Tag: விசாலம்

  • கல்யாணமோ கார்த்திகையோ!

    விசாலம்

    “நீலா! நீலா! என்ன செய்யறே! எப்போ பாத்தாலும்  செல் தானா கையில.  இங்க வா!  இந்த அகல் விளக்கெல்லாம்  அலம்பி  துடைச்சு வை. கொஞ்சமாவது எனக்கு உதவப்படாதா என்ன?’”

    “இதோ வரேம்மா… எதுக்கு இப்ப  இத்தனை அகல் விளக்கு வாங்கியிருக்கே!”

    “நீயே யோசிச்சு பதில் சொல்லு. தீபாவளிக்கப்பறம்  விசேஷமா என்ன பண்டிகை வரும்? “

    “தெரியலேயே அம்மா”

    “இதெல்லாம் எங்க இந்தக்கால பெண்ணுக்கு தெரியறது? வேலண்டின் டேன்னா மட்டும் ஒரு மாசம் முன்னாடியே ஆட ஆரம்பிசுடறதுகள்.”

    “அதுல என்ன தப்பு இருக்கு?”

    “அதுல ஒண்னும் தப்பில்ல.  ஆனா அத்தோட நம்ம கலாசாரமும்  தெரிஞ்சிருக்க வேண்டாமா? அந்தந்த பண்டிகையை கொண்டாடவும் தெரிஞ்சுக்கணும். அந்த நல்ல நாள் வந்த காரணமும் தெரிஞ்சிருக்கணும். நீயோ பி எட்   படிக்கப்போறேன்னு சொல்றே. அப்ப ஸ்கூல்  குழந்தைகளுக்கு எல்லாம் சொல்லித்தர உனக்கு முதல்ல தெரிஞ்சிருக்கணும் இல்லையா?”

    “ஆமாம்மா நீ சொல்றது சரிதான். இப்ப சொல்லு ஏன் இவ்வளவு விளக்கு எடுத்திருக்கே. பித்தளை விளக்கும் பளபளன்னு தேச்சுருக்கே”

    “இப்பவும் ஞாபகம் வல்லையா. கிழிஞ்சுது போ. அடப்பொண்ணே! கார்த்திகை  தீபம்  வரது  தெரியலையா? போன வருஷம் எல்லா இடத்திலும் விளக்கெல்லாம் ஏத்தினோமே!”

    “ஆமாம் ஆமாம் பொரி உருண்டை, கடலை உருண்டை, அப்பம் எல்லாம் கூட நைவேத்தியம்  செய்தாயே. ஞாபகம் வந்துடுத்து.”

    “ஆமாம் திங்கறதெல்லாம் மறக்காமல் ஞாபகம் வந்துடும்.”

    “ஹூம் போம்மா! எப்ப பாத்தாலும் என்னை கிண்டல் பண்ணிண்டு.

    அது சரிம்மா! நான் இந்த வேலையெல்லாம் செய்யறேன். நீ எதுக்கு கார்த்திகை தீப திருநாள் வந்ததுன்னு சொல்லு. எனக்கும் வேலை செய்ய போர் அடிக்காது”

    “அப்படி வா வழிக்கு. சரி கேளு கதையை!

    கார்த்திகைத் திருநாள் ரொம்ப சிறப்பு வாய்ந்தத் திருநாள். கல்யாணமோ கார்த்திகையோன்னு சொல்லுவா. கல்யாணம் எத்தனை முக்கியமோ அத விட முக்கியம் இந்த நாள்.  இதில முருகப்பெருமான்   சிவன்  பார்வதி  துர்கையும்  சம்பந்தப்பட்டிருக்கிறார்கள்.

    ஒருசமயம் பிரும்மா, “நான் தானே எல்லாவற்றையும் சிருஷ்டி செய்கிறேன்  நான்  சிருஷ்டி செய்யாட்டா  இந்த  பிரும்மாண்டமான உலகமே இருக்காது  அதனால் நான் தான் பெரியவன்  ” என்று  கர்வம் பிடிச்சு, எதற்கும்  மஹாவிஷ்ணுவிடம்  இத பத்தி கேட்கலாம்னுட்டு விஷ்ணுவிடம் சென்றார்.

    விஷ்ணு   பாற்கடலில்   பள்ளிக்கொண்டிருந்தார். பிரும்மாவைப்

    பார்த்து வந்த விஷயத்தைப்  பத்திக் கேட்டார். பிரும்மா  விஷயத்தைச் சொல்லி “இப்போது சொல்! நான் தானே படைக்கிறேன்; நான் தானே உயர்ந்தவன்” னு  சொன்னார்.

    அதுக்கு விஷ்ணு பகவான், “ஓ பிரும்மா!   படைத்தால் மட்டும் போதாது, காக்கவும்  வேண்டும். நான் எல்லோரையும் காக்கிறேன். அதனால் நான் தான் பெரியவன். “

    வாக்குவாதம்  அதிகமாக ரெண்டு பேரும் சிவன்ட  கேட்கலாம்னு  முடிவு செஞ்சு சிவபெருமானிடம் போய் சேர்ந்தனர். அப்போ சிவன் பெரிய நெருப்புப் பிழம்பாய்  லிங்க வடிவில் தோன்றினார். இரு தரப்பிலேந்து  எல்லாம் கேட்டப்பறம் அவர் ஒரு பரீட்சை வைச்சார். “யார் என்னுடைய   முடியையும் அடியையும்  கண்டு வந்து  என்னிடம் சொல்லுகிறாரோ  அவர்தான் பெரியவர், உயர்ந்தவர்” ன்னார். இதைப் பற்றி அறிய  இருவருமே ஆவலாக இருந்தனர். ரொம்ப எளிதான  காரியம்ன்னு எண்ணி  ரெண்டு பேர்களும் ஒத்துக் கொண்டனர். பிரும்மா அன்னப்பறவையாக மாறினார். விஷ்ணு வராக அதாவது

    பன்றி உருவம் எடுத்துக் கொண்டார். அன்னப் பறவையான
    பிரும்மா  ஆகாசத்துல உயர பறந்து பறந்து  முடியைத் தேடித் தேடி அலைஞ்சார். பார்க்க முடியவில்லை. அலுத்து சலித்து களைச்சு போனார்.

    சலித்தப்போது அங்க ஒரு தாழம்பூவைப் பார்த்தார்.

    “தாழம்பூவே! எனக்கு ஒரு உபகாரம் செய்யணும். நான்  சிவனது முடியைப்  பார்த்ததாக ஒரு சின்னப் பொய் சொல்லணும்” ன்னார். தாழம்பூவும்  சரின்னு

    ஒத்துக் கொண்டது.

    விஷ்ணுவோ பன்றி ரூபத்தில பூமியைக் குடைஞ்சு மிகவும் ஆழமாப்போய், ஆழமாப்போய் அடியைத் தேடினார். அவருக்கும் அடி தென்படவில்லை. இனி தேட முடியாதுன்னு களைச்சு அவரும் திரும்பி வந்துட்டார். இருவரும் வருத்தத்தோடு  சிவனட்ட  திரும்பி வந்தா.

    தங்கள்  தோல்வியை ஒப்புத்துண்டு  மன்னிப்பும் கேட்டா. அப்போது சிவன் தன் உண்மையான ரூபத்தைக்  சூரிய  சந்தரனுடன்  மூன்று   கண்களுடன்  அதாவது நெற்றியில் ஒரு கண்ணுடன் திருசூலம் ஏந்தி தரிசனம் தந்தார். “நாம் மூவரும்  படைத்தல், காத்தல், அழித்தல்  என்ற மூன்று காரியங்களுக்காக உண்டாக்கப்பட்டோம். நாம் மூவரும் உலகத்திற்கு  முக்கியமானவர்கள் தான்”ன்னார்.

    பின்னர் பொய் சொன்னதால் பிரும்மாவுக்கு  ஒரு கோவிலும்  இருக்கக்கூடாதுன்னு கோபத்துல சொன்னார். தாழம்பூவையும் சிவபூஜைக்கு  சேர்ப்பதில்லை.”

    “அம்மா  அடுத்ததா நீ என்ன கேட்கப்போறேன்னு எனக்குத் தெரியும்.”

    “என்ன?”

    “இந்தக் கதைலேந்து என்ன தெரியறதுன்னு கேப்ப. இல்லையா?’

    “ஆமாம் சொல்லேன்.”

    “இந்தக் கதையிலிருந்து  கர்வம்  கொள்ளாதே. பணிவாக இரு.  பொய் சொல்லாதே. உயர்ந்தவர் தாழ்ந்தவர்  என்ற எண்ணம் கொள்ளாதே  என்ற பாடம் கற்றுக்கொண்டோம் இல்லையா? ன்னு ஸ்கூல் குழந்தைகளுக்குச் சொல்ல நல்ல கதை அம்மா”

    “நன்னா ஞாபகம் வச்சுக்கோ.  ஸ்கூல்ல  பாடம் எடுத்தா நிறைய கதை சொல்லி எடுத்தாக்க  கிளாஸ் ரொம்ப இன்டெரெஸ்டிங்கா இருக்கும். இல்லாட்டா போர் அடிக்கும்.”‘

    “அது சரி அம்மா. கமலா வீட்டிலே கார்த்திகை நமக்கு அடுத்த நாள் வரதாமே  அது ஏன்? ஒரே பண்டிகையை ஏன் ரெண்டு ரெண்டு நாள் செய்யணும்?”

     “அவாள்ளாம்  வைஷ்ணவா. சிவ பூஜை செய்வதில்லை. அவளோட  கார்த்திகை லட்சுமி தேவி சம்பந்தப்பட்டது.”

    “அதுக்கும் ஒரு கதை இருக்குமே!”

    “உம்… இருக்கு இருக்கு கேளு!

    கார்த்திகைத் தீபம் எப்போதும் சைவர்களுக்கு முதல் நாளும் அதன் மறு நாள்  வைஷ்ணவர்களுக்கும் வரும். இதே போல் ஜன்மாஷ்டமியும் இரண்டு நாட்கள். முதல் நாள் சைவர்கள் கொண்டாட  மறுநாள் வைஷ்ணவர்கள் கொண்டாடறா. ஐயங்கார்  கார்த்திகையை  “பாஞ்சராத்ரதீபம்” என
    கொண்டாடுகிறார்கள். அதாவது விஷ்ணு  கோயில்ல  பக்தர்கள் கோயிலுக்கு முன்னாடி கூடுவார்கள். அப்பறம் பனையோலைகளைக் கூடுகள்  போல  குமிச்சு  அதைச்சொக்கப்பனாக நினைத்து எரிக்கிறா.”

    ” ஆஹா இன்னொரு கதை வந்துடுத்து”

    “ஒரு தடவை மஹாலட்சுமியை ஒரு அசுரன்  துரத்த திருமகள் காட்டு  நடுவில  போய் ஒளிஞ்சுண்டா. அசுரன் இத   தெரிஞ்சுண்டு  காட்டிற்குள்ளும்  வந்துவிட்டான். அவள் அங்குதான் எங்கேயோ இருக்கணும்னு   எண்ணி அவளை அழிக்க காட்டிற்குத் தீ  வச்சான். ஆனால் மஹாலட்சுமி அந்த இடத்திலிருந்து மறைந்துப்போனாள். இதன் காரணமாகத்தான் விஷ்ணு கோயில்களில் இது போல் எரிப்பது வழக்கம்.

    வேறொரு கதை… ஒரு தடவை பிரும்மா ஒரு யாகம் செய்தார்.  ஆனால்  சரஸ்வதிக்கு இது தெரியாது. யாகம் நடக்கும் போது இந்த விஷயம் அவளுக்குத் தெரிஞ்சுது, அதனால் கோச்சுண்டு யாகத்திற்குத் தடங்கல் செய்ய ஒரு அரக்கனை உண்டாக்கினாள். அரக்கன் யாகத்தைத்தடுக்க உலகம் முழுவதையும் இருட்டாக்கினான். எங்க பாத்தாலும் ஒரே இருட்டு.

    பிரம்மா மனம் கலங்கி ஸ்ரீமஹாவிஷ்ணுவைத் தியானித்தார்.
    மஹவிஷ்ணுவும் மனம் கனிஞ்சு  உலகம் முழுவதும் பிரகாசமாக
    ஆக்க ஒளி கொடுத்தார்.,அதில உலகமே பிரகாசமானது.
    இந்தச் சம்பவம் கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரத்தில்
    தான் நடந்தது. இதனாலும் வைஷ்ணவர்கள் கார்த்திகைத் திருநாளைக் கொண்டாடுகின்றனர்.”

    “போதும்மா  நான் அப்பறம் எல்லாம் மறந்து போய்டுவேன்.”

    “அது எப்படி மறப்பே! ஹாரி பாட்டர்  நாலு  பாகமும் நன்னா ஞாபகம் இருக்கே! எல்லாத்துக்கும் ஒரு ஆர்வம் வேணும்! அப்ப மறக்காது.”

    “சரிம்மா! என் செல்ல அம்மா!  நான் வரேன்  நீ நல்ல டீச்சர் தான்.”

    “போதும்டி ஐஸ் வைக்காதே!  இந்த தடவை கார்த்திகைக்கு பட்டு பாவாடை  கட்டிண்டு விளக்கு நீதான் ஏத்தணும்.”

    “ஓகே டன் {done}”

    Share
  • பித்துக்குளி முருகதாஸ்!

    http://www.vallamai.com/?p=32897

    PITHUKULI_jpg_2623_2623536f

    மனிதர் இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும். அப்படி இன்று மறைந்த நம் பித்துக்குளி முருகதாஸ் ஐயா அவர்களுடன், இந்த அருமையான இடுகையை நமக்கு 2013ம் ஆண்டில் வழங்கிய அமரர் விசாலம் அம்மையார் அவர்களையும் நினைவுகூர்வதில் எம் உள்ளம் பெருமிதம் கொள்கிறது. விசாலம் அம்மையார் மனிதாபிமானம் மிக்க நல்ல உள்ளம் படைத்த ஆத்மா. நட்பிற்கு இலக்கணமாக இருந்தவர்.. அவசியம் வாசிக்க வேண்டிய இடுகை!

    Share
  • இறைவனடி சேர்ந்தார் விசாலம் அம்மையார்

    visalam

    நம் வல்லமையின் நீண்ட கால படைப்பாளரும், வாசகருமான அன்புத் தோழி திருமதி விசாலம் இராமன் அவர்கள் நேற்று (ஜனவரி 26, 2015) இறைவனடி சேர்ந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். அவரது பிரிவால் வாடும் அவர்தம் குடும்பத்தாருக்கு நம் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறோம். அம்மையாரின் ஆன்மா சாந்தியடைய மனமாரப் பிரார்த்திக்கிறோம்.

    என்னைப் பற்றி: விசாலம்
    http://www.sify.com/sifyimagine/fullstory.php?id=14607928

    நான் பிறந்ததிலிருந்து பம்பாய் வாசி. திருமணம் ஆன பின் தில்லிவாசி. நான் கற்றுக்கொண்ட கலைகள்: பாட்டு வயலின், ஹார்மோனியம்; சிறிது காலம் நாட்டியம். பாட்டிலும் வயலினிலும் முன்னுக்கு வந்து, என் அக்கா கலயாணி பாலகிருஷ்ணா பாட, என் வயலின் கச்சேரி எப்போதும் இருக்கும். மற்ற கலைகள், படங்கள் வரைவது, நாடகங்களில் நடிப்பது.

    சிறு வயதிலிருந்தே தமிழ் மீது மிகவும் ஈடுபாடு ஆனதால் எப்படி தேர்ச்சி பெறலாம் என்று யோசித்து பம்பாய் தமிழ்ச் சங்கத்திலும் பாரதி கலாமன்றத்திலும் அங்கத்தினர் ஆனேன். நிறையப் புத்தகங்கள் படித்துக் கொஞசம் அறிவு வந்தது. ஏதோ சிறு அணிலும் அணை கட்ட ராமருக்கு உதவியது போல், எழுத்தின் மேல் ஆர்வம். பல கவிதைகள் ஆத்ம திருப்திக்கு எழுத ஆரம்பித்தேன். ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் எழுதினேன்.

    பரிசுகள்… பேச்சுப் போட்டி, எழுத்துப் போட்டியில் நிறைய வந்துள்ளன. பாராட்டியவர்கள்… திருவாளர்கள் கி.வா.ஜகன்னாதன், கி.ஆ.பெ.விசுவநாதம், நாடோ டி, கல்கி, ஆனந்தி ராமசந்திரன், சுபஸ்ரீ முதலியவர்கள் என்னை ஊக்குவித்து வெற்றிப் படிகளில் ஏற வைத்தனர். இவர்கள் போல் பல பேர்கள். அவர்களை நான் இன்றும் வணங்குகிறேன். நாடகம் என்றால் எனக்கு உயிர். பல நாடகங்கள் லேடீஸ் கிளப் வழியாக நடித்திருக்கிறேன். ஹிந்தி மொழியில் ஆர்வம் கொண்டு, ராஷ்ட்ரபாஷா ரத்னா வரை படித்து மஹாராஷ்டிராவிலேயே இரண்டாவது இடம் வந்து மெடலும் புத்தகப் பரிசும் வாங்கின நாள் எனக்கு இன்றும் பசுமையாக இருக்கிறது.

    என் ஆசிரியர் தொழில் ஆரம்பித்தது என் 16 வயதில். அது தான் என்னை முழுவதுமாக ஆக்கிரமித்துக்கொண்டது. அது தான் என் golden period. மற்ற பொழுதுபோக்குகள்: astrology, numerology, palmistry, namalogy and vastu. என் அப்பா தான் என் குரு என் 45 வயதிலிருந்து கற்றுக்கொண்டவை… reiki grandmaster, pranik healing, magnified healing, gayatri healing, siddha sakthi, alpha mind power…., art of living.., isha yoga, mnavalakalai…, flower therapy, homeopati and sujok therapy (accupressure).

    தற்போது ரேக்கி கிளினிக்கில் ஹீலிங் செய்து வருகிறேன் ஆன்மீகத்தில் மிகவும் ஈடுபாடு, சமூக சேவையும் முடிந்த வரை செய்கிறேன் அன்னையும் பாபாவும் என் மூச்சில் எப்போதும் இருக்கிறார்கள். என் வாழ்க்கை முழுதும் நிறைய miracles. அந்த இறைச் சக்தியால் தான் எனக்கு எல்லாமே நடந்து வருகிறது. நான் அன்பினால், அன்புக்காக, அன்புடன் வாழ்கிறேன். அன்பே கடவுள்! அன்பையே அள்ளித் தருவோம் வாருங்கள்.

    என் வலைப் பதிவு: http://meerambika.blogspot.com

    தமிழ் சிஃபியில் அவர் எழுதிய சில கட்டுரைகள் வருமாறு:

    http://www.sify.com/sifyimagine/fullstory.php?id=14607931
    http://www.sify.com/sifyimagine/fullstory.php?id=14722026
    http://www.sify.com/sifyimagine/fullstory.php?id=14729138
    http://www.sify.com/sifyimagine/fullstory.php?id=14736647

    சென்னை ஆன்லைனில் வெளிவந்த அவரது கட்டுரைகள் சில இங்கே – http://tamil.chennaionline.com/tamilcolumn/index2.aspx?CatID=visal

     கடைசியாக 2015 ஜனவரி 19 அன்று நம் வல்லமையில் அவர் எழுதிய படைப்பு வெளியாகியுள்ளது. இது வரை வல்லமையில் அவர் எழுதி 187 ஆக்கங்கள் வெளியாகியுள்ளன. அவை இங்கே – http://www.vallamai.com/?tag=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D

    தகவல் – திரு அண்ணாகண்ணன்

    திரு ராமன் அவர்களை 8695969237 என்கிற தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்
    வீட்டு விலாசம் H 2015, 5 th Street, 12 th main Road, Anna Nagar West Chennai

    Share
  • “நம் நாட்டைக் காப்போம்”

    –விசாலம்

    பதினாறாம் நூற்றாண்டு……..

    பாரத தேசம் முழுவதிலும் முஸ்லிம்களும், பட்டானியர்களும் பல இடங்களை ஆக்கிரமித்த காலம் அது. அந்நேரம் ராஜஸ்தானில் பல மன்னர்கள் மிகவும் சிறப்பாக ஆட்சி புரிந்து வந்தனர். அவர்களிடம் தேச பக்தி மிகுந்து காணப்பட்டது. தில்லியில் ஆள வந்த பல முஸ்லிம் மன்னர்களுக்கு ராஜஸ்தான் மேல் கண் இருந்தது. தவிர ராஜ்புத் பெண்கள் மிகவும் அழகாக இருந்தமையால் அவர்களைத் தங்கள் அடிமைகளாக்கிக்கொள்ள பல மன்னர்கள் துடித்தனர். அடிக்கடி அந்த ராஜ்ஜியத்தின் மேல் மோத இதனால் போர் அடிக்கடி ஏற்பட்டது. அப்போது ஆண்ட பாபரின் மகன் ஹுமாயூன் ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் சேர்ஷா என்பவன் தான் பாதுஷாவாக ஆவதற்குப் பாடுபட்டுகொண்டிருந்தான்.

    அந்த சமயத்தில் ராஜஸ்தானில் சித்தௌட் என்ற இடத்தை ஆண்ட அரசன் விக்ரமன் துரதர்ஷடவசமாக பல கெட்ட பழக்கங்களுடன் ஸ்திரீலோலனாக இருந்ததால் தன் ராஜ்யத்தைப் பொறுப்பாக ஆளவில்லை. மிகுந்த பலஹீனமாக இருந்ததால் இந்தச்சூழ்நிலையை சாதகமாக்கிக்கொண்டு பலர் அதை முற்றுகையிட முயற்சித்தனர். வழக்கம் போல் ராஜா விக்ரமன் தனது அரியணையில் அமர்ந்தபடி நடனத்தை ரசித்துக்கொண்டிருந்தான். அழகான இரண்டு பெண்கள் தங்கள் தலையில் பல பானைகளைச் சுமந்து நடனமாடியபடி தங்கள் கால்களைக்கொண்டு வர்ணக்கோலங்களும் போட்டுக்கொண்டிருந்தனர். அரசன் கையில் உயர்ந்த ரகு மது இருக்க தன்னை மறந்து அமர்ந்திருந்தான். திடீரென்று வந்தது போர் முழக்கம். தூரத்திலிருந்த இந்தப்படைகளை தனது மாளிகையிலிருந்த அரசி ஜவஹர்பாயி கவனித்தாள். கூடவே ராணி கர்னாவதியும் அதிரிடும் சத்தம் கேட்டு வெளி வந்தாள். அவளுக்குத் தன் மகன் விக்ரமஜித் மிகவும் பொருத்தமில்லாத அரசன் என்றும் அரியணையில் அமர லாயக்கில்லை என்றும் தெரியும். உடனே போருக்கு புறப்பட அரசனுக்கு செய்தி அனுப்பினள். தன்னையே மறந்த நிலையில் இருந்த அரசன் எப்படி கிளம்பமுடியும்? இருப்பினும் அவர்களது குல வழக்கபடி வெற்றித்திலகம் இட்டு அவனை அனுப்பி வைத்தாள்.

    ஒரு முஸ்லிம் படை அங்கு முற்றுகையிட அரசன் விக்ரமன் கோழையாக ஓடி வந்துவிட்டான். ராஜஸ்தான் பெண்மணிகள் தன் நாட்டை மிகவும் நேசிப்பவர்களாகவும் இருந்தனர். விக்ரமனின் மனைவி ஜவஹர்பாயி ஒரு வீரப்பெண்மணி. தன் நாட்டிற்காக எதையும் செய்வாள். போர் நடக்கும் போதே முஸ்லிம் படையினர் பல ராஜபுத்ர பெண்மணிகளை இழுத்துப்போக முயல்வார்கள். கற்பழிக்கும் எண்ணம் அவர்களுக்கு இருந்ததால் அதற்கு இடம் கொடுக்கக்கூடாது என்ற கொள்கையுடன் பல ஸ்திரீகள் நெருப்பை மூட்டி அதில் குதித்து தங்களை மாய்த்துக்கொள்வார்கள். இந்த அக்னிப்பிரவேசத்திற்கு “ஜௌஹர்” எனப்பெயர்.

    இந்த ஜௌஹரை முதலில் ஆரம்பித்து வைத்தது ராணி பத்மினி தான். பின்னால் வந்த ஸ்ரீ ராஜாராம் மோஹன்ரரய் இது போன்ற ஜௌஹர் , சதி என்ற வழக்கங்களை மிகவும் புரட்சிகரமாக முறியடித்தார் என்பது நம் எல்லோருக்கும் தெரியும். ஜவஹர்பாயி தன் கணவன் ஒரு நல்ல மன்னனாக இருப்பதற்கு பதிலாக இப்படி கேளிக்கையில் ஈடுப்பட்டு நாட்டைக் குட்டிச்சுவராக ஆக்குகிறானே என்று மிகவும் வருத்தம் கொண்டு மாளிகையில் இங்கும் அங்கும் அலைந்தபடி இருந்தாள். பின்னர் எப்படியும் மேவாரைக் காக்க வேண்டும் என்று தீர்மானித்தாள். என் கணவர் செய்ய வேண்டியதை நான் செய்ய வேண்டும், மேவாரைக்காக்க வேண்டும். என் உடலை நெருப்பில் இட்டு உயிரை விடுவதில் என்ன லாபம்? நாட்டை அல்லவா காக்க வேண்டும்! ஆகையினால் ஜௌவார் என்ற தீக்குளிப்பு செயலில் இறங்காமல் எல்லோரையும் போருக்குத்தயார் செய்ய வேண்டும். வீர மரணம் வந்தாலும் அது நாட்டுக்குப்பெருமை தான் என்று யோசனை செய்தபடி தனது யோசனையை அங்கிருக்கும் பல ராஜபுத்திர பெண்மணிகளுக்குச் சொல்ல எல்லோரையும் அழைத்தாள். அந்த நேரத்தில் முஸ்லிம் படைகள் சமீபத்தில் வரத்தொடங்கியது.

    The_Rajput_ceremony_of_Jauhar_(holocaust),_1567முஸ்லிம் படைகள் சமீபத்தில் வர வர பல ராஜபுத்ர பெண்மணிகள் நெருப்பை மூட்டி அதில் விழத் தயாரானார்கள். அப்போது வீரம் பொங்க, கண்களில் கனல் பறக்க வந்தாள் விக்ரமனின் மனைவி ஜவஹர் பாய். அக்னி கபகப என்று எரிந்தபடி இருந்தது. அவள் கண்களிலும் அக்னி போல் பொரி பறந்தது.

    “நில்லுங்கள், சற்றுப் பொறுங்கள்”

    இந்தக்குரல் கேட்டவுடன் பல பெண்மணிகள் அக்னியில் குதிக்காமல் அவள் என்ன சொல்ல வருகிறாள் என்று ஆவலுடன் பார்த்தனர். “சகோதரிகளே, நாம் இப்போது ஜௌஹர் செய்துக்கொண்டால் நம் கற்பு காக்கப்படும், ஆனால் இப்போது நாம் நம் மேவாரையல்லவா காப்பாற்ற வேண்டும், அது மிக முக்கியமாயிற்றே. கிளம்புங்கள் நம் உயிரைக் கொடுத்தாவது தாய்நாட்டைக் காக்க வேண்டும். ஜெய் மாதா! துர்கே! நாம் வீரத்துடன் அந்த மிலேச்சர்களைத் துரத்தியடிப்போம் நம்
    மாத்ருபூமியைக் காப்பாற்றுவோம். வாளை கையில் எடுங்கள், கோஷமிடுங்கள், ஜய் துர்கே மா”.

    ஒரு நிமிடம் எல்லா ராஜ்புத் பெண்களும் நெருப்பின் கனலைப்பார்த்தார்கள். நாட்டைக்காப்பாற்றுவது தான் முக்கியம் என்று உணர்ந்து வீரத்துடன் அவரவர்கள் பெரிய வாளைக் கையில் எடுத்தார்கள். எங்கும் ஜயதுர்கே என்ற கோஷம் முழங்க பெண்கள் படை கிளம்பியது. கையில் வாளுடன் வீரயுத்தம் நடந்தது. இதை எதிரிகள் கொஞ்சமும் எதிர்ப்பார்க்கவேயில்லை.

    எதிர்ப்பாராத இந்தத்திருப்பத்தினால் எதிரிகள் ஓட்டம் பிடித்தனர், இத்தனை வீரமாக தன் நாட்டையும் கற்பையும் காப்பாற்றிய ஜவஹர் பாய் சரித்திரத்தில் அழியா இடம் பெறுகிறாள்.

    படம்: http://commons.wikimedia.org/wiki/File:The_Rajput_ceremony_of_Jauhar_(holocaust),_1567.jpg

    Share
  • ஓம் பானுவே நம:

    –விசாலம்

    மார்கழி மாதப்பனி விலகிவிடும் காலம் வந்துவிட்டது. அதாவது தட்சியாயணக்காலம் முடிந்து உத்தராயணக்காலம் ஆரம்பமாகும் காலம். இன்னும் விளக்கமாகச் சொன்னால் சூரியன் தனுர் ராசியிலிருந்து நகர்ந்து மகர ராசிக்குப் பெயரும் நேரம். இதனால் தான் சபரிமலையில் வரும் ஜோதியை மகர ஜோதி என்கிறார்கள். மேலும் இந்நாளை மகரசங்கராந்தி என்றும் அழைப்பார்கள். அன்று சூரியனுக்கு பொங்கல் பிரசாதம் படைத்து நன்றியைத்தெரிவிக்கும் வழக்கம் தொன்றுதொட்டு இருக்கிறது. பொங்கிவரும் பாலும், அரிசியைப்பொங்குவதாலும் ‘பொங்கல்’ என்ற பெயருடன் திருவிழா ஆனது.

