Tag: மீனாட்சி பாலகணேஷ்

  • காதலின் பொன்வீதியில் – 1

    மீனாட்சி பாலகணேஷ்.

     

    காதல், காதல், காதல் இன்றேல்
    சாதல் சாதல் சாதல் – ( குயில் பாட்டு)

    என்றான் பாரதி, இதனை ஏன் இவ்வாறு கூறினான் என நான் பலமுறை யோசித்ததுண்டு. காதல் எனில் அன்பு, பக்தி, விருப்பம், ஆவல், வேட்கை, காமம் எனவெல்லாம் பொருள் கொள்ளலாம். இங்கு நாம் பார்க்கப் போவது ஒரு ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையிலான அன்பு அல்லது காதல் என்பதனைப் பற்றித் தான். ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான காதல் உணர்வை இயற்கை படைத்ததற்குக் காரணம் ஒரு இனம் அழிந்து விடாமல் தொடர்ந்து வளர ஏதுவாக இருப்பதற்கும், அதற்கான முதல் படியாக இரு பாலரிடையும் அன்பு செழித்து வளர்வதற்காகவும் தான் எனலாம். ஆகவே தான் காதல் போயின் எல்லாம் போயிற்று, சாதல் ஒன்றே எஞ்சி நிற்பது என்றானோ பாரதி!

    இத்தகைய காதல் உணர்வு நூதனமானது. சிறிது சிந்தித்துப் பார்த்தால் இத்தனை புலவர்கள், எழுத்தாளர்கள் ஆகியோர் காதலைப் பற்றியே விதம் விதமாக ஏன் எழுதிக் குவித்துள்ளனர் என ஆராயலாம்! காதல் சம்பந்தமான உணர்வுகள் மனித குலத்துக்கு மட்டுமே உரிமையானதா என அறுதியிட்டுக் கூற இயலவில்லை. இக்கட்டுரையின் நோக்கமும் அதுவல்ல. காதல் சம்பந்தப்பட்ட அழகிய மென்மையான உணர்வுகள் பற்றி கற்ப கோடி காலங்களாக இருந்து வரும் இனிய நயங்களைப் பகிர்ந்து கொள்வது தான் இதன் நோக்கம்.

    ********************************************

     

    மண்ணுள் இழிந்த விண்மேகம்

    rama

    கண்ணோடு கண்ணிணை நோக்கி இதயங்கள் ஒன்றோடு ஒன்று கலந்து விட்ட நிலை. அன்புடை நெஞ்சங்கள் காதலில் ஒன்றுபட்டு விடுகின்றன. சீதையின் கண்முன் தோன்றி, கருத்தைக் கவர்ந்து, சிந்தையில் புகுந்து எண்ணத்தில் கலந்து நின்று விட்டான் அண்ணல். அவன் யாரென்று தெரியாத நிலையில் அவள் கலக்கம் கொள்கிறாள். உள்ளத்தைப் பறிகொடுத்தாயிற்று. எண்ணத்தில் நிறைந்தவனுடன் வாழ்க்கையை இணைத்துக் கொள்ள வேண்டுமல்லவா?

    ‘யாரவர்? அவரை எங்ஙனம் அறிந்து கொள்வேன்?’ எனப் பதைக்கிறாள்.

    காரிருள் இரவு; மிதிலாநகரின் கன்னிமாடத்தில் உறக்கமின்றி விழித்திருக்கிறாள் சீதை. உள்ளத்தைக் கொள்ளை கொண்டு சென்றவனின் நினைவு சுட்டெரிக்கிறது. தாபம் மிகுகின்றது.

    கீற்று நிலா வானில் பளீரிடுகின்றது; அதன் மெல்லொளியில் தொலைவில் மலை முகடுகள் தெரிகின்றன. ரசிக்க வேண்டிய இந்த அழகு இவளுக்குப் பெரும் துன்பத்தைத் தருகிறது. அத்துன்பத்தின் நடுவிலும் இயற்கையின் அழகைத் தன் இன்னுயிரைக் கவர்ந்தவனுக்குப் பொருத்தி நோக்கி இன்பம் காண்கிறாள்.

    “அந்த மேருமலையை எடுத்து நாண் பூட்டியது போன்ற ஒரு பெருத்த வில்லுடன், அதனைப் பற்றிய கையும், தூண்கள் போன்ற தோளும் கொண்டு, அம்புகள் செருகப் பெற்ற அம்பறாத் தூணியும், ஒளி மிகுந்த இந்தக் கீற்று நிலாவைப் போன்ற பூணூல் அணிந்த மார்பும் ஆகிய இவற்றைக் கொண்டவனை மீண்டும் காண முடிந்தால் இழந்த எனது உயிரை நான் பெற்றவளாவேன் அல்லவோ,” என மறுகுகிறாள்.

    கம்பன் கவிநயம் ஈண்டு நம் கருத்தைக் கொள்ளை கொள்கிறது. காதலை மட்டும் இங்கு அவன் பாடவில்லை; சீதையின் பிரிவுத் துயரை மட்டுமே இங்கு அவன் கூறவில்லை; இதை ஒரு வாய்ப்பாகக் கொண்டு அண்ணலின் அழகு வடிவை இன்னுமொரு முறை சொற்களில் வடித்துச் சுவைக்கிறான். நாமும் சுவைக்கத் தருகின்றான்! அவன் தோளும் கையும் முப்புரி நூல் அணிந்த பரந்த திருமார்பும் சீதை மட்டுமல்ல, கம்பன் உள்ளத்தையும் கொள்ளை கொள்ளும் அழகு வாய்ந்தனவாம்!

    நாண் உலாவு மேருவோடு நாண் உலாவு பாணியும்
    தூண் உலாவு தோளும் வாளியூடு உலாவு தூணியும்
    வாள் நிலாவின் நூல் உலாவும் மாலை மார்பும் மீளவும்
    காணல் ஆகும் ஆகின் ஆவி காணல் ஆகுமே கொலாம்.

    இத்தகைய உருவ கம்பீரம் கொண்ட அண்ணல் இவள் உயிரைக் கவர்ந்து சென்று விட்டான். யார் இவன் எனத் திகைக்கிறாள்; காதலில் கசிந்து உருகுகிறாள்; புலம்புகிறாள்; புரியவில்லை; ஒன்றும் விளங்கவில்லை. காதல் நோய் மிகுகின்றது. அத்துணைத் தாபமும் தன்னை இந்தப் பாடு படுத்திச் சென்றவனின் பால் சினமாக மாறுகின்றது. “என்ன ஆண்மகன் இவன்? கொடியவனான மன்மதன் பஞ்சினை அழிக்கும் தீயைப் போல கூரிய அம்புகளைத் தன் வில்லிலிருந்து என் உயிரைப் பற்றி வதைக்குமாறு எய்கிறான். இதனால் நான் படும் பாடு சொல்லவொணாது. இத்தருணத்தில் ஆண்மை நிறைந்த ஒரு ஆண்மகனுக்கு அழகு என்ன? வருந்தும் பெண்களின் வருத்தத்தை நீக்கி அபயம் அளிப்பதே. ஆனால் இந்தப்பிரான் அவ்வண்ணம் செய்திலனே! இவனது ஆண்மை என்ன தன்மையதோ!” என வெறுப்பும் சலிப்பும் மீதூரப் புலம்புகின்றாள் சீதை.

    பஞ்சு அரங்கு தீயின் ஆவி பற்ற நீடு கொற்ற வில்
    வெஞ் சரங்கள் நெஞ்சு அரங்க வெய்ய காமன் எய்யவே
    சஞ்சலம் கலந்த போது தையலாரை உய்ய வந்து
    அஞ்சல் அஞ்சல் என்கிலாத ஆண்மை என்ன ஆண்மையே.

    கம்பன் ஒருவனே காகுத்தனைப் போற்றவும் சீதையின் சார்பில் அவன் ஆண்மையையே பழிக்கவும் உரிமை பெற்றவன். இராமன் பால் கொண்ட பேரன்பே அவனை இவ்வாறு எழுதப் பணித்தது எனலாம். சீதை அண்ணல் பால் கொண்ட அன்பின் உயர்வையும் அதனாலேயே உரிமை கொண்டு அவனைப் பழிப்பதையும் தனது இந்த ஒரு பாட்டில் கவினுற வடித்துள்ளான்.

    எப்படிப் புலம்பியும் என்ன செய்தும் சீதை தனது உள்ளத்தாபமும் உடல் வெம்மையும் தணிந்திலள். பார்த்துக் கொண்டிருக்கும் போதிலேயே கருமேகங்கள் வந்து வானில் சூழ்ந்து கொண்டு விட்டன. ஒரு பெரிய மின்னற்கொடி மேகங்களின் குறுக்காக வெட்டியபடி ஓடித் தரையில் இறங்கி இழிந்து மறைகின்றது! இவை சீதைக்குத் திரும்பவும் அந்தக் கார்மேனி அண்ணலையும் அவன் செயலையும் நினைப்பூட்டுகின்றன.

    என்ன வியப்பு! ஆச்சரியமான ஒற்றுமை! இந்த மின்னலையும் மேகத்தையும் போல சில கணங்களிலேயே அண்ணலும் அவள் கண்முன் தோன்றி மறைந்து விட்டனே! கம்பன் தன் கதையின் நாயகனுக்காக எடுத்தாளும் ஒவ்வொரு உவமையும் அவனது செயலுடன் வெகு இயல்பாகப் பொருந்துவது என்ன விந்தை? தன் கருத்தை சீதையின் கருத்தாக ஏற்றிக் கூறுகிறான்:

    “அந்த விண்ணிலே தோன்றிய கார்மேகம் மின்னலெனும் முப்புரி நூலுடன் இந்த மண்ணில் இழிந்ததைப் போல அவர் வந்து என்முன் தோன்றி சில கணப் பொழுதுகளில் சென்றும் விட்டாரே!

    “யாரவர்? சில கணங்களின் நோக்கிலேயே என் உள்ளம் அவர்பாற் சென்று விட்டதே! என் எண்ணத்தில் குடி கொண்டுள்ளார். இருப்பினும் அவரை யார் என அறிய வொண்ணாது தவிக்கின்றேனே!

    “என் கண்களுக்கு உள்ளேயே இருக்கின்றார். அவரை நான் வெளியே விடவே இல்லை! அவ்வாறு இருந்தும் என் கண்களால் அந்தத் திருவுருவைக் காண இயலாது இருக்கின்றேனே! ஏன்?” சீதை தவிக்கிறாள்; பரிதவிக்கிறாள்.

    அந்த வடிவழகை, ஆண்மையின் கம்பீரத்தை, காதலின் கருணை நோக்கினை மீண்டும் கண்டு களிக்க அவள் உள்ளம் விழைகின்றது. இயலாமையினால் கடலெனக் குமுறிக் கொந்தளிக்கின்றது.

    விண்ணுளே எழுந்த மேகம் மார்பின் நூலின் மின்னொடு இம்
    மண்ணுளே இழிந்தது என்ன வந்து போன மைந்தனார்
    எண்ணுளே இருந்த போதும் யாவரென்று தேர்கிலேன்
    கண்ணுளே இருந்த போதும் என்கொல் காண்கி லாதவே.

    இராமனின் வடிவழகை இவ்வாறு சீதை வாயிலாகப் போற்றும் கம்பனின் கவிநயத்தைக் கண்டு மகிழ்கிறோம். அவளுடைய காதல் ஏக்கத்தையும், தாபத்தையும், துயரத்தையும் இதைவிட தத்ரூபமாக யாரால் எடுத்தியம்ப இயலும்? எண்ணத்தில் இருந்தும் யாவரென்று அறிய இயலாத தவிப்பும், கண்ணுள் இருந்தும் காண இயலாத கொடுமையும் மிக மிகப் பெரிதல்லவா?

    நமது எண்ணங்களும் சீதையுடன் நின்று சுழல்கின்றன!

    ********************************************

    picture source: dollsofindia.com

    Share
  • திருநடனம் ஆடினது எப்படியோ?

    மீனாட்சி பாலகணேஷ்

    ‘சிவனுக்கு உகந்தது சிவராத்திரி; அவன் தேவிக்கு உகந்தது நவராத்திரி,’ என சீர்காழி கோவிந்தராஜனின் இனிய குரலில் ஒரு அழகான பாடலைக் கேட்டதுண்டு. சிவராத்திரி என்பதற்கு வெவ்வேறு விளக்கங்கள் தரப்படுகின்றன. அவற்றுள் ஒன்று: சிவராத்திரி அன்று சிவபிரான் ‘தாண்டவம்,’ என்ற ஆனந்தமயமான பிரபஞ்ச நடனத்தை ஆடியதாகக் கூறப்படுவது. இன்னொரு விளக்கம்: சிவனும் சக்தியும் இணைந்த நாளே- அவர்கள் திருமணம் நடந்த நாளே சிவராத்திரி என்பது. இது சிவபெருமானுக்கு மிகவும் உகந்த நாளாகும் என்பது ஆன்றோர் கூறும் அருமையான உயர்ந்த விளக்கம்.

    amain

    சிவபிரானுடைய தாண்டவம் என்பது யாது?

    எப்பொருளின் இயக்கத்திற்கும் அடிநிலையாய் இருப்பவன் இறைவன் ஒருவனே. இறைவனது அசைவு தாண்டவம், கூத்து அல்லது விளையாட்டு எனப்படும். இது இரண்டு இடங்களில் சிறப்பாக நிகழ்வதாகக் கூறப்படுகிறது- ஒன்று, உயிர்களின் அறிவு; மற்றொன்று, தில்லைச் சிற்றம்பலம்.

    தில்லை மூதூர் ஆடிய திருவடி

    பல்லுயி ரெல்லாம் பயின்றன னாகி’ என மாணிக்கவாசகர் இவ்விரு இடங்களையும் திருவாசகத்தில் குறிப்பிடுகிறார்.
    உயிர்களின் அறிவில் பொருந்தி நின்று இடைவிடாது தனது இருப்பிடத்தை அவன் உணர்த்தி வருகிறான். இது அவனை, அவன் திருநட்டத்தை, நாம் அறிவால் உணர்ந்து அவனே அவ்வறிவு எனவும் உணர்ந்து கொள்வது. ஒரு நாமம், ஓர் உருவம் ஒன்றும் இல்லாத இறைவன், நாம் கண்டு உய்யுமாறு தில்லைப்பதியில் ஓர் உருவம் கொண்டு, ஆடவல்லான் எனும் திருநாமமும் கொண்டு ஐந்தொழிலும் புரிந்து நடனமிடுகிறான். நமக்கு பிறப்பு, முத்தி எனும் இரு நிலைகளையும் மாற்றி மாற்றித் தந்த வண்ணம் ஆடுகிறான். இதனைச் சேக்கிழார்,

    ‘ஆயும் நுண்பொரு ளாகியும் வெளியே
    அம்பலத் துள்நின்று ஆடுவார்,’ எனப் போற்றுவார்.

    ஆதிசங்கரர் இந்தத் தத்துவத்தினை மிகச் சுவைபட ‘அழகின் அலைகள்,’ எனப்படும் ‘சௌந்தர்ய லஹரி’யில் விவரிக்கிறார். மூலாதாரத்தில் அம்மையும் ஐயனும் ஆடும் ஆனந்த நடனத் தைப் பற்றிக் கூறுகிறார். “மூலாதார சக்கரத்தில், லாஸ்யம் என்கிற நடனம் செய்வதில் விருப்பம் உள்ளவளும் ‘ஸமயா’ எனப் பெயர் கொண்டவளுமான உன்னுடன் சேர்ந்து நவரசங்களும் ததும்பும் சிறந்த தாண்டவம் ஆடுகின்ற ஆனந்த பைரவரை தியானம் செய்கிறேன். பிரளய காலத்தில் உலகம் அழிந்து படும்; அதனைத் திரும்பப் படைக்கக் கருணை கொண்டு நீங்கள் இருவரும் இணைந்து இவ்வுலகிற்கே தாய் தந்தையாகி அதனைப் படைத்துக் காக்கின்றீர்கள்,” என்கிறார். ஆகவே ஐயனும் அம்மையும் இணைந்து நடனம் செய்தபடி ஒருவரை ஒருவர் பார்க்கவே உலகம் உற்பத்தியாகின்றது என அற்புதமானதொரு விளக்கத்தைத் தருகிறார் சங்கரர்.

    இந்த நட்டத்தைப் (நடனத்தை) பற்றித் திருமூலரும்,

    ‘எங்கும் திருமேனி எங்கும் சிவசத்தி
    எங்கும் சிதம்பரம் எங்கும் திருநட்டம்
    எங்கும் சிவமாய் இருத்தலால் எங்கெங்கும்
    தங்கும் சிவனருள் தன்விளை யாட்டதே!‘ என்கிறார்.

    திருநட்டமாவது முன்பே கூறியது போல அறிவு எனும் ஆகாயத்தில் ஐயன் ஆடுவதாகும். சிவம் அகண்டமாய் வியாபித்துள்ளது போல அதன் சத்தியும் அகண்டமாய் உள்ளதாம். சிவபெருமானுக்குத் திருமேனி சிவசத்தியே ஆவாள். அவனுடைய அருளாற்றல் எங்கும் நீக்கமற நிறைந்துள்ளது என்கிறார்.

    சிவபிரான் ஆடுவதற்குக் கொள்ளும் உருவம் ‘சிவாயநம, என்னும் ஐந்து திருவெழுத்துக்களே. அன்பர்கள் நாடும் திருவடி ‘ந’காரம் ஆக இருக்கும்; திருவயிறு ‘ம’காரம் ஆகும்; திருத்தோள்கள் ‘சி’காரம் ஆகும்; வேதங்களையும் ஆகமங்களையும் அருளிய திருமுகம் ‘வா’ஆகும்; திருமுடி ‘ய’ ஆகும்.

    ஆடும் படிகேள்நல் அம்பலத்தான் ஐயனே
    நாடும் திருவடியிலே நகரம்- கூடும்
    மகரம் உதரம் வளர்தோள் சிகரம்
    பகரும்முகம் வாமுடியப் பார். (உண்மை விளக்கம்)

    இந்த நடனம் பக்குவமடையாத உயிர்களுக்கு ஊன நடனமாகவும், பக்குவமடைந்த உயிர்களுக்கு ஞான நடனமாகவும், அனைத்துயிர்களும் உய்ய ஆனந்த நடனமாகவும் பரிணமிக்கிறதாம். எவ்வாறு?

    ஐயன் தனது நடனத்தின் மூலமாக நிகழ்த்தும் (படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் எனும்) ஐந்தொழில்களும் ‘ஊன நடனம்’ எனக் கூறப்படும். இத்தொழில்களால் உயிர்களுக்கு உலக நுகர்ச்சியும் சிற்றறிவும் உண்டாகி, அவை உலக வாழ்வில் மயங்கி நிற்கின்றன. ஆதலால் இது ‘ஊன நடனம்’ எனப்பட்டது.

    துடி எனும் உடுக்கையால் ஒலி ஏற்படுத்தி, படைத்தல் தொழிலை நிகழ்த்துகிறான் இறைவன். அமைத்த திருக்கரத்தால் (அபயக் கரத்தால்) காத்தல் தொழிலைச் செய்கிறான். நெருப்பைக் கையில் ஏந்தி அழித்தல் தொழிலைப் புரிகிறான். முயலகன் மீது ஊன்றியிருக்கும் திருப்பாதம் திரோதம் என்னும் மறைத்தல் தொழிலைக் குறிக்கும். தூக்கிய திருவடி முத்தி அளித்து அருளும் தொழிலையும் குறிக்கும்.

    ‘தோற்றம் துடியதனில் தோயும் திதி அமைப்பில்
    சாற்றியிடும் அங்கியிலே சங்காரம்- ஊற்றமா
    ஊன்று மலர்ப்பதத்தில் உற்ற திரோதம் முத்தி
    நான்ற மலர்ப்பதத்தே நாடு,’ என்பது ஊன நடனத்தைக் குறித்த உண்மை விளக்கப் பாடல்.

    ஞான நடனமாவது, உயிர்களுக்கு முத்தி எனும் நிலையினைத் தருவதற்காக ஈசன் ஆடும் நடனம்.
    துடி: எனும் உடுக்கையை அசைத்து, பக்குவம் எய்திய உயிர்களின் உணர்விலிருந்து மாயையை உதறி விலக்குகிறான்;
    நெருப்பை எந்திய அவனது கரம்: அடியார்களின் வல்வினையைச் சுட்டெரிக்கும்;
    ஊன்றிய திருவடி: ஆணவ மலத்தை அடக்கி (சாய அமுக்கி) வைக்கும்;
    தூக்கிய திருவடி: பிறப்பு இறப்புகளில் சுழன்று உழலும் உயிர்களை அருளால்
    (நேயத்தால்) எடுத்துச் சுமக்கும்.

    அமைந்த கரம்: ஞானத்தை அளித்து பேரின்பக் கடலில் ஆழ்த்தும்.

    ‘மாயை தனைஉதறி வல்வினையைச் சுட்டுமலம்
    சாய அமுக்கி அருள் தான் எடுத்து- நேயத்தால்
    ஆனந்த வாரிதியில் ஆன்மாவைத் தான் அழுத்தல்
    தான் எந்தை யார்பரதம் தான்.’ (உண்மை விளக்கம்)

    பக்குவமடைந்த ஆன்மாக்களுக்கு இவ்வுலகில் பேரானந்தத்தை இடையறாது தருகின்ற நடனம் சிவனுடைய ஆனந்தக் கூத்தாகும்.

    இதனைத் திருமூலர் பல மந்திரங்களில் விளக்குகிறார்.
    ‘ஆனந்தம் ஆடரங்கம் ஆனந்தம் பாடல்கள்
    ஆனந்தம் பல்லியம் ஆனந்தம் வாச்சியம்
    ஆனந்தம் ஆக அகில சராசரம்
    ஆனந்தம் ஆனந்தக் கூத்து உகந்தானுக்கே,’ என்பது ஒரு மந்திரம்.

    ஈசன் உயிர்கள் எல்லாம் பேரின்பம் எய்தும் பொருட்டே ஆனந்தக் கூத்தினை நிகழ்த்தியருளுகிறான். தனது திருக்கூத்தின் மூலமாக ஐந்தொழில்களைப் புரிகிறான். அதனால் இறைவனின் இத்திருவருட் செயல்களும் , அவன் ஆடும் போது பாடப்படும் திருமுறைப் பாடல்களும், இசைக்கப்படும் பலவிதமான இசைக்கருவிகளும், வாத்தியங்களும் இன்பமானவை என அறியப்படுகின்றன. உலகிலுள்ள அசையும், அசையாப் பொருட்கள் அனைத்தும் அவனது ஆனந்தக் கூத்தினால் இன்புறுகின்றன.

    இந்த ஆனந்தக் கூத்தின் போது எல்லாமே ஆடுகிறது.

    ‘வேதங்கள் ஆட மிகு ஆகமம் ஆடக்
    கீதங்கள் ஆடக் கிளர் அண்டம் ஏழ் ஆடப்
    பூதங்கள் ஆடப் புவனம் முழுது ஆட
    நாதம் கொண்டு ஆடினான் ஞானானந்தக் கூத்தே.’

    இந்த மந்திரத்தில் நால் வேதங்களும் ஆடின என்கிறார். அது வேதத்தில் கண்டுள்ளபடி உலகத்தோர் ஒழுகி உய்யத் துணை நின்று அருள் செய்து ஈசன் ஆடியதை விவரிக்கும். அவற்றின் விளைவான ஆகமங்களும் (ஆடின) உலகத்தோர்க்கு வழி காட்டுமாறு ஆடினான் என்பதாம். அடுத்து கீதங்கள் எனப்படும் பண் சிறந்த இசை நூல்கள் சிறக்குமாறு ஆடினான் என்கிறார். ஏழு அண்டங்களும், பஞ்ச பூதங்களும் அசைய (ஆட; இங்கு, தத்தம் இயக்கங்களைச் செய்து ஒழுக எனப் பொருள் கொள்ள வேண்டும்), நாத தத்துவத்தை இடனாகக் கொண்டு ஆனந்தக் கூத்தை ஐயன் நிகழ்த்துகிறான் என்பார்.

    ‘ஆதி பரன்ஆட அங்கைக் கனலாட
    ஓதுஞ் சடையாட உன்மத்த முற்றாடப்
    பாதி மதியாடப் பாரண்ட மீதாட
    நாதமோ டாடினான் நாதாந்த நட்டமே.’

    சிவபிரான் இவ்வாறு நடனமாடிய போது அவன் கையில் ஏந்திய கனல் ஆடிற்று;

    எல்லோரும் போற்றிப் பரவும் சடையும் ஆடிற்று; அதில் சூடிய ஊமத்த மலரும் ஆடிற்று! கீற்றுப் பிறைமதி ஆடிற்று; அண்ட சராசரங்களும் இயைந்து ஆடின. சைவர்கள் உயர்வாகப் போற்றும் முப்பத்து ஆறாம் மெய்யாகிய நாதத்தின் கண் திருவருள் நிரம்ப நாதாந்த நட்டத்தை ஆடுகிறான் ஈசன்.

    சிவப்பரம்பொருளின் இந்த அற்புத நடனத்தில் சத்தியின் பங்கு மிகப்பெரிதானது.

    ‘இடங்கொண்ட சத்தியும் எந்தை பிரானும்
    நடங்கொண்டு நின்றமை நானும் அறிந்தேன்
    படங்கொடு நின்றஇப் பல்லுயிர்க் கெல்லாம்
    அடங்கலுந் தாமாய்நின் றாடுகின் றாரே.’

    சிவனுடைய இடப்பாகம் கொண்டவள் சத்தி. அவளைப் பிரியாது சிவபெருமான் அவளுடன் திருநடம் புரிகின்றான். அதை ஞான ஆன்மாக்கள் உணர்ந்து கொள்வர். திரை போல நின்று மறைக்கும் ஆணவ மலத்தைக் கொண்டுள்ள உயிரினங்கள் அனைத்தும் அதனை நீங்கி உய்யுமாறு சிவபிரான் அடங்கலும் தாமாக நின்று ஆடியருளுகின்றான்.

    இதனால் எல்லாம் எவ்வாறு சிவபெருமானுக்கு சிவராத்திரி உகந்ததாயிற்று என அறிந்து கொள்ளலாம்.

    தத்துவங்களையும், ஆகமங்களையும் கற்றுணர்ந்தோரும், அவர்கள் மூலம் கேட்டு உணர்வோருமே இக்கருத்துக்களையும், சிவப்பரம்பொருள் உயிர்கள் மாட்டுக் கொண்ட அன்பால் நிகழ்த்தும் கூத்தின் தன்மையையும் உணர்ந்து இன்புற முடியும். 17-ம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ் மூவருள் ஒருவரான முத்துத் தாண்டவர், எளிய இனிய சொற்களைக் கொண்டு தமிழில் ஆடவல்லான் மேல் பல பாடல்களை, இத்தகைய அரிய பெரிய கருத்துக்களைப் பொதிந்து, இயற்றினார். ‘ஆடினதெப்படியோ,’ எனும் கல்யாணி ராகப் பாடலில் ‘ஐயனே, இத்தகைய அரிய திருநடனத்தை நீ எவ்வாறு ஆடினையோ?’ என வியந்து துதித்துப் பாடுகிறார். தத்துவங்களையும், ஆகமங்களையும் கற்றுணராத எளிய மக்களும் இவற்றைக் கேட்டு, பாடி மகிழும் தரத்தில் அமைந்த பாடல் இதுவாகும்.

    ஆடினதெப்படியோ திருநடனம் ஆடினதெப்படியோ
    தேடிய மெய்ப்பொருளே வளமேவுஞ்
    சிதம்பரத் தேயொரு சேவடி தூக்கிநின்(றாடின)

    என ஆடியதை வியந்தவர், “மன்றுள் (அம்பலத்தில்) ஆடுவதற்கு ஒரு உருவம் இருக்க வேண்டும். அது, ஆணாகவோ, பெண்ணாகவோ, ஏதாவது ஒரு வடிவு கொண்டோ இருக்க வேண்டும். நீ ஒன்றாக உள்ள ஆண் உருவம் கொண்டவன் அல்ல; அம்மையும் அப்பனுமான இரண்டு வடிவமும் அல்ல; ஒன்றில் இரண்டான மாதொரு பாக வடிவும் அல்ல.

    ஒன்றல்ல இரண்டல்ல ஒன்றிரண்டு மல்ல
    நன்றல்ல தீதல்ல நாதவிந்து மல்ல
    அன்றல்ல இன்றல்ல ஆதியந்த முமல்ல
    மன்றுள் மரகத வல்லிகொண் டாடநின் (றாடின)

    “கண்ணால் எவரும் காணக் கூடிய உருவம் கொண்டவன் அல்ல. காண இயலாத அருவமானவனும் அல்ல. உன் வடிவின் நீள அகலங்களை அறியக் கிடைக்காது. வாள் நுதல் பச்சை மடந்தை ஆகிய மரகதவல்லி சிவகாமி கொண்டாட நின்று ஆடுகின்றனையே ஐயா!

    ஆணல்ல பெண்ணல்ல அன்றி அலியுமல்ல
    காணும் உருவம் அல்ல காணா அருவமல்ல
    சேண் அல்ல வேயொரு தேவர்க்குள் ளேதேவே
    வாணுதற் பச்சை மடந்தைகொண் டாடநின் (றாடின)

    “பூதங்களாகவும், உள்ளும் புறமுமாயும் உள்ளவன் நீயல்ல! வேதங்கள் விளக்கிக் கூறும் பொருளும் நீ அல்லவே! ஆதவன் கிழக்கே உதித்து மறைவது போலத் தளர்ச்சி உடையவன் அல்ல. (இங்கு ஆதவனை உவமித்தது, உலகத்தோர் அவனை உயர்வும் திண்மையும் பெருமையும் உடையவனாகக் கருதுவதால் தான்!) மாது உமையாள் உன்னைக் கொண்டாடுகின்றனளே அப்பா!” என முத்தான வரிகளில் பரம் பொருளைக் கொண்டாடுகிறார் முத்துத் தாண்டவர்.

    பூதங்கள் அல்ல புறம்பல்ல உள்ளல்ல
    வேதங்க ளாலே விளங்கும் பொருளல்ல
    ஆதவன் போலே அசையும் வடிவல்ல
    மாதுமை யாள்பச்சை வல்லிகொண் டாடநின் (றாடின)

    சைவ சித்தாந்தப் பேரறிவாளர், பேராசிரியர் திரு. கோ. ந. முத்துக்குமாரசுவாமி ஐயாஅவர்கள் சிவப்பரம்பொருளின் தன்மையைப் பின் வருமாறு அருமையாக விளக்குகிறார்:

    ‘சிவப்பரம்பொருளுக்கு இரு நிலைகள் கூறப்படும். ஒன்று- சொரூபநிலை. மற்றொன்று- தடத்தம். (ஸ்வரூபம், தடஸ்தம்) சொரூபநிலை உண்மை என்றும் கூறப்படும். தடத்தம் உயிர்களுக்கு அருளும் பொருட்டுப் பெருமான் எடுக்கும் வடிவம். அது நிஷ்களம், நிஷ்கள சகளம், சகளம் என மூவகைப்படும். நிஷ்களம் அருவம் என்றும் நிஷ்கள சகளம் அருவுருவம் என்றும் சகளம் உருவம் என்றும் கூறப்படும். சகளம் மாகேசுவர வடிவம். சிவனின் மாகேசுவர வடிவம் தட்சிணாமூர்த்தி, பிட்சாடணர், சந்திரசேகரர் முதலிய 25 என்றும் கூறப்படும் சதாசிவ மூர்த்தி, நிஷ்கள சகளம். அது இலிங்க வடிவினதாகும்.
    ‘இலிங்கத்திற்கு ஐந்து முகமும் ஐந்து நிறமும் கூறப்படும். ஈசானமுகம்- உச்சி பளிங்கு நிறமுள்ள பாலர் முகம். தத்புருஷமுகம்- கிழக்கு. பொன்னிறமான அரசர் முகம். தெற்கு- அகோரம்- தாடியுடன் கூடிய கரிய முதியவரின் முகம். வாமதேவம்- வடக்கு. குங்குமம் போன்று சிவந்த மாதர் முகம். சத்யோஜாதம்- மேற்கு. வெள்ளை நிறமுள்ள இளைஞர் முகம். சதாசிவத்தின் ஐந்து முகங்களுள் சத்தியோஜாத முகத்தால் படைப்பும்; வாமதேவமுகத்தால் அளிப்பும்; அகோரமுகத்தால் துடைப்பும்; தத்புருஷ முகத்தால் மறைப்பும்; ஈசான முகத்தால் அருளும் நடைபெறும் என ஆகமங்கள் கூறும்.

    ‘இறைவன் கொள்கின்ற மூர்த்தங்களில் அட்ட மூர்த்தி வடிவங்களும் ஒருவகை. அவையாவன பஞ்சபூதங்கள் ஐந்தும் சூரியன் சந்திரன் ஆன்மா (புருடன்) எனும் மூன்றுமாக எட்டு. இறைவன் பஞ்ச பூதங்களையும் தனக்கு உடைமையாகக் கொண்டுள்ளதால் அவற்றின் நிறங்களும் அவனுக்கு உரியன என்பர்,’ என்கிறார் பேராசிரியர் ஐயா.

    இந்தப் பாடலின் அடுத்த சரணத்தில் கூறப்பட்ட பஞ்சபூதம், பஞ்சவர்ணம், அஞ்சுமுகம், ஆறாதாரம் எல்லாம் இறைவன் ஆன்மாக்களுக்கு அருளும் பொருட்டு எடுத்துக்கொண்ட சகள வடிவங்களே. தடத்தமே; உண்மை வடிவம் அல்ல. அவனுடைய சொரூபநிலை அருவமுமல்ல, அருவுருவமுமல்ல; உருவமுமல்ல. இந்த மூன்றும் தடத்த வடிவங்களே. இந்த தடத்த வடிவங்கள் எல்லாம் அவனது சொரூப நிலை அல்லது உண்மை அல்ல என்று கூறுவது இப்பாடலின் கருத்தாகும்.

    பஞ்ச வர்ணமுமல்ல பஞ்ச பூதமுமல்ல
    நெஞ்சில் நினைவுமல்ல நினைவிற் கனவுமல்ல
    அஞ்சு முகமுமல்ல ஆறாதா ரமுமல்ல
    வஞ்சி மரகத வல்லி கொண்டாடநின் (றாடின)

    ‘இதுவுமல்ல, அதுவுமல்ல; எதுவுமல்ல; எல்லாம் நீயே’ எனப் பொருள் கொள்ள வேண்டும்.
    அடுத்து சமீப காலத்தில் இயற்றப் பட்டு, பாடப்பெறும் ஒரு பாடல்; இதில் பராசத்தியின் நடனம் போற்றப்படுகிறது. இதனை இயற்றியவர் பாபநாசம் சிவன் ஆவார். (சிலர் சுத்தானந்த பாரதியார் எனவும் கூறுகின்றனர்!) இதில் ஆனந்த நடனத்தைப் பராசக்தி ஆடியருளியதாகக் கூறப்படுகிறது. சிறிது உற்று நோக்கின், ‘ன்’ ‘ள்’ எனும் ஒரே ஒரு எழுத்து வேற்றுமையால் ஐயனையும் அன்னையையும் ஒன்றுபடுத்திக் காணலாம்!! இத்தகைய பொருத்தம் தன்னிச்சையாக அமைந்ததா அல்லது கவிஞர் வேண்டுமென்றே அமைத்ததா என அறிய இயலவில்லை! பொருட் செறிவும், இசையழகும் மிகுந்து காம்போதி ராகத்தில் பாடப்படும் இந்தப் பாடல் தனி அழகு வாய்ந்தது. தேடுவோருக்குத் தத்துவப் பொருளையும் தன்னுள் அடக்கியது. சிறிது ஆழ்ந்து நோக்கலாமா?

