யாவரும் கேளிர்

 

சுவர்ப்பலகையில்
தான் வரைந்திருந்த
கோணல்மாணல் குலதேவதையை
அவள் வணங்கிக் கொண்டிருக்க
என்னடா செய்திட்டு இருக்க வினவலுக்கு
தங்கச்சிப் பாப்பா நல்லாயிருக்கணும்னு
கும்பிடுறன்ப்பா என்றதும்
தூக்கிவாரிப் போட்டது நமக்கு!
உனக்கேதடா தங்கச்சிப் பாப்பா?
மறுவினவலுக்குச் சொல்கிறாள்
எனக்கு சிறுசாயிடிச்சுன்னு
டொனேசன்ல போட்ட
பட்டுப் பாவாடையப் போடுற பாப்பா
எனக்குத் தங்கச்சிதானேப்பா?
அதான் அந்தப்பாப்பா நல்லாயிருக்கணும்னு
சாமிகிட்ட சொல்லிட்டு இருக்கேன்ப்பா!
மனம் மகிழ்ந்து நாசி திளைக்க
முகமறியா அக்குழந்தைமணம்
வீடெங்கும்!!

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *