Tag: சுபாஷிணி ட்ரெம்மல்

  • அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்! (29)

    29. அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்! லியானார்டோ அருங்காட்சியகம் (2), வின்ச்சி, இத்தாலி

    சுபாஷிணி ட்ரெம்மல்

    மனித பரிணாம வளர்ச்சிக்கும் விஞ்ஞான வளர்ச்சிக்கும் ஒரு பாலமாக அமைந்தவர்களில் லியோனார்டோவின் பங்கு அளப்பறியது. அவரது சிந்தனைகளில் உதித்த கருத்துகள் அனைத்தையும் தமது குறிப்பேட்டில்  தொகுத்து வைத்ததனால் அவை இன்று நாம் அறிந்து கொள்ள உதவும் ஆவணங்களாகத் திகழ்கின்றன. தனது கண்டுபிடிப்புகளில் சிலவற்றை லியோனார்டோ மாடல்களாகச் செய்தும் பார்த்திருக்கின்றார். பல கண்டுபிடிப்புகள் செயல்வடிவம் பெற்றதோடு அவை மென்மேலும் செம்மையாக்கப்பட்டு மனிதகுலத்தின் நாகரிக வளர்ச்சியின் பயன்பாட்டிலும் இடம்பெறுவதாக அமைந்திருப்பது தனிச்சிறப்பு.

    இத்தாலியின் வின்ச்சி நகரில் உள்ள இந்த லியோனார்டோ அருங்காட்சியகம் இரண்டு பகுதிகளாக அமைந்திருக்கின்றது. ஒன்று நகர மையத்தில் இருக்கும் அருங்காட்சியகம். இங்கே லியோனார்டோவின் கையெழுத்துக் குறிப்புகள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்தக் குறிப்புகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட மாடல்கள் இந்த அருங்காட்சியகத்தை நிறைத்துள்ளன. இந்த மாடல்களை உருவாக்கியதில் பெரும் பங்கு IBM நிறுவனத்தைச் சாறும் என்ற குறிப்பும் அங்கே காணக் கிடைக்கின்றது.

    suba 1
    அருங்காட்சியகத்தின் உள்ளே காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள மாடல் வடிவங்கள்

    இதைத் தவிர்த்து வின்ச்சி நகர மையத்தைக் கடந்து ஏறக்குறைய 3கிமீ தூரத்தில் லியோனார்டோவின் பிறந்த இல்லம் இருக்கின்றது. இதில் ஒரு கண்காட்சிக் கூடம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கே நவீன தொழில் நுட்பம் கொண்டு ஹோலோக்ராம் வடிவில் நம் கண் முன்னே லியோனார்டோ டா வின்சி தோன்றி தம்மைப் பற்றியும் தனது சிந்தனைகளை, தன் வாழ்க்கை வரலாறு என இத்தாலி மொழியிலும் ஆங்கிலத்திலும் கூறுவதைக் கேட்கலாம். இது நம் முன்னே லியோனார்டோ நின்று பேசுவதைப் போன்றதொரு உணர்வினை வழங்குகின்றது. இந்தக் கண்காட்சியகத்தில் அவரது இல்லத்தின் கூடம், வாசல் பகுதி, சமையலறை, தூங்கும் அறை போன்ற பகுதிகளில் விளக்கக் குறிப்புகளுடன் அமைக்கப்பட்டிருக்கின்றன.

    லியோனார்டோவின் வாழ்க்கைக் குறிப்பை அறிந்து கொள்வதும் இந்த அருங்காட்சியகப் பதிவிற்கு உதவும் எனக் கருதுகின்றேன். 1452ம் ஆண்டு ஏப்ரல் 15ம் திகதி ப்ளோரன்ஸ் நகரில் இருக்கும் வின்ச்சி நகரில் பிறந்தவர் இவர். இவரைப் பற்றிய தகவல்கள் அனைத்தும் வசாரி (Vasari) அவர்களது குறிப்புகளிலிருந்து கிடைக்கின்றன. இது மிக விரிவானதொரு குறிப்பு. இக்குறிப்புகளில் காணப்படும் தகவலின் படி லியோனார்டோ சைவ உணவு உண்பவர் என்று அறியமுடிகின்றது. கூண்டுகளில் அடைக்கப்பட்டிருக்கும் பறவைகளை வாங்கி அவற்றை கூண்டிலிருந்து சுதந்திரமாகப் பறக்க விடுவாராம். சுதந்திர தாகம் அவர் மனதை ஆக்கிரமித்திருக்க வேண்டும் என்றும் விலங்குகள் போன்ற ஏனைய உயிரினங்களின் மீதும் அவற்றின் சுதந்திர வாழ்க்கையின் மேலும் அவருக்கு ஓர் ஈடுபாடு இருந்திருக்க வேண்டும் என்றும் இதனை அறிந்து கொள்ளும் போது எண்ணத் தோன்றுகின்றது.

    இவர் திருமணம் செய்து கொள்ளவில்லை; குழந்தைகளும் இல்லை. அதிகமான நண்பர்கள் இவருக்கு இருந்திருக்கின்றனர். அதில் ஆண்களும் சில குறிப்பிடத்தக்க என்ணிக்கையில் பெண்களும் அடங்குகின்றனர்.

    ஆரம்ப காலத்தில் இவரது புகழ் இவரது கலைப்படைப்புக்களுக்காகவே என அமைந்தது. ஐரோப்பிய கலாச்சரத்திற்குப் புகழ் சேர்க்கும் பல சித்திரங்கள் லியோனார்டோவின் கைவண்ணத்தில் உருவானவை. உதாரணமாக Virgin and Child with St. Anne, John the Baptist,Virgin of the Rocks, Adoration of the Magi, The Last Supper, Mona Lisa ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.

    ஓவியராகவும் சிற்பியாகவும் தன்னை அடையாளம் காட்டிக் கொண்ட லியோனார்டோ உடற்கூறுகளை ஆராயும் கலையையும் கற்க எண்ணம் கொண்டு Andrea del Verrocchio என்ற சிற்பக்கலை ஆசிரியரிம் பிரத்தியேகப் பயிற்சி எடுத்துக் கொண்டார். இந்தப் பயிற்சிகள் அவருக்கு மனித உடலின் பாகங்களை ஆராய்ந்து அவற்றை தனித்தனியே விரிவாக விவரிக்கும் வகையில் படைப்புகளை உருவாக்க உதவின. உடலின் அனைத்து பாகங்களையும் மருத்துவர்களைப் போல வெட்டி ஆராய்ந்து அதன் உட் பகுதிகள், தோல், தசை, நரம்பு நாளங்கள், என உடலின் பாகங்களை ஆராய்ந்து அதன் குறிப்புகளை இவர் உருவாக்கியிருக்கின்றார்.

    suba 2

    லியோனார்டோவின் கையெழுத்துக் குறிப்புடன் கருப்பையில் வளரும் குழந்தையின் ஆரம்ப நிலைவடிவம்.. ஏறக்குறைய 1510 வாக்கில் எழுதப்பட்ட குறிப்பு (இது இங்கிலாந்தில் உள்ள Royal Library, Windsor Castle லில் உள்ளது)

    இவர் ஒரு சிறந்த ஓவியர் என்ற காரணத்தினால் மருத்துவமனைகளில் இறந்தவர்களின் உடல்களை வெட்டி அதன் உட்பகுதிகளை வரைந்து குறிப்பெடுக்கும் அனுமதி இவருக்கு அரசினால் வழங்கப்பட்டது. அந்த வகையில் ஃப்ளோரன்ஸ் நகரில் இருந்த Hospital of Santa Maria Nuova, மருத்துவமனையிலும் பின்னர் அடுத்தடுத்த ஆண்டுகளில் மிலான், ரோம் நகர மருத்துவமணைகளிலும் இவ்வகை வாய்ப்புக்கள் அவருக்கு அமைந்தன. மருத்துவர்களுடன் இணைந்து 1510-1511ம் ஆண்டு வாக்கில் ஏறக்குறைய உடல் கூறுகளை விளக்கும் 240 ஓவியப்படைப்புக்களை இவர் உருவாக்கியிருக்கின்றார். இக்கால நிலை போல கேமராவில் புகைப்படம் எடுப்பதோ, வீடியோ பதிவு செய்வதோ அமையாத காலகட்டம் அது. சித்திரங்களின் வழியே தான் இவ்வகை மருத்துவ குறிப்புக்கள் உருவாக்கம் பெற்றன. இந்த மருத்துவ ஆவணப் படைப்புகளை உருவாக்கியோர் வரிசையில் லியோனார்டோவின் பங்களிப்பு சிறப்பிடம் பெறுகின்றது என்பதில் மறுப்பேதுமில்லை.

    ​இதைத் தவிர்த்து லியோனார்டோவின் விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் சார்ந்த சிந்தனைகள் நம்மை வியக்க வைப்பன. ​ பாலம் அமைக்கும் என்ஜீனியரிங் அடிப்படைகள், போர்க்கருவிகளின் இயந்திரப் பகுதி, இசைக்கருவிகள், விமானம் போன்ற பறக்கும் கருவி, வீட்டு பயன்பாட்டு கருவிகள் என எண்ணிக்கையில் உயரும் வகையில் இவரது கண்டுபிடிப்புகள் அமைந்தன.

    suba 3

    பறவைகளின் பறக்கும் முறைகளை விவரிக்கும் குறிப்புக்கள். இதன் வழி பறக்கும் கருவி உருவாக்கம் பற்றி லியோனார்டோவின் குறிப்புக்கள் அடங்கிய பக்கம்

    ​லியோனார்டோவின் அசாதாரண திறமை அவரது புகழ் உயரக் காரணமாக அமைந்தது. ​இத்தாலி மட்டுமன்றி ஐரோப்பாவில் இவர் புகழ் பரவியது. இத்தாலியின் பல நகரங்களில் இவருக்குச் சிற்பங்கள் உருவாக்கும் பணிகள் அமைந்து பள்ளிகளையும் அமைத்து நடத்தி வந்தார். குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் ஐரோப்பாவின் பல இடங்களிலிருந்து இவரிடம் சித்திர சிற்பக்கலையைக் கற்றுக் கொள்ள மாணவர்கள் அமைந்திருந்தனர். ப்ரான்ஸ் மன்னர் முதலாம் ஃப்ரான்ஸிஸ் லியோனார்டோவின் புகழை அறிந்து தனது அரண்மனைக்குச் சிறப்பு விருந்தினராக இவரை அழைத்திருந்து சிறப்புச் செய்தார். நாளடைவில் இவர்களது நட்பு மிக நெருக்கமாக வளர அரசரின் பிரத்தியேகச் சிறப்பு சிற்பக் கலைஞர் என்ற பட்டமும் வழங்கி கௌரவித்ததோடு தம்முடனேயே லியோனார்டோ இருக்கும் படி ஏற்பாடுகளையும் செய்தார் மன்னர். லியோனார்டோ தம் முதுமையில் இறந்த போதும் மன்னர் முதலாம் ஃப்ரான்ஸிஸின் அரவணைப்பில் இறந்ததாக குறிப்பும் ஒரு சித்திரப் படைப்பும் இருக்கின்றது.

    suba 4

    1818 -ல் ஓவியக் கலைஞர் இங்க்ரெஸ் உருவாக்கிய படைப்பு. மன்னர் முதலாம் ஃப்ரான்ஸிஸின் கைகளில் லியோனார்டோவின் இறுதி மூச்சு செல்வதை உருவகப்படுத்தும் ஓவியம்

    இத்தாலியில் சித்திரக் கலைஞர்களின் வாழ்க்கை குறிப்பை தேடி பதிந்து வைத்த பெருமை ஜியோர்ஜியோ வசாரியையே சாரும். டான் ப்ரவ்னின் இன்ஃபெர்னோ நூலில் இந்த வசாரி பற்றிய குறிப்புக்கள் ஆங்காங்கே வருவதை இந்த நாவலை வாசித்தவர்கள் அறிந்திருக்கலாம். வசாரி தனது Lives of the Artists நூலில் லியோனார்டோவை அறிமுகப்படுத்தும் பகுதியில் கீழ்க்காணும் வாசகத்தைக் குறிப்பிடுகின்றார்.

    In the normal course of events many men and women are born with remarkable talents; but occasionally, in a way that transcends nature, a single person is marvelously endowed by Heaven with beauty, grace and talent in such abundance that he leaves other men far behind, all his actions seem inspired and indeed everything he does clearly comes from God rather than from human skill. Everyone acknowledged that this was true of Leonardo da Vinci, an artist of outstanding physical beauty, who displayed infinite grace in everything that he did and who cultivated his genius so brilliantly that all problems he studied he solved with ease.

    —Giorgio Vasari

    ​எத்தனையோ மனிதர்கள் பிறக்கின்றோம்.. பின்னர் இறக்கின்றோம். நித்தம் வாழும் நிலையை உருவாக்கிக் கொள்ளும் மனிதர்கள் காலம் கடந்தும் மனித குலத்தினால் நினைத்துப் பார்க்கும் நிலையை அடைவர். லியோனார்டோ டா வின்சி இந்த வகையில் இடம்பெறுபவர்!

    இன்று மே மாதம், 2ம் தேதி 1519ம் நாள் லியோனார்டோ இவ்வுலகை விட்டு மறைந்தார். லியோனார்டோ என்னும் இப்புதுமைச் சிற்பிக்கு என் அஞ்சலிகள்!

    Share
  • அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் (28)

    28. அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்! லியானார்டோ அருங்காட்சியகம், வின்ச்சி, இத்தாலி

    சுபாஷிணி ட்ரெம்மல்

    வரலாற்றில் இடம்பெறும் முக்கிய நபர்களில் சிலர் வாழ்ந்த இல்லங்கள் அல்லது அவர்கள் நினைவாக அமைக்கப்பட்ட நினைவு மணடபங்கள் போன்றவற்றிற்குச் செல்லும் போதெல்லாம் காலத்தைக் கடந்து நிற்கும் அவர்களது நினைவுகளுடன் நான் சஞ்சரிப்பது வழக்கம். இப்படி அமையும் வாய்ப்புக்களெல்லாம் ஒரு அனுபவம் தானே என்று மிகச் சாதாரணமாக என்னால் நினைத்து விட முடியாது. மாறாக இவ்வகை நிகழ்வுகளை எனது டைரியில் முக்கிய நிகழ்வுகளாக நான் குறித்து வைத்துக் கொள்வது என் வழக்கம்.

    இப்படி வாய்க்கும் அனுபவங்களில்.. அதிலும் குறிப்பாக நம் மனதில் மிக மிக நாம் ரசிக்கும், விரும்பும், அதிசயத்து வியக்கும், லயித்துப் போகும் ஒருவரது நினைவின் சுவடாக இருக்கும் ஒரிடத்திற்கு நாம் செல்கின்றோம் எனும் போது அந்த அனுபவம் தரும் உணர்வுப் பூர்வமான அனுபவங்களைப் பிரமிப்பு என்று சொல்வதா அல்லது வியப்பு என்று சொல்வதா எனக் குழம்பிப் போனாலும் இந்த வாய்ப்பு அமைந்ததை நினைத்து மனம் முழுக்க மகிழ்ச்சி நிறைந்திருக்கும் என்பது என் அனுபவப் பூர்வமான உண்மை.

    உலக மனிதர்களில் என்னை மிகக் கவர்ந்த ஒருவர்.. எப்போது நினைத்தாலும் அல்லது அவர் பெயரைக் கேட்டாலும் வியப்பிலும் பிரமிப்பிலும் ஆழ்த்தும் ஒருவர்.. என்று சொன்னால் அதில் முதல் இடம் பெறுபவர் லியோனார்டோ டாவின்சி.

    ஒரு கலைஞன்..!
    ஒரு விஞ்ஞானி…!
    ஒரு கட்டிடக் கலைஞன்..!
    ஒரு அறிஞன்..!

    இவற்றிற்கும் மேல் லியோனார்டோ டாவின்சி …
    ஒரு புதுமை சிற்பி..!

    unnamed
    லியோனார்டோ டா வின்ச்சி

    பொதுவாக டாவின்சி என்ற பெயரைக் கேட்டவுடன் நம் மனம் தொடர்பு படுத்திப் பார்ப்பது இந்தக் கலைஞன் உருவாக்கிய வரலாற்று பிரமாண்டங்களான தி லாஸ்ட் சப்பர் (The Last Supper) சித்திரமும் மோனா லிசாவின் (Mona Lisa) உருவப் படமும் தான். இதில் மோனா லிசா சித்திரத்தைப் பற்றி முந்தைய பிரான்ஸிலுள்ள லூவ்ர அருங்காட்சியகத்தைப் பற்றிய அருங்காட்சியகப் பதிவில் குறிப்பிட்டிருந்தேன். லியோனார்டோ என்னும் இந்தப் புதுமை உலகப் படைப்புச் சிற்பியின் புகழைச் சொல்லிக் கொண்டிருப்பது இந்த இரண்டு சித்திரப் படைப்புக்கள் மட்டுமல்ல. இக்கலைஞனின் சிந்தனையில் உருவான பல்லாயிரக்கணக்கானச் சிந்தனை ஓட்டங்களின் பிரதிபலிப்பாக, புதிய உருவாக்கங்களைச் சலிக்காமல் படைத்தவன் இம்மாபெரும் கலைஞன். லியோனார்டோவின் படைப்புகள், கண்டுபிடிப்புகள், முயற்சிகள் இவற்றைப் பற்றி தனிப் பதிவாக எழுத வேண்டும் என்பதும் என் விருப்பம். பின்னர் ஒரு முறை இது நிச்சயம் வடிவம் பெறும் என்பதில் எனக்கு நம்பிக்கை உண்டு.

    1452ம் ஆண்டு ஏப்ரல் 15ம் திகதி இத்தாலியின் வடக்கு மாநிலப் பகுதியின் ஒரு சிற்றூரான வின்ச்சி நகரில் பிறந்தவர் இவர். இவரது படைப்புகளைப் பார்க்கும் போது இவரது சிந்தனையை முற்றும் முழுதுமாக அறிவியலும், இயற்கை நியதிகளும், புதுமை படைக்க வேண்டும் என்ற தீவிர தாகமுமே ஆர்ப்பரித்திருந்தமையை மிக நன்றாக உணர முடியும். தனது சமகால படைப்புகளைப் பார்த்து அதன் நீரோட்டமாக தனது படைப்புகளை உருவாக்கியவன் அல்ல டாவின்சி. இதற்கு முற்றிலும் மாறாக தனது சமகால படைப்புகளிலிருந்தும் அதற்கும் முந்தைய படைப்புகளிலிருந்தும் மாறுபட்ட சிந்தனையை உலகுக்கு அறிமுகப்படுத்தியவன் இவன். லியோனார்டோவின் பெயர் சொல்லி உருவான சித்திரக் கூடங்களும், கட்டிட கட்டுமான நெறி முறைகளும், அறிவியல் கருத்துகளும், மாணவர்களும் அவரை பின்பற்றி ரெனைசான்ஸ் எனக் குறிப்பிடப்படும் கலாச்சார மறு பிறப்பினை ஐரோப்பிய பிராந்தியம் முழுமைக்கும் இட்டுச் செல்ல வைத்த மிகப் பலம் பொருந்திய ஒரு ஆளுமை லியோனார்டோ டா வின்சி என்று சொன்னால் இதனை யாரும் மறுப்பதற்கில்லை.

    leo3

    வின்ச்சி நகரில் நுழையும் சாலை- இரு புறமும் ஆலிவ் மரங்கள் (ஏப்ரல் 2013)

    கடந்த ஆண்டு (2013) ஏப்ரல்-மே மாதங்களில் இத்தாலியின் ஃப்ளோரன்ஸ் மாவட்டத்திற்குச் சென்றிருந்த போது வின்ச்சிக்கு பிரத்தியேகமாக பயணித்து இங்கிருக்கும் டாவின்சி அருங்காட்சியத்தை நேரில் சென்று பார்த்து வந்தேன். கலையும் அறிவியலும் வெவ்வேறு தானே? இவையிரண்டும் ஓரிடத்தில் சங்கமிக்க முடியுமா என பலர் நினைக்கலாம். ஆனால், இந்த அருங்காட்சியகத்திற்கு வந்து லியோனார்டோவின் படைப்புகளைப் பார்வையிடும் ஒவ்வொருவரும் இவன் அறிவியலையும் கலைப்படைப்புகளையும் பிரித்துப் பார்க்காத ஒரு மனிதன் என்பதை அறிவர். அறிவியலுக்கும் கலைப்படைப்புகளுக்கும் இடையே ஒரு இடைவெளியை வைக்காது இரண்டையும் இணைத்துப் பார்த்து அதன் வழி புதுமையை உலகுக்கு அறிமுகப்படுத்தியவர்களில் தனி இடமும் சிறப்பிடமும் பெறுபவர் லியோனார்டோ.

    இது வரை கிடைத்திருக்கும் ஆவணங்களின் அடிப்படையில் லியோனார்டோவின் குறிப்புகளும் புதிய கண்டுபிடிப்புகளும் 13,000 பக்கங்களில் அவரது சொந்தக் கையெழுத்தினால் எழுதியும் வரைந்தும் வைக்கப்பட்டுள்ளன. இந்த குறிப்புகளில் வானில் பறக்கும் இயந்திரம், போர் இயந்திரங்கள், மனித உடலின் உட்பகுதியில் அமைந்திருக்கும் அங்கங்களை தனித்தனியே ஆய்வு செய்து விளக்கிய வரைபடங்கள்-குறிப்புகள், கட்டுமான வரை படங்கள், வீட்டுத் தேவைக்கான இயந்திரங்கள் என்பன குறிப்பிடத்தக்கவை.

    leo2

    லியோனார்டோ வடிவமைப்பான, வின்ச்சி நகரைப் பார்த்தவாறு அமைந்திருக்கும் Vitruvian Man (ஏப்ரல் 2013)

    ரோபோட் எனப்படும் இயந்திர மனிதன் அல்லது மிருகங்களின் உருவாக்கம் என்னும் கருத்து கடந்த நூற்றாண்டில் விரிவாக வளர்ந்த ஒன்று. லியோனார்டோவின் சிந்தனையில் இயந்திர மிருகம் ஒன்றும் படைக்கும் சிந்தனை எழுந்து அதன் விளைவாக அசைந்து நடந்து சென்று தன் இதயத்தைத் திறந்து லில்லி மலர்களை வழங்கும் ஒரு இயந்திர சிங்கத்தையும் கருத்தில் சிருஷ்டித்து, அதனை உருவாக்கி அதன் உருவாக்கக் குறிப்புகளையும் பதிவு செய்து வைத்திருக்கின்றார்.

    ஒரு மனிதனால் இவ்வளவு விஷயங்களைப் படைக்க முடியுமா..? வெவ்வேறு துறைகளில் ஈடுபாட்டுடன் கலந்து இருந்து அதில் தன் முத்திரையைப் பதிக்க முடியுமா என்றால் முடியும் என்பதற்கு எனக்கு கண் முன்னே தோன்றும் உதாரணம் இந்த 15ம் நூற்றாண்டு மனிதர் லியோனார்டோ டா வின்ச்சி!

    அவர் பிறந்து வளர்ந்து கல்வி கற்று, இயந்திரக் கல்வி பயின்று தனது இளமைக் காலத்தைச் செலவழித்த வின்ச்சி நகரிலேயே அந்நகரின் ஊராட்சி மையம் அவருக்கு ஒரு அருங்காட்சியகத்தை அமைத்திருக்கின்றது. இப்படி ஒரு அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என்ற எண்ணம் 1919ல் எழ பின்னர் படிப்படியாக இதற்கானப் பணிகள் ஆரம்பிக்க, இவரது ஒரு பிறந்த தினத்திலேயே அதாவது 1953ம் ஆண்டு ஏப்ரல் 15ம் நாள் இந்த அருங்காட்சியகம் திறப்பு விழா கண்டது.

    leo1

    நினைவு இல்லத்தின் வாசலில் (ஏப்ரல் 2013)

    இங்கு தான் உங்களை அழைத்துச் செல்ல விருக்கின்றேன்.

    வாருங்கள்.. இணைந்து செல்வோம்..!

    தொடரும்

    Share
  • 27. அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!

    27. அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்! சின் யோங் திரைப்பட அருங்காட்சியகம், ஜேஜூ தீவு, தென் கொரியா.

    சுபாஷிணி ட்ரெம்மல்

    சினிமா தமிழ் சமூகத்தில் மட்டுமல்ல.. உலகில் எல்லா சமூகங்களுமே விரும்பி பார்க்கும் ஒரு பொழுது போக்கு அம்சமாக மனித வாழ்க்கையில் இடம் பிடித்துக் கொண்டு விட்டதை நாம் மறுக்க முடியுமா?

    பொழுது போக்கு அம்சம் என்பதையும் கடந்து சமூகத்தின் சிந்தனையில் தாக்கம் ஏற்படுத்தக் கூடிய மிக பலம் பொருந்திய ஒரு ஊடகமாக இன்று சினிமா விளங்குகின்றது. குறிப்பிட்டு சொல்வதானால் திரைப்படத் துறையின் வளர்ச்சி என்பது மிகத் துரிதமாகக் கடந்த ஐம்பது ஆண்டுகளில் நிகழ்ந்திருக்கின்றது எனலாம். வளர்ச்சி அடைந்த நாடுகள் மட்டுமின்றி வளர்ந்து வரும் நாடுகளும் தத்தம் மொழிகளில் சினிமா துறையில் விரிவான வளர்ச்சியை அடைந்திருக்கின்றன. பொதுவாகத் தமிழக சூழலின் பின்னனியில் பார்க்கும் நமக்கு நன்கு பரிச்சயமானதாக இருப்பவை ஹாலிவூட் தயாரிப்புக்களான அமெரிக்க திரைப்படங்களும், இந்திய திரைப்படங்களும் எனலாம்.

    எனது வாழ்க்கை பின்னனியில் மலேசிய சினிமாவின் பரிச்சயமும் தற்சமயம் ஜெர்மானிய திரைப்படங்களின் பரிச்சயமும்  கிடைக்கும் வாய்ப்பு அமைந்திருப்பதால் இந்த மொழி படங்கள், இவற்றின் பொதுவான கதை புலன்கள், நடிக நடிகையரின் தோற்றத் தேர்வு பற்றிய பொதுவான கருத்துக்கள், எனச் சில விஷயங்களை அறிந்திருக்கின்றேன். இத்தகைய படங்களை அவ்வப்போது பார்க்க வாய்ப்பு கிடைப்பதால் ஓரளவு இவற்றை ஒப்பிட்டுப் பார்த்து அலசவும் முடிகின்றது. என் கணிப்பில் அமெரிக்க படங்களை விட ஜெர்மானிய தயாரிப்புக்களாக அமையும் படங்கள் மிக இயல்பான தோற்றத்தை தருவதாக அமைந்திருக்கின்றன என்பதை பல படங்கள் எனக்கு ஊர்ஜிதப்படுத்துகின்றன. இந்தியப் படங்களையும் மலாய் மொழிப் படங்களையும் ஒப்பிட்டுப் பார்க்கும் போது மலாய் படங்கள் பொதுவாக 60, 70, 80களில் தமிழ் படங்களைக் காப்பியடித்து எடுக்கப்பட்டவை போலவே அமைந்திருக்கிருக்கும். பின்னர் படிப்படியாக வட இந்திய படங்கள் மலாய் மக்களின் சினிமா மோகத்திற்கு விருந்தாக அமைந்ததன் விளைவாக பல மலாய் படங்கள் இவ்வகை பின்னனியிலே அமைந்திருப்பதைக் காணமுடியும். இதில் அமெரிக்க படங்களையும் கலந்து வைத்தார்போல கலவையாக சில படங்கள் அமைவதுண்டு. இதனையும் மீறி சில படங்கள் மலாய் சமூக மக்களின் வாழ்க்கையைப் படம் பிடித்துக் காட்டுவது போலவும் தனித்துவத்துடன் விளங்குவதையும் ஒதுக்கி விட முடியாது.

    சினிமா துறை என்பது கேளிக்கை, பொழுது போக்கு அம்சம் என்பதோடு  மட்டும் முடிந்து விடுவதல்ல. தற்கால சூழலில் பற்பல புதிய யுத்திகள், நுணுக்கமான கருவிகள், புத்தம் புதிய தொழில்நுட்பங்கள்  என இத்துறை மிக நுணுக்கமானதொரு துறையாக பெரும் வளர்ச்சி கண்டுள்ளதை காண்கிறோம். ஆரம்ப கால சினிமா துறை நிலையிலிருந்து இக்காலத்து மாற்றங்கள் வரை அறிந்து கொள்வதென்றால் அதனை சினிமா துறைக்கானப் பிரத்தியேக அருங்காட்சியகங்கள், அல்லது தொழில்நுட்ப அருங்காட்சியகங்கள், நூலகங்கள் எனச் சென்று தான் தேட வேண்டும். உலகின் பல நாடுகளில் சினிமா துறை வளர்ச்சியின் தொடர்ச்சியை பதிவாக அமைத்து பொது மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் சில அருங்காட்சியகங்கள் இயங்குகின்றன. அத்தகைய அருங்காட்சியகங்கள் வரிசையில் அமையும் ஒன்று தான் தென் கொரியாவில் உள்ள  சின்யோங் திரைப்பட அருங்காட்சியகம் (Sinyoung Cinema Museum).

     unnamed

    ஜேஜு தீவை இந்த தென் கொரிய வரைப்படத்தில் காணலாம். தெற்குப் பகுதியில் மிக கீழே அமைந்திருக்கும் ஒரு தீவு இது.

    1999ம் ஆண்டு ஜூன் மாதம் தென் கொரியாவின் தெற்குப் பகுதியில் அமைந்திருக்கும் ஜேஜூ தீவில் இந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு திறப்பு விழா கண்டது.  மூன்று மாடிகளைக் கொண்டு அமைந்த ஒரு மாடர்ன் வடிவ கட்டிடத்தில் இந்த அருங்காட்சியகம் அமைந்துள்ளது.

    2003ம் ஆண்டில் டிசம்பர் மாதம் தென் கொரியாவிற்குச் செல்லும் வாய்ப்பு எனக்கு அமைந்த வேளையில் ஒரு நாள் இந்தத் திரைப்பட அருங்காட்சியகத்திற்கும் சென்று வந்தேன். மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட ஒரு அருங்காட்சியகம் இது. நான் சென்றிருந்த வேளையிலும் கணிசமான வருகையாளர்களும் இந்த அருங்காட்சியகத்திற்கு வருகை தந்திருந்தனர்.

     sy3

    தென் கொரிய திரைப்படங்கள்  (டிசம்பர் 2003)

    இந்த அருங்காட்சியகத்தின் உள்ள மூன்று தளங்களில் தனித்தனியாக பிரிக்கப்பட்டு அரும் பொருட்களும் தகவல்களும் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன.

    ஒரு தளத்தில் Hall of Fame என் பெயரிடப்பட்டு தென் கொரிய சினிமா துறையில் மிக முக்கியப் பங்கு வகித்தோரின் புகைப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. அதில் சினிமா நடிக நடிகையர் மட்டுமன்றி தொழில் நுட்பக் கலைஞர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், ஒலி, ஒளிப்பதிவாளர்கள் என தென் கொரிய சினிமா துறைக்கு முக்கியப் பங்கு வகித்தோர் படங்கள் இடம்பெருகின்றன. கீழே நின்று பார்க்கும் போது நம்மை சுற்றி இருக்கும் இந்தப் பல்வேறு கலைஞர்களும் நம்மை பார்ப்பது போன்ற பிரமையை இந்த அமைப்பு நமக்கு ஏற்படுத்தி வைக்கின்றது.

     sy4

    தென் கொரிய சினிமா துறையினருக்கு ஒரு அஞ்சலி (டிசம்பர் 2003)

    இந்த Hall of Fame அடுத்து சினிமா தொழில் நுட்பக்கருவிகளின் கண்காட்சி ஒரு பகுதியிலும், அசையும் படங்கள் என்ற வகையில் ஒரு பகுதியும், பிரத்தியேகமான முயற்சிகளுக்குப் பயன்படுத்தப்பட்ட கருவிகள் ஒரு பக்கமும், சினிமா படங்களில் பயன்படுத்தப்பட்ட ராட்ஷஸ வடிவங்களின் வடிவங்கள் ஒரு புறமும், ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் செய்ய பயன்படுத்தப்படும் நூதன முறைகள் பற்றிய விளக்கப் படங்களுக்கு ஒரு பகுதி எனவும் தனித்தனியாக அமைந்திருக்கின்றன.

    இந்த அருங்காட்சியகத்தின் தனிச் சிறப்பு எனக் குறிப்பிடுவதென்றால் அது தென் கொரியாவின் சினிமா துறையின் படிப்படியான வளர்ச்சியை ஆவணப்படுத்தி வைத்திருக்கும் ஒரு ஆவணக் கூடம் என தயங்காது சொல்லலாம். தென் கொரியாவில் படமாக்கப்பட்ட திரைப்படங்களில் பயன்படுத்தப்பட்ட தொழில் நுட்பக் கருவிகள்,  சினிமா செட்டிங், வடிவங்கள், கதை வசனப் பதிவுகள், சினிமா சுருள்கள் என பல சேகரிக்கப்பட்டு இங்கு பாதுகாக்கப்படுகின்றன.

     sy1

    தொழில் நுட்பக் கருவிகள் (டிசம்பர் 2003)

    தென் கொரியாவின் புகழ் மிக்க நடிகர் ஒருவரின் பெயர்தான் Sinyoung. அவர் பெயரில் தான் இந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டிருக்கின்றது. தமிழகத்தில் எம்.ஜி.ஆர் திரைப்பட பூங்கா என இருப்பது போல இங்கு ஒரு புகழ் பெற்ற ஒரு சினிமா துறை கலைஞரை சிறப்பு செய்யும் வகையில் அவர் பெயரில் இந்த அருங்காட்சியகத்தை அமைத்திருக்கின்றனர் என அறியமுடிகின்றது.

    இந்த அருங்காட்சியகத்தின் இரண்டாம் தளம் முழுமையாக சினிமா துறை பணிகளில் பயன்படுத்தப்படும் வெவ்வேறு கருவிகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன.  அருகிலேயே வேற்று கிரகத்து கதைகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட பொருளில் காட்சிகள் அமைக்கப்பட்டு அதில் சிறுவர்களின் கவனத்தைக் கவரும் வகையிலான அம்சங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன.

     sy5

    ஆரம்பகால முயற்சிகளின் பதிவு பகுதியில்  (டிசம்பர் 2003)

    அருங்காட்சியகத்தை பார்த்து விட்டு வெளியே வரும் முன்னர் அங்கிருக்கும் விற்பனை பொருட்கள் நிலையத்தில் இந்த அருங்காட்சியகம் வந்து சென்றதன் நினைவாக  இருக்க ஏதாகினும் நினைவுப் பொருட்களையும் இங்கு வருகை தருவோர் வாங்கிக் கொள்ளலாம். இந்த அருங்காட்சிகம் கடற்கரையை மிக ஒட்டி அமைந்திருக்கின்றமையால் அருங்காட்சியகத்தைப் பார்க்க வருவோர் கடற்கரையிலும் சில மணி நேரங்களை ஓய்வெடுக்கச் செலவிடலாம். இயற்கை சூழலில் அமைந்திருக்கும் இந்த அருங்காட்சியகம் பெரியோர் முதல் சிறியவர்கள் வரி தென் கொரிய சினிமா துறையைப் பற்றி அறிந்து கொள்ள விரும்புவோருக்கு நிறைய விஷயங்களைக் வழங்கக்கூடிய ஒரு கருவூலம்தான்.

    அருங்காட்சியக வளாகத்தின் கீள்தளத்தில் சிறிய ரெஸ்டாரண்ட் ஒன்றும் இருக்கின்றது. இங்கு நம் களைப்பு தீர காபி வாங்கி அருந்து விட்டு மீண்டும் மற்றொரு அருங்காட்சியகத்திற்கு நம் பயணத்தை நாம் தொடர்வோமா.. ?

    Share
  • அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்! (26)

    26. அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்! பங்கர் ஹோட்டல் அருங்காட்சியகம், ஸ்டுட்கார்ட், ஜெர்மனி

    சுபாஷிணி ட்ரெம்மல்

    எனது கடந்த அருங்காட்சியகத் தொடர் பதிவில் வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே திறக்கப்படும் ஒரு அருங்காட்சியகத்திற்கு உங்களை அழைத்துச் செல்வது பற்றி குறிப்பிட்டிருந்தேன்.

    நீங்கள் என்னுடன் வரத் தயார்தானே?

    ஜெர்மனியின் ஸ்டுட்கார்ட் நகரில் வருடத்திற்கு ஒரு முறை மார்ச் மாத மத்தியில் அருங்காட்சியக இரவு என்னும் நிகழ்ச்சி நடைபெறும். அன்றைய நாளில் மாலை ஐந்து மணி தொடங்கி மறு நாள் காலை மூன்று மணி வரை ஸ்டுட்கார்ட் நகரில் இருக்கும் அனைத்து அருங்காட்சியகங்களுக்கும் நாம் சென்று பார்த்து வரும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கும். அருங்காட்சியகப் பிரியர்கள் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடம் செல்ல வசதியாக அன்று பேருந்துகள் இலவசமாக செலுத்தப்படும். ஒருவர் 15 யூரோ கட்டணம் மட்டுமே செலுத்தினால் போதுமானது. கட்டணம் செலுத்தி நுழைவு சீட்டு பெறும் போது நமக்கு ஒரு விளக்கக் கையேடு கொடுக்கப்படும். அதில் ஸ்டுட்கார்ட் நகரில் இருக்கும் ஏறக்குறைய முப்பதுக்கும் மேற்பட்ட அருங்காட்சியகங்களை வகைப்படுத்தி, குழுக்களில் அமைத்து, பேருந்துகள் ஒரு அருங்காட்சியக வாசலிலிருந்து மறு அருங்காட்சியகம் செல்லும் வகையில் ஏற்பாடு அமைந்திருக்கும்.

    கடந்த ஐந்து ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் ஒரு சனிக்கிழமை மாலை நான் இந்த அருங்காட்சியக பயணத்தில் பங்கு கொண்டு நான் வசிக்கும் நகரின் அருகாமையில் இருக்கும் அருங்காட்சியகங்களைப் பார்த்து வருகிறேன். மாலை ஐந்திலிருந்து பயணித்தாலும் ஒரு அருங்காட்சியக தினத்தில் ஏறக்குறைய நான்கு அல்லது ஐந்து அருங்காட்சியகங்களை மட்டுமே காண முடியும். அப்படி ஒரு முறை பயணித்த போது ஸ்டுட்கார்ட் மத்தியில் அமைந்திருக்கும் நிலத்திற்குக் கீழே உள்ள ஒரு அருங்காட்சியகம் செல்லும் ஆச்சரியம் மிக்க ஒரு அனுபவத்தைப் பெற்றேன். விளக்கக் கையேட்டினை வாசித்து எங்கே இருக்கின்றது என இந்த அருங்காட்சியகத்தைத் தேடிக் கொண்டு ஸ்டுட்கார்ட் மார்க்கெட்ப்ளேஸ் (Marktplatz) சென்று சேர்ந்தோம். வெறும் தரை. ஆனால் வரிசையாக மக்கள் நின்று கொண்டிருந்தனர். ஒவ்வொருவராக மனிதர்கள் கீழே நோக்கிச் செல்வதைப் பார்த்த எனக்கு நிலத்தின் அடியில் இருக்கும் அருங்காட்சியகம் செல்கின்றோம் என்று அறிந்ததும் ஒரு தனி குதூகலம் ஏற்பட்டது. அதே வேளை உள்ளே சென்றவர்களும் வெளியே வந்து கொண்டிருந்தனர்.

    நுழைவாயில் பகுதி 1940களில்
    நுழைவாயில் பகுதி 1940களில்

    எங்களின் வாய்ப்பு வர நாங்களும் மேல் தரைப் பகுதியிலிருந்து அன்று மட்டுமே பிரத்தியேகமாக திறக்கப்பட்ட பாறை கற்களுக்குக் கீழே அமைக்கப்பட்டிருந்த படிகளில் இறங்கி உள்ளே நடந்து சென்றோம்.

    1940ம் ஆண்டு வாக்கில் இப்பகுதியில் இன்றும் மிகப் பிரபலமாக விளங்கிய Breuninger வர்த்தக நிறுவனத்திற்கு விற்பனையாளர்கள், வணிகர்கள் தங்குவதற்கு ஒரு தங்கும் விடுதி தேவைப்பட்டது. இந்த வர்த்தக நிறுவனம் இன்றும் அருகாமையிலேயே இயங்கி வருகின்றது. மிகப் பெரியதொரு அங்காடி விற்பனை நிலையம் இது.

    இந்தத் தேவையைப் பூர்த்தி செய்ய Breuninger வர்த்தக நிறுவனம் இப் பகுதியில் சற்றே தள்ளி தரைக்கடியில் உள்ள நிலத்தில் பாதுகாப்பை மையமாகக் கருதி ஒரு தங்கும் விடுதியை அமைக்க திட்டம் தீட்டி, வரைபடத்தையும் தயார் செய்து கட்டுமாண வேலைகளையும் தொடங்கியது. இந்த நிலத்துக்கு அடியில் அமைந்த தங்கும் விடுதியோடு இணைந்தார் போல வாகன நிறுத்துமிடம், பிறகு அதிலிருந்து மேல் நோக்கி வரும் வகையிலான ஒரு பாதை என்பதையும் இந்த கட்டுமானம் கொண்டிருந்தது.

    இந்த நிலத்துக்கு அடியிலான கட்டுமானம் என்பது அக்கால கட்டத்தில் நிகழ்ந்த முதலாம் உலக யுத்தம், பின்னர் தொடங்கிய இரண்டாம் உலக யுத்தம் ஆகியனவற்றை முக்கியமாக மனதில் கொண்டு உருவாக்கப்பட்டதே. இங்கு ஸ்டுட்கார்ட் மட்டுமல்லாது, ஜெர்மனியின் பல ஊர்களில் நிலத்துக்கடியில் தங்கும் வீடுகள், மறைவிடங்கள், தொழிற் சாலைகள், சந்திப்புக் கூடங்கள், கேளிக்கை விடுதிகள் என பல இருக்கின்றன. அந்த வகையில் இதுவும் ஒன்றே!

    இப்படி நிலத்திற்கு அடியில் இயங்கிய வாழ்விடங்களின் உதாரணங்களாக இதுவரை ஸ்டுட்கார்ட் நகரில் ஒன்றும், என் இல்லத்திற்கு அருகாமையில் ஃபெல்பாஹ் நகரில் ஒரு நிலத்திற்கடியிலான இரவு கேளிக்கை விடுதியையும் நான் நேரில் சென்று பார்த்து வந்திருக்கின்றேன். இங்கு நமக்கு கிடைக்கும் அனுபவமே தனி தான்.

    இந்த ஸ்டுட்கார்ட் பங்கர் ஹோட்டல் யுத்த காலத்தில் வணிகம் தடைபடாமல் இருப்பதற்கும் உயிரை காப்பாற்றிக் கொள்ள ஒரு பாதுகாப்பு ஏற்பாடாகவே இருந்தது. எதிர்பார்த்தது போலவே 1944ம் ஆண்டு ஜூலை 25-26ம் தேதிகளில் ஸ்டுட்கார்ட் பகுதியில் வெடி குண்டுகள் தாக்கியதில் பல கட்டிடங்கள் சேதத்துக்குள்ளாயின. அந்த சமயத்தில் இந்த பங்கர் ஹோட்டலில் பலர் ஒளிந்துகொண்டு தங்கள் உயிரையும் உடமைகளையும் பாதுகாத்துக் கொண்டனர்.

    ஒரே சமயத்தில் இந்த நிலத்துக்கடியில் அமைக்கப்பட்ட இந்த தங்கும் விடுதியில் பலரும் இருப்பது என்பது எளிதான காரியமல்ல. மூச்சு விட போதிய ஆக்ஸிஜன் போதாமையினாலும் காற்று அழுத்தக் குறைவினாலும் சிரமங்களைத் தாங்கிக் கொண்டே தம் உயிரை இந்த மக்கள் தற்காத்துக் கொண்டனர் என்பதில் சந்தேகம் இல்லை.

    ஸ்டுட்கார்ட் நகரின் மையப்பகுதி 1944ம் ஆண்டு  போரினால் ஏற்பட்ட சேதங்களுடன்
    ஸ்டுட்கார்ட் நகரின் மையப்பகுதி 1944ம் ஆண்டு போரினால் ஏற்பட்ட சேதங்களுடன்

    இரண்டாம் உலக யுத்தத்திற்குப் பின்னர் 1979ம் ஆண்டில் இந்த பங்கர் ஹோட்டல் பொது மக்களின் பாதுகாப்பு அமைப்புகளில் ஒன்றாக இணைக்கப்பட்டு ஸ்டுட்கார்ட் மாநகராட்சியின் பொறுப்பின் கீழ் வந்தது. அதே காலகட்டத்திலும் பின்னரும் ஜெர்மனியில் பல இடங்களில் இப்படி நிலத்துக்கடியில் இயங்கிய சில மறைவிடங்கள் அரசாங்கத்தின் பாதுகாப்பின் கீழ் கொண்டுவரப்படும் முயற்சிகள் நடைபெற்றன. அதன் அடிப்படையில் இந்த ஹோட்டல் மத்திய அமைச்சின் பொறுப்பில் சிலகாலங்கள் என இருந்தாலும் அதன் பின்னர் பராமரிப்பில் படிப்படியாக சில மாற்றங்கள் நிகழ, பின்னர் மீண்டும் ஸ்டுட்கார்ட் மாநகராட்சியின் கீழ் வந்தது.

    அதன் பின்னர் அருங்காட்சியக இரவு நாட்களில் பொது மக்கள் பார்வையிட வருடத்தில் ஒரு நாள் மட்டும் இந்த நிலத்தின் அடியில் இருக்கும் ஹோட்டல் மாநகராட்சியின் அனுமதி வழங்கப்பட்டு திறக்கப்படுகின்றது.

    அறைகள் வரிசையாக
    அறைகள் வரிசையாக

    உள்ளே நுழைந்தால் வரிசை வரிசையான அறைகள் இருப்பதை முதலில் காணலாம். ஒவ்வொரு அறையிலும் பல அடுக்குகளினாலான கட்டில்கள் போடப்பட்டிருக்கின்றன. ஒரு மூலையில் கேளிக்கை பகுதி என அமைத்து அங்கே ரேடியோ, அலங்காரப் பொருட்கள் என வைத்திருக்கின்ரனர். தொடர்ந்து நீளமான பாதையில் நடந்து சென்றால் ஓரிடத்தில் தனி சமையலறை பகுதி இருக்கின்றது.

    அறைகளில் இன்னமும் காட்சிக்காக வைக்கப்பட்டிருக்கும் கட்டில்கள்
    அறைகளில் இன்னமும் காட்சிக்காக வைக்கப்பட்டிருக்கும் கட்டில்கள்

    ஹோட்டலின் நிலை பிரத்தியேகமாக புதுப்பிக்கப்படாமல் எந்த மாறுபாடுகளும் இன்றி அப்படியே 1940களில் இருந்த வகையிலேயே இன்றளவும் பாதுகாக்கப்படுகின்றது.

    போரினால் ஏற்பட்ட சேதம் நிகழ்வதற்கு முன் இந்த ஹோட்டலின் காட்சி
    போரினால் ஏற்பட்ட சேதம் நிகழ்வதற்கு முன் இந்த ஹோட்டலின் காட்சி

    இந்த பங்கர் ஹோட்டல் தற்சமயம் மக்கள் புழக்கத்தில் இல்லாமையால் இது அருங்காட்சியகமாகப் பிரகடனப்படுத்தப்பட்டு ஸ்டுட்கார்ட் நகர அருங்காட்சியகப் பட்டியலில் இடம்பெற்றிருக்கின்றது. இங்கு நேரில் வந்து இந்த அருங்காட்சியகத்தைக் காண விரும்புபவர்கள் ஜெர்மனிக்கு மார்ச் மாதம் 13 – 30ம் தேதிக்குள் உங்கள் வருகை இருப்பதாக திட்டமிட வேண்டும். இந்த குறிப்பிட்ட வேளையில் அமைகின்ற ஒரு சனிக்கிழமையே ஒவ்வொரு ஆண்டும் ஸ்டுட்கார்ட் நகரின் அருங்காட்சியக நிகழ்வு நடைபெறும்.

    சரி.. நிலத்திற்கடியில் இந்தப் புழுக்கத்தில் எவ்வளவு நேரம் நாம் நிற்பது?

    வாருங்கள்.. உங்களை மற்றொரு அருங்காட்சியகத்திற்கு அழைத்துச் செல்கிறேன்.

    தொடரும்..

    சுபா

     

    Share
  • மகாசிவராத்திரி – சிவபூசாவிதி

    சுபாஷிணி டிரெம்மெல் – பவள சங்கரி 

    இவ்வருட மகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.

    இந்தப் பதிவு கடந்த ஆண்டு (2013) சிவராத்திரி தினத்தன்று ஈரோடு ஸ்ரீ மஹிமாலீஸ்வரர் சமேத மங்களாம்பிகைதிருக்கோயிலில் பதிவு செய்யப்பட்டது. அன்றைய தினத்தில் கோயிலில் செய்யப்பட்ட சிறப்பு சிவலிங்க பூஜை இந்தப் பதிவில் இடம் பெறுகின்றது.

    pic12

    பூஜை ஏற்பாட்டில் இடம்பெறும் சிவலிங்கம், பூஜை பொருட்கள் ஆகியவை தயாரானதும் ஆலயத்தில் கருவறையில் இருக்கும் மூலஸ்தான தெய்வத்திற்கு அபிஷேகம் நடைபெற்றது. அந்தச் சிறப்பு பூஜையும் இந்தப் பதிவில் பதிவாகி உள்ளது. அதனைத் தொடர்ந்து பொது மக்கள் இணைந்து ஈரோடு திரு தங்க. விசுவநாதன் தலைமையில் சிவபுராணம் ஓதி சிவலிங்க பூஜை செய்வதைக் காணலாம்.

    இந்த விழியப் பதிவைக் காண: http://video-thf.blogspot.de/2014/02/2014_26.html

    யூடியூபில் இப்பதிவைக் காண: http://www.youtube.com/watch?v=t8I64GTDiHM

    திருமதி பவள சங்கரியின், மகா சிவராத்திரியின் சிவ பூஜா விதிகளை விளக்கும் ஒரு கட்டுரையையும் ஈரோடு திரு தங்க. விசுவநாதன் அவர்களின் நித்திய வழிபாட்டு முறை என்ற தலைப்பிலான ஒரு கட்டுரையையும் இன்றைய நாளில் வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகின்றோம். கட்டுரை கீழே இணைப்பில்!

    இந்த விழியம், மற்றும் புகைப்படங்கள் பதிவினை நான் செய்திட உதவிய திருமதி பவள சங்கரிக்கும் அவர் தம் துணைவர் திரு.திருநாவுக்கரசு அவர்களுக்கும், அனுமதி வழங்கிய ஆலயத்தின் நிர்வாகத்தினருக்கும், திரு தங்க விசுவநாதன் அவர்களுக்கும் தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.

    மேலும் படங்கள்: கட்டுரைக்கு கீழே!

    அன்புடன்
    சுபாஷிணி ட்ரெம்மல்
    [தமிழ் மரபு அறக்கட்டளை]

     
    மகாசிவராத்திரி – சிவபூசாவிதி
    பவள சங்கரி

    ”இவர் ஒரு கற்பத்தில் தம்மையே தியானித்திருந்த காலத்துத் தம் தேகத் துண்டான ஆனந்த பிந்துக்களே சிவலிங்கங்களாயின – (சிவரகசியம்)

    சிவன் – நாராயணர் இவரது கழுத்தைக் கட்டிக் கொண்டதால் கறுத்த கழுத்துடையவரானார்.

    சிவராத்திரி – கால நிர்ணயம், மாசி மாதம் கிருஷ்ணபட்சம், சதுர்த்தசி இரவு, பதினான்கு நாழிகை லிங்கோற்பவ காலம். இதுவே மகா சிவராத்திரி புண்யகாலம்.

    இந்த மகாசிவராத்திரி தினத்தில் நேரிடும் திரயோதசி பரமசிவத்திற்கு தேகமாகவும், சதுர்த்தசி தேகியாகவும், அன்றிச் சக்தியாகவும் சிவமாகவும் கூறப்பட்டிருக்கிறது. சிவராத்திரி முதற் சாம முதல் நான்கு சாமங்களிலும் ஆத்மார்த்த பரார்த்த பூசைகள் நடத்த வேண்டியது. தானஞ்செய்ய வேண்டியது. இதை அனுஷ்டித்தோர் நான்கு யுகங்களிலும் முறையே விநாயகர், கந்தமூர்த்தி, பிரம்ம விஷ்ணுக்களாம். பலன் இம்மையில் சத்சனசானாதி சௌபாக்கிய சம்பத்தும் மறுமையில் சொர்க்காதி போகமுமாம். இது காமியம், நிஷ்காமிகன் இகத்தில் புத்தியும், பரத்தில் முக்தியும் அடைவர்”. – அபிதான சிந்தாமணி.

    பிரம்மா மற்றும் விஷ்ணு ஆகியோருக்காக, சிவபெருமானார் லிங்கோத்பவராக எழுந்தருளியபோது, தேவர்கள் பூசித்த காலம் எனவும், ஒரு பிரம்மகற்பத்தில் சக்தி தேவியார், நான்கு காலங்களும் சிவ பூசை செய்து ஐயனை உளம் ஒன்றி வழிபட்ட காலமே சிவராத்திரி என்பது. சிவபெருமானிடம் அன்னையார் வரம் வேண்டிப் பெற்ற நாளும் இதுவே. சக்தி தேவி, பெருமானாரிடம் விளையாடும் முகமாக ஐயனின் திரிநேத்திரங்களையும் மூடப்போக, அகில உலகமே இருளில் மூழ்கிவிட, தேவர்கள் ஐயனை வணங்கி வழிபட்ட காலமும் இதுவே. பாற்கடலில் தோன்றிய நஞ்சுண்டகண்டனான பெருமானாரை அந்த விடம் தாக்காமல் இருக்கும்பொருட்டு தேவர்கள் விடிய விடிய இடையறாது பூசித்த காலமே மகாசிவராத்திரி என்பதாகவும் புராணங்கள் கூறுகின்றன. உருத்திரராக வந்த சிவபெருமானார், அண்டங்களின் மாயை எனும் அனைத்து இருளையும் போக்கி, ஞான ஒளியை நீக்கமற எங்கும் நிறையச் செய்த அந்த அற்புதமான காலமே மகாசிவராத்திரி எனப்படுகிறது.

    சிவலிங்கநியாசங்கள் என்பதாவன – தண்டபங்கிநியாசம், முண்டபங்கிநியாசம், ஸ்ரீகண்டநியாசம், ஆகமநியாசம், கலாநியாசம், மாத்ருகா நியாசம் போன்றவைகளாம்.
    சிவதீக்கை

    நம் புற உடலில் ஏற்படும் மாசு மற்றும் நுண்கிருமிகளை குளிப்பாட்டி சுத்தம் செய்வது போன்று, ஆன்மா என்ற நம் அகமாகிய உயிரின் மாசு நீங்கும் பொருட்டு அளிக்கப்படுவதே சிவ தீக்கை எனப்படும். ஆண், பெண் என்ற வேறுபாடின்றி சைவ சமயத்தில் பிறந்த அனைவரும் சிவதீக்கை பெறும் தகுதி பெற்றவர்களாகிறார்கள். ‘முள்ளிச் செடிக்கு முக்தி கொடுத்த உமாபதி சிவம்’ மூலமாக, மனிதர்களுக்கு மட்டுமன்றி, பறவை, புல், பூண்டு ஆகியவற்றிற்கும்கூட தீக்கை கொடுக்கப்படுவதை அறிய முடிகிறது. சிவதீக்கை பெறுபவர்கள் உடல், மனம், வாக்கு என்ற மூன்றையும் தூய்மையாக வைத்துக்கொள்பவராக இருக்க வேண்டும். உயர் பண்பும், ஆசாரமும், குரு பக்தியும் உடையவராக இருத்தல் அவசியம். உலக பற்றுகளை கட்டுக்குள் வைத்து தியானத்தில் தம்மை ஈடுபடுத்திக்கொள்ளும் வல்லமை பெற்றவராக இருத்தல் நலம்.

    தெய்வ வழிபாடு என்பதே பையப்பைய நம் மனதை பக்குவப்படுத்தி, இகம் மற்றும் பரம் என்ற இரு வாழ்க்கைக்கும் நம்மை அதற்கு உகந்த நிலைக்கு வழிநடத்திச் செல்வது தான். அந்த வகையில் சிவ தீக்கை என்பது அடிப்படையில் மூன்று நிலைகளாகப் பிரித்திருக்கிறார்கள். முதன் முதலில், ‘சமய தீக்கை’ என்கிற அடிப்படையான, சிவலிங்க வழிபாட்டிற்கான ஆயத்தமாக இதனைக் கொள்ளலாம். ‘நான்’ என்ற ஆணவ மலம் அகன்று நாமே சிவம் என்ற உயர் நிலையை அடையும் எண்ணம் உதிக்கத் தோன்றும். சில காலம் மனம் ஒன்றி குரு அருளிய நெறி முறைகளைக் கடைபிடித்து அனுதினமும் அதன் வழி தொடர அடுத்து விசேட தீக்கை பெறும் தகுதியைப் பெறலாம். விசேட தீக்கை பெறுவதன் மூலம் மட்டுமே, சிவலிங்க மூர்த்திக்கு அகப்பூசை மற்றும் அபிசேகம் செய்து, மலர் தூவி வழிபட்டு, அலங்காரங்கள் செய்து, பெருமானாரைத் தம் அகத்திலும், இல்லத்திலும் எழுந்தருளச் செய்யும் புறப்பூசை என்கிற யோக நெறியில் நிறைந்து செய்யும் பூசைக்கான உரிமம் பெறலாம்!

    அடுத்து மூன்றாவதாக வருவது, ‘நிர்வாண தீக்கை’ என்பது. உயிரை ஞான நிலைக்கு இட்டுச் செல்லும் இதனால் பல்வேறு சக்திகளையும் பெற முடியும் என்கிறார்கள். ‘கண்டவர் விண்டிலை, விண்டவர் கண்டிலை’ என்பதே தத்துவம்! இறைவன் தனக்குள்ளும் இருக்கிறார், மற்றனைத்து உயிர்களுக்குள்ளும் உறைந்திருக்கிறார் என்பதை உணரச் செய்யும் தீக்கை என்பதாகக் கொள்ளலாம். முப்பொருள் உண்மையையும், தீய சக்திகளை அடக்கும் கலையையும் அருளும் இந்த நிர்வாண தீக்கை, உலகப் பற்றுகள் அனைத்தும் துறந்த நிலையில் இருப்பவர்களுக்கு வீடு பேறு கிடைக்கும் வகையில் செய்வது, ‘சத்தியோ நிர்வாண தீக்கை’ மற்றும் ஆன்மா, பிரார்த்த வினைப்பயன்களை முழுவதுமாக அனுபவித்த பின்பு, வீடு பேறு (முக்தி நிலை) அடையச் செய்யக்கூடிய, ’அசத்தியோ நிர்வாண தீக்கை’ என்பதாகும். சிவபெருமானின் அருளைப் பூரணமாகப் பெற்று இம்மை, மறுமை இன்பங்களனைத்தும் பெறவே சிவதீக்கை பெறுகிறார்கள்.

    ஆனஅஞ் செழுத்துளே அண்டமும் அகண்டமும்
    ஆனஅஞ் செழுத்துளே ஆதியான மூவரும்
    ஆனஅஞ் செழுத்துளே அகாரமும் மகாரமும்
    ஆனஅஞ் செழுத்துளே அடங்கலாவ லுற்றதே.

    அரியும்அல்ல அயனும்அல்ல அப்புறத்தில் அப்புறம்
    கருமைசெம்மை வெண்மையைக் கடந்துநின்ற காரணம்
    பெரியதல்ல சிறியதல்ல பற்றுமின்கள் பற்றுமின்
    துரியமும் கடந்துநின்ற தூரதூர தூரமே.

    -சிவவாக்கியர்
    ஏழு வயது ஆன எவரும் சிவதீக்கை பெறலாம். குரு அருளிய திருவைந்தெழுத்து மந்திரத்தை உச்சரிக்கவும், திருநீறை நீரில் குழைத்து திரிபுண்டரமாக பூசிக்கொள்ளவும் சிவதீக்கை பெற வேண்டியது அவசியம். குரு மூலம் தீட்சை பெற வேண்டும் என்பதே சமயக் குரவர்கள் மூலம் நாம் அறியும் நீதி. அகத்திய மாமுனியிடம் ஸ்ரீராமபிரானும், உபமன்யு முனிவரிடம் ஸ்ரீகிருஷ்ணரும் சிவ தீக்கை பெற்று சிவபூசை செய்துள்ளார்கள் என்பதை புராணங்கள் கூறுகின்றன. சமய தீக்கை பெற்று, அன்றாட வழிபாடுகளை நியமங்களின்படி செய்வோருக்கு ஆயுள் கூடும் என்பதும் கண்கூடு. சிவதீக்கை பெற்றவரின் உயிர் முற்றும் அந்தப் பரமனுக்கே உடமையாவதாக ஐதீகம். அந்த வகையில் அந்த உயிரைப் பறிப்பதற்கு எமதர்மனுக்கும் அதிகாரம் இல்லை என்கிறது ஆகமங்கள்.
    ஞான நிலை

    என்னிலே இருந்தஒன்றை யான்அறிந்தது இல்லையே
    என்னிலே இருந்தஒன்றை யான்அறிந்தது கொண்டபின்
    என்னிலே இருந்தஒன்றை யாவர்காண வல்லரோ ?
    என்னிலே இருந்திருந்து யான்உணர்ந்து கொண்டனே.

    நினைப்பதொன்று கண்டிலேன் நீயலாது வேறிலை,
    நினைப்புமாய் மறப்புமாய் நின்றமாயை மாயையோ ?
    அனைத்துமாய் அகண்டமாய் அனாதிமுன் அனாதியாய்
    எனக்குள்நீ உனக்குள்நான் இருக்குமாற தெங்ஙனே !
    யோக நிலை

    உருத்தரித்த நாடியில் ஒடுங்குகுன்ற வாயுவைக்
    கருத்தினால் இருத்தியே கபாலம் ஏற்றவல்லீரேல்
    விருத்தரரும் பாலராவீர் மேனியும் சிவந்திடும்
    அருள்தரித்த நாதர்பாதம் அம்மைபாதம் உண்மையே.

    அறிவு நிலை

    கறந்தபால் முலைப்புகா, கடைந்தவெண்ணை மோர்புகா;
    உடைந்துபோன சங்கின்ஓசை உயிர்களும் உடற்புகா;
    விரிந்துபூ உதிர்ந்தகாயும் மீண்டுபோய் மரம்புகா;
    இறந்தவர் பிறப்பதில்லை இல்லைஇல்லை இல்லையே.

    -சிவவாக்கியர்
    விசேட தீக்கை பெற்றவர்களின் உயிர் அனந்த தேவருக்கும், நிர்வாண தீக்கை பெற்றவரின் உயிர் சதாசிவ மூர்த்திக்கும் மட்டுமே எடுக்க உரிமையுள்ளதாம். இதனால் தீய சக்திகள் எதுவும் அவர்களை அணுக முடியாது. மேலும் வாரிசுகளால் பிதுர் கடன் ஆற்றாமையாலும் தீங்கு விளையாது. பெருமானாரிடம் பாவ மன்னிப்பு பெறவும் தீக்கை அருள் புரியும். இவையனைத்திற்கும் மேலாக பிரணாயாமம் செய்வதால் அறிவியல் காரணங்களால் இருதய நோயும் அண்டாது. மனம் கட்டுக்குள் அடங்கிவிடுவதால், பூரண அமைதியடைந்து உயிர் தூய்மையடைகிறது. முத்திரைகள் பிடிப்பதால், விரல்களுக்கும், நரம்புகளுக்கும் , நல்ல பயிற்சி கிடைப்பதால் நரம்பு சம்பந்தமான நோய்கள் வராமல் காக்கிறது. ஆன்மார்த்த பூசை செய்வதனால் கடந்தகால பாவங்களின் வினைகள் குறைவதோடு, நிகழ்காலத்தில் பாவங்கள் அணுகாது என்கிறார்கள்.
    தில்லைநாய கன்அவன்; திருவரங் கனும்அவன்;
    எல்லையான புவனமும் ஏகமுத்தி யானவன்
    பல்லுநாவும் உள்ளபேர் பகுத்துகூறி மகிழுவார்;
    வல்லபங்கள் பேசுவார் வாய்புழுத்து மாய்வரே.

    எத்திசைக்கும் எவ்வுயிர்க்கும் எங்கள்அப்பன் எம்பிரான்
    சத்தியான வித்துளே முளைத்தெழும் அச்சுடர்
    சித்தமும் தெளிந்துவேத கோயிலும் திறந்தபின்
    அத்தன்ஆடல் கண்டபின் அடங்கல்ஆடல் காணுமே.

    உற்றநூல்கள் உம்முளே உணர்ந்துணர்ந்து பாடுவீர்;
    பற்றறுத்து நின்றநீர் பராபரங்கள் எய்துவீர்;
    செற்றமாவை யுள்ளரைச் செருக்கறுத்து இருத்திடில்
    சுற்றமாக உம்முளே சோதிஎன்றும் வாழுமே.

    அண்டம்நீ அகண்டம்நீ, ஆதிமூல மானநீ,
    கண்டம்நீ, கருத்தும்நீ, காவியங்க ளானநீ,
    புண்டரீக மற்றுளே உணருகின்ற புண்ணியர்,
    கொண்டகோல மானநேர்மை கூர்மைஎன்ன கூர்மையே.
    நமசிவாய அஞ்செழுத்தும் நல்குமேல் நிலைகளும்
    நமசிவாய அஞ்சில்அஞ்சும் புராணமான மாயையும்
    நமசிவாய அஞ்செழுத்து நம்முளே இருக்கவே
    நமசிவாய உண்மையை நன்குஉரைசெய் நாதனே!

    ஓம்நமசி வாயமே உணர்ந்துமெய் உணர்ந்தபின்
    ஓம்நமசி வாயமே உணர்ந்துமெய் தெளிந்தபின்
    ஓம்நமசி வாயமே உணர்ந்துமெய் உணர்ந்தபின்
    ஓம்நமசி வாயமே உட்கலந்து நிற்குமே!

    -சிவவாக்கியர்
    நித்திய வழிபாட்டு முறை

    ஈரோடு திரு தங்க. விசுவநாதன்

    அதிகாலையில் படுக்கையைவிட்டு எழும்போது “சிவ சிவ” என்று இறைவன் திருநாமத்தைச் சொல்லி மடியிலுள்ள திருநீற்றுப் பையிலிருந்து சிறிது திருநீற்றை எடுத்து நெற்றியில் தரித்துக்கொண்டு எழுந்திருக்கவும்.

    1. நீராடுதல்

    நாம் ஆடும் நீரினை இறைவன் வடிவாக எண்ணிக் கீழ்வரும் பதிகத்தைச் சொல்லிக் கொண்டு குளிக்க.

    திருச்சிற்றம்பலம்

    களித்துக் கலந்ததோர் காதற்கசிவொடு காவிரிவாய்க்
    குளித்துத் தொழுது முன்நின்ற இப்பத்தரைக் கோதில் செந்தேன்
    தெளித்துச் சுவையமுது ஊட்டி அமரர்கள் சூழிருப்ப
    அளித்துப் பெரும் செல்வம் ஆக்கும் ஐயாறன் அடித்தலமே. (அப்பர்)

    குளித்தபின் தோய்த்து உலர்ந்த ஆடையையும் கோவண ஆடையையும் அணிந்து கொண்டு துலக்கிய சிறு பாத்திரத்தில் தூய நீரை எடுத்துக்கொண்டு தனியிடத்தில் அமர்ந்து வழிபாட்டைத் தொடங்குக. (வழிபாட்டு அறை தனியாக இருப்பின் சாலச் சிறந்தது).

    2. பிள்ளையார் வணக்கம்

    ஐந்து கரத்தனை ஆனைமு கத்தனை
    இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
    நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்
    புந்தியில் வைத்து அடி போற்றுகின்றேனே

    -திருமூலர்
    ஆ. திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல்
    பெருவாக்கும் பீடும் பெருக்கும் – உருவாக்கும்
    ஆதலால் வானோரும் ஆனை முகத்தனைக்
    காதலால் கூப்புவர்தம் கை. [நம்பியாண்டவர் நம்பி]

    [இ] பிடியதன் உருவுமை கொள, மிகு கரியது
    வடிகொடு தனதடி வழிபடும் அவரிடர்
    கடி, கணபதி வர அருளினன் – மிகு கொடை
    வடிவினர் பயில் வலிவலம் முறை இறையே. [1: சம்பந்தர்]
    திருச்சிற்றம்பலம்
    3. சற்குரு வணக்கம்

    சைவ சமய குருமார்கள் நால்வருக்கும், தனக்குத் தீக்கை அருளிய குருவிற்கும் வணக்கம் சொல்லுதல்.

    அ] பூமியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல்போற்றி
    ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்தபிரான் அடிபோற்றி
    வாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம்போற்றி
    ஊழிமலி திருவாதௌஊரர் திருத் தாள்போற்றி [உமாபதி சிவாச்சாரியார்]

    ஆ] தந்தையாய் ஆவானும் சார்கதி இங்காவானும்
    அந்தம் இல்லா இன்பம் நமக்கு ஆவானும்
    எந்தம்உயிர் தான்ஆ குவானும் சரண் ஆகுவானும்
    அருட்கோணாரு வானும் குரு [தத்துவராய சுவாமிகள்]

    4. வழிபடும் இடத்தை சுத்தி செய்தல்

    சிறிது தண்ணீரைக் கையில் எடுத்து, “பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய் போற்றி” என்று ஓதி வழிபாடு செய்யும் இடத்தில் தெளித்து அதை தூய்மை செய்யவும்.
    5. நீரைச்சுத்தி செய்தல்

    தண்ணீரைச் சிவமாக எண்ணி “நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி” என்று மலர் தூவித் தண்ணீரில் சிவலிங்கத் திருமேனியாய் எழுந்தருளியிருக்கும் திருவானைக்காப் பெருமானை எண்ணி,

    வானைக்காவில் வெண்மதி மல்குபுல்கு வார்சடைத்
    தேனைக்காவில் இன்மொழி தேவிபாகம் ஆயினான்
    ஆனைக்காவில் அண்ணலை அபயமாக வாழ்பவர்
    ஏனைக்காவல் வேண்டுவோர்க்கு ஏதும் ஏதம் இல்லையே. [3. சம்பந்தர்]

    என்னும் பதிகம் ஓதித் துதித்து வலக்கைப் பெருவிரலை மடித்துக்கொண்டு, மற்ற விரல்களை நீட்டிக் கவிழ்த்துத் தண்ணீர் உள்ள குவளையை மூடித் திருவைந்தெழுத்தை எண்ணித் துதிக்கவும்.
    6. ஆத்ம சுத்தி [நீரை உட்கொள்ளுதல்]

    நடு மூன்று விரல்களாலும் மேற்கண்ட தண்ணீரை மூன்று முறை தலையின் மேல் தெளித்துக்கொண்டு, சிறிது நீரை உள்ளங்கையில் எடுத்து இறைவனை எண்ணிக்கொண்டு சிவ தீர்த்தமாக மனத்துள் கொண்டு மூன்று முறை உட்கொண்டு அடுத்து வரும் பாடலைச் சொல்லித் துதிக்கவும்.

    ஒன்றா உலகு அனைத்தும் ஆனார் தாமே;
    ஊழி தோறு ஊழி உயர்ந்தார் தாமே;
    நின்று ஆகி எங்கும் நிமிர்ந்தார் தாமே; நீர்,
    வளி, தீ, ஆகாசம், ஆனார் தாமே;
    கொன்று ஆரும் கூற்றை உதைத்தார் தாமே;
    கோலப் பழனை உடையார் தாமே;
    சென்று ஆடு தீர்த்தங்கள் ஆனார் தாமே திரு
    ஆலங்காடு உறையும் செல்வர் தாமே. – அப்பர்.
    7. [அ] திருநீற்றைத் தூய்மை செய்தல்

    திருநீற்றைப் பராசக்தியின் வடிவமாக எண்ணி சிந்தித்துத் திருநீற்றைச் சிறிது எடுத்துத் தலை, நெற்றி, உடல், முதலியவற்றில் பூசிக்கொள்ள வேண்டும். மேலும் சிறிது எடுத்து தொப்புழிலிருந்து கழுத்து வரையிலும் சிறிது நேர் கோடுகளாகப் பூசவும். இடது கையில் திருநீற்றை வைத்துக்கொண்டு வலக்கை மோதிர விரலால் சிறிது அதிலிருந்து எடுத்துத் தீய சக்திகளை விலக்க நிருதி மூலையில் [இடது தோளுக்கு மேல் பின்புறமாகத்] தெளித்து விடவும்.

    இடது உள்ளங்கையில் உள்ள திருநீற்றை வலக்கையால் மூடி வலது தொடைமேல் வைத்துக்கொண்டு, அடுத்து வரும் பாடலைப் பாடவும்.

    இராவணன் மேலது நீறு எண்ணத் தருவது நீறு
    பராவண மாவது நீறு பாவம் அறுப்பது நீறு
    தராவண மாவது நீறு தத்துவ மாவது நீறு
    அராவணங் துந்திருமேனி ஆலவாயன் திரு நீறே. – [2.சம்பந்தர்]

    சிறிது நீர் விட்டுத் திருநீற்றைக் குழைத்து, தலை, நேற்றி, மார்பு, புயங்கள், இரண்டு முழங்கை, இரண்டு மணிக்கட்டு, தொப்பூழ், முழங்கால் இரண்டு, வலது – இடது விலாப்புறங்கள் இரண்டு, நடுமுதுகு, கழுத்து ஆகிய பதினாறு இடங்களிலும் இட்டுக் கொள்ளவும். நெற்றி, மார்பு, தோள்களில் ஆறு அங்குலமும், கழுத்து முழுவதும் கீழ்வரும் பாடல்களை சொல்லித் துதித்துக் கொண்டே திருநீறு அணிந்து கொள்ளவும். இதனால் தேகசுத்தி அடைகிறது.

    அ] சந்திரற் சடையில் வைத்த சங்கரன் சாமவேதியன்
    அந்தரத்து அமரர் பெம்மான் ஆன்நல் வெள்ளூர்தி யாந்தன்
    மந்திர நமச்சிவாயவாக நீறணியப் பெற்றால்
    வெந்தறும் வினையும் நோயும் வெவ்அழல் விறகிட்டன்றே [4. அப்பர்]
    ஆ] கங்காளன் பூசுங் கவசத் திருநீற்றை
    மங்காமல் பூசி மகிழ்வீரே யாமாகில்
    தங்கா வினைகளும் சாரும் சிவகதி
    சிங்காரமான திருவடி சேர்வரே
    -திருமூலர்

    திருநீறு அணிந்த பிறகு கைகளை அலம்பி, அலம்பிய நீர் இடக்கை மூலம் வரும்படியாகச் செய்து இடக்கையை முஷ்டியாகப் பிடித்துக்கொண்டு பெருவிரலை மட்டும் நீட்டி அதன் வழியாகக் கையில் உள்ள நீர் வடிந்து கீழ் உள்ள பாத்திரத்தில் விழும்படியாக வலக்கை முஷ்டியைத் தாழ்த்தி மல்லாத்தி பிடித்துக்கொண்டு பெருவிரல் வழியாக வடியும் நீரைச் சிவத் தீர்த்தமாகப் பாவித்து இடக்கையின் விரல்களினால் ஏற்று, “சென்றாடு தீர்த்தங்கள் ஆனார் தாமே” என்று இறைவனைத் துதித்துக்கொண்டே மேலே மும்முறை தெளித்துக் கொண்டு வாயிலும் சிறிது விட்டு அருந்துதல் வேண்டும். இதனால் ஆத்மசுத்தி பெறுகிறது.
    7. [ஆ] திருநீறு அணிதல்

    திருநீறு இட வேண்டிய இடம் 16. இப்பதினாறும் இறைவனின் புறத் திருத்தொண்டாம், பதினாறிணையும் முறை தவறாது நிறைவேற்ற அன்புடன் இயற்றுதற்கே இவ்வுடல் என்பதனைக் குறிப்பதாகும்.

    அவை வருமாறு

    1. ஒழுக்கம், 2. அன்பு, 3. அருள், 4. ஆச்சாரம், 5. உபச்சாரம், 6. உறவு, 7. சீலம், 8. தவம், 9. தானம், 10. வந்தித்தல், 11. வணங்கல், 12. வாய்மை, 13. துறவு, 14. அடக்கம், 15. அறிவு, 16. அருச்சித்தல்.

    ஒழுக்கம், அன்பு, அருள், ஆச்சாரம், உபச்சாரம், உறவு, சீலம், வழுக்கிலாத் தவம், வந்தனங்கள், வந்தித்தல், வணங்கல், வாய்மை, அழுக்கிலாத் துறவு, அடக்கம், அறிவோடு அருச்சித்தல், ஆதி இழுக்கிலா அறங்கள் ஆனால் இறங்குவான் பணி அறங்கள். [சித்தியார்]
    திருச்சிற்றம்பலம்.

    8. உறுப்புகளைத் தொடுதல்

    “வாழ்த்த வாயும் நினைக்க மட நெஞ்சும், தாழ்த்தச் சென்னியும் தந்த தலைவா போற்றி”, என ஓதிக் கைகளைக் கூப்பித் தலை வணங்குக. இஃது அருளால் பெற்ற இவ்வுடலால் இறைவனின் அகத் திருத்தொண்டு இயற்றும் முறைமையைக் குறிப்பதாகும்.

    உறுப்புகளைத் தொடும் முறை

    வலக்கைப் பெருவிரல் நுனியை அணி விரல் [மோதிர விரல்] நடுவரையிற் சேர்த்து மற்றைய விரல்களை நீக்கி நமது உடலில் ஒன்பது உறுப்புகளையும் அவ்விரல் கொண்டு தொடுக.

    இவற்றுள் எட்டாவது எண்ணாகிய ஆக்கையைத் தொடுங்கால் இரு கைவிரல்களையும் தனித்தனி இணைத்துச் சிறிது குவித்துத் தலைமுதல் கால் வரை கட்டி, நெஞ்சின் நேர் வைத்துக் கும்பிடுக. 10, 11, 12, திருக்கண்ணிகளை அன்புடன் ஓதிக் கைகள் இரண்டையும் உச்சிமேற் குவித்துத் தொழுக. இம்மூன்றையும் இறை, உயிர், தளை என்னும் முப்பொருள் உண்மையைக் குறிக்கும்.

    1. உச்சி : தலைவனைத் தலையே நீ வணங்காய்.

    2. கண்கள் ; கடல் நஞ்சுண்ட கண்டன் தன்னைக்
    கண்களால் காண்மின் களோ.

    3 . செவிகள் : எரிபோல் மேனிப் பிரான் நிறம்
    எப்போதும் செவிகாள் கேண்மின்களோ

    4 . மூக்கு : வாக்கே நோக்கிய மங்கை மணாளனை மூக்கே நீ முரலாய்.

    5. வாய் : பேய் வாழ் காட்டகத்து ஆடும்பிரான்
    தன்னை வாயே வாழ்த்து கண்டாய்,

    6. நெஞ்சு : மஞ்சாடும் மலைமங்கை மணாளனை
    நெஞ்சே நீ நினையாய்.

    7. கைகள் : பைவாய் பாம்பரை ஆர்த்த பரமனைக்
    கைகாள் கூப்பித் தொழீர்.

    8. ஆக்கை : அரனைப் போற்றி எண்ணாத இவ
    ஆக்கையாற் பயன் என்.

    9. கால்கள் : கோகரணம் சூழாக் கால்களாற் பயனென்.

    10. இறை : உற்றார் யார் உளரோ!
    உயிர் கொண்டு போம்பொழுது,
    குற்றாலத்துறை கூத்தன் அல்லால்
    நமக்கு உற்றார் யாருளரோ?

    11. உயிர் : இறுமாந்து இருப்பன் கொலோ?
    ஈசன் பல்கணத்து எண்ணப்பட்டுச்
    சிறுமான் ஏந்திதான் சேவடிக்கீழ்ச் சென்று
    அங்கு இறுமாந்து இருப்பன் கொலோ

    12. தளை : தேவனை என்னுளே தேடிக் கண்டு
    கொண்டேன் -[4. அப்பர்]

    திருச்சிற்றம்பலம்

     

    9. மந்திரசுத்தி
    பேராயிரம் பரவி வானோர் ஏத்தும் பெம்மானை
    பிரிவிலா அடியார்க்கென்றும்
    வாராத செல்வம் வருவிப்பானை
    மந்திரமும் தந்திரமும் மருந்துமாகித்
    தீராநோய் தீர்த்தருளவல்லான் தன்னை
    திரிபுரங்கள் தீயெழத் திண்சிலைக் கைக்கொண்ட
    போரானைப் புள்ளிருக்கு வேளூரானைப்
    போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே
    – [5.அப்பர்]
    10. பிராணாயாமம்

    வலச்சுட்டு விரல் நடுவிரல் இரண்டையும் உள்ளே மடக்கிப் பெருவிரலால் வலப்பக்க மூக்கை மூடி “ஓம் சிவாய நம” என் ஐந்து முறை சொல்லி, இடப்பக்க மூக்கால் காற்றை உள்ளே இழுத்துக், காற்றை நிறுத்தி மோதிர விரலால் இடப்பக்க மூக்கை மூடி வலப்பக்க மூக்கால் காற்றை வெளிவிடவும். மீண்டும் இது போலவே இடப்பக்க மூக்கை மூடிக்கொண்டே ஐந்தெழுத்து மந்திரத்தை ஐந்து முறை சொல்லி வலப்பக்க மூக்கால் காற்றை உள்ளிழுத்து இடப்பக்க மூக்கால் வெளிவிடுக. இது போன்று இயன்றளவு செய்க.

    இது சமயம் தொப்புழுக்கு நான்கு விரல் இடம் கீழ் உள்ள இடமாகிய மூலாதாரம் என்னும் இடத்திலிருந்து குண்டலினி என்னும் சிவசக்தி எழுந்து மேல் நோக்கி மூலாதாரம், தொப்பூழ், மார்பு, கழுத்து, புருவமத்தி, உச்சி தலைக்குமேல் பன்னிரண்டங்குல அளவில் உள்ள இடம் ஆகிய உணர்ச்சி நிலையங்களில் எழுந்தருளி விளங்குவதாக எண்ணிப் பிறகு தலைக்கு மேல் இரு கைகளையும் கூப்பி வணங்கி மேற்கண்ட சிவசக்தியை அங்கிருந்து கூப்பிய கரத்தினூடாக, மார்புக்குக் கொணர்ந்து மார்பில் எழுந்தருளி விளங்குவதாகக்கொண்டு பஞ்சபுராணம் ஓதித் துதிக்க.

    11. பஞ்ச புராணம் துதித்தல்

    தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, பெரிய புராணம் ஆகிய ஐந்து நூல்களையும் பஞ்ச புராணம் என்று சொல்வது மரபு. வழிபாட்டின்போது குறைந்த அளவு மேற்கண்ட நூல்களில் ஒவ்வொன்றாக ஐந்து பாடல்களாவது பாடித் துதித்தல் வேண்டும். கூடுமானால் பத்தாம் திருமுறையாகிய திருமந்திரத்தில் ஒரு பாட்டும், ஆக பன்னிரு திருமுறைகளிலும் ஒவ்வொரு பாட்டாவது சொல்லித் தினந்தோறும் வழிபடுவது சைவருடைய கடமையாகும். மேற்குறிப்பிட்ட பன்னிரு திருமுறைகளும் தவறாமல் ஒவ்வொரு சைவர் இல்லத்திலும் இருக்க வேண்டுவன.

    தேவாரம்

    அ. தோடு உடைய செவியன் விடை ஏறி ஓர் தூ வெண் மதி சூடி
    காடு உடைய சுடலை பொடி பூசி என் உள்ளம் கவர் கள்வன்
    ஏடு உடைய மலரான் முனை நாள் பணிந்து ஏத்த அருள் செய்த
    பீடு உடைய பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே! – [சம்பந்தர்]

    திருவாசகம்

    ஆ. அம்மையே அப்பா ஒப்பிலா மணியே
    அன்பினில் விளைந்தஆ ரமுதே
    பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
    புழுத்தலைப் புலையனேன் றனக்குச்
    செம்மையே ஆய சிவபதம் அளித்த
    செல்வமே சிவபெரு மானே
    இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
    எங்கெழுந் தருளுவ தினியே. [8. மணிவாசகர்]

    திருவிசைப்பா

    இ. கண்பனி அரும்பக் கைகள் மொட்டித்(து)என்
    களைகணே! ஓலம்என்(று) ஓலிட்டு
    என்பெலாம் உருகும் அன்பர்தம் கூட்டத்(து)
    என்னையும் புணர்ப்பவன் கோயில்
    பண்பல தெளிதென் பாடிநின் றாடப்
    பனிமலர்ச் சோலைசூழ் மொழுப்பில்
    செண்பகம் அரும்பும் பெரும்பற்றப் புலியூர்
    திருவளர் திருச்சிற்றம் பலமே.
    [9. கருவூர்த்தேவர்]

    திருப்பல்லாண்டு

    ஈ. மன்னுக தில்லை வளர்கநம் பத்தர்கள்
    வஞ்சகர் போயகல
    பொன்னின்செய் மண்டபத் துள்ளே புகுந்து
    புவனி யெல்லாம் விளங்க
    அன்னநடை மடவாள் உமைகோன்
    அடியோ முக்கருள் புரிந்து
    பின்னைப் பிறவி யறுக்க நெறிதந்த பித்தற்குப்
    பல்லாண்டு கூறுதுமே.
    [9. சேந்தனார்]
    பெரிய புராணம்

    உ. நன்மை பெருகு அருள்நெறியே வந்தணைந்து நல்லூரின்
    மன்னு திருத்தொண்டனார் வணங்கி மகிழ்ந்தெழும் பொழுதில்
    “உன்னுடைய நினைப்பதனை முடிக்கின்றோம்!” என்று அவர் தம்
    சென்னி மிசை பாதமலர் சூட்டினான் சிவபெருமான்.
    [10. சேக்கிழார்]

    வாழ்த்துப்பா

    ஊ. வாழ்க அந்தணர் வானவர் ஆனினம்
    வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக
    ஆழ்க தீயதெல் லாம்அரன் நாமமே
    சூழ்க வையக முந்துயர் தீர்கவே.
    [3. சம்பந்தர்]
    12. ஜபம்

    மனதை புருவ மத்தியில் இறுத்திப் பத்மாசனத்தில் அமர்ந்த வண்ணம் குரு உபதேசித்த திருவைந்தெழுத்தை 108 தடவை மனத்திற்குள்ளாகவே எண்ணுக.

    13. தியானம்

    இறைவன் புருவ மத்தியில் ஒளி வடிவமாக விளங்குவதாக எண்ணி எந்த விதமான வேற்று எண்ணமும் இன்றி அமைதியாகச் சிவனைச் சிந்தித்து இருக்கவும். மேற்கண்டவாறு [அனுஷ்டானத்தை] வழிபாட்டை முடித்துக்கொண்டு புறத்தில் சிவ வழிபாடு தொடங்குதல் வேண்டும்.

    இத்துடன் நித்திய வழிபாடு முற்றுப்பெறும். சிவபூசை செய்வோர் இதற்குமேல் ஆன்மார்த்த மூர்த்தி வழிபாடு செய்தல் வேண்டும்.

    திருச்சிற்றம்பலம்.

    கல்லாப் பிழையும், கருதாப் பிழையும், கசிந்துருகி
    நில்லாப் பிழையும், நினையாப் பிழையும், நின்னஞ்செழுத்தைச்
    சொல்லாப் பிழையும், துதியாப் பிழையும், தொழாப் பிழையும்
    எல்லாப் பிழையும் பொறுத்தருள்வாய் கச்சியேகம்பனே.

    – திருவேகம்ப மாலை, பட்டினத்துப் பிள்ளையார் (பட்டினத்தார்)

    pic8
    ஆலய வரலாறு
    pic16
    ஆலயத்தின் உள்ளே
    pic9
    சிவ பூஜை செய்ய தயார் நிலையில் இருக்கும் பக்தர்கள்
    pic10
    சிவலிங்கங்கள் தனி பிரகாரங்களில்
    சிவ பூஜை செய்ய தயார் நிலையில் இருக்கும் பக்தர்கள்
    pic13
    சிவ பூஜை செய்ய தயார் நிலையில் இருக்கும் பக்தர்கள்
    pic17
    திரு. தங்க விசுவநாதன்
    மூலஸ்தான தெய்வத்திற்கு அபிஷேகம்

     


    THF: Shivarathiri (Erode Sri Mahimaliswarar Temple – 2013)
    Share
  • 25. அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!

    25. அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்! க்ருவெயர் சீஸ் அருங்காட்சியகம் (2), சுவிஸர்லாந்து.

    சுபாஷிணி ட்ரெம்மல்

    க்ருவெயர் சீஸ் எவ்வகையில் மக்களின் உணவுப் பயன்பாட்டில் இடம்பெருகின்றது எனப் பார்ப்போம்.

    க்ருவெயர் சீஸ் மெலிதான இனிப்புச் சுவையுடன் சிறு துவர்ப்பும், க்ரீம் சுவையும் கலந்தது. இதனை தனித்தனி துண்டுகளாக, வட்ட வடிவில் சற்றே பெரிதாக, ப்ளாஸ்டிக் சுற்றப்பட்டு தனித்தனியாக வெட்டிய சான்வீட்சில் பயன்படுத்தக் கூடிய துண்டுகளாக என விதம் விதமாகவே சூப்பர் மார்க்கெட்டுகளில் கிடைக்கின்றது. காலை, மதிய, மாலை, இரவு உணவு என அனைத்துக்குமே பயன்படுத்தக் கூடிய ஒரு சீஸ் இது.

    சிலர் இரவு உணவு சாப்பிட்டு முடிந்து டிஸெர்ட்டாகவும் இதனைச் சாப்பிடுவதுண்டு. அப்படி சாப்பிடும் போது அதனுடன் சிவப்பு வைன் அருந்துவதும் வழக்கம். க்ருவெயர் சீஸ் சமையலிலும் பயன்படுத்தக்கூடியதே. உதாரணமாக நூடுல்ஸ், அல்லது காய்கறி பேக்கிங் செய்யும் போது அக்கலவையில் இதனைச் சேர்க்கலாம். உணவில் உள்ள ஏனைய பொருட்களின் சுவையையும் வாசனையையும் மறைக்காது இது உணவிற்கு மேலும் சுவை கூட்டும் தன்மை கொண்டது.

    பண்டைய காலத்திலிருந்து சீஸ் என்பது ஐரோப்பியர்களின் உணவுப் பழக்கத்தில் இருப்பது. அதிலும் பண்டைய ரோமானியர்களின் சீஸ் தயாரிப்புக் கலை என்பது புகழ்பெற்றது. இதற்கு உதாரணமாக அதிலும் இந்த க்ருவெயர் சீஸை தொடர்பு படுத்தி ஒரு கதையும் சொல்வர். 2ம் நூற்றாண்டு வாக்கில் இங்கு ஆட்சி செய்த மன்னன் அந்தோன், சீஸை சாப்பிடும் தன் ஆசையை கட்டுப்படுத்த முடியாமல் அதிகம் சாப்பிட்டதால் உடல் நிலையில் பிரச்சனை ஏற்பட்டு இறந்தாராம். அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு தானே.

    1115ம் ஆண்டில் க்ருவெயர் பகுதி அமைந்திருக்கும் இடத்தில் அமைக்கப்பட்ட அரசைப் பற்றி சில ஆவணங்கள் உள்ளன. அதில் ஆட்சியாளர்களுக்கு அனுப்பப்பட என பட்டியலிடப்பட்டுள்ள பொருட்களில் க்ருவெயர் சீஸின் பெயரும் அடங்குகின்றது. இந்த க்ருவெயர் இருக்கும் ஃப்ரைபோக் கண்டோனில் இந்த சீஸ் விற்பனை 1249 வாக்கில் நடந்தைக் குறித்த ஆவணங்களும் கிடைத்துள்ளன. போர் காலங்களில் இந்த சீஸ் வணிகம் என்பது சற்றே தடைபெற்றிருக்கின்றது. உதாரணமாக 1618-1648 வாக்கில் நடைபெற்ற முப்பது ஆண்டு கால போர் சமயத்தில் க்ருவெயர் மட்டுமல்ல, ஏனைய பொருட்களின் விற்பனையும் கூட இக்கால கட்டத்தில் பாதிக்கப்பட்டிருக்கும் என்பது திண்ணம்.

    அருங்காட்சியகத்தில் உள்ள தகவல்களில் ஒன்று  ஒரு கிலோ க்ருவெயர் சீஸ் தயாரிக்க12 லிட்டர் பால் தேவைப்படுவதைக் காட்டுகிறது (2009)
    அருங்காட்சியகத்தில் உள்ள தகவல்களில் ஒன்று ஒரு கிலோ க்ருவெயர் சீஸ் தயாரிக்க12 லிட்டர் பால் தேவைப்படுவதைக் காட்டுகிறது (2009)

    மேலும் கிடைக்கின்ற ஆவணங்களின் படி 1740ம் ஆண்டில் இதன் தயாரிப்பாளர்கள் இந்த சீஸிற்கு பிரத்தியேக லேபல் அதாவது G லேபல் கேட்டு அரசாங்கத்திற்கு மனு அனுப்பி இதனைப் பெற்றிருக்கின்றனர். அக்கால கட்டத்திலேயே 2,500லிருந்து 3,000 டன் சீஸ் உற்பத்தி இருந்ததாக அறிய முடிகிறது. 1762ம் ஆண்டில் l’Académie Française அகராதி இந்தச் சீஸின் பெயரை (Gruyere) அகராதி சொற்பட்டியலில் இணைத்தது. மேலும் முக்கியமாக 1864ல் பாரீஸ் நகரில் நடைபெற்ற உணவு விற்பனையாளர்கள் சந்தையில் இந்த Gruyere சீஸ் கடைக்கு இரண்டு தங்கப்பதக்கங்கள் கிடைத்திருக்கின்றன.

    இந்தச் சீஸின் வணிக வளர்ச்சி சுவிஸர்லாந்துக்கும் பிரான்ஸுக்கும் இடையே நிகழ்ந்த ஒப்பந்தத்தின் வழி உயர்வடைய ஆரம்பித்தது. இதன் வழி வேறு இடங்களுக்கு எடுத்துச் செல்லப்படும் சீஸிற்குத் தேவையான மாற்றங்களை உட்புகுத்தி குருவெயர் சீஸ் தன் வளர்ச்சிப் பயணத்தில் மேலும் ஒரு படி வளர்ந்தது. 1860ம் ஆண்டு வாக்கில் ஃப்ரைபோக் கண்டோன் 254 க்ருவெயர் சீஸ் தயாரிப்பு தொழிற்சாலைகளைக் கொண்டிருந்தது என அறியும் போது ஒரு நாளைக்கு எவ்வளவு க்ருவெயர் சீஸ்கள் தயாரிக்கப்பட்டன என்று யூகித்துக் கொள்ளலாம்.

    க்ருவெயர் சீஸின் தயாரிப்பு இப்போது ஃப்ரைபெர்க் கண்டோனோடு நின்று விடவில்லை. அமெரிக்காவின் விஸ்கான்ஸின்னிலும் இதன் தயாரிப்பு நடைபெறுகின்றது. அடிப்படை தயாரிப்பு முறையிலிருந்து சற்றே மாற்றப்பட்ட வடிவத்தில் ப்ரான்ஸ், கிரேக்கம் ஆகிய நாடுகளிலும் இப்போது க்ருவெயர் சீஸ் தயாரிப்புக்கள் நடைபெறுகின்றன.

    தயாரிப்புப் பணிகள் (2009)
    தயாரிப்புப் பணிகள் (2009)

    க்ருவெயர் சீஸை தயாரிக்க முதலில் நன்கு சேகரிக்கப்பட்ட மாட்டுப் பாலினை 34 °C (93 °F) சீதோஷ்ணத்தில் வெண்கலப் பாத்திரத்தில் சூடாக்க வேண்டும். அதில் சேர்க்கப்பட வேண்டிய ஏனைய பொருட்களைச் சேர்த்து தயிரையும் சேர்த்து பின்பு பதப்படுத்த வேண்டும். பிறகு அச்சுக்களில் இந்தக் கலவை ஊற்றப்பட்டு கட்டியாகும்படி தயார் செய்ய வேண்டும்.

    பின்னர் இவை அறை சீதோஷ்ணத்தில் இரண்டு மாதங்கள் மரப்பலகையின் மேல் வைக்கப்பட வேண்டும். சில நாட்கள் இடைவெளி என்ற வகையில் இந்த சீஸ் திருப்பி வைக்கப்பட வேண்டும். இப்படி மூன்றிலிருந்து பத்து மாதங்கள் இந்த சீஸ்கள் இப்படி பதப்படுத்தப்படும் .பின்னர் இவை வெவ்வேறு தேவைக்கேற்ப வெவ்வேறு காலகட்டங்களில் எடுக்கப்படும் வகை என்று விற்பனைக்குத் தயார் செய்யப்படும்.

    நான் நேரில் சென்று பார்த்து வந்த க்ருவெயர் சீஸ் அருங்காட்சியகத்திலேயே உணவகமும் சீஸ் விற்பனை நிலையமும் இணைத்திருக்கின்றார்கள். ஆக வரும் பொழுது எங்களுக்குப் பயன்படுத்த சில சீஸ்பேக்கட்களையும் வாங்கிக் கொண்டோம்.

    அருங்காட்சியக உணவகத்தில் (2009)
    அருங்காட்சியக உணவகத்தில் (2009)

    இப்போதும் சூப்பர்மார்க்கெட்களில் க்ருவெயர் சீஸ் நான் வாங்கும் போது எனக்கு இந்த அருங்காட்சியகம் சென்று வந்த நினைவுகள் என் மணக்கண்முன் வந்து செல்லும். அங்கு பார்த்த காட்சிகளும் க்ருவாயெர் நகரின் பசுமையும் அங்கு புல் தின்று நடைபயிலும் மாடுகளும் இன்றும் பசுமையாகவே என் நினைவில் இருக்கின்றன.

    இத்தொடரின் அடுத்த பதிவில் வாசகர்கள் உங்களை மேலும் ஒரு அருங்காட்சியகத்திற்கு அழைத்துச் செல்கிறேன். நாம் அடுத்து செல்லவிருக்கும் அருங்காட்சியகம் கூட வித்தியாசமான ஒன்று தான்.

    வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே திறக்கப்படும் ஒரு அருங்காட்சியகம் இது. வருடத்தின் 365 நாட்களில் ஒரு நாள் மட்டுமே பார்க்கக் கூடிய இந்த அருங்காட்சியகத்தைக் காண உங்களுக்கும் ஆவல் இருக்கின்றது தானே..?

    Share
  • 24. அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்! க்ருவெயர் சீஸ் அருங்காட்சியகம், சுவிஸர்லாந்து.

    சுபாஷிணி ட்ரெம்மல்

    அருங்காட்சியகங்கள் என்றாலே சில பல நூற்றாண்டுகள் பழமை கொண்ட கருவிகளும், விலங்குகளின் மனிதர்களின் எலும்புக் கூடுகளும், ஆவணங்களும், கட்டிடங்களின் உடைந்த பகுதிகளும் சிறபங்களும் சேகரித்து வைக்கப்பட்டிருக்கும் இடம் என பலர் நினைத்துக் கொண்டிருக்கலாம். உணவுப் பொருட்களுக்காகவும் அருங்காட்சியகங்கள் இருக்கின்றன என நான் சொன்னால் நம்புவீர்கள் தானே? அப்படி ஒரு அருங்காட்சியகத்திற்கு செல்வோமா?

    க்ருவெயர் நகர் (2009)
    க்ருவெயர் நகர் (2009)

    பச்சை பசேல் என்ற பசுமை… அதில் மஞ்சள் வெள்ளை, ஊதா என வர்ணங்களில் மலர்ந்திருக்கும் மலர்கள். அந்தப் பசுமையான புல்வெளியில் துளிர்த்து வளர்ந்திருக்கும் விதம் விதமான மூலிகை செடிகள்.. இங்கே கொழு கொழு என நம் கண்களை ஈர்க்கும் வகையில் கழுத்தில் மணியை கட்டிக் கொண்டு அசைந்து அசைந்து சுவைத்து ரசித்து புற்களைத் தின்று கொண்டிருக்கும் மாடுகளைப் பார்த்தவாறே சாலையில் பயணித்துக் கொண்டிருக்கின்றோம். இப்போது நாம் பயணம் செய்து கொண்டிருப்பது சுவிஸர்லாந்தில். இங்கே ஆல்ப்ஸ் மலைத் தொடர்களின் ஒரு பகுதியில் அமைந்திருக்கும் எழில் நிறைந்த க்ருவெயர் நகரில் தாம் நாம் இருக்கின்றோம். இங்கிருக்கும் க்ருவெயர் சீஸ் அருங்காட்சியககத்திற்குத் தான் நான் இன்று உங்களை அழைத்துச் சென்று கொண்டிருக்கின்றேன்.

    சீஸ் ஐரோப்பிய உணவில் பிரதான இடம் பிடிக்கும் ஒன்று. ஐரோப்பா என்று மட்டுமல்லாமல் ஐரோப்பியர்கள் பரவிய வட அமெரிக்கா தென் அமெரிக்கா ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்க கண்டங்களில் விரிவாகப் பரவிய சீஸ் பயன்பாடு தற்சமயம் ஆசிய நாடுகளுக்கும் அறிமுகமாகிவிட்டது. ஆசிய நாடுகளில் கூட சூப்பர் மார்க்கெட்டுகளில் இப்போது சீஸ் கிடைக்கின்றது.

    சீஸ் என்பது அடிப்படையில் பாலைக் கொண்டு செய்யும் ஒரு பதார்த்தம் என்றாலும் அதில் சேர்க்கப்படும் பாக்டீரியா, தயாரிப்பு முறை, பதப்படுத்தும் முறை ஆகியன பொருத்து ஒவ்வொன்றும் அதன் தன்மையில் மாறுபடுகின்றன. ஐரோப்பாவில் குறிப்பிடத்தக்க வகையில் சீஸ் வகையிலேயே நாட்டுக்கு நாடு வித்தியாசமாக, நகருக்கு நகர் வித்தியாசமாக சீஸ்கள் தயாரிப்பதும் விற்பனை செய்யப்படுவதும் நிகழ்கின்றது. உதாரணமாக இத்தாலி, ப்ரான்ஸ், ஜெர்மனி, சுவிட்ஸர்லாந்து, இங்கிலாந்து, பெல்ஜியம், டச்சு, டென்மார்க், க்ரீஸ், ஆகியவை தங்களின் பிரத்தியேக சீஸ்களுக்காகப் புகழ் பெற்று விளங்குகின்றன. இவை ஒன்றிலிருந்து ஒன்று சுவையிலும் அதன் கெட்டித்தன்மையிலும், அமைப்பிலும், வர்ணத்திலும், வாசத்திலும் மாறுபடுகின்றன.

    அப்படி சிறப்புத்தன்மை வாய்ந்த ஒரு சீஸ் தான் க்ருவெயர் சீஸ். இந்தச் சீஸ் பற்றிய முழு விபரங்களையும் தரும் ஒரு அருங்காட்சியகம் தான் க்ருவெயர் நகரில் அமைந்திருக்கும் இந்த La Maison du Gruyère a Pringy (House of Gruyère) அருங்காட்சியகம். இந்த அருங்காட்சியகத்தின் உள்ளே சென்று பார்வையிட கட்டணம் செலுத்தி நுழைவுச் சீட்டைப் பெற வேண்டும்.

    இந்த அருங்காட்சியகம் வாரத்தின் ஏழு நாட்களிலும் காலை 9 மணியிலிருந்து மாலை 6 மணி வரை திறந்திருக்கும். ஆக சுவிஸர்லாந்து செல்பவர்கள் தாங்கள் சென்று பார்த்து வர வேண்டிய அம்சங்களில் இதனையும் ஒன்றாக மறக்காமல் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.

    இந்த அருங்காட்சியகத்தில் முதலில் நமக்கு க்ருவேயர் சீஸ் உருவான வரலாறு விளக்கப்படுகின்றது. அதனை விளக்கும் வகையில் புகைப்படங்கள், வீடியோ பதிவுகள், விளக்கத் தகவல்கள் ஆகியவை வரிசையாக வழங்கப்பட்டிருக்கின்றன. எவ்வகை மூலிகைகள் இந்தப் புற்களில் விளைகின்றன? அதனால் கிடைக்கும் மாட்டின் பால் இந்தச் சுவையைக் கொண்டதாக அமைந்திருக்கின்றது என்பன போன்ற விளக்கங்கள் இதில் அடங்கும். பின்னர் படிப்படியாக க்ருவெயர் சீஸ் எப்படி பிரபலமடைந்து இன்று உலகம் முழுவதும் பரவியிருக்கின்றது என்ற தகவலை விளக்கும் வகையில் விபரங்களை அமைத்திருக்கின்றனர்.

    சீஸ்கள் வரிசையாக அடுக்கப்பட்டுள்ளன (2009)
    சீஸ்கள் வரிசையாக அடுக்கப்பட்டுள்ளன (2009)

    அங்கிருந்து தொடர்ந்து சென்றால் க்ருவெயர் சீஸ் தயாரிக்கப்படும் இடத்திற்கு வந்து சேர்வோம். முதலில் நம்மை மலைக்க வைப்பது வரிசை வரிசையாக ஏறக்குறைய 10 மீ தூரத்திற்கு அமைக்கப்பட்ட அலமாரியில் அடுக்கப்பட்டிருக்கும் ராட்ஷ்சஷ அளவிலான உருண்டை வடிவிலான சீஸ்கள்.

    இவற்றில் நாள் குறிப்புகள் எழுதப்பட்டிருக்கும். சீஸ் தயாரிப்பில் எத்தனை நாட்கள் சீஸ் பதப்படுத்தப்பட வேண்டும் என்பது மிக முக்கியம். குறிப்பிட்ட நாட்கள் சீஸ் முறையாகப் பதப்படுத்தப்படும் போதே அது சரியான சுவையைப் பெறுகின்றது.

    சீஸ் தயாரிப்பை பார்வையிடும் ஊழியர் (2009)
    சீஸ் தயாரிப்பை பார்வையிடும் ஊழியர் (2009)

    அங்கிருந்து சற்று தள்ளிச் செல்லும் போது ஒரு ராட்சச அளவிலான பாணையில் அமைக்கப்பட்டிருக்கும் படியின் மேல் ஏறி நின்று கொண்டு ஒருவர் பெரிய துணியால் பால் கலவையை வடித்து எடுப்பதையும் இன்னொரு ராட்சச அளவிலான பானையில் ஒருவர் மரக்கம்பு கொண்டு திரண்டு வரும் பாலை கிளறுவதையும் இன்னொரு இடத்தில் வரிசை வரிசையாக ராட்சச அளவிலான பானைகளில் பால் நிறைந்து நிற்பதும் என வெவ்வேறு நடவடிக்கைகள் நிகழ்ந்து கொண்டிருப்பதைக் காண்போம். பார்க்கவே வியப்பூட்டுவதாக இருக்கும் இவை அனைத்தும்.

    இப்படி மிகப் பெரிய அளவில் வணிக நோக்கோடு இன்று தயாரிக்கப்படும் இந்த க்ருவெயர் சீஸின் வரலாறு பற்றியும் சிறிது அறிந்து கொள்வது இந்தச் சீஸ் எத்தனை காலமாக மக்கள் உணவுப் பயன்பாட்டில் இருக்கின்றது என்பதை நாம் அறிந்து கொள்ள நிச்சயம் உதவும். இன்று கிடைக்கின்ற ஆவணங்களின் அடிப்படையில் உள்ள குறிப்புகளில், கி.பி.1115 ஆண்டின் ஒரு ஆவணத்தில் இந்த க்ருவெயர் சீஸ் பற்றிய குறிப்புகள் இருக்கின்றன. ஆக அதற்கும் முந்தைய பழமை வாய்ந்த ஒரு சீஸ் தான் க்ருவெயர் என்ற விஷயத்தை இதன் வழி அறியமுடிகின்றது. இதன் வரலாற்றை மேலும் பல தகவல்களோடு தொடர்ந்து அடுத்த பதிவில் வழங்குகின்றேன். தொடர்ந்து வாருங்கள்!

    Share
  • 23. அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!…

    சுபாஷிணி ட்ரெம்மல்

     

    23. பர்மா-சியாம் மரணப்பாதை அருங்காட்சியகம் (3),தாய்லாந்து

     

    அருங்காட்சியகத்தின் கீழ்தளத்தில் படங்களுடன் கூடிய விவரணைகள் நிறைந்துள்ளன. அத்தோடு அக்கால சூழலை விளக்கும் சில மாடல்கள் (models) இப்பகுதியில் இடம்பெறுகின்றன. இந்த மாடல்களைப் போர்க்கைதிகள் நினைவாக ஆஸ்திரேலியா, ஹாலந்து, இங்கிலாந்திலிருந்து தனியாரும் அரசாங்கமும் வழங்கியிருக்கின்றன. குறிப்பாக இந்த ரயில் பாதை அமைத்த வேளையில் அந்த அடர்ந்த காட்டுப்பகுதியில் எத்தகைய முறையில் நோயாளிகளுக்கு மருத்துவம் வழங்கப்பட்டது? பணியாளர்கள் தங்கும் வீடுகள், பணியாளர்கள் ஜப்பானியப் படைகளால் தண்டிக்கப்படும் காட்சி என்பன இதில் இடம்பெறுகின்றன. அதை பார்த்து முடித்து கீழ்தளத்திலிருந்து படிகள் ஏறி முதல் மாடிக்குச் சென்றால் அங்கு தொடர்ச்சியாக பல அரும்பொருட்களை நாம் காணலாம்.

    இப்பகுதியில் ஜப்பானியப் படைகள் பயன்படுத்திய ரகஸிய தொலைத் தொடர்பு கருவிகள், ஆங்கிலேய, டச்சு போர்கைதிகள் பயன்படுத்திய தொலைத்தொடர்பு கருவிகள், தட்டச்சுக் கருவி, பணியாளர்கள் அடையாள அட்டை, ஜப்பானியப் படையினர் உடைகள் போன்ற பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இவற்றோடு ரகசியமாகக் கையாளப்பட்ட சில ஆவனங்களும் இங்குள்ளன. அதுமட்டுமல்ல.. இந்த மரண ரயில் பாதை அமைப்பைப் பற்றி விளக்கும் இரண்டு நூல்களையும் இங்கு கண்டேன். இந்த அருங்காட்சியகத்தில் புகைப்படமும் வீடியோ பதிவும் செய்வதை தடைசெய்திருப்பதால் இவையனைத்தையும் புகைப்படங்களாகப் பதிய முடியாததில் எனக்கு சற்று வருத்தமே.

    suba_wmuseum2

    செக்ஷன் 277

    போர்க்கைதிகளும் மலாயாவின் கூலிகளும் கட்டி முடித்த இந்த முழு ரயில் பாதையில் பாலம் செக்ஷன் 277 மிக முக்கியத்துவம் வாய்ந்தது. இது க்வாய் நதியைக் கடக்கும் வகையில் அமைக்கப்பட்ட பாலம். 1943ம் ஆண்டில் இதன் முழு பணியும் முடிக்கப்பட்டது. 1945ல் இரண்டாம் உலக யுத்தத்தில் அமெரிக்கப் படைகள் இந்த பாலத்தை குண்டுகள் போட்டு தகர்த்து. இது ஜப்பானியப் படைகளைப் பலமிழக்கச் செய்தது என்பது மிக முக்கியமான ஒன்று. அதுமட்டுமல்லாமல் ஒரு கால கட்டத்தில் இப்பாலத்தின் தொடர்ச்சியான தண்டவாளப் பகுதியில் 3.9 கிமீ அளவு பகுதியை ஆங்கிலேய படைகள் நீக்கின. ஆனால் பின்னர் மீண்டும் இவை கட்டிமுடிக்கப்பட்டன. ஆயினும் பர்மாவை இணைக்கும் பகுதிகள் மீண்டும் சீரமைக்கப்படாமலேயே இருந்தன என்பதால் இன்று வரை இப்பாலம் பர்மா-சியாமை முழுமையாக இணைக்காத நிலையிலேயே இருக்கின்றது.

    இந்த பர்மா-சியாம் மரண ரயில்பாதை பற்றி ஒரு திரைப்படம் வெளிவந்தது என்பது உங்களுக்குத் தெரியுமா?

    suba 2

    நன்றி: http://en.wikipedia.org/wiki/The_Bridge_on_the_River_Kwai

    ப்ரென்ச் நாவலாசிரியர் Pierre Boulle அவர்களின் 1952ம் ஆண்டு நாவலான Le Pont de la Rivière Kwai நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட படம் தான் அது. இந்த நாவல் ஆங்கிலத்தில் The Bridge over the River Kwai என்ற பெயரில் முதலில் மொழி பெயர்க்கப்பட்டது. இந்தத் திரைப்பட்டம் இங்கிலாந்து-அமெரிக்க கூட்டு படைப்பாக உருவாக்கப்பட்டது. பர்மா-சியாம் மரண ரயில் பாதை என்றாலும் இந்த முழுப்படமும் தாய்லாந்து பர்மாவில் இல்லாமல் இலங்கையில் படமாக்கப்பட்டதாம். மரண ரயில்பாதையாக இப்படத்தில் காட்டப்பட்ட பகுதி இலங்கையில் `கிட்டுல்கால` என்ற பகுதியில் படமாக்கப்பட்டது. இத்திரைப்படத்தைத் தாய்லாந்து காஞ்சனாபுரியில் என்றில்லாமல் இலங்கையில் படமாக்கியதற்கு என்ன காரணம் எனப் புரியவில்லை.

    இந்தத் திரைப்படம் வெளிவந்த சமயத்தில் ஒருவகையில் இது மிகப் பெரிய கவன ஈர்ப்பை செய்திருக்கின்றது என்பதை அறிய முடிகின்றது. 7 அக்காடெமி அவார்டுகளைத் தட்டிச் சென்றிருக்கின்றது இந்தத் திரைப்படம். அதில் அவ்வாண்டின் சிறந்த படத்திற்கான பரிசும் அடங்கும். ஆனால் முழு மரணப்பாதை கொடுமைகளையும் பிரச்சனைகளையும் சரியாக வெளிப்படுத்தவில்லை என்ற விமர்சனமும் இந்தப் படத்திற்கு இருக்கின்றது.

    காஞ்சனாபுரிக்கு நான் சென்றிருந்த போது அருங்காட்சியகத்தைப் பார்த்ததோடு அதன் எதிர்புறம் இருக்கும் போர்க்கைதிகள் நினைவு மண்டபத்திற்கும் சென்று அங்கிருக்கும் நினைவுக்கற்களைப் பார்வையிட்டேன். நாடு வாரியாக இவர்களது பெயர்கள் வரிசைக் கிரமமாக புல் தரையில் இங்கு செதுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு நினைவுக் கற்கள் மீதும் போர்க் கைதியாக இருந்து மரணப்பாதை அமைப்பில் பணியாற்றி மரணித்தவர்களின் பெயர், அவர்களது நாடு, சில பொன்மொழிகள் ஆகியன பொறிக்கப்பட்டுள்ளன.

    suba_wmuseum1

    அருங்காட்சியகத்தின் வாசலில் (டிசம்பர் 2013)

    எங்கள் பயண வழிகாட்டி இந்த அருங்காட்சியகத்தை நாங்கள் பார்த்த பிறகு இம்மரணப்பாதையில் ஓடும் ரயிலில் பயணம் செய்யும் வகையில் எங்களுக்கு டிக்கட்களையும் ஏற்பாடு செய்திருந்தார். காஞ்சனாபுரியிலிருந்து ரயில் எடுத்து 1 மணி நேரப் பயணத்தை இந்த மரணப் பாதையில் மேற்கொண்டோம். மறக்க முடியாத ஒரு அனுபவம் அது என்று தயங்காமல் கூறுவேன். அதுமட்டுமல்லாமல் மறு நாள் காலையில் இந்த ரயில் பாதையின் ஒரு பகுதில் 30 நிமிடங்கள் நடந்து வர எங்கள் பயண வழிகாட்டி ஏற்பாடு செய்திருந்தார். அருங்காட்சியகத்தைப் பார்த்து பின்னர் இந்த ரயில் பயணம் செய்து, ரயில் தண்டவாளத்திலும் நடந்து வந்தது ஒரு வித்தியாசமான அனுபவமாகவே அமைந்தது.

    காலங்கள் கடந்து விட்ட நிலையிலும் 2ம் உலகப்போர் விட்டுச் சென்றிருக்கும் தடையங்கள் இன்று வரலாற்றினை நாம் புரிந்து கொள்ள உதவுகின்றன. என் அருங்காட்சியகத் தேடல்களில் விதம் விதமான அருங்காட்சியகங்கள் இருப்பதைக் காண்கின்றேன். அதில் இது ஒரு வகை.

    தாய்லாந்திலிருந்து புறப்பட்டு அடுத்து நாம் வேறொரு அருங்காட்சியகத்திற்குச் செல்வோம். அடுத்து நாம் செல்லவிருப்பது வித்தியாசமான ஓர் அருங்காட்சியகம். சற்றே ஆச்சரியத்தைக்கொடுக்கக் கூடிய ஒன்று தான். எங்கு செல்லப் போகின்றோம் என ஊகிக்க முடிகிறதா..?

    தொடரும்

    Share
  • அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – (22)

    பர்மா-சியாம் மரணப்பாதை அருங்காட்சியகம் (2),தாய்லாந்து

    சுபாஷிணி ட்ரெம்மல்

    போர்க் கைதிகளை வைத்து இந்த மரணப் பாதையை அமைக்க ஜப்பானியப் படையினர் திட்டம் தீட்டினர்  என்பதையும் அவர்களோடு மலாயா இந்தோனீசியாவிலிருந்து ஏராளாமானோர் கூலிகளாக இந்தப் பணியில் வேலைக்கு கொண்டு வரப்பட்டார்கள் என்ற விபரத்தையும் இக்கட்டுரையின் முதல் பகுதியில் குறிப்பிட்டிருந்தேன். இந்த இரண்டு வகை பணியாட்கள் குழுக்களிலும் வித்தியாம் இருப்பதை கட்டாயம் காணாமல் இருக்க முடியாது.

    போர்கைதிகளாக இப்பணியில் ஈடுபடுத்த அழைத்துக் கொண்டு வரப்பட்டவர்கள் ஆஸ்திரேலிய, ஆங்கிலேய டச்சு படைகளில் போர் வீரர்களாப் பணியாற்றியவர்கள். போர் விபரங்களும் தந்திரங்களும், காட்டிற்குள் வாழும் பயிற்சியும் நீண்ட கால அவஸ்தைகளையும் துன்புறுத்தல்களையும் உடல் ரீதியாகத் தாங்கும் மன பலத்தையும் கொண்டவர்கள் இவர்கள். பலர் உயர்ந்த கல்வியறிவும் கொண்டவர்கள். இராணுவத்தில் இயந்திரங்களை இயக்கவும், மருத்துவர்களாகவும், போர்க் கருவிகளைப் பயன்படுத்தவும், கடுமையான சூழலில் வாழ்வதற்குத் தீவிர பயிற்சியும் தங்கள் பணியின் ஒரு அங்கமாகக் கற்றவர்கள்.

     warm2

    காஞ்சனாபுரியிலிருந்து செல்லும் மலைப்பாதை. மலையைக் குடைந்து அமைக்கப்பட்ட பாதையில் ரயில் செல்கின்றது. (டிசம் 2013)

    ஆனால் கூலிகளாக இப்பணிக்கு அமர்த்தப்பட்ட மலாயாவின் இந்திய சீன, மலாய் மக்களும் இந்தோனீசிய மக்களும் மிக எளிய மக்கள். மிகச் சாதாரண மனிதர்கள். போதிய கல்வியறிவு பெறாத இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்களால் கப்பலில் கூலிகளாக வேலை செய்ய வந்த தமிழர்களும், சீனாவிலிருந்து வணிகம் செய்ய வந்த சீனர்களும், விவசாயிகளாக தங்கள் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்த மலாய் மக்களுமாவர். இத்தகையோரே பெரும்பான்மையினராக  இந்த மரணப்பாதையில் பணியாற்ற கொண்டுவரப்பட்டனர். இவர்களுக்கு ஆங்கிலமும், ஜப்பானிய மொழியும் தெரியாது. கல்வி அறிவு என்பதும் மிகக் குறைவு. ஏழைகளான இவர்களில் பெரும்பாலோர் மெலிந்த உடம்பினர்.

    முதலில் ஜப்பானியப் படைகள் இப்போர் கைதிகளையும் ஆசிய கூலிகளையும் இப்பணியில் ஈடுபடுத்த அறிவித்து இவர்களைக் கொண்டுவந்தபோது இவர்கள் எல்லோருக்கும் அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்து கொடுக்கப்படும் என்று சொல்லி அவர்களை நம்ப வைத்து அழைத்து வந்தனர். தரமான இருப்பிடம், நல்ல உணவு ஆகியவையும் ஆரோக்கியமான வேலை சூழலும் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பை தந்திருந்தனர். ஆனால் மிக விரைவிலேயே ஜப்பானியப் படைகளின் உண்மையான முகம் வெளிப்பட ஆரம்பித்து விட்டது.

     unnamed

    டச்சு போர்க் கைதிகள் – பல நாட்கள் போதிய உணவு இல்லாமையினாலும் கடுமையான உழைப்பினாலும் மெலிந்து காணப்படுகின்றனர்

    இப்போது நமக்குக் கிடைக்கின்ற தகவல்களின் படி இந்த மரணப்பாதை அமைப்பிற்காகக் கொண்டுவரப்பட்ட இந்த 180,000 ஆசிய கூலிகளில் 90,000 பேர் 1942லிருந்து 1943க்குள் இறந்து போயினர். இந்த கொடூர நிகழ்விற்கு முழுக்காரணமும் ஜப்பானியப் படைகளின் கொடுமையான பணியிட நடைமுறைகள் தாம்.

    சுகாதாரமற்ற குடிசைகளில்  நூற்றுக்கணக்கானோரை திணித்து தங்க வைத்து அவர்களது உடல் நிலை மோசமான நிலையிலும் பணி செய்ய வேண்டிய கட்டாயத்திற்குள்ளாக்கப்பட்டனர் என்பதை அருங்காட்சியகத்தின் குறிப்புக்குக்களிலிருந்து காணமுடிகின்றது. சுகாதார கேடு விரைவாகப் பரவிய நிலையில் ஒரு காலகட்டத்தில் மலேரியா நோய் பரவ,  கூட்டம் கூட்டமாக இவர்கள் இறந்து போயிருக்கின்றனர் இந்த 2 வருட காலத்தில் (1942-1943).

    வேலை.. வேலை வேலை.. இதுவே முக்கிய நோக்கம். மழை வெயில் என்ற பாரபட்ஷம் இல்லாமல் நேரம் காலம் வரையறை இல்லாமல் உழைப்பு உழைப்பு உழைப்பு மட்டுமே. பலர் காலரா வந்தும், கடுமையாகத் தண்டிக்கப்பட்டும் இறந்து போன போது அவர்களை முறையாகப் புதைக்காமல் காடுகளில் தூக்கிப் போட்டு விட்டு செல்வார்களாம். அந்தப் பிணத்தின் நாற்றம் அழுகிப் போன சடலத்தைச் சுற்றி மொய்க்கும் ஈக்களும் உயிருடன் வாழும் ஏனைய கூலிகளின் கூடாரத்தையும் வந்து பார்த்து நோய்களைப் பரப்பிச் சென்றதன் விளைவாக வரிசை வரிசயாக இம்மக்கள் இறந்து போயினர். இவர்களது சடலங்களை மரணப்பாதை வழியில் சில இடங்களில் கூட்டமாகக் கொட்டி புதைத்து வைத்து தங்கள் பணியைத் தொடர்ந்தது ஜப்பானியப் படை.

    warm1

    நினைவு மண்டபத்தில் உள்ள தனித்தனி நினைவுக் கற்கள் (டிசம் 2013)

    இறந்து போன 12,399 ஆங்கிலேய, ஆஸ்திரேலிய, அமெரிக்க, டச்சு போர் கைதிகளுக்காவது இப்போது அவர்கள் ஒவ்வொருவர் பெயரையும் நினைத்துப் பார்க்க என்று காஞ்சனாபுரியில் மிகப்பெரிய நினைவு மண்டபமே உள்ளது. இங்கு இறந்த இவர்கள் ஒவ்வொருவருக்கும் நினைவுக் கல் அமைத்து வைத்திருக்கின்றனர். அந்த நிலை கூட ஆசிய கூலிகளுக்கு இல்லை.

    அதிகாலை, மதியம், மாலை இரவு என ஓய்வு என்பதே இல்லாமல் ரயில் பாதை அமைக்கும் பணியில் போர் கைதிகளும் கூலிகளும் ஈடுபடுத்தப்பட்டனர். இவர்களுக்குப் போதிய உணவு கிடைப்பதில் சிரமமே ஏற்பட்டிருக்கின்றது. பல வேளைகளில் கொஞ்சம் அரிசி சாதம் மட்டுமே என்ற நிலையிலேயே இவர்கள் நாட்களை கடக்க வேண்டிய சூழல். இது  2 ஆண்டுகாலம் தொடர்ந்திருக்கின்றது. நோயால் வாடியவர்களுக்கு மருத்துவ உதவிகளோ அதனை வழங்க எந்த வசதிகளுமோ கூட ஏற்பாடு செய்யப்படவில்லை.

    unnamed (1)

    போர் கைதிகளாக வந்த பணியாளர்கள், போர் கைதிகள் விதிப்படி தங்கள் குடும்பத்தாருக்கு தங்கள் நலனை விவரித்துக் கூறி கடிதம் அனுப்பி வைக்க சட்டப்படி அனுமதி உள்ளது.  அப்படி கடிதம் அனுப்ப செய்த முயற்சிகளில் அஞ்சல் அட்டைகளை ஜப்பானியப் படைகளே இவர்களை உண்மை நிலமையைக் கூற விடாத படி செய்து பொய் விபரங்களை உட்புகுத்தி இவர்கள் இங்கு நலமாக இருப்பது போல  எழுத வைத்து அனுப்பி வைப்பார்களாம். இப்படி அஞ்சல் செய்யப்பட்ட அஞ்சல்அட்டைகளில் சில இப்போர் கைதிகளின் குடும்பத்தாரிடமிருந்து பெறப்பட்டு இந்த அருங்காட்சியகத்தில் காட்சிக்காக வைக்கப்பட்டிருக்கின்றன. நல்ல உடல் நிலையில் இருப்பதாக வந்த அஞ்சல் அட்டையை பெற்றவர்கள் கூட அதே நபர் இறந்து போனசெய்தியறியாது இருந்திருக்கின்றனர் 2ம் உலகப் போர் முடியும் வரை. எவ்வளவு கொடுமையான நிலை ? நினைக்கும் போதே திகைப்பாகத்தான் இருக்கின்றது.

    மலாயாவிலிருந்து கொண்டு வரப்பட்ட பணியாளர்கள் உண்மையாகவே தாம் எங்கே செல்கின்றோம் என்ற விபரங்கள் கூட மறைக்கப்பட்டு ஏமாற்றப்பட்டு தாய்லாந்திற்குக் கொண்டுவரப்பட்டவர்களே. மலேசியாவின் கெடா மானிலத்திலுள்ள அலோர் ஸ்டார் காடுகளில் பணிபுரிய அழைத்துச் செல்வதாகச் சொல்லி ஏமாற்றி ஜப்பானியப் படை ஏஜெண்டுகள் இவர்களைத் தாய்லாந்தின் காஞ்சனாபுரிக்கு அழைத்து வந்தது. இப்புதிய வேலையில்  நல்ல தங்கும் வசதி, நல்ல உணவு உயர்ந்த  வருமானம் எல்லாம் கிடைக்கும் என்று ஏமாற்றியே இவர்கள் அழைத்து வரப்பட்டனர். ஆனால் உண்மை அதுவல்லவே!

    தொடரும்…

    Share
  • அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – (21)

    அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – (21) பர்மா-சியாம் மரணப்பாதை அருங்காட்சியகம், தாய்லாந்து

    சுபாஷிணி ட்ரெம்மல்

    இரண்டாம் உலக யுத்தம் ஏற்படுத்திய விளைவுகள் இன்றளவும் மறையவில்லை.  ஊடகங்கள் வழியாக அவ்வப்போது போர் சம்பந்தப்பட்ட ஏதாகினும் தகவல்கள் அவ்வப்போது நமக்கு கிடைத்துக் கொண்டு தானிருக்கின்றன. இந்த இரண்டாம் உலக யுத்தத்தின் போது ஜப்பானியப் படைகள் கிழக்காசிய நாடுகளில் ஏற்படுத்திய அழிவுகள் பற்றி நினைத்துப் பார்த்தால் இன்றும் நம் மனம் அதிர்ச்சிக்குள்ளாவதைத் தவிர்க்க இயலாது.  ஜப்பானியப் படைகள் கைப்பற்றிய பகுதிகளில் அவர்கள் அங்கு வாழ்ந்த மக்களையும், எதிரிப்படைகளிலிருந்து பிடித்து வந்த போர் கைதிகளையும் இப்படையினர் நடத்திய விதமானது  போர் குற்றவியல் வரலாற்றிலேயே மிகக் கொடூரமானவை என்பதில் மறுப்பில்லை.

    எனது அன்மைய தாய்லாந்து பயணத்தில் நான் ஒரு சில அருங்காட்சியகங்களுக்குச் செல்லும் வாய்ப்பு பெற்றேன். அதில் என்னை திடுக்கிட வைத்த தகவல்களை வழங்கிய ஒரு அருங்காட்சியகம் என்றால் அது பர்மா ரயில்வே அல்லது சியாம்-பர்மா ரயில்வே அல்லது பர்மா-சியாம் மரணப் பாதை (Death Railway) என அழைக்கப்படும் ரயில் பாதை வரலாற்றை விளக்கும் ஜீத் போர் அருங்காட்சியகம் (JEATH War Museum) தான்.  இந்த அருங்காட்சியகம் 1977ம் ஆண்டு தாய்லாந்தின் மேற்குப் பகுதி மாநிலமான காஞ்சனாபுரி நகரில் வாட் சாய்சும்போல் புத்த விகாரைக்கு அருகே அமைக்கப்பட்டு திறப்பு விழா கண்டது.

    அருங்காட்சியகத்தின் முன்பகுதியில் பரந்த புல்வெளியில் போர்கைதிகளாக இருந்து இந்த ரயில் பாதை அமைக்கும் பணியில் மாண்டு போன மனிதர்களுக்கான மயானமும் நினைவு மண்டபமும் அமைந்திருக்கின்றன. அருங்காட்சியகமோ அதன் எதிர் புறமாக அமைந்துள்ளது.  அருங்காட்சியகத்தின் உள்ளே புகைப்படங்களோ வீடியோ பதிவுகளோ செய்ய அனுமதி இல்லை.  நுழைவாயிலில் கட்டணத்தைக் கட்டி உள்ளே செல்லும் முன் அமைந்துள்ள விற்பனைப் பொருட்கள் கடையில் இந்த அருங்காட்சியகம் பற்றியும் மேலும் க்வாய் பாலம், ரயில் பாதை தொடர்பான நூற்களையும் பெற்றுக் கொள்ளலாம்.  இந்த நூல்கள் தாய் மொழி தவிர்த்து ஆங்கிலம், ஜெர்மன், ப்ரென்ச், ஜப்பானிய மொழிகளில் கிடைக்கின்றன.

    இரண்டு மாடிகள் கொண்ட கட்டிடம் இந்த அருங்காட்சியகம். கீழ்த்தளத்தில் உள்ளே நுழையும் போதே ஜப்பானியப் படைகள் சியாம் நாட்டில் (தாய்லாந்து)  அரசருடன் உடன்படிக்கை செய்து கொண்டு,  இந்த பர்மா-சியாம் ரயில் பாதையை அமைத்த விவரங்களை வரிசைக் கிரமமாக வழங்கியிருக்கின்றனர். விளக்கங்களுக்கு விரிவான  புரிதலைக் கொடுக்கும் வகையில் பல்வேறு முயற்சிகளின் வழியாக சேகரிக்கப்பட்ட புகைப்படங்கள் ஒவ்வொரு விளக்கக் குறிப்புகளுடனும் இணைக்கப்பட்டுள்ளன.  இவை விளக்கங்கள் தரும் தகவல்களுக்கு வலு சேர்ப்பனவாக அமைந்திருக்கின்றன என்றே கூறுவேன்.

    இரண்டாம் உலகப் போர் ஆரம்பித்துவிட்ட காலம் அது.  ஜப்பானிலிருந்து சிங்கப்பூர் வந்து பின்னர் சிங்கப்பூரிலிருந்து தங்கள் படைகளையும் பொருட்களையும் பர்மா தலைநகர் ரங்கூனுக்கு கொண்டு செல்வது ஜப்பானியப் படைகளுக்குச் சாதாரண காரியமாக அமையவில்லை.  ஆங்கிலேயர்களின் கைவசம் இருந்த பர்மாவை ஜப்பானியப் படைகள் 1942ல் கைப்பற்றின. படிப்படியாக முழுமையாக பர்மாவை ஆக்கிரமித்து இந்தியா செல்லவும் இப்படைகள் திட்டமிட்டன. ஆங்கிலேய-டச்சு படைகள், இந்த ஜப்பானியப் படைகள் மலாக்கா நீரிணை வழியாகக் கடல் பயணம் மேற்கொண்டு பர்மா செல்வதை மிகத் தீவிரமாக தடுத்து வந்தன.  இதற்காக ஆங்கிலேய-டச்சு படைகள் நீர்மூழ்கிக் கப்பலை இப்பகுதியில் இயக்கியும் வான்படைகளைக் கொண்டும், ஜப்பானியப் படைகள் இவ்வழியாக முன்னேறுவதைத் தடுத்துக் கொண்டு தீவிரமாகக் கண்காணித்து வந்தன. இந்தத் தடைகளைக் கடந்து பர்மா செல்ல மாற்று வழி ஒன்று ஜப்பானியப் படைகளுக்கு மிக அவசியமாகப் பட்டது.  சியாமிலிருந்து ரங்கூனுக்குச் செல்ல அப்போது ஒரே ஒரு சாலை மட்டுமே அமைக்கப்பட்டிருந்தது. அது ராஹேங் (Raheng) நகரிலிருந்து கவ்காரேய்க் வழியாகச் சென்று மாவ்ல்மெய்ன்(Maulmein)  சென்றடையும் வழி.   இரண்டாம் உலகப் போருக்கு முன்னரே ஒரு சாலைப் பாதையை சியாமின் பாங்காக் நகரிலிருந்து மாவ்ல்மெய்ன் வரை அமைக்க சியாமும் பர்மாவும் திட்டமிட்டன. ஆனால் அது செயல்முறைப் படுத்தப்படவில்லை.  ஆக, இருந்த ஒரே சாலைப் பாதை ராஹேங்கிலிருந்து செல்லும் பாதைதான்.  அதுவும் தரமான ஒரு பாதையாக அமைந்திருக்கவில்லை.

    இந்தச் சூழலில் கட்டாயமாக ஒரு மாற்று வழி பர்மாவிற்குச் செல்ல தேவைப்பட ஜப்பானியப் படைகளின் தளபதிகள் திடமிடுதலில் ஈடுபட்டனர்.  ஜப்பானியப் படைகள் ரயில் பாதை அமைக்க திட்டமிடுவதற்கு முன்னரே பர்மாவில் ஆட்சி செலுத்தி வந்த ஆங்கிலேய அரசு இப்பகுதில்  சியாமிலிருந்து ரங்கூனை இணைக்கும் ஒரு ரயில் பாதையை உருவாக்கும் திட்டத்தை வைத்திருந்தனர். முழு திட்டமும் உருவாகியது. ஆனால் அது திட்டத்துடனேயே நின்று விட்டது. இதற்குக் காரணமாக அமைந்தவை இரண்டு விஷயங்கள். முதலாவதாக, காஞ்சனாபுரியிலிருந்து ரங்கூன் செல்லும் பாதை என்பது அடர்ந்த காடுகள் அமைந்த நீண்ட மலைப்பகுதி. இதில் ரயில் பாதை தண்டவாளம், பாலம் என அமைப்பது என்பது சாத்தியமான ஒரு காரியம் அல்ல.  இரண்டாவது காரணம் இதற்குத் தேவைப்படும் வேலையாட்களைத் தேடுவது. ரயில் பாதை அமைப்பது, அதிலும் அடர்ந்த காட்டுப்பகுதியில் என்பது எளிமையான ஒன்றல்ல என்பதால் இப்பணிக்கு முன்வர பணியாளர்கள் தயங்கினர். அதோடு எத்தனை பேரை வைத்து இதனை சாதிப்பது? இவர்களுக்கான கூலியை எப்படி சமாளிப்பது என்பன இந்தத் திட்டம் திட்டமாக மட்டுமே இருந்து முடிந்ததற்கானக் காரணங்களாகிப் போகின.

    ஆனால் ஜப்பானியப் படைகளோ இந்த காரணங்களைத் தடைகளாக எண்ணவில்லை.  இங்கிலாந்தில் ரயில் பாதை அமைக்கும் என்ஜீனியர் துறையில் கல்வி கற்ற ஜப்பானியர்களைப் பணித்திட்டத்தில் இணைத்துக் கொண்டு முழு தீவிரத்துடன் ஒரு ரயில் பாதை அமைக்கும் திட்டத்தில் ஜப்பானியப் படைகள் இயங்கின. திட்டம் உறுதியாகி முடிவாக,  1942ம் ஆண்டு ஜூன் மாதம் ஜப்பானியப் படைத் தலைமையகம் தம் படைகளுக்கு பான் போங் (Ban Pong ) நகரிலிருந்து பர்மாவின் எல்லையில் உள்ள மூன்று பகோடாக்களைக் கடந்து தான்புஸாயாட் (Thanbyuzayat)  செல்லும் ரயில் பாதை அமைக்கும் திட்டத்தை அறிவித்து உடன் துவங்க கட்டளையிட்டது. இப்பணிக்கு வேலைக்கு பணியாட்கள் என்பதோடு ஜப்பானியப் படைகளால் கைது செய்யப்பட்ட போர் கைதிகளைக் கொண்டு ரயில் பாதை அமைக்கும் பணி தொடங்கப்பட வேண்டும் என்று முடிவெடுத்தனர்.

     unnamed

    சியாமையும் பர்மாவையும் இணைக்கும் ரயில் பாதை

    இந்த ரயில்பாதை அமைப்புப் பணியில் போர் கைதிகள் மட்டுமன்றி மலாயாவிலிருந்து 180,000 கூலிகளும் அழைத்து வரப்பட்டனர் என்று குறிப்புக்கள் காட்டுகின்றன. அப்படி மலாயாவிலிருந்து வந்தவர்களில் அதிகமானோர் தமிழர்களும், சீனர்களும் ஆவர்.  இவர்களுடன் மலாய்காரர்கள், இந்தோனிசியர்களும் அடக்கம்.  ஆங்கிலேய, ஆஸ்திரேலிய, டச்சு, அமெரிக்க  போர்க்கைதிகள் 60,000 பேரும் இவர்களுடன் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். (குறிப்பு: ஆஸ்திரேய அரசாங்கக் குறிப்புக்களின் எண்ணிக்கையில் வித்தியாசம் காணப்படுகின்றது. அக்குறிப்புக்களின் படி 250,000 ஆசிய தொழிலாளர்களும் 61,000 போர் கைதிகளும் இப்பணியில் ஈடுபட்டனர் என உள்ளது)

     dr3

     இங்கிலாந்து, ஆஸ்திரேலிய போர் கைதிகள் – உடல் இளைத்து மிகப் பரிதாபமான

    நிலையிலும் பணி செய்யும் நிலைக்கு உட்படுத்தப்பட்டனர்

    இவர்களில் 90,000 கூலிகளும் 12,399 போர் கைதிகளும் இந்த ரயில்பாதைக் கட்டுமானப் பணியின் போது சரியான சுகாதாரம் இல்லாமை, போதிய உணவு இல்லாமை, அதிகப்படியான உடல் உழைப்பு, ஜப்பானியப் படைகளின் கடுமையானத் தண்டனைகள், திடீரென்று பரவிய மலேரியா நோய் போன்ற காரணங்களால் இறந்தனர்.

     dr4

    மலாயாவிலிருந்து வந்த கூலிகள்

    அந்த நினைவுகளை அருங்காட்சியகம் வழங்கும் குறிப்புகளின் வழி வாசிக்கும் போதே நம் மனம் அச்சத்தில் உறைந்து போகின்றது. நினைத்தாலே உடலை நடுங்க வைக்கும் பயங்கரமான ஒரு கால கட்டம் அது. அக்காலச் சூழலை மேலும் விவரிக்கிறேன்.. அடுத்த கட்டுரையில்.

    தொடரும்..!

    குறிப்பு: படங்கள் இணையத்திலிருந்து எடுக்கப்பட்டவை.

    Share
  • அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 20

    அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – (20) தாய்லாந்து

    சுபாஷிணி ட்ரெம்மல்

    இந்த அருங்காட்சியகம் பற்றிய தொடரில் உங்களை நான் இன்று அழைத்துச் செல்லவிருப்பது தாய்லாந்திற்குத்தான்!

    பொருளாதாரப் பிரச்சனைகள்; அரசியலில் நேர்மையற்ற நிலை; சிறுபாண்மையினர் சமூகத்தின் தேவைகள் வாக்களித்தபடி நிறைவேற்றப்படாத ஏமாற்றம்; ஐரோப்பிய ஆஸ்திரேலிய சுற்றுப் பயணிகளின் வரவை மையமாக வைத்து இயங்கும் விபச்சார விடுதிகள் – இவை தற்போதைய தாய்லாந்தைப் பற்றி அடிக்கடி ஊடகங்களின் வழி நாம் கேள்விப்படும் செய்திகள்.  ’இது மட்டுமா தாய்லாந்து?’ என நினைப்பதே கூட தவறு என நம்மை திகைக்க வைக்கின்றது நேரடியாக இங்கு பார்க்கும் போது.

    இந்தப் பதிவு ஒரு வகையில் வித்தியாசமானதொரு பதிவு என்றே சொல்வேன். ஏனெனில், இப்பதிவை இப்போது உங்களுடன் பகிர்ந்து கொள்வதும் தாய்லாந்தின் தெற்குப் பகுதி  நகர் ஒன்றிலிருந்து தான் என்பதால்.

    இந்தியா, சீனா என்ற இரண்டு பெரிய பண்பாட்டு, நாகரிக செழுமை நிறைந்த நாடுகளுக்கு இடையே அமைந்திருக்கின்றது தாய்லாந்து. இவ்விரண்டு பெரிய நாடுகளின் சமய, பண்பாட்டு, வாழ்வியல் தாக்கங்களின் விளைவாகவும், அதனால் விளைந்த ஒரு கலவையாகவும், ஆனால், அதே வேளை ஒரு தெளிவான தனித்துவம் ஒன்றினையும் பேணும் ஒரு கலாச்சாரத்தைக் கொண்டதாகவும் தாய்லாந்து திகழ்கின்றது.

    இன்னொரு சிறப்பும் இந்த நாட்டிற்கு இருப்பதை குறிப்பாகக் காண்கின்றேன். காலனித்துவ ஆட்சியில் சிக்கி சில நூற்றாண்டுகள் தவித்த ஏனைய அண்டை நாடுகளான மலேசியா, இந்தோனிசியா போலல்லாது ஐரோப்பியர் வசம் தம் நாட்டை  இழக்காத ராஜ்ஜியத்தைக் கொண்டிருந்த நாடு இது.  அதிலும் குறிப்பாக இங்கிலாந்து, ஹாலந்து ஆகியவற்றின் குறிப்பிடத்தக்க கைப்பற்றும் முயற்சிகள் அனைத்தையும் முறியடித்து ஐரோப்பிய காலனித்துவ ஆட்சி என்பதே இல்லாமல் சுய ஆட்சியிலேயே தொடரும் ஒரு பெரும் நாடு இது என்பதே ஒரு தனிப் பெருமை.

    இன்றைய இந்தோனிசியாவின் ஒரு தீவான சுமத்ராவிலிருந்து தாய்லாந்தின் தென் பகுதி வரை ஸ்ரீவிஜயா அரசு 10ம் நூற்றாண்டு வரை பரந்து விரிந்திருந்தது. அப்பேரரசும் கொஞ்சம் கொஞ்சமாக பலமிழக்க அதனைப் பயன்படுத்திக் கொண்டு,  போரிட்டு வெற்றி பெற்ற தாய் அரசு இப்போதைய அயோத்யாவில் தனது நாட்டின் முதல் தலைநகரை அமைத்து ஆட்சியைத் தொடங்கியது.  அதன் பின்னரும் கூட பற்பல போர்கள்,  குறிப்பாக பர்மா மற்றும் சீன மலைப்பகுதி அரசுகள் தொடர் தாக்குதல்களை நிகழ்த்தினாலும் கூட, தாய் அரசாட்சி என்பது மட்டும் மறையாமல்,  இன்றும் மன்னராட்சியுடன் கூடிய மக்களாட்சி தொடர்கின்றது.

    இந்த ஆண்டு இறுதியையும் 2014ம் ஆண்டின் தொடக்க நாட்கள் சிலவற்றையும் தாய்லாந்தின் சில நகரங்களுக்குப் பயணித்து இந்நாட்டின் வரலாற்று கலாச்சார பின்னனியை அறிந்து கொள்ள வேண்டும் என்றும், தாய்லாந்தின் இயற்கை சூழலில் ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று திட்டமிட்டு நானும் என் கணவரும் தாய்லாந்து வந்தோம்.  மிக அன்பான ஒரு சுற்றுலா பயண வழிகாட்டி தாய் பெண்மணி ஒருவருடன் 22 பேர் கொண்ட ஜெர்மானிய சுற்றுலா குழுவில் இணைந்து பாங்கோக் தொடங்கி அயோத்யா, சுக்கோத்தை, லம்பாங், சாங் ராய், சாங் மை, லோக் புரி, காஞ்சனாபுரி, சா ஆம் ஆகிய இடங்களுக்கு இப்பயணக்குழுவினருடன் 15 நாட்கள், 2800 கிலோமீட்டர் தூரம் வடக்கு மேற்கு தெற்குப் பகுதிகளில் பயணித்து விட்டு தற்சமயம் கோ சாமூய் தீவிலிருந்து இப்பதிவினை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

    தாய்லாந்தின் அருங்காட்சியகங்களைப் பற்றி நாம் அறிந்து கொள்வதற்கு முன்னர் இந்த நாட்டின் வரலாற்றுப் பின்னணியைப் பற்றியும், நாட்டினைப் பற்றியும் சிறிது அறிந்து கொள்வது உதவலாம் என்பதால் ஒரு சிறு குறிப்பு.

    பௌத்தம் தாய்லாந்தின் அதிகாரப்பூர்வ மதம்.  அதிலும் நாட்டின் மக்கள் தொகையில் 80% பௌத்த சமயத்தைப் பின்பற்றுபவர்கள். ஏனையோர் தாவோயிசம், ஹிந்து சமயம், கத்தோலிக்க கிறிஸ்துவ சமயம் என்ற வகையில் அமைந்துள்ள நாடு இது. இந்த 80% பௌத்தர்களில் ஏறக்குறைய 96 விழுக்காட்டினர் தேரவாத புத்த சமயத்தைப் பின்பற்றுபவர்கள். ஏனையோர் மஹாயானா பௌத்தத்தைப் பின்பற்றுவோர்.

    தாய்லாந்து ஒரு அதிசயமான நாடு.

    தேரவாத பௌத்தம் என்றாலும் மிகக் கட்டுப்பாடான வகையில் இந்த வகை பௌத்தத்தை கடைப்பிடிப்பது என்பது இங்கு நடைமுறையில் இல்லை.  பல வழக்குகளை இணைத்துக் கொண்டு புதுமையான ஒரு பௌத்த நெறியாக இங்கே பௌத்தம் நடைமுறையில் திகழ்கின்றது.

    suba_mus3

    இரண்டு பௌத்த பிக்குகள் – சந்தையில்

    இங்கு பிறக்கும் பௌத்த குடும்பத்து ஒவ்வொரு ஆணும் தம் திருமணத்திற்கு முன்னர் குறைந்தது மூன்று மாதங்களாவது ஒரு பௌத்த ஆலயத்தில் இணைந்து புத்த பிக்குவாக நியமங்களை அனுஷ்டிக்க வேண்டும் என்பது வழக்காக உள்ளது. சமூகத்தளத்தில் அதி உயரத்தில் இருக்கும் மன்னர் முதல் சாதாரண மக்கள் வரை அனைவருக்கும் உள்ள ஒரு விதி இது. இன்றைய மன்னர் பூமிபோல் அவர்களும் புத்த பிக்குவாக சில காலம் இருந்தார் என்பது குறிப்பிடப்பட  வேண்டிய ஒன்று. பெண்களும் வெள்ளை ஆடை உடுத்தி பெண் பிக்குணிகளாக தாம் விரும்பும் எக்காலத்திலும் ஒரு பௌத்த சங்கத்தில் தம்மை இணைத்துக் கொள்ளலாம். ஆணோ பெண்ணோ, தாங்கள் விரும்பும் வரை புத்த பிக்கு, பிக்குணிகளாக இருந்து விட்டு மீண்டும் சங்கத்திலிருந்து வெளியேறி சம்சார வாழ்க்கையில் தம்மை இணைத்துக் கொண்டு தம் வாழ்க்கையைத் தொடரலாம். இதற்கு சங்கத்திலும் சரி குடும்பத்திலும் சரி எத்தடையும் இல்லை. புத்த பிக்குகளுக்கும், பிக்குணிகளுக்கும் உணவு வழங்குவதையும் ஆலயங்களுக்கு நன்கொடை கொடுப்பதையும் மனதார அன்போடு செய்கின்றனர் தாய் மக்கள்.  அனாதையாகத் திரியும் பிராணிகளை எங்கேனும் கண்டால் அவற்றை அருகில் உள்ள புத்த விகாரைகளுக்குக் கொண்டு சென்று சேர்க்கின்றனர். அங்கே அப்பிராணிகள் பாதுகாக்கப்படுகின்றன.

