Tag: விசாலம்

  • ‘சதம் “அடித்தேன்

     

    விசாலம்

    வல்லமை‘ என்ற பெரிய கிரிக்கெட் மைதானம்  அதில் பங்கு பெருபவர்கள் பெரிய ஜாம்பவான்கள் தான்   அதற்கு  கேப்டன் திருமதி பவள சங்கரி   மிகத்  திறமையுடன்  டீம் மை கொண்டுச் செல்லும் கேப்டன் .கூடவே  உபதலைவர்கள் போஸ்டில் திருமதி காயத்ரி, திரு இளங்கோ, திருமதி சாந்தி. இந்த வல்லமை  எழுத்து மைதானத்தை முதலில் நடத்திச்சென்றவர்    திரு அண்ணாகண்ணன்  .அவர் மிகவும் திறமை வாய்ந்த கேப்டன் . பல படைப்புகளைக் கொடுத்து எழுத்துலகில் ரன்களைக்  குவித்திருக்கிறார்.  பல புத்தகங்கள் எழுதியிருக்கிறார். அவர் முதலில் சிபி .காம் sifi  .com  ல்  இருந்த போது என்னையும் எழுத்துலகத்தில்  சேர்த்துக்கொண்டார் . அப்போது ஆரம்பித்தது  தான்

    “நீ போகுமிடமெல்லாம் நானும் வருவேன்   “என்று  திரு கண்ணதாசன் அவர்களின் பாடலைப்போல்  நானும் அவர் போகுமிடமெல்லாம்  தொடர்ந்தேன்  . சி பி .காமுக்குப்பிறகு சென்னை ஆன் லைன் னில்  விடாமல் எழுதி வந்தேன்  .  அந்த மைதானத்திலும்  செஞ்சரி எடுத்தேன்’  அங்கு கட்டுரைகளுடன் எனக்கு ” வீடும் வாஸ்துவும் ” என்பதைத்தொடராக எழுத வாய்ப்பும் வந்தது  .பின்  அவர் “வல்லமையை ஆரம்பித்தார்  .  நானும்  இங்கு தொடர்ந்தேன் இந்த வல்லமை என்ற மைதானம் ஆரம்பித்திலிருந்தே  தொடர்ந்து  பல  மேதைகள்  ,சேர்ந்து  திறமையாக விளையாட   நானும்  ..இவர்களுடன் சேர்ந்து  பல கற்றும் வருகிறேன் என் பங்கும் இதில் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது  இந்த மைதானத்தில் இந்தக்கட்டுரை  என்னுடைய நூறாவது ரன் என்று சொல்லிக்கொள்வதில் மிகவும் மகிழ்ச்சிதான்

    இந்த நூறு என்ற நம்பருக்கு மிகவும் சக்தி உண்டு  . கிரிக்கெட் விளையாடும் போது 95 ரன்  தாண்டியவுடனேயே எல்லோருக்கும் ஒருபுது உற்சாகம் வந்துவிடும் பேட்ஸ் மேனுக்கும்தான்  ….பின்  அவன் மிகவும் கவனமாக ஆடிநூறைத் தொட்டவுடன்   மக்களிடையே கரகோஷம்  எழும் .அவனும் தன் மட்டையைச்சுழற்றி நன்றி தெரிவிப்பான் இதுவே நூறைத் தாண்ட  எல்லாம் நார்மலுக்கு வந்துவிடும்   இனி  அடுத்த  ஐம்பதும்   பின் நூறும் தொடும்போதுதான்   அந்த உற்சாகம் திரும்பும் .இதுவே  சினிமாவுக்கும் சொல்லலாம்  நூறாவது நாள் சினிமா ஓட  அது பெரிய விளம்பரம்  ஆகிவிடும்   நாடகமோ வேறு நடனமோ எல்லாமே நூறு நாட்கள்  தொட அதற்கு தனி மவுசு வந்துவிடுகிறது  ,நியூமரலாஜியில் 100 என்றால்  மிகவும் ஒழுங்குமுறை  எனலாம்  ஆங்கிலத்தில்  perfection . .100 ல்   முதலில் இருக்கும்  1  என்பது சூரியனைக்குறிக்கும்   சூரியன்  எப்போதுமே தன் வேலையை  மிகவும்  சரியாக அப்பழுக்கில்லாமல் செய்து வருவான்  . நம்பர் ஒன்று என்றாலே தனி பராக்கிரமம் , .சக்தி , தன்னம்பிக்கை,  எதையும் சாதிக்கும் திறமை , தலைமை வகித்தல்  . தனித்தனமை  ,ஒருவருக்கும் கிழ்ப்படியாத குணம்  . தைரியம்  ,மனோபலம்  என்று பல குணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்  . இத்துடன்  இரண்டு சைபர்  சேர  நூறாகிறது .

    சைபர் என்றாலே சூன்யம்  …. சில தியானத்தில்  சூன்ய மெடிடேஷன்  என்று ஒன்று உண்டு  .அதில் எண்ணங்களை கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்தி மனதை ஒரு சூன்யமாக  ஆக்கி தியானம் செய்யவேண்டும் .இது மிகவும் கஷ்டமான ஒன்று  ஒரு 15 நிமிடங்கள் செய்வதற்குள் பாம்பு நுழைவதுப்போல்  ஒரு எண்ணம் வந்து நுழைந்து கொள்ளும் . இந்த சூன்ய மெடிடேஷனின் கருத்து   உபனிஷத்தில்  வருகின்ற

    “ஓம் பூர்ணமித  பூர்ணமிதம்  பூர்ணாத்  பூர்ணமுதச்யதே பூர்ணஸ்ய  பூர்ணமாதாய  பூர்ணமேவாவசிஷ்யதே  ” .…………….என்பதுடன்  ஒத்துப்போகிறதோ என்று எனக்குத்தோன்றுகிறது
    .
    நாம் தியானிக்கும் போது  நாம் ஆக்ஞா சக்கரத்தில் கவனம் செலுத்துகிறோம் இந்த இடத்தை அவிமுகிதம் என்று சொல்வார்கள். இதனின் மூல இயந்திர வடிவம்  சைபரைப்போன்ற வட்டமே .   மூலதெய்வம் சதாசிவம் ,  தேவி மனோன்மனி இதைப்பார்க்கும் போது  100 என்ற எண்ணிற்கு நிறைய சக்தி இருக்கிறது எனத்தோன்றுகிறது

    நூறு என்ற எண் மிகவும் எளிதாக ஞாபகம் வைத்துக்கொள்ள முடிவதால் முக்கியமான போலீஸ் அழைக்கும் நம்பராக அது உள்ளது . பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கும் இந்த நூறு புகழைச் சேர்க்கிறது நூற்றுக்கு நூறு கணக்கில்  . என்றால்  அரசின் பரிசும் கிடைக்கிறதுபணத்தை எடுத்துக் கொண்டால் அங்கும் நூறு பைசஈ ஒரு ரூபாய் என்றும்   .நூறு பத்துரூபாய்  ஆயிரம் என்றும் நூறை  ஆரம்பமாக வைத்தே    ஒரு பூஜ்யம் சேர்த்தபடி  ஏற்றிக்கொண்டே போகிறோம்  . உடம்பில்  வெப்பமும் நூறு வரை ஏற்றுக்கொள்கிறது .  அது தாண்டிவிட்டால் சுரம் என்று படுத்துவிடுகிறோம்  டெசிமல்  கணக்கிலும் நூறு தான் முக்கிய பங்கு வகிக்கிறது

    கோர்ட்டிலும்  “நான் பேசுவது நூற்றுக்கு நூறு உண்மை   ‘என்று ஆரம்பிப்பதையும் பார்க்கிறோம் .பண்டிகை அல்லது திருவிழாநாட்களில் நாம் பெரியவர்களை  வணங்க  அவர்களும் நூறாண்டு  நோய் நொடியில்லாமல் வாழவேண்டும் என்று வாழ்த்துவார்கள்

    நூறாண்டு வாழ்ந்தவருக்கு கனகாபிஷேகம் செய்வதையும் பார்க்கிறோம் இது போல் நூறுக்கு இருக்கும் சிறப்பை அடுக்கிக்கொண்டே போகலாம்

    இப்போது என் கதைக்கு நான் வருகிறேன் ……. வல்லமையில்  பெரிய பெரிய எழுத்தாள   மேதைகளுக்கு நடுவில்  நானும் புகுந்து  டொக் .டொக்கென்று ஒவ்வொரு ரன்னாக எடுத்து அவுட்டாகாமல் .இடத்தைப்பிடித்து பின் பல மேதைகளிடமிருந்து பாடங்கள் ,அனுபவங்கள் பெற்று பின்  , எழுத்தே  என் மூச்சு என்ற  நிலைமையை  அடைந்துள்ளேன்  விளையாட்டில்    .ஒவ்வொரு சமயம் சௌத்தா  அல்லது சக்காவும்   எடுத்து ……. ஓ ……தில்லி பழக்கம் வந்துவிட்டது .அதான் ஹிந்தி   வந்துவிட்டது. அதான் நாலு ரன்களும் சிக்சரும்  ……அடித்து   அதற்குத்தகுந்த பாராட்டும் பெற்று    இன்று நூறாவதைத் தொட்டிருக்கிறேன்  .கிரிக்கெட் மைதானத்தில் சதம் அடித்தவருக்கு எப்படி கைத்தட்டல்கள் விழுமோ அது போல பெரியவர்கள் என்னை ஆசீர்வதிக்க வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறேன்  சிலர் வயதில் என்னைவிட சிறியவர்கள் ஆனலும் எழுத்துலகில் அவர்கள் பெரிய ஜாம்பவான்களாக இருப்பதால் அவர்களும் என்னை வாழ்த்தும்படி கேட்டுக்கொள்கிறேன் . ஒவ்வொருத்தர் எத்தனையோ சாதனைகள் செய்து வரும் போது இது என்ன பெரிய சாதனையா என்று என் மனம் என்னைக்கேட்டாலும்  வாழ்த்துகள் என்பதில் இருக்கும் பாசிடிவ் அலைகள் என் கனவை நனவாக்கும் என்ற நம்பிக்கையினால் இதை எழுதினேன்

    நான்  இதுவரை எழுதி   வரும் குழுமங்கள்    ..திரு  ஆகிரா நடத்தும் மழலைகள்  {,குழந்தைகளுக்கு எழுதுவதே ஒரு தனி ஆனந்தம் தான்}   இல்லம் பிரவாகம்,  முத்தமிழ்   பண்புடன்  நிலாச்சாரல்  தமிழமுதம் அன்புடன் .ரத்னமாலை  ,தமிழ்வாசல்

    இதுவரை எழுதிய படைப்புகள் கூடிய சீக்கரம்  ஆயிரம் தொட்டுவிடும்    ஆயிரம் எப்படியாவது  முடிக்க வேண்டும் என்ற ஆசை  தான்    .  அதற்கு என் உடல் ஒத்துழைக்க வேண்டும்

     என் கட்டுரைகள் வந்த பத்திரிக்கைகள்  , அவள்விகடன் , ஆனந்தவிகடன் , மங்கையர் மலர்  ,ஞான ஆலயம்  ஓம் சரவணபவ  , ஷண்முக கவசம்  வெற்றிநடை. .

     ஒவ்வொருத்தர் எத்தனையோ சாதனைகள் செய்து  உச்சியைத்தொட்டிருக்கிறார்கள் . அவர்கள் முன்னால் நான் சிறு துளிதான் ஆனாலும்  என் கடைசி மூச்சு வரை நான் இந்த மைதானத்தில்  பங்குப்பெற்று என் பங்கை திறம்பட  செயலாற்ற வேண்டும்  என்பதே என் ஆசை . அதற்குத்தகுந்த  மன வலிமையும் உடல் வலிமையும் அந்த பரமேஸ்வரன் தான் அளிக்க வேண்டும்

    2002 ல் ஆங்கிலம் எழுதி வந்த நான்  2006 ல் தமிழ்க் குழுமத்தில் முதன்முதலாக கால் வைத்தேன்  ஆறு வருடங்கள் ஓடிவிட்டன

    இந்த நேரத்தில் என்னை ஊக்கிவித்த  பலர் என் கண் முன் வருகிறார்கள் . முதன் முதலில் என்னைக்கணினியி ன்  முன்னால் தமிழில் எழுதவைத்து  ஆதரித்து என்னை மேலும் மேலும்நம்பிக்கையுடன்  எழுத வைத்த  ” நம்பிக்கை” என்ற குழு நடத்தி வந்த திரு பாசிடிவ் ராமாவுக்கு என் மனமார்ந்த நன்றி .

    முத்தமிழ்  நடத்தி வந்த திரு மஞ்சூர்ராஜா     திருமதி விஜி  ,எனக்கு ஊக்கம் கொடுத்து வாழ்த்திய குருஜி திரு காழியூரார் .  எனக்கு சகோதரராக இருந்து ஆதரித்த  திரு தமிழ்த்தேனீ திரு ஆகிரா திரு இன்னாம்புரான்ஜி  .திருஶ்ரீனிவாசன் ஜி டாக்டர் சங்கர்குமார்ஜி  சிங்கை குமார்ஜி  விக்ஞானி திரு ஜயபாரதன் ஜி  ,திரு அப்துல் ஜப்பார் ஜி   திரு கவியோகி வேதம்ஜி திரு வேந்தன்  திரு திவாகர் ஜி  திரு சிவசிவா திரு சபேராஜி   திரு நடராஜன்   யாவருக்கும் என் நன்றி என் அன்பு மகனாக இருந்து  என்னை ‘சென்னை ஆன் லைன்.’ ” வல்லமை” யில் எழுத வாய்ப்பளித்த  திருஅண்ணா கண்ணனுக்கும் நன்றி  .

    இல்லத்தில் இருக்கும் மூத்தவரான  திரு பர்வமணி அவர்களுக்கும் என் வணக்கத்தைச் செலுத்துகிறேன் அழகியைக் கண்டுப்பிடித்த  என் மகனான திரு விஷி என்ற விசுவநாதனுக்கும்  என் நன்றி  இசைக்கவிஞர் திரு ரமணன் ஜி யின் மனதைத்தொடும் பாடல்கள் எனக்குக் கவிதை எழுத  ஒரு தூண்டுகோலாக அமைந்தது .அன்பு சகோதரர் திரு ரமணனுக்கு  என் நன்றி .

     திரு பென்னேஸ்வரன் தமிழ் வாசலையும் திறந்து வைத்ததால் அதில்  எழுதும் வாய்ப்பும் எனக்கு கிடைத்தது மிக்க நன்றி

    முழுவதும் ஆன்மீக மலராக மலர்ந்து நிற்பது  ரத்னமாலா  .அதை நடத்தி வருபவர் என் சகோதரர் டாக்டர் சங்கர்ஜி என் ஆன்மீகம் வளர அதுவும் ஒன்று   மிக்க நன்றி

    என் அன்பு தோழிகள் திருமதி  ஷைலஜா  திருமதி கீதா சாம்பசிவம்  திருமதி மீனாமுத்து, அன்பு சகோதரி திருமதி சீதாலட்சுமி . திருமதி ஜயஶ்ரீ சங்கர் ,திருமதி காயத்ரி யாவரையும் பாசத்துடன் நினைவுகொள்கிறேன்  மிக்க நன்றி

    திரு சுரேஷ் என்ற என் மகன் பிளாக் போடும் முக்கியத்துவத்தை என்னிடம் கூறியதால்  எனக்கும் ஒரு பிளாக் ஆரம்பிக்கும் எண்ணம் ஏற்பட்டது  அதற்காக நான் டாக்டர் சிவசங்கரை நாடியபோது   அவர் எனக்கு மீராம்பிகா என்ற பிளாக்கை ஆரம்பித்துக்கொடுத்தார் அவரும்  என் அன்பு மகன் தான் அவருக்கும் என் நன்றி .அத்துடன் திரு பாலமுரளி மேலே என் பிளாக்கில் படங்கள் போடும் விதத்தைச் சொல்லிக் கொடுத்து எனக்கு உதவினார் நன்றி பாலா

    என்னை எழுத்துலகில் மேலும் எழுத தூண்டுகோலாக இருந்து  உற்சாகப்படுத்திய மகள்கள்  திருமதி பவளஸ்ரீ  திருமதி  ஜயந்தி , திருமதி விஜி   திருமதி காந்திமதி  ; நிலச்சாரல் நடத்திய திருமதி நிர்மலா  யாவருக்கும் என் நல்லாசிகளுடன்  நன்றி. திரு ஆசீப் மீரான் .திரு உமாநாத் ,திரு பாலமுரளி ,திரு வேணுகோபால், யாவருக்கும் என் நன்றி

    இந்த எல்லா குழுமத்திலும் பல சகோதரர்கள் ,பல மகன்கள் .பல மகள்கள் என்னை ஆசையுடனும் பாசமுடனும் அம்மா என்று அழைத்து  பேசும் போது மனம் நெகிழ்ந்து போகிறது  வாழ்க குழுமங்கள் .

    ஒற்றுமையுடன் ஆக்கப் பாதையில்  எல்லா குழுமங்களும் நன்கு சிறப்பாக  நடக்க என் பிரர்ர்தனையுடன் கூடிய   நல்லாசிகள் .

    அன்புடன்  விசாலம்

    Share
  • “அத்தை எங்கே கூப்பிடு “

     

    விசாலம்

    அது நான் சிறுமியாக  இருந்த காலம் .எங்கள் குடும்பத்துடன் என் அத்தையும் கூட இருந்தார் .எங்கள் குடும்பத்திற்கே  அவர் ஒரு தூண் என்றே சொல்லலாம் நான் பிறப்பதற்கு முன்னாலேயே  ,அவர் எங்கள் குடும்பத்திற்குள் புகுந்து விட்டார் .  1930லிருந்து என் அப்பாவுடன்  வந்தவர்  அவருடனேயே தங்கி விட்டார் .தனக்கென்றே வாழாமல் பிறருக்காகவே வாழ்ந்து காட்டியவர் . அவர் அந்தக்காலத்திலேயே ஆண் ஆதிக்கத்தை வெறுத்தவர் . தன் கணவருக்குக்கீழ்படிந்து  வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடந்து, விறகடுப்பு  ,புகை  தினமும் 15 பேருக்குச்சமையல்  என்று சமையல் அறையைவிட்டு வெளியே வாராமல் இருந்தாலும் அவருக்கு வாய்த்த கணவர் ஒரு ஹிட்லர் போல் இருந்தாராம் அவரிடம் முதலில் பயந்து பயந்து . அடி உதைகளும் வாங்கிக்கொண்டு  பொறுமையுடன் தான் இருந்தார் அவர் ..ஆனால் பின்னால் தான் இந்த கஷ்டத்திலிருந்து விடு பட தனியாக இருந்து காட்டவேண்டும் என்று அந்தக்காலத்தில் நினைத்த புரட்சிப்பெண் அவர் .அவர் என் அப்பாவிடம்  அடைக்கலம் பெற்ற சம்பவத்தை என்னிடம் கூறினார்

    ஒரு நாள் என் அத்தை  தோசைக்கு மிளகாய்ப்பொடி உரலில் இடித்துக்கொண்டிருக்க அந்த ஹிட்லர் கணவர் அவரை அழைத்தாராம்  . அங்கு கூடத்தில் சீட்டுக்கச்சேரி களைக்கட்டிக்கொண்டிருந்தது சீட்டு விளையாடுபவர்களுக்குச்  சூடான காபி கொண்டுவர குரல் கொடுத்தார் ”ஏண்டி எத்தனை தடவ கூப்பிடறது உன்னை …. செவிடாடி நீ! முண்டம் முண்டம் ‘ என்றுச்சொல்லி கத்தினாராம் . என் அத்தைக்கு இதைத்தாங்கிக்கொள்ளும் இதயம் இல்லை . எல்லா நண்பர்களுக்கெதிரில் இப்படி ஒரு அவமானமா என்று புழுங்கினார். பின் “நான் மிளகாய்ப்பொடி இடிச்சுண்டிருக்கேன் .இப்ப என்னாலே அங்க வரமுடியாது ‘ என்று பதில் கொடுத்தாள் .

    ஹிட்லர் அத்திம்பேருக்குக் கோபத்தில் கண்கள் சிவந்தன .  ,, பாதி ஆட்டத்தில் எழுந்து உள்ளே வந்தாராம்   அத்தையின் முடியைப்பிடித்து இழுத்தார் . போன ஜன்மத்தில் துச்சாசனனாக இருந்திருப்பாரோ என்னமோ !  கோபம் என்று ஒன்று வந்தால் கண்மண் தெரியாதே . யோசிக்கும் சக்தி எங்கேயோ ஓடி ஒளிந்துகொண்டுவிடும் போலிருக்கு . அங்கு பொடித்து வைத்த மிளகாய்ப்பொடியை கையில் அள்ளினாராம் நேராக என் அத்தையின் கண்களில் வீசினாராம்  ஐயோ இது என்ன கொடுமை கண்கள் போயிருந்தால் என்ன செய்வது ?

    ” ஆ  ஆ எரியறதே  கண்ணு போச்சே  இப்படி ஒரு மனுஷனா நீ ” என்று முதல் தடவையாக “நீ ” என்று அவரை அழைத்து கண்களை அலம்ப கொல்லையை நோக்கி ஓடினாராம் .

    கண்களில் எரிச்சல் அதிகமாக எதிர் வீட்டு மாமியுடன் கண் டாக்டரிடம் தானே சென்று வந்தார் .மறு நாள் இரண்டு புடவைகளுடன் ரயில் ஏறி பம்பாய்க்கு என் அப்பாவிடம் அடைக்கலம் புகுந்தார் .அவரது கணவரும் அவரைத்தேடி வந்தோ அல்லது செய்த காரியத்திற்கு மன்னிப்பு கேட்டோ செய்யவில்லை . தன்னிஷ்டப்படி ஜாலியாக இருக்க ஆரம்பித்தார் அந்த மனிதர்  .

    என் அத்தையின் வயது அப்போது சுமார் 25 இருக்கலாம்   .அன்றைய தினத்திலிருந்து எங்கள் குடும்பத்திற்கு எல்லாமே எங்கள் அத்தைதான் அவரை வாழாவெட்டி என்று ஒருவரும் சொன்னதில்லை தவிர அவர் ஆசிகளுடன் ஆரம்பிக்கும் காரியம் மிகவும் நலமாகவே முடியும் . அவரில்லாமல் எங்கள் குடும்பமே இல்லை என்ற நிலைமை ஆகிவிட்டது .அவரது புக்காத்தில் 14 வயதில் நுழைந்தவர் ஒரு பத்து வருடம் நரக வாழ்க்கை வாழ்ந்து புரட்சியுடன் வீட்டை விட்டு தன் தம்பியின் குடும்பத்திற்கே தன்னை அர்ப்பணித்த அவர் எனக்கு தெய்வம் போல் தெரிகிறார் .எங்கள் வீட்டு டாக்டர்  வக்கீல் . ஆடிட்டர்  சமையல் ஹெட்டு எல்லாமே அவர்தான் .

    அவரது டாக்டர் அவதாரத்தில் கேட்டவை

    “ஏண்டி லொங்கு லொங்குன்னு இருமறே .இஞ்சியை நெருப்ல சுட்டு பனங்கல்கண்டு சேத்து அரைச்சு தரேன் சளி துப்ப வந்துடும் கபம் போயிடும் .

    தொண்டை வலியா  இரு  இதோ ஒரு மருந்து தரேன்  என்று சீரகம் ஒரு தேக்கரண்டி எடுத்து அதை வறுத்து இரண்டு டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைப்பார் பின் அதில் தேன் கலந்து தருவார்

    உடல் வலியுடன் வீக்கம் இருந்தால் தண்ணீரில் உப்பு போட்டு கொதிக்க வைத்து வீங்கிய இடத்தில் ஒத்தடம் கொடுப்பார் மழைக்காலத்தில் மிளகு கஷாயம் நிச்சயம் உண்டு

    “மாமி உடம்பு ரொம்ப பருத்து போறது  என்ன செய்யலாம் என்று  ஒரு மாது வந்து சந்தேகம் கேட்க அதற்கும் பதில் ரெடியாக இருக்கும்

    “வா  ஜானகி வா   உடம்பு குண்டாப் போச்சுன்னு கவலைப்படாதே . கொஞ்சம் சிக்கை பொடி செஞ்சிக்கோ  ராத்திரி ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெயில் கலக்கி  படுக்கப் போறச்ச சாப்பிட்டு வா .வேண்டாத கொழுப்பு கரைஞ்சுபோய்டும்  .

    என் அம்மாவிடம்  ” இத பார்   சரஸ்வதி  அடுத்த மாசம்  தீபாளி வரது இந்த மாசம்  நூறுக்கு மேலே சிலவு போகாம பாத்துக்கப்போறேன் அப்பத்தான் தீபாளிக்கு குழந்தைகளுக்கு டிரெஸ்க்கு தாராளமாக சிலவு செய்யமுடியும்  . இரண்டு மாசம் முன்னாடியே  ஒரு நூறு சேர்த்துட்டேன்  “என்று ஆடிட்டர் ரோலை எடுத்துக்கொள்வார்

    இது போல் பல அவதாரங்களுடன் எங்களுக்காகவே உழைத்த என் அத்தையின்  ஞாபகம் எனக்கு அடிக்கடி வருகிறது . இந்தக்காலத்தில் இது போல் அத்தை  மாமா உறவுகள் திரும்பி தழைக்குமா  ? தன் வாழ்க்கையே குடும்பத்திற்காக  தன் திருமணம் பற்றிக்கூட எண்ணாமல்  மருமாள் மருமானுக்காகவும்   தன் சகோதர குடும்பத்திற்காகவும் வாழும் அத்தைகள் இன்று கிடைப்பார்களா? அத்தை மடி மெத்தையடி என்ற பாட்டு திரும்ப பாட வாய்ப்பு வருமா ? யோசிக்கத்தான் வேண்டும் .    .

    Share
  • விஜயதசமி

    விசாலம்

    விஜயதசமி என்றால் எல்லோருக்கும் முதலில் நடக்கும் முத்தேவிகளின் ஆராதனையும்  பின் ஆயுதபூஜையும் உடனே ஞாபகம் வரும் ,நான் தினமும் ஷீரடியின் சாயி ஸச்சரிதா படிப்பேன். அதில் “சாவடி ஊர்வலம் “என்ற பகுதி இரவு படுக்கும் முன் படிக்க அல்லது கண்முன் அந்தக் காட்சியைக்காண  மிகவும்  நன்மைப் பயக்கும்,  ஷீரடியில் இன்றும் விஜயதசமி அன்று ஊர்வலம் நடக்கிறது .சிறப்பு என்னவென்றால் ஹிந்துக்களும் முஸ்லிம்களும் மற்ற எல்லா மதப் பிரிவுகளும் இதில் பங்கு ஏற்கின்றனர் ,ஒருவித சச்சரவுமில்லாமல் அமைதியாகச் சிறப்புடன் நடைப்பெறுகிறது அன்பும் பாசமும் கலந்த ஊர்வலம் ,பிரசாதமும் எல்லாவித
    உணவும் கலந்த ஒன்று ,சீரடிபாபா ஒரு ஜோலிப்பையில்  எல்லோரும் கொடுக்கும் உணவைச் சேகரித்து பின் அதைக்கலந்து எல்லோருக்கும் வினோகித்து பின் காக்கை குருவி நாய் பூனை போன்றவைகளுக்கும் போட்டு பின் அவர் சாப்பிடுவாராம். இதே விஜயதசமி அன்றுதான் அவர் சித்தி அடைந்தார் அவர் வாழ்ந்த வாழ்க்கை மிக எளிமை ஆன ஒன்று .ஷீரடிக்குள்முதன் முதலாக அவர்  நுழைந்தப்போது  அவர் சீதனம் ஒரு செங்கலும் இரண்டு சாக்குகளும்தான்,”சாயி”என்றால் கூட வாழும் இறைவன் “என்று பொருள் கொள்ளலாம் அவரின் ஒரே மந்திரம் “அல்லா மாலிக்”. பல கோடி மக்கள் இன்று அந்தப் பக்கிரி பாபாவின் பொற்கமலங்களைப்பற்றி அமைதி காணுகிறார்கள்.

    பாபா தான் படுக்கப் போகும் போது தான் கொண்டு வந்தச் செங்கலை ஒரு பழைய துணியில் சுற்றி அதில் தலை வைத்துக் கொள்வார்.அவருக்கு உதவ ஒரு குட்டிப்பையன். பாபாகூடவே இருந்து அவர் படுக்கப் போகும் முன் தூசியும் தட்டி அந்த இடத்தைக் கூட்டுவான் ,அவர் இறக்கும்  சில தினங்களுக்கு முன் அவன் தான் கூட்டும் போது குப்பை   செங்கலில் விழ்க்கூடாதே என்ற நல்லெண்ணத்தில் செங்கலை ஒரு துணியில் சுற்றத்  தூக்கினான ஆனால் அது கைத்தவறி கீழே விழுந்து இரண்டாகி விட்டது மிகவும் வருந்தி அழ ஆரம்பித்தான். பாபா வெளியில் போயிருந்தவர் உள்ளே வந்தார். செங்கல் உடைந்ததைக் கண்டார் ,அந்தச் செங்கலில் தலை வைக்க  புதுப்புது சிந்தனைகளும் ஞானமும்  பூககளாக மலருவது அவருக்குத்தான்  தெரியும் அது உடைந்தது அவருக்கு  தன் ஆயுள் முடியும் தருணம் வந்து விட்டது என்று புரிந்தது .

    சீரடியில் ராமசந்தரபடேல் என்பவருக்குக் கடும் காய்ச்சல் . ஏற்பட்டது. .உடல் நிலை நாளுக்கு நாள் குன்றியது தான் பிழைப்பது அரிது என அவர் தன் கடைசி  நாட்களை எண்ணிக்கொண்டிருந்தார் , ஒரு நாள் அவர் படுக்கையின் அருகில்  பாபா  வந்து நின்றார் . அவரைக்கண்ட  படேல்  அவர் காலைக்கெட்டியாக பிடித்துக் கொண்டார். “பாபா நான் இனி பிழைக்க மாட்டேன் .என்னால் இந்த வேதனை தாங்க முடியவில்லை .எனக்கு எப்போது மரணம் ? தயவு செய்து சொல்லுங்கள் ‘அவரையே கருணையாக  பார்த்த பாபா ” என் அன்பு படேல்  ஏன் கவலைப்படுகிறாய்? ?உன் மரணம் தடுக்கப்பட்டது . நீ இனி கொஞ்ச, கொஞ்சமாக தேறிவிடுவாய் . .ஆனால்  தாத்யாபடேலை நினைத்தால் வருத்தமாக உள்ளது .அவர்  விஜயதசமி அன்று இந்த உலகை விட்டுப்போய்விடுவார் . இதை உன்  மனதிலேயே வைத்துக்கொள் .தாத்யாபடேலிடம்  சொல்லாதே . அவர் பயத்திலேயே கலங்கிவிடுவார் “

    ராமசந்தர  படேலின்  உடல் தேறியது  ஆனால் உள்ளம்  வரப்போவதை நினைத்து வருந்தியது. “தாத்யா படேலைக்காப்பாற்ற முடியாதா? நாள் நெருங்கி வந்து விஜயதசமியும் வந்துவிடுமே ” என்று கவலை மனதை அரித்தது .ஒருவரிடம் இதைச்சொல்லாமல் ரஹஸ்யமாக வைத்திருக்க முயற்சித்தும் கடைசியில் தன் தையற்காரர் பாலா ஷிம்பி என்பவரிடம் இந்த விஷயத்தைஸ் சொல்லிவிட்டார் .நாட்கள் ஓட நவராத்திரி யும் ஆரம்பித்தது  பாபா சொன்னது போல் ஸ்ரீதாத்யாபடேல் சுரத்துடன் படுக்கையில் விழுந்தார் .சீரடி பாபாவைத் தினமும் தரிசிக்கப்போவது நின்றுவிட்டது .  பாபாவைப்பார்க்க முடியாமல் மனம் வருந்தினார். பின் மிக நம்பிக்கையுடன்’  பாபா  தாங்கள் என்னுடன் இருக்க எனக்கு என்ன பயம் ! என் உடலுக்கு ஒன்றும் ஆகாது . எல்லாம் உங்களிடமே  சமர்ப்பணம் ” என்று படுத்த படுக்கையிலேயே  வேண்டிக்கொண்டார் .பாபா இப்போது என்ன செய்வார் ? தன்னை நம்பியவரை கைவிடலாமா ?அவரைக்காப்பாற்ற எண்ணம் கொண்டார் .அவருடைய கர்மாவை தான் ஏற்றுக்கொண்டு மரணத்திற்கும் தயாரானார்

    அந்த மரணமும் அவர் தன் பக்தனின்  ஆயுள் முடிவைக் காப்பாற்ற,  தான் அதை ஏற்றுக் கொண்டு விட்டார் ,,,,,,,,,,,,,

    அவருடைய மிகவும் விருப்பமான  சில  தொண்டர்கள் கனவில்  வந்து தன்னுடைய மரணத்தைப்பற்றியும் சூசகமாக கூறியிருக்கிறார். தாஸகணு என்பவர் கனவில் வந்து  “மஸ்ஜித சாய்ந்து விழுந்துவிட்டது .  சில எண்ணெய் வியாபாரிகள்  .கடைக்காரர்கள் என்னை மிகவும் கிண்டல் செய்து விட்டனர் நான் விடை   பெறுகிறேன் .  நீ உடனேஅந்த இடம்சென்று என்னைப் பூக்களால் மூடிவிடு ”    என்று சொல்லி மறைந்து விடுகிறார் .தாஸ்கணுவும் அவர் சொன்னபடி பூக்களுடன்  அங்கு சென்று பஜன் கீர்த்தன் பாடி .பாபாவின் பெயரில் அன்னதானம் செய்தார். இந்த விஜயதசமியன்று “சாயி சச்சரிதா” படித்தால் சாயியின்  அருள் பரி பூர்ணமாகக்  கிடைக்கும்  . இதை நான் கண்கூடாகக் கண்டிருக்கிறேன்.

    ,,,போலோ சச்சிதானந்த சத்குரு சாயி ம்ஹராஜ் கி ஜெய்           

    http://www.kollyinsider.com/2011/10/happy-vijayadashami-from-kollyinsider.html

    Share
  • அன்பே தெய்வம்

    விசாலம்

     “ட்ரிங் டிரிங் ” … டெலிபோன் மணி ஒலித்தது.

    ”இந்தப்போன் எப்போதும்   பால் காச்சும்   போதுதான் வரும், இரு இரு வரேன்” என்று ஒரு குழந்தை போல் சொல்லிக்கொண்டு ராஜம் போனை எடுத்தாள்.

    “ஹலோ ஹலோ யார் பேசறது ?”

    “நான் தான் சுப்பிரமண்யன்”

    “நமஸ்காரம் இருங்கோ. இதோ எங்காத்து மாமாவைக் கூப்படறேன்”………டெலிபோனைப்பொத்தியபடி, “ஏன்னா இந்தாங்கோ நம்ம சம்பந்தி….கூப்பிடறார் உடனே வாங்கோ” என்று தன் கணவர் சிவராமனைக் கூப்பிட்டாள். பாதி ஷவரம் செய்த முகத்துடன் அவரும் வந்தார்.

