Tag: எஸ். வி. நாராயணன்

  • மனிதனை உயர்த்தும் எழுத்து

    எஸ். வி. நாராயணன்.

    கல்கியின் மகத்தான சரித்திரத் தொடர்கதைகளுக்காக ‘கல்கி’ இதழையும், தேவனின் சிறந்த சமூகத் தொடர் சித்திரங்களுக்காக ‘ஆனந்த விகடனையும்’ வாரந்தோறும் விடாமல் விரும்பிப் படித்த ஆயிரக்கணக்கான குடும்பங்களில் எங்கள் குடும்பமும் ஒன்று. அந்த கால கட்டத்தில் இந்த இதழ்களைப் பெரியவர்களும், சிறியவர்களும், ‘நான்முதல், நீ முதல்’ என்று போட்டி போட்டுக் கொண்டு படிப்பார்கள்.

    devanதேவனின் படைப்புகள் அன்றாட வாழ்வின் பல அம்சங்களைப் பிரதிபலிப்பதாக அமைந்ததால் அவற்றிலே தனி ஈர்ப்பு இருந்தது. ஆங்கில நாவலாசிரியர் பி.ஜி. உட்ஹவுஸின் பாணியிலே, அடுக்கடுக்கான சம்பவங்களின் ஊடே, நகைச்சுவையை நயமுறக் கலந்து தேவன் வழங்கிய சுவைமிகு கதைகள் தான் எத்தனை! மனிதனை மேம்படுத்தக் கூடிய நல்ல கருத்துகளை அஸ்திவாரமாகக் கொண்டு, அவற்றின் மீது அவர் எழுப்பிய நவீனங்கள்தாம் எத்தனைச் சிறப்புடையவை! சுமார் 23 ஆண்டுகாலம் ஆனந்த விகடன் மூலம் பல்வேறு தரமான கதைகளையும், கட்டுரைகளையும் அளித்த தேவன், நீண்டகாலம் நம்மிடையே இருக்கவில்லை. 1957-ம் ஆண்டு மே மாதம் 5-ம் தேதி, 44 வயதிலேயே இறைவனடி எய்தினார். அவருடைய படைப்புகளில்தான் எத்தனைப் பரிமாணங்கள்! தேவனின் தமிழ்நடையிலே தான் எத்தகைய ‘இளநீர்’ ஓட்டம்!

    அவருடைய சமூகப்பார்வையும், சிந்தனைகளும் எக்காலத்திற்கும் பொருந்தும். ‘லஷ்மி கடாஷம்’ என்ற உன்னத படைப்பிலே அவர் கூறுகிறார்:- “சேவை செய்வோம், அதற்கேற்ற ஊதியம் பெறுவோம் என்ற மனத்தூய்மையுடன்தான் மக்கள் வாழ்க்கையை ஆரம்பிக்கிறார்கள். தெருவிலே, ரிப்பன்நாடா, சீப்பு, கொண்டை ஊசி விற்பவர்களை எடுத்துக் கொள்வோம். லாபம் மிகமிகக் குறைவுதான். ஆனாலும், அவர்கள் ஏன் அந்தத் தொழில்களை தொடர்ந்து செய்கிறார்கள்? உள்ளத்திலே, ‘நாணயமாய் நடக்க வேண்டும்; சிறியோன் ஆனாலும் தன்மதிப்பு எனக்கு உண்டு’ என்ற நம்பிக்கை இருப்பதால்தான். யோக்கியமாய் பிழைக்க நினைக்கும் எந்தச் சிறிய வியாபாரியை நோக்கினாலும் அவருக்கு ஆதரவு தருவோம். அதனால் யோக்கியர் பரம்பரை வளர உதவி செய்தவர்கள் ஆவோம்.” என்கிறார் தேவன்.

    இதே நாவலிலே பிறிதொரு இடத்திலே அவர் சொல்கிறார்:- “உலகிலே ஏழை மக்களே அதிகமானவர்கள். அதற்காக எவரும் அவமானப்படத் தேவையில்லை. உழைத்து, தனக்கு வேண்டிய அளவு மட்டுமே எடுத்துக்கொண்டு, பேராசையைத் தவிர்த்து, யோக்கியப் பொறுப்புடன் நடந்துகொள்பவர் எண்ணிக்கை எப்போது குறைகிறதோ, அப்போதுதான் தலை குனியவேண்டும். அல்லது கவலைப்படவேண்டும்.” நாணத்தைவிட்டு, பணத்தின் பின்னே அலையும் இன்றைய சமூகத்தின் அவலநிலையைக் கண்டிருந்தால் தேவன் அவர்களுடைய மனம் என்ன பாடுபட்டிருக்குமோ?

    ஏழ்மையிலும் ஏற்றமுடன் விளங்க முடியும் என்பதை வலியுறுத்திச் சொன்ன தேவன், பணம் வந்தால் எப்படி இருக்க வேண்டுமென்பதையும் சுட்டிக்காட்டுகிறார். பரோபகாரச் சிந்தையைப் போற்றி வளர்க்க வேண்டுமென்கிறார். ‘மிஸ்டர் வேதாந்தம்’ என்ற கதையிலே சுவாமி என்ற அருமையான கதாபாத்திரம். மனித நேயம் மிக்க சுவாமி கடற்கரையில் தமது பெரிய காரை நிறுத்திக் கொண்டிருக்கிறார். தொண்டு கிழவி ஒருத்தி கையை நீட்டி காலணா கேட்கிறாள். காலணாவை வைத்துக்கொண்டு என்ன செய்வாய் என்று சுவாமி அவளிடம் கேட்கிறார். நாலு இடத்தில் இதே மாதிரி கேட்டு வாங்கி ஏதாவது வாங்கித் தின்பேன் என்கிறாள். அந்த மூதாட்டி கையில் சுவாமி ஒரு ரூபாயை எடுத்துப் போடுகிறார் (ஒரு ரூபாய்க்கு ஒரு படிக்குமேல் நல்ல அரிசி கிடைத்துக் கொண்டிருந்த காலம் அது). அதோடு, “நீ நாலு இடத்தில் நின்று கேட்கவேண்டாம். என்னை நன்றாகப் பார்த்துக்கொள். என்னை எங்கே கண்டாலும் இனி என்னிடம் நீ பிச்சைக் கேட்கக்கூடாது. எனக்குக் கெட்ட கோபம் வரும்” என்று சொல்லி, தமது இளகிய மனதை, ஒரு பொய்ப் போர்வையால் போர்த்திக் கொண்டு போவார்.

    பணத்தைப் பெட்டியில் பூட்டிவிட்டு லஷ்மிகடாஷம் இருக்கிறது என்று சொல்வது மடத்தனம் என்பார் தேவன். பணத்தை நல்ல முறையில், அனைவருக்கும் பயன்படும்படி உபயோகப்படுத்த வேண்டுமென்பதே தேவனின் கொள்கை. மனத்தைத் தாராளமாக வைத்துக்கொள்ளவேண்டும். பகை, பொறாமை கூடாது. பண்டம், பணம் இவற்றின் மீது தனிப்பட்ட ஆசை கூடாது. எல்லோருக்கும் கொடுப்போம், எல்லோரும் சந்தோஷமாக அனுபவிக்கட்டும் என்ற மனப்பாங்கு வேண்டும். இவை இருந்தால் ஆண்டவன் அருள் நிச்சயம் கிட்டும் என்பதை தேவன் உறுதிபட நம்பினார் என்றே கருதவேண்டும்.

    அவருடைய படைப்புகளிலே பக்திக்கு முக்கிய இடம் உண்டு. தெய்வ மணம் அவற்றிலே பின்னிப் பிணைந்திருக்கும். தேவாரம், திருவாசகம், ஆழ்வார்களின் பாசுரங்கள், சித்தர்களின் பாடல்கள், ஆதிசங்கரர், வேதாந்த தேசிகர், வள்ளலார், தாயுமானவர் போன்ற பெரியோர்களின் அமுத மொழிகள் இவற்றை அவருடைய கதைகளிலே ஆங்காங்கே காணலாம். தொடர் கதையின் ஒவ்வொரு அத்தியாயத்தின் துவக்கத்திலும், ஒரு அழகான சுலோகமோ, பாசுரமோ, வாசகமோ அணி செய்து நிற்கும். புரசைவாக்கம் கங்காதரேச்வரர் கோவிலில் வீற்றிருக்கும் பங்கஜாஷி அம்மன், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள், வடபழனி முருகன், அங்குள்ள ஆஞ்சனேயர், சிக்கல் சிங்கார வடிவேலன் போன்ற பல்வேறு தெய்வ சந்நிதிகளை அவர் வர்ணிக்கும்போது, நேரிடையாகத் தரிசனம் செய்யும் உணர்வு வாசகர்களுக்கு ஏற்படும். பக்தி உடையவனுக்குத் தெய்வம் என்றும் துணை நிற்கும் என ஆண்டாண்டு காலமாக இருந்துவரும் நமது நம்பிக்கைக்கு உரம் ஊட்டுவது போல இருக்கும் தேவனின் எழுத்து.

    மனித வாழ்வின் அடிப்படையை ஒரு சில வரிகளிலேயே படம் பிடித்துக் காட்டியவர் தேவன். மனித வாழ்க்கை துயரம் மிக்கது என ஞானிகள் சொல்வார்கள். ஆனாலும், எப்படியும் வாழ்ந்துவிடுவது என்ற துணிவு கொண்ட சமூகம் அதிலே பல ஆறுதல் ஊற்றுக்களைத் தேடிக்கொள்கிறது. குழந்தைப் பருவத்திலே பெற்றோரின் அன்பு இதத்தை அளிக்கிறது. பிறகு, வாழ்வு கசக்காமல் இருக்கத் திருமணம் என்ற நிலை வருகிறது. அதிலே உள்ள கவர்ச்சியை நீடிக்க வைத்து, புத்திரப்பேறு ஏற்பட்டதும் மனது அதில் திரும்புகிறது. அந்த ஈடுபாடு அறுபது வயது வரை கொண்டு செல்ல, அப்பால் மெய்ஞானத்தில் மனம் லயிக்கிறது. இந்த ரீதியிலே, சம்சாரமுட்கள் குத்திக் கீறாமல், நம்வாழ்வு சிறப்பாகிறது.

    இல்லற இயல், தொழில் துறை பண்பு, முதலாளி– தொழிலாளி உறவுகள், நட்பின் இயல்பு, எழுத்தாளர் பொறுப்பு, இசையின் நயம் என பல்வேறு விஷயங்களை தம்முடைய படைப்புகளிலே தேவன் அலசியிருக்கிறார்.

    ஆண்டுதோறும், தேர்வு முடிவுகள் வரும் நேரம் சிறுவர், சிறுமியரை மிகுந்த கவலைக்கு உள்ளாக்கும் காலம். வெற்றி பெறுவோர் பலர் இருப்பர். அதே சமயத்தில், பல்வேறு காரணங்களினால், தோல்வியைச் சந்திக்க நேரிடுவோரும் உண்டு. இவர்கள் துவண்டு போகாமல் இருக்க பெற்றோர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதைத் தெளிவாகக்கூறுகிறார் தேவன். தோல்வியுற்றவனைக் கடிந்து கொள்ளாமல், தட்டிக்கொடுத்து ஆறுதல் சொல்லவேண்டும். “எழுந்துவாடா, என்கண்ணே! நீ வேணது வாசிக்கவில்லையா. போறாதவேளை அப்படிச் செய்திருக்கிறது. அடுத்த வருஷம் இருக்கிறது. உனக்கென்ன வயசாகிவிட்டதா?” என்ற ரீதியில் தாயார் பேசவேண்டுமாம். “அசடே! இந்த அற்ப விஷயத்திற்கா மனம் உடைந்து போகிறது?” என்று தகப்பனார் சொல்லவேண்டுமாம். இப்படிச் செய்தால் அடுத்த தேர்வில் முதலிடம் பிடிக்க வேண்டுமென்ற உத்வேகம் மாணவனுக்கு ஏற்படாதா?

    எழுத்துத் தொழிலின் நிறைகுறைகளை அறிந்தவர் தேவன். நாலுலட்சம் பேர் நன்றாக இருக்கிறது என்று சொன்னாலும், ஒருவர் குறை கூறினால்கூட நெஞ்சு வேகிறது என்பார். ஆனால், அவரே சொல்லுவார்:- “வாசகர்கள் எல்லோரும் நல்லவர்கள். நன்றாயிருப்பதை உடனேயே தயங்காமல், குறைக்காமல் சொல்வார்கள். நம்பிக்கையுடன் எழுதிவிட்டால் வெற்றிநிச்சயம்.” நம்பிக்கையுடன் எழுதி தாமும் உயர்ந்து, வாசகர்களையும் உயர்த்தியவர் தேவன்.

    Share
  • ஏழை யார்? செல்வன் யார்?

    — எஸ். வி. நாராயணன்.

    உஜ்ஜியினி ராஜா விக்கிரமாதித்தனை அறியாதவரும் உண்டோ? குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, விக்கிரமாதித்தனும் வேதாளமும் சேர்ந்து ஆற்றிய வீர, தீரச் செயல்கள் பற்றிய கதைகளை இன்றும், என்றும், விரும்பிக் கேட்கிறார்கள்.

    அந்த விக்கிரமாதித்தனின் மூத்த சகோதரர்தான் ராஜா பர்த்ருஹரி. முதலில் அவர்தான் அரசராக இருந்தார். நன்கு பரிபாலனம் செய்து வந்தார். ஒரு சமயம், கடும் தவத்தின் பயனாகத் தான் பெற்ற ‘அமரக்கனி’ ஒன்றை அந்தணர் ஒருவர் ராஜா பர்த்ருஹரியிடம் கொடுத்தார். ராஜாவோ, அந்த அமரக் கனியை தமது பிரிய மனைவி ராணி பிங்களாவிடம் தந்தார். ராணியோ, அந்தக்கனியைத் தனது ஆசை நாயகனிடம் கொடுத்தாள். ஆசை நாயகனோ, அந்தப் பழத்தை அவனுக்குப் பிரிய நாயகியாக இருந்த ஒரு வேசியிடம் கொடுத்தான். அந்த வேசியோ, ராஜா பர்த்ருஹரியிடம் விசுவாசம் மிக்கவள். அவள் அந்த அபூர்வ பழத்தை அரசர்தாம் உண்ண வேண்டும் என நினைத்து, அதனை அரசனிடம் கொடுத்தாள். ராஜா பர்த்ருஹரி அதிர்ச்சியடைந்தான். ராணியிடம் தான் கொடுத்த பழம் மீண்டும் எப்படி தம்மிடமே வந்து சேர்ந்தது என்பது பற்றிய முழுவிவரத்தையும் அறிந்தான். ‘சே! இவ்வளவுதானா இந்த உலகம்!’ என நினைத்து வாழ்க்கையில் விரக்தியடைந்தான். ராஜ்யத்தை, தம்பி விக்கிரமாதித்தனிடம் ஒப்படைத்து விட்டு, வைராக்ய சீலனாக ஆகி, துறவறம் பூண்டான். முற்றும் துறந்த நிலையில், யோகியாக மாறிய பர்த்ருஹரி, பல கிரந்தங்களை வடமொழியில் இயற்றினார். அவற்றில் அவர் படைத்த ‘நீதிசதகம்’ மற்றும் ‘வைராக்ய சதகம்’ முக்கியமானவை. எளிமையான, மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு இவை சிறந்த வழி காட்டிகளாக இருக்கின்றன.

    வைராக்ய சதகத்திலிருந்து ஒரு சில கவிதைத் துளிகளை இங்கு காண்போம்.

    நான்கு வரியில் நாடகம் ஒன்றை ஒரு கவிதையில் காண்கிறோம்.

    பட்டாடை தரித்த ராஜா ஒருபுறம். மரவுரி அணிந்த துறவி ஒருபுறம். துறவி கூறுகிறார்: ‘ராஜாவே பட்டாடையில் நீ சுகம் காண்கிறாய். மரவுரியில் நான் சுகம் காண்கிறேன். ஆக, இருவருக்கும் கிடைக்கும் இன்பம் ஒன்றுதான். மனது நிறைவு பெற்றால் இவ்வுலகில், யார் ஏழை? யார் பணக்காரன்?’ இந்தக் கருத்து கொண்ட வடமொழிக் கவிதையை தமிழில் வடிப்போமா?