    Makar-Sankranti-2015-Dates-810x405
    இந்நாளில் ஆதவனை ஆராதிக்கும் மந்திரம்

    ஓம் மித்ராய நம:
    ஓம் சூர்யாய நம:
    ஓம் ககாய நம:
    ஓம் பூஷ்நே நம:
    ஓம் ஹிரண்யகர்பாய நம:
    ஓம் மரீசயே நம:
    ஓம் ஆதித்யாய நம:
    ஓம் ஸவித்ரே நம:
    ஓம் அர்க்காய நம:
    ஓம் பாஸ்கராய நம:

    “ஆதித்யஸ்ய நமஸ்காரான் யே குர்வன்ந்தி தினே தினே ஜனமாந்தர சஹஸ்ரேஷு தாரித்ர்யம் நைவ ஜாயதே” என்று சொல்வது வழக்கம். தினமும் நமஸ்கரித்தால் தரித்திரம் அகன்று செல்வ செழிப்பு ஏற்படும். நல்ல தேக ஆரோக்கியமும் உண்டாகும். கண்கள் பிரகாசமாக விளங்கும் கண்களில் பிரச்சனை அகலும் என்று வேதம் கூறுகிறது. பூவுலகில் சகல அண்டசராசரங்களுக்கும் தேவை இந்த சூரிய ஒளி. சூரிய சக்தி இல்லையேல் வாழ்வுமில்லை. ஆதலால் சூரியனுக்கு நன்றி செலுத்துவதே நமது தலையாயக் கடமை. இதுவே பொங்கல் திருநாள். இதுவே தை மாதப்பிறப்பு.

    வருடத்தில் 12 சங்கராந்திகள் வருகின்றன அவைகளிப்பற்றி ஒரு பண்டித் ஜி விளக்கினார். அதை இங்கு பகிர்ந்துக்கொள்கிறேன் …

    சூரியன் மகரராசியில் பிரவேசிக்க அது “மகர சங்கராந்தி” என்று பார்த்தோம். இது தேவர்களுக்கு முஹூர்த்த நேரமான விடியல் காலம். 12 சங்கராந்திகளில் இது மிகவும் முக்கியமாகக்கருத்தப்படுகிறது. பித்ருக்களின் ஆசிகள் நமக்கு கிடைக்கின்றன.

    சூரியன் மகரத்தின் அடுத்த ராசியான கும்பத்திற்குச் செல்லும்போது மாசி மாதம் பிறக்கும். இதை “லவண சங்கராந்தி” என்பார்கள். இந்த நேரத்தில் சூரிய பூஜை செய்வதன் பலன் மோக்ஷபிராப்தி. இந்த மாதம் உபநயனத்திற்கு சிறந்த மாதம் என்கின்றனர்.

    சூரியன் மீனராசிக்குச் செல்லும் போது பங்குனி மாதம் பிறக்கும் இதை “போக சங்கராந்தி” என்கின்றனர். இந்த மாதம் ஆரம்பத்திலும் முடிவிலும் சூரியவணக்கம் செலுத்தி கோதானம், தான்ய தானம் செய்ய வாழ்க்கையில் சுபீக்ஷம் உண்டாகி நன்மை ஏற்படும்.

    சித்திரை மாதம் சூரியன் மீனத்திலிருந்து மேஷராசிக்கு போகிறார். இந்த மாதம் சூரியனை வணங்கி பூஜித்து தான்யங்களை தானம் செய்ய ஆயிரம் அக்னிஹோத்திரம் செய்த பலனை அடைவார்கள். சித்திரை மாத முதல் தேதியை வருடப்பிறப் பென்றும் “மேஷ சங்கராந்தி”, சித்திரை விஷு என்றும் சொல்வர்.

    வைகாசி மாதம் ஆதவன் ரிஷபத்திற்குச்செல்ல இந்நாளை “தாம்பூலசங்கராந்தி” என்ற பெயர் பெறுகிறது. இன்றைய தினம் தம்பதி பூஜை செய்து தாம்பூலம் அளிக்க பாபம் கழிந்து புண்ணியம் கிடைக்கும்.

    “மனோஹர சங்கராந்தி” என்பது ஆனிமாதம் வருகிறது. இந்நேரம் சூரியன் மிதுனத்தில் நுழைகிறார். சூரிய பூஜை வெல்லம் நிவேதனத்துடன் செய்ய ஆசைகள் பூர்த்தியாகும்.

    பின் வரும் ஆடிமாதம் சூரியன் மிதுனத்திலிருந்து கடகத்திற்கு வருகிறார். இதை “அசோக சங்கராந்தி” என்கின்றனர், இதுவே விஸ்வத் புண்யகாலம்.

    சூரியன் சிம்ம ராசியில் நுழையும் போது ஆவணி மாதம் பிறக்கிறது. இதை “ரூப சங்கராந்தி” என்கின்றனர். இந்த நாளில் பொன் பாத்திரத்தில் நெய் வார்த்து பிராம்மணர்களுக்குத் தானம் செய்ய நோய்கள் அண்டாது.

    புரட்டாசி மாதம் சூரியன் கன்னி ராசிக்குள் நுழைகிறார். இதை “தேஜ சங்கராந்தி” என்கின்றனர். இன்று செந்நெல்அரிசியைப்பரப்பி கலசம் வைத்து கொழுக்கட்டை போன்ற நைவேத்தியங்கள் படைத்து வேதியர்களுக்கு போஜனம் அளிக்க வேண்டும்.

    சூரியன் துலா ராசியில் நுழையும் போது ஐப்பசி மாதம் பிறக்கிறது. இதன் பெயர் “ஆயுள் சங்கராந்தி”. ஒரு கும்பத்தில் பசும்பால் வெண்ணெய் நிரப்பி பூஜை செய்து தானம் கொடுக்க ஆயுள் அதிகரிக்கும்.

    விருச்சிக ராசியில் சூரியன் பிரவேசிக்க “சௌபாக்கிய சங்கராந்தி” பிறக்கிறது அதாவது கார்த்திகை மாதம். சூரியனுக்கு வஸ்திரம் சார்த்தி பூஜை செய்து வஸ்திரம் ,உப்பு தானம் செய்ய சகல சௌபாக்கியங்களும் கிட்டும்.

    மார்கழியில் சூரியன் தனுசு ராசியில் பிரவேசிக்கிறார். இதை “தனுஷ் சங்கராந்தி” என அழைக்கின்றனர். இந்த வேளையில் ஒரு தீர்த்த கலசம் எடுத்து பூஜை செய்து அன்ன தானம் செய்ய நினைத்த காரியங்களில் ஜெயம்.

    பொதுவாகவே இந்தியா முழுவதும் மகர சங்கராந்தி கொண்டாடப்படுகிறது, ஆனால் இடத்திற்கு இடம் சற்று மாறுபடுகிறது. வட இந்தியாவில் எள்ளுருண்டை, கடலை உருண்டை என்பது அதிகமாக விற்பனைக்கு வரும். மிகவும் குளிர் பாதிக்குமானதால் வெல்லம் கலந்த இந்த பணியாரம் உடலுக்கு சூட்டைக்கொடுத்து உதவும். தில்லி, பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேஷ் போன்ற இடங்களிலும் இது போன்று சிக்கி என்று சொல்லப்படும் வெல்ல மிட்டாய் அதிகமாகக்காணலாம். இதில் எள், நிலக்கடலை, பொட்டுக்கடலை அல்லது முந்திரிப்பருப்பு, பாதாம் எல்லாம் கொண்டு தயாரிக்கப்பட்டு வரும். குளிர் முடியும் வரை இதைப்பலர் வாங்குவார்கள். நமது போகிப்பண்டிகை அவர்களது “லோடிப் பண்டிகை”. லோதி என்றும் சொல்வார்கள். பெயர் தான் மாறி இருக்கிறதே தவிர மற்றபடி கோயில் போவது, மாலையில் எரிப்பது எல்லாம் ஒன்றுதான். ஆனால் லோடி பண்டிகையில் பழைய மரக்கிளைகள், உடைந்த பலகைகள், அட்டைக்கள் என்று சேர்த்து ஒரு எட்டுஅடி வரை உயர்ந்ததும் அதை எரிப்பார்கள்.

    சென்னையில் வீட்டிலிருக்கும் குப்பை, பிளாஸ்டிக் குப்பைகள் என்று எல்லாமே சேர்த்துவிடுவதைப் பார்த்திருக்கிறேன். ஏற்கனவே சுற்றுச்சூழல் பாதிப்பு நிறையவே இருக்கிறது. அத்தோடு இதுவும் சேர விசேஷம் தான்! பஞ்சாபி சர்தார்ஜி இதைக்கோலாகலமாகக் கொண்டாடுகிறார்கள் என்றால் அந்தக்குடும்பத்தில் ஆண் குழந்தை பிறந்திருக்கிறது என்று அர்த்தம். இந்தக்காலத்திலும் சர்தார்ஜி பஞ்சாபி குடும்பத்தில் ஆண் என்றால் ஸ்பெஷல்தான். ஆணுக்குப் பல சலுகைகளும் கிடைக்கும். அவர்கள் வீட்டில் பெண் குழந்தை பிறந்திருந்தால் சற்று சுமாராகத்தான் இந்த “லோடி” நடக்கும். பெயரளவுக்கு ஏதோ செய்து முடித்துவிடுவார்கள். பாப்கார்ன் என்ற சோளப்பொரியை இந்த அக்னியில் வீசி எறிவார்கள். அக்னியைச்சுற்றி பங்க்டா நடனம் மிகப்பிரமாதமாக நடப்பெறும். பார்க்கப்பார்க்க நம்மையும் குதிக்க வைக்கும்.

    பொங்கல் என்று எடுத்துக்கொண்டால் நம் முன் தோன்றுவது சூரியன்தான். கதிரவனின் மகிமைகளைச் சொல்லி மாளாது. நாம் தினமும் அவரைப்பார்க்கிறோம். இயற்கை அளிக்கும் தானியங்கள், காய்கனிகள் எல்லாமே சூரியனின் பலத்தினால் தான் விளைகின்றன. சூரியனைப்பற்றிப் பாடாத மகான்கள் இல்லை. இளங்கோவடிகள் தனது சிலப்பதிகாரப்படைப்பில் முதன் வரியாக சூரியனை ஆராதிக்கிறார், “ஞாயிறு போற்றும் ஞாயிறு போற்றுதும்” என்று ஆரம்பிக்கிறது.

    இதே போல் தமிழ்க்கடவுள் அழகன் எனும் முருகப்பெருமானுக்காக பாடிய பாடலில் திரு அருணகிரிநாதர் சீர்பாதவகுப்பு எனும் பாகத்தில் முதல் பாடலாக சூரியனை வர்ணிக்கிறார். சூரியனை அவர் ஏழுபரிரதத்து ரவி எனவும் சிவப்பு, பச்சை, ஊதா, நீலம் என்று ஏழு நிறக்குதிரைகள் பூட்டப்பட்ட தேரில் ஆதவன் வலம் வந்து அருள் பாலிக்கிறான் என்கிறார்.
    “உததியிடை கடவும்மர கதவருண குலதுரக
    உபலளித கனகரத சதகோடி சூரியர்கள்
    உதயம் என அதிகவித கலபகக மயிலின் மிசை
    யுகமுடிவின் இருள் அகல ஒரு ஜோதி வீசுவதும் ” என பாடல் வர்ணனை செய்கிறது.

    விஞ்ஞானத்திலும் சூரிய சக்தியை “ஸோலார் பவர்” என்றும் “எனர்ஜி” என்றும் விவரித்து அதைப்பற்றி உயர்வாகக்கூறப்பட்டிருக்கிறது.

    ஸ்ரீ ராமர் ராவணனை வெல்ல திரு அகத்திய முனிவர் அளித்த மந்திரம் தான் “ஆதித்ய ஹிருதயம்”. இதில் முழுவதும் ஆதவனை வணங்கும் ஸ்லோகங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. அதன் பலன்களும் தெரிய வருகிறது. கண்கள் கெட்டிருந்தால் இதைப்படிப்பது ஒரு நல்ல பரிகாரம்.

    சூரிய தேவருக்கு உரிய மற்றொரு மந்திரம் “காயத்ரி மந்திரம்”. உபநயனத்தில் இந்த காயத்ரி மந்திரம் தான் பிரதானம். சூரியனுக்கு உரிய மந்திரம் இந்த காயத்ரி மந்திரம். காயத்ரி மந்திரத்தில் சூரிய காயத்ரி, ருத்ர காயத்ரி, தேவி காயத்ரி, விஷ்ணு காயத்ரி என்றும் பிரிவுகளும் உண்டு. இதில் சூரிய காயத்ரிதான் மிகவும் முதன்மையானது.

    “ஓம் பூர்புவஸ்ஸுவ: தத் ஸவிதுவரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ யோன பிரசோயதாத்”

    இதையே தான் பாரதியாரும் தன் பாஞ்சாலி சபதத்தில் “செங்கதிர் தேவன், சிறந்த ஒளியினைத் தேர்கின்றோம். அவன் எங்கள் அறிவினைத் தூண்டி நடத்துக” என ஸ்ருதி மொழி காயத்ரியைச் சொல்கிறார்.

    யார் நம்முடைய அறிவைத் தூண்டுகிறாரோ அந்தச்சூரியபகவானின் மேலான ஒளியைத் தியானிப்போமாக, என்பதே காயத்ரியின் பொருளாகக் கொள்ளலாம். விஸ்வாமித்ர ரிஷி அருளியதாக இதைக்குறிப்பிடுகிறார்கள். விசுவாமித்திரர் க்ஷத்ரிய வம்சத்தில் பிறந்தாலும் விடாது தவம் செய்து தவவலிமைப்பெற்று பின் அந்தணர் ஆனார். மஹரிஷி பட்டமும் அவருக்கு உணடு. அவரே காயத்ரி மந்திரத்திற்கு ஆசாரியர். கீதையில் “மந்திரத்தில் நான் காயத்ரியாக இருக்கிறேன்” என்கிறான் கண்ணன், அத்தனைச்சிறப்புஇந்த காயத்ரிக்கு !

    சூரிய காயத்ரி
    “ஒம் பாஸ்கராய வித்மஹே மஹாத்யுதிகராய தீமஹி
    தன்னோ ஆதித்ய: ப்ரசோயதாத்”

    இதை 108 தடவை மகர சங்கராந்தி அன்று சொல்லி வழிபடுவதன் பலன் சொல்லி மிகையாகாது.

    தொல்காப்பியமும் சூரிய இந்திர வழிப்பாட்டைவர்ணிக்கிறது
    “கொடிநிலை கந்தழி வள்ளி என்ற
    வடு நீங்கு இறப்பின் முதலன மூன்றும்
    கடவுள் வாழ்த்தோடு கண்ணிய வருமே”

    மஹாகவி பாரதியாரும் சூரியனைப்பற்றி பாடியிருக்கிறார். காலை வேளையில் பாடும் ராகமான பூபாளத்தில் பாடல் மிகவும் அருமை.

    “பரிதியே பொருள் யாவிற்கும் முதலே,
    பானுவே பொன் செய் பேரொளித்திறனே,
    கருதி நின்னை வணங்கிட வந்தேன் ,
    கதிர் கொள் வாண்முகம் காட்டுதி சற்றே.

    வேதம் பாடிய சோதியைக் கண்டு,
    வேள்விப்பாடல்கள் பாடுதற்குற்றேன்.
    நாத வார் கடலினொலியோடு
    நற்ற மிழிச்சொல் இசையையுஞ் சேர்ப்பேன்.

    காதமாயிரம் ஓர் கணத்துள்ளே,
    சுருதியோடும் கதிரியைப் பாடி,
    ஆதவா நினை வாழ்த்திட வந்தேன்
    அணிகொள் வாண்முகம் காட்டுதி சற்றே.

    ஆதித்தாய் தந்தை நீவீர் உமக்கே
    ஆயிரந்தரம் அஞ்சலி செய்வேன். “

    அன்பர்கள் யாவருக்கும் என் இனிய பொங்கல் வாழ்த்துகள்,
    பொங்கும் மங்களம் எங்கும் தங்குக.

    Photo courtesy:
    http://indianastrology.co.in/977-makar-sankranti-2015-dates-kumbh-mela-2015-lohri-pongal-2015/

    Share
  • வந்தது போகி!

    -விசாலம்

    வந்ததுப் போகிப் பண்டிகை ,
    சூழ்ந்துக் கொண்டது ஒரேப் புகை
    வீட்டின் குப்பைகள் வெளியே வர,
    வெளிக் குப்பைகள் அதனுடன்  சேர
    தெருவுக்குத் தெருஅதுவும் எரிய,
    சுற்றுச் சூழ்நிலை வெகுவாய்க் கரிய,
    அளவிலா மாசில் மூச்சும்  அடைக்க,
    இது தேவையா என்று மனமும்  கேட்க
    யார் சொல்லுவார் பதில் ?
    இந்தச் சமூகத்தில் .
    உன் மனதில் குப்பை நிறைந்துள்ளதே
    அதில் அழுக்கும் சேர்ந்துள்ளதே
    கெட்ட எண்ணங்கள் சுழலுதே
    அன்பும் வாய்மையும் போனதே
    அதை முதலில் எரியப்பா,
    மனதைப் புனிதம் ஆக்கப்பா ,
    அதுதான்  போகித் திருநாளாம்
    அன்பு நிறைந்த மன நாளாம்!

     

    Share
  • சுகி ரங்கா ரங்கான்னு சொல்லு

    விசாலம்

    “தந்தையே இங்கே வாருங்கள். அழகான ஒன்றை நான் காட்டப்போகிறேன்.”

    “இதோ வருகிறேன் கோதை. அந்த அழகான ஒன்று எது?”

    “இதோ என் தோள் மேல் பாருங்கள்.  அழகான கிளி! நந்தவனத்தில் பறந்து என் தோளில்  வந்து அமர்ந்துவிட்டது.”

    “ஆமாம் மிக அழகான கிளிதான். தோளை அசக்கிவிடு  பறந்து போய்விடும்.”

    “இல்லை தந்தையே அது பறக்காமல் இருக்க வேண்டும் என்று நான் சிலைப்போல் அமர்ந்திருக்கிறேன். அன்பு தந்தையே இந்தக் கிளியை நானே வைத்துக்கொள்கிறேனே! ஆசையாக வளர்க்க விரும்புகிறேன்.”

    “சரி. அப்படியே செய். ஆனால் கூண்டில் அதைப்போட்டு அடைக்காதே. சுதந்திரமாக இருக்கட்டும்.”

    “சரி தந்தையே. இதற்கு நான் என்ன பெயர் சூட்டுவது?”

    “அம்மா கோதை நம் வீட்டிற்கு சுக பிரும்ம ரிஷியே வந்திருக்கிறார். அதனால் சுகர் என்றே பெயர் வை.”

    “தந்தையே அது என் பிரிய தோழியாக ஆக்கிவிடுவேன். அதனால் அதை சுகி என்று அழைக்கிறேன். “

    “சரி கோதை. நான் கோயிலுக்கு போக வேண்டும். அதற்கு பசிக்கப்போகிறது. ஏதாவது பழம் கொடு.”

    கோதையின் அன்பை நினைத்தபடியே அவளது தந்தை பெரியாழ்வார் அங்கிருந்து நகர்ந்தார்.

    “சுகி என் பட்டு சுகி. என்  பெயர்  கோதை. கோதைன்னு சொல்லு. அப்போ  இந்தப்பழம் தின்னக்கொடுப்பேன்.”

    “கோ……க்கோ……. கோதை”

    “ஆஹா அருமை. மிக சரியாக சொன்னாய். இந்தா இனிப்பான மாம்பழம்.”

    “இரு. சற்று பொறு. இன்னொரு சொல்  சொல்லட்டுமா? ரங்கா… ரங்கா… ரங்கா… சொல்லு பார்க்கலாம்.”

    “ர… ங்… கா… ரங்கா…”

    “ஆஹா என் காதில் தேன் வந்து பாயுது. யார் தெரியுமா அந்த  ரங்கா. நான் மணந்துக் கொள்ளப் போகும் மஹா புருஷர்.”

    சுகியும்  எல்லாம் புரிந்தது போல்  கீ கீ என்று சொல்லி ரசித்தது. மறு நாளிலிருந்து செல்லக்கிளிக்கு  பாடம் ஆரம்பமாகியது. பகவானின் நாமங்கள் அதன் வாயில் வர ஆரம்பித்தன. பேசும் பேச்சுக்கள்; புரிய ஆரம்பித்தன. நாளாக நாளாக  அரங்கனின் மேல் உள்ள காதல் அதிகமாகி தன் பிரேமையைத் தெரிவிக்க   குயிலை தூதாக அனுப்புகிறாள். மழை காற்று என்று பலவற்றை தூதாக அனுப்புகிறாள்.

    உணவு பிடிக்கவில்லை. தூக்கம் வரவில்லை. எப்பொழுதும் அவர் நினைவே. எங்கும் அவரே  வந்து வந்து மறைகிறார். அவரைப் பார்க்கமுடியாமல் வருந்தி உடல் மெலிந்து போகிறது. சோகப்பதுமையாக அமர்ந்திருக்கிறாள்.

    “கோதை கோதை ஏன் இத்தனை சோகம்?”

    “சுகி  பலரை தூது அனுப்பியும்  என்  ரங்கா  ஒரு செய்தியும் அனுப்பவில்லை. அதுதான்  கவலையாக இருக்கிறது.”

    “என்னை அனுப்பு கோதை. நான் அந்த ரங்கனை கையோடு அழைத்து வருகிறேன் .கவலைப்படாதே.”

    “உனக்கு அந்த ரங்கநாதன் எங்கு இருக்கிறார் என்று தெரியுமா? நீயும் என்னைப்போல் இந்த இடத்தைவிட்டு வேறு ஒரு இடத்திற்கும் போகவில்லை. அவர் இருக்கும் கோயில் மிகப் பெரியது. பிராகாரமே மிகப்பெரிய அளவில் உள்ளது.”

    “என்னால் போக முடியும் கோதை.”

    “உஹூம் நான் விடமாட்டேன். அங்கு உள்ளே செல்ல பலத்த காவல் உண்டு. கட்டுக்காவல்களை மீறி உள்ளே போனால் பிடிபடுவாய். பின் எப்படி தப்பித்து வருவாய்? நீ இல்லாமல் நான் எப்படி உயிர் வாழ்வேன்?”

    “அழாதே கோதை. நான் உன்னுடனே இருக்கிறேன்.”

    நாட்கள் ஓடின. கோதையின் சோகத்தைப் பார்க்க இயலாமல் அவள்  சோகத்தில் மயங்கியிருக்கையில் கிளி அங்கிருந்து பறந்து வந்தது.

    பல இடங்கள் தேடி திருவரங்கம் வந்து சேர்ந்தது. நாலு பக்கமும் கோபுரங்கள். நாலு பக்கங்களும் வாசல்கள்.எங்கு செல்வது? எப்படி செல்வது? சரி அந்த ரங்கநாதனை மனதில் நினைத்து நுழையலாம் என்று எண்ணி  மனதில் தோன்றிய வாசலில் நுழைந்தது. அங்கு கம்பீரமாக கருடாழ்வார் அமர்ந்திருந்தார். அவர் பக்ஷிகளுக்கெல்லாம் ராஜா. உடனே அவர் காலடியில் அப்படியே விழுந்தது.

    அங்கு சமர்ப்பணம் நிகழ்ந்தது. அப்படியே கோதையின் சோக  சித்திரத்தைச் சொல்லி அவள் நிலைமையை எடுத்துக்கூறியது.

    “வணங்குகிறேன் கருடாழ்வாரே. தயவு செய்து என் கோதைக்கு ஏதாவது வழி சொல்லுங்கள். எப்படியும் ஶ்ரீ ரங்கநாதனை அழைத்து வாருங்கள். அப்போதுதான் அவளது முகம் மலரும்.”

    “கவலையை விடு. உன் கோதை தேடுவதற்குள் ஊருக்குச்செல். நான் அரங்கனிடம் இதைப்பற்றி பேசி அவரை அனுப்பி வைக்கிறேன். அங்கு கோதையை மனம் தளராமல் இருக்கச்சொல். நம்பிக்கையுடன் காத்திருக்கச்சொல். இந்தா பழமும் பாலும். இதை உண்டுவிட்டு நல்ல தெம்புடன் வீடு செல்.”

    “கருடாழ்வாரே தங்கள் இந்த உதவிக்கு நான் எப்படி நன்றியைத் தெரிவிக்கபோகிறேன்? சரி போய் வருகிறேன்”    என்று சொல்லி பறந்து வந்தது சுகி.

    “கோதை,  ஏன் உணவு ஒன்றும் உண்ணாமல் வேதனையாக இருக்கிறாய்? நானும் நேற்றைய தினத்திலிருந்து பார்த்து வருகிறேன். என்னிடம் சொல்லு கோதை.”

    “தந்தையே! என் சுகி எங்கு போயிற்று? தாங்கள் கண்டீர்களா?  அதைக் காணாமல் தவிக்கிறேன். அதுதான் என் வேதனைக்குக் காரணம்.”

    “இதோ பார் உன் கிளிக்கு பூரண ஆயுசு. நான் சொல்லி முடிப்பதற்குள்  வந்துவிட்டது பார். இப்போது மகிழ்ச்சிதானே!”

    “அட வந்து விட்டாயா?  என்னிடம் சொல்லாமல் என்னை விட்டு எங்கே சென்றிருந்தாய்? என் செல்லமே! என்னை அழ வைத்துவிட்டாயே!”

    “கோதை நான் உனக்காகத்தான் போயிருந்தேன். பக்ஷிராஜா திரு கருடாழ்வாரைப் பார்த்து உங்கள் நிலைமையைச் சொல்லி விட்டு வந்திருக்கிறேன். காரியம் ஜெயம் தான்.”

    “சுகியே எனக்காக இத்தனை சிரமம்  எடுத்து எத்தனை பெரிய வேலையைச் செய்து விட்டு வந்திருக்கிறாய்? நான் உனக்கு என்ன கைமாறு செய்யப்போகிறேன்? கேள் உனக்கு என்ன  வேண்டும்?”

    “கோதை நீ எங்கே இருந்தாலும் நானும் உன்னுடனேயே இருக்க வேண்டும் இதுதான் என் ஆசை, வேண்டுகோள் எல்லாம்.”

    ஒரு வாரம் ஓடியது. அரங்கன் பலரது கனவில் வந்தார். கோதையின் தந்தையின் கனவிலும் வந்தார். பின்னர் பேசினார்.

    “கோதை நான் இருக்கும் திருவரங்கத்திற்கு வரட்டும். நான் அவள் வர முத்துச்சிவிகை  அனுப்புகிறேன். நான் அவளை மணந்துகொள்கிறேன்.”

    சொன்னபடியே முத்துச்சிவிகை வந்தது. முத்துச்சிவிகையில் ஆண்டாள்  மணமகளாக,  அலங்காரமாக  தலையில் அழகிய முத்துக்களால் அலங்கரிக்கப்பட்ட  கொண்டையுடன்    பட்டுப்பீதாம்பரம் உடுத்திக்கொண்டு  பவனி வந்தாள். அவளுடன்  சுகியும் அமர்ந்து வந்தது. திருவரங்கம் கோயிலும் வந்தது. ஆண்டாள் சிவிகையிலிருந்து  எழுந்து வந்தாள். அவளது வாய் ரங்கா ரங்கா என அழைத்தபடி இருந்தது.அப்படியே உள்ளே கர்ப்பக்கிரகத்திற்குள் சென்றாள். கருவறையில் நுழைந்தாள். பின் அவள் வெளியிலே வரவில்லை.

    கொஞ்சம் நேரம் பார்த்தபடி இருந்த சுகி தன் கோதையைக் காணாமல் தேடியது. பின் அவளைக் காணாமல்  கதறி அழுதது. அங்கேயே வட்டவட்டமாகச் சுற்றியது . கோதை வரவில்லை. அங்கிருந்தவர்கள் எல்லோரும் இந்த அதிசயத்தைக்கண்டு வியந்துப்போனார்கள்.

    கோதை அரங்கநாதனுடன் ஐக்கியமாகிவிட்டாள் என்று எல்லோருக்கும் தெரிந்தது. ஆனால் இந்த சுகிக்கு இது தெரியவில்லை. அங்கேயே சுற்றிச்சுற்றி வந்து மயங்கி விழுந்தது. கோயில் காப்பாளர்கள் அந்தக்கிளியை எடுத்து ஒரு கூண்டில் வைத்தார்கள். உள்ளே சில பழங்களைப்போட்டுவிட்டு ஒரு மண்டபத்தில் மேற்கூறையில் தொங்க விட்டனர். கிளி மயக்கம் தெளிந்தது. “கோதை நீ எங்கே?

    நீ எங்கே என்னைவிட்டுவிட்டு சென்று விட்டாய்?” என்று அழுதது. பின் “ரங்கா ரங்கா! என்  கோதை எங்கே? என்று சொல்லியபடியே இருந்தது. உணவைத் தொடவே இல்லை. பின் ரங்கா என்றபடியே உயிரை விட்டது. ரங்கநாதன் அதையும் தன்னிடம்  ஐக்கியமாக்கிக்கொண்டார். அங்கு சென்ற சுகி ஆண்டாளுடன் சேர்ந்தது. இன்றும் கிளி இருந்த அந்த இடம் “கிளி  மண்டபம்” என்றே அழைக்கப்படுகிறது.

    ஸ்ரீவில்லிப்புத்தூரில்  இன்றும் ஆண்டாள், ரங்கமன்னாரும் எழுந்தருளி இருக்க  தன்னை அரங்க நாதனுடன் சேர்த்துவைத்த  கருடாழ்வாருக்கு சம ஆசனம் கொடுத்திருக்கிறாள் கோதை பிராட்டி. கிளிக்கு எங்கே இடம் தெரியுமா? முதன் முதலில் அந்தக் கிளி எங்கே வந்து அமர்ந்ததோ அந்தத் தோளின் மீதே தன் உயிர்த்தோழியான சுகிக்கு இடம் கொடுத்து தன்னிடம் எப்போதும் சுகி இருக்கும்படி அமைத்துக்கொண்டாள். இப்போதும் ஒரு இனத்தவர் ஆண்டாளுக்கு திருமாலைக் கைங்கரியத்தில் பச்சை இலைகள் பூக்கள் கொண்டு அழகிய கிளியைச்செய்து அதை ஆண்டாளுக்கு சமர்ப்பிக்கின்றனர். பின் மறுநாள் மாலைகள் வடபத்ரசாயிக்கு கோயிலுக்குச்சென்று அங்கு பெருமாளுக்கு அணிவிக்கப்படுகின்றன. அப்போது இந்தக் கிளியும் அங்கு சாற்றப்படுகிறது. பின் அதை அன்பளிப்பாக ஒரு சில பக்தர்களுக்கு  அளிக்கப்படுகிறது. இந்தக்கிளி வாடாமல் பல நாட்கள் இருக்கிறதாம். ஸ்ரீவில்லிப்புத்தூரில் நடக்கும் விவாகத்தில் ஆண்டாள் மாலையும், இலைக்கிளியும் நிச்சயம் பங்கு  பெறும்.

    Share
  • நாகர்கள் 3

    விசாலம்

    “நாகரின் அகாமி பிரிவில் இருக்கும் ஆண்மகனின்  திருமணம் நிச்சயமானவுடன் பெண்வீட்டில் விருந்து தடபுடலாக இருக்குமாம். அன்று மாலை மணமகன் வீட்டிற்கு பெண் செல்வாள். அங்கு படுத்தாலும் தனித்தனியான அறையில் தான் இருப்பார்கள். மூன்று நாட்கள் இது போல் கழியும் மறு நாள் அவர்கள் வயலுக்கு சேர்ந்து போக வேண்டும். இதே போல் ஒரு பத்து நாட்கள் போகும். பின் அவர்களது பூஜாரி அவர்கள் விருப்பத்தைக்கேட்டு அவர்கள் சேர அனுமதிப்பார். ஆனால் எங்களது இன்னொரு பிரிவான ஆவோஸில் இது கொஞ்சம் மாறுபடும். நிச்சயதார்த்தம் பிறகு அவர்கள் இருபது நாட்கள் வியாபாரத்திற்குச் செல்ல வேண்டும். அதில் நிறைய லாபம் கிடைத்தால் திருமணம் நடக்கும். லாப நஷ்டமில்லாமல் இருந்தாலும் பரவாயில்லை. ஆனால் நஷ்டம்  ஆனால் திருமணம் முறிந்து விடும்”

    “அடப்பாவமே. இப்படியும் ஒரு பரீட்சையா?”

    “ஆமாம். ஆனால் ஆரம்பத்திலேயே எங்களுக்கு  பொருட்கள் தயாரித்தல் அதை விற்று சம்பாதித்தல் போன்றவைகள் சொல்லிக்கொடுத்து விடுவதால்  இது போல் பரிக்ஷையை சமாளிக்க முடிகிறது.”

    “காலம் மாறி வருவதால் உங்கள் எண்ணங்களிலும் மாற்றம் தெரிகிறதா?”

    “ஆம் நிறைய. இப்போதெல்லாம் அங்காமி பிரிவுகளில்  காதலிப்பது  சகஜமாகி வருகிறது. பெண்கள் காதலிக்கலாம், பழகலாம்; ஆனால் வரம்புக்கு மீறி போகக்கூடாது. இதற்கென்று காவல் காக்க சிலர் இருப்பார்கள். ஏனென்றால் பெண் திருமணம் போது பெண்ணிற்கு  பணம் சொத்து அதிகமாக வரும். ஆனால் அவள் பெயர் கெட்டுப்போனால் பாதி பணம் கூட வராது. இது போன்ற நிலைமை ஏற்பட்டால் பெண்வீட்டார்  அந்த  தவறுக்கு  அதிக பணம் கொடுக்க வேண்டி வரும்.”

    “உங்களில் சில சிறு வயது பெண்கள் மொட்டை அடித்துக்கொள்ள எதாவது காரணம் உண்டா ரீமா?’

    “ஆம் இருக்கிறது.  பெண்கள் இங்கே நல்ல சிவப்பாக அழகாக இருப்பார்கள். அவர்களது அடர்த்தியான முடி அவரது அழகை மேலும் கூட்டும். அதனால் அவர்களது கல்யாண வயது வரை அவர்களது முடியை எடுத்துவிடுகிறார்கள். இதனால்  ஆண்களுடன் சேரும்  வாய்ப்பு மிகவும் குறைவு என்று  குடும்பத்தார் எண்ணுகின்றனர். கோன்யாக் என்ற பிரிவு மட்டும் இதில் விதிவிலக்கு.  பல சலுகைகள் அவர்களுக்கு உண்டு.  அவர்கள் திருமணம் முன்  காதலும் செய்யலாம். சேர்ந்தும் இருக்கலாம்.”

    “ரொம்ப நன்றி  ரீமா. உன்னிடமிருந்து பல விஷயங்கள் தெரிந்துக்கொண்டேன்.  கலாசாரம் வித்தியாசமானாலும்  எல்லா

     ஜாதிகளிலும் ஒன்று பொதுவாக பார்க்கிறேன் அதுதான் ஆண் ஆதிக்கம். பெண் என்றால் உழைக்க வேண்டும், சுதந்திரத்தை விட்டு

    தன் குடும்பத்திற்காகவே வாழ வேண்டும். தாயாக வேண்டும்.

    பின் குழந்தைகளுக்காகவும் வாழ்ந்து  கடைசியில் மடிய வேண்டும்

    என்ற நிலைமை தான்.”

    “இல்லை மேடம். கொஞ்ச வருடங்களாக எங்கள் ஜாதியிலும் நிறைய மாற்றம் வந்திருக்கிறது. நாகரிகம் வலுத்திருக்கிறது. பெரியவர்களுக்கும் இளைஞர்களுக்கும் இடையே நிறைய இடைவெளி ஏற்பட்டிருக்கிறது . கூட்டுக்குடும்பம் பிரிந்து, தனிக்குடும்பமாக ஆகிவருகிறது. நிறைய பேர் படிக்கவும் ஆரம்பித்திருக்கின்றனர். பேஷனில் ஆர்வம் காட்டுகின்றனர்.”

    “ஆம். நானும் இதைப்பார்த்து வருகிறேன். பொதுவாகவே இந்தக்கால இளைஞர்கள் மனைவிக்கு சம உரிமையும்  கொடுத்து  வீட்டு வேலைகளிலும் உதவுகின்றனர். இது எல்லா நகரங்களிலும்  பார்க்க முடிகிறது. மேலும் பெண்கள் எல்லா துறைகளிலும் மேன்மையாக உழைத்து நல்ல பேர் எடுக்கின்றனர். இதைப்பார்க்க மகிழ்ச்சியாகவே இருக்கிறது. எத்தனைப்பிரிவு இருந்தாலும் கலாச்சாரம் எத்தனை வேறுபட்டாலும் நாம் எல்லோரும் ஒரு தாய்க்கு பிறந்த குழந்தைகள் தான். நாம் பாரத வாசி. நாம் இந்தியன் என்ற உணர்வு வந்தால் நம்  நாடு எங்கேயோ போய்விடும். நன்றி ரீமா.”

    ரீமா கை அசைத்தபடியே விடைப்பெற்றுக்கொண்டாள்.

    Share
  • நாகர்கள் 2

    விசாலம்

    ரீமா தான் ஒரு வாரம் லீவு கேட்டபடி தன் ஊர் சென்றாள். பின் அவள் திரும்பி வர இரண்டு வாரங்கள் ஆகிவிட்டன.  மறு நாள் அவள் வந்தாள். அவள் தாமதமாக வந்ததற்கான காரணம் கேட்டேன். நாகாலாந்தில்    எல்லா வேலைகளும் பெண்களே செய்யும் நிலைமை. ஆகையினால் வருவதில் தாமதமாகிவிட்டது என்றாள்.

    “ஏன் ரீமா? அப்படி என்னென்ன  வேலைகள் நீங்கள் செய்யவேண்டும்?”

    “காலையில் எழுந்ததும் தண்ணீர் கொண்டு வர குடங்களுடன் வெகு தூரம் நடக்க வேண்டும். காட்டுப்பக்கம் போய் மரங்களிலிருந்து சுள்ளிகள், மரக்கட்டைகள் வெட்டி எடுத்து தலையில் சுமந்து வரவேண்டும். வீடு வந்தவுடன் எல்லோருக்கும் உணவு தயாரிக்க வேண்டும். பின் கள் காய்ச்ச வேண்டும். பின் நிலத்திற்குப் போய்  விதை விதைத்தல், களையெடுத்தல் என்ற பல வேலை.  பின் வீட்டிற்குத் திரும்பியவுடன்  ஆடை நெய்ய வேண்டும். இப்படி உழைப்பைத்தவிர வேறு ஒன்றும் எங்கள் வாழ்க்கையில் கண்டதில்லை.”

    “நீங்கள் கழுத்து முழுவதும் பல பாசி மணிகள், குண்டு குண்டு மணிகள் அணிகிறீர்கள். தவிர உங்கள் நாட்டியத்தில் பலர் மிருகத்தின் தலைப்பகுதியை அணிகிறார்களே!”

    “ஆமாம்  மேடம்  எங்கள் ஆண்கள் மிருக வேட்டைக்குச் சென்று  அதன் தலையை கொய்து எடுத்து வரும் வழக்கம் உண்டு. இதனால் அவர்களது  வீரம் வெளிப்படுகிறது. தவிர அவர்கள்  இதை மிக கௌரவமாகப் பார்க்கிறார்கள். ஒவ்வொரு வீட்டிலும் இது போல் மிருகத்தின் தலை வீட்டின் முகப்பில் அலங்கரிக்கப்பட்டு வரவேற்கும்.  காட்டெருமை, கரடி, மான், புலி என்று பல மிருகங்களின் தலைகள் வீட்டு அறையில் மாட்டப்பட்டிருக்கும். அப்படி மிருகத்தின் தலையைத் துண்டிக்காத ஆணை  எங்கள் ஜாதியில் பசு என்றும்  பெண்ணென்றும் கேலி செய்வார்கள். ஆனால் இப்போதெல்லாம் இது போன்ற வேட்டை தடுக்கப்பட்டிருக்கிறது.”

    ” ரீமா  உன்னுடைய திருமணம் காதல் திருமணமா? உங்கள் திருமணம் பற்றி தெரிந்துக்கொள்ள ஆவலாக  உள்ளேன்.”

    ” எங்கள்  பிரிவில் ஆண் ஆதிக்கம் அதிகம், பெண்களுக்கு சுதந்திரம் கிடையாது. அவள் தாயாகி, குழந்தைகள் சுமந்து, உணவு தயாரித்து

    தன் சம்பாத்தியத்திற்கு உல்லன்  ஷால் அல்லது துணி நெய்து  உழைக்க வேண்டும். எந்த தீர்மானம் எடுக்க வேண்டுமென்றாலும் அதை ஆண்மகன் தான் எடுப்பான். பெண்களுக்கு அதில் உரிமை இல்லை. எங்கள் ஜாதியில் பல பிரிவுகள் உண்டு. ஒரு பிரிவிலேயே இருக்கும் ஒரு  பெண்ணை  அந்தப்பிரிவில் இருக்கும் ஆண் மணம் புரியக்கூடாது.”

    “ஆமாம் இது எங்களுக்கும் உண்டு. ஒரே கோத்திரத்தில்  திருமணம் செய்ய மாட்டார்கள். அவர்கள் உறவு சகோதர சகோதரி ஆகும்.”

    ” எங்கள் ஜாதியில்  வயது வந்த  பிள்ளைகள், பெண்களை  ஊர் எல்லைப்பகுதியில் எழும்பி இருக்கும் ஒரு கட்டிடத்தில் அனுப்பிவிடுவார்கள். இந்த இடத்தின் பெயர் “மொருங்க்”.

    நாகா கலாசாரத்தில் இந்த வயது வருபவர்கள் இங்கு வந்து  பல பெரியவர்களிடமிருந்து  இந்த கலாசாரத்தைக் கற்க வேண்டும். அவர்களது சடங்குகள், நாட்டியங்கள், கலைகள் எல்லாம்  நாட்டுப்பாடல் மூலமாகவும் பிரசங்க மூலமாகவும் அவர்களுக்குக் கற்றுத்தரப்படும். அங்கு சிற்பக்கலை, மரவேலை, நெசவு எல்லாமே படிக்க வேண்டும். தவிர எதாவது முக்கிய சமாசாரமாக  இறப்பு, பிறப்பு,  பூஜை, அபாயம் போன்ற செய்திகளை .    பெரிய பேரிகை அடித்து அந்தக்கிராமம் முழுவதும் சொல்லி வரவேண்டும். பெண்களுக்கென்று தனி இடம் ஒதுக்கப்படும்.”

    “அது சரி. காதலைப் பற்றி சொல்லவே இல்லையே!”

    “அங்காமி என்ற பிரிவில் ஒரு ஆண் ஒரு பெண்ணைக் காதலிக்க ஆரம்பித்தால் அதை அவனது தந்தையிடம் சொல்ல வேண்டும். தந்தை தன் நண்பனை அனுப்பி பெண் வீட்டு சம்மதத்தைக் கேட்பார். பெண் வீட்டில் சம்மதித்தால் தந்தை ஒரு நிகழ்ச்சியை நடத்துவார். அது  உங்களுக்கு மூட நம்பிக்கையாகக்கூட தோன்றும்.”

    “அப்படி என்ன நிகழ்ச்சி! கேட்க  ரொம்ப ஆர்வமாக இருக்கிறதே!”

    “ஒரு கோழியைக்கொண்டு வந்து நல்ல நேரம் பார்த்து அதன் குரல்வளையை நெரிப்பார். அப்போது அதன் கால்கள் துடித்து சில திசைகளில் குறுக்க முறுக்கிக்கொள்ளும். அது சுபமான  முறுக்காக இருந்தால் அந்தத் திருமணம் நிச்சயிக்கப்படும். ‘

    “அப்பப்பா  என்ன கஷ்டம் ஒரு காதலுக்கு! ஒரு பறவை பலியா?  பெண்ணிடம் சம்மதம் கேட்கமாட்டார்களா? “

    “பெண்ணும் இந்த  வரனைத் ஏற்றுக்கொள்ளாமல் போகலாம். எப்படி என்றால் அவள் மூன்று நாட்களுக்குள்  கெட்ட கனவு கண்டால் அதைக்காரணம் காட்டி இந்த திருமணத்தை நிறுத்தமுடியும்.”

    “அப்பாடி  நல்ல வேளை! கொஞ்சமாவது சுதந்திரம் கொடுத்திருக்கிறார்களே  அதுவரை  மகிழ்ச்சிதான்”  என்று சிரித்தபடி அவளைப் பார்த்தேன். அவளும் மிகவும் வெகுளியாக சிரித்தாள். பின் தொடர்ந்தாள்,

    “எங்கள் ஜாதியில் கோன்யாக் என்ற பிரிவில் இருப்பவர்கள் அரச பதவி போல் முக்கிய ஸ்தானத்தில் இருப்பார்கள். அவர்கள் மட்டும் தங்கள் பிரிவிலேயே பெண் எடுக்கலாம். அதாவது ராணி போல் வரும் பதவியில் அதே வம்சம் தொடர்ந்து வரும். இந்த சலுகை  இந்த  கோன்யாக் என்ற பிரிவுக்கு மட்டுமே உண்டு.”

    “இது எதனால் ஏற்பட்டது ரீமா?”

    “ஓ! அதுவா அதற்கும் ஒரு கதை உண்டு. எங்கள் நாட்டு முதல் மனிதன் நிக்தோகா. இவன் திருமணம் செய்துக்கொண்டான். அவனுக்கு ஆறு மகன்கள் பிறந்தன. ஆனால் முதல் மகனுக்கு மட்டும் மணமகள் கிடைத்தாள். மற்ற  சகோதரர்கள் தங்களுக்கும் திருமணம் ஆகும் என்று பொறுத்திருந்தும் ஆகவில்லை. இதனால் வீட்டில் சண்டை வந்து அவர்கள் வீட்டை விட்டுப்போய் அன்னியத்தில் திருமணம் செய்துக்கொண்டனர். இதனால் தான் இந்த வழக்கம் வந்ததாம்.”

    “எங்களது போல் உங்களுக்கும்  எல்லாவற்றுக்கும் ஒரு கதை

     இருக்கிறது. சரி மேலே சொல்லு. திருமணம் எப்படி நடக்கும் ?”

    அவள் மேலே தொடர்ந்தாள்…

    Share
  • நாகர்கள் 1

    விசாலம்

    என் பள்ளியில் வருடாந்திர பரிசு விழாவின் போது ஓரு வித்தியாசமான நடனம் வைக்க எண்ணி மூங்கில் நடனம்  ஒன்றைத்தயாரிக்க முயற்சித்தோம்  {bamboo dance}. இதற்காக நாகாலாந்து பெண்மணியை அழைத்தோம். அவள் தில்லியில் இருந்ததால் எங்கள் பள்ளிக்கு வர ஒப்புத்துக்கொண்டு நடனம் சொல்லிக்கொடுக்கவும் ஆரம்பித்தாள். அவளிடம் பழகியதில் நாகாலாந்தின் மக்கள், கலாச்சாரம் பற்றி பல விஷயங்கள் தெரிந்துக்கொண்டேன்.  அவள் எனக்கு நல்ல தோழியும் ஆனாள். அவள் சொன்னதில் சில பகுதிகளை இங்கு எழுதுகிறேன். அவளது பெயர் என் வாயில் நுழையவில்லை. ஆதலால் அவளை ரீமா என்று பெயரிட்டு அழைத்தேன்.

    “ரீமா, உங்கள் இடத்தில்  எது மிகவும் பெயர் போன இடம்? எங்கு எல்லோரும் வருகை தருகிறார்கள்?”

    “அதுவா … முதலில் கோஹிமாவைச் சொல்லலாம்.”

    “உங்களைப் பார்க்க கொஞ்சம் சீனா, கொஞ்சம் ஜப்பான்  மக்களின் சாயல் தெரிகிறதே. “

    “இல்லை இல்லை. நாங்களும் பாரதத்தைச் சேர்ந்தவர்கள் தான் என்று எங்கள் முன்னோர்கள் சொல்லி கேள்விபட்டிருக்கிறேன். இந்தியர்களைப் போலவே  எங்களுக்கும் மந்திரம், பூஜை,  இசை எல்லாம் உண்டு. நாட்டுப்பாடல்கள் அதிகமாக பாடுவோம். எங்கள் ஊரில் எங்கள் முன்னோர்கள் இருந்த இடத்தில் 12 அடி நீளம் 4 அடி அகலம் கொண்ட ஒரு கல் வைக்கப்பட்டிருக்கிறது. இதைப் பற்றி கேள்விப்பட்டதில்லையா மேடம்?”

    “இல்லையே! ஏன் அந்தக் கல்லில் என்ன விசேஷம்?”

    “கேஸாகேனோமா என்ற குடியிருப்பு பகுதியில் இந்தக் கல்லைக் காணலாம். இந்தக் கல்லுக்கு கிடைக்கும் மரியாதை அபாரம். மக்கள் தினசரி இங்கு வந்து பயபக்தியுடன் கண்களை மூடியபடி தியானித்து பின் காணிக்கை செலுத்துவர். வீட்டிற்கு வரும் விருந்தாளிகளையும் இங்கு அழைத்து வந்து அவருக்காக ஆசிகள் வேண்டி மந்திரங்களை படிப்பார்கள்.”

    “ரீமா,  இது ரொம்பவே இன்டெரெஸ்டிங், இன்னும் இந்தக் கல்லைப் பற்றி  சொல்லு.”

    “எங்கள் முன்னோர்கள் காலத்தில் இந்தக்கல்லுக்கு ஒரு மேஜிக் சக்தி இருந்ததாம். காலையில் இந்தக்கல்லின் மேல் நெற்மணிகளைப் பரப்ப  மாலையில் அது இரண்டு பங்காக வளர்ந்து விடுமாம். இந்தக்கல்லை வைத்தவர்கள் இதைப்பயன்படுத்திக்கொண்டார்களாம்.  அந்தக் கதையைச் சொல்லட்டுமா?”

    “ஆஹா! இதைத்தான்  நான் எதிர்ப்பார்த்தேன். சொல்லு.”

    “நாகர்களின் பாரம்பரிய வரலாறு இது. அவர்களின்  ஆதி முன்னோருக்கு மூன்று பிள்ளைகள் இருந்தனர். அவர்களுக்கு திருமணம் ஆனது  குடும்பத்தைக் காப்பாற்ற  விவசாயம் கைக்கொடுத்தது. அப்போதுதான் ஒரு கல் அவர்கள் கண்ணில் பட்டது. அந்தக் கல்லில் மந்திரம் உருவேற்றப்பட்டதால் அதில் ஒரு மாதிரி தெய்வ சக்தி இருந்தது . இதை அந்தப் பிள்ளைகள் கண்டுபிடித்தனர். ஒரு நாள் அந்தக் கல்லின் மேல் காலையில் தானியங்களைக் காய வைக்க  மாலையில் அது இரண்டு மடங்கு அதிகமாகி இருந்தது. இதைக் கண்டப்பின் தினமும் அந்த மூன்று சகோதரரும் போட்டிப்போட்டுக்கொண்டு  அந்தக் கல்லின் மீது தானியங்களைப் பரப்ப ஆரம்பித்தார்கள். இதனால் அவர்களுக்குள் சண்டை வராமல் இருக்க அந்த மூன்று பிள்ளைகளும் ஒரு அட்டவணைப் போல் போட்டுக்கொண்டு அதன் பிரகாரம் அவரவர்கள் முறை வரும் போது தானியங்களைப் பரப்பி அதை இரட்டிப்பாக ஆக்கிக்கொண்டனர் ஆனாலும் பேராசை யாரை விட்டது! தானியங்களுக்கு பதிலாக செல்வத்தை வைக்க ஆரம்பித்தனர். அதுவும் இரு மடங்கு ஆனது. அவர்கள் நடுவே போட்டியும் சண்டையும் வந்தது. அவர்களது தந்தை இதைப் பார்த்து நொந்துப் போனார். பின்னர் அந்தக் கல்லினால் தானே  ஒற்றுமை குறைந்து சண்டை வருகிறது என்று அந்தக்கல்லை நெருப்பில் போட்டார். இதனால் அந்தக் கல்லில் விரிசல் உண்டானது. அந்தக் கல்லின் ஒளியும் குறைந்தது. அந்தக் கல்லில் இருந்த ஆத்மா சுவர்க்கத்திற்கு போய்விட்டது. கல்லுக்கு இருந்த மேஜிக் சக்தியும் போய்விட்டது.”

    “அப்புறம் என்ன ஆச்சு? அந்தப் பிள்ளைகள் என்ன செய்தார்கள்?”

    “அவர்கள் மூன்று திசைகளில் தனித்தனியே சென்று பிரிந்து விட்டனர். அவர்கள் வழி வந்த மலை வாசிகளே அங்காமா, சேமா, லோத்தா போன்றவர்கள். அவர்கள் பலவேறு நாக மக்களை உண்டுபண்ணினர். ஒரு நாள் அந்தக்கல்லில் திரும்ப  தெய்வீக அம்சம் திரும்பும் என்ற நம்பிக்கை வைத்திருக்கின்றனர்  அந்த  மக்கள்.”

    “வந்தால் நன்றாக இருக்கும் இல்லயா ரீமா? நானும் அதில் என் ரூபாய் நோட்டுக்களை அடுக்கவா?” என்று சொல்லி சிரித்தேன்.

    “இன்னும் கேள். இதைத் தவிர அந்தக் கிராமத்தில் ஒரு ஸ்பெஷல் மரம் இருக்கிறது. அங்கு பறவைகளுக்கு ஆண்டு விழா நடைப்பெறும் இது எப்படி இருக்கு?”

    “அட  பறவைகளுக்கு ஆண்டு விழாவா? கேட்கவே ஜாலியாக இருக்கிறதே!”

    “ஆம் அந்த மரத்தில் ஆயிரக்கணக்கான  பறவைகள் வாழ்ந்து வருகின்றன.  டிசம்பர் மாதம் இந்த விழா நடக்கும். நாகர்களின் யாராவது ஒருவன்  தான் ஒரு மகானாக மிகச்சிறந்தவனாக ஆக வேண்டும் என்றால் அவன் அந்த மரத்திலிருந்து ஒரு பறவை பிடித்து வரவேண்டும். அப்படி செய்தால்தான் அவனுக்கு வழிபாடு செய்ய அதிகாரம் கிடைக்கும் அந்த அதிகாரமும் மிகுந்த மரியாதையுடன் ஒரு சடங்கு போல் நடத்தப்படும். எங்களது  விசேஷ  நாட்களில்  எங்கள்  அருகில் குடியிருக்கும் நண்பர்கள் எல்லோருக்கும் விருந்து வைக்கும் பழக்கம் எங்களிடம் உண்டு.”

    “ஆமாம் ரீமா  நாங்களும் முக்கிய பண்டிகையின் போது பல உறவினர்கள் கூடி கொண்டாடி மகிழ்வோம். ஆனால் இந்த வழக்கம் கிராமத்தில்தான் இன்னும் நிலைத்து நிற்கிறது. நகரத்தில் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து வருகிறது .”

    “எங்கள் கிராமத்தவருக்கு விருந்து வைத்தப்பின் அது ஒரு  ஸ்பெஷல் தினம் என்பதை அறிவிக்க ஒரு கல்லை அங்கே நிறுத்தப்படுகிறது. இந்தக்கல் நாட்டும் பழக்கம் இப்போதும் தொடருகிறது. விருந்தோம்பல் என்பது எங்களுக்கு மிக முக்கியம் . நாங்கள் எந்த அன்னியரையும் மனம் திறந்து வரவேற்போம். பணிவிடையும் செய்வோம்.”

    “ஆரியர்களுக்கும் நாகர்களுக்கும் வெகுகாலத்திற்கு முன்பாகவே  நெருங்கிய  தொடர்ப்பு  இருந்திருக்க வேண்டும் ஆரியர்கள் போலவே  நீங்களும்  திருவிழாக்களை மந்திரம். இசை, நாட்டுப்படல்களுடன் கொண்டாடுகிறீர்கள். நாங்கள் சில இடங்களில் சுயம்புவாக வரும் கல்லில் சிவலிங்கத்தையும், மாரியம்மனையும், பிள்ளையாரையும், அனுமாரையும் காண்கிறோம். அங்கு பூஜையும் செய்கிறோம். நீங்களும் மந்திரத்துடன் பிரதிஷ்டை செய்யும்  கல்லை தெய்வரூபமாக பார்க்கிறீர்கள். எல்லா இடங்களிலும் செயல்படும் விதம் வித்தியாசமாக இருக்கிறதே தவிர நம்பிக்கை மூலதனமாக இருக்கிறது இல்லையா?”

    “ஆம் எல்லாமே நம்பிக்கையின் மேல் தான்  நடக்கிறது.  முன்பு ஜப்பானிய போரில்  ஜப்பானிய படை கோஹிமாவிலும் வந்தது பாரத சிப்பாய்களில் இருந்த வீர நாகர்கள்  அணி திரண்டு  அவர்களை மேலே வரமுடியாமல் செய்து விட்டனர். அவர்களும் எப்படியாவது முன்னேறி விடவேண்டும் என்று பிரயத்தனம் செய்தனர். ஆனால்  நாகர்கள்  அவர்களைத் தடுத்து நிறுத்திவிட்டனர். அந்த மகிழ்ச்சியில் வெகு தூரத்திலிருந்து ஒரு கல்லை எடுத்து வந்தனர் அதை மணிப்பூர். பீமாபூர் சந்திக்கும் நாற்சந்திக்கு இடையே நிறுவப்பட்டு இருக்கிறது. அதில் ஒரு வாசகமும் எழுதப்பட்டிருக்கிறது,

    “நீங்கள் உங்கள் வீடு செல்லுங்கள். நாங்கள் உங்களுக்கு அடிக்கடி சொல்வது இதுவே. நீங்கள் நாளை உயிரோடு வாழ நாங்கள் இன்றே விடுதலை வழங்குகிறோம்.”

    Share
  • கைத்தடி…

    -விசாலம்

    (ஒரு திருமணத்தில் மாப்பிள்ளை காசி யாத்திரை போகும் காட்சி. கையில் அவர் ஒரு தடி வைத்துக் கொள்ள வேண்டும். அதை எங்கேயோ தவறி வைத்துவிட்டு அதைத் தேட பெண்வீட்டாருக்கு ஒரே டென்சன். இதைப் பார்த்த சம்பவத்தால் இந்தக் கவிதை  பிறந்தது.)

    கைத்தடி எங்கே ?
    கைத்தடி எங்கே ?
    ஒரே பரபரப்பு!

    திருமண வீட்டில்                                                   walking_stick
    மாப்பிள்ளை நின்றார்,
    காசி யாத்திரைக் கோலம்
    கையில் ஒரு விசிறி!

    பத்து நிமிடம் போனது…
    “எதற்குக் கம்பும் விசிறியும்?
    என்ன சம்பிரதாயமோ?”
    நக்கல் அடித்தாள் ஒருத்தி!

    அப்பா, கைத்தடி கிடைத்தது
    சங்கு சக்கரம் போல்
    மாப்பிள்ளைக் கைகளில்!
    பொய்க் கோபத்தில்
    மாப்பிள்ளை புறப்பட்டார்

    நாலு அடிகள் முன் செல்ல
    மாமனார் பின் ஓடிச் செல்ல
    ஒருவர் அவர் காதைக் கடிக்க
    புன்னகையுடன் முகம் மலர
    திரும்பி வந்தார் மாபிள்ளை! 

    “டும் டும் டும்” மேளம் கொட்ட
    மாலைகளும் மாற்றப்பட
    ஊஞ்சலும் ஆடியது
    கைத்தடியின் பாகம் முடிந்தது!

    கிரஹப்பிரவேசம்
    கைத்தடிக்கு இடம் தேட
    மாமா அதை பீரோமேல் வீச,
    அமர்ந்தது கைத்தடி!

    வருடங்கள் ஓடின…
    கேட்பாரற்று பீரோ மேல்
    தூசிப் பிடித்துக் கிடந்தது,
    ஐம்பது வருடங்கள் ஓடத்
    தனிமையானார் மாப்பிள்ளை…
    தேவைப்பட்டது கைத்தடி!
    கிழவர் கைத்தடி ஊன்றினார்
    அதுவே ஊன்றுகோலானது!!

     

    Share
  • முக்தி தலம் சுப்பிரமண்யா – 3

    விசாலம்.

    Kukhi Subramanya

     

     

    அருள்மிகு குக்கி சுப்ரமண்யா திருக்கோயில் (தொடர்ச்சி…)

    தலபுராணத்தில் இந்தக்கோயிலின் சிறப்பைப் படித்தேன். ஒரு சமயம் வாசுகியை மஹாவிஷ்ணுவின் வாகனமான கருடன் பார்த்துவிட்டு துரத்த ஆரம்பித்தது. வாசுகி பயந்தபடி குமார பர்வதத்தினுள் இருக்கும் ஒரு குகையில் போய் ஒளிந்து கொண்டு சிவபெருமானைக்குறித்து தவம் இருந்தது. பரமேஸ்வரனும் வாசுகி முன் தோன்றி “நீ இங்கேயே இரு. சுப்பிரமண்யன் உன்னை அருள் பாலிப்பான். அவனருளால் உனக்கு கருடனிடமிருந்து ஒரு ஆபத்தும் இருக்காது நீ இங்கு குமரனுடன் இருக்க பக்தர்கள் உன்னையும் சேர்த்து பூஜிப்பார்கள் ” என்றார். முருகனும் அதை ஆமோதித்து “வாசுகியுடன் கூடியிருக்கும் என்னை வணங்குபவர்கள் சகல சௌபாக்கியங்களும் பெறுவர்” என்றார்.   இதையே வேறு ஒரு புராணக்கதையாக அங்கு இருந்த பக்தர் சொன்னார்.

    தாராகாசுரனை வதம் செய்த இடம் ஒரு மலையின் சிகரமாம். அந்த இடத்திற்கு குமராத்ரி மலை என்று பெயர் வந்தது. தாராகாசுரனை வதைத்த முருகன் மேல் தேவர்களின் தலைவனான இந்திரனுக்கு அதிக அன்பும், பாசமும் ஏற்பட்டு மனம் நெகிழ்ந்து, தன் மகள் தேவசேனையைத் திருமணம் செய்து கொடுத்தான். பின் பட்டாபிஷேகமும் செய்து முடித்தான். அந்த அபிஷேக நீர்தான் குமரதாரா நதியானதாம். அங்கு தங்கிய குமரன் ஒருநாள் மலைப்பகுதியில் நடக்க, அங்கு ஒரு குகையினுள் வாசுகி தவம் செய்வதைக் கண்டார். வாசுகியின் தவக்கோலமும் முகத்தின் அழகும் அவரை மிகவும் கவர்ந்தது. அதனால் வாசுகியைத்தன் தோழனாக ஏற்று அவனுக்குத்துணையாக கூட அங்கு தங்குவதாக வாக்கு கொடுத்தாராம். கருடனையும் குமராத்ரி எல்லைக்குள் வரக்கூடாது என்றார். ஆனால் கருடன் தான் வருடம் ஒருமுறையாவது குமரனை வலம் செய்ய விருப்பப்பட்டார். அதன்படியே வருடத்தில் ஒருமுறை கருடன் அங்கு வருகிறார். சபரிமலை ஜோதி தெரியும் முன் கருடன் வந்து சுற்றுவது போல் இங்கும் மார்கழி மாதம் நடக்கும் உற்சவத்தில் தேர் ஊர்வலம் முன் கருடன் வந்து மும்முறை வலம் வந்தப்பின் தான் தேர் கிளம்பும். இது காணக்கிடைக்காத காட்சி தான்.

    இந்த ஆலயத்தில் பல தூண்களில் நாகம் வடிக்கப்பட்டிருக்கிறது. அந்த நாகத்தின் எல்லா முகங்களிலும் வைணவ சம்பிரதாயம் போன்று திருமண் குறி இடப்பட்டிருகிறது. தவிர கருவறைக்குள் ஆதிசேஷன் இருப்பதும், எதிரில் கருட ஸ்தம்பம் இருப்பதும் வைணவ சம்பிரதாயமாக இருக்கிறது. அத்துடன் அருள்மிகு சுப்பிரமண்யாவும் இருப்பதும், சைவமும் வைணமும் கைக்கோர்த்துக்கொண்டு அருள் புரிவதும் என் மனதுக்கு மிகவும் பிடித்திருந்தது.

    அங்கு இன்னொரு சடங்கு மிகவும் புதிதாகவும் முக்கியமாகவும் எனக்குப்பட்டது. அதுதான் அக்ஷய பாத்திரம் கொண்டு வரும் சடங்கு. பூஜை முடிந்தபின் அர்ச்சகர் கருவறையினுள் இருக்கும் ஒரு கரண்டியை எடுத்துக்கொண்டு வெளியே வந்தார். பின் நேராக மடப்பள்ளி சென்றார். அவர் கையில் இருந்த கரண்டியில் கர்ப்பகிரகத்தில் நைவேத்தியம் செய்த பிரசாதம் இருந்தது. அதை அவர் மடப்பள்ளியில் இருக்கும் மொத்த அன்னத்தில் கலந்து விடுவாராம். பின் அன்னதானம் நடக்குமாம். அங்கு போஜனத்திற்கு எத்தனைப்பேர் வந்தாலும் அன்னம் வளர்ந்து கொண்டே இருக்கும் என நினைக்கிறேன். அதனால் தான் அந்தக்கரண்டி அட்சயப்பாத்திரமாக இருக்குமோ என எனக்குத் தோன்றியது. எத்தனைக்கூட்டம் வந்தாலும் இல்லை என்று சொல்லாமல் அன்னதானம் நடப்பது மிகவும் பாராட்டுக்குரியதுதான்.

    இங்கு நடக்கும் அங்கப்பிரதக்ஷிணம் சற்று வித்தியாசமாக இருக்கிறது. பிரார்த்தனை செய்பவர், வேண்டிக்கொண்டவர் எல்லோரும் சாப்பிட்ட எச்சில் இலைகளின் மேல் அங்கப்பிரதக்ஷிணம் செய்வார்களாம். இதனால் அவரது தீராத நோயும் மறைந்து போய் விடுகிறதாம்.

    கோயிலைச் சுற்றி வர, பின்புறம் மேற்கே பார்த்து ஒரு சன்னிதியில் ஒரு அழகிய சிவலிங்கம் இருக்கிறது. இதை “குக்கே லிங்கம்” என்கின்றனர். குக்கே என்றால் என்ன அர்த்தம் என்று கேட்க ‘குக்கே” என்றால் கூடை என்ற விடை கிடைத்தது. கூடை சிவலிங்கம் என்றால் என்னவாயிருக்கும் என்று என் மண்டைக்குடைய அங்கிருக்கும் ஒருவர் அதற்கும் விடையளித்தார். முன் காலத்தில் இங்கு ஒரு கூடை நிறைய சிவலிங்கங்கள் இருந்தவனவாம். அதனால் இந்த ஊருக்கே “குக்கே சுப்பிரமண்யா” என்ற பெயர் அமைந்ததாம்.

    மேற்கு பிரகாரத்தில் ஸ்ரீ மாருதி ராயரும் இருக்கிறார். அவரையும் பார்த்து விட்டு வெளியில் வந்தேன். அங்கு ஒருவர் “உள்ளே ஒரு திண்னையில் நின்றுகொண்டிருக்கும் பல்லாள ராயர் சிலையைப்பார்த்து வந்தீர்களா? அது ரொம்ப முக்கியமாயிற்றே” என்றார்.

    “அது என்ன சிலை? நாங்கள் பார்க்கவில்லையே”என்று அசடு வழிந்தபடி சொன்னேன.

    “அந்தச்சிலை முன் பலர் முழு பூஷிணிக்காய், பருத்தி போன்றவற்றை வைத்து காணிக்கை செலுத்துகிறார்கள். அதைப்பார்க்கவில்லையா? இந்தச்சிலையை முக்கியமாக பார்த்துவிட்டு வருவது வழக்கம். போய் தரிசனம் செய்துவிட்டு வாருங்கள் “

    “இதோ போகிறோம். அதற்கு முன்னால் அந்த பல்லாளராயர் யார் ? அவருக்கு ஏன் அங்கு சிலை இருக்கிறது? என்பதைச் சுருக்கமாக சொல்லுங்களேன்”

    “சொன்னால் போச்சு” என்று கதையை ஆரம்பித்தார்.

    “இந்தக்கோயிலுள்ளே சுப்பிரமண்யா மடம் என்று ஒன்று இருக்கிறது. இந்த மடத்தை நிறுவியர் ஸ்ரீ விஷ்ணுதீர்த்தர். இவர் ஸ்ரீ மத்வாசாரியாரின் தம்பி. இவர் தினந்தோறும் குமார பர்வதம் சென்று தியானம் செய்வார். அவரிடம் சாளக்கிராமம் வைத்த ஒரு பெட்டி ஒன்று எப்போதும் இருக்கும். அதை சம்புடம் என்பார்கள். ஸ்ரீ விஷ்ணுதீர்த்தரின் சீடர்கள் தங்களுக்கும் சாளக்கிராம சம்புடம் ஒன்று வேண்டும் என்று கேட்டார்கள். அவரும் “அது குமாரதாரா நதியில் வரும், அப்போது எடுத்துக்கொள்ளுங்கள்” என்றார்.

    அதேபோல் அந்த நதியில் ஒரு சம்புடம் அடித்துக்கொண்டு வர சீடர்கள் மகிழ்ச்சியுடன் அதை எடுத்துக்கொண்டனர். ஸ்ரீவிஷ்ணு தீர்த்தரின் முக்கிய சீடரான ஸ்ரீ அனிருத்த தீர்த்தர் அதைத்திறக்க முயற்சி செய்தார், ஆனால் முடியவில்லை. ஆகையால் அதை அப்படியே வைத்துக்கொண்டு பூஜை செய்தார்.

    அந்த ஊர் பல்லாளராயர் இதைக்கேள்விப்பட்டு ஒரு கொல்லனை அனுப்பி அதைத் திறக்கச்சொன்னார். அவன் முயற்சி செய்தும் முடியவில்லை. ஆனால் அவன் உடல் முழுவதும் ஒரு எரிச்சல் கிளம்பி, உடல் நலம் குன்றி இறந்து போனான். பின் யானை மூலம் அதைத் திறக்க முயன்றார். அந்த யானையும் சம்புடத்தை தன் காலின் கீழ் போட்டு மிதித்தும் அது திறக்கவில்லை. ஆனால் அதன் உடலும் எரிய ஆரம்பித்து அது பைத்தியம் பிடித்தாற்போல் ஓடி ஒரு நதியில் இறங்கி செத்தது.

    மறுநாள் அரசனுக்கும் உடல் எரிய ஆரம்பித்தது. அவன் அழுதபடி அனிருத்தத்தீர்த்தரிடம் சென்று காலில் விழுந்து மன்னிப்பு கேட்டுக்கொண்டான். அதைக்கேட்ட சுவாமிகள் ஒரு பரிகாரம் செய்யச்சொன்னார். அதுதான் ஆலயத்தினுள் இருக்கும் அவனது சிலை. அவனைப்போல் ஒரு சிலை வைக்கப்படவேண்டும் என்றும் அதற்கு பக்தர்கள் பூஷிணிக்காய், பருத்தி போன்றவைகளைக் காணிக்கையாக செலுத்தினால் அவனுக்கு இந்த பாபத்திலிருந்து விடுபட ஒரு நல்ல பிராயசித்தம் ஆகும் என்றார்.

    இன்றும் அந்தச்சிலை முன் இரவு பூஜையில் காட்டும் தீபாராதனை முடிந்த பின்னர் அந்த தீபக்காலை இந்தச்சிலைக்கு அருகில் கொண்டு வைக்கிறார்கள். இந்தக்கோயிலில் வேண்டிக்கொள்ளும் பிரார்த்தனைகள் எல்லாம் நடந்து விடுவதால் என்றுமே கூட்டத்தைக் காணமுடிகிறது

    ஓம் சரவணபவ.

     

     

     

    படங்கள் உதவிக்கு நன்றி: http://temple.dinamalar.com/en/new_en.php?id=99

    Share
  • முக்தி தலம் சுப்பிரமண்யா – 2

    விசாலம்.

     

    Kukhi Subramanya

     

    நாங்கள் இப்போது பெரிய கோயில் வாசலில் வந்து விட்டோம். அப்போது ஒரு அர்ச்சகர் உள்ளே போய்க்கொண்டிருந்தார்.

    அவரை அழைத்து “குருக்களே! உள்ளே முறையாகத் தரிசிப்பது எப்படி எதை முக்கியமாகப் பார்க்க வேண்டும் என்று கொஞ்சம் விளக்குங்கள். அதன்படி செய்தால் சரியான நேரத்தில் நாங்கள் எல்லாம் பார்த்து முடிக்க முடியும்” என்றேன்.

    Kukhi Subramanya5“பேஷா சொல்றேன். உள்ளே கிழக்கு நோக்கி திருச்சன்னிதி இருக்கும். அதில் அருள் புரியும் சுப்பிரமண்யரைத் தரிசிக்க வேண்டும். அந்த கர்பக்கிரகத்துக்குள் செல்ல ஒரு பெரிய மண்டபத்தைக் கடக்கவேண்டும். மண்டபம் வரும் முன் அங்கு அருகில் ஓடும் தர்ப்பணா நதியையும் பார்த்து வரலாம். நான் தற்போது உள்ளே வரவில்லை. ஆலயத்தில் பூஜை செய்ய அன்றைய முறை குருக்கள் ஆலயத்திலேயே வசிக்க வேண்டும் இன்று என் முறையில்லை. “

    “பரவாயில்லை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். மிக்க நன்றி” என்றபடி உள்ளே நகர்ந்தோம். மண்டபத்தின் வாயிலில் இரு யானைகள் எங்களை வரவேற்றன. அவை அசையவில்லை. அருகில் செல்ல அவை இரு கல் யானைகள் என்று தெரிய வந்தது. கம்பீரமாக மீசையுடன் இரு தூவரபாலகர்கள் நம்மை வரவேற்கிறார்கள். உள்ளே சுமார் இருபது அடி உயரமான வெள்ளிக்கவசத்துடன் கூடிய பெரிய கம்பம் நிற்கிறது.