    “ஹலோ நமஸ்காரம் சௌக்கியமா? எப்போ முகூர்த்தத்தை வச்சுக்கலாம் ? “

    “அதுதான் சொல்ல வந்தேன். இந்தச்சம்பந்ததம் நடக்காது மன்னிக்கணும், நீங்கள் நிச்சியதார்த்தம் அன்று போட்ட பொருட்கள் எல்லாம் திருப்பித் தந்துவிடுகிறோம், வந்து எடுத்துங்கோ.”

    “ஏன் என்ன ஆச்சு ? எல்லாம் நன்னாத்தானே நடந்தது இப்ப என்ன திடீர்னு …”

    “மேலே ஒண்ணும் சொல்லறதுக்கில்லை வச்சுடறேன்”

    ராஜம் கேட்டாள்,  “என்ன ஆச்சு ?ஏன் இப்படி இடிஞ்சு போய் நிக்கறேள் ?”

    “நம்ம சம்பந்தம் வேண்டாம்னு சொல்றாடி …. நம்ம பையனுக்கு என்ன குறைச்சல் ?…ராஜா மாதிரி இருக்கான் சி ஏ வேறு …….கை நிறைய சம்பளம் ….அவாளுக்கு என்ன….. கசக்கறதா ?    சரி, விடு விடு     இந்தப்பெண் இல்லேன்னா எத்தனையோ பெண்கள்”……..

    ராஜத்திற்கு மனம் உளைச்சல் கண்டது. ஓடிப்போய் தன் தங்கையிடம் போனில் தெரிவித்தாள்.     பின் திருவாரூரில் இருக்கும் தன் அப்பாவைக் கூப்பிட்டாள்.

    “ஹலோ ஹலோ ,யாரு அப்பாவா…..”

    “ஆமாம் ராஜமா …என்ன மோஹனுக்கு முகூர்த்ததேதி பார்த்தாச்சா”?

    “அதுதாம்பா சொல்ல வந்தேன். கல்யாணம் நின்னுபோயிடுத்து, என்ன காரணம்னு தெரிலை. நீங்கள் தான் துப்பறியும் சாம்பு போல் கண்டுபிடிக்க வேண்டும்.    பெண்ணோட தாத்தாவும் திருவாரூர்தானே….”

    “சரி ராஜம் நான் விஜாரிச்சு  சொல்றேன், கவலப்படாதே”

    அப்பாடி… இப்போத்தான் ராஜத்திற்கு மூச்சு வந்தது. உள்ளே போனாள்.

    ப்துல் தும் கஹான் ஹோ?’ {அப்துல் நீ எங்குஇருக்கிறாய் “?} என்று இந்தியில் பேச அப்துல் “அபி ஆயா {இதோவந்துவிட்டேன் } என்று பதில் சொன்னான்.

    “சாப்பிட்டாயா …. அப்துல் …..நம்ம மோஹன் கல்யாணம் நின்றுவிட்டது தெரிமா”?

    “தெரியும் மாஜி ” என்று அவனும் தமிழில் பேச முயன்றான். அவன் கண்கள் கலங்கின.

     

    தில்லியில் ஜனக்புரி என்ற இடத்தில் தான் சிவராமன் குடும்பம் இருந்தது. இரு மகன்கள் …..மூத்தவன் மோஹன்…. தம்பி சுரேஷ். பின் யார் இந்த அப்துல் ? இது தெரிய பத்து வருடங்களுக்கு முன்னால் நாம் போக வேண்டும்.

    எப்போதும் தனக்கென்று ஒரு ரிக்க்ஷா வாலாவை ராஜம் தன் சிறு பிரயாணத்திற்கு அமர்த்திக்கொள்வாள். ஒருநாள் அவனைக்கூப்பிடப் போன போது ஒரு ஐந்து வயது சிறுவன் அங்கு அழுது கொண்டிருந்தான். அவன் தான் ரிக்க்ஷாக்காரன் சலீமின் குட்டித்தம்பி அப்துல் …..ராஜம் அவன் ஏன் அழுகிறான் என்று கேட்க, அவனும் தன் பெற்றோர்கள் இறந்துவிட்டதால் இந்தக்குட்டி அப்துலைத் தான் பார்த்துக்கொள்வதாகவும் வேலைக்குப்போக மிக கஷ்டமாக இருப்பதாகவும் கூறினான்.

    தவிர வறுமை வேறு …..ராஜம் இயல்பாகவே இளகிய மனம் படைத்தவள். ஆதலால் அவனிடம் “சலீம் நான் இவனை வளர்த்து படிக்க வைக்கிறேன். அனுப்புகிறாயா ?”என்று கேட்டாள்.

    கரும்பு தின்னக்கூலியா ? உடனேயே அவனை அனுப்பி வைத்தான். அப்துல் வயிறு ஒடுங்கி ஒல்லிக்குச்சியாய் ராஜத்தைத் தொடர்ந்தான். அன்று வந்தவன் தான் அப்துல் “மாஜி மாஜி “என்று அன்பைக்கொட்டினான். ராஜமும் அவனைப்பள்ளிக்கு அனுப்பித்தாள். தமிழ் கற்றுக்கொடுத்தாள். விதவிதமான உடைகளும் வாங்கிக்கொடுத்தாள். அவனும் வளர்ந்தான். வீட்டுவேலையும் செய்து, பின் படிப்பிலும் கவனம் செலுத்தினான். மொத்தத்தில் ராஜத்தின் வலது கையானான். ராஜத்தின் பிள்ளைகள் ஒரு வேலையும் செய்யாமல் அப்துலை வேலை வாங்குவார்கள். இது ராஜத்திற்கு மிக வருத்தம் உண்டாக்கும்.

    அப்துலுக்கு அந்த வீட்டில் தனிச்சலுகை என்று இரண்டாவது மகன் மனம் வெம்பினான். பொறாமை வேறு அவனை ஆட்கொண்டது. ஒருநாள் ராஜம் தலைவலியால் துடித்தாள்.

    அவள் மகன் சுரேஷ் காலேஜிலிருந்து வந்தான் ,”அம்மா என்ன திங்க வச்சிருக்கே எடுத்துக்கொடு”

    “சுரேஷ் கண்ணா எனக்குத் தலைவலிடா….. நீயாகவே உள்ளே போய் தோசை எடுத்துக்கோ”

    அப்போது அப்துலும் அங்கு வந்தான்.

    “மாஜி என்ன ஆச்சு ?உங்கல்கு ,,,,,தலவலியா? இதோ நானு வரேன் ” என்று தனக்குத்தெரிந்தத்தமிழில் பேசித் தலைவலி பாம் கொண்டு வந்து தடவினான். ,பின் உள்ளே போய் தோசையும் கொண்டு வந்து “மாஜி இந்தா.. வாயைக்காட்டு,, தோசை சாப்பிடு” என்று ஆசையாகச் சொன்னான். ராஜம் மனம் நெகிழ்ந்தாள். அப்படியே அவனை அணைத்துக்கொண்டாள். இதையெல்லாம் பார்த்த சுரேஷுக்குக் கோபம் கோபமாக வந்தது. “இந்த அம்மா என்ன இத்தனை மாறி விட்டாள்?  எப்போ பாத்தாலும் அப்துலையே கொஞ்சறாளே”

    “ஏண்டா சுரேஷ் என்ன செய்யறே “ என்று கேட்டபடி மோகன் அங்கு வந்தான். “ஒன்றுமில்லை அண்ணா… இந்த அப்துல் அம்மாவை என்ன மக்கன்{வெண்ணெய்} வைத்தானோ நன்னா மயக்கி  வச்சிருக்கான். அன்று நான் கிரிக்கெட் பார்க்கறச்ச இந்த  அம்மா அவனுக்காக இராமயணம் சானல் மாத்தினா  தெரிமா உனக்கு?’

    “ஆமாம் என்னிடமும் அம்மா அன்னிக்கு சொன்னாள் .  இந்த அப்துல் எனக்குக்கால் பிடிச்சு விடறான், பாத்திரமும் அலம்பித் தரான், ரொம்ப அன்பாக பழகறான்.  நீங்க  ஆபீஸ்லேந்து வரதும்  தெரிலை.  ஆபீஸ் போவதும்
    தெரிலை .. என்ன பிள்ளைகள்டா நீங்கள்” என்றாள்.

    இப்படிச்சொல்லும்போதே ராஜம் அங்கு வர அண்ணா தம்பி  பேச்சு நின்றுவிட்டது. இந்த நிலையில் தான் மூத்தவன் மோஹனுக்கு பெண் பார்த்து பெண்வீட்டார் போபாலிலிருந்து வருவதாகச்சொன்னார்கள். அவர்கள்தில்லிக்கு ஒரு
    கல்யாணத்திற்கு வருவதாகவும், அப்போது பிள்ளையும் பெண்ணும் பார்த்து விடட்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.    

    வாசலில் வண்டி வந்து நின்றது.  “அப்துல் இங்க வா  . வாசல்ல அவாள்ளாம்  வந்துட்டா போலிருக்கு  போய் அழைச்சுண்டு வரலாம்  வா ” என்றபடி அப்துலையும் அழைத்து வந்தாள்.

    பெண்ணின் தாயார்   அவனை ஏற இறங்கப்பார்த்து “ஆமாம் யார் இந்தப்பிள்ளை ‘? என்று கேட்டாள்.

    “இவன் தான் அப்துல். என் பிள்ளை “என்று அவனை அணைத்துக்கொண்டாள் ராஜம். பெண்ணின் தாய் முகம் சுளித்தாள். பின் ராஜம் அந்த அப்துல் கையில் டிபன் காபி எல்லாம் கொடுத்து அனுப்பினாள்.

    பெண்ணின் அம்மா அவ்வளவு ஆசாரம் இல்லை என்றாலும், அப்துல் பூஜை அறை, கிச்சன் என்று நுழைவது அவளுக்குப் பிடிக்கவில்லை.. பெண் சுமதியும் மோஹனும் தன்னை மறந்து தனியாகப் பேசிக்கொண்டு பின் திருமணத்திற்கு  ஒகே சொல்லி விட்டார்கள். நிச்சியதார்த்தம் மிக நன்றாக நடந்தது ……………

    ”போஸ்ட்” என்று தபால்காரன் ஒரு கடிதத்தைப்போட ராஜம் அதை எடுத்துப்படித்தாள். அவள் அப்பா எழுதியிருந்தார். அதில் அப்துலால்தான் கல்யாணம் நின்றுவிட்டதாகவும், இரு மகன்கள் ராஜாப்போல் இருக்க, இந்த அப்துலை ஏன் வளர்க்க வேண்டும்.   இந்தப்பையனுக்கும் அந்தக்குடுமபத்திற்கும் எதாவது சம்பந்தம் இருக்குமா என்ற சந்தேகம் வந்துவிட்டது அவர்களுக்கு என்றும் எழுதியிருந்தார். இதைப்படித்த ராஜத்திற்கு கையும் ஓடலை காலும் ஓடலை.

    அவசரம் அவசரமாகப் போனை அடித்தாள் தன் அப்பாவுக்கு…….

    “அப்பா உங்க   லெட்டர் வந்தது.    என்ன இது இப்படி அபாண்டமாகப்பழி…”

    “நீ ஏன் அந்த அப்துல் பயலை வளைய வர விட்டாய்?  அதுதான் கல்யாணமே நின்று விட்டது இப்போ ..பார்த்தாயா ?அதன் விளைவை ……”

    “என்ன அப்பா…நீங்க ! அம்மா அப்பா இல்லாத ஒரு பிள்ளையை வளர்ப்பது தப்பா”?

    “அதுசரி ராஜம்…. இப்போ என்ன செய்யப்போறே “?

