Tag: சுபாஷிணி ட்ரெம்மல்

  • அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 49 (2)

    அரிசி அருங்காட்சியகம், கெடா, மலேசியா (2)

    சுபாஷிணி

    மிக ரம்மியமான சூழலில் உள்ள புற நகர் பகுதியில் இந்த அரிசி அருங்காட்சியகம் அமைந்துள்ளது. இப்பகுதிக்கு வரும்போதே பசுமையான வயல் வெளியையும் ஆங்காங்கே நிற்கும் காளை மாடுகளையும் பார்த்து ரசித்துக் கொண்டே பயணிக்கலாம்.

    12,000 சதுர மீட்டர் பரப்பளவில் இந்த அருங்காட்சியகத்தை அமைத்திருக்கின்றனர். மூன்று மாடிகளில் இக்கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது. அருங்காட்சியகக் கட்டிடத்தின் வடிவமே நெற்களஞ்சியத்தைக் காட்டுவது போலவும், நெற்பயிர்களின் படங்களுடனும், அலங்கரிக்கப்பட்டுள்ளன. நெற்பயிர்கள் பற்றியும் அரிசி வகைகள் பற்றியும் ஆராய்ச்சி செய்ய யாரேனும் விரும்பினால் எந்த ஐயமும் இன்றி இந்த அருங்காட்சியகத்திற்கு வரலாம். நெற்பயிர் தொடர்பான பல்வேறு தகவல்களை வழங்கும் ஒரு நிலையமாகவும் இந்த அருங்காட்சியகம் அமைந்துள்ளது.

    asu

    நெல் பயிர் உற்பத்தி செய்யும் முறை பற்றிய தகவல்கள், வெவ்வேறு வகையான நெல் பயிர்கள், நெல் பயிரிடுவதற்கான விவசாயக் கருவிகள் ஆகியன இங்கு காட்சிப் பொருட்களாகவும் மூன்று தளங்களிலும் வைக்கப்பட்டுள்ளன.

    asu1

    நெற்பயிர் உற்பத்தி என்பது இன்றோ நேற்றோ தொடங்கிய ஒரு விசயமல்ல. பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நெல்பயிரிடுதல் என்பது மக்கள் வாழ்க்கையில் ஒரு அங்கமாக அமைந்திருந்தது. மக்கள் நாகரிகம் அடைய அடைய விவசாயம் என்பதைக் கற்றுக் கொண்டு உணவு தயாரித்தலுக்காகப் பயிரிடுதல் என்பதை வாழ்க்கையில் ஒரு முக்கிய அங்கமாகக் கடைபிடிக்க ஆரம்பித்தனர். நெல்பயிரில் இயற்கையாக விளைந்த பயிர்கள் என்பது போக அறிவியல் தொழில்நுட்பத்தின் வழியாக அரிசி வகைகளில் சில நுணுக்கமான அடிப்படை மாற்றங்களை ஏற்படுத்தி சில வகை அரிசிகள் உருவாக்கப்பட்டதும் விவசாய உலகில் நிகழ்ந்திருக்கிறது.

    asu2
    மலேசிய மக்களின் உணவில் அரிசி மிக முக்கிய உணவாக அமைகின்றது. காலை பசியாறுதலுக்கும் அரிசி உணவு வகை. மதிய உணவுக்கும் அரிசி வகை, மாலை உணவுக்கும் அரிசி வகை. என ஒரு நாள் முழுமைக்குமான உணவுத் தேவைக்கு ஒவ்வொருவரும் அரிசியை மிக அதிகமான அளவில் இங்கே பயன்படுத்துகின்றனர்.

    asu3

    மலேசியா மலாய், சீனர், இந்தியர் என்ற வகையில் மூன்று இனங்களை பெருவாரியாகக் கொண்ட ஒரு நாடு. மூன்றுமே மிகச் சிறந்த உணவு பாரம்பரியத்தைக் கொண்ட இனங்கள்.

    asu4

    காலை, மதியம் மாலை உணவு வகைகள் எனும்போது பல வித்தியாசமான உணவுப் பண்டங்களைத் தயாரிக்கும் முறை அறிந்த இனங்கள் இவை மூன்றும். தமிழர்கள் அரிசியை குழம்புடன் சேர்த்து உண்ணும் சோறு என்ற வகை மட்டுமன்றி அரிசியைப் பயன்படுத்தி தோசை, இட்டிலி, ஆப்பம், ஊத்தப்பம், பணியாரம், வடகம், அப்பளம், என பல வகைப் பலகாரங்கள் செய்கின்றோம். சீனர்கள் அரிசியை குழம்புடன் சாப்பிடுவதோடு, கஞ்சி, நூடல் வகைகள் தயாரிப்பு என்ற வகையில் பயன்படுத்துகின்றனர். மலாய் இனத்தவர்கள் குழம்புடன் சேர்த்த சோறு என்ற ஒரு வகை மட்டுமன்றி மாறுபட்ட வகையிலான உணவுகளைத் தயாரிக்கும் முறை அறிந்தவர்கள்.

    ​​asu5

    ஆக, இந்த மூன்று இனங்களுமே அரிசியை வெவ்வேறு வகையில் தங்கள் அன்றாட உணவில் பயன்படுத்துவதை நன்கு அறிந்து கொள்ளலாம்.

    மலேசியா முழுமைக்கும் காலை உணவு எனச் சாலையோரக் கடைகளிலும், சந்தைகளிலும், உணவு விடுதிகளிலும் தேடினால் நமக்கு மிக எளிதாகக் கிடைப்பது நாசி லெமாக் எனும் தேங்காய்ப்பால் சாதமும் கெட்டியான மிளகாய்ச்சாந்து சேர்த்த குழம்பும் இணைந்த ஒரு வகை உணவு.

    நாசிலெமாக், அத்துடன் ‘தே தாரிக்’ (மலேசிய வகை தேநீர்) – இதனை மலேசியா செல்லும் ஒவ்வொருவரும் கட்டாயம் சுவைத்துப் பார்க்க மறக்கக் கூடாது.

    தொடரும்…

    Share
  • அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் 48 (1)

    அரிசி அருங்காட்சியகம், கெடா, மலேசியா (1)

    சுபாஷிணி

    தமிழர்களாகிய நமக்கு அரிசு உணவு என்பது அன்னியம் அல்ல. நாம் தினமும் உண்ணும் அரிசிக்கு ஒரு அருங்காட்சியகமா எனக் கேட்கத் தோன்றலாம்.

    ஆச்சரியமாக இருக்கிறதா?

    வாருங்கள். மலேசிய நாட்டின் வட பகுதி மாநிலங்களில் ஒன்றான கெடாவிற்கு இப்பதிவின் வழி உங்களை அழைத்துச் செல்கிறேன். மலேசியாவின் நெற்களஞ்சியம் எனப் பிரத்தியேகமாக அழைக்கப்படும் மலேசிய மாநிலம் தான் கெடா.

    asu
    ​கெடா மானிலத்தின் இயற்கை காட்சி (2011)

    கண்களை மூடிக் கொண்டு கெடாவை நினைத்துப் பார்த்தால் என் மனக்கண்ணில் ஓடுவது கம்பளம் விரித்தார்போல் பரந்து விரிந்திருக்கும் கெடா மாநிலத்தின் பசுமை கொஞ்சும் நெல்வயல்கள்தாம். கரும்பச்சை மலைகள் சூழவும் இளம்பச்சை வயல்வெளிகள் சூழவும் எங்கும் பசுமை என நம்மை மயக்கும் ஒரு மலேசிய மாநிலம் கெடா.

    asu1
    ​​கெடா மாநிலத்தின் நெல் வயல் (2011)

    இம்மாநிலத்தின் பெரும்பான்மை மக்கள் மலாய் இனத்தவர்கள். கெடா மாநிலத்திற்கும் தென்னிந்தியாவிற்கும் பல்லாண்டுகள் தொடர்புண்டு என்பதை வரலாற்றை அறிந்தவர்கள் ஒப்புக் கொள்வர். கடாரம் என்றும் இதற்குப் பெயருண்டு எனச் சொன்னால் ராஜேந்திரச் சோழனின் நினைவு பலருக்கு வரலாம். ஆம் 11ம் நூற்றாண்டில் சோழ மன்னன் ராஜேந்திரன் படையெடுத்து வந்து கைப்பற்றி ஏறக்குறைய 99 ஆண்டுகள் ஆட்சி செய்த பகுதிதான் கெடா. அன்று இன்றைய கெடா மாநிலம் மட்டுமன்றி இந்த மாநிலத்தின் வடக்கு தெற்கு கிழக்கு பகுதி மாநிலங்களும் கூட கடாரத்தின் ஒரு பகுதியாக சோழ ஆட்சியில் இருந்தன. அது தமிழர்களுக்கு ஒரு பொற்காலம். ஆனால் இன்றோ நிலைமை வேறு. சரி. அந்த பழம்கதை ஏன் இப்போது? நாம் அருங்காட்சியகத்திற்குச் செல்வோமே..!

    asu2

    ​​கெடா மாநிலத்தின் அரிசி அருங்காட்சியகம் – முகப்புப் பகுதி (2011)

    உலகின் அதி முக்கிய தானிய வகை அரிசி என்பது மறுக்க முடியாத உண்மை. ஆசிய நாடுகளில் மட்டுமல்ல. ஆப்பிரிக்க கண்டத்திலும் சரி, வட அமெரிக்க, தென் அமெரிக்க கண்டங்களிலும், ஐரோப்பாவிலும் ஆஸ்திரேலியாவிலும்.. எங்கு சென்றாலும் அரிசி உணவு இல்லாமல் இல்லை என்பது இக்கால நிலை. கோதுமையையும் சோளத்தையும் தங்கள் முக்கிய உணவாகக் கொண்டிருந்த ஐரோப்பிய மக்கள் கூட கடந்த முப்பது ஆண்டுகளில் பெருவாரியாக அரிசியை தங்கள் உணவில் இணைத்துக் கொள்ள ஆரம்பித்து விட்டனர். அரிசி வகைகள் இல்லாத பல்பொருள் அங்காடிகள் இல்லை என தைரியமாகக் கூறலாம். அந்த அளவிற்கு அரிசி பயன்பாடு உலகளாவிய அளவில் விரிவடைந்துள்ளது.

    asu3

    ​​​கெடா மாநிலத்தின் அரிசி அருங்காட்சியகம் – முகப்புப்பகுதி (2011)

    தற்சமயம் இத்தாலியின் மிலான் நகரில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் எக்ஸ்போ 2015ன் ஒரு பகுதியில் ஆசிய நாடுகளின் முக்கிய உணவாகச் சித்தரித்து பாசுமதி அரிசிக்கான விரிவான தகவல் மையத்தை வைத்திருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    பெர்லிஸ் மாநிலத்திலிருந்து கெடா மாநிலத்தை அடையும் நெடுஞ்சாலையில் பயணித்து வந்தால் ஏறக்குறைய 10 கி.மீ தூரத்திலேயே பசுமையான வயல் வெளிகளுக்கு மத்தியிலே இருக்கும் இந்த பிரமாண்டமான அரிசி அருங்காட்சியகத்தை அடையலாம்.

    asu4

    ​​​கெடா மாநிலத்தின் அரிசி அருங்காட்சியகம் – நுழைவாயிலில் (2011)

    இந்த அருங்காட்சியகத்தின் பெயர் Kedah Paddy Museum. Padi என்னும் சொல்லிற்கு மலாய் மொழியில் அரிசி எனப் பொருள். ஆங்கிலச் சொல்லான Paddy என்பது இந்த மலாய் மொழிச் சொல்லிலிருந்து உருவாகி இருக்க வேண்டும். உலகில் அரிசிக்காக இருக்கும் அருங்காட்சியகங்களென கணக்கிட்டால் மலேசியாவைத் தவிர்த்து ஜப்பான், பிலிப்பைன்சு ஆகிய நாடுகளைக் குறிப்பிடலாம்.

    தொடரும்..

    Share
  • அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 47 (2)

    கார்ல் மார்க்ஸ் அருங்காட்சியகம் (2), ட்ரியா, ஜெர்மனி

    சுபாஷிணி

    ​கார்ல் மார்க்ஸ் பிறந்த ஊரான ட்ரியா ​மிக அழகிய ஒரு நகரம். மோஸல் நதிக்கரையில் அமைந்திருக்கும் நகரங்களில் ஒன்று இது. இன்றும் இந்த நகரில் வரலாற்றுப் பிரசித்தி பெற்ற ரோமானியப் பேரரசின் கட்டிடங்களின் எச்சங்களைக் காணலாம். போர்ட்டோ நியாக்ரா, 2ம் நூற்றாண்டின் மிகப் பழமையான கேத்திட்ரல், ரோமானிய மாவீரர்களான க்ளேடியேட்டர்கள் போர் செய்யும் அம்ஃபிதியேட்டர் , ரோமானிய அரண்மனையில் பாதாள நீச்சல் குளம் ஆகியவற்றை இவ்வகை உதாரணங்களாகக் கூறலாம். இத்தகைய வரலாற்றுச் சிறப்புக்களோடு அரசியல் தனிச்சிறப்பையும் இந்த நகர் பெறுவதற்குக் கார்ல் மார்க்ஸ் ஒருவர் போதாதா?

    asub

    கார்ல் மார்க்ஸ் இளம் வயதிலேயே லத்தீன், க்ரீக், டோய்ச், ப்ரென்சு ஆகிய மொழியில் புலமை பெற்றிருந்தார். இளமைக் கல்வி முடிந்து பல்கலைக்கழகக் கல்வியை முதலில் அவர் தொடக்கியது போன் (Bonn) பல்கலைக்கழகத்தில் தான். ஆனால் ஓராண்டு மட்டுமே அவரது படிப்பு அங்கு அமைந்தது. பின்னர் பெர்லின் பல்கலைக்கழகத்தில் இவர் தன் கல்வியைத் தொடர்ந்தார். பெர்லினில் படிக்கும் காலத்தில் கோடை விடுமுறைக்கு வந்திருந்த ஒரு நாளில் தான் தன் வாழ்க்கை துணையான ஜென்னியை இவர் சந்திக்க நேர்ந்தது.

    ஜென்னி பணக்கார குடும்பத்துப் பெண் என்பதோடு அவர் தந்தை அரசாங்கத்தில் முக்கியப்பதவி வகித்தவர் என்பதும் அவரது குடும்பச் செழுமையைச் சொல்லும். ஆனால் பிற்காலத்தில் திருமணத்திற்குப் பின்னர் கார்ல் மார்க்ஸுடன் அவர் இணைந்திருந்த காலகட்டத்தில், அதிலும் குறிப்பாக இங்கிலாந்தில் இருந்த காலத்தில் அவர்களது குடும்பத்திற்கு ஏற்பட்ட பொருளாதாரப் பிரச்சனைகள் எல்லாவற்றையும் பொறுமையுடன் சமாளித்து, வறுமையில் வாடினாலும் கார்ல் மார்க்ஸின் சித்தாந்தங்கள் எந்த வகையிலும் பலம் இழக்கா வண்ணம் அவருடன் உற்ற துணையாக இருந்தவர் என்ற பெருமை ஜென்னிக்கு உண்டு.

    மார்க்ஸூக்கும் ஜென்னிக்கும் பிறந்த குழந்தைகளில் இறந்த குழந்தைகள் போக எஞ்சியவர்கள் 4 பேர். அவர்களில் 3 பெண் குழந்தைகளும் ஒரு ஆண் குழந்தையும் அடங்குவர். இவர்கள் திருமணம் முடித்து குழந்தையும் குடும்பமுமாக ஆகிப்போயினர். ஆனால் வாழ்க்கையின் பிற்பகுதியில் பெரும்பாலும் வருமையிலேயே கழித்த ஜென்னி உடல் நோய் முற்றி அதற்கு சரியான மருத்துவம் செய்வதற்கு வசதியில்லாத நிலையில் 1881ம் ஆண்டு டிசம்பர் மாதம் 2ம் தேதி இவ்வுலகை விட்டு உயிர் நீத்தார். தனது வாழ்வின் திருமணத்திற்குப் பிந்தைய எல்லா கால நிலையிலும் ஜென்னியுடனேயே கழித்து வந்த மார்க்ஸுக்கு இது ஒரு பேரிழப்பு. ஜென்னி இறந்த போதே கார்ல் மார்க்ஸின் சக்தியும் பிரிந்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும். அதற்குப் பின்னர் கார்ல் மார்க்ஸ் வாழ்ந்தது அடுத்த 15 மாதங்கள் தான். இடையில் இவரது மூத்த பெண் மரணமும் நிகழ அதுவும் மார்க்ஸின் உடல் நிலையையும் மன நிலையையும் மிகப் பாதித்தது. இந்தத் துக்கங்களுடன் 1883ம் ஆண்டு மார்ச் 14ம் தேதி கார்ல் மார்க்ஸின் உயிர் உடலிலிருந்து பிரிந்தது. அதே மாதம் 17ம் தேதி லண்டன் ஹைகேட் மயானத்தில் அவரது பூத உடல் அடக்கம் செய்யப்பட்டது.

    asub1

    ​உலகில்​ தோன்றிய, சிந்தனைக்கு முக்கியத்துவம் கொடுத்த முக்கிய மனிதர்களில் ஒருவர் கார்ல் மார்க்ஸ் என்பது மிககையற்ற கூற்று. புதிய கருத்துக்களை உருவாக்குவதிலும் தத்துவங்களை அலசுவதிலும் நூல்களை வாசிப்பதிலும் அவரது நாட்கள் பல கழிந்தன. அவரது அறை முழுவதுமே புத்தகங்களின் குவியலும், ஒழுங்குபடுத்தப்படா எழுத்துக்கள் அடங்கிய காகிதங்களும் நிரம்பியிருக்குமாம். தன் வாழ்க்கையின் மிக முக்கிய நோக்கமாகக் கொண்டு தன் சிந்தனைகளை ஒருமுகப்படுத்தி எப்போதும் எவ்வேளையும் முதலாளித்துவத்தின் கீழ் அமைக்கப்பட்டிருக்கும் சமுதாய அமைப்பினால் உருவாக்கப்பட்டிருக்கும் அரசுகளின் சித்தாந்தங்களை மாற்றுவதற்கான வழிமுறைகளைத் தேடுவதிலும் அவற்றை எங்கனம் செயல்படுத்தி தொழிலாளர்களுக்கு உரிய வகையில் அவர்கள் உழைப்பு மதிப்பைப் பெறும் நிலையைப் பெற்றுக் கொடுப்பது என்பதிலுமாகவே அவர் சிந்தனை இருந்தது.

    கார்ல் மார்க்ஸ் தான் வாழ்ந்த காலத்தில் அரசாலும் சரி அரசாங்க பெரு மனிதர்களாலும் சரி வெறுக்கப்பட்டார் என்று தான் சொல்ல வேண்டும். நாட்டின் அரசியல் நிலைத்தன்மைக்கு இவரது சித்தாந்தங்கள் கேடு விளைவிக்கும் என்று சொல்லி ஜெர்மனி, பிரான்சு, பெல்ஜியம் என இந்த நாடுகள் எல்லாம் அவரை நாட்டிலிருந்து துரத்தின. இதனால் தன் இறுதிக் காலத்தில் இங்கிலாந்தில் தான் இவரது வாழ்க்கை அமைந்தது.

    கார்ல் மார்க்ஸின் சித்தாந்தத்தின் நூல் வடிவம் Das Kapital. டோய்ச் மொழியில் இதனை, “அரசியல் பொருளாதாரத்தின் மீது வைக்கப்படும் விமர்சனம்” எனக் கொள்ளலாம்.

    இந்த நூல் 1967ம் ஆண்டில் அச்சாகி லண்டனிலிருந்து வெளியிடப்பட்டது. இந்த நூல் வெளிவந்த காலத்தில் கார்ல் மார்க்ஸ் அனுபவித்து வந்த கஷ்டங்களுக்கு ஒரு அளவில்லை என்றே சொல்ல வேண்டும். ஏகப்பட்ட கடன். தினமும் கடன் கேட்டு வீட்டு வாசலில் வந்து நிற்கும் கடன்காரர்களின் வசைமொழிகளுக்கிடையேயும், வறுமையில் வாடி பசியால் நலிந்து வாடிக்கொண்டிருந்த தன் மனைவி குழந்தைகளின் உடல் நிலை நலிவினைக் கண்ணுற்றவாறே தான் தனது சிந்தனையின் கருவூலமான இந்த நூலை அவர் படைத்தார். இத்தகைய இன்னல்களுக்கிடையில், ஆகஸ்ட் மாதம் 16ம் தேதி 1867 ஆண்டு இந்த புரட்சி சிந்தனை நிறைந்த நூல் வெளிவந்தது என்பதை நினைக்கும் போது மனம் சிலிர்க்கின்றது.

    கார்ல் மார்க்ஸின் சித்தாந்தம் ஏற்படுத்திய சிந்தனை அலை மிகப் பெரிது. அது தொழிலாள வர்க்கத்தினிடையே பெறும் வரவேற்பை பெற்ற கருத்தாக புரட்சியாக வெடித்தது. ஜெர்மனி, பிரான்சு என்று மட்டுமல்லாது உலக நாடுகள் பலவற்றில் மிக ஆழமாக மார்க்ஸின் சித்தாந்தங்கள் பரவ ஆரம்பித்தன என்றாலும் முதலாளி வர்க்கத்தினரின் எதிர்ப்பை எளிதில் பெற்றன என்பதும் உண்மையே.

    asub2

    இந்த கார்ல்ஸ் மார்க்ஸ் அருங்காட்சிகம் மிக நன்கு சீரமைக்கப்பட்டு ஒவ்வொரு தளத்திலும் கார்ல் மார்க்ஸ் தொடர்பான வரலாற்றுத் தகவல்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இளமை காலத்துத் தகவல்கள் முதல் பகுதியில் அமைக்கப்படிருக்கின்றன. இரண்டாம் தளத்தில் ஜென்னியைப் பற்றிய விபரங்கள், குழந்தைகளின் புகைப்படம், அவர்கள் பற்றிய தகவல்கள் என உள்ளன. அதே தளத்தில் 19ம் நூற்றாண்டு தொழிலாளர் புரட்சி, கார்ல் மார்க்ஸ் பணியாற்றிய பத்திரிக்கை செய்திகள், அவரது வாழ்க்கையில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள் ஆகியன புகைப்படங்களோடு வழங்கப்பட்டுள்ளன. கார்ல் மார்க்ஸின் கையெழுத்துப் பதிவுகள், ஜென்னியின் கையெழுத்துப் பதிவாக சில கடிதங்கள், மார்க்ஸின் சில கடிதங்கள் ஆகியனவும் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன.

    asuba3

    அதற்கடுத்த தளத்தில் மார்க்ஸிய சிந்தனை ஜெர்மனியில் மட்டுமன்றி ஏனைய நாடுகளில் உருவாக்கிய தாக்கத்தை விளக்கும் அரிய வரலாற்றுச் செய்திகள் நிறைந்திருக்கின்றன. உலக வரலாற்றில் ஜெர்மனியை நினைப்பவர்களுக்கு நாஸி சித்தாந்தம் என்பது தான் உடனுக்குடன் நினைவுக்கு வரும். ஆனால் கார்ல் மார்க்ஸ் என்ற சிறந்த அறிஞனைத் தந்த நாடும் இதே ஜெர்மனிதான் என்பதை உலகம் மறந்து விடக் கூடாது.

    கார்ல் மார்க்ஸ் என்ற மனிதரின் வாழ்க்கையின் நோக்கமே das Kapital நூலை உருவாக்குவதற்காகத்தானோ என்ற சிந்தனை தோன்றுவதில் மறுப்பதற்கேதுமில்லை. ஆனால் இந்த நூலை வடிப்பதற்கு வாழ்நாளில் அவர் அனுபவித்த இன்னல்களை நோக்கும் போது, இவை எல்லோருக்கும் நல்ல கற்றல் அனுபவமாக நிச்சயம் அமையும். கார்ல் மார்க்ஸின் வாழ்க்கை வரலாற்றையும் அவரது சித்தாந்தங்களின் தொகுப்பான das Kapital நூலையும் இளைஞர் சமூகம் ஒதுக்காமல் கட்டாயமாகக் கற்க வேண்டும்.

    asuba4

    அடுத்த பதிவில் மேலும் ஒரு அருங்காட்சியகத்தை அறிமுகப்படுத்துகின்றேன். அதற்காக நாம் மலேசியா செல்லலாம். காத்திருங்கள்!!

    Share
  • அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் 45

    இசைக்கருவிகள் அருங்காட்சியகம், ப்ரஸ்ஸல்ஸ், பெல்ஜியம் (2)

     

    சுபாஷிணி

    ​இந்த அருங்காட்சியகத்தில் உலகின் பல நாடுகளிலிருந்து சேகரிக்கப்பட்ட இசைக்கருவிகள் இருப்பதாக முந்தைய பதிவில் தெரிவித்திருந்தேன். இந்த வடிவத்தில்தான் ஒரு இசைக்கருவி இருக்கும் என்ற நமது பழகிப் போன கண்களுக்கு சவால்விடும் வகையில் இங்கிருக்கும் இசைக்கருவிகள் இருக்கின்றன என்பது தான் ஆச்சரியம்.

    1

    பியானோவில் பழங்காலத்து வகையிலிருந்து இக்காலம் வரை என பலவேறுபாடுகளைக் கொண்ட பியானோக்கள்; வயலினில் சிறியது பெரியது நடுத்தர அளவு என வித்தியாசங்கள்; மேள வகை இசைக்கருவிகளில் தோலினால் செய்யப்பட்டவை, மரத்தால் செய்யப்பட்டவை- சிறியவை பெரியவை என வேறுபாடுகள் என ஒவ்வொன்றும் தனித்துவத்துடன் விளங்குகின்றன. சாக்ஸஃபோன் கருவிகளில் வெவ்வேறு வகைகள். அதன் பளபளக்கும் வெளிப்பகுதிகள் இசைப்பிரியர்கள் மட்டுமல்ல.. கண்காட்சிக்கு வந்திருக்கும் எல்லோரையும் கவரக்கூடியதாக இருக்கின்றது.

    2
    இவைதான் இசைக்கருவிகள் என அடையாளம் காணமுடியாத வகையில் தூக்கணாங்குருவிக் கூடுகளை ஒத்த வடிவிலான சில இசைக்கருவிகள் ஆச்சரியமூட்டுகின்றன. குழல் வகை கருவிகள் நம்மை பிரமிக்க வைக்கின்றன. பறை வடிவ இசைக்கருவிகள் மொத்தமான வடிவத்தில் மெலிதான வடிவத்தில் சிறியவை பெரியவை என பல நாடுகளிலிருந்தும் சேகரிக்கப்பட்டவை இங்கு காட்சிக்கு உள்ளன. மனித குல வரலாற்றில் குழல் போன்ற இசைக்கருவிகளும் தாள இசைக்கருவிகளும் மிகப் பழங்காலம் தொட்டே உள்ளன என்பதை நேரில் இங்கு வந்து பார்ப்பதன் வழி நிச்சயம் அறிந்து கொள்ள முடியும்.

    3

    இந்த அருங்காட்சியகத்தை அடைவது மிகச் சுலபம். பிரஸ்ஸல்ஸ் அரச மாளிகையின் இடப்புறத்தில் இருக்கும் Rue Montagne de la Cour/Hofberg 2 சாலையில் Old England department store கட்டிடத்தில் இந்த அருங்காட்சியகம் அமைந்திருக்கின்றது. 18ம் நூற்றாண்டின் புதிய அமைப்பை பிரதிபலிக்கும் இக்கட்டிடம் 1899ம் ஆண்டில் கட்டப்பட்டது.

    4

    இசைக்கருவிகளை பார்ப்பது மட்டுமல்லாது ஒவ்வொரு இசைக்கருவியையும் இசைத்தால் வெளிப்படும் ஓலியையும் கேட்டு மகிழும் வகையில் இங்கே கட்டிட அமைப்பே அமைந்துள்ளது. கண்காட்சிப் பகுதி ஒவ்வொன்றிலும் அங்கு காட்சிக்கு உள்ள இசைக்கருவிகளின் முன்னே நின்று தரையில் இருக்கும் சென்சர் பட்டனை அழுத்தினால் நமது காதில் நாம் பொறுத்திக் கொள்ளும் headset வழியாக நாம் இசையைக் கேட்டு ரசிக்க முடியும். என் கண்களுக்கு வித்தியாசமாக எனக்குத் தெரிந்த இசைக்கருவிகளையெல்லாம் கேட்கும் எண்ணத்தில் நான் இதனை முயற்சி செய்து பார்த்து மாறுபட்ட இசை ஒலிகளைக் கேட்டு வியப்படைந்தேன்.

    எத்தனை எத்தனை இசைக்கருவிகள்.. அவை எழுப்பும் ஒலிகள் தான் எத்தனை எத்தனை..!

    மனித வாழ்வில் பல்வேறு சிந்தனைகளால் இழுத்தடிக்கப்படும் மனம் அமைதியுற இசைக்கருவி வாசித்தல் உதவும். சிலருக்கு இயற்கையாகவே இசைக்கருவிகளில் ஏதேனும் ஒன்றினை வாசிக்க விருப்பம் இருக்கின்றது. பலருக்கு பெற்றோர் அல்லது சுற்றுச்சூழல் ஆகியவற்றின் தாக்கத்தால் ஏற்படும் ஆர்வம் தூண்டுதலாக அமைகின்றது. எப்படியாகினும் ஏதாகினும் ஒரு இசைக்கருவியை பயிற்சி செய்தலை வாழ்க்கையின் ஒரு அங்கமாகப் பழக்கிக் கொள்வது அதிலும் குறிப்பாக இளம் வயதினில் இருந்தே இவ்வகை பயிற்சிகளில் ஈடுபடுவது இசைக்கருவிகளில் திறமையைப் பெருக்கிக் கொள்ள மிக உதவும். பள்ளிக் கூட பாட நடவடிக்கைகளோடு இசைக் கருவிகளிலும் குழந்தைகளின் நாட்டத்தை பெற்றோரும் ஆசிரியரும் செலுத்த வழிகாட்ட வேண்டியதும் மிக முக்கியம்.

    5

    பெல்ஜியம் வருபவர்கள் தவறாது வந்து பார்க்க வேண்டிய ஒரு கூடம் என்றால் இந்த அருங்காட்சியகத்தை கூறுவேன். இந்த அருங்காட்சியகத்தை விட்டு வெளியே வரும் போது நம் மனம் மாறுபட்ட சிந்தனையில் மூழ்கியிருப்பதை நிச்சயம் உணர்வோம்.

    அடுத்த பதிவில்.. மற்றுமொரு நாட்டில் .. மற்றுமொரு அருங்காட்சியகத்தைக் காண்போமா..?

    சுபா

    Share
  • அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் ​40.

    நியாண்டர்தால் அருங்காட்சியகம் – டூசல்டோர்ஃப், ஜெர்மனி

    சுபாஷிணி

    ​சுமார் 2.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் மனிதகுல வரலாற்றில் ஒரு வளர்ச்சி பதியப்பட்டது. ஹோமோ குழுவகை மனித குலம் கற்களாலும் பாறைகளாலும் உபகரணப் பொருட்களை உருவாக்கும் திறனைப் படிப்படியாக வளர்த்துக் கொண்ட காலகட்டம் அது. இன்று நமக்குக் கிடைத்திருக்கும் சில சான்றுகளின் அடிப்படையில் 2 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்ததாகக் கருதப்படும் ஹோமோ இரெக்டஸ் (Homo Errectus) மனித இனத்தின் உடற்கூறுகளை ஒத்திருப்பதை அறியமுடிகின்றது. இந்த வகையினர் விலங்கினத்திலிருந்து மாறுபட்ட, அறிவு வளர்ச்சி பெற்ற ஒரு இனக்குழுவாக இருப்பதை கிடைத்திருக்கக்கூடிய சான்றுகளின் அடிப்படையில், அதிலும் குறிப்பாக மூளைப்பகுதியில் செய்யப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் ஆய்வாளர்கள் கண்டறிந்திருக்கின்றனர். ஏனைய விலங்கினங்களிலிருந்து மாறுபடும் வகையில் இவர்களது கால்களின் அமைப்பு, ஓடும் தன்மை ஆகியவையும், இவர்களின் பற்கள் அளவில் சிறியதாக மாற்றம் கண்டதையும், உடலின் மேல் அமைந்திருக்கும் மயிர் மெல்லியதாக மாற்றம் கண்டமையையும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் காட்டுகின்றன. இந்த ஹோமோ இரெக்டஸ் குழுவினர் அடிப்படையில் விலங்கினங்களிலிருந்து மாறுபட்ட வகையில் கற்களையும் பாறைகளையும் கொண்டு அவர்களின் அன்றாட வாழ்க்கைத் தேவைக்கு அடிப்படையான கருவிகளை உருவாக்கும் திறனை படிப்படியாக வளர்த்துக் கொண்ட இனமாகத் திகழ்கின்றனர்.

    ஜெர்மனியின் எஸ்ஸன் மாநிலத்தில் டூசல்டோர்வ் அருகே, ஆகஸ்டு மாதம் 1856ம் ஆண்டு, ஒரு சாதாரண நாளில், காடுகளைத் தூய்மை செய்யும் ஊழியர்கள் ஃபெல்தோவ் குகைப்பகுதியைச் சுத்தம் செய்து கொண்டிருந்தபோது 16 எலும்புகள் ஒரு பகுதியில் இருப்பதைக் கண்டனர். கண்டெடுக்கப்பட்ட இந்த எலும்புகளை ஆராய்ச்சிக் கூடத்திற்கு அனுப்பி பரிசோதனை செய்தனர். இதனை ஆய்வு செய்த யோஹான் கார்ல் ஃபூல்ரோத் அவர்கள் இவை மனித எலும்புகள் தாம் என உறுதி செய்தார். கண்டெடுக்கப்பட்டபோது இது அக்குகையின் உள்ளே, முதுகுப்புறம் வெளியே தெரியும்படி படுத்த நிலையில், குகையின் முன்பகுதியை நோக்கியபடி தலைவைத்துக் கிடந்ததாக இதனைக் கண்டெடுத்தோர் தெரிவித்த குறிப்பு மட்டுமே உள்ளது.

    asub
    எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்ட குகைப்பகுதி (மே 2015)

    இது மட்டுமே முதல் முறையாக கண்டெடுக்கப்பட்ட பழமையான மனித எலும்புகள் அல்ல என்பது உண்மை. ஏற்கனவே பெல்ஜியம், கிப்ரால்டா போன்ற நாடுகளிலும் பண்டைய மனித குலத்தின் எலும்புகள் கிடைக்கப்பெற்றன என்ற போதும் அவற்றிற்கு இந்த எலும்புக் கூட்டிற்கு செய்யப்பட்ட விரிவான ஆய்வுகளைப் போல  மேற்கொள்ளப்படவில்லை என்பது முக்கிய விஷயம்.

    தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வுகளும் அதனைத் தொடர்ந்தார் போல செப்டம்பர் 1859ம் ஆண்டில் வெளியான சார்ல்ஸ் டார்வினின் “On the Origin of Species by Means of Natural Selection” என்ற நூலும் இந்த நியாண்டர்தால் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட எலும்புக் கூடுகளை மானுடவியல் ஆய்வுலகில் மிக துரிதமாகப் பிரபலமடைய உதவின. அப்போதிருந்த பழமைவாத உலகச் சிந்தனையைத் திருப்பிப் போடும் சார்லஸ் டார்வினின் இந்த அதி அற்புத கோட்பாடு, இந்த புதிய கண்டுபிடிப்பை மையப்படுத்தி தொடர் ஆய்வுகள் துரிதமாக மேற்கொள்ளப்பட அடிப்படையை அமைத்துக் கொடுத்தன. மனித இனம் அதன் பழமையான முன்னோர் இனத்திலிருந்து பரிணாம வளர்ச்சி பெற்று  வந்த ஒரு இனம் என்னும் கோட்பாடு இந்த விஞ்ஞான ஆய்வோடு இணைந்து செயலாற்றத் தொடங்கியது.

    asuba

    ​அருங்காட்சியகத்தின் முகப்புப் பகுதியில் (மே 2015)

    அதன் பின்னர் இந்த ஆய்வுகள் தொடரப்படவில்லை. இந்த எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்ட குகைப்பகுதி இருக்கும் இடமும் பதியப்படாத நிலையில் அடுத்தடுத்து ஜெர்மனியில் நிகழ்ந்த யுத்தம், அரசியல் மாற்றம் என்ற வகையில் இந்த ஆய்வு தொடரப்படாமல் மறக்கப்பட்ட ஒன்றாக இருந்தது. 1997 மற்றும் 2000ம்  ஆண்டுகளிலும் இரண்டு அகழ்வாய்த்துறையினர் இந்த இடத்தை கண்டுபிடித்தே தீரவேண்டும் என முயற்சி செய்து ஆய்வில் இறங்கினர். ரால்ஃப் ஸ்மித், யூர்கன் தீஸன் ஆகிய இருவருமே அவர்கள். இவர்கள் ஆய்வு தோல்வியில் முடியவில்லை. நிலத்தின் மேல்பரப்பிற்கு 4 அடி கீழே மண்ணையும் பாறைகளையும் தோண்டி எடுத்து ஆய்வு செய்ததில் கற்கருவிகள், விலங்குகளின் எலும்புக் கூடுகள் ஆகியன கிடைத்தன. அவை மட்டுமல்ல மனித இனத்தின் உடல்கூறுகளைக் கொண்ட எலும்புக் கூடுகளும் கிடைத்தன. அதில் முன்பு 1856ல் கண்டெடுக்கப்பட்ட எலும்புகளின் மிச்சப்பகுதியும் அடங்கி இருந்தமை ஆய்வாளர்களுக்கு வெற்றிப்பாதயைக் காட்டியது.

    asu

    அருங்காட்சியகத்தின் முகப்பு பகுதி (மே 2015)

    ஜெர்மனியின் டூசல்டொர்ஃப் நகரில் பசுமையான சூழலில் ஃபெல்தோவ் குகைப்பகுதி அமைந்திருக்கின்றது. அங்கு தான் அழைத்துச் செல்கின்றேன். அருக்காட்சியகத்தைக் காண தொடர்ந்து வருக!

    Share
  • அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 39

    பெரியார்-அண்ணா நினைவகம், ஈரோடு, தமிழகம் – பகுதி 3

    சுபாஷிணி

    பெயரில் குறிப்பிட்டிருப்பது போலவே இந்த நினைவகம் பெரியாரின் நினைவுகளோடு அண்ணாவை நினைத்துப் பார்க்கவும் வைக்கும் ஒரு இடமாக அமைந்திருக்கின்றது. தந்தை பெரியார் தொடர்பான வரலாற்றுத் தகவல்கள் அனைத்தும் இக்கட்டிடத்தின் முற்பகுதியில் இடம்பெறுகின்றன. இக்கட்டிடத்தின் பின்பகுதியில் அண்ணா நினைவகம் உள்ளது. இப்பகுதியே பேரறிஞர் அண்ணா அவர்கள் விடுதலை பத்திரிக்கையில் ஆசிரியராகப் பணிபுரிந்த போது வாழ்ந்த இடம் என்ற குறிப்பையும் காண்கின்றோம். இது அலுவலகம் என்ற நிலையின்றி வீடு போலவே உள்ளது. இக்கட்டிடத்தைப் பார்ப்பவர்கள், 20ம் நூற்றாண்டின் மத்தியப் பகுதி கட்டிட அமைப்பை இவ்வீட்டினைப் பார்த்து அறிந்து கொள்ள முடியும்.

    நினைவகத்தில் இருக்கும் அறிஞர் அண்ணா சிலையுடன் நான்

    anna

    சமையல் அறை, உறங்கும் அறை, திறந்த விசாலமான வீட்டின் நடுப்பகுதி, குட்டையான மேற்கூறை பகுதி ஆகியவை அதன் வடிவம் மாறாமல் இங்கே அவ்வாறே வைக்கப்பட்டுள்ளன. இப்பகுதியிலும் சுவரில் கண்ணாடி போடப்பட்ட அலமாரிகளுக்குள் அண்ணா தொடர்பான பல தகவல்கள், பத்திரிக்கைச் செய்திகள் ஆகியன இருக்கின்றன. உள்ளே உள்ள ஆவணங்களை புகைப்படம் எடுக்க எனக்கு அனுமதி கிடைக்காததால் அவற்றை இப்பதிவில் பயன்படுத்த முடியவில்லை.

    ​அறிஞர் அண்ணா வாழ்ந்த பகுதியில் தோழியர் பவளா, டாக்டர்.பத்மாவதி

    as

    பேரறிஞர் அண்ணா தந்தை பெரியாருக்கு மிக அணுக்கமாக இணைந்திருந்தவர். தந்தை பெரியாரின் கொள்கைகளை ஏற்று அவரோடு சமூகப் பணிகளில் தம்மைப் பல ஆண்டுகள் ஈடுபடுத்திக் கொண்டவர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிறந்த இவருக்கு அங்கு ஒரு நினவைகம் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. பேரறிஞர் அண்ணாவின் பேச்சாற்றலைப் பற்றி பலரும் அறிந்திருப்பர். தமிழ் மொழி மட்டுமன்றி ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு என வேற்று மொழிகளிலும் புலமை பெற்றவர் இவர்.

    அரசியல் தலைவர், பேச்சாளர் என்பது மட்டுமன்றி கலைத்துறையிலும் ஈடுபட்டவர். முற்போக்கு சீர்திருத்த கருத்துக்களையும் கொள்கைகளையும் நாடகங்களின் வழியாகவும் திரைப்படங்களின் வழியாகவும் தமது எழுத்துக்களால் வெளிப்படுத்தி மக்களிடையே முற்போக்கு சிந்தனைகள் வளரச் செய்ததில் முக்கியப் பங்கு இவருக்கு உளளதை மறுக்க முடியாது.

    ​​as1

    தந்தை பெரியாரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு அவரது நீதிக்கட்சியில் இணைந்து பின்னர் திராவிடர் கழகத்திலும் இணைந்து சமூக விழிப்புணர்வு தரும் பல நடவடிக்கைகளில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார். பெரியாருடன் கொண்ட கருத்து வேறுபாட்டினால் திராவிடர் கழகத்தின் முக்கிய உறுப்பினர்கள் சிலருடன் 1949ம் ஆண்டு விலகி திராவிடர் முன்னேற்றக் கழகம் (தி.மு.க) என்ற புதிய இயக்கமொன்றை இவர் நிறுவினார். தமிழகத்தின் ஆறாவது முதலமைச்சராகவும் அறிஞர் அண்ணா பொறுப்பேற்றிருந்தார். தமது இறுதிக்காலத்தில் புற்று நோயினால் பாதிக்கப்பட்டு பிப்ரவரி 2ம் தேதி 1969ம் ஆண்டில் அறிஞர் அண்ணா மறைந்தார்.

    தந்தை பெரியார், அறிஞர் அண்ணா இருவருமே தமிழகத்தில் சமூக சீர்திருத்தம் ஏற்பட உழைத்தவர்கள். இருவருமே தமிழ்ச்சமூகத்திலே அக்கால கட்டத்தில் நிறைந்திருந்த மூட நம்பிக்கைகள், பெண் விடுதலை, சாதிக் கொடுமைகள், தீண்டாமை கொடுமை ஆகியன ஒழிய மக்கள் மத்தியில் பல்வேறு வகையில் சிந்தனையைத் தூண்டும் செயல் நடவடிக்கைகளில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டவர்கள்.

    ​பெரியார் அண்ணா நினைவகம்

    as2

    இவர்கள் இருவரையும் நினைவு கூறும் வகையில் அமைந்திருக்கும் இந்த ஈரோடு பெரியார் அண்ணா நினைவகம் நல்லதொரு வகையில் பராமரிக்கப்படும் ஒரு அருங்காட்சியகமாகத் திகழ்கின்றது. ஈரோடு செல்பவர்களும் தந்தை பெரியார் பற்றி அறிந்து கொள்ள விருப்பம் உள்ளவர்களும் இந்த அருங்காட்சியகம் சென்று பார்த்து வரலாம்.

    ஈரோட்டில் இருக்கும் பெரியார் புத்தகக்கடை

    as3

    ஈரோட்டில் இந்த நினைவகத்தின் அடுத்த பகுதியிலேயே தந்தை பெரியார் நூலகம் ஒன்றும் இருக்கின்றது. பெரியார் எழுதிய நூல்களும் பெரியாரைப் பற்றி வேறு சிலர் எழுதிய நூல்களும் இப்புத்தகக் கடையில் கிடைக்கின்றன. நான் சென்ற போது தந்தை பெரியாரின் 11 சிறு நூல்களை வாங்கிக் கொண்டேன்.

    சரி..ஈரோட்டிலிருந்து புறப்பட்டு விட்டோம். அடுத்த கட்டுரையில் உங்களை வேறொரு நாட்டில் உள்ள மேலும் ஒரு அருங்காட்சியகம் அழைத்துச் செல்கிறேன்.. புதிய விஷயங்கள் நிறையவே இருக்கின்றன… பகிர்ந்து கொள்ள..!


    Suba.T.
    http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
    http://subahome2.blogspot.com – ஜெர்மனி நினைவலைகள்..!
    http://subaillam.blogspot.com – மலேசிய நினைவுகள்..!
    http://ksuba.blogspot.com – Suba’s Musings
    http://subas-visitmuseum.blogspot.com – அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
    http://rareartcollections.blogspot.com/ – அருங்கலைப் படைப்புக்கள்

    http://tamilheritagefoundation.blogspot.com – த.ம.அ செய்திகள்
    http://voiceofthf.blogspot.com – மண்ணின் குரல்
    http://video-thf.blogspot.com – விழியக் காட்சிகள்
    http://image-thf.blogspot.com – மரபுப் படங்கள்
    http://thfreferencelibrary.blogspot.com – தமிழ் மரபு நூலகம்
    http://mymintamil.blogspot.com – மின்தமிழ் மேடை
    http://kanaiyazhi-ezine.blogspot.com – கணையாழி

    Share
  • அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் (38)

    பெரியார் அண்ணா நினைவகம், ஈரோடு, தமிழகம் – பகுதி 2

    சுபாஷிணி

    -போக்குவரவு எங்கும் ஆகாய விமானமும், அதிவேக சாதனமுமாகவே இருக்கும்.
    -கம்பியில்லாத தந்தி சாதனம் ஒவ்வொருவர் சட்டைப்பையிலும் இருக்கும்.
    -ரேடியோ ஒவ்வொருவர் தொப்பியிலும் அமைக்கப்பட்டிருக்கும்.
    -உருவத்தைத் தந்தியில் அனுப்பும்படியான சாதனம் எங்கும் மலிந்து -ஆளுக்காள் உருவம் காட்டிப் பேசிக் கொள்ளத்தக்க சவுகரியம் ஏற்படும்.

    இனிவரும் உலகம்  – தந்தை பெரியார்

    ‘ஆகா.. இன்றைய சூழலின் நிலையை அன்றே சொல்லிய தீர்க்கதரிசி’ என யாரேகினும் அதிசயத்தையும் மாய உணர்வுகளையும் இவர் மேல் வலியத்திணித்தால் நிச்சயம் கோபம் கொள்வார் தந்தை பெரியார். நிகழ்கால நிலையை உலகக்கண்ணோட்டத்தோடு ஒப்பிட்டுப் பார்த்து ஒவ்வொரு வளர்ச்சிப் பாதையையும் உருவாக்கக் கூடிய சாத்தியங்களைக் கற்பனை செய்து பார்த்து சுய அறிவைக் கொண்டு செயல்படும் போது மனித சிந்தனை வருங்கால நிகழ்வுகளையும் ஓரளவு திட்டமிடக்கூடிய வல்லமையைப் பெறும். ஆயினும் மூட நம்பிக்கையிலும் மூடப் பழக்க வழக்கங்களிலும் தம்மை ஈடுபடுத்திக் கொண்டு அதிலிருந்து வெளிவர முடியாது அல்லலுறும் பல மனிதர்களுக்கு அதிசயங்களும் மாயஜாலங்களும் மாய மந்திரங்களுமே உலகை நடத்துவதானதாக ஒரு எண்ணம் உறுதியாக இருக்கின்றது.

    asu1

    மக்கள் பெரும்பாலும் பழமை வாதத்தைப் பிடித்துக் கொண்டு, மாறி வரும் புதிய உலகிற்கு ஏற்றவர்களாக தம்மை தயார்படுத்திக் கொள்ள ஒப்பற்ற பரிசாக இருக்கும் கல்வியினைப் பெற்று ஆண் பெண் பேதமின்று இருபாலரும் சிந்தனை வளர்ச்சியையும் பொருளாதார வளர்ச்சியையும் அனுபவிக்கும் திறன் கொண்டோரோக இருக்க வேண்டும் என சிந்தித்து அதற்காக மக்களை சந்தித்து தமது சொற்பொழிவுகளின் வழியாகவும் பத்திரிக்கைகளின் வழியாகவும் தமது கருத்துக்களை பரப்பியவர் திரு.ஈ.வெ.ரா அவர்கள்.

    இந்த அருங்காட்சியகத்தின் ஒரு பகுதியில் பெரியார் எழுதிய சில கடிதங்களும், பெரியாருக்கு ஏனைய சிலர் எழுதிய கடிதங்களும் இருக்கின்றன. திரு.வ.உ.சிதம்பரம் பிள்ளை 6.6.1928ம் தேதியிட்டு எழுதிய கடிதம் ஒன்று இங்கு காட்சிக்கு உள்ளது. அது போல பேரறிஞர் அண்ணா எழுதிய ஒரு கடிதமும், மூதறிஞர் திரு.இராஜாஜி 8.1.1925ம் தேதியிட்டு எழுதிய கடிதம் ஒன்றும் இங்கே உள்ளது.

    பெரியார் பயன்படுத்திய சில பொருட்கள், நாற்காலி, உடைகள் என்பனவும் பாதுகாப்பாக காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

    asu2

    பெரியார் ஆரம்பித்து நடத்திய பத்திரிக்கைகள் குறிப்பிடத்தக்க என்ணிக்கையில் உள்ளன. இந்த அருங்காட்சியகத்தில் உள்ள தகவலின் படி கீழ்க்காணும் தினசரி, வார மாத இதழ்கள் தந்தை பெரியார் அவர்களால் தொடக்கப்பட்டவையாக அறிய முடிகின்றது.

    குடியரசு வார ஏடு – துவக்கிய நாள் 2.5.1925
    திராவிடன் தினசரி ஏடு – துவக்கிய நாள் செப்டம்பர் 1927
    ரிவோல்ட் வார ஏடு (ஆங்கிலம்) – துவக்கிய நாள் 6.11.1928
    புரட்சி வார ஏடு – துவக்கிய நாள் 20.11.1933
    பகுத்தறிவு வார ஏடு – துவக்கிய நாள் 15.3.1934
    விடுதலை நாளேடு – துவக்கிய நாள்1.6.1935
    திராவிட நாடு வார ஏடு – துவக்கிய நாள் 7.3.1942
    லிபரேட்டர் (ஆங்கிலம்) நாளேடு – துவக்கிய நாள்7.12.1942
    உண்மை (மாதம் இரு முறை) இதழ் – துவக்கிய நாள் 14.1.1970
    தி மாடர்ட் ரேசனாலிஸ்ட் (ஆங்கில மாத இதழ்) – துவக்கிய நாள் செப்டம்பர் 1971

    asu3
    எழுத்துக்களின் வழி சமூகப்புரட்சியைச் செய்வது என்பது சாதாரண மக்களையும் சென்றடையக்கூடிய ஒரு யுக்தி. பொதுமக்களின் சிந்தனையில் படிப்படியாக தெளிவினை கொடுத்து சிந்திக்கச் செய்ய வேண்டுமென்றால் அதற்கு மிக முக்கியமானது மக்களை பலதரப்பட்ட நாட்டு நிலவரங்கள் அடங்கிய, விழிப்புணர்வினைத் தரக்கூடிய பத்திரிக்கை செய்திகள் தாம்.

    asu4

    இன்றைய காலகட்டத்தில் பத்திரிக்கை துறை என்பது மிக விரிவாக வளர்ந்துவிட்டது. பத்திரிக்கைகள் மக்களுக்கு உள்ளூர் மற்றும் உலக விஷயங்களைக் கொண்டு சேர்ப்பது என்பது ஒரு புறம் இருக்க தேவையற்ற மலிவான தரமற்ற விசயங்களையும் வழங்கி பொது மக்களின் வாசிப்பு நோக்கத்தினை திசை திருப்பும் பணியையும் மேற்கொள்வது ஒரு விதமான சமூக சீர்கேடு என்றே கருதத் தூண்டுகின்றது. ஆனால் சுதந்திரத்திற்கு முந்தைய இந்தியாவில் பத்திரிக்கைகள் என்பன மக்கள் மத்தியில் சுதந்திர தாகத்தை உருவாக்கவும், சமூக சீர்கேட்டினைச் சரி செய்யவும், தொழிலாளர் நலனுக்காகவும் என்ற வகையில் சமூகப் பார்வையை முன் வைத்து தொடங்கப்பட்டன. அதன் நோக்கம் மிக உயரியதாக இருந்ததால் அதன் விளைவாக பொது மக்கள் மத்தியிலே கல்விச் சிந்தனை, புதுமை சிந்தனை, பொது நலச்சிந்தனை, விரிவான மாற்றம் புரட்சிகரமான சிந்தனை ஆகியற்றிற்கு வித்திட்ட பங்கினையும் பத்திரிக்கைகள் ஆற்றின.

    தொடரும்…

    Share
  • அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் (37)

    சுபாஷிணி

    பெரியார் அண்ணா நினைவகம், ஈரோடு, தமிழகம் – பகுதி 1

     

     

    தமிழகத்தின் கொங்கு நாட்டிற்கு இதுவரை நான்கு முறை பயணம் செய்திருக்கின்றேன். அதிலும் குறிப்பாக ஈரோட்டிற்கு 3 முறை பயணம் மேற்கொண்டு தமிழ் மரபு அறக்கட்டளைக்கான பதிவாக்கங்களைச் செய்திருக்கின்றேன். முதல் இரு முறைகளும் குறுகிய கால பயணத்தில் முடிந்த அளவு தமிழ் மொழி, வரலாறு பண்பாடு ஆகிய விசயங்கள் தொடர்பான பதிவுகளைச் செய்யமுடிந்தாலும் ஈரோட்டிலேயே நான் எப்போது வந்தாலும் என்னை வரவேற்று உபசரித்து தங்கவைத்து பார்த்துக் கொள்ளும் தோழி பவளா-திரு.திருநாவுக்கரசு தம்பதிகள் வீட்டிற்கு அருகிலேயே இருக்கும் பெரியார் நினைவகம் போகக்கூடிய வாய்ப்பும் நேரமும் கிட்டாமலேயே இருந்தது. சென்ற ஆண்டு, 2014 ஜூன் மாதம் மீண்டும் ஈரோட்டிற்குப் பயணம் மேற்கொண்டிருந்த போது பெரியார் நினைவகம் செல்வதை, செய்ய வேண்டிய முக்கிய விசயங்கள் பட்டியலில் இணைத்துக் கொண்டதோடு காட்டாயம் சென்றே ஆக வேண்டுமென்று என்னுடன் வந்திருந்த டாக்டர்.நா.கண்ணனையும் பவளாவையும் அழைத்துக் கொண்டு புறப்பட்டு விட்டேன்.

    asu

    ஈரோட்டின் மத்தியிலேயே அமைந்திருக்கும் ஒரு சாலையில் பெரியார்-அண்ணா நினைவகம் இருக்கின்றது. இந்தக் கட்டிடம் 17.9.1975ம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வர் மாண்புமிகு கலைஞர் மு.கருணாநிதி அவர்களால் திருமதி ஈ.வெ.ரா.மணியம்மை தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.

    asu1
    இந்த அருங்காட்சியகத்தை மிகத் தூய்மையாகப் பராமரிக்கும் பொறுப்பாளர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுதல்களை நான் நிச்சயம் குறிப்பிட்டே ஆகவேண்டும். நினைவகமே அருங்காட்சியம் என்ற வகையில் பெரியார் தொடர்பான பல முக்கியத்தகவல்களை வரலாற்றுத் தொடர்ச்சியை வரும் பார்வையாளர்கள் அறிந்து கொள்ளும் வகையில் வாய்ப்பினை வழங்குகின்றது இந்த நினைவகம். இதன் பின்பகுதி அண்ணாவின் நினைவகமாக  அமைக்கப்பட்டிருக்கின்றது.

    தந்தை பெரியார் என மதிப்பும் மரியாதையுடனும் அழைக்கப்படும் திரு.ஈ.வெ.ரா அவர்களது இளமைக் கால வரலாற்றுச் செய்திகள் புகைப்படங்களுடன் வழங்கப்பட்டிருப்பதைக் காண முடிகின்றது. உள்ளே நுழையும் போதே மாண்புமிகு ஜெயலலிதா அம்மையார் அவர்கள் பெரியாருடனும் அண்ணாவுடனும் இருக்கும் நிகழ்வுகளின் காட்சிகளின் புகைப்படங்கள் உள்ளன. அவற்றோடு தொடர்ச்சியாக பெரியாரின் பயணங்கள், குழுவாக எடுத்துக் கொண்ட புகைப்படங்கள், பெற்றோர் பற்றிய தகவல்கள் ஆகியன புகைப்படங்களுடன் செய்தியாக வழங்கப்பட்டிருக்கின்றன.

    asu2

    பெரியாரின் வாழ்க்கைப் பாதையின் 94 ஆண்டுகால பயணம் என்பது பல தரப்பட்ட திருப்பு முனைகளைச் சந்தித்த ஒன்றாக அமைந்தது என்பதை இங்குள்ள புகைப்படங்களே ஆதாரமாகக் காட்டுகின்றன. ஒரு வணிகராக வளர்ந்த திரு.ஈ.வெ.ரா அவர்கள் படிப்படியாக தமிழ் மக்களின் சமூக நலனில் அக்கறை கொண்டு தனது வாழ்க்கை நோக்கத்தை மக்கள் நலனுக்காகவும் சிந்தனை மாற்றத்திற்காகவும் என மாற்றிக் கொண்டு தனது இறுதி காலம் வரை அதற்காகவே உழைத்ததன் அடையாளமாகவும் சான்றுகளாகவும் இருக்கும் பல ஆதாரங்களை இந்த அருங்காட்சியகத்தில் வருகையாளர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

    asu4

    இங்கு வைக்கப்பட்டுள்ள ஒரு தகவல் பலகையில் உள்ள குறிப்புகள் பெரியார் பற்றி அறிமுகம் பெற விரும்புவோருக்கு பயன்தரும் வகையில் அமைந்துள்ளது. அதில் உள்ள குறிப்புகள் கீழ்வருமாறு:

    தந்தை பெரியார் அவர்களின் வாழ்க்கைக் குறிப்பு

    1. பிறப்பு: 17.9.1879
    இறப்பு: 24.12.1973

    2. சுற்றுப் பயணம் செய்த மொத்த நாட்கள்: 8,600 நாட்கள் (26 ஆண்டுகள், 6 மாதம், 25 நாட்கள்)

    3. சுற்றுப் பயணம் செய்த மொத்த தூரம் : 13,12,000 கிலோ மீட்டர்கள் (பதின்முன்று லட்சத்து பனிரண்டாயிரம் கிலோ மீட்டர்கள்)

    4. சுற்றுப்பயணத்தில் கலந்து கொண்ட நிகழ்ச்சிகள்: 10,700 (பத்தாயிரத்து எழுநூறு நிகழ்ச்சிகள்)

    5. சுற்றுப்பயணத்தில் கலந்து கொண்டு சொற்பொழிவு ஆற்றிய நேரம்: 21,400 மணிகள் (இருபத்து ஒன்றாயிரத்து நானூறு மணிகள்)

    6. தந்தை பெரியார் அவர்களின் சொற்பொழிவை ஒலி நாடாவில் பதிவு செய்து ஒலி பரப்பினால் ஒலிக்கும் நாட்கள்: – இரவு பகலாக: 2 வருடம், 5 மாதம், 11 நாட்கல்.

    7.வாழ்ந்த காலங்கள்: 94 வருடம், 3 மாதம், 7 நாட்கள்


    நான் யார்?
    ஈ.வெ.ராமசாமி என்கின்ற நான் திராவிட சமுதாயத்தைத் திருத்தி உலகில் உள்ள மற்ற சமுதாயத்தினரைப்போல் மானமும் அறிவும் உள்ள சமுதாயமாக ஆக்கும் தொண்டை மேற்போட்டுக் கொண்டு அதே பணியாய் இருப்பவன் – ஈ.வெ.ரா.

    தொடரும்..


    Suba.T.

    http://subastravel.blogspot.com– சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
    http://subahome2.blogspot.com – ஜெர்மனி நினைவலைகள்..!
    http://subaillam.blogspot.com – மலேசிய நினைவுகள்..!
    http://ksuba.blogspot.com – Suba’s Musings
    http://subas-visitmuseum.blogspot.com – அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
    http://rareartcollections.blogspot.com/ – அருங்கலைப் படைப்புக்கள்
     
    http://tamilheritagefoundation.blogspot.com – த.ம.அ செய்திகள்
    http://voiceofthf.blogspot.com – மண்ணின் குரல்
    http://video-thf.blogspot.com – விழியக் காட்சிகள்
    http://image-thf.blogspot.com – மரபுப் படங்கள்
    http://thfreferencelibrary.blogspot.com – தமிழ் மரபு நூலகம்
    http://mymintamil.blogspot.com – மின்தமிழ் மேடை
    http://kanaiyazhi-ezine.blogspot.com – கணையாழி
    Share
  • அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்! (36)

    யொஹான்னஸ் கெப்லர் அருங்காட்சியகம் (3), வைல் டெர் ஸ்டாட், ஜெர்மனி

    சுபாஷிணி ட்ரெம்மல்​

    I much prefer the sharpest criticism of a single intelligent man to the thoughtless approval of the masses.
    -Johannes Kepler

    கெப்லரின் சமகாலத்தவர் கலிலியோ. இருவரது ஆய்வுகளும் விண்வெளி ஆய்வுத் துறையில் அளப்பரிய கண்டுபிடிப்புக்களை உலகுக்கு வழங்கின. ஐசேக் நியூட்டனின் கோளங்களின் அசைவு தொடர்பான கண்டுபிடிப்புக்களுக்கு அடிப்படையை அமைத்து தந்தவையும் கெப்லரின் ஆய்வுத்தரவுகள் தாம். இன்று வரை தொடர்ந்து நிகழும் விண்வெளித்துறை ஆய்வுகள் கெப்லர் அமைத்துக் கொடுத்த ஆதாரங்களை மையமாகக் கொண்டே தொடர்கின்றன என்பது விண்வெளி ஆய்வுத் துறையில் கெப்லரின் பங்கை நாம் நன்கு உணர உதவும்.

    jk7

    கெப்லரின் ப்ளாடோனிக் சோலிட் மாடல் (Platonic solid model of the Solar system from Mysterium Cosmographicum) (1596)

    1591ம் ஆண்டில் டுயூபிங்கன் பல்கலைகழகத்தில் தமது பட்டப்படிப்பை முடித்தார் கெப்லர். தத்துவமும் கணிதமும் படித்த அவருக்கு அக்கால கட்டத்தில் வானியல் ஆய்வுகளில் ஆர்வம் ஈடுபட ஆரம்பித்தது. அதிலும் குறிப்பாக இந்த பூமி உருண்டையானது, சூரியனை சுற்றி வருகின்றது என்ற நிக்கோலஸ் கோப்பர்னிக்கஸின் (1473- 1543) கருத்துக்கள் இவரது கவனத்தை ஈர்த்தன. டியூபிங்கன் பல்கலைக்கழகம் அப்போது யொஹான்னஸ் கெப்லருக்கு ஆஸ்திரிய நாட்டில் உள்ள க்ராஸ் பகுதியில் கணித ஆய்வாளர் பணி ஒன்றினை அமைத்துக் கொடுத்தது. 1954ல் இப்பணியை மேற்கொள்ள இவர் க்ராஸ் சென்றடைந்தார். இங்கிருந்த போது தமது ஆய்வுகளில் கவனத்தைச் செலுத்தி மிகக் கடுமையாக உழைத்து வந்தார். அக்கால கட்டத்தில் தான் இவர் பார்பரா மூலெக் என்ற மங்கையை மணந்தார். இது 1597ல் நிகழ்ந்தது. இவர்களுக்கு ஐந்து குழந்தைகள் பிறந்தாலும் இறுதியில் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை மட்டுமே உயிர் பிழைத்தனர்.

    தைக்கோ ப்ராஹா என்ற ஜோதிட வானியல் ஆய்வாளர் ஒருவரிடம் பணி புரிய கெப்லருக்கு ஆர்வம் ஏற்பட்டது. தைக்கோ டென்மார்க்கின் ஒரு முழு தீவையுமே வாங்கி அங்கே குடிபெயர்ந்து தனது ஆய்வுகளை அத்தீவில் செய்து வந்தார். அதோடு அவர் ப்ராக், அதாவது இப்போதைய செக் நாட்டில் மன்னர் இரண்டாம் ரூடோல்ஃபுக்கு கணிதமேதையாக அமைந்திருந்தார் என்பதும் அவரது தகுதியை நாம் அறிந்து கொள்ள உதவும்.

    jk6

    ​ஹ்வென் தீவு வரைபடம் – இங்கு தான் தைக்கோ ப்ராஹா தமது ஆய்வுக்கூடத்தை அமைத்திருந்தார்

    அவரிடம் உதவியாளராக விரும்பி, வின்ணப்பித்து 1600ம் ஆண்டு அப்பணியில் அமர்ந்தார் கெப்லர். 1601ம் ஆண்டு ப்ராஹா தற்செயலாக இறந்து போக அப்பதவி கெப்லருக்கு வழங்கப்பட்டது. 1611ம் ஆண்டில் மன்னர் ரூடோல்ப் பதவியிறங்க வேண்டிய நிலையில் கெப்லர் தாமும் அப்பதவியைத் துறந்து வேறொரு பகுதியில் பணியாற்ற நாட்டம் கொண்டார். தனக்கு பொருத்தமான ஒரு பணியை தேடும் வேலையிலும் ஈடுபட்டார். அப்போது ஆஸ்திரியாவின் லின்ஸ் நகரில் ஒரு தேவை இருக்கவே அங்கே தமது குடும்பத்தாருடன் சென்று சேர்ந்து தமது புதிய பணியை 1612ம் ஆண்டில் தொடங்கினார். லின் நகரில் தான் கெப்லர் அதிக ஆண்டுகள் பணியாற்றியிருக்கின்றார், அதாவது 14 ஆண்டுகள். இக்கால கட்டத்தில் இவரது மனைவி பார்பரா இறக்கவே, சில காலங்களுக்குப் பிறகு இவர் சூசன் ரோய்ட்டிங்கர் என்ற மாதுவை மணந்து கொண்டார் என்ற தகவல்களையும் அறிகின்றோம்.

    கெப்லர் அறிவியல் நம்பிக்கையோடு ஆன்மீகத்தில் ஆழ்ந்த நம்பிக்கையும் ஈடுபாடும் கொண்டவராகத் திகழ்ந்தார். இவர் தமது ஆய்வுகள் அனைத்துமே தாம் ஒரு கிறிஸ்துவர் என்ற அடிப்படையில் தமது பிறப்பின் கடமையைச் சரியாகச் செய்ய வந்ததாக நினைத்தே செய்வதாக தமது எழுத்துக்களில் குறிப்பிடுகிறார். கடவுள் உருவாக்கிய இந்த அண்ட கோளங்களை புரிந்து கொள்ள தாம் முயல்வதாக இவர் தமது எழுத்துக்களில் தன் கருத்தை பதிந்து வைக்கின்றார்.

    யொஹான்னஸ் கெப்லர் ஐரோப்பாவின் சில நகரங்களுக்கு தொழில் நிமித்தம் பயணித்து தமது ஆய்வு தொடர்பான உரைகளை நிகழ்த்தியும் வாதங்களில் ஈடுபட்டும் வந்தவர். அதிலும் குறிப்பாக தனது இறுதி காலகட்டங்களில் இவரது வாழ்க்கை இப்படியே அமைந்திருந்தது. நவம்பர் மாதம் 15ம் தேதி 1630ம் ஆண்டில் இந்த அறிவியல் வல்லுநர் இவ்வுலகை விட்டு மறைந்தார். அப்போது அவர் ரேகன்ஸ்புர்க் நகரத்தில் வசித்து வந்தார். ஜெர்மனியின் ரேகன்ஸ்புர்க் நகரின் தேவாலயத்தில் இவரது உடல் தகனம் செய்யப்பட்டு நினைவுச்சின்னம் அமைக்கப்பட்டது. அதன் பின்னர் நிகழ்ந்த 30 ஆண்டுகள் தொடர் போரின் போது இந்த தேவாலயப் பகுதி அழித்து சேதமாக்கப்பட்ட நிலையில் இந்த நினைவுச்சின்னமும் அவர் சமாதியும் முற்றாக அழிந்தன.

    ஒரு தனி மனிதராக யொஹான்னஸ் கெப்லர் உலகுக்கு வழங்கிய ஆய்வுக் கொடைகள் தொடர்ந்து இவரை நம்மிடையே மறக்காமல் நிலைத்திருக்கச் செய்திருக்கின்றன. இத்தகைய பல அறிய தகவல்களை நமக்கு வழங்கும் இந்த யொஹான்னஸ் கெப்லர் அருங்காட்சியகத்துக்கு ஜெர்மனியின் பாடன் உர்ட்டெம்பெர்க் வருவோர் வந்து இங்குள்ள தகவல்களையும், இவர் பயன்படுத்திய, உருவாக்கிய கருவிகளையும், இவரது எழுத்தில் அமைந்த நூல்களையும், ஆவணங்களையும் நேரில் பார்த்துச் செல்லலாம்.

     jk5

    ​அருங்காட்சியகத்தின் வாசல் பகுதியில்

    ​Truth is the daughter of time, and I feel no shame in being her midwife.
    -Johannes Kepler​

    உதவிய குறிப்புக்கள்

    Share
  • அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்! (35)

    35. யொஹான்னஸ் கெப்லர் அருங்காட்சியகம் (2), வைல் டெர் ஸ்டாட், ஜெர்மனி.

     

    சுபாஷிணி ட்ரெம்மல்​

    பிரச்சனைகள் இல்லாத ஒரு வாழ்க்கை என்பது உண்டா? அதிலும் குறிப்பாக சாதனைகள் பல படைப்போர் வாழ்க்கையில் அவர்கள் சந்தித்து கடந்து வந்த பாதைகள் கரடு முரடானவையாகத் தான் அமைந்திருக்கின்றன. வாழ்க்கை பாடம் கொடுக்கும் அனுபவங்களே ஒரு படி நிலையிலிருது மற்றொரு படி உயரத்திற்கு அழைத்துச் செல்கின்றது.யொஹான்னஸ் கெப்லரின் வாழ்க்கை இத்தகைய கடினமான தடைகள் பல நிறைந்த வாழ்க்கையாகத்தான் அமைந்தது.

    jk2
    யொஹான்னஸ் கெப்லர்

    யொஹான்னஸின் தாயார் காத்தரினா ஜெர்மனியின் ஸ்டுட்கார்ட் நகரில் பிறந்தவர். இவருக்கும் ஒரு பிரபலமான வர்த்தகராக அந்த வட்டாரத்தில் திகழ்ந்த ஒரு வர்த்தகரின் மகனான ஹைன்ரிக் கெப்லருக்கும் திருமணம் நடந்தது. ஹைன்ரிக் பாடன் உர்ட்டென்பெர்க் பகுதி பிரபுவிடம் சற்று அனுக்கமாகப் பழகும் சூழல் அமைந்திருந்தாலும் தனது குடிப்பழக்கத்தால் வறுமை நிலையை அடைந்து குடும்பத்தையும் வறுமை வாட்ட காரணமாகிவிட்டார். யொஹான்னஸின் தாயார் காத்தரினா ஒரு முன்கோபம் படைத்தவர் என்றும் சிடுசிடு என்று எல்லோரிடமும் பழகுபவர் என்றும் வர்ணிக்கப்படுகின்றார். இதனால் இவர்களின் சுற்றத்தார் மற்றும் அவர்கள் சூழலில் நல்ல நட்புறவும் அமையாத நிலையே அப்போது சிறுவன் யொஹான்னஸுக்கு அமைந்தது. புதிய இடம் புதிய பாதையைக் காட்டலாம் என்ற முடிவில் ஹைன்ரிக் தன் மனைவியுடனும் யொஹான்னஸுடனும் நெதர்லாந்துக்குப் பயணமானார். ஆனால் அங்கும் இவர்களுக்கு எதிர்பார்த்த நல்ல மாற்றம் அமையவில்லை. மனம் உடைந்து இவர்கள் மீண்டும் தங்கள் கிராமமான ஜெர்மனியின் வைல் டெர் ஸ்டாட் கிராமத்துக்கே வந்து சேர்ந்தனர்.

    இந்த காலகட்டத்தில் தான் காத்தரீனாவின் அத்தை ஒருவர் விஷம் வைத்து ஒருவரை கொன்று விட்டார் என்று கைதாகி விசாரணைக்குப் பின் ஒரு சுனியக்காரி என்று அறிவிக்கப்பட்டு உயிருடன் எரிக்கும் தண்டனைக்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்டார். இது அவர்கள் குடும்பத்தில் எவ்வகை துயர சூழலை உருவாக்கியிருக்கும் என்று நம்மால் ஓரளவு ஊகிக்க முடிகின்றது. இந்த பிரச்சனைகளுக்கு இடையில் யொஹான்னஸின் கவனமும் கல்வியின் மீதான ஆர்வமும் அதிகரித்துக் கொண்டேயிருந்ததே தவிர குறையவில்லை. தனது திறமையின் காரணமாக மானில பிரபுவின் பிரியத்துக்குள்ளான சிறுவர்களில் ஒருவராக யொஹான்னஸ் திகழ்ந்தார். இதனால் ட்யூபிங்கன் பல்கலைக்கழகத்தில் உபகாரச் சம்பளம் பெற்று படிக்கும் நல்வாய்ப்பையும் இவர் பெற்றார்.

    jk1
    கெப்லர் வாழ்க்கை குறிப்பு

    இத்தருணத்தில் தான் யொஹான்னஸின் தந்தை யாரிடமும் சொல்லாமல் தன் வீட்டிலிருந்து வெளியேறி ஆஸ்திரிய நாட்டின் படையில் தன்னை இணைத்துக் கொண்டார். அப்போது துருக்கிக்கு எதிராக போர் நிகழ்ந்து கொண்டிருந்தமையால் அதற்குப் படையில் உழைக்க ஆட்கள் தேவைப்பட, வீட்டில் சொல்லாமலேயே புறப்பட்டு போய்விட்டார் ஹென்ரிக். தந்தையை இழந்தாலும் யொஹான்னஸின் கல்வி முயற்சிகள் பாதிப்படையவில்லை. தமது 20 வயதிற்குள்ளேயே பல்கலைக்கழத்தில் பட்டம் பெற்று சிறந்த ஆய்வாளராக உருவாகிக் கொண்டிருந்தார் யொஹான்னஸ்.

    வின்வெளி ஆராய்ச்சி, சோதிட ஆராய்ச்சி இவையிரண்டும் தனித்தனி துறைகளாக வளர்ந்து கொண்டிருந்த காலகட்டம் அது. இந்த இரண்டு துறைகளிலும் தக்க பாண்டித்தியம் பெற்றிருந்தார் யொஹான்னஸ். 17ம் நூற்றாண்டின் உலகின் தலைச் சிறந்த அறிவியல் ஆய்வாளர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர் யொஹான்னஸ். அறிவியல் புரட்சிக்கு வித்திட்ட மிக முக்கியமானவர்களில் ஒருவர் இவர் என்பதும் மறுக்கப்பட முடியாத உண்மை. இவரது ஆய்வின் கண்டுபிடிப்புக்களான Mysterium cosmographicum, Astronomia nova, Harmonice Mundi அனைத்துமே மிக முக்கிய அறிவியல் ஆய்வுகளின் பட்டியலில் இடம் பெறுபவையாக அமைகின்றன. வானியல் துறை நிபுணராக இருந்தாலும் ஜோதிட குறிப்புக்களைக் கணித்துக் கொடுக்கும் வழக்கத்தையும் தொழிலாகவும் இவர் செய்து வந்தார். இந்த ஜோதிடக் கணிப்பு செய்யும் வேலையே இவரது ஜீவனத்துக்கும் வழியாக சில காலங்கள் அமைந்தது.

    jk4
    16ம் நூற்றாண்டு லத்தின் மொழி வகுப்பு – பள்ளி வகுப்பறை

    வானியல் ஆய்வுக் கோட்பாடுகளை வெளியிட்டு யொஹான்னஸ் அறிவியல் புரட்சி செய்யத் தொடங்கியிருந்த சமயத்தில் தான் இவரது தாயாரின் தொடர்பில் ஒரு பிரச்சனை எழுந்தது. ஒரு சிறிய பூசலில் இவரது தாயாரை அக்கிராமத்துப் பெண் ஒருவர் விஷம் கொடுத்து இவர் கொல்லப்பார்க்கின்றார் எனக் குற்றம் சாட்ட அது அப்போதைய அரசுக்கு தெரியப்படுத்தப்பட்டு காத்தரினா ஒரு விட்ச் என வழக்காடு மன்றத்தில் அறிவிக்கப்பட்டு அவர் சிறைப்படுத்தப்பட்டார். இது 1620 ஆண்டு நடந்தது. மூலிகை தாவரங்களை உடல் நோய் தீர்க்க உபயோகித்தல், நாட்டு வைத்திய மருந்து தயாரித்தல், அதனை பிறருக்கு கொடுத்து சோதித்தல், நோயை இத்தகைய மூலிகைகளைக் கொண்டு குணமாக்க முயற்சி செய்தல் போன்றவை அக்காலத்தில் மிகக் கடினமான தண்டனைக்கு உட்படுத்தக்கூடிய சட்டமாக இருந்தது. இப்படி செய்வோர் விட்ச் என அறிவிக்கப்பட்டு வழக்கு பதியப்பட்டு குற்றம் நிரூபிக்கப்பட்டால் தண்டனை கிடைப்பது வழக்கம். தண்டனைகள் பொதுவாக உயிருடன் எரித்துக் கொல்வது அல்லது இவர்களை ஒரு மரத்தில் வைத்து கட்டி ஓடும் ஆற்று வெள்ளத்தில் தூக்கிப் போட்டு விடுவது என்பதாக இருக்கும்.

    jk3 (1)

    16ம் நூற்றாண்டு லத்தீன் வகுப்பில் மாணர்கள் ஆசிரியரிடம் பாடம் கேட்பதைக் காட்டும் ஓவியம்

    ஆக தன் தாய்க்கு எதிராக தொடரப்பட்டிருக்கும் வழக்கைப் பற்றி அறிந்து, இதனைக் கேள்விப்பட்டு பதைத்துப் போய் யோஹான்னஸ் லின்ஸ் நகரில் தான் மேற்கொண்டிருந்த ஆராய்ச்சிப் பணிகளை விட்டு வைல் டெர் ஸ்டாட் நகருக்கு திரும்பி வந்து தனது தாயாரை குற்றத்திலிருந்து விடுவிக்க முயற்சிகள் மேற்கொண்டார். தனது பல்கலைக்கழக நண்பர் கிறிஸ்தஃபர் பெசோல்டஸின் உதவியால் தனது தாயார் மூலிகை மருந்து தயாரித்து விஷம் கொடுத்து கொல்லும் விட்ச் அல்ல என நிரூபித்து அவருக்கு தண்டனையிலிருந்து விடுதலையும் பெற்று தந்தார். ஏறக்குறைய ஓராண்டுகள் இந்த வழக்கு நடைபெற்று அதாவது 1621ம் ஆண்டு தண்டனையிலிருந்து விடுதலை செய்யப்பட்டு சிறையிலிருந்து வெளியே வந்தார் கத்தரீனா. ஆயினும் பல மனக் குழப்பங்கள் இவருக்கு நீடித்துக் கொண்டிருந்ததால் அடுத்த ஆண்டே இவர் இறந்தார் என்றும் அறிகின்றோம்.

    யோஹான்னஸ் கெப்லெர் அறிவியல் உலகுக்கு அளித்த கொடைகள் ஏராளம் என்றாலும் தனது வாழ் நாள் முழுமைக்கும் வருமையிலே தான் அவரது வாழ்க்கை நிலை அமைந்தது.

    தொடரும்..

    குறிப்புகள்

    Share
  • 34. அருங்காட்சி​யகம் ஓர் அறிவுக் கருவூலம்!

     யொஹான்னஸ் கெப்லர் அருங்காட்சியகம், வைல் டெர் ஸ்டாட், ஜெர்மனி

    சுபாஷிணி ட்ரெம்மல்​

    நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் வின்கலங்களில் ஒன்றின் பெயர் கெப்லர்-22பி. வின்வெளி ஆராய்ச்சியில் புதிய தடம் பதித்து புதிய பாதையை வகுத்த ஜெர்மானியரான யோஹான்னஸ் கெப்லரின் ஞாபகார்த்தமாகவும், அவரது ஆய்வுகளைச் சிறப்பிப்பதற்காகவும் பூமியைப் போல ஏனைய வின்மீண்களைச் சுற்றி வரும் ஒரு வின்கலனுக்குக் கெப்லரின் பெயர் வழங்கப்பட்டது.

     k5

    யோஹான்னஸ் கெப்லர் அருங்காட்சியகத்தில் அவரது உருவச் சித்திரத்துடன் (ஜூலை 2014)​

    இத்தகைய சிறப்பு பெறும்  கெப்லர் யார் என்பதை அறிய நமக்கு ஆர்வம் இருக்கும் அல்லவா? அதனை அறிந்து கொள்ள இன்றைய அருங்காட்சியகப் பதிவில் உங்களுக்கு  நான் அறிமுகப்படுத்தவிருப்பது ஜெர்மனியின் பாடன் உர்ட்டென்பெர்க் மாநிலத்தில் இருக்கும் ஒரு சிறு கிராமமான வைல் டெர் ஸ்டாட் மாநிலத்தில் இருக்கும் யொஹான்னஸ் கெப்லர் அருங்காட்சியகமே. இந்த அருங்காட்சியகம் வார நாட்களில் சில குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே பார்வையாளர்களுக்காகத் திறக்கபப்ட்டிருக்கும். ஆகையால் அருங்காட்சியக வலைப்பக்கத்தில் திறக்கும் நேரத்தை அறிந்து இங்கு சென்று வருவது நல்லது.

    கணித மேதை, வின்வெளி ஆய்வாளர் என்ற சிறப்புக்களுக்கு மட்டும் உரியவரல்ல கெப்லர். வானியல் ஆய்வில் மிக முக்கிய திருப்பு முனையை வழங்கிய மூன்று கோட்பாடுகளைத் தனது ஆய்வின் தெளிவாகக் கண்டு உலகுக்கு வழங்கிய பெருமை இவருக்கு உண்டு. 1609 லிருந்து 1619 வரையிலான காலகட்டங்களில் இவர் வெளியிட்ட மூன்று வானவியல் ஆய்வுக் கோட்பாடுகள் இத்துறை ஆய்வுகளுக்குப் புதிய பாதையை அமைத்துக் கொடுத்தன. இது மட்டுமல்லாது. கணிதத்துறையிலும் வெவ்வேறு பல துறைகளிலும் குறிப்பிடத்தக்க முத்திரைப் பதித்த ஒரு பன்முக ஆளுமை யொஹான்னஸ் கெப்லர்.

     k4

    ​யோஹான்னஸ் கெப்லரின் கண்டுபிடிப்பு – டெலிஸ்கோப் (ஜூலை 2014)

    யோஹான்னஸ் கெப்லர் பிறந்து வளர்ந்த கால கட்டத்தில் அறிவியல் உலக ஆய்வாளர்கள், ஏனைய கோள்கள் அனைத்தும் பூமியைச் சுற்றி வருவன என்ற சிந்தனையைக் கொண்டிருந்தனர். சூரியனை மையமாக கொண்டு  இயங்குவது இந்த வான்வெளி என்ற சிந்தனை அப்போது பிறக்காத காலம். இந்த காலகட்டத்தில் தான் கெப்லர் தன் ஆய்வின் வழி, பூமியோடு ஏனைய கோள்களும் சூரியனைத் தான் சுற்றி வருகின்றன என்ற விஞ்ஞான உண்மையைக் கண்டுபிடித்து உலகுக்கு கொடுத்தவர் என்பதை நிச்சயம் நாம் நினைவு கூற வேண்டும்.

    இந்தச் சிந்தனையை முன்வைத்து அறிவியல் ஆய்வு உலகத்தை ஏற்க வைப்பது என்பது மிகச் சாதாரண விஷயம் அல்ல.. அதிலும் அந்த 17ம் நூற்றாண்டில்! ஆயினும் தனது விடா முயற்சியாலும் கடுமையான தொடர் ஆய்வுகளின் வழியாகவும் நிறைந்த சான்றுகளின் வழியும் இந்த உண்மையை உலகுக்குப் புலப்படுத்தினார் கெப்லர்.  இது மட்டுமன்று. கோள்கள் சூரியனைச் சுற்றி பயணித்துச் செல்லும் பாதை  முழுமையான வட்ட வடிவ பாதையல்ல என்ற உண்மையையும் தன் ஆய்வுகளின் வழி கண்டறிந்து நிறுவிய பெருமையும் கெப்லரையே சாரும்.

    k3

    கெப்லரின் ஆய்வுக் குறிப்புக்கள் அடங்கிய நூல் 17ம் நூற்றாண்டு வெளியீடு

    வைல் டெர் ஸ்டாட் ஒரு பசுமை அழகு நிறைந்த ஒரு  சிறு கிராமம். இக்கிராமத்தில் 1571ம் ஆண்டு டிசம்பர் மாதம் 27ம் நாள் யொஹான்னஸ் கெப்லர் பிறந்தார். வருமையான குடும்ப சூழலில் வளர்ந்தவர் திரு.கெப்லர். இளம் வயதிலே கல்வியில் நல்ல ஆர்வம் உள்ளவர் இவர். அருகாமையில் இருக்கும் ட்யூபிங்கன் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்க இவருக்கு  உபகாரச் சம்பளம் கிடைத்தது. இந்தப் பல்கலைக்கழக வாழ்க்கையின் போது நிக்கோலஸ் கோப்பர்னிக்கஸ் அவர்களின் ஆய்வுக் குறிப்புக்களையெல்லாம் ஆர்வத்தோடு படித்து கோள்களைப் பற்றிய ஆய்வுகளில் தம்மை தீவிரமாக இவர் ஈடுபடுத்திக் கொண்டார்.

    ​1596ம் ஆண்டில் கெப்லர் தனது மு​தல்  ஆய்வுப் படைப்பை முன் வைத்தார். இது காப்பர் நிக்கஸ் கட்டளை தொடர்பான ஒரு ஆய்வு. இது ஜெர்மனியில் மட்டுமன்று, ஐரோப்பாவின் ஏனைய பகுதிகளிலும் மார்ட்டின் லூதர் ஏற்படுத்தி விட்டிருந்த பயங்கர கருத்தலைக ​ள்​ எழுந்து கொந்தளித்துக் கொண்டிருந்த காலகட்டம் அது. 1539ம் ஆண்டில் தான்  மார்ட்டின் லூதர் கத்தோலிக்க மதத்திதிற்கு எதிரான தனது கருத்துக்களை வெளியிட்டார். அக்கால கட்டத்தில் லூதருக்கு ஆதரவாக டேனீஷ் அரசு செயல்பட்டத்து. லூதரின் கருத்துக்கள் பரவ குழுக்கள் ஆங்காங்கே உருவாகி முயற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தன.  மார்ட்டின் லூதரின் புதிய கருத்தாக்கம் உருவாக்கிய சிந்தனை மாற்றத்தை ஏற்றுக் கொள்ள இயலாது தத்தளித்துக் கொண்டிருந்த கத்தோலிக்க மத ஆதிக்க சக்திகள் கெப்லர் அடுத்தடுத்து ​வெளியிட்ட கண்டுபிடிப்புக்களை ஏற்றுக்கொள்வதில் ​த​டைகளை முன் வைத்தன என்ற போதிலும் ஆய்வுத் திறமையினால் ஏனைய ஆய்வாளர்களின் நம்பிக்கைக்கும் பாத்திரமானவராகத் திகழ்ந்தார் கெப்லர்​.

    k2

    ​ட்யூபிங்கன் கிராமம் – கோப்பர்னிக்கஸ் உருவச் சித்திரம்

    இந்தக் காலகட்டத்தில் தான் மூலிகை மருத்துவத்தில் ஈடுபட்டு மக்களுக்கு நோய் தீர்க்கும் முயற்சியில் ஈடுபட உழைத்த அறிவார்ந்த முறையில் செயல்பட்ட பெண்களை  Witches  என்று சொல்லி அவர்களை உயிரோடு எரிக்கும் கொடூரமான ஒரு பழக்கமும் ஐரோப்பாவில் நடைமுறையில் இருந்தது. கெப்லரின் தாயாரும் இப்படி ஒரு விட்ச் என்று அடையாளம் காணப்பட்டு தண்டனைக்கு உள்ளாக்கப்படும் சூழ்னிலை எழுந்தது என்பதும் ஆச்சரியமான ஒரு உண்மை. அவருக்கு என்ன நேர்ந்தது.. கெப்லரின் கண்டுபிடிப்புக்கள் .. அவரது குடும்ப வாழ்க்கை, பயணங்கள் பற்றி அடுத்த பகுதியில் காண்போம்.

    தொடரும்…

    Share
  • அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்! (33)

    அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்! பெரானாக்கான் அருங்காட்சியகம்(2), சிங்கப்பூர்

     

     

    சுபாஷிணி ட்ரெம்மல்

    ​மலேசியா-சிங்கை வாழ் மக்களைத் தவிர ​பெரானாக்கான் சமூகத்தைப் பற்றி ஏனைய பலர் அறிந்திருக்க அதிகம் வாய்ப்பில்லை. இந்தச் சமூகம் ​மலேசியா-சிங்கை கடல் வணிகப் பகுதியை மையமாகக் கொண்ட நிலப்பகுதியில் மட்டுமே அதிகமாக உருவாகி வளர்ந்த ஒரு சமூகம் என்பதே இவர்களின் தனித்துவம்.

    14ம் நூற்றாண்டின் இறுதிக்குப் பின் படிப்படியாக 15ம் நூற்றாண்டில் அன்றைய மலாயாவின் வர்த்தக மையமாக மலாக்கா வளர்ச்சியுற்றது. அரேபிய வணிகர்கள், சீன வணிகர்கள் என இப்பகுதிக்கு வந்து செல்லும் வேற்று நாட்டினர் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கிய காலகட்டமது. சோழ சாம்ராஜ்ஜியம் மலாக்காவுக்கு மேலே வடக்கு மானிலத்தில் கடாரத்தில் மையமிட்டு மலாயா தீபகற்பம் முழுமைக்கும் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக, அதாவது 9ம் நூற்றாண்டு முதல் 10ம் நூற்றாண்டு ஆரம்பம் வரை ஹிந்து சமயப் பின்னனியுடன் அமைந்த ஒரு சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியிருந்தது. இந்தோனேசிய தீவுகளில் ஆட்சி செய்த ஸ்ரீவிஜயா மன்னர்களும் ஹிந்து சமயம் தழுவி ஹிந்து சமய சாம்ராஜ்ஜியத்தை நடத்தி வந்த காலம் அது.

    பினாங்கு, மலாக்கா, சிங்கை ஆகிய பகுதிகளில் பெரானாக்கான் மக்களின் குடியிருப்பைக் காட்டும் வரைபடம் பினாங்கு, மலாக்கா, சிங்கை ஆகிய பகுதிகளில் பெரானாக்கான் மக்களின் குடியிருப்பைக் காட்டும் வரைபடம்

    ஆயினும் 11ம் நூற்றாண்டில் மலாயா தீபகற்பம் வந்த அரேபியர்களின் தாக்கத்தால் மலாயா இஸ்லாமிய நாடாக கொஞ்சம் கொஞ்சமாக மாற்றம் கண்டு கொண்டிருந்தது. கடாரப் பகுதியில் அரச பரம்பரையினர் 12ம் நூற்றாண்டு வாக்கில் இஸ்லாமிய மதத்தைத் தழுவி இஸ்லாமிய சமயம் சார்ந்த அரசாட்சி செலுத்திக் கொண்டிருந்தனர். ஆயினும் அவர்களது ஆட்சி என்பது மலாயா முழுமைக்கும் என்றில்லாது இன்றைய பெர்லிஸ், கெடா, பினாங்கு ஆகிய பகுதிகளில் அடங்கியதாக மட்டுமே இருந்தது.

    15ம் நூற்றாண்டு மலேசிய வரலாற்றில் மிக முக்கியமாகக் கருதப்படுவது. அதுவே ஆங்கிலேய ஆட்சிக்கு முந்தைய ஒரு மலாய் அரசாட்சியின் தொடக்ககாலம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மலாய் ஆட்சிக்கு வித்திட்டவர் பரமேஸ்வரா.

    சிங்கபுரம் என்ற சிங்கப்பூரை ஆட்சி செய்து கொண்டிருந்த ஸ்ரீ மஹாராஜாவிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டு அவரது மகன் பரமேஸ்வரா (1344-1414) தனது ஆட்சியைத் தொடங்கினார். இது நிகழ்ந்த ஆண்டு 1389. அடுத்த பத்து ஆண்டுகளில் இந்தோனேசிய தீவுகளில் ஒன்றான மஜபாஹிட் தீவில் தனியாட்சி செய்து வந்த ஒரு குழு சிங்கப்பூர் தீவைக் கைப்பற்ற செய்த முயற்சியில் அத்தீவு அவர்கள் வசம் விழ, பரமேஸ்வரா தனது ஆதரவாளர்கள் சிலருடன் தப்பித்து மலாயாவின் மெர்போக் நதிக்கரைக்கு அருகில் உள்ள ஒரு பகுதிக்கு கடல் மார்க்கமாக வந்து சேர்கின்றார். மலாக்கா பசுமை வளம் நிறைந்த கடற்கரை பகுதி நகரம். இத்தகைய அருமையான பகுதியில் தலைமைத்துவம் இன்றி இருக்கும் அப்பகுதிக்கு தானே தன்னை தலைவனாக்கிக் கொண்டு பின்னர் மன்னராக முடிசூட்டிக் கொண்டு அங்கே மலாக்காவின் அரச பரம்பரைக்கு ஒரு தொடக்கத்தை வைக்கின்றார் பரமேஸ்வரா

    பரமேஸ்வரா பின்னர் வணிக நோக்கத்துடன் மலாக்கா வரும் பெர்ஷிய குழுவினருடன் அணுக்கமான உறவினை வளர்க்கும் பொருட்டு பெர்ஷிய இளவரசி ஒருவரை மணந்து பின்னர் இஸ்லாமிய மதத்தையும் தழுவுகின்றார். தன் பெயரையும் ஸ்ரீ இஷ்கந்தர் ஷா என மாற்றிக் கொள்கின்றார். இதுவே மலாயா அதிகாரப்பூர்வமாக ஒரு இஸ்லாமிய மதம் சார்ந்த நாடாக உருவாகக் காரணமாக அமைந்த முக்கியச் சம்பவம்.

    அதன் பின்னர் சீனாவுடன் சிறந்த வர்த்தகத் தொடர்பை ஏற்படுத்திக் கொள்கிறார் பரமேஸ்வரா. இதன் பொருட்டு சீனாவில் ஒரு பகுதியின் அரச குடும்பத்துடன் தொடர்பு வைத்துக் கொண்டு இளவரசி ஹங் லீ போவை திருமணம் செய்கிறார். சீனாவிற்கும் வர்த்தகத்தை விரிவாக்கும் பொருட்டு கடல் பயணம் செய்தவர் இவர்.

    இக்கால கட்டத்தில் சீனாவிலிருந்து மலாக்காவிற்கு வந்து சேரும் வர்த்தகக் குழுவினரில் பலர் உள்ளூரிலேயே தங்கிவிட அவர்களில் பலரும் படிப்படியாக உள்ளூர் மக்களை மணந்து அங்கேயே ஒரு புதிய இன உருவாக்கத்திற்கு அடித்தளம் அமைக்கின்றனர். இதுவே பெரானாக்கான் சமூகம் உருவான சரித்திரம்.

    ​பெரானாக்கான் இனமக்கள் - ஒரு குடும்பப் படம்: பாரம்பரிய உடையில்
    ​பெரானாக்கான் இனமக்கள் – ஒரு குடும்பப் படம்: பாரம்பரிய உடையில்

    இப்படி உருவான பெரானாக்கன் சமூகத்தினர் குறிப்பாக மலாக்காவிலும் அதற்கடுத்த வகையில் சிங்கையிலும் பினாங்கிலும் மட்டுமே குடியிருந்தனர். கடல் வணிகம் என்பது முக்கியமாக மையம் கொண்டிருந்த துறைமுகப் பகுதிகள் இவை மூன்றும் என்பதை இங்கு குறிப்பிட வேண்டும். மலாக்கா அரச குடும்பத்தின்அரது ஆதரவும் இம்மக்களுக்கு அமைந்திருந்தது. அடிப்படையிலேயே வர்த்தகமே இச்சமூகத்தினரின் அடிப்படை தொழிலாக அமைந்ததால் இச்சமூகத்தினர் ஆரம்ப காலம் தொட்டு செல்வச் செழிப்புடன் வாழும் சமூகமாகத் திகழ்கின்றனர்.

    சீன ஹொக்கிய சமூகம் மலாய் இன மக்களோடு திருமண உறவின் வழி கலந்ததின் விளைவாக உணவு, உடை, பேச்சு மொழி ஆகியன மலாய் அடிப்படையிலும் மருத்துவம், பெயர், கலாச்சாரம், பண்பாடு , திருவிழாக்கள் ஆகியன சீன சமூகத்தின் வழக்கத்தின் அடிப்படையிலும் அமைந்திருப்பவை. இவர்களது சமயம் சீனாவில் பாரம்பரியமாக இவரகள் வழிபாட்டு சமயமாக அமைந்த தாவோயிஸம். சிலர் புத்த மத வழிபாடும், கிறிஸ்துவர்களாக மதம் மாறியோர் சிலர் கிறிஸ்துவ மதத்தைப் பின்பற்றுவோராகவும் இருக்கின்றனர். திருமணச் சடங்குகள் எனும் போது அது சீன பாரம்பரியத் திருமணச் சடங்கு முறையை அடிப்படையாகக் கொண்டதாகவே அமைந்துள்ளது.

    ​சிங்கையில் உள்ள பெரானாக்கான் அருங்காட்சியகம் செல்லும் போது படங்களுடன் இம்மக்களைப் பற்றிய மேலும் பல தகவல்களை வருகையாளர்கள் அறிந்து கொள்ளலாம். இந்த அருங்காட்சியகம் வாரத்தின் ஏழு நாட்களும் திறந்திருக்கும். இந்த அருங்காட்சியகத்தின் அதிகாரப்பூர்வ வலைப்பக்கத்தை இங்கு காணலாம் http://www.peranakanmuseum.org.sg/. சிங்கை செல்பவர்கள் சென்று கண்டு வர வேண்டிய அருங்காட்சியகங்களின் பட்டியலில் இடம்பெற வேண்டிய ஒரு அருங்காட்சியகம் இது.

    இத்தொடரின் எனது அடுத்த பதிவில் வேறொரு நாட்டில் மற்றுமொரு அருங்காட்சியகத்திற்கு உங்களை அழைத்துச் செல்கிறேன். காத்திருங்கள்..!

    தொடரும்

    Share
  • அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்! பெரானாக்கான் அருங்காட்சியகம், சிங்கப்பூர் – 32

    சுபாஷிணி ட்ரெம்மல்

    மலாயா இந்தோனேசிய நாடுகளுக்கு உலகின் பல பகுதிகளிலிருந்தும் மக்கள் குடியேற்றம் என்பது தொடர்ந்து நிகழ்ந்து வருவது. இதில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் பல்லாண்டுகளாகப் பல காலகட்டங்களில் இந்தியாவிலிருந்தும் சீனாவிலிருந்தும் மக்கள் குடியேற்றம் என்பது நிகழ்ந்துள்ளது.

    சீனர்களின் வர்த்தக ஈடுபாடு அவர்கள் உலக உருண்டையின் பல பகுதிகளுக்குச் செல்ல உந்துதலாக அமைந்தது. மலாயா தீபகற்பத்திற்குச் சீனர்களின் குடியேற்றம் என்பது பல காலகட்டங்களில் நிகழ்ந்திருக்கின்றது. சீனாவின் பல்வேறு நிலப்பகுதிகளிலிருந்து மக்கள் வியாபாரம் செய்யும் நோக்கத்துடனும், உழைத்துப் பொருள் சேர்க்கும் நோக்கத்துடனும் இப்பகுதிகளுக்குப் புதிய வாழ்வை தேடி வந்திருக்கின்றனர். அப்படி வந்தவர்களில், அதிலும் குறிப்பாக 15ம் நூற்றாண்டு தொடக்கம் மலாக்கா சிங்கை ஆகிய பகுதிகளில் வந்து குடியேறியோர் தனித் தன்மை வாய்ந்தவர்களாகக் கருதப் படுகின்றனர்.

    மலேசியாவைப் பொருத்தவரை சீனர்களில் பெரும்பாலானோர் ஹொக்கியான் இனக்குழுவைச் சார்ந்தவர்கள். இதற்கு அடுத்தார்போல அமைவது தியோச்சூ, கண்டனீஸ் இனக்குழு மக்கள்.

    ​மலேசியா சிங்கை ஆகிய இருநாடுகளும் இரு தனி நாடுகள் என்ற போதும் ​சிங்கப்பூர் ​மலாயா மக்களால் அன்றும் மலேசிய மக்களால் இன்றும் பிரித்துப் பார்க்க முடியாத வகையிலேயே இணைந்தே காணப்படும் நிலை உள்ளது. ஒரு வகையில் சிங்கை மலாயாவின் ஒரு பகுதியாகவே 1965ம் ஆண்டு வரை கருதப்பட்டது. மலாயா சுதந்திரம் பெற்ற போது ஆங்கிலேய காலணித்துவ ஆட்சியில் இடம்பெறுவது தொடர்ந்து, அதன் பின்னர் ஆங்கிலேயர்களிடமிருந்து விடுபட்டு 1963ம் ஆண்டு சுதந்திர மலேசியாவுடன் ​சிங்கப்பூர் ​இணைந்தாலும் இந்த நிலை நெடுநாட்கள் நீடிக்கவில்லை. 1965ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மலேசியாவிலிருந்து பிரிந்து தனி நாடாகத் தன்னை பிரகட​ன​ப்படுத்திக் கொண்டது சிங்கப்பூர். மலேசிய மக்கள் போலவே சிங்கையின் மக்கள் தொகையில் மலாய், சீன, இந்திய வம்சாவளியினர் பெரும்பான்மையினராக அங்கம் வகிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இன்று நான் அறிமுகம் செய்யும் அருங்காட்சியகம் ​பெரானாக்கன் என அறியப்படும் ​ஒரு குறிப்பிட்ட இன மக்களின் வாழ்வியல் விஷயங்களைச் சேகரித்து வைத்துள்ள ​ ​ஓர் அருங்காட்சியகம்.

    பெரானாக்கன் அருங்காட்சியகம்
    பெரானாக்கன் அருங்காட்சியகம்

    சிங்கையில் அமைந்திருக்கும் இந்த பெரானாக்கன் அருங்காட்சியகம் பெரானாக்கான் எனப்படும் பாபா-ஞோஞ்ஞா (baba-Nyonya) மக்களின் வாழ்க்கை முறையை விவரிக்கும் ஒரு அருங்காட்சியகம். இது சிங்கை நகரி ​ன் மையத்தில் முக்கியப் பகுதியில் அதிலும் குறிப்பாக சிங்கை நேஷனல் அருங்காட்சியகம், ஆர்க்கைவ் ஆகியவை உள்ள​ பகுதியில் அமைந்திருக்கின்றது. ​வெளிப்புரத்தில் காலணித்துவ ஆட்சியின் கட்டிட கட்டுமான வடிவத்தை கொண்டு அமைந்திருக்கும் இக்கட்டிடம் உள்ளே ​ கண்ணைக் கவரும் வர்ணங்களில் ஆன அலங்கார​ங்களையும் அரும்பொருட்களின் சேகரிப்புக்களையும் கொண்டுள்ளது. ​ இந்த அருங்காட்சியகம் அடிப்படையில் 1912ம் ஆண்டு தாவ் நான் சீன ​ப்​ பள்ளியை மாற்றி உருவாக்கப்பட்டது. 2005ம் ஆண்டு நான் சிங்கை சென்றிருந்த சமயம் இந்த அருங்காட்சியகம் சென்று பார்த்து வரும் வாய்ப்பு எனக்கு அமைந்தது.

    பாபா என்பது இவ்வினத்து ஆண்களைக் குறிக்கவும், ஞோஞ்ஞா என்பது இவ்வினத்துப் பெண்களைக் குறிக்கவும் பயன்பாட்டில் உள்ள சொல். சீன ஹொக்கியன் சமூகத்தைச் சேர்ந்த இம்மக்கள் தாம் புதிதாக வந்து குடியேறிய மலாயாவில் அங்கிருந்த உள்ளூர் மக்களின் மொழி, பழக்க வழக்கங்களை உள்வாங்கிக் கொண்டும் உள்ளூரில் ​திருமணம் புரிந்து கொண்டும் உள்ளூர் மக்களோடு மக்களாக கலந்து போனவர்கள். இம்மக்களின் முகச் சாயலில் மலாய் சீன இரு ​சமூகங்களின் ​இனக்கலப்பும் மிக நன்கு தெரியும். பொதுவாக வெளிர் மஞ்சள் நிறத்தவர்கள் இவர்கள்.

    ​பெரானாக்கன் சமூகத்தினர் பயன்படுத்தும் நாற்காலி, கட்டில்கள்
    ​பெரானாக்கன் சமூகத்தினர் பயன்படுத்தும் நாற்காலி, கட்டில்கள்

    ​ஆச்சரியப்படத்தக்க வகையில் ​இவர்கள் சீனர்களிடமிருந்து, அதிலும் குறிப்பாக ஹொக்கியான் சமூகத்து சீனர்களிடமிருந்து முற்றிலும் மாறுபட்ட வகையில் ஒரு புதிய சமூகமாக உருவானவர்கள் என்பதே இவர்களின் தனிச்சிறப்பு.

    சீன மொழியில் ஒன்றான ஹொக்கியான் மொழியின் சொற்கள் கலந்த மலாய் மொழியின் ஒரு வடிவம் இவர்கள் பேசும் மொழி. இம்மொழி இப்போது பயன்பாட்டில் மிகக் குறைந்து வருகின்ற போதிலும் இன்னமும் இல்லங்களில் பெரானாக்கான் சமூக மக்களின் அன்றாட பயன்பாட்டில் இருக்கத்தான் செய்கின்றது.

    உணவுப் பாத்திரங்கள்
    உணவுப் பாத்திரங்கள்

    மலேசியாவின் மலாக்கா மானிலத்தி​ன் ​மலாக்கா நகரில் பெரானாக்கன் அருங்காட்சியகம் ஒன்று உள்ளது. ​அங்கும் இவ்வகை சமூகத்தினர் ஏராளமானோர் இன்றளவும் வாழ்கின்றனர். அங்கிருக்கும் அருங்காட்சியகத்தைவிட பெரியதாக உள்ளது சிங்கையில் இருக்கும் இந்த பெரானாக்கான் அருங்காட்சியகம். இங்கு பாபா-ஞோஞ்ஞா சமூகத்தினரின் புகைப்படங்கள் சில உள்ளன. திருமணச் சடங்குகளைக் காட்டும் புகைப்படங்கள், சமூக நிகழ்ச்சிகளைக் காட்டும் புகைப்படங்கள் ஆகியனவாக இவை அமைந்திருக்கின்றன. அதில் குறிப்பாக ஆண் பெண் உடைகள், திருமண உடைகள், விழாக்களில் எடுத்த புகைப்படங்கள் என இங்குள்ள சேகரிப்புக்கள் இம்மக்களின் உருவத்தோற்றம், உடையலங்காரம் ஆகியனவற்றைப் பிரதிபலிப்பதாக அமைந்திருக்கின்றன.

    தொடரும்…

    Share
  • அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்! (31)

    31. அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்! மூஸியோ டி செரா(2), மட்ரிட், ஸ்பெயின்

    சுபாஷிணி ட்ரெம்மல்

    ​மெழுகுச் சிலைகளில் பிரபலமான அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் ஆகியோரின் உருவத்தை வடித்து வைத்து ​இதனைக் காட்சிக்கு வைப்பதே இத்தகைய அருங்காட்சியகங்களின் முக்கிய நோக்கம். ஒவ்வொரு நாட்டின் சூழலிலும் அங்கே பிரபலமாகக் கருதப்படுவோர் இந்த உருவச் சிலை வடிவங்களில் இடம்பெறுகின்றனர். உலகப் பிரசித்தி பெற்ற மனிதர்களின் சிலைகளை உருவாக்கும் அதேவேளை உள்ளூர் அரசியல், சினிமா, சமூக, வரலாற்று நிகழ்வுகளில் முக்கியப் பங்கெடுத்தோர் இத்தகைய மெழுகு உருவச் சிலைகளாக இவ்வகை அருங்காட்சியகக் கூடங்களில் காட்சிக்கு நிற்பர். அர்சியல் தலைவர்களில் ஒபாமா, தற்போது இத்தகைய அனேக மெழுகு அருங்காட்சியகங்களில் காட்சி தருகின்றார். நடிகர்களில் ஆஞ்சலினா ஜூலி அவர் கணவர் நடிகர் ப்ராட் பிட் இருவரும் இதே வகையில் நான் பார்த்த வேறு மெழுகு அருங்காட்சியகங்களிலும் காட்சியில் இருக்கின்றனர். இதே போல காந்தியும். இரண்டு வெவேறு அருங்காட்சியகங்களில் காந்தியின் மெழுகுச் சிலையப் பார்த்திருக்கின்றேன்.

    மூஸியோ டி செரா, காதலர் தினமாகக் கொண்டாடப்படும் பெப்ரவரி 14ம் தேதி 1972ம் ஆண்டு பொதுமக்களுக்காகத் திறக்கப்பட்டது. 2000 சதுர அடி விரிவான கட்டிடத்தில் இரண்டு மாடித்தளங்களில் இந்த அருங்காட்சியகக் கட்டிடம் அமைந்துளளது. எந்த அளவிற்கு வரலாற்று பிரபலங்களின் சிலைகள் இந்த அருங்காட்சியகத்தை அலங்கரிக்கின்றனவோ அதே அளவு பொழுது போக்கு அம்சங்களான காற்பந்து, சினிமா துறையைச் சார்ந்த பிரபலங்களின் சிலைகளும் இங்கு நிறைந்திருக்கின்றன.

    mc8
    பைரட் ஆஃப் கரீபியன் ​(ஜூலை 2013)

    பல பெண்களின் கனவு நாயகரான ஜோர்ஜ் க்ளூனி, ப்ராட் பிட் ஆகியோரும் இளைஞர்களின் கனவு தேவதைகளான ஆஞ்சலினா ஜூலி, பெனலோப் க்ரூஸ் போன்றோரும் இங்கு காட்சியளிக்கின்றனர். ஸ்பெயினில் இரண்டு உலகத் தரம் வாய்ந்த காற்பந்து குழுக்களான ரியால் மட்ரிட் குழுவின் பிரபலங்களும் எஃப்ஸி பார்ஸலோனா குழுவின் பிரபலங்களும் கூட இந்த அருங்காட்சியகத்தில் மெழுகு வடிவத்தில் உருவச் சிலைகளாக காட்சியளிக்கின்றனர்.

    சில பிரபலங்கள் தங்கள் உருவச் சிலைகள் தயாராகி இங்கு காட்சிக்கு வைக்கப்படும் நிகழ்வு நடைபெறும்போது நேரில் மூஸியோ டி செரா வந்து சிலை திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதும் நடக்கின்றது. உதாரணமாக ரியால் மட்ரிட் காற்பந்து குழுவில் பிரபலமான போர்த்துக்கீஸியரான ரொனால்டோ, தனது உருவச் சிலை இந்த அருஙகட்சியகத்தில் இடம் பெறத் தயாரான வேளையில் அந்த நிகழ்வுக்கு நேரடியாக வந்து இவ்விழாவைச் சிறப்பு செய்தார் என்ற செய்தியையும் இணையத்தில் காணலாம்.

     mc6

    அமெரிக்க ஜனாதிபதிகள் ​(ஜூலை 2013)


    ​​
    மெழுகுச் சிலைகள்​ (Wax sculptures) என நாம் அறிந்திருக்கும் இவ்வகை உருவச் சிலைகள் ஐரோப்பாவில் பண்டைய காலத்தில் அரச குடும்பத்தினரில் யாரேனும் இறக்கும் போது அவர்களை ஒத்த வடிவில் உருவம் அமைத்து மரியாதைச் செலுத்தும் நோக்கில் ஆரம்பகாலத்தில் உருவாகியது. மிகப் பழமையான இவ்வகை உருவச் சிலை எனத் தேடினால் இப்போது நமக்குக் கிடைப்பது இங்கிலாந்தின் லண்டன் நகரில் வெஸ்ட் மினிஸ்டர் அபேயில் இருக்கும் British royal wax effigies சேகரிப்புக்களைக் குறிப்பிடலாம். இதில் குறிப்பாக மன்னர் 3ம் எட்வர்ட் (1377) அவர்களின் மெழுகு உருவத்திலான உருவச் சிலையும் உள்ளது.

    ​19ம் நூர்றாண்டில் மேடம் தூஸோ ​(Madame Tussauds) இத்துறையில் மிகத் தீவிரமாக ஈடுபட்டவர். அவரது உருவாக்கங்களை காட்சிக்கு வைக்கும் வகையில் ஒரு அருங்காட்சியகத்தை அவர் நிறுவினார். அதுவே லண்டன் பேக்கர் ஸ்ட்ரீட்டில் இருக்கும் மேடம் தூஸோ மெழுகுச் சிலைஅருங்காட்சியகம். இங்கு நடப்பதற்குக் கூட இடம் கூட குறைவு. அந்த அளவிற்கு எல்லா பகௌதிகளையும் நிறைத்துக் கொண்டு இவ்வகை சிலைகள் நிறைந்திருக்கின்றன. மேடம் தூஸோ அவர்களின் பெயரிலேயே இங்கிலாந்து தவிர்த்த பல இடங்களில் மெழுகுச் சிலை அருங்காட்சியகங்கள் உருவாகின. சில தனியார், அல்லது அரசாங்க முயற்சிகளினால் உருவான இவ்வகை அருங்காட்சியகங்களும் உலகின் பல நாடுகளில் காணக்கிடைக்கின்றன.

    mc7
    தி லாச்ட் சப்பர் ​(ஜூலை 2013)

    நாம் விரும்பும் பிரபலங்களை நேரில் சந்திக்க வேண்டும், அவர்கள் அருகில் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்ளவேண்டும் என்று நினைத்து அது சாத்தியமல்ல என நினைக்கும் பலருக்கு இவ்வகை அருங்காட்சியகங்கள் மகிழ்ச்சி தருபவை. நேரில் இவ்வகை அருங்காட்சியகங்கள் செல்லும் போது மக்கள் ஆங்காங்கே தமக்குப் பிடித்தோரின் சிலைகளின் அருகில் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டு மகிழ்ச்சியாகச் செல்வதைக் கண்டு ரசிக்க முடியும். ஒரு வகையில் மக்களின் மகிழ்ச்சிக்காகத்தானே இவ்வகையிலான அருங்காட்சியகங்களும் அமைக்கப்படுகின்றன!

    இத்தகைய அருங்காட்சியகங்கள் சென்று வரும் போது பலரை ஒரே இடத்தில் பார்த்த ஒரு திருப்தியும் ஏற்படும் 🙂 அடுத்த பதிவில் உங்களை மற்றுமொரு நாட்டில் வேறொரு அருங்காட்சியகத்திற்கு அழைத்துச் செல்கின்றேன்.

    Share
  • அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்! (30)

    அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்! மூஸியோ டி செரா, மட்ரிட், ஸ்பெயின்

    சுபாஷிணி ட்ரெம்மல்

    ஸ்பெயின் நாட்டின் தலைநகரமான மட்ரிட்டில் அருங்காட்சியகங்களுக்குக் குறைவில்லை. முன்னர் மட்ரிட் நகரில் அமைந்திருக்கும் அருங்காட்சியகங்களை அறிமுகப்படுத்தும் ஒரு பதிவில் சற்றே விரிவாகவும் விளக்கமாகவும் பொதுவான அறிமுகமாக மட்ரிட் நகர அருங்காட்சியகங்கள் பற்றிய சில தகவல்களை வழங்கியிருந்தேன். இந்தப் பதிவில் மட்ரிட் நகரில் உள்ள மற்றொரு அருங்காட்சியகத்திற்கு வாசகர்களான உங்களை அழைத்துச் செல்கின்றேன்.

    இன்று நாம் செல்லவிருப்பது மட்ரின் நகரின் மையப் பகுதியில் அமைந்திருக்கும் மூஸியோ டி ஸெரா (Museo de Cera). வேக்ஸ் (மெழுகு) மூஸியம் என்றால் முதலில் நம் மணக்கண்னில் தோன்றுவது லண்டன் மாநகரில் இருக்கும் மேடம் தூஸோ வேக்ஸ் அருங்காட்சியகம் தான். ஆனால் லண்டனில் மட்டுமல்லாது உலகின் பல நாடுகளில் மெழுகினால் தயாரிக்கப்படும் உருவச் சிலைகள் இருக்கும் அருங்காட்சியகங்கள் பெருகி விட்டன. ஜெர்மனியின் தலைநகரான பெர்லின் நகரிலும் ஒரு மெழுகுச் சிலை அருங்காட்சியகம் இருக்கின்றது. இதே போல ஒன்று தான் மட்ரிட் நகரில் இருக்கும் இந்த மூஸியோ டி ஸெரா.

    mc1
    அறிஞர் குழுவின் சந்திப்பு ​(ஜூலை 2013)

    ஏறக்குறைய 450க்கும் மேற்பட்ட மெழுகு உருவச்சிலைகள் இந்த அருங்காட்சியகத்தில் நிறைந்திருக்கின்றன. ஸ்பெயின் முழுமைக்குமுள்ள இவ்வகை அருங்காட்சியகங்களில் அதிகம் மெழுகு உருவச் சிலைகள் நிறைந்த ஒரு அருங்காட்சியகம் என்றால் அது இது மட்டும் தான். நகரின் மத்தியிலேயே இருப்பதால் மெட்ரோ ஸ்டேஷனை விட்டு இறங்கியதுமே நேராக அருங்காட்சியகத்திற்குள் நுழைந்து விடலாம்.

    கட்டிட அமைப்பில் இந்த அருங்காட்சியகத்தை இரண்டு தளங்களாகப் பிரித்து அமைத்திருகின்றனர். முதலில் கட்டணம் செலுத்தி டிக்கட்டைப் பெற்றுக் கொண்டு வெளிவரும் போது நம்மை அழைத்துச் சென்று வழிகாட்ட சில ஊழியர்கள் இருக்கின்றனர். அருங்காட்சியகப் பகுதி மூன்று தனித்தனி பகுதிகளாக இருப்பதால் இந்த ஊழியர்களின் துணையோடு ஒவ்வொரு பகுதிக்கும் செல்வது சிறப்பு.
    அச்சமூட்டும் ஒரு ரயில் பயணம், வானவெளிப்பயண சிமியூலேட்டர், அதன் பின்னர் மெழுகுச் சிலைகள் அருங்காட்சியகம் என்ற வகையில் மூன்று தனிப்பகுதிகளைக் கொண்டிருக்கின்றது இந்த அருங்காட்சியகம்.

    நான் சென்ற போது முதலில் அச்சமூட்டும் ரயில் பயணம் உள்ள பகுதிக்குச் சென்று ரயிலில் பயணித்து குகைகளுக்குள் பயணம் செய்து காட்டு மிருகங்கள், பேய் பிசாசுகளின் உருவங்கள் போல செய்யப்பட்டிருந்த சிலைகளைப் பார்த்து ரசித்து முடித்து விட்டு பின்னர் வானவெளிப் பயண சிமியூலேட்டர் பயணம் மேற்கொண்டு இறுதியாக அருங்காட்சியகப் பகுதிக்கு வந்தேன்.

    mc2

    க்ளியோபாட்ரா (ஜூலை 2013)

    ரயில் பயணத்தில் ஏனைய பார்வையாளர்களுடன் பயணிக்கும் போது குழந்தைகள் அச்சத்துடனும் குதூகலத்துடனும் கூச்சலிட்டு சத்தம் போட்டு சிரித்து மகிழும் போது நாமும் அந்தக் குழந்தைகளோடு குழந்தைகளாகி அவர்களைப் போல குதூகலித்து மகிழலாம். அதே போல வானவெளி பயண சிமியூலேட்டர் வாகனத்தில் உட்கார்ந்து அந்த சிமியூலேட்டர் நம்மை அழைத்துச் செல்லும் போது உண்மையில் நிலத்தில் தான் ஒரு வாகனத்திற்குள் அமர்ந்து இருக்கின்றோம் என்பதை மறந்து வானத்தில் பறப்பது போலவும், பல வின்வெளிக் கப்பல்கள் நம்மை தாக்க வருவது போல வர அங்கிருந்து தப்பித்து செல்ல நாம் முயற்சி எடுப்பது போலவும் மனம் ஒன்றித்துப் போய் இயங்க ஆரம்பித்து விடுகின்றோம். 15 நிமிடம் நீடிக்கும் இந்தப் பயணம் முடிந்து வெளியே வந்தால் .. ஆஹா.. ஒரு கண்டத்திலிருந்து தப்பித்தோம் என்று சொல்லி பெருமூச்சு விட்டு மகிழும் நிலைமையை உணர்வோம். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்குத் திரும்பி .. அருங்காட்சியகம் பார்க்கத்தான் வந்திருக்கின்றோம். வானத்தில் வின்வெளிக் கப்பல் பயணம் மேற்கொள்ள அல்ல, என்பதை நம் மனம் நமக்கு ஞாபகப் படுத்தும் போது சிரித்துக் கொண்டே அடுத்தப் பகுதிக்குச் செல்வது தான் நிகழும்.

    மெழுகுச் சிலை அருங்காட்சியகப் பகுதி ஒவ்வொன்றும் ஒவ்வொரு கருப்பொருளுடன் உருவாக்கப்பட்டிருக்கின்றன. உள்ளே முதலில் நுழையும் போது நம்மை வரவேற்பவை எகிப்திய பண்டைய நாகரிகத்தை விவரிக்கும் காட்சிகளே. இங்கே க்ளியோபாட்ரா, ஜூலியஸ் சீஸர், மார்க் அண்டனி உருவச் சிலைகள் தத்ரூபமாக இவர்கள் நம் கண் முன்னே இருந்து காட்சியளிப்பது போன்று அமைத்திருக்கின்றனர். அதனை அடுத்ததாக அரேபிய வரலாறு சொல்லும் பகுதி, அதனைத் தொடர்ந்து ஸ்பெயின் நாட்டில் நிகழ்ந்த முக்கிய வரலாற்று நிகழ்வுகள் சிலவற்றை காட்சிப்படுத்திக் காட்டும் மெழுகுச் சிலைகள், அதன் கருப்பொருளை விளக்கும் வகையில் அமைக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

    mc3

    ​ஸ்பியின் அரச குடும்பம் (ஜூலை 2013)

    இந்த வரிசையில் நம் கண்களையும் கருத்தையும் கவரும் ஒரு பகுதி ஸ்பெயின் அரச குடும்பத்தினர் இருக்கும் ஒரு பகுதி. மன்னர் முதலாம் ஹுவான் கார்லோஸ், அரசியார் ஸோஃபியா, இளவரசர், இளவரசியார் – இவர்கள் நால்வருமே நம் கண் முன்னே புன்னகைப் பூத்த வண்ணம் எழிலாக நின்ற வண்ணம் நம்மை பார்த்தவாறு இருப்பது மிக நேர்த்தியாக வடிக்கப்பட்டிருக்கின்றது.

    mc4

    உலகத் தலைவர்கள்அது உருவச் சிலைகள் (ஜூலை 2013)

    மற்றொரு பகுதியில் உலகத் தலைவர்கள் சிலரது சிலைகள் பல ஓரிடத்தில் வைக்கப்பட்டுள்ளன, ஜெர்மனியின் தற்போதைய சான்ஸலர் திருமதி.மெர்க்கல், மஹாத்மா காந்தி, மறைந்த இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி, மறைந்த ப்ரிட்ட்ஷ் இளவரசியார் டயானா, யாசீர் அராஃபாட், தெரேசா அன்னையார் ஆகியோரது உருவச் சிலைகளை உதாரணமாக்ச் சொல்லலாம்.

    மேலும் இங்குள்ள ஏனைய உருவச் சிலைகளைப் பற்றி அடுத்த பதிவில் காண்போமே!

    தொடரும்….

    சுபா

    Share