நான் அறிந்த சிலம்பு – 105
மலர் சபா
புகார்க்காண்டம் – 10. நாடு காண் காதை
திருவரங்கத்தில் சாரணர் தோன்றுதல்
அப்போது ஒரு நாள்
ஆற்றின் நடுவே அமைந்திருந்த அரங்கத்தில்
வேறெங்கும் காணப்படாத தன்மையுடனும் அழகுடனும்
தனித்தனியாக வளைந்த
மூங்கில் வேலிகளால் அடைக்கப்பட்ட
பூஞ்சோலை ஒன்று இருந்தது.
தேவர்களும் வந்து உறைவதற்கு விரும்பும்
மலர்களின் மணம் வீசும் ஓர் இடத்தில்
சாரணர்கள் வருகை புரிவதற்காகவென
உலக நோன்பிகள் ஒருங்குகூடி அமைத்திட்ட
ஒளிபொருந்திய சிலாதலம் ஒன்று இருந்தது.
அதன் மீது
அருகதேவன் அருளைப் பெற்ற
அதிசயங்கள் மூன்றும் தப்பாத உண்மையுடைய
தருமம் கூறும் சாரணர் சிலர்
பட்டினப்பாக்கத்தை விட்டு வந்து
இவர்கள் முன்னிலையில்
அச்சிலாதலத்தின் மேல் தோன்றினர்.
மூவரும் சாரணரை வழிபடுதலும், அச்சாரணர் அறிவுரை பகர்தலும்
சாரணரைக் கணடதும் அம்மூவரும்,
“யாம் முன்செய்த பழவினைகள் முற்றும் கெட்டழிவதாக”
என்று மனத்துள் வேண்டியபடி
சாரணரின் திருவடிகளில் விழுந்து வணங்கினர்.
அம்மூவரும் அங்கே வருவதற்குக்
காரணமாய் அமைந்த பழவினையையும்
அவ்வினைப்பயனால் அவர்களுக்கு
மேலும் நேரவிருக்கும் துன்பங்களையும்
உடனே உணர்ந்தான் சாரணத்தலைவன்
முக்காலும் உணரும் தன் ஞானத்தால்..
அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 156 – 167
http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram5.html