர்தம்” என்னும் மாத இதழைத் தொட ங்கினார். அவரின் பல வேலைகளுக்கு மத்தியிலும் விட்டு விடாமல் முப்பத்து ஏழு ஆண்டுகள் அந்த மாத இதழை நடத்தி – எழுத்துப் பணியில் ஆன்மீக முத்திரையினைப் பதித்திட்டார் எங்களின் வாரியார் சுவாமிகள். பதவுரை, பொழிப்புரை, விளக்கவுரை என்று அவரின் எழுத்து ஆளுமை அத்தனையும் திருப்புகழ் அமிர்தம் தாங்கிச் சிறப்புற்று நின்றது. தமிழிலே சந்தம் சிந்தும் பாடல்கள் என்றால் அது திருப்புகழ் மட்டுமே. அந்தச் சிந்துகளில் தனது சிந்தனைகளை வெளிப்படுத்திய வாரியாரும் ஒரு அருணகிரிதானே!

    பெண்களைப் பெரிதும் மதித்தார். குழந்தைகளைக் கொண்டாடியே மகிழ்ந்தார். அவரின் ஒவ்வொரு பிரசங்கத்திலும் முன்னே இருப்பவர்கள் நிச்சயமாகக் குழந்தைகளாகவே இருப்பர். இசையுடன் இணைந்த அவரின் பிரசங்கம் கேட்பவர்களை எங்குமே அசைய விடாமல் ஆக்கியேவிடும். வளர்ந்து வருகின்ற குழந்தைகளிடம் நன்னெறியைப் புகுத்த வேண்டும் என்பதில் மிகவும் ஆர்வம் கொண்டிருந்தார் வாரியார் எனலாம். இதனால் தன்னுடைய பிரசங்க மேடையின்முன் அமர்ந்திருக்கும் – குழந்தைகளிடம் பல வினாக்களைக் கேட்டு – அதற்குப் பதில் அளித்த குழந்தைகளை மேடைக்கு வரவழைத்து நல்ல நூல்களை வழங்கி ஆசீர்வதித்தார். இந்த அணுகு முறை மிகவும் சிறப்பானது மட்டுமல்ல புதியதொரு அணுகு முறையாகவும் அமைந்தது  என்றுதான் எடுத்துக் கொள்ளவேண்டும். குழந்தைகளையும், பெண்களையும் மதிப்பவர்களை சமூகமும் என்னாளும் மதித்துக் கொண்டே இருக்கும். குழந்தை என்றாலே செல்வம்தான். பெண்கள் என்றாலும் செல்வம்தான். பெண்களை வீட்டின்  மகாலக்சுமி என்றுதானே பார்க்கின்றோம். வாரியாருக்கு இந்த நுட்பம் மனதில் தோன்றிய படியால்த்தான் அவர் தன் வாழ்வெல்லாம் – பெண்களை மதித்தார். குழந்தைகளைக் கொண்டானார் எனலாம். “இல்லாள்” கருத்துடையது. “இல்லான்” எதுவுமே இல்லாதவன் என்று வாரியார் சுவாமிகளே சொல்லியிருக்கிறார்.

    வாரியார் சுவாமிகளின் பிரசங்க உத்தியைப் பாராட்டியே ஆக வேண்டும்.தத்துவங்களைச் சொல்லு வார்.ஆனால் அவற்றை யாவரும் விளங்கும் வகையில் நல்ல கதைகள் மூலமாய் சொல்லுவார். அதாவது இனிப்புத் தடவிய மருந்துபோல அவரின் கருத்துக்கள் வந்து அமையும். கதையினையும் நாடகப் பாணியிலேதான் சொல்லுவார். சொல்லும் பொழுது இசையும் அங்கே இணைந்து நிற்கும். தேவார,  திருவாசக, திருமுறைப் பாடல்கள்-  தாள , லயத் துடன், பக்கவாத்தியங்கள் இணைய வரும்பொழுது – கருத்துக்கள் பசுமரத்தாணி போல மனத்தில் சென்று பதிந்தேவிடும். எந்த அளவுக்கு சைவசிந்தாந்த, வேதாந்த அறிவு நிரம்பி இருந்ததோ அந்த அளவுக்கு – இசைஞானமும் அவரகத்தில் நிறைந்தே இருந்தது. இளமையிலேயே பல பாடல்களை மனனம் செய்திருந்த காரண த்தால் – கதைக்குப் பொருத்தமான கருத்துக்கள் பொதிந்த பாடல்கள் அங்கு வந்து நிற்கும். அப்படி வரும் பாடல்களையும் தன்னுடைய கணீரென்று குரலில் அவர் இசைத்தும் பாடும் பொழுது அந்த சரஸ்வதி தேவியே அவரை விண்ணிருந்து வாழ்த்திடுவார் என்றுதான் சொல்ல வேண்டும்.

    இயலும், இசையும், நாடகமும் அவரின் பிரசங்கத்தின் முத்திரை எனலாம். தமிழ் மொழியை மிகவும் நுட்பமாய் அவர் அறிந்திருந்தார் என்றுதான் பலபேருக்கும் தெரியும். அவருக்கு சமஸ்கிருதமும் தெரியும். பிரசங்கங்களில் அவர் காட்டுகின்ற நயத்தகு தமிழ் சொற்றொடர்கள் போல – பொருத்தமான இடங்களில் பொருத்தமான சமஸ்கிருதச் சுலோகங்களையும் காட்டி அதற்கான விளங்களையும் அவர் காட்டுவதும் சிறப்பாகவே இருக்கும்.

    பெண்கள் என்றாலே அவர்கள்தான் சமூகத்தின் கண்கள் என்று வாழ்வெல்லாம் எண்ணி வாழ்ந்தவர் வாரியார் சுவாமிகள். “பெற்றெடுத்த தாயின் பெயரை  (இனிஷியலாய் ) பெயருக்கு முன்னால் போடலாமே” என்று எவருமே தமிழ்ச் சமூகத்தில் சிந்தியாததைசொல்லாததைச் சொன்னவர் வாரியார் சுவாமிகள். அந்த அளவுக்கு பெண்மையைப் போற்றி நின்றார். புரட்சி புரட்சி என்கிறார்களே! இதுவல்லவா சிறப்பான புரட்சி!

    கிடைத்த பொருளையெல்லாம் தனது சொந்தச் சுகத்துக்காக அவர் பயன்படுத்தவே இல்லை. பொருளை அருளான வழியில் பயனாக்கினார். பள்ளிக் கூடத்துக்கே போகாதவர் – காங்கேய நல்லூரிலே துவக்கப் பள்ளிநடுநிலைப்பள்ளிபெண்கள் மேல்நிலைப்பள்ளிஆண்கள் மேல்நிலைப்பள்ளி என்று பள்ளிகளை நிறுவி வருங்காலச் சந்ததிகளுக்கு வழிகாட்டியாக விளங்கினார்.

    வயலூரில் அருணகிரி அறச்சாலையினை நிறுவி உணவளித்து நிற்க உறு துணையானார். பசிப்பி ணிக்கு மருந்தானார். பக்குவம் பெற கல்விக்கு கலங்கரை விளக்கமானார். வந்த பொருளையெல்லாம் இறைவனது ஆலயத் திருப்பணிக்கும் கொடுத்து ஆனந்தம் அடைந்தார். “தர்மம் செய்ய நினைத்தால் தாமதிக்கக் கூடாது” என்பதுதான் வாரியார் எண்ணமாக இருந்தது.

    தர்மத்தைத் தனது மனதில் இருத்தித் தேடிய பொருளையெல்லாம் பயனுறு வகையில் செய்த வாரியார் சுவாமிகள் – கொடுத்துச் சிவந்த கைகளை உடையவராய் விளங்கிய ஒருவரை வாழ்த்தி “பொன் மனச் செம்மல்” என்று விலைமதிப்பில்லாப் பட்டத்தை வழங்கினார். பல பட்டங்களை அவர் பெற்ற பொழுதும் வாரியார் சுவாமிகளால் வழங்கப்பட்ட இப்பட்டமே இன்றளவும் அவரை யாவரிடத்தும் அறியச் செய்து நிற்கிறது எனலாம். அவர்தான் மூன்று எழுத்தில் மக்கள் மனதில் பதிந்த தமிழ் நாட்டின் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்கள். வாரியார் சுவாமிகளின் வாழ்த்தின் பின் அந்த மூன்றெழுத்தாளர் மக்களின் திலக மாகவே ஆகிவிட்டார் வாழ்த்துவார் வாழ்த்தினால் அதுதான் பெருவரமாகும். வாரியார் வாழ்த்தும் அப்படி யானதே !

    மண்ணுலகில் பிறப்பவர்கள் யாவருமே மண்ணை விட்டுப் பிரிவது என்பது தவிர்க்க முடியாததுதான். அப்படிப் பிரிந்தவர்களை “காலமாகிவிட்டார்” அமரராகிவிட்டார்” இறையடி சேர்ந்துவிட்டார்” தெய் வீகமானார்” என்றெல்லாம் சொல்லுவது மரபாகி விட்டது. இப்படிச் சொல்லுவது எல்லோருக்கும் பொருந்துமா என்று சிந்தித்திப் பாருங்கள்.

    வையத்துள் வாழ்வாங்கு வாழ்வபவன் வானுறையும்
      தெய்வத்துள் வைக்கப் படும்”

    இக்குறள் வழியில் சிந்தித்தால் யாரை வானுறையும் தெய்வ நிலைக்கு அதாவது –  காலமாகி விட் டார், அமரராகி விட்டார்இறையடி சேர்ந்து விட்டார்தெய்வீகமானார் – என்று சொல்லுவது பொருத்தமாய் இருக்கும் என்பது தெளிவாகிறதல்லவா!

    வள்ளுவத்தின் கருத்துப்படி “வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்தவருக்கு” இப்படிச் சொல்லுவது தான் பொருத்தமாய் இருக்கிறது அல்லவா! அந்தவகையில் வாரியார் சுவாமிகள் போன்றவர்களையே – மண்ணுலகை விட்டுப் பிரியும் நிலையில் இப்படி அழைக்கலாம் என்பது பொருத்தமாய் இருக்கும் என்ப தைக் கருத்திருத்த வேண்டியது அவசியமாகும் என்று கருதுகிறேன். வாரியார் சுவாமிகள் நாத்திகர்களை யும் ஆத்தீகத்தில்  நாட்டங் கொண்டிடச் செய்தார். சினப்போரையும் சிந்திக்க வைத்தார். சிரிப்பினை மருந்தாக்கிக் கொடுத்தார். வைதாரையும் வாழ்த்தினார். எதிர்த்தவர்களையும் இரக்கத்துடன் பார்த்தார்.

    சுவாமிகளின் ஆன்மீகத் தொண்டு. அவரின் அறப்பணிகள். அவரின் சிந்தனையால் வெளிவந்த படைப்புகள். அவரின் உரைகள் பதிந்த ஒலி ஒளிக் காட்சிகள் . வெள்ளித்திரையில் வந்தும் வேலவனைக் காட்டிய அவரின் பாங்கு. இவையனைத்துமே அவர் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார் என்றுதானே எண்ணத் தோன்றுகிறது. ஆகையால் அவர் அமரரானாலும் எங்கள் மத்தியில் இன்னுமே வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்.

    Share
  • படித்தேன்! சுவைத்தேன்! பகிர்ந்தேன்! – 6

    படித்தேன்! சுவைத்தேன்! பகிர்ந்தேன்! – 6

    முனைவர் ச. சுப்பிரமணியன்

    முனைவர் பிச்சை தமிழகனின் ‘‘மரபுத்தொடர் அகரவரிசை’”   

    முன்னுரை

    கவிதை, இலக்கணம், இவைபற்றிய ஆய்வு, மெல்லிசை, என்னும் நாற்பொருளையும் இதயத்தின நான்கு அறைகளிலும் நிரப்பிக் கொள்வதையே நாட்கடமையாகக் கொண்டிருக்கும் எனக்குச் சில நேரங்களில் ‘மறுமாத்தம்’ தேவைப்படுவதை உணர்கிறேன். அப்போது என் கண்ணில் பட்ட நூற்களில் ஒன்றுதான் ‘மரபுத் தொடர் அகரவரிசை’ என்னும் இந்நூலாகும். ‘வழக்கும் செய்யுளும் ஆயிரு முதலின்’ என்னும் தொடர் தமிழுக்கு வழக்கின் இன்றியமையாமையை உணரத்தும். வழக்கின் உயிர்நாடி மரபுத் தொடர்களே!. ‘பனையட்டு’ என விதிப்படி உடம்படுமெய் புணர்த்தெழுதிப் பின்னர் ‘பனாட்டு’ எனச் சுயதிருத்தம் செய்து கொணடவர் தொல்காப்பியர். புளிச்சோறு, புளிங்கூழ், புளியமரம், புளியம்பழம் என்னும் ஒரே பகுதிக்குப் பல்வகைப் புணர்ச்சி விதிகளைத் தொல்காப்பியம் கூறுவதற்கும் இந்த வழக்கே காரணம். ‘மயில் குயில் ஆச்சுதடி’ என்பார் வள்ளலார். ‘மண்வெட்டிக் கூலிதின்னல் ஆச்சே’ என்பார் மகாகவி!. ‘குந்தி இருந்தவள் வீடு சென்றாள்’ என்பார பாவேந்தர். ‘வீடு முச்சூடும் அழும்’ என்பார் ஜீவா!. இப்பெருமக்கள் தமிழை ஆண்டிருக்கலாம். ஆனால் தமிழ் வழக்கு இவர்களை ஆண்டது  அத்தகைய வழக்கின் உயிர் நாடியான மரபுத் தொடர்களை இயன்ற அளவு தொகுத்தும் வகுத்தும் விளக்கமளித்தும் உண்மையான தமிழ்த் தொண்டு செய்திருக்கிறார் கல்வெட்டறிஞர் இலக்கணக்கடல், வழக்கியல் வல்லாளர் முனைவர் பிச்சை தமிழகன் அவர்கள். நான் விரும்பிய நேரத்திலும் வேண்டிய நேரத்திலும் படித்துச் சுவைத்த ‘மரபுத்தொடர் அகரவரிசை’ என்னும் நூலைப் பற்றிய ஒரு சுருக்க மதிப்பீட்டினை இங்கே பதிவு செய்கிறேன்.