    ஆனந்த நடனம் ஆடினாள்- சச்சி
    தானந்த நடனம் ஆடினாள்

    வானும் புவியும் வணங்கி மகிழ்ந்திட
    ஞானவெளியினில் வீணை ஓம் ஓம் என (ஆனந்த)

    பஞ்சபூதங்கள் முழங்க- குணங்கள்
    பாய்ந்து தாளம் வழங்க
    அஞ்சு தொழிலும் துலங்க- காலம்
    அதிரப் புவிகள் குலுங்க
    தஞ்சம் தஞ்சம் என்றுள் அன்பர் முறையிடத்
    தம்தாம் தம்தாம் தாகிட தகதீம் என (ஆனந்த)

    வானும் புவியும் வணங்கி மகிழ, ஞான வெளியினில் எழும் வீணையின் இன்னிசையும் அவளுடைய ஆனந்த நடனம் தான்;

    நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் எனும் பஞ்சபூதங்களின் இயக்கமும் இந்த ஆனந்த நடனம் தான்; அவை முழங்குகின்றன; குணங்கள் என்பன பிரகிருதி மாயையுடன் சம்பந்தப்பட்ட சத்துவ ரஜஸ தாமச குணங்கள். இவைதான் ஐம்பூதங்களின் தோற்றத்திற்கும் இயல்புக்கும் காரணம் ஆகும். இந்தப் பிரபஞ்ச ஆட்டமெல்லாம் முக்குணங்களால் நடப்பது தான். இதைத்தான் குணங்கள் தாளம் வழங்குகின்றன எனப் பாடல் உரைக்கின்றது. தனது ஆட்டத்தின் மூலம் அஞ்சு தொழில்களான, படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்பனவற்றையும் செய்கிறாள் பராசக்தி! இவளுடைய ஆனந்த நடனத்தில் பிரபஞ்சச் சுழற்சியாகக் காலம் அதிர்கின்றது; அண்ட சராசரமும் இதனால் (புவிகள்) குலுங்குகின்றது. மாயையில் உழலும் மானுட உயிர்களும் மற்றும் பிரபஞ்ச உயிர்களும், ‘நீயே தஞ்சம்,’ என, ஊட்டுவிப்பானும் உறங்குவிப்பானும் ஆட்டுவிப்பானும் அடங்குவிப்பானுமான அம்மையப்பனிடம் சரணமடைகின்றனர். இவையெல்லாம் நடத்திக் கொண்டு, ‘தம் தாம்,’ ‘தம் தாம்’ எனச் சீரான ஒரு அற்புத லயத்துடன் சிவசத்தியின் ஆனந்த நடனம் தொடர்ந்து நடை பெற்றுக் கொண்டே இருக்கிறது……………………..

    ஆங்கிகம் புவனம் யஸ்ய வாசிகம் சர்வ வாங்மயம்
    ஆஹார்யம் சந்த்ரதாராதி தம் நம ஸாத்விகம் சிவம்.

    அவனது நடனமெல்லாம் உலகின் இயக்கம்
    அவனது வாக்கெல்லாம் உலகத்தின் மொழி
    அவனது அணிகளெல்லாம் சந்திரனும் தாரகைகளுமே
    அவனை, நம் சிவனை, நாயகனை, நாளும் வணங்குவோம்.
    *****************************************************

    Share
  • குழல்வாய் மொழியாள் கொண்ட ஊடல்! (பாகம்-2)

    மீனாட்சி பாலகணேஷ்

    அன்புத் தம்பதிகளுக்குள் வாக்குவாதங்கள் வலுக்கின்றன! உலகமே அவன் காலடியில் பணிந்து கிடக்கும் நாயகனை அவனுடைய காதல் மனையாள் இகழ்ச்சியாகப் பேசி ஏசுகின்றாள்! அவனும் சளைக்காமல் ஏதேதோ சமாதானங்களைக் கூறிய வண்ணம் இருக்கிறான்.

    (வெளிப்படையாகத் தெரிவது இச்செய்தி! ஆழ்ந்து நோக்கினால், அவனை இகழ்வது போல, இரு பொருள் படப் புகழ்ந்து உயர்த்திப் பேசி, மகிழ்ந்து தன் மனத்தினுள் கொண்டாடிக் கொண்டிருக்கிறாள் இந்தக் குழல்வாய் மொழியாள் எனத் தான் தெரிகின்றது! அவளுடைய காதல் தலைவனும் சளைக்காமல் மறுமொழியாகத் தன் பங்கிற்குத் தானும் அவ்வண்ணமே உரைக்கின்றான்!)

    ரசிக்கத் தகுந்த விதத்தில் புலவர் பிரான் புனைந்துள்ள கவிதை நயத்தைத் தொடர்ந்து பார்க்கலாமே!

    “பெருமை நிறைந்த இந்தத் திரிகூட மலையில் இருக்கும் பெண்ணமுதே! இதைக் கேட்டுக் கொள்!  உங்கள் அண்ணனான கண்ணன் வரகினைத் தின்று பின்பு தன் வாயால் அதை எடுத்த கதை உனக்குத் தெரியாதோ? ‘வரகு தின்று வாயால் எடுத்த கதை,’ என்பது ஒரு சொல் வழக்கு. வீணான ஒரு செயலைச் செய்துவிட்டு பின்பு துன்பப் படுதலை விளக்குகிறது. உதாரணமாக, ராகி, சோளம், போன்ற பயிர் வகைகளை அவற்றின் கதிர்களிலிருந்து உதிர்த்துப் பச்சையாகவே உண்ணலாம். அவற்றில் பால் உள்ளதால் மென்று சுவைத்து விழுங்கலாம். வரகு மட்டும் வறண்ட தானியமாதலால், அவ்வாறு விழுங்கினால் தொண்டையை அடைத்துக் கொள்ளும். இந்தப் பழமொழியைக் கவிஞர் சமத்காரமாகக் கையாளுகின்றார் எனத் தெரிகின்றது.

    ‘உந்தன் அண்ணனான கண்ணன், முதலிலே பிறந்தவன், உலகை விழுங்கிப் பின் தன் வாயாலே அதை எடுத்து அன்னை யசோதைக்குக் காட்டிய பண்டைக் கதை,’ எனப் பொருள் கொள்ள வேண்டும்! முதல்வர் +அ+ கு- (அந்த உலகு).

    ‘அவன் காலில் போடுகின்ற சிலம்பைக் கையில் போட்டான்; கையில் அணியும் வளையை வாய்மேல் இட்டான்’; இது பித்தன் செய்யும் செயலாகத் தெரிகிறது.  ஆனால் இதன் உட்பொருள் வேறு! ‘பண்டொரு காலத்தில் அவன் மலையைக் கையில் ஏந்தினான்- கோவர்த்தனகிரியைக் கையில் குடையாக ஏந்தினான்! சிலம்பு= மலை எனவும் ஒரு பொருள் உண்டு. வளை என்றால் கைவளை எனவும், சங்கு எனவும் இருவிதமாகப் பொருள் கொள்ளலாம். ஆகவே, கையிலணியும் வளையை- சங்கினை ( பாஞ்சசன்னியம் என்னும் சங்கினை) வாய்மேல் வைத்து ஊதினான்,’ என்றார்.

    அடுத்து, “பெண்ணொருத்திக்காய் ஒருத்தி புடவை கிழித்தான் அவனே பித்தனாமே,” என்கிறான் குற்றாலநாதன். இதுவும் ஒரு புராணக் கதையை உள்ளடக்கியது! இரணியாக்கன் எனும் அசுரன் பூமாதேவியைக் கவர்ந்து சென்று கடலின் அடியில் ஒளித்து வைத்திருந்தான். திருமால் வராக அவதாரம் எடுத்துக் அக்கடலுள் சென்று அவளை (பூமாதேவியை- உலகை) மீட்டு வந்தான். கடலைப் புலவர் நிலமடந்தையின் ஆடையாகக் கூறினார். பூமாதேவிக்காக நிலமடந்தையின் புடவையைக் கிழித்தான் என்பது கவிதை சொல்லும் நயம். ஆனால் இங்கு அது ‘புதுப்புடவை வாங்கித்தர வக்கில்லாதவன் வேறொருத்தியின் புடவையைக் கிழித்துத் தந்தான்’ எனக் குற்றாலநாதன் கூறுவது பழிப்புரையாகும்.

    அண்ணல்வரைத் திரிகூடப் பெண்ணமுதே கேட்டியுங்க ளண்ண னான

    கண்ணன்முதல் வரகுதின்று வாயாலெ டுத்தபண்டைக் கதைகே ளாயோ

    மண்ணிலொரு காற்சிலம்பைக் கையிலிட்டான் கைவளையை வாய்மே லிட்டான்

    பெண்ணொருத்திக் காயொருத்தி புடவைகிழித் தானவனே பித்த னாமே (10)

    இப்போது தான் வாக்குவாதம் இக்காலத்து மொழியில் ‘சூடு’ பிடிக்கின்றது! குழல்வாய்மொழியாள் கணவரை நீர் நன்றி மறந்தவர் என ஏசுகின்றாள்!

    நீர் என்பதை வெளிப்படையாகச் சொல்லவில்லை! பொருள் தொக்கி நிற்கிறது! “(நீர்) பித்தன் என்று தெரிந்த பின்னும், அதனைப் பொருட்படுத்தாமல் என் அண்ணன் உமக்கு (என்னை) பெண்ணைக் கொடுத்தான்; என் கூடப் பிறந்தவன் ஆகையால் எனது திருமணத்தில் ‘பெண் சீர்’ என அத்தனை சீரும் கொடுத்தான்; உமக்குக் கையில் அம்பாகவும் இருந்தான். ( சிவபிரான் திரிபுரம் எரித்த போது திருமால் அம்பாக இருந்தான்). அப்படிப்பட்ட அந்த மைத்துனனை ஒரு நாளும் பாராட்டாமல், எங்கள் அண்ணன் உமக்குச் செய்த நன்றி அத்தனையும் மறந்து விட்டீரே! சத்தி பீடத்தில் உறைபவரே, இது தாம் உமது வழக்கமோ? சங்கை தானோ?” எனப் பழித்துரைக்கிறாள். (சங்கை- வழக்கம்).

    பித்தனென்றும் பாராமற் பெண்கொடுத்தா னவனோடு பிறந்த வாசிக்

    கித்தனைபெண் சீருமிட்டாங் கையம்பா வுமக்கிருந்தா னெந்த நாளும்

    மைத்துனனைப் பாராட்டி யெங்களண்ணன் செய்தநன்றி மறந்த தாலே

    சத்திபீ டத்துறைவீர் செய்தநன்றி நீர்மறந்த சங்கை தானே. (11)

    Kutralanatharகுற்றாலநாதன் இப்போது விட்டானா? தன் பங்கிற்கு அவனும் கூறுகிறான்! “மங்கையே! குழல்வாய்மொழியே! உங்கள் அண்ணன் சங்கைக் கையிலெடுத்துக் கொண்டு திரிந்தான். நாம் தான் அவன் மீது இரக்கம் கொண்டு ஒரு சக்கராயுதத்தை அவனுக்குக் கொடுத்தோம். அதாவது, ‘வீணர்கள் கூட்டத்தொடு வெட்டியாகத் திரிந்து கொண்டிருந்தவனுக்கு நான் தான் ஒரு வேலை வாங்கிக் கொடுத்தேன்,’ என்பது போலக் கூறுகிறான் குற்றாலநாதன். “சங்கம் எடுத்தே திரிந்தான்; சக்கராயுதம் கொடுத்தோம்,” என்கிறான். கையில் ஏந்திய சங்கு வெறும் ஓசையைத் தான் கிளப்பும்; அப்படிப்பட்ட வெற்றொலி எழுப்பும் சங்கை வைத்துக் கொண்டு திரிந்து கொண்டிருந்தவனுக்கு நான் தான் பகைவரை வெல்லும் பேராற்றல் கொண்ட சக்கராயுதத்தைக் கொடுத்தேன் என்று பெருமை பேசுகிறான் என்கிறார்.

    அவன் வெறி (மயக்கம் (அ) பைத்தியம்) கொண்டநரசிம்மமாய் உருவெடுத்த போது வெளிப்பட்ட பெரும் சினத்தைத் தீர்த்து வைத்தோம் (இரண்யகசிபுவை வதைத்து பிரகலாதனைக் காக்க திருமால் நரசிம்ம வடிவு கொண்டது கூறப்படுகிறது); இலக்குமியைப் பார்த்துத் திருமணமும் செய்து வைத்தோம். (பாற்கடலைக் கடைந்தபோது அதிலிருந்து வந்த இலக்குமியைத் திருமால் மணந்து கொண்டது கூறப்படுகிறது). இதெல்லாம் மறந்து விட்டனையோ? உங்கள் அண்ணன் நாம் செய்த இவற்றையெல்லாம் மறந்து போனதால்- செய்த நன்றி மறந்ததால் எங்கெல்லாமோ சென்று பாலைத் திருடி அதனால் உடலில் எங்கெல்லாமோ அடியும் படுவதற்காயிற்றே,” என்கிறான்.

    சங்கமெடுத் தேதிரிந்தான் சக்கராயு தங்கொடுத்தோம் தலைநாட் கொண்ட

    சிங்கவெறி தீர்த்தருளிச் செய்யாளை முகம்பார்க்கச் செய்தோம் கண்டாய்

    மங்கைகுழல் வாய்மொழியே யுங்களண்ணன் செய்தநன்றி மறந்த தாலே

    எங்கெல்லாம் பால்திருடி யெங்கெல்லா மடிபடவு மேது வாச்சே. (12)

    அவளது அண்ணனைத் தொடர்ந்து  பழிக்கிறான் காதல் கணவன்; அவ்வளவில் அம்மையின் சினம் இன்னுமே மிகுகிறது!! “திரிகூடமலைக்கு இறைவரே! சொன்ன பேச்சை மறந்தீரோ! இவ்வளவு ஏச்சும் பேச்சும் வந்து தலையில் விழுந்தது எங்கள் அண்ணனுக்கா, உமக்கா எனச் சிறிது சிந்தித்துப் பாரும். எங்கள் அண்ணன் கண்ணன்  இடைச்சியர் காய்ச்சி வைத்திருந்த பாலைத் திருடிக் குடித்தான்; நான் ஒத்துக் கொள்கிறேன்; நீங்களோ எனில் என்ன செய்தீராம்? வேடன் கொடுத்த எச்சில் மாமிசத்தை உண்டீர் ( கண்ணப்பர் வாயில் அதுக்கிக் கொண்டு வந்து அர்ப்பணித்த மாமிசத்தை ஏற்றுக் கொண்டீர்).

    “எங்கள் அண்ணனாவது ஆய்ச்சியர் கையால் தான் அடி பட்டான். அதுவும் கருணையினால் தான் அவ்வாறு அடிபட்டான்! நீரோ  பேடியின் கையால் அல்லவோ அடி பட்டீர்!  மறந்து போயிற்றோ?” எனக் கேட்கிறாள். (பேடு; பேடி- அர்ச்சுனன்). இங்கு மகாபாரத நிகழ்ச்சி ஒன்றைக் கூறுகிறாள் நம் காவியத் தலைவி.

    பாண்டவர்களின் அஞ்ஞாத வாசத்தின் போது அர்ச்சுனன் பிருஹன்னளை எனும் பெயர் கொண்ட பேடியாக (திருநங்கையாக) இருந்தான்; அவன் பாசுபதாஸ்திரம் பெற வேண்டித் தவமிருந்த போது சிவபிரான் கிராதனாக (வேடுவனாக) வேடம் தரித்து வந்து அர்ச்சுனனுடன் வாது செய்தான் (கிரதார்ஜுனீயம்). அப்போது அர்ச்சுனன் கையால் சிவபெருமான் அடிபட்டான். இதைத்தான் ‘நீரும் தான் பேடி கையால் அடிபட்டீர்,’ என ஏளனமாகக் கூறுகிறாள்.

    வாய்ச்சதிரி கூடமலைக் கிறையவரே சொன்னமொழி மறக்க வேண்டா

    ஏச்சுவந்து சுமந்ததெங்க ளண்ணற்கோ வுமக்கோவென் றெண்ணிப் பாரீர்

    காய்ச்சியபால் கண்ணனுண்டான் வேடனெச்சில் நீர்கலந்தீர் கருணை யாமா

    லாய்ச்சியர்கை யாலடிபட்ட டானையநீர் பேடிகையா லடிபட் டீரே. (13)

    இப்போது இந்த சொற்போர் கேட்போருக்கு மிக்க சுவையடையதாகிறது. இறைவனும் இறைவியுமாகிய தலைவனும் தலைவியும் ஒருவரை ஒருவர் ஏசிக் கொள்வதாகக் கற்பனை செய்து, சிவன், திருமால் ஆகியோரின் திருவிளையாடல்களை அற்புதமாகப் படம் பிடித்துக் காட்டுகிறார் திரிகூட ராசப்பக் கவிராயர்.

    குற்றாலநாதன் குழல்மொழியாளிடம் கூறுகிறான்:: “இவ்வாறு அடிபடுவது, ஆய்ச்சியர்கள் கறந்து  வைத்த பாலைக் களவாடிக் குடிப்பது என இருந்தவனும் அரசனாக ஆசைப்பட்டான்! எப்படித் தெரியுமா? முடித்தலையில்  ஒரு மணி முடியுமின்றிப் புரந்தான்! (தலையில் ஒரு முடியுமின்றிப் புரந்தான் எனவும் கொள்ளலாம். அதாவது மாபலி பால் மூன்று அடி மண் கேட்டுத் தானம் பெற்ற போது பிரம்மசாரியாக, மொட்டைத் தலையனாக நாட்டை இரந்து தானமாகப் பெற்றானே ஒழிய அரசனாகவா பெற்றான்?) அவன் பழகியதெல்லாம் பால் கலயங்களுடனும் பசுக்கூட்டங்களுடனும் தானே!

    இவன்  இடைக் குலத்தில் பிறந்தவனோ, எது (யாதவ குலம் அல்லது எந்தக் குலம் என இருவிதமாகப் பொருள் கொள்ளலாம்) குலத்தில் பிறந்தவனோ? அரச குலத்தில் பிறக்கவில்லை! எந்தக் குலத்தவன் என யாரறிவார்?” (ஆசை இருக்கு தாசில் பண்ண; அதிர்ஷ்டமிருக்கு கழுதை மேய்க்க என்பது போல, ஆசை இருக்கு அரசனாக; ஆனால் அதிர்ஷ்டமிருக்கு ஆநிரை மேய்க்க!)

    யாதவ வம்ச திலகன், யது குல திலகன் எனத் திருமாலை வருணிப்பர். இங்கு இவன் செய்கைகள் முன்பின்னாக, ஏறுமாறாக இருப்பதால் இவன் எக்குலத்தவனோ என ஐயப்படுவது போல இவ்வாறு கேட்கிறான் குற்றாலநாதன்.

    அடிப்பதுவு மாய்ச்சியர்பால் குடிப்பதுவு மிசைந்தானு மரச னாக

    முடித்தலையில் முடியுமின்றிப் படிபுரந்தா னுமுனது முன்வந் தானும்

    படிக்கலமும் பசுநிரையும் பயின்றானுங் குழல்மொழிப்பூம் பாவை கேளாய்

    இடைக்குலத்திற் பிறந்தானோ எதுகுலத்திற் பிறந்தானோ இவன் கண்டாயே. (14)

    மிகுந்த சினம் இப்போது பொங்கி வெடிக்கிறது குழல்வாய் மொழியாளிடம்! கூறுவாள்: “பார்த்துக் கொண்டுள்ள போதே, வேறு கன்னியருக்காக என்னைப் பிரிந்து சென்ற செருக்கோ உமக்கு? இல்லை, அவர்களுடன் கூடி மகிழ்ந்து குலாவியதால் வந்த செருக்கோ? அதனால் தான் எங்கள் அண்ணனின் குலத்தைப் பற்றிக் குற்றம் சொல்ல வந்து விட்டீர்கள் போலுள்ளது. முற்காலத்தில் இருந்த உமது பழமையான குலத்தைப் பற்றி நான் கூறலாகுமோ ஐயா? பரமரே! நீர் என் அண்ணன் குலத்தைச் சேர்ந்த என்னை தாரமாகக் கொண்ட பின்னரும் இவ்வாறு அந்தக் குலத்தைப் பற்றிப் பழித்துப் பேசுவது நியாயமா? அந்தப் பழி உமது மனையாளான எனக்கும் ஆகாதோ? குற்றாலக் கூத்தனாரே!” என்கிறாள்.

    குற்றாலம் சிவபிரானின் ஐந்து நடனசபைகளில் ஒன்றான சித்திரசபையாகும். ஆகவே அவரைக் கூத்தனாரே என விளிக்கிறாள்! மேலும், சிவபிரான் ஆதியும் அந்தமும் இல்லா அரும் பெரும் பழம் பொருள். முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருள் அவனல்லவோ? அதைத்தான் மறைமுகமாக, “உமது பழமையான குலத்தைப் பற்றி என்னாலுமே கூற இயலுமோ?” என்கிறாள். எவ்வளவு அழகான தூற்றுமறைத் துதியாக இப்பாடல்கள் அமைந்துள்ளன. படிக்கப் படிக்க நெஞ்சம் களி கொள்கின்றதே!

    கண்டிருந்தும் கன்னியர்க்கா வெனைப்பிரிந்த மதந்தானோ கலவித் தேற

    லுண்டிருந்த மதந்தானோ எங்களண்ணன் குலத்தில்மறு வுரைத்தீ ரையா

    பண்டிருந்த வுமதுகுலம் நான்சொன்னாற் பழுதாமோ பரம ரேநீர்

    கொண்டிருந்தும் குலம்பேசல் ஞாயமோ குற்றாலக் கூத்த னாரே. (15)

    இவ்வாறு குழல்மொழியாள் கூறியதும் பரமனான குற்றாலநாதன் உள்ளம் அவள் பால் உருகிக் குழைந்து விடுகிறது.

    “பூக்கள் நிறைந்த குற்றாலத் திரிகூட மலையின் சிகரத்தில் (என்னோடு கூடி) வாழும் பசுமையான கிளி போன்றவளே! நான் கூத்து நடத்திய (நடனமாடிய) பதத்தினைக் கண்டு தரிசனம் செய்ய ஏங்கி இருந்தனர் முனிவர்கள். அவர்களுடன் இந்திரன் முதலான தேவர்களும் காத்திருந்தனர். இவர்களுக்குக் கொலுவிருந்து காட்சி கொடுத்து மகிழ்விப்பதற்காகத்தான் உன்னைப் பிரிந்து நீயறியாமல் (கரந்து) சென்றோம் யாம். நீ என்னவென்றால் ஊடல் கொண்டு இப்படிப்பட்ட வார்த்தைகளை எல்லாம் எனக்கு எதிராக உரைத்தால் நான் என்ன செய்வேன்?” என்று தழைந்து வந்து குழைந்து கேட்கிறான்!

    கூத்திருந்த பதம்பெறவே கொதித்திருந்த முனிவர்கட் கொலுச்சே விக்கக்

    காத்திருந்த தேவர்களுங் காட்சிபெற வேண்டியுனைக் கரந்து போனோம்

    பூத்திருந்த திரிகூடப் பொருப்பிருந்த பசுங்கிளியே புலவிக் காக

    வேத்திருந்த வார்த்தையெல்லா மெதிர்த்திருந்து நீயுரைத்தா லென்செய் வோமே. (16)

    இதனைக் கேட்டபின் அவளும் வாளாவிருப்பாளா? குழல்வாய் மொழியாளின் மனமும் இப்போது பாகாய்க் கரைந்து பனியாய் உருகி விடுகிறது. “என் மீதும் பக்தி இல்லாத தேவர்களும் உண்டோ கூறுவீர்! (இதை இருவிதமாகப் பொருள் கொள்ளலாம்; உம்மைக் காணக் காத்திருந்த தேவர்கள் அனைவருக்கும் உமது சரிபாதியாகிய என்மீது பக்தி இல்லாமல் போகுமோ? ஆகவே நீவிர் எம்மையும் கூட அழைத்துச் சென்றிருக்க வேண்டும் என ஒரு பொருள்; மற்றது தேவரீர் என்மீது அன்பு (பற்று) வைத்திருந்தீர் ஆயின் என்னையும் தாங்களே உடன் அழைத்துச் சென்றிருக்கலாமே என்பது). என்னைப் பிரிந்து தனியாக வீதியில் போவது நீதியாகுமா தென் திசைத் திரிகூட மலையில் உறையும் செல்வரே!

    என் மேலும் தான் தவறுண்டு. அது என்ன தெரியுமா? உம் மீது முன்பே கொண்ட காதல்  எனும் குற்றம் உண்டு. (அதனால் தான் இவ்வாறு கடும் சொற்களைப் பேசி விட்டேன்). உமது சொற்களுக்கு எல்லாம் எதிர்ச் சொற்கள் கூறி விட்டேன் என்பதால் என்மேலும் குற்றம் உண்டு தான். கூறியதனைத்தும் நான் தானே! இதனால் என் தமையன் மேல் குற்றம் உண்டோ? (இல்லை என்பதாகும்). உம் முன்பு தலை வணங்கி நிற்கிறேன்,” என்கிறாள்.

    என்மேலும் பத்தியில்லாத் தேவருண்டோ எனைப்பிரிந்து வீதி போகத்

    தென்மேவு திரிகூடச் செல்வரே நீதியுண்டோ தேவரீர் மேல்

    முன்மேவுங் குற்றமுண்டு திருவாக்குக் கெதிர்வாக்கு மொழிந்த தாலே

    தன்மேலும் குற்றமுண்டு தமையனார் மேலுமுண்டோ தாழ்த்தி தானே. (17)

    இப்போது குற்றாலநாதனின் மனம் முற்றும் குழல்வாய்மொழியாள் பால் அன்பால் கனிந்து உருகிவிடுகின்றது. அவன் கூறுகிறான்: “குழல்மொழியே; பூவின் சாயலைக் கொண்ட மாதே!” எனக் கனிவாக அவளை அழைக்கிறான்; “அண்ணனென்றும் தங்கை என்றும் நான் உங்கள் இருவரையும் பிரித்து வேறுபடுத்திப் பார்த்ததில்லை; உமையவளே! உன் தமையன் உனக்கு மிக்க அருமையானவன்; அப்படியானால், எனக்கும் அவன் அருமையானவன் ஆகின்றான் அல்லவோ? நீ என்னைப் பற்றிக் குறைகள் கூறினாய்; ஆகவே நானும் அவனைப் பற்றி நையாண்டியாக (கேலிப் பேச்சாக) சில வார்த்தைகள் சொன்னேன். வானவர்கள் என் பதம் காண வேண்டி வந்ததால் நானும் செல்லும்படி நேர்ந்தது; அதனால் தானே இத்தனை வாக்கு வாதங்கள் நிகழ்ந்து விட்டன். இதைப் பொறுத்துக் கொள் அம்மா, இமயமலையில் வாழும் பெண்மணியே!” என மிகவும் வினயமாக வேண்டிக் கொள்கிறான் நமது காவியத் தலைவன் குற்றாலநாதன்.

    தமையனென்று தங்கையென்று வேற்றுமையென் குழன்மொழிப்பூஞ் சாயல் மாதே

    உமையவளே தமையனுனக் கருமையென்றா னமக்குமவ னருமை யாமே

    நமையுமோரிங் குறையுரைத்தாய் நாமவனைச் சரசமாக நவின்றோம் கண்டாய்

    இமையவர்கள் வேண்டுதற்கா இத்தனையும் பொறுத்தருள்வாய் இமய மாதே. (18)

    இப்போது குழல்வாய் மொழியாளுமே பெரிதும் நாணம் கொள்கிறாள். ‘அவசரப்பட்டு என்னென்ன பேச்சுக்கள் பேசி விட்டோம் நாம்,’ எனக் காதல் கணவனிடம் மன்னிப்பும் கேட்கிறாள்.

    “ஒப்பற்ற தேவரான நீவிர் ஆடியது திருக்கூத்தாயிற்று. (குற்றாலநாதன் சித்திரசபைக் கூத்தன் என்பது பொருள்; இவ்வாறு என்னை ஊட வைத்து வேடிக்கை பார்த்தது நீர் ஆடிய திருக் கூத்து (விளையாட்டும்) ஆயிற்று எனவும் இன்னொரு பொருள்). வலிமை மிக்கவர் (கொடியவர்கள்; அரக்கர்கள்) தவறுகள் செய்தால் நீங்கள் அதனைப் பொறுத்து செமிக்க (மன்னிக்க) மாட்டீர்கள்! ஆனால் கரிய ஆலகால நஞ்சினை விழுங்கி சீரணம் செய்து விடுவீரே நீர்” (சிவபிரான் ஆலகால விடத்தை உண்டு செரித்ததைப் பெருமையாகக் கூறுகிறாள் குழல்வாய்மொழியாள்).

    பிறகு அவனிடம் இன்னும் வேண்டுகிறாள்: “நீங்கள் எனக்குக் கொடுக்கும் படி (படி- செலவினை ஈடுசெய்யத் தரும் பணம்- பஞ்சப்படி, அகவிலைப் படி என்பது போல) போதாது. (இருநாழிப் படி நெல்லைக் கொடுத்து முப்பத்திரண்டு அறங்களையும் இயற்றக் கூறினீர்கள்;) எனக்கு அது போதாது பெருமானே! பொன்னும் பூணும் அணிகளும் கிடைக்கும் உபாயத்தைக் கூறினால் எனக்கும் பெருமையாக இருக்குமே,” என்கிறாள்.

    “நீர் குற்றால ஈசுவரர்; ஐசுவரியம் உடையவன் ஈசுவரன். உம்முடைய ஐசுவரியத்தை மறைத்து வைத்திருக்கும் வஞ்சகத்தை என்னிடம் சொன்னால் அது உமது பெருமையைச் சொன்னதாகாது அல்லவோ?” எனவும் கேட்கிறாள்.

    மாதேவர் நீரொருவ ராடினது கூத்தாச்சு வலியோர் செய்தால்

    தீதேதுஞ் செமியாதீர் குற்றால நஞ்சையுண்டு செமிப்பீ ரையா

    போதாது நீரளக்கு மிருநாழிப் படியெனக்குப் பொன்னும் பூணுஞ்

    சூதான வகைமுழுதுஞ் சொன்னாலென் னாற்பெருமை சொல்ல லாமோ. (19)

    கடைசியாக எல்லா ஊடல்களும் வந்து முடிவது இங்குதானே (வேண்டுவது ஒரு பரிசு- அது புடவையோ, நகையோ, ஏதோ ஒன்று) என எண்ணினாரோ என்னவோ புலவர். அண்ணல் குற்றாலநாதன் கூற்றாகக் கூறுகிறார்: “சொர்ணமலை உனக்குச் சொந்தமாயிற்று;(சிவபிரான் திரிபுரம் எரித்த போது பொன்மலை அம்மையின் கையில் வில்லாகத் தங்கியது. அதனால் தன்னதாயிற்று). வெள்ளிமலையும் ( இமயமலையும்) உனக்கே சொந்தமாயிற்று; இனி வேறு ஒரு பொருளும் சொந்தமாக வேண்டுமோ? பெண்களுடைய பேதைமைக் குணம் (அறிவற்ற செயல்)  இது போல் உண்டோ? (‘எப்போதுமே இவ்வாறு தான்’ என எதிர்மறையாக உணர்த்தினார்) எண்ணுவதற்கு அரிய பயிர்கள் விளையும் நிலங்களையும், நல்ல நகரங்களையும் நவநிதியையும் ஆராய்ந்து உனக்கே சொந்தம் என்று நான் அளிக்கிறேன், கொஞ்சு மொழி பேசும் குழல்வாய்மொழியாளே! உனக்கே தந்தேன்; இதற்கான பட்டயத்தையும் தந்தேன் பார்!” என்று அருளுகிறான் குற்றாலத்து ஐயன்.

    சொன்னமலை தனதாச்சுப் பொன்னுலகு வெள்ளிமலை சொந்த மாயிச்

    சின்னமொரு பொருளுமுண்டோ பெண்கட்பே தமைக்குணந்தா னிதுபோ லுண்டோ

    உன்னரிய விளைநிலமு நன்னகர நவநிதியு முனக்கே யென்று

    பன்னிகுழல் வாய்மொழியே பாலித்தோம் பட்டயமும் பாலித் தோமே. (20)

    தலைவன் தணிவித்தால் ஊடல் எளிதில் தீர்ந்து விடும் பண்பு தலைவியினுடையது ! குழல்வாய் மொழியாள் இப்பண்பைப் பெற்றவள். ஊடுவதற்கு ஒரு காரணமும் உண்மையில் இல்லையாயினும் தலைவி பொய்யான ஒரு காரணத்தைக் கற்பித்துக் கொண்டு ஊடுதல் பின் ஊடல் தீர்தல் ஆகியன பெண்மைக்குரிய பேதைமைக் குணம் என்கிறார்.

    எவ்வாறாயின் என்ன? நமக்கு ஒரு அழகான சொல் நயம், பொருள் நயம் செறிந்த சிறு இலக்கிய நூல் படித்துச் சுவைக்கக் கிட்டியதல்லவா?

    (திருக்குற்றால ஊடல் முற்றிற்று)

    Share
  • குழல்வாய் மொழியாள் கொண்ட ஊடல்!

    மீனாட்சி பாலகணேஷ்

    காவியத்தலைவன் இவன் ஆடவர்களுக்குள் மிகவும் உயர்வானவன்; அவனுக்கு ஈடு இணை யாருமில்லை; சூரிய சந்திரர்கள் தேரிலேறி வலம் வந்து மலர்களைத் தூவிப் பணியும் குற்றாலமலையில் செம்பொன்னாலாகிய கோவிலினுள் உறைபவன். அவனை மலர்களைத் தூவி இவ்வுலகத்து அடியார்கள் போற்றுவார்கள்; அவன் திருநாமம் குற்றாலநாதன்.
    இவள் அவனுடைய உயிரானவள், உடலிலும் பாதி கொண்டவள், குழல்வாய் மொழியாள் எனும் காதல் நாயகி அவனிடம் ஊடல் கொண்டு விட்டாள்! காரணம் ஏன் தெரியுமா?

    z1
    கடல்முத்துத் தான் வெளேரென வெளுத்திருக்கும்; ஆனால் மழுப்படை ஏந்திய அவனுடைய பவள இதழ்கள் வெளுத்துள்ளனவாம். இதனால் அவனுடைய நாயகி தானே இதற்கு ஒரு காரணத்தைக் கற்பித்துக் கொண்டு, “இதுவும் உமக்கு ஒரு அழகு ஆகின்றது அல்லவோ,” எனச் சினந்து கூறி, அவன் வேறொரு பெண்ணுடன் சரசமாடி விட்டு வந்ததாக எண்ணி ஊடல் கொண்டு விட்டாள்.

    தேரேறுஞ் சூரியர்கள் வலம்புரியும் வல்மபுரியின் செம்பொற் கோயில்
    தாரேறு மலர்தூவித் தாலத்தார் பரவியகுற் றாலத் தாரே
    ஏரேறு கடல்பிறந்த கருணைநகை முத்துவெளுத் திருப்ப தல்லால்
    ஆரேறு மழுப்படையீர் பவளம்வெளுத் திருப்பதழ காகுந் தானே (1).

    ஊடலைத் தணிக்கத் தன் நாயகியிடம் மென்மையான சில மொழிகளைக் கூறுகிறான் குற்றாலநாதன். “காகங்கள் கூட அணுக முடியாத திரிகூட மலையின் அணங்கே! உனது கற்பின் திறத்தை வேதங்கள் எல்லாம் உயர்வாகக் கூறும்; அதனால் அது வெளுப்பாக உள்ளது (வெண்மையாய் பளிச்சிடுகிறது); உனக்கு மூத்தவனான உனது அண்ணன்- நீலமேக வண்ணனான கண்ணன்- பள்ளி கொண்ட பாற்கடலும் வெளுப்பாய் உள்ளது; யாம் இருக்கும் இமயமாம் பனிமலையும் வெளுப்பாகவே உள்ளது; விபூதிப் பூச்சினால் என் உடலெல்லாம் வெளுப்புத்தான்; ஆகவே அதரம் மட்டும் வெளுப்பாகாது என யாரால் சொல்ல இயலும்? நீ இதற்கெல்லாம் (அநியாயமாக) ஒரு காரணம் கற்பிக்கலாமோ?” எனப் பணிவாக அன்போடு கேட்கிறான்.

    காகமணு காததிரி கூடமலை யணங்கேயுன் கற்பின் சீர்த்தி
    யோகமுறை பணிந்தேத்தி யுயர்மறையெ லாம்வெளுப்பா யுனக்கு மூத்த
    மேகவண்ணன் கடல்வெளுப்பாய் யாமிருக்கும் மலைமுழுதும் வெளுப்பா யென்றன்
    ஆகமெலாம் வெளுப்பானா லதரம்வெளுப் பேறாதென்று ஆர்சொல் வாரே. (2)
    ***********************************************

    நாம் இன்னும் இந்த ஊடல் இலக்கியத்தைத் தொடர்ந்து படிக்கும் முன்பு இதைப் பற்றிய ஒரு சிறு அறிமுகம். இந்த அழகான ஊடல் சிற்றிலக்கியத்தை இயற்றியவர் யார் தெரியுமா?- திரிகூட ராசப்பக் கவிராயர்- ஆம்- நமக்குக் கொஞ்சு தமிழில் குற்றாலக் குறவஞ்சியைத் தந்தவர் தான் இந்தத் திருக் குற்றால ஊடல் என்னும் (உண்மையாகவே சிறிய – 20 பாடல்களைக் கொண்ட) இலக்கியத்தைத் தந்துள்ளார். குழல்வாய்மொழியம்மை குற்றாலநாதரிடம் ஊடல் கொண்டதாகப் புனைந்து இருவருக்குமிடையே நிகழும் வாக்குவாதங்களைச் சுவை மிகுந்த புராணக் கதைகளை இணைத்துத் தொகுத்து நமக்கு, ஏன் தமிழுக்கு ஒரு இலக்கிய நயமிகுந்த நூலை அளித்துள்ளார். இதுவும் ஒரு அந்தாதி போலவே அமைந்துள்ளது நூலுக்கு அதிகச் சுவை சேர்க்கிறது.

    சாமானிய மானிடக் காதலர்கள் தாம் ஊடுவார்கள்; ஏசிக் கொள்வார்கள்; கடவுளர்கள் ஊடலாமோ? இலக்கியத்திற்குச் சுவை சேர்க்க அவர்கள் ஊடுவது போலக் காட்டி, அதன் மூலம் வாக்குவாதங்களை அவர்களிடையே எழுப்பி, புராணக் கதைகளையும் அவர்கள் தம் திருவிளையாடல்களையும் கூறுவதுண்டு. மனிதர்களாகிய நாம் செய்வது போலவே பழித்துரை போலவும், அங்கதம் போலவும் கூறுவது உண்டு. அதில் இது ஒரு அருமையான சிறு நூல். எதிர்பாராத ஒரு சந்தர்ப்பத்தில் இந்த நூலைக் கண்ணுற்றதும் எனது ஆச்சரியத்திற்கும் மகிழ்ச்சிக்கும் எல்லையே இல்லை.
    யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்!!

    இதோ! நான் ரசித்துச் சுவைத்த திரிகூட ராசப்பரின் தமிழை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். நூலின் தலைவி- தலைவனிடம் திரும்பச் செல்லலாமா? அவர்கள் வாக்குவாதங்களைப் பார்க்கலாமே; அவர்கள் ஊடல் எவ்வாறு தீர்ந்தது எனத் தெரிந்து கொள்ள வேண்டாமோ? வாருங்கள்……
    ************************************************

    தன் தலைவன் இவ்வாறு சொன்ன பின்பும் குழல்வாய்மொழியாளின் ஐயம் தீர்வதில்லை. இதெல்லாம் எளிதில் தீர்ந்து விடும் ஐயங்களா? நன்கு, தீர விசாரித்து அல்லவோ தீர்த்துக் கொள்ளுதல் வேண்டும்?!! ஐயனிடம் கூறுகிறாள்:
    “திரிகூடத்து அண்ணலே! நீர் ஒருகாலத்தில் உமது உடலில் எனது முலைக்குறியும் வளைக்குறியும் பெற்றிருந்தவர் தானே! (பார்வதி தேவி அன்னை காமாட்சியாக அவதரித்த காலத்தில், மணலால் இலிங்கப் பிரதிமை செய்து ஈசனைப் பூசித்து வரும் பொழுது இறைவனார் அவளைச் சோதிக்க எண்ணி ஆற்றில் வெள்ளப் பெருக்கெடுக்கச் செய்தார். அப்போது அந்த இலிங்கத்தை உமாதேவியார் நீர்ப்பெருக்கினின்று காப்பாற்ற வேண்டி இறுகக் கட்டி அணைத்துக் கொண்டதால், அவளுடைய முலைத் தழும்பும், கரங்களில் அணிந்த வளைகளின் தழும்பும் அந்த இலிங்கத்தில் பதிந்தன- அதைத்தான் இங்கு கூறுகிறாள் குழல்வாய் மொழியாள்) இப்போது உமது திருமார்பில் மேலும் ஒரு மைக்குறி வந்தது எவ்வாறு? வாசனை மிகுந்த மஞ்சள் குறி வந்தது எவ்வாறாம்? வேறு எவளோ ஒருத்தி உம்மை வந்து தழுவிக் கொண்டாளோ? அவள் பெயரை எனக்குக் கூறும் ஐயா! உமது நெஞ்சம் முழுதும் வஞ்சம் தான் உடையவரோ நீர்?” எனச் சினத்துடன் ஆத்திரமாக உரைக்கிறாள் குழல்வாய்மொழியாள்.

    ஆரிருந்தும் தனித்திருந்தும் பிறைமவுலித் திரிகூடத் தண்ண லாரே
    சீரியபொன் முலைக்குறியும் வளைக்குறியும் பெற்றிருந்த தேவ ரீர்தாம்
    மார்பிலொரு மைக்குறியும் வாடைமஞ்சட் குறியுமன்று வரப்பெற் றீரே
    நேரிழைதன் பேருரையீர் வஞ்சம்தா னோஉமது நெஞ்சந் தானே. (3)

    நமது காவியத் தலைவன் குற்றாலநாதன் பாடு திண்டாட்டம் தான்! என்ன விடை பகருகிறான் எனக் காண்போமா?
    “என் நெஞ்சில் நீ இருக்கும்போது நான் எவ்வாறு இன்னொருத்தியை நினைக்க இயலும்? ஊஞ்சலாடும் குழைகளைக் காதிலணிந்த கயல்விழிப் பெண்ணே! குழல்மொழியே! எனது இந்த ஒரு சொல்லைக் கேளாய்! இது மைத்தீற்றலல்ல; நான் தலையில் அணிந்துள்ள திருச்சாந்து (நறுமண நெய்) வழிந்ததால் உண்டான கருமை நிறமாகும்; மஞ்சளாக நீ காண்பதும் என் தலையில் நான் அணிந்துள்ள அலர்ந்த கொன்றை மலர்களிலிருந்து உதிர்ந்த பூந்தாதுகள் தானே,” என விளக்க முற்படுகிறான்.

    நெஞ்சகத்தி னீயிருக்க நின்னையல்லா லொருவரையு நினைய லாமோ
    உஞ்சலிட்ட குழைதடவும் கயல்விழிப்பெண் குழல்மொழியே ஒன்று கேளாய்
    அஞ்சனத்தின் வண்ணமல்ல திருச்சாந்து வழிந்துநிற மதுவே யன்றி
    மஞ்சளைப்போ லிருந்தநிறம் பொன்னிதழித் தாதவிழ்ந்த மாற்றந் தானே (4).

    இதனாலெல்லாம் சந்தேகம் தீர்ந்து குழல்வாய்மொழியாள் தனது நாயகனை நம்பி விடுவதாக இல்லை: பின்னும் கூறுகிறாள்: “வெண்மையான காளை மீதேறி நீர் காட்சி தருவது எப்படியுள்ளது தெரியுமா குற்றாலத்துப் பெரிய மனிதரே! மாற்றுக் குறையாத வெள்ளி போன்ற மலை மீது (பனி படர்ந்த இமயமலை எனக் கொள்ளலாம்) பவளமலை பெருமையாக வீற்றிருப்பது போல உள்ளது. வெண்மையான கங்கை ஆறு (பெருகுவதால் வெள்ளையாய்க் காண்கிறது) உமது சடையில் இருக்கிறது; வெள்ளையாகப் பிறைச் சந்திரனும் கீற்றாக அங்கு உள்ளது; இப்படி எல்லாம் வெள்ளையும் சள்ளையுமாக இருக்க, நீங்களும் நேற்று வெள்ளை சார்த்திக் கொண்டு (நேர்த்தியாக உடுத்துக் கொண்டு) காட்சியளித்ததை இன்று உமது கண்கள் சிவப்பாகி விட்டதால் (உறக்கமின்மையால்?) நிறுத்தி விட்டீரே!” என்று கடிந்துரைக்கிறாள்.

    மாற்றுவெள்ளி மலையிலொரு பவளமலை கொலுவிருக்கு மகிமை போல
    வேற்றுவெள்ளை விடைமீதில் காட்சிதருங் குற்றாலத் தெந்தை யாரே
    ஆற்றுவெள்ளை சடையிருக்கக் கீற்றுவெள்ளை மதியிருக்க அதிக மாநீர்
    நேற்றுவெள்ளை சாத்தினதை இன்றுசிவப் பானகண்ணால் நிறுத்தி னீரே (5).

    குற்றாலநாதன் இப்போது உண்மையாகவே தடுமாற்றம் கொள்கிறான். என்னதான் சொல்லி இவளை சாந்தப் படுத்துவது? அவனுடன் ஊடுவதையே ஒரு முனைப்பாய்க் கொண்டு நிற்கிறாள் இவள்! அவனுக்கும் சலிப்பாக இருக்கிறது. கூறுவான்: “உன்னைத் தனியே விட்டுவிட்டு நான் என்றுமே பிரிந்து சென்றதில்லையே கண்மணியே! நீயே ஒருமுறை என்னைப் பிரிந்து பனிமலையில் சென்று நின்றாய் அல்லவோ? நாமும் அந்தத் தனிமையைப் பொறுத்துக் கொண்டு வடக்குத் திசையில் ஆலமரத்தினடியில் தனித்துத் தவத்தில் அமர்ந்திருந்தோம். அதனைக் கண்டு பொறுக்க மாட்டாமல் சிறுபிள்ளைத் தனமாகப் பண்பின்றி அன்றலர்ந்த மலர் அம்புகளைக் குவித்து ஏந்தி வந்தவனான கருமையான மேனி நிறம் கொண்ட மன்மதனை நாம் சினந்து மூன்றாம் கண்ணைத் திறந்து பார்த்ததனால் அல்லவோஅந்த விழி சிவந்தது ? வேறு எதனாலும் அல்ல எனக் காண்பாய் குழல் மொழியே, பூங்கொடி போன்றவளே!”

    நிறுத்தி நாம் பிரிந்ததில்லை நீபிரிந்து பனிவரைக்கே நிற்கு நாளில்
    பொறுத்துநாம் வடவாலின் கீழிருந்தோ மதுதனக்குப் பொறுப்பில் லாமல்
    சிறுத்துநாள் மலர்தூவிக் கறுத்துவந்த சேவகனைச் சிவந்த போது
    குறித்துநாம் பார்த்தவிழி சிவப்பன்றோ குழல்மொழிப்பூங் கொடிஅன் னாளே (6).

    தட்சனின் மகளான தாட்சாயணி தன் கணவரான சிவபிரானைத் தன் தந்தை (தட்சன்) அவமதித்ததால் சினம் கொண்டு, சினத்தீயில் தன்னை எரித்துக் கொள்கிறாள். பின்பு இமவானின் (பனிவரையின் மன்னன் அவன்) மகளாகப் பிறந்து வளர்கிறாள்; துணையைப் பிரிந்த சிவபிரானும் தனிமையில் தவம் செய்வாராயினார். தக்க பருவம் வந்ததும் தவம் செய்யும் சிவபிரானுக்குப் பணிவிடைகள் செய்ய, பர்வதராஜன் குமாரி பார்வதி, அவருடைய ஆசிரமத்தை அடைகிறாள். அதைத் தான் இங்கு கூறுகிறார் குற்றாலநாதர். அப்போது சூரபதுமன், தாரகன் எனும் அரக்கர்களின் தொல்லை பொறுக்காத தேவர்கள் உமையும் சிவனும் திருமணம் புரிந்து கொண்டால் அவர்களுக்குப் பிறக்கும் ஒரு ஒப்பற்ற மகனே இவ்வரக்கர்களை அழிக்க வல்லவனென எண்ணி, சிவனாரின் தவத்தைக் கலைக்க மன்மதனை அனுப்புகின்றனர். அவனும் பொறுப்பின்றி அவரை உடனே காமவயப்படுத்த வேண்டும் என்னும் பேராசையால் எல்லா மலர்களையும் ஒருசேரத் தூவுகிறான். இந்தப் பண்பற்ற செயலுக்காக அவனைச் சினந்து சிவபிரான் தம் நெற்றிக் கண் நெருப்பால் அவனை எரித்தார் என்பது புராணம். பின்பு பார்வதி சிவனாரைக் கணவராக அடைய விரும்பி, பனிமலையில் தனித்திருந்து கடுமையாகத் தவம் செய்கிறாள். இறுதியில் ஈசனும் அவளை மணந்து கொள்கிறார். அதையும் இங்கு குற்றாலநாதர் தன் நாயகி குழல்வாய்மொழி அம்மைக்கு நினைவு படுத்தி அருளுகிறார்.

    இதனாலெல்லாம் சமாதானம் அடைந்து விடுவாளா இந்த நாயகி? வேண்டுமென்றே பழைய கதைகளை நினைவு படுத்தி வீண்வாதம் புரிகிறாள் பாருங்கள்! “அந்த நாட்களில் நீர் வெறும் கோவணமும் புலித்தோல் மேலாடையும் அணிந்து கொண்டு சோம்பேறியாக ஆலமர நிழலில் தான் வாழ்ந்தும் தூங்கியும் பொழுதைக் கழித்து இருந்தீர் என்பது மறந்து போயிற்றோ? என்னைத் திருமணம் செய்து கொண்டதன் பின்னரே நல்ல உடைகளும் இருப்பிடமும் பெற்றுள்ளீர் தெரியாதோ? பிறகு இந்நாட்களில் நல்ல சலவை உடைகள் அணிந்து பூமாலை எல்லாம் அணிந்து கொண்டு தினமும் மகிழ்ச்சியாக இருந்தால் இப்படியெல்லாமா உமக்கு எண்ணம் செல்லும்? சங்கம் வளர்த்த நீண்ட வீதிகளைக் கொண்ட மதுரை மாநகரத்தவரே! பொலிவாகத் திகழ்பவர்கள் (இளம் மங்கையர்கள்) இன்னும் சில பேரும் கூட உமக்கு வேண்டாமோ சொல்லுமையா!” என்கிறாள்.

    அந்நாளிற் கோவணமும் புலித்தோலும் வேடமுமா யாலின் கீழே
    பன்னாளும் தூங்கினநீ ரென்னாலே மணக்கோலப் பதம்பெற் றீரே
    இந்நாளிற் சலவைக்கட்டிப் பூமுடித்துத் தினஞ்சுகித்தா லிதுவோ செய்வீர்
    மின்னாரு மினிச்சிலபேர் வேண்டாவோ நீண்டசங்க வீதி யாரே. (7)

    ‘தூங்கின நீர்’ என்பதற்கு அறிதுயில், யோகநித்திரை என்பது மற்றொரு பொருள். சங்கம்- வீணர்கள் கூட்டம் எனவும் ஒரு பொருள் கொள்ளலாம்!

    அம்பிகையைக் கலியாணம் செய்துகொள்வதற்கு முன்னே தூங்கித் தூங்கிக் காலத்தைக் கழித்தான். அம்பிகையைத் திருமணம் செய்து கொண்டபின் வந்த ‘ஆக்கத்தால்’ (செல்வச் செழிப்பால்) ‘சோம்பர்’கள் கூட்டத்தில் கழிக்கின்றான். முயற்சியின்றிச் செல்வம் வந்தால், ‘அற்பனுக்குப் பவிஷு வந்தால்’ அர்த்தராத்திரியிலும் குடைப்பிடிக்க வீணர் கூட்டம் வேண்டாவோ என ஏசுகின்றாள்.

    இப்போது குற்றாலநாதருக்குச் சிறிது கோபம் வரத்தான் செய்கிறது. அளவுக்கு மீறி அல்லவா அவரைக் குழல்மொழியாள் ஏளனம் செய்கிறாள்? உன் குடும்பக் கதை மறந்து போய் விட்டதோ எனத் திரும்பக் கேட்கிறார். “குழல் மொழியாளே! கயல்கண் மாதே! உன் அண்ணன் இராமன் மரவுரியையும் மான்தோலையும் தரித்துக் கொண்டு அரிய தவ வேடம் தாங்கி அந்த நாட்களில் காடுகளில் எல்லாம் அலைந்து திரிந்தான்; அதன் பிறகு அயோத்தி சென்று சீதையுடன் கூடியிருந்து உலகை ஆண்டான்; அவன் இங்ஙனம் செய்ததை எல்லாம் கேள்விப்பட்டிருந்தும் இவ்வாறு நீ என்னிடம் கூறலாகுமோ?” என்கிறான் நாதன்.

    வீதியாய் மரவுரிகிட் டினாசம்பூண் டரியதவ வேடம் தாங்கி
    ஆதிநாட் கான்தோறு மலைந்துதிரிந் தானதுபோ யயோத்தி மேவி
    மாதுசீ தையைப்புணர்ந்து பாராண்ட வுங்களண்ணன் மார்க்க மெல்லாம்
    காதுகேட் டிருந்துமிது சொன்னதென்ன குழல்மொழிப்பூங் கயல்கண் மாதே. (8)

    அவளுடைய அண்ணனைப் பற்றிக் குறைவாகக் கூறினால் கோபம் வருமா வராதா? இன்னுமே சினம் கூடுகிறது குழல்மொழியாளுக்கு! கூறுகிறாள்:

    “பிட்சாடனராகித் (தாருகாவனத்து ரிஷிபத்தினிப்) பெண்களிடம் சென்று பிச்சை கேட்டீர்! அவர்களும் உம்மழகில் மயங்கி, துகிலும் வளையும் நெகிழ வந்து பிச்சையிட்டனராமே! நீர் பின்பு பரம சாது போலப் புலித்தோலை உடுத்திக் கொண்டீர்! (அபிசார வேள்வி செய்து முனிவர்கள் ஏவிய புலியைக் கொன்று அதன் தோலையும் உடையாக உடுத்துக் கொண்டீர்). பிறைச் சந்திரனான சோமனைத் தலையில் மேல் அணிந்து கொண்டீர் (சோமன் என்பது பஞ்சகச்சமாக ஆடவர் இடையில் அணியும் ஆடையையும் குறிக்கும்; இங்கு ‘இடையில் அணிவதைத் தலையில் அணிந்தீரே’ எனப் பரிகாசமாகக் கூறுவதாக அமைந்தது). பின்பு தோன்றிய பாம்பு ஒன்றைப் பிடித்துக் காதில் ஆபரணமாகப் பூண்டீர்! (அபிசார வேள்வியில் ரிஷிகள் உம்மீது ஏவிய பாம்பைப் பிடித்துக் காதில் அணிந்து கொண்டீர்!) போதாக்குறைக்குக் கழுத்தில் நஞ்சை (விஷத்தை) வைத்துக் கொண்டீர்! (பாற்கடல் கடைந்த போது பாம்பு கக்கிய ஆலகால நஞ்சை சிவபிரான் ஏற்று உண்ண, அம்மை அவரது குரல்வளையைத் தடவி அதை அங்கேயே நிலைத்திருக்கச் செய்கிறாள்). பெருத்த பேய்களைத் துணையாகக் கொண்டீர்! இதனால் உம்மைப் போல ஒரு பித்தர் எந்த உலகிலும் உள்ளாரோ குற்றாலத்து உறையும் அண்ணலே!” என ஏளனமும் சினமுமாக மொழிகிறாள் குழல்வாய்மொழியாள்.

    இது மேலெழுந்த வாரியாகப் பார்ககத்தான் ஏளனமாகக் கூறுவது போலக் காணப்படுகிறது. ஒவ்வொன்றும் அண்ணலின் புகழை அல்லவோ பாடுகிறது? நிந்தா ஸ்துதி பாடுவதில் குழல்வாய் மொழியாள் போலும் காதலிகளும் வல்லமை பெற்றவர்கள் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி!

    மாதர்பாற் பலியிரந்தீர் பலியிடப்பைந் தார்துகிலும் வளையும் கொண்டீர்
    சாதுவாய்த் தோலுடுப்பீ ரரையிலுள்ள சோமனையுந் தலைமேற் கொள்வீர்
    காதிலே பாம்பையிட்டீர் கழுத்திலே நஞ்சையிட்டீர் கனபேய் கொண்டீர்
    ஆதலா லுமைப்போலும் பித்தருண்டோ குற்றாலத் தண்ண லாரே (9)

    (ஊடல் இன்னும் தொடரும்)

    Share
  • பாடுதும் காண் அம்மானை-2

    மீனாட்சி பாலகணேஷ்

    கலம்பகங்கள் மட்டுமே அம்மானைப் பாடல்களை உறுப்பாகக் கொண்டவை அல்ல. மற்ற சிற்றிலக்கியங்களான உலா நூல்கள், பிள்ளைத்தமிழ் போன்றனவும் அம்மானை பற்றிய பாடல்களையும் விளக்கங்களையும் அருமையாகச் சித்தரிக்கின்றன.

    பெருமானான இரத்தினகிரீசர் உலா வருகின்றார். உலா வரும் அவரைக் கண்டு பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண் எனும் ஏழுபருவத்து மகளிரும் காதல் வயப்படுகின்றனர். இவர்களில் மங்கைப் பருவத்துப் பெண்ணொருத்தி, தனது தோழியருடன்  பலவிதமான மகளிர் புடைசூழ அம்மானை விளையாட்டில் ஈடுபட்டிருக்கிறாள். பொழுது போவதே தெரியவில்லை. விறுவிறுப்பான வினாக்களும் இருபொருள் புதைந்த விடைகளுமாகக் களிப்புடன் இவர்கள் அம்மானையாடுகின்றனர். மற்ற பருவத்துப் பெண்கள் சூழ்ந்து நின்று இவர்கள் விளையாட்டைப் பார்த்த வண்ணம் உள்ளனர்!

    அழகு மிகுந்த மதுரைச் சொக்கலிங்கரான அந்தப் பெருமானைப் பற்றிப் பாடிய வண்ணம் அம்மானை ஆடுகின்றனராம். சிவனின் பலப்பல திருவிளையாடல்களைக் கூறி ஆடுகிறாள் இவள். தக்க யாகத்தில் தலையை இழந்த தனது மாமனாரான தக்கனுக்கு ஆட்டுத்தலை ஒன்றைக் கூட்டிக் கொடுத்தவனாகிய சிவபிரான் என்னும் ‘அம்மானை’ப் பாடி அம்மானை என்னும் விளையாட்டைப் பயில்கிறாள் இவள்.

    ‘வந்தபல மாதர் வளைய நடுவிருந்தே

    அந்த மிகுமதுரை அம்மானைச்- சொந்தமதாம்

    கூட்டுத் தலையாய்க் கொடுத்ததலை ஈதெனவே

    ஆட்டுத்தலை படைத்த அம்மானை

    (புலவர் அம்மானை எனும் சொல்லைக் கொண்டே சொற்சிலம்பம் செய்வது படிக்கவும் செவிக்கும் இன்பமாக உள்ளது)

    மற்றொருத்தி கடலில் வலைவீசி மீன்பிடிக்க சிவபிரான் மீனவனாக வந்த திருவிளையாடலைக் கூறி அம்மானை ஆடுகிறாளம். எப்போதும் ஒரு மலையையே இருப்பிடமாகக் கொண்ட அவனைப் பாடியபடி இவர்கள் விளையாடுகின்றனர்!

    அலைக்கே வலைவீசும் அம்மானை நாளும்

    மலைக்கே துறையாம் அம்மானை

    பாச்சில் என்னும் சிறந்த ஊரில் திருவாசிரமத்தில் நிறைந்த பெரியோருக்கும் பெரியானாகிய சிவபெருமான் உறைந்துள்ளான். அவ்வூரில் கமலன் எனும் ஒரு வைசிய குலத்தானின் மகளைச் சிவபெருமான் திருமணம் செய்து கொண்டாராம்; அந்த நிகழ்ச்சியைக் கூறி,  -அவருக்குப் பெண்மானைக் கொடுத்த செட்டி எனும் ஒரு மாமனையும் கொண்ட பெருமானாகிய அம்மானைப் பாடி இவள் அம்மானை ஆடுகின்றாள்.

    நிலைப்பாய்

    அட்டிபுரி பாச்சி லாச்சிரமத் தேபுணரக்

    கொட்டமிகு மானைக் கொடுத்தருளும்- செட்டியெனும்

    அம்மானையும் படைத்த அம்மானைப் பாடியிவள்

    அம்மானை யாடும் அளவிலே..

    சேறைக் கவிராச பிள்ளை இந்த  வாட்போக்கி உலா எனும் இரத்தினகிரி உலாவினை இயற்றியுள்ளர். அம்மானை என்ற சொல்லைத் திரும்பத் திரும்ப அடுத்தடுத்த வரிகளில் கையாண்டு புலவர் நயமுடன் கவித்திறனைக் காட்டியுள்ள அழகு படிப்பவர் மனதையும் கருத்தையும் அம்மானையாட வைக்கும்!

    இவ்வாறெல்லாம் அம்மனையாடும் பெண், வாட்போக்கி நாதனான இரத்தினகிரீசன் வரும் தேரானது தனது அருகாமையில்  வர, ஆடலை நிறுத்தி விட்டுப் பூக்களைச் சொரிந்து அவனை வணங்குகிறாள் என்கிறார்.

    பாடலை முழுமையாகக் காணலாமா?

    ‘வந்தபல மாதர் வளைய நடுவிருந்தே

    அந்த மிகுமதுரை அம்மானைச்- சொந்தமதாம்

    கூட்டுத் தலையாய்க் கொடுத்ததலை ஈதெனவே

    ஆட்டுத்தலை படைத்த அம்மானை- வீட்டி

    அலைக்கே வலைவீசும் அம்மானை நாளும்

    மலைக்கே துறையாம் அம்மானை- நிலைப்பாய்

    அட்டிபுரி பாச்சி லாச்சிரமத் தேபுணரக்

    கொட்டமிகு மானைக் கொடுத்தருளும்- செட்டியெனும்

    அம்மானையும் படைத்த அம்மானைப் பாடியிவள்

    அம்மானை யாடும் அளவிலே- பெம்மான்‘ 

    இவர்கள் ஆடினதும் மூவர் அம்மானையாகவே இருந்திருக்கலாம். அந்தப் பாடல்களக இவை இங்கு தரப்படவில்லை. ஆனால் அம்மானை ஆடிய விதம், எவ்வாறெல்லாம் ஈசனைப் பாடி அம்மானை ஆடினார்கள் எனச் சொல்லப்படுகிறது.

    மற்ற உலா நூல்களிலும் அம்மானை பற்றிய செய்திகள் இருந்திருக்க வேண்டும். இது புத்திக்கூர்மை படைத்த பெண்கள் ஆடிவந்த ஒரு சுவாரசியமான விளையாட்டு என்று எண்ண இடமிருக்கிறது.

    இலக்கிய நயமிக்க அம்மானை!

    பழங்காலந் தொட்டு வாய்மொழி இலக்கியமாகவே இருந்த இந்தப் பழமையான அம்மானை விளையாட்டை கி. பி. 2ம் நூற்றாண்டில் முதன்முதலாக எழுத்தில்-சிலப்பதிகாரத்தில் பதிவு செய்தவர் இளங்கோவடிகள் என்கிறது தமிழ் விக்கிபீடியா. சிலப்பதிகாரத்தில் வாழ்த்துக் காதையில் இளங்கோவடிகள் ‘அம்மானை வரி’ என நான்கு பாடல்களைப் பாடியுள்ளார். இவை சோழ வம்சாவளி வழிவந்த மன்னர்களின் பெருமையை விளக்கிக் கூறி, அத்தகையதொரு சோழ மன்னனை அடைய விழையும் பெண்களின்  விருப்பமாகப் பாடப்படுகின்றன.

    இவற்றை இங்கு விளக்குவதன் காரணம், எவ்வாறு ஒரு மிகத் தொன்மையான தமிழ் மகளிர் விளையாட்டு, இலக்கியத்தின் மூலமாக பழம் தமிழர் வரலாற்றுச் செய்திகளையும், புராணங்களின் சிறப்பையும், அவற்றின் கவிதை நயத்தையும் படம் பிடித்துக் காட்டுகின்றது எனப் புரிந்து கொண்டு ரசிப்பதற்காகத்தான்!

    இவையும் மூவர் அம்மானை வகையைச் சேர்ந்தவை : மூன்று பெண்கள் கூடிப் புராணங்கள் புகழும் சோழ மன்னர்களின் பெருமையைப் பாடி வாழ்த்துகின்றனர்.

    முதல் பெண்: “மிக்க நீரைக் கொண்ட கடலால் சூழப்பட்ட இவ்வுலகினை ஆட்சி செய்து  விண்ணவர் கோனாகிய இந்திரனின் உயர்ந்த அரணைக் காத்தவன் யார் சொல்? அம்மானை!”

    வீங்குநீர் வேலி உலகாண்டு விண்ணவர்கோன்

    ஓங்கரணம் காத்த உரவோன்யார் அம்மானை!

    இரண்டாமவள்: “இந்திரனின் உயர்ந்த மதிலினைக் காத்த வலியோன், விண்ணில் அசைந்து கொண்டிருந்த மூன்று ஊர்களையும் அழித்த சோழ மன்னன் காணடி, அம்மானை!”

    ஓங்கரணம் காத்த உரவோன் உயர்விசும்பில்

    தூங்கு எயில் மூன்றெறிந்த சோழன்காண் அம்மானை!

    மூன்றாமவள் முத்தாய்ப்பாகக் கூறுகிறாள்: “அவ்வாறாயின், நாம் அந்தச் சோழனின் புகார் நகரத்தின் பெருமையைப் பாடுவோம் அம்மானை!”

    சோழன் புகார்நகரம் பாடேலோ ரம்மானை! (வாழ்த்துக்காதை- வஞ்சிக் காண்டம்-16)

    (இப்பாடல் தூங்கெயில் எறிந்த தொடிதோட் செம்பியனைப் பற்றியது)

    திரும்பவும் இன்னொரு பாடலைப் பாடுகிறார்கள்:

    முதலாமவள்: “ஒரு புறாவுக்காக விண்ணுலகம் எல்லாம் புகழுமாறு தனது குறையற்ற உடலின் தசையை அரிந்து கொடுத்த சோழ அரசன் யாரடி அம்மா?”

    புறவு நிறைபுக்குப் பொன்னுலகம் ஏத்தக்

    குறைவில் உடம்பு அரிந்த கொற்றவன்யார் அம்மானை!

    இரண்டாமள் விடை பகருகிறாள்: “அவ்வாறு தசையினை அரிந்து கொடுத்தவன் யாரெனின், பசுவின் முறையீடு கேட்டுத் தன் மகனையே தேர்க்காலில் பலி கொடுத்த சோழ மன்னனின் வம்சத்தில் முன்னதாக வந்தவன் தானே அம்மானை!”

    குறைவில் உடம்பரிந்த கொற்றவன் முன்வந்த

    கறவை முறைசெய்த காவலன்காண் அம்மானை!

    மூன்றாமவள் இவ்வாறு முடிக்கிறாள்: ஆகவே அத்தகைய மாமன்னனின் பூம்புகாரை நாம் பாடுவோம் அம்மானை!”

    காவலன் பூம்புகார் பாடேலோ ரம்மானை! (வாழ்த்துக்காதை- வஞ்சிக் காண்டம்-17)

    இவ்வாறு இவர்கள் தூங்கெயில் எறிந்த தொடிதோட் செம்பியனையும், மனுநீதிச் சோழனையும், சிபிச் சக்கரவர்த்தியையும், கரிகால் சோழனையும்,  வடவரை மேல் வேங்கைக் கொடியினைப் பொறித்த  சோழ மன்னனையும் பாடி, இவ்வாறெல்லாம் மங்கையர் அம்மானையைக் கையிலெடுத்துப் பாடுவதும் ஆடுவதும், அந்த ஆத்திமாலை சூடிய வேந்தனைத் தழுவிக் கூடிக் கொள்ளத்தான் எனக் கூறி மகிழ்கின்றனர்.

    இது தமிழ் மன்னர் புகழ் கூறும் அம்மானை!

    அம்மானை ஆடுவதை விடவும் அதற்கியைய இறைவன் பெருமையைப் பாடுவதை விரும்புகின்றனர் மாணிக்கவாசகர் காலத்துப் பெண்டிர்! தத்துவப் பொருள் செறிந்த இப்பாடல்கள், இறையனுபவத்தை உணர்ந்து விளக்கிக் களிக்கும் தொண்டர் கூற்றாக அமைகின்றன. இருபது இனிமையான பாடல்கள் உள்ளன- மூவர் அம்மானை எனக் கருத இயலவில்லை; மூன்றுக்கும் மேற்பட்ட பெண்கள் விளையாட இடமுண்டு எனப் பாடல்களைப் பயின்றாலே புரிந்து விடும். அம்மானை விளையாடும் பெண்களில் ஒவ்வொருத்தியும், ‘இவ்வாறு எனக்கு ஈசன் அருள் புரிந்தான்,’ எனக் கூறி அம்மானையை வீசி ஆடுகின்றாளாம். பக்தி ரசம் கசிந்துருகும் அமுதப்பாடல்கள். ஓரிரண்டைக் காணலாமே!

    அம்மானையாடும்போது காய்களை மேலே வீசி எறிந்து, ஒரு கையால் விரைந்து பிடித்து ஆட வேண்டும்; அப்பொழுது கையில் அணிந்துள்ள அழகிய வளையல்கள் கல கல என ஒலி செய்கின்றனவாம்; பெண்களின் கண்களும் அம்மானை போகும் போக்கில் சென்று நோக்க வேண்டும் அல்லவோ? அப்போது தலையை உயர்த்துவதும் தாழ்த்துவதுமாய் இருப்பதால் காதில் அணிந்துள்ள மகரக் குழைகள் தாமும் சேர்ந்தாடுகின்றனவாம். இத்தனை வேகத்தில் தலை அசைவதால் மையை ஒத்த கருங்குழல் அவிழ்ந்து தோளிலும் கழுத்திலும் புரளுகின்றதாம்; கூந்தலில் சூடிய மலர்களில் இருந்து தேன் வழிந்து ஓடுகின்றது; அதனை உண்ண வரும் வண்டுகள் ரீங்காரமிட்டு ஒலிக்கின்றன.

    ‘கையார் வளைசிலம்பக் காதார் குழையாட

    மையார் குழல்புரளத் தேன்பாய வண்டொலிப்ப

    இவ்வாறெல்லாம் ஆகும்படி தன்னை மறந்து இவள் யாரைப் பாடி ஆடுகிறாள்? எதனில் ஆழ்ந்து தன் நிலை மறந்தாள்?

    சிவந்த நிறத்து அண்ணல் அவன்- செய்யான்! வெண்மையான திருநீறு அணிந்தவன்; எல்லாத் தேவர்களும் அவனை வந்து கைகுவித்து (சேர்த்து) வணங்க, அவன் மட்டும் கைகளைக் குவிக்காமல் விரித்து, அபய வரத முத்திரை காட்டி அவர்களை அரவணைக்கிறான். ஆகவே சேர்ந்தறியாக் கையான்! எங்கும் நீக்கமற நிறைந்திருப்பவன்; அன்பர்கட்கு மெய்ப்பொருளாயிருப்பவன்; அவன்பால் அன்பு கொள்ளாதவர்களுக்கு இருந்தும் இல்லாதவனாக இருக்கும் அறிவுப் பொருளை அவள் பாடுகிறாள்; மெய்மறக்கிறாள். ஆடுகிறாள்; தன் நிலையையும் மறந்தாள். அவன் தாளில் தலைப்பட்டாள்!

    ‘செய்யானை வெண்ணீ றணிந்தானைச் சேர்ந்தறியாக்

    கையானை எங்கும் செறிந்தானை அன்பர்க்கு

    மெய்யானை அல்லாதார்க்கு அல்லாத வேதியனை

    அவன் யார்? எங்கு உள்ளான்? அவன் திரு ஐயாறு எனும் தலத்தில் எழுந்தருளி உள்ள பெருமான்; நாம் அவனைப் பாடி அம்மானை ஆடுதும்; அவனைப் பாடி ஆடுவோம் காணாய் பெண்ணே!

    ‘ஐயாறு அமர்ந்தானைப் பாடுதுங்காண் அம்மானாய்!’ (திரு அம்மானை-13)

    இறைவனிடத்தில் உள்ளம் சென்று விட்டதால் தன் நிலை, சுற்றுப்புறம் எல்லாம் மறந்து விடும் நிலையை அம்மானை ஆடும் பெண்ணின் கூற்றின் மூலம் நயம்பட உரைக்கிறார் மணிவாசகப் பெருந்தகை! அம்மானை ஆடும் பெண்ணாகவே தன்னைக் கருதிக் கொண்டு மேலும் கூறுவார்:

    “கொன்றை மலர் சூடியவன் எம்பிரான்; ஆகவே நானும் பொலிகின்ற கொன்றை மாலையைச் சூடுவேன். அன்பு மேலிட்டு அவனுடைய திரண்ட தோள்களைத் தழுவுவேன்; அவனுடன் கூடுவேன்; கூடி மயங்குவேன்; சிறிது ஊடவும் செய்வேன். சிவந்த வாய் கண்டு கனிந்து உருகுவேன்; மனம் உருகி அவனைத் தேடுவேன். சிவபிரானது திருவடியையே சிந்திப்பேன். அவன் அருள் பெறவில்லையே என வாடுவேன்; அருள் கிடைத்ததும் மனம் மகிழ்வேன். அனலாகிய நெருப்பைக் கையில் ஏந்தி ஆடுகின்ற பெருமானின் செவ்விய திருவடிகளையே பாடி அம்மானை ஆடுவோம்,” என்கிறாள்.

    சூடுவேன் பூங்கொன்றை சூடிச் சிவன் திரள்தோள்

    கூடுவேன் கூடி முயங்கி மயங்கி நின்று

    ஊடுவேன் செவ்வாய்க்கு உருகுவேன் உள் உருகித்

    தேடுவேன் தேடிச் சிவன் கழலே சிந்திப்பேன்

    வாடுவேன் பேர்த்தும் மலர்வேன் அனல் ஏந்தி

    ஆடுவான் சேவடியே பாடுதும்காண் அம்மானாய். (திரு அம்மானை-17)

    அடியார்களை இறைவன் பால் இட்டுச் செல்ல இதைவிட வேறு ஒரு இனிய வழியும் உண்டோ? தன்னையே மறந்து இறைவனுடன் ஒன்றி விட்ட நிலையன்றோ இது?

    நம்மை இறைவனோடு இணைக்கும் அம்மானை!

    பிள்ளைத்தமிழ் என்ற பிரபந்தத்தில், பெண்பால் பிள்ளைத்தமிழ் நூல்களில், பெண்குழந்தை அம்மானை விளையாடும் பருவம் எட்டாவது பருவமாக பாடப் பட்டுள்ளது. பிள்ளைத்தமிழ் பத்துப் பருவங்களைக் கொண்டது. (பிள்ளைத்தமிழ் பற்றிய விளக்கங்களுக்கு திரு. நாஞ்சில் நாடன் அவர்களின் ‘சிற்றிலக்கியங்கள்’ எனும்  நூலைக் காணவும்). இவற்றில் ஐந்தாறு வயது நிரம்பிய பெண்மகவு (பெரும்பாலும் பெண் தெய்வங்கள்) அம்மானை விளையாடும் அழகும் நேர்த்தியும், பெருமையும், பொருள் நயத்துடன் கூறப்படுகின்றது.

    குமரகுருபரர் பாடியுள்ள மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழிலிருந்து ஒரு பாடலைக் காணலாம். மீனாட்சியம்மை அம்மானையாடுவது எவ்வாறு உள்ளது எனப் பத்து பாடல்களில் விதம் விதமாக வருணிக்கிறார். அவற்றுள் ஒன்று:

    சிறந்த மரகதத்தாலும்,  நீலக் கற்களாலும் பருத்த ஒளி நிறைந்த முத்துக்களாலும் இழைக்கப்பட்ட அம்மனைகளை முறையே எடுத்து மீனாட்சி என்னும் குழந்தை வானில் வீசுகிறாள். குழந்தையால் அம்மானை விளையாட முடியுமா? தெய்வக் குழந்தையால் கட்டாயம் முடியும். ஆனால் இங்கு ஒரு மங்கையல்லவோ அம்மானை ஆடுகிறாள்? அவள் கண்ணுதல் பெருமானாகிய சிவபெருமானிடம் கொண்டுள்ள காதலால் அவருக்கு அம்மானைக் காய்கள் மூலமாகத் தூது விடுகிறாளாம்! அட! இப்படியும் ஒரு தூது முறை உண்டா என எண்ணுபவர்களுக்கு விளக்குகிறார்- மீனாட்சி தன் கையில் வைத்து வளர்க்கும் பச்சைக் கிளியைப் போலுள்ளதாம் மரகத நிறத்து அம்மானை; கருநீலக் குயில் போலுள்ளதாம் நீலமணி அம்மானை! ஒளி சிந்தும் பருத்த முத்தாலான அம்மானை இளமையான வெள்ளோதிமம்- வெண்மையான அன்னப்பறவை- போலுள்ளதாம்! என்ன அழகான கற்பனை! இவற்றையும் அம்மானைக் காய்கள் ஒரு ஒழுங்கில் மேலே வீசப் படுவதைப் போன்று முறையாக ஒன்றன்பின் ஒன்றாகத் தனது காதலைத் தலைவனிடத்தில் கூறிவர அனுப்புகிறாளாம் மீனாட்சியம்மை!

    ஒள்ளொளி மரகதமும் முழு நீலமும்

    ஒண்தரளத் திரளும்

    ஒழுகொளி பொங்க இழைத்திடும் அம்மனை

    ஓருமூன்று அடைவில் ஒடாக்

    கள்ளவிழ் கோதை விசும்புற வீசுவ

    கண்ணுதல் பால்செல நின்

    கையில் வளர்த்த பசுங்கிளி யும்வளர்

    காமர் கருங்குயிலும்

    பிள்ளை வெளோதிமமும் முறைமுறையால்

    பெருகிய காதலைமேல்

    பேசவிடுப்ப கடுப்ப அணைத்தொரு

    பெடையொடு அரசஅனம்

    அள்ளல் வயல்துயில் மதுரைத் துரைமகள்

    ஆடுக அம்மனையே

    அழகு தழைந்தகல் யாண சவுந்தரி

    ஆடுக அம்மனையே. ( அம்மானைப் பருவம்-10)

    இவ்வாறு தூது விடும் இவள் யார்? மதுரைத் துரைமகள் ஆன மீனாட்சி- ‘அரச அன்னம் தன் பெடையொடு வயலில் உறங்கும் மதுரைக்கு அரசியே! நீ அம்மானை ஆடி அருளுக,’ என்கிறார். அற்புதமான கற்பனை விருந்து.

    தெய்வத் தமிழ் அம்மானை!

    இவ்வாறு காலகட்டத்தில் விதம் விதமாக வளர்ச்சி பெற்று வந்துள்ளன அம்மானை விளையாட்டும் அதனைச் சார்ந்த இலக்கியங்களும்!

    எனது சிறுமிப் பருவத்தில் கூட தோழியர்களுடன் வழுவழுப்பான கூழாங்கற்களைக் கொண்டு- அவை ஐந்து, ஏழு, ஒன்பது என்ற எண்ணிக்கையில் அமையும்- மேலே வீசியெறிந்து பிடித்து விளையாடி இருக்கிறேன். ஆனால் இந்த கருத்துச் செறிந்த பாடல்களைப் பாடவில்லை. முந்தைய தலைமுறையினரான பாட்டிமார், அன்னையர் எவரும் சொல்லித் தரவில்லை. இவை நீண்ட நாட்களுக்கு முன்பே வழக்கிலிருந்து அழிந்தொழிந்து விட்டனவோ எனத் தோன்றுகிறது. மிக்க வருத்தமாயுள்ளது. எவரேனும் இந்த அருமையான விளையாட்டைப் பற்றி ஆராய்ச்சி செய்துள்ளனரா எனத் தேட வேண்டும்.

    தெரிந்தால் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.

    பின்குறிப்பு: பிற்காலத்தில் கள்ளழகர் அம்மானை, ராமப்பய்யன் அம்மானை, சிவகங்கை அம்மானை என்ற சில நூல்கள் பிறந்தன. இவற்றில் அம்மானை விளையாட்டைப் பற்றிய செய்திகள் காணப்படவில்லை. ஒரு வீரத் தலைவனின் புகழ் நீண்டதொரு நாட்டுப்புறப் பாடல் நயத்தில் இசைக்கப் பட்டது. இவை முற்றிலும் Ballads  எனப்படும் நாட்டுப் பாடல் வகையைச் சேர்ந்தவையாகக் காணப்படுகின்றன. இவை ஒரு காலத்தவரின் வரலாற்றை அறிந்து கொள்ள உதவுகின்றன.

     நன்றி: சொல்வனம் மின்னிதழ்

    Share
  • பாடுதும் காண் அம்மானை!

    மீனாக்ஷி பாலகணேஷ்

    மூன்று பெண்கள் அமர்ந்து கொண்டு கற்களால் செய்யப்பட்ட ஒருவிதமான காயை வீசிப் பிடித்து அம்மானை விளையாடுகிறார்கள். இது விளையாட்டாகவே இருப்பினும், ஆடுவதற்கும் அதன் வேகத்திற்கும் பொருத்தமாகப் பாடல்களையும் இப்பெண்கள் அழகுறப் புனைந்து பாடுகிறார்கள். யார் சாமர்த்தியமாகக் கேள்வி கேட்பது, யார் சமயோசிதமாக விடை கூறுவது, யார் விடையில் இரு பொருள் பொதிந்து கூறுவது என்பதில் இவர்களுக்குள் போட்டி!!

    முதலில் ஒருத்தி, “திருமாலாலும் அறிய இயலாத இறைவனாம் அண்ணாமலையாருக்கு அழகாக அமைந்த வில்லும் போர்வையும் அங்கமும் (உடலும்) முறையே மேருமலையும், யானைத் தோலும், மாதின் உடலில் பாதியும் ஆகும், அம்மானை,” என்று கூறி அம்மானையை மேலே வீசுகிறாள்.

    ‘நாராயணன் அறியா நாதர் அருணேசருக்கு
    வார் ஆர் சிலை கலை மெய் மாது அங்கம் அம்மானை’

    (வார் ஆர் சிலை= அழகான வில்; கலை= உடை, போர்வை; மெய்= உடல்; மாது அங்கம்= மாதின் உடல்; பார்வதியின் பாதி உடல்).

    அடுத்த பெண் இதற்கான மறுமொழியைத் தயாராக வைத்திருக்க வேண்டும்!! அவளும் சளைக்காமல் உடனே, “அழகான வில்லும் யானைத்தோல் போர்வையும் உடல் மாதின் அங்கமும் ஆனாலும், அடியே! ஆராய்ந்து பார்த்தால் அவர் எடுப்பது பிச்சை அல்லவோ, அம்மானை,” என்று ஏளனமாகக் கேட்டபடி அம்மானையை வீசுகிறாள்.

    ‘வாரார் சிலை கலை மெய் மாது அங்கம் ஆம் ஆயின்
    ஆராயும் கால் எடுப்பது ஐயம் அன்றோ அம்மானை!’

    (ஐயம்= பிச்சை)
    மூன்றாமவளோ வெகு சாமர்த்தியக்காரி. இருவர் கூற்றுகளுக்கும் பொருந்தும் வகையில், “அன்னம் கண்டறியாத அவர் பிச்சை எடுப்பதற்கு ஐயப்பாடும் உள்ளதோ? அம்மானை!” என இடக்காக விடையிறுக்கிறாள். இப்போது மற்றவர்கள் தான் இவளுடைய கூற்றுக்குத் தமக்குப் புரிந்தவாறு பொருள் விளங்கிக் கொள்ள வேண்டும்!!

    ‘அன்னம் அறியார் எடுப்பது ஐயமோ அம்மானை!’

    (அன்னம் அறியார்= உணவைக் காணாதவர் என்ற பொருள்; ஆனால் உட்பொருள் அன்னப் பறவை வடிவான பிரம்மனும் காண இயலாத ஐயன் என்பதாம்! ஐயமோ= பிச்சையோ; ஆனால் இங்கு ஐயப்பாடு அல்லது சந்தேகம் என்ற பொருளில் வந்தது!)

    திருமால், பிரமன் ஆகிய இருவரும் பன்றி, அன்னப் பறவை ஆகிய உருவெடுத்துத் தேடியும் அடிமுடி காணவொண்ணாத ஒளிப்பிழம்பாக அண்ணாமலையார் நின்ற வரலாறு அழகுபட சாமர்த்தியமாக இங்கு இப்பெண்களால் அம்மானை விளையாட்டின் போது உரைக்கப் படுகின்றது.

    உட்கருத்து: (வராக உருவெடுத்த) திருமாலும் காண இயலாத அண்ணாமலையாருக்கு மேருமலையே வில்; யானையுரி உடை; பார்வதியான மாதின் உடலில் ஒரு பாதி அங்கம் ஆகும்; இரண்டாமவள் இப்பொருள் புரியாதவள் போல, வெளிப்படையான பொருளை மட்டும் கொண்டு, “இதுவெல்லாம் இருப்பின், அவர் ஏன் பிச்சை எடுக்கிறார்?” எனக் கேட்கிறாள். உடனே மூன்றாமவள் சமயோசிதமாக, இருபொருள் பட, “அன்னத்தையே (சோற்றையே) கண்டறியாதவர் பிச்சை எடுப்பதில் வியப்பு என்ன?” என்பாள். சிறிது ஆழ்ந்து பார்த்தால், “அன்னப் பறவை வடிவு கொண்ட பிரமனாலும் காண முடியாதவர் அல்லவோ? இதில் ஐயமும் உளதோ?” என்ற பொருள் தோன்றும்!
    முழுப் பாடலைப் பார்க்கலாம்:

    ‘நாராய ணனறியா நாதரரு ணேசருக்கு
    வாரார் சிலைகலைமெய் மாதங்கம் அம்மானை!
    வாரார் சிலைகலைமெய் மாதங்கம் ஆமாயின்
    ஆராயுங் காலெடுப்ப தையமன்றோ அம்மானை!
    அன்னம்அறி யார்எடுப்ப தையமோ அம்மானை?’

    இந்த வினாக்களும் அவற்றிற்குண்டான விடைகளும் அம்மானையை வீசும் சில நொடிகளில் நிகழ வேண்டும். சமயோசிதமும், உள்ளறிவும், புத்திக் கூர்மையும் கொண்டு புராணங்களில் நல்ல தேர்ச்சியும் உள்ள பெண்களால் தான் இவ்வாறு இருபொருள் படப் பாட முடியும். அல்லது அவர்கள் பாடியபடி அம்மானை ஆடுவதாகப் புலவர்கள் பாடலெழுதி உள்ளனர்.

    அம்மானைக்காகப் பாடலா? பாடலுக்காக அம்மானையா? எதுவானால் என்ன? ஒரு விறுவிறுப்பான விளையாட்டு; துறு துறுவென மூளைக்கு வேலை! தமிழுக்கு அழகான இலக்கியம்!!

    மூன்று பெண்கள் அமர்ந்து பாடி, மூன்று அம்மானைகளைக் கொண்டு ஆடுவதால் இந்த விளையாட்டு ‘மூவர் அம்மானை’ எனவும் பெயர் பெற்றது. மூன்று பெண்கள் ஏதேனும் ஒரு செய்தியை அல்லது இறைவன் கதையை அல்லது அவன் புகழைப் பாடி வினா- விடையாக அம்மானைக் காய்களை வீசி விளையாடும் விளையாட்டே அம்மானை ஆகும்.

    மூன்று பெண்களில் முதலாமவள் ஒரு பாட்டுடைத் தலைவனை மனதில் கொண்டு பொதுவான ஒரு செய்தியைக் கூறிக் காயைப் பிடித்து வீசி ‘அம்மானை’ என்பாள்; இரண்டாவது பெண் அந்தச் செய்தியுடன் பொருந்திய ஒரு கேள்வியைக் கேட்டுக் காயை வீசி ‘அம்மானை’ என்பாள்; மூன்றாமவள் அதற்கு இரு பொருள் படும்படியான ஒரு சாமர்த்தியமான விடையைக் கூறிக் கொண்டே அம்மானையை வீசிப் பிடித்து ‘அம்மானை’ என்பாள். இதுவே அம்மானை விளையாடும் முறையாகும். காலம் செல்லச் செல்ல சில வேறுபாடுகளும் கொண்டு அம்மானை விளையாட்டு காணப்படுகிறது.

    அவற்றைப் பின்னால் காண்போம்.
    *************************************************************

    ஆதி காலம் தொட்டு, நாகரிகம் வளர்ந்து, மனிதர்கள் வாழ்க்கையை ஒழுங்கான ஒரு நெறியாகக் கடைபிடித்து வாழத் துவங்கிய காலத்திலிருந்து, உயர்ந்த சிந்தனைகளும், அதன் தொடர்பான சீரிய எண்ணங்களும் தோன்றி வளர்ந்து வந்தன. தமிழ் நாட்டில் ஒரு காலகட்டத்தில் சைவ, வைணவ சமயங்கள் வேகம் பெற்று வளர்ந்து உயர்ந்த உன்னத நிலையை அடைந்தபோது மாந்தர்களின் வாழ்வில் பிறப்பு, இறப்பு, ஆடல், பாடல், விளையாடல், கல்வி, கேள்வி என்ற எல்லா நிகழ்வுகளிலும் இறைவனின் புகழ் ஒரு அங்கமாகவே இசைக்கப் பட்டது. அங்கதமாக, விடுகதையாக, புராணங்களாக, பக்தி இலக்கியங்களாக இவை தழைந்து தனிச் சிறப்புப் பெற்றன. முக்கியமாக மகளிர் தம்முடைய தினசரி நடவடிக்கைகளான நீராடல், பொழுது போக்காக பலவிதமான விளையாட்டுகளை விளையாடுதல் ஆகிய எல்லாவற்றிலும் இறைவன் தொடர்பான பாடல்களைப் பலவிதமாகப் பாடி மகிழ்ந்தனர்.

    இவற்றுள் பாவை நோன்பு, அம்மானை, மேலும் பெண்களின் விளையாட்டுகள் தொடர்பான நயம் மிகுந்த வாய்மொழி இலக்கியங்கள் என்னும் பாடல்கள் பின்பு சமய இலக்கியங்களிலும் இடம் பெற்றன. அவற்றுள் ஒன்று தான் அம்மானை எனப்படுவது.

    அழகான, பொருள் நிறைந்த, இத்தகைய மூவர் அம்மானைப் பாடல்கள், பெரும்பாலும் கலம்பகம் என்னும் நூல்களின் ஒரு அங்கமாக விளங்குகின்றன. கலம்பகம் என்பதற்குக் கதம்பம் என்று பொருள் என்பார் தமிழ்ப் பேரறிஞர் உ. வே. சாமிநாத ஐயர். பலவகைப் பாக்களால் இயற்றப் பெறுவதும் பலவகைப் பொருள்களைக் கொண்டதுமான ஒருவகைச் சிற்றிலக்கியமே கலம்பகம் எனப்படும். கலம்பகம் என்னும் சொல்லில் கலம் என்பது பன்னிரண்டையும் பகம் என்பது அதில் பாதியான ஆறினையும் குறிக்கும். ஆகவே பதினெட்டு உறுப்புகள் அமையப் பாடப் படுவது கலம்பகம் எனப்படும். அம்மானை என்பதும் இதில் ஒரு உறுப்பாக இடம் பெறும். முதன்முதலில் தமிழில் பாடப் பெற்றது நந்திக் கலம்பகம் ஆகும். இதன் இலக்கணத்திற்குள் புகாமல், இந்தக் கலம்பகங்களில் உள்ள அம்மானைப் பாடல்களை, அவற்றின் நயத்தை மட்டும் காண்போமே.

    மேற்கூறிய மூவர் அம்மானைப் பாடல்கள் பெரும்பாலும் கலம்பகத்தின் உறுப்பாகவே காணப்படுகின்றன. விறுவிறுப்பான விளையாட்டுக்கேற்ற வினா-விடைக் கவிதைகள் இவை. இவை தவிரத் தனியாக மூவர் அம்மானை என இலக்கியங்கள் இருந்தனவா எனத் தெரியவில்லை. முதலில் மேலே நாம் பார்த்தது சைவ எல்லப்ப நாவலர் அருளிய திரு அருணைக் கலம்பகத்தில் பெண்கள் அம்மானை ஆடும் காட்சி.

    ***************************************************************************

    அடுத்து, குமர குருபரரின் மதுரைக் கலம்பகத்திலுள்ள அம்மானைப் பாடல்;
    அதே விதமாக மூன்று பெண்கள் அம்மானை ஆடிக் கொண்டு, புதிர் போடுவது போன்ற வினாக்களையும் விடைகளையும் கூறுகின்றனர்.

    முதல் பெண் கூறுகிறாள்: “பிரமன், திருமால் ஆகிய இருவருக்கும் தன் அடிமுடிகள் காண்பதற்கு அரியதானவரும், மதுரையின் ஈசனும் ஆகிய சிவபெருமான், தன் வெற்றியைக் காட்டும் மொழிகளைப் பேசி, ஒரு சித்தனின் உடம்பில் உறுப்புகளைத் தனித் தனியாக வெட்டி வென்று விட்டார்,” என்கிறாள்.

    ‘இருவருக்கும் காண்பரிய ஈசர் மதுரேசனார்
    விருதுகட்டி அங்கம்வெட்டி வென்றனர் காண் அம்மானை’

    (விருது கட்டி- வெற்றிக்குரிய சின்னங்களை அணிந்து கொண்டு; சித்தன் என்பவன் தனக்கு ஆயுதக் கலை பயிற்றுவித்த ஆசிரியரிடம் பொறாமை கொண்டு, தானும் சிலருக்குக் கற்பித்து வந்தான்; இதனால் ஆசிரியரின் வருவாய் குறைந்தது; ஆதனால் சிவபெருமான், சித்தனின் ஆசிரியர் வடிவு கொண்டு சென்று அவனைப் போருக்கு அழைத்து, அங்கத்தை வெட்டிக் கொன்றார் என்பது புராணக் கதை)

    இரண்டாமவள் கூற்று: “அவ்வாறு வெற்றி மொழி பேசி சித்தனின் உடலைத் துணித்து வென்றார் என்றால், அருமையான அவருடைய ஒரு உடம்பு இரண்டு கூறாக ஆவது ஏன்?” எனக் கேள்வி கேட்டு அம்மானையை வீசுகிறாள்.

    ‘விருதுகட்டி அங்கம்வெட்டி வென்றனரேயாம் ஆகில்
    அருமை உடம்பு ஒன்று இருகூறு ஆவது ஏன் அம்மானை’

    (உட்பொருள்: இருகூறாக ஆவது என்பது ஈசனின் பாதியும் அன்னையின் பாதியும் என்பனவாகும்)
    மூன்றாமவள் பகரும் விடை: “அவருக்கு உடம்பு இரண்டு கூறாக ஆயினும், தழும்பு (காயம்) ஏதும் இல்லை!” என உரைப்பாள்.

    ‘ஆனாலும் காயமிலை ஐயரவர்க் கம்மானை.’

    (ஆனாலும் அவருக்கு எனத் தனியாகத் திருமேனி இல்லையே என்பது உட்பொருள். காயம்- உடம்பு; புண் அல்லது தழும்பு)
    முழுப்பாடல் இதோ:

    ‘இருவருக்கும் காண்பரிய ஈசர்மது ரேசனார்
    விருதுகட்டி அங்கம்வெட்டி வென்றனர்காண் அம்மானை
    விருதுகட்டி அங்கம்வெட்டி வென்றனரே யாமாகில்
    அருமையுடம் பொன்றிருகூ றாவதேன் அம்மானை
    ஆனாலும் காயமிலை ஐயரவர்க் கம்மானை.’

    அம்மாடி! வாயாடிகள் தான் இந்தப் பெண்கள். ஒருத்தருக் கொருத்தர் சளைக்காமல் வினாக்களும் விடைகளும் எழுந்த வண்ணம் இருக்கின்றனவே!

    ****************************************************************

    அடுத்து பூண்டி அரங்கநாத முதலியார் தமது கச்சிக் கலம்பகத்தில் பாடியுள்ள ஒரு அம்மானைப் பாடல்:
    முதற்பெண்: “குறையாத வளங்களையுடைய காஞ்சியம்பதியில் வாழ்ந்தருளும் ஏகாம்பரனார் பகைவரது முப்புரத்தை எரித்து அழித்த தீயவர் பாரடி, அம்மானை,” என ஒரு செய்தியைக் கூறி ஆட்டத்தைத் துவங்குகிறாள்.

    ‘வற்றா வளக்காஞ்சி வாழ்ந்தருள் ஏகம்பரனார்
    செற்றார் புரமெரித்த தீயர்காண் அம்மானை’

    (வற்றா- குறைவில்லாத; செற்றார்= பகைவர்; தீயர்= கொடியவர்)
    இரண்டாமவள்: “பகைவரின் முப்புரம் அழித்த கொடியவராக இருப்பினும் வேத நூல்களைக் கற்ற அந்தணர்கள் அவரை அழகிய குளிர்ந்த கருணையை உடையவராகக் கூறுவது ஏன், அம்மானை?” என இடக்காகக் கேள்வியைக் கேட்கிறாள்.

    ‘செற்றார் புரமெரித்த தீயரே யாமாயின்
    கற்றார்கள் அந்தணராக் கழறுவதேன் அம்மானை’

    (அந்தணர்- பிராமணர்; அம்+ தண் + அர்- அழகிய குளிர்ச்சியை உடையவர்; கழறுவது- கூறுவது)
    இதற்கு ‘நறுக்’கென மூன்றாமவள் தரும் நயமான விடை: “அவ்வாறு கூறுதல், ஆறுதொழில் சேர்ந்த காரணத்தால் அம்மானை,” என்பதாம்!

    ‘கழறல் அறுதொழில்சேர் காரணத்தால் அம்மானை.’

    (அறுதொழில்= அழிக்கும் தொழில்; அழித்து யாவரையும் ஒழித்தல்; சிவன் சம்ஹாரக் கடவுள் என ஒரு பொருள்; இன்னொன்று, அந்தணரின் ஆறு தொழில்களான ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் என்பனவாகும்).
    பாடல் இதோ முழுமையாக:

    ‘வற்றா வளக்காஞ்சி வாழ்ந்தருளே கம்பரனார்
    செற்றார் புரமெரித்த தீயர்காண் அம்மானை
    செற்றார் புரமெரித்த தீயரே யாமாயின்
    கற்றார்கள் அந்தணராக் கழறுவதேன் அம்மானை
    கழறல் அறுதொழில்சேர் காரணத்தால் அம்மானை.’

    நாமும் ஒப்போது இந்த அம்மானை விளையாட்டில் ஆழ்ந்து விட்டோமல்லவா?

    **************************************************************

    அடுத்ததாக இவர்கள் பாடுவது, காசிக் கலம்பகத்தில் குமர குருபரர் பாடிவைத்துள்ள அம்மானைப் பாடல்:
    முதல் பெண் பாடியபடி ஆடுகிறாள்: “பிறைமதியின் கீற்றை அணிந்திருக்கும் காசி விஸ்வேசர் கரும்புவில்லைக் கொண்ட மன்மதனைத் தன் நெற்றிக் கண் நெருப்பால் எரித்தனர் கண்டாயோ, அம்மானை!”

    கலைமதியின் கீற்று அணிந்த காசிஅகி லேசர்
    சிலைம தனைக் கண்அழலால் செற்றனர்காண் அம்மானை
    (சிலைமதனை= வில்லேந்திய மன்மதனை)

    இதற்கு இரண்டாமவள், ” வில்லேந்திய மன்மதனை நெற்றிக் கண்ணால் எரித்தார் என்றால், மலைமகளான உமையவளுக்குத் தன் உடலில் ஒரு பாகத்தை எதற்காகக் கொடுத்தார்”‘ என வினா எழுப்பி அம்மானையை வீசுகிறாள். அதாவது, தம்மைக் காதலில் விழச் செய்ய மதனன் அம்பு விடுத்ததனால் சினம் கொண்டு அவனை நெற்றிக் கண்ணால் எரித்தவர் பின் உமாதேவிக்கு தனது உடலில் ஒரு பகுதியை எதற்காகக் கொடுத்தாராம்? எனக் கேட்கிறாள்.

    சிலைமதனைக் கண்அழலால் செற்றனரே ஆமாகின்
    மலைமகட்குப் பாகம் வழங்குவதேன் அம்மானை

    அதற்கு மூன்றாமவள் சளைக்காமல் கூறும் சமயோசிதமான விடை: “அடியே! இறைவர் காதல் மயக்கம் கொண்டு விட்டதனால் தமது உடம்பில் பாதியை மலைமகளுக்குத் தர மாட்டாரோ?” என்பது.

    வழங்காரோ அப்பாலும் மாலானால் அம்மானை
    பாடலை முழுமையாகக் காண்போமா?

    கலைமதியின் கீற்று அணிந்த காசிஅகி லேசர்
    சிலைம தனைக் கண்அழலால் செற்றனர்காண் அம்மானை
    சிலைமதனைக் கண்அழலால் செற்றனரே ஆமாகின்
    மலைமகட்குப் பாகம் வழங்குவதேன் அம்மானை
    வழங்காரோ அப்பாலும் மாலானால் அம்மானை

    **********************************************************

    இப்பெண்கள் சிவபிரானைப் பற்றி மட்டுமல்ல; திருமாலின் கதைகளையும் பாடிக் களிக்கின்றனர்; பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் இயற்றிய திருவரங்கக் கலம்பகத்தில் இருந்து ஒரு அம்மானைப் பாடல்:

    முதல் பெண்: “வண்டுகள் விரும்பிச் சேரும் சோலைகளையுடைய திரு அரங்கர் எல்லாப் பொருளும் ஆனவர் ஆவார்; ஆயினும் ஆண், பெண், அலி அல்லாதவராவார். தெரியுமா? அம்மானை!” என ஆரம்பிக்கிறாள்.

    ‘தேனமருஞ் சோலைத் திருவரங்கர் எப்பொருளும்
    ஆனவர்தாம்; ஆண், பெண், அலி அலர்காண், அம்மானை!’

    இரண்டாமவள்: “எல்லாப் பொருள்களும் ஆகிய அவர் ஆண், பெண், அலி அல்லாதவரானால் சீதையை மனைவியாகக் கொள்வாரோ? அம்மானை!” என நையாண்டி செய்கின்றாள்.

    ‘ஆனவர்தாம் ஆண், பெண், அலி அலரே ஆமாகில்
    சானகியைக் கொள்வாரோ தாரமாய்? அம்மானை!’

    மூன்றாமவள்: “அவ்வாறு அவர் சீதையை மனைவியாகக் கொண்டதும் ஒரு சாபத்தால் (வில்லின் பொருட்டால்) தான் அம்மானை!” என முத்தாய்ப்பு வைக்கிறாள்.

    ‘தாரமாய்க் கொண்டதும் ஓர் சாபத்தால், அம்மானை!’

    விரிவாக விளக்கத் தேவையிராது எனக் கருதுகிறேன். இப்பொழுது இந்த அம்மானை விளையாட்டின் வினா-விடை முறைமைகள் புரிந்திருக்கும் அல்லவா?
    முழுப் பாடல் இவ்வாறு:

    ‘தேனமருஞ் சோலைத் திருவரங்கர் எப்பொருளும்
    ஆனவர்தாம்; ஆண், பெண், அலி அலர்காண், அம்மானை!
    ஆனவர்தாம் ஆண், பெண், அலி அலரே ஆமாகில்
    சானகியைக் கொள்வாரோ தாரமாய்? அம்மானை!
    தாரமாய்க் கொண்டதும் ஓர் சாபத்தால், அம்மானை!’

    (தொடரும்)
    ________________________

    _

    Share