    இங்கு என்னை அதிசயத்தில் ஆழ்த்திய ஒன்று…

    பௌத்த ஆலயங்களாகட்டும் கட்டிடங்களின் முன்புற வாசலாகட்டும், தனியார் வீடுகளாகட்டும், தங்கும் விடுதிகளாகட்டும், சாலையின் சந்திகளாகட்டும் – எங்கு நோக்கினும் விநாயகரின் மாபெரும் சிலைகள் நம்மை ஆச்சரியப்பட வைக்கின்றன. புன்னகை பூத்த முகத்துடன் நர்த்தனமாடிக் கொண்டும் ஒய்யாரமாக அமர்ந்து கொண்டும் அழகாகக் காட்சியளிக்கும் விநாயகர் சிலைகள் ஒரு அதிசயம் என்றால் இன்னும் வியப்பில் ஆழ்த்துவது தங்கும் விடுதிகள், உணவு விடுதிகள் போன்ற இடங்களில் வாசலில் இருக்கும் சிவபெருமான் சிலைகள் தாம். தாய் மக்கள் சிவபெருமானையும் விநாயகரையும் அதிர்ஷ்டத்தை தரும் தெய்வங்களாக இங்கே கருதுகின்றார்கள்.  அதே போல எல்லா இடங்களிலும் பிரம்மாவின் சிலைகள்.  விஷ்ணுவின் ஒரு அவதாரமாக புத்தரை தாய் மக்கள் கருதுவதால் இங்கு தனியாக விஷ்ணுவுக்கு சிலைகள் இல்லை. ஹிந்து சமயத்தின் மும்மூர்த்திகளே இங்கே தாய்லாந்தின் பௌத்த வழிபாட்டு நடைமுறையில் வித்தியாசமான முறையில் கலந்து விட்டனர் என்பதே ஆச்சரியமளிக்கின்றது அல்லவா?

    suba_mus1

    விநாயகர் ஒய்யாரமாய் ஒரு உணவு விடுதியின் முன்னே

    தாய்லாந்தில் நான் பார்த்த பெரிய சிறிய நகரங்கள் அனைத்திலும் புத்த விகாரைகள் எண்ணற்றவை உள்ளன.  ஒவ்வொரு கோயில்களிலும் ஒன்றுக்கும் மேற்பட்ட புத்தர் சிலை வடிவங்கள் நிறைந்திருக்கின்றன.  கோயிலைச் சுற்றி பல புத்தர் சிலை வடிவங்கள் தியான நிலையில் இருப்பது போல அமைந்திருந்தாலும்,  கோயில் மூலஸ்தானத்தில் ஏதாகினும் ஒரு வடிவில் சிறப்பான புத்தர் சிலை என்பது அமைந்திருக்கின்றது. சில ஆலயங்களில் இருபது கோண தங்க நிற ஸ்தூபம் தனிக் கோயில் போன்று வடிக்கப்பட்டு மைய வழிபாட்டு அம்சமாக கோயிலில் அமைந்திருக்கின்றது.

    புத்தரின் உருவச் சிலைகள் எனும் போது பொதுவாக ஐந்து வகைகள் இருக்கின்றன. தியான வடிவில் புத்தர்; அனந்த சயனத்தில் புத்தர்; நின்ற வடிவில் புத்தர்; நடக்கும் வடிவில் புத்தர்; ஞானம் வழங்கும் வடிவில் புத்தர் இப்படி.

    கி.பி. 3ம் நூற்றாண்டு தொடக்கம் பௌத்தம் இங்கு பரவி காலூன்றி செழித்தது என்று அறிந்து கொண்டேன். அதிலும் குறிப்பாக ஸ்ரீ லங்கா, பர்மா, தீபெத் ஆகிய நாடுகளிலிருந்து சியாம் (அப்போதைய தாய்லாந்து)  வந்த பிக்குகளின் முயற்சியால் இங்கு பௌத்தம் அறிமுகமாகியது. இப்படி பல நாடுகளின் தாக்கம் என்பது இருந்தாலும் இங்கு புழக்கத்தில் உள்ள பௌத்தம் பல வழிபாட்டு முறைகளை உள்வாங்கிக் கொண்ட ஒரு பரிமாணத்தில் தாய்லாந்து பௌத்தம் என்ற தனித்துவத்துடன் விளங்குகின்றது. இதில் விநாயகர், பிரம்மா, சிவன் ஆகிய ஹிந்துக் கடவுள்களும் இணைந்து விடுகின்றனர்.  பௌத்த மார்க்க சிந்தனைகளை உபதேசம் கேட்பதும் தியானிப்பதும் பிக்கு, பிக்குணிகளின் தலையாய நெறியாக அமைந்திருக்கின்றது. சாதாரண மக்கள் வழிபாடு, சடங்குகள் என்பனவற்றோடு தியான நெறி​யையும் அனுஷ்டிப்பது வழக்கமாக இருக்கின்றது.

    ஆக,  ஒரு வகையில் இங்கு நாம் காணும் ஏறக்குறைய 80 விழுக்காட்டு அருங்காட்சியகங்கள் பௌத்த விகாரைகளுடனோ (Wat) பௌத்த சமயத்துடனோ சம்பத்தப்படுத்தப்பட்டவைகளாகவே இருப்பதைக் காண முடிகின்றது.

    தாய்லாந்து தொடர்ச்சியாக பல போர்களை சந்தித்த நாடு என்பதும் உலகின் பல நாடுகளிலிருந்தும் இந்நாட்டிற்கு வணிகப் போக்கு வரத்து என்பது தொடர்ந்து நடைபெற்றுள்ளது என்பதாலும் அத்தகைய வரலாற்று விஷயங்களும் இங்குள்ள அருங்காட்சியகங்களில் கிடைக்கின்றன. ஆனாலும் ஒரு குறை இருப்பதை மறுக்க முடியாது. பெரும்பாலும் அனைத்து அருங்காட்சியகங்களிலும் தாய் எழுத்தில் மட்டுமே விளக்கங்கள் அமைந்திருக்கின்றன. இது அரும்பொருட்களின் தனிச்சிறப்புக்களை தாய் மொழி அறியாதோர் அறிந்து கொள்வதில் மிகுந்த சிரமம் ஏற்படுத்துகின்றது.

    suba_mus2

    சுக்கோத்தை – பர்மிய படையினரால் 13ம் நூற்றாண்டில் அழிக்கப்பட்ட புத்த விகாரை வாசலில் (டிசம்பர் 2013)

    சரி.  அடுத்த வாரம் வித்தியாசமான ஒர் அருங்காட்சியகத்திற்கு உங்களை அழைத்துச் செல்கிறேன். வரத் தயார் தானே?

    Share
  • அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 19

    சுபாஷிணி ட்ரெம்மல்

    அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 19 – லூவ்ரெ அருங்காட்சியகம் Louvre Museum (4), பாரிஸ், ப்ரான்ஸ்

    சொல்ல வரும் ஒரு விஷயத்தை மறைபொருளாக உருவகப்படுத்தி வைப்பதில் சித்திரக்கலை படைப்பாளர்களுக்கு உதவத் தவறுவதில்லை. நேரடியாகக் காணும் ஒரு காட்சி தானே, அல்லது ஒருவரின் உருவகப் படம் தானே, அல்லது ஒரு நிகழ்வின் காட்சி தானே, அல்லது ஏதோ புரியாத கோடுகளின் சங்கமிப்பில் ஒரு படைப்பு என்பது தானே என ஒரு சித்திரத்தை எடைபோட முடியாது. பல நுணுக்கமான விஷயங்களை, ஒரு சரித்திர நிகழ்வை, சமூக நிகழ்வை அல்லது சமகால சிந்தனையை, ஒரு படைப்பாளியின் சிந்தனையை, கற்பனையை பிரதிபலிக்கும் கருவியாக சித்திரம் அமைந்து விடுகின்றது.

    ஐரோப்பாவில் சித்திரங்களின் அமைப்பில் புதிய பாணியும் அணுகு முறையும் 14ம் நூற்றாணடு தொடங்கி பின்னர் 15ம் நூற்றாண்டில் மிக வலுவடைந்தது. அரசர்களின், பிரபுக்களின் ஆதரவைப் பெற்று குறிப்பிடத்தக்க சித்திர வல்லுனர்கள் பல சித்திரங்களை இக்காலகட்டங்களில் படைத்தனர். குறிப்பிடத்தக்க வகையில் இக்கலை இத்தாலியில் சிறப்புடன் வளர்ந்தது. பல  சித்திரக்கூடங்களும் சித்திரங்கள் வரையும் பயிற்சி வழங்கும் பள்ளிகளும் இக்கால கட்டத்தில் உருவாகின. இப்படி எழுந்த முயற்சிகளின் விளைவாக குறிப்பிடத்தக்க கலைஞர்கள் தங்கள் ஓவியத்திறனைக் கொண்டு கருத்துகளுக்கு உருவம் வழங்கும் பணியை செய்து வந்தனர்.

    பொதுவாக ஐரோப்பா முழுமைக்கும், 13ம் நூற்றாண்டு தொடங்கி உருவாக்கப்பட்ட சித்திரங்களின் தன்மை கிறிஸ்துவ மறையான கத்தோலிக்க சமயத்தைப் பிரதிபலிக்கும் ஏதாகிலும் ஒரு அம்சத்தைக் கொண்டதாக அமைந்திருக்கும். அதில் ஏசு சிறிஸ்துவின் இறுதித் தீர்ப்பு நாள்,  இரவு உணவு, ஏசுவின் சிலுவையில் ஏற்றப்பட்ட வடிவம், தேவதைகள் ஏசுவின் நிலை கண்டு கண்ணீர் வடிக்கும் நிலை, இறந்த ஏசு பிரானின் உடலை அன்னை மேரியும் ஏனையோரும் சுற்றி நின்று கண்ணீர் உகுத்து மடியில் கிடத்தி வருந்தும் காட்சி என்பதாக ஒரு வகை; அடுத்ததாக, பைபிளில் உள்ள கதைகளை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட சித்திரங்கள். உதாரணமாக ஆதாம் ஏவாள் இவர்களுடன் பாம்பு மரத்தில் தொங்க ஆப்பிளைப் பறிக்கும் சூழல், நரகத்தின் நிலை, தேவதைகள் சுவர்க்கத்தில் மகிழ்ந்திருக்கும் காட்சி என அமைந்திருக்கும். இவையல்லாது ஏனையன, போர்களை விவரிப்பதாக, மன்னனின் அல்லது மன்னனின் குடும்பத்தோர் உருவங்களை மையமாக வைத்து வரையப்பட்டதாக இருக்கும். இவற்றில் பைபிளை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட சித்திரங்கள் பல நேரடி விளக்கத்தைத் தருவன அல்ல. மறைமுக கருத்துக்களை உட்புகுத்தி உருவாக்கப்பட்டவை பல.

    லூவ்ரே அருங்காட்சியகத்தில் இப்பதிவில் நாம் காணவிருப்பது இங்குள்ள சித்திரக்கூடத்தைத் தான்.   எண்ணற்ற விலைமதிக்க முடியாத பல சித்திரச் சேகரிப்புக்களின் கூடம் லூவ்ரே.  டெனோன் (Denon) பகுதியில் முதல் மாடியிலும் இரண்டாம் மாடியிலுமாக இச்சித்திரங்களின் சேகரிப்புக்கள் இடம்பெறுகின்றன. முதலாம் மாடியில் இத்தாலி, ஸ்பெயின் கலைஞர்கள் உருவாக்கிய சித்திரங்கள் இடம்பெறுகின்றன. இரண்டாம் மாடியில்  ப்ரான்ஸ் பெல்ஜியம், ஜெர்மனி, ஹாலந்து, வடக்கு ஐரோப்பாவின் ஏனைய நாட்டு கலைஞர்களின் படைப்புக்கள் என இடம் பெறுகின்றன.

    மன்னன் முதலாம் ப்ரான்ஸிஸ் முதலில் இத்தாலியின் அரச மாளிகையில் இருக்கும் சித்திரங்களைப் போல தனது மாளிகை ஒன்றில் சித்திரக்கூடம் ஒன்று அமைக்க திட்டமிட்டார். அதன் அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்ட முயற்சியின் பலனாகச் சேர்ந்தவைதான் இன்று லூவ்ரேவில் இருக்கும் இப்பகுதி சேகரிப்புகள். இந்த மன்னன் இத்தாலியில் புகழ்பெற்ற கலைஞர்களான மைக்கல் ஏஞ்சலோ,  ரஃபேல் ஆகியோரது கலைப் படைப்புக்களை வாங்கி தனது மாளிகையில் அவற்றை இணைத்துக் கொண்டார். அது மட்டுமில்லாது சித்திரக் கலைஞர்களையும் தனது மாளிகைக்கு சிறப்பு அழைப்பில் அழைத்தார். லியோனார்டோ டா வின்சி இந்த வகையில் மன்னன் முதலாம் ப்ரான்ஸிஸின் அழைப்பின் பேரில் இங்கு  அழைக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவ்வகை முயற்சிகளின் வழி சித்திரச் சேகரிப்புகள் பெருகின.

    மன்னன் 14ம் லூய்ஸ் மேலும் தொடர்ந்து தனது சேகரிப்பிற்காக இத்தாலிய சித்திரங்களை வாங்கி இணைத்தார். அதுமட்டுமில்லாது ஸ்பேனிஷ் கலைஞர்களின் ஓவியங்களையும் தனது சேகரிப்பில் இடம்பெறச் செய்யும் முயற்சியில் இறங்கி முரியோ (Murillo)  வின் கலைப்படைப்புகளை வாங்கி இணைத்தார்.  அதன் பின்னர் பல ப்ரென்ஞ்ச் சித்திரக் கலைஞர்களின் ஓவியங்கள் இச்சேகரிப்பில் இணைந்தன.

    இனி இங்குள்ள சில ஓவியங்களை மட்டும் அதன் விளக்கத்துடன் காண்போம்.

     image1

    Alexander in Babylon (1665)

    இது ப்ரெஞ்ச்  ஓவியக் கலைஞர் சார்ல்ஸ் லெ ப்ரூன் (Charles Le Brun ) வரைந்த சித்திரம்.

    கி.மு 333ல், பெர்ஸிய மன்னன் மூன்றாம் டார்ஸியுஸை போரில் தேற்கடித்து வெற்றிக் கொடி ஏந்திக் கொண்டு பாபிலோன் நகரத்திற்கு வருகின்றான் மாவீரன் அலெக்ஸாண்டர். அங்கே அவனுக்கு நகரின் கதவுகள் திறக்கப்படுகின்றன; நல்வரவு நல்கப்படுகின்றது.  இது அவனை திகைக்க வைக்கின்றது. 3ம் டாரியுஸின் படையிலிருந்து பிடிக்கப்பட்ட 2 யானைகள் ஓட்டி வரும் வாகனத்தில் வலம் வருகின்றான் அலெக்ஸாண்டர். இக்காட்சியில் பாபிலோனின் தொங்கும் தோட்டம் பின்புறக்காட்சியாக அமைந்திருக்கின்றது.  1665ம் ஆண்டில் இந்த ஓவியம் வாங்கப்பட்டு சித்திரக் கூடத்தில் இணைக்கப்பட்டது.

    மன்னன் 14ம் லூய்ஸ் ஐரோப்பாவில் நிகழ்ந்த சில குறிப்பிடத்தக்க போர்களில் சிறந்த வெற்றி பெற்றவன். தன் பெருமைகளை வீரன் அலெக்ஸாண்டருடன் ஒப்பிட்டுப் பார்க்கும் வகையில் இந்த ஓவியம் அமைந்திருப்பதால் இதனை தன் சேகரிப்பில் இணைத்திருக்கின்றார்.  அது இப்போது லூவ்ரேவின் அருங்காட்சியகத்திற்குச் சிறப்பு சேர்க்கிறது.

    image2

    A Table of Desserts (1640)

    இது ஒரு டச்சு கலைஞனின் படைப்பு. மாட்டிசே Matisse இதன் 1635 அசலான டி ஹீம் வரைந்த ஓவொயத்தின் அடிப்படையில் இதனை உருவாக்கி  அதில் அதிகப்படியான பிரமாண்டத்தைச் சேர்க்க பாரோக் கலைவடிவத்தை இணைத்து உருவாக்கிய ஒன்று இது.

    இது உணவு உண்ணல் பண்பாட்டை பிரதிபலிக்கும் வகையில் அமைக்கப்பட்ட படைப்பு.  விசித்திரமான இச்சித்திரத்தில் வெவ்வேறு சீதோஷ்ணத்தில் கிடைக்கும் பழங்களையும் க்ளாஸில் உள்ள வைன்,  அதோடு ஆங்காங்கே இசைக் கருவிகள் என பல அமசங்களைக் கொண்டதாக அமைக்கப்பட்டிருக்கின்றது. இதில் ஒரு ஒழுங்கற்ற முறை தென்படுவதையும் காணமுடியும். ஒவ்வொரு பழத்திற்கும் ஒரு பொருள் இருப்பதாக குறியியல் அறிஞர்கள் (symbologist)  கருதுவதாகவும் குறிப்பு உள்ளது.  பைபிளில் குறிப்பிடப்படும் fruit if paradise  ஆகிய செர்ரி,  மறுக்கப்பட்ட பழங்களான ஆப்பிள், பீச் ஆகியவை தென்படுவதால் மறைமுக கருத்துக்கள் கொண்ட ஒரு கலைப்படைப்பு இது என்பது அவர்களின் விளக்கம்.

    image3

    Allegory of Fortune (1729)

    இது ஒரு ப்ளெமிஷ் (பெல்ஜியம்)  படைப்பு

    ரோமன் கடவுள் ஃபோர்ச்சுனா இதில் ஒரு உலக உருண்டையின் மேல் இருப்பதாகக் காணலாம். நிலையற்ற தன்மை கொண்டது அதிர்ஷ்டம். இந்த உலக உருண்டை ஒரு கப்பலில் இருப்பது போலவும் அமைக்கப்பட்டுள்ளது.  கடலில் பயணிக்கும் பயணம் போன்றது வாழ்க்கை; நிறைய எதிர்பாராத விஷயங்கள் நேரலாம், என்ற வகையில் பொருள் கொள்ளலாம்.

    மண்னன் 14ம் லூயிஸின் சேகரிப்பிலிருந்து பெறப்பட்ட ஓவியம் இது. இதன் அசலை உருவாக்கியவர் 2ம் ப்ரான்ஸ் எனப் பெயர்கொண்ட பெல்ஜிய ஓவியக் கலைஞர்.

    image4

    Charles VII (1403-1461), King of France (1445)

    1445ம் ஆண்டு உருவாக்கப்பட்ட சித்திரம் இது. பேரரசன் 7ம் சார்ல்ஸின் உருவப்படம் கொண்ட ஓவியம். இந்த மன்னன் அச்சமயத்தில் இங்கிலாந்துக்கும் ப்ரான்ஸுக்கும் இடையே நிகழ்ந்த நூறாண்டுப் போரில் மாபெரும் வெற்றியை ப்ராஸிற்கு பெற்று வந்ததன் பின்னர் உருவாக்கப்பட்ட படைப்பு.  ப்ரெஞ்சுப் படைப்பான இதனை வரைந்தவர் Jean Fouquet. ஆரம்பத்தில் யாரால் உருவாக்கப்பட்ட ஓவியம் இது என்பதில் சரியான தகவல் கிடைக்காவிடினும் பல ஒப்பீடுகளுக்குப் பிறகு இவை ப்ரெஞ்சு ஓவியர் Jean Fouquet உருவாக்கிய சித்திரம் என்பது அறியப்பட்டது.

    இப்படி இங்கு இன்னும் பல ஓவியங்கள்.. அவற்றையும் அடுத்தடுத்து என பார்த்துக் கொண்டே செல்லலாம்.  அதோடு உலகின் பல நாடுகளிலிருந்து சேகரிக்கப்பட்ட ஆவணங்களும் கலைப்பொருட்கலும் அரும்பொருட்களும் அடங்கியிருக்கும் மாபெரும் பொக்கிஷம் இம்மண்டபம். ஆனால் நாம் ஏனைய அருங்காட்சியகங்களுக்கும் செல்ல வேண்டுமல்லவா?

    அடுத்ததாக உங்களை மற்றுமொரு அருங்காட்சியகத்திற்கு அழைத்துச் செல்கிறேன். ஐரோப்பாவை விட்டு சற்றே நெடுந்தூரம் செல்வோம்.

    வேறொரு நாட்டிற்கு வேறொரு அருங்காட்சியகத்திற்கு!

    Share
  • 18. அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்

    18. அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – லூவ்ரெ அருங்காட்சியகம் Louvre Museum (3), பாரிஸ், ப்ரான்ஸ்

    சுபாஷிணி ட்ரெம்மல்

    இப்போது நாம் லூவ்ரே அருங்காட்சியகத்தில் எகிப்திய பண்டைய நாகரீகச் சின்னங்கள் அரும்பொருட்கள் இருக்கும் பகுதிக்குச் செல்கின்றோம்.

    1798-1801 ஆண்டு காலவாக்கில் நெப்போலியன் போனபார்ட்டின் எகிப்திய வருகை அவனுக்கு அந்த தேசத்தின் பண்டைய கலைப் பொக்கிஷங்களின் மேல் அளவற்ற ஆர்வத்தையும் மயக்கத்தையும் உண்டாக்கியிருக்கும் என்றே நினைக்கின்றேன். ஆனாலும் அவன் பயணம் முடிந்து திரும்புகையில் கொண்டு வந்தவையாக இங்கு கணிசமான எகிப்திய தொல்லியல் சான்றுகளோ ஏனைய ஆவணங்களோ இல்லை. மாறாக இங்கிருப்பவை பெரும்பாலும் அதற்கும் முன்பே மன்னன் 18ம் லூயிஸ் காலத்தில் சேர்த்தவையும் மேலும் தனியார் சேகரிப்பாக இருந்து பின்னர் இந்த அருங்காட்சியகத்துக்கு வந்து சேர்ந்தவையும் என்றே குறிப்பிடலாம்.

    மன்னன் லூயிஸின் காலத்தில் சேகரிக்கப்பட்ட எகிப்திய அரும்பொருட்கள் ஏராளம். இன்றிருக்கும் நக்தோர்ஹெப் சிலையும் சேக்மட் சிலையும் அப்போது கொண்டு வரப்பட்டவையே. 1824லிருந்து 1827 வரை பற்பல சேகரிப்புக்களிலிருந்து என ஏறக்குறைய 9000 அரும்பொருட்கள் இங்கே கொண்டு வரப்பட்டதாம். இவை அனைத்தையும் பாதுகாக்கவும் ஆராய்ச்சி செய்யவும் ஒரு தனித்துறையை லூவ்ரே அருங்காட்சியகத்தில் அப்போதைய மன்னன் அமைத்திருக்கின்றார்.

    இக்காலகட்டத்தில் லூவ்ரே அருங்காட்சியகத்தின் ஆதரவில் தொல்லியல் ஆய்வறிஞர் மரியேட் எகிப்துக்குப் பயணமானார் அங்கே அவர் கண்டெடுத்தவையே செராப்பியம் சக்காரா இவையிரண்டு கலைசிற்பத் தொகுதிகளும். இங்கே அவர் தொடர்ந்து களப்பணிகளை நடத்திக் கொண்டிருந்தார். 1852 முதல் 1853 வரை நடத்திய களப்பணிகளில் 5964 அரும்பொருட்கள் எகிப்தில் கண்டெடுக்கப்பட்டன. அவையனைத்தையுமே ஒன்று விடாமல் பாரிஸுக்கு அனுப்பி வைத்தார் மரியெட். களப்பணி முடிந்து பாரிஸ் திரும்பியதும் இவரே லூவ்ரே அருங்காட்சியகத்தில் எகிப்திய பண்டைய அரும்பொருட்கள் பகுதியின் அமைப்பாளராக பணியிலிருந்தார் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. அகழ்வாய்வின் போது உயிரைப் பணையம் வைத்து களப்பணிகளில் ஈடுபட்டவர் மரியட். அப்படித் தேடி கண்டெடுத்த விலைமதிப்பற்ற அப்பொருட்களின் அருமை பெருமை அறிந்து அவை சரியாகப் பாதுகாக்கப்பட வேண்டும், இதனால் ப்ரான்ஸ் நாட்டிற்கும் பெருமை ஏற்படும் என்ற எண்ணம் அவருக்கு மனம் நிறைய இருந்திருக்க வேண்டும்.

    இக்காலகட்டத்தில் ஆங்கிலேய, ஜெர்மானிய, ப்ரென்ச் தொல்லியல் அறிஞர் குழுக்கள் சில எகிப்தில் வரிசையாக பல அகழ்வாய்வுப் பணிகளில் ஈடுபட்டிருந்தன. உதாரணமாக அபு ரோசா அகழ்வாய்வு, ஆசூய்ட் அகழ்வாய்வு, பாவிட் அகழ்வாய்வு, மெடாமுட் அகழ்வாய்வு என சிலவற்றை குறிப்பிடலாம். இதன் அடிப்படையில் தொடர்ந்து சில அரும்பொருட்கள் லூவ்ரெவிலும் வந்து சேர்ந்தன.

    லூவ்ரெவின் எகிப்திய அரும்பொருட்கள் பகுதியில் இருக்கும் சில அற்புதப் படைப்புகளைக் காண்போம்.