    “பட்டுடை அணியும் நீயும், மரவுரிதரித்த நானும்
    அரசனே, அடையும் இன்பம் ஒன்றுதான் என்று காணாய்
    அளவிலா ஆசைகொண்டோன் அவனே ஏழையாவான்
    மனநிறைவு எய்திவிட்டால், ஏழை யார்? செல்வன் யார்?

    எவ்வளவு உண்மையான வார்த்தைகள்! பேராசைதான் மனிதனின் அனைத்துக் கஷ்டங்களுக்கும் காரணமாக இருக்கிறது. ஆசை நம்மை எப்படியெல்லாம் ஆட்டுவிக்கிறது என்பதை பர்த்ருஹரி இன்னொரு கவிதையில் சுட்டிக்காட்டுகிறார்.

    மமதை கொண்ட பணக்கார்களின் தயையைப் பெற அவர்களுடைய சுடு சொல்லையும், அவமதிப்பையும் பொறுத்துக் கொள்கிறோம். பொங்கிவரும் கண்ணீரை அடக்கி, அவர்கள் முன் பல்லிளித்து நிற்கிறோம். பணத்திமிர் கொண்ட மடையர்கள் காலிலே விழுகிறோம்; தொழுகிறோம். ஆசையின் பிடியில் சிக்கி எல்லா அவமானங்களையும் தாங்கிக் கொள்கிறோம் என்கிறார் பர்த்ருஹரி.

    “செருக்குற்றார் தயை நாடி அவர்தம்
    சுடுசொல் பொறுத்தேன்;
    பொங்கிவந்த கண்ணீர் அடக்கி முறுவல் பூத்தேன் –
    மனம்மிக நொந்து நானும் வெறும் கைதொழும்
    கருவியானேன் –
    அடங்கா ஆசையே! இன்னும் எங்ஙனம்
    என்னை ஆட்டுவிப்பாயோ?”

    பர்த்ருஹரியின் இந்தக் கருத்தைப் படிக்கும் போது, பழைய தமிழ்ப் பாடல் ஒன்று நினைவுக்கு வருகிறது.

    கல்லாத ஒருவனை நான் கற்றாய் என்றேன்
    காடெறியும் அவனை நாடாள்வாய் என்றேன்
    பொல்லாத ஒருவனை நான் நல்லாய் என்றேன்
    போர் முகத்தை அறியானைப் புலியே என்றேன்
    மல்லாரும் புயன் என்றேன் சூம்பல் தோளை
    வழங்காத கையனை வள்ளல் என்றேன்
    இல்லாது சொன்னேனுக்கு இல்லையென்றான்
    யானும் என்றன் குற்றத்தால் ஏகின்றேனே.

    ஆசையற்ற மனிதன் எப்படி இருப்பான் என்பதையும் படம் பிடித்துக் காட்டுகிறார் பர்த்ருஹரி. திடீர் செல்வந்தர்களின் தகாத செயலையும் பேச்சையும் அவன் சகித்துக் கொள்ள மாட்டான். ஏனெனில், அவனுக்கு எளிமையான வாழ்க்கையின் மேன்மை நன்கு புரிந்திருக்கிறது.

    “உண்ணக் கனியுண்டு, பருக நீருண்டு
    உறங்கத் தரையுண்டு, மரவுரியும் உண்டு உடுக்கவே.
    பணம் கண்ட புதுமையிலே மமதையுடன் கொக்கரிக்கும்
    மதியீனர்களின் அவச்சொல்லைப் பொறுப்பேனோ!”

    ஆசை அடங்கிவிட்டால் வீண்பயம் ஒழிந்துவிடும் அல்லவா! ஆனால், ஆசையால் பீடிக்கப்பட்ட மனிதர்கள் தவறான பாதையிலேயே செல்கின்றனர் என்பதை வருத்தத்துடன் சுட்டிக்காட்டுகிறார் பர்த்ருஹரி.

    ‘புலிபோல் பயமுறுத்தும் மூப்பு பதுங்கிக் காத்திருப்பினும்
    பகைவர்போல் பாயும் ரோகம் உடலைச்சுற்றி இருப்பினும்
    ஒழுகும் பானைநீர்போல் ஆயுள் கசிந்து கொண்டிருப்பினும்
    தீமையே இழைப்பர் மாந்தர்,
    இதுவன்றோ விந்தையிலும் விந்தை!’

    மனித வாழ்வின் அநித்யத்தை அறிந்து கொள்ளுங்கள் என்கிறார் பர்த்ருஹரி.

    மனிதனின் ஆயுள் ஆண்டுகள் நூறே
    ஆயுளில் பாதி கழிகிறது இரவில்
    அதனில் பாதி பால்யமும் முதுமையும்
    எஞ்சுவதில் மிஞ்சுவது பிணியும், துன்பமும்
    நீர்அலைபோல் நிலையற்ற மானிட வாழ்வில்
    சுகம் தான் என்னே? அறியோமே.

    இதே கருத்தில் உள்ள தொண்டரடிப்பொடி ஆழ்வாரின் பாசுரம் ஒன்றைப் பார்ப்போமா?
    “வேத நூற் பிராயம் நூறு மனிசர்தாம் புகுவரேலும்
    பாதியும் உறங்கிப் போகும்; நின்றதில் பதினையாண்டு
    பேதை பாலகனதாகும்; பிணி, பசி, மூப்புத் துன்பம்
    ஆதலால் பிறவி வேண்டேன் அரங்கமா நகருளானே!”

    சான்றோர்களின் கருத்துக்கள் ஒத்திருப்பதில் அதிசயமில்லையே! எந்த மொழியில் இருந்தாலும், விவேகிகளின் வார்த்தைகள் வாழ்க்கையைப் பண்படுத்தும் என்பதில் ஐயமில்லை. வடமொழியோ, தமிழோ, ஹிந்தியோ, ஆங்கிலமோ, மொழிபேதம் பாராமல், நல்ல கருத்துக்களைப் படித்துப் பயன்பெறுவோம்.

    Share
  • செய்திகள் வாசிப்பது …

    எஸ். வி. நாராயணன்.

    S.V. Narayananஎழுபதுகளின் பிற்பகுதியிலே புதுச்சேரியில் வானொலி நிருபராக நான் பணியாற்றிக் கொண்டிருந்தேன். அப்போது, இட்லிக்கடை வைத்துப் பிழைத்துக் கொண்டிருந்த ஒரு பெண்மணி, வங்கிக்கடன் பெற்று தம்முடைய தொழிலை அபிவிருத்தி செய்ய முனைந்தது பற்றிய ஒரு செய்தியை வானொலி ஒலிபரப்பியது. இட்லிக்கடை பற்றி கூட செய்தியில் வருகிறதே என ஓரிருவர் கிண்டலாகக் கேட்டதுண்டு. ஏழை, எளியோருக்கு உதவும் வகையில் வங்கி சேவைகள் மாற்றமடைந்து வருவதை மக்களுக்குத் தெரிவிப்பதற்காகவே அந்த செய்தி வெளியிடப்பட்டது என குறை கூறியவர்களுக்கு பதிலளித்தோம். முதலில் கேலி செய்தவர்கள், பின்னர் அத்தகைய செய்திகள் வெளியிடுவதன் அவசியத்தைப் புரிந்துகொண்டனர்.

    மீன்பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவர் புயலில் சிக்கி மரணத்தின் விளிம்பிலிருந்து மீண்ட தகவலை அவரது வாய் மொழியாகவே ஒலிபரப்பியபோது, அந்தச் செய்தி பல நெஞ்சங்களை உருக்கியது. அதேபோல, புதுவை ஜிப்மர் மருத்துவமனையில், அன்றைய கால கட்டத்தில் கடினம் என்று கருதப்பட்ட கண் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டது பற்றிய செய்தி ஒலிபரப்பானது. பல நாட்களுக்குப் பிறகும் அந்தச் செய்தியை பலர் நினைவுகூர்ந்தனர்.

    புதுவையில் கம்பன் விழா ஒருமுக்கியமான நிகழ்ச்சி. அந்த விழா பற்றிய தகவல்கள் மாநில செய்தியில் மட்டுமன்றி தில்லியிலிருந்து ஒலிபரப்பாகும் தமிழ் செய்தியிலும் இடம் பெற்றபோது புதுவை தமிழன்பர்கள் பலர் மகிழ்ச்சி அடைந்தனர்.

    இந்த எளிய உதாரணங்களை இங்கு குறிப்பிடுவதன் நோக்கம், செய்தி என்பது அரசியல்வாதிகளைச் சுற்றி நடப்பது மட்டுமல்ல என்பதைச் சுட்டிக்காட்டவே. அரசியல்வாதிகள் தும்மினாலும், தூங்கினாலும் அவை முதற்பக்க செய்தியாகிவிடுகின்றன. திரையுலகத் தேவதைகளின் கிசுசிசுக்கள் ‘கட்டம்’ போட்டு வெளியிடப்படவேண்டியவை ஆயிற்றே. கொள்ளை, கொலை, கற்பழிப்பு இவை பற்றிய செய்திகள் இல்லாவிட்டால் பத்திரிகைகளின் விற்பனை சரிந்துவிடுமே. இத்தகைய ‘பெரிய பெரிய’ விஷயங்கள் இருக்கும்போது, ‘சின்ன சின்ன’ விஷயங்களை கவனிப்பவர் யார்? தவிர, ‘பெரிய’ விஷயங்களைத் தொகுத்தளிப்பது அவ்வளவு சிரமமான காரியம் அல்ல. அரசியல்வாதிகள் பேட்டி அளிப்பார்கள். பத்திரிகையில் போடுவதற்கு ஏற்றவாறு அறிக்கைகள் தருவார்கள். நிருபர்களுக்குத் தக்க வசதிகளையும் செய்து தருவார்கள். பின்னர் என்ன? அந்தச் செய்திகள் பத்தி பத்தியாக வெளிவருவதில் ஆச்சரியம் என்ன. காவல் துறை அதிகாரிகளை அணுகினால் கொலை, கொள்ளை போன்ற சமுதாய அவலங்கள் பற்றிய செய்திகள் கிடைத்துவிடும். விலாவாரியாகப் போட்டுவிடலாம். ஆனால், எங்கோ ஒரு மூலையில் சப்தமின்றி செயல்பட்டு, சாதனை புரிந்து வரும் சாதாரண மக்களைப் பற்றிய தகவல்களைத் தேடிப்பிடித்துத்தான் போடவேண்டியிருக்கும். அதே போல மக்களுக்குத் தேவையான, அவர்களுக்குப் பயன்படக்கூடிய செய்திகளை திரட்டிட மிகுந்த முயற்சிகள் மேற்கொள்ள வேண்டியிருக்கும். அதற்காக கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும்.

    செய்திகள் திரட்டுவோருக்கு மற்றொரு முக்கிய பொறுப்பும் உண்டு. மக்களின் மேம்பாட்டுக்காக அரசு கோடி கோடியாக ஆண்டுதோறும் செலவழிக்கிறது. ஆனால், இதில் 15 சதவிகிதம் கூட மக்களைச் சென்றடைவதில்லை என்று மூத்த அரசியல் தலைவர்களே கூறியிருக்கிறார்கள். அரசு திட்டங்கள் பற்றி தொடர்ச்சியானதொரு கணிப்பு இருக்கவேண்டாமா? சட்டமன்றம், நீதித்துறை மற்றும் நிர்வாகத்துறையோடு, ஜனநாயகத்தின் முக்கியமான நான்காவது தூணாக விளங்கும் பத்திரிகைத்துறை இந்தப் பொறுப்பை ஏற்று, அரசு செய்யும் தவறுகளைச் சுட்டிக்காட்டவேண்டாமா? அரசு திட்டங்கள் விஷயத்தில் தற்போதைய அணுமுறையை எப்படி இருக்கிறது தெரியுமா? பத்திரிகைகள், ரேடியோ, டெலிவிஷன் போன்ற வெகுஜன தகவல் தொடர்பு அமைப்புகள் பெரும்பாலும் அரசு தரும் தகவல்களை வெளியிடுவதோடு தங்களுடைய பொறுப்பு தீர்ந்துவிட்டதாக நினைக்கின்றன. திட்ட நிறைவேற்றம் பற்றி, நடுநிலையில் நின்று, அவ்வப்போது தக்க செய்திகளை அளிக்க அவை அதிகமாக முன்வருவதில்லை. அரசின் திட்டங்களை விமர்சனம் செய்தால் அரசின் விளம்பர ஆதரவு, மற்றும் கிடைக்கக்கூடிய இதர வசதிகள் பாதிக்கப்படுமோ என்ற அச்சம் ஓரளவு இருக்கலாம். மேலும், அத்தகைய கணிப்புகளை மேற்கொள்ள போதிய வசதியின்மை ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால், பொதுவாக ஒருவித அக்கறையின்மை அல்லது மெத்தனம் காரணமாகவே இத்தகைய முயற்சிகள் தீவிரமாக மேற்கொள்ளப்படுவதில்லை என்றே கூறவேண்டும்.

    மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொறுப்பு தங்களுக்கு உண்டு என்பதை பத்திரிகை உலகம் உணர்ந்தால் நமது ஜனநாயகம் வலுப்பெறும் என்பதில் ஐயமில்லை. உதாரணமாக, பல ‘இலவச’ திட்டங்களை இன்று காண்கிறோம். இந்த திட்டங்கள் நல்லதா? இவற்றால் மக்களுக்குப் பயன்கிட்டுகிறதா? குளறுபடிகள் ஏதுமின்றி இத்திட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றனவா? இதுபற்றி நடுநிலையிலான ஒரு கணிப்பை பத்திரிகைள் தருவது எவ்வளவு பொருத்தமாக இருக்கும். அரசுப் பணிகள் மட்டுமின்றி, ஒரு சமூகத்தின் செயல்பாடுகளை ஆக்கபூர்வமாக அலசும் தன்மையையும் பத்திரிகைகள் வளர்த்துக் கொள்ளவேண்டும். கல்வியறிவு பெருகிவரும் இந்நாளிலும் பற்பல மூடநம்பிக்கைகள், அருவருக்கத்தக்க பழக்க வழக்கங்கள் இருந்து வருகின்றன. தலையில் தேங்காய் உடைத்தல், குழி மாற்றுத் திருவிழா, வழிபாடு என்றபெயரில் பிராணிகளை பலி கொடுக்கும் போக்கு இவையெல்லாம் இன்னமும் தொடருகின்றன. சாதிப் பிரச்சினைகள் ஓய்ந்தபாடில்லை. பெண்களுக்கு எதிரான கொடுமைகள் குறையவில்லை. குழந்தைகளின் உரிமைகள், சில சமயம், பெற்றோர்களாலேயே பறிக்கப்படுகின்றன. இத்தகைய அவலங்கள் நீங்கினால்தான் ஒரு சமூகம் விரைவாக முன்னேற முடியும். மக்களிடையே விவேகம், பரஸ்பர நல்லுணர்வு, வளமான சிந்தனைகள் இவற்றை ஊக்குவிப்பதில் வெகுஜனத் தொடர்பு சாதனங்கள் ஓரளவாவது அக்கறை காட்டவேண்டாமா?

    ‘மீடியாவின்’ சக்திபற்றி எவரும் எடுத்துக் கூறவேண்டியதில்லை. கத்திமுனையைவிட பேனாவின் முனை வலிமைமிக்கது என்பதை அனைவரும் உணர்ந்திருக்கிறார்கள். ஆனால், ‘மீடியா’ அமைப்புகள் தங்கள் வலிமையை சமுதாய முன்னேற்றத்திற்காகப் பயன்படுத்துகின்றனவா என்பது ஒரு கேள்விக்குறியாகவே இருக்கிறது.

