Tag: மீனாட்சி பாலகணேஷ்

  • ஈழம் தந்த பிள்ளைத்தமிழ் நூல்கள்-9

    ஈழம் தந்த பிள்ளைத்தமிழ் நூல்கள்-9

    மீனாட்சி பாலகணேஷ்

    1. பழனி மலையண்ணல் பிள்ளைத்தமிழ்

              இப்பிள்ளைத்தமிழினின்றும் முழுமையாகப் பதிப்பிடப் பெறாத ஒரேயொரு பாடலே கிடைத்துள்ளது. அதுவும் என்ன பருவம் என்றும் உய்த்துணர வழியில்லை. விரைவில் முழு பிள்ளைத்தமிழும் கிடைக்க முருகனையே வேண்டுவோம்.

    1. பள்ளம்புலம் குமரகோட்டம் திருமுருகன் பிள்ளைத்தமிழ்

              இலங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சரவணையூரில் குடிகொண்டுள்ள குமரப்பெருமான் மீது பாடப்பட்ட பிள்ளைத்தமிழாகும் இது. தீவகம் வே. இராசலிங்கம் என்பவர் இயற்றியது. 2013aஇல் தான் பாரதி பதிப்பகம், கனடா-வினால் வெளியிடப்பட்டுள்ளது.

              வழக்கம்போன்று பருவத்திற்குப் பத்துப் பாடல்கள் கொண்டது இப்பிள்ளைத்தமிழ். காப்புப்பருவ முதற்பாடல் திருமால் மீதன்றி விநாயகர் மீது அமைந்துள்ளது.

              சிற்றில் பருவத்துப் பாடலொன்று பிற புலவர்கள் முருகனைப் போற்றிப் பாடிய நயத்தை அழகுறக் கவிதையில் பொருத்திக் காட்டுகின்ற அழகைக் காண்போமா?

              முருகனின் பெருமைகளைப் புகழ்ந்து அருணகிரியார் புகழ்ப்பாடல்களாகத் திருப்புகழ் பாடினார். இதனால் முருகனும் பெருமை (கனம்) பெற்றான். பொய்மை பேசாத வள்ளற்பெருமான் பாடிடும் பேசும் தெய்வமாக முருகன் நின்றான். குமர குருபரரும்  புள்ளிருக்குவேளூர் முருகன்மீது பிள்ளைத்தமிழ், கந்தர் கலிவெண்பா ஆகிய நூல்களைப் பாடினார். இதனைக் ‘கொஞ்சும் முருகுப்பா’ என்றார் நம் புலவர். தமிழுக்கு ஆசான் முருகன் என்கிறார். இது தொடர்பான கதையைப் பற்றிய ஓர் செய்தியையும் தந்துள்ளார்.

              இதுதான் கதை: இறையனார் களவியலுக்குப் பாண்டிய மன்னர் ஆணைப்படி, புலவர்கள் பலர் உரை கண்டனர்.  உப்பூரி குடிகிழார் என்பவரின் மகனான உருத்திர சன்மன் எனும் ஐந்து வயதேயான ஊமைப்பிள்ளையிடம் ஒவ்வொருவராகத் தம் உரையைப் படித்துக் காண்பிக்க, அவன் சலனமின்றி இருந்து, நக்கீரரின் உரையைக் கேட்டபோது மட்டும் மெய்சிலிர்த்து வியந்தானாம். ஆக நக்கீரர் உரையே சிறந்தது எனக் கொள்ளப்பட்டது. (இவ்வுருத்திரசன்மன் முருகப்பிரானின் திருவடிவமே! இவன் ஊமையாகப் பிறந்தது சிவபிரானுடைய சாபத்தால் விளைந்தது; அது வேறொரு கதை).

              இத்தகைய பெருமை வாய்ந்த முருகன் இட்டும் தொட்டும், மணலினாற் சிற்றில் அமைத்தும் விளையாடும் சிறுமியர்கள் மனத்தில் உறைபவன். சிறுவர்கள் மனம் பெருமையில் ஓங்கி விளங்க, நீ சிற்றிலைச் சிதைக்காதே அப்பா என முருகவேளை வேண்டுவதாக இப்பாடல் அமைந்தது.

              புகழ்ப்பா தந்த அருணகிரிப்

                     பொய்கைத் தமிழிற் கனம்பெற்றாய்!

             பொய்யா வள்ளற் பெருமானார்ப்

                     பேசும் தெய்வம் எனநின்றாய்!

             குகப்பா குமரக் குருபரரும்

                     கொஞ்சும் முருகுப் பாதந்தார்!

             குழந்தை நீயே என்பதுவும்

                     கொஞ்சும் தமிழுக் காசானாய்

             அகப்பா கண்ட உன்றனுயர்

                     அழகே குழந்தை வடிவன்றோ! 

             இட்டும் தொட்டும் அழைந்தாடி

                     இல்லம் அமைத்து விளையாடும்

             மகப்பா மடவார் மனத்துறையும்

                     மயிலோய் சிற்றில் சிதையேலே!

             வண்ணச் சிறுவர் மனமோங்க

                     வரையும் சிற்றில் சிதையேலே!

                                            — என்பது பாடல்.

                                  ~~~~~~~~~~~~~~~~~~~~~~~

    1. மண்டூர்ப் பிள்ளைத்தமிழ்

              சைவமாமணி விஸ்வலிங்கம் என்பவரால் இயற்றப்பெற்ற இந்நூல் 1988ஆம் வருடம் பதிப்பிடப்பட்டுள்ளது.

              கிழக்கிலங்கையில் உள்ள மட்டக்களப்புச் சதுப்பேரியின் மேற்கரையை அடுத்துத் தென்திசையில் அமைந்து விளங்கும் பழந்தமிழ் ஊரே மண்டூர் ஆகும். சிவமணம் கமழும் இவ்வூர், மருதநிலத்தின் பாற்பட்டதாம். ஒரு தில்லை மரத்தினில் பாய்ந்த வேல் வேடவர்களால் தொன்றுதொட்டு வழிபடப்பட்டு, பிற்காலத்தில் இதனை மூலத்தானமாகக் கொண்டே ஆலயம் எழுப்பப்பட்டதனால் இவ்வூர் தில்லை மண்டூரென அழைக்கப்படுகிறது.

              காப்புப் பருவத்து முதற்பாடல் பிள்ளைத்தமிழ் இலக்கணத்திற்கேற்ப, திருமாலை வேண்டிக் குழந்தையைக் காக்க வேண்டுகின்றது.

              செங்கீரைப் பருவத்து முதற்பாடல் புதிய கருத்துகளையும் புதுக் காட்சிகளையும் கண்முன் வைக்கிறது. சிறப்பான கருத்துகளுடன் அமைந்த இப்பாடலைக் காண்போமா?

              உனது மந்தரமலை போன்ற புயத்தின்கண் புனையப்பட்டு மார்பில் தவழும் மாலையில் வண்டுகள் மொய்த்து ஆடுகின்றன; மல்லிகை, முல்லை இவற்றின் நறுமணம் கமழவும் மந்தார மலர்கள் அணியப்பட்டும் உன் அழகான முகத்தில் பட்டும் சுருள்சுருளான தலைமயிர் ஆடுகின்றது. தனது கடைசி நாட்கள் வந்துவிட்டதென சூரபத்மன் சிந்தை தளர்ந்து பயந்து தினமும் வருத்தம் கொள்ளவும், உனது நிலவினை ஒத்த முக மண்டலமனைத்திலும் சிறுமியர் முத்தமிட, செந்தமிழானது ஓங்கி வளரும் வண்ணம் வரம் தந்திடும் செல்வக்குமரா, நீ செங்கீரையாடிடுக! சிவந்த நெற்கதிர்களால் வளம்பெறும் மண்டூரின் தெய்வமே, செங்கீரை ஆடியருளுக.

              மந்தர வரைபுரை யுந்திரு மார்பிடை

                              வண்டார் நின்றாட

                     மல்லிகை முல்லை மணங்கம ழுஞ்செழு

                              மந்தாரஞ் சாரத்

             சுந்தர நிறைவத னம்படு குஞ்சிசு

                              ருண்டுசு ருண்டாடத்

                     தொல்லைவ ரந்தொலை யுங்கடை நாள்வந்

                              துற்றதே னச்சூ ரன்

             சிந்தைத ளர்ந்துப யந்துறு மின்னல்தே

                              ரிந்துநி தம்வா டத்

                     திங்களை நிகர்முக மண்டில மெங்குஞ்

                              சிறுவியர் முத்தா ரச்

             செந்தமி ழோங்கவ ரந்தரு செல்வா

                              செங்கோ செங்கீ ரை

                     செந்நெல்வ ளம்பெறு மண்டூ ரையா

                              செங்கோ செங்கீ ரை.

              இதுபோன்ற இனிய பல பாடல்களைக் கொண்டது இப்பிள்ளைத்தமிழ்.

                                  ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

    1. மாவைப் பிள்ளைத்தமிழ்

              இந்நூல் பண்டிதர் மு. கந்தையா அவர்களால் இயற்றப்பட்டது. 1962இல் இயற்றப்பட்ட இந்நூல், 1967ஆம் ஆண்டு முதன்முதலாகப் பதிப்பிக்கப்பட்டது.

              மாவை முருகன் கோவிலானது ஈழத்தின் சரித்திரத்துடன் தொடர்புடையது. ‘வையாபாடல்’ எனும் ஈழ வரலாற்றைக் கூறும் நூலினின்றும் பெயர்க்காரணத்தைச் சுட்டி, இக்கோவிலுடன் தொடர்புடைய ஒரு கதையைக் காணலாம்.

             ‘கீரிமா மலையிலாடினள் தீர்த்தம், அம்முகமகன்றது, அன்னதால் மாவிட்டபுரம்’ எனும் வையாபாடல் ஆகிய நூலில் காணப்படும் பாடலின்கண் இக்கதை தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.

              மாருதப்புரவீகவல்லி என்பவள், சோழ இளவரசி ஆவாள். இவள் பெயரில் குமாரத்தி பள்ளம் எனும் பெயரில் ஒரு இடம் இன்னும் இந்த மாவைக் கோவிலருகே உள்ளது.

              மாருதப்புரவல்லி எனும் பெண் திசை உக்கிரசோழன் மகள். அவளுடைய தாய் ஒரு கின்னரப்பெண் அளித்த சாபத்தால் குதிரைமுகத்துடன் கூடிய ஒரு மகளைப் பெற்றெடுத்தாள். எண்ணற்ற நீர்நிலைகளில் நீராடி வழிபட்டும் குணமடையாத அப்பெண் இங்கு வந்து பாதாள கங்கைத் தீர்த்தத்திலாடி குதிரைமுகம் மாறப்பெற்றாள். பின் மாவிட்டபுரக் கோவிலைத் தன் தந்தையின் பொருளுதவியால் அமைத்தாள். கதிரைமலையினின்று அரசாண்ட உக்கிரசிங்கசேனன் என்பவனை மணந்து வாழ்ந்தாள். கோவிலுக்கான சுப்பிரமணியர் விக்கிரகமும் சோழநாட்டிலிருந்து ஒரு குருக்களும் கப்பலில் வந்து சேர்ந்தனர். இக்கப்பல் வந்து சேர்ந்த துறை காங்கேயன் துறை எனப்பட்டது.

              பிள்ளைத்தமிழ் பாடிய புலவனார் இப்பதிவை ஒரு பாடலிலும் வைத்துள்ளார். இலங்கைத்தீவின் வடதிசையில் கீரிமலை எனும் தலம் உள்ளது. அங்கு கீரிமலை என வழங்கும் நகுலேசுவரம் எனும் கோவில் உள்ளது. அதனருகேயுள்ள மலைப்பாறைக்குகையினின்றும் ஊற்றாகப் பாதாள கங்கைத் தீர்த்தம் பாய்கின்றது.

              கீரி மாமலை வாரிதி யாடியே

                     கிரீச னாநகு லேசனை நாடியே

             சேரு மன்பொடு சிந்தனை செய்துமேற்

                     றிசைகோ ளுக்கிர சோழரா சன்மகள்

             மாரு தப்பிர வல்லியென் பேரினாள்

                     வாவு வெம்பரி மாமுக மோடிநோய்

             தீர நீங்கின ளித்தலத் தேயெனிற்

                     செப்பி லங்கையி லொப்பிதற் கில்லையே.

              இக்கருத்தைக் கொண்ட ஒரு வாரானைப் பருவப் பாடலைக் காண்போம். குமரகுருபரனாரின் ‘பெருந்தேனிறைக்கு நறைக்கூந்தற் பிடியே’ என்பதற்கிணையான சொற்களுடன் தொடங்கும் இப்பாடல், அருமையான கருத்துகளைப் பேசுகிறது.

              மிகுதியான தேனைச் சொரிகின்ற கொன்றைமலரைச் சூடிய சிவபிரானின் காதுகளுக்கே பிரணவத்துப் பொருளை உரைத்த குழந்தையான பெருமானே வருக! இங்கு சிவபிரானுக்கே என்றது அனைத்திற்கும் உயர்வான இறைவனான அவனுக்கே முருகன் பிரணவத்துப் பொருளை விளக்கினான் என்னும் வியப்புத் தோன்ற அமைந்த பாடற் கருத்தாகும். பெரும் தவம் இயற்றியவர்கள் அடையும் பெரிய விருந்து எனும் தவப்பயன் முருகன் நீ வருக!

              மேற்கண்ட ஈழத்துச் சரித்திரத் தொடர்பு அடுத்த வரியில் அறியக் கிட்டுகிறது. நகுலமுனிவர் என்பவர் கீரிமலையில் தவம் செய்து,  தீர்த்தத்திலாடி  கீரி முகமாய் விகாரப்பட்டிருந்த விரூபமுகம் நல்லமுகமாக மாறிய முனிவர் ஒருவர்; திசையுக்கிர சோழன் எனும்சோழமன்னனின் மகளான மாருதப்புரவீகவல்லி ஒரு சாபத்தால் குதிரைமுகம் பெற்றாள். அவள் குன்மநோயும் உடையவளாயிருந்தாள். அவள் இந்த கீரிமலைத் தீர்த்தத்திலே வழிபட்டுத் தீர்த்தமாடி குதிரைமுகம் நீங்கி மனிதமுகம் பெற்றாள். அவளுடைய பெருநோயும் குணமாயிற்று.

              மலைமடந்தையான பார்வதி அன்னையின் மனைமாண்புக்குச் சான்றாய், ஒரு நன்மகனாய் உதித்து வையகத்தை வாழவைத்தவொரு பெருவாழ்வே வருக! நன்கு வாழத் தெரியாதவர்களும், திருந்தாத குணமுடையவர்களுமான அசுரர்கள் செருக்கினை அழித்து ஒழித்த தேவனே! வருக, வருகவே!

    சிவமே விளைவாக விளங்கும் திறன்படைத்த மாவைப்பதியின் திருவாக இருப்பவனே! வருவாயாக என விளிக்கும் வாரானைப் பருவப்பாடல்.

              பெருந்தே னிறைக்கு நறுங்கொன்றைப்

                              பிரானார் செவிக்கே பிரணவத்துப்

                     பேசாப் பொருள்பே சியகுழவிப்

                              பெருமான் வருக! பெருந்தவத்தோர்

             விருந்தே வருக! நகுலமுனி

                              விரூப முகமும் மாருதப்ர

                     வீக வல்லி மாமுகமும்

                              விலகாப் பெருநோய் விலக்குமலை

             மருந்தே வருக! மலைமடந்தை

                              மனைமாண் பினுக்கு நன்கலமாய்

                     வையம் வாழ வாழ்ந்தபெரு

                              வாழ்வே வருக! வாழ்வறியாத்

             திருந்தா வசுரர் செருக்கொழித்த

                              தேவே வருக! வருகவே!!

                     சிவமே விளைக்குந் திறன்மாவைத்

                              திருவே வருக! வருகவே!!

              என்பது பாடல்.

                                  ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

    1. விசவத்தனை முருகன் பிள்ளைத்தமிழ்

              பண்டிதர் அ. ஆறுமுகம் என்பவரால் இயற்றப்பட்டுள்ள இந்நூல் 1982ஆம் ஆண்டில் விசவத்தனை முருகன் கோவில் கும்பாபிடேகத்தின்போது முதல் பதிப்புக் கண்டுள்ளது.

              விசவத்தனை முருகன் கோயில், இலங்கை பண்ணாகத்தில் அமைந்துள்ளது. பண்ணாக மக்களின் குலதெய்வம் இந்த முருகன். 200- 250 ஆண்டுகள் பழமையான கோவில் இது.

              இப்பிள்ளைத்தமிழ் நூல் சொல்நயம், பொருள்நயம், பக்திச்சுவை, கற்பனைவளம், எளிதில் விளங்கிக் கொள்ளக்கூடிய சொற்சிறப்பு ஆகியனவற்றைத் தன்பாற் கொண்டது. பருவத்திற்கு ஏழு பாடல்களைக் கொண்டமைந்தது. நக்கீரர், ஔவையார், பொய்யாமொழியார் ஆகிய புலவர்களுக்கு முருகன் அருள்பாலித்த பெருமை பாடல்களில் ஆங்காங்கே சிறப்பாகக் கூறப்பட்டுள்ளது.

              அனைத்துப் பாடல்களுமே மிக அருமையாய் விளங்கிடும் இந்த நூலில் சிறுபறைப் பருவத்துப் பாடல்கள் சில மிகுந்த நகைச்சுவை உணர்வோடு பாடப்பட்டுள்ளன; எனினும் உட்கருத்து ஆழமானது. ஓரு பாடலைக் காண்போம்.

              ‘தந்தையானவர் திருக்கயிலாய மலையில் உறைபவர் (மலையாள தேசத்தவன் எனவும் பொருள்கொள்ளலாம்). பித்தன்- பைத்தியக்காரன் அல்லது மிக்க அன்புடையவன் என இரு பொருள்படும். நள்ளிருளில் சடைவிரித்துக்கொண்டு நடனமாடுபவன் (நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனே எனும் வரிகளை நினைவு கூரலாம்). நாற்றம்பிடித்த கபாலத்தை (தான் கொய்த பிரம்ம கபாலத்தை) ஏந்தி, அதில் பிச்சை எடுத்துண்பவன். நரைத்த கிழட்டு எருதின் மீதேறுபவன்.

              ‘தாயானவளோ (உமையம்மை) பெரும் நீலநிற (கறுத்த) மேனியினள்; உனது அண்ணனோ பெருத்த பானைவயிறு உடையவன்; யானைமுகம் கொண்டவன். கும்பமதம், கன்னமதம், கோசமதம் எனும் மூன்று மதங்களையுடையவன். உனது தாய்மாமனான திருமாலோவெனில் மாடு மேய்க்கும் இடையன்; பேய்ச்சியின் முலைப்பாலினை உண்டு அவள் உயிரையும் சேர்த்து உறிஞ்சியவன். உனக்கு வாய்த்த மைத்துனனான பிரம்மனோ (திருமாலின் மகனாகக் கருதப்படுவதனால் அவர் மகளான தெய்வயானையின் சகோதரன்; அதனால் முருகனின் மைத்துனன்) எண்ணெய் விற்பவன் (வெண்மை நிறமான வாணியை, சரசுவதியைக் கொண்டவன்,’ என இவ்வாறு உனது வழி, கோத்திரங்கள் இவற்றையெல்லாம் பலவிதமான கதைகளாகக் கூறி (புகழ்ந்து) உன்னை வணங்கும் அடியார்களின் வினைகள் அனைத்தையும் விலகி ஓடுமாறு துரத்திடும் உயர் சேவகனே! (அடியவர்களுக்காக அனைத்தையும் செய்வதனால் முருகனை ‘சேவகா’ என அன்புமேலிட அழைக்கிறார்) சிறுபறை முழக்கி அருளுவாயாக! விசவத்தனைத் தேவதேவா, சிறுபறை முழக்கியருளுக என வேண்டிடும் பாடல்.

             தந்தையோ மலையாளி பித்தன்நள் ளிருளிலே

                              சடைவிரித் தாடி நாற்றத்

                     தலையோடு கொண்டிரந் துண்ணிநரை யெருதேறி

                              தாயோ பெருத்த நீலி

             முந்தியநின் அண்ணனோ பேழ்வயிறு யானைமுகம்

                              மூன்றுமத வடுவு டையவன்

                     முதியதாய் மாமனோ மாட்டிடையன் பேய்ச்சியின்

                              முலையுண்டு உயிரு முண்டோன்.

             வந்தமைத் துனன்வெள்ளை வாணியன் எனநினது

                              வழிகோத் திரங்க ளெல்லாம்

                     வாயார வண்ணவண் ணக்கதைக ளாற்சொல்லி

                              வந்திக்கும் அன்பர் வினைகள்

             சிந்திட முழங்கித் துரத்துமுயர் சேவகா

                              சிறுபறை முழக்கி யருளே

                     திருமேவு விசவத் தனைத்தேவ தேவனே

                              சிறுபறை முழக்கி யருளே.       

    என்பது பாடல்.

              இதுபோலும் பலப்பல பாடல்கள். படித்து மகிழ வேண்டிய பக்திக் கருவூலங்கள்.

     

     (வளரும்)

    ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

     பார்வை நூல்கள்:

    1. வையா பாடல் – கொழும்புத் தமிழ்ச் சங்க வெளியீடு- 1980

    Share
  • ஈழம் தந்த பிள்ளைத்தமிழ் நூல்கள் – 8

    ஈழம் தந்த பிள்ளைத்தமிழ் நூல்கள் – 8

    மீனாட்சி பாலகணேஷ்

    முருகப்பெருமான் மீதான இன்னும் சில பிள்ளைத்தமிழ் நூல்களின் நயங்களைப் பார்ப்போமா?

    4. காரைநகர் பயிரிக்கூடல் சுப்பிரமணியசுவாமி பிள்ளைத்தமிழ்

    இப்பிள்ளைத்தமிழ் அருட்கவி சீ. விநாசித்தம்பிப் புலவரால் இயற்றப்பட்டது. 1987ம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ளது. இது கடற்புற ஊராகிய காரைநகரின் நடுவே அமைந்த பயிரிக்கூடல் எனும் தலத்தில் நாவல் மரத்தைத் தலவிருட்சமாகக் கொண்டு அமைந்திருக்கும் கோவிலில் எழுந்தருளி பக்தர்கட்கு அருள்புரிந்து வரும் ஸ்ரீ சிவசுப்பிரமணியப் பெருமானைக் குழந்தையாகப் பாவித்துப் பாடிய நூலாகும்.

    பிள்ளைத்தமிழின் இலக்கணத்திற்கேற்ப பத்துப் பருவங்களால் பத்துபாட்டுகளைக் கொண்டு பாட்டுடைத்தலைவனாம் முருகப் பெருமானை வழுத்திப் பாடியுள்ளார் புலவர்.

    தாலப் பருவத்து ஒரு பாடல் அழகான தொன்மங்களை விளக்குகிறது. பார்க்கலாமே!

    குதிரை வாங்கச் சென்ற மணிவாசகரை ஈர்த்துக் குருந்தமரத்தடியில் அமர்ந்து தனிப்பெரும் குருவாய் அவருக்கு ஞானம் கொடுத்த சிவபிரானுக்கு மதுரமான பிரணவப்பொருளை அவர் செவிக்கு இனிமையாக உரைத்த குருமணி முருகனாவான். வாழ்வை வெறுத்து வானளாவிய திருவருணைக் கோபுர மீதிருந்து குதித்த அருணகிரிநாதரைக் கையிற்றாங்கிக் காப்பாற்றி, “சும்மாவிரு, சொல்லற,” எனப் புகன்ற ஆறுமுகத்தவன் அவன். பயிரிக்கூடலிலுறை முருகனே தாலோ தாலேலோ என்பது பொருள்.

    குதிரைக் காகப் பவனிவரும்
    கோல வமைச்சன் தனையீர்த்துக்
    குருந்தின் கீழே இருந்துதனிக்
    குருவாய் ஞானம் கொடுத்தவர்க்கு
    மதுரப் பொருளைச் செவியுவக்க
    ………………………………………
    எடுத்துச் “சும்மா விரு” என்ற
    ஒருமூன் றருண முகத்தானே
    …………………………………..
    முதல்வா தாலோ தாலேலோ.
    இன்னுமொரு பாடலைக் காணலாமா?

    ஒரு அம்புலிப்பருவப்பாடல். குழந்தை முருகனைப் பலவிதமான பழங்களாக உருவகித்துப் பாடுகிறார்.

    நமச்சிவாயப் பொருளான நல்லபழம்; ஆனைமுகன் கையில் தாங்கும் பழம். நடராசபதியான சிவபிரான் உவந்திடும் பழம்; உபாசனை செய்யும் அடியார்கள் சுவைக்கும் பழம்; இமயமலை அழகி, கார்த்திகைப் பெண்டிர் கௌரி, சூலினி, இரட்சகி, சங்காரி, ஜனனி, இலிங்கபூஷணி, பராசத்தி ஆகியோர் பாலூட்டியருளும் இன்பக் குழந்தைப்பழம், சமய தத்துவாதீத தனிப்பழம், சதுர்மறை தந்த பழம், கலைத்தேன் பழம், பழமுதிர்சோலை அழகராய் நின்ற பழம், சண்முகப்பழமுமிவனே, இவன்ய்டன் அம்புலீ ஆடவாவே என்கிறார்.

    நமசிவயப் பொருளான நல்லபழம் ஆனைமுகன்
    நயந்துகை தாங்கும்பழம்
    நடராச பதியுவந் திடுபழம் உபாசிக்கும்
    …………………………..
    சமயதத் துவாதீத தனிப்பழம் சதுர்மறை
    தந்தபழம் கலைத்தேன்பழம்
    ………………………………………….
    ஆனந்த வீடுதரும் ஞானக் குழந்தையுடன்
    அம்புலீ யாடவாவே.
    இன்னும்பல அருமையான பாடல்கள் உள்ளன.

    5. சிவசுப்பிரமணியர் பிள்ளைத்தமிழ்

    பறாளை  விநாயகப் பெருமான் கோயிலின் வடக்குப் புறமாக அமைந்தது இந்த சிவசுப்பிரமணியர் கோயில். இப்பெருமான்மீது  புலவர் வை. க. சிற்றம்பலம் அவர்களால் 1997-ல் இயற்றப்பட்டதே இப்பிள்ளைத்தமிழ்.

    பருவத்திற்கு ஒரேயொரு பாடலால் அமைந்த அருமையான பிள்ளைத்தமிழ் இது. ஒரே பாடல் தான் எனினும் சொன்னயமும் பொருணயமும் ஒவ்வொரு பாடலிலும் சிறந்து விளங்குகிறது. காப்புப் பருவத்து ஒரே பாடல் திருமால், சிவபிரான், சிவகாமியம்மை, ஐங்கரன், மற்றும் பிள்ளைத்தமிழ் இலக்கணத்திற்கேற்ப மற்ற தெய்வங்கள் அனைவரையும் வாழ்த்தி குழந்தையைக் காக்க வேண்டுகிறது.

    செங்கீரைப்பருவத்தின் பாடலொன்று மிக அருமையான பொருத்தமான கருத்துக்களைக் கொண்டிலகுகின்றது. குழந்தை முருகன் சங்குவளையணிந்த கைகளை ஊன்றியபடி செம்பவள வாயில் கனிந்த முறுவலுடன் உல்லாசமாக, கால்களில் கிண்கிணியாட, சிலம்பாடத் தாளூன்றித் தவழுகின்றான்.  கூடவே ‘கீர் கீரெ’னப் புரியாத மழலை பேசுகிறான். அந்தப் பருவத்து, ஐந்தாறுமாதக் குழந்தைகளின் மொழி நமக்குப் புரியாத மொழி. அதனைக் ‘கீர்’ என்பார்கள். (நல்ல சொற்களைக் கூறுபவர் நல் + கீரர்= நக்கீரர்). இத்தகைய சொற்களின் முன்பு ஒரு மங்கலச் சொல்லையும் சேர்த்துச் செங்கீர், செங்கீரை என்பர். அதனாலும் இப்பருவம் செங்கீரைப்பருவம் எனப்படும். இத்தகைய புரியாத மழலை, “எங்கு நீ, அங்கு நான் என்றும் உன்னுடனிருப்பேன்,” என முருகன் கூறும் சொற்களாக அடியாருக்கு, ஈண்டு புலவருக்குத் தோன்றியுள்ளது மிக அருமை.

    சங்குவளைக் கரமூன்றிச்
    செம்பவள வாய்கனியச்
    சல்லாப வுல்லாசமாய்ச்
    சார்ந்தகிண் கிணியாடச்
    சூழ்ந்தமணிச் சிலம்பார்ப்பத்
    தாளூன்றிக் கீர்கீரென
    எங்குநீ அங்குநான்
    என்றபடி மழலைமொழி
    இசைத்திட அடியெடுக்கும்
    …………………………………………

    அடுத்து சிறுதேர்ப்பருவப் பாடல். அற்புதமான இறைத்தத்துவத்தை முன்வைக்கிறது. வான், மண், பாதாளம் ஆகிய மூவுலகங்களும் கொண்டு வடிவமைக்கப்பட்டது இப்பிரபஞ்சம் எனும் திருத்தேர். அதன் வட்டமான நடுப்பீடமே பிரணவக்குறியாகும். அதில் வந்தமர்ந்து இருப்பவன் முருகப்பெருமான். அவனுக்கு அடியவர்கள் தங்கள் வினைகள் தீருமாறு வேண்டிக்கொண்டு, தேங்காய் உடைத்து, வேதங்கள் எனும் புரவிகளை ஓட்டுவித்து வீதிவலம் கொண்டு செல்கிறார்கள். அவனும் நானிருக்க பயமேன் என்று கூறி நனவிலும் கனவிலும் நற்காட்சி காட்டித் துணை நிற்கிறான். அத்தகைய முருகனைச் சிறுதேருருட்டியருள வேண்டும் இனிய பாடலிதுவாகும்.

    வானுலகு மண்ணுலகும்
    வல்லபா தலவுலகும்
    வடிவமையுந் திருத்தேரிலே
    வட்ட நடுப் பீடமே
    பிரணவக் குறியாகி
    வந்ததனில் வீற்றிருந்து
    பானிலவு திருநீற்றின்
    அடியவர்தன் வினையோடப்
    பணிந்துதேங்கா யுடைத்து
    பகர்வேதப் பரிகடவி
    அரிய மணி வீதிவரும்
    பாலகும ரேச முருகா
    ………………………………..
    கருத்தாழமும் கொண்ட பாடல்களைக் கொண்ட சிறந்த நூல்.

    6. திருநல்லூர் திருமுருகன் பிள்ளைத்தமிழ்

    நல்லை எனப்படும் திருநல்லூரானது ஆறுமுக நாவலர் பெருமானின் ஊராகும். இது முருகப்பெருமான் விரும்பியுறையும் சிறந்த ஒரு பதியாகும். திருநல்லூர் முருகன் பிள்ளைத்தமிழ் என்னும் இந்நூல் பண்டிதர் சி. கார்த்திகேசு (சேந்தன்)  எனும் புலவரால் இயற்றப்பட்டது. இவர் சேந்தன் குழந்தைக்கவிகள் எனும் நூலில் பிள்ளைகட்குரிய பலவற்றையும் பாடியுள்ளார். நல்லை நாற்பது எனும் நூலில் நல்லூர்க் கந்தன்மீது அழகான கீர்த்தனங்களைப் பாடியுள்ளார். இப்பிள்ளைத்தமிழ் நூலும் பல நயமிகுந்த பாடல்களுடன் பொலிவதனைக் கண்ணுறலாம்.

    அம்புலிப்பருவப் பாடலொன்றில் முருகனின் சிறப்புகளை அழகுற எடுத்தோம்புகிறார் புலவர். இது தானம் எனும் உபாயத்தில் சேருமெனக் கொள்ளலாம். முருகனின் சிறப்புகளைக் கூறி, இத்தகைய பெருமை படைத்த எம் சிறு முருகனுடன் ஆடவா என விளிக்கும் கூற்றாக அமைந்த பாடல்.

    பலகோடி சென்மங்களை எடுத்து எடுத்துக் களைத்தாலும் பார்ப்பதற்கு அரிதானவன் எம் முருகன். பக்தியினால் மட்டுமே அவனையடையலாம்; மற்றபடி பற்றுதற்கு அரிதானவன்.          நால் கல்நெஞ்சத்தவர் ஆயினும் உள்ளம் கசிந்துருகிக் கந்தா எனக்கூறி, கண்ணீர் பொழிந்து நிற்பதனைக் கண்டால் விரைந்து தனது கருணை எனும் மழையைப் பொழிபவன். பொல்லாத சூரபதுமனின் சுற்றம் உறவு அனைத்தையும் அழித்துப் பொடியாக்கினவன். பின்பு அவன் குற்றங்களை மன்னித்து உயிர்களக் காத்த உயர்ந்த தயாளன். இப்படிப்பட்ட அல்லல் அகற்றிடும் முருகனுடன் விளையாட வாராய் அம்புலியே!அணிநல்லூர் முருகனுடன் ஆடவாராய் அம்புலியே!

    பல்கோடி சென்மம் எடுத்தெடுத் திழைத்தும்
    பார்ப்பதற் கரிதானவன்
    பக்தியாம் ஒன்றினால் பற்றலாம் அன்றிப்
    பற்றுதற் கரிதானவன்
    கல்லெனும் நெஞ்சினர் ஆயினும் கசிந்துநாம்
    கந்தா எனக்கனிந்து
    ……………………………………………………
    பொறுத்தவன் பிழையினுக் கிடுக்கண் தவிர்த்து
    பொன்னுயிர் காத்த மேலோன்
    ………………………………………………..
    அம்புலீ ஆடவாவே.

    சிற்றில் சிதையேல் என வேண்டும் சிறுமியர் பலப்பல கதைகளை முன்வைக்கின்றனர். புலவரின் கற்பனைவளம் வியக்கத்தக்கதாம். அவற்றுள் ஒன்று இந்தக்கதை! ‘வள்ளியெனும் குறத்தி தினைமாவையும் தேனையும் பிசைந்து உனது வாயில் ஊட்ட, உண்டு நீ களித்ததையும், பின் மானையொத்த அவளுடைய எச்சிலை உண்டு களிக்கும் அழகையும் மற்றும் இவையனைத்தையும் கண்டு மற்றவர்களுக்கு அதனைக் கூறினோமோ? இல்லையே! கூனற்பிறை நெற்றியை உடைய பல சிறுமியர் கூடி, மண்ணைக் குழைத்துச் சேர்த்து, பேசிக்கொண்டு பாடுபட்டுக் கட்டிய சிறிய இவ்வீட்டை நீ உன் காலால் சிதைக்கவேண்டா! அடியாரின் குறைகளைத் தீர்க்கும் மருந்தானவன் அல்லவோ நீ! சிற்றிலைச் சிதைக்காதே’ என வேண்டுகின்றனர்.

    கானக் குறத்தி வள்ளியெனும்
    கன்னி உவந்து தினைமாவை
    கமழுந் தேனிற் பிசைந்துனது
    கனிவா யூட்டக் களித்தநீயும்
    மானொத் தவளின் மிச்சிலையும்
    வாயிற் சுவைக்கும் அழகினையும்
    மகிழ்ந்து சுவைத்த ததுகண்டும்
    மற்றோர்க் கதனை விண்டோமோ
    …………………………………………
    வான முயர்புகழ் திருநல்லூர்
    வண்ணா சிற்றில் சிதையேல்
    மருவு மடியர் பிணிதீர்க்கும்
    மருந்தே சிற்றில் சிதையேலே.

    ஈழத்துப் பிள்ளைத்தமிழ் நூல்களில் இவ்வாறு பலப்பல சுவையான பாடல்கள்!

    (வளரும்)

    Share
  • ஈழம் தந்த பிள்ளைத்தமிழ் நூல்கள்-7

    ஈழம் தந்த பிள்ளைத்தமிழ் நூல்கள்-7

    மீனாட்சி பாலகணேஷ்

    ஈழத்தில் எழுந்த பெரும்பாலான பிள்ளைத்தமிழ் நூல்கள் முருகப்பெருமான் மீதுதான். இவற்றின் நயங்களைப் பின்வரும் சில பகுதிகளில் கண்டு மகிழலாம்.

    1. கதிர்காமப் பிள்ளைத்தமிழ்

    கதிர்காம பிள்ளைத்தமிழ் பற்றி முன்பொரு தொடரிலேயே (வல்லமை இதழில் வெளிவந்த குழவி மருங்கினும் கிழவதாகும்) எழுதியுள்ளேன். சிவங். கருணாலயப் பாண்டியப் புலவரால் இயற்றப்பெற்ற இது பல  வித்தியாசமான பருவங்களைக் கொண்டு சிறப்பான பாடல்களால் அமைந்தது. பதினான்கு பருவங்களுடன் பருவத்திற்கு மூன்றே பாடல்கள் கொண்டது. இருப்பினும் அங்கு காணாத சில செய்திகளை இங்கு பதிவிடுகிறேன்.

    முருக வழிபாட்டிற்குரிய திருப்பதிகளுள் மூர்த்தி, தலம், தீர்த்தம் எனும் மூன்றாலும் பெருமையோடு திகழ்வதே கதிர்காமமாகும். இத்திருத்தலத்தின் பெயர்க்காரணம் பற்றிய ஆராய்ச்சி முடிவுறாத ஒன்றாகும். கதிர்காம (கடரகாம) நகரத்தருகே புண்ணிய நதியாகிய மாணிக்க கங்கை பாய்ந்துகொண்டுள்ளது. ஈழத்து ‘மகாவம்சம்’ கதரகாமத்தின் புரணத்தை பலவாறும் விரித்துக் கூறுகின்றது. கி. மு. 3000க்கும் முன்பே இத்திருத்தலத்தைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. பல சிங்கள அரசர்கள் வழிபட்ட குறிப்புகளும் காணக்கிடைக்கின்றன. அருணகிரிநாதர் பல பாடல்களை இப்பெருமான் மீது பாடியுள்ளார். இப்பிள்ளைத்தமிழை இயற்றிய ஆசிரியரும் இறைவன் திருவருளாலேயே இதனைப் பாடவியன்றது எனக் கூறியுள்ளார்.

    காஞ்சிபுரம் சிதம்பர முனிவராற் பாடப்பெற்ற ‘சுப்பிரமணியக் கடவுள் க்ஷேத்திரக்கோவைப் பிள்ளைத்தமிழி’ற் இத்தலத்தைப் பற்றிச் சிறப்பித்து எழுதப்பட்டதொரு செங்கீரைப்பருவப் பாடலைக் கண்டு மேற்செல்லலாம்.

    ‘ஆறுமுகத் தெய்வமே! மாணிக்க கங்கை எனும் ஆற்றில் நீராடி உன்னைப் பணியவரும் பூவுலக மக்களில் ஊமையானோர் பாடல்கள் பாடவும் குருடர்கள் கண்பார்வை பெறவும், மலடிகள் ஆகிய பெண்கள் பிள்ளைகள் பெறவும் நீ அருளுவாய். உன்னைக் ‘குமரா, வேலா’ என அழைக்கும் அன்பர்களை கரடி, புலி, யானை, சிங்கம் ஆகிய வனவிலங்குகள் அவர்கள் காலில் விழுந்து அஞ்சியோடச் செய்குவாய்.

    ‘ஆணிப்பொன் மண்டபத்தில் கச்சி எனும் காஞ்சியில் என்னை ஆண்டுகொண்டு என் உள்ளத்துப் பிணியைத் தீர்த்து முன்னே நிற்கும் ஆறுமுகத் தெய்வமே! புலோமசை வளர்த்த பெண்பிடியான தெய்வயானையின் கணவனே! நீ செங்கீரையாடியருளுக! தேவர்களோடு மனிதர்களும் பணிந்தேத்தும் கதிர்காம வேலவனே! செங்கீரையாடி அருளுவாயாக!’

    மாணிக்க நிறைகங்கை யாடியுன் னைப்பணிய
    வந்திடும் பூதலத்தோர்
    வாயூமர் பாடவும் குருடர்கண் பார்த்திடவும்
    மலடிகள்பின் மைந்தர்பெறவும்
    காணிற்கு மாரவே லாவென்னு மன்பரைக்
    கரடிபுலி யானைசிங்கம்
    காலிற்ப ணிந்தஞ்சி யோடவும் கந்தனே
    கண்கண்ட தெய்வமெனவே
    ஆணிப்பொன் முத்திமண் டபமேவு கச்சியினுள்
    அடியேனை யாண்டுகொண்டென்
    ஆகத்தில் வந்தபிணி தீர்ந்திடவு முன்னிற்கும்
    ஆறுமுக மெய்த்தெய்வமே
    சேணிற் புலோமசை வளர்த்தபெண் பிடிகணவ
    செங்கீரை யாடியருளே
    தேவரொடு மனிதர்பணி கதிர்காம வேலனே
    செங்கீரை யாடியருளே.

    கதிர்காமப் பிள்ளைத்தமிழ் மொத்தம் பதினான்கு பருவங்களையும் பருவத்திற்கு மூன்று பாடல்கள் வீதம் நாற்பத்திரண்டு பாடல்களையும் கொண்டு பொலிவது. காப்பு, செங்கீரை, மொழிபயிலல், உணவூட்டல், தால், சப்பாணி, முத்தம், வருகை, நிலாவழைத்தல் (அம்புலி), சிறுபறை முழக்கல், சிற்றில் சிதைத்தல், சிறுதேருருட்டல், பூணணிதல், உடைவாள் செறித்தல் எனப் பதினான்கு பருவங்கள்.

    இவற்றுள் மொழிபயிலல், உணவூட்டல், பூணணிதல், உடைவாள் செறித்தல் (கச்சினொடு சுரிகை காமுறப் புனைதல்) ஆகிய அதிகப்படியான நான்கு பருவங்களையும் இந்த ஒரேயொரு ஆண்பால் பிள்ளைத்தமிழில் மட்டுமே காணவியலும். இப்பருவங்களின் விளக்கத்தையும் பாடல்களின் நயத்தையும் எனது முந்தைய தொடரான ‘குழவி மருங்கினும் கிழவதாகும்’ என்பதில் காணலாம்.

    தாலாட்டல் எனும் பருவத்தின் ஒரு அழகான பாடலின் நயத்தை இப்போது காணலாம்.

    ‘கடல்நீரில் முளைத்த   (சூரபன்மனாகிய) மாமரம்  உன்னால் (முருகனால்) வெட்டி வீழ்த்தப்பட்டது. நீ சிவனாரின் நெற்றிக் கண் நெருப்பில் முளைத்தவன்; தத்துவ ஞானம் தழைத்தவன்; கற்பக மரம் போன்று வேண்டுவது அத்தனையும் தருபவன்; உனது திருவடிகளின் குளிர்ச்சியான நிழலையன்றி வேறெங்கும் நிற்பவர்க்குப் பிறவியால் வரும் துன்பங்களாகிய வெப்பம் தணியுமோ? அவர்கள் நீண்டநாட்கள் வாழ்வாரோ? நீ யார் நான் யார் என யார் (எவர்) அறிந்து, வேதம், உபநிடதம் என்னும் ஞானநூல்களை ஆராய்ந்து உணர்ந்து அனுபவித்துள்ளனரோ அவரே உன் பெருமையையும் உணர்வார். கதிர்காமக் கடம்பனே! கண்வளராய்,’ எனும் பாடலில், சொற்களைக் கூட்டும் அழகில் யாராரோ ஆராரோ எனத் தாலாட்டும் ஓசை நயம் போன்றே பலமுறை வந்து அழகு சேர்ப்பதனைக் காணலாம். மிகுந்த கருத்தாழம் நிறைந்த பாடல்.

    நீரின் முளைத்த மாவீழ
    நெருப்பின் முளைத்தின் னருடழைத்து
    நினைவு பூத்துப் புலங்காய்த்து
    நிறையப் பழுத்த கற்பகமே
    நேருன் னடித்த ணிழலன்றி
    நிற்பார் வெப்பந் தணிவாரோ!
    நெடுநாள் வானோர் வாழ்வாரோ?
    நீதா னாரோ? யாமாரோ?
    வோரின் னெனச்சொல் வடித்துணர்வா
    ருலவாப் பெருமை யாராரோ?
    வுணர்வார் கூற்றங் கொள்ளுங்கா
    லுற்றார் பெற்றா ராரரோ?
    காரின் மலருங் கதிர்காமக்
    கடம்பா! தாலோ தாலேலோ
    கலைமான் பாடக் கண்வளராய்
    கனியே! தாலோ தாலேலோ!

    இத்தகைய சொல்லாழமும் கருத்தாழமும் நிறைந்த பாடல்களைக் கொண்ட பெருமை உடையது இந்நூல்.

                                            ~~~~~~~~~~~~~~~

    2. இணுவை முருகன் பிள்ளைத்தமிழ்

    அடுத்து நாம் காணப்போகும் பிள்ளைத்தமிழ் நூல் பண்டிதர் ச. வே. பஞ்சாட்சரம் அவர்களால் இயற்றப்பட்டது.

    யாழ்ப்பாணத்தின் மத்தியில் உள்ள வயல்கள் செழித்த கிராமமே இணுவில் ஆகும். ‘இணையிலி’ எனும் பெயரே மருவி இணுவில் ஆகியதென்பர். இது 19ம் நூற்றாண்டைச் சேர்ந்த பழமையான கோவில். இங்குள்ள முருகப்பெருமானின் ‘கந்தசாமி கோவில்’ என அறியப்படும் திருத்தலமே இணுவை / இணுவில் முருகன் கோவிலாகும்.

    இனி நூலின் நயங்களைப் பார்ப்போம். செங்கீரைப்பருவப் பாடலொன்று ஒரு அழகான கதையை விரிக்கின்றது. கோழியைப் பாடும் வாயால் குஞ்சைப் பாடமாட்டேன் என்று கூறிய ஒரு புலவர்முன்பு (பொய்யாமொழிப்புலவர்) முருகன் பாலைக்காட்டில் தோன்றி, “என் பெயர் முட்டை,” எனக்கூறி அவரிடம் ஒரு பாடல் பாடச்சொல்லி, அப்பாடலில் குற்றமும் கண்டு, அவருடைய அகந்தையையும் அழித்தான். “வீதிதோறும் வீணை, வேய்ங்குழல், யாழ் இவைகளுடன் அடியார் தம் குரலை இணைத்து உன் புகழையே பாடுகின்றனர். இணுவை அழகனே, செங்கீரை ஆடியருளுக,” என வேண்டும் பாடல்.

    “கோழிபாடும் வாயாலே
    குஞ்சுபாட மாட்டேன்”என்று
    குமரனுன்றன் அடியவர்முன்
    கொக்கரித்த சிவகவியைப்
    பாழில்சுடும் வழியில்நல்ல
    பண்புமுட்டை என்றுநின்று
    பாடுவித்து முட்டையென்றே,
    பாட்டில்வேறு குற்றங்கண்டு
    ………………………………
    அம்மிணுவை உயிரழகா
    ஆடியருள் செங்கீரை!

    அருமையான பாடல் என ஒப்புக் கொள்கிறீர்களல்லவா?

    ஒரு சப்பாணிப்பருவப் பாடல், நாமறியாத கதையொன்றைக் கூறுகின்றது. இணுவைக்கோவிலில் முருகனின் திருவுருவம் வார்க்கப்பட்ட செய்தியை அது கூறுகின்றது.

    பதிகம், கோவை, கலிவெண்பா, பள்ளு, புராணம், பிள்ளைத்தமிழ், பாமாலை எனப்படுகிற பலவும் அள்ள அள்ளக் குறையாதபடி முருகா, உன்மீது இயற்றப்பெற்று இலங்குகின்றன. பண்டொருநாள், உன் திருவுருவை வார்க்க முயன்றபோது அதில் ஆறுமுகம் சரியாக அமையவில்லை. பின்பு அந்தணரின் மனைவியின் தாலியினை உருக்கி அதில் சேர்த்து மீண்டும் வார்த்திட அம்மூர்த்தம் மங்கள எழிலுடன் அமைந்தது. உன்னருள் கிடைத்தால் வாழ்வில் அனைத்தும் இன்பமே. நீ சப்பாணி கொட்டுவாயாக,” என வேண்டும் பாடல்.

    பதிகம், கோவை, கலிவெண்பா,
    பள்ளு, புராணம், பிள்ளைத்தமிழ்,
    பாமா லைபோற் பொன்கலங்கள்
    பலவும் அள்ளிக் குறையாத
    ……………………………………….
    அன்று வார்க்க வார்க்கஉரு
    அமையா ஆறு முகம்ஐயர்
    அகத்தாள் தாலி உருக்கியிட்டுப்
    புதிதாய் மீண்டும் வார்த்திடவே
    பொலிந்து மங்கள எழில்பூண்டு
    பூத்தாய் இணுவைப் பதியினிலே!
    …………………………………
    எழிலா கொட்டுக சப்பாணி! ( சப்பாணிப்பருவம்)

    இத்தகைய சுவையான பாடல்களைக் கொண்டமைந்தது இப்பிள்ளைத்தமிழ்.

                                            ~~~~~~~~~~~~~~~~~~~~~~~

    3. கந்தவன கல்யாண வேலவர் பிள்ளைத்தமிழ்

    இந்த பிள்ளைத்தமிழ் நூல் சிலேடைக் கவிரத்தினம் க. கணபதிப்பிள்ளை அவர்களால் எழுதப்பட்டுள்ளது. பிள்ளைக்கவி வ. சிவராசசிங்கம் (இவரும் பல பிள்ளைத்தமிழ் நூல்களை யாத்தவர்) அவர்களால் உரை எழுதப்பட்டுள்ளது.

    பொலிகண்டி கந்தவன கல்யாண வேலவர் ஆலயம் ஈழத்தில் வடமராட்சி பொலிகைப்பகுதியில் உள்ளது. திருக்கோணேஸ்வரத்தின் மாண்பையும் இத்தலம் பேசுகின்றது. இதிலிருந்து சில அருமையான பாடல்களைக் காண்போம். முதலில் வருகைப்பருவத்தினின்றும் ஒரு பாடல்.

    ஐம்புலன்களால் பிள்ளையின்பத்தை நுகரும் அற்புதமான பாடல். வாசம்வீசும் தாமரை மலர் போன்ற சிறிய அடிகள், முகம், தாமரையிதழ் போன்ற விழி இவற்றைக் கண்ணாற் கண்டு மகிழவும், (கண் – பார்த்தல்)

    கனிவாகப் பேசும் மழலைமொழியோடு தேன் சிந்தும் இசைபோன்ற கிண்கிணியின் அமுத ஓசையைச் செவியின்பத்தால் நுகரவும் வருவாயாக. (செவி – கேட்டல்)

    உன் தோள்களில் திகழும் கடம்பமாலையினின்றும் துளிக்கும் தெள்ளிய தேனை நான் சிறிது சுவைத்துப் பருகுமாறு வருக. (நா – சுவைத்தல்)

    இங்கு சிவந்த நிறம் கொண்ட செவ்வந்திப் பூவில் பிறக்கும் வாசத்தை நாம் முகர்ந்துவக்க வருவாயாக. (நாசி – நுகர்தல்)

    வீரக்கழலணிந்த தாமரைப்பாதத்தை நான் வருட வருவாயாக. (கை – வருடல்; உணர்வு)

    தென்றல் தவழும் கந்தவன முருகனே வருக! உமையம்மை தந்த தேவாமிர்தமே வருவாயாக.

    கந்தங் கமழும் கமலமெனும்
    கழலும் முகமும் விழியெழிலும்
    கண்ணாற் பருக வருகமதுக்
    கனியும் மழலை மொழியொடுதேன்
    சிந்தும் இசைக்கிண் கிணியமுதைச்
    செவியாற் பருக வருகபுயம்
    திகழும் கடம்புத் தெளிதேனைச்
    சிறிதே சுவைக்க வருகசெச்சை
    …………………………………………….
    ………………………… கந்தவன
    மதலாய்! வருக வருகவே! (வருகைப்பருவம்)

    அடுத்து அம்புலிப்பருவத்துப் பாடலொன்று. முருகனுக்கும் சந்திரனுக்குமுள்ள ஒப்புமையைக் கூறி, சந்திரனை முருகனுடன் விளையாட அழைப்பது. சாமம் எனும் உபாயத்தின் பாற்பட்டது.

    “சந்திரனே! நீ விண்ணில் ஆடி வருகிறாய்; முருகன் மயில்மீதேறி விண்ணில் ஊர்பவன். நீ பதினாறு கலைகளை உடையவன்; முருகனும் சகல கலா ஞான பண்டிதன். நீ மலைமேல் சஞ்சரிக்கிறாய்; முருகனும் குன்றுதோறாடுபவனாவான். கங்கை எனும் மெல்லியளாளை உன் கரத்தால் தீண்டுகிறாய்; இவனோ அக்கங்கையின் மடிமீதர்பவன். அவளால் அணைக்கப் படுபவன். நீ சிவபெருமானின் இடக்கண்ணானவன்; இவனோ அவரது நெற்றிக்கண்ணிலிருந்து தோன்றியவன். குளிர்ந்த ஒளியை நீ பரப்புகிறாய்; இவனும்  தண்ணருள் செய்பவன். உலகினைக் காத்தலாலும், காதலரிடையே காமப்போர் நிகழ்த்தலாலும், உலகைக் காத்து, அசுரருடன் போர்தொடுக்கும் முருகனுக்கு இணையானவன் நீ; நீ நட்சத்திரங்களுக்கு அதிபதி; இவனும் நவவீரர்களுக்குத் தலைவன்; உலகத்தோர் உன்னை மதி என்பர். இவனும் எல்லோராலும் மதிக்கப்படும் பெருமையுடையவன். ஆதலால் உலகம் வணங்கும் கந்தவனப்பதி குமரனுடன் விளையாட வருக,” என அழைக்கும்  சிறப்பான பாடல்.

    விண்ணாடி வருதலால் மலைமேல் நடத்தலால்
    விரிகலா நிதியென்கையால்
    மேதினியர் தொழுதலால் வேணிபடர் கங்கையென்
    மெல்லியற் கரந்தழுவலால்
    புண்ணியர்தம் கண்களில் ஒன்றினிற் றோன்றலால்
    பூக்குதண் ணொளி பரவலால்
    புவனம்பு ரத்தலாற் பூசலெழ வருதலாற்
    பூரணம் பெறவ ருதலால்
    ……………………………………………….
    அவனிதொழு கந்தபுரி தழையவரு மைந்தனுடன்
    அம்புலீ யாடவாவே. (அம்புலிப்பருவம்)

    சிறுபறைப் பருவத்தினின்றும் ஒரு பாடலைக் காண்போம்.

    புலவர்களின் சங்கத்தமிழ் முழக்கம் கேட்டு முருகனின் உள்ளத்துணர்வுகள் பொங்கி ஒலிக்கின்றன. அதற்கேற்ப சிறுபறையையும் முழக்க வேண்டும் பாடல்.

    “புகழ்வாய்ந்த சங்கப்புலவர் நக்கீரர், முருகன், மீனாட்சியம்மை ஆகியோரின் அருள்வெள்ளத்தில் மூழ்கித்திளைத்த குமரகுருபரர், தேவர்களும் போற்றும் சந்தக்கவிஞரான அருணகிரிநாதர், பகழிக்கூத்தர், தங்கக் கவிஞர்  பாம்பன் சுவாமிகள், உடுவைக்கவிஞன் சிவசம்புப்புலவர், நவாலியூர் சோமசுந்தரப் புலவர் ஆகிய கவிஞர்களின் தமிழ் முழக்கம் பெரிதாக ஒலிக்கக்கேட்டு உனது உள்ளத்து உணர்வுகளும் பொங்கி ஒலித்ததுபோல, உனது சிறுபறையை முழக்குக குமரா,” எனும் பாடல்.

    விந்தைப் புலவன் சங்கத் தமிழோன்
    வியத்தகு கீரனருள்
    மேவும் புலவன் குருபர முனிவன்
    விண்ணவர் பரவவரும்
    சந்தப் புலவன் அருணைப் பதியான்
    தாழ்ப கழிக்கவிஞன்
    தங்கக் கவிஞன் பாம்பற் பெயரோன்
    …………………………
    முனிவரர் பணியும் பொலிகையின் மணியே!
    முழக்குக சிறுபறையே. ( சிறுபறைப்பருவம்)

    இத்தகைய சுவையான பாடல்களைக் கொண்டது இப்பிள்ளைத்தமிழ் நூல்.

    (வளரும்)

    Share
  • ஈழம் தந்த பிள்ளைத்தமிழ் நூல்கள் – 6

    ஈழம் தந்த பிள்ளைத்தமிழ் நூல்கள் – 6

    மீனாட்சி பாலகணேஷ்

    இனி கையில் கிடைத்துள்ள அம்பிகை மீதான எஞ்சிய இரு பிள்ளைத்தமிழ் நூல்களைப் பற்றிப் பார்க்கலாம்.

    6. சுதுமலை புவனேசுவரி பிள்ளைத்தமிழ்

    சுதுமலை இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு ஊர். புவனேசுவரி அன்னைக்கான ஆலயம் இங்கு அமைந்துள்ளது. இந்த அன்னையின்மீது ஒரு அழகிய பிள்ளைத்தமிழ் நூல் பண்டிதர் மு. கந்தையா அவர்களால் இயற்றப்பெற்று1987-ல் வெளியானது.

    பிள்ளைத்தமிழின் கூறுகள் அனைத்தையும் கொண்டு பத்துப்பருவங்களில் பத்துப்பத்துப் பாடல்களுடன் பெருமைபெற விளங்குகிறது. இதன் நயங்கள் சிலவற்றைக் காண்போம்.

    சப்பாணிப்பருவத்தின் முதற்பாடல், மிக அருமையாக உள்ள ஒரு பாடல்:

    தாமரைமலரில் வைத்த பவளச் செப்பொன்று சிறிது திறந்தபடியுள்ளது. அதனுள்ளே உள்ள முத்துக்களில் சில தெரிகின்றன. இது எதற்கு உவமை? தாமரை போன்ற முகத்தில் பவளவாய் திறந்து சிரிக்கும் அம்மையின் பற்கள் முத்துப்போன்று காண்கின்றன. தாமரை மலரின் உள்ளிதழ்கள் ஒரு அரிய சிவப்பாகக் காணப்படும்; அப்படிப்பட்ட பாதங்களை மடித்து பத்மாசன நிலையில் அமர்ந்துள்ள குழந்தை. அனிச்ச மலரையொத்த மென்மையான சிவப்பு மெத்தையில் அழகாக அமர்ந்துகொண்டு சப்பாணி கொட்டுகிறாள் குழந்தை.

    பங்கயத்தில் வைத்த பவளநற் செப்பினிற்
    பாதிமுத் தொளிர்வ தேய்ப்பப்
    பல்லினொளி சிறிதே பளிச்சிட மொழிச்சிதர்ப்
    பால்வாய் குதட்டி யாணர்ச்
    செங்கமல வகவிதழ் சிவணுமிரு பதமடித்
    தொன்றுபத் மாசனத்திற்
    சீர்திக ழனிச்சசெஞ் செந்தூவி யணையினிற்
    செவ்வே நிமிர்ந்தமர்ந்து
    ………………………………………………………..
    சங்களை யிருக்கைகொண் டெங்களை யுருக்குமனை
    சப்பாணி கொட்டியருளே. (1)

    புலவரின் கற்பனை தேனினுமினிதன்றோ?

                                  ***

    அடுத்து நீராடற் பருவத்துப் பாடல்களுள் ஒன்றினைக் காண்போம்.

    இளம்பெண்கள், சிறுமியர், நீராடும்போது நிகழும் சில நிகழ்வுகளை வருணிக்கும் இனிய பாடலிது. சொல்லின் தெய்வமான கலைமகள், திருவின் தெய்வமான திருமகள் இருவரும் இருபக்கமும் இருக்க, சுழித்தோடும் நதி நீரில் துழாவியளைந்து மிதந்து ஆடுகின்றனள் அன்னை. செவிபொத்தி, கண்களை மூடி விளையாடும்போதில் கைகளும் கால்களும் நீரில் அளைவதனால் ‘முகேர்’ எனும் ஒலி எழுகின்றதாம். தாமரை மலரின் இனிய நறுமணத்தையும் நுகர்ந்து மகிழ்கின்றனர். ஒளிவீசும் பற்கள் தெரியுமாறு நகைத்தபடி தோழியரோடு மழலைச்சொல் பேசி  கமலமலரின் அழகினைப் பழிக்கும் முகத்தின் எழில் பொங்குமாறு புதுநீராடுக என வேண்டுகின்றார் புலவர்.

    சொற்படு கலைமகள் திருமகளெனுமிரு
    தோழியர் பாங்காகச்
    சுரிபுன லாழ்ந்து துழந்து மிதந்தும்
    துணைவிழி செவிபொத்தி
    முற்படு நீரில் முகேரெனு மொலியெழ
    மூழ்கி யெழுந்துமயல்
    முளரிப்புண மளவிக் கனிகொள
    மூசி முகந்தார்த்தும்
    எற்படு முத்தி னிளம்பத மூரல்
    இலங்க நகைத்துநகைத்
    தெதிருறு மகளிரோ டிதமுறு மழலை
    இசைத்து நசைக்கமலப்
    பொற்படு முகவெழில் பொங்கவே மங்கலை
    புதுநீ ராடுகவே
     …………………………………………………..

    இவ்வாறெல்லாம் அழகான பாடல்களைக் கொண்டது இந்நூல்.

                                                      0000000

    7. இணுவை சிவகாமியம்மை பிள்ளைத்தமிழ்

    இந்நூல் எவ்வாறு எழுந்தது?

    ஈழத்து அரசன் திருக்கோவலூர்ப் பேராயிரவன் காலத்தில் சிவகாமியம்மையின் ஒரு திருவுருவம் சிதம்பரத்தினின்றும் கொண்டுவரப்பட்டு இணுவையூரில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இவ்விடம் சிதம்பர வளவு எனவும் அறியப்பட்டது. ஆலயமும் உடன் எழுந்தது. இங்கு குடிகொண்டுள்ள அம்பிகை மீது அடியாரான சின்னத்தம்பிப் புலவர் பாடியதே ‘சிவகாமியம்மை தமிழ்’ என்னும் நூல்.

    இலங்கையைச் சிவபூமி என்பார் திருமூலர். பல சிவன், சக்தி, முருகன், விநாயகர் திருக்கோவில்களைக் கொண்டது. இணுவில் எனும் ஊர் இலங்கையின் யாழ்ப்பாணத்தில் யாழ் நகரிலிருந்து காங்கேசன் துறைக்குச் செல்லும் பெருவீதியில் நான்காவது கல் தொலைவில் உள்ளது. யாழ்ப்பாணத்துப் பரராசசேகர மன்னன் இவ்வூரிலிருந்து அரசு செய்தான் என்று சில பாடல்களால் அறிகிறோம். பரராசசேகர விநாயகர் கோவிலை அமைத்த அரசனும் இவனே எனப்படுகிறது.

    சின்னத்தம்பிப்புலவர் சிவகாமியம்மை மீது சிறை நீக்கிய பதிகம், பிள்ளைத்தமிழ், சிவகாமியம்மை துதி, சிவகாமியம்மை திருவூஞ்சல் ஆகிய நூல்களைப் பாடியுள்ளார்.

    சிவகாமியம்மை பிள்ளைத்தமிழ் எனும் நூல் பிள்ளைத்தமிழ் இலக்கணத்தின் பாற்பட்டதன்று. புலவர் சிவகாமி அம்மையைத் தாயாகவும் தம்மைச் சேயாகவும் வைத்து இந்நூலை ஆக்கியுள்ளார். பிள்ளையாகத் தம்மையே வைத்துப் பாடிய பாடல்கள் இருப்பதனால் பிள்ளைத்தமிழ் எனப் பெயர்பெற்றது. இதில் மொத்தமே பத்துப்பாடல்கள் தாம் உள்ளன.

    அன்னை சிவகாமியின் அருட்சிறப்பும், அருள் தத்துவங்களும்,  திருப்பெயர்களும் அமைந்தும், புலவர் தம்மைப் பிள்ளையாக்கிக் கொண்டு அன்னை அவளிடம் முறையிடுவதும் இந்நூலில் சிறப்பாக அமைந்துள்ளன. இப்பிள்ளைத்தமிழில் வடமொழிச் சொற்களும் சொற்பிரயோகங்களும் மிகுந்து காணப்படுகின்றன.

    இந்நூலின் பத்துப் பாடல்களும் பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தமாக இசைக்கப் பட்டுள்ளன.

    முதற்பாடலில் அன்னையின் ஸ்ரீ சக்ர வடிவைப் போற்றி, அவள் அடியார்களுக்கு அருளும் தகைமையைப்போற்றியும், இணுவை நகரின் வளத்தை ஏற்றியும் பாடியுள்ளார்.

    சீரணி முக்கோ ணத்து ளிருக்குந் தேவிசட் கோணத்துட்
    சேருங் கன்னி அட்ட தளத்துட் சீரார் கௌமாரி
    நாரணி யென்றுன் செய்ய பதங்கள் நாளுந் துதிசெய்யும்
    நம்பின பேருக் கம்புவி மீதே நல்லருள் புரிவாயே
    காரணி சோலையும் மணிமண் டபமுங் கஞ்ச மலர்த்தடமும்
    காவிச் செடியுங் கழுநீர்த் தொகையுங் கதிர்நித் திலங்களுந்
    தேரணி வீதிகளு மெங்கும் நெருங்குஞ் செல்வந் தழைக்கின்ற
    திருவள ரிணுவைப் பதிதனி லுறையுஞ் சிவகாமித் தாயே. (1)

    எட்டாம் பாடலில் அன்னையிடம் உரிமை கொண்ட பிள்ளை தனக்கவள் அருள்புரியத் தாமதிப்பதனால் அவளிடம் கோபித்துக் கொள்வதனைக் காண்கிறோம்.

    எள்ளுக்குள் எண்ணெயாக உள்ளவள் நீ; என்னிடம் ஏன் நீ இல்லை? உனக்கு எல்லாம் தெரியும்; எனது வறுமையும் பிணியும் நீ அறிந்திலையோ? உலகத்தே முப்பத்திரண்டு அறங்களை வளர்த்தாய் நீ; என்னிடம் மட்டும் ஏன் இரக்கமில்லை? நீ பிள்ளையே பெறாத மலடியோ? உலகெலாம் நீ பெற்றெடுத்தாய் என்பதும் பொய்தானோ? தான் பெற்ற பிள்ளை பேய்ப்பிள்ளை ஆனாலும் தாயென்பவள் அதனை இகழ்வாளோ? என்றெல்லாம் உரிமையோடு ஏசுகிறார்.

    எள்ளுக் குணெய்போ லெங்கும் நிறைந்தா யென்னிடத் தில்லையோ
    எல்லா மைந்தநீ யென்றனில் லாமையும் பிணியுந் தெரிந்திடாயோ
    உள்ளந் திகழ்பா வியேனென் பாசம் உனையடுத் தாலுமுண்டோ
    உலகத் துமுப்பத் திரண்டறம் வளர்த்தா யிரக்க மில்லையோ
    பிள்ளை பெறாமுழு மலடியோ யுலகெலாம் பெற்றதும் பொய்தானோ
    பேய்ப்பிளை யாகிலும் பெற்றதா யிகழ்வளோ பிழைபொறுத் துன்கருணை
    அள்ளித் தாராதெனைத் தள்ளிவிடல் நீதியோ ……. …………

                                                               (8)

    அன்னையின் அன்பினில் ஆழ்ந்து விட்டால் தான் பிள்ளையெனும் உரிமையுடன் அவளிடம் வேண்டலாமன்றோ?

    இத்துடன் அம்பிகை மீதான பிள்ளைத்தமிழ் நூல்கள் பற்றிய சிந்தனைகள் முடிவுறுகின்றன. இனி அவளுடைய திருமகனான முருகப்பெருமான் மீதான ஈழத்துப் பிள்ளைத்தமிழ் நூல்களைப் பற்றிக் காண்போம்.

    (வளரும்)

    Share
  • ஈழம் தந்த பிள்ளைத்தமிழ் நூல்கள்- 5

    ஈழம் தந்த பிள்ளைத்தமிழ் நூல்கள்- 5

    மீனாட்சி பாலகணேஷ்

    தொடர்ந்து நாம் பார்க்கப்போவது…….

    5. முன்னீசுவரம் வடிவாம்பிகை பிள்ளைத்தமிழ் 

    பண்டைக்காலத்தில் தமிழர்கள் இலங்கையின் பல பகுதிகளிலும் வாழ்ந்துவந்தனர். அவர்களால் கட்டப்பட்டு வழிபாடு செய்யப்பட்ட புராதனமான கோவில்களுளொன்றே முன்னீசுவரமாகும். இது இலங்கையின் மிகப்பழமையான சிவாலயங்களுள் ஒன்றாகவும் திகழ்கிறது. புத்தளம் மாவட்டத்தில், சிலாபம் நகரத்திற்குக் கிழக்கில் முன்னேசுவரம் எனும் கிராமத்தில் உள்ளது. சிவபிரான் இங்கு முன்னைநாத சுவாமி எனவும் அம்பிகை வடிவாம்பிகை எனவும் அறியப்படுவர்.

    உள்ளே வடிவாம்பிகை அம்மை கொலுவிருக்கும் காட்சி கண்கொள்ளாக் காட்சியாகும் எனக்கூறுகிறார் இத்திருத்தலத்தைப் பற்றி எழுதியுள்ள திரு. குல. சபாநாதன். அவளது திருவுரு கண்டவர் மனத்தைக் கவர்ந்து ஓர் உள்ளக்களிப்பையும் பக்தியையும் உண்டுபண்ணும் வசீகர சக்தி ததும்பி வழியும் தன்மையுடையதெனக் கூறுகிறார்.

    கோவில் தோன்றிய வரலாறு: பஞ்சேசுவரங்களில் (முன்னேஸ்வரம், இராமேஸ்வரம், கோணேஸ்வரம், கேதீஸ்வரம், நகுலேஸ்வரம்) இலங்கையில் முன்னதாகத் தோன்றிய தலமே முன்னேஸ்வரம் என்பார்கள். இது தோன்றியதைப் பற்றிப் பல புராணக்கதைகள் உள்ளன.

    வியாசமுனிவர் காசியில் செய்த பாவம் தீர இங்குவந்து சிவபிரானை வழிபட்டு உய்ந்தார் என்பர்.

    இராவணனை வதம்செய்த இராமரை பிரம்மஹத்தி தோஷம் பிடித்தது; பிரம்மஹத்தி அவரைப் பின்தொடர்ந்தது. ஆனால் இராமர் தனது பரிவாரங்களுடன் முன்னீசுவரத்தின் மேலாகச் சென்றபோது, பிரம்மஹத்தி அவரை விட்டு விலகியது; ஆச்சரியமடைந்த இராமர் சீதையுடன் அங்கிறங்கி, முன்னீசுவர நாதரையும் அம்பிகையையும் வழிபட்டார். சிவபிரான் விடையின்மீது அம்பிகையுடன் காட்சியளித்து அவருக்கு அருளினார் எனப் புராணங்கள் கூறும்.

    இன்னும் விரித்துக்கொண்டே போனால் கட்டுரை நீண்டுவிடும். ஆதலால், இங்கு நிறுத்தி விடுகிறேன்.

    முன்னேஸ்வரம் மீதான நூல்கள்: முன்னைநாத சுவாமியையும் வடிவழகி அம்மையையும் போற்றிக் காலந்தோறும் பல நூல்கள் புலவர்களால் இயற்றப்பட்டுள்ளன. காரைநகர் ஸ்ரீமத். கா. சிவசிதம்பர ஐயரவர்கள் முன்னீசுவரர் நவமணி மாலை, கொழும்பு மு. சரவணமுத்துப் பிள்ளையவர்கள் முனியேசுர தீர்த்த யாத்திரை வழிநடைப் பதம், கொக்குவில் குகதாசர் ச. சபாரத்தின முதலியார் முன்னைநாத சுவாமி மேலும் வடிவழகியம்மை மீதும் ஆசிரிய விருத்தங்கள், கொக்குவில் சி. சிதம்பரநாத பிள்ளையவர்கள் முன்னீசுவரரூஞ்சல், மேலும் பலரும் பல நூல்களை இயற்றியுள்ளனர்.

    முன்னீஸ்வரத்து அன்னை வடிவாம்பிகைமீது திரு. சொக்கன் அவர்கள் இயற்றிய பிள்ளைத்தமிழ் நூல் 2012ம் ஆண்டு  தேவஸ்தானத்தாரால் வெளியிடப்பட்டுள்ளது. இவர் இதற்கு முன்னமே வடிவாம்பிகைமீது ஒரு அந்தாதியும் பாடியுள்ளார் என அறிகிறோம்.

    முன்னீசுவரமானது இலங்கைத்தீவில் ‘அலகேஸ்வரம்’ என்று ஸ்ரீசிவமஹாபுராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதும், குப்ஜிகா தந்திரத்தில் ‘தேவமோஹினி பீடம்’ என்றறியப் படுவதும், மார்க்கண்டேய புராணத்தில் சாங்கரி பீடம், ஸ்ரீலங்காபீடம் எனவும் உயர்வாகக் கூறப்படுவதுமான பெருமை பொருந்திய சக்தி பீடமாகும். அம்பிகை ஸ்ரீ வடிவாம்பிகை எனப் பெயர் கொண்டுள்ளாள். இவ்வன்னை அழகே உருவானவள்; அழகையும் அவளையும் பிரிக்க இயலாது என்பர்.

    ‘பவானி, பாவனாகம்யா’ என்பது ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமத்தின் ஒரு நாமம். நமது பாவனையினால், கற்பனையினால் உலகமாதாவான அம்பிகையை, நம் எண்ணங்களுக்கேற்ற வடிவில், உருவில் வழிபடுவதே அதுவாகும். அவளைச் சிறுமியாக, பாலா திரிபுர சுந்தரியாக வழிபடுவது இத்தகையதொரு பாவனையே. அதற்குப் பிள்ளைத்தமிழ் நூல்கள் நமக்குப் பெரிதும் துணைபுரிகின்றன.

                                                                ~~~~~~~

    இச்சமயம் இப்பிள்ளைத்தமிழ் நூலினின்றும் சில பாடல்களைக் காண்போம்.

    வழக்கிற்கு மாறாகக் காப்புப்பருவம் சிவபெருமான் துதியுடன் ஆரம்பமாகிறது. இரண்டாம் பாடலே திருமாலைப் போற்றுகின்றது.

    “இவனைத் தட்டிக் கேட்க யாருமில்லையா, தறுதலையாக அலைகிறானே” என்று தாயான யசோதை கவலை கொள்ளுமாறு சற்றும் பயமின்றி அக்கம்பக்கத்து வீடுகளிற் சென்று விரைவாக, அவர்களது வீட்டு உறிகளை உடைத்து வெண்ணெய் முதலியனவற்றை உண்டாலும், அவனிடம் கோபித்துக் கொள்ளாமல் அவனைத் தங்களுடைய செல்லமகனாக அணைத்துத் தழுவிக்கொள்ளும் ஆய்ச்சியரின் குட்டிப்பிள்ளை, கோபாலன் எனும் விஷமக்காரன், திருவான இலக்குமியின் மணவாளன் ஆனவன், அழகான கருமைநிற மேனியினை உடையவன், இவளை, வெல்லப்பாகிலும், முக்கனிகளிலும் காணாத இன்சுவைச் சொற்களைப் பேசும் அழகியை, அழகான நந்தவனங்கள் சூழ்ந்த முன்னீசுவரத்தில் வளரும் கனியை ஒத்த வடிவாம்பிகையைக் காக்க வேண்டும் என வேண்டுகிறோம்,” எனும் காப்புப் பருவப்பாடல் கருத்தைக் கவர்கின்றது.

                            தட்டிக் கேட்க ஆளில்லைத்
                                          தறுதலை என்றே தாய்கவலச்
                                  சற்றும் அஞ்சா தயலேகித்
                                          தறதற என்றே உறிஏறிச்
                       சட்டி வெண்ணெய் உண்டாலும்
                                          சற்றும் வெகுளி கொள்ளாமல்
                                 தங்கள் மகன்போல் அரவணைத்துத்
                                          தழுவி மகிழும் ஆய்ச்சியரின்
                       …………………………………………….
                       கட்டிப் பாகும் முக்கனியும்
                                          காணாச் சுவையின் சொல்லழகி
                                 கவினார் பொழில்சூழ் முன்னைவளர்
                                          கனியை இனிதே காக்கவென்றே.      

    ஈண்டு கண்ணனை, திருமாலை, அவன் பிள்ளைப்பருவத்துக் குறும்புகளுடன் பொருத்திப் புகழ்வது பிள்ளைத்தமிழ்ப் பிரபந்தத்திற்கு அழகான பொருத்தமன்றோ?

                                                    ~~~~~~~~~~~

    பிள்ளைத்தமிழ் நூல்களில் அவ்வத் தலங்களிலுறையும் தெய்வங்களின் பெருமையையும், அத்தல புராணச் செய்திகளையும் காணலாம். அவ்வாறே இதிலும் இராமர் பிரம்மஹத்தி தோஷம் நீங்கப்பெற்ற வரலாறும் ஒரு தாலப்பருவப் பாடலில் காணப்படுகின்றது.

    ‘பத்துத் தலைகளும், ஆணவமும் கொண்டு அலைந்த இராவணனை, மூன்று உலகங்களுக்கும் அதிபதியாக விளங்கிய அவனைத் தனது அம்பினால் கொன்ற இராமபிரானை பிரம்மஹத்தி தோஷம் பிடித்தமையால் அவன் பித்தனாக அலைந்தபோது, ஸ்ரீ முன்னேஸ்வரத்தை அடைந்தான். அப்போது பிரம்மஹத்தி அவனைவிட்டு அகன்றதாம். உடனே தனது பரிவாரங்களுடன் பூமியில் அங்கு இறங்கி, முன்னநாதேஸ்வரரையும் வடிவாம்பிகையையும் தொழுதாராம். சிவபிரானும் அவருக்கு அம்மையுடன் காட்சியளித்தனராம். அத்தகைய பிரானின் இடப்பாகம் கொண்டவளே! தாலோ தாலேலோ’ என்பது பாடல்.

                            பத்துத் தலையும் ஆணவமும்
                                 பாரித் திட்ட இராவணனைப்
                       பகர்மூன் றுலகிற் கதிபதியைப்
                                 பகழி கொண்டு துளைத்தபிராற்
                       பித்த னாகப் பிரமகத்தி
                                  பிடித்தே அலைத்த போதினிலே
                       பக்தியிற் கலைத்த பிரானாயெம்
                                 பரிகாரஞ் செய்தவத் தின்னாய்
                       முத்தி யருளும் முன்னையனை
                                   முன்வந் தேத்தித் தொழுததனால்
                        ………………………………………………………………..
                       அஞ்சுகக் குதலை மொழியாளே!
                                 அன்பே! தாலோ தாலேலோ! 

                                 ~~~~~~~~~~~~~~~~

    அம்பிகை அம்மானையாடும் அழகை விவரிக்கும் ஒரு பாடலில் பொதிந்துள்ள கருத்துக்கள் பிரமிக்க வைக்கின்றன: ‘தூல உருவினை எடுத்துக்கொண்டு, உருவற்ற நிலையை விடுத்து சிறுமியாக அருகே வருவாய்! உனது சிறு கரங்களில் ஒப்பற்ற  பெருமை கொண்ட அம்மானைக்காய்களை எமது கண்கள் (ஆச்சரியத்தால்) விரிந்து நோக்கவும், திருமகள், கலையின் உருவான கலைமகள், வீரத்திருவான துர்க்கை எனும் மலைமகள் இவர்கள் உடன்வரவும், புலியின் தோலைப் போர்வையாக அணிந்த அருவமானவன் (சிவபிரான்) மகிழும் இமவான் மகளே, ஹைமவதி! பெரிய மரத்தின் நிழலைப்போன்று பேரருள் புரிவாய்; அம்மானையை எறிந்து ஆடி அருளுவாய்,’ என வேண்டும் பாடல்.

                உருவை மருவி அருவை ஒருவி வருவை சிறுமி அருகிலே
                       ஒருமை அருமை யுறநீ சிறுகை தனிலே பொருவில் பெருமைகொள்
              விரியு மெழிலம் மனையி னுடனெம் விழிகள் விரிய மகிழ்வுற
                       விரைவில் திருவும் கலையின் உருவும் விறலி னெழிலும் உடன்வர
              எருவை உரிவை செறியு மரும முரியன் களிகொள் ளிமவதி!
                       ………… ……….. ………………… ………….. …………… ………………….
              தருவை அனைய நிழலைத் தருமொர் அருளில் மருவு பெரியைநீ
                       தயவு மிகவம் மனைய எறிந்து தழைவோடாடி அருள்கவே.
              இப்பாடல் சந்தநயமும் நிரம்பிப் பொலிகின்றது.

                                 ~~~~~~~~~~~~~~

    இன்னுமோர் நீராடற் பருவப் பாடலுடன் இப்பாகத்தை நிறைவு செய்யலாம்.

    சிறிமியான வடிவழகியை நீராட அழைத்து அழைத்து அன்னையும் சேடியரும் சலித்து விட்டனர். அவளிடம் கூறுகின்றனர்:

    “நெருப்பனைய திருமேனியில் வெப்பமிகுந்த திருநீற்றினை எந்த நேரமும் பூசிக்கொண்டிருக்கும் நிமலனாம் சிவபெருமானுடைய உடலிற் பாதியைக் கொண்டவளே (உனது உடலும் அதனால் வெப்பமிகுந்திருக்குமே தாயே!)

    “மலையரசன் மகளாய் உருக்கொண்டு குளிர்ச்சி மிகுந்த இமயமலையின்கண் வளர்ந்த போதில், எப்போதும் பனி, மழை, வாடைக்காற்று, குளிர் இவற்றினால் அங்கு புனலில் இறங்கி நீராட மறந்திருந்தாய் போலும்!

    “ஆகவே நீராடும் விருப்பம் உனக்கு இல்லை என அறிந்தோம் நாம்; இருப்பினும் எங்கள் உளமாகிய தாமரைத் தடாகத்திலும், இந்த முன்னையின் ஒரு ஆறு தன்னிலும் நீராடி அனுபவம் கொண்ட உன்னை நீராடியருள வேண்டுகிறோம் நாம்.

    “மிகுந்த வாசனை பொருந்திய இந்தச் சுகந்த நறுமண நீரில் நீராடியருளுக தாயே!” என்கின்றனர்.

                நெருப்பனைய திருமேனி நீற்றினைப் பூசியெந்
                       நேரமும் வெப்பமிகவே
              நிலவிடும் நிமலனின் ஆகத்தி னிற்பாதி
                       நிலைகொண்ட எம்பிராட்டி!
              பொருப்பினன் செல்வியாய் உருக்கொண்டு மலையினிற்
                         பொலிவுடன் வளர்ந்தகாலை
              பொழுதெலாம் மழைபனி குளிர்வாடை யாலங்கு
                       புனலாட மறந்திருந்தாய்
              …………………………………………………………………………………………………….
              விருப்புடன் நீராடி அனுபவம் கொண்டஉனை
                       வேண்டநீ ராடியருளே
              மிகுமணச் சுகந்தமளை குளிர்நீ ரிதாமிதில்
                        விரும்பி நீ ராடியருளே.

    நீராடத் தாமதிக்கும் சிறுமியை, அத்தாமதத்திற்காகப் புலவர் கற்பிக்கும் காரணங்கள் நகையை உண்டுபண்ணுபவையாம்.

    இத்தகைய அரிய பல பாடல்களைக் கொண்ட நூல் இப்பிள்ளைத்தமிழ் நூலாகும்.

                                                                                                                            (வளரும்)

    Share
  • ஈழம் தந்த பிள்ளைத்தமிழ் நூல்கள் – 4

    ஈழம் தந்த பிள்ளைத்தமிழ் நூல்கள் – 4

    மீனாட்சி பாலகணேஷ்

    அம்பிகை மீதான இன்னும் சில பிள்ளைத்தமிழ் நூல்களைக் காணலாமா?

    4. திருக்கேதீச்சரம் கௌரிநாயகி பிள்ளைத்தமிழ்

    இந்த நூலைப் பார்க்கப் புகுமுன், கௌரிநாயகியம்மை குடிகொண்டுள்ள மிகப்பழமையான தலமாகிய திருக்கேதீச்சரத்தைப் பற்றிய தகவல்களைக் கட்டாயம் நாம் அறிந்துகொள்ள வேண்டும். திரு. ஆர் கந்தையா என்பவர் 1938ம் ஆண்டில் இத்தலத்தைப் பற்றி ஒரு நூலை வெளியிட்டுள்ளார். அதனின்றும் சில குறிப்புகளைப் பகிர்ந்து கொள்கிறேன்.

    சமயக்குரவர்களால் பாடப்பெற்ற திருத்தலங்கள் 274 ஆகும். இவற்றுள் இரண்டு இலங்கையின்கண் உள்ளவையாம். இலங்கையின் பழமையானதும் திசைக்கொன்றாக இருப்பதுமான நான்கு சிவன் கோவில்கள் திருக்கேதீச்சரமும், திருக்கோணேச்சரமும் முன்னேஸ்வரமும், நகுலேஸ்வரமுமாகும். திருக்கேதீச்சரம் 2400 ஆண்டுகள் பழமை வாய்ந்தது (மகாவம்சம், பிரிட்டானிகா). திருக்கேதீச்சரத்தை சமயக் குரவர்களான சுந்தரமூர்த்தி நாயனாரும், திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாரும் பாடிப்பரவியுள்ளனர். இந்த இடம் மன்னாரை அடுத்த மாதோட்டத்தில் (மாந்தோட்டம் எனவும் கூறப்படும்) அமைந்துள்ளது. மகாதுவட்டா வெனும் மன்னன் பூசித்த இடமாதலால் மாதோட்டம் எனப் பெயர்பெற்றது என்பர். மாந்தை எனவும் கூறப்படும். பழங்காலத்தில் இவ்விடம் பெரும் துறைமுகமாக விளங்கிற்று. சேர சோழ பாண்டியர்கள் ஆண்ட காலத்திலும், இலங்கையை விசயன் எனும் மன்னன் ஆண்ட போதும் இருநாடுகளுக்குமிடையே மாதோட்டத் துறைமுகத்தின் வாயிலாகவே பெரும் வாணிகம் நடைபெற்றது  என்பர். ஈழ மன்னன் விசயனுடைய இரண்டாம் மனைவியாகிய பாண்டிய இளவரசி திருமணஞ் செய்துகொண்டு வந்திறங்கிய துறைமுகம் மாதோட்டம் என்று ஈழத்தின் வரலாற்று நூலான, ‘மகாவம்சம்,’ எனும் நூல் மாதோட்டத்தைப்பற்றிக் குறிப்பிடுகின்றது.

    ரோம, கிரேக்க நாணயங்கள் இங்கு கண்டெடுக்கப்பட்டுள்ளது, இது அக்காலத்தில் இந்நாடுகளுடன் நடந்த  வாணிகத்தை உணர்த்துகிறது.

    சுந்தரமூர்த்தி நாயனார் பாடியுள்ள, ‘வங்கம் மலிகின்ற கடல் மாதோட்ட நன்னகர்’ எனும் தேவாரத்தினாலும் இம்மாதோட்டம் பெரிய துறைமுகமாக விளங்கிற்று என அறியலாம். சம்பந்தப்பெருமானும் தமது தேவாரத்தில் மாதோட்டம் எனும் பெயரைக் குறிப்பிட்டுள்ளதனைக் காணலாம்.

    மேலும் இங்கிருந்த பாலாவி எனும் நதியினைப் பற்றி சம்பந்தர் தமது திருக்கேதீச்சரப் பதிகத்தில்  ‘மாதோட்டத்தர் மன்னு பாலாவியின் கரையிற் கேதீச்சரம்’ எனக் குறிப்பிட்டுள்ளார். ‘பாலாவியின் கரைமேல்’ எனும் தொடரை சுந்தரர் எடுத்தாண்டுள்ளர்.

    புராண வரலாற்றை நோக்கினால், வாயுதேவனுக்கும் ஆதிசேடனுக்கும் ஒருகாலத்தில் வாக்குவாதம் தொடங்கிப் பெரிய போராகவே மாறியது என்றும்,  ஆதிசேடன் ஒருகட்டத்தில் மேருமலைக்குள் சென்றொளிந்து கொள்ள, வாயுபகவான் அம்மலையைத்தாக்கி, அதன் மூன்று சிகரங்களையும் பெயர்த்தெடுத்துச் சென்றான் என்றும் காணலாம். அவற்றுள் ஒரு சிகரத்தைத் திருக்கேதீச்சரத்தில் வைத்துச் சென்றான் எனப்படுகிறது.

    இது கேது பூசித்த தலமாதலின் கேதீச்சரம் என்றானது. இதற்குமொரு புராணக்கதை உள்ளது. சாவா மருந்தான அமுதத்தை மோகினி வேடம்பூண்ட திருமால் தேவர்களுக்குப் பகிர்ந்தளித்தபோது,  ஒரு அசுரன் மாறுவேடம் பூண்டு, சூரிய சந்திரர்களுக்கிடையே மறைந்து நின்று தானும் ஒரு பங்கைப்பெற்று உண்டான். இதையறிந்த திருமாலின் சாபத்திற்காளான அவனது உடல் இராகு, கேது என இரு கூறுகளாயிற்று. அவ்வரக்கன் பெருந்துன்பமடைந்து இத்தலத்தில் சிவபிரானை வணங்கி அவர் அருளைப் பெற்றனன்.

    திருக்கேதீச்சரம் பழம்பெரும் தலமாகும். துவட்டா என்பவன் திருக்கேதீச்சரத்திற்கு வந்து பாலாவியிலே தீர்த்தமாடி, புத்திரப் பேற்றிற்காகச் சிவபெருமானை வழிபட்டான் என்றும், கேதீச்சரப்பெருமான் அவன்முன் தோன்றி, அத்தலம் மகாதுவட்டாபுரம் என வழங்கப்படும் எனவும், அவனுக்கு விசுவகர்மா எனும் மகன் பிறப்பான் எனவும் அருளினார். இத்தலத்தில் அகத்திய முனிவர் வழிபட்டார்.

    இது அழிந்து போனதற்குப் பலவிதமான காரணங்கள் கூறப்படுகின்றன.

    இத்தலத்தின் ஈசன் புகழை சம்பந்தர், சுந்தரர் ஆகிய இரு நாயன்மார்களும் தத்தம் பதிகங்களில் பாடிவைத்துள்ளனர்.

    இத்தலத்துப்பெருமானை வழிபட்டால் தீராத வினைகளும் நோயும் தீரும் என்பர். திருஞானசம்பந்தர்

    ‘மேருமலையை வில்லாகக் கொண்டு அரவை நாணாகப்பூட்டி, அனல் எரியை அம்பாகக் கொண்டு போரிட்டு முப்புரங்களை எரித்த சிவபிரான் விரும்பி உறையுமிடமாக அடியவர் கருதும் ஊர், கடலால் சூழப்பட்ட, வாசமிகு பொழில்கள் அணிசெய்யும் மாதோட்டத்தில் பலரும் விரும்பிப் பூசனை செய்திடும் திருக்கேதீச்சரமாகும். அப்பதியைக் கையால் தொழுதால் நம் கடுவினைகள் விலகியோடும்,’ என்கிறார்.

    விருதுகுன்ற மாமேருவில் நாணர
    வாஅனல் எரியம்பா
    ……….. …………… ……………..
    கருது கின்றவூர் கனைகடற் கடிகமழ்
    பொழிலணி மாதோட்டம்
    கருத நின்றகே தீச்சரங் கைதொழக்
    கடுவினை யடையாவே.

                                       (திருக்கேதீச்சரப் பதிகம்- 2ம் திருமுறை)

    சுந்தரமூர்த்தி நாயனார், ‘தனது அடியார்களின் உடற்பிணிகளை  முற்றும் ஒழித்தருள்பவனாகிய சிவபிரான், மரக்கலங்கள் (வங்கம்) மிகுதியாகவுள்ள கடலருகேயுள்ள மாதோட்டம் எனும் நல்ல நகரத்தில், தனது திருமேனியைப் பங்கிட்டுக்கொண்ட மடமங்கையுடன், பாலாவியாற்றின் கரைமீது தென்னம்சோலை சூழ்ந்த திருக்கேதீச்சரத்தில் எழுந்தருளியுள்ளான்,’ எனப் போற்றிப் பாடியுள்ளார்.

    அங்கத்துறு நோய்கள்ளடி
    யார்மேல் ஒழித்தருளி
    வங்கம்மலி கின்றகடல்
    மாதோட்டநன் னகரில்
    பங்கஞ்செய்த மடவாளொடு
    பாலாவியின் கரைமேல்
    தெங்கம்பொழில் சூழ்ந்ததிரு
    கேதீச்சரத் தானே. (சுந்தரர்- ஏழாம் திருமுறை)

    மேலும், மாதோட்டத்தின் சிறப்பினை, ‘மாவும் பூகமும் கதலியும் நெருங்கு மாதோட்ட நன்னகர் புறமருவிய மாதோட்டம்,’ என சம்பந்தப் பெருமானும், ‘மாவின் கனிதூங்கும் பொழில் மாதோட்ட நன்னகர்’ என சுந்தரரும் தேவாரத்தில் பதிவு செய்துள்ளனர்.

    திருநாவுக்கரசரும் இத்தலத்துப்பெருமானை, அவர் பற்பல இடங்களிலும், திருக்கேதீச்சரத்திலும் உறைபவனாய்க்கண்டு ஏற்றுகிறார்.

    ‘பூதியணி பொன்னிறத்தர் பூண்நூலர்
    பொங்கரவர் சங்கரர் வெண்குழையோர் காதர்
    கேதீச்சர மேவினார் கேதாரத்தார்
    கெடில வடவதிகை வீரட்டத்தார்
    மாதுயரந் தீர்த்தென்னை வுய்யக்கொண்டார்
    மழபாடிய மேவிய மழுவாளனார்
    வேதிகுடியுளார் மீயச்சூரார்

    வீழி மிழலையே மேவினாரே’ என்று திருத்தாண்டகத்தில் எம்மிறைவர் உறையும் தலங்கள் அனைத்தையும் போற்றிக் குறிப்பிடுகிறார். இவற்றுள் கேதீச்சரமும் ஒன்றெனக் காணலாம்!

    மாணிக்கவாசகப்பெருமான் குயிற்பத்து, திருவார்த்தை இவற்றில் ‘இலங்கையில் மண்டோதரிக்கு அருள்செய்த தலம்’ எனக் கூறியுள்ளார். குயிற்பத்தின் பாடலில், ‘தென்னிலங்கைக்கு அரசியான வண்டோதரிக்கு, பேரருளாகிய இன்பத்தையளித்தவனும் பெருந்துறையில் உறைபவனுமாகிய பிரானை, உனது பெருமை பொருந்திய வாயால், அத்தென்பாண்டி நாட்டானை, என்னிடம் வரும்படிக் கூவுவாயாக, குயிலே’ என்கிறார்.

    இலங்கை அரசனான இராவணனின் மனையாளாகிய மண்டோதரி (இங்கு வண்டோதரி எனக் குறிப்பிடப்படுகிறாள்) வழிபட்ட இடமே கேதீச்சரமாகும்.

    ஏர்தருமேழ் உலகேத்த எவ்வுருவுந் தன்னுருவாம்
    ஆர்கலிசூழ் தென்னிலங்கை அழகமர் வண்டோதரிக்குப்
    பேரருளின் பமளித்த பெருந்துறை மேயபிரானைச்
    சீரியவா யாற்குயிலே தென்பாண்டி நாடனைக்கூவாய்.

                                                               (குயிற்பத்து, எட்டாந் திருமுறை)

                                                               0000000

    இவ்வாறெல்லாம் பெருமையும் பீடும் வாய்ந்த இத்தலத்தின்மீது ஒரு ஊஞ்சல் பிரபந்தம், திருக்கேதீச்சுரர் வண்டுவிடு தூது, திருக்கேதீச்சுர நாதர் கிள்ளைவிடு தூது, திருக்கேதீச்சுர புராணம் ஆகிய நூல்கள் உள்ளன. தமிழ்ச்சுவை நனிசொட்டச் சொட்ட பாடப்பெற்றவை இவை. திருக்கேதீச்சுர நாதர் கிள்ளைவிடு தூது எனும் நூலினை எழுதிய திரு. சி. இ. சதாசிவம் பிள்ளை என்பவரே 1976ம் ஆண்டுவாக்கில் இத்தலத்தில் வதியும் கௌரியன்னை மீது ஒருபிள்ளைத்தமிழ் நூலினையும் இயற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்காலத்திற்கேற்ற எளிய நடையில் அமைந்துள்ளது இதன் தனிச்சிறப்பு.

    இதனின்றும் சில செய்யுட்களைக் கண்டு மகிழலாமா?

    வழக்கமான பத்துப் பருவங்களில் பத்துப்பாடல்கள் வீதம் இயற்றப்பெற்ற இப்பிள்ளைத்தமிழ் நூலின் செங்கீரைப் பருவப்பாடலொன்று; குமரகுருபரனார் இயற்றிய மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழின் செங்கீரைப்பருவப் பாடலொன்றின் கருத்தை அடியொற்றி இருப்பினும், வேறு நயங்களிலமைந்து சிறப்பாக உள்ளது.

    ‘காற்று, நெருப்பு, நீர்,நிலம், ஆகாயம் எனும் ஐந்து பூதங்களையும் கொண்டு தாமரை மலரில் உறையும் கஞ்சனான பிரமன் உலகைப் படைக்க, கருமேக வண்ணனான திருமால் அதைக் காக்க, கயிலைவாசியான சிவபிரான் அழித்திடவும், அவர்களையும் அழித்தும் ஆக்கியும் விளையாடி, அழகான உருக்கொண்டும், குதலைமொழி பேசியும், எம்மிடம் அருள்கொண்டும், கேதீச்சரத்தில் குடிகொண்டும் நற்குணங்களையும் கொண்டு தெய்வமாக உள்ள அம்மையே, செங்கீரையாடுக! செங்கண்மாலின் தங்கையான கௌரி அம்மையே செங்கீரையாடியருளுக!’ என் வேண்டும் பாடல்.

    காலங்கி நீர்நிலங் காயமெனு மைம்பூத
    காரணத் தாயவுலகு
    கஞ்சன் படைக்கவுங் கருமேக வண்ணனவை
    காக்கவுங் கயிலையாளி
    மேலங் கழித்திட ………………………………
    …………………………….
    மீண்டும் அவர்தமை யாக்கிமுத் தொழிலதாம்
    விளையாட்டயர்ந்து வேண்டும்
    …………………………………………………..
    செங்கண்மா லுக்கரிய தங்கையாய் வருகௌரி
    செங்கீரை யாடியருளே.

    மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழில் ‘சுற்றுநெடு நேமிச் சுவர்க்கிசைய எட்டுச் சுவர்க்கால் நிறுத்தி’ எனும் செங்கீரைப்பருவப் பாடலிலும் அம்மை உலகங்களை ஆக்குவதனையும், பித்தனான சிவபிரான் நடனமாடி அதனை அழிப்பதனையும், இவ்வாறு மாறிமாறி இன்னிகழ்வு நடைபெறுவதனையும் குமரகுருபர சுவாமிகள் பாடியிருப்பார். இதுவும் கருத்தில் அதனை யொத்துள்ளது.

    சப்பாணிப்பருவப் பாடலொன்று, வெள்ளிக் கயிலை மலையைப் பெயர்க்க முயற்சித்த இலங்கேசனான இராவணனும் அவனது மனையாள் மண்டோதரியும் அன்னையை இத்தலத்தே தொழுது போற்றியதைப் பதிவு செய்கின்றது.

    வெள்ளிக் கயிலை மலையெடுத்த
    வீறார் மெய்ம்பன் இலங்கேசன்
    வேற்கண் மனைமண் டோதரியும்
    விண்ணார் அணங்கி னருமேத்தப்
    …………. …………….. …………..
    கயிலைக் கிறைவர் பங்கிலமர்
    கௌரீ தாலோ தாலேலோ.

    சொல்நயம் செறிந்தவொரு அம்மானைப்பருவப் பாடல் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளுகின்றது.

    கௌரியன்னை பாலாவியாற்றின் கரையினில் அம்மானையாடுகிறாள். அவள் பெரும்புகழை வருணிக்கிறார்.

    தாமரை மலரில் இருக்கும் பெரியோனான பிரமன் வேதங்களை யோதும் ஒலி ஒருபுறம்; கழுமலம் எனப்படும் சீர்காழியிலுதித்த முத்தமிழிற் சிறந்த சம்பந்தப்பெருமான் முதலியோர் திருமுறைகள் ஓதும் ஒலி இன்னொரு புறம்; தேனோடு பாலைக் கலந்தாற்போன்று அன்பர்கள் செவி இவற்றைக் கேட்பதனால் இனிமைபெறுகின்றது. திருவீதியில் நீண்ட மதில்களும், வானளாவு கோபுரங்களும் ஓங்கி நிற்கின்றதும், வானிலுள்ள தேவர்கள் காணவியலாதவனும் வேதங்களின் முதல்வன் எனப்படும் சிவபெருமான் அமர்ந்து வரமருளுவதுமான திருக்கேதீச்சுரத்தில், அவனுடைய இடதுபாகத்தைப் பகிர்ந்துகொண்டு அன்பர்களுக்கு அருள்செய்கின்ற மலைவல்லி, சியாமளை, வராகியான அம்மையே நீ, அளவற்ற அருளினோடு பாலாவியின் கரையில் அம்மானை யாடுக. அரியும் பிரமனும் அறியவொண்ணாத அமலரான பெருமானிடம் அமரும் கௌரி, அம்மனை யாடி அருளுக! என வேண்டுவதாக அமைந்த பாடல்.

    கானாறு கஞ்சப் பொகுட்டுறு பிதாமகன்
    கழறுமறை யோதை யுடனே
    கழுமல முதித்தமுத் தமிழ்விரக ராதியோர்
    கண்டதிரு முறையோ தையும்
    …………………………………………………
    வாமபா கம்பகிர்ந் தன்பருக் கருளுமலை
    வல்லியா மளைவ ராகீ
    ஆனாத அருளினொடு பாலாவி மறுகதனில்
    அம்மானை யாடி யருளே
    அரிபிரம ரறிவரிய வமலரிட மமர்கௌரி
    யம்மானை யாடி யருளே.

    இதுபோன்று கவிநயமும் பத்திநயமும் சேர்ந்தமைந்த பலப்பல பாடல்கள். எளிய தமிழிலமைந்தவை. படித்துப்பொருளுணர்ந்து மகிழலாம்.

    (இன்னும் வளரும்)

    பார்வை நூல்கள்:

    1. திருக்கேதீச்சரம் – ஆர். கந்தையா
    2. மகாவம்சம் – இலங்கைத் தீவின் புராதன வரலாறு
    3. சம்பந்தர் தேவாரம்
    4. சுந்தரர் தேவாரம்
    5. அப்பர் தேவாரம்
    6. மாணிக்கவாசகர் திருவாசகம்
    7. திருக்கேதீச்சரம் கௌரிநாயகி பிள்ளைத்தமிழ் – சி. இ. சதாசிவம் பிள்ளை.

    Share
  • ஈழம் தந்த பிள்ளைத்தமிழ் நூல்கள் – 3

    ஈழம் தந்த பிள்ளைத்தமிழ் நூல்கள் – 3

    மீனாட்சி பாலகணேஷ்

    இத்தொடரின் அடுத்த பகுதியாக அம்பிகை மீதான பல பிள்ளைத்தமிழ் நூல்களைக் காண உள்ளோம்.

    1. இணுவில் கௌரி அம்பாள் பிள்ளைத்தமிழ்

    நாம் முதலில் காணப்போவது ஒரு பெண்பாற் புலவரால் இயற்றப்பட்ட பிள்ளைத்தமிழ் நூல். கலாபூஷணம், பண்டிதை திருமதி. வைகுந்தம் கணேச பிள்ளை என்பவரே 2016ம் ஆண்டில் இதனை இயற்றியுள்ளார். இதுவே நான் கண்ட பிள்ளைத்தமிழ் நூல்களுள் முதன்முதலாக ஒரு பெண்பாற் புலவரால் இயற்றப்பட்டதாகும். பருவத்திற்கு ஐந்து பாடல்கள் வீதம் கொண்ட இப்பிள்ளைத்தமிழ் நூல் எழுந்த வரலாறு சிலிர்க்க வைப்பது. இவ்வம்மையார் ஏற்கெனவே இணுவில் கௌரி அம்பாள் மீது திருப்பள்ளி எழுச்சி, திருவூஞ்சல் ஆகிய நூல்களை இயற்றியுள்ளார். திருப்பள்ளி எழுச்சி நூலுக்கு ஒரு பெரியவரிடம் ஆசியுரை வேண்டியபோது அவர் அதனைப் பிள்ளைத்தமிழ் நூலெனக் கருதிவிட்டமையால், அதற்கான ஆசியுரை இவருக்குக் கிடைத்ததாம். ஆகவே இதனை, கௌரி அம்பாளின் ஆணையாகவே கருதி, அன்னைமீது ஒரு பிள்ளைத்தமிழையே இயற்றியுள்ளார் இவ்வம்மையார்.

    இணுவியம்பதியில் கௌரி அம்பாள் தெற்கில் வேப்பமரத்தடியில் குடிகொண்டு வேண்டுவோர்க்கு எல்லா நலன்களையும் அருளி வருகிறாள். இந்த அருமையான நூலிலிருந்து சில நயங்களைக் காண்போமா?

    காக்குங்கடவுளான திருமாலைப் பாடும் வழக்கிற்கு மாறாகப் பரராசசேகர விநாயகரின் காப்புப்பாடலுடன் நூலைத் தொடங்கியுள்ளார். இவையனைத்தும் பலப்பல நயங்களுடன் அமைந்த பாடல்கள்.

    செங்கீரைப் பருவத்துப் பாடலொன்றில்,

    பன்னிருகையுடையான் முருகனின் அன்னையே உமையே
    குன்றக்குற நாயகி வள்ளியும்
    தேவகுஞ்சரியும் வந்து வந்து
    கன்னத்தில் முத்தமிட்டுக்செல்லுகிறார் கண்ணே
     …….. ………… …………
    ……… ஆடுக செங்கீரை

    எனும் வரிகள் புதுவிதமான கற்பனை நயத்திற்குச் சான்றாகும். உமையென்னும் மாமியைக் குழந்தையாக்கி, அவளுடைய மருமகள்கள் வந்து கொஞ்சுவதாகச் செய்த கற்பனை ரசிக்கத்தக்கது.

    மீனாட்சி, அபிராமி, காமாட்சி, என அம்பிகையின் பல அவதாரங்களையும் ஆங்காங்கே பொருத்திப் பாடியுள்ளார். பல தொன்மங்களும் பிள்ளைத்தமிழ் இலக்கணத்திற்கேற்ப ஆங்காங்கு பொருந்திநின்று அழகு செய்கின்றன.

    முத்தப்பருவத்துப் பாடலொன்று: சிவபிரான் தன் காலால் செய்ததொரு செயலுக்கீடாக அம்பிகை காலால் தட்டி மகிஷாசுரனை வதம்செய்த செய்தியையும் சந்த நயத்துடன் போற்றுகிறது.

    எட்டிக்காலால் உதைத்துக் காலனைக்
    காலம் செய்த சிவனார் பாகத்து
    அமர்ந்தவளே அகமகிழ்ந்து முத்தந்தருகவே
    தட்டிக்காலால் மகிஷனை வதம்செய்த தேவி
     ……………………………….
    ……….. முத்தந் தருகவே.

    குமரகுருபரர் மீனாட்சியம்மையை, ‘துறைத்தீந்தமிழின் ஒழுகு நறுஞ்சுவையே’ எனப் பாடியது போலவே இதிலும் ‘தெள்ளுதமிழ்ப் புலவோர் நாவிருக்குந் தமிழே வருக’ என்றும், சங்கமிருந்த தாயே என்றும், கன்னித்தமிழே வருக என்றும் பல பாடல்களில் அமைந்துள்ளதைக் கண்டு களிக்கலாம்.

    ‘பெண்குலங்காக்க வருக’ எனச் சிறப்பாக மகளிருக்கான வேண்டுதலை முன்வைப்பதனையும் காணலாம்.

    அம்புலிப்பருவத்தின் பாடலொன்றில், அம்புலிக்கு அச்சுறுத்தலாக ‘தண்டம்’ எனும் உபாயத்திலமைந்த பாடலில்,

    ‘மனிதர் ஏவும் ஏவுகணை தாக்குமுன்னம் அம்புலீ
    அம்பிகையுடன் விளையாடவாவே’ எனவும் பாடியுள்ளார். இது நவீன யுகத்திற்கேற கருத்தாகக் காண்பது மகிழ்ச்சியளிக்கின்றது.

    மொத்தத்தில் மிக இனிய அருமையான நூலிதாகும்.

                                                               ————————–

    2. தெல்லிப்பழை ஸ்ரீ துர்காதேவி பிள்ளைத்தமிழ்

    இது 1999-ல் அருட்கவி சீ. விநாசித்தம்பிப் புலவரால் ஆக்கப்பட்ட நூலாகும். இவர் ஒருமுறை இவ்வன்னையின் கோவிலுக்குச் சென்றபோது அவரது நாவில் அன்னை அட்சரமெழுதி, நெற்றியிலே திருநீறும் பூசினாளாம். பின்னரே இவர் அன்னைமீது பல நூல்களை இயற்றினார். இவரே 1974-ல் பருவத்துக்கொரு பாடல்வீதம் ஆண்பால் பிள்ளைத்தமிழுக்குரிய பருவங்களால் இவ்வன்னைமீதே ஒரு பிள்ளைத்தமிழ் நூலைப் பாடியுள்ளார். இரண்டாவது பாடிய நூல் பருவத்திற்குப் பத்துப்பாடல்கள் வீதம் பெண்பால் பிள்ளைத்தமிழாக அமைந்துள்ளது. இவையனைத்தும் அம்மையின் அருளே எனலாம்.

    இனி, சில பாடல்களின் நயங்களைக் கண்டு மகிழலாம். தமிழ்மொழியின் நயங்களை அன்னைக்கு அலங்கார அணிகளாகச் சூடும் பாடல்கள் பல இந்நூலில் காணக்கிடைக்கின்றன.

    சங்கத்தமிழ் உலவும் சந்தன வீதியுடையதாகப் புலவர் துர்க்காபுரத்தைக் குறிப்பிடுகிறார். குழந்தை முருகனைத் தம் மடியில் கிடத்தி, அவனுடைய மழலைமொழிகளைக் கேட்கும் அம்பாளை,

    “சங்கத்தமிழின் முதுதலைவி
    தமியேற் கிரங்காய் தாலேலோ
    சந்தன வீதித் துர்க்கைபுரச்
    சாந்தினி தாலோ தாலேலோ” என்பார் ஒரு தாலப் பாருவப் பாடலில்.

    ‘சைவமுயர் தெல்லிநகர்த் துர்க்காபுரத்திறைவி’ எனவும் சப்பாணிப் பருவப் பாடலில் போற்றுவார்.

    அம்புலிப்பருவத்து அழகான பாடலொன்று: மதி என்பவன் சந்திரன். இது சந்த்ரரூபியாகிய பராசக்தியையும் குறிக்கும் வண்ணம் இசைத்த பாடலொன்று.

    திருஞானசம்பந்தருக்குத் தன் முலைப்பாலையூட்டுவித்துப் பாடவைத்த ஞான மதி இவ்வம்மை! அபிராமி பட்டருக்காகத் தன் தோட்டினை ஆகாயத்தில் வீசியெறிந்து நிலவாக்கிக் காட்டிய மதி இவள். அரிகேசன் என்னும் தவச்சிறுவனுக்குக் காசியிலே அன்னதாதா, பிராணதாதா, ஞானதாதா எனும் பதவி கொடுத்த மதி. தமன் என்பவன் தீபமேற்றித் தவமிருந்து சிவன்-பார்வதியைப் பார்க்கக்கூடிய கண்களைக் கேட்டான். காசி விஸ்வநாதனும் அன்னை விசாலாட்சியும் அவ்வரத்தைக் கொடுத்தனர். இருவரையும்  பார்த்த தமன் ஒருகண் பார்வையை இழந்தான். அழுது புலம்பினான். மதியான இறைவி அக்கண்ணைப் பொற்கண்ணாக்கினாள். அவனே குபேரன் எனும் அளகாபுரிக்கு அதிபன். வியாசமுனிவனுக்கு சுகரைத் தந்த சிவபிரானின் திருமதியாகிய இவளைப் புறக்கணித்து மதி கெட்டலையாதே அம்புலியே! இப்படிப்பட்ட தெல்லிநகர்த் துர்க்கையுடன் வந்து விளையாடுவாய் என விளிக்கும் பாடல்.

    பரவுமுலைப் பால்கொடுத்துப்
    பாடுவித்த ஞானமதி
    பட்டருக்காய்த் தோடெறிந்த
    பழமமிர்த லிங்கமதி
    அரவாக்கி விட்டுணுவை
    ஐங்கரன்சீர் விளக்குமதி
    அரிகேசன் காசியிலே
    அணிவிளங்கச் செய்தமதி
    குருமுகமாய்த் தமனுக்குக்
    குளிர்பொற்கண் கொடுத்தமதி
    குலமுனிவர் வியாசனுக்குக்
    குணச்சுகரைத் தந்தசிவத்
    திருமதியைப் புறக்கணித்து
    செயல்மதிகெட் டலையாதே
    தெல்லிநகர்த் துர்க்கையுடன்
    சேர்ந்தாடாய் அம்புலியே.

    மதி எனும் சொல்லைப் பலமுறை பயன்படுத்திய அரிய பாடலிது. இவ்வாறு படித்து, ரசித்து மகிழப் பல பாடல்கள் இந்நூலில் உள்ளன.

        ————————–

    3. நயினை நாகபூஷணியம்மை பிள்ளைத்தமிழ்

    1977-ல் பன்னூல் வித்தகரான கரவை வ. சிவராசசிங்கம் அவர்களால் இப்பிள்ளைத்தமிழ் நூல் இயற்றப்பட்டு யாழ்ப்பாணம் சைவத் தமிழ்க் கழகத்தாரால் வெளியிடப்பட்டுள்ளது.

    இக்கோயில் எங்கு அமைந்துள்ளது, அதன் சுவையான வரலாறு என்னவெனக் காண்போம். இலங்கையின் நயினைதீவு நாகபூஷணி அம்பாள் எவரும் தன் தோற்றத்தை அறிய முடியாத சுயம்பு மூர்த்தமாக உள்ளவள். இலங்கையின் பூர்வ குடிகள் இயக்கர், நாகர், வேடர் என்பது வரலாறு. இவருள் நாகர்கள் ஆதித்திராவிடர்களான தமிழர்கள். இவர்களது வழிபாட்டுத்தலமாக விளங்கியது நயினாதீவு நாகபூஷணி அம்பாள் ஆலயம். இதன் வேறுபெயர்கள் நாகதீவு, மணிபல்லவம், நாகதீபம், மணித்தீவு எனவெல்லாமாகும். மணிமேகலை எனும் காப்பியத்தில் குறிப்பிடப்படும் ‘மணிபல்லவம்’தான் நயினாதீவு என்பது ஆராய்ச்சியாளர் துணிபு. இது அறுபத்துநான்கு சக்திபீடங்களில் ஒன்றாகிய புவனேஸ்வரி பீடம் என்று அறியப்படுகின்றது.

    இந்நூலிலிருந்து சுவையான சில பாடல்களைக் காணலாம்.

    செங்கீரைப்பருவத்தைப் பாடும்போதில் தவழ்ந்தாடி வரும் குழந்தையின் அணிகலன்கள் எவ்வாறு அசைகின்றன, ஒலிக்கின்றன எனக் கவித்துவமாகப் பாடிக் களிப்பர் புலவர் பெருமக்கள். மார்பிலணி ஆரங்கள் அசைந்தாடும் என்பது வழக்கு. ஒரு பாடலில் நயினை வளர் அம்மை மார்பின்மீது ஆணிமுத்தாரம் மட்டுமின்றி அடியார் பாடும் பாமாலையும் அசைந்தாடுகிறதென்கிறார். இது ஒரு புத்தம்புதிய அரிய கற்பனை!

    …………………………………
    ஐயர்திரு மேனியைத் தழுவிக் குழைக்கவென்
    றமைந்தமணி மார்பகத்தே
    ஆணிமுத் தாரமும் அடியார்பா மாலையும்
    அசைந்திசைந் தொலி செய்தாட
    செய்யமல ரடிதனிற் கிண்கிணி சிலம்பிடச்
    செங்கீரை யாடி யருளே
    தெள்ளுதமிழ் நயினைவளர் கிள்ளைமொழி நாகம்மை
    செங்கீரை யாடி யருளே.

    தாலப் பருவத்தின் ஒரு பாடலும் மிகப் புதுமையான இயற்கைக் காட்சியை விளக்கி, அதனை அம்மையப்பரோடு ஒப்பிட்டுப் போற்றுகிறது. கொன்றைமரத்தின்மீது குருக்கத்தி படர்ந்துள்ளதாம். இவற்றை வெண்மையான மலர்களைக்கொண்ட மல்லிகை சூழ்ந்துள்ளது; இதில் கொன்றை சிவபெருமானையும், பசுமை நிறங்கொண்ட குருக்கத்தி சியாமளை என்னும் அம்பிகையையும், நினைவு படுத்துகின்றன. கொன்றையும் குருக்கத்தியும் இணைந்தது அம்மையப்பர் திருவுருவாகும். இது இவ்விருவரும் முத்தாலான விதானமமைந்த (தொங்கும் மாலைகளான மல்லிகை மலர்கள் முத்துவிதானத்துக்கு உவமை) தேரில் பவனிவருவது போலுள்ளதாம். எத்துணை இனிய கற்பனை! முழுப்பாடலையும் காணலாமே!

    கொத்துக் கொத்தாய் மலர்ந்த பொலங்
    கொன்றை மரத்தின் மீதுமிகக்
    குழைத்துச் செழித்து மணிப் பசுமை
    கொண்ட குருக்கத் திச்செடிபோய்த்
    தொத்திப் படர்ந்து கிடக்க நெடுந்
    தூரமணக்கும் மல்லிகை மேல்
    தொங்க லிட்டுச் சூழ்ந்திருக்கும்
    தோற்றம் நோக்கும் அடியவர்க்கு
    முத்து விரித்த விதான முறு
    முழுமா மணித்தே ரூர்ந்துவரு
    முக்கண் மூர்த்தி நின்னொடருள்
    முகிழ்த்த கோலம் அளிக்கின்ற
    சித்ரப் பொழில்சூழ் நயினை வளர்
    செல்வி தாலோ தாலேலோ
    சிவனார் இடம்வாழ் நாகம்மைத்
    தேவி தாலோ தாலேலோ.

    அடுத்து, வருகைப்பருவப்பாடலொன்று மெய்யடியார்களை எவ்வாறு அன்னை பிறவிப்பிணியினின்றும் நீக்குவாள் என விவரிக்கிறது. அடியவரின் கருத்தினுட் புகுந்து ஞான ஒளி கொடுத்து உய்யும் நெறியைக் காட்டி, கருவில் புகாவகையையும் உணர்த்தியருளுகிறாள் நயினை நாகம்மை!

    கருவிற் புகுதா வகையெனது
    கருத்திற் புகுந்துள் ளொளிபெருக்கிக்
    கதிபெற் றுய்யும் நெறிகாட்டும்
    கதிரே வருக ………………. என்பன பாடலின் சில வரிகள்.

    இது போன்ற எண்ணற்ற பாடல்கள். தமிழன்பர்கள் படித்துப் போற்ற வேண்டிய நூலிதுவாம். தொடர்ந்து மேலும் பல நூல்களைக் காண்போம்.

    (வளரும்)

    Share
  • ஈழம் தந்த பிள்ளைத்தமிழ் நூல்கள் – 2

    ஈழம் தந்த பிள்ளைத்தமிழ் நூல்கள் – 2

    மீனாட்சி பாலகணேஷ்

    பிள்ளையார் மீதான இன்னும் இரண்டு அருமையான ஈழத்துப் பிள்ளைத்தமிழ் நூல்களைக் காணப்போகிறோம்.

    3. குப்பிளான் கற்கரை விநாயகர் பிள்ளைத்தமிழ்

    ஈழநாட்டின் செம்மண் வளமுடைய குப்பிழான்பதி எனும் ஊரானது கலையும் தமிழும் சைவமும் ஒருங்கே வளர்ந்த ஊராகும்.

    ஈழநாட்டிலேயே உள்ள கௌரி அம்மை சமேதரான கேதீஸ்வரப் பெருமானின் திருவாலயத்தினின்றும் கொண்டுவரப்பட்ட  விநாயகர் விக்கிரகங்கள் மூன்றில் ஒன்றைக் குப்பிளான் கற்கரைப் பதியில் பிரதிஷ்டை செய்ததாக வரலாற்றுச் செய்திகள் தெரிவிக்கின்றன. (சிவத்தமிழ் வித்தகர் சிவ. மகாலிங்கம், இந்துசாதனம், 17.08.2010)

    ஆற்றல் மிக்க ஆன்மீகச் சொற்பொழிவாளரான சைவப்புலவர் திரு. ஏ. அனுஷானந்தன் என்ற புலவனார் கற்கரை விநாயகர் பிள்ளைத்தமிழ் எனும் அருமையான நூலை ஆக்கியுள்ளார். இதிலிருந்து நான்கு பாடல்களே நமக்குக் காணக் கிடைத்துள்ளன. அவற்றின் இனிமையை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.

    எந்த நூலைப் பாடுமுன்பும் நூலாசிரியர், விநாயகரை வேண்டித் தன் நூலைக் காத்தருள வேண்டுவார். பின்பு, காப்புப்பருவத்தில் காக்குங்கடவுளான திருமாலை வேண்டுவது மரபாகும். இது விநாயகப் பெருமானைப் பற்றிய பிள்ளைத்தமிழல்லவா? இந்நூலாசிரியர் தமது முதல் பாடலில் பிள்ளையாரின் தகப்பரான சிவபெருமானை வேண்டுகிறார்;

    மயன், மாந்தாதா, மாதுவஷ்டா, மண்டோதரி (இராவணன் மனைவி) என்பவர்களுடன், நவக்கிரகங்களுள் ஒன்றான கேதுவும் போற்றி வணங்கும் சிவபிரான்; சம்பந்தரும் சுந்தரரும் தமிழால் பாடிப் போற்றப்பட்டவர். சீத நெடுநற் பாலாவிக் கேதீச்சரத் தலத்தோனே! 1520ம் ஆண்டளவில் (ஆயிரத்து ஐநூற்றிருப தாண்டளவில்) அழிக்கப்பட்ட கோவிலின் புதைவினின்று கிடைத்த உனது மைந்தனானவனின் பெருமை விளங்கக் காப்பாயே! என அக்கோவிலின், சரித்திரத்தை உள்ளடக்கிப் பொருள்நயம் மிகப் பாடியுள்ளார். யாரோ வெளிநாட்டவர் அரசாண்டபோது சிதைக்கப்பட்ட கோவிலின் இடத்திருந்து கண்டெடுக்கப்பட்ட பிள்ளையார் இவரென்று இதனால் ஒருவாறு ஊகிக்க இயலுகின்றது.

    மயன் மாந்தாதா மாதுவஷ்டா
    மண்டோதரியென் பாருடனே
    கேதுப் பெயரோன் போற்றிசெயக்
    கேடில் ஞானசம்பந்தர்
     ……………………………………
    ஆயுங்காலை ஆயிரத்து
    ஐநூற் றிருப தாண்டளவில்
    பூனைக் கண்ண ரழிகோயில்
    புதையிலிருந்து வந்தநெடும்
    சேயன் உந்தன் மைந்தன்சீர்
    சிறக்கக் காப்பு அருள்வாயே!
    ஆனை வதனன் அரசடியில்
    ஆடிமகிழக் காப்பாயே!

    அடுத்து அழகான வருகைப்பருவப் பாடலொன்று. காணலாமா?

    கரங்களால் தலையில் குட்டிக்கொண்டு காரிய சித்திக்காக உன்னை வேண்டிக்கொள்ள வேண்டுமென்பார்கள்; குடுமியை உடைய தேங்காயைக் கல்மேல் வீசியடித்து உடைத்துச் சிதறுகாய் போட்டு நமது துன்பங்களை நீக்க வேண்டிக்கொள்ள வேண்டுமென்பார்கள். எங்கள் துயரங்கள் அனைத்தையும் விரட்டி ஓட்டி வாழ்விக்க எலிமேல் வருவாய் எங்கோவே! கஜமுகனை உனது தந்தத்தால் பிளந்து அழித்தவனே! திரிபுரத்தைத் தனது நகைப்பினால் எரித்த சிவபிரானின் புதல்வனே வருக வருகவே!

    கரங்கள் மொட்டித் துயர்தலைமேல்
    கவினப் பிடித்து மெய்யாக
    நிரயம் விழினும் நின்னினைவே
     …………………………..
    கரத்தி லேந்துமுடித் தேங்காய்
    கன்மேலடித் துக்கரையில் துயர்
    ………………………………
    வரத்தி லோங்கு கஜமுகனை
    வலிய கோட்டாற் பிளந்தழித்தாய்
    புரத்தை நகையா லட்டவனின்
    புதல்வா வருக வருகவே.

    பிள்ளையார் வழிபாட்டில் தலைமேல் குட்டிக்கொள்வது, பின் தடைகள் நீங்க, கல்மேல் சிதறுகாய் உடைத்தல் எனும் வழிபாட்டு முறைகளைப் பாடலில் இணைத்துப் பதிவு செய்து வைத்தமை அருமையானது.

                                       ——————————–

    4. கனகை விநாயகர் பிள்ளைத்தமிழ்

    அடுத்து நாம் பார்க்கப் போவது கீழ் கரவையிலுள்ள கனகராவளவில் கோவில் கொண்டருளியுள்ள விநாயகப்பெருமான் மீது சிவராசசிங்கம் எனும் அடியார் பாடியுள்ள கனகை விநாயகர் பிள்ளைத்தமிழ் எனும் நூலைத்தான்.

    பிள்ளையார் தொடர்பான அருமையான கதைகளைக் கூறுவதுமான பாடல்களைக் கொண்டது இந்நூல்.  செங்கீரைப் பருவத்திலுள்ள ஒரு பாடல் விநாயகர் மாம்பழம் பெற்ற கதையை உரைக்கின்றது!

    கோலமயில்மீது ஊர்ந்துவரும் பரங்குன்ற வேலன் இந்த உலகை வலம்வருமுன்பே தாய்தந்தையரான சிவமும் சக்தியும்தான் அனைத்து உலகமும் என்று உணர்ந்து, அப்படியே வலமும் வந்து அவர் கையினின்றும் மாங்கனி பெற்ற கனகைவாழ்  விநாயகா! செங்கீரை ஆடுகவே! என வேண்டும் பாடல்.

    கோல நீலம யிலினி லூர்பரங்
    குன்றின் வாழுங் குருபரன் விசைகொடு
    ஞாலந் தன்னை வலம்வரு முன்சிவ
    நாதன் தாதையே சர்வமு மெனவரும்
    வால ஞானத் திறத்தி லவர்தமை
    வலம்வந் தேகனி வாங்கிநம் கனகைவாழ்
    நாலு வாய்ப்பர! ஆடுசெங் கீரையே
    ஞான நாயக ஆடுசெங் கீரையே

    பொதுவாகவே பிள்ளைத்தமிழ் நூல்களில் அவ்வந்தத் தெய்வங்கள் எழுந்தருளியுள்ள தலங்களின் சிறப்புகளையும் பூசை முறைமைகளையும் விளக்கும் செய்திகளையும் பல பாடல்களிலும் கண்டு மகிழலாம்.

    இந்த மரபினையொட்டி இந்நூலில் புலவர் யாழ்ப்பாணத்து வழிபாட்டு மரபை உட்பொதிந்து இயற்றியுள்ள ஒரு பாடலை நாம் சிற்றில் பருவத்தில் காணலாம்.

    யாழ்ப்பாணத்துக் கோயில்களில் புராண படனம் முக்கியமான பங்கு வகித்து வந்துள்ளது. முருகன் கோயில்களில் கந்தபுராணப் படிப்பு சிறப்பாக இடம்பெறும். பௌராணிகர் ஒருவர் செய்யுளைப்பாட, மற்றொருவர் “பொருள் சொல்வது” வழக்கம். இவ்வாறு பொருள் கூறுபவர் சமய, இலக்கிய தத்துவத் துறைகளில் தமக்கிருக்கும் ஆழ்ந்த அறிவை வெளிப்படுத்துவார். அடியார்கள் கேட்டு அருள் வெள்ளத்தில் மூழ்குவர். அனைவருக்கும் அன்னதானமும் அளிக்கப்படும்.

    இப்பாடலில் சிற்றிலிழைத்து விளையாடும் சிறுமியர் அதைச் சிதைக்க முயலும் சிறுவன் விநாயகனை வேண்டுகின்றனர். “சிவன் மகனே! இப் புண்ணியத் திருநாளில் புகழ்வாய்ந்த தில்லைநாத நாவலர், சிலேடைக்கவி ரத்தினம் முதலான சிறப்புவாய்ந்த பௌராணிகர்கள் வள்ளி திருமணம் புராணபடனம் செய்ய இருக்கின்றனர். அதனைக் கேட்க வரும் அடியார்களுக்கு சுவைமிகுந்த உணவை அன்னதானம் செய்யும் பணி எம்முடையதாகும். ஆகவே அது பங்கமாகாதபடி சிறுமிகளாகிய நாங்கள் கையால் கட்டிய (மணல்) சிற்றில்களை அழித்து விடாதே!” என வேண்டுகின்றனராம்.

    பொல்லா வினைகள் தீர்கனகைப்
    புனிதக் கோயில் தனிற்கந்த
    புராண படனமிடம் பெறுமிப்
    புண்ய நாளிற் புகழ்மிக்க
    தில்லை நாத நாவலர்செஞ்
    சிலேடைக் கவிரத் தினமுதலாம்
    சிரேட்ட பௌரா ணிகர்வள்ளி
    திருக்கல் யாணப் படிப்பிற்றம்
    சொல்விற் பனங்காட் டிடவுள்ளார்
    சுவைகூ ரன்னம் அவர்க்களிக்கும்
    தூயகட னுண்டெமக் கிடையில்
    தோன்றி விளையாட் டாக்கருணைச்
    செல்வா கருமம் பங்கமுறும்
    செயலாய்ச் சிற்றில் சிதையேலே
    சிவனார் மூத்த திருக்குமரா
    சிறியேம் சிற்றில் சிதையேலே.

                                                   (சிற்றில் பருவம்)

    அழகும் இனிமையும், ஆன்மீகச் செய்தியும் கொண்டொளிரும் உயர்வான பாடல். நாமும் கனகை பரமானந்த விநாயகரை இருகரங்கூப்பி வணங்கி உலகனைத்தையும் காக்க வேண்டுவோமாக!

    இப்பிள்ளைத்தமிழ் நூல்கள் அனைத்துமே பக்திச்சுவை நிரம்பப்பெற்று, அழகான இனிய தமிழில் பல சுவையான கருத்துக்களை உள்ளடக்கிக் கொண்டு பொலிகின்றன.

    (வளரும்)

    Share
  • ஈழம் தந்த பிள்ளைத்தமிழ் நூல்கள் – 1

    ஈழம் தந்த பிள்ளைத்தமிழ் நூல்கள் – 1

    மீனாட்சி பாலகணேஷ்

    அமுதத் தமிழ்மொழியில் சிற்றிலக்கிய வகைகள் நாள்தோறும் வளர்ந்து பெருகிக் கொண்டிருக்கின்றன. பிரபந்தங்கள் எனப்படும் இவை 96 என்று கூறப்பட்டாலும், பல நிகண்டுகளையும் பிரபந்தங்களையும் இணைத்துப் பார்க்கும்பொழுதில் கிட்டத்தட்ட 196 இலக்கிய வகைகள் காணப்படுவதாக பேராசிரியர் ச. வே. சுப்பிரமணியம் ஆராய்ந்து வெளியிட்டுள்ளார்.

    கலம்பகம், உலா, பிள்ளைத்தமிழ், மாலை இவற்றோடு அம்மானை, ஊசல், வள்ளை, பந்தடி, கும்மி, சாழல், அலங்காரம், வண்ணம், தாலாட்டு, திருவுந்தியார் என இன்னும் பலவற்றையும் குறிப்பிடலாம்.

    ‘குழவி மருங்கினும் கிழவதாகும்’ எனத் தொல்காப்பியம் கூறுவதற்கிணங்க ‘சிறுபிள்ளைகளும் பாட்டுடைத்தலைவர்களாகக் கொள்ளப்படுவர்’ என்பதனால், பிள்ளைத்தமிழ் எனப்படும் பெருமை வாய்ந்த இலக்கியம் மட்டும் நெஞ்சையள்ளும் வகையில் விரிந்து பரந்து எண்களில் பலவாகப் பல்கிப் பெருகி வளர்ந்தும், இன்னும் வளர்ந்து கொண்டும் உள்ளது. காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, எனப் பொதுவான பருவங்களையும், ஆண்பாலுக்கு சிற்றில், சிறுபறை, சிறுதேர் எனும் பருவங்களையும், பெண்பாலுக்கு அம்மானை, நீராடல், ஊசல் எனும் பருவங்களையும் கொண்டு பத்துப் பருவங்களால் அமைவது பிள்ளைத்தமிழ். பிள்ளையின் (குழந்தையின்) வளர்ச்சியைப் பத்து அல்லது அதற்கும் மேற்பட்ட பருவங்களால் போற்றுவது இந்தப் பிரபந்தம்.

    இவ்வகை இலக்கியம் வேறு எந்த மொழியிலும் இல்லாததனால் இது பிள்ளைத்தமிழ் எனும் அருமையான பெயர்கொண்டு, தமிழ் எனும் பொதுப்பெயரே அடையெடுத்துச் சிறப்புப் பெயராயிற்று என்று கதிரகாம பிள்ளைத்தமிழை இயற்றிய சிவன் கருணாலய பாண்டியப்புலவர் கூறுவார்.

    தமிழகத்தைப்போல் ஈழத்திலும் 17, 18ம் பொது நூற்றாண்டுகளில் பல பிள்ளைத்தமிழ் நூல்கள் எழுந்தன. ஈழநாடும் பிள்ளைத்தமிழ் இலக்கியத்திற்குக் குறிப்பிடத்தக்க பங்களிப்புச் செய்துள்ளது. ஈழத்தில் ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்தில் வாழ்ந்த இணுவில் சி. சின்னத்தம்பிப் புலவர் பாடிய இணுவில் சிவகாமியம்மை பிள்ளைத்தமிழ் எனும் நூலே காலத்தால் பழமையானதென அறியப்படுகிறது. ஆனால் இந்நூல் இன்னும் பார்வைக்குக் கிடைக்கவில்லை.

    ஈழத்தில் விநாயகர், முருகன், அம்பிகை ஆகிய தெய்வங்கள் பேரில் பல பிள்ளைத்தமிழ் நூல்கள் இயற்றப்பட்டுள்ளன. இவை யாவும் தமிழின் பலவிதமான நயங்களிலும் சிறந்து விளங்குவன. இக்கட்டுரையின் நோக்கம் இவற்றைப்பற்றி அறிந்து மகிழ்வதற்காகவே!

    விநாயகர் மீது மட்டும் நான்கு பிள்ளைத்தமிழ் நூல்கள் பார்க்கக் கிடைத்துள்ளன. தமிழ்நாட்டில் இயற்றப்பெற்று நாமறிந்த விநாயகர் மீதான பிள்ளைத்தமிழ் நூல்கள் அரும்பாத்தை வேதவிநாயகர்  பிள்ளைத்தமிழ் (இயற்றியவர் பெயர் அறியவில்லை),  கலைசைச் செங்கழுநீர் விநாயகர் பிள்ளைத்தமிழ் (சிவஞான யோகிகள்) ஆகிய இரண்டாகும். இவ்விரண்டும் எவ்வாறு கவிநயமும் பொருள் நயமும் மிகுந்து சிறந்து விளங்குகின்றவோ அவ்வாறே நாம் காணப்போகும் ஈழத்துப் பிள்ளைத்தமிழ் நூல்களும் இனிய, எளிய தமிழில் கற்பனைவளம் செறிந்து காணப்படுகின்றன.

    எந்தவொரு செயலைத் தொடங்கும்போதும் அது இடையூறுகளின்றி நிறைவேற வேண்டி சிவபிரானின் மூத்த மகனான விநாயகப்பெருமானை முதலில் வணங்கிவிட்டே தொடங்குவது வழக்கம். ஆகவே நமது வழிபாடுகளிலும்  அனைத்துச் செயல்களிலும் விநாயகர் முதலிடம் வகிக்கிறார். விநாயகரைப் பற்றி, அவர் தோன்றிய வரலாறு, கதைகள் பற்றி விரிவான விநாயகர் புராணம் உள்ளது. அவ்வையாரும் விநாயகர் அகவல் பாடியுள்ளார். தமிழில் எழுந்த எந்தச் சைவசமய நூலும் விநாயகர் வழிபாட்டுடன்தான் ஆரம்பிக்கின்றது. விநாயகர் எனும் பிள்ளையாருக்குப் பல சிறப்புகள் உள்ளன.

    இத்தகைய சிறப்பு வாய்ந்த பிள்ளையார் மீது ஈழத்திலிருந்து நான்கு பிள்ளைத்தமிழ் நூல்கள் காணக் கிடைத்துள்ளன. இன்னும் கூட இருக்கலாம். காலங்கனிந்து வரும்போது கிடைக்கலாம். இப்போது கிடைத்தவற்றைப் பற்றிப் பார்க்கலாம்.

                                       ——————————————

    1. மட்டுவில் மருதடி தான்தோன்றி வீரகத்தி விநாயகர் பிள்ளைத்தமிழ்

    இப்பிள்ளைத்தமிழ் நூல் மட்டுவில் நா. நல்லதம்பி அவர்களால் இயற்றப்பட்டது. 2014-ல் முதல்பதிப்பு வெளியிடப்பட்டது. கோயில் வரலாற்றைப் பார்த்துவிட்டுப் பின் நூலைப் பார்ப்போம்.

    நாவாலியூர் சோமசுந்தரப்புலவர் என்பவர் மருதடி  விநாயகர் பதிகம் எனும் நூலை இயற்றியுள்ளர். இதனைப் பதிப்பித்த அவர்களின் திருமகளாம் திருமதி வை. மங்கையர்க்கரசி என்பவர் இவ்விநாயகர் கோவிலின் வரலாற்றை எனது பேராசிரியர் முனைவர் திரு. கோ. ந. முத்துக்குமாரசுவாமி அவர்களிடம் கூறியுள்ளார். இதனை முனைவர் ஐயாவின் அருட்சொற்களிலேயே காண்போமா?

    விநாயகக் கடவுள் “அருவமு முருவுமாகி யனாதியாய்ப் பலவா யொன்றாய்ப் பிரமமாய் நின்றசோதிப் பிழம்பு” ஆய் இருப்பார். ஆயினும், அடியார்களுக்கு அருள் சுரக்கும்படி பூமியிலே பல இடங்களிலும் தமது அருட்டிரு மேனியைக் காட்டி வெளிப்படுவார். அங்ஙனம் வெளிப்பட்டருளிய விடங்களில் அன்பர்கள் அவருடைய அருண்மேனித் திருக்குறியை நிறுத்தித் திருக்கோவில் சமைத்து வழிபட்டுவருவர். அங்ஙனம் வழிபட்டுவரும் திருக்கோவில்களில் மருதடியும் ஒன்று.

    இஃது இலங்கைக்கு மணிமுடியாக விளங்கும் யாழ்ப்பாண நாட்டிலே வண்டுபடு தாமரைக் குண்டுநீர்க் குளமும், கொண்டல் கண்படுக்கும் தண்டலை வளனும், காய்குலைத் தெங்கும் தீஞ்சுலைப் பலவும், நெடுஞ்சினை மாவும் தீஞ்சுலைக் கதலியும், கன்னலுஞ் செந்நெற் கழனியும் நிறைந்த அருந்தமிழ் மருதச் செழுந்திணை நலனுமுள, வானினனம் மாறாத மானியம்பதியிலே யாழ்ப்பாணத்துக்குப் போகும் தெருவின் முடக்கில் உள்ள முக்கோணத்திடர் என்னும் இடத்தில் தேனினம் முரலச் செழுந்தேன் பிலிற்ற வானளவோங்கும் ஒரு மருதமரத்தின்கீழ் அமைந்துள்ளது. இது மிகவும் பழையது. யாழ்ப்பாண நாட்டை ஆண்ட தமிழரசர் காலத்திற்கு முன் தோன்றியது என்று பெரியோர் கூறுகின்றனர்; அது எப்போது தோன்றியதென்று அறுதியிட்டுக் கூற முடியாது.

    ஆதியில் அது அடியார் பொங்கல் செய்து பூசிக்கும் இடமாகவே இருந்தது. பின்பு வேளாள மரபில் உதித்த சிவபூசையாளரால் பூசிக்கப்பட்டு வந்தது. இப்பொழுது அந்தணரால் பூசை செய்யப்பட்டு வருகின்றது. இதற்குத் தென்மேற்குப் புறமாகப் பிள்ளையார் குளம் என்னும் பெயருடைய ஓர் திருக்குளமுண்டு. இங்கே ஒருநாளும் குறையாது பொங்கல் வணக்கம் நடைபெற்று வருகின்றது. திருக்கோவில் கிழக்கும் மேற்கும் வாசலும் கோபுரமுமுடையது. வாயில் மேற்கு வாயில். சுவாமிக்கு வீரகத்தி விநாயகர் என்ற பெயருண்டு. தாடொழு மடியவர் நாடொறுங் குழுமி, இங்கிதமொடுபுரி பொங்கல் மண்டபமும், வாய்த்திடு பங்குனி வருநாள் விழவினிற் தீர்த்த நின்றாடும் தீர்த்த மண்டபமும், அணித்தேர் நிறுத்து மணித்தேர் நிலையமும், விழுமிய சிறப்பிற் கழுநீர்க் கூவலும், உண்ணீருதவும் நன்னீர்க்கிணறும், அடியவவர் குழுமும் தெளிபுனற் குளனும், மாவும் மருதும் வன்னி மந்தாரையும் பாமலி செந்நெற் பழன நற்பரப்பும் வீதியிலுடையதாய் இப்பொழுது விளங்குகின்றது. நாட்பூசையும் திருவிழாக்களும் சிறப்பாக நடைபெறுகின்றன.

    விழாக்காலங்களில் அடியவர்கள் திருவீதியில் உடம்பினாலுருளுதல், காவடி எடுத்தல் முதலாகிய தொண்டுகளைச் செய்து விரதமிருந்து வழிபாடாற்றி வருவர். ஆண்டுதோறும் பங்குனித் திங்கள் பதினைந்தாநாள் கொடி ஏறிச் சித்திரைத்திங்கள் முதலாம் நாளில் தேர்த்திருவிழாவும், இரண்டாநாள் தீர்த்தத் திருவிழாவும் நடந்து வருகின்றன. இவையிரண்டின் காட்சி வெகுமாட்சியானது. ஆதிநாட்டொடங்கி அடியார்கள் வேண்டியதை வேண்டிய வண்ணங் கொடுக்கும் அற்புதமான தலமிது வென்று அன்பர்கள் கூறுகின்றார்கள்.‘ (மருதடி விநாயகர் பதிகம்- தாரகை மின்னிதழ்)

    இந்தப் பிள்ளையார் மீதான பிள்ளைத்தமிழ் நூலும் அருமையாகத் தொடங்குகிறது. பிள்ளைத்தமிழ் இலக்கணப்படி காப்புப் பருவத்து முதற்பாடல் திருமால் மீதே அமையும். பின்பு, சிவபிரான், உமையம்மை, ஏனைய தெய்வங்கள் என விளித்துப் பாடப்படுவர். அப்போது அவர்களின் சிறப்புகளும் பெருமைகளும் கூறப்படும். இந்த பிள்ளைத்தமிழ் நூலிலோ வினாயகப் பெருமானின் பெருமைகளைக் கூறி, அத்தகைய பெரியோனைப் பாடுதற்கு விக்கினங்கள் வராமல் காத்தருள் எனப் புலவர் வேண்டுவது ஒரு மாறுபாடான உத்தி. இந்நூலின் காப்புப் பருவத்துப் பாடல்கள் அனைத்துமே பெரும்பாலும் இவ்வண்ணமாகவே உள்ளன.

    செங்கீரைப்பருவத்தின் முதற்பாடல் அழகானது.

                            அம்மையும் அப்பனும் உலகென உணர்ந்து
                                அங்கவர்க் காணாது, அங்கம்புரண்டு
                       வெம்பியும் விசும்பிற் தேடியுங் காணார்
                                விம்மியும் கண்ணீர் மல்கியும்
                       தம்பியோ மயிலேறித் தாவிப் பறந்தான்
                                தாயும் தந்தையும் உலகென
                       நம்பிய மட்டுவில் மருதடி விநாயகன்
                                நலமுடன் செங்கீரை யாடியருளே.

    என ஒரு இனிய தத்துவத்தை உள்ளடக்கிய பாடலிது.

    பின்னும் ‘கைத்தல நிறைகனி’ எனும் திருப்புகழ் வரியையும், அவ்வையாரின் ‘பாலும் தெளிதேனும்’ என்ற பாடல் வரியையும் உள்ளடக்கி யாத்த செய்யுட்களையும் இப்பருவத்தே காணலாம்.

    தாலப்பருவத்துப் பாடலொன்று:

                            தலைபத்தோ னிராவணன் தாய்வணங்க இமயகிரி
                                தனையசைக்க உமையாள் கரம்பற்றுந்
                       தலைமகனே!….. ” எனத் தொடங்குகிறது.

    இராவணன் கயிலையைப் பெயர்க்க அதனை அசைத்தபோது உமையம்மை அஞ்சினாள். சிவபிரானைத் தழுவிக் கொண்டாள். தாய்க்குத் தலைமகனான விநாயகப் பெருமானும் அவளுடைய கரத்தைப் பற்றி ஆறுதலளித்தார் என்பது இனிய கற்பனை! விநாயகப்பெருமான் ஒரு கொம்பன், இரு கையன், மும்மதத்தன், நால்வாயன், ஐங்கரத்தன், ஆனைமுகன் என விளங்குகிறான் என்கிறார் சப்பணிப் பருவப் பாடலொன்றில்.

    வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம்,’ எனவும், திருவாக்கும் செய்கருமம் கைகூடும் செஞ்சொற் பெருவாக்கும் பீடும் பெருக்கும் என்ற பழம் தோத்திரப் பாடல்களின் வரிகளையும் தம் கவிதையில் எடுத்தாண்டுள்ளார் இப்புலவனார்.

    அம்புலிப்பருவத்தை இப்புலவர் எடுத்தாண்டுள்ளது பிள்ளைத்தமிழ் நூல்களினின்றும் வேறுபட்டுள்ளது. வழக்கமாக சாம, தான, பேத, தண்டம் ஆகிய் உபாயங்களால் அம்புலியை குழந்தையோடு விளையாட அழைப்பர். “காசினியிற் பிள்ளைக்கவிக் கம்புலி புலியாம்,” என்ற சொற்றொடரே இதனாற்றான் எழுந்தது எனலாம். இந்நூலில் பிள்ளையாரின் பெருமைகளைக் கூறி, அத்தகைய விநாயகனுடன் ஆடவா அம்புலியே! எனக் கூறுவதாகவே பத்துப் பாடல்களும் அமைந்துள்ளன. எடுத்துக்காட்டாக,

                            கண்டவர் வியப்புறும் வகைஅருணன் ஒளியால்
                                கவினார் ஒளியைப் பெற்றிடும்
                       பண்பினால் நின்னி யொத்திடும் வேழமுகன்
                                மட்டுவிற் பதியினில் மருதமர நிழலமர்
    வெண்டரளக் கொம்பன், வேழமுகத் தெம்பிரான்
                                விநாயகனோ டம்புலீ! ஆடவாவே
                       அண்டரும் பழமறையும் ஓலமிட நின்றஎம்
    ஆனைமுக னொடம்புலீ! ஆடவாவே,‘ என ஒரு பாடல்.

    அடுத்துக் காணும் சிற்றிற்பருவத்திலும், மிகுந்த விருப்பினில் முயன்று கட்டிய அச்சிறு மங்கையர் சிற்றில் சிதையேலே,’ என்றும், தேனிகர் மொழிபகர் அழகியர் செய்சிறு சீர்பெறு சிற்றில் சிதையேலே,’ எனவும், வேண்டுவதாகவே அமைந்துள்ளன.

    சிறுபறை, சிறுதேர்ப் பருவங்களின் பாடல்களும் இவ்வாறே விநாயகர் புகழையே முன்னிலைப்படுத்தி இய்ற்றப்பட்டுள்ளன.

    2. இணுவில் செகராச பிள்ளையார் பிள்ளைத்தமிழ்

    இணுவில் பரராச சேகரப் பிள்ளையார் கோயில் ஈழத்தில் ஜாஃப்னா விலிருந்து 4 மைல்கள் தள்ளி இருக்கும் இணுவில் எனும் இடத்தில் உள்ளது. சுமார் 600- 700 ஆண்டுகள் பழமையான இக்கோயில் ஜாஃப்னா அரசுடன் தொடர்பு வாய்ந்ததாகும். முக்கிய தெய்வம் பரராச சேகரப் பிள்ளையார். 14-15 பொது நூற்றாண்டுகளில் ஜாஃப்னாவை ஆண்ட அரசனான சிங்கைப் பரராஜசேகரனால் இக்கோவில் கட்டப்பட்டது. தான் எக்காரியத்தைத் தொடங்கு முன்பும் இக்கோவிலில் வழிபட்டுச் செல்வது அவனுடைய வழக்கம். இதனை மடத்து வாசல் பிள்ளையார் கோவில் எனவும் அழைப்பார்கள்.

    இந்தப் பிள்ளையார் மீதான பிள்ளைத்தமிழ் நூலானது ச. வே. பஞ்சாட்சரம் எனும் புலவரால் 1988ல் இயற்றப்பெற்றதாகும். இந்தப் பிள்ளையார் இவருடைய குலதெய்வமாவார். தன்மீது பிள்ளைத்தமிழ் பாடுமாறு பிள்ளையாரே இவருடைய கனவில் வந்து ஆணையிட்டார்; அதனால் இதனைப் பாடினார் என அறிகிறோம்.

    காப்புப் பருவத்தில் வழக்கம்போலப் பல கடவுளர்களையும் அழைத்துக் குழந்தையைக் காக்க என வேண்டுகிறார் புலவர்.

    செங்கீரைப் பருவத்துப் பாடல்களுள் ஒன்று  ஈழத்துக் கோயில் விசேடங்களின்போது நடக்கும் பலவகையான காவடியாட்டங்களையும், பிரதட்சிணம், தீமிதிப்பு ஆகிய வேண்டுதல்களை விளக்குகிறது. இப்படிப் பலவகையான வேண்டுதல்களை நிறைவேற்றி பக்தர்கள் கொண்டாடும் தந்தமுகனே! தம் தலையிற் குட்டிக்கொண்டு உன்னை வழிபடுவதல்லது உன் தலையிலேயே குட்ட வரும் (கோவில் சொத்தைக் கொள்ளையடிப்பவர்கள் எனப் பொருள் கொள்ளலாமா?) மனிதர்களும், மண், பெண், பொன் ஆகியவற்றால் மதிகெட்டவருமாகியோரின் ஆட்டத்தைக் கண்டு அவர்களை நெறிப்படுத்துபவனே! செங்கீரையாடுக! என வேண்டுவதாக அமைந்த பாடல். பொதுவாக அனைத்துப் பாடல்களுமே இத்தொனியிலேயே அமைந்து இயற்றியவரின் மனக்கிலேசத்தையும் தாபத்தையும் வெளிப்படுத்துகின்றன. அதைத் தணிவித்து அருள்பவன் செகராசப்பிள்ளையார் எனுங்கருத்து வெளிப்படுகின்றது.

    பறக்குங் காவடி, துள்ளாட்டம்
                                பல்குங் காவடி, பாலமுதம்
                       நிறைக்குங் காவடி, பிரதட்டை
                                நிகழ்த்துங் காவடி தணல்பொங்கும்
                       தெறுந்தீ மிதிப்பு முதற்பத்தி
                                சிறக்கும் வைராக் கியர்ஏத்தும்
                       கறந்த பால்வெண் தந்தமுகா!
                                கையால் தம்தலை தமில்குட்ட
                       மறந்துன் தலையிற் குட்டவரும்
                                மண்,பெண், பொன்னில் குலைந்தவர்கள்
                        திறங்காண் செகரா சக்குருவே!
                                சிறுதளி இணுவை மாமன்னா!
                       முறம்பயில் செவிகள் மொய்த்தலைய
                                முக்கண்! ஆடாய் செங்கீரை!
                       வறங்கெட மாரி வான்பொழிய
                                மகிழ்ந்தெழுந் தாடாய் செங்கீரை!

    இன்னும் ஒரு பாடலைக் காண்போம். சொன்னயமும் கவிதை நயமும் மிகுந்த ஒரு தாலப் பருவப்பாடல்:

    முப்புரமெரிக்கச் சென்ற சிவபிரான் பிள்ளையாரின் அருளை முதலில் பெற்றே சென்றான்; செகராசப் பெருமானே! பிரணவமாகிய உன்னையீன்ற பிடிபோலும் உமையன்னை உன்னைப் பூந்தொட்டிலில் வளர்த்தித் தாலாட்ட நீ கேட்டுச் சிரித்தபடி உறங்குவாயாக எனும் அழகான பாடல்:

                            மூன்று புரமெரிக்க முக்கண்ணன் போங்காலை
                                ஆன்ற மகனாமுன் அருள்பெற்றான் என்பார்கள்!
                       ஊன்றி உனையெண்ணும் உத்தமர்நெஞ் செல்லாமே
                                தோன்றி இனிமைபல தூண்டச் செகராசக்
                       கோன்றன் கோவில் குடிகொண் டமர்வோனே!
                                ஈன்றாள் பிரண் வமென்னும் பிடியானை
                       போன்றாள்- உமையாள்- பூந்தொட்டி லாட்டவெழுந்
                                தேன்பா யிசைகேட்டிச் சிரித்துறங்கு தாலேலோ!

    (வளரும்) 

    Share
  • புதிய பிள்ளைப்பருவங்கள்-9

    புதிய பிள்ளைப்பருவங்கள்-9

    மீனாட்சி பாலகணேஷ்

    குருகுல வாசம்/ கல்வி கற்றல் (ஆண்பால் பிள்ளைத்தமிழ்)

    ஒருவர் தம் வாழ்வில் முந்தியிருந்து சிறப்படைந்து விளங்க, கல்விகற்றல் பெரிதும் இன்றியமையாததாகும். ஆண்மக்களாயின் பழங்காலத்தில் அவர்களைக் குருகுலவாசம் செய்ய அனுப்புவது ஒரு வழக்கமாக இருந்து வந்தது. ஆசிரமத்தில் குருவுடன் தங்கி, அவரும் அவர் மனைவியுமிடும் பணிகளைச் செய்து உதவி, பின் கல்வியையும் கற்றொழுகி, அவற்றிற் சிறந்து வீடுதிரும்புதல் வழக்கிலிருந்து வந்தது.

    கிருஷ்ணன் சந்தீபனி முனிவரிடம் கல்விகற்க அவருடைய குருகுலத்தில் இருந்ததைப் புராணங்களில் நாம் குருகுல வாசமாகக் காண்கிறோம். பதின்மூன்று வயதாகும்வரை கோகுலத்தில் நந்தகோபன் வீட்டில் யசோதையின் செல்லக்குழந்தையாக வளர்ந்த கிருஷ்ணன் கம்சனைக் கொன்று தன்னைப் பெற்ற தாய்தந்தையரான தேவகி, வசுதேவர்களைச் சிறைமீட்கிறான். அதன்பின் வசுதேவர் கிருஷ்ணனுக்கு உபநயனம் செய்விக்கிறார். கிருஷ்ணனையும் பலராமனையும் முறையாகக் கல்விகற்க சந்தீபனி முனிவரின் ஆசிரமத்திற்கு வசுதேவர் அனுப்பி வைக்கிறார் எனவும் அறிகிறோம். இங்குதான் கிருஷ்ணன் பிற்காலத்தில் தன் உயிர்த்தோழனான சுதமா எனும் குசேலரைச் சந்திக்கிறான்.

    இவர்கள் கல்விகற்று வந்த நாட்களில் ஒருநாள் குருவின் மனைவியார் அடுப்பெரிக்க, உலர்ந்த விறகினைக் கொண்டுவருமாறு இவர்களிடம் கூற, இவர்களும் காட்டினுள் பயணிக்கின்றனர். விறகினைத் தேடிக்கொண்டு நீண்ட தூரம் சென்றுவிட்டனர். நீண்டநேரமும் ஆகிவிட்டது. மின்னல், இடியுடன் கூடிய பலத்த மழை பெய்கின்றது. மழையில் வழி தவறித் தவறான பாதையில் சென்று பயத்துடன் ஒரு மரத்தினடியில் நிற்கின்றனர். இவர்களைக் கிருஷ்ணனே தைரியமூட்டி, கொடிய வனவிலங்குகளிடமிருந்து தப்பிக்க மரக்கிளைகளில் ஏறிக்கொண்டு வாகாக இருக்குமாறு செய்விக்கிறான். பொழுது புலர்ந்ததும் சீடர்களைக் காணாமல் குரு சந்தீபனி முனிவரே கவலைகொண்டு அவர்களைத் தேடிக்கொண்டு கானகத்துள் வந்து அவர்களை ஆசிரமத்திற்கு அழைத்துச் செல்கிறார்.

    கிருஷ்ணனும் பலராமனும் மிகக்குறைந்த காலத்திலேயே, அதாவது அறுபத்தொன்று நாட்களிலேயே தாம் கற்க வேண்டிய அனைத்தையும் கற்றுத்தேர்ந்தனர். குருவின் ஆசிரமத்தை விட்டுச் செல்லும் முன்பு குருதட்சிணையாக அவருக்கு என்ன வேண்டும் எனக்கேட்டு அதனையளிப்பது சீடர்களின் வழக்கம். ஆகவே கிருஷ்ணனும் பலராமனும் சந்தீபனி முனிவரிடம் குருதட்சிணை பற்றி அவரையே கேட்டனர். குருவிற்கு கிருஷ்ணன் திருமாலின் அவதாரம் எனத் தெரியும். நீண்ட நாட்களின் முன்பு கடலில் நீராடச் சென்ற அவரது ஒரே மகனை ஒரு அரக்கன் கடலினுள் இழுத்துச் சென்றுவிட்டான். அவனை மீட்டுத்தர இயலுமானால் அதுவே தாம் வேண்டும் குருதட்சிணை என்றார் குரு.

    கிருஷ்ணன் பலராமனுடன் பிரபாச கடற்கரைக்குச் சென்று அங்கு சங்காசுரன் எனும் அசுரனைக்கொன்று அவனால் விழுங்கப்பட்ட சிறுவனை மீட்டு வருகின்றான். சங்காசுரனிடமிருந்து பாஞ்சசன்னியம் எனும் சங்கினையும் எடுத்துத் தனதாக்கிக் கொள்கிறான். தன் மகனைத் திரும்பப்பெற்ற குருவும் பெரிதும் மகிழ்ந்து கிருஷ்ணனையும் பலராமனையும் ஆசிர்வதிக்கிறார் எனப் பல புராணங்கள் கூறுகின்றன.

    கற்கவே கசடறக் கல்வியைக் குருவிடம்
    சந்தீபனி யாசிரமத்திற்
    றந்தைதர மாசற்ற மற்ற சிறாருடன்
    மனமகிழ்ந் துறைந்தங்கு

    பொற்பாத மலர் பதித்துப் பூமகளின்
    துணைவனே! பதுமநாபனே!
    பொன்மகள் ருக்குமிணி கேள்வனே! கேசவனே!
    பங்கமின்றிக் கல்விச்செல்வம்
    பெற்றிடவே பார்த்தனுக் குக்கீதையு ரைத்தகண்ணனே!
    பெருமைமிகு அண்ணன்
    பலராமனு நண்பன் சுதாமாவு முடனிருக்க
    பேரானந்த முடன்கல்வி

    கற்றிடவே கருத்துடன் ஆங்கிருந்து ஆசானுமன
    மகிழவவர் மனையாளும்
    தமக்கிட்ட பணிகளைச் சிறக்கச் செய்து
    குருகுலத்தே இருந்தவனே!       1.

                                       ————

    பங்கமின்றிக் கற்றகல்வி பலித்திட ப்
    பக்குவமாய்ப் பாடம்சொன்ன குருவுக்காகப்
    பரிவுடனே காணிக்கை யளித்திடவே
    பாங்காகப் பரந்தாமன் வினவிடவே

    துங்கமுனியும் தவமிருந்து பெற்றமகன்
    தன்னை யொருகட லரக்கன்
    கவர்ந்து சென்றதைக் கவலையுடன்
    கூறிடவே கண்ணன்பல ராமனுடனே

    பொங்கிடும லைகள்புரண்டெ ழும்பெருங்கடலுள்
    புகுந்தே யக்கடலினிடை புதுமையாகவே
    பஞ்சசன்னிய வரக்கன்றன்னைப் பங்கஞ்செய்து
    புங்கவரின் புதல்வனை மீட்டெடுத்தச்

    சங்கமதனைக் கைப்பெற்று சாதனைசெய்து
    சயத்துடனே குருவினிடம் வந்தடைந்தான்
    சாகசஞ் செய்துமீட்ட சிறுமகனை
    சந்தீபனி முனிமகிழக் கொடுத்திட்டான்.    2.

                                      ———————-

    சொற்ப தினமான பத்தாறு நாட்களிலே
    அற்பு தமாய்க் கற்றகல்வி அருமையாகவே
    கற்ப துவுங்கேட்ப துவும்பலித மாகவே
    பற்ப நாபன் திருவடிகள் பணிந்திடுவமே!            3.

                                ——————-

    இப்பாடல்களில் கிருஷ்ணன் குருகுலவாசம் செய்து கல்வி கற்றதனைக் கண்டோம்.

    இத்தகைய பிள்ளைப்பருவங்கள் காண்போர் கருத்திற்கேற்பவும், எண்ணுவோர் எண்ணத்திற்கிணங்கவும் இன்னும் பலவாகக்கூட இருக்கலாம். கடந்த ஒன்பது அத்தியாயங்களில் என் அறிவிற்கெட்டியவாறு நான் சிந்தையில் எண்ணிக் களித்த பருவங்களைப் பாடிக் களித்தேன். பகிர்ந்தும் கொண்டேன். இத்துடன் இந்தத் தொடரை நிறைவு செய்கிறேன். படித்து ரசித்த வாசக உள்ளங்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    (நிறைந்தது)

    Share
  • போர்க்கலைகள் பயிலல் – 8

    போர்க்கலைகள் பயிலல் – 8

    மீனாட்சி பாலகணேஷ்

    (புதிய பருவங்கள்- ஆண்பால் பிள்ளைத்தமிழ்)                   

    பாடலே பெறாத புதிய பிள்ளைப்பருவங்கள் எனும் இத்தொடரில் நாம் வளர்ந்துவரும் பெண்மக்கள் சிறுபருவத்திலிருந்தே விளையாட்டாகவோ உண்மையாகவோ பயிலும் கலைகளைக் கண்டோம். இப்போது ஆண்மக்களுக்கான பருவங்களைக் காணலாம். பிள்ளைத்தமிழ் இலக்கியங்கள் பெரும்பாலும் கடவுளர்கள் மீதே (முருகப்பெருமான், திருமாலின் அவதாரங்கள்) பாடப்பட்டுள்ளன. சிலவே அரசர்கள் மீது பாடப்பட்டவை (குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ், முதலியன). இதில் வியப்புக்குரிய செய்தி என்னவெனில் முருகன், திருமால், அரசன் குலோத்துங்க சோழன் ஆகியோரின் வீரதீரப் பிரதாபங்கள் பல இடங்களில் பல பருவங்களில் பொருத்திப் பாடப்பட்டுள்ளன. பிள்ளைத்தமிழுக்கு இலக்கண நூல்கள் வகுத்துக் கூறும் பல பருவங்களுள் ‘கச்சினொடு சுரிகை காமுறப்புனைதல்’ என்பதும் ஒன்றாகும். இதனைக் கதிரகாமப் பிள்ளைத்தமிழ் ஆசிரியர் ஒருவரே மூன்றே மூன்று பாடல்களில் உடைவாள் செறித்தல் என்று நயமுறப் பாடியுள்ளார். (உடைவாள் செறித்தல், மீனாட்சி பாலகணேஷ், வல்லமை இதழ்)

    எனது குறுகிய வாசிப்பில், அரச குடும்பத்து ஆண்மக்கள் போர்க்கலை பயில்வதனை எந்தக்காப்பியத்திலும் விளக்கியதனைப் பற்றி அறியேன். தெரிந்த பெரியோர்கள் சுட்டிக்காட்டினால் பெரிதும் நன்றி பாராட்டுவேன்.

    எந்தக்கலையையும் இளம்வயதிலேயே குழந்தைகளுக்குப் பழக்குவார்கள். கல்வி, இசை, நடனம், சித்திரம், சாத்திரங்கள் முதலியன. போர்க்கலை மட்டும் இதற்கு விதிவிலக்கல்லவே! ஆகவே கார்த்திகைப்பெண்களால் வளர்க்கப்பட்டு வரும் சிறுமுருகன், வில், வாள்வீச்சு பயின்று, குதிரை, யானையேற்றம் பயில்வதனைப் பாடி மகிழப் போகிறோம். யார் முருகனுக்கு ஆசான்? அவரைப் பெயரிடாமல் ஆசான் என்றே கூறுவோம். தந்தைக்கே ஆசானான அண்ணலுக்கு நாம் யாரை ஆசான் எனக்கொள்வதாம்?

    நீலமயில் மீதுலவு நெட்டிலைவேல் மயிலோனே!
    ஆலகால முண்டவனின் அருள்பெரு குங்குமரனே!
    வேலைவீசி கிரவுஞ்சவெற்பைப் பொடித்தவ னேகடம்ப
    மாலைதவழ் மார்பனே! மடக்குறத்தி மணாளனே!

    தாயுமையாள் கைதந்த ஆயுதத்தைக் கொண்டந்த
    மாயவவுணர் கூட்டத்தைச் செற்றொழித் துத்தொல்லை
    யோயவெஞ்சி னங்கொண்டக் கூட்டத்தை வேரறுத்த
    மாயவன்திரு மருகா! மகிழ்வள்ளி மணவாளா!

    போர்க்கலை பயின்றதெங்கோ! பயிற்றுவித்த துவும்யாரோ!
    கார்க்காலமே கங்கள்போலெழு கயவன்மேற் கணையேவி
    யேர்க்கோல உலகமது எழில்கொண் டேற்றமுற்றிலங்க
    ஆர்க்கும்நல் சேவறனை யிரதத்தின் கொடிகொண்டாய்!

    வீரத்திரு மகனே! வெற்றிவடி வேலனே!
    சக்தியுமை பாலனே!
    ஆரத்தழு விடவுன் அருமைத் திருவடியை
    ஆவல்மிகப் பெருகுதே!
    நேரம்சென் றிடுதே! வீரம் தனைப்பாட
    என்நாவால் இயலாமை
    யோரம்நின் றுந்தன் ஓங்கும் வீரத்தை
    ஒண்டமிழால் போற்றுவேன்!

    எத்தனையோ முறை முயன்றும் முருகப்பெருமான் போர்க்கலை பயின்ற திறத்தைப் பாடல்களில் வடிக்க இயலவில்லை. இதுவும் முருகன் திருவிளையாடல் போலும்! என் இயலாமையைக் கூறியே அவன் போர்த்திறத்தைப் போற்றிச் சில பாடல்கள் புனைந்துள்ளேன். அனைத்தும் அவன் கருணை!

    Share
  • புதிய பிள்ளைப்பருவங்கள்-7

    புதிய பிள்ளைப்பருவங்கள்-7

    மீனாட்சி பாலகணேஷ்     

    சமையல் பழகுதல்-7        

    (புதிய பருவங்கள்- பெண்பால் பிள்ளைத்தமிழ்)

    புதிய பருவங்களில் அடுத்து நாம் காணப்போவது சமையல் பழகுதல் என்பதாகும். பெண்குழந்தைகள் ஐந்தாறு வயதுச் சிறுமிகளாக உள்ளபோது பாவனையாகப் பொய்தல் விளையாட்டு விளையாடுவார்கள். மூன்று கற்களை அடுப்பாக்கி, சிவந்த நிறம் கொண்ட மாதுளை மலர்களை நெருப்பாகக் கொண்டு, சிறு மண்சட்டிகளையோ அல்லது பெரிய சங்குகளையோ பானையாகக் கொண்டு அதில் ஆற்றுநீரை உலைநீராகப் பெய்து, மணலையோ சிறு கற்களையோ அரிசியாக இட்டுச் சோறாக்கி விளையாடுவர்.

    இவற்றை அழித்துச் சிதைக்க வரும் சிறார்களை அவ்வாறு செய்யாதிருக்க வேண்டுவதனை ஆண்பால் பிள்ளைத்தமிழின் சிற்றிற்பருவத்தில் முன்பே கண்டோம். இது தொடர்பான பல விளையாட்டுக்களையும் கண்டுள்ளோம். பத்து ஆண்டுகள் நிரம்பிவரும் சிறுமி உண்மையான சமையல் செய்வதனை அன்னையுடன் அருகிருந்து கற்றுக் கொள்வாள். இவளே பின்பு சிறு பெண்குழந்தைகளுடன் விளையாடும்போது உண்மைச் சமையலின் சில பகுதிகளைத் தானே மேற்கொண்டும் செய்வதுண்டு. இதனையும் இந்தப் பொய்தல் விளையாட்டில் காண்கிறோம்.

    சமையல் செய்வதனை ஆசையாகக் கற்றபெண் திருமணம் முடிந்து கணவனுக்குத் தான் செய்யும் புளிப்பான மோர்க்குழம்பை அவன் சுவைத்து உண்டதில் மகிழ்ச்சி அடைந்ததனை ஒரு சங்கப்பாடல் நமக்கு விளக்குகிறது.

    சமையல் செய்யும் அவசரத்தில், புளித்த தயிரை விரல்களால் பிசைகிறாள்; கழுவ நேரமுமின்றித் தனது ஆடையிலேயே துடைத்துக் கொள்கிறாள். ஈர விறகோ என்னவோ, அடுப்பும் வேறு ஒத்துழைக்க மறுத்து, புகை மண்டுகிறது; அவளது குவளைமலர் போலும் கண்களில் புகுந்து தொல்லை செய்கிறது! இவ்வாறெல்லாம் பாடுபட்டுச் சமைத்த இனிய சுவையான மோர்க்குழம்பைக் கணவன் ‘நன்றாக உள்ளது,’ எனக்கூறிச் சுவைத்து உண்கிறான். இப்பெண்ணின் முகம் நுட்பமான மகிழ்ச்சியை அடைந்து மகிழ்ந்தது – என்று செவிலித்தாயின் கூற்றாக அமைந்த குறுந்தொகைப் பாடல்.

                                 முளிதயிர் பிசைந்த காந்தண் மெல்விரல்
                                கழுவுறு கலிங்கங் கழாஅ துடீஇக்
                                குவளை யுண்கண் குய்ப்புகை கமழத்
                                தான் றுழந் தட்ட தீம்புளிப் பாகர்
                                இனிதெனக் கணவ னுண்டலின்
                                நுண்ணிதின் மகிழ்ந்தன் றொண்ணுதன் முகனே1.

    இவ்வாறெல்லாம் இல்வாழ்க்கைக்குத் தம்மை உருவாக்கிக் கொள்ளும் இளம்பருவத்தின் ஒரு இனிய கட்டமே சமையல் பழகுதலாகும். நாம் இப்போது முற்றும் வித்தியாசமாக, உலகுக்கே படியளக்கும் அன்னை உமையவளாம் அன்னபூரணி தன் இளமைப்பருவத்தில் எவ்வாறு சமையல் பழகினாள் எனப் பார்த்து மகிழலாமா?

    மணம்புரிந்து கொண்ட பரமனுடன் இல்வாழ்க்கைக்குத் தயாரான மங்கை அன்னபூரணியிடம் பரமன் இருநாழி நெல்லை மட்டுமே அளித்து, “நீ உலகத்தோர் உய்யுமாறு முப்பத்திரண்டு அறங்களையும் வழுவாமல் செய்வாய்,” என்று அன்புடன் கூறிவிட்டான். அவளும் தனது கருணையினால் பரமன் கூறியவாறு அனைத்துலகங்களையும் அன்னமும் மற்றனைத்தும் குறைவறத் தந்து புரந்தளித்துக் காப்பது சுவர்க்கத்தையும் மோட்சத்தையும் தரும் காசிமா நகரில் அன்னபூரணியாக இருந்துகொண்டு தானே அன்றோ!

                            பொன்னனைய பூவையுனைப் போற்றிப் புகழும்
                                பித்தன்பே ரருளான்
                       மன்னுலகை யெலாம்நீ மகிழ்ந்துபு ரந்தளிக்க
                                விருநாழி நெற்றந்து
                       சொன்னசொற் றவறாது சுவர்க்க மோட்சந்தருங்
                                காசிமா நகருறையு                 
                       மன்னபூர ணித்தாயே! அன்னமளித் துலகை
                                யளித்த ருள்வாயே2!

    தான் உயிர்களைப் புரக்க ஆக்கிய இன்னமுதில் ஒரு பங்கினை ஐயன் தன்னிடமே ஏந்தி நிற்கும் சட்டியிலும் படைக்கிறாள் தாய் அன்னபூரணி! சங்குவளையலை அணிந்த அவள் (மணமான பெண்கள் சங்குவளைகள் அணிவது வட இந்திய வழக்கம்) சிற்றில் விளையாடிய காலத்தில் சமையல்கலையைப் பழக்கிக் கொண்டாள்; அவள் ஐயனின் இடப்பாகத்தில் வாழும் உமையவள்; வாராணசி நகரிலுறையும் அன்னபூரணித்தாய்!

                            அங்கர மலர்கொடு ஆக்கிய அடிசிலை
                                அன்புடன முதமென
                       சங்கர னேந்திய சட்டியில் வட்டிக்கும்
                                சங்குவளைக்  கையளே!
                       சங்கரி யே!சிற்றில் பயில் சுந்தரியே
                                எமைவாழ் வித்திடுமையன்
                       பங்கில் வாழுமையே வாராணசி நகருறை
                                யன்னபூ ரணியளே3!

    இப்பூவுலகில் நான் உனக்கொரு விளையாட்டுப் பாவை (பொம்மை!) தானே! ஆகவே என்னை நீ சீராட்டி வளர்த்து, பல நலங்களையுமளித்தருளி, வாழ்வில் முன்னேற நம்பிக்கையொளி தந்து நல்ல எண்ணங்களுடன் இருக்க அருளுகிறாய். தேனும் பாலுமான நற்பொருட்களைத் தேடியெடுத்து என் வாழ்வை இனிதாக்கி, அது திகட்டாத வண்ணம் அமுது செய்விக்கிறாய். ஆதரவு தருகிறாய். உனது மானின் விழிகளை நிகர்த்த கண்களால் என்னப் நோக்கி இந்த மாநிலத்தில் நான் மயங்கி விழாமல் காப்பாற்றி மதி, நிதி, நலம் அனைத்தையும் குறையின்றிக் கொடுப்பவள் நீயே எமக்கு வாய்த்த ஒரு பெருஞ்செல்வம். உன்னிடம் கொண்ட குறையற்ற அன்பினால் உடல் உயிர் அனைத்தையும் உனக்கேயளித்து வாழும் அடியார்களுக்கு உன் கருணையால் வீடுபேற்றையும் இறுதியில் தரும் உமையவளே! உன்மத்தனாம் சிவனின் அருளென விளங்குபவளே! (காசிமாநகர் வீடுபேறு தருமிடமாதலால் அங்கு வாழும் உமையான அன்னபூரணி வீடுபேறு தருபவளென்பது பெறப்படும்!).

                            நானொரு பாவையெனை நன்றாகச் சீராட்டி
                                நானிலத்தே நலம்பலவு மளித்து
                           நாளும் பொழுதும் நம்பிக்கை யொளிதந்து
                                நல்லெண் ணங்கூட்டி வைத்து
                       தேனொடு பானமுத மானனற் பொருட்களை
                                தேடியெடுத் துச்சிறுகூழ் சமைத்து
                          தித்திக்க வென்வாயில் திகட்டாத முதுசெய்வித்
                                தணைத் தாதரவு மளிக்கும்
                       மானொடு கண்ணிணை மயங்கவே நோக்கி
                                மாநிலத்தில் மயங்கி வீழாமல்
                           மதியுநிதி யுநலமு மங்காமலே கொடுக்கு
                                மாநிதிச் செல்வி யன்னாய்!     
                       ஊனொடு வுயிருமுள் ளன்பால் தந்திடு
                                முழுவலடி யார்தம் பாலுள
                            முருகிவீ டுபேறுந் தந்திடு முமையே!
                                உன்மத்த சிவனின் அருளே3!

    அனைத்து மானிடர்க்கும் அன்னையின் அருளை வேண்டுகிறேன்.

    அடுத்து சில ஆண்பால் பிள்ளைத்தமிழ்ப் பருவங்களை நோக்குவோம்.

    (புதிய பிள்ளைப்பருவங்கள் தொடரும்)

                                       ————————–

    பார்வை நூல்கள்:

    1. குறுந்தொகை

    2, 3, 4. மீனாட்சி பாலகணேஷ்- காசி அன்னபூரணி அம்மை மீதான பிள்ளைத்தமிழ் பாடல்கள்.

    Share
  • புதிய பிள்ளைப்பருவங்கள் – 6

    புதிய பிள்ளைப்பருவங்கள் – 6

    மீனாட்சி பாலகணேஷ்

    வில், வாள், ஆயுதம் பயிலல் (புதிய பருவங்கள்- இருபால் பிள்ளைத்தமிழ்)

    1.பெண்பால்

    புதியதாகச் சேர்த்துக்கொள்ளக் கூடிய பிள்ளைத்தமிழ்ப் பருவங்களுள் ஆண், பெண் ஆகிய இருபாலருக்கும் பொதுவான ஒரு பருவத்தைப் பார்க்கலாம்.   அரசுகட்டில் ஏறும் ஆண்மகனுக்கு உரியது ‘கச்சினொடு சுரிகை காமுறப் புனைதல்’ எனும் பருவம். இதனை நாம் முன்பே கண்டோம். வில், வாள் ஆகிய ஆயுதப் பயிற்சி, குதிரை, யானையேற்றம் ஆகியனவும் ஆண்மகனுக்கே, சிறுவயதிலிருந்தே (ஏழெட்டு ஆண்டுகளிலிருந்தே) பயிற்றுவிக்கப்படும். பெண்களுக்கு உரியதாக இதனை முதலில் காணலாமா?

    தடாதகை போலும் இளம் சிறுமிகளுக்கும் போர்க்கலைகளான இவை பயிற்றுவிக்கப்பட்டுள்ளன. ஏனெனில் அவள் பாண்டிய அரசியல்லவா? பரஞ்சோதி முனிவரின் திருவிளையாடற்புராணத்தில், மதுரைக் காண்டத்தில், தடாதகை வளரும் பருவத்தில் போர்க்கலைகள் பயில்வது பற்றி ஏதும் கூறப்படவில்லை. ஆனால் அன்னை கயிலாயத்தை அடைந்து சிவகணங்களுடன் போர்புரியும்போது அவளது போர்த்திறத்தை நன்கு விவரிக்கிறார் புலவர்பெருமான்.

    மூன்று பாடல்கள் அம்மையின் போர்த்திறத்தை அழகுறப்பாடுகின்றன.

    சிவகணங்களின் தலைவர் நந்தியெம்பெருமான். அவருடைய படைவீரர்கள் தத்தம் கைகளில் ஏந்தியிருந்த படைகளைத் தடாதகைப் பிராட்டியார் தமது கொடிய கணைகளினின்றும் பாம்புபோன்ற அம்புமழையினைச் சொரிந்து பொடிப்பொடியாக்கினார். (‘கட்புற்றரவில் கணைமாரிகள் தூற்றி நின்றாள்’).

                        கொட்புற் றமரா டுமிக்கொள்கையர் தம்மி னந்தி
                       நட்புற் றவர்கைப் படைதூட்பட ஞானமூர்த்தி
                       பெட்புற் றருள வருமெங்கள்பி ராட்டி வெய்ய
                       கட்புற் றரவிற் கணைமாரிக டூற்றி நின்றாள்1.

    கையிலுள்ள ஆயுதங்கள் அழிக்கப்பட்டதும் அச்சிவகணங்கள் கற்களை எடுத்து தடாதகையின் உடலில் படும்வண்ணம் வீசினர். அவை தன்மீது படும்முன்பே ‘பொய்ம்மை மனத்தினர் செய்யும் தவம் அழிவது போல’ தனது நெய்பூசிய வச்சிரப்படைகொண்டு  அம்மை அவற்றை அழித்தனள்.

                        கையிற் படையற் றனர்கற்படை தொட்டு வீரர்
                       மெய்யிற் படுகென் றுவிடுக்குமுன் வீரக் கன்னி
                       பொய்யிற் படுநெஞ் சுடையார் தவம்போல மாய
                       நெய்யிற் படுவச் சிரவேலைநி மிர்ந்து வீசி2.

    பின் அவ்வீரர்களின் படைகளைத் துண்டம்துண்டமாகத் துணித்தாள் அன்னை. தனது தண்டப்படையால் அவைகளைத் தாக்கினாள். அவர்கள் புறம்காட்டி ஓடினர். ‘அண்டங்களையும் சராசரங்களையும் தானே படைத்துக் காக்கும் பராசக்தியின் வலிமையைக் கூறவும் நம்மால் இயலுமோ?’ என்கிறார் பரஞ்சோதி முனிவர்.

                        துண்டம் படவே துணித்தக்கண வீரர் தம்மைத்
                       தண்டங் கொடுதாக் கினள்சாய்ந்தவர் சாம்பிப் போனார்
                       அண்டங் கள்சரா சரம்யாவையுந் தானே யாக்கிக்
                       கொண்டெங் குநின்றாள் வலிகூற வரம்பிற் றாமோ3.

                                       *****

    இனி, மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழில் பலவிடங்களில் காணப்படும் அம்மையின் போர்த்திறன் பற்றிய செய்திகளைக் காணலாமா?

    குழந்தையை உறங்கவைக்கப் பாடும் பாடலில் தாய்மாரும் செவிலியரும் அம்பிகையின் சேனை செய்த போரை ஒரு தாலப்பருவப்பாடலில்  விவரிக்கின்றனர். அவர்களுக்குப் பெரும் உற்சாகம். தடாதகை நந்திதேவனின் அப்படைகளை ஓட ஓட விரட்டினாள் எனப்பாடி மகிழ்கின்றனர்.

    தடாதகை திக்விஜயம் சென்றபோது அவள் வயது பதினைந்தோ பதினாறோ தான். இளங்குமரியான அரசகுமாரி சிவகணங்களை எதிர்த்தகாலை, நந்திதேவர் அலட்சியமாக அவளை நோக்கி, “மயிர்ச்சாந்து அணிந்த கருமையான கூந்தலையுடைய சிறிய பெண்ணான நீதானோ எம் தலைவனாகிய சிவபிரான் வாழும் கயிலைமலையை முற்றுகை இடுபவள்?” எனச் சீறுகிறார். அவர்கள் அனைவரையும் தனது போர்த்திறத்தால் தோற்றோடச் செய்த வீரம் படைத்தவள் தடாதகை என்கிறார் புலவனார்.

                            ‘தகரக் கரிய குழற்சிறுபெண்பிளை
                                நீயோ தூயோன்வாழ்
                      சயிலத் தெயிலை வளைப்பவளென்றெதிர்
                                         சீறா வீறோதா
                       நிகரிட் டமர்செய் கணத்தவர்நந்திபி
                                      ரானோ டேயோடா4…’

    போரைத் தொடர்பவள் கயிலைமலைத் தலைவனைப் போருக்கு அழைக்கிறாள். அவர் தன்முன்பு வந்ததும் உடனே உள்ளப்புணர்ச்சி காரணமாக இவரே தன் மணாளன் எனத் தெளிகிறாள். நாணேற்ற உயர்த்திய வில்லைத் தழைத்துப் பிடித்தபடி, அதன் நாணினை விரல்களால் தழுவியபடி உயிர்ச்சித்திரம்போல் உண்மையாகவே வந்த நாணத்துடன் நிற்கிறாள்.

                            மெய்வந்த நாணினொடு நுதல்வந்தெழுங்குறு
                                          வெயர்ப்பினொ டுயிர்ப்புவீங்கும்
                        விம்மிதமு மாய்நின்றஉயிரோவம் எனவூன்று
                                          விற்கடை விரற்கடைதழீஇத்
                       தைவந்த நாணினொடு தவழ்தந்தசெங்கைகொடு
                                          சப்பாணி கொட்டியருளே5

    இங்கு போருக்கெடுத்த வில் பயனின்றிக் கையில் தவழ்கின்றது!! அன்னையின் போர்க்கோலமே அவளுக்குத் திருமணக் கோலமும் ஆகின்றது. இருப்பினும் கண்களால் காதற்கணைகளைத் தொடுத்தபடி நிற்கிறாள் தடாதகை!

                            கட்கணைதுரக்கும் கரும்புருவ வில்லொடொரு
                                         கைவிற்குனித்துநின்ற
                       போர்க்கோலமேதிரு மணக்கோல மானபெண்
                                பொன்னூசல்ஆடியருளே6!

    ஆக, யாம் கண்ட வரையிலும் அருமையான பல பாடல்களிலும் அன்னையின் போர்த்திறமையைப் பெரிதாகப் பேசுபவர்  குமரகுருபரனார் ஒருவரே!

    மேலும் மங்கையர்க்கரசியார் எனும் அரசமகளுக்கும் பிள்ளைத்தமிழ் பாடப்பட்டுள்ளது. (கோவை கவியரசு கு. நடேச கவுண்டரால் இயற்றப்பெற்றது). இவர் சோழர்குல இளவரசியாகப் பிறந்து பின் திருமண உறவால் கூன்பாண்டின் எனப்பட்ட நின்றசீர் நெடுமாறப் பாண்டியற்கு மனைவியானார். இவர்மீதான பிள்ளைத்தமிழிலும் இவர் சைவத்திற்கு சம்பந்தப் பெருமானுடன் சேர்ந்து செய்த தொண்டுதான் பலவாறு சுட்டப்படுகின்றதேயன்றி, இவரது போராற்றலும் திறமையும் கூறப்படவில்லை. சோழ இளவரசியாக இருந்தபோது ‘மானி’ எனும் பெயரால் அழைக்கப்பட்டார்.

                            ‘மங்கையர்க்கரசி வளவர்கோன் பாவை
                                வரிவளைக் கைம்மட மானி
                       பங்கயச் செல்வி பாண்டிமாதேவி7,’ என்பது சம்பந்தப்பெருமான் வாக்கு (தேவாரம்).

    தற்சமயம் சக்தி விகடனில் ‘சிவமகுடம்’ எனும் பெயரில் ஒரு தொடர் வெளிவந்துகொண்டுள்ளது. அதில் இவருடைய போர்த்திறமை நன்கு நயமாக மிகவும் உயர்வாக விவரிக்கப்பட்டுள்ளது. வேறெங்கும் எவ்விலக்கியத்திலும் (பெரியபுராணத்திலும் கூட) இவருடைய போர்த்திறமை கூறப்படவில்லை; பாடப்படவில்லை! இது வியப்பிற்குரிய செய்தியாகும்.

                                                               *****

    இனி, எமது கற்பனையில் உதித்த, எட்டு அல்லது ஒன்பது வயதுச் சிறுமியான தடாதகை எனும் மீனாட்சியம்மை போர்க்கலை பயிலும் நிகழ்ச்சிகளைக் காண்போம்.

                                                               *****

    போர்க்கலை ஆசான் வாளைச் சுழற்றி வீசப் பயிற்றுவிக்கிறார். வெகு அலட்சியமாக தனது வாளைச் சுழற்றி, அவருடைய வாள் வீச்சைத் தடுக்கிறாள் தடைசெய்யவியலாத ஆற்றல் படைத்த மங்கை தடாதகை எனும் மீனாட்சி! அடுத்து அவர் வேல்வீசக் கற்றுக் கொடுக்கிறார். அவளோ அதனை நொடியில் பயின்று, தன் கண்களெனும் வேலை வீசவும் பழகியிருந்தனள். குமரிப் பெண்ணல்லவா?அவள் தனது தாள்களே கதி எனப்பணியும் தவத்தோர்க்கு அவருடைய இருவினைகளையும் தீர்த்து வைப்பவள். எமக்கும் அவ்வினைகளைத் தீர்த்து தனது பால்போலும் பளிங்குமுகத்தில் புன்னகை காட்டி அருளுகிறாள் அந்த மீனாட்சி!

                            வாள்வீச்சி னையாசான் வகுத்துணர்த் துவிக்கவவ்
                                வாள்வீச்சி னைத்தனதுவா ளாற்றடுத்தாள்
                       வேல்வீச்சி னையடுத்து வேண்டிப்ப யிற்றுவிக்க
                                வேல்வீச்சி னைத்தன்விழி களாற்பயின்றாள்
                       தாள்நோக்கி யன்பர்க தித்துத்துதித் திடத்தன்
                                தாளவர் தலைபதித் துவினையெ லாங்களைந்தெம்
                       பால்நோக்கி பவரோகம் பழவினையு மழிந்திடப்
                                பால்போன்ற நகைமுகம் காட்டியருளினாள்8. (1) 

                                                               *****

    திக்விஜயத்திற்குத் தயாராகும் அரசி மீனாட்சியை அடுத்துக் காண்கிறோம். கூந்தலை இறுகக் கொண்டையிட்டு நறுநெய்பூசி வாரிமுடிந்து கட்டியுள்ளாள். போர்க்கவசம் கச்சணிந்த மும்முலைகளையும் அணைத்துக் காக்கிறது. மருதோன்றியணிந்த கரங்கள் வாளின் தந்தப்பிடியை இறுகப் பற்றியுள்ளன. சிலம்பும் சதங்கையும் கொஞ்சும் பஞ்சுப்பாதங்கள் இப்போது தண்டை எனும் வீரக்கழல்களை அணிந்துள்ளன. இடையிலணிந்துள்ள மேகலை, உடைவாளின் உறையுடன் உரசி ஒருவிதமான தாளலயத்தை உண்டாக்கி அவளுடைய நடைக்குக் கட்டியம் கூறுகிறது! பிடியைப்போல் மென்னடை பயில வேண்டிய இளநங்கை இப்போது ‘தம்,தம்,’ எனக் கூடமே அதிர தன் அன்னையைக்கண்டு ஆசிபெற வந்துகொண்டிருக்கிறாள்! பாண்டிய வம்சத்திற்குரிய வேப்பமாலை, மருக்கொழுந்து, முல்லை மலர்களுடன் கூடிய ஒரு ஆரமெனத் திருமார்பில் புரளுகிறது! கயல்விழிகள் அன்பு, வீரம், அருள், கொடை, இளமைக்கே உரிய அச்சமின்மை, சிறிது ஆணவம் (சிவனையும் வென்றுவிடலாமென்ற எண்ணத்தில் கயிலை செல்லுபவளல்லவா இம்மங்கை?) ஆகிய உணர்வுகளை ஒவ்வொரு நொடியிலும் பிரதிபலிக்கின்றன. பாண்டியரின் கயற்கொடி ஒளிவீசிப்பறக்க அவள் திக்குவிசயத்திற்குப் புறப்பட்டு விட்டாள்!

                            வஞ்சிய வள்நங்கை பாண்டியன் குலமங்கை
                                வில்லேந்தி வீரநடை பயின்றனளே!
                           வானவருந் தானவரும் வடவரு மேங்கிநிற்க
                                வேப்பமாலை தவழவெஞ் சமருக்கே!
                       அஞ்சன மெழுதிய அங்கயற் கண்ணழகி
                                அங்கையில் வாளேந்தி ஆரவாரமாக
                           அன்னை காஞ்சனையி னாசிகளைப் பெற்று
                                அன்புமற முங்குணமு மொருங்கமைய
                       குஞ்சரப் படையுங் குதிரைகற் றம்படையுங்
                                கொண்டுவிண் ணுமண்ணும திரக்கோமகள்
                           கொடியிடை யாளன்னை வாழ்த்தக் கொடுஞ்சமருக்
                                குப்படைதி ரட்டிப்புறப் பட்டனளே!
                       கொஞ்சுமொ ழிப்பாவை கூடலுறை பொற்பூவை
                                கையிலொரு வாளுங்கூர் வேலுமேந்தி
                           கன்னிநாட் டின்கயற் கொடியை யுயர்த்தி
                                திக்குவிசய மெனப்புறப் பட்டனளே9!  (2)

    இவ்வாறு திக்குவிசயத்திற்குப் புறப்பட்ட தடாதகை, எல்லா அரசர்களையும் தனக்குத் திறை செலுத்த வைத்தோ, அல்லது போரில் வென்று சிறைப்பிடித்தோ வைத்தபடி சென்று பின் கயிலைமலையை அடைகிறாள். வியர்க்க, விறுவிறுக்கச் சிவகணங்களுடன் போர் செய்தவள், வில்லிலிருந்து கணைகளைத் தொடுத்தும், ஆயுதங்களால் அடித்தும் நந்திதேவரையே கலங்க வைக்கிறாள்.

    தவஞ்செய்யும் முனிவர்கள் வாழும் கயிலைமலை மீதேறி, ஆண்டவனாம் சிவபெருமானை சமருக்கு அழைக்கிறாள். அவர் தன்முன்பாக வந்து தோன்றியதும், தனது பழைய நினைவுகள் திரும்ப வந்ததும், அவரே தன் மணாளனென உணர்ந்து மலைத்து வியர்க்கிறாள்.

    அண்ணல்மீது காதற்கணைகளைக் கண்களால் தொடுக்கிறாள். தண்ணிலவின் கிரணங்கள் வெந்தணலாய்ப் பொழிய (காதல் வயப்பட்டோருக்கு, நிலவும் சுடும்!), போர்க்கோலமொழிந்து காதலில் தன்னையிழந்து நிற்கிறாள் தடாதகை!

                        மூண்டதொரு சமரிலவள் முகமெல்லாம் வியர்த்தாள்
                       மூண்டெழுஞ் சினத்தில்சிவ கணங்களையு மொறுத்தாள்
                       மூண்டெழும் வேகத்தில்விற் கணைகளைத் தொடுத்தாள்
                       மூண்டெழுந் திறத்தில்நந் திதேவனை யுமடித்தாள்.

                       யாண்டவர் தவஞ்செய் யுங்கயிலை மலைமீதேறி
                       யாண்டவன் றன்னையும் வெஞ்சமருக் கழைத்தா
                       ளாண்டவ னாங்கந்த அணங்கவள் முன்தோன்றவவ்
                       வாண்டகை தனைக்கண் டயர்வியர் வெய்தினாள்.

                        அண்ணலின்மீ தெண்ணிலாக் கட்கணைகள் தொடுத்தாள்
                       தண்ணிலவும் வெந்தணலாய் தண்கலை கள்பொழிய
                       பெண்ணவள் தன்போர்க்கோ லமழிந்திட் டுநின்றாள்
                       விண்ணவரு மண்ணவரு மலர்மாரி பொழிந்தார்10. (3)

    இப்பாடல்கள் அன்னையின் இப்பருவத்தைப் போற்றச் செய்த எனது சிறுமுயற்சி. அவள் திருவடிகளுக்கே அர்ப்பணம்.

    (புதிய பிள்ளைப்பருவங்கள் தொடரும்)

                                       ————————–

    பார்வை நூல்கள்:

    1, 2, 3 – பரஞ்சோதி முனிவர்- திருவிளையாடற் புராணம்.

    4, 5, 6 – குமரகுருபரர்- மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்

    7. திருஞானசம்பந்தர்- தேவாரம்

    8, 9, 10 – பாடல்கள்- மீனாட்சி பாலகணேஷ்.

    Share
  • புதிய பிள்ளைப்பருவங்கள் – 5

    புதிய பிள்ளைப்பருவங்கள் – 5

    மீனாட்சி பாலகணேஷ்

    ஆடல் பாடல் பயிலல்
    (புதிய பிள்ளைப்பருவங்கள்- பெண்பால் பிள்ளைத்தமிழ்)

    ஆடலும், பாடலும் பெண்ணினத்துடன் பிறந்தது. அழகுக்கலைகளில் பெண்குழந்தைகளுக்குள்ள ஆர்வத்தைக் கண்டு வருகிறோம். தன்னை மட்டும் அழகு படுத்திக் கொள்வதோடன்றி, நுண்கலைகள் எனப்படும் நடனம், இசை ஆகியனவற்றையும் வாய்ப்புக் கிடைத்தபோது ஆர்வமுடன் பயில்வர் பெண்குழந்தைகள். பெற்றோர்களும், அவருள்ளும் தாய்மார்கள், தத்தம் பெண்குழந்தைகள் இசை, நடனம் இவை கற்க வேண்டுமென்பதில் பெரும் ஆர்வம் காட்டுவர்.

    பெண்குழந்தைகளின் இசை, நடனம் இவை தொடர்பான சில சுவையான செய்திகளைக் காண்போமா?

    பண்டைக்காலத்தில், அரசகுடும்பத்துப் பெண்களும் ஆண்களும் அறுபத்து நான்கு நுண்கலைகளையும் கற்றுத் தேர்ந்திடுதல் மரபாகும். வீணை வாசிப்பதில் சிறந்த உதயணன்போல், ஆட்டத்தில் சிறந்து விளங்கிய ஆட்டனத்தி எனும் சேரமன்னன்போல் சிலர் இவற்றில் மிகச் சிறந்தும் விளங்குவர். பெண்மக்கள் வீணை, யாழ் என பலப்பல இசைக்கருவிகளையும் இசைப்பதில் வல்லவர்களாக இருப்பர்.

    வளர்ந்த பெண்மக்கள், ஆடவர் (இளைஞர்கள்) ஆகியோர் பற்றிய பல செய்திகளை இலக்கியங்களில் காண்கிறோம். உதயணன்- வாசவதத்தை, ஆட்டனத்தி- ஆதிமந்தி, ஆகியோர் இவர்களுள் சிலர். சிறுபிள்ளைகள் பற்றிய செய்திகளைக் கண்டறியோம்.

    ஆதிசங்கரர் இயற்றிய சௌந்தர்யலஹரி எனும் அம்பிகை மீதான ஸ்லோகத்தொகுப்பில் உள்ளதொரு பாடல் அம்பிகை எவ்வாறு ஈசனுக்கு இணையாக உலகம் வாழ நடனமாடுகிறாள் எனக் கூறுகிறது. இதனைக் குற்றாலம் வள்ளிநாயகம் என்பவர் தமிழில் அழகுற மொழிபெயர்த்துள்ளார்.

    அம்பிகையும் சிவபிரானும் இந்தப் பிரபஞ்சத்திற்குத் தாயும் தந்தையும் ஆகியவர்கள். சிவபிரான் ‘தாண்டவம்’ எனும் ஆண்களுக்கான நடனத்தையும், அம்பிகை ‘லாஸ்யம்’ எனும் பெண்களுக்கான நடனத்தையும் ஒருவரையொருவர் பார்த்தபடி ஆடுவதனால் இந்த உலகம் படைத்துக் காக்கப்படுகின்றது. இவர்களின் இடையறாத நடனம் நின்றுவிட்டால் உலகம் அழிந்துவிடும். ஆகவே தம் குழந்தைகளாகிய நம்மீது கருணைகொண்டு நாம் இனிதுவாழ அன்னையும் அத்தனும் இடையறாது நடனமாடுகின்றனர் என்பது இதன் உட்பொருள்.

                ஆதார மூலத்தின் சக்கரத்தே ‘சமயா’
                       ஆடுகின்ற நவரசத்தி னோடு
             பாதார விந்தத்தின் பைரவத் தாண்டவம்
                       பார்த்துநான் கைகூப்பி னேன்
             சேதார ஊழிக்குப் பின்னாலே உருவாகும்
                       ஜெகத்தில்வாழ் உயிர்களுக்குங் கூட
             நீதானே யம்மை! சிவன்தானே தந்தை!
                       நின்னருளே அவ்வுலகும் ஆளும்!1

                                          (குற்றாலம் வள்ளிநாயகம்)

                                       *****
    ஒருமுறை சிவபிரான் அம்மையுடன் (காளி) நடனம் ஆடியபோது தனது தோல்விக்கு அஞ்சி, தனது காதுக் குண்டலத்தை வேண்டுமென்றே நழுவ விடுகிறார். பின்பு நடனமாடியவாறே கால்விரலால் அதை எடுத்துச் செவியில் திரும்ப அணிந்து கொள்கிறார். இவ்வாறுசெய்ய காலைச் செவியின் உயரத்திற்கு உயர்த்த வேண்டியதாயிற்று. அம்மையால் அவ்வாறு செய்ய முடியாமையால் (பெண்கள் நடனமாடும்போது அடக்கம் கருதி காலை அவ்வண்ணம் உயர்த்த மாட்டார்கள்!) அன்னை நாணித் தலைகுனிந்து தனது தோல்வியை ஒப்புக்கொள்கிறாள். இதைக் குறிப்பிட்டு பாபநாசம் சிவன் அவர்கள் ஒரு அழகான பாடல் புனைந்துள்ளார்.

