Tag: பழமைபேசி

  • நிறைகுடம்

    பழமைபேசி

    செம்மாந்து போயிருந்தேன். என்றுமில்லாதபடிக்கு அன்றைய நாளில் மண்ணின் மீதிருக்கும் பாசம் பொத்துக் கொண்டு வழிந்தோடியது. வெளியுலகமே அறியாத உள்ளோங்கிய கிராமத்தில் மக்களொடு மக்களாய், மண்ணோடும் மண்ணடி வேரோடும், நாகரிகம் என்பதையெல்லாம் சட்டை செய்யாமல் ஓடித் திரிந்தவன். பதினாறு ஆண்டுகளாய் புலம் பெயர்ந்த மண்ணில் தட்டுத்தடுமாறி முட்டி மோதித் திரிகிறேன். கண்டதே காட்சி, கொண்டதே கோலம் எனத் திரிய முற்பட்டாலும் போகவிட்டுச் சுண்டி இழுக்கிறது மண் வாசம்.

    ஆறு மணிக்குத்தான் வரச் சொல்லி இருந்தார்கள். எங்கோ கத்திய கிடாயின் குரல் கேட்டுக் கிடைகொள்ளாமல் இருக்கும் பால் வற்றிய ஆடு போலத்தான் எனக்கும் கிடை கொள்ளவில்லை. மனையாளையும் குழைந்தைகளையும் பிந்திச் சில நேரம் கழித்து வாருங்கள் எனச் சொல்லிவிட்டு, அடுத்த இரண்டு தெருக்கள் தள்ளி இருந்த மேரியாட் வளாகத்திற்கு ஏகினேன்.

    முன்கூட்டிச் சென்றமைக்குப் பல காரணங்கள். ஆயினும் இது முதன்மையானது. நான் ஊரிலிருந்து புறப்படுமுன்னமே அறிவுறுத்தப்பட்டு இருந்தேன். ”ஐயா அவர்கள் வருகிறார்கள். நான் உடனிருந்து எல்லாப் பணிவிடையும் செய்யக் கடமைப்பட்டவள். ஆனால் என்னால் வர இயலாது. ஆகவே நீங்கள் அது குறித்துக் கடமையாற்ற வேண்டும்!” என அன்புத் தமிழுள்ளம் ஒன்று எம்மைப் பணித்திருந்தது.

    வளாகத்தில் நுழைகையில், யாதோ ஒரு திருமண விழாப் பந்தலுக்குள் நுழைவதாயும் உற்றார் உறவினர் இருக்க வளாகத்தைச் சுற்றிலும் எஞ்சோண்டுப் பிள்ளைகளோடு ஓடித்திரியலாமெனும் புளகாங்கித வேட்கைத் துள்ளலுடனும் மனம் ஆர்ப்பரித்தது.

    முனைவர் மு.வரதராசனார் நூற்றாண்டு விழா, வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் வெள்ளி விழா, இது ஒரு தமிழ் விழா என்கிற வகையில் விழா ஏற்பாடுகளுக்கும் எம்மால் இயன்ற பணிகளைச் செய்ய வேண்டுமெனக் கருதி வருவோரை வரவேற்பதற்கான முகாமையில் போய்ச் சேர்ந்து கொண்டேன். அங்கே கட்டுக் கட்டாய் விழா மலர்கள். அதிலொன்றை எடுத்துப் பார்த்து இன்பமுற்றுக் கொண்டிருந்தேன். அதற்கொரு காரணமும் உண்டு. விழா மலருக்காகப் பணி புரிந்தவர்களுள் நானும் ஒருவன். மலரில் இடம் பெற்றிருந்த படைப்புகளைப் பார்த்து மகிழ்ந்தேன். ஓரிருவர் வந்து மலர் நன்றாக வந்திருப்பதாய்ச் சொல்லிப் பாராட்டினார்கள். தலைதாழ்ந்து பணிவோடு நன்றி அறிதலைப் பணித்தேன்.

    ஐயா அவர்களும் எழுபது கவனகர் முனைவர் கலை.செழியன் அவர்களும் உள்நோக்கி வந்து கொண்டிருந்ததைக் கண்டதும், இருந்ததை இருந்தபடியே கிடத்தி விட்டு ஓடோடிச் சென்று எம் வணக்கத்தை உரித்தாக்கினேன். அமைதியான பாங்கும், அதிர்வற்ற குரலும் எம்மை நிலைகுலையச் செய்தன. அரசியல்வாதி என்றாலே உரத்துப் பேசுவதும், அதிர்வை வெளிப்படுத்துவதும், மேட்டிமையைப் பகர்வதும் என்றில்லாமல் அப்படியானதொரு கள்ளங்கபடமற்ற சிரிப்போடு உள்ளே வந்து கொண்டிருந்தார்.

    ஓடிச் சென்று இருக்கைகளைப் பறித்துக் கொண்டு வந்து முன்பக்கமாகவே இட்டு அமரும்படி வேண்டினேன். அந்தச் செய்கையை அவர் அவ்வளவாக இரசித்திருக்கவில்லை. ”இதெல்லாம் என்ன பழக்கம்? நானே எடுத்துக்குவனே??”, மெய்முழுதும் கூசியது எனக்கு. போ என்றவுடன் போய்விடுமா தொட்டிற்பழக்கம்?!

    குடிக்கத் தண்ணீர் கொடுத்து விழாவினுடைய சிறப்பு விருந்தினருக்குக் கொடுத்துச் சேர வேண்டிய நுழைவுச் சீட்டுகள், குறிப்பேடுகள், விழா மலர் உள்ளிட்ட புரவுப்பை(souvenir)யை வாங்கிக் கொண்டு வந்து கொடுத்தோம். இன்முகத்தோடு வாங்கி வைத்துக் கொண்டு, உள்ளீடுகளை எல்லாம் ஆய்ந்தபடி ஒவ்வொன்றும் எதற்கு உரிய சீட்டுகள் போன்ற தகவலைக் கேட்டறிந்து கொண்டார்.

    தமிழ்விழாவுக்கு வரும் முதன்மை விருந்தினர்களை வரவேற்று,  அவர்கள் தங்கியிருக்கும் வரையிலும் அவர்களுக்குத் தேவையான உதவிகளை மேற்கொள்வதற்கும் நேரப்பராமரிப்பினைப் பேணுவதற்கும் ஓம்புநர்களை நியமிப்பது வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் மரபாகும். அதன்படி, நானே அவருக்கான ஓம்படையாளனாக இருப்பது என்றும், அது எமக்குக் கிட்டிய வாழ்நாள்ப் பேறும் என்றும் எண்ணிக் கொண்டேன்.

    வரவேற்பு நிகழ்ச்சியின் போது தமிழிசை நிகழ்ச்சி இடம் பெற்றது. தனக்கு எப்போதுமே தமிழிசையின்பால் நாட்டம் உண்டென்று சொன்னவர், நிகழ்ச்சி துவங்குவதற்கு முன்பே சென்று அமர்ந்து கொண்டார். கிட்டத்தட்ட ஐம்பது சிறார்கள் தமிழிசையை இசைத்தார்கள். பாடிய குழந்தைகளை எல்லாம் பாராட்டி ஊக்கமூட்டி எழுச்சியூட்டினார். நிகழ்ச்சியில் பங்கு கொண்ட எனது மகளையும் அவர் வாழ்த்தியதில் நானும் என் மனைவியும் மிகுந்த இன்பம் கொண்டோம்.

    வரவேற்பு நிகழ்ச்சியின் போது கூட்டநெரிசலும் இரைச்சலும் வெகுவாக இருந்தது. அது கண்டு இவர் என்ன நினைப்பாரோவென மனக்கிலேசம் கொண்டிருந்தேன் நான். ஆனால் அவர் அதைக் கண்டு பெரிதும் உவகையுற்றார். ஊரு விட்டு ஊரு வந்து, அதுவும் அமெரிக்காவில் இவ்வளவு தமிழர்களா? “நம்மூருக் கோயில் திருவிழா மாதிரி இருக்கு. நான் ஊர்லயே இந்த மாதிரிப் பார்த்து நாளாச்சு” எனச் சொல்லி மக்களோடு மக்களாகத் தன்னையும் இணைத்துக் கொண்டார். மகிழ்ச்சியாக இருந்தது.

    பணிவுக்கு இலக்கணம் ஐயாதான். அமெரிக்க வெளியுறவுத்துறை அங்கீகரிக்கிறது என்றால் அதற்கென்று ஒரு விலை இருக்கத்தானே செய்யும்? தமிழ்விழாவுக்கு இவரை அழைப்பது என்ற பேச்சு மேலெழுந்தவுடனேயே பெரும்பாலானோர் சொன்னது இதுதான். “அவ்ளோ பெரிய கம்யூனிஸ்டுக்கு விசா கிடைக்குமா? அதுவும் அமெரிக்க விசா?! வாய்ப்பே இல்லை!!” என்றார்கள். ஆனால் நடந்தது யாரும் எதிர்பார்க்காத ஒன்றாக இருந்தது.

    ஐயா அவர்களுடைய உள்புகலுக்கான விண்ணப்பம், மற்ற விருந்தினர்களுடைய விண்ணப்பத்தினொடு மற்றொன்றாக முகவர் ஒருவரின் வழியாக அமெரிக்கத் தூதரகத்தில் கையளிக்கப்பட்டது. தூதரகத்தின் மூத்த செயலாளரும் தூதரகத்தில் பணியாற்றும் பொருளாதார நிபுணருமாக இருவரும் ஐயா அவர்களின் வீட்டுக்கே வருகை தந்து, உள்புகலுக்கான பூர்வாங்க வேலைகளைச் செய்து உரிய மரியாதையையும் சிறப்பையும் அளித்துச் சென்றார்கள்.

    தமிழ்விழாவின் முதல்நாள் நிகழ்ச்சி காலை எட்டு முப்பது மணிக்குத் துவங்கும் என குறிப்பேட்டில் இருப்பதைப் பார்த்துக் கொண்டு, எட்டு மணிக்கெல்லாம் தான் தங்கியிருந்த விடுதியின் முன்றலுக்கு வந்து விட்டார். ஐயா, நிகழ்ச்சி துவங்க நேரம் பிடிக்கும்; ஆகவே கொஞ்சம் தாழச் செல்லலாம் என்றதற்கு மறுத்து விட்டார். “அதனாலென்ன? போயி சனங்களை வேடிக்கை பார்த்திட்டு இருக்கலாம். நாம போயிறலாம்!” என்று வற்புறுத்தியபடியே இருந்தார். பிறகு தனியொரு வண்டியில் கவனகர் கலை.செழியன், திருமிகு கலைச்செல்வன், முனைவர்.பொன்னவைக்கோ முதலியோருடன் விழா வளாகம் சென்றடைந்தோம்.

    முழுநாள் விழாவாக நடந்த அந்த இரு நாட்களிலும், முழு நேரமும் அவையிலேயே இருந்து நிகழ்ச்சிகளைக் கண்டு களிக்க விரும்பினார். இணை அரங்குகளாகப் பல நிகழ்ச்சிகளும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருந்தன. அவற்றுள் ஒரு சிலவற்றுக்கு ஐயாவையும் அழைத்திருந்தனர். பெருந்திரளாகக் கூடியிருந்த மக்களை விட்டுப் பிரிய அவருக்கு மனம் இடங்கொடுக்கவில்லை என்பது அவரது முகக்குறிப்பிலிருந்து அறிந்து கொண்டேன். அமெரிக்காவில் இடம் பெற்ற கலை, இலக்கிய நிகழ்ச்சிகளின் மீது அளப்பரிய நாட்டம் கொண்டவரானார். பல்லூடகத் தமிழ் இலக்கிய விநாடி வினா நிகழ்ச்சியைப் பார்த்து விட்டுத் தாம் மிகுந்த வியப்புற்றதாகவும், இதை எப்படி வடிவமைக்கிறீர்கள் என்றும் பெருவிருப்போடு கேட்டுத் தெரிந்து கொண்டார்.

    எழுபது கவனகர் முனைவர் கலை.செழியன் அவர்களது கவனகக்கலை நிகழ்ச்சியின் போது, ஐயாவை இணையரங்கில் இடம் பெற்ற நிகழ்ச்சியொன்றுக்கு சிறப்பாளராக வரச் சொல்லி விழா அமைப்பாளர் அழைத்தார். ஐயா அவர்கள் தயங்கித் தயங்கி வேண்டினார். ஒரு நூற்றாண்டு போற்றும் மாமனிதர் தயங்கி வேண்டுவதைப் பார்க்கும் போது எனக்குக் கண்கள் பொங்கி வழிந்தது. “ஊர்லிருந்து எங்கூடவே வந்தாரு. கூடவே இருக்காரு. ஆசையா என்னோட நிகழ்ச்சியப் பார்த்து உங்க கருத்தைச் சொல்லுங்க ஐயான்னு சொல்லிட்டுப் போயிருக்காரு. நானும் சரின்னு சொல்லிட்டேன். இந்த நேரத்துல கூப்பிடுறீங்களே?”, மனிதர் ஒருவருக்குக் கொடுத்த வாக்கின்பால் கொண்ட பற்றினால் அல்லாடினார்.

    நண்பகல் இடைவேளையின் போது உண்டிச்சாலைக்கு அழைத்துச் சென்று, முக்கிய விருந்தினர் என்பதால் வரிசையில் நிற்க வேண்டாமேயெனக் கருதினேன். மனிதர் விட்டுக் கொடுத்தாரில்லை. ஐயா, உங்களால் வேண்டுமானால் நிற்கலாம். காலையிலிருந்து இங்குமங்கும் ஓடித்திரியும் என்னால் இயலாது எனச் சொல்லவுமே என்னுடன் வர ஒப்புக்கொண்டார். காரம், இனிப்பு ஆகியவற்றைத் தவிர்த்து விடுகிறார். அதே வேளையில் தனக்கு வேண்டுமென்பதைக் கேட்டு வாங்கி உண்டார்.

    சாதிக்கொடுமைகளைக்கு எதிராக மக்களோடு மக்களாகச் சேர்ந்து போராடியவரின் தமிழ்ப்பற்றினை நாடறியாது. அவர் ஒரு பெரிய எழுத்தாளர். இலக்கியநயம் கொண்டவர். பல நூல்களை எழுதியவர். தமிழ்விழாவில் இடம் பெற்ற கவியரங்க நிகழ்ச்சியைப் பார்க்க வேண்டும். அந்த நேரத்தில் என்னை அரங்கத்தில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள் என முன்கூட்டியே அறிவுறுத்தி இருந்தார். அதைப் போலவே கவியரங்கத்தை மிகவும் நெகிழ்ச்சியோடு கண்டு களித்தார். உடனமர்ந்திருந்தவர்களிடம் உடனுக்குடனே தனது விமர்சனத்தையும் கொடுத்துக் கொண்டிருந்தார். கவியரங்கம் முடிந்தவுடனே, கனடாவில் இருந்து வந்திருக்கும் கவிஞர் புகாரியைச் சந்திக்க வேண்டுமெனக் கோரினார். அதன்படியே அவரையும் கண்டு, அவர் வாசித்த கவிதையை வெகுவாகப் புகழ்ந்துரைத்தார். கூடவே தமிழ்நாட்டு இதழொன்றிலும் அதை இடம் பெறச் செய்வதற்கான ஒப்புதலையும் கவிஞரிடம் கேட்டுப் பெற்றார் ஐயா.

    மாநாட்டில், சாதியொழிப்பு குறித்தும், தமிழ்மக்களின் மேன்மை குறித்தும் ஆய்ந்தெடுத்த மேன்மையான உரையொன்றை அவர் வழங்கினார். வந்திருந்தவர்களுள் கணிசமானவர்களைத் தவிர மற்றவர்கள் அவர்தம் பேச்சைக் கேட்டுப் பயன்கொள்ளத் தவறிவிட்டனர் என்பது மிகவும் ஏமாற்றத்துக்குரிய ஒன்றாகும். வேடிக்கையில் மூழ்கியவர்களுக்கு அவரது பேச்சின் முக்கியத்துவம் தெரிந்திருக்கவில்லை. தனியரங்குகளில் அவர் ஆற்றிய உரைகளுக்குப் பெருமளவில் வரவேற்புக் கிட்டியது.

    ஐயா அவர்கள் செல்லுமிடங்களில் எல்லாம் மக்கள் தொடர்ந்து வந்து நெகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டே இருந்தனர். சாதிக் கொடுமைகளுக்கெதிராகவும், ஆதிக்க மனப்பான்மைக்கெதிராகவும் போராடி பல இன்னல்களை நேர்கொண்டு குடும்ப உறுப்பினர்களை விட்டுத் தவித்துத் தான் ஈந்தவற்றை ஒரு கணமேனும் அவர் வெளிப்படுத்திக் கொள்ளவே இல்லை. தன்னை மிகவும் அடக்கத்தோடும் கூடியிருந்த மக்களுள் தன்னையும் ஒருவனாக இருக்குமாறும் இருந்து கொண்டார். அவரது போக்கே அப்படிப்பட்ட இயல்பான ஒன்றாக இருந்தது.

    மாணவர்களுக்கான தமிழ்ப்போட்டியில் பங்கு பெற்று கூடுதலாகப் பரிசுகளை வென்ற என் மகளின் கைகளைப் பிடித்துக் கொண்டு பெரிதும் வியந்தார். அமெரிக்காவுல இருந்துட்டு கோயமுத்தூர்ல இருக்குற மாதிரியே இருக்குறீங்க என்று சொல்லி அவளை உச்சி முகர்ந்தார். எனக்கு தலைகால்ப் புரியாத உள்ளக்குளிர்மை.

    தமிழன் தமிழச்சி நிகழ்ச்சியில் பங்கு பெற்ற மாணவி யாழினி அவர்களது சிலம்பாட்டத்தைப் பார்த்து மிகவும் பெருமைப்பட்டுக் கொண்டார். விழாவில் எத்தனை எத்தனையோ மனிதர்களை அவர் சந்தித்துப் பேசினார். ஆனாலும் தாம் சந்தித்த ஒருவரை மறுமுறை பார்க்கும் போது, அவர்தம் பெயர் சொல்லியே விளித்தார். எண்பத்து எட்டு வயது மனிதரின் நினைவாற்றல் கண்டு அதிர்ந்து போனேன்.

    நான்காம் நாள் காலையில் மிகவும் வருத்தப்பட்டுப் பேசினார். இதுக்குள்ள விழா முடிஞ்சி போச்சா? வந்தவங்க எல்லாரும் திரும்பவும் அவங்கவங்க ஊர்களுக்குப் போயிட்டாங்களா?? சிறு குழந்தை போல முகத்தை வைத்துக் கொண்டு வினவினார். அவர் முகம் பார்த்து எனக்கு வந்துவிட்டது பசலை எனப்படுகிற பிரிவுநோய்.

    இரவில் சரியாகத் தூக்கம் வரவில்லையாதலால் விழா மலர் முழுக்கப் படித்து விட்டேன். இப்போது இரண்டாம் வாசிப்பு போய்க்கொண்டிருக்கிறது எனச் சொல்லி, அதிலிருக்கும் கட்டுரைகள் குறித்து அளவளாவத் துவங்கி, அடியேன்தான் மலரின் ஆசிரியர் என்ற முறையில் என்னிடம் அவர் சில கேள்விகளைக் கேட்கவே, அவை குறித்து எதுவும் நினைவில் இல்லாமையால் குற்ற உணர்வோடு அல்லலுற்றேன். அவரது நினைவாற்றலுக்கு முன்னால், இருக்கும் இரு கால்களை நான்காக்கி அவற்றுள் உள்ள பின்னாங்கால்கள் பிடரியில்படத் திரும்பி ஓட வேண்டும் போல இருந்தது.  மலரின் படைப்புகளைப் பல முறை வாசித்துப் பிழை திருத்தியவன் நான். எனினும் அவர் வினவும் வினாக்களுக்கு முன்னால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. . மனிதர் ஒவ்வொரு வரியையும் மேற்கோள் காட்டிப் பேசுகிறார்.

    அவருடன் இருந்த அந்த நான்கு நாட்களும் மிகவும் கவனத்தோடு இருக்க வேண்டி இருந்தது. எளிய மனிதனின் ஓம்புதலுக்குரிய எல்லைக் கோட்டுக்கும் வெளியே செல்லாமல், அதே வேளையில் ஒரு வாழும் வரலாற்றுக்கு ஆற்ற வேண்டிய பணிவிடைகள், சிறப்புகள் செய்தாக வேண்டுமென்பது மிகக் கடினமான ஒன்றாகும்.அதைத்தான் நான் அங்கு செய்து கொண்டிருந்தேன்.

    மக்களுக்காய்ச் சிறைக்கொட்டடியில் வாழ்ந்த மனிதருக்கு இந்த மக்கள் மேல்தான் எவ்வளவு அன்பும் அக்கறையும்? ”ஊருக்குத் திரும்பி வந்த வழி நெடுகிலும் அந்தத் தாத்தா மட்டும் ஏன் ஸ்பெசல்? எனக்கும் அவரைப் பிடிச்சிருக்கு. நம்ம வீட்டுக்கு எப்ப வருவாரு??”, மகள் கேட்டுக் கொண்டே இருந்தாள். அவருடைய தனிப்பட்ட தகவலோ, தொடர்பு எண்ணோ எதையும் கேட்டுப் பெற விரும்பவில்லை நான். தவறு செய்து விட்டேனோ என மனமும் சஞ்சலத்தில் அகப்பட்டுக் கொண்டிருந்தது அந்த வாரம் முழுமைக்கும்.

    “பழமைபேசி, நான் நல்லகண்ணு பேசுறன். இப்ப நான் அட்லாண்டா போய்ட்டு இருக்குறேன். நாளைக்கு ஊருக்குக் கிளம்புறேன். அதான் உங்ககிட்ட சொல்லிட்டுக் கிளம்பலாம்னு கூப்பிட்டேன். இந்த ரெண்டு மூனு நாளா, உங்க ஊர்ப்பழமை புத்தகம்தான் படிச்சிட்டு இருக்குறன். இப்ப மூனாவது வாட்டி படிச்சிட்டு இருக்குறன். கொங்குநாட்டைக் கொண்டாந்து அப்படியே கண்ணுல நிறுத்திட்டீங்க. நல்லா இருக்கு!!”, அவர் அறிந்திருக்க மாட்டார்; மறுபக்கத்தில் அலைபேசியைப் பிடித்துக் கொண்டிருப்பவனின் விழிகள் சொரிந்து கொண்டிருக்கின்றன என்பது.

    Share
  • பணவிடை

    மிசிசிப்பி ஆற்றைக் கடந்துதான் அலுவலகத்துக்கு வர வேண்டும். அதுகுறித்த மகிழ்ச்சி எப்போதும் உண்டு எனக்கு. நாளொரு வண்ணம் பொழுதொரு மேனி. நேற்று செங்காவி நிறத்தில் ஓடிக்கொண்டிருந்தது. இன்று இளநீலங் கொண்டு சலசலச் சிரிப்போடு போய்க் கொண்டிருக்கிறது.

    மிசிசிப்பியை நான் ஒரு கனவு தேவதையாகவும் எட்ட நின்று பார்த்துப் பரவசங்கொள்ளும் தீண்டமுடியாப் பேரழகியாகவும்தான் ஆராதித்து வருகிறேன். சிலிர்த்துக் குலுங்கி நாணம் சிந்த ஒயிலாடும் பெருநதியைப் பார்த்து இரசிக்காதவன் இருந்தென்ன? வாழ்ந்தென்ன??

    தேநீர் குடித்த கையோடு எதையாவது வாயில் போட்டு நாச்சுவையைக் கொல்வானேன்? டீ குடித்த மறுநொடியே கம்பர்கட் தின்பான் முண்டாபனியன் முருகேசன். எழவு, அதற்கு அதைக் குடிக்காமலே இருந்திருக்கலாமே?? டீ குடித்தால், நாவில் எஞ்சியிருக்கும் சுவை தீருமுட்டும் அனுபவிக்க வேண்டும். அடிக்கரும்பின் இனிப்பு, நெல்லியின் பின்சுவை, டீயின் நாச்சுவை, புணர்தலின் ஈற்றின்பம் என எதிலும் அந்த இறுதிக்கணங்கள் அலாதியானவை.

    கடந்த வந்த பின்னரும் ஒரு அரை மணி நேரத்துக்காவது நெஞ்சில் படர்ந்து கொண்டிருக்கும் மிசிசிப்பி ஆற்றின் எழில் வனப்பு. இன்றைக்கு அந்த அசைபோடலைக் கொன்றழித்து விட்டான் பீட்டர்சன்.

    எதையாவது முனைப்பாகச் செய்து கொண்டிருக்கையில், “ரொய்ங்க்” என்று காதில் புகுந்து இம்சித்துவிட்டுப் போகும் கொசு. எனக்கு மிகவும் எரிச்சலூட்டக் கூடியது உண்டென்றால் அது இதுதான்.

    மிசிசிப்பியின் வனப்பின் மிதப்பில் வந்து கொண்டிருந்தவனை அலைபேசியில் அழைத்து, ஆப்பிரிக்க அமெரிக்க ஆங்கிலத்தில் “ரொய்ங்க்” அடித்து விட்டிருக்கிறான் பீட்டர்சன். அலைபேசியைக் கண்டுபிடித்தவன் இரசனை இல்லாத வெற்றுமானிடனாய்த்தான் இருந்திருக்க முடியும். அண்டிய அந்தப் பீடைக்கு மாதாமாதம் சுளையாக நூற்றுப்பத்து டாலர்கள் அழுது தொலைக்க வேண்டி இருக்கிறது. மிசிசிப்பி ஆற்றிலேயே அதையும் விட்டெறிந்து விடலாம். ஆனால் மணிக்கொருதரம் அழைத்துத் திட்டாமல் அவளால் இருக்க முடியாது. தார்க்குச்சியால் விட்டு விட்டுக் குத்து வாங்குவதற்கென்றே சபிக்கப்பட்டவர்கள் கணவன்கள். அதிலும் ஒரு சுகம் இருக்கத்தான் செய்கிறது. எனவேதான் இந்த அலைபேசியையும் கூடவே வைத்துச் சமாளித்துக் கொண்டிருக்கிறேன்.

    ஒன்றும் புரியவில்லை. எனது அறையில் ஆறாயிரம் டாலர்கள் பணம் வைத்திருக்கிறானாம். அதிலிருந்து, மாதம் ஒன்றுக்கு முந்நூறு வீதம் மால்டோவாவுக்கு நான் அனுப்பி வைக்க வேண்டுமாம். இதென்ன பெரிய வில்லங்கமாக இருக்கிறது? நான் எதற்காக இதைச் செய்ய வேண்டும்??

    முதலில் எதிர்ப்பட்டவள் டீனா. தரக்கட்டுப்பாட்டு மேலாளர். முகம் கோணி, மூக்கு உறிஞ்சி, கழுத்துச் சிவந்து நான் பார்த்ததில்லை. முறுவலிப்பை வாழ்நாள் குத்தகைக்கு எடுத்திருக்கிறவள் இவள். அவள் பேசுகிறாளோ இல்லையோ, அவளுடைய குதிரைவால் சடை ஆடியாடிப் பேசும். இடைக்கிடை சிரிக்கத் தவறுவதும் இல்லை. அவ்வப்போது அலுங்கும் ஒத்த வயதுடைய அவ்விரு முலாம்பழக் கொங்கைகளைப் பார்க்க உள்மனச்சிறுவன் வேட்கையுறுவதும் உண்டு.

    ”டியர் ஹனீ! உனக்கு விசயந் தெரியுமா?”, எதோ மணமுறிவு பெற்றுக் கொண்டு போனவன் மீண்டும் தன்னிடமே வந்து விட்டதைப் போன்ற தொனியில் மிகவும் பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு கேட்கிறாள்.

    “என்ன? நான் இப்பத்தான உள்ள வர்றேன்?! என்ன விசயம்??”

    “பீட்டர்சன் வேலையிலிருந்து நின்னுட்டானாம்! இப்பத்தான் சொல்லிட்டுக் கிளம்பினான்!”

    ”அடப்பாவி! அவன் என்கிட்ட இந்த விபரத்தைச் சொல்லவே இல்லை. இப்பத்தானே அலுவலக எண்ணிலிருந்து என்னை அழைச்சிப் பேசினான். நான் கார் ஓட்டிட்டு இருந்ததால, சரியாக் கவனிச்சுக் கேட்க முடியலை! இரு டீனா, நான் என்னோட அறைக்குப் போயிட்டு வர்றேன்!”

    மால்டோவா நாட்டில் இருக்கும் முகவரி ஒன்றை ஒட்டுநறுக்கில் எழுதி, அதை என் கணினித் திரையின் மீது ஒட்டி வைத்திருக்கிறான். சொன்னபடியே பணத்தையும் வைத்துவிட்டுப் போயிருக்கிறான். என்ன இவன்? தொடர்பு எண் கூடக் கொடுக்காமல் போயிருக்கிறான்.

    பீட்டர்சன். அவனின்றி எங்கள் அலுவலகத்திலிருக்கும் வீணாய்ப்போன அட்மின் ஆண்ட்டி கெல்லியின் பிரிண்ட்டர் கூட வேலை செய்யாதே? எது ஒன்றுக்கும் அவனை நாடித்தான் வெகுபேருடைய வேலை நகர்ந்து கொண்டிருக்கிறது இவ்வளவு காலமும். ஓடியோடி உழைப்பானவன். அலுவலகப் பணிகள் என்றில்லை. தனிப்பட்ட வேலைகள் சொன்னாலும் அதையொரு பேறாக எண்ணிச் செய்வான். ஒட்டு மொத்த அலுவலகத்துக்கும் அவனைப் பிடிக்கும். அவனை வீழ்த்த எண்ணிய முதிர் கன்னிகளும் உண்டு இங்கு. ஆண்மையும் சொக்குத்தன்மையும் சரிக்கு சரியாகக் கலந்த புதிர் மைந்தன் அவன்.

    மெம்ஃபிசு நகரத்தில் வசிக்கிறான். அப்பாவும் அம்மாவும் அமெரிக்காவில் இன்னமும் இருக்கிறார்கள் எனும் நம்பிக்கை அவனுக்கு உண்டு. ஆனால் இன்னார்தான் தன்னுடைய அம்மா அப்பாவென அவனுக்குத் தெரியாது.

    என்னைப் பெற்ற அம்மாவுக்கே என்னுடைய அப்பன் யாரென்று தெரிந்திருக்கவில்லை என்று தன் பாட்டி சொல்லியிருக்கிறாளென வெகுசாதாரணமாகச் சொல்வான். எதையும் நினைத்துக் கொஞ்சம் கூட அகங்கலாய்த்ததே இல்லை. எப்போதும் எழுச்சியாகவும் குதூகலமாகவுமே இருக்கப் பழக்கப்பட்டவன்.

    இரண்டு வயதுச் சிறுவனாக விளையாடிக் கொண்டிருந்த இலையுதிர்காலப் பொழுதொன்றில், ”நீ என் அம்மாவுக்குப் பிள்ளையாயிரு. ஏனென்றால் நம்மிருவருடைய அப்பாவும் ஒருவராகவே இருக்கவும் வாய்ப்பிருக்கிறது!” என்று சொல்லிவிட்டுப் போய் விட்டாள் அம்மா. போனவள் தன்போக்கில் நினைத்தவர்களோடு வாழத்துவங்கி விட்டாள் என்பதும் பாட்டி சொல்லித்தான் தெரியும் பீட்டர்சனுக்கு.

    பள்ளிக்கூடம் செல்வதெல்லாம் வேண்டாத வேலையென நினைக்கும் வளவு ஒன்றில் வளர்ந்தவனுக்கு ஆறுதலாக இருப்பது அவனுடைய சோசியல் செக்யூரிட்டி எண்ணும் பிறந்தநாள் சான்றிதழும்தான். அவைதான் என்னுடைய மாபெரும் சொத்து என்று அடிக்கடி சொல்லிக் கொள்வான்.

    பாட்டி கல்லறை கண்ட பின், அவளது இறுதிக் காரியங்களைச் செய்தவர்களுக்கே அந்த சோளக்கொல்லை வீட்டையும் விட்டுக் கொடுத்தான். விட்டுக் கொடுத்த சில நாட்களில், குடிபெயர்பவர்களுக்கான இடமாற்றுச் சேவை நிறுவனத்தில் பாரந்தூக்கும் தொழிலாளியாக வேலைக்குச் சேர்ந்தான் பீட்டர்சன்.

    எந்த வனத்திற்குச் சென்றாலும் குயிலோடு குயிலும் காகத்தோடு காகமும்தான் சேருகிறது. ஏரோ வேன்லைன் நிறுவனத்தின் வேலையிடத்தில் இவனைப் போலவே இன்னொருவனும். அவனது நிலையின் காரணமாய் எழுந்த கழிவிரக்கமே பீட்டர்சனையும் அவனையும் ஒரு கட்டுக்குள் கொண்டு வந்து சேர்ந்திருக்கக் கூடும். அவன் பெயர் லேபான். அவனுடைய மரபணுக்கள் க்யூபா நாட்டு மாந்தப் பண்புகளைக் கொண்டதாய் இருக்கக் கூடும்.

    சிறுவர் சிறைக்கு லேபான் எப்படி வந்து சேர்ந்தான் என்பதெல்லாம் அவனுக்குத் தெரியாது. நினைவு தெரிந்த நாளிலிருந்தே சிகாகோ சிறைதான் அவனுக்குத் தாய்வீடு. இன்ன தேதியில் பிறந்தோம், இன்னாருக்குப் பிறந்தோம் என்ற எதுவும் தனக்கு இல்லாததே தன்னுடைய சுதந்திரத்திற்கான முகாந்திரம் என நினைப்பவன் லேபான்.

    எதையும் நினைத்த மாத்திரத்தில் செய்யக்கூடியவன். ஏரோ வேன்லைன் நிறுவனத்திற்குக் கூட அன்றைய கைச்செலவுக்காகத்தான் பாரந்தூக்க வந்திருந்தான். வந்த இடத்தில் பீட்டர்சனிடம் அகப்பட்டு விட்டான்.

    இருவருமாகச் சேர்ந்தே இருந்தார்கள். வேன்லைன் நிறுவன வண்டிகளில் ஊர் ஊராகப் போவதும் வருவதுமாய் காலத்தைக் கழித்துக் கொண்டிருந்தார்கள். சிகாகோவின் புறநகர்ப்பகுதியான ஷாம்பர்க்கில் உள்ள ஒரு வீட்டில் சாமான்களை இறக்கிவிட்டு அட்லாண்டா புறப்பட்டுப் போனார்கள். போகும் வழியில் இருவருக்குள்ளும் வாக்குவாதம் வந்து விட்டது.

    நடப்பதெல்லாம் சொல்லிவிட்டா நடக்கிறது? அது அது  அதனதன்பாட்டில் நடந்து கொண்டுதானிருக்கிறது. தரிப்பிடத்தில் வண்டியை நிறுத்திவிட்டு வண்டிக்குள்ளேயே தூங்கலாமென்றான் பீட்டர்சன். சரி வராது; சிறுவிடுதிக்குத்தான் போயாக வேண்டுமென்றான் லேபான். விட்டுக் கொடுத்துப் போவதெனக்கருதி ஒத்துக்கொண்டான் பீட்டர்சன்.

    நீ வண்டியிலேயே இரு; நான் அறையிருக்கிறதாவெனக் கேட்டு வருகிறேன் எனச் சொல்லி விடுதிக்குப் போனான் பீட்டர்சன். அங்குதான் அவள் அழுது கொண்டிருந்தாள். காற்றுநகரம் என அழைக்கப்படும் சிகாகோ நகரின் வளிமண்டலத்தில் குளிர்காற்று  வளைத்தடித்துக் கொண்டிருக்கிறது. சரியானதொரு உடுப்பில்லாமல் அங்கே அழுது கொண்டிருந்தாள் அவள். இவனைக் கண்டதும் ஓட முடியாமல் ஓடி வருகிறாள்.

    ரோட்டோரப்பட்சியும் அல்ல. கண் கிரங்கப் பார்த்து, முலை காட்டி, தொடை வெட்டியபடி அவர்கள் அணுகும் விதமே தனியாக இருக்கும். ஆனால் இவள் அப்படிக் காட்சியளிக்கவில்லை. இவளை லேபான் பார்த்தால் அனுபவிக்கத் துடிப்பான். திரும்பிப் போய் விடுவது என்ற எண்ணத்தில் திரும்பிச் செல்லத் துவங்கினான்.

    ஓக் மரத்திலிருந்து பறந்து வந்த பனித்தூவல் இவனது முகத்தில் ’பளிச்’ என்று இறங்கியது. விதி யாரை விட்டது? அவசர அவசரமாய்த் துடைத்துக் கொண்டு தலைநிமிர்கையில், வந்து நின்றிருந்தாள் அவள்.

    கண்கள் சிவந்திருந்தன. பனிக்காற்றில் முகமும் கழுத்தும் கைகளும் உலர்ந்து வற்றிய செவ்வாழைத் தண்டு போல இருந்தது. அந்த அலங்கோலத்திலும் தேவதை போல இருந்தாள். சித்திரம் போல அசையாது அப்படியே நிற்கிறாள். பேசுவதற்கு அவளால் முடியவில்லை. அப்படியே நிலைகுலைந்து கீழே இருந்த பனிக்களிம்புச் சகதியில் ’தொத்’தென விழுந்தாள்.

    அலாக்காகத் தூக்கியபடி தான் ஓட்டிக் கொண்டு வந்த வண்டிக்கே வந்தான் பீட்டர்சன். லேபானுக்கு வியப்பாய் இருந்தது. பீட்டர்சன் அவ்வளவு சுலுவாக இந்த வேலையில் இறங்கமாட்டான் என்பது அவனுக்குத் தெரியும்.

    உள்ளே அவளைக் கிடத்தியதும்தான் லேபானுக்கு நிலைமை புரிந்தது. தண்ணீர் பாட்டிலில் இருந்த தண்ணீரைக் கொண்டு அவள் முகத்தில் தெளித்தான் லேபான். இரு கைகளைப் பற்றித் தோய்த்து வெப்பமூட்டினான் பீட்டர்சன்.

    கொஞ்சம் கொஞ்சமாக சீர்நிலைக்கு வந்தாள் வெண்முத்துச் சிங்காரி. சாப்பிடுவதற்கு உருளைக்கிழங்கு நொறுவலைக் கொடுத்தான் லேபான். கீழிறங்கிப் போய் சூடாக மோக்கா வாங்கி வந்தான் பீட்டர்சன்.

    வாய்ப்பே இல்லாத முகம். முகட்டு மேட்டில் பொதிந்திருக்கும் பனி போன்ற உடல். வாளிப்பாய் இருக்கிறது இருக்க வேண்டிய எல்லாமும். அதரங்கள் கோவைப்பழத்தை தோற்கடித்து அவமானப்படுத்தின. மைபூசாமல் வதங்கிய இந்த நிலையிலும் வசீகரிக்கிறது கண்கள். என்ன பேசினாலும் எதோ ஒரு சொல்தான் ஆங்கிலத்தில் வருகிறது. இனியும் இங்கிருக்க வேண்டாமென நினைத்து வண்டியைக் கிளப்பினார்கள் இருவருமாகச் சேர்ந்து.

    பத்து மைல்கள் தள்ளிப் போய் சிற்றுண்டிச் சாலையொன்றுக்கு அவளையும் அழைத்துப் போனார்கள். சிறுகச் சிறுக உண்டு பசியாற்றினாள் அவள். அவள் உண்பதை இவர்கள் வேடிக்கை மட்டும் பார்த்தார்கள். அவளைக் கண்களால் தின்றே பசியாற்றிக் கொண்டார்கள் இருவரும்.

    பல மணித்தியால விருந்தோம்பலுக்குப் பின்னால் அவளுக்கான பின்புலமும் கொஞ்சம் கொஞ்சமாய்த் தெரியலாயிற்று. அவளொரு மோல்டோவாப் பைங்கிளி. பெயர் ஷெல்ஃபியா. மோல்டோவா நாட்டில் இருக்கிற கோசேனி எனும் சிற்றூரைச் சார்ந்தவள். வீட்டில் இவள்தான் மூத்தவள். இவளுக்கு ஐந்து தங்கைகளும் ஒரு தம்பியும்.

    நான்கு மாத டூரிஸ்ட் விசாவில் கனடாவிற்கு முகவர் ஒருவனது ஏற்பாட்டின் பேரில் முலையாட வந்திருக்கிறாள். முலையாடுவது என்பது ஒரு பேருக்குத்தான். மற்றபடி உரிந்த கோழியாய் நாடக நாட்டியம், கொக்கோகக் கலைகள் எல்லாமும் மேற்கொண்டு களிப்பூட்ட வேண்டும்.

    சரக்கு வண்டியொன்றிலேற்றி அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்துவிட்டு இவளைக் கைகழுவி விட்டான் அழைத்து வந்தவன். நான்கு மாத வருமானம், கடவுச்சீட்டு முதலான எல்லா உடைமைகளையும் இழந்தபடி இப்போது இவர்களிடத்தில் வந்து சேர்ந்திருக்கிறாள் ஷெல்ஃபியா.

    அவளை ஓரிடத்தில் எங்காவது தங்க வைக்க வேண்டும். அவர்களை அழைத்துக் கொண்டு மீண்டும் மெம்ஃபிசுக்கே வந்தான் பீட்டர்சன். தேவாலயப் பெரியவர் ஒருவரின் உதவியின் பேரில் வாடகைக்கு வீடு பிடித்துத் தங்கினர் மூவரும். இதில் பீட்டர்சனுக்கு மட்டுமே வேலை தேடத் தேவையான சோசியல் செக்யூரிட்டி எண், பிறந்தநாள் சான்றிதழ் இருக்கிறது. மற்ற இருவருமே, சட்டத்துக்குப் புறம்பாகத்தான் அமெரிக்காவில் இருக்கிறார்கள்.

    உள்ளூர் வேலை தேடித் திரியும் போதுதான், துப்புரவுப் பணியாளர் வேலைக்காக எங்கள் நிறுவனத்தில் சேர்ந்தான் பீட்டர்சன்.

    பெண் என்பவள் வாழ்க்கையில் வந்து விட்டால் எல்லாமும் நிகழ்கிறது.

    கடந்த நான்காண்டுகளாக எங்களில் ஒருவனாகத்தான் இருந்து வருகிறான் பீட்டர்சன். மிகவும் நேர்மையானவன். மதிய உணவு இடைவேளைகளில் எங்களுக்கு உணவுப் பண்டங்கள் வாங்கி வருவான். எங்கள் கார்களுக்கு ஏதேனும் பராமரிப்பு வேலையிருப்பின், அவனிடமே கொடுத்தனுப்பிச் செய்து கொள்வோம். விடுமுறை நாட்களில் தத்தம் வீட்டு வேலைகளுக்கும் கூட வேண்டிய உதவியை அவனிடமிருந்து வெகு இயல்பாகக் கேட்டுப் பெறுவோம் நாங்கள்.

    பீட்டர்சன் எங்கள் அலுவலகத்தில் வேலைபார்க்க, லேபான் அவனது பாணியில் சிறுதொண்டு வேலைகளைச் செய்து கைக்காசு பார்த்து வந்தான். பெரிய பெரிய கிடங்குகளுக்கு பாரந்தூக்கும் வேலைக்குப் போவான்.  பாரந்தூக்கி வேலை பார்த்து வரும் வருமானத்தைக் காட்டிலும் களவாடிக் கொண்டு வரும் பொருட்களை விற்றுப் பெரும் பணம் பார்த்து விடுவான். அவ்வப்போது சிறையிலும் அடைபட்டுக் கொள்வான். இப்படியாக வெளியே வருவதும், உள்ளே செல்வதுமாய் இருப்பான் லேபான்.

    லேபான் கொண்டு வரும் பொருட்களை ஈபே இணையதளத்தினூடாக விற்றுக் காசாக்குவது ஷெல்ஃபியாவின் வேலை. எல்லாவற்றுக்கும் ஆதாரம் பீட்டர்சனின் சோசியல் செக்யூரிட்டி எண்தான். அது இல்லாவிட்டால், வங்கிக் கணக்கு, கடனட்டை என எதுவும் வைத்திருக்க முடியாது இவர்களால்.

    பீட்டர்சன் வெளிப்படையாகவே சொல்வான். ”இனி எங்களால் ஷெல்ஃபியை விட்டு இருக்க முடியாது. நானும் லேபானும் அவளைப் பகிர்ந்து கொள்கிறோம். அவளும் எங்கள் இருவரையும் முழுமையாக நேசிக்கிறாள். எங்களது எதிர்காலமே அவள்தான் இனி!” என வெள்ளை மனத்தோடும் புளகாங்கிதத்தோடும் சொல்வான். நான்கு, ஐந்து முறையாவது என்னிடம் சொல்லியிருப்பான். இணங்கிய ஒன்றிப்பு ஈடேறுகிற இடத்தில் வக்கிரத்துக்கும் விரசத்துக்கும் வன்முறைக்கும் இடமில்லை.

    மெம்ஃபிசு நகரில் மிசிசிப்பி பேராறு ஓடுகிறது. அவ்வப்போது பனி பெய்கிறது. பூமி எல்லாரையும் போல இவர்களையும் அரவணைக்கிறது. வானம் வாழ்த்துகிறது. சரியான கல்வி கிடையாது. ஆனாலும் அவர்களுக்குள்ளான புரிதல் உண்டு. ஷெல்ஃபியின் குடும்பத்தாருக்கு அவள் மாதாமாதம் பணம் அனுப்பி வைக்கிறாள். இந்த ஆடவர் இருவரே அவளுக்கான தேவதூதன்கள்.

    மோல்டோவாவை விட்டுக் கிளம்பு முன்னர் குலதேவதையிடம் வேண்டச் சென்றாளாம் ஷெல்ஃபி. அப்போது அவர்களது குலவழக்கப்படி முட்டைக்கோசு ஒன்றை எடுத்து கோவில் தளத்தில் உருட்டியிருக்கிறாள். வலது புறமாகச் சென்றால் வாழ்வில் ஏற்றம் என்பது மரபாம். எனக்கும் வலதுபுறமாகத்தான் உருண்டோடியது. அது போலவே எனக்கு நல்லதே நடந்திருக்கிறது எனச் சொல்லி மகிழ்வாளாம் அவள்.

    கொஞ்சநாட்களாகவே அவ்வப்போது உடம்புக்கு சரியில்லாமல் வருகிறதாம் அவளுக்கு. கடை மருந்துகளைக் கொடுத்தே சமாளித்துக் கொண்டிருக்கிறார்கள். எங்களிடம் அவ்வப்போது சொல்வான். ஆனால் இப்படியொரு ஏற்பாட்டினைச் செய்திருப்பதாகக் கடைசிவரை சொல்லவே இல்லை.

    பீட்டர்சனுக்கு சிறையிலிருந்த அனுபவம் உண்டு. அப்போது நண்பனானவன்தான் கார்லோசு. இவனொரு மெக்சிகன். கருந்துவக்கு, தூள், மெர்சுவானாத்தழை போன்றவற்றின் ஏகபோக முகவர் இவன். இவனுக்கான கட்டமைப்பு அமெரிக்கா, மெக்சிகோ, கனடா என எல்லை தாண்டியதாகும்.

    அமெரிக்காவில் துப்பாக்கி(துவக்கு) வாங்குவதென்பது கடைவீதிக்குப் போய் செருப்பு வாங்குவதற்கு ஒப்பானதாகும். கடைச்செருப்பு வாங்க வேண்டுமென்றால் கூடுதலாகச் செலவு ஆகும். கார்லோசு போன்ற ஆட்களைப் பிடித்தால் மலிவான விலையில் தெருச்செருப்பு வாங்கலாம். ஐந்து டாலரிலிருந்து ஐயாயிரம் டாலர்கள் வரையிலுமான இந்த கள்ளச்செருப்புகளை வகைவகையாக வாங்கிக் கொள்ளலாம். வாங்கி வைத்துக் கொண்டு, இவனை அவன் தீர்த்துக் கட்டலாம். அவனை இவன் தீர்த்துக் கட்டலாம். தூள் பாவிப்பதில் பாடசாலைகளுக்குத்தான் முதலிடமாம். மாணவர்கள் படிப்பதற்குப் போகிறார்களா, தூளுறிஞ்சி சொக்குசொகம் காணப் போகிறார்களா தெரியவில்லை. தூள் விற்பவர்கள் பிஎம்டபுள்யூ, லெக்சசு, பென்சு  போன்ற உயர்தரக் கார்களில்தான் வந்து போகிறார்கள். மர்சுவானாத் தழைக்கு சில மாகாணங்கள் அங்கீகாரம் கொடுத்து விட்டன. மற்ற மாகாணங்களுக்கு, மெக்சிகோ இருக்க கவலையேன்? கார்லோசுகளும், மார்ட்டினெசுகளும் வேண்டிய அளவு கொண்டு வந்து கொடுப்பார்கள். பீடி போல ஊதித்தள்ளலாம். பிஸ்கெட், பாண் போன்ற பண்டங்களிலும் போட்டு உண்ணலாம். உலகத்தை மறந்து உல்லாசமாய் இருக்கலாம். அதே உல்லாசத்தோடு பரலோகத்துக்கும் கதியாய்ச் சென்று சேரலாம்.

    கார்லோசின் உதவியோடு மெக்சிகோவுக்குச் சென்றுவிட்டால், ஷெல்ஃபிக்கான மருத்துவம் பெறுவதில் எவ்விதச் சிக்கலும் இல்லையாம். அதுதான் ஹூசுடன் அருகிலிருக்கும் நுவலார்டோ காட்டுவழிச் சிறுபாதையினூடாக மெக்சிகோவுக்குச் சென்று விட்டார்கள். குழந்தைப் பிறப்புக்கான பேறு கால மருத்துவத்திற்காகக் கூட ஷெல்ஃபியை அவர்கள் அழைத்துச் சென்றிருக்கக் கூடுமென்கிறான் நெட்டைக்கொக்கு ஜான் லொஷன்ஸ்கி.

    பீட்டர்சன் எங்கள் அலுவலகத்தை விட்டுச் சென்ற பின்னர், இங்கு எல்லாமே தலைகீழாக மாறிப்போய் விட்டது. எனினும், அவன் சொன்னபடியே  மால்டோவா முகவரிக்கு வெஸ்டர்ன்யூனியன் மூலமாக பணவிடை(money order) அனுப்பிக் கொண்டுதான் இருக்கிறேன். இந்த மாதம் இன்னும் அனுப்பவில்லை.

    நாங்கள் வேலைபார்த்துக் கொண்டிருந்த நிறுவனத்தைப் பிறிதொரு நிறுவனம் விலைக்கு வாங்கிக் கொண்டபடியால், நிறுவனத்தின் மெம்ஃபிசு நகர அலுவலகம் மூடப்பட்டு விட்டது. பெரும்பாலானோர் வீட்டுக்கு அனுப்பப்பட்டு விட்டார்கள். நாங்கள் மிகச் சொற்பமானோர் மட்டுமே வேறு வேறு அலுவலகங்களுக்கு மாற்றப்பட்டு பணியில் இருக்கிறோம்.

    இனி நான் பீட்டர்சனைச் சந்திப்பேனா தெரியாது. அவன் குறித்த எந்தத் தகவலும் என்னிடத்தில் இல்லை. என்னைப்பற்றிய தகவலும் அவனிடத்தில் இருக்குமா என்பது ஐயத்திற்குரியதே. உயிர்த்த நொடியிலேயே சாவுக்கான பயணமும் துவங்கி விடுகிறது. அத்தகைய பயணத்தில் பலரைச் சந்திக்கிறோம். அதற்கான நேரம் வரும் போது பயணத்தின் இடையிலேயே அவரவரிடமிருந்து விடை பெற்றுக் கொள்ள நேரிடுகிறது.

    ஊரே அடங்கி விட்டது. உறைபனியின் கனம் தாங்காமல் ஒடிந்து சாளர ஆடியின் மீது விழும் மரக்கிளையின் உராய்வொலி  அதிர்ந்து கேட்கிறது. கோலியர்வில் குளத்தில் கனடியக்கீச்சுகளின் சத்தம் அவ்வப்போது. இவ்வளவு பெரிய பேராறு, மிசிசிப்பி பக்கதிலேயே ஓடுகிறது. ஆனாலும் அதற்கான அறிகுறி ஏதுமில்லை.

    சத்தமின்றி கள்ளப்பூனை போல அடுத்திருக்கும் அறைக்குப் போனேன். குழந்தைகள் நன்றாய்த் தூங்குகிறார்கள். மீண்டும் வந்து படுக்கையில் மிகக் கவனத்துடன் படுத்தேன். அவள் கண் விழித்தால் அவ்வளவுதான். ஏன் இன்னமும் தூங்காமல் உயிரை வாங்குகிறீர்கள் எனச் சாமியாடுவாள்.

    எழவு தூக்கமும் வரவே மாட்டேன் என்கிறது. மீண்டும் மீண்டும் அமேசான் நினைவே வந்து படுத்துகிறது. அதனால்தான் எனக்கு இப்படி நடக்கிறது. தீர்மானமாய் ஒரு முடிவுக்கு வந்து விட்டேன். மால்டோவாவுக்கு இனியும் பணம் அனுப்பித்தான் வைக்க வேண்டுமா என நினைத்து அனுப்பாமல் இருப்பதைச் சகித்துக் கொள்ள முடியவில்லை. அருவருப்பாய் இருக்கிறது.  குற்றம்தான். அதுதான் அமேசானில் போட்ட காசு கரையத் துவங்கிவிட்டது. விடிந்ததும் அமேசான் பங்குகளை விற்றுவிட வேண்டும். மறுபக்கம் புரண்டு படுத்தால், கை உளைகிறது.

    வெஸ்டர்ன் யூனியன் கடை இருப்பது கேஷ் ஸ்டேசனில்தான். அது இரவிலும் திறந்திருக்கும். இந்த மாதம், அடுத்த மாதம், இரண்டு தவணைகளையும் கட்டிவிட்டு வந்தாலென்ன? கேள்விகள் மனத்தையும் மண்டையையும் குடைந்தெடுக்கிறது. இரண்டு நாட்களுக்கு முன்புதான் கோர்டோவா கேஷ் ஸ்டேசனில் நடந்த துப்பாக்கி விளையாட்டுக்கு நான்கு காவு விழுந்ததாம். ஆடு காவு கொடுத்தலையும், கோழி காவு கொடுத்தலையும் மனிதன் இரசிக்கிறான். மனித காவுகளை யார் இரசிக்கிறார்கள்? மிகவும் முக்கியம். கண்ட கண்ட கேள்விகள் சுயம்புகளாக வந்து துளைத்துப் படுத்துகின்றன. கைச்செலவுக்குக் காசு இல்லாத நேரத்தில் வந்து, பரிகாரம் பனிரெண்டு செய்யணும் என்பானாம் சாமக்கோடாங்கி.

    விருட்டென்று எழுந்து வெளியே வந்தாள்.

    ”என்ன இது? இந்த நேரத்துல எங்க போறீங்க??”

    “வயிறு ரொம்ப வலிக்குது. வயிறு கட்டிகிச்சு போலத் தெரியுது.  வால்கீரீன்சுல மலமிளக்கி, அதான் அந்த கிளிசரின் ஸ்டிக்ஸ் வாங்கிட்டு வரலாம்னு”

    “இந்த நேரத்துலயா? அதெல்லாம் வேண்டாம். டீ போட்டுக் குடுக்குறேன்.  சித்த நேரத்துல வந்திடும்!”

    “இல்ல; போய் வாங்கிட்டே வந்துடுறேன். ப்ளீஸ்டா கண்ணம்மா!!”

    பனித்தூவல் அறவே நின்றிருந்தது. வானம் யாருக்கும் வஞ்சனை செய்வதில்லை. தன் எல்லைகளை முழுக்கத் திறந்தே விட்டிருக்கிறது. யாரிடமும் கட்டணமேதும் வாங்காமல் அதன் போக்கில் வீசிக்கொண்டிருந்தது காற்று. தன்னுள் இருக்கும் மினுமினுப்புகளை மின்னித் தீர்ப்பதில் யார் முதல் என்பதில் போட்டி போட்டிக் கொண்டிருந்தன சகல விண்மீன்களும். இப்போது கேட்கிறது ஓய்வில்லா மிசிசிப்பியின் மெல்லொலி. நெஞ்சு நிமிர்த்தி சட்டைப்பைக்குள் கையை விட்டுத் துழாவியெடுத்துப் பார்க்கிறேன். இளக்காரக் குறும்புடன் செல்லமாய்ச் சிரிக்கிறது மால்டோவா நாட்டின் கோசேனி.

     

    Share
  • யாவரும் கேளிர்

     

    சுவர்ப்பலகையில்
    தான் வரைந்திருந்த
    கோணல்மாணல் குலதேவதையை
    அவள் வணங்கிக் கொண்டிருக்க
    என்னடா செய்திட்டு இருக்க வினவலுக்கு
    தங்கச்சிப் பாப்பா நல்லாயிருக்கணும்னு
    கும்பிடுறன்ப்பா என்றதும்
    தூக்கிவாரிப் போட்டது நமக்கு!
    உனக்கேதடா தங்கச்சிப் பாப்பா?
    மறுவினவலுக்குச் சொல்கிறாள்
    எனக்கு சிறுசாயிடிச்சுன்னு
    டொனேசன்ல போட்ட
    பட்டுப் பாவாடையப் போடுற பாப்பா
    எனக்குத் தங்கச்சிதானேப்பா?
    அதான் அந்தப்பாப்பா நல்லாயிருக்கணும்னு
    சாமிகிட்ட சொல்லிட்டு இருக்கேன்ப்பா!
    மனம் மகிழ்ந்து நாசி திளைக்க
    முகமறியா அக்குழந்தைமணம்
    வீடெங்கும்!!

    Share
  • பட்டி நோம்பி

    ”அட, என்ன பாக்கறீங்க? ஊர்ல மழைங்ளா? ஒரு ஒழவு மழை இருக்குமுங்ளா? பொங்கலூருக்கு வடக்கமின்னா நல்ல மழையின்னு பெரிய பாப்பாத்தியவிங்க ஊட்டுக்காரர், வந்திருந்தவரு சொன்னாரு. இங்க வாசத் தொளிக்குறதுக்கு மூத்த புள்ளியா ரெண்டு அடி அடிச்சிப் போட்டு, தாந்து போச்சுங்க. எதுக்குமு, இந்த தை பொறந்தா ஒரு வழி பொறந்துதானுங்க ஆகோணும்?”

    ”ஆமாங்க மச்சான். எங்களுக்குமு ஒழவு மழையல்லாம் பேயிலீங்கோ. காட்டுத்தண்ணியே காட்டைவுட்டுப் போகுலீன்னா பார்த்துகுங்க நீங்களே?”

    “அது செரீங். தை பொறந்தாச்சின்னா, பட்டி பெருகோணும்; வெள்ளாமை வெளையோணும்; பொங்கல் பொங்கோணும்!! அது மாறாது பாருங்க. அல்லாம் நல்லாத்தான் ஓடி அடையும். என்ன நாஞ்சொல்றது சரித்தானுங்ளே?”

    “ஆமாமாங். இப்பெல்லாம் ஆருங் முன்ன மாதர தை நோம்பியெல்லாங் கும்புடுறாங்க? அல்லாம் மாறிப் போச்சு பாருங்!”

    “நெம்ப நல்லாவே. இங்க, நாங்க ஒரு நாலஞ்சி பண்ணையத்துக்காரங்க மட்டும் இன்னுமு பழைய மொறைக்கி அல்லாத்தையும் செஞ்சிட்டுதான் வாறம். நம்ம இருக்குற காலத்துக்கும் செஞ்சி போடலாம். அதுக்கப்பொறம் என்னமோ ஆயிட்டுப் போகுது போங்க!”

    ”பெரிய அமுச்சி இருக்கமுட்டும் நாங்களும் தொட்டி கட்டி, பட்டி மெரட்டிட்டுதா இருந்தமுங்க. அமுச்சி போய்ச் சேந்தவுட்டு, பெரியம்மணிய பெங்களூருக்கு கண்ணாலங்கட்டி தாட்டியுட்டதாச்சிங்? அதுக்குப் பொறகு அல்லாமே நெதானமாய்ப் போச்சுங்!”

    ”நாம சின்ன வயசுல இருக்கறப்பெல்லாம் ஒரு வாரம் பத்து நாளத்து நோம்பியா இருந்துச்சு. இப்பெல்லாம் ஆரும் மூனு நாள் நோம்பியாக்கோடக் கும்புடுறது இல்லை?!”

    “கொஞ்சம் வெவரமாத்தான் சொல்லுங்க பழமைய. ஏன் நிக்கிறீங்க? குக்கீட்டுச் சொல்லுங்க மச்சே! வேலை கெடக்கட்டும்; எப்பூஞ்செய்யுற வேலைதான?!”

    ”அது செரி. கார்த்திகை மாசம் சோதி வெச்ச நாள்ல இருந்தே பட்டி நோம்பிக்கான வேலைகளும் தெரக்கா ஆரமிச்சிரும். சோதியன்னைக்கு சூந்து விளையாடுவோம். வெடிய வெடிய ஆடுவோம். கருது அறுத்து குச்சுக வெச்சிருக்கும். அந்தக் குச்சுகள்ல இருந்து தட்டுக் கத்தைகளை ஒன்னு ஒன்னா எடுத்தாந்து, அதோட மொனையில தீயைப் பத்த வெச்சி வளைச்சி வளைச்சி சுத்துவோம்.

    நாலுபேரு அஞ்சு பேருன்னு கூட்டாச் சேந்துட்டு போயி களவாடுவோம். மாங்கா திருடுவோம். தேங்கா திருடுவோம்; ஆகாதவன் கெணத்துக்குள்ள எறங்கி மோட்டாரைக் கழட்டித் தண்ணிக்குள்ள போட்டுட்டு வருவோம். ஊர் வெடலைக காயடிக்காத காளைகளுக்கு எணை ஆச்சுதே? ஆனாலும் அதுல ஒரு நேர்மை இருக்கும். பொண்டு புள்ளைக மேல கை வெக்க மாட்டம். ஏழைபாழைகளுக்கு சகாயமா நடந்துக்குவம்.

    சூந்து ஆடி முடிஞ்சு ஊட்டுக்குப் போகும் போது கெழக்க வெளுத்துரும். அந்த நேரத்துக்கும், ஊட்டுக்குப் போயி நாலு அச்சு, அஞ்சு அச்சுன்னு இராகிக் களியோட சுண்டைக்கா வத்தக்கொழம்பு, தூதுவளைச் சாறுன்னு கலந்து கட்டி ஒரு எடுப்பு எடுத்துட்டுதா தூங்கப் போவம்.

    அன்னக்கி பொழுது பம்பலா அப்படி முடியும். அது முடிஞ்ச கொஞ்ச நாள்லயே மார்கழி மாசம் பொறந்திரும். மார்கழி மொதநாள் அன்னிக்கே வடக்க தங்காத்தா கோயலு, ஊருக்குள்ள விநாயகங்கோயல்னு எல்லாக் கோயல்லயும் அன்னாடப்பூசை ஆரமிச்சிரும். ஒவ்வொரு கோயல்லயும் காலையில அஞ்சரையிலிருந்து ஏழு மணி வரைக்குமு, சாயங்காலம் ஆறுல இருந்து ஒம்பது மணி வரைக்குமு பாட்டுப் போட்டியில சாமி பாட்டுக போடுவாங்க. பண்டாரத்தார் ஊட்டு சம்முகம் ரெண்டு வேளையும் பூசை செய்வான்.

    ஊர்ல இருக்குற நாய்க்கமாருங்க எல்லாம் பசனை கோயல்ல காலையில அஞ்சு மணியிலிருந்து பசனை பாடுவாங்க. ஆறு மணிக்கு சங்கு சேகண்டி ஊதிட்டு பாடிட்டே ஊர் சுத்தி வருவாங்க. பெரிய சிங்கார் நாய்க்கர் ஆர்மோனியப் பொட்டி, சுப்புராயலு நாய்க்கன் மிருதங்கம், நம்ம பாட்டையன் கஞ்சிரா, நரசிம்ம நாய்க்கரும் காவேட்டி நாய்க்கரும் சால்ரா போடுவாங்க. மித்தவிங்க எல்லாரும் கை தட்டிட்டே பசனைக்கு பின்பாட்டு பாடுவாங்க. கோபால்சாமி நாய்க்கனும் குழித்தோட்டத்து பட்டீசுவரக் கவுண்டனும் நல்லாப் பாடுவாங்க. அந்த ஆதிசேசா, அனந்த சயனாங்ற பாட்டுப் பாடும் போது ஊரே முழிச்சுக்கும். அவிங்க மொத்தம் நுப்பது பேரு. இப்பெல்லாம் எங்க அந்த மாதர பசனை கோசுடியே இல்லை போ. எங்கியோ கோயமுத்தூருகிட்ட வடவள்ளியில இருக்குதுன்னு சொல்லிச் சொல்றாங்க. பீளமேடு இரங்கம்மா கோயல் கோசுடின்னு சொல்லிக்கிறாங்க.

    கடைசி நாளன்னக்கி திருப்பாவை முச்சூடும் பாடி, பசனை கோயல்காரங்க ஊருக்குள்ள மெரவனை வருவாங்க. தங்காத்தா கோயல்லயும், புள்ளார்கோயல்லயும் பூசை செய்து அவிசாயங் குடுப்பாங்க. பசனை கோயல்ல மாசம் முப்பது நாளும் சக்கரைத் தளிகையுமு, கடைசி நாளன்னிக்கு கூடா தட்டவடையுங் குடுப்பாங்க.

    அந்த முப்பது நாளும் ஊருக்குள்ள அல்லாரும் சாமி கும்புடுறதும், அறுவடைப் பம்பலைப் பாக்கறதும், பட்டி நோம்பிக்கான வேலைகளைப் பார்க்கறதுமா ஒரே தடபுடலா இருக்கும். அல்லாரும் மனசு நெறஞ்சி தாய் புள்ளையா பந்த பாசமா இருக்குறது எப்பன்னு கேட்டா, இந்த மார்கழி ஆரமிச்சி தை நோம்பி முடியுற காலத்தைத்தான் சொல்லோணும்.

    பட்டி நோம்பி வாறதுக்கு பத்து நாளைக்கு முன்னாடியே சந்தைகளுக்குப் போயி வேணுங்றதை வாங்கிப் போட்ருவாங்க. அல்லாமே நெல்லு குத்தி அரிசி பொடச்சி, பொங்கலுக்குன்னு தனி அரிசி, படைப்புக்குன்னு தனி அரிசி கட்டி வெச்சிருவாங்க. ஊருக்குள்ள அரசாணிக் காய் ஊரெங்கும் பொழங்கும். அங்கங்க ஊட்டு வாசல்ல பூசணிப் பூ வெச்சிக் கோலம் போடுவாங்க. மார்கழி முப்பதும் பொம்பளைப் புள்ளைகளுக்குக் கோலம் போடுறதும் கோயல்களுக்கு மாலை கட்டுறதுதான் வேலை.

    பொம்பளைப் புள்ளைகளுக்கு அந்த வேலைன்னா, ஆம்பளைப் பசங்களுக்கு வண்டியப் பழுது பார்த்து வெக்கிறது. கீல் போட்டு இருசுகளைப் பதனம் பன்றது. ஏர்க்கால், பார்ச்சட்டம், மூக்காணி அல்லாத்தையும் மராமத்து செய்யுறதுன்னு வேலை முசுவா இருக்கும். எருதுகளுக்கு இலாடம் போட்டு பருத்திக் கொட்டைப் புண்ணாக்கும் நல்ல அரிசித் தவிடுமாப் போட்டு பாங்காக்குவாங்க.

    திமில் இருக்குற காயடிக்காத காளைக் கன்னுகளுக்கு கொம்புக் கவுறு பூட்டுறதும், கழுத்து மணி பூட்டுறதும், கொம்புச்சலங்கை கொழுவுறதும் நடக்கும். இந்த மாதரக் காளைகளை வெச்சிருக்கிற நாங்கெல்லாம் ஒரு மொறப்பாத்தான் ஊருக்குள்ள திரிவோம். எங்களைக் கண்ணு வெக்காத பொம்பளைப் புள்ளைக ஊர்ல கெடையாது.

    மார்கழி கடைசி நாள் அன்னக்கி, பசனை கோயல் சப்பரம் தூக்கிட்டு வந்து ஊருக்குள்ள பசனை பாடி முடிஞ்சதும் காப்புக்கட்டு ஆரமிச்சிரும். ஊட்டுல, தோட்டத்துச் சாளையில இருக்குற பழசு பரட்டை எல்லாத்தையும் கழிச்சிக் கட்டிட்டு செய்யுறதுதான் காப்புக்கட்டு. காப்புக்கட்டுக்கு ஒரு வாரத்துக்கு முன்னாடியே ஊடு ஒட்டடை அடிச்சி பூசி வழிக்கிற வேலை ஆரமிச்சிருவாங்க. மொகுடு ஏறிப் பூசுறது, அட்டாலியில ஏறி சுத்தம் செய்யுறதுக்குன்னு நாங்க கொஞ்சப் பேர்தான் இருப்போம். எங்களை எல்லாரும் வந்து கூப்புடுவாங்க. ஒரே கிராக்கிதான் எங்களுக்கு. தெனை மாவும், அரிசி மாவும், கைமுறுக்கும், ஓலைமுறுக்கும், உப்பட்டும்னு எங்களை நெம்ப நல்லாக் கவனிப்பாங்க.

    காப்புக்கட்டு அன்னிக்கு மத்தியானத்துல இருந்தே ஊட்டு வாசல் வழிக்கிறதும், களத்து மேட்டுல வழிக்கிறதும்னு பொம்பளைக முசுவா இருப்பாங்க. எளவட்டப் பொடுசுகெல்லாம் ஓடி ஓடிக் கோலம் போட்டு ஊரே ஜாகோன்னு இருக்கும். அந்த தாவணிட் தலப்புல மூஞ்சியத் தொடச்சிக்கிறதும், பாவாடைய கணுக்கால் தெரியுறா மாதர ஏத்தியுட்டுச் சொருகிக்கிறதும், எங்களையெல்லாம் அல்லைல பார்த்துட்டே கோலம் போடுறதும் விட்டேத்தியா வக்கணை பேசுறதும்னு அவிக செய்யுற லொல்லு கொஞ்ச நஞ்சமல்ல போங்க.

    தெகோட்டுல இருக்குற பையான் வீட்டு ஆளுக ஒவ்வொரு வீட்டுக்கும் காப்புக்கட்டுக்கு வேண்டியதை எல்லாம் கொண்டாந்து குடுப்பாங்க. காலையில நேரத்துல அவங்க கொண்டார்ற மக்கிரியில, கோலப்பொடியும், அரப்புமு இருக்கும். அவங்கவங்க பண்ணையத்துல இருந்து மாட்டுச்சாணம் முந்துன நாளே வந்திடும் வாசல் வழிச்சுடுறதுக்கு. வழிச்சுட்ட ஈரம் காயம் போறதுக்குள்ளயே அம்மணிகளும் பாப்பாத்திகளும் கோலம் போட்டு உட்றுவாங்க. ஊட்டு கார வாசல், திண்ணையில எல்லாம் அரிசி மாவுக் கோலம் போட்டு உட்றுவாங்க.

    மஞ்ச வெயில் வர்றதுக்கும் சித்தங்கூரத்துக்கு முன்னாடி, பையான் ஊட்டு ஆளுக மறுக்காவும் பூளைப்பூவு, புங்கங்கொழுந்து, வேப்பங்கொப்பு, மாவிலை, ஆவரம்பூக் கொத்துன்னு ஊட்டு ஊட்டுக்கும் கொண்டாந்து குடுத்துட்டு போவாங்க. தோட்டங்காட்டுல இருக்கிறவங்க, அவங்கவங்களுக்கு வேண்டியதை அவிங்களே பொறிச்சிக் கொண்டாந்துருவாங்க.

    எல்லா தழைகளையுமு வேணுங்ற அளவுக்கு ஒன்னு கூட்டி, மொதல் கொப்பைக் கொண்டு போயி புள்ளார் கோயல்ல வெச்சிக் கட்டிட்டு வருவோம். கூடவே பக்கத்துல இருக்குற ஒன்னு ரெண்டு கோயல்லயும் கட்டிட்டு வந்திருவோம். ஊட்டு எறவாரம், மதில்சுவரு, தோட்டங்காட்டுல இருக்குற பொழிக்கல்லு, கெணத்து மேடு, பாம்பேறி, சுட்சுப் பொட்டின்னு எல்லா எடத்துலயும் பூளைப்பூக் கொப்புகளை வெச்சி காப்பு கட்டிட்டு வர இராத்திரி மணி ஏழெட்டு ஆயிரும்.

    ஒவ்வொரு ஊட்டுலயும் பெத்து, பொறப்பு, ஒறம்பரைகன்னு ஒரே பம்பலா இருக்கும். ஊட்டுக்கூடு பலகாரம் பணடம் மாத்திக்கிறதும், அங்கங்க உக்காந்து பழமை பேசுறதும் நடக்கும். புள்ளார்கோயல் மைதானத்துல கோலாட்டம், ஒயிலாட்டம், கொட்டுமொழக்கு எல்லாமும் நடக்கும்.

    அடுத்த நாள் பெரிய நோம்பி. காலையில வெடியிறதுக்கு முன்னாடியே எழுந்து தலைக்கு வாத்துட்டு, கார வாசலுக்கு அல்லாரும் வந்துருவோம். கார வாசல் நடுப்புல பெரிய அய்யன் கல்லு வெச்சு அடுப்புக் கூட்டுவாரு. உன்ற அக்கா வழிச்சி உட்டு மஞ்சத்தூவி கோலம் போட்டு உடுவா. நானும் உன்ற அக்காளும் கரும்பு, காப்பு கட்டுனதுல மிச்சமான வேப்பந்தழை, ஆவரம்பூவு, மஞ்சக்கொப்பு, துளசிச்செடி, துண்ணூர்ப்பத்திரி எல்லாமும் வெச்சி சோடனை செய்வோம். ஆத்தாவும் அய்யனும் சேந்து பொங்கல் வெப்பாங்க. உன்ற அக்கா பள்ளையம் போடுவா. பொங்கல் பொங்குனவுட்டு, கெழக்க வெளுத்து வர்ற கதிரவனுக்குப் பொங்கல் வணக்கமும் நாட்ராயனுக்கு பள்ளையமும் படைச்சி சாமி கும்புடுவோம். காலையில பொங்கச் சோத்தை உண்டு போட்டு, அல்லாரும் பொறப்புட்டு ஆண்டியூர் காளியம்மன் கோயலுக்கு போயிட்டு வருவோம். கொஞ்ச பேரு திலுமூர்த்தி மலைக்குப் போயிட்டு வருவாங்க. பெரியூட்டு ஆளுக எல்லாம் கெழக்க பழநிக்குப் போயிட்டு வருவாங்க.

    பெரிய நோம்பி அன்னிக்கு இராத்திரி முச்சூடும் ஊர்த்தலைவாசல்ல, ஊர்த்தலைவருக்கு மொறை செஞ்சி ஆட்டபாட்டம் நடக்கும். ஒரு பக்கம் கொட்டுமொழக்கு நடக்கும். ஆம்பளை ஆளுகெல்லாம் ஒயிலாட்டம், கோயில்மாடு மிரட்டுறது, சலங்கையாட்டம்னு பல வேடிக்கைகளும் செஞ்சி பராக்கு பார்க்க வெப்பாங்க. பொம்பளையாளுக கும்மியடிச்சி கந்தபுராணம் சொல்லுவாங்க.

    வெடிஞ்சி எந்திரிச்சா, பட்டி நோம்பி! பண்ணையம் வெக்கிறவங்களுக்கெல்லாம் இதான் நோம்பி நாளு. ஊர்க்குளத்துல அங்கங்க நின்னு பண்டங்கன்னுகளைக் கழுவியுடுவாங்க. நான் பெரிய வாய்க்கால்ல போயி மாடு கன்னுகளைக் குளிப்பாட்டியுட்டு ஓட்டிட்டு வருவன். கொம்பு சீவி பெயிண்ட் அடிச்சுடுவேன். மொட்டை வண்டிக்கும் பெயிண்டி அடிச்சுடுவேன். சவாரி வண்டிக்கு மழத்தண்ணி ஒழுகாதபடிக்குத் தார் பூசியுடுவோம். போனகிழமைச் சந்தையில வாங்கிட்டு வந்த மொகரைக்கவுறு, மூக்கணாங்கவுறு, கைக்கவுறு, கொம்புச்சூடி, கம்பளிக்கவுறு, கழுத்துச்சங்கு அல்லார்த்தையும் கொண்டாந்து பண்டங்கன்னுகளுக்குப் பூட்டியுடுவோம். காளைகளுக்கு கழுத்து மணியும் கொம்புச்சூடியும் பொருத்தியுடுவோம். இந்த வேலைக ஒரு பக்கம் நடந்திட்டு இருக்கும் போது, அய்யனும் ஆத்தாவும் களத்து மேட்டுல எல்லா வேலைகளையும் பார்த்துகிட்டு இருப்பாங்க.

    சாய்ங்காலம் அஞ்சு மணிக்கெல்லாம், களத்து மேட்டுக்கு மேவறத்தல்லையில இருக்குற வில்வமரத்துக்கடியில அய்யன் பட்டி கட்டியுடுவாரு. ஆத்தாவும் அக்காவும் பாம்புப் புத்துக்கு விளக்கு வெச்சிக் கும்பிட்டுட்டு வருவாங்க. களத்து மேட்டுல இருக்குற கருப்பராயனுக்கு கலயத்துல பொங்கல் வெச்சிக் கும்பிடுவாங்க. கருப்பராயனுக்கும் தாத்தைய்யன் கோயிலுக்கும் பள்ளையம் வெச்சி படப்பும் போட்டுக் கும்பிடுவோம். அதுக்குள்ள இருட்டாயிருந்திருக்கும்.

    ஒரு எட்டு மணி வாக்குல அல்லாரும் வில்வமரத்தடிக்கு வந்திருவோம். பண்ணையத்துல வேலை பாக்குற சித்தாள் சின்னமுத்தி, பார்வதி, மாட்டுக்காரன் சின்னான், வேலையாளுக வேலன், கந்தன் அல்லாரும் அவங்கவங்க ஊட்டு ஆளுகளோட வந்திருவாங்க. குருவனும் அமுசாவும் தீப்பந்தம் கொண்டாந்திருவாங்க. ரெண்டு தீப்பந்தம் எரியுற வெளிச்சத்துல வில்வமரமே எரியுற மாதிரி இருக்கும். அல்லையில தேங்கா மட்டைகளை எரிச்சுட்டு தப்பட்டைப் பலகைகளை காய்ச்சிட்டே குளிர் காஞ்சிட்டும் இருப்பாங்க.

    அய்யன் கைவாகுல பட்டி தயாரா இருக்கும். களிமண்ணும் மாட்டுச் சாணியும் கலந்து தெப்பக்குளம் கட்டியுட்டு இருப்பாரு. அதுல நெம்ப அழகா ஆவரம்பூவு, மொடக்கத்தான் பூவு, மாவிலை எல்லாத்தையும் குத்தியுட்டு, கார்த்திகை விளக்குகளை அங்கங்க வெச்சிப் பத்த வெச்சிருப்பாரு. கட்டுன தெப்பக்குளம் பூராவும் செஞ்சேரிமலையிலயோ, திருமூர்த்தி மலையிலிருந்தோ கொண்டு வந்த தீர்த்தத்தை வுட்டு நெப்பியிருப்பாரு. குளத்துச் செவுத்துல கார்த்திகை விளக்கு எரியொ, குளத்துக்குள்ள இருக்குற வெங்கச்சாங்கல் சாமிக அப்படியே மின்னும்.

    தெப்பக்குளத்தை ஒட்டி முன்னாடியே வெங்கச்சாங்கல்லுல சாமி வெச்சி, அதுக்கு சந்தனம், துண்ணூரு, குங்குமம் எல்லாம் வெச்சி உட்டிருப்பாரு அய்யன். அந்த சாமிக்கு முன்னாடிதா படையல் படைப்பாங்க.

    அந்த படையல்ல, பண்ணையத்து ஆளுக அல்லார்த்துக்கும் மனசு நிறைஞ்சு, மனம் போல துணிமணிக வெச்சிருப்போம். ஒவ்வொரு துணிமணிகளுக்கும் மேல பொங்கப்பணம் ஆயிரம், ஐநூறுன்னு வெச்சிருப்போம். அந்த வருசம் வெளைஞ்ச வெளைச்சலைப் பொறுத்து, மூணு பொங்கல், ஆறு பொங்கல், பன்னென்டு பொங்கல்னு வெள்ளாமையப் பொறுத்து அது மாறும். கறந்த பாலைக் கொண்டாந்து பட்டிக்கு முன்னால வெச்சிறுவோம்.

    அய்யன் செரின்னு சொன்னவுடனே, பண்ணையத்துல இருக்குற ஆளுக எல்லாரும் தப்பட்டை பலகை, கொட்டு மொழக்குன்னு வாத்தியம் போடுவாங்க. நாங்களும் ஒறம்பரைகளுமா சேந்து களத்து மேட்டுல கும்பிட்டு வந்து, பொங்கல் பொங்கி, தேங்கா பழம் உடைச்சி, பொரி கடலை எல்லாம் வெச்சி சாமி கும்புடுவோம்.

    அய்யன் நாலு பேர்த்தை மின்னாடி வரச் சொல்லுவாரு. ஒருத்தர் கையில ஒரு தூக்குப் போசி நிறைய தண்ணி. ரெண்டாவது ஆளு கையிலயும் ஒரு தூக்குப் போசி நிறைய தண்ணி. மூனாவது ஆள் கையிலயும் ஒரு தூக்குப் போசி நிறைய தண்ணி. நாலாவது ஆள் கையில வாணாச்சட்டி நெறைய பொங்கலும் குடுத்துருவாரு.

    இப்ப மூனு பேரும், பண்டங்கன்னுக கட்டி இருக்குற கட்டுத்தாறையச் சுத்தியும் போகோணும். மொத ஆள் கையிலிருக்குற மாவிலைய தூக்குப் போசியில உட்டு எடுத்து, “கை கழுவு பட்டியார் கை கழுவு”ன்னு சொல்லிட்டே போவாரு. அடுத்த ஆள் அதே மாதர, மாவிலைய போசிக்குள்ள உட்டு எடுத்து, “வாய் கழுவு பட்டியார் வாய் கழுவு”ன்னு சொல்லிட்டே போவாரு. அடுத்து வர்ற ஆளு, ”அரசன்னம் பட்டியார் அரசன்னம்”னு சொல்லுவாரு. நாலாவதா வர்ற ஆளு, ஒவ்வொரு பண்டங்கன்னுக்கும் ஒவ்வொரு கவளம் பொங்கச் சோத்தை ஊட்டியுடுவாரு. இப்படி ஒரு விசுக்காவோ, மூனு விசுக்காவோ, இருக்குற பொங்கச் சோத்துக்கு ஏத்தா மாதர மாடு கன்னுகளுக்கு பொங்கச் சோத்தை ஊட்டியுடுவோம்.

    கை, கால் மூஞ்சியெல்லாங் கழுவிட்டு வந்து அல்லாரும் கட்டியுட்டு இருக்குற பட்டி மின்னாடி, தீப்பந்தத்து வெளிச்சத்துல உக்காந்துக்குவோம். பண்ணையத்து ஆளுகெல்லாம் தண்ணி வாத்து எடுத்துக் குடுத்த புதுத்துணிகளை உடுத்திட்டு வருவாங்க. அவங்களும் எங்களுக்கு எதுத்தாப்பல உக்காந்துக்குவாங்க. அறுவடை எல்லாம் எப்படிப் போச்சு, அடுத்த வருசம் பண்ணையத்துக்கு ஆரெல்லாம் இருக்கப் போறாங்க, அவங்களுக்கு வருசம் அளக்குறது எவ்வளவு, கூலி எவ்வளவுன்னு பேசுவாங்க. நோம்பி கழிச்சிப் பேசிக்கலாமுங்கன்னும் சொல்லீருவாங்க. ஆனா, மாடு கன்னு பாத்துகுறவங்களை முன்னாடி வரச் சொல்லி குத்தம் குறையிருந்தா மன்னிச்சுக்கப்பா; நீ மனசு நிறைஞ்சாத்தான் பட்டி நெறையும்; எதுனாலும் சொல்லிப் போடுன்னு சொல்லிக் கேட்டு மனசு நிறையப் பண்ணுவாங்க.

    அது முடிஞ்சதீமு, கொட்டு மொழக்கு ஆரம்பமாயிரும். முடக்கத்தான் கொடியில பெரிய வடம் செஞ்சி, தண்ணி நெறஞ்சி இருக்குற பட்டிக்கு முன்னாடி ரெண்டு அல்லையிலயும் ரெண்டு பேர் அந்த வடத்தை குறுக்க புடிச்சிட்டு நின்னுக்குவாங்க. இதை கன்னுமெரட்டுன்னு சொல்லிச் சொல்றது. கொட்டு மொழக்கோட, இருக்குற தூக்குப்போசி, இரும்புச்சட்டின்னு கையிக்கு கெடைக்குறதை எல்லாத்தையும் கையில வெச்சிட்டு அடீஅடீன்னு அடிச்சி கொட்டு மொழக்குவாங்க. அந்த கொட்டுமொழக்குக்கு நடுப்புல, பொம்பளையாளுக குலுவை போட, ஆம்பளை ஆளுக “கலகலகலகல”ன்னு மாட்டுக்கன்னை புடிச்சாந்து மிரட்டியுட்டு பட்டிய மிதிக்க வெச்சி அழிச்சுடுவாங்க. மாட்டுக்கன்னும் அந்த வாத்தியம் குலுவை சத்தத்துக்கு மிரண்டு போயி சங்குசங்குன்னு குதி போட்டுட்டு ஓடிப் போகும். ஒரே கொண்டாட்டமா இருக்கும்.

    சித்த நேரங்கழிச்சு, வந்திருக்கவங்க அல்லார்த்துக்கும்  பந்தி உடுவாங்க. மொதல் மரியாதை பண்ணையத்துல வேலை செய்யுற ஆளுகளுக்குத்தா. அவிகளை உக்கார வெச்சி, இலையில அரிசி மாவு, தினை மாவுப் பலகாரமெல்லாம் வெச்சிப் பந்தியுடுவாங்க. அப்புறம் ஒறம்பரைகெல்லாம் சேர்ந்து விருந்து உண்டு போட்டு ஊட்டுக்குப் போக மணி காலையில ரெண்டு மூனுன்னு ஆயிரும்.

    வெடிஞ்சா, மூக்கரசு நோம்பி. பூநோம்பின்னும் சொல்லுவாங்க. வயசுப் பொண்ணுங்க பையங்கெல்லாம், ஊட்டுப் பலகாரத்தை கட்டுச்சோறா கட்டிகிட்டு ஆண்டியூர் கரட்டுல இருக்குற வழுக்காம் பாறைக்குப் போவாங்க. அங்க இருக்குற வழுக்காம் பாறையில வழுக்கி விளையாடுறது, பன்னாங்கல் விளையாடுறது, கூட்டாஞ்சோறு திங்கறது, ஆலமரத்துல தூரி கட்டி விளையாடுறதுன்னு விதவிதமா பொழுதா வரைக்கும் விளையாடிட்டு வருவாங்க.

    நாங்கெல்லாம் சோமவாரப்பட்டியில இருக்குற மாலகோயிலுக்குப் போவம். அங்க, ஆல் கொண்ட மால் திருக்கோயில்னு ஒன்னு இருக்கு. சுத்துபத்து நூத்திப்பத்து கிராமங்கள்ல இருந்தும் பண்ணையத்துக்காரங்க அங்க வருவாங்க. கூட்டம்னா கூட்டம், அப்படியொரு கூட்டமா இருக்கும். அல்லாரும் அவங்கவங்க மாட்டுப் பாலைக் கொண்டாந்து, ஆல் கொண்ட திருமாலுக்கு ஊத்திட்டுப் போவாங்க. அவங்கவங்க காளை மாட்டுக்கு மணி கட்டி, கொட்டுமொழக்கோட ஆட்டம் போட்டுட்டே கோயலுக்கு வந்து கோயல் திருவமுது ஊட்டி விட்டுக் கூட்டிட்டுப் போவாங்க. வண்டி கட்டிட்டு நெறைய சனம் வந்து போகும். கோயல் மைதானத்துல ஆட்டம் பாட்டம்னு வேடிக்கைக நெம்ப இருக்கும். அதுகளைப் பாக்குறதுக்கும் நெறைய சனம் வந்து போகும்.

    அன்னிக்கி சாயங்காலம், ஊர்க்கிணத்துல வெச்சி பூநோம்பி. ஊர்ப் பொம்பளைங்க எல்லாம் வந்து ஒன்னு கூடி கும்மியடிச்சிப் பாடுவாங்க. பாட்டுப் பாடிட்டே ஊர்வழியில, இட்டேரியில, கோயல் தோட்டம் துறவுன்னு நாலாபக்கமும் பாட்டுப் பாடி, கும்மியடிச்சி, முளைப்பாரி எடுத்திட்டு போவாங்க. ஊர்முச்சூடும் போயி ஆவரம்பூவு, துளசிச்செடி, பொன்னரளி, பூவரளின்னு எல்லாம் பொறிச்சிட்டு வந்து சாமிக்கு சாத்திட்டு இராவு முச்சூடும் பாட்டுப் படிச்சி, கும்மியடிச்சி, விளக்குமாவு எடுத்து திருவிழாவை விழாவாக் கொண்டாடுவாங்க. கொட்டு மொழக்கு, உரிமி மேளம், பம்பை மேளம், சிலம்பாட்டம், இறகாட்டம்னு அதுகளும் ஊருக்குள்ள நடக்கும்.

    இப்படியான பூ நோம்பியில மனசு மசிஞ்சு காதல் மலர்றதும் உண்டு. அப்படியான காதல்ல மனசு மசிஞ்ச காத்தவராயன், அவங்க அம்மாவுக்குப் பாடுற பாட்டோட இந்த பொங்கல் பத்தின நம்ப பழமைய முடிச்சிக்கலாமுங்க மச்சே, சரியா? இந்த சொல்றன் கேட்டுகுங்க.

    அங்கே கண்டேன் மெய்மறந்தேன்
    அழகான மாலையவளை
    கண்டு வந்த பூநோம்பிதொட்டு
    கண்ணுறக்கம் இல்லையம்மா
    படுத்தா உறக்கமில்ல
    பாய் போட்டாத் தூக்கம் வருகுதில்லே
    பாத்துவந்த வங்கணத்தியவளை
    சேத்துக்கூட்டியார விடை கொடம்மா
    வாழ்த்தி வரங்குடம்மா
    நானும் போயவர்றேனம்மா
    பாவை வந்தாப் போதுமம்மா!!”

    மாமனும் மச்சானும் விடை பெற்றுக் கொள்கிற வேளையில் ஒரு சேரச் சொல்லிக் கொண்டார்கள், “பொங்கல் பொங்கோணும்! வெள்ளாமை வெளையோணும்! பட்டி பெருகோணும்!!”

     

    Share
  • பேணுக வீடும்!

    வன்புணர்வுக்கெதிரான போராட்டத்தில்
    பங்கேற்றுத் திரும்பியவனைக் கண்டதும்
    ஓடோடிச் சென்று
    தாவிப் பாய்ந்து
    மேலேறி
    கழுத்தைக் கட்டிக் கொண்டு
    அன்பும் அக்கறையுமாகச் சொல்கிறாள்!
    அம்மாவை அடிச்சிடாதீங்கப்பா
    அம்மா பாவம்ப்பா
    இன்னிக்கி… இன்னிக்கி….
    சோறு கொஞ்சமா குழைஞ்சிடுச்சாம்!!

    Share
  • கண்ணாள் ஓதுகம்

    இன்று மனையாளிடமிருந்து இன்னமும் எதுவும் வாங்கிக் கட்டிக் கொள்ளவில்லை. இப்படியான நல்லதொரு தருணத்தில், என்றோ அறியப்பெற்ற இலவு காத்த கிளியின் கதைதான் நினைவுக்கு வருகிறது.

    காய் பழுத்துக் கனியாகும் தருவாயில் உண்ணலாமெனக் கிளியானது காத்திருக்க, முற்றி வெடித்த காயிலிருந்து தெறித்த வெண்பஞ்சுத் திரள்கள் சிதறி வான் நோக்கிப் பறக்க, காத்திருந்த அக்கிளி ஏமாந்து போனதாம். ஆனால் நான் இங்கு கண்டு கொண்டிருக்கும் காட்சியோ அதனின்றும் மாறாக இருக்கிறது.  இந்த இலவம் பஞ்சுத் திரள்கள் போன்ற இவ்வெண்கீற்றுகள் நளினத்தோடு அசைந்தாடியபடியே கீழ் நோக்கி வந்து புல்வெளியின் மேல் படர்ந்து கொண்டிருக்கின்றன.

    ”ஒயிட் கிறிஸ்துமஸ் எனச் சொல்வது இதனால்தானோ?” என்று எண்ணியபடியே சாளரத்தினூடாய் வெளியில் பார்த்துக் கொண்டிருக்கிறேன். வானிலிருந்து கீழிறங்கிக் கொண்டிருந்த உறைபனிப் பிசிர்களின் நுரைநாட்டியம் எழிலார்ந்த கண்காட்சியாய் இருக்கிறது. இது போன்ற காற்றரவமற்ற பனிப்பொழிவின் போது பறக்கும் சன்னக்கீற்றுகளின் தவழோட்டப் போட்டி எனக்கு மிகவும் பிடிக்கும்.

    குறிப்பிட்ட உயரத்தில் தவழ்ந்து கொண்டிருக்கும் இரு வேறு பனிக்கீற்றுகளை ஒரு சேரக் கவனித்து, அவை எப்படியான நளினங்களைக் கையாண்டு தரையிறங்குகின்றன; எது தரையைக் காலத்தாழ்ச்சியுடன் பிந்திச் சென்றடைகிறது என்பதே அவற்றுக்கிடையிலான போட்டியாகும். நாம் ஒன்றைக் கணிக்க, பெரும்பான்மையான நேரங்களில் அதுவே பிந்திச் சென்றடைந்து வெற்றி பெறும். ஆனால்  ஒரு சில கீற்றுகள் காற்றோடு கரைந்து விடும்; அல்லது, பிறிதொரு கீற்றோடு புணர்ந்து மறைந்து விடும். இப்போட்டிக்குச் சுவை கூட்டுவதே அத்தகைய எதிர்பாராதவைதான்.

    “காலையில எழுந்ததுமே வேடிக்கைதானா? எந்திரிச்சதே காலையில பத்து மணிக்கு. இதுல இவருக்கு அப்படியென்ன வேடிக்கையோ? ஏங்க, வாங்க இங்க!”

    பனிப்பொழிவுடனான இலயிப்பில் இருந்தவனை இடை மறித்ததிலிருந்து துவங்கியது, அன்றைய நாளுக்கான ஓதுகம்.  இதற்கு பொண்டாட்டி அர்ச்சனை என்கிற மற்றொரு பெயரும் உண்டு. நத்தார் நாளில் கிடைக்கப் பெறும் அர்ச்சனை என்பதால், அது ‘நத்தார் நாள் ஓதுகம்’ எனும் சிறப்பும் பெறுகிறது.

    நத்தார் நாள்! டொரொண்டோ நகரில் வாழும் இலங்கைத் தமிழர்களிடமிருந்து கற்றுக் கொண்டதில் இதுவுமொன்று. போர்ச்சுக்கீசியர் ஆண்ட நாடான இலங்கையில், கிறிஸ்துமசைக் குறிக்கும் போர்ச்சுக்கீசியச் சொல்லான ’நாட்டல்’ எனும் சொல்லில் இருந்து பிறந்ததான் இந்த நத்தார் எனும் தமிழ்ச் சொல்.

    அது கிடக்கட்டும். நத்தார் நாள் என்பதால் நமக்கான அர்ச்சனைகள் ஓய்ந்து விடுமா? அவை ஓய்ந்து விட்டால்,  நம்மால்தான் இயல்பாய் இருந்துவிட முடியுமா என்ன??

    “என்ன நாஞ்சொல்றது காதில விழுதா, இல்லியா??”

    “விழுகுது, விழுகுது! காபி போட்டுட்டே சொல்லலாம்ல?!”

    “அதெல்லாம் போட்டுத்தான் வெச்சிருக்கு. உங்களுக்குதா நான் சொல்றது காதுலயே விழுகுறதில்ல! என்னங்க, எனக்கு ஒரு பொட்டுத் தூக்கங்கூட இல்ல தெரியுமா?”

    “அட! ஏன், என்னாச்சி?”

    “ஆமாங்க. திகழ் நல்லா தூங்கிட்டா. கமழ் கொஞ்சங்கூடத் தூங்கவே இல்ல. நாலஞ்சி வாட்டி வயித்துல போயிடிச்சி. ஒரே அனத்தல். ஆளே, கிரங்கிப் போயிட்டாளுங்க. ஒரு எட்டு எமர்ஜென்சிக்குப் போயிட்டு வந்திருங்க. கிறிஸ்துமஸ் நாளன்னிக்கு வேற யாரும் தெறந்திருக்க மாட்டாங்க!”

    “ப்ச்! என்னை எழுப்பி இருக்கலாமே? இதா, நான் ஒடனே கிளம்புறேன்!!”

    பாவம் பிள்ளை. சுருண்டு படுத்திருக்கிறாள். என்னைப் பார்த்ததும் கைகளை நீட்டுகிறாள்.

    “இரு தங்கம்! அப்பா முகங்கழுவி, உடுப்பு மாத்திட்டு வந்து உன்னை எடுத்துக்கிறேன்!” ஒரு முத்தத்தோடு விடைபெற்று, குளியலறைக்குப் போய் ஆயத்தமாகினேன்.

    ”ஏங்க, அதுக்குள்ள எங்க போனீங்க? ஒன்னு சொன்னா, அதைக் கிரமமா செய்ய மாட்டீங்களா?? அதுக்குள்ள இன்ட்டர்நெட்டுல என்ன வேண்டிக் கிடக்கு?”

    “நான் கீழ போயி, வண்டிய ஸ்டார்ட்ல நிறுத்திட்டு வந்தேன். அப்பத்தான கொஞ்சமாச்சும் வெதுவெதுப்பேறி இருக்கும்?!”

    “அதுக்கு இவ்வளவு நேரமா? இன்சூரன்சு கார்டு எடுத்து வெச்சிகிட்டீங்களா?? கையில இந்த பிஸ்கெட் பாக்கெட்டும், தண்ணியும் வெச்சிகிங்க. வயித்துல போறதால நான் பால் எதுவும் குடுக்கலை. சரியா?”

    “சரி!”

    “என்ன சரி? கொழந்தைக்குக் குளிராதா?? இருங்க, ஸ்வெட்டர் போட்டு, தலைக்கும் குல்லா போட்டு வுடுறேன்!!”

    குழந்தை என்னருகில் வந்து சொல்கிறாள், ”அப்பா, நான் நல்லாத்தான் இருக்கன்பா. கூட அம்மா வரலையா? அப்ப, நான் வரலப்பா!”

    ”அப்படியெல்லாம் சொல்லக் கூடாதுடா செல்லம்; போனவுடனே வந்திடலாம் செரியா?”

    வீட்டில் மற்ற பிள்ளைகள் இன்னும் உறங்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள். இரவு படம் பார்த்த பின்னர் ஊரிலிருக்கும் தாத்தா, பாட்டி, பெரியப்பா வீட்டு அண்ணன், தங்கைகளுடன் பேசிவிட்டுப் படுக்கைக்குப் போக வெகு நேரமாகிவிட்டிருந்ததும், பனிபொழிவின் போதான சூழலின் இதமும்தான் அவர்களுக்கான இன்பத்துயிலைக் இன்னமும் கொடுத்துக் கொண்டிருக்கிறது. மறுபுறத்தில் அகத்தாளின் தங்குதடையில்லா ஓதுகமும் தொடர்ந்து கோலோச்சிக் கொண்டு இருக்கிறது.

    அவசரகால மருத்துவமனைக்கும் வீட்டுக்கும் ஆறு மைல்கள்தான். ஆனாலும் அரை மணி நேரம் பிடித்தது. தெருவெங்கும் பனிப்பொழிவு. வேகமாகச் சென்றால் வண்டி ஒருபக்கமாக இழுத்துவிடும் என்கிற அச்சம். மிகக் கவனமாகவும் மெதுவாகவும் உருட்டினேன்.

    “அப்பா, சாந்தாகிளாஸ் எப்பப்பா நம்ம வீட்டுக்கு வந்தாரு? டோரா பொம்மையெல்லாம் எப்பிடிப்பா நம்ம வீட்டுக்கு வந்திச்சி??”, வழியெங்கும் கிறிஸ்துமஸ் தாத்தா புராணமே பாடினாள் கமழ். திடீரெனத் திசைமாறிக் கேட்டாளே ஒரு கேள்வி?! வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு ஒன்றுக்கு நான்கு முறை மூச்சிழுத்துக் கொண்டேன்!! எப்படி, இந்தக் குழந்தைகளுக்கு இப்படியெல்லாம் கேட்கத் தோன்றுகிறதோ??

    “சொல்லுங்ப்பா. சாமிகிட்டப் போன குழந்தைகளோட வீட்டுக்கும் சாந்தா போயிருப்பாராப்பா? அவங்களுக்குக் குடுத்த கிஃப்ட் எல்லாத்தையும் அவங்க அப்பா, அம்மா என்ன செய்வாங்க??”, அமெரிக்காவில் அண்மையில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டின் விளைவாய் எழும் இக்கேள்விகளால் எனக்குத் துக்கம் தொண்டையை அடைத்தது. இருந்தும் அதை அவளுக்குக் காண்பித்து விடாமல் உரையாடலைச் சரிக்கட்ட வேண்டிய கட்டாயத்தில் நானிருக்கிறேன்.

    ”இத பாரு கண்ணா! இது எமர்ஜென்சி டாக்டரைப் பாக்குற இடம்; கொஞ்ச நேரமாகும். அம்மாவைக் கேட்டு அழக்கூடாது. போனதும் டயாப்பரை மாத்திகிடணும். சரியா?”

    சொல்லி முடிக்கவில்லை; அழைப்பு மணி ஒலித்தது. ஓதுகம் என்றால், ஓயாமல் ஓதப்பட வேண்டும்தானே? அல்லாவிடில் அதற்கான இலக்கணக் கூறுகள் பாழ்பட்டு விடுமல்லவா?! சரி, தயாராகுவோம் ஓதுகத்துக்குச் செவிமடுக்க!!

    ”சொல்டா!”

    “போயிச் சேர்ந்ததும் கூப்பிட்டு சொல்ல மாட்டீங்களா? ரோட்டுல பார்த்துக் கவனமாப் போய்ச் சேர்ந்தீங்களா, இல்லையா??”

    “இப்பதான் வந்து வண்டிய நிறுத்துறேன். நீ கூப்பிடுற!”

    “இங்கிட்டு இருக்கிற ஆஸ்பிடலுக்கு எதுக்கு இவ்ளோ நேரம்?”

    “வழியெல்லாம் இன்னும் பனி விழுந்திட்டு இருக்கு. அதான் மெதுவா ஓட்டிட்டு வர வேண்டியதாப் போச்சி!”

    “சரீ..! சரீ… எதுக்கும் ஒரு பதில், ஒரு விளக்கம், தயாரா வெச்சிருப்பீங்களே?! உள்ள போனதும் முதல் வேலையா டயாப்பரை மாத்திடுங்க. பையைக் கார்லயே வெச்சிட்டு போயிடாதீங்க; சரியா?”

    “இம், சரி! சொல்லியனுப்பினது ஞாவகம் இருக்கு. அப்ப நான் வெச்சிடவா?”, உடனே சரியெனச் சொல்வார்கள் என எதிர்ப்பார்ப்பது முட்டாள்தனம்.

    “இல்ல. இன்னொன்னு சொல்லணும் உங்களுக்கு. இன்னிக்குக் கிறிஸ்துமஸ்ங்றதால கொஞ்சம் முன்னபின்ன ஆகும். குழந்தைய பத்திரமாப் பார்த்துகுங்க. உள்ள, போன் வேலை செய்யாது. அப்பப்ப ரூமை விட்டு வெளியில வந்து எனக்குப் பேச முயற்சி செய்யணும். செரியா?”

    ”டே, வெளியில வந்து பேசறதெல்லாம் நடக்குற காரியமா? அதும் குழந்தைய விட்டுட்டு??”

    “முயற்சி செய்யுங்கன்னுதான் சொன்னேன். புரியுதா? செரி, நான் வெச்சிடுறேன். பார்த்து டாக்டர்கிட்ட என்ன ஏதுன்னு கேட்டுட்டு வாங்க!!”

    “ரொம்ப நல்லாவே!”, ஓய்ந்ததடா சாமி! மனத்துள் சிரிப்பு எக்காளமிட்டுக் கொண்டது.

    மருத்துவ மனையிலிருக்கும் கழிவறைக்குச் சென்று குழந்தைக்கு இடப்பட்டிருந்த அரைக்கச்சையை மாற்றி, துடைத்து விட்டுப் பின்னர் புதியதொன்று அணிவிக்கப்பட்டது. வரவேற்பு பணிப்பெண் எங்களைக் கவனித்து உள்ளே அனுப்பினாள். அமெரிக்க மருத்துவ எமர்ஜென்சிப் பிரிவு எனும் அவசர கால சிகிச்சைப் பிரிவில் இது ஒரு வினோதம் என்றுதான் சொல்ல வேண்டும். நான்கைந்து பேர்தான் அங்கு குழுமி இருந்தார்கள். விடுப்புக்காலங்களில் குறைந்தது ஐம்பது, அறுபது பேராவது இருப்பார்கள். ஆனால் இன்று பெரிதாகக் கூட்டமெதுவும் இல்லை. பெருத்த மகிழ்ச்சி.

    சென்றமர்ந்த பத்துமணித் துளிகளுக்கெல்லாம் உள்ளே அழைத்துச் சென்று எங்களுக்கான அறையில் அமர வைத்து விட்டார்கள். இவ்வணுகுமுறையானது அமெரிக்காவுக்கே உரிய ஒரு சிறப்பாகும். மருத்துவமனை, குடிபுகல் மற்றும் குடியுரிமை அலுவலகம் முதலான இடங்களில் இம்முறை கையாளப்படுகிறது. உலகுக்கே உயரிய தலைவர் என நம்பப்படுகிற அமெரிக்க குடியரசுத் தலைவரின் அலுவலகத்திலும் கூட இம்முறையே கையாளப்படுகிறது.

