அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – (22)

0

பர்மா-சியாம் மரணப்பாதை அருங்காட்சியகம் (2),தாய்லாந்து

சுபாஷிணி ட்ரெம்மல்

போர்க் கைதிகளை வைத்து இந்த மரணப் பாதையை அமைக்க ஜப்பானியப் படையினர் திட்டம் தீட்டினர்  என்பதையும் அவர்களோடு மலாயா இந்தோனீசியாவிலிருந்து ஏராளாமானோர் கூலிகளாக இந்தப் பணியில் வேலைக்கு கொண்டு வரப்பட்டார்கள் என்ற விபரத்தையும் இக்கட்டுரையின் முதல் பகுதியில் குறிப்பிட்டிருந்தேன். இந்த இரண்டு வகை பணியாட்கள் குழுக்களிலும் வித்தியாம் இருப்பதை கட்டாயம் காணாமல் இருக்க முடியாது.

போர்கைதிகளாக இப்பணியில் ஈடுபடுத்த அழைத்துக் கொண்டு வரப்பட்டவர்கள் ஆஸ்திரேலிய, ஆங்கிலேய டச்சு படைகளில் போர் வீரர்களாப் பணியாற்றியவர்கள். போர் விபரங்களும் தந்திரங்களும், காட்டிற்குள் வாழும் பயிற்சியும் நீண்ட கால அவஸ்தைகளையும் துன்புறுத்தல்களையும் உடல் ரீதியாகத் தாங்கும் மன பலத்தையும் கொண்டவர்கள் இவர்கள். பலர் உயர்ந்த கல்வியறிவும் கொண்டவர்கள். இராணுவத்தில் இயந்திரங்களை இயக்கவும், மருத்துவர்களாகவும், போர்க் கருவிகளைப் பயன்படுத்தவும், கடுமையான சூழலில் வாழ்வதற்குத் தீவிர பயிற்சியும் தங்கள் பணியின் ஒரு அங்கமாகக் கற்றவர்கள்.

 warm2

காஞ்சனாபுரியிலிருந்து செல்லும் மலைப்பாதை. மலையைக் குடைந்து அமைக்கப்பட்ட பாதையில் ரயில் செல்கின்றது. (டிசம் 2013)

ஆனால் கூலிகளாக இப்பணிக்கு அமர்த்தப்பட்ட மலாயாவின் இந்திய சீன, மலாய் மக்களும் இந்தோனீசிய மக்களும் மிக எளிய மக்கள். மிகச் சாதாரண மனிதர்கள். போதிய கல்வியறிவு பெறாத இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்களால் கப்பலில் கூலிகளாக வேலை செய்ய வந்த தமிழர்களும், சீனாவிலிருந்து வணிகம் செய்ய வந்த சீனர்களும், விவசாயிகளாக தங்கள் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்த மலாய் மக்களுமாவர். இத்தகையோரே பெரும்பான்மையினராக  இந்த மரணப்பாதையில் பணியாற்ற கொண்டுவரப்பட்டனர். இவர்களுக்கு ஆங்கிலமும், ஜப்பானிய மொழியும் தெரியாது. கல்வி அறிவு என்பதும் மிகக் குறைவு. ஏழைகளான இவர்களில் பெரும்பாலோர் மெலிந்த உடம்பினர்.

முதலில் ஜப்பானியப் படைகள் இப்போர் கைதிகளையும் ஆசிய கூலிகளையும் இப்பணியில் ஈடுபடுத்த அறிவித்து இவர்களைக் கொண்டுவந்தபோது இவர்கள் எல்லோருக்கும் அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்து கொடுக்கப்படும் என்று சொல்லி அவர்களை நம்ப வைத்து அழைத்து வந்தனர். தரமான இருப்பிடம், நல்ல உணவு ஆகியவையும் ஆரோக்கியமான வேலை சூழலும் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பை தந்திருந்தனர். ஆனால் மிக விரைவிலேயே ஜப்பானியப் படைகளின் உண்மையான முகம் வெளிப்பட ஆரம்பித்து விட்டது.

 unnamed

டச்சு போர்க் கைதிகள் – பல நாட்கள் போதிய உணவு இல்லாமையினாலும் கடுமையான உழைப்பினாலும் மெலிந்து காணப்படுகின்றனர்

இப்போது நமக்குக் கிடைக்கின்ற தகவல்களின் படி இந்த மரணப்பாதை அமைப்பிற்காகக் கொண்டுவரப்பட்ட இந்த 180,000 ஆசிய கூலிகளில் 90,000 பேர் 1942லிருந்து 1943க்குள் இறந்து போயினர். இந்த கொடூர நிகழ்விற்கு முழுக்காரணமும் ஜப்பானியப் படைகளின் கொடுமையான பணியிட நடைமுறைகள் தாம்.

சுகாதாரமற்ற குடிசைகளில்  நூற்றுக்கணக்கானோரை திணித்து தங்க வைத்து அவர்களது உடல் நிலை மோசமான நிலையிலும் பணி செய்ய வேண்டிய கட்டாயத்திற்குள்ளாக்கப்பட்டனர் என்பதை அருங்காட்சியகத்தின் குறிப்புக்குக்களிலிருந்து காணமுடிகின்றது. சுகாதார கேடு விரைவாகப் பரவிய நிலையில் ஒரு காலகட்டத்தில் மலேரியா நோய் பரவ,  கூட்டம் கூட்டமாக இவர்கள் இறந்து போயிருக்கின்றனர் இந்த 2 வருட காலத்தில் (1942-1943).

வேலை.. வேலை வேலை.. இதுவே முக்கிய நோக்கம். மழை வெயில் என்ற பாரபட்ஷம் இல்லாமல் நேரம் காலம் வரையறை இல்லாமல் உழைப்பு உழைப்பு உழைப்பு மட்டுமே. பலர் காலரா வந்தும், கடுமையாகத் தண்டிக்கப்பட்டும் இறந்து போன போது அவர்களை முறையாகப் புதைக்காமல் காடுகளில் தூக்கிப் போட்டு விட்டு செல்வார்களாம். அந்தப் பிணத்தின் நாற்றம் அழுகிப் போன சடலத்தைச் சுற்றி மொய்க்கும் ஈக்களும் உயிருடன் வாழும் ஏனைய கூலிகளின் கூடாரத்தையும் வந்து பார்த்து நோய்களைப் பரப்பிச் சென்றதன் விளைவாக வரிசை வரிசயாக இம்மக்கள் இறந்து போயினர். இவர்களது சடலங்களை மரணப்பாதை வழியில் சில இடங்களில் கூட்டமாகக் கொட்டி புதைத்து வைத்து தங்கள் பணியைத் தொடர்ந்தது ஜப்பானியப் படை.

warm1

நினைவு மண்டபத்தில் உள்ள தனித்தனி நினைவுக் கற்கள் (டிசம் 2013)

இறந்து போன 12,399 ஆங்கிலேய, ஆஸ்திரேலிய, அமெரிக்க, டச்சு போர் கைதிகளுக்காவது இப்போது அவர்கள் ஒவ்வொருவர் பெயரையும் நினைத்துப் பார்க்க என்று காஞ்சனாபுரியில் மிகப்பெரிய நினைவு மண்டபமே உள்ளது. இங்கு இறந்த இவர்கள் ஒவ்வொருவருக்கும் நினைவுக் கல் அமைத்து வைத்திருக்கின்றனர். அந்த நிலை கூட ஆசிய கூலிகளுக்கு இல்லை.

அதிகாலை, மதியம், மாலை இரவு என ஓய்வு என்பதே இல்லாமல் ரயில் பாதை அமைக்கும் பணியில் போர் கைதிகளும் கூலிகளும் ஈடுபடுத்தப்பட்டனர். இவர்களுக்குப் போதிய உணவு கிடைப்பதில் சிரமமே ஏற்பட்டிருக்கின்றது. பல வேளைகளில் கொஞ்சம் அரிசி சாதம் மட்டுமே என்ற நிலையிலேயே இவர்கள் நாட்களை கடக்க வேண்டிய சூழல். இது  2 ஆண்டுகாலம் தொடர்ந்திருக்கின்றது. நோயால் வாடியவர்களுக்கு மருத்துவ உதவிகளோ அதனை வழங்க எந்த வசதிகளுமோ கூட ஏற்பாடு செய்யப்படவில்லை.

unnamed (1)

போர் கைதிகளாக வந்த பணியாளர்கள், போர் கைதிகள் விதிப்படி தங்கள் குடும்பத்தாருக்கு தங்கள் நலனை விவரித்துக் கூறி கடிதம் அனுப்பி வைக்க சட்டப்படி அனுமதி உள்ளது.  அப்படி கடிதம் அனுப்ப செய்த முயற்சிகளில் அஞ்சல் அட்டைகளை ஜப்பானியப் படைகளே இவர்களை உண்மை நிலமையைக் கூற விடாத படி செய்து பொய் விபரங்களை உட்புகுத்தி இவர்கள் இங்கு நலமாக இருப்பது போல  எழுத வைத்து அனுப்பி வைப்பார்களாம். இப்படி அஞ்சல் செய்யப்பட்ட அஞ்சல்அட்டைகளில் சில இப்போர் கைதிகளின் குடும்பத்தாரிடமிருந்து பெறப்பட்டு இந்த அருங்காட்சியகத்தில் காட்சிக்காக வைக்கப்பட்டிருக்கின்றன. நல்ல உடல் நிலையில் இருப்பதாக வந்த அஞ்சல் அட்டையை பெற்றவர்கள் கூட அதே நபர் இறந்து போனசெய்தியறியாது இருந்திருக்கின்றனர் 2ம் உலகப் போர் முடியும் வரை. எவ்வளவு கொடுமையான நிலை ? நினைக்கும் போதே திகைப்பாகத்தான் இருக்கின்றது.

மலாயாவிலிருந்து கொண்டு வரப்பட்ட பணியாளர்கள் உண்மையாகவே தாம் எங்கே செல்கின்றோம் என்ற விபரங்கள் கூட மறைக்கப்பட்டு ஏமாற்றப்பட்டு தாய்லாந்திற்குக் கொண்டுவரப்பட்டவர்களே. மலேசியாவின் கெடா மானிலத்திலுள்ள அலோர் ஸ்டார் காடுகளில் பணிபுரிய அழைத்துச் செல்வதாகச் சொல்லி ஏமாற்றி ஜப்பானியப் படை ஏஜெண்டுகள் இவர்களைத் தாய்லாந்தின் காஞ்சனாபுரிக்கு அழைத்து வந்தது. இப்புதிய வேலையில்  நல்ல தங்கும் வசதி, நல்ல உணவு உயர்ந்த  வருமானம் எல்லாம் கிடைக்கும் என்று ஏமாற்றியே இவர்கள் அழைத்து வரப்பட்டனர். ஆனால் உண்மை அதுவல்லவே!

தொடரும்…

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *