Tag: நெல்லைத் தமிழ்

  • நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம் – 15

    -நாங்குநேரி வாசஸ்ரீ

    நெல்லைத் தமிழில் திருக்குறள் – அதிகாரம் 15 – பிறனில் விழையாமை

    குறள் 141:

    பிறன்பொருளான் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்
    தறம்பொருள் கண்டார்க ணில்

    மத்தவன் பொஞ்சாதி மேல ஆசப்படுத அறியாம இந்த ஒலகத்துல அறத்தையும் பொருளையும் ஆஞ்சு அறிஞ்சவங்ககிட்ட கெடையாது.

    குறள் 142:

    அறன்கடை நின்றாரு ளெல்லாம் பிறன்கடை
    நின்றாரிற் பேதையா ரில்

    அடுத்தவன் பொஞ்சாதி மேல ஆசப்பட்டு அவன் வீட்டு வாசல்ல போயி நிக்குதவன் மத்த எல்லா வழிலயும் பாவம் செஞ்ச கெட்ட மனுசன விட தாழ்த்தியானவன்.

    குறள் 143:

    விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில்
    தீமை புரிந்தொழுகு வார்

    சந்தேகப்படாம நம்பி பழகின மனுசரோட பொஞ்சாதி மேல ஆசப்பட்டு தப்பா நடக்குதவனக்கு  உயிர் இருந்தாலும் செத்த பொணத்துக்கு சமந்தான்.

    குறள் 144:

    எனைத்துணைய ராயினும் என்னாந் தினைத்துணையும்
    தேரான் பிறனில் புகல்

    தினையளவு கூட யோசிக்காம அடுத்தவன் பொஞ்சாதி மேல ஆசப்படுதவரு எத்தாம் பெரிய மனுசனா இருந்தாலும் அவரோட மரியாத கெட்டுப் போவும்.

    குறள் 145:

    எளிதென இல்லிறப்பா னெய்துமெஞ் ஞான்றும்
    விளியாது நிற்கும் பழி

    இது சுளுவான காரியம்னு நெனைச்சி அடுத்தவன் பொஞ்சாதிக்கிட்ட தப்பா நடக்குதவன் எப்பமும் மறஞ்சு போவாம நெலச்சு நிக்க பாவத்துக்கு ஆளாவான்.

    குறள் 146:

    பகைபாவம் அச்சம் பழியென நான்கும்
    இகவாவாம் இல்லிறப்பான் கண்

    அடுத்தவன் பொஞ்சாதிகிட்ட அத்து மீறி நடக்குதவன விட்டுபோட்டு பகை, பாவம், பயம், பழி ங்குத நாலும் விலகி போவாது.

    குறள் 147:

    அறனியலான் இல்வாழ்வா னென்பான் பிறனியலான்
    பெண்மை நயவா தவன்

    அடுத்தவன் பொஞ்சாதி மேல ஆசப்படாதவன தான் அற வழில குடும்பம் நடத்துதவன்னு சொல்லுதோம்.

    குறள் 148:

    பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்
    கறனென்றோ ஆன்ற வொழுக்கு

    மத்தவன் பொஞ்சாதி மேல ஆசப்படாம இருக்குதது அறம் மட்டுமில்ல. படிச்ச பெருமக்களுக்கு அது நெறஞ்ச ஒழுக்கமும் கூட.

    குறள் 149:

    நலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பின்
    பிறற்குரியாள் தோள்தோயா தார்

    சுத்திவர கடல் இருக்குத இந்த ஒலகத்துல எல்லா நல்லதும் யாருக்கு கெடைக்கும்னு நெனைச்சு பாத்தோம்னா அது அடுத்தவருக்கு சொந்தமானவளோட தோள சேராம இருக்குதவருக்குதான்..

    குறள் 150:

    அறன்வரையா னல்ல செயினும் பிறன்வரையாள்
    பெண்மை நயவாமை நன்று

    ஒருத்தன் நல்லது செய்யாம பாவத்தையே செய்யுதவனா இருந்தாக்கூடா அடுத்தவன் பொஞ்சாதி மேல ஆசப்படாம இருக்குதது நல்லது.

    ______________________________________

    கட்டுரையாளரைப் பற்றி

    இயற்பெயர் –  பத்மா ஸ்ரீதர்
    புனைப் பெயர் – நாங்குநேரி வாசஸ்ரீ
    தமிழார்வம் கொண்ட இல்லத்தரசி. முன்னாள் ஆசிரியை.
    கதைகள், கவிதைகள் எழுதுவதில் விருப்பம் அதிகம்.
    இதுவரை எழுதிய தளங்கள் : சிறுகதைகள்.காம், எழுத்து.காம், ப்ரதிலிபி.காம்

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம் – 14

    -நாங்குநேரி வாசஸ்ரீ

    நெல்லைத் தமிழில் திருக்குறள் – அதிகாரம் 14 – ஒழுக்கம் உடைமை

     

    குறள் 131:

    ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்
    உயிரினும் ஓம்பப் படும்

    ஒழுக்கம் அத உடையவங்கள ஒசத்தியா காட்டுததால அத நம்ம உயிர விட மேம்பட்டதா நெனைச்சி போற்றுதோம்.

    குறள் 132:

    பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கந் தெரிந்தோம்பித்
    தேரினும் அஃதே துணை

    எதனாலயும் அழிஞ்சி போவாத ஒழுக்கத்த விரும்பி காத்துக்கிடணும். ஏம்னா எல்லா அறத்திலயும் வாழ்க்கைக்கு தொணையா நிக்குதது ஒழுக்கம் மட்டுந்தான்.

    குறள் 133:

    ஒழுக்க முடைமை குடிமை இழுக்கம்
    இழிந்த பிறப்பாய் விடும்

    ஒழுக்கம் ஒடையவரா வாழுதது தான் ஒசந்த குடிப்பிறப்புக்கு பெருமை. ஒழுக்கம் தவறினவங்கல்லாம் இழிந்த குடில பொறந்ததாவே நெனைக்கப்படுவாங்க.

    குறள் 134:

    மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
    பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்

    பார்ப்பான் தான் கத்துகிட்ட வேதத்த மறந்தாக்கூட பொறவு இன்னொருக்க படிச்சிக்கிடலாம். ஆனா அவன் பொறந்த ஒசந்த குலத்துக்குண்டான ஒழுக்கத்திலேந்து பிசகினாம்னா குலத்திலயும் தாழ்ந்துட்டதாவே நெனைப்பாங்க.

    குறள் 135:

    அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன் றில்லை
    ஒழுக்க மிலான்கண் உயர்வு

    பொறாமைல புழுங்குதவனுக்கு செல்வம் இல்லாம போகுதது போல ஒழுக்கம் இல்லாதவனுக்கு ஒசந்த வாழ்க்க இல்லாம போவும்.

    குறள் 136:

    ஒழுக்கத்தி னொல்கார் உரவோர் இழுக்கத்தின்
    ஏதம் படுபாக் கறிந்து

    ஒழுக்கம் தவறினா குத்தம் கொற உண்டாவும்னு அறிஞ்சி நெஞ்சுறுதி இருக்க படிச்ச பெரியவங்க எத்தன சங்கடம் வந்தாலும் ஒழுக்கமா நடந்துகிடுவாங்க.

    குறள் 137:

    ஒழுக்கத்தி னெய்துவர் மேன்மை இழுக்கத்தின்
    எய்துவ ரெய்தாப் பழி

    ஒழுக்கத்தினால ஒருதங்களுக்கு ஒசத்தி உண்டாவும். ஒழுக்கம் இல்லாதாவங்கள வேண்டாத பழி பாவம் அண்டும்.

    குறள் 138:

    நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கந் தீயொழுக்கம்
    என்றும் இடும்பை தரும்

    நல்லொழுக்கம் சந்தோசமா நல்லா வாழுததுக்கு தொணையா நிக்கும். தீயொழுக்கம் எப்பமும் தீராத துன்பத்த மட்டுமே கொடுக்கும்.

    குறள் 139:

    ஒழுக்க முடையவர்க் கொல்லாவே தீய
    வழுக்கியும் வாயாற் சொலல்

    மறதியால கூட தீய சொல்ல தங்க வாயால சொல்லுதது ஒழுக்கம் ஒடையவங்களால ஏலாது.

    குறள் 140:

    உலகத்தோ டொட்ட ஒழுகல் பலகற்றுங்
    கல்லா ரறிவிலா தார்

    ஒலகத்து ஒசந்தவங்க ஏத்துக்கிட்ட ஒழுக்கம் ங்குத கொணத்தோட வாழ கத்துக்கிடாதவங்க எத்தன படிச்சிருந்தாலும் புத்தியில்லாதவங்க தான்.

    ______________________________________

    கட்டுரையாளரைப் பற்றி

    இயற்பெயர் –  பத்மா ஸ்ரீதர்
    புனைப் பெயர் – நாங்குநேரி வாசஸ்ரீ
    தமிழார்வம் கொண்ட இல்லத்தரசி. முன்னாள் ஆசிரியை.
    கதைகள், கவிதைகள் எழுதுவதில் விருப்பம் அதிகம்.
    இதுவரை எழுதிய தளங்கள் : சிறுகதைகள்.காம், எழுத்து.காம், ப்ரதிலிபி.காம்

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம் – 13

    -நாங்குநேரி வாசஸ்ரீ

    நெல்லைத் தமிழில் திருக்குறள் – அதிகாரம் 13 – அடக்கம் உடைமை

    குறள் 121:

    அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
    ஆரிருள் உய்த்து விடும்

    அடக்கம் ஒருத்தன அவங்காலத்துக்குப் பொறவு தேவர் உலகத்துல கொண்டு சேக்கும். அடங்காம வாழுதது அவனோட வாழ்க்கைய பொல்லாத இருட்டு போல ஆக்கிவிட்டுரும்.

    குறள் 122:

    காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்
    அதனினூஉங் கில்லை உயிர்க்கு

    அடக்கத்த செல்வமா எண்ணி காக்கணும். அதக் காட்டிலும் பெரிய செல்வம்னு வேறெதுவும் இல்ல.

    குறள் 123:

    செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்
    தாற்றின் அடங்கப் பெறின்

    அறிஞ்சுக்கிடவேண்டியத அறிஞ்சுகிட்டு நல்ல வழில அடங்கி இருக்குதவங்களோட அடக்க கொணத்த நல்லவங்க உணந்து பாராட்டுவாங்க. ..

    குறள் 124:

    நிலையின் திரியா தடங்கியான் தோற்றம்
    மலையினும் மாணப் பெரிது

     

    தன்னோட நேர்மையான வழிய விட்டுபோட்டு அங்ஙன இங்ஙன  விலகிப் போவாம அடக்கஒடுக்கமா வாழுதவனோட உருவம் பொறத்தியாரு மனசுக்குள்ள மலைய விட ஒசந்ததா இருக்கும்.

    குறள் 125:

    எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
    செல்வர்க்கே செல்வம் தகைத்து

     

    பணிவா இருக்குதது எல்லாருக்கும் நல்லது. அதிலயும் செல்வம் இருக்குதவங்களுக்கு அது மேப்படி சேந்த ஒரு செல்வம்.

    குறள் 126:

    ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
    எழுமையும் ஏமாப் புடைத்து

    ஆமை எப்டி நாலுகாலையும் ஒருதலையையும் ஓட்டுக்குள்ளார மறச்சிக்கிடுதோ அப்டி ஒருத்தன் தன்னோட அஞ்சு பொறிகளையும் நியாயத்துக்கு கேடு வரும்போது அடக்கிக்கிடுவாம்னாஅந்த கொணம் அவனுக்கு ஏழேழு பொறப்பிலயும் காவலா நிக்கும்.  

    குறள் 127:

    யாகாவா ராயினும் நாகாக்க காவாக்காற்
    சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு

    ஒருத்தன் எத காக்க முடியலனாலும் நாக்க மட்டுமாச்சும் காக்கணும். இல்லைன்னா அவன் சொன்ன சொல்லே அவனோட துன்பத்துக்கு காரணமாப் போயிடும்.

    குறள் 128:

    ஒன்றானுந் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்
    நன்றாகா தாகி விடும்

    ஒருத்தன் பேசுத தீய சொல்லால வருத துன்பம் சிறிசா இருந்தாலும் அந்த கொற இருக்கவனுக்கு அவன் பேசுத மத்த நல்ல சொல்லால வருத நல்லதும் கெட்டதாவே மாறிக்கிடும்.

    குறள் 129:

    தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
    நாவினாற் சுட்ட வடு

    நெருப்பு சுடும்போது ஏற்படுத புண்ணால  ஒடம்புல தடம் இருக்குமே தவித்து உள்ள இருக்க புண் ஆறிக்கிடும். மனசு நோவ கடும் வார்த்தயால வையும்போது நெஞ்சுல ஏற்படுத புண் ஆறவே ஆறாது.

    குறள் 130:

    கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி
    அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து

    நல்லா படிச்சிபோட்டுமனசுக்குள்ள கொவமில்லாம அடக்க ஒடுக்கமா வாழுத கொணம் கொண்டவன எப்பம் அடையுததுனு அறம் நேரத்த எதிர்பாத்து அவன் வழியில காத்துக் கெடக்கும்.

    ______________________________________

    கட்டுரையாளரைப் பற்றி

    இயற்பெயர் –  பத்மா ஸ்ரீதர்
    புனைப் பெயர் – நாங்குநேரி வாசஸ்ரீ
    தமிழார்வம் கொண்ட இல்லத்தரசி. முன்னாள் ஆசிரியை.
    கதைகள், கவிதைகள் எழுதுவதில் விருப்பம் அதிகம்.
    இதுவரை எழுதிய தளங்கள் : சிறுகதைகள்.காம், எழுத்து.காம், ப்ரதிலிபி.காம்

     

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம் – 12

    -நாங்குநேரி வாசஸ்ரீ

    நெல்லைத் தமிழில் திருக்குறள் – அதிகாரம் 12 – நடுவுநிலைமை

     

    குறள் 111:

    தகுதி யெனவொன்று நன்றே பகுதியாற்
    பாற்பட் டொழுகப் பெறின்

    சண்டக்காரங்க, அல்லசல் மனுசங்க, சேக்காளிங்க னு பிரிச்சி பாத்து பார பட்சம் பாக்காம நியாயமா இருக்குதது தான் நல்லது செய்யுத நடுவுநிலைமங்குத தகுதி.

    குறள் 112:

    செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி
    எச்சத்திற் கேமாப் புடைத்து

    நடுவுநிலைமை உள்ளவனோட செல்வத்துக்கு அழிவுங்கது கெடையாது. அது அவனோட அடுத்தடுத்த தல முறைக்கும் நன்மைய செய்யும். .

    குறள் 113:

    நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை
    அன்றே யொழிய விடல்

    நல்லதையெ தருததா இருந்தாலும் நியாயங்கெட்ட வழில வருத லாபத்த அப்பமே விட்டுபோட்டு போயிடணும்.

    குறள் 114:

    தக்கார் தகவிலர் என்ப தவரவர்
    எச்சத்தாற் காணப் படும்

    இவர் நியாயமான மனுசனா,  நியாயங்கெட்டவரா ங்குத வித்தியாசத்த அவருக்கு பின்னால இருக்கப் போகுத செல்வம், புகழ், பெத்த பிள்ளைங்களோட ஒழுக்கம் இத வச்சி தெரிஞ்சிக்கிடலாம்.

    குறள் 115:

    கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்
    கோடாமை சான்றோர்க் கணி

    வாழ்க்கைல நல்லதும் கெட்டதும் இருக்குதது இயற்கை. அந்த ரெண்டு நிலைமலேயும் நியாயமா நடந்துகிடது தான் பெரிய மனுசங்களுக்கு அழகு.

    குறள் 116:

    கெடுவல்யான் என்ப தறிகதன் நெஞ்சம்
    நடுவொரீஇ அல்ல செயின்

    நெஞ்சுக்குள்ள நியாயங்கெட்ட நெனைப்பு வந்து தப்பு செய்யணும்னு தோண ஆரம்பிச்சிடுச்சின்னா கெட்டழியப் போகுதேன்னு அவன் தன்னத்தானே தெரிஞ்சிக்கிடணும்.

    குறள் 117:

    கெடுவாக வையா துலகம் நடுவாக
    நன்றிக்கண் தங்கியான் தாழ்வு

    நியாயந் தவறாம அற வழில வாழுத ஒருத்தருக்கு அதனால பணம் சேராம வறுமைல வாடினாலும் அவர ஒலகம் ஏழைன்னு நெனைக்காது.

    குறள் 118:

    சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபாற்
    கோடாமை சான்றோர்க் கணி

    முன்ன சமமா நின்னு பொறவு பொருள சீர்தூக்கி பாக்க ஒதவுத தராசுமுள் போல ஒருபக்கம் சாயாம நியாயமா நடந்துகிடதுதான் படிச்ச பெருமக்களுக்கு அழகு.

    குறள் 119:

    சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா
    உட்கோட்டம் இன்மை பெறின்

    நேர்மையும் நெஞ்சுறுதியும் ஒருத்தருக்கு இருந்திச்சின்னா அவரோட சொல்லுல நீதியும் நியாயமும் இருக்கும். அதுக்குப் பேருதான் நடுவுநிலைமை.

    குறள் 120:

    வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
    பிறவும் தமபோல் செயின்

    மத்தவங்களோட பொருளயும் தன்னோட பொருளா நெனச்சி பாதுகாத்து நேர்மையா விக்குததுதான், வியாபாரம் செய்யுதவங்களுக்கு நல்ல வியாபார முறையா இருக்கும். ..

    ______________________________________

    கட்டுரையாளரைப் பற்றி

    இயற்பெயர் –  பத்மா ஸ்ரீதர்
    புனைப் பெயர் – நாங்குநேரி வாசஸ்ரீ
    தமிழார்வம் கொண்ட இல்லத்தரசி. முன்னாள் ஆசிரியை.
    கதைகள், கவிதைகள் எழுதுவதில் விருப்பம் அதிகம்.
    இதுவரை எழுதிய தளங்கள் : சிறுகதைகள்.காம், எழுத்து.காம், ப்ரதிலிபி.காம்

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம் – 11

    -நாங்குநேரி வாசஸ்ரீ

    நெல்லைத் தமிழில் திருக்குறள் – அதிகாரம் 11 – செய் நன்றியறிதல்

     

    குறள் 101:

    செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
    வானகமும் ஆற்றல் அரிது

    நாம எந்த ஒதவியும் செய்யாத போதும் ஒருத்தங்க நமக்கு ஒதவியா இருந்தாங்கன்னா அதுக்கு பதிலா வானத்தையும், பூமியையும் குடுத்தாக் கூட சமமா இருக்காது.

    குறள் 102:

    காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
    ஞாலத்தின் மாணப் பெரிது

    நமக்கு நெருக்கடியா இருக்கும்போது ஒருத்தங்க செஞ்ச ஒதவி சின்னதா இருந்தாலும் நம்மளோட நெருக்கடிய நெனச்சோம்னா அந்த ஒதவி பூமிய விட பெரிசா தோணும்.

    குறள் 104:

    தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
    கொள்வர் பயன்தெரி வார்

    தினையளவு செஞ்ச ஒதவியையும் அதோட பயன அறிஞ்ச நல்லவங்க பனையளவு பெரிய ஒதவியா நெனச்சிக்கிடுவாங்க.

    குறள் 105:

    உதவி வரைத்தன் றுதவி உதவி
    செயப்பட்டார் சால்பின் வரைத்து

    ஒதவிங்கறது எம்புட்டு செஞ்சாங்கன்னு பாத்து மதிக்குதது இல்ல, அந்த ஒதவிய பெறுதவங்களோட கொணத்த பொறுத்து ஒதவியோட மதிப்பு  மாறிக்கிடும்.

    குறள் 106:

    மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க
    துன்பத்துள் துப்பாயார் நட்பு

    குத்தங்குறை இல்லாதவங்களோட ஒறவ மறக்கக் கூடாது. துன்பத்துல தொணையா இருந்தவங்களோட நட்ப விட்டுடக் கூடாது.

    குறள் 107:

    எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்
    விழுமந் துடைத்தவர் நட்பு

    தன்னோட துன்பத்த போக்கி ஒதவி செஞ்சவங்கள  ஏழேழு பொறப்பிலயும் நெனைச்சிக்கிடுவாங்க நல்லவங்க.

    குறள் 108:

    நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
    அன்றே மறப்பது நன்று

    ஒருத்தன் நமக்கு செஞ்ச ஒதவிய மறக்குதது நல்லதில்ல. அவன் செஞ்ச தீங்க அப்பமே மறக்கது நல்லது.

    குறள் 109:

    கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த
    ஒன்றுநன் றுள்ளக் கெடும்.

    முன்ன ஒருக்க நன்ம செஞ்சவன் பெறகு நம்ம கொலை செய்யுதது கணக்கா பெரிய தீம செஞ்சாலும் அவன் முன்ன செஞ்ச நன்மைய நெனைச்சோம்னா நம்ம மனசிலேந்து அவன் செஞ்ச பெரிய தீம காங்காம போயிடும்.

    குறள் 110:

    எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
    செய்ந்நன்றி கொன்ற மகற்கு

    எந்த அறத்த மறந்தவங்களுக்கும் பாவத்த கழுவுததுக்கு வழி உண்டு. ஒருத்தன் செஞ்ச ஒதவிய மறந்து தீம செஞ்சவனுக்கு வழியே கெடையாது.

    ______________________________________

    கட்டுரையாளரைப் பற்றி

    இயற்பெயர் –  பத்மா ஸ்ரீதர்
    புனைப் பெயர் – நாங்குநேரி வாசஸ்ரீ
    தமிழார்வம் கொண்ட இல்லத்தரசி. முன்னாள் ஆசிரியை.
    கதைகள், கவிதைகள் எழுதுவதில் விருப்பம் அதிகம்.
    இதுவரை எழுதிய தளங்கள் : சிறுகதைகள்.காம், எழுத்து.காம், ப்ரதிலிபி.காம்

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம் – 10

    -நாங்குநேரி வாசஸ்ரீ

    நெல்லைத் தமிழில் திருக்குறள் – அதிகாரம் 10 – இனியவை கூறல்

    குறள் 91:

    இன்சொலால் ஈரம் அளைஇப் படிறிலவாம்
    செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்

    ஒருத்தங்க வாய்லேந்து வருத சொல்லு நேசத்தோடயும் வஞ்சகமில்லாததாவும், உண்மையாவும் இருந்துச்சுன்னா அதத் தான் இன்சொல் னு சொல்லுதோம்.

    குறள் 92:

    அகன்அமர்ந் தீதலின் நன்றே முகனமர்ந்து
    இன்சொலன் ஆகப் பெறின்

    சிரிச்ச மொகத்தோட இனிய சொல் பேசுதது மனசு குளிந்து மத்தவங்களுக்கு  ஒரு பொருள கொடுக்குதத விட ஒசந்தது.

    குறள் 93:

    முகத்தான் அமர்ந்தின்து நோக்கி அகத்தானாம்
    இன்சொ லினதே அறம்

    சிரிச்ச மொகத்தோட பாத்து மனசார இனிமையா பேசுததே அறம் னு சொல்லுதோம்.

    குறள் 94:

    துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்
    இன்புறூஉம் இன்சொ லவர்க்கு

    இனிய சொல்ல பேசி நயமா பழகுதவங்களுக்கு துன்பம் ங்குத வறும அண்டாது.

    குறள் 95:

    பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
    அணியல்ல மற்றுப் பிற

    தன்னையவிட குறச்சலான தகுதி உள்ளவங்ககிட்டயும் அடக்க ஒடுக்கமா இனிமையா பேசுதது தான் ஒருத்தனுக்கு நக நட்டு மாதிரி. மத்தது இல்ல.

    குறள் 96:

    அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
    நாடி இனிய சொலின்

    பொறத்தியாருக்கு நல்லது செய்யுத இனிய சொல்ல மனசார சொன்னாம்னா அவனுக்குள்ளாரயும் நாட்டிலயும் தர்மம் வளந்து நிக்கும்.. பாவம் கொறைஞ்சு போவும்.

    குறள் 97:

    நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று
    பண்பின் தலைப்பிரியாச் சொல்

    நல்ல பயனத் தருத நல்ல பண்புலேந்து நீங்காத சொல்ல சொல்லுதவனுக்கு அது மகிழ்ச்சியகொடுத்து நல்லது செய்யும்.

    குறள் 98:

    சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும்
    இம்மையும் இன்பம் தரும்

    பொறத்தியாருக்கு துன்பம் கொடுக்குததுங்குத கெட்ட கொணம் இல்லாத நல்ல இனிய சொல்லு அவன் வாழுத காலத்துலயும் , செத்த பெறகும் அவனுக்கு புகழ கொடுக்கும்.

    குறள் 99:

    இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ
    வன்சொல் வழங்கு வது

    இனிய சொல்லு மகிழ்ச்சிய கொடுக்கும்னு தெரிஞ்சிக்கிட்ட ஒருத்தன் மத்தவங்க மனசு நோவ கடுமையா பேசுதது எத எதிர்பாத்து?

    குறள் 100:

    இனிய உளவாக இன்னாத கூறல்
    கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று

    இனியமையா பேசுததுக்கு சொல் இருக்கும் போது  அத விட்டுபோட்டு கடுமையா பேசுதது பழத்த ஒதுக்கி வச்சி காய பறிச்சு திங்குததுக்கு சமானம்.

    ______________________________________

    கட்டுரையாளரைப் பற்றி

    இயற்பெயர் –  பத்மா ஸ்ரீதர்
    புனைப் பெயர் – நாங்குநேரி வாசஸ்ரீ
    தமிழார்வம் கொண்ட இல்லத்தரசி. முன்னாள் ஆசிரியை.
    கதைகள், கவிதைகள் எழுதுவதில் விருப்பம் அதிகம்.
    இதுவரை எழுதிய தளங்கள் : சிறுகதைகள்.காம், எழுத்து.காம், ப்ரதிலிபி.காம்

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம் – 9

    -நாங்குநேரி வாசஸ்ரீ

    நெல்லைத் தமிழில் திருக்குறள் – அதிகாரம் 9 – விருந்தோம்பல்

    குறள் 81:

    இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
    வேளாண்மை செய்தற் பொருட்டு

    குடும்ப வாழ்க்கைல பொருளச் சேத்து காப்பாத்தி  குடித்தனம் நடத்துதது எல்லாம் வந்த விருந்தாளிய நல்ல படியா கவனிச்சி ஒதவியா இருக்கதுக்காகத்தான்.

    குறள் 82:

    விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
    மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று

    விருந்தாளி வீட்டுக்கு வெளிய இருக்கும்போது உள்ள ஒக்காந்து தான் மட்டும் தனியா சாப்பிடுதது சாவாம இருக்கதுக்காக சாப்பிடுத அமிழ்தம் னாலும் அது நல்ல பழக்கமில்ல.

    குறள் 83:

    வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
    பருவந்து பாழ்படுதல் இன்று

    தெனைக்கும் வர விருந்தாளிய நல்ல கவனிச்சு பேணுததனால ஒருத்தன் வறுமைப்பட்டு வாழ்க்கைல அழிஞ்சி போயிடமாட்டான்.

    குறள் 84:

    அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
    நல்விருந் தோம்புவான் இல்

    வர விருந்தாளிய சிரிச்ச மொகத்தோட வரவேத்து பேணுதவனோட வீட்ல சொத்து சொகத்த கொடுக்கும் மகாலச்சுமி வந்து குடியிருப்பா.

    குறள் 85:

    வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி
    மிச்சில் மிசைவான் புலம்

    விருந்தாளிக்கு மொதல்ல சாப்பாடுபோட்டு பொறவு தான் சாப்பிடுதவனோட நெலத்துல விதைய விதைக்கவும் வேணுமா?

    குறள் 86:

    செல்விருந் தோம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
    நல்விருந்து வானத் தவர்க்கு

    வர விருந்தாளிய நல்ல கவனிச்சி அவுங்க போன பெறகு அடுத்த விருந்தாளி எப்பம் வருவாரு னு காத்துகெடக்குத மனுசன வானத்துல இருக்க தேவர்ங்க எல்லாம் தங்களோட விருந்தாளியா நெனச்சி கவனிப்பாங்க.

    குறள் 87:

    இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின்
    துணைத்துணை வேள்விப் பயன்

    விருந்தாளியப் பேணுததும் யாகம் மாதிரிதான். அதனால கெடைக்க நன்மை இவ்வளவுனு அளந்து சொல்ல ஏலாது. அது வர விருந்தாளியோட தகுதிய பொறுத்து மாறிக்கிடும்.

    குறள் 88:

    பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி
    வேள்வி தலைப்படா தார்

    விருந்தாளிய கவனிக்குத யாகத்த செய்யாதவங்க தங்ககிட்ட இருக்க செல்வத்த சிரமப்பட்டு காத்து அத இழக்குத நிலை வருதபோது எந்த தொணையும் இல்லாம ஆயிட்டோமே னு வெசனப்படுவாங்க.

    குறள் 89:

    உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா
    மடமை மடவார்கண் உண்டு

    விருந்தாளிய உபசரிச்சி பேணாதவங்க முட்டாளுங்க. அவங்க கிட்ட எவ்ளோ பணம் இருந்தாலும் தரித்திரம் பிடிச்சவங்களாவே நெனைக்கப் படுவாங்க.

    குறள் 90:

    மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
    நோக்கக் குழையும் விருந்து

    மோந்து பாத்த ஒடனே வாடுத பூ அனிச்சம். அதப் போல வாங்க னு கூப்பிடுத சமயம்  லேசா மூஞ்சிய காட்டினாலே விருந்தாளிங்க வாடிப் போயிருவாங்க.

    ______________________________________

    கட்டுரையாளரைப் பற்றி

    இயற்பெயர் –  பத்மா ஸ்ரீதர்
    புனைப் பெயர் – நாங்குநேரி வாசஸ்ரீ
    தமிழார்வம் கொண்ட இல்லத்தரசி. முன்னாள் ஆசிரியை.
    கதைகள், கவிதைகள் எழுதுவதில் விருப்பம் அதிகம்.
    இதுவரை எழுதிய தளங்கள் : சிறுகதைகள்.காம், எழுத்து.காம், ப்ரதிலிபி.காம்

     

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம் – 8

    -நாங்குநேரி வாசஸ்ரீ

    நெல்லைத் தமிழில் திருக்குறள் – அதிகாரம் 8 – அன்புடைமை

     

    குறள் 71:

    அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
    புண்கணீர் பூசல் தரும்

    நேசத்த தாள் போட்டு அடைச்சு வைக்க முடியுமா.  தனக்கு வேண்டப்பட்டவங்களுக்கு துன்பம் வரும்போது அவுங்க கண்ணுலேந்து தானா வடியுத கண்ணீர வச்சு நேசஉள்ளத்த தெரிஞ்சுக்கிடலாம்.

    குறள் 72:

    அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
    என்பும் உரியர் பிறர்க்கு

    நேசம் இல்லாதவங்க எல்லாப் பொருளும் தனக்கு தான் சொந்தம்னு நெனைப்பாங்க. நேசம் உள்ளவங்களோ பொருள் மட்டுமில்லாம தங்களோட ஒடம்பும் மத்தவங்களுக்குதான் னு நெனைப்பாங்க.

    குறள் 73:

    அன்போ டியைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு
    என்போ டியைந்த தொடர்பு

    உயிரும் ஒடலும் போல நேசமும் செயலும் சேந்து இருக்குதது தான் ஒசந்த பொருத்தம்.

    குறள் 74:

    அன்பீனும் ஆர்வம் உடைமை அதுஈனும்
    நண்பென்னும் நாடாச் சிறப்பு

    விரும்பி வாழுத தன்மைய கொடுக்குதது நேசம். அது பிறத்தியார் கிட்ட சேக்காளியா இருக்கவும் ஒதவும்.

    குறள் 75:

    அன்புற் றமர்ந்த வழக்கென்ப வையகத்து
    இன்புற்றார் எய்தும் சிறப்பு

    ஒலகத்துல சந்தோசமா வாழுத ஒசத்தியான வாழ்க்கைதான்  நேசத்தோட வாழுத குடும்ப வாழ்க்கையினால வெளையுத லாபம்

    குறள் 76:

    அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்
    மறத்திற்கும் அஃதே துணை

    நல்லதுசெய்யுததுக்கு மட்டுந் தான் நேசம் தொணையா நிக்கும் னு புரிஞ்சுகிடாதவங்க சொல்லுவாங்க. வீரத்துக்கும் அது தொணையா நிக்கும்.

    குறள் 77:

    என்பி லதனை வெயில்போலக் காயுமே
    அன்பி லதனை அறம்

    எலும்பு இல்லாத ஒடம்பு உள்ள புழுவ வெயில் எப்டி வாட்டி வதைக்குதோ அது மாதிரி நேசம் இல்லாத உயிர அறக்கடவுள் வாட்டி வதைப்பாரு.

     குறள் 78:

    அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
    வற்றல் மரந்தளிர்த் தற்று

    மனசுல நேசமே இல்லாம வாழுத குடும்ப வாழ்க்க பாலைவனத்துல இருக்க பட்டு போன மரம் மறுபடி துளித்து இலை விடுததுக்கு சமம்,.

    குறள் 79:

    புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை
    அகத்துறுப் பன்பி லவர்க்கு

    ஒடம்புக்குள்ள இருக்க உறுப்பான நேசம் இல்லாதவங்களுக்கு வெளிய இருக்க அழகான உறுப்புக்களால என்ன பிரயோசனம்.

    குறள் 80:

    அன்பின் வழிய துயிர்நிலை அஃதிலார்க்கு
    என்புதோல் போர்த்த உடம்பு

    நேசமான உள்ளத்தோட இயங்குதது தான் உயிரோட இருக்க இந்த ஒடம்பு.  நேசமில்லாதவங்களோட ஒடம்பு வெறும் எலும்புக்கு மேல தோல போத்தி வச்ச வெறும் ஒடம்பு தான்.

    ______________________________________

    கட்டுரையாளரைப் பற்றி

    இயற்பெயர் –  பத்மா ஸ்ரீதர்
    புனைப் பெயர் – நாங்குநேரி வாசஸ்ரீ
    தமிழார்வம் கொண்ட இல்லத்தரசி. முன்னாள் ஆசிரியை.
    கதைகள், கவிதைகள் எழுதுவதில் விருப்பம் அதிகம்.
    இதுவரை எழுதிய தளங்கள் : சிறுகதைகள்.காம், எழுத்து.காம், ப்ரதிலிபி.காம்

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம் – 6

    -நாங்குநேரி வாசஸ்ரீ

    நெல்லைத் தமிழில் திருக்குறள் – அதிகாரம் 6 – வாழ்க்கைத் துணைநலம்

    குறள் 51:

    மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்
    வளத்தக்காள் வாழ்க்கைத் துணை

    குடும்பத்துக்கு ஏத்த நல்ல குணவதியா புருசன் சம்பாத்தியத்துக்கு ஏத்தமாறி குடித்தனம் நடத்துதவ தான் நல்ல பொஞ்சாதி. (மனைவி).

    குறள் 52:

    மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
    எனைமாட்சித் தாயினும் இல்

    குடும்பத்துல நல்ல குணவதியா பொஞ்சாதி இல்லன்னா வாழ்க்கை எவ்வளவு சிறப்பா இருந்துச்சுன்னாலும் பிரயோசனம் இல்ல.

    குறள் 53:

    இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
    இல்லவள் மாணாக் கடை

    நல்ல குணவதியான பொஞ்சாதி அமைஞ்சா வாழ்க்கையில எல்லாம் இருக்கும். அப்டி அமையலன்னா எதுவுமே இருக்காது.

    குறள் 54:

    பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
    திண்மைஉண் டாகப் பெறின்

    பொஞ்சாதி கிட்ட கற்பு ங்குத மன திடம் இருந்துச்சுன்னா அவள விட ஒசந்தது வேற என்ன இருக்க முடியும்.

    குறள் 55:

    தெய்வம் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்
    பெய்யெனப் பெய்யும் மழை

    மத்த எந்த கடவுளையும் கும்பிடாம புருசன மட்டுமே கடவுளா நெனக்க பொஞ்சாதி மழைய பெய் அப்டின்னு சொன்னா பெய்யும்.

    குறள் 56:

    தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
    சொற்காத்துச் சோர்விலாள் பெண்

    தன்னைய நல்லபடியா பாத்துக்கிட்டு புருசன நல்ல அக்கறையோட கவனிச்சி குடும்பத்தோட புகழையும் காப்பாத்ததுல திண்ணமா இருக்குதவ தான் பொம்பள. (பெண்)

    குறள் 57:

    சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்
    நிறைகாக்கும் காப்பே தலை

    பொம்பள பிள்ளைங்கள இப்படித்தான்இருக்கணும் னு காவல் காக்குததுல ஒரு பிரயோசனமுமில்ல. அவங்க தங்கள தாங்களே மனசார அடக்க ஒடுக்கமா காத்துக்கிடதது தான் ஒசத்தி.

    குறள் 58:

    பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
    புத்தேளிர் வாழும் உலகு

    பொம்பளப் பிள்ளைங்களுக்கு நல்ல குணத்தோட புருசன் அமைஞ்சா, குடும்ப வாழ்க்கைல கெடைக்குத சந்தோசம் மேலுலக வாழ்க்கையப் போல சிறப்பா இருக்கும்.

    குறள் 59:

    புகழ்புரிந் தில்லிலோர்க் கில்லை இகழ்வார்முன்
    ஏறுபோல் பீடு நடை

    குடும்பத்தோட புகழக் காக்குத பொஞ்சாதி இல்லாத ஆம்பிளைக்கு தன்னைய இளக்காரம் செய்யுதவங்க முன்ன ஆம்பிள சிங்கம் போல நடக்க ஏலாது.

    குறள் 60:

    மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன்
    நன்கலம் நன்மக்கட் பேறு

    குடும்ப வாழ்க்கையில மங்கலம் னு சொல்லுதது பொஞ்சாதியோட நல்ல குணத்த. நல்ல பிள்ளைகள பெத்து வளக்குதது அதுக்கு பூட்டுத நக நட்டுபோல.

    ______________________________________

    கட்டுரையாளரைப் பற்றி

    இயற்பெயர் –  பத்மா ஸ்ரீதர்
    புனைப் பெயர் – நாங்குநேரி வாசஸ்ரீ
    தமிழார்வம் கொண்ட இல்லத்தரசி. முன்னாள் ஆசிரியை.
    கதைகள், கவிதைகள் எழுதுவதில் விருப்பம் அதிகம்.
    இதுவரை எழுதிய தளங்கள் : சிறுகதைகள்.காம், எழுத்து.காம், ப்ரதிலிபி.காம்

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம் – 5

    -நாங்குநேரி வாசஸ்ரீ

    நெல்லைத் தமிழில் திருக்குறள் – அதிகாரம் 5 – இல் வாழ்க்கை

     

    குறள் 41:

    இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
    நல்லாற்றின் நின்ற துணை

    வாழ்க்கைல பெத்தவங்க, பிள்ளைங்க, பொஞ்சாதி எல்லாருக்கும் நல்லது செய்து தொணையா இருக்கவன் தான் நல்ல படியா குடும்பம்  நடத்துதவன் .

     

    குறள் 42:

    துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்
    இல்வாழ்வான் என்பான் துணை

    எல்லாத்திலயும் ஆசைய விட்டவனுக்கும், தங்கிட்ட இல்லன்னு கேக்குதவனுக்கும், ஏழைக்கும் குடும்பத்தோட வாழுதவன் தொணையா இருக்கணும்.

     

    குறள் 43:

    தென்புலத்தார் தெய்வம் விரு ந்தொக்கல் தானென்றாங்கு
    ஐம்புலத்தா றோம்பல் தலை

    தனக்கு,, சொந்தக்காரங்களுக்கு, விருந்தாளிக்கு, தேவர்களுக்கு, இறந்தவங்களுக்கு செய்ய வேண்டியத சிறப்பா செய்யணும்.

     

    குறள் 44:

    பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
    வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல

    வாழ்க்கையோட ஒழுக்கங்கறது பழி பாவத்துக்கு அஞ்சி பொருள் சேக்குததும், சேத்தத பங்குபோட்டு குடுத்து வாழுததுலயும் இருக்கு.

     

    குறள் 45:

    அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
    பண்பும் பயனும் அது

    குடும்ப வாழ்க்க பண்பும் பயனும் உள்ளதா இருக்கதுக்கு அன்பான மனசோட நல்ல செயல செய்யணும்.

     

    குறள் 46:

    அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில்
    போஒய்ப் பெறுவ தெவன்

    நல்ல தனமா குடும்பம் நடத்துதவனுக்கு கெடக்குத பயன் வேறவழில கெடைக்குமா? கெடைக்காது.

    குறள் 47:

    இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
    முயல்வாருள் எல்லாம் தலை

    குடும்பத்தோட நல்ல வாழ்க்கை வாழுதவனால மட்டுந்தான் கடவுள பத்தி  அறிஞ்சிக்கிட்டு அவர அடைய முடியும்.

     

    குறள் 48:

    ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை
    நோற்பாரின் நோன்மை உடைத்து

    பிறத்தியார நல்லா வாழ வச்சி தானும் நல்லபடியா குடும்பத்தோட வாழுதவனோட வாழ்க்க துறவிங்க கடைபிடிக்க நோன்ப விட ஒசந்தது.

     

    குறள் 49:

    அறன்எனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
    பிறன்பழிப்ப தில்லாயின் நன்று

    குடும்பத்தோட வாழுத  வாழ்க்கையத் தான் ஒசந்த அறம் னு சொல்லுதாங்க. அதுவும் மத்தவங்க குத்தம் குறை சொல்ல முடியாததா இருந்துச்சுன்னா நல்லது.

     

    குறள் 50:

    வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
    தெய்வத்துள் வைக்கப் படும்

     

    குடும்பத்தோட வாழுத ஒருத்தன் பூமியில இருந்தாலும் அவன மேலோகத்துல  வாழுத தேவர்கள் ல ஒருத்தனப் போல தான் மதிப்பாங்க.

    ______________________________________

    கட்டுரையாளரைப் பற்றி

    இயற்பெயர் –  பத்மா ஸ்ரீதர்
    புனைப் பெயர் – நாங்குநேரி வாசஸ்ரீ
    தமிழார்வம் கொண்ட இல்லத்தரசி. முன்னாள் ஆசிரியை.
    கதைகள், கவிதைகள் எழுதுவதில் விருப்பம் அதிகம்.
    இதுவரை எழுதிய தளங்கள் : சிறுகதைகள்.காம், எழுத்து.காம், ப்ரதிலிபி.காம்

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம் – 3

    -நாங்குநேரி வாசஸ்ரீ

    நெல்லைத் தமிழில் திருக்குறள் – அதிகாரம் 3 – நீத்தார் பெருமை

    குறள் 21:

    ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
    வேண்டும் பனுவல் துணிவு

    ஒசத்தி னு படிச்ச பெருமக்களோட நூல்கள் சொல்லுதது எல்லாம் ஒலகத்து ஆசையெல்லாம் தொறந்த துறவிங்கள பத்திய பெருமையத்தான்.

    குறள் 22:

    துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
    இறந்தாரை எண்ணிக்கொண் டற்று

    ஆசையெல்லாம் விட்டவங்களோட பெருமைய அளக்குதது ஒலகத்துல செத்தவங்க எத்தன பேரு னு எண்ணுததுக்கு சமானம்.

    குறள் 23:

    இருமை வகைதெரிந் தீண்டறம் பூண்டார்
    பெருமை பிறங்கிற் றுலகு

    நல்லது கெட்டத ஆஞ்சு அறிஞ்சு பொறவு நல்லதையே செய்யற மனுசங்க தான் ஒசத்தியானவங்க.

    குறள் 24:

    உரனென்னுந் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
    வரனென்னும் வைப்பிற்கோர் வித்து

    கண்ணு, காது, மூக்கு, வாய், ஒடம்பு இந்த அஞ்சு பொறியால விளையுத ஆசைய அதோட போக்குல உடாம மன திடங்குத அங்குசத்தால அடக்குதவன துறவறம் ங்குத நிலத்துக்குண்டான விதை மாதிரி நெனைச்சிக்கிடலாம்.

    குறள் 25:

    ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
    இந்திரனே சாலுங் கரி

    பாக்குதது, கேக்குதது, சுவைக்குதது, வாசம் பிடிக்குதது, தொடுத உணச்சி இந்த அஞ்சுபுலனால விளையுத ஆசைய அடக்கி இருக்கவனக்கு உதாரணம் சொல்லணும்னா அது வான லோகத்துல இருக்க தேவர்களோட ராசா இந்திரன் தான்.

    குறள் 26:

    செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
    செயற்கரிய செய்கலா தார்

    மத்தவங்களால செய்ய முடியாதத ஒருத்தன் செய்தாம்னா அவந்தான் ஒசந்த ஆள். அப்டி செய்யாதவன் தாழ்த்திதான்.

    குறள் 27:

    சுவையொளி ஊறோசை நாற்றமென் றைந்தின்
    வகைதெரிவான் கட்டே உலகு

    பாக்குதது, கேக்குதது, சுவைக்குதது, வாசம் பிடிக்குதது, தொடுத உணச்சி இந்த அஞ்சு புலனையும் அறிஞ்சு அத அடக்கி ஆளுதவன இந்த ஒலகம் ஒசத்தியா பேசும்.

    குறள் 28:

    நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
    மறைமொழி காட்டி விடும்

    ஒசந்த படிப்பாளி மக்களோட பெருமைய ஒலகத்துல அழியாம வெளங்குத அவங்களோட நூல்களே காட்டிக் கொடுத்துடும்.

    குறள் 29:

    குணமென்னுங் குன்றேறி நின்றார் வெகுளி
    கணமேயுங் காத்தல் அரிது

    நல்ல குணத்த மல போல கொண்டிருக்குத பெரிய மனுசங்க கோவப்பட்டாங்கன்னா அவங்க மனசுல அந்த கோவம் ஒரு கணம் கூட நெலைச்சு நிக்காது.

    குறள் 30:

    அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
    செந்தண்மை பூண்டொழுக லான்

    எல்லா உயிர்கிட்டயும் நேசத்தோட பாசங்காட்டுத நல்ல மனுசங்க (அறவோர்) யாரோ அவர தான் நாம அந்தணர் னு சொல்லுதோம்.

    ******************************

    கட்டுரையாளரைப் பற்றி

    இயற்பெயர் –  பத்மா ஸ்ரீதர்
    புனைப் பெயர் – நாங்குநேரி வாசஸ்ரீ
    தமிழார்வம் கொண்ட இல்லத்தரசி. முன்னாள் ஆசிரியை.
    கதைகள், கவிதைகள் எழுதுவதில் விருப்பம் அதிகம்.
    இதுவரை எழுதிய தளங்கள் : சிறுகதைகள்.காம், எழுத்து.காம், ப்ரதிலிபி.காம்

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம் – 2

    நாங்குநேரி வாசஸ்ரீ

    நெல்லைத் தமிழில் திருக்குறள் – அதிகாரம் 2 – வான் சிறப்பு

    குறள் 11:

    வானின் றுலகம் வழங்கி வருதலால்
    தானமிழ்தம் என்றுணரற் பாற்று

    நாம இருக்க இந்த ஒலகத்த வாழ வெக்கதால மழைய அமிழ்தம் னு சொல்லுதோம்.

    குறள் 12:

    துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
    துப்பாய தூஉம் மழை

    வயக்காட்டுல வெளைச்சலுக்கு உதவுத மழைத் தண்ணி , பொறவு வெளஞ்சத வச்சி தின்னும்போதும் தாகத்துக்கு குடிக்கவும் ஒதவுது.

    குறள் 13:

    விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
    உள்நின் றுடற்றும் பசி

    ஒலகத்த சுத்தி கடல் தண்ணி இருந்துச்சினாலும், மழ பெய்யலேனா வெள்ளாம பாக்க முடியாம வயித்து பசி மனுசன வாட்டி வதைக்கும்.

    குறள் 14:

    ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்
    வாரி வளங்குன்றிக் கால்

    மழை ங்குத வருமானம் இல்லைன்னா வெவசாயி வெள்ளாம பாக்க மாட்டான்.

    குறள் 15:

    கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
    எடுப்பதூஉம் எல்லாம் மழை

    பொழியாம சனத்த நோகடிக்குத மழை பொறவு பொழிஞ்சு அவுகளுக்கு ஆதரவா நல்லதும் செய்யும்.

    குறள் 16:

    விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
    பசும்புல் தலைகாண் பரிது

    வானம் பாத்த பூமியில மழத்துளி விழலேன்னா புல்லோட தலையக் கூட காங்க முடியாது.