    வேறு வரன் வராமலா போய்விடும்? கடவுள் விட்ட வழி “

    பேச்சு முடிந்தது. கல்யாணமும் நின்றுவிட்டது. 

    காலம் உருண்டது. வேறு பெண் மோஹனுக்கு நிச்சியம் ஆயிற்று.

    “சுரேஷ் அந்த அப்துலை என் கல்யாணத்திற்கு அப்புறம் வரசொல்” இந்த வரனையும் நிறுத்திவிடப்போறான் ” என்றான் மோஹன் .

    “அம்மா அந்த அப்துல் பயலை கிட்நேப் செய்து கல்யாணம் ஆனபின் கொண்டுவிடுகிறேன் “என்று கிண்டல் அடித்தான் சுரேஷ்.

    மோஹனும் சுரேஷும் தமிழர்கள் ஆனாலும் இந்தியில் பேசிக்கொண்டார்கள். ஆனால் அப்துலோ தமிழ் நன்றாகப்பேசினான். கடவுள் கிருபையினால் ஒரு தடங்கலுமில்லாமல் திருமணம் நடந்தது. கல்யாணம் ஆனவுடனேயே மோஹன் தனிக்குடித்தனம் போய் விட்டான். இரண்டாவது மகனோ பூனாவில் வேலை சேர்ந்து
    விட்டான். சிவராமனும் ராஜமும் தனித்து விடப்பட்டனர். ஆனால் பிள்ளைக்குப்பிள்ளையாக அப்துல் இருந்து காலேஜையும் முடித்தான். வேலையும் தேடினான்.

    கொரியர் சர்விசில் ஒரு நல்ல வேலை கிடைத்தது. 

    அன்று முதல் சம்பளத்தை வாங்கி வீடு வந்து “மா..ஜி ஆசீர்வாதம்செய்யுங்கோ. ” என்று அவள் காலிலும், சிவராமன் காலிலும் விழுந்தான். தன் சம்பளத்தை அவள் கையில் கொடுத்தான்..

    “இந்த சம்பளத்தை உன்  பையா   பாபிட்ட { baiya  babi  அண்ணா  ,மன்னி } கொடு அப்துல் எங்கிட்ட ஏன் தர  ?”

    ” மாஜி  எனக்கு எல்லாமே நீங்க தான்  அதுக்கப்பறம்தான் எல்லாம் ” என்றபடி தன் இரு கைகளைக்கூப்பினான்.

    அடுத்த வீட்டிலிருந்து ஒரு இந்திபஜன் கேட்டது

    “பிரேம் ஈஸ்வர் ஹை ஈஸ்வர் பிரேம் ஹை” {அன்பே கடவுள் கடவுளே அன்பு } ராம் ரஹீம் புத்த கரீம்.. கோயீ பி நாம் ஜபோ ரெ மனுவா ஈஸ்வர் ஏக்ஹை {ராம் என்று சொன்னாலும் ரஹீம் புத்தர் கரீம் என்று எந்தப் பெயர் சொன்னாலும் எல்லாமே ஒன்றுதான் ஈஸ்வரன் ஒன்றுதான் }……

    ராஜம் அப்துலை அணைத்தாள். சொந்த மகன்கள் எங்கேயோ இருக்க இந்த வளர்ப்பு மகன், அதுவும் பீஹாரைச்சேர்ந்த முஸ்லிம் இப்படி அன்பைப்பொழிகிறான். அவள்    கண்களிலிருந்து கண்ணீர் பெருகியது,    அங்கு        அன்பே தெய்வமானது.

    Share
  • பித்ருக்களுக்கு இரண்டுவார விடுமுறை

     

    விசாலம்

    சம்யமினீ அரசாங்கம் தவறாமல் நடந்து கொண்டிருக்கிறது  . இது என்ன அரசாங்கம் என யோசிக்கிறீர்களா !  இதுதான் எமதர்மனின் ஆபீஸ்   ..தெற்கு திசையில் இருக்கிறது அதற்கு மேலே சரியான  முகவரி கொடுக்க ஒருவரும் இல்லை ஏனென்றால் ஒருதடவை அவரது ஆபீஸுக்குப் போனவர்கள் திரும்பி வருவதில்லை . அந்த  இடம்  அவ்வளவு பிடித்துப்போய்விடுமோ என்னவோ! .அதில் தலைமைப் பகுதி ஏற்று கடமைகளைத் திறம்பட நடத்திவருபவர்  திருவாளர் யமன் .அரசனோ ஆண்டியோ அரசியல் மந்திரியோ அல்லது பாமர மக்களோ  எல்லோருக்கும் ஒரே நீதிதான்  அங்கு லஞ்சம் …..சுப் …..மூச்சு .விடக்கூடாது அந்தப்பேச்சுக்கே இடமில்லை .அந்த ஆபீஸுக்குப் போனவர்கள்  “பித்ருக்கள் “என்ற பெயர் பெறுகின்றனர்  இவர்கள் இருக்கும் குவார்டர்ஸின் பெயர்   பித்ருலோகம்   .இந்த  இடம் பூலோகத்திற்கும் சுவர்க லோகத்திற்கும் இடையில் உள்ள இடம்  என்கிறார்கள் .இங்கு ஒவ்வொரு வீட்டிலும்  மூன்று சந்ததிகள் ஒரே கோத்திரம் கொண்டு வசிப்பார்கள் . இந்தக்கோத்திரத்தில் நாலாவதாக பூலோகத்தில்  ஒருவர் காலமாக

      அவர்  மேலே இந்த இடத்திற்கு வருவார் .அவருக்கு இடம் கொடுக்க முதலில் வந்தவர்  தன் இடத்தைக்காலிசெய்து  சுவர்கம் போய்விடுவாராம் அவருக்கு சுவர்க்கலோகத்தில் இடம் கிடைத்துவிடும் ஒரு அட்வான்சும்  தராமலே ………..

     இவர்கள்   தாங்கள்  பல ஆண்டுகள் கூட இருந்து வாழ்ந்த குடும்பத்தையும் அவரது செல்வங்களையும்  உறவினர்களையும் பார்க்க ஆசைப்பட்டு யமனிடம் ஒரு விண்ணப்பம் கொடுத்தனர் . அதாவது  அவர்களுக்கும்  வருடத்தில் ஒரு முறையாவது லீவு  கிடைத்து தங்கள் குடும்பத்தைக்காண பூலோகத்திற்குச் செல்ல வேண்டும்    என்பது தான் யம தர்ம  பாஸும் {boss}  அவர்கள் விருப்பபடி ஒரு  பதினைந்து நாட்களுக்கு ” ஹாலிடே’ சாங்க்‌ஷன் செய்து  வடை ,பாயசம் பச்சடியுடன் நல்ல விருந்தும் சாப்பிட்டு திருப்தியாக வர வாழ்த்தி அனுப்பினார்   இந்த  விடுமுறை புரட்டாசி  மாதம்  சூரியன்  கன்னிராசியில் பிரவேசித்ததும் பௌர்ணமிக்கு மறுநாள் தேய்ப்பிறை பிரதமையிலிருந்து ஆரம்பித்து  அமாவாசை வரை நீடிக்கும். இந்த ஹாலிடேக்குப்பெயர்  “மஹாளயம் ” வருடா வருடம்   இந்த மஹாளய விடுமுறையில் பித்ருக்கள் .,,மூதாதையர்கள்  பூலோகம் வந்து  தாங்கள் யமராஜன் ஆபீஸுக்குக்கிளம்பிய   நக்‌ஷத்திரத்தில் தங்கள் மகன் வீட்டில் ஆஜராகி நல்ல விருந்து உண்டு திருப்தி திருப்தி திருப்தி என்று மூன்று தடவை சொல்லிவிட்டு  அவரது சந்ததிகளை வாழ்த்திவிட்டு வருவார்கள், மகன் இல்லையென்றால்  சகோதரன் வீட்டிலோ வேறு சகோதரன் போல்  இருக்கும் உறவினர்கள் வீட்டினிலோ போய் சாப்பிட்டும் வருவர் ஆனால்    இவர்களுக்கும் தன்மானம் உண்டு ஆகையால் முறையாக எள்ளும் நீரும் இறைத்து   கூப்பிட்டால் தான் இவர்கள்  வருவார்கள்

    மூன்று தலைமுறைப் பெயர்கள்   சொல்லி  எள்ளும் நீரும்  விட   இவர்கள் வந்து  ஆசிகள் தந்து வாழ்த்திவிட்டுப்போவார்கள் . கறுப்பு  எள் இவர்களுக்கு மிகவும் பிடிக்குமாம் .எள் திருமாலின் வியர்வையிலிருந்து  பிறந்ததாம்.    மிகவும் பரிசுத்தமான தான்யம் இந்த எள். இந்தப் பித்ருக்களை அழைக்க  உதவும்  மற்றொரு கருவி தர்ப்பை .இதற்கு அமிர்தவீர்யம் என்ற பெயரும்   உண்டு .  தர்ப்பையை  குசம் என்றும் சொல்லுவார்கள் . இந்தத்தர்ப்பை  முனையில்  பிரும்மாவும் நடுப்பாகத்தில் விஷ்ணுவும்  மறுமுனையில் ஈசனும் இருக்கிறார்கள் இதன் விசேஷம் என்னவென்றால் நீரில் அழுகாது .நிலத்தில் வாடாது  விதையில்லாமல் சுயம்புவாக  தோன்றியது ,சிலர் நமது ஆன்மாவையை தர்ப்பைக்கு ஒப்பிடுகிறார்கள் எனக்கு இதைப்பற்றி தெரியாது  நான் ஆன்மாவை இதுவ்ரையிலும் பார்த்ததில்லை .

    மஹாளயம் தினங்கள் தவிர்த்து மற்ற அமாவாசை கிரகண புண்ணியகாலங்கள் மாதப்பிறப்பு   அதுவும்  ஆடி  ,தை மாதப்பிறப்பு ,   ஆடி அமாவாசை ,  தை அமாவாசை  இறப்பு பிறப்பு போன்ற நாட்களில் இந்த எள்ளும் தர்ப்பையும் முன்னுக்கு நிற்கின்றனர்  எந்த நேரத்திலும் பித்ருக்கள் வர ரெடியாக இருந்தாலும்  இந்த இயந்திரயுகத்தில் பலர் அவர்களை அழைக்க  அத்தனை சிரத்தைக்  காட்டுவதில்லை

    தங்கள் பிறந்த நாட்கள் , தங்கள் குழந்தைகளின்  பிறந்த நாட்கள் எல்லாம் கேக் வெட்டி தடபுடலாக பார்ட்டி கொடுக்க மனம் விழைகிறதே தவிர பித்ருக்களுக்குச் செய்வதை ஒரு பாரமாக நினைத்துக் கொள்கின்றனர் சிலர். அதுவும் வருங்கால சந்ததியர்களுக்கு அதில் நம்பிக்கையும் இல்லை .தர்ப்பணம் செய்து பித்ருக்களை அழைப்பதில் மஹாளய தினங்கள் மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது  .எதை விட்டாலும் இந்தத் தினங்களை விடாமல் மூதாதயர்களுக்கு திதி செய்வது மிகவும்  அவசியம் . அவர்கள் உடலைவிட்டுப்போன திதியில் இதைச்செய்ய வேண்டும்  இதில் மஹாளய பரணி நக்‌ஷத்திரம் மிகவும் விசேஷமானதாம்  இதில்ஒருவர் தமக்குத் தெரிந்தவர்கள்  .உயிரைப்போல் பழகினவர்கள் யாவரையும் நினைத்து அவர்கள் பெயர்களைச்சொல்லி திதி செய்யலாம்  மஹாளயத்தின் ஒன்பதாவது நாளில் சுமங்கலியாக இறந்த பெண்மணிகளுக்குத் திதி செய்ய வேண்டும் அத்துடன் குழந்தைகளாக இருந்து  பின் இறந்து விட்ட செல்வங்களுக்கும் இதைச் செய்யவேண்டும்

    நடுவில் வரும் அஷ்டமி திதியில்  துர்மரணம் செய்துகொண்டவர்களுக்குத் திதி செய்யவேண்டும் சன்னியாசிகளுக்கு சன்னியாஸ்த மஹாளயம் என்று ஒன்று வரும் அதில் அவர்களை நினைத்து திதி தந்து வழிபடுவார்கள் என நினைக்கிறேன் அவர்களின் பிருந்தாவனத்தில் வழிபாடு செய்வார்கள் போலிருக்கிறது ,.