    “இதுதான் துவஜஸ்தம்பமோ” என்று நான் சொல்ல அங்கிருந்த ஒரு பெரியவர், “இல்லை இதன் பெயர் “கருடஸ்தம்பம்” நீங்கள் பிரதக்ஷிணம் செய்யும் போது இதையும் சேர்த்து செய்யுங்கள்” என்றார்.

    “இப்படி செய்ய எதாவது காரணம் இருக்க வேண்டுமே. அப்படி இருந்தால் நான் அதைக்கேட்க ஆர்வமாக இருக்கிறேன்” என்றேன்.

    “ஆரம்பிச்சுட்டாயா? எந்தக்கோயில் போனாலும் எதாவது புராணம் உனக்கு தெரியணும். நேரமாச்சு கிளம்பு,” என்றார் என் கணவர்.

    ஆனால் நான் விடவில்லை. அதைத் தெரிந்துக்கொண்டு தான் அங்கிருந்து நகர்ந்தேன். அவர் சொன்னது, கருவறையில் வாசுகி நாகம் இருக்கிறது அதன் விஷ மூச்சினால் மக்களுக்கு ஒரு ஆபத்தும் வராமல் இருக்க கருட மந்திரத்தைச் சபித்து இந்தக்கம்பத்தைப்பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள்.

    பின் நாங்கள் சென்றது உமாமகேஸ்வரரின் சன்னிதி. ஆஹா என்ன அழகு! உமா தேவி ஈஸ்வரனின் தொடையில் அமர்ந்திருக்க சுவாமி அம்பிகையை அணைத்துக் கொண்டிருக்கிறார். அவர் கரத்தில் மானும், மழுவும் இருக்க; அம்பாள் அங்குசமும், தாமரை மலரையும் தன் கரங்களில் வைத்திருக்கிறாள். அம்பிகையின் முகம் வெட்கப்படும் பாவத்துடன் புன்னகை புரியும் கோலம் நம்மை பரவசப்படுத்துகிறது. அங்கிருந்து மெள்ள நகர்ந்து என் கைகளைக்கூப்பிய வண்ணமே முக்கிய சன்னிதியான சுப்பிரமண்யன் இருக்கும் இடத்திற்கு வந்து நின்றேன். திரை போடப்பட்டிருந்தது. உள்ளே மந்திரங்களின் ஒலியும் அத்துடன் ‘டண் டண்’ என்ற வெண்கல மணியின் நாதமும் என்னை எங்கேயோ அழைத்துச்சென்றது. ‘ஒம் சரவணபவ’ என்று என் வாய் முணுமுணுக்க ‘வெற்றி வேல் முருகனுக்கு அரோஹரா’ என்ற சப்தம் அங்கு ஒலிக்க திரை விலகியது. அடுக்கு தீபாராதனையாக ஆரத்தி எடுக்கப்பட்டதால் அங்கு பேரொளி வீச சுப்பிரமண்யன், ஞானபண்டிதன், சண்முகன் மயிலின் மேல் அமர்ந்திருந்து அருள் புரிந்தார். அந்த மயிலின் கீழே வாசுகி நாகம் அமர்ந்திருக்கிறது. வாசுகி நாகத்திற்கு கீழே ஆதிசேஷன் இருக்க, கீழே பல சாளக்கிராமங்கள் இருக்கின்றன. கர்ப்பகிரகத்தில் ஒரு பாம்பு புற்றுமிருக்கிறதாம் அங்கிருக்கும் புற்று மண் பிரசாதமாக கொடுக்கப்படுகிறது.

    இங்கு கிடைத்த தலபுராணத்தில் இந்தக்கோயிலின் சிறப்பைப் படித்தேன். ஒரு சமயம் வாசுகியை மஹாவிஷ்ணுவின் வாகனமான கருடன் பார்த்துவிட்டு துரத்த ஆரம்பித்தது. வாசுகி பயந்தபடி குமார பர்வதத்தினுள் இருக்கும் ஒரு குகையில் போய் ஒளிந்துக்கொண்டு சிவபெருமானைக்குறித்து தவம் இருந்தது. பரமேஸ்வரனும் வாசுகி முன் தோன்றி “நீ இங்கேயே இரு. சுப்பிரமண்யன் உன்னை அருள் பாலிப்பான். அவனருளால் உனக்கு கருடனிடமிருந்து ஒரு ஆபத்தும் இருக்காது நீ இங்கு குமருனுடன் இருக்க பக்தர்கள் உன்னையும் சேர்த்து பூஜிப்பார்கள் ” என்றார். முருகனும் அதை ஆமோதித்து “வாசுகியுடன் கூடியிருக்கும் என்னை வணங்குபவர்கள் சகல சௌபாக்கியங்களும் பெறுவர்” என்றார்.

     

    படங்கள் உதவிக்கு நன்றி: http://temple.dinamalar.com/en/new_en.php?id=99

    Share
  • முக்தி தலம் சுப்பிரமண்யா – 1

    விசாலம்.

    நான் சிருங்கேரி போவதாக இருக்கிறேன் என்று என் தோழிகளிடம் சொன்னவுடனேயே “கண்டிப்பாகக் கட்டில் துர்க்கையைப்பார்த்து வா” என்றும் “சுப்பிரமண்யாவைப் பார்த்து வேண்டினால் வியாதிகள் எல்லாம் போய்விடும்” என்றும் பலர் பல கோயில்களைச் சொன்னார்கள். நாங்கள் மங்களூர் போய் இறங்கியவுடன் நாங்கள் அமர்த்திக்கொண்ட டாக்ஸி ஓட்டுனரும் வரிசையாக பார்க்க வேண்டிய தலங்களை மிக அழகாக விளக்கினார். இதை நம்பியே வாழ்வதால் எல்லாம் அவர் மனதில் பாடமாகிவிட்டது போலும்.

    நாங்களும் முதலில் துர்க்கையம்மனைப்பார்த்து வணங்கியப்பின் பல கோயில்களைப் பார்த்து முடித்தோம் ஒரு வாரம் தங்கியதால் எல்லாம் நிதானமாக, களைப்பில்லாமல் பார்க்க முடிந்தது. கந்தசஷ்டிக்காக நான் பார்த்துப் பரவசமடைந்த “ஸ்ரீ சுப்பிரமண்யா” கோயில் மட்டும் இங்கு எழுதுகிறேன்.

    அருள்மிகு குக்கி சுப்ரமண்யா திருக்கோயில்

    Kukhi Subramanya
    நாங்கள் முதலில் சென்றது குமாரதாரா நதி. அங்கிருந்து மேற்கே பார்க்க குமாரபர்வதம் தெரிந்தது. அதைப்பார்த்துகொண்டே இருக்க ஒரு பத்து நிமிடத்திற்குள் கருமேகம் வந்து அதை மறைக்க குமார பர்வதம் ஒளிந்துக்கொண்டு விடுகிறது. மேகம் கலைய திரும்பவும் சிகரம் தெரிகிறது, மலை உச்சிக்குப்போக பாதை ஒன்றும் தென்படவில்லை. ஒரு சிலர் தங்கள் சாகாசத்திறமையைக் காட்ட (adventure) போய் வருகிறார்கள்.

    Kukhi Subramanya3அப்படி போய் வந்த இரு வாலிபர்களைக் கண்டு “மேலே பார்க்க என்ன இருக்கிறது ?” என்று கேட்டேன்.

    “மேலே குமார தாரா நதியும், தர்ப்பணா நதியும் உற்பத்தி ஆகின்றது, தவிர மலை உச்சியில் குமரனின் இரு பாதங்கள் செதுக்கப்பட்டிருக்கின்றன.”

    “வேறு என்ன பார்த்தீர்கள்?”

    “இங்குதான் ஷண்முக லிங்கம் கிடைக்கிறது. அதில் ஆறு பட்டைகள் இருக்கின்றன. இதுவே ஆறுமுகங்களாக வருகின்றன. இந்த லிங்கம் அளவில் மிகச்சிறியதாக இருக்கிறது. முழுப்பயிறு போன்ற அளவில் தான் இருக்கிறது இதையே பூஜையில் சாலிக்கிராமம் போல் வைத்துக்கொண்டு பூஜையும் செய்கின்றனர்.”

    அவர்கள் சொன்னதைக் கேட்டவுடன் அந்த ஷண்முகலிங்கத்தை நானும் பார்க்க ஆசைப்பட்டேன். ஆனால் யார் மலை உச்சிக்கு ஏறுவது என்று ஆசையை அடக்கிக்கொண்டேன். அங்கிருந்து வரும் இரு நதிகளும் சுப்பிரமண்யா தலத்தைச்சுற்றி ஓடுவது குமரனை பிரதட்சிணம் செய்வது போல் தோன்றியது. சுப்பிரமண்யா க்ஷேத்திரத்தில் பல தங்கும் விடுதிகள் இருக்கின்றன. அங்கு வந்த கூட்டத்தில் பலர் முண்டு உடுத்திய கேரள மக்களாகவும், பலர் கன்னட மக்களாகவும் இருந்தனர். பலருக்கு இது குலதெய்வக்கோயிலாக இருந்தது. இங்கு வந்து நதியில் ஸ்னானம் செய்து, மொட்டை அடித்துக்கொண்டு மாவிளக்கும் ஏற்றி வைத்துப் பூஜிக்கின்றனர். ஆலயம் நம் தமிழ் நாட்டு ஆலயம் போல் பெரிய கோபுரத்துடன் இருக்கும் என்று நினைத்து தான் சென்றேன். ஆனால் கோபுரம் அங்கு இல்லை. சாதாரண ஓட்டு வீடு போலத்தான் அந்தக்கோயில் இருந்தது.

    Kukhi Subramanya2வாசலில் ஒருவர் எங்களிடம் “இங்கு வந்து தரிசனம் செய்வதற்கு முன் ஆதி சுப்பிரமண்யா என்ற கோயிலுக்குசென்று அவர் அருள் பெற்று வர வேண்டும், அதுதான் முறை” என்று எங்களை அந்தக்கோயிலுக்கு அனுப்பி வைத்தார். அங்கு செல்ல வடக்குப்பக்கமாக ஒரு பத்து நிமிடம் நடக்கவேண்டும். அந்த இடத்தில் தான் முருகன் தனது பிரும்மஹத்தி தோஷம் நீங்க தவம் இருந்ததாகத் தெரிய வந்தது. அங்கு ஒரு பெரிய பாம்புப் புற்று இருந்தது. அதன் அருகில் தான் தர்ப்பணா நதி ஓடுகிறது. ஒரு கண்ணாடியைப் போல் தெளிவான நீராக இருப்பதால் நீரின் கீழே இருக்கும் அழகிய கூழாங்கற்கள், மேலும் பல சிப்பிகள் பளீரென்றுத் தெரிந்தன. இதனால் தானோ இதன் பெயர் தர்ப்பணா என்று வந்ததோ!

    வழக்கம் போல் புற்றுக்கு பால் ஊற்றி பலர் பூஜை செய்கின்றனர். குழந்தை பேறு இல்லாதவர் செய்தால் உடனடியாக பலன் கிடைக்கும் என்கின்றனர். இங்கு பூஜை செய்தால் சரும நோய்கள் சரியாகிவிடுகின்றனவாம். தவிர இந்தப்புற்றின் மண்ணை உடலில் தேய்த்துக்கொண்டாலும், கரைத்து நீருடன் உட்கொண்டாலும் வியாதிகள் குணமாகிவிடுகிறதாம். தேள் கடி, பாம்புக்கடி, விஷம் எல்லாம் இதைத் தடவ சரியாகி விடுமாம்.

    Kukhi Subramanya4இதேபோல் தான் வைத்தீஸ்வரன் கோயிலின் வைத்தியநநாதசுவாமி ஆலயத்திலும் நோய் தீர மண் உருண்டை கொடுக்கிறார்கள். பாம்பு என்றவுடன் இதுவும் ஞாபகத்திற்கு வந்தது. இந்த இடத்தில் பாம்பு ஒருவரையும் கடித்ததில்லையாம். அப்படியே கடித்தாலும் விஷம் ஏறாதாம். இது மிகவும் ஆச்சரியமான விஷயம்தான்.

    ராகு கேது தோஷம் என்றாலே இந்த ஸர்ப்ப பூஜையுடன் பலர் தங்களால் முடிந்த அளவு சர்ப்ப பிரதிமைகள் செய்து வைப்பார்கள். இங்கும் நான் பல நாகப்பிரதிமைகளைக் கண்டேன். தவிர எங்குப்பார்த்தாலும் முகம் பார்க்கும் கண்ணாடிகளும் இருந்தன. அவை எதற்கென்றால் முகத்தில் கட்டிகளோ பருக்களோ ஏற்பட்டால் இது போல் வேண்டிக்கொண்டு வைத்தால் சரியாகிவிடுமாம். முகத்தில் பருக்கள் போக பல கிரீம்கள் தடவும் அவசியம் இங்கு வந்தால் இருக்காது என நினைக்கிறேன். அங்கிருந்து நகர்ந்து வந்தவுடன் ஒரு பிள்ளையார் அமர்ந்து அருள் புரிகிறார் . அவரையும் பார்த்து அருள் பெற்றவுடன் மீண்டும் முதலில் வந்த பெரிய கோயிலுக்கு வந்து சேர்ந்தோம்.

     

     

    படங்கள் உதவிக்கு நன்றி: http://temple.dinamalar.com/en/new_en.php?id=99

    Share
  • தீபாவளி மருந்து

    விசாலம்.

     

    தீபாவளி அன்று பட்சணங்களுக்குப் பிறகு கொடுக்கப்படும் தீபாவளி லேகியம். ஆஹா, அருமை அதன் மணமும் அதன் பலனும் சொல்ல அளவில்லை. அந்த மருந்துக்காக ஒரு கவிதை …
    லேகியம்
    மருந்து அது அருமருந்து,
    தீபாவளியில் ஒரு தனி மருந்து ,
    ஆயுர்வேதக் கடைச் சரக்காம்,
    அதற்கென்று ஒரு தனி சிறப்பாம்
    சுக்கு மிளகு திப்பிலியாம்
    ஆயுர்வேத மூவேந்தர்களாம் ,
    ஓமமும் கூடச் சேர்ந்துவிடும்
    அம்மியில் எல்லாம் அரைந்துவிடும்
    உருளியில் கிளற பட்டுவிடும்
    வெல்லமும் சேர்ந்து கலந்துவிடும்
    வெண்ணெய் சேர்ந்து பளபளக்கும்
    கிளறக் கிளற மணம் பரப்பும்
    ஆஹா அருமை லேகியம் தயார்
    நெய்யும் மேலே வருவதைப்பார்
    தீபாவளி லேகியம் நம் கைவசம்
    ஏன் கவலை, பட்சணம் உன்வசம்
    தேன் கலர் லேகியம் அமிருதம் தான்
    லேகியத்துடன் தீபாவளி குதூகலம்தான்

     

     

     

    படம் உதவிக்கு நன்றி: http://sashiga.blogspot.com/2014/10/deepvali-legiyam-deepawali-recipes.html

    Share