    பத்திரிகைகள், டெலிவிஷன், ரேடியோ அனைத்தும் இப்போது விளம்பர வலையில் சிக்கியிருக்கின்றன. விளம்பரங்கள் தேவைதான். வணிகத் தகவல்கள், வேலை வாய்ப்பு குறிப்புகள், திருமண வாய்ப்புகள் போன்ற பல செய்திகள் விளம்பரங்கள் மூலம் கிடைக்கத்தான் செய்கின்றன. ஆனால், விளம்பரங்களின் ஆக்கிரமிப்பு இப்போது செய்திகளையே மூழ்கடித்துவிடும் போலிருக்கிறது. எந்த ஒரு டெலிவிஷன் சேனலிலும் செய்தி அரை மணி என்றால் அதில் பாதி நேரத்திற்குமேல் விளம்பரங்கள். ஷாம்பூ, மெதுபானங்கள், சிவப்பழகு கிரீம் போன்றவற்றிற்கான விளம்பரங்கள் திரும்பத் திரும்ப, அலுத்துப்போகும் அளவுக்கு வருகின்றன. செய்திகளிடையே விளம்பரம் என்ற நிலைமாறி விளம்பரங்களிடையே செய்தி என்ற மாற்றம் ஏற்பட்டு வருகிறது.

    விளம்பரங்களைப்பற்றிக் குறிப்பிடுகையில் மற்றெhரு அம்சத்தையும் சொல்ல வேண்டியிருக்கிறது. புகைபிடித்தலும், புகையிலையை உபயோகித்தலும் உடல் நலத்திற்கு தீமை என்பது அனைவராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட கருத்து. புகையிலையின் தீங்குகள் பற்றி பத்திரிகைகள் தலையங்கங்கள் எழுதுகின்றன. நீண்ட கட்டுரைகளையும் வெளியிடுகின்றன. அதே நேரத்தில், கவர்ச்சிமிக்க சிகெரெட் விளம்பரங்களை பெரிய அளவில் வெளியிட பத்திரிகைகள் தயங்குவதில்லை. எந்தவிதத்தில் இது நியாயம் எனத் தெரியவில்லை. ‘படிப்பது ராமாயணம், இடிப்பது பெருமாள் கோவில்’ என்பதுபோல இருக்கிறது இது. மதுபான விளம்பரங்கள் கூடாது என அரசு வலியுறுத்துகிறது. ஆனால், அத்தகைய விளம்பரங்கள் ஏதாவது ஒருவகையில் வந்து கொண்டுதான் இருக்கின்றன.

    புகைப்படங்களின் உபயோகம் பற்றியும் இங்கு கூறவேண்டும். ஒரு பக்கம் எழுதினால் கூடத்தெரிவிக்க முடியாத ஒரு கருத்தை நல்ல படம் ஒன்று தெளிவாக்கிவிடும் என்பார்கள். ஆனால், இப்போதெல்லாம், செய்திக்காக படம் போடுவதைவிட, வெறும் கவர்ச்சிக்காகவோ, இடத்தை நிரப்புவதற்காகவோ புகைப்படங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஆப்பிரிக்காவில் ஒட்டைச்சிவிங்கி குட்டி போட்ட செய்தியும், சீனாவில் மாடு ஒன்று தெருவில் மிரண்டு ஓடிய செய்தியும் டெலிவிஷனில் ஒளிபரப்பப்படுகிறது என்றால் அதற்குக் காரணம் அந்நிய ஏஜன்சிகள் மூலம் அந்தப்படம் கிடைப்பதுதான். படம் கிடைக்கிறது. தேவையா என உரசிப்பார்க்காமல் போட்டு விடுகிறார்கள். இடத்தை நிரப்பி விடுகிறார்கள்.

    இன்று மீடியா ஏகமாக வளர்ந்திருக்கிறது. எத்தனை பத்திரிகைகள். எவ்வளவு டெலிவிஷன் சேனல்கள். ரேடியோ அமைப்புகளும் பெருக ஆரம்பித்து விட்டனவன்றோ. இந்த ‘மீடியா’ சக்தி, கவர்ச்சிக்கும், விளம்பரத்திற்கும் பலிபோகாமல் இருந்தால், மக்களுக்கு ஆக்கபூர்வமாக பணியாற்றிட முடியும். இல்லையெனில், பொதுத் தொண்டு ஆற்றவந்த அரசியல் வாதிகள் போல, ‘மீடியாவும்’ திசைமாறிச் சென்றுவிடும்.

    Share
  • ‘அந்த நாள் ஞாபகம் வந்ததே’

    எஸ்.வி.நாராயணன்.

    எண்பது வயதை எட்ட இன்னும் ஓரிரு ஆண்டுகளே உள்ள இந்நிலையில், கடந்து வந்த காலத்தை சற்று நினைத்துப் பார்க்கிறேன். பள்ளியிலும், கல்லூரியிலும் படித்த நாட்களை மறக்க முடியுமா?

    முதலில், மேற்கு மாம்பலத்தில், அப்போது இருந்த ஸ்ரீதேவி பாடசாலை என்ற ஆரம்பப் பள்ளியில் ஐந்தாவது வகுப்பு வரை படித்தேன். பின்னர், தியாகராயநகரில் பனகல் பார்க் எதிரில் உள்ள ஸ்ரீராமகிருஷ்ணா மிஷன் உயர்நிலைப்பள்ளியில் பத்தாவது வகுப்பு வரை. அடுத்து தாம்பரம் கிறிஸ்துவக் கல்லூரியில் பட்டப்படிப்பு. அந்த நாளைய ஸ்தாபனங்கள் கல்வி போதிப்பதை பெரும்பாலும் ஒரு தொண்டாகவே செய்து வந்தன. சொன்னால் நம்பமாட்டீர்கள்! அப்போதெல்லாம் ஆரம்ப வகுப்புகளுக்கான மாத கட்டணம் மூன்று ரூபாய்க்கு மேல் இருக்கவில்லை; உயர்நிலைப்பள்ளியில் மாத கட்டணம் பத்து ரூபாய்க்கும் குறைவு. கல்லூரியில், காலாண்டுக் கட்டணம் 80 ரூபாய் அளவில் இருந்ததாக நினைவு.

    மாணவர்களிடமிருந்து நன்கொடை வசூலிக்கும் பழக்கமே அப்போது இருந்ததில்லை. சீருடை புத்தகம், நோட்டு இத்யாதிகள் பெயரில் மாணவர்களிடமிருந்து பணம் பிடுங்கும் போக்கு அப்போது இல்லை. பள்ளியிலும், கல்லூரியிலும் சேருவதற்காக குறுக்கு வழிகளை நாடும் போக்கு அப்போது அனேகமாக இருந்ததில்லை. பத்தாம் வகுப்பு வரை, ஆங்கில மொழி பாடத்தைத் தவிர, இதர பாடங்கள் அனைத்தும் தமிழிலேயே நடத்தப்பட்டன. பள்ளியில் தினமும் நடந்த காலைக் கூட்டத்தில், பிரார்த்தனைக்குப் பிறகு, தலைமையாசிரியரோ, வேறு பெரியவர்களே நல்ல விஷயங்களை, உபயோகமான கருத்துக்களை அழகாக எடுத்துச் சொல்வர், அப்படியிருந்தன அந்த நாட்கள்.

    ஸ்ரீராமகிருஷ்ணா மிஷன் பள்ளியிலும், கிறிஸ்துவக் கல்லூரியிலும் பயின்ற நல்ல விஷயங்களை இன்றும் பெருமையுடன் நினைத்துப் பார்க்கிறேன். அன்று, கிறிஸ்துவக் கல்லூரியில் ஒரு இளம் விரிவுரையாளர் மூலம் மனிதநேயத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொண்டோம். அந்த இளம் விரிவுரையாளர் தாம்பரத்திலிருந்து அடிக்கடி கிண்டிக்குச் செல்வார். அப்போது மாணவிகளின் ஹாஸ்டல் அங்கு இருந்தது. சில குறும்புத் தன்மை கொண்ட மாணவர்கள் விரிவுரையாளரை, அவர் அறியாமல், பின்பற்றிச் சென்றனர். அவர்கள் கண்டது அவர்களைப் பிரமிக்க வைத்தது. அந்த விரிவுரையாளர் காட்டிய அன்பு ஒரு பெண்ணிடம் அல்ல; கிண்டியில், ஒரு தொண்டு இல்லத்தில் இருந்த நோயாளிக்கு அவர் அன்புடன் பணி செய்ததை அவர்கள் கண்டனர். அன்றைய தினத்திலிருந்து, அவர் எப்போது வகுப்பு எடுக்க வந்தாலும் அவரிடம் ஒரு தனி மரியாதையுடன் மாணவர்கள் நடந்து கொண்டனர். மணிக்கணக்காகப் போதனைகள் செய்தாலும் மனதில் படியாத ஒரு விஷயத்தை மனித நேயப் பண்பை, அந்த விரிவுரையாளர் தம்முடைய தன்னலமற்ற செயல் மூலம் மாணவர்களுக்குப் புரிய வைத்தார்.

    அப்போதிருந்த ஆசிரியர்கள், பாடங்களை நடத்துவதோடு இலக்கியம், இசை, விளையாட்டு போன்ற விஷயங்களிலும் மாணவர்கள் ஈடுபட ஊக்கம் அளித்தனர். அதனால், படிப்பு ஒரு சுமையாக இருக்கவில்லை. நூற்றுக்கு நூறு மார்க் வாங்குவதுதான் மாணவர்களின் லட்சியமாக இருக்க வேண்டும் என்றெல்லாம் ஆசிரியர்கள் வற்புறுத்தியதில்லை. மாணவர்களின் இயற்கையான திறமையை வளர்ப்பதில் கூடியமட்டும் அக்கறை காட்டினார்கள். அப்போதெல்லாம் நூற்றுக்கு அறுபது மதிப்பெண்கள் பெற்றாலே ஆசிரியர்களும் பெற்றோர்களும் பாராட்டுவர். இப்போது 90 சதவீத மதிப்பெண்கள் பெற்றாலும் திருப்தி ஏற்படுவதில்லை.

    படிப்புக்குப் பிறகு வேலை. நல்ல உத்தியோகம் கிடைப்பது. இப்போது போல், அப்போதும் குதிரைக் கொம்பாகத்தான் இருந்தது. மாதம் இருநூறு ரூபாய் சம்பளம் கிடைத்தாலே பெரிய விஷயம். ஆயிரம் ரூபாய் சம்பளம் எல்லாம் அபூர்வம். ஆனால், அந்த நாட்களில் விலைவாசி கட்டுக்குள் இருந்தது. அன்றைய விலைவாசி நிலையைப் பற்றிக் கேட்டால் வியப்படைவீர்கள். மத்திய அரசுப் பணியில் சேருவதற்காக 1962-63-ல் நான் புதுதில்லி சென்றேன். அங்கு கரோல் பாக் பகுதியிலிருந்த ஒரு விடுதியில் (Mess என்பர்) நான் தங்கினேன். இருப்பதற்கு இடம், காலையில் காப்பி, தயிர், அப்பளம், பொரியலுடன் இரண்டு வேளை முழுச்சாப்பாடு – இதற்காக நான் கொடுத்த மாத கட்டணம் எவ்வளவு தெரியுமா? எண்பதே ரூபாய் தான். இன்று அத்தொகை ஒரு வேளை சிற்றுண்டிக்குக் கூட போதாது எனலாம். 1990 வரை விலைவாசி ஒரு கட்டுக்குள்தான் இருந்தது. 1975 முதல் 1981 வரை நான் புதுச்சேரியில் வானொலி நிருபராகப் பணியாற்றிக் கொண்டிருந்தேன். வீட்டு வாடகையாக (தனி வீடு) ரூ.75- கொடுத்ததாக ஞாபகம். ஐந்து பேர் அடங்கிய எங்கள் குடும்பத்திற்கு மாத மளிகைச் செலவு நூறு ரூபாய்க்கு மேல் போனதில்லை. அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் வகைகள் அனைத்தும் நியாயமான விலையில் கிடைத்தன. காய்கறிகள் மலிவான விலையில் கிடைத்தன. அரை லிட்டர் பாலின் விலை ஒரு ரூபாய்க்கும் குறைவு. கையில் ஒரு ரூபாய் இருந்தால் போதும்; ஹோட்டல்களில் திருப்தியாகச் சாப்பிடலாம்.

    சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன் வரை, விலைவாசி சற்று ஏறுமுகமாக இருந்தது என்றாலும், நிலைமை இப்போது இருப்பது போல் அவ்வளவு மோசமாக இல்லை. 1995-ல் என்னுடைய மகளின் திருமணம் நடந்தது. நகைகள், துணிமணி, சத்திரத்துக்கான கட்டணம், சீர்செனத்தி முதலிய அனைத்துக் கல்யாணச் செலவும் ஒன்றரை லட்சம் ரூபாய்க்கு மேல் போகவில்லை. அந்தக் கல்யாணத்திற்கான மளிகைச் செலவு பத்தாயிரம் ரூபாய்தான். கடந்த பத்து, பதினைந்து ஆண்டுகளாகத்தான் எல்லாப் பொருள்களின் விலைகளும் விஷம் போல் ஏறிக் கொண்டே வந்திருக்கின்றன. நாளுக்கு நாள் இது இன்னும் கூடிவருகிறதே தவிர குறைவதாகக் காணோம்.

    தாராளமய பொருளாதாரக் கொள்கையின் அடிப்படையில் என்று நாம் பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு ரத்தினக் கம்பளம் விரிக்க ஆரம்பித்தோமோ, அந்த நாளிலிருந்தே நம்முடைய பொருளாதாரம் திசைமாறிச் சென்றுவிட்டது. ஒரு காலத்திலே குறைந்த செலவு பொருளாதாரம் தான் (Low cost Economy) இந்தியா போன்ற நாட்டுக்கு உகந்தது என்ற கருத்தில் நமது தலைவர்கள் உறுதியாக இருந்தார்கள். இன்று அதிகச் செலவு பொருளாதாரமே (High cost Economy) கொடி கட்டிப் பறந்து கொண்டிருக்கிறது. விலைவாசியைக் குறைப்போம் என்று சூளுரையுடன்தான் அரசியல் கட்சிகள் தேர்தலில் போட்டியிட்டு, பதவி நாற்காலியில் அமர்கின்றன. நாற்காலியைப் பிடித்தவுடன் சூளுரையை மறந்து விடுகிறார்களோ என்று எண்ண வேண்டியிருக்கிறது.

    அந்த நாட்களிலே, மருத்துவத் தொழில் இப்போது போல் ஒரு பெரிய வியாபாரமாக (Business) இருக்கவில்லை. இன்று மருத்துவ வசதிகள் பெருகியிருக்கின்றன என்ற போதிலும் மனிதநேயம் குறைந்து விட்டதோ என்று அஞ்சவேண்டியிருக்கிறது. முன்பு, பெரும்பாலான மருத்துவர்கள் மனிதாபிமானத்துடன் செயல்பட்டார்கள். உதாரணமாக, ஒரு சம்பவத்தைக் குறிப்பிடலாமென்று நினைக்கிறேன். ஒரு கால கட்டத்தில் (1950-60-ல் என்று எண்ணுகிறேன்) தியாகராய நகரில் நல்ல அனுபவமும், தேர்ச்சியும், ஆற்றலும் மிக்க ஒரு விசேஷ மருத்துவர் இருந்தார். அவரிடம் மருத்துவ ஆலோசனை பெற நீண்ட வரிசையில் நோயாளிகள் காத்திருப்பர். மருத்துவ ஆலோசனைக்காக அவர் நிர்ணயித்திருந்த கட்டணம் இரண்டு ரூபாய்தான்; மேலும் வசதியற்ற நோயாளிகளிடம் அவர் பணமே வாங்கமாட்டார் என்றும் சொல்லுவார்கள். அத்தகைய மனிதநேயம் இன்றும் எங்காவது பிரகாசித்துக் கொண்டுதான் இருக்கும். ஆனால், அதைக் கஷ்டப்பட்டு, தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டும்.

    அந்த நாட்களிலே, டிவி, தொலைபேசி, செல்போன், கம்ப்யூட்டர் போன்ற வசதிகள் இருக்கவில்லை. அதுவும் ஐம்பதுகளிலே, ரேடியோ, தொலைபேசி இரண்டும் கூட அபூர்வம். நாங்கள் இருந்த மேற்கு மாம்பலத்திலே அப்போதெல்லாம் பாதாள சாக்கடை கிடையாது. சாலைகளும் ஏனோ, தானோ என்று தான் இருக்கும். வீடுகளும் அதிகம் இல்லை. அந்தப் பகுதியிலே, அன்றைய நாட்களில், ஒரே ஒரு வீட்டில்தான் ரேடியோ இருந்ததாக நினைவு. தொலைபேசியும் ஒரே ஒரு வீட்டில்தான் இருந்தது என நினைக்கிறேன். ஆனால், இந்த வசதியின்மை எங்களை அதிகம் பாதிக்கவில்லை. மக்கள் இருப்பதைக் கொண்டு திருப்தியாக மகிழ்ச்சியாக வாழ்க்கை நடத்தினார்கள். நாள், பண்டிகை என்றால் வருவோரும், போவோருமாக எல்லா வீடுகளும் கோலாகலத்துடன் விளங்கும். நண்பர்களோ, உறவினர்களோ வந்தால் வீட்டிலுள்ள அனைவரும், வயது வித்தியாசமில்லாமல் அவர்களை உற்சாகத்துடன் வரவேற்பார்கள்.

    அன்று நடந்த ஒரு சம்பவம் என் மனதில் இன்றும் பசுமையாக நிற்கிறது. ஒரு நாள், ஒரு உறவினர் இரவு 12 மணிக்கு எங்கள் வீட்டிற்கு வந்தார். அப்போது என் தாய், தந்தையர் அவரை மனமார வரவேற்று. உட்காரவைத்து, அந்த நடு இராத்திரியில் மணக்க மணக்க ரவா கேசரி செய்து அவள் கையில் கொடுத்தனர். என் தந்தையும், அந்த உறவினரும் எல்லையற்ற சந்தோஷத்துடன் நின்ற அந்தக் காட்சி அன்று போல் இன்றும் என் மனதில் நிலைபெற்றிருக்கிறது. விருந்தோம்பலுக்கு இதைவிட வேறொரு இலக்கணம் தேவையா?

    கடந்து வந்த வாழ்க்கையில் மனதை நெகிழ வைத்த சம்பவங்கள் பல உண்டு. அவற்றில் ஓரிரண்டை குறிப்பிடலாம் என நினைக்கிறேன்.

    1956-ல் எனது தங்கையின் திருமணம் நடந்தது. மேற்கு மாம்பலம் ஜூபிலி சாலையில் இருந்த எங்கள் வீட்டிலேயே முன்னே ஒரு பெரிய பந்தல் போட்டு, கல்யாணத்தை நடத்தினர் எங்கள் பெற்றோர். அப்போது, நன்கு நாதஸ்வரம் வாசிக்கக்கூடிய உள்ளூர் கலைஞர் ஒருவரை என் தந்தை ஏற்பாடு செய்திருந்தார். அக்காலத்தில் ஜானவாச ஊர்வலம் பிரசித்தம். அருகிலிருந்த கோவிலிலிருந்து கல்யாணம் நடக்கும் இடத்திற்கு மாப்பிள்ளையை அழைத்து வருவார்கள். நாதஸ்வரமும் மேளமும் முன்னே முழங்கிச் செல்ல, மாப்பிள்ளை ஒரு அலங்கரிக்கப்பட்ட திறந்த காரில் பவனி வருவார்.

    கல்யாணத்திற்கு முதல் நாள், ஜானவாச ஊர்வலம் துவங்கி சற்று நேரத்திற்கெல்லாம் பலத்த மழை பெய்ய ஆரம்பித்தது. ஆகவே, அரைகுறையாக ஜானவாசம் முடிந்து ஊர்வலக் காரை எப்படியோ தள்ளிக்கொண்டு திருமணவீட்டுக்கு வந்து சேர்ந்தோம். மறுநாள், திருமணம் முறையாக முடிந்தவுடன், அந்த நாதஸ்வரக்காரர் என் தந்தையிடம் சொன்னார். “ஐயா, மழை காரணமாக ஜானவாச ஊர்வலத்தில் வாசிக்காதது எனக்கு ஒரு பெரிய குறையாக இருக்கிறது. ஒரு காரியம் செய்யலாமா? மாப்பிள்ளையையும், பெண்ணையும் திருமணக்கோலத்தில் தெருக்கோடியிலிருந்து மணவீட்டுக்கு நடந்து வரச் சொல்ல முடியுமா? எனது நாதஸ்வர கோஷ்டி அவர்கள் முன்னே வாசித்துச் செல்ல அனுமதிப்பீர்களா?” இவ்வாறு எழுந்த வித்தியாசமான கோரிக்கையைக் கேட்ட என் தந்தை, புன்முறுவலுடன் அதற்கு இசைந்தார். மாப்பிள்ளையும் பெண்ணும் மணக்கோலத்தில் சேர்ந்து நடைபோட, நாதஸ்வர கோஷ்டி முன்னே வாசித்துக் கொண்டு சென்றதை அனைவரும் கண்டு மகிழ்ந்தனர். அந்த நாதஸ்வரக்காரரின் உன்னதப் பண்பை இன்றும் நினைத்துப் பார்க்கிறேன்.

    அடுத்ததாக ஒரு சம்பவம். மறக்க முடியாத, நெகிழ வைத்த நிகழ்ச்சி 1965-ல், நான் தில்லியில், பெரிய பதவியில் இருந்த ஒரு மூத்த அதிகாரியின் உதவியாளனாக இருந்தேன். ஒரு நாள் அந்த அதிகாரி என்னைத் தன் அறைக்கு அழைத்தார். என் பணியில் ஏதோ ஒரு பெரிய தவறு நடந்திருப்பதை அவர் சுட்டிக் காட்டி, வெகுவாக என்னைக் கோபித்துக் கொண்டார். என்ன செய்வது என்று அறியாமல் நான் திகைத்து நின்றேன். திடீரென, அந்த உயர் அதிகாரி தம் இருக்கையை விட்டு எழுந்தார். என் தோள்கள் இரண்டையும் பற்றி, என்னை அவருடைய இருக்கையில் அமர வைத்தார். அவர் சொன்னார், “எத்தகைய முட்டாள் நான்! இன்று நான் இந்த நாற்காலியில் இருக்கிறேன்; நாளை (வருங்காலத்தில்) நீயே இந்த நாற்காலியில் அமரும் வாய்ப்பைப் பெறக்கூடும். உன் மீது அனாவசியமாகக் கோபப்பட்டு விட்டேன். i am sorry”, இவ்வாறு அவர் கூறியதைக் கேட்ட நான் மிகவும் நெகிழ்ந்து போனேன். காலில் விழாத குறையாக நான் அவரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு, என் பணியிடத்திற்கு வந்தேன். மிகுந்த பெருந்தன்மையுடனும், பண்புடனும் நடந்து கொண்ட அந்த அதிகாரியை மறக்க முடியுமா?

    மற்றொரு சம்பவம், 1974-ல் நடந்தது என நினைக்கிறேன் அப்போது தில்லியில் கரோல்பாக் பகுதியில் இருந்தேன். வீட்டு வேலைக்காக, முக்கியமாகப் பாத்திரங்களை சுத்தம் செய்வதற்கு உதவ ஒரு வயதான பெண்மணி வந்து கொண்டிருந்தார். தினமும் சுமார் அரை மணி நேரம் வேலை இருக்கும். மாதச் சம்பளம் பதினைந்து ரூபாய். ஒரு நாள் என் மனைவி அந்தப் பெண்மணிக்கு ஒரு ரூபாய் இனாமாகக் கொடுத்தாள். ஆனால், அந்தப் பெண்மணி அதை வாங்க மறுத்துவிட்டார். அவள் சொன்னாள், “அம்மா, என் வேலைக்குத் தகுந்த கூலியை நான் வாங்கிக் கொள்கிறேன். இதற்கு மேல் எதற்கு இனாம்? அந்தப் பணம் எனக்கு ஒட்டாது”. இவ்வாறு கூறிய அந்தப் பெண்மணியின் வார்த்தைகள் இன்றும் என் காதில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.

    மனித நேயமும், பண்பும், எளிமையும் நிறைந்த அந்த நாட்களை நினைத்தே காலத்தை ஒட்ட வேண்டியிருக்கிறது. ஏனெனில், இன்று இளைஞர்களின் வெளிநாடு மோகம் காரணமாகவும், கணவன்-மனைவி-குழந்தை என்ற குறுகிய வட்டத்தில் அவர்கள் தங்களை அடைத்துக் கொள்ளும் போக்கு காரணமாகவும் பல குடும்பங்களில் வயதான பெற்றோர்கள் தனித்து வாழ வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிட்டது. தனியே வாழமுடியாதவர்கள், காளான் போல் பெருகி வரும், முதியோர் இல்லங்களை நாடிச் சேருகிறார்கள். வேறு வழியின்றி அவர்கள், அந்த நாள் ஞாபகம் வந்ததே என்று பழைய நாட்களை அசைபோட்டுக்கொண்டு, என்று விடுதலை கிடைக்கும் என்ற ஒரு ஏக்கத்துடன் காலத்தைத் தள்ளிக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலை என்று மாறுமோ?

    Share
  • ஆழ்வார்களை ஆட்கொண்ட கண்ணன் – 4

    — எஸ். வி. நாராயணன்.

    Krishnan with butterகிருஷ்ணணாகிய ஆயர் குழந்தையின் அழகையும், அவனுடைய நீர்மையையும் அந்த அரங்கனிடம், அந்த நம்பெருமாளிடம், கண்ட தொண்டரடிப் பொடியாழ்வார், அரங்கனைத் தவிர வேறு எந்த அர்ச்சா ரூபத்தையும் பாடாத தொண்டரடிப் பொடி ஆழ்வார்,

    ‘பச்சைமா மலையோல் மேனி பவளவாய்
    கமலச்செங்கண், அச்சுதா, அமரர் ஏறே
    ஆயர்தம் கொழுந்தே என்னும் இச்சுவை தவிர
    யான்போய் இந்திரலோகம் ஆளும், அச்சுவை
    பெறினும் வேண்டேன்”
    என்று அடித்துக் கூறுகிறார்.

    ஆழ்வார்கள் எல்லோரும் கண்ணனின் பல்வேறு லீலைகளை நினைந்து, நினைந்து உள்ளம் உருகிப் போந்தனர். காளியன்மீது அவன் களிநடம் புரிந்ததை அவர்கள் அப்படி வர்ணிக்கிறார்கள். ஆச்சர்யமாக வருணிக்கிறார்கள்.

    யமுனை நதியில் மடு ஒன்று இருந்தது. அதில் காளிங்கன் என்ற சர்ப்பராஜன் தன் குடும்பத்தோடு வாழ்ந்து வந்தான். அவன் மிகுந்த விஷமுள்ளவன். அவன் மூச்சுக்காற்று பட்டு கரையில் உள்ள மரம் செடி, கொடிகள் எல்லாம் தீய்ந்து போயினவாம். ஆகவே, அந்தப்பக்கம் எவரும் செல்லமுடியாத நிலை. இதை அறிந்து கொண்ட கிருஷ்ணன், அந்த மடுவில் குதித்து காளிங்கனை அடக்கி அவனுடைய தலைமேல் ஏறி நின்றான். காளிங்கனுக்கு மூச்சு முட்டியது. உயிர் பிச்சை கொடுக்கும்படி காளிங்கன் மன்றாடினான். அவன் குடும்பத்தாரும் மிக்க இறைஞ்சினர். அந்த மடுவை விட்டு வேறு இடத்திற்கு, சமுத்திரத்திற்கு செல்லுமாறு காளிங்கனை கிருஷ்ணன் பணித்தான். காளியனும் அவ்விதமே சென்று ஒழிந்தான். இதைப் பெரியாழ்வார் எப்படி அனுபவிக்கிறார் பாருங்கள்:

    ‘காளியன் பொய்கை கலங்கப் பாய்ந்திட்டு
    அவன் நீள்முடி ஐந்திலும் நின்று நடஞ்செய்து
    மீள அவனுக்கு அருள் செய்த வித்தகன்
    தோள்வலி வீரமே பாடிப்பற! தரமணி
    வண்ணனைப் பாடிப்பற !
    அருள் செய்த வித்தகன்’ என்று கொண்டாடுகிறார் ஆழ்வார்.

    கண்ணபிரான் காளியன் என்னும் பாம்பை அடக்கினான். ‘உரவு நீர்ப் பொய்கை நாகம் காய்ந்ததும்’ இன்னும் பற்பல ஆச்சரியமான செய்கைகள் செய்ததையும் இரவும் பகலும் நினைத்து அனுபவிக்கிறேன். இனி எனக்கு என்ன குறை என்கிறார் நம்மாழ்வார்.

    கண்ணன், குன்றமேந்தி குளிர்மழை காத்த அந்த வைபவத்தை ஆழ்வார்கள் பல்கிப் பல்கிப் பேசுகிறார்கள். “குன்று குடையாய் எடுத்தாய். குணம் போற்றி என்கிறாள் ஆண்டாள்.

    பிருந்தாவனத்தில் ஆண்டுதோறும் இந்திரனுக்கு விழா எடுப்பது வழக்கம். விழாவுக்காக குறித்த நாளும் வந்தது. மூன்று உலகங்களுக்கும் தானே அதிபதி என்று இந்திரன் கர்வம் கொண்டிருந்தான். அந்த கர்வத்தை அடக்க வேண்டுமென்று கண்ணன் எண்ணங் கொண்டான்.

    கண்ணனின் யோசனைப்படி, இந்திர விழாவை நாராயண விழாவாக, நாராயணனுக்கே பூஜை நடத்தும் விழாவாக, நடத்த முடிவு செய்யப்பட்டது. மேலும் கிருஷ்ணன் கூறியபடி, ஆவினங்கள் விரும்பும் புல் முதலியவற்றைத் தந்து, மழை பொழியச் செய்யும் கோவர்த்தன கிரியை வழிபடுவது என ஆயர்கள் முடிவு செய்தார்கள். பூசைக்கு வேண்டிய அனைத்தையும் செய்து முடித்து, மலையை வணங்கி வழிபாடு செய்தனர்.

    இதைக் கண்ட இந்திரன் கடும் கோபம் கொண்டு கோகுலத்து மக்களை தண்டிக்க முற்பட்டான். மழையான மழை கொட்டியது. கல்மாரியோ என மழை பெய்தது. கோகுலத்து மக்கள் நடுநடுங்கிப் போயினர். கிருஷ்ணனிடம் அனைவரும் போய் முறையிட்டனர். ‘பயப்பட வேண்டாம்’ என்று அவர்களைத் தேற்றிய கண்ணன், கோவர்த்தனம் என்ற அந்தப் பெருமலையை பெயர்த்து எடுத்தான். அதை குடை போல உயர்த்தி தன் சுண்டு விரலில் தாங்கிக் கொண்டான். ஏழு நாட்கள் விடாது மழை பெய்தது. பகவான் பர்வதத்தை குடையாக பிடித்துக் கொண்டிருப்பதையும், அதன் அடியில் கோகுல மக்கள் கவலையின்றி தங்களுடைய வேலைகளை கவனித்துக் கொண்டிருப்பதையும் இந்திரன் பார்த்தான்.

    பகவானின் பெருமை தெரியாமல் பிழை செய்தோமே என வருந்தி கண்ணனிடம் மன்னிப்பு கேட்டான். மழையும் ஒய்ந்தது. சகஜ நிலை திரும்பியது. இந்த சம்பவத்தை, ‘அட்டுக்குவி சோற்றுப் பருப்பதமும், தயிர் வாவியும் தெய் அளரும் அடங்கப் பொட்டத் துற்றி, மாரிப்பகை புணர்த்த பொருமா கடல் வண்ணன் பொறுத்தமலை,’ என்கிறார் பெரியாழ்வார்.

    இடையர்கள் தேவேந்திரனுக்கு படைத்த உணவை உண்டாய். அழகியமலையை குடையாகத் தூக்கி மழை தடுத்தாய். உன்மாயச் செயல்களை எண்ணும்போது என் நெஞ்சு நெருப்பில் இட்ட மெழுகு போல் உருகுகிறது என்கிறார் நம்மாழ்வார். இந்த ரீதியிலே, பூமியில் பிறந்து உலகத்தைக் காத்தளிக்கும் பேரருட் கண்ணனின் குணத்தால் உருகும் ஆழ்வார்களின் பாசுரங்கள் பக்தி ஒளியை பாய்ச்சி நமது உள்ளங்களின் இருட்டை அகலச் செய்யுமன்றோ!

    கண்ணன் என்றாலே அந்த குழல் ஊதும் கண்ணனின் நினைப்புதானே வருகிறது. கையில் குழல் ஏந்தி காட்சியளிப்பவன் அன்றோ அவன். அவன் குழல் ஊதிய அழகை ஆழ்வார்கள் எண்ணி எண்ணி மயங்குகிறார்கள். இடது மேல் வாய்ப்புறத்தை இடது தோளோடு சாய்த்து, இருகையும் குழலோடு சேர, புருவம் நெறிந்து மேலேற, கண்ணன் குழல் ஊதினான் என்கிறார் பெரியாழ்வார்.

    ‘சிறுவிரல்கள் தடவிப் பரிமாறச்
    செங்கண் கோடச் செய்யவாய்
    கொப்பளிப்ப, குறுவெயர்ப்புருவம்
    கூடவிப்ப கோவிந்தன்
    குழல்கொண்டு ஊதினான்”
    என்கிறார் ஆழ்வார்.

    சிறுவிரல்களால் குழலின் துவாரங்களை மூடித் திறக்கிறான். கண்ணால் நோக்கிக் கொண்டே வாயால் ஊதுகிறான். முத்து அரும்பினாற் போல் முகத்தில் வியர்வைத்துளிகள் அரும்பி நிற்கின்றன. பறவைகள், பசுக்கள், விலங்குகள் என எல்லாம் அவன் குழல் இசையில் கட்டுண்டு கிடக்கின்றன. மரங்கள் ஆனந்தக் கண்ணீர் வடிப்பதுபோல் தேனைத்தாரையாகச்சொரிகின்றன. செடிகொடிகள் அன்பின் பெருக்கால் பூக்களைச் சொரிகின்றன.

    தாவரங்களையும் உணர்ச்சி மயமாக்கி விட்டது கண்ணன் குழல். மாயவனுடைய வேய்ங்குழல் ஓசையைக் கேட்ட ஆயர்கள் நெஞ்சுருகி, ஆவி தளர்ந்து ஒன்றும் அறியாராகித் தத்தம் பணிகளை அப்படியே விட்டுவிட்டு கண்ணன் குழல் ஊதுமிடம் நோக்கி ஓடி வந்தனர். குழலின் ஒலிகேட்டு தும்புருவும், நாரதரும், தேவர்களும், கின்னரர்களும் தங்களுடைய வாத்தியங்களை விட்டுவிட்டு அந்த தெய்வீக இசையில் தம்மை மறந்து இருந்தனர். அந்த வேணுகானம் எல்லார் மனதையும் அலைபாய வைத்தது. கண்ணா, கண்ணா என்று கூவியழைக்க வைத்தது. இந்த ஒலி கம்சனுக்குக்கேட்டதுபோலும்.

    கண்ணனை கோகுலத்திலிருந்து மதுராபுரிக்கு எப்படியாவது வரவழைத்து அங்கே அவனுடைய கதையை முடிக்கவேண்டுமென தீர்மானித்தான். அதனால் அவனுடைய கதையே முடியப்போகிறது என்பதை அவன் அறிந்தா னில்லை.

    குவலயாபீடம் என்ற பட்டத்து யானைக்கு மதம் உண்டாகும்படி செய்து வைத்தான். சானுரன், முஷ்டிகன் என்னும் இரு மல்லர்களை தயாராக இருக்கும்படி பணித்தான். அக்ரூரரை அனுப்பி, அவர் மூலம் கிருஷ்ணனையும், பலராமனையும் மதுராபுரிக்கு வரவழைத்தான். மதுராபுரியில் கிருஷ்ணனை பக்தர்கள் ஓடி வந்து தரிசித்தனர். அவர் செல்லும் வழியில் மலர்களைத் துவினர். கிருஷ்ணன் குவலயாபீடத்தின் தந்தங்களை ஒடித்து, அந்த யானையை வதம் செய்தான். கிருஷ்ணனும் பலராமனும் மல்லர்களை முறியடித்தனர். பின்னர் கிருஷ்ணன், கம்சனை சிம்மாசனத்திலிருந்து கீழே தள்ளி, பயங்கரயுத்தம் செய்து, அவனை வீழ்த்தினான்.

    கம்சவதத்தோடு பாலகிருஷ்ணனின் லீலைகள் முடிந்தன. ஆனால் கண்ணனின் பணி, எதற்காக அவதாரம் எடுத்தாரோ, அந்தப் பணி தொடர்கிறது. மண்ணின் பாரம் நீக்குதற்கே வடமதுரையில் பிறந்த அவன், பாரதப்போரில் பஞ்ச பாண்டவர்க்கு அருள்செய்து, அர்ச்சுனனுக்கு சாரதியாகி, அதியற்புதமான ரீதியிலே போர்க் களத்திலே கீதோபதேசத்தை நடத்தி, தர்மம் தழைத்தோங்கச் செய்தான்.

    நம்மாழ்வார் நமக்கு எல்லாம் மிக அழகாக, தெளிவாகச் சொல்கிறார். ‘கண்ணன் அல்லால் இல்லை கண்மர் சரண்’ அந்த ஸ்ரீகிருஷ்ணனுடைய சரணார விந்தங் களிலே நம்முடைய மனத்தை நிறுத்தி நமக்கு அவன் வழிகாட்ட வேண்டுமென்று பிரார்த்திப்போம்.

    குலசேகர ஆழ்வார் முகுந்தமாலையிலே மிக அழகாகச் சொல்லுவார்:
    ஹே முகுந்தா! உம்மைத் தலையால் வணங்கி இந்த ஒரே ஒரு பொருளை மட்டும் உம்மிடம் யாசிக்கிறேன். அதாவது ஒவ்வொரு பிறவியிலும் உம்முடைய அருளால் உம் திருவடிகளை நான் மறவாமல் இருக்க வேண்டும்.

    ‘முகுந்த மூர்த்தா ப்ரணிபத்ய யாசே
    பவந்தம் ஏகாந்தம் இயந்தம் அர்த்தம்
    அவிஸ்மிருதிஸ் த்வத் சரணாரவிந்தே
    பவே பவே மே அஸ்து பவத் ப்ரசாதாத்’

    ஸர்வம் ஸ்ரீகிருஷ்ணார்ப்பணமஸ்து

    Share
  • ஆழ்வார்களை ஆட்கொண்ட கண்ணன் – 3

    — எஸ். வி. நாராயணன்.

    Krishnan with butterஆழ்வார்களை, முக்கியமாக நம்மாழ்வாரை, மிகவும் ஈர்த்தது, அந்த வெண்ணையுண்ட கண்ணனின் நீர்மை, அந்த செளலப்யம்.

    கண்ணனின் நீர்மை வெளிப்படுவதற்காகவே கண்ணனின் குறும்புகள் கூடின போலும். வீட்டில் உள்ள தயிர், வெண்ணெய் உண்டது காணாது என்று ஊரார் வீட்டு வெண்ணையை, சிறுவர் ஜமா சேர்த்துகொண்டு, எட்டாத உறிகளில் வைத்தாலும், தட்டாது விழுங்கிச் சென்றான். கண்ணனின் சேஷ்டைகளும் கூடின. ஊரார் புகாரும் பெருகியது.

    கன்றுக்குட்டிகளின் காதில் கட்டெறும்பை விட்டு வேடிக்கை பார்ப்பது, கோபிகைளின் வளைகளை ஏமாற்றி வாங்கிக் கொண்டு போய் நாவற்பழம் வாங்கித்தின்றது, வீடுகளில் புகுந்து அவர்கள் செய்து வைத்திருக்கும் ‘கன்னல் இலட்டு வத்தோடு சீடை, காரெள்ளின் உண்டை” மற்றும் அக்கார அடிசில் போன்றவற்றை விழுங்கிவிட்டு ‘இன்னம் உகப்பன்’ என்று சொல்லி நிற்பது – இத்தகைய புகார்கள் ஓங்கிவந்த வேளையிலே யசோதைக்கு கோபம் வந்தது. ஆனால் அந்த தெய்வக் குழந்தையை அடிக்க மனம் வரவில்லை.

    அவனைத் திருத்த வேண்டி உரலில் பிணைக்க எண்ணம் கொண்டாள். எனவே ஒரு தாம்புக் கயிறை எடுத்து அவன் இடுப்பில் கட்டி உரலில் பிணைத்துக் கட்டச் சென்றாள். முதலில் எடுத்த கயிறு போதவில்லை. அதற்காக ஆயர் மனைகளில் உள்ள கயிறுகளை எல்லாம் கொண்டு பொருத்திப் பார்த்தும் அவன் இடைக்கு அது போதாததாக இருந்தது. எல்லாத் தாம்புகளையும் ஒன்றாக முடித்து முயற்சி செய்தாள். அப்போதும் அவனைக் கட்டுவதற்கு அது போதவில்லை. யசோதை களைப்படைந்தாள். கை சலித்தது. வியர்வை கொட்டியது. கண்ணன் தாயின் அவஸ்தையைப் பார்த்தான்.

    தேவேந்திரனுக்கும், பிரமனுக்கும், ஞானி களுக்கும், முனிவர்களுக்கும் லேசில் அகப்படாத அந்தப் பெரியோன், தாயின் கைத்தாம்பினால் உரலில் கட்டுண்டான். நம்மாழ்வார் வாய்மணக்கப் பாடுகிறார்:
    ‘பத்துடை அடியவர்க்கு எளியவன்
    பிறர்களுக்கு அரிய வித்தகன்
    மலர்மகள் விரும்பும் நம்அரும்பெறல் அடிகள்
    மத்துஉறு கடைவெண்ணைய் களவினில்
    உரலிடை யாப்புண்டு எத்திறம்
    உரவினோடு இணைந்திருந்து ஏங்கிய எளிவே’

    பக்தி உடைய அடியார்களுக்கு எளியவனாயும், பிறருக்கு அணுக முடியாதவனாயும், திருமகளின் செல்வ நாயகனாகவும், பெறற்கரிய நம் தலைவனாகவும் உள்ள அந்தக் கண்ணன் என்னும் கருந்தெய்வம், வெண்ணைய் திருடியதால் கட்டப்பெற்று, உரலுடன் இணைந்து, அங்கேயே இருந்து ஏங்கிய அவன் எளிமைதான் என்னே! என்னே!

    நம்மாழ்வார் இந்த எளிமைச் செயலை எண்ணி எண்ணி ஆறுமாத காலம் அப்படியே மோகித்துக் கிடந்தாராம். பக்தர்களால் தான் பகவானைக் கட்ட முடியும். பரம பக்தையான தாய் யசோதையினால் அந்தப் பரந்தாமன் கட்டுண்டான். வடவரையை மத்தாக்கி, வாசுகி என்னும் பாம்பை கயிறாகப் பூட்டி, பாற்கடலை கலங்கச் செய்தவன் அவன். அவ்விதம் கலக்கிய கையே யசோதையார் கடைகயிற்றால் கண்டுண்ட கை. இது என்ன மாயமோ என வியக்கிறார் சிலப்பதிகார ஆசிரியர்.

    பேயாழ்வார் இந்த நீர்மையை மிகவும் போக்யமாக அனுபவிக்கிறார்.
    “மண்ணுண்டும் பேய்ச்சிமுலையுண்டும் ஆற்றாதாய்
    வெண்ணெய் விழுங்க வெகுண்டு, ஆய்ச்சி
    கண்ணிக் கயிற்றினால் கட்டத்
    தான் கட்டுண்டிருந்தான் வயிற்றினோடு ஆற்றாமகன்’.

    வயிற்றினோடு ஆற்றா மகன் என்ற விசித்திரமான தொரு விருதை அவர் கண்ணனுக்குச் சூட்டுகிறார். இதை ஒட்டியே நம்மாழ்வாரும் ”காரேழ் கடலேழ் மலையேழ் உலகுண்டும் ஆராவயிற்றேனை அடங்கப்பிடித்தேன்’ என்று திருவாய் மொழியில் பாடுகிறார் போலும். கடல்களை யெல்லாம் நிரப்ப வல்ல பெரு மேகங்களையும், ஏழு சமுத்திரங்களையும், ஏழு பர்வதங்களையும் விழுங்கியும் வயிறு நிரம்ப வில்லை. பேய்முலை நஞ்சுண்டான். அதுவும் போதவில்லை. ஆய்ச்சிமார் கடைந்த வெண்ணை யனைத்தையும் விழுங்கினான். அப்படியும் திருப்தி பிறக்கவில்லை.

    இப்படி ஒரு அடங்காத ஆசையுடையவனை யசோதை தனது அன்பு என்னும் அஸ்திரத்தால் கட்டிவைத்தாளன்றோ. ‘உபநிஷதர்த்தம் உலூகலே நிபத்தம்’ ‘வேதத்தின் உச்சிப் பொருள் ஒரு உரலிலே கட்டுண்டிருந்தது காணிர்’ என்று ஆச்சரியப்பட்டார்கள் ரிஷிகள். அன்னை யசோதை கட்டியதால் உதரத்திலே பெருமாளுக்கு தழும்பு ஏற்பட்டதாம். தாமோதரன் எனும் திருநாமத்திற்கு வயிற்றிற் தழும்பை பொருளாகச் சொல்வதுண்டு. இன்றும் இத்தழும்பை ஸ்ரீரங்கம் நம்பெருமாள் வயிற்றில் காணலாம் என்பார் ஸ்ரீபராசரபட்டர்.

    பெருமாளுக்கு பல தழும்புகளாம். பொய்கை யாழ்வார் கூறுகிறார். தாம்பினால் ஆர்ந்த தழும்பு ஒன்று. சாரங்கவில் உராய்ந்ததினால் கையில் தழும்பு. சகடம் உதைத்ததினால் காலில் தழும்பு. இப்படி பெருமாள் திருமேனியெல்லாம் தழும்பேறிக்கிடக்கிறதே, இவையெல்லாம் அவனுடைய ஆச்ரித தன்மையினால் ஏற்பட்டவை அன்றோ.

    கண்ணனின் குழந்தைப் பருவத்தை, அவன் ஆடிப்பாடி வளர்ந்த அந்த காணக் கிடைக்காத காட்சியை, யசோதைபோல் தன்னால் பெற முடியவில்லையே என தேவகி புலம்புவது போல குலசேகர ஆழ்வார் அருமையான பாசுரங்களை அமைத்துள்ளார்.

    முழுதும் வெண்ணெய் அனைந்து தொட்டுண்ணும்
    முகிழ் இளம் சிறுத்தாமரைக்கையும்
    எழில்கொள் தாம்பு கொண்டு அடிப்பதற்கு எள்கும்
    நிலையும், வெண்தயிர் தோய்ந்த செவ்வாயும்,
    அழுகையும், அஞ்சிநோக்கும் அந்நோக்கும்
    அணிகொள் செஞ்சிறு வாய்தெளிப்பதுவும்
    தொழுகையும் இவை கண்ட யசோதை
    தொல்லையின்பத்தின் இறுதி கண்டாளே.

    யசோதை அடைந்த அந்த எல்லையில்லா இன்பத்தை தான் அடையவில்லையே என்று தேவகி பட்ட விசனம் வார்த்தைகளுக்குள் அடங்குமோ?

    உரலில் கட்டுண்ட அந்த மாயக்கண்ணன் வெறுமே இருந்தானா? நாரதரின் சாபத்தினால் இரு மருத மரங்களாய், பல ஆண்டுகாலம் இருந்த குபேரனின் புத்திரர்கள் நளகூபரன், மணிக்ரீவன் ஆகியோரின் சாபவிமோசனத்திற்காக, உரலுடன் தவழ்ந்து சென்று அந்த இரு மருத மரங்களுக் கிடையே போய் அவற்றை வீழ்த்தினான். குபேரன் புத்திரர்கள் சாப விமோசனம் பெற்று கண்ணனை தொழுதேத்திச் சென்றனர். குழந்தையைக் கடவுள்தான் காத்தார் என மரம் விழுந்த ஓசையைக் கேட்டு ஓடி வந்த யசோதை, குழந்தையை அள்ளி எடுத்துக் கொண்டாள்.

    தமது ஆசாரியனான நம்மாழ்வாரை மட்டுமே பாடினார் மதுரகவி ஆழ்வார். ஆனால் ஆசார்யனை பாட ஆரம்பித்தவர் ‘கண்ணிநுண் சிறுத்தாம்பினால் கட்டுண்ணப் பண்ணிய பெரு மாயன்’ என்றுதான் துவங்குகிறார்.

    அந்த பால கிருஷ்ணன் வெண்ணெய் மீது வைத்திருந்த அபரிமிதமான ப்ரீதியை எல்லா ஆழ்வார்களுமே பெரிதும் போற்றிக் கொண்டாடு கிறார்கள். அரங்கனைப் பாடிய திருப்பாணாழ்வார், ‘கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணைய் உண்ட வாயன் என் உள்ளம் கவர்ந்தான் எனப்பாடுகிறார்.

    இப்படி வெண்ணெய் உண்டது குறித்து நம்மாழ்வார் ஒரு கேள்வி எழுப்புகிறார். மாயோனே, முன்பு ஒரு கால் உலகங்களை உண்டாய். பின்பு ஒரு கால் அதனை உமிழ்ந்தாய்.

    ஒரு வேளை முதலில் உண்டு, பின்னர் உமிழும் போது, உலகத்தோர் போலே, அந்த மண்ணில் கொஞ்சம் உனது வயிற்றில் தங்கி விட்டதோ? அதனால் நோய் ஏதும் வராமல் காத்துக்கொள்ள, அந்த மண்ணுக்கு மருந்தாக வெண்ணையை வாரி விழுங்கினையோ? ‘மண்கரைய நெய்யூண் மருந்தோ?’ என்று வினவுகிறார் நம்மாழ்வார்.

    கண்ணனின் வெண்ணெய்தின்ற சாகசங்களை நினைவு கூறும்போது ததிபாண்டனுக்குக் கிடைத்த மிகப்பெரிய அதிர்ஷ்டத்தைச் சொல்லவேண்டும். ஒரு நாள் அந்த நவநீத கிருஷ்ணன், வீட்டில் இருந்த வெண்ணெய்த் தாழியை உடைத்து, தான் வாரி அள்ளி வாயில் போட்டுக் கொண்டதல்லாமல், தரையிலே பாலையும், தயிரையும், வெண்ணெயையும் ஆறாகப் பெருக்க விட்டான்.

    இதனைக் கண்ட யசோதை அவனை அடிப்பதற்காக துரத்திச் சென்றாள். தாய் அடிக்க வருவதைக் கண்ட கண்ணன் வெளியே ஓடினான். யசோதையும் துரத்திச் சென்றாள். தாய் தன்னை நெருங்கும் சமயத்தில், ததிபாண்டன் என்ற ஆயன் இல்லத்தில் புகுந்துவிட்டான் கண்ணன். யசோதை விரைந்து வருவதைப் பார்த்த கண்ணன், ததிபாண்டனை நோக்கி, “என்தாய் கோபத்துடன் வருகிறாள். உன் பக்கத்தில் உள்ள தயிர்த்தாழியை என் மேல் கவிழ்த்து என்னை ஒளித்துவை’ என்று வேண்டினான்.

    ததிபாண்டன் அதன்படியே தாழியை கண்ணன் மேல் மூடிவிட்டான். யசோதை வந்து கேட்டபோது, ‘கண்ணனா! அவன் இங்கு வர வில்லையே’ என்று கூறிவிட்டான். யசோதையும் முணுமுணுத்துக்கொண்டே சென்று விட்டாள். ததிபாண்டன் ஞானவான். கண்ணன் யார் என்பதை நன்கறிந்தவன். யசோதை அகன்றவுடனே தாழியின் மேல் ஏறி உட்கார்ந்து கொண்டான் ததிபாண்டன்.

    தாய் சென்று விட்டதால் தன்னை வெளியே விடும்படி கண்ணன்ததிபாண்டனை வேண்டினான். பரம்பொருளே கண்ணனாக அவதரித்திருக்கிறது என்பதை அறிந்த ததிபாண்டன், கண்ணனை நோக்கி ‘எனக்கு மோட்சம் அளித்தால் ஒழிய நான் உன்னை வெளியில் விட மாட்டேன்’ என்கிறான். ததி பாண்டனுக்கு அருள்புரிய வேண்டும் என்ற நோக்கத்துடனேயே கண்ணன் அந்த ஆயன் வீட்டுக்கு வந்ததால், ‘உனக்கு மோட்சம் அளித்தேன். என்னை விடு’ என்று கூறினான். ஆனால் ததிபாண்டன் நகரவில்லை. அவன் கூறினான் : ‘கண்ணனே, உன்னுடைய கிருபை எனக்குக் கிட்டுவதற்கு இந்த தயிர்த்தாழி மிகவும் உதவியாக இருந்தது. இதனை விட்டு நான் பிரிய மாட்டேன். இந்தத் தாழிக்கும் நீ மோட்சம் கொடுக்க வேண்டும்’ என்றான். கண்ணபிரான் ததிபாண்டனின் சாதுர்யத்தை மெச்சி, உமக்கும் மோட்சம், உமது தயிர்த்தாழிக்கும் மோட்சம் கொடுத்தேன் என்று கூறினான்.

    அவ்வளவில் கண்ணனை ததிபாண்டன் வெளியே விட, ததிபாண்டனும் அவனது தாழியும் மோட்சலோகம் எய்தினர். ஆசார்ய ஹ்ருதயமும், அதன் வியாக்கியானமும் ததி பாண்டன் வரலாற்றைக் கூறுகின்றன.

    வைணவ உலகமும், தமிழ் இலக்கிய உலகும் போற்றுகிற அஷ்டப் பிரபந்தம் என்ற எட்டு நூல்கள் அடங்கிய தொகுப்பை அருளிய பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் சொல்லுவார்: பண்டங்களை வைப்பதற்கன்றி, சிந்திப்பதற்கு நெஞ்சும், திருநாமங்களை கூற நாவும், விழுந்து சேவிக்கத் திருமேனியும் இல்லாத அசித்தாயிருக்கிற மண்பாண்டம் மோஷம் பெற்றது. ஆனால், நெஞ்சும், நாவும், உடலும் உள்ள நமக்கெல்லாம் எளிதில் மோக்ஷம் கிடைக்காது இருக்கிறதே. இது எதனால்? என்று பெருமாளையே அவர் கேட்கிறார். ஆனால் பதில் அவருக்கே தெரியும்.

    ராமபிரான் பிறந்த அயோத்தியிலே புல், எறும்பு ஆதி ஒன்றின்றியே அனைத்தும் நற்கதி பற்றன என்பார் நம்மாழ்வார். அதுபோல கண்ணனின் தர்சனமும், கண்ணனின் ஸ்பர்சமும் பெற்ற ததிபாண்டனும், அவனது தாழியும் மோகூடிம் பெற்றதில் அதிசயமென்ன? இதுபற்றி பெரியோர்கள் ரசமான கருத்து ஒன்றைச் சொல்லுவர். கிருஷ்ணதரிசனம், கிருஷ்ண கைங்கர்யம் இவற்றைச் செய்தவுடனேயே ததிபாண்டனுக்கு மோட்சம் உறுதியாகி விட்டது.

    கிருஷ்ண ஸ்பர்ஸம் ஏற்பட்ட உடனேயே தாழிக்கும் நற்கதி கிடைத்துவிட்டது. ததிபாண்டன் அதைக் கேட்டுப் பெறுவதற்கு அவசியமே இல்லை. இருந்தாலும் அவன் அப்படிச் செய்தான் என்றால் அதற்கு முக்கிய காரணம் கிருஷ்ணனின் அந்த எளிமையை, பக்தர்களுக்கு அருள்புரியும் அந்த மேலான குணத்தை, உலகத்திற்கு எடுத்துக் காட்டவேதான் என்று பெரியவர்கள் சொல்லுவார்கள்.

    [தொடரும் …]

    Share
  • ஆழ்வார்களை ஆட்கொண்ட கண்ணன் – 2

    — எஸ். வி. நாராயணன்.

    Krishnan with butter

    புலிக்குப் பிறந்தது பூனையாகுமா என்பது போலே, பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண் பிள்ளையான ஆண்டாள், யசோதை இளஞ் சிங்கம் என்றும், கார்முகில் போன்ற மேனியை உடையவன் என்றும், செந்தாமரை போன்ற கண்களை உடையவன் என்றும், எதிரிகளுக்கு சூரியன் போலவும், அன்புடையார்க்கு சந்திரன் போலவும் உள்ள ‘கதிர் மதியம் போல் முகத்தான்’ என்றும் கண்ணனை வர்ணிக்கிறாள். உவகையுடன் வர்ணிக்கிறாள். ஆயர்குல மணி விளக்கு என்கிறாள். தாயைக் குடல் விளக்கஞ் செய்த தாமோதரன் என்கிறாள். இப்படி யெல்லாம் ஆழ்வார்கள் அந்த தெய்வக்குழந்தையை எண்ணி எண்ணி, மனம் உருகிப் பாடுகிறார்கள்.

    மாயக்கண்ணனை தொட்டிலில் கிடத்தினால் காலால் உதைத்து அதைச்சிதைக்கிறான். மிருதுவான கால்கள்நோகுமேயென்று இடுப்பில்துக்கிவைத்துக் கொஞ்சினால், நழுவிஇடுப்பை முறிக்கிறான்.

    ‘கிடக்கில், தொட்டில் கிழிய உதைத்திடும்
    எடுத்துக் கொள்ளில், மருங்கை இறுத்திடும்
    ஒடுக்கிப்புல்கில், உதரத்தே பாய்ந்திடும்
    மீடுக்கிலாமையால் நான் மெலிந்தேன்
    நங்காய்’.
    என்று யசோதை கூறுகிறாளாம். இந்த கிருஷ்ண ஜயந்தியை பெரியாழ்வார் போல் அனுபவித்தவர் எவரும் இலர்.

    தன்னைக் கொல்வதற்காகவே பிறந்துள்ள தேவகியின் எட்டாவது மகன் கண்ணன் ஆயர்பாடியிலே வளர்ந்து வருவதை அறிந்த கம்சன், கிருஷ்ணனை தீர்த்துக் கட்ட பலவிதமான, பலரூபம் தரிக்கக்கூடிய அசுரர்களை ஏவி விடுகிறான். கண்ணன் இவர்களையெல்லாம் ஒழித்துக் கட்டுகிறான். முதலில் பூதனை என்ற அரக்கி வருகிறாள். பின்னர் சகடாசுரன், காலியாசுரன் ஆகியோரை கம்சன் ஏவி விடுகிறான்.

    பால்மணம் மாறா பச்சைக் குழந்தையாக இருந்த கண்ணன் பூதனையைக் கொன்ற விதத்தை ஆழ்வார்கள் பலவிதமாக அனுபவிக்கிறார்கள். இராமாயணத்திலே சூர்ப்பனகை தன் கோர வடிவை மறைத்து அழகான கன்னிப்பெண் போல இராமனைக் காண வந்தாள். பூதனையும் அதே ரீதியிலே ஒரு அழகிய பெண்ணுருவம் பூண்டாள். இடுப்பில் ஒட்டியாணமும், கால்களில் சிலம்பும் ஒலிக்க அடிமேல் அடிவைத்து நந்தகோபன் மனைக்குள் புகுந்து, ‘ஆஹா! எவ்வளவு அழகான குழந்தை’ எனக்கூறிக் கொண்டு கண்ணனை மடியிடை இருத்திக் கொண்டாள். யசோதை அருகில் இல்லாத தருணம் பார்த்து, அந்த விஷநங்கை குழந்தைக்கு பால் கொடுக்கத் துவங்கினாள். முலைக் காம்பில் கொடியவிஷத்தையல்லவோ தடவிவைத்திருந்தாள்.

    குழந்தை சுவைக்க ஆரம்பித்தவுடன் இறந்துவிடும் என்று எண்ணினாள் அவள். இந்த மாயம் மாமாயனாகிய கண்ணனுக்கா தெரியாது? கிருஷ்ணன் பாலை உறிஞ்சுவது போல அவளுடைய உயிரையே உறிஞ்சினான். அழகான பெண் உருவில் வந்த அவள் அரக்க வடிவு எய்தி பெரும் அலறலுடன், மலை வீழ்ந்தது போல, நிலத்தில் வீழ்ந்தாள்.

    ‘பிறங்கிய பேய்ச்சி முலை சுவைத்துண்டிட்டு
    உறங்குவான் போலே கிடந்த இப்பிள்ளை’

    என்று பாடும் பெரியாழ்வார், பூதனையைக் கொன்றது இவனுக்கு ஒரு பெரிய விஷயமில்லை. இரணியன் மார்பையே முன்பு, நரசிம்ம அவதாரத்தின்போது, கீண்டவன் அல்லவா இவன் எனப் போற்றுகிறார்.

    ‘கண்ணன் கழலிணை – நண்ணும் மனமுடையீர்
    எண்ணும் திருநாமம்- திண்ணம் நாரணமே’

    என்பார் வேதம் தமிழ் செய்த மாறனாகிய சுவாமி நம்மாழ்வார். அவர் சொல்கிறார்: “மாய்த்தல் எண்ணி வாய்முலை தந்த மாயப்பேய் உயிர் மாய்த்த ஆயமாயனே! என்கிறார். ‘ஒருபேய்ச்சிவிட நஞ்சு முலை சுவைத்த மிகுஞானச் சிறுகுழவி’ என்று போற்றுகிறார்.

    குழந்தை கண்ணனின் இந்த லீலைகளை நினைவுகூறும் ஆழ்வார்கள், ஆச்சர்யமான வகையிலே யசோதையின் ஏற்றத்தை குறிப்பிடுகிறார்கள்.

    பொய்கை ஆழ்வார் பாடுகிறார் …
    “முகில்வண்ணா! நின்னுருகிப் பேய்த்தாய் முலைதந்தாள்
    பேர்ந்திலளால் பேரமர்க்கண் ஆய்த்தாய்
    முலைதந்தவாறு “

    இது எப்படி? தீய புத்திக் கஞ்சனாலே ஏவப்பட்ட பேய்ச்சி, தாய்போல உன்னிடம் உருக்கம் காட்டி தன் நச்சுமுலையைத் தந்தாள். அவ்விடத்திலிருந்து அவள் பேர மாட்டாமல் மாண்டாள். ‘பேரமர்க்கண்’-பெரிய யுத்தபூமி போல அவ்விடம் தோற்றிற்று. அதைக் கண்டு சிறிதும் அஞ்சாமல் (அந்த பேய்ச்சிபட்டபாடு நாமும் படுவோமோ என்ற பயம் ஏதுமின்றி) குழந்தையை ஆதரவுடன் எடுத்து யசோதை முலையூட்டினாள். விஷப்பாலுக்கு தன் அன்பு கலந்தபால் மாற்றாக அமையுமோ என்ற உள்ளன்புடன் யசோதை நடந்துகொண்டாள் என்பர் பெரியோர்.

    இந்தக் கருத்தை பூதத்தாழ்வாரும் வெளியிட்டுப் பூரித்துப் போகிறார். பேய்ச்சியின் ஆவி போனதை பார்த்தும்கூட யசோதை பரிவால் உனக்குப் பாலூட்டினாளே, அந்த அன்புக்கு நீ அளந்து கொண்ட, திரிவிக்ரமனாய் வந்து அளந்து கொண்ட, இந்தப் பெரிய உலகம் ஈடாகுமா என்று வியந்து பேசுகிறார் பூதத்தாழ்வார்.

    பூதனையின் உயிர்போனதைக் கண்டு,
    “அன்று அது கண்டு அஞ்சாத ஆய்ச்சி
    உனக்கிரங்கி,
    நின்றுமுலை தந்த இந்நீர்மைக்கு,
    அன்று வரன் முறையால் நீயனந்த மாகடல் சூழ்ஞாலம்
    பெருமுறையால் எய்துமோபேர்த்து?”

    பேயாழ்வாரும்,
    “பேய்ச்சி பாலுண்ட பெருமானைப்
    பேர்ந்தெடுத்து ஆய்ச்சிமுலை கொடுத்தாள்
    அஞ்சாதே”
    என்பார்.