    1

    மூன்று கடவுள்கள் இருக்கும் வகையில் ஒரே க்ரனைட் கல்லில் செதுக்கப்பட்ட ஒரு சிற்பம் இது. தரையில் வைக்கப்பட்டிருக்கின்றது. ஒரு அரசன் (ராம்ஸஸ் II அல்லது மெர்னெபத் ஆக இருக்கலாம்) இடது புறத்திலிருக்க, கழுகுத் தலை கொண்ட இறைவடிவமான ஹோருஸ் வலது புறமிருக்க நடுவிலே கடவுள் ஓஸிரிஸ் நிற்கும் வகையில் அமைந்த சிற்பம் இது. ஏறக்குறைய கிமு 1279-1203 வாக்கில் உருவாக்கப்பட்ட ஒரு சிற்பம் இது. 1.34 மீட்டர் உயரமும் 0.78 மீட்டர் அகலமும் கொண்ட ஒரு வடிவம். 1818ம் ஆண்டில் இது லூவ்ரே அருங்காட்சியகத்திற்காக வாங்கப்பட்டது.

     2

    மன்னர் 3ம் ராம்ஸஸின் உடலை வைத்திருந்த கல்லறை கற்பெட்டி. இந்தக் கற்பெட்டியைச் சுற்றிலும் ஹிரோக்லிப்ஸ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருப்பதைக் காணலாம். அருங்காட்சியகத்தின் குறிப்பின்படி இது Book of Amduat நூலின் 7ம், 8ம் அத்தியாயங்களைக் கொண்டிருக்கின்றது என்பது தெரிய வருகின்றது. இக்கற்பெட்டியின் உள்ளே Book of Gates நூலின் முதல் அத்தியாயம் ஹிரோக்லிப்ஸ் எழுத்துருவில் கீறப்பட்டிருக்கின்றது. இதன் காலம் கிமு 1184-1153. இது கண்டெடுக்கப்பட்ட இடம் அரச பள்ளத்தாக்கு (Valley of King, Tomb of Ramses III). 1826ம் ஆண்டில் இது லூவ்ரே அருங்காட்சியகத்திற்காக வாங்கப்பட்டது.

    அக்தெதொப் மஸ்தாபா - சக்காரா சேகரிப்பு.
    அக்தெதொப் மஸ்தாபா – சக்காரா சேகரிப்பு.

    இதில் ஒரு ஊழியன் ஆட்டினைப் பிடித்து இழுத்துச் செல்வது போல வடிக்கப்படுள்ளது. இது ஒரு பெரிய பாறையின் மேல் தீட்டப்பட்ட தொடர் சித்திரத்தின் ஒரு பகுதி மட்டுமே. இச்சித்திரங்களோடு ஹிரோக்லிப்ஸ் எழுத்துக்களும் ஆங்காங்கே இருப்பதைக் காணலாம். இச்சித்திரத்தின் கதையினை விளக்கும் முகமாக அவை கீறப்பட்டிருக்க வேண்டும்.

    இவை மட்டுமின்றி, 3ம் ராம்ஸஸ் கட்டிய கோயில்களின் சில சுவர் பகுதிகள், மன்னன் எக்னத்தோன் கட்டிய கோயில்களின் சில சுவர் பகுதிகள், அரசர்கள் பள்ளத்தாக்கில் நிகழ்த்திய தொல்லியல் ஆய்வுகளின் போது கிடைத்த மம்மிகள், அவற்றோடு சேர்த்து வைக்கப்பட்டிருந்த பொன்னும் மணிகளும், வைர வைடூரியங்களினாலான ஆபரணங்கள், வாகனங்கள், வீட்டு அலங்காரப் பொருட்களாகிய நாற்காலி, ஜாடிகள், மேசை என பல பொருட்கள் இங்கே அடுத்தடுத்து என நமது கண்களுக்கு விருந்தாகிப் போகும்.

    மன்னர்கள் அல்லது ராஜ குடும்பத்தைச் சேர்ந்தோர் இறந்து போனால் அவர்களின் உடலை பதப்படுத்தி மம்மியாக்கி அதனை ஒரு பேழைக்குள் வைத்து அப்பேழைக்குள் அந்த மனிதரின் பொருட்களையும் சேர்த்து வைத்து புதைப்பது அக்கால எகிப்திய வழக்கம். இப்படி மம்மியாக செய்யப்படுபவர்களின் அந்தஸ்திற்கேற்ப பேழைகளின் தன்மைகள் அமையும். உதாரணமாக துரதிஷ்டவசமாக மிக இளம் வயதிலேயே இறந்து போன தூத்தான்சாமூனின் மம்மியும் அம்மம்மியோடு கூடவே கண்டுபிடிக்கப்பட்ட ஏனைய பொருட்களும் இப்பகுதி அகழ்வாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட போது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. தங்கத்தினாலான பேழைக்குள் மன்னனின் மம்மி உடல் இருந்தது. மூன்று பேழைகள், தேர்கள், படுக்கைகள், என வரிசை வரிசையாக பல பொருட்களை அம்மன்னன் இறந்தும் அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சேர்த்தே வைத்துப் புதைத்து விட்டார்கள்.

    இது நடந்தது சில ஆண்டுகளுக்கு முன். இது போல பல மன்னர்களின் இறந்த உடலின் மம்மியோடு கண்டெடுக்கபப்ட்ட விலைமதிக்க முடியாத ஆபரணங்களும், அரும்பொருட்களும் மண்ணுக்குள் புதையுண்டு போகாமல் ஐரோப்பா மட்டுமின்றி அமெரிக்காவின் பல அருங்காட்சியகங்களிலும் வீற்றிருந்து பெருமை சேர்த்துக் கொண்டிருக்கின்றன.

    தொடரும்..

    Share
  • அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 17

    சுபாஷிணி ட்ரெம்மல்

    அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் –  லூவ்ரெ அருங்காட்சியகம் Louvre Museum (2), பாரிஸ், ப்ரான்ஸ்

     

    நாம் இப்பொழுது லூவ்ரெ அருங்காட்சியகத்தில் 6ம் எண் அறைக்கு வந்திருக்கின்றோம்.  நேராக அங்கு சுவரில் மாட்டப்பட்டிருக்கும் மோனா லிஸா படத்தைத் தான் இப்போது பார்க்கின்றோம். டாவின்சியின் மோனா லிஸா !

    இரண்டு பக்கங்களும் கைப்பிடியுள்ள ஒரு மர நாற்காலியில் அமர்ந்து இடது பக்க கைப்பிடியில் தன் இரு கைகளையும் வைத்துக் கொண்டு இடது புறமாக தன் தலையைத் திருப்பி அதே சமயம் நேராகப் பார்க்கும் வகையில் இந்த உருவம் வரையப்பட்டிருக்கின்றது. மோனா லிஸாவிற்குப் பின்புறம் தெரிவதாக அமைந்துள்ள இயற்கை காட்சியில் இரண்டு வகையான காட்சிகளின் தன்மையைக் காண முடியும். முதலில் இயற்கை காட்சியாக சிறு குன்றுகள் பாதைகள் போன்றவை இயற்கையின் வர்ணங்களாகவும் அதன் பின்னே அடுத்து தெரியும் காட்சி கற்பனை உலகம் போல வெளிர் நீல நிறத்தில் விரிந்த பரந்த ஒரு பகுதியைக் காட்டுவது போலவும் அமைந்திருக்கின்றது.

     unnamed

    மோனா லிஸாவின் உருவ அமைப்பையும் உடைகளையும் காணும் போது மிக எளிமையான தோற்றத்தை இப்படம் அளிப்பதை உணர முடியும். அரச குடும்பத்து பெண்மணியாகவோ பொருள் வசதி படைத்த ஒரு பெண்ணின் உருவமாகவோ காட்டாமல் ஒரு சாதாரண பெண், ஆளுமை நிறைந்த திடமான மனத்துடனான ஒரு பெண்ணாகவே மோனா லிஸா காட்டப்படுகின்றார். அவரது தெளிவான பார்வை இப்படைப்பின் தன்மையையும் நமக்கு வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கின்றது. நகைகள் ஏதும் கழுத்திலோ கைகளிலோ காதிலோ காணப்படவில்லை. அகன்ற கழுத்துப்பகுதி தெரியும் வகையில் அதே வேளை நுணுக்கமாகத் தைக்கப்பட்ட ஒரு பழுப்பு நிற ஆடையுடனும் தலையில் முடியின் மேல் மெலிதான ஒரு துணியை அணிந்திருப்பதையும் காணலாம்.

    பல அரிய கண்டுபிடிப்புகளையும் கலைச் சிற்பங்களையும் ஓவியங்களையும் உலகுக்கு அளித்த மாபெரும் சிற்பி லியோனார்டோ டாவின்சி. இவரைப் பற்றியும் இவரது அறிவியல் கண்டுபிடிப்புகளையும், சிந்தனைகளையும் பற்றி யோசிப்பதே எனக்கு பல வேளைகளில் மனத்தை மகிழ்விக்கும் ஒரு விஷயமாக அமைந்து விடும். டாவின்சியின் அறிவியல் கலைப்படைப்புகளைத் தனித்தனியாக எடுத்துப் பார்த்து அவற்றை அவரது பார்வையின் ஊடாக சிந்தனையின் பாதையில் சென்று விவரிக்க வேண்டும் என்ற ஆவலும் எனக்கு மனத்தில் இருக்கின்றது. அதனைப் பிரிதொரு முறை நேரமும் வேளையும் கூடி வரும் போது நிச்சயம் செய்ய நினைத்திருக்கின்றேன். இப்போது மோனா லிஸாவை மட்டும் பார்ப்போம்.

    மோனா லிஸாவை யார் கேட்டு, எத்தகைய சூழலில், யாருக்காக டாவின்சி வரைந்தார் என்பது தெளிவாக அறியப்படாத ஒன்று. கிடைக்கின்ற  பழைய வஸாரியின் ஆட்டோ பயோக்ராஃபியிலிருந்து  இந்த  ஓவியத்தை Francesco del Giocondo என்ற வர்த்தகருக்காக அவரது மனைவியின் (Gherardini) உருவப்படத்தை 1502ல் அவர்களுக்குப் பிறந்த குழந்தையின் வரவை நினைத்து மகிழவும் புது மனைக்குச் சென்ற மகிழ்ச்சியைக் கொண்டாடவும் அவரது வேண்டுதல் படி டாவின்சி வரைந்த ஒரு ஓவியம் என்று தெரிகிறது.  ஜியோர்ஜியோ வஸாரி இந்தச் செய்தியை விவரிக்கும் வகையில் ஒரு பகுதியை தனது சிற்பக் குறிப்பு தொகுப்பு நூலில் பதிகின்றார். வஸாரி, டான் ப்ரவ்னின் புதிய நாவலான இன்பர்ஃனோவில் மிக முக்கிய பாத்திரம் என்பதையும் இவ்வேளையில் நாம் குறிப்பிட வேண்டும். வஸாரி இப்பதிவில் மோனா லிஸா உண்மையில் கெரார்டினியின் உருவம் எனக் குறிப்பிட்டிருந்தாலும் கூட இதுவே  மோனா லிஸா உருவான கதை என முழுதும் நம்பி விடவும் முடியாது என்றே தெரிகிறது.

    மோனா லிஸா எனும் இப்படம் ஒரு சாதாரண ஓவியம் அன்று.  ஐரோப்பாவின் ரெனைஸான்ஸ் சிந்தனை மாற்றத்திற்கு அடிப்படையாக அமைந்த பல கலைப்படைப்புக்களில் பிரதான நிலையைப் பெறும் ஒரு ஓவியம் இது. இது மட்டுமன்றி தற்கால சூழலில் ஐரோப்பா மட்டுமன்றி உலக நாடுகள் அனைத்திலும் பிரபலமடைந்த ஒரு ஓவியம் இது என்பது யாரும் மறுக்கவும் முடியாது.

    மோனா லிஸாவின் படங்களின் பிரதிகளை பலர் உருவாக்கினாலும் டாவின்சி இந்த  ஓவியத்தை வரைந்த வேளையில் அவருக்குப் பின்புறமாக அமர்ந்து டாவின்சியின் மாணவர் ஒருவர் அதே ஓவியத்தை வரைந்தார் என்பதுவும் அவ்வோவியம் பல ஆண்டுகளுக்குப் பிறகு கிடைத்தபோது அதனைப் பெற பலர் முயன்றாலும் இறுதியில் அவ்வோவியம் ஸ்பெயின் மட்ரிட்டின் மாபெரும் அருங்காட்சியகமான ப்ராடோவின் விலைமதிக்க முடியாத அரும்பொருட்களின் வரிசையில் இணைந்து கொண்டது என்பதுவும் உண்மை. இந்த ஓவியத்தையும் நான் நேரில் ப்ராடோ அருங்காட்சியகத்திலேயே பார்த்து புகைப்படங்களும் எடுத்துள்ளேன். டாவின்சியின் மோனா லிஸாவின் முகத்தில் தெரியும் சிறு முதிர்ச்சி இல்லாத சற்று இளமை தெரியும் முகச் சாயலோடு இந்த மோனா லிஸாவின் உருவப்படம் இருக்கும்.

    unnamed (1)

    டாவின்சி ஒரு சாதாரண மனிதரோ வெறும் கலைஞரோ அல்ல. புதிய உலகம் படைக்க வந்த சிற்பிகளில் சிறப்பிடம் பெறும் ஒருவர். ஒரு வகையில் டாவின்சி தனது மனத்தின் செய்தியை மறைமுகமாக வெளிப்படுத்த பயன்படுத்திய ஒரு கருவியே  மோனா லிஸா என்பது தற்கால குறியீடு வல்லுனர்கள் (Symbologists)  கூறும் தகவல்.

    உற்று நோக்கும் போது மோனா லிஸாவின் முகத்தில் புருவம் இல்லாமையும், இமைகளில் உரோமம் இல்லாததையும் நாம் காண்போம். வலது கையை இடது கைமேல் வைத்திருக்கும் போதும் வெளியே தெரியும் கர்ப்பமான பெண்ணின் பெரிய வயிற்றுப் பகுதி மேரி மெக்டலின் ஏசு கிறிஸ்து இறந்த சமயத்தில் கர்ப்பமாக இருந்தார் என்ற வகையில் வரலாற்றில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்த நிகழும் வாதங்களுக்கும் காரணமாக அமைகின்றது. கத்தோலிக்க கிறிஸ்துவ அடிப்படை நம்பிக்கைகளின் ஆதாரங்களை அசைக்க முயலும் ஒரு மாஸ்டர் பீஸ் மோனா லிஸா என்பது கடந்த சில ஆண்டுகளில் பரவி வரும் ஒரு தகவலாகவும் உள்ளது. இதனைச் சுற்றி அமைந்ததாக வருவதே டான் ப்ரவ்னின் டாவின்சி கோட் நாவலும் அதனை மையமாக வைத்து சோனி ப்ரொடக்‌ஷன்ஸ் எடுத்த அதே தலைப்பிலான திரைப்படமும். இந்த நூல்கள் மட்டுமன்றி குறிப்பிடத்தக்க பல நூல்கள் வெளிவந்திருக்கின்றன.  தொடர்ந்தும் வெளிவருகின்றன. உதாரணமாக, Fear Not, Buried by the Church, The truth and fiction in the DaVinci Code, Gospel Code, the DaVinci Hoax  போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

    மோனா லிஸாவின் மந்திரப் புன்னகையின் பின்னணி ரகசியத்தை அறிவது நமக்கு எளிதல்ல. தொடரும் ஆய்வுகளுக்கு மேலும் பல ஆவணங்கள் கிடைத்தால் ஆய்வுலகம் மகிழ்ச்சியடையும்.

    லூவ்ரெ அருங்காட்சியகத்தின் உள்ளே சுவரின் நடுவே வைக்கப்பட்டிருக்கும் மோனா லிஸா உருவப்படத்தை நேரில் காணும் அனுபவம் பெற இந்த இணைப்பை க்ளிக் செய்யுங்கள். பல கோணங்களில் இப்பக்கத்தில் மோனா லிசா பற்றிய தகவல்களைப் பெறலாம்.  http://musee.louvre.fr/oal/joconde/indexEN.html

    தொடர்ந்து அடுத்த அறைகளுக்குச் செல்வோம். லூவ்ரே நமக்கு பல அதிசயங்களை வைத்திருக்கின்றது.

    தொடரும்..!

    Share
  • அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 16 – லூவ்ரெ அருங்காட்சியகம் (Louvre Museum), பாரிஸ், ப்ரான்ஸ்

    சுபாஷிணி ட்ரெம்மல்

    டான் ப்ரவுனின் ‘டாவின்சி கோட்’ படம் பார்த்த பலருக்கு ரோபர்ட் லேங்க்டன் பாரிஸுக்கு வந்து முதலில் செல்லும் அந்த மாபெரும் அருங்காட்சியகக் கட்டிடம் ஞாபகம் இருக்கலாம்.   இப்படத்தில் ஏறக்குறை இறுதிக் காட்சிகளில் வருகின்ற  ஒரு கட்டிடத்தின் முன்புறத்தில் கண்ணாடியால் ஆன ஒரு பிரமிட் முன்புறத்தில் அமைந்திருப்பது போல இருக்க, அதனை வியப்புடன் பார்த்து தான் தேடிக் கொண்டிருக்கும் பொருள் அங்குதான் இருக்கின்றது என நினைத்துக் கொண்டு லேங்டன் மலைத்துப் போய் நிற்கும் காட்சியையும் பலர் இன்னமும் ஞாபகத்தில் வைத்திருக்கலாம். உங்கள் அனைவரையும் இந்த மாபெரும் அருங்காட்சியகத்துக்குத்தான் அழைத்துச் செல்லவிருக்கின்றேன்.

     Lovre_Suba1

    லூவ்ரெ அருங்காட்சியக வளாகம் (2010)

    652,300 அடிப்பரப்பில் ஒரு கட்டிடம். அப்படியென்றால் எவ்வளவு விரிவான ஒரு கட்டிடம் இது என்பதை கற்பனை செய்து பாருங்கள். உலகின் மிகப் பிரசித்தி பெற்ற, அதிகம் வருகையாளர்களைச் சந்திக்கும் ஒரு அருங்காட்சியகம் லூவ்ர என்பதும் ஒரு சிறப்புச் செய்தி.  http://en.wikipedia.org/wiki/List_of_the_most_visited_museums_in_the_world விக்கிபீடியாவின் இப்பக்கத்தின் நிலவரப்படி, உலகின் மிக அதிகமாக வருகையாளர்கள் வந்து செல்லும் அருங்காட்சியகத்தில் முதலிடம் பெறும் அருங்காட்சியகமாக இது திகழ்கின்றது. வருகையாளர் பட்டியல் குறிப்புப்படி வருடத்திற்கு 8 மில்லியன் வருகையாளர்களைச் சந்திக்கும் ஒரு கட்டிடம் இது என்றால் இதன் பெருமையை ஓரளவு ஊகித்து அறிந்து கொள்ளலாம் அல்லவா?.

    லூவ்ரெ அருங்காட்சியகத்துக்கு 2010ம் ஆண்டில் முதன் முதல் செல்லும் வாய்ப்பு எனக்கு அமைந்தது. ஆனால் சென்ற போது மதியமாகியிருந்ததால் முழுமையாக இந்த அருங்காட்சியகத்தை நான்  பார்க்க முடியவில்லை. இரண்டறை மணி நேரங்கள் மட்டுமே இந்த மாபெரும் வரலாற்று சிறப்பு மிக்க கட்டிடத்தில் செலவிட முடிந்தது. முழுமையாக  மீண்டும் ஒரு முறை பார்க்க வேண்டும். அதற்கு ஒரு முழு நாள் நிச்சயமாக ஒதுக்கத்தான் வேண்டும். காலையிலிருந்து மாலை வரை இங்கு இருந்தால் தான் அனைத்தையும் பார்க்க முடியும். அது கூட போதாதோ என்றே நினைக்கத் தோன்றுகின்றது.

     Lovre_Suba2

    நுழைவாயிற்பகுதி (2010)

    லூவ்ரெ கட்டிடத்தைப் பற்றிய ஒரு அறிமுகம்.

    இவ்வருங்காட்சியகம் செவ்வாய்க்கிழமை தவிர்த்து ஏனைய நாட்கள் காலை 9:30 லிருந்து பார்வையாளர்களுக்காகத் திறந்திருக்கும். இந்த அருங்காட்சியகத்தின் அதிகாரப்பூர்வ வலைப்பக்கமாகிய http://www.louvre.fr/en சென்று எந்த நாட்களில் எத்தனை மணி வரை திறந்திருக்கும் என்ற விபரங்களை அறிந்து கொண்டு உங்கள் பயணத்தை முடிவு செய்துகொள்ளலாம். இதே வலைப்பக்கத்தில் அவ்வப்போது நடைபெறும் கண்காட்சிகள் பற்றிய விபரங்களும் இந்த அருங்காட்சியகம் பற்றிய தகவல்களும் நிறைந்திருக்கின்றன.

    லூவ்ர அருங்காட்சியகத்தின் உள்ளே உள்ள கலைப்பொருட்களை காண்பதற்கு முன்னர் இந்தக் கட்டிடத்தைப் பற்றி ஓரளவு அறிமுகம் தருவதும் தேவை என்று நினைக்கின்றேன். இன்று அருங்காட்சியகமாக இருக்கும் இக்கட்டிடம் அடிப்படையில் 2ம் பிலிப்ஸ் 12ம் நூற்றாண்டில் கட்டிய ஒரு அரண்மனையாகும். தற்போது இருக்கும் முழு கட்டிடமாக அது ஆரம்பத்தில் இல்லை. 17ம் நூற்றாண்டில் பல புதிய பகுதிகளை மன்னர் 14ம் லூய்ஸ் இணைத்து விரிவாக்கினார்.  இவரது காலத்தில் தான் இந்தக் கட்டிடம் அரச குடும்பத்தின் அரும்பொருட்களைக் காட்சிக்கு வைக்கும் ஒரு அருங்காட்சியகமாக உருவெடுத்தது. பின்னர் ப்ரெஞ்ச் புரட்சியின் போது இக்கட்டிடம் பொதுமக்களுக்கான அருங்காட்சியகமாக உருவாக வேண்டும் என்று முடிவாகியது.

    அருங்காட்சியகமாக 1793ம் ஆண்டு ஆகஸ்ட் 10ம் திகதி 537 ஓவியங்களுடன் இக்கட்டிடம் பொதுமக்களுக்குத் திறந்து வைக்கப்பட்டது.  நெப்போலியனின் காலத்தில் மேலும் பல அரிய பொருட்கள் இங்கே சேர்க்கப்பட்டன.  ஆகையினால் அக்காலகட்டத்தில் இந்த அருங்காட்சியகம் நெப்போலியன் அருங்காட்சியகம் என்ற பெயருடனேயே விளங்கியது. நெப்போலியன் பிற நாடுகளிலிருந்து கொண்டு வந்த பொருட்களை இந்தக் கூடத்தில் வைத்து தனது நாட்டிற்குப் பெறுமை தேடிக்கொண்டார்.  மட்ரிட்டில் உள்ள அரச மாளிகையின் அருங்காட்சியகத்தில் ஒரு பகுதியில் வெள்ளிப் பாத்திரங்களின் தனிக்காட்சிப்பகுதி உள்ளது. அங்கு சென்று வந்த போது நான் வாசித்து அறிந்து கொண்ட ஒரு வாசகம் தான் இப்போது எனக்கு ஞாபகம் வருகின்றது. போர்காலத்தில் ஸ்பெயினில் நெப்போலியனும் அவன் படைகளும் ஸ்பெயின் அரச மாளிகையிலிருந்து பல வெள்ளிப் பொருட்களை சூரையாடிச் சென்றனராம். அந்த வெள்ளிப் பாத்திரங்களை உருக்கி போருக்குத் தேவையான பொருளாதாரத்தை பலப்படுத்தினராம். இப்படி போரினால் இழந்த பல அரும் பொருட்கள் பற்றிய கதைகள் அவ்வப்போது நாம் அறிவது தானே!

     Lovre_Suba3

    அருங்காட்சியகத்தின் உட்பகுதி வளாகம்  (2010)

    பேரரசர்கள் 18ம் லூய்ஸ், 10ம் சார்ல்ஸ் காலத்திலும் தொடர்ந்து பல விலைமதிப்பற்ற பொருட்கள் இந்த அருங்காட்சியகத்தில் இணைந்தன.

     தற்போதைய நிலவரப்படி ஏறக்குறைய 35,000 காட்சிப் பொருட்கள் இந்த அருங்காட்சியகத்தில் நிறைந்திருக்கின்றன. இக்காட்சிப் பொருட்கள் பலதரப் பட்டவை. எகிப்திய நாகரிகத்தின் சான்றுகளின் காட்சிப் பொருட்களுக்காக ஒரு தனிப்பகுதி உள்ளது. கிரேக்க நாகரிகத்தின் காட்சிப் பொருட்களுக்காக  ஒரு தனிப்பகுதி; இஸ்லாமிய காட்சிப் பொருட்களுக்காக ஒரு தனிப் பகுதி; சிற்பங்களுக்காக ஒரு பகுதி; ஓவியங்களுக்காக ஒரு பகுதி இப்படி பலப் பல பகுதிகள். அனைத்து பகுதிகளுக்கும் நான் செல்லவில்லை. சென்று வந்த பகுதிகளில் என் மனதில் ஆழப்பதிந்த பகுதிகளில் உள்ள அருங்காட்சிப் பொருட்களைப் பற்றி சொல்லாமல் இருக்கமுடியாது. அத்தகவல்களில் சில பற்றிய பதிவாக அடுத்த பதிவு அமையும்.

    முதலில்  நாம் அறை எண் 6க்குச் செல்வோமா? அங்கு தான்  டாவின்சியின் மோனா லிஸா இருக்கின்றாள்.

    தொடரும்…!

    Share