    மரபத தொடர்களின் சிறப்பும் இன்றியமையாமையும்

    மரபுத் தொடர் என்பதில் மரபு என்பது மக்கட்குழுவையும தொடர் என்பது அவர்களால் பேசப்படும் மொழியையும் குறிப்பது. மக்களால் உருவாக்கப்படுதலின் மொழி மக்களுக்கானது. தன்னை உருவாக்கிய மக்கட் சுமதாயத்தின் வழக்கையே தன் வழக்காகக் கொள்வது மொழியின் இயல்பு. இந்த மரபு என்பது பெரும்பாலும் உலகியல் வழக்கையும் மிகச் சிறுபான்மை செய்யுள் வழக்கையும் உள்ளடக்கியது.  ஒரு மொழியின் இலக்கியத்திலோ இலக்கணத்திலோ ஒரு அசை கூட தானாக அமைந்துவிடாது. உலக வழக்கிலிருந்துதான் வரவேண்டும். இது அடிப்படை. ‘உலகத்தார் உண்டென்பது’ என்பார் திருவள்ளுவர். ‘உலகியல் கூறி பொருள் விளக்குவார் தமிழ்ச்சான்றோர். ‘வட்டார வழக்கு’ என்ற பெயரில் இலக்கியங்கள் வெற்றி பெறுவதற்கும் நாடடுப்புறப் பாடல்கள் தனிக்கவனம் பெறுவதற்கும், திரையிசைப்பாடல்களில் நாட்டுப்புற இசையமைப்புடன் கூடிய பாடலகள் பெருஞ்சிறப்பு பெறுவதற்கும் மண்ணின் மணமாகிய மரபே காரணம். ‘சரிகமபதநி’ என்னும் ஸ்வரங்களை அறியாதவன் ‘தந்தானே தானே தன்ன தன்னானா’ என்னும் தத்தகாரத்தில் தன்னை இழப்பதற்கும் இந்த மரபிசைதான் காரணம். அறிவியல் வளர்ச்சியாலும் மொழிக்கலப்பினாலும் நடப்பியல் வாழ்வில் போலித்தனத்தாலும் மரபுத் தொடர்கள் மறக்கப்படினும் அது தலைகாட்டுகிற இடங்களில் எலலாம் தனிச்சிறப்பு பெறுகிறது என்பதை மறந்துவிடக் கூடாது. ஒரு நூறு பேர் முழுக்கால் சட்டை அணிந்த ஒரு விழாவில் வேட்டி கட்டிய ஒருவனுக்கான பெருமை அது. முன்னோர்கள் விட்டுச்சென்ற ‘ வீட்டு உலக்கை’ அது. கண்ணில் மறைந்திருக்கும் காமாட்சி விளக்கு!

    உண்மையான தமிழ்த்தொண்டு

    அறிஞர் உ.வே.சா. பெரிய படைப்பாளர் அல்லர். கவிஞர் அல்லர். நாவலாசிரியர் அல்லர். வரலாற்றாசிரியர் அல்லர். ஆனால் இவர்களுக்கெல்லாம் மூலமாகத் திகழ்ந்தார். திகழ்கிறார். அதற்குக் காரணம் அவர் ஏற்றுக் கொண்ட பதிப்புப் பணி. குறிஞ்சிப்பாட்டின் இரண்டு வரிகளுக்காகக் குக்கிராமத்திற்கும் குதிரைவண்டிப் பயணம் மேற்கொண்ட குணாளர் அவர். எப்படி புலமைக்கடல் நச்சினார்க்கினியர் தாமே தனித்து ஒரு நூலை எழுதவில்லையோ அவரைப் போலவே தனியொரு நூல் செய்யாமல், இருந்து மறைந்த நு{ல்களைத் தேடுவதிலும் செப்பம் செய்வதிலும் உண்மை கண்டு பதிப்பிப்பதிலும் ஐயரின் உழைப்பு ஆண்டவனும் அறியாதது. அறிஞர்களாலும் பேராசிரியர்களாலும் கைகக்கொள்ள முடியாத கடும்பணி ஐயர் மேற்கொண்ட அந்தப் பணி. அந்தப் பணியை அல்லது அதுபோன்றதொரு பணியைத்தான் அறிஞர்  தமிழகன் செய்திருக்கும் இநத மரபுத்தொடர் அகரவரிசை. இருந்த இடத்திலிருந்து இருப்பதைப் படிக்கவே சுணங்கும் இந்த உலகில்  கால நேரம் பார்க்காது கால்கடுக்கச் சென்று கேட்டும் குறிப்பறிந்தும் தொகுத்திருக்கும் இந்த ‘மரபுத் தொடர் அகர வரிசை’ முனைவர் அவர்களுக்குப் பெருமை தரும். தமிழுக்கு உரமாகும். இதுதான் உண்மையான தமிழ்த்தொண்டு. பிறர் செய்யாத தொண்டு. அவ்வளவு எளிதாகப் பிறர் செய்ய முடியாத தொண்டு!.

    மக்கள் பயனபாட்டில் மரபுத் தொடர்கள்

    இலக்கணத்தை அல்லது அது சார்ந்த பொருண்மைகளை  இலக்கணமாகக் கற்பித்தலின் அதன் பயன்பாட்டை மக்கள் வழக்கிலிருந்து அல்லது தொடரில் அமைத்து எடுத்துக் காட்டினால் இன்னும் தெளிவாகும்.

    1. மண்ணையே ஆளலாம் என்று அவன் ‘மனக்கோட்டை’ கட்டுகிறான்.
    1. ‘கணணும் கருத்துமாக’ இருந்தால் காரியம் கைகூடும்
    2. ஆடம்பரத்திற்காகப் பணத்தை ‘அள்ளியிறைக்கிறான்’
    3. விஷயததை ‘ஆறப்போடுவதற்கு’ விசாரணை ஆணையம்
    4. சில்லறை இலஞசம் பெற்றான் அதனால் ‘சீட்டு கிழிந்தது’
    5. ‘அவசரக் குடுக்கையாய்’ இறங்கினான், அல்லற்படுகிறான்
    6. கையேந்தி கடன் பெற்றவன் ‘கம்பி நீட்டினான்’
    7. கூட்டுக் குடும்பம் என்பது இனி ‘கானலே!’
    8. ‘கயிறு திரிப்பதில்’ இவனுக்கு நோபல் தரலாம்.
    9. குடி வாழ்க்கையைக் குட்டிச் சுவராக்கிவிடும்
    10. மேலாளருக்குத் தாளம் போட்டே இவன் மேலே வந்தவன்

    மேலே காட்டப்ட்டிருக்கும் தொடர்கள் எல்லாம் நாளும் மக்கள் வாழ்வில் புழங்குவன. மனத்திலே கோட்டை கட்ட முடியாது. தகுதிக்கு மீறிய ஆசை. கண்ணும் கருத்தும் பொறுப்புணர்வை உணர்த்தியது. அளவின்றி வீணான செலவுதான் ‘அள்ளியிறைத்தல்’.  ஆறப்போடுதல் என்றால் சூடு குறைவதற்காக அன்று  மக்கள் மறக்கட்டும் என்று. . ‘சீட்டு கிழிந்தது’ என்றால் பதவி பறிபோனது.. ‘அவசரக் குடுக்கை’ என்பது பொறுமையின்மை. ‘கம்பி நீட்டினான்’ என்றால் காணாமல் போனான் ‘கானல் என்றால் காணமுடியாது .கயிறு திரித்தல் என்றால் பொய் சித்திரிப்பு. ‘குட்டிச் சுவர்’ என்பது இடிந்த சுவரைக் குறிக்காது வாழ்க்கையின் சிதைந்த நிலையைக் குறிப்பது. ‘தாளம் போடுதல்’ என்றால் அநியாயத்துக்குத் துணைபோதல். இதனை ஒததூதல் என்றும் சொல்வர். ‘ஜால்ரா’ என்பதும் அது. சொற்களுக்கான நேரடிப் பொருளைத் தராது மக்கள் கருதும் பொருளை அவர்தம் பண்பாடு சார்ந்து அமைகின்ற தொடர்களே மரபுத் தொடர்கள் என்பது இவற்றால் ஓரளவு விளங்கக் கூடும்.

    உலை வைத்தலும் ஊசலாடுதலும்

    உலையும் கஞ்சியும் ஒரு திறத்தன. அவை ஏழைவீட்டுச் சமையல் அறை அணிவகுப்பு  ‘கொல்லன் உலைபோலக் கொதிக்குதடி என் வயிறு’ என்பார் அழுகணி சிததர். அது கொல்லன் உலை. “உலைஅமிழ்தை  வறியவள் ஒருத்தி தூக்கல் போல்  என்று குழந்தையைத் தூக்குதற்கு உவமம் காடடுவார் பாவேநதர். இந்த இடங்களில் எல்லாம் ஏழை வீட்டுச் சிந்தனையே உலை என்ற சொல்லால் வெளிப்படுததப்படடது.  இந்த ஏழையின் பிழைப்பில் மண்ணைப் போடுவதற்கென்று சில ஏகாதிபத்திய சக்திகள் எந்த நாளும் இருந்து வருவது இயல்பு. . முயன்று  படித்து முன்னேறும் நோக்குடன பணிபுரியும் ஏழை ஒருவனைப் பற்றிய மொட்டைக் கடுதாசி அந்த எழையின் பிழைப்புக்கு உலை வைக்கும்.  ‘வைத்தல்’ என்ற வினைக்குத் தரையில் வைத்தல் என்று பொருள. ஆனால் ‘பற்ற வைத்தல்’ என்ற சொல்லில் அது அப்பொருள் தராது. அதுபோல ‘உலை வைத்தல்’ என்ற இந்தச் சொல்லில் ‘வைத்தல்’ என்ற சொல் உலை எனபதோடு இணைந்து ‘கேடு செய்தல்’ என்ற பொருளில் வந்தது. அதுவும் பிழைப்புக்கே கேடு சூழ்வதைததான் ‘உலை வைததல்’ என்னும் மரபுத் தொடர் குறிக்கிறது என்பதை ஆசிரியர் நுட்பமாக விளக்கியிருக்கிறார். காற்று தீயாகி ஸ்டவ் அடுப்புச் சமையலுக்கு உலையும் தெரியாது. அதனால் கஞ்சியும வடியாது!

    ‘ஊசல் என்பது இலக்கியத்தில் கலம்பகத்திலும் பெண்பாற் பிள்ளைத் தமிழிலும் ஓர் உறுப்பு.  திருவாசத்தில் திருப்பொன்னூசல் என்பதைக் காணலாம். ஓடரிக்கண் மடநல்லீர் ஆடாமோ ஊசல்? உத்தரியப்பட்டாட ஆடாமோ ஊசல்? என்பது நந்திக்கலம்பகம் .‘ஆகாயப் பந்தலிலிலே பொனனூஞ்சல் ஆடுதம்மா’ என்பது திரையிசைப் பாடல். தூய்மையான தமிழ்ச்சொல். அது ஆட்டம் என்னும் தொழிற்பெயரோடு சேர்ந்து ‘ஊசலாட்டம்’ என வருவதுண்டு.

    “எண்ணிலா  அருந்தவத்தோன்  இயம்பிய சொல்  மருமத்தின்
    எறிவேல்  பாய்ந்த
    புண்ணிலாம்  பெரும் புழையில்  கனல் நுழைந்தால்  எனச் செவியில்
    புகுத லோடும
    உண்ணிலா  வியதுயரம்   பிடித்து உந்த  ஆருயிர் நின்று
    ஊசல் ஆடக்
    கண்ணிலான் பெற்றிழந்தான்  என உழந்தான் கடும் துயரம்
    கால வேலான்”.

    என்னும் கம்பன் பாடல். துன்பத்திற்கும் கடமைக்கும் இடையே தசரதன் மனத்து ஊசலாட்டத்தைக் காட்டும். இந்த அரிய சொல் மக்கள் வழக்கிலிருந்து வந்தது. மனம் ஒரு நிலையில் நிலலாமைக்கு ‘ஊசலாட்டம்’ என்று பெயர். இதற்கும் கடியாரத்தின் ஊசலுக்கும் தொடர்பில்லை. ஆனால் கடியாரத்தின்  ஊசலுக்குத் (PENDULUM) தமிழில் அப்பெயர் வந்ததற்குக் காரணம் ஒரு முனையிலும் நில்லா அதன் ஆட்டமே. ஊஞ்சலில் ஆடுவதற்கும் ஊசல் ஆடுவதற்கும் தொடர்பில்லை. மக்கள் பார்வையில் அதன்  இருமுனையாட்டம் ஒரு முடிவுக்கு வராத நிலையை நினைவுபடுத்தியதால் தோன்றிய தொடர்.!.

    உடம்புக்கும் பாடைக்கும் ஒரே பெயர் 

    ‘கட்டுமானம்’ என்ற சொல்லிற்கும் ‘கட்டு’ என்ற சொல்லிற்கும்  தொடர்பு உண்டு. ‘மானம்’ என்னும் விகுதி வருமானம், வெகுமானம், அடமானம், உவமானம் என்பன போல் வரும். உறுதியான பொருட்தொகுதிக்கு அப்பெயர் வழங்கப்படுகிறது. தேகக்கட்டு, உடற்கட்டு, வீட்டுக்கட்டுமானம், கீரைக்கட்டு என்பன போன்ற சொற்களில் அப்பொருள் இழைவது காண்க. இனி ‘நாட்டுக்கட்டை’ என்ற சொல்லில் இருக்கும் நுண்ணியமும் அதுவே. உடலுறுப்புக்களின் உறுதியும் அழகும் தளர்ச்சியின்மையும் சுட்டுவதாக அது அமைந்திருப்பதை உணரமுடியும்.

    மொழியின் முழுமையான ஆழத்தையும் ஆளுமையையும அவல வெளிப்பாட்டில் காணலாம்.. இலக்கியச் சுவைகளில் பெரிதும் மனங்கவர்ந்து நிற்பது அவலமே. கம்பனின் ஆறு காண்டங்களில் யுத்த காணடத்தை ‘மரண காண்டம்’ அலலது ‘அவல காண்டம்’ என்றே கூறலாம். புலம்பலின் உச்சம். அழுகைகளின அணிவகுப்பு.  வழக்கிலும் இந்த அவலததைக் காணலாம். ‘உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தேன் உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே’ என்பார் திருமூலர். ‘உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம் என்றதும் அவரே. அத்தகைய உடம்பை வழக்கில் ‘கட்டை’ என்று வழங்குகின்றனர் மக்கள்.

    ‘உனக்கு நான் செய்ய வேண்டியதைச் செய்த பிறகுதான் இந்தக் கட்டை போகும், வேகும்’ என்பது வழக்கு. இந்தத் தொடரில் ‘கட்டை’ என்பது உடம்பு. கட்டை என்பது யாக்கையின ;மறுபெயர். யாக்கை தொழிற்பெயர். யாத்தல் எனினும் ஒக்கும். உயிரன்றி யாக்கை செயல்படாது. இயலாது. இனி ஈரம் இல்லாதது கட்டை. விறகுக் கட்டை, மரக்கட்டை என்னும் வழக்கு நோக்குக. உயிரற்ற உடம்பிற்கு யாக்கை என்பது பெயர்.

    ‘கட்டையிலே போறவனே’ என்பதும் வழக்கு. இங்கே கடடையென்பது உடம்பைக் குறிக்காது கட்டையாகிய உடம்பு வேகின்ற மயான மேடையைக் குறிக்கிறது. உடம்புக்குப் பெருமை உயிர். மரத்திற்குப் பெருமை ஈரம். உயிரிலலாத உடம்பும் ஈரம் இல்லாத மரமும் பயனற்றவை. வேரில் விழுகின்ற மழைத்துளிக்கும் விறகில் விழுகின்ற மழைத்துளிக்கும விளைவு வேறுபடும். எனவேதான்  எரிகின்ற உடம்பையும் ‘கட்டை’ யென்றார்கள் எரிக்கப்படும் உடம்பையும் ‘கட்டை’ யென்கிறார்கள்.

    ‘என் கட்டை போகிறவரைக்கும்’ என்பதும் ‘நான் கட்டையில் போகிறவரைக்கும்’ என்பதும் முறையே உடம்பையும் பாடையையும் ‘கட்டை’ என்னும் ஒரு சொல்லே வழக்கில் இருக்கிறது என்தைத் தமிழகன் மிக அருமையாக உணர்த்தியிருக்கிறார்.  இந்த வழக்குச் சொலலை கவிஞர் வைரமுத்து தாம் எழுதிய பெய்யெனப் பெய்யும் மழை என்னும் கவிதை நூலில்

    “கட்டையிலே போகையிலும்
    கட்டாயம் சோதி! என்
    கண்ணுக்குள் தெரியுமடி
    கவிதையென்னும ஜோதி!”

    என்று பாடி அதன் இலக்கியத் தகுதியை உறுதிசெய்திருக்கிறார். எதுகையைப் புறந்தள்ளி மோனைக்கும் இயைபுக்கும் முதன்மை தரப்பட்டிருக்கும் இந்தக் கவிதை வரிகளில் ‘கட்டையிலே’ என்ற சொல்லைப் ‘பாடை’ என்னும் பொருளில் அவன் பயன்படுத்தியிருப்பது காண்க.

    கடைவிரித்தலும்

    செங்குத்தான  (VERTICAL) திறப்புக்குத் திறப்பு என்றும் கிடக்கை நிலைத் (HORIZONTAL) திறப்புக்கு விரித்தல் என்றும் பெயர். கோயில் நடைத் திறப்பு,, மதில் வாயில் திறப்பும் என்பவற்றையும்  படுக்கை விரித்தல், பூவிரித்தல், இலை விரித்தல் முதலிய வழக்கு நோக்குக. இது முரணாகிறபோது பொருள் மாறுபடும். ‘தலைவிரிக்கோலம்’ என்னும் ;முரண் அவலக் குறிப்பு. கடைவிரித்தல் என்பது சாதாரண மொழியில் தரைக்கடையை விரிப்பதாகக் கொளளலாம். ஆனால் அது மரபுத் தொடராக அமைகிறபோது ‘மந்தணத்தை வெளிப்படுத்துதல்’ என்னும் பொருளில் வரும். ‘எல்லாவற்றையும் கடைவிரிக்கத்தான் நீ வந்தாயா? என்பது உலகியல்.  நூலாசிரியர் கடைவிரித்தேன் கொள்வாரில்லை” என்னும் தொடரை வள்ளலார் வாக்கு அதாவது வாயச்சொல் என்கிறார். உண்மையில் அது திருவருட்பாவில் எங்கும் காணப்படாத வரி. மிகவும் சாதுரியமாக ‘வாய்ச்சொல்’ என் ஆசிரியர் சொல்வதும் ஒரு வகை உத்தியே! அது வள்ளலார் சொன்னதாக வழிபோக்கர் சொன்னது. இத்தகைய வழிப்போக்கர் விட்ட கதை தமிழில் எராளம்! ஏராளம்!

    கண் – மூடுதல் – விழித்தல் — காட்டுதல்

    ‘கணணயர்தல்’ என்பது உறங்குதல் என்னும் பொருளில் வரும். இந்தச் சொல்லில் ‘கண்’ என்பது பெயர்ச்சொல். அயர்தல் என்பது வினைச்சொல். இவையிரண்டும் அவற்றுக்கான உண்மைப் பொருளையே உணர்த்தியது. ‘கண்மூடுதல்’ என்பது சாதாரண நிலையில் ஒரு பொருளும்  மரபத்தொடராக மற்றொரு பொருளும் உணர்த்தி நிற்கிறது. ‘கண்மூடுதல் என்றால் கண்ணயர்தல் என்பது போலவே உறங்குதல் என்பதை உணர்த்தும். ‘கண்மூடும் வேளையிலும் கலை என்ன கலையே’ என்பது அன்றைய திரையிசைப்பாடல். கூடவே ஒரே சொல்லாக நின்று ‘இறந்து போதல்’ என்னும் பொருளையும்  உணர்த்தி நிற்கும். அவன் கண்ணை மூடுவதற்குள் இதனைச் செய்துவிட வேண்டும் என்பதில் ‘அவன் இறந்து விடுவதற்குள் இதனை முடித்துவிட வேண்டும் எனனும் பொருள் அமைந்திருப்பதை அறிக. ‘கண்ணை மூடுதல்’ என்னும் சினைவினை மரபுத் தொடராக நின்று நுண்பொருளை உணர்த்துகிறது.

    ‘கண்விழித்தல்’ என்பதும் அதுபோன்றதொரு சொல்லே. உறங்கி எழுதல் என்பது இயல்பான வழக்கு. ஆனால் ‘என்னைக் கொஞ்சம் கண் திறந்து பார்க்கக் கூடாதா?’ என்று திறந்த விழி உடையவனையே நோக்கி இறைஞ்சுகிறபோது அது மரபுத் தொடராகிவிடுகிறது, என்பால் இரக்கம் காட்டமாட்டாயா என்னும் பொருளைத் தருகிறது,  ‘இன்னமும் பாரா முகம் ஏனம்மா?’ என்பது அக்காலத்திய புகழ் பெற்ற திரையிசைப் பாடல் வரி. ‘கண்ண தெறக்கணும சாமி’ என்பது இக்காலத்திய திரையிசைப் பாடல் வரி. ‘மீன் நோக்கும் நீள்வயல் சூழ் வித்துவக் கோட்டு அம்மா என்பால் நோக்காயாகிலும் உன் பற்றல்லால் பற்றில்லேன்’ என்பது பெருமாள் திருமொழி.

    ‘கண்விழித்தல்’ என்பதுபோன்ற மற்றொரு மரபுத்தொடர் கண்காட்டுதல். கண்காட்டுதல் என்றால் ‘அருள்பாலித்தல்’ ‘நன்னெறி காட்டுதல்’, ‘பிழைக்கும் வழி காட்டுதல்’ என்பது பொருள். கொஞ்சம் உன் கண்ணைக் காட்டினால் பிழைத்துக் கொள்வேன் என்பதும்  ‘அவனுக்கொரு கண்ணைக் காட்டிட்டா பிழைத்துக் கொள்வான்’ என்பதும். ‘சாமி கண்ணத் தொறக்கணும்’ என்பதும் மரபியல் சார்ந்த உலகியல் வழக்கு.

    கரைத்துக் குடித்தலும் கரைகாணுதலும்

    முற்றோதல் என்பதும் முழுதறிதல் என்பதும் தமிழ்ப்பனுவல்களில் காணப்படும் சொற்கள். மனனம் செய்யப்பட்ட பகுதிகளை முழுமையாகச் சொல்லிச் சுவைப்பது  முன்னது. ஒரு பொருள் பற்றி முழுமையாக அறிவது பின்னது. உணவுப்பொருட்களை நன்கு மென்று உள்ளே அனுப்பினால் உள்ளே இருக்கும் செரிமான உறுப்புக்களின் வேலைப் பளு குறையும் என்பது மருத்துவக் குறிப்பு. பற்களின் உடலியல் பயன் அது. அவசர வாழ்க்கையில் பலர் பற்களைப் பயன்படுத்துவதற்கு மாறாக விழுங்குவதற்குத் தொண்டையைப் பயன்படுத்துகிறார்கள். ‘கஞ்சி’ என்பதும் குழைத்தும் கரைத்தும் உண்பது. அது இன்னும் நல்லது. எதிலும் நுனிப்புல் மேய்வார் பரவி நிற்கும் உலகத்தில் எந்தப் பொருள் பற்றியும் முழுமையும் தெரிந்து கொள்வார் குறுகிப்போயினர். ஒருவனுடைய அடையாளப்படுத்தப்பட்ட அறிவின் அளவை அறிந்த மக்கள் அவன் அளவு தெரியாது பேசினால் ‘கரைத்துக் குடிச்சவன் மாதிரி பேசாதே’ எனக் கடிந்துரைப்பர். எதிர்மறையில் இப்படி வரும் இந்தத் தொடர் ‘வாரியார் அவர்கள் திருப்புகழைக் கரைத்துக் குடிததவர்’ என உடன்பாட்டில் வழங்கப்படும்.

    ‘கங்குல் எல்லை காண்பளவும இமைப்பிலன்’ (இலக்குவன்) என்பது குகன் வாக்கு. கரைத்துக் குடித்தல் என்பது ஒரு பொருளைப் பற்றிய பன்முகப் பரிமாணத்தைப் பற்றியதெனின் ‘கரைகாணுதல்’ என்பது பரப்பைப் பற்றியது. அகலக்கற்றல் ஆழக்கற்றல் என்னும் இருவகையுள் இது அகலக் கற்றலைக் குறிக்கும். இதுவும் எதிர்மறையிலும் வரும் உடன்பாட்டிலும் வரும். ‘கரைகாணாத் துன்பம்’ என்பது எதிர்மறை. ‘சிலப்பதிகாரத்தில் சிலம்புச் செல்வர் ம.மொ.சி. கரை கண்டவர் என்பதும் ‘வேர்ச்சொல் ஆய்வில் கரைகண்டவர் பாவாணர்’ என்பதும்  உடன்பாடு. கரைத்தல், கரைகாணுதல் என்னும் பருப்பொருள் வினைகள் நுண்பொருள் உணர்த்தி வந்தமை வழக்கு நுண்ணியம். பண்பாட்டு நுண்ணியம். மொழியியல் நுண்ணியம்.

    முழுகாமல் இருத்தலும் முழுகிப் போதலும்

    ‘ரங்கோன் ராதா’ என்ற திரைப்படம் பேரறிஞர் அண்ணா எழுதியது. அதில் ஒரு காட்சி வரும். விலைமகளை நாடும் தலைவனிடம் கதைத்தலைவி தான் கர்ப்பமாயிருப்பதை நாணத்துடன் இப்படி வெளிப்படுத்தவாள்.  “நான் மூனு மாசம் முழுகாமல் இருககிறேன்” என்று. அதற்கு உடனடியாக கதைத்தலைவன் சொல்வான்’ நான் (உன்னை) ‘தலைமுழுகிவிட்டேன்” என்று. ‘தலை’ என்ற சொல் ‘தனி. முழுகுதல்’ என்ற சொல் தனி. இவ்விரண்டு சொற்களும் இணைந்து முற்றிலும் மாறுபட்டதொரு பொருளைப் தமிழ்ர் பண்பாட்டுத் தளத்தில் வைத்துப் பெறமுடிவதைக் காணலாம். பெண்கள் கருவுற்றிருப்பதை வெளிப்படுத்துவதற்குப் பல சொற்கள் இருக்கின்றன. அவை பண்பாடு காக்கும் சொற்கள். ‘மாசப்பொழுதாய் இருக்கிறாள்’. ‘முழுகாமல் இருக்கிறாள்.’ ‘மசக்கையாய் இருக்கிறாள்’ ‘இப்ப அவ ஐந்து மாசம்’ என்றுதான் சொல்வார்கள். அப்போதெல்லாம் பெண்களுக்குச் சுண்டு வலி வரும் அதனால் சுகப்பேறு நிகழும். அது ஒரு கனாக்காலம்!. போலி நாகரிகத்தில் எதனைப் பேசுகிறோம் யாரிடம் பேசுகிறோம் என்று தெரியாமல் ஜிகினா வாழ்க்கையில் சிக்கித தவிக்கிற தற்காலத்தில் ‘என் மவ உண்டாயிருக்கிறா’ என்று உவந்து போகிறார்கள். அப்படிச் சொல்வது அவர்கள் உரிமை. அதே நேரம் ஒரு நெடிய மரபு புதைக்கப்படுகிறது என்பதை மறந்துவிடக்கூடாது, பெரியவர் தமிழகன் பண்பாடு காக்கும் இத்தகைய மரபுத்தொடர்களைத் தொகுத்துக் காட்டியிருக்கிறார் வகுத்துச் சொல்லியிருக்கிறார். இதில் என்ன பண்பாடு இருக்கிறது என்று சிலர் வினவலாம். ‘முழுகுதல்’ என்றால் தலைக்குக் குளித்தல் மாதாந்திர விலக்குக்கு உள்ளான மகளிர் மூன்றாம் நாள் குளித்து வீடடுக்குள் வருவது தமிழர் பண்பாடு. இன்றைக்கும் பெருவாரியான தமிழகச் சிற்றூர்களில் பின்பற்றப்படும் வாழ்வியல் நியதி. திங்கள்தோறும் தலைமுழுகும் மகளிர் கருவுற்றால் தலைகுளித்தலாகிய அந்தக் குறிப்பிட்ட சடங்கு நிகழாது. ‘தலைக்கு ஊற்றுதல்’ என்பது தலையைத் தாண்டியதொரு பண்பாட்டைக் குறித்தது காண்க. எனவே ‘முழுகாமல் இருக்கிறாள்’ என்ற சொல் ஏற்கனவே அவள் திஙகள் தோறும் முழுகியதைக் காட்டுகிறது. ஆனால் ‘உண்டாயிருக்கிறாள்’ என்ற சொல் அந்தப் பண்பாட்டு விழுமியத்தை எள்ளின் முனையளவும் வெளிப்படுத்தவில்லை என்பதை அறிதல் வேண்டும்.

    ‘என் குடி முழுகிடுச்சே?’ இந்த அவலம் அங்கிங்கு எனாதபடி எங்கும் கேட்கும் காலம் இது. முழுகுதல் என்பது நீரின்கண் நிகழ்கிற நிகழ்வு. வீடு வெள்ளத்தில் மூழ்குவது வேறு. காதல் கண்ணீரில் மூழ்குவது வேறு. குடி வறுமையில் மூழ்குவது அவற்றினும் வேறு. இது மூன்றாவது. தமிழின் மரபின் நுண்ணியம் வெளிப்படும் இடங்களில் இதுவும் ஒன்று. ஒருத்தி முழுகாமல் இருந்தால் அந்தக் குடும்பம் மகிழ்கிறது. அந்தக் குடும்பம் வறுமையில் மூழ்கினால் புலம்புகிறது. .  இதனை வேறுவாய்பாட்டிலும் சொல்லலாம். முழுகாமல் இருந்தால் களிப்பு. மூழ்கினால் சலிப்பு! இந்தச் சலிப்பு பத்து பவுன் சங்கலியை அடகுவைத்து வட்டிக் கட்ட இயலாது மூழ்கிப் போனவனுக்குத்தான் தெரியும்!

    சந்திக்கு இழுத்தல்

    ஒருவரை ஒருவர் நேருக்கு நேர் பாரத்துக் கொள்வதற்குச் சந்தித்தல் என்று பெயர். சாலைகளுக்கும் இரு பொருந்தும் இரண்டு மூன்றாகி முச்சந்தி, நாற்சந்தி எனவும் வருவதுண்டு. ஐந்து சாலைகள் சந்திக்கின்ற இடத்துக்கு ‘ஐஞ்சந்தி’ என்று வந்திருக்க வேண்டிய பெயர் ‘விரல்நிலை’ என்று வந்தது. ‘FINGER POST’  என்பது நீலமலை மாவட்டத்தில் ஐந்து சாலைகள் சந்திக்கின்ற இடத்திற்குப் பெயர். இ;நதப் பெயர் இங்கிலாந்து நாட்டில் உள்ளது. வெள்ளையர்கள் ஆட்சியில் தங்கள் நாட்டிலிருந்த பெயர்களையெல்லாம் நீலமலையில் முதன்முதலாகக் குடியேறிய காலத்து அங்கே வைத்தார்கள். கட்டுரைக்குத் தொடர்பிலலாதவிடத்தும் இது ஒரு கூடுதல் தகவலாகக் கொள்ளப்படலாம். இந்தச் சந்திகளில் தமிழர்களின் வாழ்வில் முச்சந்தி பெற்ற இடத்தை வேறு எதுவும பெற்றதாகத் தெரியவில்லை. ‘அங்காடி நாய்’ என்றே பட்டினத்தார் பாடுகிறார். சாவும் நெருங்காது சந்தியிலே நிற்கின்றேன் என்பார் வைரமுத்து. ‘சந்திப் பிழை போன்ற சந்ததிப் பிழைகள்’ என்பார் காமராசன்.   “சந்திக்கு இழுத்தல்” என்பதன் பொருள் தெருக்கள் கூடும் சந்தியை நோக்கி ஒருவரை இழுத்துச் செல்வது என்பதன்று. ‘அவமதித்தல்’ அல்லது ‘மானக்கேடான சம்பவங்களைப் பிறரறிய வெளிப்படுத்தல்’ என்பதே மரபுப் பொருளாகும். ஒருவன் மற்றொருவனைச் சந்திக்கு இழுத்தால் அங்கே அவர்கள் சிரிக்கமாட்டார்கள். சந்தி சிரிக்கும்! சந்தியென்றால் வேடிக்கை மனிதர்கள்!

    குளிர்ந்தது நெஞ்சா? வயிறா?

    வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும் இங்கு வாழும் மனிதருக்கெல்லாம்’ என்பார் மகாகவி. புவியனைததையும் ஒரு சேர நோக்கி அனைத்தையும் தன் கவிக்குடைக்குள் கொண்டு வர எத்தனித்த அவன், ஒரு தனிமனிதனின் உணவுப் பசியைப் போக்குவதையே தலையாய தொண்டாகக் கருதினான்.  பாரதிக்கு முன்னால் அறச்செல்வி மணிமேகலை இதனை முன்னெடுத்திருந்தாலும் அவள் ‘கவிதாயினி’ அல்லள். பாரதி வையகத்து மாகவிஞன். ‘தனியொருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்’ என்று தத்துவ முரணை முன்னெடுக்கிறான். சமுதாயத்திற்காகத் தனிமனிதன் என்பதுதான் நெறி. பாரதி பசியின் கொடுமையைச் சித்திரிக்க வேண்டி தனிமனிதனுக்காகவே சமுதாயம் என்று முன்னெடுக்கும் நுட்பம் உணரத்தக்கது. வயிற்றை அடிப்படையாகக் கொண்ட இச்சமுதாய வழக்கினை அறிஞர் முனைவர் தமிழகன் ஐயா அவர்கள மிகச் சிறப்பாகக் குறிப்பிடுகிறார்.

    வயிற்றில் பால் வாரத்தல்

    ‘பால்வார்த்தல் என்பது பாம்புக்குரிய பழமொழியின் பகுதி. ‘பாலாபிஷேகம்’ என்பது இறைவழிபாட்டில் இடம்பெறுவது. ‘பூவே பூச்சூடவா என் நெஞ்சில் பால் வார்க்க வா’ என்பது வைரமுத்தின் வரி. ஆனால் வயிற்றில் ‘பால் வார்த்தல் என்பது வழக்கு. வாழ்க்கைச் சிக்கல்களில் விடும் பெருமூச்சுக்களில் சிக்கித் திணறும் சூழலில் ஆறுதல் தரும் பொருளோ சேதியோ கிட்டும்போது வரும் வெளிப்பாடு இது. ‘சுகப் பிரசவம்’ எனக்கேட்டுத் தாய் பூரிக்கிறாள். ‘விபத்தில் பிள்ளை தப்பினான்’ என்னும் சேதி குடும்பத்தாருக்கு மகிழ்ச்சி. இவையெல்லாம் தொடர்புடையவர்களுக்கு ‘வயிற்றில் பால் வார்த்தது போல’ என்பதாம். வயிற்றுக்குச் சோறே கிட்டாதாரும் ‘வயிற்றுக்குப் பால் வாரத்தல்’ என்னும் இந்த வழக்கைப் பயன்படுத்துகிறார்கள். நல்ல சேதி நெஞ்சைக் குளிரவைக்கும். நல்ல சோறு வயிற்றின் பசிபோக்கும். நெஞ்சின் வினை வயிற்றுக்கு இடம் மாறும் உலகியலில் வழக்கில் பயன்படுத்தப்படும் மரபியல் தொடர் இது. பதற்றம் நெஞ்சுக்கானது என்பதைப் புரிந்து கொண்டால் மரபுத் தொடரின் ஆழமும் அழகும் புரியக்கூடும்.

    கொள்ளையடிததலும் வயிற்றிலடித்தலும்

    “ஊரை அடித்துப் போடும் அரசியல்வாதி’களோடு தற்போது அரசு அதிகாரிகளும் இணைந்திருக்கிறார்கள் என்பது தினச்செய்தி. ‘படியளப்பேன் என்று பாராள வந்தவர் தடியெடுப்பதும், கடமை செய்ய வந்தவர்கள கையூட்டல் வளம் பெறுவதும் கண்கூடு’. தகராறு வருகிறபோதோ சண்டைவருகிறபோதோ யாரும் வயிற்றில் அடித்துக் கொள்வதில்லை, உடலின் கீழ்ப்பகுதியாக அது இருப்பதால். ஆனால்  ஒருவனுடைய கை செயல்படாடமலேயே அடிப்பதுதான வயிற்றில் அடிப்பது.  வயிற்றுப் பிழைப்புக்கான வழியைத் தூர்ப்பதே வயிற்றில் அடிப்பது என்பதன் பொருள். சமுதாயத்தின்  எதிர் நிலைச் செயல்பாடுகளை இத்தகைய ஆழமான, அடர்த்தி நிறைய குறிக்கும் புலனெறி வழக்கு இன்மையையும் உணர்தல் வேண்டும். ‘அல்லற் பட்டு ஆற்றாது அழுத கண்ணீர்’ என்னும் இலக்கிய வழக்கினையும் ‘என் வயிற்றில் அடிச்சுட்டானே’ என்னும் சமுதாயப் புலம்பலையும் இணைத்து மதிப்பிடின் உண்மை துலங்கும்! உருக்கம் தெரியும்!

    எரிந்து சொல்வதும் எரிச்சல் படுவதும்

    சில நேர்வுகளில் புலனெறி வழக்கின் ஆழத்தைவிட, நுட்பத்தைவிட வழக்கின் நுண்ணியம் சிறந்து நிற்கும். ‘வயிறெரிந்து சொல்கிறேன்’ என்னும் வழக்கு அல்லற்பட்டு ஆற்றாது அழுதவனின் சொல்!. தெள்ளிய நீர்போல் கள்ளமில்லா உளததிலிருந்து சொல்கிறேன் என்பது கருத்து. ‘பலித்துவிடும்’ என்பது ‘அனுமானம்’ அன்று ‘திண்ணம்’. ‘நான் வயிறெரிந்து சொல்கிறேன், நீ உருப்பட மாட்டாய்! என்பது போல்வது இது. இதே வயிறு எரிதலை விட்டு எரிச்சல் படுவதும் உண்டு. அது வயிற்றெரிச்சல். இலக்கியவாதிகள் இதனை ‘அழுக்காறு’ என்று சொல்லி அதனைக் ‘கொள்ளாமை’ என்னும் பொருளில் ‘அழுக்காறாமை’ என எதிர்மறை இலக்கணம் எல்லாம் புணர்த்து எழுதுவார்கள். ஆசிரியர் பரிமேலழகர்,

    “அழுக்காறு என்பது ஒருசொல். பிறரர் ஆக்கம் கண்ட வழி பொறாமை. அச்சொல் பின் அழுக்காற்றைச் செய்யாமை என்னும் பொருள் எதிர்மறை ஆகாரமும் மகர ஐகாரவிகுதியும் பெற்று ‘அழுக்காறாமை என நின்றது”

    எனத் தம் மலையளவு புலமையை நிலவளவு காட்டுவார். ஆனால் இலக்கணம் அறியாது எதிர்வீட்டை மட்டுமே அறிந்த ஒரு தமிழச்சி பெண் “அடுத்த விட்டுக்காரி ஆம்பள புள்ள பெத்தா எதுத்த வூட்டுக்காரி இடிச்சுககிட்டுச் செத்தாளாம்’ என்று  ஓரங்க நாடகத்தையே நடததிவிட்டுப் போய்விடுவாள். உலகியலுக்குப் புலனெறி வழக்கு தலைவணங்கி நிற்கும் இடங்களில் இதுவும் ஒன்று.

    பூசி மெழுகலும் பூண்டற்றுப் போதலும்

    ‘தெளிவுபெற்ற மதியினாய்’ என்பார் பாரதியார். அறிவு தெளிவின் மேற்று. அதனால் பேச்சும் தெளிவின் மேற்று. மறைத்துப் பேசுதல் மாசுபடும். ‘நிரந்தினிது சொல்லுதல்’ சான்றோர் திறமை. உள்ளவாறே உரைத்தலும் நடந்தவாறே நவில்வதும் நல்லவர் கொள்கை. இவ்வாறின்றி ஒன்றைப் பிறிதொன்றாகக் கூறுவதும் மறைத்துக் கூறுவதும் மயங்கக் கூறுவதும் எதிர்மறை விளைவுகளேயே தரும். சிக்கலைத் தீர்க்க உதவாது. ‘வெட்டொன்று துண்டிரண்டாய் பேசு. ‘இந்தப் பூசி மெழுகிற வேலை இங்கு ஆகாது’ என்பது உலகியல். ‘உடைத்துப் பேசு’ என்பதும் அது. பூசி மெழுகுவதால் புரை ஆறாது என்பது தமிழர்தம் பண்பாட்டு விழுமியம்

    எள் அமங்கலப் பொருள். எருக்கும் அமங்கலப் பொருள். ‘வாழையடி வாழையென. என்பது மங்கலம். ஒரு குடும்பம், ஒரு அரசு இவையெல்லாம் தழைத்திருக்க வேண்டியன. அற்றுப்போகக் கூடாதன. குடும்பத்திற்குக் குழந்தையும் அரசிற்கு வாரிசும் இல்லாவிடின் வாரிசு அற்று வழிதோன்றல் இல்லாது போய்விடும். இதனைப் பூண்டற்றுப் போதல் என்பது உலகியல். ‘பூண்டும்’ என்பதில் உம்மை தொக்கது. உண்மையில் பூண்டு என்பது புல்லிற்கு அடுத்த நிலைத் தாவரம். தரை நனைய மழைபெய்தால் புல் துளிர்க்கலாம். ஆனால் வேர் நனைய பெய்தாலே பூண்டு தழைக்கும். அல்லலுக்கு ஆளாகித் துன்புறுத்தப்படும் ஏழைகளின் சாபத்தில் இந்த வழக்கு தென்படும். ஏழை அழுத கண்ணீருக்குப் பூண்டற்றுப் போகச் செய்யும் வலிமை உண்டு. அன்னப் பறவையும் அசுணப் பறவையும் இன்றைக்குப் பூணடற்றுப் போய்விட்டன.

    வெளுத்து வாங்குதலும் வெளிச்சம் போடுதலும்

    ‘முதல் மரியாதை’ திரைப்படப்பாடல்களின் ஒன்றில் ‘உள்ள அழுகுறேன் வெளிய சிரிக்கிறேன்’ நல்ல வேஷந்தான் வெளுத்து வாங்குறேன்’ என்று எழுதியிருப்பார் வைரமுத்து. ‘வெளுப்பது’ ஒரு வினை. ‘வாங்குதல்’ மற்றொரு வினை. வெளுத்து வாங்குதல் என்றால் ‘வெளுத்த துணியை வாங்குதல்’ என்னும் இருவினைத் தொகுப்பன்று. நடிப்பதன் உச்சி என்று பொருள். நேர்முகமாக இந்தத் தொடரை ‘கச்சேரியில் வெளுதது வாங்கினான்’ என்பர்.  எதிரியை ஏசுகிற போதும் ‘நல்லா வெளுத்து வாங்கிட்டியே!’ என்பர். நேர்முகமாகவும் எதிர்மறையாவும் இந்தத் தொடர் பயன்படுகிறது. தொடர்மழையால் துன்புறும் மக்கள் ‘வானம் வெளுத்து வாங்குது’ என்பர். இந்தத் தொடரில் உள்ள வெளுத்தல் என்னும வினைக்கும் சலவைத் தொழிலாளிக்கும் தொடர்பே இல்லை.

    “வீட்டுக்கெல்லாம் வெளிச்சம் போட கொடுத்த பணத்திலே
    அவர் வெளிச்சம் போட்டு வாழ்ந்து விட்டார் நகர சபையிலே” என்பது ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னாலே வந்த திரையிசைப்பாடல்.  இந்தப் பாடலில் முதலில் வநதிருக்கும் ‘வெளிச்சம்’ என்ற சொல் ஒளியையும் இரண்டாவது வந்திருக்கும் சொல்  ‘பகட்டு’ மற்றும ‘படோடாப உணர்ச்சிகளையும்’ குறிப்பதாக அமைந்திருக்கிறது. பாடுபட்டு உழைத்து எளிய வாழ்க்கையை வாழ்பவர்கள் இடையே வெற்று ஆடம்பரத்திற்காகவும் வீண் ஆரவாரத்திற்காகவும் போலிவாழ்க்கை வாழ்கிறவர்களை இந்தச் சொல் குறிக்கிறது. மரபுத் தொடர்கள் வாழ்வியல் குறியீடுகள் என்பதை நினைவிற் கொண்டால் இதன் பொருள் இன்னும் தெளிவாகும். ‘ஒய்யாரக் கொண்டையிலே தாழம்பூவாம் உள்ளே இருக்குமாம் ஈரும் பேனும்’ என்னும் பழமொழியின் கருத்தும் இதுவே!

    நிறைவுரை

    மரபுத் தொடர்களின் துணையின்றி உரைநடை சிறக்காது அதற்காக உரைநடையைச் சிறக்கவைப்பதே மரபுத் தொடர் என்பதல்ல. மரபுத் தொடர் காட்டும் வரலாறும் பண்பாட்டு விழுமியமும் நோக்கத்தக்கவை. மரபுத் தொடர்கள் என்பன சொல்லியல் அல்ல. பொருளியல். ஆம். அது தலைமுறைத் தேட்டம். முந்தைய தலைமுறை பத்திரப்பதிவு இல்லாமலேயே நமக்கு விட்டுச் சென்றிருக்கிற பல்லாயிரம் கோடி சொத்துக்கள், பண்பாட்டு உடைமைகள். மரபுத் தொடர்களை அறிவதும் அறிந்து பயன்படுத்துவதும் இன்றைய தமிழ்நாட்டார் கடமை. தமிழ் எழுத்தாளர்களின் கடமை. தமிழ்ப் பேராசிரியர்களின் கடமை. ‘வட்டார வழக்கு’ என ‘மொழிச்சேரி’ காண்பதை விட்டு மொழியில் ‘சமத்துவபுரம்’ காண்பதே இன்றைய உண்மையான தமிழ்த் தொண்டு. அந்தத் தொண்டினை அறிஞர் பிச்சை தமிழகன் செய்திருக்கிறார். கொட்டிக் கிடக்கின்ற மணிகளில் எதனைக் கொத்துவது எதனைக் கோப்பது என்று தெரியாமல் தட்டுத் தடுமாறி நின்ற நான் கட்டுரையின் அளவு கருதி ஒரு சிலவற்றை மட்டுமே காட்டியிருக்கிறேன். காட்டு மூலிகை ஒன்றினைக் திருச்சிராப்பள்ளி காசாமலை பிச்சையம்மாள் நகரில் கண்டெடுத்த மகிழ்ச்சியில் திளைக்கிறேன்!

    நூலாசிரியர் பற்றி

    கவிதைக்கு ஈரோடு தமிழன்பனையும் நாவலுக்குப் புதுவை பிரபஞ்சனையும் தந்த தஞ்சை கரந்தைப் புலவர் கல்லூரி கண்டெடுத்த கல்வெட்டு மாமணி பிச்சை தமிழகன்!. நூறாண்டு தமிழ் வாழ்வுக்குச் சொந்தக்காரரான நிறைதமிழ்ச் சான்றோர் அடிகளாசிரியரின் அணுக்கத் தொண்டர். அன்புக்கிசைந்த மாணவர். இவர் கால்படாத ஊர், கண்படாத திருக்கோயில் தமிழக வரைபடத்தில் இல்லை. திருச்சிராப்பள்ளி மாவட்டம் இலால்குடி வட்டம் குமுலூரில் தோன்றிக் கல்வெட்டைத் தத்தெடுத்துக் கொண்ட இவரைச், சொல்லியல் களவு மணம் புரிந்து கொண்ட கதை, சாண்டில்யன் சொல்லாத கதை! சிக்கனத்தைப் பேச்சிலும் உதவுவதில் தாராளத்தையும் கடைப்பிடிக்கும் இவர்  தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் சங்க இலக்கிய மரபுச் சொற்களை ஆய்ந்து ‘முனைவர்’ பட்டம் பெற்றவர்!. கருத்த தோற்றமும் வெளுத்த உள்ளமும் உடைய அறிஞர் பிச்சை தமிழகன், சொல்லாராய்ச்சிக் களம் காணும்  இறுதித் தலைமுறையின் இளைக்காத தளபதி!

    Share
  • தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 41

    தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 41

    புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள் 
    உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை 
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
    விளார் புறவழிச்சாலை, 
    தஞ்சை மாவட்டம் – 613006.
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    உவமங்களான இயற்கை

    முன்னுரை

    பொதுவாகத் தமிழ்க்கவிதைகளில் இயற்கை ஒரு பாடுபொருள் என்பது தெளிவான உண்மை. இயற்கையைப் பாடாத புலவர் இலர். அந்த இயற்கை பொருள் புலப்பாட்டுக் கருவியாக அதாவது உவமமாகப் பயன்படுத்தப்பட்டிருப்பது ஆய்வுக்கு உட்பட்டது. இயற்கைக் காட்சிகளும் இயற்கை நிகழ்வுகளும் தமிழ்க்கவிதைகளின் பாடுபொருளை எவ்வாறு உவமவழியில் பாதிக்கின்றன என்பதை ஆய்வது காலத்தேவையாகக் கருதப்படுகிறது. இயற்கையைப் பாடுபொருளாக்கிக் கொள்வதற்கும் அவற்றையே உவமங்களாக அமைத்துக் கொள்வதற்கும் வேறுபாடு உண்டு. சங்க இலக்கியங்களின் நிலைப்பேற்றுக்குப் பெரிதும் காரணமாக அமைந்த இயற்கையைப் பாரதிதாசன் உள்ளிட்ட கவிஞர்கள் பலரும் பாடியிருக்கிறார்கள். இயற்கைச் சித்திரிப்பை ‘அழகின் சிரிப்பு’ எனக் குறிப்பார் பாவேந்தர். பாவேந்தரைத் தொடர்ந்து வந்த கவிஞர்களில்  இயற்கையை ஓரளவு பாடியவராக வாணிதாசன் திகழ்கிறார். அவருக்குப் பின்னால் வைரமுத்தின் இயற்கை ஈடுபாடு பெரிதும் குறிக்கத்தக்கதாக உள்ளது. சங்ககால மக்களின் வாழ்வியல் களமாகவும், இலக்கியப் பாடுபொருளாகவும் விளங்கிய இயற்கை மறுமலர்ச்சிக் காலத்துக் கவிஞர்களின் வாழ்க்கையைக் கூட அவர்தம் ஒவ்வொரு கவியசைவிலும் பாதித்திருக்கிறது. இந்தப் பின்புலத்தில் இயற்கைக் கூறுகள் கவிதையில் உவமங்களாக அமைந்த பாங்கு பற்றி இக்கட்டுரை சுருக்கமாக ஆராய்கிறது.

    தமிழும் இயற்கையும்

    ‘இனிமையும் நீர்மையும் தமிழெனல் ஆகும்’ என்பதால் ‘தமிழ்’ என்னும் சொல்லுக்கு இவ்விரு பண்புகளும் உண்டு என்பது பெறப்படும். தாய்மொழியாகிய தமிழுக்கு இவ்விரண்டு பண்புகள் பொருந்தும்படியாகவே அதன் இயல்பு அமைந்துள்ளது. உலக மொழிகள் அனைத்திலும் தலைமை ஒலிவடிவமாக அகரம் அமைந்திருப்பதும், எத்தகைய முயற்சியுமின்றி வாயைத் திறந்தவுடன் அகரவொலி வெளிப்படுவதும் ‘தமிழ் ஒரு மொழி’ என்னும் நிலையில் இயற்கையைத் தழுவியமைந்திருக்கும் உண்மையை உணரப் போதுமானதாகும். மொழியின் தோற்றம் இவ்வாறு இயற்கையை ஒட்டி அமைந்திருப்பது போலவே அம்மொழியில் அமைந்த இலக்கணப் பாகுபாடுகளும் இலக்கியக் குறியீடுகளும் இயற்கையையொட்டி அமைந்திருப்பதும் சிந்திக்கத்தக்கது.

    தமிழ் இலக்கண இலக்கியங்களில் இயற்கை

    தமிழ் அகவிலக்கண மரபில் காணப்படும் திணைப்பாகுபாடுகளுக்கு முல்லை, குறிஞ்சி, நெய்தல், மருதம் எனப் பூக்களின் பெயர் சூட்டப்பட்டிருப்பதும், வெட்சி, வஞ்சி, உழிஞை, காஞ்சி, வாகை எனப் புறத்திணைகளுக்கும் பூக்களின் பெயர் சூட்டப்பட்டிருப்பதும் இயற்கை, தமிழருடைய வாழ்வியலோடு கொண்டிருந்த பிணைப்பைப் பறைசாற்றுவனவாம். பொருளிலக்கணப் பகுதிகளில் இயற்கையின் தாக்கம் இங்ஙனம் இருப்பதைப் போலவே மொழியிலக்கணத்திலும் அதன் பாதிப்பு அதிகமாகவே உள்ளது. சான்றாக,

    “ஆற்றொழுக்கு அரிமா நோக்கு தவளைப்
    பாய்த்துப் பருந்தின் வீழ்வுஅன்ன சூத்திர நிலையே”

    என்னும் நூற்பாவில், சூத்திரங்களின் நிலைக்கு இயற்கைப் பொருள்களின் வினைகளே உவமமாக்கப்பட்டுள்ளன. ஆற்றின் ஓட்டமும், அரிமாவின் பார்வையும், தவளையின் பாய்ச்சலும், பருந்தின் வீழ்ச்சியும் மொழியின் கட்டமைப்பு பற்றிய இலக்கணச் சிந்தனைகளைப் பாதித்திருக்கிறது எனக் கருதுவதற்கு இடமுண்டு. பட்டினப்பாலை, நெடுநல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, முல்லைப்பாட்டு, மலைபடுகடாஅம் என்னும் பத்துப்பாட்டுக்களின் பெரும்பான்மைப் பெயர்களும் மலர்களின் பெயர் தாங்கி நிற்பதும் மேற்கண்ட கூற்றை உறுதி செய்யலாம். தென்றல், மேகம், கிளி, மயில், குயில் எனத் தூது இலக்கியத்தின் தூதுவர்களும் இயற்கையைச் சார்ந்தவர்களாகவே  குறிப்பிடப்பட்டுள்ளனர்.

    தமிழ்க்கவிதை மரபில் இயற்கை

    தமிழிலக்கியக் கவிதை மரபில் இயற்கையின் இடம் குறிப்பிடத்தக்கது என்பது மேலே சுட்டப்பட்டது. ‘தனித்ததொரு பாடுபொருள்’ என்னும் நிலையில் இயற்கை தமிழ்க்கவிதைகளில் பாடப்பெறவில்லை என்பதை அறிஞர் மு.வ. தமது ‘பண்டைத்தமிழ் இலக்கியங்களில் இயற்கை’ என்னும் ஆய்வு நூலில் தெளிவுபடுத்தியிருக்கிறார். பெயரடைகளாக நின்று திணை விளக்கத்திற்குத் துணையாக விளங்கியதே சங்க இலக்கியங்களில் இயற்கை பாடப்பெற்றிருக்கும் நெறியாகும். ஐம்பெருங் காப்பியங்களிலும், கம்பராமாயணம், பெரியபுராணம் முதலிய இதிகாசக் காப்பியங்களிலும் ஆறு, காடு, சோலை இவற்றின் வண்ணனைகள் இடம்பெற்றுள்ளதை அறியமுடிகிறது. பரிதிமாற் கலைஞரின் கடற்கரைக் காட்சி, தாமரைத்தடாகம் முதலிய நூற்பகுதிகளும், மகாகவி பாரதியின் குயில்பாட்டின் சில பகுதிகளும், பாஞ்சாலி சபதத்தின் சில பகுதிகளும் இயற்கையில் உள்ள ஈடுபாட்டைக் காட்டக் கூடும். பாரதிக்குப் பின் வந்த கவிஞர்களின் படைப்புக்களில் இயற்கை தனக்குரிய இடத்தைத் தவறாமல் பெற்று வந்தது என்பதும் குறிக்கத்தக்கதே. ஆனால் இயற்கையைத் தனியொரு பாடுபொருளாகக் கொண்டு பாடப்பட்ட தமிழின் முதல் தொகுப்பு பாவேந்தரின் அழகின் சிரிப்பாகலாம்.

    தமிழ்க்கவிதைகளில் இயற்கைப் பயன்பாடு

    தமிழ் இலக்கணமும் இலக்கியமும் இயற்கையோடு பிரிக்க இயலாத உறவு கொண்டுள்ளன என்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழ்க்கவிஞர்கள் தங்கள் படைப்புக்களில் இயற்கையை ஐந்து வகையாகப் பயன்படுத்தியுள்ளதாகப் பகுத்துரைப்பார் அறிஞர் அ.கி.பரந்தாமனார். அவரது பகுப்பு வருமாறு:

    1. இயற்கையளிக்கும் காட்சியழகில் ஈடுபட்டுச் சித்திரிப்பது.
    2. இயற்கையை உவமையில் பயன்படுத்துவது.
    3. இயற்கையைப் பயன்படுத்திக் குறிப்பாகக் கருத்தைத் தெரிவிப்பது.
    4. இயற்கையை மானிட வாழ்வுடன் இணைத்துக் காட்டுவது.
    5. இயற்கை வாயிலாக அரிய நீதிகளையும் பெரிய உண்மைகளையும் தெரிவிப்பது.

    பேராசிரியர் பரந்தாமனாரின் பகுப்புக்கள் ஒவ்வொன்றும் தனித்தனி ஆய்வுப் பொருளாகும் வன்மையுடையது என்றாலும், அவரது இரண்டாவது பகுப்பான ‘இயற்கையை உவமையில் பயன்படுத்துவது’ பற்றிய விளக்கமுறை ஆய்வாக இந்தக் கட்டுரையைக் கருதலாம்.

    தமிழ்க்கவிதை உவமங்களில் இயற்கை

    சங்க இலக்கியத்தில் தொடங்கிய தமிழ்க்கவிதை நெடும்பயணத்துள்  உவமங்களின் ஆளுமை தனித்துச் சுட்டுதற்குரியது. தமிழ்க்கவிதைகளில் எடுத்தாளப்பட்டுள்ள உவமைகளில் சமுதாயச் சிந்தனைகள் தமக்கென தனித்ததொரு இடத்தைப் பெற்றுள்ளதைப் போலவே இயற்கையும் உவமங்களாகத் தனித்த இடத்தைப் பெற்றுள்ளது. இயற்கை உவமமாகும் பொழுது,

    1. இயற்கைக்கு இயற்கை உவமமாதல்
    2. இயற்கைக்குச் செயற்கை உவமமாதல்
    3. செயற்கைக்கு இயற்கை உவமமாதல்

    என மூன்று தனித்தனிக் களங்களில் செயல்படுவதை அறியமுடிகிறது. இயற்கையோடு இரண்டறக் கலந்தமைந்த வாழ்க்கை முறையும், நடைமுறை வாழ்வியல் உண்மைகளை இயற்கைக்கு ஏற்றியுரைக்கும் அழகியல் உணர்வும், இயற்கை நிகழ்வுகளைச் சுட்டிக்காட்டி நடைமுறை வாழ்க்கையைச் செப்பனிடல் வேண்டும் என்னும் பொதுநல உணர்வும் ஆகிய மூன்றுமே மேற்சுட்டிய மூன்றுவகை நிலைப்பாடுகளுக்குக் காரணம் எனலாம்.

    இயற்கைக்கு உவமமான இயற்கை

    மானுட வாழ்வியல், இயற்கையிலிருந்து தொடங்கி நிகழ்வதாகலின், உவமம் பெரும்பாலும் இயற்கைப் பொருள்களிலிருந்தும் அவற்றின் அசைவுகளிலிருந்துமே தோன்றியன ஆதல் வேண்டும். ‘மாடாட்டம் உழைக்கிறான், ‘மயில் மாதிரி பெண்’, ‘குயில் மாதிரிப் பேசினாள்’, ‘எருமை  மாதிரி நிற்கிறான்’, ‘தென்றலாய் வந்தாள்’, ‘புயலாய்ச் சீறினாள்’, ‘பனை மாதிரி வளர்ந்தவன்’ என்றெல்லாம் நிலைபெற்றிருக்கும் வழக்குகள், உவமத்தின் நிலைக்களம் இயற்கையே என்பதைப் புலப்படுத்தும். இயற்கைப் பொருளைச் சித்திரிக்கின்ற நேர்வுகளில் கூட மற்றொரு இயற்கைப் பொருளையே உவமமாகக் கூறும் போக்கைக் காணமுடிகிறது. இயற்கையில் வளர்ந்த உகாய் மரத்துக்குப் புறாவின் முதுகையும் அதில் விளைந்த கனிகளுக்கு நீலமணியையும் உவமித்திருப்பதன் மூலம் இயற்கைக்கு இயற்கையை உவமமாக்கும் தமிழ்க்கவிதைக் கொள்கையைப் புரிந்து கொள்ள முடிகிறது.

    “புறவுப் புறத்தன்ன புன்கால் உகாஅய்க்
    காசினை அன்ன நளிகனி யுதிர” (குறுந்தொகை – 274)

    குறுந்தொகையில் இதே பொருளுக்குக் கூறப்பட்டிருக்கும் இதே உவமையை,

    “மணிக்கா சன்ன மானிற இருங்கனி
    உகாய் மென்சினை உதிர்வன கழியும்” (அகநானூறு – 293)

    என அகநானூற்றிலும் காணமுடிகிறது.

    இயற்கைக்கு உவமமான இயற்கை

    போர்க்களத்தில் போர்செய்து புண்பட்ட யானையினது முகத்தைச், செங்காந்தள் மலர் விழுந்த பாறைக்கு உவமித்திருப்பதையும் சங்க இலக்கியம் காட்டுகிறது.

    “பொருத யானை புகர்முகம் கடுப்ப
    மன்றத் துறுகல் மீமிசைப் பலவுடன்
    ஒண்செங் காந்தள் அவிழும்” (குறுந்தொகை – 284)

    பாறையில் காந்தள் விழுவது இயற்கை. போர்க்களத்து யானைமுகம் புண்படுவது களத்தொழிலின் காரியம். காந்தள் விழுந்த பாறை புண்விழுந்த யானை முகமானது, இயற்கைக்குச் செயற்கையை உவமமாக்கும் புலவர் திறம்.

    இயற்கைக்கு உவமமான செயற்கை

    இயற்கைக்கு இயற்கையே உவமம் என்னும் நிலையிலிருந்து இயற்கைக்குச் செயற்கையை உவமமாக்கும் திறனையும் தமிழ்க்கவிதைகளில் காணமுடிகிறது. பெண்பல்லியைத் துணைக்கழைக்கும் ஆண்பல்லியின் இயற்கை ஒலிக்கு, அம்புநுனியைத் தீட்டுவதனால் உண்டாகும் ஒலியை உவமை கூறும் திறன் சங்கச் சான்றோர்களுக்கு இருந்திருக்கிறது.

    “கள்வர்தம்
    பொன்புணை பகழி செப்பம் கொண்மார்
    உகிர் நுதி புரட்டும் ஓசைபோல
    செங்காற்பல்லி தன் துணை பயிரும்” (குறுந்தொகை – 16)

    என்னும் இவ்வடிகளில் ஆண்பல்லியின் அழைப்பொலிக்கு ஆறலைக் கள்வர்கள் தம் அம்புகளைச் செப்பம் செய்வதற்காகத் தங்கள் நகத்தினால் கீறிப்பார்க்குங்கால் எழும் நுட்பமான ஒலியை உவமையாக்கியிருப்பது நோக்கத்தக்கது.

    பாவேந்தர் பாரதிதாசன் தமது கவிதைகளில் இயற்கைக் காட்சிகளை விளக்குதற்குச் செயற்கைக் காட்சிகளை உவமிக்கும் போக்கைக் காணமுடிகிறது. தாமரைச் செவ்வரும்பு தடாகத்தில் தோன்றும் இயற்கைக் காட்சிக்கு, மாலையில் மங்கையர் ஏற்றிய விளக்குச் சுடரை உவமையாகக் கூறியிருக்கிறார்.

    “மணியிருள் அடர்ந்த வீட்டில்
    மங்கைமார், செங்கை ஏந்தி,
    அணிசெய்த நல்வி ளக்கின்
    அழகிய பிழம்புபோல
    தணிஇலை பரப்பி னிற்செந்
    தாமரை செவ்வரும்பு
    பிணிபோக்கி என்விழிக்குப்
    படைத்தது பெருவிருந்தே” (அழகின் சிரிப்பு)

    என்னும் கவிதையில் இயற்கையில் தோன்றும் ஓர் அழகிய காட்சிக்கு நடைமுறை வாழ்வியல் நிகழ்ச்சி ஒன்றினை உவமிக்கும் போக்கைக் காணமுடிகிறது.

    செயற்கைக்கு  உவமமான இயற்கை

    பிறவிப் பெரும் பிணி தொலைக்க வேண்டுமானால் இறைவனுடைய திருவடியைப் பற்ற வேண்டும் என்பது நியதி. இறைவனை அடைகின்ற வழிகள் இரண்டு. ஒன்று விரதங்கள். இரண்டு ஞானம். விரதங்களினால் ஞானம் கைகூடும். ‘வினை மாசு தீர்ந்து அந்தக் கரணங்கள தூயவாதற் பொருட்டு ஒருவரால் காக்கப்படும் விரதங்களும் அவற்றால் அவை தூயவாய வழி உதிப்பதாய ஞானமும் என இருவகைப்படும்’ என விளக்குவார் பரிமேலழகர். ஆனால் உலகியலில் இது அவ்வளவு எளிதாகக் கைகூடுமாறில்லை. எனவே சரணாகதி ஒன்றுதான் ஒரே வழி. அதுபற்றிப் பாடுகிற குலசேகர ஆழ்வார் ‘நினது அருளன்றி நான் மீள்வதற்கில்லை’ என்னும் தம் கருத்தினை விளக்குதற்குச் சில உவமங்களைப் பயன்படுத்தியிருக்கிறார்.

    “செங்கதிரே வந்தழலைச் செய்திடினும் செங்கமலம்
    அந்தரம் சேர் வெங்கதிரோர்க் கல்லால் அலராவால்!
    வெந்துயர் வீட்டாவிடினும் வித்துவக் கோட்டம்மா! உன்
    அந்தமில் சீர்க்கல்லால் அகங்குழைய மாட்டானே!

    எத்தனையும் வான் மறந்த காலத்தும் பைங்கூழ்கள்
    மைத்தெழுந்த மாமுகிலே பார்க்கும் அதுவே போல்
    மெய்த்துயர் வீட்டாவிடினும் வித்துவக்கோட்டம்மா!
    சித்தம் மிக உன்பாலே வைப்பன் உன் அடியேனே!

    தொக்கு இலங்கி ஆறு எல்லாம் பரந்தோடி தொடுகடலை
    புக்கன்றிப் புறம் நிற்க மாட்டாத மற்றவைபோல்
    மிக்கிலங்கு முகில் நிறத்தாய் வித்துவக் கோட்டம்மா! உன்
    புக்கிலங்கு சீரல்லால் புக்கிலன் காண் புண்ணியனே!”

                                       (பெருமாள் திருமொழி)

    விரதமும் ஞானமும் மானுட முயற்சியால் கைகூடுவது. எனவே செயற்கை. வெப்பமாக இருந்தாலும் தாமரை செங்கதிரோனுக்கு மட்டும் மலர்வதும், பயிர்கள் வான்மழையை எதிர்நோக்குவதும், ஆறுகள் கடல் நோக்கிப் பயணிப்பதும் இயற்கை. ஆழ்வார் பாசுரங்களில் இத்தகைய உவமக் கோட்பாடு இழைவதைக் காணமுடிகிறது.

    ஆடவரின் மீசையின் பொலிவு, மயிரின் கன அளவையும் கத்தரிக்கோலைக் கையாள்பவனின் திறனையும் பொருத்தது. மயிர் வளர்வது இயற்கை. அதனை மீசையாகக் காட்டிக் கொள்வது மனித முயற்சியான செயற்கை. இந்த மீசைக்கு அணிலின் வாலை உவமை கூறுகிறார் கவிஞர் பனப்பாக்கம் சீதா.

    “அணில்வாலைப் போன்ற மீசை
    அமைந்தநற் புலவர்” (பனப்பாக்கம் சீதா பாட்டுப் பயணம்)

    அக்காலப் புலவர்களுக்கு அணில்வாலைப் போல மீசை இருந்ததாகக் கூறுவதைப் போலவே பாவேந்தர் பாரதிதாசன் பாண்டியன் பரிசு காவியத்தில்,

    “கிளிக்கழுத்தின் பொன்வரிபோல் அரும்பும் மீசை” (பாண்டியன் பரிசு)

    என அரும்புகிற மீசைக்குக் கிளிக்கழுத்தில் இருக்கின்ற பொன்வரிகளை உவமமாக்கிக் காட்டுகிறார்.

    இயற்கைக்கு உவமமான இலக்கணம்

    மேற்கண்ட முந்நிலைகளேயன்றி இயற்கைக்கு இலக்கணத்தையே உவமமாக்கும் போக்கையும் காணமுடிகிறது. வயலோடு நீர் சேர்வது இயல்பானது., மெய்யோடு உயிர் சேர்வது இயல்பானது. இரண்டிடத்திலும் சேர்க்கை செயற்கையானது அல்ல, இயற்கையானது.

    “வெடித்திருந்த வயலெல்லாம் தண்ணீ ராலே
    மெய்யெழுத்தின் முன்னுயிர்போல் பொருந்திக் கொள்ள” (தேன்மழை)

    என்னும் உவமையில், இலக்கணத்துள் புணர்ச்சி இயற்கையானதைப் போலவே, வயலுக்குள் நீர்பாய்வதும் இயற்கையாயிற்று என்னும் உவமைக்கவிஞர் சுரதாவின் உவமத்திறன் காண்க.

    “உடம்பொடு உயிர் வந்து ஒன்றுவது இயல்பே”  (நன்னூல்)

    என்னும் இலக்கண நூற்பாவின் கருத்தை உள்வாங்கிக் கொண்ட கவிஞர் சுரதா வெகு இயல்பாகவும், இயற்கைக் காட்சியொன்றைச் சித்திரிக்கும் நோக்குடனும் கையாண்டிருக்கும் உவமத்திறன் பாராட்டத்தகுந்தது.

     மறைந்த மடந்தையும் மறைந்த பொருள்களும்

    மீசையாகிய செயற்கைப் பொருளுக்கு இயற்கைப் பொருளை உவமிக்கும் பொழுது உவமமாக ஒரு பொருளே வந்துள்ளது. மாறாக செயற்கைக்கு இயற்கைப் பொருளை உவமிக்குங்கால், ஒரு பொருளுக்குப் பல உவமைகளைத் தொகுத்துச் சுட்டும் வழக்கும் தமிழில் உண்டு. சான்றாக,

    “இலைகளுக்குப் பின்புறத்தில் காய்கள் போன்றும்
    இருள்முகிலின் பின்புறத்தில் நிலவு போன்றும்
    மலைகளுக்குப் பின்புறத்தில் சிற்றூர் போன்றும்
    மறைவாக அரண்மனையில் வாழ்ந்து வந்த
    கலைமடந்தை”  (தேன்மழை)

    என்னும் கவிதை வரிகளில், அரண்மனையில் ஒதுக்குப்புறமாகப் பிறரால் அறிந்து கொள்ள இயலா வண்ணம் வாழ்ந்து வரும் இளவரசி ஒருத்திக்கு, இலைமறைக்கும் காயும், முகில் மறைக்கும் நிலவும், மலை மறைக்கும் சிற்றூரும் உவமைகளாய்க் கையாளப்பட்டிருக்கும் பாங்கினைக் காணலாம்.  இதனால் செயற்கையின் ஒரு பொருளுக்கு இயற்கையின் பலபொருள்கள் உவமமாக்கப்படுவதும் தமிழ்க்கவிதைகளின் உவமக்கோட்பாடுகளில் ஒன்றாகக் கொள்ள முடியும்.

    நிறைவுரை

    மேற்கண்ட சான்றுகளால் இயற்கைக்கு இயற்கை, இயற்கைக்குச் செயற்கை, செயற்கைக்கு இயற்கை என்னும் மூவகைத் தளங்களில் இயற்கைப் பொருள் உவமமாகப் பயன்படுத்தப்பட்டிருக்கும் பாங்கு ஓரளவு ஆராயப்பட்டது. இயற்கைச் சித்திரிப்பிற்குத் தமிழிலக்கணக் கூறுகளும் உவமங்களாய் வந்துள்ளன என்பதும் சுட்டப்பட்டது. இவ்வாறெல்லாம் வகுத்துக் கொண்டு உவமங்களைப் பயன்படுத்துவது பற்றிய எந்தத் திறனாய்வுக் கொள்கையும் தற்காலத்தில் இல்லை. காட்டப்பட்ட உவமங்கள் எல்லாம் படைப்புக்களில் அனிச்சையாக வந்தவை. வந்து அமைந்தவை. ஒரு காலத்திய இலக்கியத்தினை, ஒரு மொழிக்குரிய இலக்கியத்தைத் திறனாய்வு செய்ய காலத்தால் பிற்பட்ட, முற்றிலும் தொடர்பில்லாத மேனாட்டுத் திறனாய்வுக் கொள்கைகளைப் பயன்படுத்துவது அவ்வளவாகப் பொருந்தாது, பயன்தராது என்பதை இந்தக் கட்டுரை ஓரளவு விளக்கியிருக்கக்கூடும்.

    (தொடரும்…)

    Share
  • வெப்ப யுகக் கீதை !

    வெப்ப யுகக் கீதை !

    சி. ஜெயபாரதன், கனடா

    இப்போது
    உன்னை மூழ்க்கி அமுக்குவது
    வெப்ப யுகச் சூரியன் !
    விழித்துப் பார் !
    தப்ப முடியாது !
    மாந்தர்
    கப்பம் கட்டணும் !
    பூகோளம் முன் சீர்நிலை
    மீளாதவாறு
    கோளாறாகப் போச்சு !

    நீரில்லை
    என்று அழுதாய்
    நேற்று !
    இடிமின்னல்
    ஓட்டை உடைத்து உனது
    வீட்டை மூழ்க்குது
    இப்போது.
    வருண பகவான் தான்
    கருணையற்றுப்
    பொழிகிறான் !

    காற்றில்லை
    என்று என்மேல் மண்வாரித்
    தூற்றினாய் !
    சூறாவளி அடித்து
    மூச்சை நிறுத்தியது !
    தெரிந்துகொள்
    மூன்றாம்
    கலியுக யுத்தம்,
    குருச்சேத்திரப் போர் !

    போப்பாண்டவர் படித்த
    பைபிள் கூறும்
    பிரளயப் பேரழிவு அல்ல !
    இயற்கை
    எச்சரிக்கை செய்யும்
    இச்சிறு காட்சிகள் யாவும்
    அச்சமூட்டும்
    அசுர ஒத்திகை !

    கரிவாயு
    வெளி வீச்சுக்கு
    வரம்பு,
    வரிகள் போடு !
    வடிகட்டு !
    உருமாற்று !
    கரிவாயுவை
    இரசாயனத் தொழில்மூலம்
    எரிவாயுவாக
    மாற்றம் செய்வாய் !
    கட்டணம் விதிப்பாய்
    கரிவாயுக்கு !
    வருமானம்
    பேரிடர் கையாள.
    பேரழிவு
    ஈடு செய்வதற்கு.

    பூமியில்
    வெப்ப யுகச் சீர்கேடு !
    மீளாது
    சீர்நிலைக்கு !
    மானிடர்
    தப்ப முடியாது, அஞ்சேல் !
    நானினி வருவேன் !
    யுகே யுகே !

    ==============================

    Share
  • குறளின் கதிர்களாய்…(376)

    குறளின் கதிர்களாய்…(376)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்…(376)

    உறினட் டறினொரூஉ மொப்பிலார் கேண்மை
    பெறினு மிழப்பினு மென்.

    – திருக்குறள் – 812(தீ நட்பு)

    புதுக் கவிதையில்

    பயன் தனக்கு உள்ளபோது
    பொருந்தி நட்பில் இருந்தும்,
    பயன் இல்லாத போது
    பிரிந்தும் சென்றுவிடும்
    பெருத்தமிலாதார் நட்பைப்
    பெற்றால் என்ன
    இழந்தால் என்ன,
    எல்லாம் ஒன்றுதான்…!

    குறும்பாவில்

    பயனிருந்தால் நட்புக்கொண்டும் இலாதபோது
    விலகியும் இருப்பதில் இணையற்றவர்கள் நட்பினைப்
    பெற்றாலும் இழந்தாலும் ஒன்றே…!

    மரபுக் கவிதையில்

    தனக்குப் பயனே கிடைக்குமெனில்
    தானே நட்பில் வந்துசேர்ந்தும்
    நினைத்த படியே நன்மையெதும்
    நேரில் கிடைக்க வில்லையெனில்
    தனக்கு வேண்டாம் நட்பெனவே
    தவிர்த்துச் செல்லும் வல்லமையில்
    தனக்கு நிகரே யிலார்நட்பும்
    தந்த யிழப்பும் ஒன்றுதானே…!

    லிமரைக்கூ

    பயனதில் நட்பில் என்றே
    சேர்ந்தும்,  இலையெனில் விலகிடும் பொருந்தார்
    நட்பும் இழப்பும் ஒன்றே…!

    கிராமிய பாணியில்

    வேணும் வேணும்
    நல்லவுங்க நட்பு,
    வேண்டவே வேண்டாம்
    கெட்டவுங்க தொடர்பே..

    தனக்கு நல்லது கெடச்சா
    நடபுல ஒட்டிக்கிட்டு,
    இல்லயிண்ணா நட்பவிட்டு
    வெலவுகிற பொருத்தமில்லாதவன்
    நம்மோட நட்புல இருந்தாயென்ன
    போனாயெனன்ன,
    ரெண்டுமே ஒண்ணுதான்..

    அதால,
    வேணும் வேணும்
    நல்லவுங்க நட்பு,
    வேண்டவே வேண்டாம்
    கெட்டவுங்க தொடர்பே..!

    Share
  • கன்னியாகுமரியில் வெள்ளப் பெருக்கு – 2

    கன்னியாகுமரியில் வெள்ளப் பெருக்கு – 2

    அதிக கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நேற்றைய தினம் அதிகாலையில் ஒருமணி நேரத்துக்கும் மேலாகக் கனமழை பெய்தது. அதன்பின்னர் பகலில் அவ்வப்போது கனமழை பெய்தது. சில நேரங்களில் வெயில் அடித்தது.

    * திற்பரப்பு அருவியில் நேற்று முன் தினத்தை விடக் குறைந்த சீற்றத்துடன் வெள்ளம் பாய்ந்தோடியது. நேற்றைய முன் தினத்தை விடச் சற்று தெளிவாக அருவியில் தண்ணீர் கொட்டியது. அருவியின் மேற்பகுதி தடுப்பணையில் மறுகால் இட்டதால் படகு சவாரி நடக்கவில்லை.

    * மாத்தூர் தொட்டிப்பாலத்தின் கீழே ஓடும் பரளியாற்றுத் தண்ணீர், அருவிக்கரை – வேர்க்கிளம்பியை இணைக்கும் சப்பாத்துப் பாலத்தை மூழ்கடித்தபடி நேற்று முன்தினம் முதலே சென்று கொண்டிருந்தது. நேற்று மாலை வரை தண்ணீர் வரத்து குறையவில்லை. இதனால் அருவிக்கரை ஊராட்சியில் இருந்து மறு பகுதியிலுள்ள பொன்னன் சிட்டி விளை, முதலார் ஆகிய பகுதிகளுக்கு வாகனங்கள் செல்ல முடியாத நிலை எற்பட்டு, வாகனங்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்பட்டன. இந்த மழை நேரத்திலும் மாத்தூர் தொட்டிப்பாலத்தைப் பார்க்க, பல்வேறு பகுதிகளிலும் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து தொட்டிப்பாலத்தைப் பார்த்து மகிழ்ந்து சென்றனர்.

    களத்திலிருந்து இதோ சில காட்சிகள்.

    செய்தி & படப்பதிவு: திருவட்டாறு சிந்துகுமார்

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • சரிகமபதநி

    சரிகமபதநி

    குழந்தைகள் தினச் சிறப்பு வெளியீடு. ஹரி நாராயணனின் சரிகமபதநி.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • முடிச்சூர் ஏரி நிரம்பியது

    முடிச்சூர் ஏரி நிரம்பியது

    சென்னை, தாம்பரத்தை ஒட்டியுள்ள முடிச்சூர் ஏரி நிரம்பியது. இதன் மேற்பரப்பை ஆகாயத் தாமரைகள் மூடியுள்ளன. இந்த ஏரியின் உபரி நீர், கால்வாய்களில் பாய்ந்து ஓடுகின்றது. களத்திலிருந்து இதோ சில காட்சிகள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • கன்னியாகுமரியில் வெள்ளப் பெருக்கு

    கன்னியாகுமரியில் வெள்ளப் பெருக்கு

    கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று முன் தினம் இரவு முதல் நேற்றுவரை விடாமல் கனமழை கொட்டித் தீர்த்தது.

    பெருஞ்சாணி அணையில் இருந்து வெள்ளம் திறந்துவிடப்பட்டுள்ளதால் மாத்தூர் தொட்டிப் பாலத்தின் அருகே அருவிக்கரைப் பகுதியில் பரளியாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    திற்பரப்பு அருவியின் அனைத்துப் பகுதிகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. எங்கும் வெண்ணிறப் புகை மண்டலமாய் அருவித் தண்ணீர் கொட்டுகிறது. அருவியின் முன்பகுதி சிறுவர் குளத்தை மூழ்கடித்து, கல்மண்டபம் வழியாக தண்ணீர் ஓடுகிறது. குளிக்க அனுமதி இல்லாதாதால் வருகை தந்த சுற்றுலாப் பயணிகள், தடுப்பு வேலி வழியாக அருவியைப் பார்த்துத் திரும்பினர். தடுப்பணையில் தண்ணீர் வரத்து அதிகரித்ததால் படகு சவாரியும் நடைபெறவில்லை. இதனால் படகுத் துறையில் படகுகள் அனைத்தும் ஓய்வெடுத்துக்கொண்டன.

    திருநந்திக்கரை நந்தீஸ்வரர் ஆலயத்தையொட்டி மழை நீர் புகுந்துள்ளது. கோயில் உட்பிரகாரம் மற்றும் வெளிப்பிரகாரங்களைச் சுற்றி மழை நீர் ஆறாக ஓடியிருப்பதோடு விளை நிலங்களுக்கு உள்ளும் புகுந்துள்ளது.

    களத்திலிருந்து இதோ சில காட்சிகள்.

    செய்தி & படப்பதிவு: திருவட்டாறு சிந்துகுமார்

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • தாம்பரத்தில் வெள்ளம் வடிகிறது

    தாம்பரத்தில் வெள்ளம் வடிகிறது

    ஒரு வார அவதிக்குப் பிறகு தாம்பரம் மீண்டு வருகிறது. இன்று வெள்ளம் வடியத் தொடங்கியிருக்கிறது. இயல்பு வாழ்க்கை திரும்பிக்கொண்டிருக்கிறது. இதோ களத்திலிருந்து சில காட்சிகள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • வெறுங்கையால் மீன்பிடிக்கலாம்!

    வெறுங்கையால் மீன்பிடிக்கலாம்!

    தூண்டிலும் வலையும் வேண்டாம். வெறுங்கையாலேயே மீன்பிடிக்கலாம். இதோ ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மண்ட்டேஷ் குமார் யாதவ், முடிச்சூர் கால்வாயில் வெறுங்கையால் மீன்பிடிப்பதைப் பாருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • சென்னையில் இப்படி ஓர் இடமா?

    சென்னையில் இப்படி ஓர் இடமா?

    மழையால் ஒரு புதிய சுற்றுலாத் தலம் உருவாகிவிட்டது.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • தாம்பரம் வெள்ள நிலவரம்

    தாம்பரம் வெள்ள நிலவரம்

    தாம்பரத்தில் மழை நின்றபோதும் தாழ்வான பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. எந்த இடத்தில் எவ்வளவு தண்ணீர் நிற்கின்றது? இதோ வெள்ளத்தின் ஊடே ஒரு பயணம்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • வெள்ளத்தில் ஒரு பாம்பு

    வெள்ளத்தில் ஒரு பாம்பு

    வெள்ளத்தில் பொதுவாகத் தண்ணீர் மட்டும் வருவதில்லை. ஊரில் உள்ள குப்பை கூளங்களும் மீன்கள், தவளைகள், வண்டுகள், பூச்சிகள் எனப் பலவும் கூடவே வரும். இன்று தாம்பரம் பாப்பான் கால்வாயில் பெருகி ஓடும் வெள்ளத்தில் ஒரு பாம்பினைப் பார்த்தேன். இதோ அந்தக் காட்சிகள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • தமிழகம் கண்ட திறன்மிகு எழுத்தாளர்

    தமிழகம் கண்ட திறன்மிகு எழுத்தாளர்

    -மேகலா இராமமூர்த்தி

    தமிழகத்தின் சிறந்த எழுத்தாளர்களை நாம் வரிசைப்படுத்தினால் அதில் குறிப்பிடத்தக்கதோர் இடத்தைப் பெறுபவர் வல்லிக்கண்ணன் அவர்கள். கதை, கவிதை, கட்டுரை, நாடகம், திறனாய்வு என்று இலக்கியத்தின் பல வகைமைகளிலும் சுவடுபதித்த வல்லிக்கண்ணன், கட்டுரையாளராகத் தனிமுத்திரை பதித்த சாதனையாளராவார்.

    திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி வட்டத்திலுள்ள திசையன்விளை எனும் ஊரில் நவம்பர் 12, 1920இல் சுப்பிரமணியப் பிள்ளை, மகமாயி அம்மாள் இணையருக்கு மகனாய்ப் பிறந்தவர் ரா.சு. கிருஷ்ணசாமி எனும் இயற்பெயர்கொண்ட வல்லிக்கண்ணன்.

    பின்னாளில் அவர் எழுத்தாளராக மாறியபின் தமக்கொரு புனைபெயர் சூட்டிக்கொள்ள விழைந்து, தம் முன்னோர்களின் பூர்வீகமான இராஜவல்லிபுரத்திலுள்ள ’வல்லி’யையும், தம் பெயரான கிருஷ்ணசாமி என்பதன் தமிழாக்கமான ’கண்ணனை’யும் இணைத்து வல்லிக்கண்ணன் ஆனார்.

    சிறு பத்திரிகைகளுடனான அறிமுகம் வல்லிக்கண்ணனுக்குச் சிறுவயதிலேயே கிடைத்துவிட்டது. பரலி சு. நெல்லையப்பரின் லோகோபகாரி எனும் சிற்றிதழும், சங்கு சுப்பிரமணியம் என்பவர் நடத்திய சுதந்திரச் சங்கு எனும் பத்திரிகையும், காந்தி, மணிக்கொடி போன்ற இதழ்களும் அவருக்குப் பள்ளி நாட்களிலேயே படிக்கக் கிடைத்தன. அதனால் இளம்பருவத்திலேயே சிற்றிதழ்களின் காதலன் ஆனார் வல்லிக்கண்ணன்.

    படிப்பதில் இருந்த ஆர்வம் எழுதுவதிலும் அவருக்கு ஏற்பட்டது. எனவே, தாமும் கதைகள் கட்டுரைகள் என்று எழுதத் தொடங்கினார். அவ்வாறு பதினாறு வயதில் தொடங்கிய அவரின் எழுத்துப்பணி அவர் வாழ்வின் இறுதிவரைச் சலிப்பின்றித் தொடர்ந்தது.

    பள்ளியிறுதிப் படிப்புக்குப் பின் அரசுவேலையில் சேர்ந்த வல்லிக்கண்ணன், தம்முடைய ஓய்வுநேரத்தை படிப்பதிலும் எழுதுவதிலும் செலவழித்துவந்தார். அதனால், பணியிடத்தில் மேலதிகாரியின் அதிருப்திக்கு ஆளானார். ஒருகட்டத்தில் அரசுப்பணி தம் எழுத்துப்பணிக்கு இடையூறாக இருக்கும் என்பதை உணர்ந்து அதனைத் துறந்து முழுநேர எழுத்தாளரானார்.

    சினிமா உலகம், நவசக்தி, கிராம ஊழியன் உள்ளிட்ட சிறு பத்திரிகைகள் பலவற்றில் வல்லிக்கண்ணனின் தொடக்ககாலப் படைப்புகள் வெளிவந்தன. திருமகள், சினிமா உலகம், நவசக்தி, கிராம ஊழியன் முதலிய பத்திரிகைகளில் ஆசிரியராகவும் பணிபுரிந்த அனுபவம் அவருக்கு உண்டு.

    புகழ்பெற்ற குடந்தை எழுத்தாளரான தி. ஜானகிராமனின் முதல் நாவலான ‘அமிர்தம்’ கிராம ஊழியன் பத்திரிகையில் வல்லிக்கண்ணன் பணிபுரிந்துகொண்டிருந்தபோதுதான் வெளிவந்தது.

    பாரதி பரம்பரையில் வந்த கவிஞர்களுள் தலைசிறந்தவரான பாவேந்தர் பாரதிதாசனின் கவியாளுமையை விளக்கும் வகையில், ’பாரதிதாசனின் உவமை நயம்’ என்ற கட்டுரைத் தொடரை கிராம ஊழியன் இதழில் எழுதினார் வல்லிக்கண்ணன். பாவேந்தரே அக்கட்டுரைகளைப் படித்துவிட்டு வல்லிக்கண்ணனைப் பாராட்டியிருக்கின்றார்.

    வல்லிக்கண்ணன் என்ற பெயரே அல்லாமல் நையாண்டி பாரதி, கோரநாதன், மிவாஸ்கி, வேதாந்தி, பிள்ளையார், தத்துவதரிசி, அவதாரம் எனப் பல புனைபெயர்களிலும் அவர் எழுதியுள்ளார். எனினும், வல்லிக்கண்ணன் என்ற பெயரே அவருக்கு நிலைத்தது.

    ஈட்டிமுனை, கோவில்களை மூடுங்கள், எப்படி உருப்படும்?, கொடு கல்தா போன்ற சமூக விழிப்புணர்வூட்டும் கட்டுரை நூல்களை கோரநாதன் என்ற பெயரில் அறச்சீற்றங் கொண்ட இளைஞனாக எழுதியவர் வல்லிக்கண்ணன்.

    ’எப்படி உருப்படும்?’ என்ற நூலில் சினிமா உலகின் இயல்பையும் அது சமூகத்தைச் சீரழிக்கும் விதத்தையும் கண்டு உள்ளங் குமுறி,

    ”இன்றைய பட முதலாளிகளுக்குக் கலை வளரவேண்டும், நாட்டுக்கு நல்லன புரியவேண்டும், மக்களின் பண்பாட்டை உயர்த்த வேண்டும் என்பதெல்லாம் நோக்கமல்ல. இவர்களுக்கு வேண்டியது பணம், படாடோப வாழ்க்கை. செலவுசெய்கிற பணத்தைவிட அதிகமான லாபம் வருகிறது; அத்தோடு ரகரகமான உருப்படிகளை, நட்சத்திரங்களை இஷ்டம்போல் பயன்படுத்திக்கொள்ளலாம் என்ற வெறி நினைப்பு, மன அரிப்பு முதலியவைகளால் உந்தப்பட்டு சினிமாத் தொழிலில் ஈடுபட்ட முதலாளிகளே அதிகம் காணப்படுகின்றார்கள்.” என்று சினிமா எனும் மாய உலகின் நடப்புகளை வெளிச்சமிட்டுக் காட்டுகின்றார்.

    மிவாஸ்கி என்ற புனைபெயரில் வல்லிக்கண்ணன் எழுதிய ’அடியுங்கள் சாவுமணி’ என்ற நூலில்,

    ”புதுயுகம் பிறக்கவேண்டுமா?
    அடியுங்கள் சாவுமணி மக்களின் அறியாமைக்கு!
    மக்களை அடிமைகளாக்க முயல்கின்ற சுரண்டும் கும்பலுக்கு!
    மக்களின் மிருக வெறிக்கு!
    மக்களின் கண்மூடிப் பழக்கங்களுக்கு!” என்கிறார் ஆவேசமாக.

    இரஷிய இலக்கிய மேதையான மேக்ஸிம் கார்க்கியின் (Maxim Gorky) கட்டுரைகள் சிலவற்றையும், அவரின் சிறுகதைகள் சிலவற்றையும், இரஷிய இலக்கியத்தின் மற்றொரு மகத்தான ஆளுமையான லியோ டால்ஸ்டாயின் கதைகள் சிலவற்றையும் தமிழில் மொழியாக்கம் செய்துள்ள வல்லிக்கண்ணன், இந்தியப் பயண இலக்கியத்தின் தந்தை என்று போற்றப்படும் இராகுல் சாங்கிருத்தியாயன், தென்னாப்பிரிக்க அதிபர் நெல்சன் மண்டேலா ஆகியோரின் வாழ்க்கை வரலாறுகளையும் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.

    இவையல்லாமல், பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை, எழுத்தாளர்களும் பத்திரிகைகளும், வாசகர்கள் – விமர்சகர்கள், சரஸ்வதி காலம், தமிழ்ப் பத்திரிகைகள் அன்றும் இன்றும், ஊர்வலம்போன பெரிய மனுஷி, மத்தாப்பு சுந்தரி, கேட்பாரில்லை, அமர வேதனை, ஆண் சிங்கம், புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் உள்ளிட்ட 80க்கும் மேற்பட்ட நூல்களைப் படைத்துள்ளார் வல்லிக்கண்ணன்.

    ‘ஊர்வலம் போன பெரிய மனுஷி’ என்ற வல்லிக்கண்ணனின் சிறுகதை பல இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட சிறப்புக்குரியது.

    ‘புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்’ என்ற அவருடைய நூலுக்கு1978-இல் சாகித்திய அகாதெமி விருது கிடைத்தது. இந்நூலைத் தாம் எழுத நேர்ந்ததன் காரணத்தை விளக்கவரும் வல்லிக்கண்ணன்,

    “புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் எனும் தலைப்பிலான கட்டுரைகள் வரலாற்று நோக்கில் எழுதப்பட்டவையாகும். தீபம் இலக்கிய ஏட்டில் ’சரஸ்வதி காலம்’ பற்றிய கட்டுரைத் தொடரை நான் எழுதி முடித்திருந்த நேரம், அடுத்ததாக இலக்கியக் கட்டுரைத் தொடர் ஒன்றை நான் எழுதவேண்டும் என்று கேட்டுக்கொண்டார் தீபம் இதழின் ஆசிரியர் நா. பார்த்தசாரதி.

    அதே சந்தர்ப்பத்தில் எனக்குக் கடிதம் எழுதிய இலங்கை எழுத்தாளர் கலாநிதி க. கைலாசபதி அவர்கள், ”புதுக்கவிதை பற்றி ஏதேதோ விவாதங்கள் நடைபெறுகின்றனவே; அதன் வரலாறு உங்களுக்குத்தான் நன்றாகத் தெரியுமே; நீங்கள் ஏன் அவ்வரலாற்றை எழுதக்கூடாது?” என்று கேட்டிருந்தார். கவிஞர் மீராவும் புதுக்கவிதைகளின் தோற்றம் அவற்றின் வளர்ச்சி குறித்து நான் எழுதவேண்டும் என்று விருப்பம் தெரிவித்திருந்தார்.

    இவ்வாறு நண்பர்கள் பலர் கேட்கவே, புதுக்கவிதையின் வரலாற்றை 1972 நவம்பர் முதல் 1975 மே முடிய தீபம் இதழில் கட்டுரைத் தொடர்களாக எழுதினேன்.

    இது புதுக்கவிதையின் வரலாறுதான்; புதுக்கவிதைகள் குறித்தோ, கவிஞர்கள் குறித்தோ எழுதப்பட்ட விமர்சனமோ ஆய்வுரையோ அன்று. புதுக்கவிதைகளின் வரலாறு ஆண்டுகளின் அடிப்படையில் தொகுக்கப்பட்டு இதில் எழுதப்பெற்றுள்ளது. போகிற போக்கில் ஆங்காங்கே சிற்சில இடங்களில் எனது அபிப்ராயங்களையும் மேலோட்டமாகக் குறிப்பிட்டிருக்கின்றேன்” என்கிறார்.

    இக்கட்டுரைகள் தொகுக்கப்பட்டு பின்னர் நூலாக வெளிவந்தது.

    பாலாஜி பிக்சர்ஸ் தயாரிப்பில் 1950ஆம் ஆண்டு வெளிவந்த ‘லைலா மஜ்னு’ என்ற படத்திற்கு வசனம் எழுதுமாறு வல்லிக்கண்ணனை அவரின் நண்பர் ஒருவர் மிகவும் வற்புறுத்தவே, அப்படத்தின் சில காட்சிகளுக்கு வசனம் எழுதியிருக்கின்றார் வல்லிக்கண்ணன். அதன்பிறகும் சில திரைப்படங்களுக்கு வசனம் எழுதும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. ஆனால், இலக்கியத்துறையில் ஈடுபடுவதிலேயே ஆர்வங் கொண்டிருந்த வல்லிக்கண்ணன் சினிமாத் துறையில் தன்னைத் தொலைக்க விரும்பாததால் அவ்வாய்ப்புகளை ஏற்கவில்லை.

    திறனாய்வாளராகவும் திகழ்ந்த வல்லிக்கண்ணன், படைப்பாளிகளைப் பாராட்டுகின்ற நேரிய அணுகுமுறையையே அதிகம் கடைப்பிடித்தார்; அதுவே அவரின் குறையாகவும் பலரால் விமர்சிக்கப்பட்டது. ”வல்லிக்கண்ணன் படைப்பாளிகளைத் தேவைக்கு அதிகமாகப் புகழ்கின்றார்; படைப்புகளின் குற்றங்குறைகளைச் சுட்டிக்காட்டுவதில்லை” என்ற குற்றச்சாட்டு அவர்மீது வைக்கப்பட்டது.

    அதற்கான பதிலை ஒரு நேர்காணலில் அளித்த வல்லிக்கண்ணன்,

    ”பாராட்ட வேண்டியதைப் பாராட்டாமல் தவறவிட்டதாலே, பல நல்ல காரியங்கள் வளராமலே போய்விட்டன’’ என்று மகாகவி பாரதியே சொல்லியிருக்கிறார். பொதுவாக, பாராட்ட வேண்டியதை பாராட்டுகிற மனநிலை நம்மவர்களிடம் இல்லை. வளர விரும்புகிறவர்களைப் பாராட்டத்தான் வேண்டும். பாராட்டு அவர்களுக்கு மகிழ்ச்சியையும், மேலும் உழைக்க உற்சாகத்தையும் வளர்வதற்கான ஊக்கத்தையும் அளிக்கும்.” என்றிருக்கின்றார்.

    உண்மையில் மிகவும் அரிதான, வியக்கத்தக்க பெருந்தன்மை இது!

    ‘வல்லிக்கண்ணன் சிறப்புச் சிறுகதைகள்’ என்ற அவருடைய நூல் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2002-ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களின் சிறுகதைப் பிரிவில் பரிசு பெற்றுள்ளது.

    ‘வாழ்க்கைச் சுவடுகள்’ என்ற தன்வரலாற்று நூலில் தம் வாழ்வின் சுவையான அனுபவங்களைப் பதிவுசெய்திருக்கின்றார் வல்லிக்கண்ணன். இந்நூல் ஓர் அரிய வரலாற்று ஆவணமாய்த் திகழ்கின்றது.

    தம் வாழ்வின் இறுதிவரை திருமணமே செய்துகொள்ளாத வல்லிக்கண்ணன், சென்னையிலும் நெல்லை இராஜவல்லிபுரத்திலுமாக மாறி மாறி வசித்துவந்தார். அவர் இராஜவல்லிபுரத்தில் தங்கியிருக்கும் காலத்தில் அவரைக் கண்டு அளவளாவிச் செல்வதற்காக அந்நாளைய இலக்கிய இளவல்களான வண்ணதாசன், வண்ணநிலவன், நம்பிராஜன், கலாப்பிரியா போன்றவர்களும், கி.ராஜநாராயணன் (கி.ரா), தீப. நடராஜன் (இரசிகமணி டி.கே.சியின் பேரன்), தஞ்சை பிரகாஷ் போன்றோரும் அடிக்கடி வந்து சென்றிருக்கின்றார்கள்.

    பல எழுத்தாளர்களுக்குப் பெயர்சூட்டிய பெருமையும் வல்லிக்கண்ணனுக்கு உண்டு. வண்ணநிலவனுக்கும் வண்ணதாசனுக்கும் அப்பெயர்களைச் சூட்டியவர் வல்லிக்கண்ணனே ஆவார்!

    ”வல்லிக்கண்ணனின் முத்து விழாவின்போது அவருக்குக் கவிஞர், நாவலாசிரியர், சிறுகதை ஆசிரியர், திறனாய்வாளர், மொழிபெயர்ப்பாளர் என்று பல கிரீடங்கள் சூட்டப்பட்டன. இந்த கிரீடங்கள் அனைத்திலும் கட்டுரையாளர் என்ற கிரீடமே அவர் தலைக்கேற்ற அளவில் பொருத்தமாய்ச் செய்யப்பட்ட சரியான கிரீடமாகும்” என்று குறிப்பிடும் அமுதசுரபி இதழின் ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன் அவர்கள்,

    ”மிக நேர்த்தியான வடிவமைப்பு, பிசிறில்லாத தெளிந்த நடை, திடீரென உரத்த குரலில் பேசாமல் கட்டுரை முழுவதையும் ஒரே தொனியில் பேசச் செய்திடும் ஆற்றல், கடும் உழைப்பைத் தந்து நம்பகமான தகவல்களைத் திரட்டித் தரும் பொறுப்புணர்ச்சி இவையெல்லாம் வல்லிக்கண்ணனுடைய  கட்டுரைகளின் பொதுத்தன்மைகள்” என்று பாராட்டுகின்றார்.

    ஆடம்பரம் என்ற சொல்லையே அறியாதவராய் மிக எளிமையாய் வாழ்ந்து காட்டியவர் வல்லிக்கண்ணன். ”ஒல்லிக்கண்ணன்” என்று அவருடைய எழுத்தாள நண்பர்கள் வேடிக்கையாய்க் குறிப்பிடும் அளவுக்கு மெலிந்த தேகம் படைத்தவர்; ஆனால், அழுத்தமான நெஞ்சுறுதி உடையவர்.

    இலக்கியத்துக்கே தம்மை முழுமையாக அர்ப்பணித்து எழுத்தையும் எழுதுகோலையுமே தெய்வங்களாய்க் கருதிவாழ்ந்த வல்லிக்கண்ணன், 2006-ஆம் ஆண்டு தம்முடைய 85ஆம் அகவையில் நிமோனியா காய்ச்சலால் மறைந்தார்.

    தற்காலக் கவிதை இலக்கியத்தின் வரலாற்றைத் தம் எழுத்துக்களால் நிலைநிறுத்திய வல்லிக்கண்ணனும் வரலாற்றில் என்றும் நிலைத்து நிற்பார் சிறந்ததோர் தமிழ் ஆளுமையாய்!

    *****

    கட்டுரைக்குத் துணைசெய்தவை:

    https://ta.wikipedia.org/wiki/வல்லிக்கண்ணன்
    http://www.geotamil.com/pathivukal/vallikkannan_a.htm
    https://www.hindutamil.in/news/blogs/63933-10-2.html
    http://tamilonline.com/thendral/article.aspx?aid=3121

     

    Share