    தர்ப்பணம் செய்யும் போது  எள்ளும் தண்ணீரும் இறைத்து  “தர்ப்பயாமி தர்ப்பயாமி தர்ப்பயாமி என் மூன்றுதடவைகள்  அடிக்கடி  என் அப்பா சொல்வதை நான் பார்த்திருக்கிறேன்   ,

    காருணீக பித்ரு தர்ப்பணம் என்று ஒன்று உண்டு இதில்   தெரிந்தவர்கள் தெரியாத  வம்சாவழியில் உலகைவிட்டுப் போனவர்கள் எல்லோருக்கும் அவர்கள் திருப்தி  பெற திதி  செய்யும் வழக்கமாம் என்று ஒரு புரோகிதர் கூறினார் தேவர்களும் தேவலோகவாசிகள்அனவைரும்  திருப்தியடையட்டும் என்றும் சம்ஸ்கிருதத்தில்  முடிவாக வரும்

    முன்பெல்லாம் இவர்களுக்கு சாப்பிட பல ஐட்டங்கள் கிடைக்கும்.    வடை பாயசம் எள்ளுரண்டை  என்று  நல்ல ராஜமரியாதைகளுடன்  அவர்களை வரவழைத்து வேஷ்டி .அங்கவஸ்த்திரம் [ பத்தாறு  கணக்கில்} போன்ற உடைகளையும் அளித்து ஆசாரமாக அவர்கள் விருப்பப்படி  எல்லாமே நடத்தி பெரிய நுனி இலையில்  வயிறு புடைக்க  விருந்தளிப்பார்கள் .இதை நடத்தி வைத்த வாத்தியார்களும் மிக சிரத்தையாக   நடத்திக்கொடுப்பார்கள்   இப்போது அதெல்லாம் மிகக்குறைந்து விட்டது   இதை அனுசரித்துசெய்ய ஆசைப்படுபவர்கள் இருந்தாலும்   இதைச்செய்ய வரும் வாத்தியார்கள்  கையில் மொபைலுடன்  டூவீலரில்  அவசர அவசரமாக பல வீடுகளுக்கு ஓடுவதால்    செய்யும்  அவகாசம் மிகவும் குறைந்து  எல்லாமே ஷார்ட் கட்  ஆகிவிடுகிறது ஆகையால்  வாழைக்காயும்.அரிசியும்   கொஞ்சம் பயந்தப்பருப்பும் வைத்துக்கொண்டு காத்திருக்க   எல்லாமே ஒரு 30 நிமிடங்களில்  முடிந்துவிடுகிறது . இத்தனைச்செய்வதே பெரிய காரியம்தான்
    மேலும் இந்த புரோகிதர்களின் செல்வங்கள்  இந்த  லயனுக்கு வராமல்  வேறு படிப்பு படித்து  நல்ல வேலைக்குச் சேர்ந்துவிடுவதால்  பிற்காலத்தில் எங்கே இந்த வாத்தியார் தொழிலே   பஞ்சமாகிவிடுமோ என்ற பயம்  மனதில் ஏற்படுகிறது

    இந்தக்கால  வீட்டுப்பெண்மணிகளும்  வேலைக்குப்போவதால் இதை சரியாக அனுஷ்டிக்கமுடியாமல் ஏனோதானோ என்று  நடக்கிறது .முன்பு கூட்டுக் குடும்பம் இருந்ததால் பல பெரியவர்கள் இது போன்ற நாடகளில் கடைப்பிடிக்கும் விஷயங்களைச் சொல்லிக்கொடுப்பார்கள் தற்போது அதுவும் இல்லை . சிலர் வீட்டில்  சிலரது ஜாதகத்தைப்பார்த்து பித்ரு தோஷம் இருக்கிறது அதனால் தான் வீட்டில்  இப்படிப்படுத்துகிறது என்றுச்சொல்ல கேட்டிருக்கிறேன். அந்த தோஷம் ஏற்படுவதே  இதைப்போன்ற  அனுஷ்டானங்களை விட்டதனால்தான் என்று சாஸ்திரமேதைகள் கூறுகின்றனர் சிலர் வீட்டில் பேரனது பூணலும் அவன்  உடலில் இருப்பதில்லை பல ஆயிரங்கள் செலவழித்து நடத்திய உபநயனம்  அர்த்தமில்லாமல் போய்விடுவதைப் பார்த்தால் மிகவும் வருத்தமாகத்தான் இருக்கிறது

    சிலருக்கு  பண நெருக்கடி அதிகமாக இருக்க ஆனால் எப்படியும் தன் அப்பாவுக்கு திதி செய்யவேண்டும் என்ற  மனம்  இருக்க  அவர்கள் ஆகாயத்தைப் பார்த்து” பித்ருக்களே   என்னால் ஒன்றும் செய்யமுடியவில்லை என் உடல் நிலையும்  பொருளாதார நெருக்கடியும் இதைச்   செய்ய முடியாமல் என்னைத் தடுக்கிற்து . மன்னித்து  ஆசி வழங்குங்கள் “என்று சொன்னாலே பாட்டனார் தந்தையார் போன்ற முதாதையர்கள் மனம் மகிழ்ந்து ஆசி வழங்குவார்களாம்  .மஹாளயக்காலத்தில் ஊரில் இல்லாமல் எதாவது பிரயாணம் வந்து  வேறு எங்கேயாவது போயிருந்தால் பசுவுக்குப் புல்  கொடுத்து அதைத் தர்ப்பணமாக ஏற்கச் சொல்லலாம்  என்றும் சாஸ்திரம் படித்தவர்கள் கூறுகிறார்கள்

    இப்போது காக்கையின் கதைக்கு வரலாம்

    காகத்திற்கும் மனிதனுக்கும் சில ஒற்றுமைகள்  உண்டு  காகம் எதாவது தின்ன கிடைத்தால் எல்லோரையும் கூவி அழைத்துப்பின் அதைப்பகிர்ந்துக்கொள்ளும்.இதே போல் தான்  முன்பு   கூட்டுக்குடும்ப  அமைப்பு  இருந்த போது அந்தவிட்டுப் பெண்மணி  எல்லோரையும் அழைத்து உணவளிப்பாள் இன்றும் குஜராத்தி  அல்லது மார்வாடி குடும்பத்தில் இதைக் காணலாம் .தவிர  காகம் ஒன்று மினசாரக் கம்பியில் பட்டோ அல்லது வேறுவிதமாகவோ இறந்துவிட்டால்  எல்லா காகங்களும்  “கா  கா  கா  கா  வென்று கத்தி ஊரையேக் கூட்டிவிடும்  அந்த இறந்த காக்காவின் உடலைச் சுற்றிச்சுற்றி   பறந்து கரைந்து தன் சோகத்தை வெளிப்படுத்தும்  பின்  எங்கேயாவது நீர்நிலையிருந்தால் அதில் முக்கி எழுந்து  விட்டு வருமாம . இதே போல் இன்றும் கிராமங்களில் ஒருவர் இறந்தால் பலர்  அங்கு விரைந்து வந்து  மார்பை அடித்துகொண்டு அழுது தங்கள் சோகத்தை வெளிப்படுத்துவார்கள்.   பின் இவர்களும்  ஸ்னானம் செய்துவிட்டு வருகிறார்கள்.  .

    இனி இந்தக்காகத்திற்கும் பிதுர்க்களுக்கும் என்ன சம்பந்தம் என்பதைப் பார்க்கலாம்  என் வீட்டில்  ஒரு வருடத்தில் மூன்று முறை சிரார்த்தம் வரும்  அதைத்தவிர மஹாளய தினங்கள் ஒவ்வொரு தடவையும்  எல்லா கர்மாக்களையும் முடித்தவுடனே காக்காவிற்கு  சுடச்சுட  சாதம் உருண்டையாகப் பிடித்து  என் அம்மா வைப்பார் .   பின்  என் அப்பா  “கா  கா கா  என்று குரல் கொடுத்து அழைப்பார் . அவ்வளவுதான்  உடனேயே   எங்கிருந்தோ ஒரு காகம்  வரும்  அது அண்டக்காக்கா போல்  இருக்கும்  .அது வந்து  தெற்கு திசைப்பார்த்தபடி அமரும்  . பின் தன் தலையைச்சாய்த்து    இங்கும் அங்கும் பார்த்தபடிதன் அலகால் தின்னும்   அது பாதி தின்னும் போதே  தன் சகாக்களையும்  அழைக்கும் இந்தக் காட்சியை நான் எப்போதும் பார்த்து ரசிப்பேன் . இந்தக்காகம் எங்கிருந்தோ வந்து தெற்குதிசைப்பார்த்து அமர்ந்து சாப்பிடுவது ஏன் ?

    இந்தப்பித்ருக்களுக்கும் காகத்திற்கும் என்ன சம்பந்தம் ?  

    இதைப்பற்றி என் தந்தையின் நண்பரிடம்  கேட்டேன்  . அவர் முன்பு சொன்னதை இப்போது நினைத்துப்பார்க்கிறேன் .

    திரேதாயுகம் ஆரம்பிக்கும் வரை  திதி செய்யும் நாட்களில் முன்னோர்கள் நேராகவே வந்து  வயிறு நிறைய உண்டு திருப்தியுடன் குடும்பத்தை வாழ்த்திச் சென்றார்களாம்  ராமாயணத்தில் தசரதர்  காலமானவுடன்  அந்தசெய்தி முதலில் பரதனுக்குத் தெரிய வந்த  உடனேயே அவர் உடலை விட்ட நக்‌ஷத்திரத்தில்   காரியங்கள் செய்ய ஆரம்பித்தார் ,தசரதர் பரதனைப் பார்க்கச் சென்றாராம்  . ஹிந்து தர்மப்படி ஒரு குடும்பத்தில் மூத்த மகன் தான் தன் தந்தைக்குக் கர்மா செய்ய கர்த்தாவாகிறார் . ஆகையினால் ராமரும்  தனக்கு   தன் தந்தை இறந்த தகவல் தெரிந்தவுடனே கானகத்திலேயே கர்மா செய்ய ஆரம்பித்தார்  .ஆனால் அங்கு  தசரதர் வரவில்லை ராமருக்கு மிகவும் மனவருத்தம் ஏற்பட்டு  தான் என்ன தவறு செய்தோம்  என்று மனம் குழம்பி இதைக்குறித்து  தன் குருவிடமே கேட்கவேண்டும் என்று நினைத்து கிளம்பினாராம்  அப்போது “நில் ராமா  நான் வந்துவிட்டேன்  “‘ என்று தசரதர் சொல்ல   தன்னுடயை தவறு என்ன என்று ராமர் கேட்க  தசரதர்
    ” ஹே ராமா  உன்  கர்மாவில் நான் மிகவும் மகிழ்சியடைந்தேன்  உனக்கு என் ஆசிகள் ‘ என்றார் .

    “பின்  ஏன் நான் கர்மா செய்ய ஆரம்பித்தவுடன் தாங்கள் வரவில்லை ?”
    “உன் சகோதரன் பரதன் நதியின் அக்கரையில் முதலில்    கர்மா செய்து என்னை அழைக்க அங்கு முதலில் சென்று பின் இங்கு வந்ததில் சற்று தாமதம்
    ஏற்பட்டுவிட்டது ‘

    இதைக்கேட்டதும் ஒரு வினாடி ராமருக்குக் கோபம் வந்து ” இனி எந்த முன்னோர்களும்  திதி செய்து அழைக்கும் போது  தங்கள் செல்வங்களைப் பார்க்க வரக்கூடாது  ” என்று சற்றும் யோசனை செய்யாமல் பேசிவிட்டாராம் ஆனால் அடுத்த நிமிடமே தான் செய்த காரியத்திற்கு வருந்தி தசரதரிடம் மன்னிப்புக் கேட்டாராம்  பின் இதைச் சரிப்படுத்த எதாவது வழி உண்டா என்று அங்கு நின்ற சனி பகவானிடமும் யமனிடமும் கேட்டாராம்   இது மஹாவிஷ்ணுவின் அவதாரமான ராமரே சொன்னதால் இதை மாற்ற முடியாது ஆனால் முன்னோர்களுக்கு  அளிக்கும் உணவு அவர்களிடம் போய்ச்சேர  ஒருவரை நியமித்து இதைச்சரி செய்யலாம்   என்று யமன் சொல்லி இந்தப் பொறுப்பை சனிபகவானிடம் ஒப்படைத்தார்   சனி பகவான்  தனக்கு நேரம் இல்லாததால் தன்  வாகனமான காக்கையிடம் இந்தப் பொறுப்பைக் கொடுப்பதாக யமனிடம் கூறி அவர் சம்மதத்துடன்  கொடுத்தும் விட்டார் அன்றைய தினத்திலிருந்து  காகம் தான் சாப்பிடும் அன்னத்தினால் மூதாதயர்களின்  வயிற்றை நிரப்புகிறது.    இந்தக் கதை எந்த ராமாயணத்தில் வருகிறது என்று தெரியவில்லை .

    இராமயணத்தில் வரும்  ஜயந்தனின் கதை பலருக்குத் தெரிந்திருக்கும் தேவேந்திரனின் மகன்  ஜயந்தன்  சீதையின் அழகில் மயங்கினான் கானகத்தில்  ராமர் சீதாபிராட்டியின் மடியில்  தலை வைத்து சயனித்திருக்க அந்த நேரம் பர்த்து  ஜயந்தன்  சீதையின் மார்பில் கொத்தினான் .சீதைக்கு இரத்தம் வர அதன் துளியும் ராமர் மேல் விழ அவர் விழித்து காகாசுரனைப் பார்த்தவுடன் மிகவும் கோபம்கொண்டு   ஒரு புல்லைப்பிடுங்கி பிரும்மாஸ்திர மந்திரத்தைச் சபித்து  அவன் மேல் ஏவினார் , அது அவனைத் துரத்த அவனும் பிரும்மா விஷ்ணு சிவன் என்ற மும்மூர்த்திகளிடம் சென்று தஞ்சம் கேட்க   ராமர் ஏவிய பிரும்மாஸ்திரத்தைத் தடுத்து  நிறுத்தும் சக்தி தங்களிடம் இல்லை என்றும் ராமரிடமே  போய் சரணாகதியடையவும் சொன்னார்கள்  பின் ஜயந்தனான காகாசுரன் ஸ்ரீராமரிடம் வந்து அப்படியே தலையைக் கீழே வைத்து விழ கருணை உள்ளம் கொண்ட சீதாபிராட்டி அந்தக்காக்கையை ராமரின் பாதம் மேல் படும்படி  நகர்த்தி விட்டாள், ஸ்ரீராமரும் காகத்தை மன்னித்து  துரத்தி வந்த பிரும்மாஸ்திரத்திற்கு  காகத்தின் ஒரு கண்ணைக் கொடுக்குமபடிச் சொல்லி அவனது உயிரைக் காப்பாற்றிவிட்டார் ,பின் காகாசுரனை எல்லோரும் நினைக்கும்படியான அந்தஸ்தையும் அளித்துவிட்டார் நேபாலில்  மக்கள் தீபாவளிக்கு முதல் நாள் காக்காவுக்குப் பூஜை நடத்துவார்கள் .காகம் தலையைக்கொத்த  குளிக்கும் பழக்கமும் முன்பெல்லாம் மக்களிடமிருந்தது

      பித்ருத்தர்ப்பணம்  செய்ய  சில கோயில்களும் உள்ளன   நாகை மாவடத்தில் பூந்தோட்டம் அருகே  இருக்கும்  திலதர்ப்பணபுரி முக்தீஸ்வரர் ஆலயம் .. வடக்கில் காசி  கயா  , மணிகர்ணிகா   வேதாரண்யம்   திருபுவனம் விஷ்ணுபிரயாக்  ,ருத்ரபிரயாக் .கும்பகோண காவிரி தீரம் ராமேஸ்வரம்   வேதாரண்யம் நாசிக், பஞ்சவடி  ராமேஸ்வரம்  போன்ற இடங்களில் இந்நாட்களில்  நல்ல கூட்டம் இருப்பதைப்பார்த்தால் ஏதோ நமது கலாச்சாரம் இன்னும் ஓடிக்கொண்டுதான் இருக்கிறது  என்று கொஞ்சம் திருப்தி ஏற்படுகிறது. மஹாளயம் முடிந்து அமாவாசை வர அம்மனும்   நமது கொலுப்படியில் அமர்ந்து ஆசி கொடுக்க தயார் ஆகிவிடுவாள்

    எல்லோருக்கும் பித்ருக்களின் ஆசிகள் இந்த நன்னாளில் கிடைக்கட்டும்.

    படங்களுக்கு நன்றி:
    விஜய சங்கரி – சோமநாதர் திருக்கோவில், கொளத்தூர், சென்னை.

    Share
  • என் வீட்டு கொலு

    விசாலம்

    நவராத்திரி கொலு வந்தது,
    பத்துநாட்களும்  சுண்டல்  விருந்து.

    பாதி அறையை நிரப்பும் படிகள்,
    பல வித பொம்மைகள் அமரும்  படிகள்.

    முத்தேவிகள் அங்கு அமரும் இடம்,
    சிருஷ்டியின்  பொருட்கள் காணும் இடம்.

    மரப்பாச்சியுடன் முதல் படி ஆரம்பம்,
    மாவிலையுடன்  கலசமும் நிரம்பும்.

    தசாவதாரத்தின் அழகான வரிசை,
    நாதஸ்வரம் செட்  ஒலிக்கும் இசை.

    கிளிகள் மயில்களின் ஜோடி பார்க்கலாம்,
    மான்கள், யானைகளின் ஜோடியும் ரசிக்கலாம்.

    காந்தி, நேரு, விவேகானந்தர் அங்கே,
    நேதாஜி சுபாஷின் கம்பீரத்தோற்றம் அங்கே.

    கீழ்ப்படியில்  செட்டியார் கடையும் உண்டு,
    இடுப்பை அசைக்கும் பொம்மையும் உண்டு.

    மணப்பெண் மாப்பிள்ளை கல்யாணம் காணலாம்,
    கோபத்துடன் சிலம்புடன் கண்ணகி காணலாம்.

    கொலுப்படி முடிய  வண்ணக் கோலமும் உண்டு,
    அழகாக ஒளி விடும் குத்துவிளக்கும் உண்டு.

    லிங்கத்தைத் தழுவும் மார்க்கண்டேயன்,
    அவன் மேல் பாசவலை வீசும்  யமதர்ம ராஜன்.

    ஓரத்தில் பழனி மலை முருகனும் உண்டு,
    அதில் ஏறும் காவடிகளும் உண்டு.

    முதியோர் இல்லம் என் கை வரிசை,
    தட்டுவோம் இந்த வருடம்  பரிசை !!!
                    
    படத்திற்கு நன்றி

    http://www.indusladies.com/forums/topic-of-the-month-contest/111480-celebrate-festival-nine-nights-indusladies-5.html

    Share
  • ஸ்காட்லாந்து ஆப் இந்தியா

    விசாலம்

    “கூர்க்’ எனப்பெயர் கொண்ட குடகு மலைக்கு நான் மூன்று முறைகள் போயிருக்கிறேன். அங்கு இருக்கும் இயற்கைச் சூழ்நிலையும், அருமையான இயற்கைக் காட்சிகளும் என்னை மிகவும் கவர்ந்தன.

    நான் போய் தங்கிய இடத்தில் இருந்த பெண்மணி மிகவும் அன்புடன் எங்களை வரவேற்று நல்ல அறையும் கொடுத்து சாப்பாடும் தந்து கவனித்துக்கொண்டாள். நமக்கு என்ன மாதிரி சாப்பாடு வேண்டும் என்று முதலிலேயே சொல்லி விட்டால் அதை அவளே தன் கணவர் உதவியுடன் செய்து முடிக்கிறாள். அவளுக்கு உதவ ஒரு பணிப்பெண்ணும் இருக்கிறாள். அவள் கணவர் கேரள நாட்டைச் சேர்ந்தவர், காதல் திருமணம். பெரிய எஸ்டேட்டின் தலைவர் ஆனால் ரொம்ப சிம்பிள். அங்கு நான் என் வீடு போலவே ஒரு வித்தியாசமில்லாமல் இருந்தேன். அவள் எனக்கு அவர்கள் கட்டும் விதத்தில் புடவையும் கட்டி விட்டாள். ஆனால் அங்கு எடுத்த பல போட்டோக்கள் என் கணினி கிராஷ் ஆகி அழிந்து விட்டன. நான் ஆசை ஆசையாக எடுத்துக்கொண்ட கூர்க் ட்ரெஸ் போட்டோ போயே போச்சு. இதற்காவது இன்னொரு தடவை கூர்க் செல்ல வேண்டும். சரி இனி நான் பத்து நாட்கள் தங்கி அனுபவித்த குடகு நாட்டைப் பற்றிச் சொல்கிறேன். நேரே கண்டு அனுபவிக்கும் சுகமே தனிதான்

    குடகு நாடு {Scotland of India} ஸ்காட்லேந்த் ஆப் இந்தியா எனப் புகழ் பெற்ற ஒன்று. குடவர்கள் வீரமிக்கவர்கள், சத்திரிய வம்சத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களில் பலர் நாட்டைக்காக்கும் பணியில் இருப்பவர்கள். முன்னாள் பீல்ட் மார்ஷல் கரியப்பா அவர்கள், ஜெனரல் திம்மய்யா அவர்கள் இந்த இடத்தைச் சேர்ந்தவர்கள். குடகு மக்கள் மிகவும் தைரியமிக்கவர்கள். உழைப்பாளிகள். கேளிக்கைகளை விரும்பி வாழ்க்கையை ரசிப்பவர்கள் பரந்த மனப்பான்மை உள்ளவர்கள். பேச்சில் ஹாஸ்யமும் இருக்கும் வேட்டையாடும் பழக்கமும் முன்பு இருந்தது

    விருந்தோம்பலுக்கு மிகவும் பெயர் போனவர்கள். சிரித்த முகத்துடன் விருந்தாளிகளை உபசரிப்பார்கள். அவர்கள் வீட்டில் முன்னோர்கள் போட்டோ பல இருக்க அவைகளுக்குப் பூஜையும் செய்வார்கள் பல எஸ்டேட் முதலாளிகள். வீட்டின் வாயிலில் சலவைக்கல்லினாலோ அல்லது மரத்தினாலோ அவர்களது முன்னோர்களின் சிலை நம்மை வரவேற்கும். முன்னோர்களின் வழிபாடுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்

    பெரியவர்களின் பாதங்களைத் தொட்டு வழங்கும் கலாசாரம் இங்கு சிறு வயதிலிருந்தே கற்றுக்கொடுக்கப்படுகிறது. பெரியவர்களிடம் மிகுந்த மரியாதையுடன் நடந்து கொள்கிறார்கள்.

    ஒவ்வொரு வீட்டிலும் பெரிய துப்பாக்கியைக்காண முடிகிறது. {Gun] இதை வைத்துக்கொள்ள லைசன்ஸ் தேவையில்லையாம். ராஜ பரம்பரை போல் இது இருப்பதை மிகப்பெருமையாக நினைக்கிறார்கள், குழந்தை பிறந்தால் இந்தத்துப்பாக்கியால் ஆகாயத்தை நோக்கிச் சுட்டு தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவிக்கிறர்கள். குழந்தைக்குப் பெயர் சூட்டும்போது அந்தக்குழந்தைக்குப் புலி மாமிசத்தினால் ஆன உணவைக் கொடுக்கும் வழக்கம் உண்டாம். புலி போல் மெஜஸ்டிக்காக வீர தீரத்துடன் இருக்கவே இப்படிச் செய்கிறார்கள். இதே போல் யாராவது இறந்தால் இரண்டு தடவை துப்பாக்கியால் ஆகாயம் நோக்கிச் சுடுகிறார்கள். இந்தப்போராயுதங்களுக்குப் பூஜையும் உண்டு. தினமும் அவைகளைக் கும்பிடுகிறார்கள்

    இவர்களது மொழி குடவ மொழி. இதற்கு ஸ்கிரிப்டு இல்லை. இந்த மொழி மலையாளம் சம்ஸ்கிருதம் கன்னடம் கொஞ்சம் தமிழ் என்று நான்கும் கலந்திருக்கிறது.

    இங்கு எல்லா சம்பவங்களுக்கும் நாட்டுப் பாடல் போல் பாடுகிறார்கள். திருமணம் குழந்தைப்பிறப்பு. அறுவடை. மேலும் சில பண்டிகைகள். இறப்பு என்று எல்லாவற்றுக்கும் நாட்டுப்பாடல்கள் போல் பாடல்கள் வந்து விடுகின்றன. வேதாந்தப்பாடல்களும் உண்டு.

    பண்டிகைகள் என்று எடுத்துக் கொண்டால் தசரா, தீபாவளி, காவிரி சங்ரமணா என்ற காவிரிஸ்னானம் மலைவாசிகளின் விசேஷ தினம், அறுவடை தினம் எல்லாமே சிறப்பாக மேள தாள நாட்டியங்களுடன் நடைபெறும். வீடு கட்டிக் கிரஹப்பிரவேசமும் இது போலவே நடைபெறும்.

    இவர்கள் தங்கள் போர் ஆயுதங்களைப் பூஜிக்கும் தினமும் “கைல்போல்டு” என்ற பெயரில் செப்டம்பர் மூன்றாம் தேதி வாக்கில் நடைபெறுகிறது. துப்பாக்கிக்கள், வாள், கத்தி, வில் அம்பு போன்ற ஆயுதங்களுக்குக் குங்குமம் சந்தனம் இட்டு வீட்டின் மூத்தவர் அதை எடுத்து வீட்டுத்தலைவருக்குக் கொடுப்பார். பின் பன்றிக் கறியுடன் ஸ்பெஷல் சாப்பாடு. பின் விளையாட்டில் ஒரு தேங்காயை மிக உயரத்தில் கட்டிச் சுடும் பழக்கமாம். முன்பு வேட்டைக்குப்போவார்களாம், இப்போது அது தடை செய்யப்பட்டுள்ளது.

    காவிரித்தாயின் பூஜையின் போது பெண்கள் விடிகாலை காவிரியில் ஸ்னானம் செய்து பின் எல்லோர் வீட்டிற்கும் காவிரி தீர்த்தம் எடுத்துச்செல்கிறார்கள். பின் ஒரு தேங்காயோ அல்லது வெள்ளரிக்காயோ எடுத்து சிவப்புப் பட்டால் மூடி மஞ்சள் குங்குமம் இட்டு ஆபரணங்களுடன் மங்கள் சூத்ரம் {தாலி}பதக்கம் போட்டு பின் கன்னிபூஜை செய்கிறார்கள்

    இவர்களது குல தெய்வங்கள் காவிரித்தாய், ஐயப்பன், பத்ரகாளி சாஸ்தா. பசுவையும், நாகதேவதா என்று பாம்பையும் பூஜிக்கிறார்கள். பசுவின் வதைக்குத்தடை.

    சாதாரணமாக ஆண்கள் நீளக்கோட்டுடன் காட்சியளிப்பார்கள். இடுப்பில் ஒரு சில்க் துணி பெல்ட் போல் கட்டியிருக்க அதில் சின்னப் பிச்சுவாக் கத்தி சொருகப்பட்டிருக்கும். தலையில் “மண்டே துணி” அதாவது டர்பன் அணிந்திருப்பார்கள்

    பெண்கள் புடவை அணிந்திருப்பார்கள், ஆனால் புடவை தோளில் வராமல் மார்பிலேயே சுற்றப்பட்டுப் பின் தலைப்பின் நுனி பாகம் பின்புறமாக வலது தோளில் வந்து அது விழாமல் நிற்க “பிரோசசால்” குத்தப்பட்டிருக்கும். பார்க்க மிகவும் அழகாக இருக்கும்.

    ஹிந்துவாக இருந்தாலும் திருமணத்திற்குப் பிராம்மண சாஸ்திரிகள் வருவதில்லை. குடும்பத்தின் தலைவர் வைத்து அவர் முன்னிலையில் திருமணம் நடத்தப்படுகிறது. அக்னிக்கு முக்கியத்துவம் இல்லை. வேறு மந்திரங்களும் திருமணம் போது கிடையாது. ‘டௌரி சிஸ்டம்’ அறவே கிடையாது.

    அம்மா குடவர்கள் என்ற ஒரு பிரிவு உண்டு. இவர்கள் பிராம்மண கலாச்சாரம் கொண்டு பூணலும் அணிந்திருக்கிறார்கள். வேதங்கள் ஓதுகிறார்கள், சுத்த சைவம். தற்காலத்தில் இவரது பிரிவில் காதல் திருமணம் நடக்க “காவிரி பிராம்மணர்கள்’ என்ற தனிப்பிரிவு வந்திருக்கிறதாம்.

    கல்யாண மாப்பிள்ளை வெள்ளைக்கலரில் நீள அங்கி போட்டிருப்பார். தலையில் சரிகைத்தலைப்பாகை அலங்கரிக்கும், கல்யாணப்பெண் சிவப்பு நிறத்தில் உடை உடுத்தியிருப்பாள். அநேகமாக வம்சவம்சமாக உடுத்திய பரம்பரைப் புடவையே மணப்பெண் உடுத்துவாளாம். அது வீணாகாமல் இருக்க வேண்டும். மணமகன் வாழைமரத்தண்டுகளை வெட்டி விட்டு வர வேண்டும், அவனது வீரத்தைக் காட்டுவது போல் அர்த்தம். முன்பெல்லாம் புலியையோ அல்லது காட்டுப்பன்றியையோ வேட்டையாடித் தன் வீரத்தைக்காட்டுவார்கள். திருமணம் போது பல நாட்டுப்பாடல்கள் பாடி பின் நடனமும் ஆடுகிறார்கள்.

    அசைவ உணவு தான் அங்கு பிரதானம் அதுவும் “போர்க்’ என்ற பன்றி இறைச்சிதான் எல்லா விசேஷங்களிலும் முதல் இடம் பெறுகிறது. தவிர கொடம்புட்டு, நூல்புட்டு பெம்ப்ளாஸ்லூட், சிக்கன் {சாதம், நூடுல், மூங்கில் கறி] என்றும் பல இடம் பெறுகின்றன. சாதாரண நாட்களில் சாதம், கஞ்சி, பப்புட்டு, குழால் புட்டு தினமும் பார்க்க முடிகிறது. பழங்களில் வாழைப்பழம், மாம்பழம், பலாப்பழம் எப்போதுமே உபயோகமாகின்றன நல்ல காபியும் கிடைக்கிறது.

    பெண்களுக்கு மிகவும் உயர்ந்த இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. விதவை மறுமணம் செய்து கொள்ளலாம். விதவை எல்லா மங்கள காரியங்களிலும் முதன்மை வகித்து முன் நிற்கலாம். தாயாருக்கு மிக முக்கிய ஸ்தானம் தரப்படுகிறது. அவள்தான் திருமணம் போது மாப்பிள்ளையை முதலில் வாழ்த்தி ஆசிகள் வழங்குகிறாள்.

    இவர்கள் குடும்பம் அநேகமாக கூட்டுக்குடும்பமாகவே இருக்கிறது. வடநாட்டவர்கள் தங்கள் பெயருடன் குடும்பத்தின் பெயரையும் சேர்த்துக்கொள்வது போல் இவர்களும் சேர்க்கிறார்கள். {கவாஸ்கர் டெண்டுல்கர் என்பது போல்} இப்படி இருக்கும் குடும்பம் சுமார் ஆயிரம் வரை இருக்கிறது. இதை “ஒக்கா’ என்று அழைக்கின்றனர்

    வீட்டின் முக்கிய ஹாலில் அவர்கள் குலத்தை ஆரம்பித்த குருவின் படமும் வைக்கப்பட்டு தினமும் விளக்கும் ஏற்றப்படுகிறது. அந்தக்குலத்தின் மூத்த தலைவரைக் கடவுளாகவே அவர்கள் பார்க்கின்றனர்.

    பார்க்க வேண்டிய இடங்கள், மடிக்கேரி நாகரஹோல் நேஷனல்பார்க், அபி நீர்வீழ்ச்சி, தலக்காவேரி, ஓம்காரேஷ்வரர் ஆலயம், பிரும்மகிரி குன்று டுபாரே என்ற யானைகள் பிடிக்கும் இடம், ஆரஞ்சு கேன்டி. குசல் நகர். இன்னும் பல இயற்கைச் சூழல் உள்ள இடங்கள்

    ஓம்காரேஷ்வர ஆலயம் மசூதி ஸ்டைலில் நாலு ஸ்தம்பங்களுடனும் நடுவில் வட்ட வடிவ கும்பத்துடன் இருக்கிறது. ஆனால் உள்ளே இருப்பதோ காசியிலிருந்து கொண்டு வந்த சிவலிங்கமாம்,

    காபி செடிகள், மிளகு. ஏலக்காய், கிராம்பு மற்ற மாசாலா பொருட்கள் தேயிலை, பாக்கு தேக்கு எல்லாம் செழிப்பாக வளர்வதால் இங்கு பல எஸ்டேட்டுக்கள் உள்ளன. நல்ல வியாபாரமும் நடக்கிறது, காடுகளில் சில இடங்கள் தேவகாடு என்று புனிதமாகக் கருதி அவைகளைக் காக்கின்றனர். அங்கு மரம் வெட்டுவதோ அல்லது வேட்டையாடுவதோ கிடையாது.

    இளைஞர்களுக்குத்தேவையான மலையேறுதல், யானை மேல் சவாரி, தண்ணீரில் படகுடன் வீர விளையாட்டு, நீச்சல் போன்ற சகலமும் இருப்பதால் கல்லூரி மாணவ மாணவிகள் இங்கு விரும்பி வருகின்றனர்.

    இங்கு பல மூலிகைகள் விளைவதால் இவைகளைப்பற்றி ஆராய்ச்சி செய்யவும் பலர் வருகின்றனர். மலைப்பிரதேசம் பக்கம் போக மூலிகை மணத்துடன் தென்றல் வீசி நம்மை மேலும் புத்துணர்ச்சி ஆக்குகின்றன. .

    திபெத்தியர்கள் எல்லோரும் சேர்ந்து மிக அழகான புத்தர் கோயிலையும் இங்கு கட்டியிருக்கிறார்கள். இதுவும் பார்க்க வேண்டிய இடம்.

    குடகு மலை ஒரு அருமையான கோடை வாசஸ்தலம் என்பதில் சந்தேகமே இல்லை.

     

    படங்களுக்கு நன்றி: http://www.yaatrika.com/traveler/2011/02/coorg-the-scotland-of-india/

    http://www.coorgie.com/aboutus.asp

    http://www.homestaykodagu.com/coorg_info.html

    http://www.bestindiatours.com/india-travel/coorg-tour.html

    Share