    வருகையாளருக்கான நேர்முக நேரம் ஒதுக்கப்பட்டு அவருக்கான தனியறையும் ஒதுக்கப்பட்டு விடும். குறிப்பிட்ட நேரத்தில் குடியரசுத் தலைவரே அவ்வறைக்கு வந்து, வந்திருக்கும் வருகையாளரைச் சந்திப்பதுதான் அம்முறையாகும். இதன் மூலம், குடியரசுத் தலைவரின் நேர ஆளுமை கட்டுக்குள் வருகிறது; தேவையற்ற காலவிரயம் தவிர்க்கப்படுகிறது. அல்லாவிடில், அவருடைய அறைக்குள் வருகையாளர் வருதல், இருக்கையில் இருத்துதல், வழியனுப்புதல் எனப் பலவாறாக குடியரசுத் தலைவரின் மதிப்புமிக்க நேரம் வீணாகும். இது போன்றே மருத்துவரின் நேரக்கட்டுப்பாடும் கையாளப்படுகிறது.

    தன் கையில் இருக்கும் கரடி பொம்மையுடன் பேசிக் கொண்டு இருந்தாள் கமழ்.  நத்தார் நாளில் வேலை செய்ய நேர்ந்த வருத்தமெதுவுமின்றிப் பேசிச் சிரித்துக் கொண்டிருந்தனர் அறைக்கு வெளியே இருந்த மருத்துவமனைப் பணியாளர்கள். சற்று நேரத்திற்கெல்லாம் மருத்துவர் நீட்றா கதவைத் தட்டிக் கொண்டே உள்ளே நுழைந்தார்.

    உங்களை இந்த நன்னாளில் இங்கு வரச் செய்தது என்னவோ என வாஞ்சையாகக் கேட்டறிந்து கொண்டார் மருத்துவர் நீட்றா. கன்னத்தில் குழிவிழ, ”ஐ காட் கிஃப்ட் ஃப்ரம் சான்ட்டா” என்று சொல்லிச் சிரித்தாள் கமழ். அந்த அயர்விலும் அவள் அழகாய்க் காட்சியளித்தாள். உங்க குழந்தை மிகவும் அழகு எனச் சொல்லிக் கொண்டே அவளது காது, கண்கள் முதலானவற்றைப் பரிசோதித்துக் கொண்டார் நீட்றா.

    ”வயிற்றில் ஏதாவது வைரஸ் இருக்கக் கூடும். உடம்பு சுடவில்லையாதலால் நீங்கள் கவலைப்படத் தேவையில்லை” என்று கூறிக்கொண்டே மருந்துக்கான சீட்டெழுதிக் கொடுத்து விட்டு விடைபெற்றுக் கொண்டார் அவர்.

    குழந்தைக்குச் சட்டை, ஸ்வெட்டர் முதலானவற்றை அணிவித்து வெளியே அழைத்து வந்தேன். மருத்துவரைப் பார்த்ததற்கான உடன்தொகை(copay) செலுத்திவிட்டுத் தலைநிமிர்ந்தேன். என்னதான் மருத்துவக் காப்பீடு வைத்திருந்தாலும், உடன்தொகையாக சொச்சப் பணத்தை நாம்தான் கட்ட வேண்டுமென்பது அமெரிக்கக் காப்பீட்டு நடைமுறையாகும்.

    “சார், கேன் யூ ஹெல்ப் மீ சார்?” என்றாள் அந்த வெள்ளைக்காரி. எனக்கு மனம் சஞ்சலமாக இருந்தது. விட்டேற்றியாக ஏதாவது சொல்லியிருக்கலாம். ஆனால் உதவி கேட்டு நிற்பவர்களை நத்தார் நாளதுவுமாக எப்படி உதறித்தள்ளுவது? கமழ் வேறு உடனிருக்கிறாள். அந்தம்மாவைப் பார்க்கவும் பாவமாய் இருக்கிறது.  எந்த நேரத்திலும் அழலாம் என்கிற தொனியில் இருக்கிறது அவள் முகம். அவளுக்கென்ன துன்பமோ??

    அவளுடைய குழந்தைக்கு உடல் நலம் சரியில்லை என வந்திருக்கிறாள். கிறிஸ்துமசுக்காக இருந்த காசெல்லாம் செலவாகி, பற்று அட்டைகளிலும் இனி கடன் வாங்கப் பெறுமானம் இல்லையாம். மகளுக்கு மருந்து வாங்கச் செலுத்த வேண்டிய உடன்தொகைக்கு இருபது டாலர் வேண்டுமெனக் கேட்கிறாள். மனம் கனக்கிறது. அவளது குழந்தையின் முகமும் பெருஞ்சோகமாய் இருக்கிறது.

    ”என்னிடம் பணமாக இல்லை. வேண்டுமானால் இருபத்தி நான்கு மணி நேர வால்கிரீன்சு மருந்தகத்திற்கு வாருங்கள்; உடன்தொகையை நானே செலுத்தி விடுகிறேன்!” எனச் சொல்லி விடைபெற்றுக் கொண்டேன்.

    இந்த அமெரிக்காவில் இப்படியான ஏழைச்சோகம் நிறைய. காசு இருக்கும் வரையிலும் தாம்தூமென்று பொருட்களாய் வாங்கிச் செலவளிப்பது ஒரு பக்கம். தாய்மார்களின் இப்படிப்பட்ட அவலமும் அல்லலும் மறுபக்கம். கிட்டத்தட்ட முப்பது விழுக்காடு அளவிலான அமெரிக்கக் குழந்தைகளுக்கு அம்மாவின் ஆதரவு மட்டுந்தானாம். தனித்தாயா(single mom)க இருப்பாளோ இவளும்? மனம் பதைபதைத்தது. என்றுதான் இவர்கள் சேமிக்கக் கற்றுக் கொள்வார்களோ??

    உப்பும் புளியும் இருக்கும் மொடாவில், அரைக்காசு, முக்கால்க்காசு எனச் சிறுகச் சிறுகச் சேமிக்கும் என் அம்மாவின் நினைவுதான் எனக்கு வருகிறது. அஞ்சறைப் பெட்டியில் காசில்லையென்றால் அம்மாவுக்கு தலையே வெடித்துவிடும். அதெல்லாம் இன்றைய அம்மாக்களுக்குத் தெரிவதே இல்லை. எதுவும் கிடைக்காத நேரத்தில் சாணி தட்டிக் காய வைத்த வறட்டிகளை விற்றாவது காசாக்கி விடுவாள் அம்மா.

    விடுப்பு நாளான இந்நாளில் திறந்திருக்கும் ஒரே ஒரு மருந்தகம், இந்த வால்கிரீன்சு மருந்தகம்தான். நான் வந்து சேர்ந்த கொஞ்ச நேரத்தில் அந்த வெள்ளைக்காரியும் வந்து விட்டாள். எனது கையிலிருந்த மருந்துச் சீட்டினைக் கொடுத்தேன். அவளும் அவளது குழந்தைக்கானதைக் கொடுத்திருக்கிறாள். இன்னும் இருபது மணித்துளிகள் ஆகும் எனச் சொல்லிவிட்டார்கள்.

    “என்ன, நானே வெளியில வந்ததும் கூப்பிடச் சொன்னனே? கூப்பிட மாட்டீங்களா??”

    “சாரி! நான் இப்பதான்…”

    “எதுக்கும் ஒரு சாரி. அதெப்படிங்க உங்களால முடியுது? சரி, டாக்டர் என்ன சொன்னாரு?”

    “ஸ்டொமக் வைரஸா இருக்கும்னு சொல்லி மருந்து எழுதிக் குடுத்திருக்காரு!”

    “சரியப்ப, வீட்டுக்கு வாங்க. நான் வாங்கிக்கிறன்!!”

    “இல்ல. நான் வால்கிரீன்சு பார்மசியில குடுத்து இருக்கன்!”

    அவ்வளவுதான். சாமியாடி விட்டாள். “எங்கிட்ட சொல்லிட்டுப் போயிருக்கணும். நான் ட்வெண்டிப் பெர்சண்ட் கூப்பன் வெச்சிருக்கன். அது போக, கிரிடிட் கார்டுல பே பண்ணக் கூடாது. ப்ளெக்சிபிள் ஸ்பெண்டிங் அக்கவுண்ட்ல பே பண்ணனும். உங்களை வெச்சிட்டு எனக்குப் பெரிய்ய்ய அக்கப்போரு!!”

    “இல்லடா. நான் ப்ளெக்சிபிள் ஸ்பெண்டிங் கார்டு எடுத்திட்டு வந்திருக்கேன்!”, ஒருவழியாய்த் தப்பித்தாயிற்று. நல்ல வேளையாக, நான் மருத்துவச் செலவுக்கான வருமானவரிக் கழிவு தரும் ப்ளெக்சிபிள் ஸ்பெண்டிங் பற்று அட்டையைக் கொண்டு வந்திருந்தேன். அல்லாவிடில், அதற்கும் சேர்த்து வாங்கிக் கட்டிக் கொள்ள வேண்டியிருந்திருக்கும்.

    மீண்டும் அந்த வெள்ளைக்காரி என்னைப் பார்த்து ஒருவிதப் பணிவோடு சிரித்துப் பேச முயன்றாள். நான் மகளைக் கவனிக்கும் பாங்கில் தவிர்த்து விட்டேன். பேச்சுக் கொடுத்தால், சொந்தக்கதை சோகக்கதையைச் சொல்வார்கள். நமக்கெதுக்கு வம்பு?

    முறை வந்ததும், வெள்ளைக்காரியின் மருந்துக்கும் எங்களது மருந்துக்கும் நானே உடன்தொகை செலுத்து விடுகிறேன் எனச் சொன்னேன். அங்கிருந்த வேலையாள் என்னை ஒரு மாதிரி வித்தியாசமாய்ப் பார்க்கிறாள்.

    மருந்தைப் பெற்றுக் கொண்டவள் என்னைப் பார்த்து மீண்டும் நன்றி சொன்னாள். அடுத்த மாதம் காசோலை அனுப்புவதாகச் சொல்லி, அனுப்புவதற்கு ஏதுவாக என் வீட்டு முகவரியைக் கேட்டாள். பணிவுடன் மறுத்து விட்டேன். அலைபேசி எண்ணாவது கொடுங்கள் என வேண்டினாள். நத்தார் நாளில் உதவக் கிடைத்த வாய்ப்புக்கு நன்றியெனச் சொல்லி அலைபேசி எண் பகிர்வதையும் தவிர்த்து விட்டேன்.

    கண்களில் நீர் மல்க அவளும், வீட்டிற்குப் போக வேண்டிய அவசரத்திலிருந்த நாங்களும் விடை பெற்றுக் கொண்டோம். கண்ணிலிருந்து மறையும் வரையிலும், அவர்களைப் பார்த்து கையசைத்துக் கொண்டே வந்தாள் கமழ்.

    ”அட, நீங்க இவ்வளவு சுருக்கமா வருவீங்கன்னு நான் எதிர்பார்க்கவே இல்லங்க!”

    “இன்னும் முன்னாடியே வந்திருப்போம். ஆனா அந்த இன்னொரு குடும்பத்துக்கும், அதான் அந்த வெள்ளைக்காரிக்கும் சேர்த்து பில் பே பண்றதுல கொஞ்சம் நேரம் செலவாயிடிச்சி!”

    “இன்னொரு குடும்பமா? என்ன உளர்றீங்க?? யாரது?? எழவு, உங்களை அனுப்புனதே தப்பாப் போச்சி!!”

    அவ்வளவுதான்! நத்தார் நாள் ஓதகம் பெருவேகம் கொண்டு சீற்றத்துடன் பொழியத் துவங்கியது.

    “நீ கொழந்தையப் பாரு. எனக்கு செமயாப் பசிக்குது! சிறுகுடல் பெருங்குடலைத் தின்றும் போல இருக்கு. போயிக் குளிச்சிட்டு வந்து சோறுங்கணும் முதல்ல!”, நடந்ததை முழுமையாகச் சொல்லாமல் வேகமாய்ச் சென்று குளியலறைக்குள் நுழைந்து கொண்டேன். மெய்யாலுமே பசிக் கிரக்கமாயிருக்கிறது எனக்கு.

    வீட்டு முகவரி, அலைபேசி எண் முதலான தனிப்பட்ட தகவலெதையும் பகிராமல் உதவி செய்து வந்த செருக்குடன் கூடிய மகிழ்ச்சியோடு, வெதுவெதுப்பான சுடுநீர்ச் சாறல்க்குளியலில் திளைத்துக் கொண்டிருக்கிறேன் நான்.  “யாரோ வெள்ளைக்காரியாம். யாரது? அவளை எப்படி இந்தாள் சந்திச்சாரு? இந்தாள் எதுக்கு அவளுக்குப் பணம் கட்டணும்??” இப்படியான பல குடைச்சல்களுடன் கூடிய தலைவலி வரவேண்டியவருக்கு வந்துவிட, சமையலறையில் உருண்டு புரண்டு சத்தம் எழுப்பிக் கொண்டிருக்கிறது வாயில்லாத எங்கள் வீட்டுப் பாத்திரங்கள்.

    Share
  • அச்சம் தவிர்!

    வன்புணர்வுக்கெதிரான
    போராட்டக் களத்தில்
    எவனோ
    இடுப்பைக் கிள்ளிவிட்டான்!
    இதை மற்றவரிடம்
    சொல்வதா? வேண்டாமா??
    ஆறுதல் கிடைக்குமா?
    அவமானம் நேருமா??
    சீற்றம் கொண்ட புயலே
    சிக்குண்டது புயலில்!!
    இதை எல்லாம் வீணாக
    எதுக்கு பெரிசு பண்ணிட்டு?!
    அரவமற்று அடங்கிப் போனது
    களமாடிய ஆவேசப் பெருங்காற்று!!

    Share
  • கைப்பாவை

    வெள்ளிக்கிழமை என்றாலே குதூகலம்தான்.  எப்படியும் காலை நேரம் முழுக்க அடுத்த வாரத்திற்கான முன்னேற்பாட்டுக் கலந்துரையாடல் கூட்டங்கள் இருக்கும். அவை நடந்து முடிந்து தத்தம் இருக்கைகளுக்குச் செல்லும் போது நண்பகல் உணவு வேளை வந்து விடும். வார ஈறில் நீ என்ன செய்யப் போகிறாய் எனக் கேட்பதும், நான் என்ன செய்யப் போகிறேன் எனச் சொல்வதிலுமாக ஓரிரு மணி நேரங்கள் கழியும். பிறகென்ன? வார ஈறும், அதையொட்டிய  விடுமுறை நாட்களும்தான். மகிழ்ச்சி!

    அந்நினைப்பினால் மேலிட்ட மனத் துள்ளாட்டத்தினூடாக வந்து கொண்டிருந்த என்னை, அலேக்காகத் தூக்கியது கமகம வாசனை. தகவல் தொழில்நுட்பப் பொறியாளராக நான் வேலை பார்க்கும் நிறுவனத்திலிருந்துதான் கமழ்ந்தடிக்கிறது அந்த நறுமணம்.

    நான் குடியிருக்கும் மிச்சிகன் மாகாணத்தில் இருக்கும் மார்ஷல் எனும் சிற்றூரிலிருந்து பதினேழாவது மைல் தொலைவில், டெட்ராய்ட் நகரிலிருந்து சிகாகோ செல்லும் விரைவுச்சாலையில் அமைந்திருக்கிறது கெலாக்( Kellogg Cereal Company )  தானியத்திண்டித் தொழிற்சாலை. இத்தொழிற்சாலை அமைந்திருக்கும் சிறுநகரான பேட்டில்கிரீக் நகர், சீரியல் சிட்டி என்றும் அழைக்கப்படுகிறது. எங்கள் நிறுவனத்தின் போட்டி நிறுவனமாகிய போஸ்ட் சீரியலும் இதே ஊரில்தான் அமைந்திருக்கிறது.

    கெலாக்  நிறுவனத்தை, வில் கீத் கெலாக் என்பவர் 1906ஆம் ஆண்டு நிறுவினார். அவரது தம்பியாகிய ஜான் ஹார்வே கெலாக் என்பவரே தானியத்திண்டி( cereal )யைக் கண்டு பிடித்தவர் என்று சொல்லிக் கொள்வதில் எங்களுக்கும் பெருமை. ஆங்கிலத்தில் சீரியல் எனப்படுகிற தானியத்திண்டி இல்லாத வீடு அமெரிக்காவில் கிடையாது. காலையிலேயே சமைக்கப்பட்ட உணவும் இறைச்சியும் உண்டு கொண்டிருந்த மேலைநாட்டைத் திருப்பிப் போட்டது தானியத்திண்டி எனச் சொல்லலாம். அதிலும் கெலாக் தானியத்திண்டிக்கென்றே ஒரு தனியிடம் சந்தையில் எப்போதும் உண்டு.

    வாகனத் தரிப்பிடத்தில் வாகனத்தை நிறுத்தி விட்டு நேராக என் அறைக்குச் சென்ற நான், மின்னஞ்சல்களைப் பார்த்து மறுமொழி கூற வேண்டியவற்றுக்கெல்லாம் பதில் மடல் அனுப்பினேன். அதன் பிறகு, அடுத்தடுத்து நடந்த கூட்டங்களில் முனைப்புடன் பங்கேற்றுக் கொண்டிருந்தேன். பொதுவாக கூட்ட அறைக்குள் என் அலைபேசியை எப்போதும் எடுத்துச் செல்வதில்லை. எப்படியாகிலும் அது என் கவனத்தைச் சிதற வைப்பதோடு மற்றவரது கவனிப்புக்கும் ஊறு விளைவிக்கும் என்பதாலேயே.

    தானியத்திண்டிக்கான சில்லறை வணிகத்தை இணையத்தினூடாக மேம்படுத்துவது எப்படி என்பதைப் பற்றி காரசாரமான விவாதம் நடந்து கொண்டிருந்தது. இடையிடையே அதற்கான மென்பொருள் கட்டமைப்பு குறித்த வினாக்களை நான் விடுத்துக் கொண்டிருந்தேன். அதே நேரத்தில் எங்கள் துறையின் நேர்முக உதவியாளர் மேரி அறைக்கு வெளியே நின்றபடி என்னைப் பார்த்துச் சைகை செய்து கொண்டிருந்தாள். இவள் எதற்கு என்னை அழைக்கிறாள் எனக் கோபமாகவும் இருந்தது; காரணத்தை அறியும் பொருட்டு ஆவலும் மேலிட்டது எனக்கு. அமைதியாக கூட்ட அறையினின்று வெளியேறினேன்.

    “என்ன மேரி? நான் முக்கியமான ஒரு கூட்டத்தில இருக்கேன். கொஞ்சம் பொறுத்திருக்கக் கூடாதா?”

    “மன்னிக்கணும் மணி. உன்னோட மனைவி சுமதி அழைப்புக்கு மேல அழைப்பு விடுத்து, உடனே உன்கிட்ட பேசியே ஆகணும்னு சொல்றாங்க!!”

    ஒரே குழப்பமாக இருந்தது. பக்கத்து ஊரான ஆல்பியனில் இருக்கும் மருத்துவமனையில் உடலியக்க மருத்துவராக வேலை பார்க்கும் என் மனைவி இந்நேரம் வேலைக்குப் போயிருப்பாள். மகள் அமிழ்தா குழந்தைகள் காப்பகத்தில் இருப்பாள். ஒரு வேளை ஊரிலிருக்கும் அம்மா, அப்பாவுக்கு உடல்நலக் குறைவு ஏதாவதா? எப்போதும் இல்லாதபடிக்கு என்னை எதற்கு இவள் அழைக்க வேண்டும்??

    அலைபேசி அறையில் இருக்கிறது. கையில் கடிகாரம் கட்டும் பழக்கமும் கிடையாது. மேரியிடமே நேரம் என்னவெனக் கேட்டுத் தெரிந்து கொண்டேன். காலை மணி பதினொன்று ஆகிறது. ஆக, இந்தியாவில் இரவு ஒன்பதரை மணி. சரி, முதலில் அம்மாவையே அழைத்துப் பேசி விடுவோமென நினைத்து நேராக எனதறைக்குச் சென்றேன். அலைபேசியினூடாக ஊரிலிருக்கும் எங்கள் வீட்டுக்கு அழைக்க, தொடர்பில் வந்த அப்பாதான் பேசினார்.

    “அப்பா, நான் மணி பேசுறேன். எதும் பிரச்சினையா?”

    “ஏம்ப்பா? நானும் அம்மாவும் இப்பதான் படுக்கலாம்னு விளக்கை அணைச்சோம். என்ன இந்த நேரத்துல?”

    “ஒன்னும் இல்லப்பா. எனக்கு எதோ போன் வந்திச்சின்னு இங்க சொன்னாங்க. சரி, அம்மாகிட்ட குடுங்க!”

    அம்மாவிடம் சுருக்கமாகப் பேசிவிட்டு அழைப்பைத் துண்டித்து விட்டேன். இனி சுமதியை அழைக்க வேண்டும். மருத்துவமனையில் அலைபேசிகளுக்கு செயலிழப்புச் செய்து விடுவார்கள். எனவே சுமதியின் அலைபேசிக்கு நேரிடையாக அழைப்பு விடுத்துப் பயனில்லை. சுமதியின் அலுவலக உதவியாளரை அழைத்து, சுமதியை என் அலைபேசிக்கு அழைப்பு விடுக்கச் சொன்னேன். ஓரிரு மணித்துளிகளில் மருத்துவ மனையிலிருந்து அழைப்பு வருவதைக் காட்டிக் கொடுத்தது அலைபேசியின் எண் காட்டி.

    “அலோ!”

    “சார், சுமதி இஸ் நாட் இன் டுடே!!”

    அதிர்ச்சியாக இருந்தது. சுமதி, வேலைக்குப் போகலையா? ஏன்?? போகும் வழியில் எதுவும் விபத்து நேர்ந்திருக்குமோ? இவளுக்கு மட்டுந்தான் பிரச்சினையா? குழந்தை அமிழ்தா??  ஒரு மாதிரி நெஞ்சு படபடத்தது. இது போன்ற நேரத்தில் நெஞ்சுத் துடிப்பு அதிகரிப்பது இயல்புதானே? சுமதியின் அலைபேசி எண்ணுக்கே அழைப்பு விடுத்தேன்.

    ”அலோ!”

    “ஏங்க, எத்தினிவாட்டி கூப்பிடுறது? போனை எடுக்க மாட்டீங்களா??”

    “சொல்றா! சாரி, நான் மீட்டிங்ல இருந்தேன்.  எதும் பிரச்சினையா? என்ன ஆச்சி??”

    “ஒன்னும் இல்ல. கொஞ்சம் எனக்கு ஒடம்புக்கு செரியில்ல. ஆஃப் எடுத்திட்டேன்!”

    “ஆமா!  நீ டுயூட்டில இருப்பன்ட்டு அங்க கூப்ட்டிருந்தேன்; சொன்னாங்க!”

    “ஆமா, நீங்க அங்க கூப்பிட்டிருப்பீங்கல்ல? நான் வீட்டிலதான இருக்கன்னு நினைச்சி, அமிழ்தாவை லஞ்ச்சுக்கு நான் பிக் அப் செய்யறேன்னு சொல்லிட்டு வந்தங்க. இப்ப எனக்கு ரொம்பவும் முடியலை. நீங்க போக முடியுமா?”

    “இவ்வளவுதானா? நான் ரொம்ப டென்சன் ஆயிட்டேன். ஆனா, அமிழ்தாவுக்கு கார் சீட்டு??”

    “அதான் கழட்டிப் போட்ட இன்ஃபேன்ட் சீட்டை, உங்க கார்ல பின்னாடி வெச்சிருக்கீங்கல்ல?”

    “கரெக்ட்! அப்ப,  நூன் டைம், பனிரெண்டுக்கு போயி அழைச்சிட்டு நேரா வீட்டுக்கு வந்துடுறேன்!”

    “வேண்டாம். வெளியிலயே சாப்பிட்டுட்டு, விட்டு கூப்பிட்டுட்டு வந்திடுங்க.  வெள்ளிக் கிழமைங்றதால, சாயுங்காலம் அஞ்சு மணிக்கு முன்னமே பிக் அப் செய்திடணுங்க!”

    மகள் அமிழ்தாவுடன் வீட்டிற்குச் சென்று சுமதியுடன் இருந்து விட்டு வரலாம் என நினைத்தேன். அது நடக்கவில்லை எனும் ஏமாற்றத்துடன் கேட்டேன், “ஏன்டா, உனக்கு ஒடம்புக்கு என்ன பிரச்சினை?”

    “ஏங்க, இதென்ன கேள்வி? கல்யாணம் ஆயி ஆறு வருசம் ஆச்சி. இன்னுமா? வீட்டுக்கு தூரம், ரொம்பப் படுத்துது; அதான்! அவ வீட்டுக்கு வந்தா, என்ன மம்மி, ஏது மம்மீன்னு கேட்டுக் கொடைஞ்செடுப்பா!! வெளியில எதனாவது வாங்கிக் குடுத்து சமாளிங்க!!”

    “சாரிடா; நாம் பாத்துக்குறேன்!”

    மகள் அமிழ்தாவுக்கு மூன்று வயதுக்கும் மேலாகிறது. மிகவும் சுட்டி. எதையும் முழுமையாகத் தெரிந்து கொள்ளுமட்டும் கேள்விக் கணைகளால் துளைத்தெடுப்பாள். நண்பகற் பொழுது அவளுடன் கழியப் போவதை எண்ணி மகிழ்ச்சியெனக்கு. ஆனால் என்னை எதிர்பார்த்திருக்க மாட்டாள். அவள் என்னைக் கண்டு இன்ப அதிர்ச்சி கொள்ளப் போவது உறுதி. நாளைக்கு அருகில் இருக்கும் காலாமசு ஆற்றில் படகு சவாரிக்கு அழைத்துப் போகிறேன் எனச் சொல்லி இருக்கிறேன். அதை நினைத்தாலே எனக்கும் குதூகலம் பிறக்கிறது. அழைத்துப் போக வேண்டும். ஆற்றங்கரைப் பூங்காவில் படங்கள் நிறைய எடுத்து, அம்மா அப்பாவுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.  இந்த மாதத்தில் செய்தால்தான் உண்டு. அடுத்த மாதமான ஆகஸ்டில் இருந்து மிச்சிகன் மாகாணத்தில் குளிரோ குளிர்தான்.

    பதினொன்றரை மணிக்கெல்லாம்  அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு, மார்ஷல் குழந்தைகள் காப்பகத்துக்கு  சென்று சேர்ந்துவிட்டேன். கண்ணாடித் தடுப்புச் சுவரில் பார்க்கிறேன். இடது கையில் கைப்பாவையான க்யூட்டெடியுடன் இருக்கையில் அமர்ந்திருந்தவள் என்னைப் பார்த்து விட்டாள். இன்னும் பத்து மணித்துளிகள் இருக்கிறது உணவு இடை வேளைக்கு.  என்னைக் கண்டதில் அவளால் அங்கு இருக்க முடியவில்லை என்பது நன்றாகத் தெரிகிறது.

    அவள் வருவதற்கு முன்பாக அவளது கைப்பாவையான ’க்யூட்டெடி’யைப் பற்றிச் சொல்லியாக வேண்டும். நாங்கள் சார்லட் பெருநகரத்தில் குடியிருந்த போது அவளது முதல் பிறந்த நாளைக் கொண்டாடினோம். அப்போது ஆந்திர நண்பர் வெங்கட்டா பரிசாகக் கொடுத்த துணியாலான சிறு கரடி பொம்மைதான் அது.  அமிழ்தாவின் கைக்கு அடக்கமாக மூன்று இஞ்ச் உயரத்தில் இருக்கும். குளிக்கும் போது தவிர, எப்போதும் அதைத் தனது இடது கையில் கவ்விப் பிடித்தபடி இருப்பாள்.

    இந்த இரண்டரை ஆண்டுகளாக அமிழ்தாவிடம் சிக்குண்ட அந்தப் பொம்மை, படாதபாடு பட்டுக் கொண்டிருக்கிறது. அழுக்குப் படிந்து, கிழிந்து, நைந்து, சிதையும் தருவாயில் இருக்கிறது க்யூட்டெடி. உறக்கத்தில் கூட கை நழுவிவிடக் கூடாது; அவ்வளவுதான், அழுது ஆர்ப்பாட்டம் செய்து விடுவாள். அந்த அளவுக்கு க்யூட்டெடியோடு அமிழ்தா ஒருமித்துப் போயிருக்கிறாள்.

    இதோ நண்பகல் மணி பனிரெண்டு ஆகிவிட்டது. எழுச்சியோடு ஓடி வந்து கொண்டிருக்கிறாள் என் செல்லம் அமிழ்தா.

    “அப்பா, அப்பா, அம்மா எங்கப்பா?”

    “அம்மா, டூட்டிக்குப் போயிட்டாங்கப்பா!”,  வேறு வழியில்லை; பொய் சொல்லித்தான் ஆக வேண்டும். அல்லாவிடில் வீட்டுக்குப் போக வெண்டுமென அடம் பிடிப்பாள்.

    “இம்… இம்…  என்னை வந்து பிக் பண்ணுறேன்னு சொன்னாங்க?”, மழழையோடு குழைந்தாள்.

    “இல்ல தங்கம்; எதோ அசஸ்மெண்ட் இருக்குன்னு வரச் சொல்லிட்டாங்களாம். அதான் அப்பா வந்திருக்கன்ல?”, ஒரு பொய் பல பொய்களைப் பெற்றெடுக்கும் என்பது இதுதான் போலிருக்கு.

    ஒரு மணி நேரம் கரைந்ததே தெரியவில்லை. அருகிலிருந்த ஜேசன் டெலி உணவகத்தில் இருவருமாக உண்டு மகிழ்ந்தோம். அவளுக்கு உருளைக்கிழங்கு நொறுக்கு என்றால் மிகவும் விருப்பம். அவள் விருப்பமே எனது விருப்பமும். நன்றாக அடித்து நொறுக்கினோம். போதாக்குறைக்கு அவளது அம்மாவும் அருகில் இல்லை. அல்லாவிடில், கொலஸ்டிரால், அது இது என்று படுத்துவாள்.

    ”அப்பா, வீட்டுக்கு போலாம்ப்பா!”, சொல்லி வாயைக் கூட மூடவில்லை. வெடுக்கென தனது இடது கையை இழுத்து, அக்கையிலிருக்கும் க்யூட்டெடிக்கு அரும்பிஞ்சு இதழ்களால் முத்தம் கொடுத்தாள்.

    “இல்லடா கண்ணு. அப்பாவுக்கு இன்னும் ரெண்டு மீட்டிங் இருக்கு; ஆபிசுக்குப் போகணும். ஃபோர் தெர்ட்டி, நான் வந்திடுவேன், சரியா? ”

    “போங்கப்பா!”, சலித்துக் கொண்டாள்.

    “நாளைக்குதான் நாம காலாமசு(Kalamazoo) போறம்ல? போட் ரைடு, பிஷ்ஷிங் எல்லாம் இருக்கல்ல??”

    அவ்வளவுதான், கதிரவன் கண்ட மலர் போல முகம் மலர்ந்தது. அதே மலர்ச்சியுடன் காப்பகத்தில் விட்டுவிட்டு வந்து அலுவலகத்தை அடைந்ததும், சுமதிக்கு அழைத்து விபரத்தை தெரியப்படுத்தி ஆயிற்று.  அதன் பிறகு அலுவலக நண்பர்களிடம் வார ஈறுக் களிப்புகள் குறித்தான பேச்சு நீடித்தது. பேச்சின் போது காலாமசு ஆற்றைப் பற்றியும் தகவல்கள் பரிமாறப்பட்டது.

    காலாமசு ஆறு மற்றும் ஆற்றுப்படுகையானது கிட்டத்தட்ட 11000 ஆண்டுகளாக மனிதர்களால் பல்வேறு பணிகளுக்குப் பாவிக்கப்பட்டு வருகிறதாம். அதிலிருந்தே தெரிகிறது இதுவொரு செவ்விந்தியர்களின் களம் என்பது. மிச்சிகன் ஏரியில் கலக்கும் இந்த ஆறானது மிகச்சிறிய ஆறாக இருந்தாலும், அப்பகுதியில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரமாக, ஜீவநாடியாக இன்றும் விளங்குகிறது.

    மாலை நான்கரை மணிக்கெல்லாம் மார்ஷல் காப்பகத்திற்குப் போய்ச் சேர்ந்து விட்டேன். நல்ல உறக்கத்தில் ஆழ்ந்திருந்தாள் அமிழ்தா. என்னைக் கண்டதும், வகுப்பு ஓம்புநரான ஜில் கோஃபர் புன்னகைத்தாள். எழுப்பி விடட்டுமா என சமிக்கையிலேயே வினவ, நானும் சரியெனும் பாங்கில் தலையசைத்தேன்.

    வாரக் கடைசி நாளான வெள்ளிக்கிழமை தோறும், குழந்தைகள் படுத்துறங்கும் படுக்கை விரிப்பு, மாற்று உடுப்பு உள்ளிட்ட குழந்தைகளின் உடைமைகளைப் பையில் போட்டுக் கொடுத்தனுப்பி விடுவார்கள். அவற்றைச் சலவை செய்து மீண்டும் திங்கட்கிழமை கொடுத்தனுப்ப வேண்டும். அமிழ்தாவை எழுப்பி,  அவர்களே அவளது உடைமைகளை எல்லாம் பையில் போட்டுக் கொடுத்தபடியால் நான் எதையும் கவனித்திருக்கவில்லை. அப்பாவைக் கண்ட குதூகலத்தில் அமிழ்தாவும் எழுந்து துள்ளலாய் ஓடி வந்து என்னுடன் சேர்ந்து கொண்டாள்.

    காப்பகத்திற்கும் எங்கள் வீட்டிற்கும் ஆறு மைல் தூரம்.  வீட்டிற்குச் செல்லும் வழியில், காலாமசு ஆறு, அதன் படகுத்துறை, மீன்பிடித்துறை, நாளை யாரெல்லாம் அங்கு வருவார்கள் முதலானவற்றைப் பற்றி நாங்கள் இருவரும் பேசிக் கொண்டே சென்றோம். அமிழ்தாவுக்கு மிக்க மகிழ்ச்சி. எனது அலுவலக நண்பர் ஸ்டீவ் என்பாரின் மகள் ஜேனட்டும் வருவாள் எனச் சொன்னதில் அவளுக்குக் கூடுதல் மகிழ்ச்சி.

    வீட்டிற்குள் நுழைந்து, இருக்கையில் அமர்ந்த நான் எனது கவ்வுகழலிகளைக் கழற்ற எத்தனிக்கிறேன். ‘ஓ’வென்று பெரும் ஓலம். பேரொலி கேட்டெழுந்த அவளது அம்மா சுமதியும்  என்னவென்று கேட்டுக் கொண்டே முன்னறைக்கு வந்தாள். சற்று நேரத்திற்கு அமிழ்தா என்ன சொல்கிறாளென்றே  எனக்குப் புரியவில்லை.

    “மம்மீ… ஐ வான்ட் இட்!  ஐ வான்ட் மை க்யூட்டி, ஐ வான்ட் மை க்யூட்டி!!”

    புரிந்து விட்டது. சத்தியமாக நான் இப்போதுதான் கவனிக்கிறேன். அவளது கையில் எப்போதுமிருக்கும் அவளது அருமைப் பாவையான க்யூட்டெடி இருக்கவில்லை. என் சொகுசுந்து வாகனத்துக்கு நாலுகால்ப் பாய்ச்சலில் உடனே விரைந்தேன். அரக்கப்பரக்கத் துழாவுகிறேன். பின்னிருக்கையில் இருக்கும் குழந்தைகளுக்கான சிற்றிருக்கையைக் கழற்றுகிறேன். கார் முழுவதையும் பார்க்கிறேன். பார்த்த இடங்களை மீண்டும் பார்க்கிறேன். எனக்கு அது அகப்படவே இல்லை.

    “அம்மாக்காரியும்  சேர்ந்து என்னை வறுத்தெடுப்பாளே? கடவுளே, நான் இனி என்ன செய்வேன்??”, நினைத்துக் கொண்டே மீண்டும் வீட்டுக்குள் ஓடினேன். அவர்கள் கொடுத்தனுப்பிய பையினைக் கமுத்தித் தேடிக் கொண்டிருந்தாள் சுமதி. அவளுக்குப் பக்கத்தில் பெருங்குரலெடுத்து அழுதபடியே அமிழ்தா.

    ”ஏங்க, குழந்தையப் பார்த்துக் கூட்டிட்டு வர முடியாதா? இதுல இல்ல. சரி நடங்க, கார்லதான் இருக்கும். நான் பார்க்குறேன்!”, சினம் தலைக்கேறிய சுமதி, அழுது கொண்டே அமிழ்தா, கடுப்புடன் நான் என எல்லாருமாகப் போனோம் வாகனத் தரிப்பிடத்திற்கு. எல்லாவற்றையும் பிரித்துப் போட்டுத் தேடினாள் சுமதி.

    “என்னங்க, இங்கயும் காணோம்?”

    “சென்ட்டர்லயே எடுக்காம வந்துட்டம் போலிருக்கு?”

    “ஏங்க, வெள்ளிக்கிழமை நாளுங்க இது? எல்லாம் போயிருப்பாங்க?”

    அவ்வளவுதான். சங்குசங்கென்று குதிக்க ஆரம்பித்தாள் அமிழ்தா. ஒரு கட்டத்தில், டமால் எனத் தரையில் விழுந்து படுத்துக் கொண்டாள்.

    “புதுசு வேணா வாங்கித்….”, நான் முடிக்கவே இல்லை.  இருவரும் ஒருசேர அவரவர்பாட்டுக்கு இரைந்தார்கள்.

    “இல்ல, அது வேலைக்காவாது. ஏற்கனவே நாம அது ட்ரை பண்ணுனதுதானே? மண்டே வரைக்கெல்லாம் வெயிட் பண்ணினா அவ்ளோதான். கொழந்தை அழுது அழுது காய்ச்சலாகி ஃபிட்ஸ் வந்தாலும் வந்திடும்! போயிப் பார்க்கலாம் வாங்க!!”

    வீடு திறந்தது திறந்தபடி இருந்தது; வீட்டினுள் கிடந்தது கிடந்தபடி இருந்தது. எப்படிக் காரை எடுத்தேன்; எப்படிப் போய்ச் சேர்ந்தேன் என்றே எனக்குத் தெரியாது. கேவிக் கேவி அழுது கொண்டிருந்த அமிழ்தா விசும்பலுக்கு மாறியிருந்தாள். அவ்வப்போது மூச்சிரைப்பு வந்து போனது. பார்க்கப் பரிதாபமாய் இருந்தது. காலையில் சுமதியிடமிருந்து அழைப்பு வந்த போதே எனக்கு மனதில் சஞ்சலம். யாரையோ இழந்து பிரிந்த மனத்துயரம் மேலிட்டது. அப்படி ஏதும் நிகழவில்லை என்ற ஆறுதல் வெகுநேரம் நீடித்திருக்கவில்லை.

    முன்பொருநாள் வீட்டிலிருக்கும் சோபாவுக்குள் அகப்பட்டுக் கொண்ட க்யூட்டெடியைக் கண்டு பிடித்தெடுப்பதற்கு ஓரிரு மணி நேரம் ஆகிவிட்டிருந்தது. அதற்குள் அழுது ஆர்ப்பாட்டம் செய்ததில் காய்ச்சல் கண்டு படுத்துவிட்டாள் அமிழ்தா. அந்த நினைவெல்லாம் வந்து ஆட்டுவிக்கிறது இப்போது. அரும்பாவை க்யூட்டெடியை விட்டுவிட்டு எப்படி இருக்கப் போகிறாள்? மனம் முழுதும் கப்பிய சோகம் நிரம்பிப் பொங்கி இப்போது என் முகத்தில் படர்ந்து கொண்டிருந்தது.

    அமிழ்தாவைப் பார்க்கவே எனக்கு தயக்கமாய் இருக்கிறது.  சுமதி, அங்கிருந்த பாதுகாப்புப் பணியாளரிடம் ஏதோ பேசிக் கொண்டிருந்தாள். நான் காருக்கே திரும்பி வந்து தேடத் துவங்கினேன். இது சும்மா ஒரு போங்காட்டம். அவர்களுக்கு அருகில் இருக்கக் குற்ற உணர்வும் அச்சமும் என்பதுதான் உண்மை.

    பாதுகாப்புப் பணியாள் உட்பட அவர்கள் மூவரும் என்னருகே வந்து கொண்டிருக்கிறார்கள். அமிழ்தா இன்னும் விசும்பிக் கொண்டுதானிருக்கிறாள்.

    “டேனியல்கிட்டப் பேசினேன். அவர் இன்னும் அரை மணி நேரத்துல வர்றாராம். நீங்க லன்ச்சு முடிச்சிட்டு ட்ராப் பண்ணும் போது கையில வெச்சிருந்தாளா?”

    “ஆமா. இருந்திச்சி.  ரூமுக்குள்ள போயி உட்கார்ந்தப்புறங்கூட முத்தங் குடுத்திட்டு இருந்ததை நான் பார்த்தேன்!”

    “ம்”, அவளுக்கு இன்னமும் என் மேல் கோபம் என்பதை அந்த ஒற்றை எழுத்து பதிலே காட்டிக் கொடுத்தது.

    பாவம் அமிழ்தா, அது குழந்தை. முதல் பிறந்த நாளுக்குப் பின்னர் இந்த இரண்டரை ஆண்டுகளுக்கும் சற்றுக் கூடுதலாய், 365 கூட்டல் 365, எழுநூற்று முப்பது, இதிலொரு 75 நாட்கள்,  ஆகமொத்தம் எண்ணூற்று ஐந்து நாட்கள் க்யூட்டெடியோடு பின்னிப் பிணைந்தபடி இருந்தவள் எப்படித்தான் தாங்குவாளோ இப்பிரிவை? பிஞ்சு மனம் நொந்து கொண்டிருப்பதைப் பார்க்கச் சகிக்கவில்லை எனக்கு.

    டேனியல் வந்து சேர்ந்து விட்டான்.  அவனிடம் சிரமத்திற்கு வருத்தம் தெரிவித்தாள் சுமதி.  குழந்தையின் மனநலமும், மகிழ்ச்சியுமே எங்களுக்கு முக்கியம் எனப் பரிவாய்ச் சொல்லிக் கொண்டே எங்கள் எல்லாரையும் உள்ளே அழைத்துச் செல்கிறான். உள்ளே கும்மிருட்டாக இருக்கிறது. ஒவ்வொரு இடத்திலும் ஆள் நடமாட்டம் கண்ட விளக்குகள் தன்னிச்சையாய் ஒளிரத் துவங்குகிறது. அமெரிக்காவில் எல்லாமே தானியக்கம்தான்.

    என்னையறியாமல் ஆனைமலை மாசாணியம்மனை நினைத்து வேண்டிக் கொண்டிருக்கிறேன். “ஆத்தா, உன்னை விட்டா எனக்கு யார் இருக்கா? எப்படியாவது அதை இங்க இருக்கப் பண்ணு!”, திரும்பத் திரும்ப மனம் இதையே சொல்லிக் கொண்டிருக்கிறது.

    அமிழ்தாவின் வகுப்பறைக்கு முன்னால் வந்தாயிற்று. இனி அறைக்கதவைத் திறக்க வேண்டும். நடைபாதையில் இருக்கும் மின்விளக்கின் வெளிச்சம் கண்ணாடிச் சுவரையும் ஊடுருவி உள்ளே பாயத்தான் செய்கிறது. எனினும் அந்த பாவையது கண்களுக்கு அகப்படவில்லை. டேனியலைப் பார்க்கிறேன். அவன் கையிலிருக்கும் சாவிக் கொத்தில் ஒரு பத்துப் பதினைந்து சாவிகள் இருக்கும் போலிருக்கிறது. ஒவ்வொன்றாய்ப் போட்டுத் திறக்க முயற்சிக்கிறான்.  நேரம் கூடக் கூட மனத்தின் பாரமும் வலியும் கூடிக் கொண்டே போகிறது. எனக்கே இப்படியென்றால் அந்த பச்சைமண்ணுக்கு? ”மாசாணியாத்தா, அது கிடைக்கலைன்னா நீ ஒரு பொய்! வேசக்காரி!!”, என் வலியெல்லாம் சினமாகி ஆனைமலை ஆத்தாளின் மேல் பாயத் துவங்கியது.

    அப்பாட, ஒருவழியாய் டேனியல் அறைக்கதவை திறந்து விட்டான். அமிழ்தா துள்ளிக் குதித்து உள்ளே ஓடினாள். அதற்குள் டேனியல் மின்விளக்குக்கான சொடுக்கியைத் தட்டினான். ஒளி ஒளிரவும், அமிழ்தா குதித்தெழவும் சரியாய் இருந்தது. பிற்பகலில் அவள் உறங்கிக் கொண்டிருந்த இடத்திற்கருகே, சுவரோரத்தில் கிடந்தது க்யூட்டெடி.  முத்த மழையில் நனைந்து பரவசமாகிக் கொண்டிருந்தது க்யூட்டெடி.   காலையில் எழும் போது கண்ட என் மனைவியின் கண்களை, அதற்குப் பிறகு இப்போதுதான்  முதன்முதலாய்  எதிர்கொள்கின்றன செம்மாந்து ஒளிரும் என் கண்கள்.

    “சாரி மாமாய்!”, என்னைப் பார்த்துக் கனிவாய்ச் சொன்ன சுமதியின் கண்கள் சோர்வாயும் களைப்பாயும் இருந்தன. நான் டேனியல் கைகளைப் பற்றி எதோ சொல்லிக் கொண்டிருக்கிறேன் மகிழ்ச்சி பொங்க. வாசலுக்கு வந்ததும், டேனியலுக்கு ஹக் தர வேண்டுமென அமிழ்தா சொன்னாள்.

    அவர்களிடம் விடை பெற்ற பின்னர், வீட்டிற்கு வரும் போது இரவு ஏழு மணி ஆகிவிட்டிருந்தது.

    அடுக்களைக்குச் சென்று சூடாய்க் காப்பி போட்டு இரண்டு கோப்பைகளில் எடுத்துக் கொண்டு போகிறேன்.  இடது கையானது அவளது அன்புப்பாவை க்யூட்டெடியை இறுகப் பற்றிக் கொண்டிருக்க,  வலதுகைக் கட்டை விரல் சூப்பிய நிலையிலிருந்து விட்டுச் சற்று விலகியிருக்கிறது. தன் ஒரு காலைத் தன் தாயின் மேல் அவள் போட்டிருக்க, தாயின் ஒரு கை தன் மகளை வாஞ்சையாய்ப் பிடித்தபடி தூங்குகிறார்கள் இருவரும்.

    இன்னும் அங்கு விடிந்திருக்காது. அதனாலென்ன? அழைத்துப் பேச வேண்டியதுதான். ஆமாம், எனக்கு என் அம்மா வேண்டும் போல இருக்கிறது.

    Share
  • நந்தியாவட்டை

    பர்வதம் பாட்டியின் தொணதொணப்பு நின்றபாடில்லை. நேற்று காலையில் இருந்து துவங்கிய இந்தத் தொணதொணப்பு நிற்காது போலிருக்கிறது.  வயதான காலத்தில் பாட்டிக்கென்று என்ன இருந்து விடப் போகிறது? உடல் நலம் பேணுவதில் ஏதாவது உதவி கேட்பாளாயிருக்கும்.

    “என்ன பாட்டி? இப்படித் தொந்தரவு குடுக்குற ஆளாயிருந்தா, நீ அத்தையோட வீட்லயே இருந்துக்க. இங்க வராத. இப்ப என்ன வேணும் உனக்கு?”

    “தங்கம், டேய்… இராசா, உங்க தாத்தன் நெனப்பைக் கூட்டியாறப் பொறந்த ஆளுடா நீ. பாட்டிக்குக் கண்ணு ரெண்டும் எதோ மசமசன்னு இருக்குடா.  விஜயம்மா வீட்டுக்குப் போயி நாஞ்சொன்னேன்னு சொல்லு, நந்தியாவட்டைப் பூ பறிக்க விடுவாங்க. கொஞ்சம் நிறையவே பறிச்சுட்டு வாடா!”

    பாட்டிக்காகப் பூப்பறிக்க விஜயம்மா வீட்டுக்குப் போனான். கம்பிகளாலான வாயிற்கதவு உள்பக்கமாகத் தாளிடப்பட்டு இருந்தது. திரும்பிப் போகலாமா, அல்லது உள்பக்கமாகக் கைவிட்டுத் திறந்து கொண்டு உள்ளே போகலாமா என யோசிக்க முற்பட்ட கணத்தில்தான் கவனித்தான். கைக்குழந்தையை இடுப்பில் வைத்தபடி நின்றிருந்தாள் அக்கா. கன்னத்தில் குழி விழச் சிரித்தது இடுப்பில் இருந்த அவளது குழந்தை.

    “நான்… வந்து… இரங்காச்சாரி கடைக்குப் பக்கத்துல இருக்குற சீதாராமய்யர் பையன் வசந்த்!”

    “தம்பி, உள்ள வாப்பா. உன்னை நல்லாத் தெரியும். உள்ள வாப்பா. உங்க அக்கா சந்திரா நல்லா இருக்காளா? பர்வதம் பாட்டி எப்படி இருக்காங்க? இப்பவெல்லாம் இராமர் கோயிலுக்கு வர்றதே இல்லை போல!”

    “பாட்டி, கொஞ்சநாள் சுசீலா அத்தை வீட்டுக்கு கும்பகோணம் போயிருந்தாங்க அக்கா!”

    “உட்காரு. வர்றேன்!”, முன்னறையில் இருந்த பிரம்பு இருக்கையைக் காட்டிச் சென்றிருந்தாள் அவள். இறக்கிவிடப்பட்ட குழந்தை அங்கிருந்த பந்தினை எடுத்து அவனை நோக்கி எறிந்தது. பதிலுக்கு அவனும் குழந்தையை நோக்கி உருட்டி விட்டான்.  சற்று நேரத்தில் விஜயம்மா பாட்டி வந்தாள், “வாப்பா! சங்கரூ…”

    “பாட்டி, நான் வசந்த். எங்கண்ணன் பேர்தான் சங்கர். அவன் சிந்தாமணியில அக்கவுண்டன்ட் வேலை பாக்குறான் பாட்டி!

    ”அட, சீதாராமனோட ரெண்டாவது பையனா நீயி? ஆளுகெல்லாம் ஒசரத்துக்கு வந்துட்டீங்கப்பா. ஆமா, சொர்க்க வாசல் திறப்புக்கு வந்ததுதான். அப்புறம் மேலு பர்வதத்தைப் பாக்கவே முடியலையே? உடம்புக்கு சொகமில்லையா கண்ணூ?”

    “சுசீலா அத்தையப் பார்க்கப் போயிருந்தாங்க பாட்டி!”

    “ஓ, அதான பார்த்தேன்!”, பாட்டி சொல்லி முடிக்கவும் தண்ணீர்க் குவளையுடன் நின்றிருந்தாள் அக்கா. “லோக்க போய்யி, பின்னாண்டிகி காப்பி ஏசி எத்திகினி ஒச்சேனு சுதா! மாட்டாடிகினு உண்டு நுவ்வு”, விறுக்கென எழுந்து சென்றாள் பாட்டி. பாட்டியின் மாட்லாடுதலில் இருந்து தெரிகிறது  அந்த அக்காவின் பெயர் சுதா என்று.

    “தம்பி, நீ எந்தப் பள்ளிக்கூடத்துல படிக்கிற? மணீஸ் ஸ்கூலா?”

    “சபர்பன்தானுங்க அக்கா. ப்ளஸ் ஒன்!”

    “அட, ஒட்டுமொத்த இராம்நகரே சபர்பன்தான் போலிருக்கு! உங்க அக்காவும் நானும் பத்து வருசம் ஒரே வகுப்புதாம்ப்பா. சரியான லொல்லு பிடிச்சவ அவ!”, சொல்லிச் சிரித்தாள் சுதா. என்னவென்று புரியாமலே அருகிலிருந்த குழந்தையும் வாய் விட்டுச் சிரித்தது. நடந்து கொண்டிருந்த அளவளாவலில் தன்னையும் இணைத்துக் கொண்டாள் புரூக்பாண்ட் காப்பியுடன் திரும்பி வந்த விஜயம்மா பாட்டி.

    சற்று நேரம் வீட்டு முன்னறையில் பேசிக் கொண்டிருந்த அவர்கள், வீட்டின் முன்புறமிருந்த பூக்காட்டில் இருக்கும் நந்தியாவட்டைப் பூக்களைப் பறித்துக் கொண்டிருந்தார்கள்.  சுதா, உள்ளே சென்று பொரி வாங்கி வந்த மழைக்காகிதப் பையில் பூக்களை இட்டு நிரப்பிக் கொடுத்தாள்.

    “வசந்த், எனக்கும் ஒரு உதவி வேணும். கல்கியில ஜெயலலிதா எழுதின உறவின் கைதிகள் தொடர்கதையச் சேகரம் செஞ்சி பைண்ட் போட்டு வெச்சிருக்கிறதா மங்களாதேவி சொன்னா. உங்க பக்கத்து வீடுதானே? நாளைக்கு இந்தப் பக்கம் நீ வந்தியானா, அதை வாங்கிட்டு வந்து தர முடியுமா வசந்த்?”

    ”சரிங்க அக்கா, கண்டிப்பா வங்கிட்டு வர்றேன்!”, அன்று துவங்கியது சுதா அக்காவுக்கும் அவனக்குமான பிணைப்பு.

    அக்காவுக்கு ஒரே மகள் சுமதி. சுமதிக்கு அப்பா இல்லை என்பதைவிட, அக்காவுக்குக் கணவன் இல்லை என்பதுதான் ஊராருக்கு முதன்மை.  சுதா அக்காவைப் பற்றி சுதா அக்காவிடமே கேட்டுத் தெர்ந்து கொள்ள மனம் வரவில்லை வசந்த்துக்கு. மயிலாடு துறையிலிருந்து அவ்வப்போது வரும் சந்திராக்கா சொல்லித்தான் தெரிந்து கொண்டான் நிறைய. விஜயம்மா பாட்டி, சுதா அக்கா,  சிறுமி சுமதி என அவர்கள் குடும்பத்தைப் பார்ப்பவர் எவர்க்கும் கனிவு பிறக்கும்.

    பின்னாளில் வசந்த்துடன் படிக்கும் காட்டூர் சேகரும் அவனுடன் சேர்ந்து கொண்டான். வசந்த்தும் சேகரும் அவ்வப்போது சுதா அக்காவைப் பார்க்கப் போவார்கள். குறிப்பாக, நூலகத்தில் இருந்து நாவல்கள் பலவற்றை எடுத்து வரச்சொல்வாள் அக்கா.  எடுத்துத்தருவதும், பிறகு கொண்டு போய் நூலகத்தில் சேர்ப்பதுமாகத் தொடர்ந்தது அவர்களது நட்பு. வசந்த் சி.ஐ.டியில் மெக்கானிக்கல் படிக்கப் போனான். சேகர், பி.எஸ்.ஜியில் டெக்ஸ்டைல்ஸ் படித்தான். தன் கணவன் விட்டுச் சென்ற மாவு அரைக்கும் இயந்திரங்களுக்கான உதிரிபாகங்களை வாங்கி விற்கும் தொழிலைப் புதுப்பித்திருந்தாள் சுதா அக்கா. இதன் நீட்சியாக, அவர்கள் மூவருக்குமிடையில் உண்டான போக்குவரத்தும் படிப்படியாக அருகிப் போனது.

    ஒருநாள் வசந்த், சேகர் இருவரையும் சாப்பிட அழைத்திருந்தார்கள் விஜயம்மா பாட்டியும் சுதா அக்காவும். இருவருமாகச் சேர்ந்து விருந்து பரிமாறி அசத்தினார்கள். விஜயம்மா பாட்டிதான் எதெதோ சொல்லிச் சிரிக்க வைத்துக் கொண்டே இருந்தாள். விடை பெறும் தருவாயில், சேகருக்கும் வசந்த்துக்கும் தனித்தனியாகப் பரிசொன்றைக் கொடுத்தாள் சுதா அக்கா.  சிவசங்கரி எழுதிய “அவன்” எனும் நாவல்தான் அது.  அவர்களிருவரும் அதைப் படித்தார்களா எனக் கண்டறிவதற்காய்,  பின்னாளில் வாய்வழித் தேர்வெல்லாம் நடத்தி அவர்களைச் சோதித்துப் பார்த்தாள் சுதா அக்கா. கல்லூரி மாணவர்கள் என்றாலே நடத்தை தவறக் கூடியவர்களெனும் மனோபாவம் வெகுவாகப் பரவியிருந்த காலகட்டமது.

    காலவெள்ளத்தில் ஆளுக்கொரு திசையாக அடித்துச் செல்லப்படுவார்கள் என்பதற்கு அவர்களும் விதிவிலக்காய் இருந்திருக்கவில்லை.  சுதா அக்கா இன்னும் அதே வீட்டில்தான் வசித்து வருகிறாள். சேகர், பட்டப்படிப்பை முடித்திருக்கவில்லை. அவ்வப்போது செய்யும் வேலைகளை மாற்றிக் கொண்டு வந்தவன், தற்போது நூற்பாலைகளுக்கான உதிரிபாகங்களை உற்பத்தி செய்து உள்ளூர்ச் சந்தையில் வணிகம் செய்கிறான்.  வசந்த் எனும் நாமகரணம் கொண்டவனாகிய அவனோ, சில பல நாடுகளைச் சுற்றி வந்து தற்போது அமெரிக்காவில் இருக்கிறான்.

    ”ஏங்க, தீவாளியன்னைக்கு என்ன தொணதொணன்னு போன்ல ஒரே பேச்சு? வந்து கொழந்தைகளைக் கவனிங்க!”, எப்போதும் போல அரற்றி மிரட்டினாள் அவனுடைய ஆத்துக்காரி.

    “இரு இன்னும் ஒன்னே ஒன்னு.  காட்டூர் தடியனுக்கு மட்டும் தீவாளி வாழ்த்து சொல்லிட்டு வந்திடுறேன் கண்ணம்மா!”

    பலமுறை அழைத்தும் சேகர் தொடர்புக்கு வருகிறான் இல்லை. அவனுடைய மனைவியின் அலைபேசி எண்ணைத் துழாவி எடுத்து அழைத்தான். “செல்வி, நமஸ்காரம்! தீவாளி எல்லாம் வந்துடுத்தா? சேகர் ஏன் போனை எடுக்க மாட்டேங்குறான்?”

    “அண்ணா, ஹேப்பி தீவாளி! அவர் மாடியில் இருக்கார். இருங்கோ குடுக்கறேன்!”

    “டே… ஹேப்பி தீவாளிடா! நல்லா இருக்கியா?”

    “இருக்கன்டா.  கொஞ்சம் மூடு அவுட், அதான்!”

    “ஏண்டா, சொல்லு, என்ன விசயம்?”

    “நம்ம விஜயாப் பாட்டி சுதா அக்கா இல்ல? அவங்க நேத்து இராத்திரி சூசைடு அட்டெம்ப்ட்டாம்டா! சபர்பன் ஸ்கூல் வட்டாரம் பூரா இதாம்பேச்சு”

    “என்னடா சொல்லுற? அவங்க மகள் எல்லாம் கல்யாண வயசுல இருப்பாங்களேடா இப்ப?”

    “ஆமாம். அவங்க சொந்தக்காரங்க தொல்லை இன்னும் தீர்ந்தபாடில்லை போலிருக்கு. என்ன செய்யுறதுன்னே தெரியலை. நான் அவங்க வீட்டுக்குப் போயி நாலஞ்சி வருசம் ஆச்சி. போனா, என்னையும் சேர்த்துக் கதை கட்டி வுட்றுவாங்கன்னு போறது இல்லை! ப்ச்!!”

    “சேகர் நாயே, நாம ஏதாவது செய்யணும்டா. சந்திராக்கா தீவாளிக்கு வந்திருக்காங்க. நான் கூப்பிட்டுச் சொல்லுறேன். நீ இப்ப காட்டூர்லதான இருக்க? போடா, சந்திராக்காவைக் கூட்டிட்டுப் போயி சுதாக்காவைப் பாருடா, ப்ளீஸ்!”

    ”பார்த்து என்னடா செய்ய முடியும்? ஆறுதல் சொல்லலாம். தீவாளி முடிஞ்சதும் எல்லாரும் கலைஞ்சி ஆளுக்கொரு திசையில ஓடப் போறோம்??”

    “இல்ல. நீ மொதல்ல என்ன காரண காரியம்னு தெரிஞ்சி வை. அக்காவோட ஒப்புதலின் பேரில், தற்கொலை முயற்சிக்குக் காரணமானவங்களை சட்டத்தின் முன்னாடி நிறுத்துறோம்! ’விடோ லேடீஸ்’னா இளப்பமா? உனக்கும் மகளுக இருக்காங்க. எனக்கும் இருக்காங்க. இதே நிலைமை நாளைக்கு நம்ம குழந்தைகளுக்கும் வரலாமில்லையா?”

    “இப்பத்தான்டா எனக்கு மனசு கொஞ்சம் நல்லா இருக்கு. இதா, இப்பவே போறன்!”

    சந்திரா அக்கா,  தேசிய வங்கி ஒன்றில் மேலாளர். வசந்த்தின் சுக துக்கங்கங்கள் அனைத்தையும் புரிந்து கொள்ளக்கூடிய ஒரு சிலருள் இவளுக்கும் தனியிடமுண்டு. எல்லாமும் சந்திராக்கா, சேகர் வழியாகவே நடந்தேறியது.

    சுதா அக்கா, மிகப் பெரிய வெற்றியை அடைந்திருக்கிறாள். கணவன் விட்டுச் சென்ற கடையை மீட்டுத் தானே நடத்தி வருகிறாள். ஆனாலும் ஊராருக்கு அவளொரு விதவை! யாரோடு வேண்டுமானாலும் இணைத்துப் பேசலாம்.  அக்கா, தங்கை எனும் உறவின் பேரில் எப்போது வேண்டுமானாலும் காசு, பணம் கேட்டு உருட்டி மிரட்டலாம். தன் வீட்டு வேலைகளுக்கு அவளையும் அவளது மகளையும் வந்திருந்து வேலை செய்யச் சொல்லலாம். தங்களுக்குச் சுமையாக இருக்கும் பெரியவர்களை அவளது வீட்டில் கொண்டு போய்த் தள்ளி விட்டு வரலாம்.  ஏனென்றால் அவளொரு விதவை.

    ”அக்கா, நான் அமெரிக்காவுல இருந்து சபர்பன் சந்திரகலாவோட தம்பி வசந்த் பேசுறன்க்கா!”

    “டேய், இன்னும் என்னை ஞாவகம் வெச்சிருக்கியாடா? சந்திரா, சேகர் எல்லாரும் இந்த ஒருவாரமா எங்கூடத்தான். இனிமே எனக்கு சாவே கிடையாதுடா.  எனக்கெதோ ஒரு புதுப்பிறவி எடுத்திருக்குறா மாதிரித்தான்டா இருக்கு. எப்படா வசந்த் ஊருக்கு வருவ? உன்னைப் பார்க்கணும் போல இருக்குடா. விஜயம்மா இருக்குற வரைக்கும் உன்னையும் உங்கண்ணன் சங்கரையும் அடிக்கடி நினைச்சுக்கும் தெரியுமா? கோவிச்சக்காதடா வசந்த்!  நீ…  ஒரு…, ஒரு மணி நேரங்கழிச்சுக் கூப்பிடுறியா? யாருன்னு தெரியலை, நந்தியாவட்டைப் பூ வேணுமின்னு கேட்டு அந்தப் பையன் வந்திருக்கான்னு நினைக்கிறேன். மறுபடியுந் தவறாமக் கூப்புடு, செரியா?!”

    “நந்தியா வட்டைப் பூக்கள் என்றென்றும் அக்காவைப் பார்த்துக் கொள்ளும்!”, தனக்குத் தானே பேசிக் கொண்டவன் சுற்றிலும் முற்றிலும் பார்த்தான்.  உவப்புக் கொண்டவனுக்கு உடனே தன் மகள்களையும் மனைவியையும் பார்க்க வேண்டும் போல இருந்தது. மிசிசிப்பி ஆற்றங்கரைக் காற்று அவன் முகத்தில் பட்டுத் தெறிப்பதை அனுபவித்தபடி, தன் குழந்தைகளை வாரிக் கொஞ்சியணைத்து முத்தமிடும் நோக்கில் மாடியிலிருந்து கீழே இறங்கிக் கொண்டிருந்தான் வசந்த்.

    அங்கே மற்றுமொரு நட்புக் கேடயமொன்று உருபெற்றுக் கொண்டிருந்தது; நந்தியாவட்டை மலர்கள் பூத்திருக்கும் விஜயம்மா வீட்டுப் பூக்காட்டில்!!

    Share
  • உச்சி மாநாடு!

    எல்லைக் கட்டுப்பாட்டுக்குள்
    தூய்மைப்படுத்த
    அப்புறப்படுத்த
    சீர்படுத்த
    ஒரு
    கணக்கெடுப்பு!

    மனிதப்பதர்களின்
    இயற்கைச் சூழல்
    அட்டூழிய
    அடாவடிகள்
    எதிர்கொள்ள
    ஒரு
    கருத்தாய்வு!!

    வேலனது
    பருத்திக்காட்டில்
    பச்சைப்புழு அகற்றம்
    குமரனது நெற்பயிரில்
    அடர்புழு நீக்கம்
    கந்தனது வாழையில்
    குருத்துப் புழு
    கொத்தியெடுப்பு
    ஆங்காங்கே
    வேலை நியமனம்!

    எல்லாமும்
    அலசி ஆய்ந்திட
    ஊர்த்தலைவாசலில்
    மின்னோட்டமில்லா
    மின்கம்பிகளில்
    மின்னல்வேக
    ஏற்பாட்டில்
    ஓர்
    உச்சிமாநாடு!

    இது
    அனைத்துண்ணிகளாம்
    பகுத்துண்ணிகளின்
    உச்சிமாநாடு!!

    Share
  • முதலாளி

    விட்டு விட்டு இடியிடித்ததில்
    விடாமல் கொட்டியது
    மழை!

    தொட்டு தொட்டுப் பேசியதில்
    தொடாமல் கிட்டியது
    செருப்படி!

    ஓங்கி ஓங்கி அடித்ததில்
    ஓங்காமல் செத்தது
    பாம்பு!

    ஓடி ஓடி அடைத்ததில்
    ஓடாமல் அடைபட்டது
    முயல்!

    சொல்லிச் சொல்லிப் பாடமடித்ததில்
    சொல்லாமல் ஓடி வந்தாள்
    காதலி!

    தூங்கித் தூங்கி விழுந்ததில்
    தூங்காமல் தவித்தான்
    அண்மைக்காரன்!

    பேசிப் பேசிக் குலவியதில்
    பேசாமல் தந்து விட்டான்
    முதலாளி!

    Share
  • அம்மாவுக்குக் கடிதம்!

    பழமைபேசி

    இலையுதிர் காலம்! வீட்டின் முன்புறம் இருக்கும் பழுப்பேறிக் கொண்டிருந்த மேப்பில் மரங்கள் தன் இலைகளைச் சாவகாசத்துடன் ஒவ்வொன்றாய் உதிர்த்துக் கொண்டிருந்தன. ஆறு மாதங்களாய்ப் பச்சையத்தை முழுவீச்சில் பூசிக்கொண்டிருந்த தரைப் புல்வெளி வெளிறத் துவங்கிருந்தது. பரணிலும் பெட்டியிலுமிருந்த குளிர்கால ஆடைகளுக்கு மறுபிரசவம் நெருங்கிக் கொண்டிருந்தது.

    இப்படியான இந்நாளின் இத்தருணத்தில், அதே ஊரில் அமைந்திருக்கும் பேங்க் ஆஃப் அமெரிக்காவின் தலைமையகத்தில் பல நூறு மில்லியன்களுக்கான ஒப்பந்தம் கையெழுத்தாகிக் கொண்டிருக்கக் கூடும்.  கொல்லப்படப் போகும் பயங்கரவாதிக்கு  அங்கிருக்கும்  உளவு நிறுவனத்தில் வைத்து நாள் குறிக்கும் தருணமாகவும் இது இருக்கக் கூடும்.  இவையாவிலும் ஒன்றாகத்தான், சார்லட் பெருநகரத்தின்  பேலன்ட்டைன் பகுதிலிருந்து  மடலொன்றும் தீட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது இத்தருணத்தில்.

    அன்புடன் அம்மாவுக்கு,

    சுகாதாரத்தில் நான் மிகவும் நலமாய் இருப்பதாகவே உணருகிறேன். இன்று நான் உன்னைச் சந்திக்கிற வரையிலும் மனரீதியாகவும் நலமாய்த்தான் இருந்தேன். ஆனால் தற்போது அப்படி இல்லை. மிகவும் வருத்தமாய் இருக்கிறது.

    நீயும் உன் கணவனுமாகச் சேர்ந்து கொண்டு என் பள்ளிக்கூட முன்றலுக்கு ஏன் வந்தீர்கள்? வந்ததோடு மட்டுமல்லாமல், ஏதேதோ பேசி நண்பர்கள் மத்தியில் பெரிய அவமானத்தை ஏற்படுத்தி விட்டிருக்கிறீர்கள்.

    எனக்கு நன்கு நினைவிருக்கிறது. இனிமையான கோடைகால விடுமுறை அது. ஆறாம் வகுப்புத் தேர்வு எழுதி விட்டு, பெருமைமிகு ராபின்சன் இடைநிலைப் பள்ளியில் அடுத்த ஆண்டு படிப்பினைத் தொடரப் போகிறேன் எனும் மகிழ்ச்சியில் திளைத்து மகிழ்ந்தோடிக் கொண்டிருந்தேன்.

    என்னைச் சுற்றிலும் என்ன நடக்கிறது என்பதை உணர்ந்து கொள்ள முடியாத பருவம்; வீடெங்கும் தேடிப் பார்க்கிறேன்; அப்பாவைக் காணவில்லை. கூட்டத்தினின்று ஒதுக்கி வைக்கப்பட்ட ஆட்டுக்குட்டி போல உணர்ந்தேன். வழிதவறி அல்லாடும் என்னைக் கொண்டு போய்ச் சேர்ப்பதற்கு மேய்ப்பன் எவனும் வர மாட்டானா என ஏங்கிப் புழுங்கித் தவித்தேன். அடிமேல்தான் அடி விழும் என்பார்களே, அதைப் போலத்தான் எனக்கும்.

    என்மீதான உன் கவனிப்பும் அருகிப் போனது. உனக்கு எல்லாமே ஸ்டீவ் என்றாகி விட்டது. நீயும் என்னைக் கவனிக்கவில்லை. அப்பாவையும் சந்திக்க விடவில்லை. நொறுங்கிப் போனேன் நான்.

    அந்த ஏழு மாதங்களும் எனக்கு வெம்மையான மாதங்கள்தாம். அங்கே நீதிமன்றக் கதவுகளைத் தட்டியெழுப்பிக் கொண்டிருந்தார் அப்பா. அதுவும் எனக்காக! போராட்டத்தின் முடிவில் வாரம் ஒருமுறை என்னையவர் பொது இடத்தில் வைத்துப் பார்க்கலாம் என்றாகிப் போனது.

    வாரத்தில் கிடைக்கும் அந்த இரண்டு மணி நேரமும் எனக்கு வசந்த காலம். இறைவனின் திருவுலகிற்கே அழைத்துச் செல்வார் அவர். அவர் சந்திக்குமந்த மெக்டொனால்ட்சு கடையோ, இசுடார் பாக்சு கடையோ, அது எனக்கு புனிதத் தலமானது. எனக்குப் பொன் தரவில்லை. பொருள் தரவில்லை. சந்திக்கும் போதெல்லாம் என் அப்பா எனக்கு ஊட்டியது நம்பிக்கையான சொற்களை மட்டுமே. அவைதான் இன்றளவும் என்னை இருத்திக் கொண்டுள்ளது.

    பழைய கதை எதற்கு? நடப்புக்கு வருவோம்.பள்ளிக்குச் சென்றுவிட்டுத் திரும்பி உன் வீட்டிற்கு வரவே மனம் ஒத்துக் கொள்ள மாட்டேன் என்கிறது. உன் அழகிய மணாளன், அதான் அந்த ஸ்டீவ் என்னை அங்குல அங்குலமாய் கீழிருந்து மேலாய் வெறித்தும் உற்றும் பார்க்கிறான். தொட்டுப் பேசுகிறான். போதாக்குறைக்கு, வார ஈறின் போது அவனது நண்பர்களையும் அழைத்து வந்து கூத்தடிக்கிறான். நீயும் என்னை அவர்களுக்கு விருந்தோம்பச் சொல்கிறாய். அதுதான் முடிவாக நான் இங்கேயே வந்து விட்டேன்.

    அதில் உனக்கு என்ன இடைஞ்சல்? எனக்கு இன்னும் பதினெட்டு வயது ஆகவில்லையென்பதற்காக என்னவெல்லாமோ செய்கிறாய். நான் இங்கு மிகவும் பாதுகாப்பாய் இருக்கிறேன். பள்ளிக்குச் சென்று வந்த நேரம் போக, எஞ்சிய நேரத்தை என் படிப்புக்காக மட்டுமே செலவிடுகிறேன்.

    கடந்த இலையுதிர்காலப் பருவத்தின் கடைசிக் கட்டத்தில்தான் இங்கு வந்தேன். இந்த எட்டு மாதங்களில் ஒரு தடவை கூட என் அறைக்குள் அவர் வந்தது கிடையாது. அதே வேளையில் என்னைக் கவனித்துக் கொள்வதனின்றும் அவர் தவறியது இல்லை.

    காலையில் ஆறரை மணிக்கெல்லாம் கிளம்பி, சார்லட் நகர மையத்தில் இருக்கும் தன் அலுவலகத்திற்குச் சென்று விடுகிறார். மாலை ஏழு மணிக்கு வந்ததும் வீட்டு வேலைகளைச் செய்து விட்டு, உடற்பயிற்சிக்காக ஒரு மணி நேரம்; அவ்வளவுதான்! பிறகு ஒன்பது மணிக்கெல்லாம் தன் அறைக்குள் போய் விடுகிறார். காலையில் எனக்கான சிற்றுண்டியை அவரே செய்து வைத்து விட்டுப் போகிறார். இந்த எட்டு மாதங்களில் ஒரு தடவை கூட என்னையவர் கடிந்து கொண்டது கிடையாது.

    ஒவ்வொரு நாள் காலையில் கிளம்பும் போதும் என் அறைக்கதவுக்கு வெளியே நின்று கொண்டு, காலையில் சாப்பிடுவதற்கு இன்னது செய்து வைத்திருக்கிறேன்; வெளியே தட்பவெட்பம் இப்படி இருக்கிறது; இன்று மழை வரும், குடை எடுத்துக் கொண்டு போ என்றெல்லாம் அக்கறையுடன் சொல்வார். குளிர்நாள் என்றால், அதற்கான ஆடை இருக்கிறதா எனக் கேட்டுத் தெரிந்து கொள்வார்.

    மாலை நேர உணவு வேளையின் போது, அன்றைய நாள் எப்படி இருந்தது எனக் கேட்பார். நிறைய நூல்களையும், நூல்களில் குறிப்பிட்டுள்ள வாசகங்களையும் மேற்கோள் காண்பித்துப் பேசுவார். இப்படித்தானம்மா நாட்கள் நகர்ந்து கொண்டிருக்கிறது எனக்கு.

    நீ, உன்னை நீயே ஏமாற்றிக் கொண்டாய் அம்மா. என்னைக் கடத்திக் கொண்டு போய் அடைத்து வைத்திருப்பதாய் நீ வழக்கெதுவும் பதிந்து விடாதே! இன்னும் இரண்டு மாதங்கள்தானே? எனது பதினெட்டாவது பிறந்த நாள் வந்து விடும். அதையும் பிரையனுடன் சேர்ந்து மகிழ்வோடு கொண்டாட விரும்புகிறேன். தயவு கூர்ந்து என் விருப்பத்தை நிறைவேற்று. ஸ்டீவுடன் சேர்ந்து கொண்டு இனிமேலும் என் பள்ளிக்கு வராதே! இறைஞ்சுகிறேன்!!

    இதோ கதவு திறக்கப்படும் ஓசை கேட்கிறது அம்மா. அவர் வந்து விட்டார் போல தெரிகிறது மீண்டும் சந்திப்போம்.. இறைவனது அருள் உனக்கு உரித்தாகட்டும்!!

    அன்பு மகள்,

    டீனா.

    மாடத்தில் இருக்கும் தன் அறையிலிருந்து இறங்கிப் போனாள் டீனா. இரண்டு ரொட்டிகள், பழச்சீப்பு ஒன்று, மூன்று காலன் பாலுக்கான நெகிழிக்கலம் ஆகியனவற்றைச் சுமந்தபடி உள்ளே வந்து கொண்டிருந்தார் பிரையன். ஓடிப் போய், அவர் கையிலிருக்கும் பாலை வாங்கி, சமையலறையில் இருக்கும் குளிர்மிக்குள் வைத்தாள்.

    “என்ன டீனா? ஒரு மாதிரி சோர்ந்து போயி இருக்கியே?! இன்னைக்கு பாடங்கள் எதும் அதிகமோ?”, கேட்டுவிட்டுத் தனக்கே உரிய சிரிப்பினை உதிர விட்டார் பிரையன்.

    ”ஸ்டீவும் அம்மாவும் பள்ளிக்கே வந்து மத்தவிங்க முன்னாடி அலப்பறை பண்ணிட்டாங்க அப்பா. அவமானமா இருக்கு!”, ஓவெனப் பெருங்குரலெடுத்து பிரையனின் கால்களைக் கட்டிக் கொண்டு அழுதாள்.

    ”ஏய், இதுக்கெல்லாம் இப்படி நீ உணர்ச்சிவசப்படலாமா? அடுத்த கோடைகாலத்துல நீ மருத்துவத்துறை மாணவி. அமெரிக்காவுக்கும், இந்த உலக மக்களுக்கும் நீ செய்ய வேண்டிய பணிகள் ஏராளமா இருக்கு. மருத்துவத் துறையில் நீ காலூன்றதுலதான் இருக்கு எல்லாமே! அதை நினைச்சுப் பாரு டீனா!”

    இரு கைகளாலும் தன் இரு தோள்ப்பட்டைகளைப் பற்றித் தூக்கி நிறுத்தி அவர் குலுக்கியதிலும், பொலிவு மிகுந்த அவரது முகத்தின் ஒளிவீச்சிலும் புத்துணர்வு பெற்றாள் டீனா.

    ”இன்னைக்கு நான் உடற்பயிற்சிக்குப் போகலை. குளிச்சிட்டு வா சாப்பிடலாம். நல்லா, எதனா செய்து வைக்கிறேன்!”, கிளம்பி தன் அறைக்குப் போனார் பிரையன்.

    சிறு ஓய்வுக்குப் பின்னர், கலைந்து கிடந்த தன் பாடப்புத்தகங்களை நேர்த்தியாகத் தன் மேசையின் மீது அடுக்கிக் கொண்டிருக்கிறாள் டீனா.  அஞ்சல் செய்வதற்கும், செய்யாமல் கசக்கித் தூக்கி எறியப்படுவதற்குமான இடைவெளியில் ஊசலாடிக் கொண்டிருக்கிறது மேசையின் மறுகோடியிலிருக்கும் அம்மாவுக்கு எழுதிய அந்தக் கடிதம்!