                            பல்லவி

             ஆடும் தெய்வம் நீ அருள்வாய்
             இடது பாதம் தூக்கி  (ஆடும்)

                       அனுபல்லவி

                நாடும் அடியர் பிறவித் துயரற
             வீடும் தரும் கருணைநிதியே நடம் (ஆடும்)

                       சரணம்

             சுபம்சேர் காளியுடனாடி படு தோல்விக்கஞ்சி திருச்செவியிலணிந்த மணித்
             தோடு விழுந்ததாக மாயம் காட்டியும் தொழுபதம் உயரத்தூக்கியும் விரி
             பிரபஞ்சம் முழுதும் ஆட்டும் நின் திருப்பதம் தஞ்சமென உனை அடைந்தேன்
             பரிந்தென் திண்டாட்டம் கண்டு பரிசு தரும் துரையே
                                                                      சபைநடுவில் தத்திமியென்று2

                                                                                                  (ஆடும்)

    அடியார்களின் கற்பனை எவ்வாறெல்லாம் சிறகுவிரிக்கிறது என்பதற்கு இதுவுமொரு அழகிய எடுத்துக்காட்டு.

    உளுந்தூர்பேட்டை திரு. சண்முகம் அவர்களால் இயற்றப்பட்டு, இசைப்பேரறிஞர் திரு. சீர்காழி கோவிந்தராஜன் அவர்களால் மிகவும் பிரபலமாகியதொரு பாடல்தான் ‘சின்னஞ்சிறு பெண்போலே’ எனும் பாடல்.

                            பல்லவி

             சின்னஞ்சிறு பெண்போலே சிற்றாடை இடையுடுத்தி
             சிவகங்கைக் குளத்தருகே ஸ்ரீதுர்கை சிரித்திருப்பாள் (சின்னஞ்சிறு)

                       அனுபல்லவி

             பெண்ணவளின் கண்ணழகைப் பேசிமுடியாது
             பேரழகுக்கு ஈடாக வேறொன்றும் கிடையாது (சின்னஞ்சிறு)

                      சரணம்

             மின்னலைப்போல் மேனி அன்னை சிவகாமி
             இன்பமெல்லாம் தருவாள் எண்ணமெல்லாம் நிறைவாள்
             பின்னல் ஜடைபோட்டு பிச்சிப்பூ சூடிடுவாள்

    பித்தனுக்கு இணையாக நர்த்தனம் ஆடிடுவாள்3  எனச் சிவகாமி அன்னையை ஒரு சின்னஞ்சிறுமியாக, ஆடலரசனான நடராசனுக்கு இணையாக நடனம் ஆடுபவளாக அவர் சித்தரித்துள்ளது என் கற்பனையைத் தூண்டியது எனில் மிகையேயில்லை!

    இத்தகைய தெய்வீக நடனம் கற்கும் சிறுபெண்ணான உமையம்மையைப் பற்றி நாம் ஓரிரு ‘பிள்ளைத்தமிழ்’ பாடல்களாவது பாடிப்பரவ வேண்டாமோ? என் எளிய காணிக்கை இதோ!

    நாதாந்த வெளியினில் சிவபிரானுடன் இடையறாது நடனம் ஆடுபவள் எம்மன்னையான சிவகாமி! வேதாந்த வெளி, விரியும் கற்பனைகள், பிரானின் திருவுள்ளம், வேதங்களின் உட்பொருள் இவற்றுள் எல்லாம் கலந்து ஆடுபவள் அவள்! அவளுடைய இந்த ஆனந்த நடனத்தை உள்ளத்தில் எண்ணும்போது புரியாத தத்துவங்கள் புரியும். அடியார் இன்பவெள்ளத்தில் மூழ்குவர். ஆகவே உனது திருவடிகளை சிறிய சீரடிகளைப் பதித்துப் பேரண்ட வெளியினில் ஆனந்தமாக நடனமாடி அருளுகவே! சிறுமியான அன்னையை உலகையாளும் பேரரசியாகக் கண்டமையால் அவ்வழியமைந்த பாடலிதுவாகும்.

                நாதாந்த வெளியினில் நாதனாம் சிவனுடன்
                       ஆனந்த நடமிடும் ஆதிசக்தியே!
                 நன்மைதீ மைகளுக் கென்றும் சாட்சியாய்
                       நடுவா யிருக்கும் நாரணியே!
             வேதாந்த வெளிக்குள் வேரானகற் பனைக்குள்
                       வெட்டவெளி தன்னில் நட்டமிடுபவளே!
                 வெண்ணீற ணியய்யன் தன்னுள்ள வெளியினில்
                       வேதங்கள் ஒலிக்கநா தங்கள்கிளர்க்க
             போதாந்த வெளியினில் புரியாத பொருள்சிறக்க
                       பொங்கிடும் களியினில் சிந்தைகளிகூர
                 போற்றிடு மடியவர்பெ ருகுமின் பவெள்ள                
                       வூற்றினில் மூழ்கியே உள்ளங்குவிந்திட
             ஆதாரந்தந் திடுமுனற் புதப்பொற் சீரடிபதித்து
                       ஆனந்தமாக வேபேரண்ட வெளியினில்
                  ஆடிடுக வம்மையே நடமாடி யருள்கவே!        
                       ஆடலரச னுடனாடி யருள்கவே!4

    சிறுமி சிவகாமி நடனமாடிக் கொண்டிருக்கிறாள். வாணி தனது வீணையில் இன்னிசை எழுப்ப, இலக்குமி கைத்தாளமிட்டு ஜதி கூறுகிறாள். சசிதேவி மத்தளம் வாசிக்கிறாள். அம்மையின் நடனத்தால் ஈர்க்கப்பட்டு ஆடலரசனாகிய சிவபிரான் தானும் வந்து உடனாடுகின்றான். ஒருகட்டத்தில் நடனம் போட்டியாக மாறி உச்சத்தை அடைகிறது. இருப்பினும் சிவனும் சக்தியும் ஒன்றேயாதலால் வெற்றி தோல்வியின்றி அனைவரும் மனம் மகிழும் வண்ணம் நிறைவுறுகின்றது. உலகில் அனைவரும் இன்புற்று வாழும் வண்ணம் சிவகாமி அம்மையே நீ நடனமாடுவாயாக!- என வேண்டுகிறோம்.

                அன்னையே இன்னமுதே ஆனந்த நடராசன்
                       அகங்களிக்கு மானந்தசிவகாமியே!
                 அலைமகள் தாளமிட கலைமகடன் கைக்கொண்ட
                       வீணையினி லின்னிசையெழுப்ப      
             பன்னும்பனு வற்சிறக்கப் பரமனும் நின்றுடன்
                       பாடற்கிணங் கப்பரதமாடிட
                 பாங்கான நடனங்கள் பலவுங் கூட்டிட
                       பற்பலநர்த் தனங்கள்செய்திட
             மன்னுபுகழ் மாதவத் தோர்மனங் களிகூர்ந்திட
                       மாதேவிநீ யாடியபொழுதில்
                 மகாதேவ னவன்மன் றில்தோல் விக்கஞ்சிட
                       மற்றவனு ளமறிந்தம்மைகனிந்திட
             பின்னுமிவ் வுலகுய்ய பெற்றதாய் தந்தையும்
                       ஒன்றானதொரு வடிவல்லவோ?
                 பேருலகி லானந்தம்பெற் றுயிர்கள் வாழ்ந்திட
                       பேரானந்த நடமாடியருளுகவே!5      

                                       ****************

    இது ஆடல்; இனி அம்பிகையின் பாடலைக் காண்போமா?

    அம்பிகையின் மீதான பல பிள்ளைத்தமிழ் நூல்களில் அம்மானைப் பருவத்தில் அம்மானையாடும் சிறுமியான அன்னை இனிமையாகப்  பாடிக்கொண்டே ஆடுவதனைப் பற்றிப் புலவர்கள் கூறிப்பிட்டிருப்பார்கள்.

    மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழில் அம்மானைப்பருவத்தில் மீனாட்சி பாடியவாறே அம்மனையாடுவது விவரிக்கப்பட்டுள்ளது. கொத்தான மணிக்கக் கூட்டத்தால் செய்யப்பட்ட அம்மானைக்காய்கள் குயிலைப் போல் பேசும் உனது இனிய குரலின் குழல் போன்ற இசைக்கு உருகி, குளிர்ந்த துளிகளைச் சிந்துகின்றன.

                ‘கொத்து மணித்திர ளிற்செயும்அம்மனை
               குயிலின்மி ழற்றியநின்
                குழலினி சைக்குருகிப்பனி தூங்கு
               குறுந்துளி சிந்தியிட6 என்பன பாடல் வரிகள்.

    பெண்குழந்தைகள் தமது எல்லா விளையாட்டுகளிலும் பாடலைச் சேர்த்துக் கொள்வர் என்பது கண்கூடு!

    அன்னையின் உறைவிடமான சிந்தாமணி கிருகம். அன்னை ஆனந்தமாக ஊஞ்சலில் அமர்ந்துகொண்டு தாம்பூலம் தரித்துக் கொண்டிருக்கிறாள். அப்போது கலைவாணியான சரஸ்வதி அவள் முன்னமர்ந்துகொண்டு தனது வீணையை மீட்டிப் பசுபதியாகிய பரமசிவனின் பிரதாபங்களைப் பற்றிய பாடல்களை வாசித்துக் கொண்டிருக்கிறாள். தலையை ஆட்டித் தன் தலைவனின் பெருமைகளைக் கேட்டுப்பூரித்த உமையம்மை, “நன்றாக உள்ளது,” எனக்கூறுவதற்காக “ஸா” எனக் கூறத் துவங்கவும், வீணையின் தொனி மங்கி விடுகிறது. கலைமகள் நாணமடைந்து வீணையை அதன் உறையினில் இட்டு மூடிவைக்கிறாள்.

    இந்த ஆதிசங்கரரின் சமஸ்கிருதச் சுலோகத்தின் தமிழாக்கம்.

                வரமருளும் பரமேசன் சரிதத்தைப் பாடலாய்
                       வாணியவள் வீணையிலே மீட்ட
             பரமசந் தோஷத்தால் தலையசைத்த தேவிநீ
                       சபாஷ் என சரஸ்வதியை வாழ்த்த
             அதிமதுரச் சொல்தனது இசைமிஞ்சிய தாலே
                       அவள்வீணை தனையுறையுள் பூட்டி
             நிதியாக நின்வாக்கை மதித்தடுத்துச் சொல்கின்ற
                       வார்த்தைக்குக் காத்திருப்பாள் தாயே!7

                                                            (குற்றாலம் வள்ளிநாயகம்)

    இத்தகைய புகழ்வாய்ந்த அம்பிகையை, இசையின் உள்ளாய்ப் பொலிபவளை, ஈசன் பங்கில் உறைபவளை என்னென்று புகழ்வது? குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரமெனும் ஏழு சுரங்களாலான பல பண்களால் மேகராகக் குறிஞ்சியையும், மேற்செம்பாலைப் பண்ணையும் இசைக்கிறாள் சிறுமியான சிவகாமி. தனது உள்ளங்கவர் அண்ணலின் பெருமைகளைப் பாடி மகிழ்கிறாள். இந்த அனைத்துலகங்களையுமே தன் அருள் எனும் இசையால் ஆரபி, கௌரிமனோகரி, வசந்தபைரவி, வகுளாபரம், தோடி எனப் பலப்பல ராகங்களால் காதலுடன் நிறைக்கிறாள். இந்தக் கருணையைப்போற்றி உன் தாளிணைகளைப் பணிந்து, ‘இவ்வுலகம் செழிக்க, வல்வினைகள் கெட தர்மவதியான சிவகாமி அன்னையே! இன்னிசை பொழிவாயாக!’ என வேண்டுவோமா?

                ஏழிசையா யிசைப்பயனாய் இலங்கிடு மீசன்பங்கில்
                       ஏந்திழையே நீயுறைந்தாய்
                 எழிலோங்கும் உன்நாவில் குரலொடு துத்தம்கைக்
                       கிளையுழை இளிவிளரிதாரமெனு
             மேழிசையாற் பண்ணனைத் தும்பாங்கா கப்பாடுவாய்!
                       மேகராகக்கு றிஞ்சியினுமேற்செம்
                 பாலைப்பண் ணினிலும் மூண்டெழுந்த புகழ்மாலை
                       பெருமான்மேற் சாற்றிடுவா
             யாழிசூழ னைத்துலகு முன்னருளிலு மிசையிலும்
                       ஆரபியெனகௌரி மனோகரியெனவ
                 சந்தபைரவி யெனவகுளா பரணமென சுந்தரத்
                       தோடியென நிறைக்குமுன்றன்
             தாளிணை தான்பணிந்து தரணியெ லாஞ்செழிக்க
                       தவங்கள் தானியற்றும்
        தாபதருக் கருளுநல் தர்மவதி சிவகாமீ
                       தீங்குரற்றே னிசைபொழிகவே!8

    (தொடரும்)

                                       ————————–

    பார்வை நூல்கள்:

    1, 7. சௌந்தர்ய லகரி- தமிழாக்கம்- குற்றலம் வள்ளிநாயகம்

    2. பாடல்- பாபநாசம் சிவன்

    3. பாடல்- உளுந்தூர்பேட்டை சண்முகம்

    4, 5, 8- சிவகாமியன்னைமீது பிள்ளைத்தமிழ்ப் பாடல்கள்- மீனாட்சி பாலகணேஷ்

    6. மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்- குமரகுருபரர்

    Share
  • புதிய பிள்ளைப்பருவங்கள் – 4

    புதிய பிள்ளைப்பருவங்கள் – 4

    மீனாட்சி பாலகணேஷ்

    மருதோன்றி அணிதல்

         (பெண்பால் பிள்ளைத்தமிழ்)

    அழகுக்கலை என்பது பெண்ணோடு கூடிப்பிறந்து வளர்வது. அதற்கு வயது வரையறையே இல்லை! உலகம் முழுமையுமே, கூந்தல் அலங்காரங்களாகட்டும், விதவிதமான அணிமணிகள், ஆடைகள், அனைத்துமே பெண்களின் பார்வையில் ஒப்பற்றதொரு பரிமாணத்தை அடைந்து ஒளிர்வனவாகும்.

    இவற்றுள் ஒன்று மருதோன்றி, மருதாணி, மெஹந்தி – இவையெல்லாம் பெண்கள்  தங்கள் கரங்களையும் கால்களையும் அழகுபடுத்திக்கொள்ள அணிந்து கொள்ளும் இயற்கை சாதனங்கள் ஆகும். பருவமடைந்த இளம் பெண்கள் தொய்யில் எனப்படும் வண்ணக்குழம்பாலான சித்திரங்களைத் தங்கள் தோள்களிலும் மார்பிலும் வரைந்து கொள்வர் எனக் கலித்தொகை இலக்கியத்திலிருந்து அறிகிறோம்.

    மருதாணி அல்லது மருதோன்றி பற்றிய குறிப்புகள் இலக்கியங்களில் தனியாகக் காணக்கிடைக்காவிடினும், இது ஒரு தொன்மையான அழகுக்கலை என அறியலாம். சூடான் போன்ற அரபிய நாடுகளிலும் மருதோன்றிக் குழம்பால் கை கால்களுக்கு சிவப்பு நிறமூட்டிக் கொள்வதனை அறிகிறோம்.

    மருதாணி அல்லது மருதோன்றி என்பது புதர்போல வளரும் ஒரு தாவரமாகும். மிகவும் மருத்துவ குணங்கள் வாய்ந்த இதன் இலைகளே பறித்து நன்கு அரைத்தெடுக்கப்பட்டு கைகளையும் கால்களையும் அழகுபடுத்தப் பயன்படுத்தப் படுகின்றன. மருதாணியின் தாவரவியல் பெயர் ‘லாசோனியா இனெர்மிஸ்’ (Lawsonia inermis). மருதாணி கொடுக்கும் நிறத்துக்கு அதிலிருக்கும் லாசோன் (Lawsone) எனும் பொருள் காரணமாகிறது.

    இது அழவணம், மருதாணி, மருதோன்றி எனவெல்லாம் வழங்கப்படும். அழகைச் சேர்ப்பதனால் அல்லது உடலுக்குக் குளிர்ச்சியை அளிப்பதனால் ஐ-வணம் எனும் பெயரும் இதற்குண்டு. பாதங்களில் அணியப்படுவதனால் சரணம் எனும் பெயரும் உண்டு. வெள்ளை நிறமுடைய இதன் மலர்கள் மணமிகுந்தவை. நகச்சுற்று எனும் விரல்களிலான நோய் மருதாணியை அணிய குணமாகும். கண்கள் குளிர்ச்சி பெறவும், நன்கு உறக்கம் வரவும் இவ்விலையை அரைத்துத் தலையில் தேய்த்துக்கொண்டு நீராடுவர். தலைக்குத் தேய்த்துக்கொள்ளும் எண்ணெயிலும் இதனை இட்டுக் காய்ச்சி வடிகட்டி வைத்துக் கொள்ளுவர். பெண்கள் இதன் கூழைக்கொண்டு கைகளிலும் கால்களிலும் பல வடிவங்களை வரைந்து அழகு செய்து கொள்வர்.

    திருவிழா நாட்கள், குடும்பத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளான, திருமணம், வளைகாப்பு, இன்னபிற அனைத்திலுமே மருதோன்றியும் ஒரு மங்கலப்பொருளாகச் சேர்த்துக்கொள்ளப்படும். மருதோன்றிக் குழம்பைக் கைகளிலும் கால்களிலும் வேண்டிய வகையில் வரைந்து இட்டுக்கொண்டு, அது செம்மண் நிறம் வருவதற்காக, அணிந்தபடியே சிறுமியரும், இளமங்கையரும், பெண்டிரும் உறங்கவும் செய்வர். நல்ல நிறம் வருவதற்காக இலைகளைப் பறித்து அரைக்கும்போதே உடன், மஞ்சள்கிழங்கு, செப்புக்காசு, சுண்ணாம்பு முதலியவற்றையும் சேர்த்து வைத்தரைப்பர். அந்தப்பூச்சு சிலமணி நேரங்களில் தானே உலர்ந்து உதிர ஆரம்பிக்கும். நன்கு நீரால் கழுவிவிட்டு எண்ணையைப் பூசுவர் சிலர். ஆக மொத்தம், கைக்கு அழகு, கண்ணுக்குக் குளிர்ச்சி, மகிழ்ச்சிகரமான பொழுதுபோக்கு, விளையாட்டு; வேறென்ன வேண்டும்?

    தற்காலத்தில் இந்த மருதாணிக்கூழ் கூம்புவடிவப் பொட்டலங்களாகக் கிடைக்கிறது. வட இந்திய மாநிலங்களில் திருமணத்தின் முன்பு மணப்பெண் மருதாணி (மெஹந்தி) அணிவது என்பது ஒரு சடங்காகவே ஆடல், பாடல், விருந்துடன் நிகழ்கிறது. தென்னகத்திற்கும் இவ்வழக்கு வந்து சேர்ந்துள்ளது. இதற்காகவே சித்திரக்குறிப்புகளும், அவற்றை வரையும் முறைகளைப் பயிற்றுவிக்கவும் குழுக்கள் கூட உள்ளன.

    வாழ்க்கையை ரசனையுடன் வாழும் வழிமுறைகள்!!

                                                   *****

    இந்த முன்னுரையுடன் நாம் இப்போது ஏழெட்டு வயதுச் சிறுமி கற்பகவல்லியன்னை மருதோன்றி அணிந்து மகிழும் சில காட்சிகளைக் கண்டு களிப்போமா?

    மலைமகளான கற்பகவல்லிக்கு ஒருநாள் மருதாணி இட்டுக்கொள்ள ஆசை பிறந்தது. உடனே தோழியர் விரைந்து சென்று நந்தவனத்தினின்றும் மருதாணி இலைகளைக் கொய்து மடியில் பாவாடையில் கட்டிக்கொண்டு வந்து சேர்ந்தனர். செவிலித்தாய் முத்தம்மாள் அவற்றை வாங்கிக்கொண்டு உரலில் அரைத்தெடுக்கச் சென்றாள்.

    “முத்தம்மா, மையா அரைச்சுக்கோ,” என வேணி அறிவுறுத்த, “ரெண்டு செப்புக்காசு இருந்தாக் குடு,” எனக் கேட்டு வாங்கி, அவள் சுருக்குப்பையிலிருந்து எடுத்துத்தர, அதனையும் உரலிலிட்டு மருதாணியோடு சேர்த்து நசுக்கினாள் முத்தம்மாள்!

    ‘கம கம’வென மருதாணிக்கே உரிய அருமையான நறுமணம் அந்தப்பகுதி பூராவும் நிறைந்தது. வெள்ளிக்கிண்ணத்தில் வழித்தெடுத்த மருதாணி உருண்டைகளையும் கூழையும் வைத்துக்கொண்டு கற்பகத்தைச் சுற்றி அமர்ந்தவண்ணம் அவள் கரங்களையும் கால், பாதங்களையும் அலங்கரிக்க முற்படுகின்றனர் தோழியர். பாடலும் பிறக்கின்றது.

    “கற்பகம் எனும் பொன்மயிலாக மயிலாப்பூர் எனும் பதியினில் வந்து, தனது பொற்கரங்களால் பூக்களை எடுத்து, பொன்மேருவை வில்லாக வளைத்தும், முப்புரங்களையும் எரித்த சிவபெருமானின் பொன்னடிகளில் இட்டுப் பூசை செய்பவளும், அடியவர்களுக்கு வேண்டும் வரங்களை எல்லாம் கற்பகத்தருவாக நின்று தருபவளும், தன்னையே நம்பிப் பணியும் அடியார்களுக்குத் தவறாமல் உதவுபவளும், அபயகரம் காட்டுபவளும் ஆகியவளின்  கைகளுக்கு மருதாணி இடுவோம். தாமரை மலர்போலும் அவள் கைகளுக்கு மருதாணி இடுவோம்,” எனப் பாடுகின்றனர்.

                       பொன்மயிலாக மயிலையம் பதியினில் வந்து
                                பொற்கரத்தாலே பூவகைகள் கொண்டு
                       பொன்மேருவை வளைத்துப் புரமெரித் தவன்றன்
                                பொன்னடிக்கிட் டுப்போற்றித் துதித்து
                       நன்மையெலாம் அடியார்க்கு நாடோறு மருளி
                                நம்பிப்பணிந் தவர்களுக் குமுதவி
                       தன்மையுடன் தண்ணளிசெய் கைக்கு மருதாணி
                                தாமரைமலர்க் கைக்கு மருதாணி.     (1)

                                                               *****

    அடுத்து விரிகின்றதொரு அற்புதக் காட்சி! அன்னை மேனாவதியும் மற்ற செவிலியர், தோழியரும் கற்பகவல்லிக்கு மருதோன்றி இடும் காட்சி. ஒரு சிறு வெள்ளிக்குச்சியினைக் கொண்டு மருதாணிக்குழம்பால் பெண்மயிலாம் கற்பகத்தின் சிவந்த கைகளில் மயிலொன்றின் வடிவை வரைகிறாள் ஒரு பெண். மேனையின் ஆலோசனைப்படி அதைச்சுற்றி, திரிசூல இலச்சினையை வரைகிறாள் இன்னொருத்தி.  அடுத்து கால்களில் மருதாணி இட வாகாக, கற்பகவல்லியை, தேன்குரல் கொண்ட தோழிமார்கள், தென்றல்வீசும் முற்றத்தில் உயர்ந்த ஒரு பீடத்தில் அமர்த்திவைத்து, கைகளைப்பற்றி- (அவை எப்படிப்பட்ட கைகள்? – மான், மழு, சடையில் பிறைமதி தரித்த பிரானின் அருளைவேண்டி நித்தமும் பூசையைத் தவமாகவே செய்திடும் கைகள்) மருதோன்றி இட்டு, வான்முகிலைக் கண்டு களிநடம் புரியும் கற்பக வடிவானவளின் (அம்மை மயிலாக உருவெடுத்த வரலாறு) வண்ணத்திருவடிகளைப்பற்றி அவற்றிற்கும் மருதாணி இடுகின்றனராம்.

                       மேனையுமங்கே மருதோன்றிக் கூழ்கொண்டு
                                மேதினியை யாளுமுனது திருக்கையில்
                       மேகாரவடி விலுந்திரி சூலவடிவிலும்
                                மேவியழகாக மென்மை யாய்வரைய
                       தேனையும் பழித்திடுந்தீங் குரற்றோழியர்
                                தென்றலுல வுமுற்றந் தன்னிலே
                       தேடியேவழைத் துனையொ ளிர்மணித்
                                தவிசிருத்தி தளிர்க்கை தனைப்பற்றி
                       மானையுமழு வையுமதியை யுஞ்சடையணி
                                மகாதேவ னின்னரு ளைவேண்டி
                       மாதவப் பூசையினை நிகழ்த்திடும்
                                மாதேவி கற்பகவல்லி யுன்னை
                       வானைக்கண் டுகளிநட மாடிடும்
                                வனமயிலின் வண்ணத்திரு வடிபற்றி
                       பாங்காகவே மருதோன்றி யினாலான
                                பற்பல சித்திரம் வரைகிறார்.   (2)

                                                               *****

    ஒருபோது இமயாசலத்தில் சிவபிரான் உமையன்னைக்கு திருநீற்றின் பெருமையை விளக்கிக் கொண்டிருந்தார். அவ்வமயம் அங்கு ஒரு வண்ணமயில் ஆடி வந்தது. உமையின் கவனம் சிதறியது. இதனைக் கண்ட சிவபிரான் சினம் கொண்டார். “நீயும் ஒரு மயிலாகப் பிறப்பாயாக,’ எனக் கூறினார். பின் அன்னை தன் தவறுணர்ந்து மனமுருகி வேண்டிட, தவம் செய்து தன்னை வழிபட்டுத் தன்னிடம் வந்து சேர அருளினார். அவ்வாறு அன்னை மயிலாக (கற்பகமாக) இருந்து தவம் செய்த இடமே திருமயிலை எனும் மயிலாப்பூர். அவ்வண்ணலைப் பூசிக்கும் அன்னையின் அழகான கைகளுக்கு அணிவிக்கும் அழகு மருதாணி எனத் தலபுராணத்தையும் இணைத்துக் கூறுகிறது இப்பாடல்.

                            நீற்றதன் பெருமையினை நேசமுடன் எம்மையன்
                                நிமலையு னக்குரைக்கநீ
                       நின்றதனைச் செவிமடுக்க வந்ததொரு தடையாம்
                                நீலமாமயி லொன்றுமே
                       மாற்றதனைக் கண்ணுற்று மனங்கருத் துத்தவற
                                மாதேவியுன் மீதவன்
                        முனிவுற்று மயிலாகப் பிறத்தியென வுரைக்க
                                மனங்கலங்கி நீயுவேண்ட
                       மாற்றியே மயிலையம் பதிதனில் சென்றெம்மை
                                பெருந்தவந் தானியற்றில்
                       மகிழ்ந்துமே மணங்கொள் வம்மாதுநீ செல்கென
                                மகாதேவனு ரைக்கக்கேட்டே
                       ஆற்றியே அருந்தவம் அண்ணலை யடைந்திட்டாய்
                                அம்பிகைகற் பகக்கொடியே!
                       அவனைநீ பூசிக்கு மழகான வுன்கைக்கு
                                ஐவணம ணிவிப்பமே.                       (3)

                                                   *****

    இதிலிருந்து மருதோன்றி அணியும் நிகழ்ச்சியும் ஏழெட்டு வயதான சிறுமியருக்கே உரிய அரிய பருவமொன்றாகும் என அறியலாம். பிள்ளைத்தமிழின் அதிகப்படியான பருவங்களுடன் இதனையும் இணைத்துக் கொள்ளலாம் என்பது எனது தாழ்மையான எண்ண ஓட்டம்!

    இதுபோன்றும் இன்னும் சில அழகிய நிகழ்வுகள் கொண்ட பிள்ளைப்பருவங்களைத் தொடர்ந்து காணலாம்.

                                                   (புதிய பிள்ளைப்பருவங்கள் தொடரும்)


     1, 2, 3- பாடல்கள்- மீனாட்சி பாலகணேஷ்- கற்பகவல்லி பிள்ளைத்தமிழ்- மருதோன்றிப்பருவம்

    Share