    அந்த யசோதை ஆய்ச்சியின் தூய அன்புக்கு ஈடுண்டோ?

    பெரியாழ்வாரும் இதில் ஈடுபட்டு யசோதையாக தம்மை பாவித்துக்கொண்டு பாடுகிறார் :
    “பேய்ச்சி முலையுண்ணக் கண்டு
    பின்னையும் நில்லாதென் நெஞ்சம்,
    ஆய்ச்சியர் எல்லாருங்கடி அழைக்கவும்
    நான்முலை தந்தேன்”
    என்கிறார்.

    திருச்சந்தவிருத்தத்திலே திருமழிசை ஆழ்வார் மிக அழகாகப் பாடுகிறார்.

    “ஆய்ச்சி பாவை உண்டு. மண்ணை உண்டு. வெண்ணை உண்டு. பின் பேய்ச்சியாவை உண்டு” என்றும், ‘வஞ்சனத்து வந்த பேய்ச்சி ஆவி பாலுள் வாங்கினாய்’ என்றும், “நீ ஆதிதேவனன்றோ என்றும் பாடுகிறார்.
    “பேய்த்தாயை முலையுண்ட பிள்ளைதன்னை
    ஆய்த்தாயர் தயிர் வெண்ணெய் உண்ட
    எம்மானைக் கண்டுகொண்டேன்” என்று கூறுகிறார் திருமங்கை மன்னன்.

    [தொடரும் …]

    Share
  • ஆழ்வார்களை ஆட்கொண்ட கண்ணன் – 1

    — எஸ். வி. நாராயணன்.

    Krishnan with butterஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தைப் பற்றியும், கண்ணனின் பால லீலைகளைப் பற்றியும் குறிப்பிடும்போது காஞ்சிப் பெரியவர் ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி ரசமானதொரு கருத்தைக் கூறுவார். ஸ்ரீகிருஷ்ணன் சேஷ்டைகள் செய்யும் குழந்தையாக, ஆநிரை மேய்க்கும் சிறுவனாக, குழல் ஊதும் கண்ணனாக, கோபிகைகளைச் சீண்டும் பாலகனாக, அசுரர்களை வதைக்கும் அசகாய சூரனாக, ஆபத்பாந்தவனாக, அனாத ரஷகனாக, தூதுசெல்பவனாக, சாரதியாக இப்படி பல ரூபங்களை தரித்து அனேக லீலைகளை செய்திருக்கிறான். சாதுக்களையும் நல்லவர்களையும் மட்டுமின்றி, எல்லோரையும் கவர வேண்டு மென்றே ஜாரசோர சிகாமணியாக, கபடனாக, மாயனாக, தந்திரசாலியாக எல்லா வேஷமும் போட்டான். அனைவரையும் ஆகர்ஷித்துத் தன்னுடைய கருணைக்கும் அன்புக்கும் பாத்திரமாக்கிக் கடைத் தேற வைத்தான் என்று கூறுவார் காஞ்சிப் பெரியவர். இப்படி, அனைவருக்கும் அருள் புரிவதற்காகவே அவதரித்த கிருஷ்ணனின் அவதாரமே பூர்ண அவதாரம். ‘சர்வதர்மான் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ – என்னையே தஞ்சமென்றிருந்தால் நான் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வேன் என்று கூறியவர் கிருஷ்ண பகவான். ‘மாசு.ச.’ – கவலைப்படாதே, என்று நமக்கெல்லாம் உறுதியளித்த தெய்வம் அல்லவா அந்த கார்மேகவண்ணன்.

    இராம அவதாரம் ஆதர்ச புருஷ அவதாரம். உலகத்திற்கு ஒரு உதாரபுருஷனாக அவர் விளங்குகிறார். தாம் பரம்பொருள் என்பதை அவர் அதிகம் வெளிக்காட்டிக் கொண்டதில்லை. ஆனால், கிருஷ்ணாவதாரத்தில் பகவான் தமது சக்தியை அவ்வப்போது உணர்த்திக்கொண்டே இருந்தான். பிறந்தவுடன், அன்னை தேவகிக்கும், தந்தை வசுதேவருக்கும் சங்கு சக்கர கதாதாரியாக, தமது சுயரூபத்துடன் காட்சியளித்தார். பின்னர், தமது மாயையால், தங்களுடைய குழந்தையாக அவர்கள் காணும்படி செய்கிறார்.

    வளர்ப்புத்தாயான யசோதை, பிள்ளை வாயில் வையம் ஏழும் கண்டு “ஆயர் புத்திரன் அல்லன்: அரும் தெய்வம்” என்று அதிசயிக்கிறாள். ஆனால் அந்த உணர்வு சில நொடிகளே நீடித்தது. கள்ளக் கண்ணனின் மாயை மூடி மறைத்தது. ”வெண்ணைதான் தின்கிறாயே, மண்ணை ஏன் தின்கிறாய்” என்று அதட்டத் துவங்கி விடுகிறாள். கோவர்த்தன கிரியை விளையாட்டாக குடை போல் எடுத்ததை அனைவரும் பார்க்கிறார்கள். காளியன் என்ற பயங்கர நாகத்தின் மீது அவன் நின்று நடன மாடிய அழகை எல்லோரும் பிரமிப்புடன் பார்க்கிறார்கள்.

    அமானுஷியமான பரம்பொருள் நமது கண்ணன் என்ற உணர்வு அவர்களுக்கு ஏற்படாமல் அவன் பார்த்துக் கொண்டான் என்பதை நினைக்கும்போது, அவனுடைய அந்த செளலப்யத்தை எடுத்துச் சொல்ல வார்த்தைகளும் உண்டோ? பாண்டவர்களுக்காக, நடையாய் நடந்து தூதுபோன அந்த நீர்மைக்கு இணையும் உண்டோ!

    நம்முடைய இந்த நாட்டிலே, வேதம் ஒதப்படும் இந்த புண்ணிய பூமியிலே, கிருஷ்ண பக்தி ஆங்காங்கே பெரியதொரு பிரேமையாகவே மிளிர்வதைக் காணலாம். சூர்தாஸ், மீரா, ஜயதேவர், நரசிமேத்தா, சைதன்யர் போன்ற எண்ணற்ற ஹரிதாசர்கள் கிருஷ்ணானுபவத்தின் அருமையையும் பெருமையையும் உலகுக்கு எடுத்துக் காட்டியுள்ளனர்.

    பக்தியே கடவுள்தரிசனத்திற்கு வழி. பக்தியின் மூலமே கண்ணனை உணரலாம். வெறும் படிப்பினாலும், மேதையின் பலத்தினாலும் அவனை உணரமுடியாது. உளம் உருகி அவனை நினைத்தாலன்றி அவன் நமக்கு அருகில் வரமாட்டான் என்ற வைணவ நெறியை நன்கு எடுத்துக் காட்டியவர்கள் ஆழ்வார்கள். ஆழ்வார்கள் பன்னிருவர். அவர்கள் ஒவ்வொருவரும் கிருஷ்ணனையும் அவனது அற்புத லீலைகளையும் நினைந்து, நினைந்து உருகி, ‘உண்ணும்சோறு, பருகும் நீர், தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன்’ என்ற நிலையிலே இருந்து, தத்தம் அனுபவங்களை பற்பல பாசுரங்களாக, அழியாப் படைப்புகளாக, நெஞ்சிற்கினிய தமிழ்ப்பாடல்களாக அருளி, பெரும் கிருபை செய்திருக்கிறார்கள். கிருஷ்ணாவதாரத்திலே தமது மனதை பறி கொடுத்து, அதிலே பூரணமாக லயித்து, அந்த பரப்ரம்மம் ‘அம்மா’ என்றழைத்திட என்ன தவம் செய்தாளோ என்று எல்லாரும் போற்றிய யசோதையாகவே தன்னை பாவித்துக் கொண்டு, பாலகிருஷ்ணனின் வினோத லீலைலைகளை எல்லாம், மிக அழகாக, படம் பிடித்துக் காட்டுவது போல் காட்டுகிறார் பெரியாழ்வார். பெரியாழ்வார் அருளிச் செய்துள்ள அந்தப் பாசுரங்களை நாம் நமது இல்லங்களில் படித்து மகிழும்போது அந்த இல்லங்களிலே அந்த மாயக்கண்ணன் நிச்சயம் தன் பாதங்களை அடிமேல் அடி வைத்து, தளர் நடையுடன், காலினிற் சிலம்பு கொஞ்ச முத்து மாலைகள் அசைந்திட வந்து அருள்புரிவான் என்பதில் ஐயமில்லை.

    பெரியாழ்வார் எப்படியெல்லாம் வர்ணிக்கிறார் பாருங்கள். கண்ணன் பிறந்தபோது ஆய்ப்பாடி எப்படி இருந்தது என்கிறார்:
    “ஓடுவார், விழுவார், உகந்து ஆலிப்பார்
    நாடுவார், நம்பிரான் எங்குத்தான் என்பார்
    பாடுவார்களும், பல்பறைகொட்ட நின்று
    ஆடுவார்களும் ஆயிற்று ஆய்ப்பாடியே”

    கண்ணன் பிறந்ததைக் கேட்டு பாடினார்கள்,ஆடினார்கள் ஆயர்பாடி ஆயர்கள். அத்துடனா?
    உரியை முற்றத்து உருட்டி நின்றாடுவார்
    நறுநெய் பால்தயிர் நன்றாகத் தரவுவார்
    செறிமென் கூந்தல் அவிழத் திளைத்து,
    எங்கும் அறிவழிந்தனர் ஆய்ப்படி ஆயரே.

    ஆயர்பாடி ஆயர்கள் எல்லாம் நந்தகோபன் வீட்டுக் குழந்தையை தங்கள் குழந்தையாகத்தான் எண்ணினர். அதனால்தான் இவ்வளவு ஆர்ப்பாட்டம், இவ்வளவு களிப்பு.

    தாயான யசோதை தன் மகன் கண்ணனை தொட்டு தொட்டுப் பார்த்து மகிழ்கிறார். இங்கே வாருங்களேன். என் குழந்தையின் பாதக் கமலங்களைப் பாருங்களேன். இந்தக் குழந்தை பாதக் கமலங்களை வாயில் வைத்து சுவைத் துண்ணும் அந்த அழகைப் பாருங்களேன். “பேதைக் குழவி பிடித்து சுவைத்துண்ணும் பாதக் கமலங்கள் காணிரே’ என்கிறார் பெரியாழ்வார். சங்கும் சக்கரமும் நிலாவிய அந்த கைத்தலங்களைப் பாருங்களேன். ‘வாக்கும் நயனமும் வாயும் முறுவலும் மூக்கும் இருந்தவா காணிரே’ , ‘கண்கள் இருந்தவா காணிரே’, ‘புருவம் இருந்தவா காணிரே’, நெற்றி யிருந்தவா காணிரே’ , ‘ குழல்கள் இருந்தவா காணரே என்று குழந்தையின் ஒவ்வொரு அங்கத்தையும் சுட்டிக் காட்டி உச்சி மோந்து யசோதை எப்படி மகிழ்ந்திருப்பாளோ அப்படி மகிழ்ந்து போகிறார் பெரியாழ்வார். தாயுமாகி, அவர் படைத்த இப்பாடல்கள் அந்த மாயக்குழவியை நம் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறது.

    [தொடரும் …]

     

    Share
  • வெண்ணெய் உண்ட வாயன்

    — எஸ். வி. நாராயணன்.

    Krishnan with butter

    ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி என்றாலே அனைவருக்கும் கொண்டாட்டம்தான். முக்கியமாக, சிறுவர், சிறுமிகள் இந்தப் பண்டிகையை வெகுவாக எதிர்பார்த்து இருப்பர். ஏனெனில், தின்பதற்கு நிறைய பட்சணங்கள் கிடைக்குமே! பட்சணங்கள் ஒன்றா, இரண்டா? சீடை, முறுக்கு, தேன்குழல், ஓமப்பொடி, லட்டு, மைசூர்பாகு, தேங்காய் பர்பி, அப்பம் என பல்வேறு பட்சணங்களை ஸ்ரீஜெயந்திக்காக ஒவ்வொரு வீட்டிலும் செய்வார்களே! ஒரு காலத்தில், வைணவ குடும்பங்களில், போட்டிபோட்டுக் கொண்டு, 21 வகையான தின்பண்டங்கள் செய்வார்கள். இவற்றைத் தயாரிப்பதற்கான வேலைகள், பண்டிகைநாளுக்கு 15, 20 நாட்கள் முன்னதாகவேத் துவங்கிவிடும். வீட்டிலுள்ள ஆண்கள், பெண்கள், குழந்தைகள் அனைவரும், சாமான்களை வாங்குவது, மாவு அரைப்பது, சீடை உருட்டுவது போன்ற பல்வேறு பணிகளில் குதூகலமாக ஈடுபடுவார்கள். பட்சணங்களை பலர் இப்போது கடைகளில் வாங்கினாலும், இன்றும் கூட பல குடும்பங்களில் இந்தப்பண்டிகைக்கான பணிகள் மிகுந்த சிரத்தையுடன் மேற்கொள்ளப்படுகின்றன.

    சீடையும், முறுக்கும், லட்டும் கண்ணனுக்கு மிகவும் பிடிக்கும் என்பதை பெரியாழ்வார் ஒரு பாசுரத்திலே ஆச்சரியமாக விவரிக்கிறார். ஒரு கோபிகை யசோதையிடம் போய் முறையிடுவது போல இந்தப்பாசுரம் அமைந்திருக்கிறது. அந்தக் கோபிகை கூறுகிறாள்:- இலட்டு, சீடை, எள் உருண்டை போன்ற பட்சணங்களைச் செய்து, உரிய பாத்திரங்களில் பத்திரமாகப் போட்டு, என் வீடுதானே என்று காவல் வைக்காமல் சற்று வெளியே சென்று வந்தேன். அதற்குள் கண்ணன் என் வீட்டிற்குள் புகுந்து, நான் பத்திரமாக வைத்திருந்த பட்சணங்களையெல்லாம் அள்ளிச் சென்றுவிட்டான். அத்துடன் நில்லாமல், என் வீட்டில் உள்ள உறியில், வெள்ளை வெளேரென்று விளங்கும் வெண்ணெய் இருக்கிறதா என்று சோதிக்கின்றான். இவ்வாறு அந்தக் கோபிகை யசோதையிடம் முறையிடுவதை பெரியாழ்வார் வர்ணிப்பதைப் பார்ப்போமா!

    “கன்னல் இலட்டுவத்தோடு சீடை
    காரெள்ளின் உருண்டை கலத்தில் இட்டு
    என்னகம் என்று நான் வைத்துப் போந்தேன்;
    இவன் புக்கு அவற்றைப் பெறுத்திப் போந்தான்
    பின்னும் அகம் புக்கு உறியை நோக்கிப்
    பிறங்கொளி வெண்ணெயும் சோதிக்கின்றான்…..”

    இத்தகைய முறையீட்டில் இன்னொரு கோபிகையும் சேர்ந்து கொள்கிறாள். அவள் சொல்கிறாள்:-
    யசோதைத் தாயே! செந்நெல் அரிசி, சிறு பயற்றம்பருப்பு இவற்றை பாலில் வேகவைத்து, அத்துடன் நல்ல வெல்லமும், நறு நெய்யும் சேர்த்து அக்கார அடிசில் செய்தேன். அத்தோடு, பன்னிரெண்டு திருவோணத் திருநாளுக்கும் நோன்புக்கு வேண்டிய பலகாரங்களைச் செய்து வைத்திருந்தேன். இந்தக் கண்ணன் அவை அனைத்தையும் விழுங்கிவிட்டு, இன்னமும் உகப்பன் நான் என்று சொல்லி சிரிக்கிறான். அக்கார அடிசில் செய்த பாங்கை கோபிகை எப்படி விளக்குகிறாள் பாருங்கள்!

    “செந்நெல் அரிசி சிறு பருப்புச்
    செய்த அக்காரம் நறுநெய்பால் ஆல்
    பன்னிரெண்டு திருவோணம் அட்டேன்……
    ‘இன்னம் உகப்பன் நான்’ என்று சொல்லி
    எல்லாம் விழுங்கிவிட்டுப் போந்த நின்றான்”

    கோபியர்கள் மேலுக்காகக் கண்ணனைக் குறை கூறினார்களே தவிர, அவர்களுக்கு அந்த பாலகிருஷ்ணன் பட்சணங்களை அமுது செய்ததில் ஏகதிருப்தி. இல்லாவிட்டால், அவன் வீடு புகுந்து அனைத்தையும் எடுத்துச் செல்வதற்கு ஏதுவாக வீட்டைத் திறந்து போட்டு விட்டுச் செல்வார்களா? கண்ணனுக்கு பட்சணங்கள் பிடிக்கும் என்பதை யசோதையே காட்டித் தருகிறாள். நீராட முரண்டு பிடிக்கும் கண்ணனை நைச்சிய வார்த்தைகள் கூறி யசோதை அழைப்பதை பெரியாழ்வார் படம் பிடித்துக் காட்டுகிறார்:-

    “அப்பம் கலந்த சிற்றுண்டி
    அக்காரம் பாலிற் கலந்து
    சொப்பட நான் சுட்டு வைத்தேன்
    தின்னல் உறுதியேல் நம்பீ!……
    சொப்பட நீராட வேண்டும்…..”

    “உனக்காக நான் செய்து வைத்துள்ள அப்பம் மற்றும் இதர பட்சணங்களைத் தின்ன விரும்பினால், நன்றாக நீ நீராட வேண்டும்‟ என்று யசோதை கண்ணனிடம் வேண்டுகிறாள். காது குத்தி, அழகான காதணிகளைப் போட விரும்பும் யசோதை, அதற்காகக் கண்ணனை அழைக்கிறாள். லேசில் வருகிறதா அந்தக் குழந்தை! ஆசைவார்த்தைகள் கூறி அழைக்கும் யசோதை, “பெரிய, பெரிய அப்பங்கள் தருவேன். வந்து காது குத்திக் கொள்‟ என்று கூறுகிறாளாம்.

    கண்ணன் பட்சணப் பிரியன் என்பதாலேதான் ஸ்ரீஜெயந்தியை நாம் மணக்க மணக்கக் கொண்டாடுகிறோம். பட்சணம் மட்டுமா? கண்ணனுக்குப் பழங்களும் இஷ்டம். ஒரு கோபிகையின் இல்லம் புகுந்து, அவளுடைய மகளைக் கூவி, அந்தப் பெண்ணின் கையில் இருந்த வளையைக் கழற்றிக் கொண்டு, கண்ணன் என்ன செய்தான் தெரியுமா?

    “கொல்லையில் நின்றும் கொணர்ந்து விற்ற
    அங்கொருத்திக்கு அவ்வளை கொடுத்து
    நல்லன நாவற்பழங்கள் கொண்டு
    நானல்லன் என்று சிரிக்கின்றானே” என்று விவாpக்கிறார் பெரியாழ்வார்.

    கண்ணனை தன்வழிக்குக் கொண்டுவர யசோதை என்னவெல்லாம் செய்கிறாள்! பட்சணங்களைத் தருவதோடு, உண்ணக் கனிகள் தருவேன், பலாப்பழம் தருகிறேன், நாவற்பழம் தருகிறேன் என்றெல்லாம் கூறுகிறாள்.

    ஆக, கண்ணன் பட்சணங்களை மட்டுமின்றி பழங்களையும் விரும்புகிறான் என்பது தெளிவு. அதனால்தான், ஸ்ரீஜெயந்தியன்று, பட்சணங்களுடன், பழங்களையும் கண்ணனுக்கு நிவேதனம் செய்கின்றோம். அதுவும், நாவற்பழம் அவனுக்கு மிகவும் இஷ்டமாயிற்றே!.

    ஸ்ரீஜெயந்தி நன்னாளில் பாலகிருஷ்ணனை விமரிசையாக வரவேற்போம். மணக்க, மணக்க வரவேற்போம். அவன் எப்படி வருவான் தெரியுமா? “ஒரு காலிற் சங்கு ஒரு காலிற் சக்கரம்‟ பொருந்தியுள்ள பாதரேகைகள் பதியப் பதிய, அனைவரையும் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தும் வகையில் அந்த மாயக் கண்ணன் வருவான். நிச்சயம் வருவான். நம்பி இருப்போம்.

    “கொண்டல் வண்ணனைக் கோவலனாய்
    வெண்ணெய் உண்ட வாயன்
    என் உள்ளம் கவர்ந்தானை
    அண்டர்கோன் அணி அரங்கன்
    என் அமுதினைக் கண்ட கண்கள்
    மற்றொன்றினைக் காணாவே‟

    கிருஷ்ணகானம்

    பாலகிருஷ்ணனின் லீலைகளிலே மனதைப்பறிகொடுக்காத பக்தர்களே இல்லை எனலாம். கிருஷ்ணலீலைகள் அவ்வளவு ரசமானவை. கிருஷ்ணானுபவத்திலே மூழ்கித்திளைத்த மகான்கள், அந்த மாயக்கண்ணனை நினைத்து, நினைத்து நெஞ்சுருகி, அவன் செய்த குறும்புகளையெல்லாம் மனக்கண்ணில் நிலைநிறுத்தி, தாங்கள் பெற்ற அந்த இன்ப அனுபவங்களையெல்லாம் மிகச்சிறந்த பாடல்களாக, உயர் ஸ்தோத்திரங்களாக, கவிதா ரத்தினங்களாக படைத்துத் தந்திருக்கிறார்கள்.

    “ஆடாது, அசங்காது வா, கண்ணா
    உன் ஆடலில் ஈரேழு புவனமும்
    அசைந்து அசைந்து ஆடுதே”

    அதனால், “ஆடாது, அசங்காது வா‟ என்று கிருஷ்ண கானத்தை அருளிய ஊத்துக்காடு வெங்கடசுப்பையர் பாடினார்.

    “காலினில் சிலம்பு கொஞ்ச,
    கைவளை குலுங்க,
    முத்துமாலைகள் அசைய”

    அந்த நீலவண்ணக்கண்ணன், விண்ணவரும் மண்ணவரும் மகிழும்படியாக நர்த்தனமாடிய அழகை படம் பிடித்துக் காட்டினார். அந்த ஊத்துக்காடு மகான் தம்முடைய பாடல்களினால்.

    “பரப்ரும்மம் “அம்மா‟ என்றழைக்க என்ன தவம் செய்தனை” என்று யசோதையைப் பார்த்து கேட்கும் பாவனையில் அற்புதமாகப் பாடினார் பாபநாசம் சிவன். கண்ணன் ஒரு “தீராத விளையாட்டுப்பிள்ளை‟ எனப் பாடினார் நமது சுப்ரமணிய பாரதி.

    உலகையே உத்தாரணம் செய்த அந்த “ஜகதோத்தாரணனை‟, தொட்டிலில் இட்டு ஆட்டும் பாக்கியத்தைப் பெற்ற யசோதையை நினைத்துப் பரவசமுடன் பாடினார் புரந்தரதாசர். “கிருஷ்ணா நீ பேகனே பாரோ” என்ற கனகதாசரின் கீர்த்தனையை யாரால் மறக்க முடியும்?

    கிருஷ்ணானுபவத்தில் ஈடுபட்டு, மெய்மறந்து, ஊன் உருக, உடல் உருகப் பாடிய பக்தர்கள் அனேகர் உண்டு. ஆழ்வார்கள், ரிஷிகள், முனிவர்கள், ஞானிகள், ஆசாரியர்கள், கவிஞர்கள், இசை வல்லுனர்கள் என சகலரும் கிருஷ்ணலீலைகளை உளமார உணர்ந்து பாடினார்கள்.

    அத்தகைய மகான்களிலே, கேரளத்தைச் சேர்ந்த லீலா சுகரும் ஒருவர். லீலாசுகர், முதலில், சிந்தாமணி என்ற ஒரு பெண்ணிடம் அதீத ஆசை வைத்திருந்தார். ஒருசமயம் அந்தப் பெண்மணி லீலா சுகரிடம் சொன்னாள்:-
    “என்னிடம் வைத்துள்ள ஆசையில் ஆயிரத்தில் ஒருபங்கு பகவானிடம் வைத்தால் நற்கதியடையலாமே” என்றாள். இந்த உபதேச வார்த்தைகள் லீலா சுகரின் நெஞ்சத்தைத் தொட்டன. அந்த நொடியிலிருந்தே, இறையருளால், வைராக்கியம் பெற்ற லீலாசுகர் கிருஷ்ணனை ஆராதிக்கத் துவங்கினார். செவிக்கு அமுதமாக, 328 சுலோகங்கள் அடங்கிய “கிருஷ்ணகர்ணாம்ருதம்‟ என்ற நூலும் அவரால் இயற்றப்பட்டது. அந்த நூலிலிருந்து ஒரு சில துளிகளை இங்கு பார்ப்போம்.

    ஒருசமயம், கிருஷ்ணன் அன்னையின் மடியில் படுத்திருந்தான். “அம்மா! பசிக்கிறது. அம்மம் கொடு” என்கிறான். “இப்போது அம்மம் இல்லையடா” என்கிறாள் தாய். “எப்போது இருக்கும்?” எனக் கேட்கிறது குழந்தை. “ராத்திரியில் இருக்கும்” என்கிறாள் யசோதை. “ராத்திரி என்றால் என்ன?” என்று ஒன்றும் அறியாதவன் போல வினவுகிறான் மாயக்கண்ணன். “ராத்திரி என்றால் இருட்டாக இருக்கும்” என பதில் தருகிறாள் யசோதை. கண்கள் இரண்டையும் இறுக மூடிக்கொண்ட குழந்தை, “ராத்திரி வந்துவிட்டது. அம்மம் கொடு‟ என்று அம்மாவின் புடவைத்தலைப்பை இழுத்து அடம் பிடிக்கிறதாம். நான்கே வரிகள் அடங்கிய சமஸ்கிருத ஸ்லோகத்தின் வாயிலாக இந்த நாடகம் முழுவதையும் படம்பிடித்துக் காட்டுகிறார் லீலாசுகர்.

    கிருஷ்ணன் மண் தின்ற கதையை மற்றொரு ஸ்லோகத்தின் மூலம் அற்புதமாகச் சித்தரிக்கிறார் லீலா சுகர். விளையாடச் சென்ற கண்ணன் மண்ணைத் தின்றான் என்ற புகார் வரவே, யசோதை கண்ணனைக் கூப்பிட்டு “மண்ணைத்தின்றாயா? உண்மையைச் சொல்” என்று மிரட்டுகிறாள். “யார் சொன்னது மண்ணைத் தின்றதாக?” என்கிறான் மண்ணை உண்ட மாயன். “உன் அண்ணன் பலராமன்தான் சொன்னான்” என்கிறாள் யசோதை. “அண்ணன் பொய் சொல்கிறான் அம்மா. வேண்டுமானால் என் வாயைப் பார்” எனத் தனது பவளச்செவ்வாயைத் திறந்து காட்டுகிறான் கண்ணன். அந்த வாயினில் உலகம் அனைத்தையும் கண்டு மிகுந்த ஆச்சரியத்தை அடைகிறாள் யசோதை. அப்படி, தாயை ஒரு நொடி பிரமிக்கவைத்து, விந்தை புரிந்த அந்த க்ருஷ்ணன் நம்மையெல்லாம் காப்பவனாக இருக்கட்டும் என்கிறார் லீலாசுகர்.

    குழந்தை கண்ணன் தூங்குகின்றான். தூங்குகையில் அந்த மோகன க்ருஷ்ணன் ஏதேதோ பேசுகிறானாம். “சம்போ மகாதேவா, வாருங்கள் உட்காருங்கள். பிரம்மாவே, இப்படி எனது இடது புறத்திலே அமரலாம். கார்த்திகேயா! சுகமா? தேவேந்திரா! என்ன உன்னை இப்போதெல்லாம் பார்க்க முடிவதில்லை”. தூங்குகிற குழந்தை ஸ்வப்னத்தில் பிதற்றுவதாகக் கருதிய யசோதை மிகவும் பயந்து, குழந்தைக்கு திருஷ்டி கழிக்கிறாளாம்.

    மற்றெhரு சுவாரஸ்யமான சம்பவத்தைக் காண்போம். கோகுலத்திலே, ஒரு வீட்டிலே புகுந்து வெண்ணெய் திருடிக் கொண்டிருக்கிறான் கிருஷ்ணன். அப்போது அங்கு வந்த அந்த வீட்டின் பெண்மணி “யார் நீ?” எனக் கேட்கிறாள். “பலராமனின் தம்பி” என சாமர்த்தியமாகக் கூறுகிறது குழந்தை. “இங்கு எங்கு வந்தாய்?” என வினவுகிறாள் அந்தப்பெண். “என்வீடு என நினைத்து நுழைந்து விட்டேன்” என்கிறான் கண்ணன். (ஏனெனில், கிராமங்களிலே எல்லா வீடுகளும் ஒரே மாதிரி இருக்குமல்லவா!) அந்தப் பெண் விடவில்லை. மேலும் கேட்கிறாள். “அதுசரி, வெண்ணெய்ப் பாத்திரத்தில் கையை வைப்பானேன்?” என்கிறாள். “கன்றுக்குட்டி ஒன்று காணவில்லை. ஒருவேளை அது இந்த வெண்ணெய்ப் பாத்திரத்தில் இருக்கிறதோ எனப் பார்க்கிறேன். ஏதும் வருத்தமடைய வேண்டாம்” என விஷமமாகப் பதிலளிக்கிறான் கண்ணன். கன்றுக்குட்டியை வெண்ணெயிருக்குமிடத்தில் தேடிய அந்த குறும்பனைக் கண்டு யார்தான் மோகிக்க மாட்டார்கள்.

    கோகுலத்திலே, கிருஷ்ணன் வெண்ணெயை மட்டும் திருடவில்லை. கோபிகைகள் அனைவருடைய உள்ளத்தையும் கொள்ளை கொண்டான். அதனால் தான், தயிர், மோர், பால் எனக்கூவி விற்க வேண்டிய ஒருபெண்மணி, கிருஷ்ணன் மீதிருந்த பிரேமை மிகுதியால், “கோவிந்தா, தாமோதரா, மாதவா” என கூவிக்கொண்டே போனாள் என்கிறார் லீலாசுகர்.

    கிருஷ்ண கர்ணாம்ருதத்தின் ஒவ்வொரு ஸ்லோகமும் ஒரு அரிய ரத்தினமாகும். க்ருஷ்ணனின் ரூபலாவண்யத்தைப் பற்றி லீலாசுகர் கூறுகிறார்.

    ஆலிலை மேல் பள்ளி கொண்ட அந்த பாலகிருஷ்ணன், தாமரை போன்ற கைகளால், தாமரை போன்ற பாதத்தை எடுத்து, தாமரை போன்ற வாயில் வைத்துக் கொண்டிருக்கிறானாம். அத்தகைய முகுந்தனை தியானம் செய்வோம் என்கிறார் லீலாசுகர்.

    கிருஷ்ணனின் அழகிய உருவத்தினை நம் மனதில் நிலைநிறுத்திக் கொள்ள இதோ லீலாசுகரின் மிக அழகிய தொரு ஸ்லோகம்:-

    “கஸ்தூரி திலகம் லலாட பலகே
    வஷ:ஸ்தலே கௌஸ்துபம்
    நாஸாக்ரே நவமௌக்திகம்
    கரதலே வேஹம் கரே கங்கணம்
    ஸகண்டே ச முக்தாவலிம்
    கோபஸ்திரி பரிவேஷ்டித:
    விஜயதே கோபால சூடாமணி”

    நெற்றியில் கஸ்தூரி திலகம், மார்பில் கௌஸ்துப மணி, மூக்கு நுனியில் புதிய முத்து, கையில் புல்லாங்குழல், கரத்தில் வளை, திருமேனி முழுவதிலும் நல்சந்தனம், கழுத்தில் முத்துமாலை இவற்றையெல்லாம் தரித்துக்கொண்டு, கோபிகைகள் சூழ வெற்றி வலம் வருகிறான் ஆயர்தலைவனான கோபால சூடாமணி. அந்த கோபாலசூடாமணியை நம் மனக்கண்முன் கொண்டு வந்து விட்டால் எல்லையற்ற இன்பத்தை நாமும் பெறலாமே!

    Share