    Share
  • அம்மணி

    தலைக்கோழி கூப்பிட்ட சித்த நேரத்துக்கெல்லாம் பழநி போகும் அஞ்சு மணி ரயில் கூகூவென சங்கூதியபடி, அக்கம்பக்கத்து கிராமங்களை எழுப்பிக் கொண்டே போனது.  இயற்கை வளம் வாசு அய்யா வீட்டிலிருந்து கேட்கிறது உலக்கை போடும் சத்தம். இந்த நவீன காலத்திலும் கைக்குத்தல் அரிசிதான் வாசு அய்யா வீட்டில். ஒவ்வொரு வீட்டுப் புறக்கொல்லையிலும் ஏதாகிலும் வீட்டுவளர்ப்புச் செடிகள் பயிரிட வேண்டுமென்பதைச் செயல்படுத்துவதில் ஊரே அவருக்கு ஒத்தாசை செய்கிறது.

    கிழபுறத் தாழ்வாரத்தின் கீழ் எல்லுசாமி இன்னும் படுத்திருக்க, அம்மணி எழுந்து போய் விட்டிருந்தாள். அவள் இந்நேரம் கொல்லையிலிருக்கும் மாடுகளுக்குத் தீவனம் போட்டுக் கொண்டிருக்கலாம்; கட்டுத்தறியைத் துப்புரவாக்கிய கையோடு, சாணம் கரைத்து சாணவாயுத் தொட்டியில் ஊற்றிக் கொண்டுமிருக்கலாம். விலகியிருந்த சத்திரப்பட்டி துப்பட்டியை நன்கு போர்த்தியபடி புரண்டு ஒருக்களித்துப் படுத்தார் எல்லுசாமி. வாசல் தெளிக்கும் ஓசை கேட்டது.

    மாடு கன்னுகளுக்குத் தீவனம் போட வேண்டுமென்றால்,  கொல்லைக்குப் போய் வெளியில் நறுக்கி வைத்திருக்கும் தட்டுக் கத்தைகளைக் கொஞ்சம் அள்ளிப் போட வேண்டும். இதெல்லாம் எதுவும் எல்லுசாமி செய்ய மாட்டார். தட்டுப்போரிலிருந்து நான்கு கத்தைகளை உருவி, ஒவ்வொன்றையும் மூன்றாகக் கத்தரித்து மூலையில் அடுக்கி வைப்பதோடு முடிந்தது அவரது வேலை. இராத்திரிக்கு ரெண்டு தரம் எழுந்து தீவனம் போடுவது என்னவோ அம்மணிதான்!

    ரெண்டாங்கோழி கூப்பிட்டு வெகுநேரமாயிற்று. தமயந்தியம்மா வீட்டுக்குப் பால் கறக்க வரும் பால்காரன் சைக்கிள் மணியடித்துக் கொண்டு போகிறான். இன்னும் தூங்கிக் கொண்டிருந்தால் அம்மணி வந்து சத்தம் போட்டு ஊரைக் கூட்டுவாள். ‘விருக்’கென்று எழுந்து பால்கும்பாவோடு பால் கறக்கப் போனார் எல்லுசாமி.

    தவுட்டுத் தொட்டியிலிருக்கும் எஞ்சிய புழுதண்ணியை இறைத்துக் கீழே கொட்டிய பிறகு, ரெண்டு குடம் தண்ணீரைத் தவுட்டுத் தொட்டியில் ஊற்றினாள் அம்மணி. அதனுள் சாமைத் தவிட்டோடு எள்ளுப் புண்ணாக்கு கொஞ்சமும் போட்டுக் கரைத்து விட்டு, கறந்த பாலை எடுத்துக் கொண்டு சமையற்க் கொட்டத்திற்குப் போனாள். எல்லுசாமியும் பின்னாடியே போய் அடுப்படியின் அருகே உட்கார்ந்து கொண்டார். அடுப்புச்சூட்டின் கதகதப்பு இதமாக இருந்தது. பால்கும்பாவை அப்படியே பெரிய அடுப்பில் வைத்து விறகு தள்ளியபின், பால் இருந்த சுண்டாச்சட்டியை கண்ணடுப்பில் இருக்கும் காப்பிச்சட்டியின் மேல் வைத்தாள். ஓரிரு மணித்துளிகளில் கண்ணடுப்புப்பால் சட்டிக்குள்ளேயே பொங்கிக் கொதித்தது.

    கண்ணடுப்புக் காப்பியுடன் சற்றுப் பாலையும் சீனியையும் கலந்து ஆத்தி நல்ல பெரிய லோட்டா ஒன்றில் ஊற்றிக் கொடுத்தாள். குத்திட்டு உட்கார்ந்திருந்த எல்லுசாமி காப்பியை அனுபவித்துக் குடித்தார். ஒவ்வொரு வாய் குடித்துக் கொண்டே அதை எடுப்பதும் இதை எடுப்பதுமாக இருந்தாள் அம்மணி. ஏரித்தோட்டத்து மராமத்து வேலைகளைப் பற்றிச் சொல்லி, என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது என்பது குறித்து அம்மணியிடம் யோசனை கேட்டார் எல்லுசாமி.

    கொட்டாவி விட்டபடியே உள்கொட்டத்திலிருந்து எழுந்து வந்தான் பெரியவன் துரைசாமி. “அம்மா காப்பி ஆச்சா?!”

    “பெரிய தங்கம்! ஊர் சோலியெதுக்கும் போகாம நாலு வண்டி மண்ணாச்சும் இன்னிக்கு அடிச்சிப் போடோணும். வேசை இருக்குறப்பவே இந்த குப்பை மேட்டு மண்ணு முச்சூடும் தோட்டத்துக்குக் கடத்திப் போடோணுஞ் சரியா கண்ணூ?”

    “சரிம்மா! எத்தினிவாட்டிதான் இதையே சொல்லுவ? கொண்டா காப்பிய!”

    தோளில் இருந்த துண்டையெடுத்து உதறிய பின், தலைக்கு உருமாலையாகக் கட்டிக் கொண்டு கிளம்பினார் எல்லுசாமி. தூக்குப் போசியில் முதல் நாள் சோத்துடன் மோர் ஊற்றிக் கரைத்து, அதையே தோட்டத்து நாய் பேச்சிக்குக் கொடுத்தனுப்பினாள் அம்மணி.

    அடுப்படியில் விறகு தள்ளிவிட்டுக் கொண்டிருந்தவள், வேகமாகத் தண்ணிக் கொட்டத்துக்குப் போனாள். அங்கிருந்த தண்ணியடுப்பில் தென்னை மட்டை ரெண்டினை வைத்துப் பற்ற வைத்தாள். பெரியவன் குளிக்காமல் சாப்பிடமாட்டான். பெரியடுப்பில் உலை காய்ந்து விட்டிருந்தது. கழுவி அரித்த அரிசியை உலையில் போட்டு, அதன் மேல் தட்டத்தை வைத்து மூடினாள். கண்ணடுப்பில் இன்னும் காப்பிச்சட்டி சுண்டிக் கொண்டிருந்தது. பருப்புச்சட்டியைக் கண்ணடுப்பில் வைத்து, அதற்கு மேல் காப்பிச்சட்டியை இடம் மாற்றிக் கொண்டாள்.

    “நேராப் போயி ஒரு வண்டி மண்ணடிச்சுட்டு வந்துரு. அதுக்குள்ள சோறாக்கி, தெவரைப் பருப்பு கடைஞ்சி கத்தரிக்காக் குழம்பும் செய்து போடுறன் நானு!”

    “செரீம்மா”, கிளம்பிப் போனான் பெரிய மகன் துரைசாமி. போடிபட்டியில் இருக்கும் தன்னுடைய அண்ணன் வீட்டுக்குப் போன சின்னவன் மணியன் இன்னைக்காவது வருவானா மாட்டானா? யோசித்துக் கொண்டே தயிர் மொடாவைச் சிலுப்பு கொக்கிகளுக்குக் கீழே வைத்தாள் அம்மணி.

    கழுவிக் கொண்டு வந்த ஆளுயர தயிர்மத்தினை மொடாவில் நிறுத்தி, மேல்க்கொக்கிக்கும் கீழ்க்கொக்கிக்கும் உண்டான பனம்பட்டைகளைப் பூட்டினாள். பட்டைகளுக்கு இடையில் நின்று சுழலத் தயாரானது மத்துக்கோல். மத்துக்கோலில் சுருட்டிக் கட்டப்பட்டிருந்த கயிறினை அவிழ்த்து முன்னும் பின்னுமாக மத்தினை இழுத்தாடியபடி தயிர் சிலுப்பினாள். இடையிடையே அடுப்படியில் நடந்து கொண்டிருந்த சமையல் வேலைகளும் கவனிக்கப்பட்டுக் கொண்டிருந்தன.

    வெண்ணெய் திரண்டு மிதக்கத் துவங்கியது. மத்துக்கீற்றிலும் நிறைய வெண்ணெய் திரண்டு அப்பிக்கொண்டிருந்தது. வெண்ணெய் திரண்டிருந்த மொடாவிலும், மத்துக் கீற்றிலும் இருந்த வெண்ணெய் முழுவதையும் ஒன்று திரட்டிப் பெரிய உருண்டையாக்கினாள். திருப்பதி இலட்டு அளவுக்குத் திரண்டு இருந்தது. மோர் வித்த காசும், வெண்ணெய் வித்த காசும் போதும் அவளுக்கு, வீட்டு செலவுகளைச் சரிக்கட்ட.

    பாத்திரங்கழுவுதல், மோர் சிலுப்புதல், பண்டங்கன்னுக்கு தீவனம் போடுதல், கொல்லையில் இருக்கும் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுதல், பால் மோர் கேட்டு வருபவர்களுக்கு ஊற்றிக் காசு வாங்குதல், துணி துவைத்தல், சில்வானங்கேட்டு வந்தவர்களுக்கு நோட்டு முறித்துக்  கொடுத்தல், குறியாப்புக் கேட்டு வந்தவர்களிடம் குறியீடாக ஒன்றை வாங்கி வைத்துக் கொண்டு மற்றொன்றைக் கொடுத்தல் என பதினாறு கவனக வேலையாகப் பலதையும் ஒரே நேரத்தில் செய்து, காலைநேரப் பணிகளை முடித்தாள் அம்மணி.

    பெரியவன் துரைசாமி முதல் வண்டி மண்ணடித்து விட்டு வந்திருந்தான். “கைகால் மூஞ்சி கழுவீட்டு வந்து உக்காரு கண்ணு!”, அவனுக்கு வட்டல் வைத்து சோத்தைப் போட்டுவிட்டு, கூடையில் அனைத்தையும் எடுத்து வைத்துக் கொண்டாள்.

    ”செரி கண்ணூ. நான் பொடக்காளிக்குப் போயி பண்டங்கன்னுக்குத் தண்ணி காமிச்சிர்றேன். அப்படியே தோட்டத்துக்குப் போயி அப்பங்கூடவே உக்காந்து சோறுண்டுக்குறேன். நீ ஊட்டைப் பூட்டி தொறப்புக்குச்சியை எறவாரத்து மேப்படி மேல வெச்சிட்டு, மாடு கன்னுகளையும் ஓட்டிட்டு வந்துரு! செரியா?”

    லெட்சுமாபுரத்திலிருந்து குண்டலப்பட்டி எல்லையில் இருக்கும் ஏரித்தோட்டத்துக்கு ஒன்னரை மைல் தூரம். அந்த ஒன்பது ஏக்கர் ஏரித்தோட்டம்தான் எல்லுசாமி அம்மணி தம்பதியினருக்குக் கிடைத்த பூர்விகச் சொத்து.

    சும்மாட்டுத் தலையில் இருந்த கூடையில் காலைச்சோறு, மத்தியானச் சோறு எல்லாமும் இருந்தது. வலது கை கூடையைப் பிடித்திருக்க, இடது கையில் காப்பி இருந்த திருகணிச் சொம்பினைத் தொங்கவிட்டபடி புறப்பட்டுப் போனாள். ஊர் எல்லை தாண்டும் வரையிலும், மாறி மாறி யாராவது ஒருவர் எதிரில் வந்து கொண்டே இருந்தனர். அவர்களிடம் ஞாயம் பேசுவதும் நலம் விசாரிப்பதுமாகப் பேசிக்கொண்டே தன் வழியில் போய்க் கொண்டிருந்தாள்.

    தோட்டத்து இட்டேரிக்கு இவள் போனதுமே தோட்டத்து நாய் பேச்சி ஓடோடி வந்து இவளை முகர்ந்து பார்த்து நக்கியபடியே வளைய வந்தது.

    “அடியே பேச்சி, சும்மா போ! எதோ காணாதவளைக் கண்டவளாட்ட? என்ன நீயி?! உங்க அப்பன் உனக்கு சோறு ஊத்துனாரா, ஊத்தாமயே உட்டுட்டாரா? செரி வா, சாளைக்கு வந்ததும் நான் ஊத்தறேன்!”, வாஞ்சையாகத் தன் மகளைச் செல்லம் கொண்டாடினாள். அம்மணி வருவதைக் கவனித்த எல்லுசாமி கிணற்றடியில் இருந்து வேப்பங்குச்சிப் பல்துலக்கோடு சாளையை நோக்கி வந்து கொண்டிருந்தார்.

    சாளைத் திண்ணையில் கூடையையும், திருகணிச்சொம்பினை சாளைக்குள் இருந்த மரப்பொட்டி ஒன்றின் மேலுமாகத் தன் சுமையை இறக்கி வைத்தாள்.

    “டே பேச்சி, வாடா கண்ணு!! கூழ் குடிப்பியாமா!!” எறவாரத்தில் தொங்கிக் கொண்டிருந்த தூக்குப் போசியில் இருந்த கூழை பேச்சியின் தட்டில் ஊற்றிவிட்டு, தண்ணித்தொட்டிக்குப் போய் தூக்குப் போசியைக் கழுவினாள். அது நிரம்ப தண்ணீர் கொண்டு வந்து எல்லுசாமியின் அருகே வைத்தாள். ஏற்கனவே கூடையை எல்லுசாமி இறக்கி வைத்திருந்தார். அதில் இருந்தவற்றை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்ள, காலை வேளைச் சாப்பாடு ஆனது.

    உண்ட மசமசப்பு தீரக் கையில் பீடியோடு உலாத்தப் போனார் எல்லுசாமி. தான் கொண்டு வந்திருந்த கொத்தினைக் கையில் எடுத்துக் கொண்டு, பருத்திக்காடு களையெடுக்கப் போனவள் மத்தியானம் ரெண்டுமணி நெகமத்து வண்டியின் சத்தம் கேட்டுத்தான் சாளைக்குத் திரும்பினாள். களையெடுப்பதில் மற்றவரை விட எப்போதும் ரெண்டு மூணு பாத்தி முன்னாடிதான் இருப்பாள். ஒரு களை தப்பாது; பயிருக்கும் சேதாரம் ஆகாது. பண்ணையத்து வேலைகளில் அம்மணியோடு போட்டியிடுவதற்கு சிஞ்சுவாடி கிராமத்தில் இருப்பவர் எவரும் யோசிக்கவே செய்வர்.

    சொல்லி வைத்தாற்போல பெரியவன் துரைசாமியும் மத்தியானச் சாப்பாட்டுக்கு வந்து சேர்ந்து கொண்டான். எல்லுசாமி மேவரத்துக்குழியில் இருந்த பட்டுப் போன மரமொன்றை வெட்டிச் சாய்த்துக் கொண்டிருந்தார்.

    “ஏனுங்! உங்களைத்தானுங்.. வாங்க. உச்சி மேக்க சாஞ்சு வெகுநேரமாயிருச்சு பாருங்க. வாங்க, வந்து சோறுண்ட்டு பார்ப்பீங்களாமா!!”, தண்ணித்தொட்டி மேல் ஏறி நின்று குரல் கொடுத்தாள்.

    அருகே இருந்த வாழை மரத்தில் மூன்று கீற்று இலையைக் கொய்துவந்து, கடை பரப்பிச் சோறு பரிமாறினாள். தன் வாலைக் குழைத்தபடி பேச்சியும் அருகில் வந்து நின்று கொண்டது. அம்மணியின் முகத்தையே பார்த்துக் கொண்டு இருந்தது அது. அதற்கும் வட்டல் கொண்டுவரப்பட்டு சோறு போடப்பட்டது. ஊர் நாயத்தோடு பண்ணையத்து நடப்பு வேலைகள் குறித்தும் பேசியபடி மத்தியான வேளை உண்டியை முடித்துக் கொண்டனர்.

    உண்ட மயக்கம் தொண்டனுக்கும்! இட்டேரியிலிருக்கும் பூவரச மரத்தின்கீழ் இருக்கும் வண்டியின் மீது ஏறிப்படுத்துக் கொண்டார் எல்லுசாமி. ஆனைமலைக் காற்று சில்லென்று அடிக்க, தென்னை மரத்தோப்பிலிருந்து செம்போத்தும் குயிலும் அதனதன் சுதியில் பாடிக் கொண்டிருந்தன. பெரியவன் பக்கத்துச் சாளையில் இருக்கும் சோடிக்காரப் பையன் தங்கவேலுவிடம் போனான். சோத்துப் போசியை கழுவிக் கமுத்திவிட்டு, சாளை முழுவதையும் கூட்டிப் பெருக்கினாள் அம்மணி.

    தெற்கே எரிசனம்பட்டி வரை போய்த் திரும்பிய நெகமத்து வண்டி, வடதிசையை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தது. அதைக்கவனித்த அம்மணி, “ஏனுங், நாம்போயி மிச்சமிருக்குற கொஞ்சநஞ்ச பாத்திகளையும் செதுக்கிட்டு வந்துர்றேன்”. மறுபேச்சுக்குக் காத்திராமல் பருத்திக்காட்டுப் போய்த் தன் வேலையைத் தொடர்ந்தாள்.

    குண்டலப்பட்டியில் யாருக்கோ தெரட்டிச்சீர் போலிருக்கிறது. பாட்டுப்பொட்டி கொண்டு வந்து பாட்டெல்லாம் போட்டிருந்தார்கள். அதையும் மீறி எதோ சிலுசிலுவென்ற சத்தம் கேட்டது. தலையைத் தூக்கிப் பார்த்தால்  கஞ்சம்பட்டி மூலையிலிருந்து படைக்குருவிகள் ரெண்டு படைகளாக ஆகாயத்தில் வந்து கொண்டிருந்தன. படை ஒன்றுக்கு ரெண்டாயிரத்திலிருந்து ஐயாயிரம் குருவிகள் வரை கூட இருக்குமாம். பெரிய நாவற்பழம் போன்ற வடிவில் ஒரு படையும், ஆலிலை வடிவில் ஒரு படையும் தோற்றமளித்தது. இலாகவமாய் ஒரு சேர வளைந்து நெளிந்து பறக்கும் படைக்குருவிகளின் சாகசக் காட்சியைச் சொக்குண்டு பார்த்துச் சிரித்தாள் அம்மணி.

    பெரியவன் மாய்ந்து மாய்ந்து வேலை பார்க்கிறான். எப்போதும் நாலு வண்டி மண்ணடிப்பவன் இன்றைக்கு ஆறாவது நடை போய்க் கொண்டிருந்தான்.

    “செரி நீ கிளம்பு! பொழுது வுழுகுறதுக்கு முன்னாலயே ஊடு போய்ச்சேரு. சின்னவன் மேக்க இருந்து வந்தாலும் வருவான்!!”

    ஊரெல்லாம் நிழல் படர்ந்திருந்தது. நேராக புறக்கொல்லைக்குப் போய், எல்லாம் இருந்தது இருந்தபடி இருக்கிறதா எனச்சரி பார்த்ததும் அவளுக்கு மனம் நிறைந்தது. தண்ணித்தொட்டியில் இருந்து தண்ணீர் மொண்டு, கை கால் முகம் கழுவித் தன் முந்தானையாலேயே துடைத்துக் கொண்டாள்.

    அவ்வளவுதான், வீட்டுக்கு வந்தாயிற்று! பத்துப் பதினாறு கவனத்துடன் பல வேலைகளை ஒருசேர ஒருங்கே பார்க்கத் துவங்கினாள். துணிகளை அலசிப் போட்டாள். நல்லதண்ணிக் கிணத்துக்கு ஒரு நடை போய் தலையில் ஒரு குடம், இடுப்பில் ஒரு குடமாக இரண்டு குடந்தண்ணி கொண்டு வரப்பட்டது. கரியூட்டுச் சேந்து கிணத்திலிருந்து நாற்பது குடம் சப்பைத் தண்ணி கொண்டு வரப்பட்டு பண்டங்கன்னுகளுக்கெல்லாம் தண்ணி காண்பிக்கப்பட்டது. வீடெல்லாம் பெருக்கித் துப்புரவு செய்யப்பட்டது.

    முதலில் அம்மணி குளித்து முடித்தாள். அதே கையோடு வாசல் தெளிக்கப்பட்டு வீட்டில் விளக்கேற்றப்பட்டது. தோட்டத்தில் இருந்து வந்த எல்லுசாமியும் பெரியவனும் குளிக்கப் போகுமுன்னர், ஒருவர் பால் கறந்து கொடுக்க மற்றவர் வைக்கோற் போரிலிருந்து வக்கிப்புல் அரிந்து வந்தார்கள். கறந்த பாலில் மணக்க மணக்க காப்பி தரப்பட்டது. அம்மணியும் ஒரு லோட்டா குடித்துக் கொண்டாள்.

    விநாயகங்கோயில் திண்ணையில் உட்கார்ந்து கொண்டு ஊர்ப்பெரியவர்களும் எல்லுசாமியும் ஊர்ப்பழமை பேசிக் கொண்டிருந்தனர். பெரியவன் அவஞ்சோட்டுப் பையன்களோடு தலைவாசலில் நின்றுகொண்டு, கரட்டுமடம் சுகந்தி கொட்டாயில் என்ன படம் ஓடிக்கொண்டிருக்கிறது என்பது பற்றிப் பேசிக்கொண்டிருந்தான்.

    அரிசிபருப்புக் கூட்டாஞ்சோறு ஆக்கி ’பயித்தம்பயிறு அடை’யும் சுட்டு வைத்திருக்க, எல்லாருமாகச் சேர்ந்து சாப்பிட்டார்கள். திண்ணையில் மற்றவர்களோடு என்ன பேசிக்கொண்டிருந்தோம் என்பதை எல்லுசாமி சொல்லச் சொல்ல, அம்மணியும் கிணத்தடியில் தான் அறிய நேர்ந்தவற்றைப் பகிர்ந்து கொண்டாள். பேச்சு நெடுகிலும், பெரியவன் தன் அம்மாவைக் கிண்டலடித்துக் கொண்டே இருந்தான்.

    சாப்பாட்டு வேளை முடிந்ததும், எல்லுசாமி புறக்கொல்லைக்குப் போனார் பீடி இழுக்க. பழுதான மருந்துத் தெளிப்பானை நோண்டிக் கொண்டிருந்தான் பெரியவன் துரைசாமி.

    காற்று பதமாய் வீசியது. மதுரைவீரன் கோயில் பாட்டுச் சத்தம் விட்டுக் விட்டுக் கேட்டது. நான்கு வீடு தள்ளி இருக்கும் சுசீலா டீச்சர் வீட்டில் ஒரே சிரிப்பும் கும்மாளமுமாய் இருந்தது. யாரோ அவர்களுடைய உறவினர்கள் வந்திருக்கிறார்கள் போலத் தெரிகிறது. காரவாசலில் உட்கார்ந்து, அம்மணியும் பக்கத்து வீட்டு ருக்மணியும் புளியம்பழம் தட்டிக் கொட்டைகளைத் தனியாகவும் புளியைத்தனியாகவும் பிரித்தெடுத்துக் கொண்டே ஊர் ஞாயம் பேசிக் கொண்டிருந்தனர்.

    முதலில் எல்லுசாமி வந்து படுக்கையைப் போட்டார். சித்த நேரத்திலெல்லாம் பெரியவன் போய்ப் படுத்துக் கொண்டான். ருக்மணி அக்காவை அனுப்பி வைத்த கையோடு, பண்டங்கன்னுக்கெல்லாம் தீவனம் போட்டு வந்தாள் அம்மணி. முன்வாசக்கதவு, பின்வாசக்கதவு எல்லாம் நாதாங்கி பூட்டப்பட்டு இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொண்டாள்.

    கீழ்த்தாழ்வாரத்தில் எல்லுசாமி கட்டிலில் படுத்திருக்க, அதனருகே தரையில் பாயை விரித்து தலையணை இடப்பட்டது. கம்மாளபட்டி போர்வை ஒன்றும் தலையணை மேல் கிடத்தப்பட்டது.

    பித்தளைச் சொம்பு நிறையத் தண்ணீரும் அதை மூடிய வாக்கில் டம்ளர் ஒன்றுமாகக் குடிதண்ணீரைக் கட்டிலின் கீழ் கைக்கெட்டும் தூரத்தில் வைத்துக் கொண்டாளவள்.

    தூங்குவதாய் இருந்தாலும் அது ஒரு வேலையாக இருக்க வேண்டும். அல்லாவிடில் அம்மணிக்குத் தூக்கம் வராது. மின்விளக்கெல்லாம் அணைக்கப்பட்டு, ஒளிரும் குறுஞ்சிமினி விளக்கொன்றைத் தலைமாட்டில் வைத்துப் படுத்துக் கொண்டாள்.

    முதலாவது வேலையாகப் பெரியவன் எப்படி ஒன்பது ஏக்கர் நிலத்தை பதினெட்டு ஏக்கராக்கப் போகிறான் எனும் யோசனை; அடுத்து, சின்னவனை எப்படிப் படிக்க வைத்து வெளிநாட்டுக்கு அனுப்பலாமென்கிற யோசனை; குடிக்கத் தண்ணீர் கேட்பது போன்ற உதவிகளைத் தன் மணவாளன் கேட்டால் உடனே அதைச் செய்ய வேண்டும் என்கிற ஆவல்; புறக்கொல்லையில் மாடு கன்றுகள் இருக்குமிடத்திலிருந்து ஏதாவது சலசலப்புக் கேட்டால், உடனே போய் எட்டிப் பார்க்க வேண்டும் என்கிற எச்சரிக்கையுணர்வு. இப்படியான பலவற்றுடன்தான்  இரவு கழியப் போகிறது அவளுக்கு.

    தூக்கத்தில் திடீரென எதையோ நினைத்துத் தனக்குத்தானே பேசிச் சிரித்துக் கொண்டாள். சிரிப்பொலி கேட்ட எல்லுசாமி தன் தலையைச் சற்றுத் தூக்கித் தன்னருகே தரையில் படுத்திருக்கும் அம்மணியை ஏறிட,   இன்று பூத்த பூப்போலக்  கொள்ளை அழகாய் இருந்தாள் அவள்!

    Share