    குறள் 17:

    நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
    தான்நல்கா தாகி விடின்

    மேகம் கடல்லேந்து மோந்த தண்ணிய திரும்ப மழையா பொழியாம உட்டிச்சிதுன்னா கடல் தண்ணியும் வத்தி போவும்.

    குறள் 18:

    சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
    வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு

    மழ பெய்யாம போச்சுன்னா சாமிக்கு தினமும் பூசையும் நடக்காது, வானவர்க்கு நடக்க திருவிழாவும் நடக்காது.

    குறள் 19:

    தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம்
    இனம் வழங்கா தெனின்

    மழை பெய்யாமப் போச்சுதுன்னா மத்தவனுக்கு தானமும் செய்ய இயலாம , தான் நோம்பு இருக்கவும் மாட்டாம மனுசனுக்கு தடங்கலா வந்து முடியும்.

    குறள் 20:

    நீரின் றமையா துலகெனின் யார்யார்க்கும்
    வானின் றமையா தொழுக்கு

    எத்தாம்பெரிய மனுசனாலயும் தண்ணி இல்லாம இருக்க முடியாது. அந்த தண்ணிய கொடுக்குத மழை பெய்யாம போச்சுதுன்னா ஒலகம் ஒழுக்கங் கெட்டுச் சீரளியும் னு உணந்து நடக்கணும்.

    ******************************

    கட்டுரையாளரைப் பற்றி

    இயற்பெயர் –  பத்மா ஸ்ரீதர்
    புனைப் பெயர் – நாங்குநேரி வாசஸ்ரீ
    தமிழார்வம் கொண்ட இல்லத்தரசி. முன்னாள் ஆசிரியை.
    கதைகள், கவிதைகள் எழுதுவதில் விருப்பம் அதிகம்.
    இதுவரை எழுதிய தளங்கள் : சிறுகதைகள்.காம், எழுத்து.காம், ப்ரதிலிபி.காம்

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம் – 1

    நாங்குநேரி வாசஸ்ரீ

    வாசகர்களுக்கு வணக்கம்,

    இதை நான் எழுதுவதற்கு, எங்கள் ஊரில் (நாங்குநேரி) கத்தரிக்காய் விற்று வந்த இசக்கித்தாய் என்ற பாம்பட ஆச்சி தான் காரணம்.  திருக்குறள் ஒப்புவித்தல் போட்டிக்காக நாங்கள் பயிலும்போது, ஒவ்வொரு முறையும் திருவள்ளுவரைக் காண்பித்து, இந்தச் சாமி யாரு? இவுங்க சொன்னத தமிழ்ல சொல்லு தாயி. நானும் கேட்டுக்கிடுவேன் இல்ல என்பாள்.  அவளைப் பொறுத்தவரை அவள் பேசுவதுதான் தமிழ்.  இறை எய்திவிட்ட அவள் எங்கிருந்தோ இருந்து கேட்டுக்கொண்டிருப்பாள் என நினைத்து, பல ஆண்டுகளுக்குப் பின் எழுதும் உரை இது. தனைச் சான்றோர்கள் வாசிக்க வேண்டும் என்ற  சிறிய அவாவுடன் வல்லமை இதழுக்கு அனுப்புகிறேன். பிழை இருந்தால் மன்னிக்கவும். – நாங்குநேரி வாசஸ்ரீ

    நெல்லைத் தமிழில் திருக்குறள் – அதிகாரம் 1 – கடவுள் வாழ்த்து

    குறள் 1:

    அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
    பகவன் முதற்றே உலகு.

    எல்லா எழுத்தும் ‘அ’ ல தான் தொடங்குது. (அது போல) நாம நிக்க, திங்குத, தூங்குத இந்த ஒலகத்தோட தொடக்கம் கடவுள்.

    குறள் 2:

    கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
    நற்றாள் தொழாஅர் எனின்

    எல்லாத்தையும் அறிஞ்ச கடவுள கும்பிடலேன்னா நீ படிச்ச படிப்பால என்ன பிரயோசனம்..

    குறள் 3:

    மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
    நிலமிசை நீடுவாழ் வார்

    பூ போல உள்ள மனசுக்குள்ள குடியிருக்க கடவுள நெனக்கவன் சந்தோசமா இந்த உலகத்துல நெறைய நாள் வாழுவான்.

    குறள் 4:

    வேண்டுதல்வேண் டாமை இலானடி சேர்ந்தார்க்கு
    யாண்டும் இடும்பை இல

    வேணும் வேண்டாம் னு நெனப்பே இல்லாத கடவுளோட திருவடிய கும்பிடுதவனுக்கு ஒருநாளும் தொயரம் அண்டாது.

    குறள் 5:

    இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
    பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு

    கடவுளோட உண்மையான புகழ விரும்பி அறிஞ்சவனோட புத்திக்கு நல்லதும் கெட்டதும் ஒண்ணு போலத் தோணும்.

    குறள் 6:

    பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
    நெறிநின்றார் நீடுவாழ் வார்

    கண்ணு, காது, மூக்கு, வாய், ஒடம்பு ங்கற அஞ்சு பொறி லேந்தும் பிறக்குத கெட்ட ஆசைய அவிச்சு ஒழிச்சு இருக்க கடவுளோட பொய்யில்லாத ஒழுக்கத்த கடைபிடிச்சாம்னா அவன் நெறைய நாள் வாழுவான்.

    குறள் 7:

    தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
    மனக்கவலை மாற்றல் அரிது

    தனக்கு ஒப்பும சொல்ல ஏலாத கடவுளோட காலப் புடிச்சவன தவிர மத்தவனோட மனத் தொயரத்த மாத்துதது சுளுவான காரியம் இல்ல.

    குறள் 8:

    அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
    பிறவாழி நீந்தல் அரிது

    அறக்கடலா இருக்க கடவுள நெனயாதவன் மாறி மாறி பொறந்தும் செத்தும் பல சென்மம் எடுத்து பெறவி கடல்ல நீந்த முடியாம கெடந்து சீரளியுவான்.

    குறள் 9:

    கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
    தாளை வணங்காத் தலை

    சோலி பாக்காத கண்ணு, காது, மூக்கு, வாய், ஒடம்பால எவ்ளோ செரையோ அது போல தான் கடவுள வணங்காதவனோட தலயும்.

    குறள் 10:

    பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
    இறைவன் அடிசேரா தார்

    கடவுள கும்பிடுதவனால மட்டுந்தான் பிறப்புங்குத கடலுக்குள்ள நீந்தி கரைய கடக்க முடியும். மத்தவனுக்கு சிரமந்தான்.

    ******************************

    கட்டுரையாளரைப் பற்றி

    இயற்பெயர் –  பத்மா ஸ்ரீதர்
    புனைப் பெயர் – நாங்குநேரி வாசஸ்ரீ
    தமிழார்வம் கொண்ட இல்லத்தரசி. முன்னாள் ஆசிரியை.
    கதைகள், கவிதைகள் எழுதுவதில் விருப்பம் அதிகம்.
    இதுவரை எழுதிய தளங்கள் : சிறுகதைகள்.காம், எழுத்து.காம், ப்ரதிலிபி.காம்

    Share