-நாங்குநேரி வாசஸ்ரீ

நெல்லைத் தமிழில் திருக்குறள் – அதிகாரம் 11 – செய் நன்றியறிதல்

 

குறள் 101:

செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது

நாம எந்த ஒதவியும் செய்யாத போதும் ஒருத்தங்க நமக்கு ஒதவியா இருந்தாங்கன்னா அதுக்கு பதிலா வானத்தையும், பூமியையும் குடுத்தாக் கூட சமமா இருக்காது.

குறள் 102:

காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது

நமக்கு நெருக்கடியா இருக்கும்போது ஒருத்தங்க செஞ்ச ஒதவி சின்னதா இருந்தாலும் நம்மளோட நெருக்கடிய நெனச்சோம்னா அந்த ஒதவி பூமிய விட பெரிசா தோணும்.

குறள் 104:

தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார்

தினையளவு செஞ்ச ஒதவியையும் அதோட பயன அறிஞ்ச நல்லவங்க பனையளவு பெரிய ஒதவியா நெனச்சிக்கிடுவாங்க.

குறள் 105:

உதவி வரைத்தன் றுதவி உதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து

ஒதவிங்கறது எம்புட்டு செஞ்சாங்கன்னு பாத்து மதிக்குதது இல்ல, அந்த ஒதவிய பெறுதவங்களோட கொணத்த பொறுத்து ஒதவியோட மதிப்பு  மாறிக்கிடும்.

குறள் 106:

மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க
துன்பத்துள் துப்பாயார் நட்பு

குத்தங்குறை இல்லாதவங்களோட ஒறவ மறக்கக் கூடாது. துன்பத்துல தொணையா இருந்தவங்களோட நட்ப விட்டுடக் கூடாது.

குறள் 107:

எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்
விழுமந் துடைத்தவர் நட்பு

தன்னோட துன்பத்த போக்கி ஒதவி செஞ்சவங்கள  ஏழேழு பொறப்பிலயும் நெனைச்சிக்கிடுவாங்க நல்லவங்க.

குறள் 108:

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று

ஒருத்தன் நமக்கு செஞ்ச ஒதவிய மறக்குதது நல்லதில்ல. அவன் செஞ்ச தீங்க அப்பமே மறக்கது நல்லது.

குறள் 109:

கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த
ஒன்றுநன் றுள்ளக் கெடும்.

முன்ன ஒருக்க நன்ம செஞ்சவன் பெறகு நம்ம கொலை செய்யுதது கணக்கா பெரிய தீம செஞ்சாலும் அவன் முன்ன செஞ்ச நன்மைய நெனைச்சோம்னா நம்ம மனசிலேந்து அவன் செஞ்ச பெரிய தீம காங்காம போயிடும்.

குறள் 110:

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு

எந்த அறத்த மறந்தவங்களுக்கும் பாவத்த கழுவுததுக்கு வழி உண்டு. ஒருத்தன் செஞ்ச ஒதவிய மறந்து தீம செஞ்சவனுக்கு வழியே கெடையாது.

______________________________________

கட்டுரையாளரைப் பற்றி

இயற்பெயர் –  பத்மா ஸ்ரீதர்
புனைப் பெயர் – நாங்குநேரி வாசஸ்ரீ
தமிழார்வம் கொண்ட இல்லத்தரசி. முன்னாள் ஆசிரியை.
கதைகள், கவிதைகள் எழுதுவதில் விருப்பம் அதிகம்.
இதுவரை எழுதிய தளங்கள் : சிறுகதைகள்.காம், எழுத்து.காம், ப்ரதிலிபி.காம்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.