-நாங்குநேரி வாசஸ்ரீ

நெல்லைத் தமிழில் திருக்குறள் – அதிகாரம் 12 – நடுவுநிலைமை

 

குறள் 111:

தகுதி யெனவொன்று நன்றே பகுதியாற்
பாற்பட் டொழுகப் பெறின்

சண்டக்காரங்க, அல்லசல் மனுசங்க, சேக்காளிங்க னு பிரிச்சி பாத்து பார பட்சம் பாக்காம நியாயமா இருக்குதது தான் நல்லது செய்யுத நடுவுநிலைமங்குத தகுதி.

குறள் 112:

செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி
எச்சத்திற் கேமாப் புடைத்து

நடுவுநிலைமை உள்ளவனோட செல்வத்துக்கு அழிவுங்கது கெடையாது. அது அவனோட அடுத்தடுத்த தல முறைக்கும் நன்மைய செய்யும். .

குறள் 113:

நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை
அன்றே யொழிய விடல்

நல்லதையெ தருததா இருந்தாலும் நியாயங்கெட்ட வழில வருத லாபத்த அப்பமே விட்டுபோட்டு போயிடணும்.

குறள் 114:

தக்கார் தகவிலர் என்ப தவரவர்
எச்சத்தாற் காணப் படும்

இவர் நியாயமான மனுசனா,  நியாயங்கெட்டவரா ங்குத வித்தியாசத்த அவருக்கு பின்னால இருக்கப் போகுத செல்வம், புகழ், பெத்த பிள்ளைங்களோட ஒழுக்கம் இத வச்சி தெரிஞ்சிக்கிடலாம்.

குறள் 115:

கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்
கோடாமை சான்றோர்க் கணி

வாழ்க்கைல நல்லதும் கெட்டதும் இருக்குதது இயற்கை. அந்த ரெண்டு நிலைமலேயும் நியாயமா நடந்துகிடது தான் பெரிய மனுசங்களுக்கு அழகு.

குறள் 116:

கெடுவல்யான் என்ப தறிகதன் நெஞ்சம்
நடுவொரீஇ அல்ல செயின்

நெஞ்சுக்குள்ள நியாயங்கெட்ட நெனைப்பு வந்து தப்பு செய்யணும்னு தோண ஆரம்பிச்சிடுச்சின்னா கெட்டழியப் போகுதேன்னு அவன் தன்னத்தானே தெரிஞ்சிக்கிடணும்.

குறள் 117:

கெடுவாக வையா துலகம் நடுவாக
நன்றிக்கண் தங்கியான் தாழ்வு

நியாயந் தவறாம அற வழில வாழுத ஒருத்தருக்கு அதனால பணம் சேராம வறுமைல வாடினாலும் அவர ஒலகம் ஏழைன்னு நெனைக்காது.

குறள் 118:

சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபாற்
கோடாமை சான்றோர்க் கணி

முன்ன சமமா நின்னு பொறவு பொருள சீர்தூக்கி பாக்க ஒதவுத தராசுமுள் போல ஒருபக்கம் சாயாம நியாயமா நடந்துகிடதுதான் படிச்ச பெருமக்களுக்கு அழகு.

குறள் 119:

சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா
உட்கோட்டம் இன்மை பெறின்

நேர்மையும் நெஞ்சுறுதியும் ஒருத்தருக்கு இருந்திச்சின்னா அவரோட சொல்லுல நீதியும் நியாயமும் இருக்கும். அதுக்குப் பேருதான் நடுவுநிலைமை.

குறள் 120:

வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
பிறவும் தமபோல் செயின்

மத்தவங்களோட பொருளயும் தன்னோட பொருளா நெனச்சி பாதுகாத்து நேர்மையா விக்குததுதான், வியாபாரம் செய்யுதவங்களுக்கு நல்ல வியாபார முறையா இருக்கும். ..

______________________________________

கட்டுரையாளரைப் பற்றி

இயற்பெயர் –  பத்மா ஸ்ரீதர்
புனைப் பெயர் – நாங்குநேரி வாசஸ்ரீ
தமிழார்வம் கொண்ட இல்லத்தரசி. முன்னாள் ஆசிரியை.
கதைகள், கவிதைகள் எழுதுவதில் விருப்பம் அதிகம்.
இதுவரை எழுதிய தளங்கள் : சிறுகதைகள்.காம், எழுத்து.காம், ப்ரதிலிபி.காம்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *