Tag: ஔவை நடராசன்

  • நாவலர் நூற்றாண்டு நற்றமிழுக்குப் பல்லாண்டு!

    நாவலர் நூற்றாண்டு நற்றமிழுக்குப் பல்லாண்டு!

    முனைவர் ஔவை நடராசன்  

    கருந்தாடியும் செம்மேனியும் காவியம் பேசும் இதழ்களும் கொண்ட கட்டிளங்காளையாக பேரறிஞர் அண்ணாவால் கண்டெடுக்கப்பட்ட நன்மணிதான் நாவலர்.

    ஏறுபோல் எழுந்து நின்று இலக்கிய உரைகளை ஆற்றியபோது கேட்டவர் நெஞ்சமெல்லாம் கிளுகிளுத்தது.  அண்ணாவால் அருமைத் தம்பி என்று அழைக்கப்பட்டதோடு தலைமை தாங்க வா உன் ஆணைக்கு அடங்கி நடக்கிறோம் என்று அவர் உரையாற்றியது கழக வரலாற்றின் கல்வெட்டு மொழியாகும்.

    நாவலர், பாவேந்தரின் பாட்டு வரிகளை மேடை தவறாமல் முடிப்புரையாகச் சொல்வார். பகையைக் கூடத் தன் நகையால் வென்றவர். கலைஞருடைய கலைத்திறமையால் அவர் உலகையே வெல்வார். கலை பெற்ற வெற்றிதான் கலைஞரின் வெற்றி. என் வெற்றி அவரைத் தொடர்ந்ததுதான் என்று பெருமிதத்தோடு பேசியதை நாம் நன்றாக அறிவோம்.

    நாவலர் நூற்றாண்டு நற்றமிழ் வளர்க்கும் நூற்றாண்டாக நாளுக்கு நாள் பொலிவு பெற வேண்டும் என்பதுதான் நம் விருப்பமாகும்.

    சங்கே முழங்கு என்ற எழுத்துகளைக் காணும்போதுகூட நாவலரின் இடிக்குரல், காதில் இனிப்பை ஊட்டும்.

    Share
  • நண்பர் திலகம் பக்தவச்சலம்!

    நண்பர் திலகம் பக்தவச்சலம்!

    முனைவர் ஔவை நடராசன்

    பதறிப் பதறிப் கதறிப் புலம்பினாலும் பக்தவச்சலம் இனி மீளப் போவதில்லை. அறுபதாண்டுகளுக்கு மேலாக என் உயிரில் கலந்த நண்பராகத் திகழ்ந்த திலகம் பக்தவச்சலம்.

    என் வாழ்வின் அனைத்து நிலைகளிலும் அவர் பங்கு பெற்றவர். ஞாயிற்றுக்கிழமை மாலை சிறிதும் மனம் குலையாமல் எனக்கு ஆறுதல் சொல்லிப் பேசினார்.

    தாமரையால் இத்துயரத்தைத் தாங்கவே முடியாது. இலைகள் உதிர்வது இயல்பு. மலையா இப்படிச் சாய்வது? என் மனக் கலக்கத்தை எழுத முடியவில்லை.

    எண்ணினால், எண்பது பேருக்கு மேல் “எங்கே உங்கள் பக்தவச்சலம் எப்படி நீங்கள் இனி அவர் துணையில்லாமல் நிகழ்ச்சிகளில் பங்கு பெறுவீர்கள்?“ என்று கேட்டு என் மனத்தை வாட்டியபடி இருக்கிறார்கள்.

    அவர் மறைந்தார் அல்லர். கவிப்பேரரசு ஆறுதல் கூறியது போல, அவர் வாழ்வில் நிறைந்தார். நினைவில் நினைத்தபடி இருப்பார். கண்ணை மூடினால் அவர் தோற்றம்தான் தெரிகிறது.

    தொட்டுத் தொட்டு அன்பைக் கொட்டிக் கொட்டிப் பழகியவர். தன் மனத்துயரை மற்றவரிடம் அவர் பகிர்ந்ததேயில்லை. அவர் எது சொன்னாலும் நான் முரண்பட்டதில்லை.

    ஒய்.எம்.சி.ஏ. அரங்கம் ஓவென்று கதறுகிறது. எண்பதாம் ஆண்டு விழா இப்படிதானா நடப்பது? ஊரடங்கு உலகத்தையே கலக்கும்போது, பக்தவச்சலம் அடங்கியிருப்பது விழிமேல் இடிவிழுந்ததாக இருக்கிறது.

    தாமரையின் தடந்தோள்களை இங்கிருந்தபடியே தழுவிக்கொள்கிறேன். பட்டிமன்றத்தைச் சொற்கட்டி மன்றமாக நடத்திய வரலாற்றினைத் தாமரைதான் தொடர்ந்து எழுத வேண்டும்.

    என் ஏக்கத்துக்கு எல்லையில்லை.
    அழுவதற்குக் கண்ணீரில்லை.
    தேம்புகிற நெஞ்சத்துக்குப் போதிய உரமில்லை.

    Share
  • ஒளிவிளக்கு அணைந்தது!

    ஒளிவிளக்கு அணைந்தது!

    முனைவர் ஔவை நடராசன்
     
    இந்தி ஆசிரியராக வாழ்கையைத் தொடங்கி, இடர்கள் பல கடந்து, இலக்கியத் தாரகையாக மின்னித் திகழ்ந்த சேலம் ருக்மணி மறைந்ததைக் கேட்டுப் பெரிதும் வருந்தினேன் .

    ருக்மணி அவர்களின் வாழ்க்கை அமைதி அடைந்தது என்பது ஒரு வகையில் ஆறுதல் தான். அவர் வாழ்வு தியாக வாழ்வு .
    “கடல் மடை திறந்தது போல்” இலக்கிய உரைகளை – சமயப் பொழிவுகளை ஆற்றிய அவர் திறம் வியப்புக்குரியது .அண்ணா என்று வாய் மணக்க அழைத்த இலக்கியத் திலகம் ருக்மணிக்கு எந்நாளும் ஓர் ஏக்கம் மனத்தில் படர்ந்தபடியே இருந்தது .”கற்ற கல்வியைப் பெற்று மகிழும் பேற்றினைத் தமிழகம் சரியாக வழங்குவதில்லை ” என்று அடிக்கடி கூறுவார்கள் .

    காலை மலர்ந்த மலர் மாலையில் உதிர்ந்து சருகாகிறது. தன்னைப் பறிக்கவில்லையே என்று அது தளர்வதில்லை என்று நான் சொல்வதைக் கேட்டுப் புன்னைகைத்தார்கள். அது பொருத்தமான விடையென்று அவருக்குப் புலப்படாமலேயே போயிற்று .

    சேலம் தந்த செம்மனத் திலகத்துக்குக் கம்பர் கழகங்கள் பெரிதும் கடன்பட்டவை .

    தமது மேடையில் நின்று முழங்கிய நித்திலத்தை என்று காண்போம் என்று ஏங்குவது இயல்பு தான் .

     
    ==========================================
     
    சேலம் ருக்மணி உரை
     

     

     

    Share
  • சிகரம் சாய்ந்தது!

    சிகரம் சாய்ந்தது!

    முனைவர் ஔவை நடராசன்

    நான் சென்னைக்கு வந்த 1955ஆம் ஆண்டிலிருந்து எங்கள் குடும்பத்துக்கு நெருக்கமாகத் தெரிந்த கொள்கைக் கோமான் – நீதி வேந்தர் – பு.ரா.கோகுலகிருஷ்ணன் அவர்களின் மறைவைப் பழுத்த கனி உதிர்ந்தது போலத்தான் என்று எழுதிவிட முடியாது.
     
    பழுத்த அந்த மாமரம், ஆயிரம் கனிகளைத் தந்த பயன்மரமாகும். ஏ.எல்.முதலியார் குடும்பத்தை உலகம் காணாத இரட்டையர் குடும்பம் என்பார்கள் ஆனால் தமிழினத்தில் மூன்று கிளைகளாகப் பூத்துக் கனிந்த அறிவார்ந்த புகழ்ச் செல்வங்கள் என்ற பெருமை நீதி வேந்தர் குடும்பத்தைத்தான் சாரும்.
     
    பேரறிஞர் அண்ணாவின் மனங்கனிந்த மூவராக – மருத்துவ மேதை பாலகிருஷ்ணன், பொறியியல் திலகம் இராதாகிருஷ்ணன், நீதிச் சிகரம் கோகுலகிருஷ்ணன் ஒளிர்ந்தார்கள் .
     
    நாம் கண்ணாரக் காண வாய்த்த மூவேந்தர்கள் எனலாம். தமிழ்க்கடல் பள்ளியகரம் நீ.க. அவர்களின் மருகர் தான் டாக்டர் பாலகிருஷ்ணன். பள்ளியகரம் பிள்ளை அவர்கள், நீதியரசர் கோகுலகிருஷ்ணனைப் புகழ்ந்து பேசாத நாளில்லை. மூவரும் ஒரே இல்லத்தில் ஜெனரல் பேட்டர்ஸ் சாலையிலும் பிறகு அடையாற்று வளமனையிலும் வாழ்ந்த காலங்கள் நம் இமைகளை நனைக்கின்றன.
     
    அந்த வளமனைக்கு வராத தலைவர்கள் இல்லை. தந்தை பெரியார் முதல், தமிழ்ப்புலவர் அனைவரும் வந்து விருந்தருந்தியதை நான் பலமுறை கண்டிருக்கிறேன்.
     
    சௌந்தரம் அம்மையார் அவர்களின் வளர்ப்பு மகன் போல நான் இருந்த போது, நீதியரசர் என்னைத் தழுவி, “அம்மாவுக்குப் பிடித்த பிள்ளை” என்ற சொல்லை எந்த நாளும் காக்க வேண்டும் என்று ஒரு முறை சொன்னார்.
     
    அம்மாவோ “மகனே!  இவர் என் தம்பி” என்று நீதியரசரைச் சுட்டிக் காட்டினார். நீதியரசர் இனமானம் காக்கும் நெடுந்தூணாக நின்று இலக்கியம், இசை, கலை, கல்வி, பண்பாடு ஆகிய பல்வேறு நிலைகளில் மாபெரும் பணிகளை வெற்றியோடு நிறைவேற்றினார்.
     
    இனிமையான குரலில் – கவினார்ந்த தமிழை – கடல்மடை திறந்தது போல் உரையாற்றுவார்.
     
    அவரால் தொடங்கப்பட்டதே “மணவழகர் மன்றம்.” ,அவர் வெகுண்டு எவரும் பார்த்ததில்லை. பரிவின் பிழம்பாக வாழ்ந்தார். அவர் விரல் பிடித்து என்னை மணவழகர் மன்றப் படியில் நடக்க வைத்தார். கல்லூரிப் படிப்பை நான் முடித்தபோதே “சென்னை பல்கலைக்கழகத்தில் உன்னைச் சேர்த்து விடுகிறேன் – உன் மாமனாரும் – வருங்கால மனைவியும் எனக்கு மிக வேண்டியவர்கள். நான் பிள்ளை வீட்டுக்காரனா – பெண் வீட்டுக்காரனா என்று தெரியவில்லை” என்று பேசியதை நினைத்தால் இன்றும் என் கண்கள் கலங்குகின்றன .
     
    நான் அப்போலோவில் இதய மருத்துவத்தில் இருந்த போது, தொலைபேசியில் என்னை வினவியதை மறப்பதில்லை. ஆண்டுதோறும் தமிழிசைச் சங்க விழாவில் நான் அவரைக் காண்பது வழக்கம்.
     
    மருத்துவர் இராம்குமார் இல்ல அழைப்பிதழ் என் எதிரில் இருக்கிறது. நீதியரசர் திருப்பெயரைக் கண்டு அவ்வளவு மகிழ்ந்தேன்.
     
    எப்படி ஆறுதல் கொள்வது!
     
    மூவர் வாழ்வும் முடிந்துவிட்டது.
    மூவேந்தரால் வளர்ந்தது தானே முத்தமிழ்!
    Share
  • சீலமும் நோன்பும் செறிந்த சிவப்பேறு!

    சீலமும் நோன்பும் செறிந்த சிவப்பேறு!

    ஔவை நடராசன் 

    சிவ பூசையிலேயே பழுத்துக் கனிந்த செந்தமிழ் மாமுனிவராகப் புகழோடு திகழ்ந்த தருமை ஆதீனக் குருமுதல்வரை அறிந்து அவர்பால் பணிந்து வணங்கிய நிலையில் ஐம்பதாண்டுகள் நினைவில் மின்னுகின்றன.

    1970 ஆம் ஆண்டிலிருந்தே தியாகராய நகர் – வேளூர்த் திருமடத்தில் ஈரோட்டு அப்பா என்று அழைத்த பெருந்தகை சென்னியப்ப முதலியாரும், நானும் – என் துணைவியாரும் – பிள்ளைகளும் தம்பிரான் சாமிகளுக்கு முன்னிலையில் விருந்தோடுப் பழகியதை நினைந்து உருகுகிறேன்.

    அருட்செல்வர், வாரத்துக்கு ஒருமுறையேனும் வேளூர் மடத்திற்கு வந்து தம்பிரான் சாமிகளைக் கண்டு பேசுவது வழக்கம்.

    வேளூர்த் திருமடத்தைச் சென்னையிலேயே மாபெரும் மண்டபமாக உருவாக்க வேண்டுமென்று திட்டமிட்டார்கள் .

    திருவாமூர்த் திருக்கோயிலுக்குப் பெருஞ்சிறப்புச் சேர்த்து முதலாண்டு விழா தொடங்கியது என் நினைவில் இப்போதும் நிழலாடுகிறது.

    1971ஆம் ஆண்டு நவம்பர்த் திங்களில் திடுமென 25ஆவது குரு மகா சந்நிதானம் திருவடிப்பேறு எய்தியதைக் கேட்டுத் தமிழுலகம் கலங்கியது. சந்நிதானத்தின் திருமேனி வாரணாசியிலிருந்து வானூர்தியில் வந்ததும், அருட்செல்வர் உடனிருந்து விமான நிலையத்தில் மகத்தான ஏற்பாடுகளைச் செய்ததையும் சைவ உலகம் என்றும் மறக்காது. கதறி அழுது வீதியில் புரண்ட தம்பிரான் சாமிகளுக்கு எவராலும் தேறுதல் சொல்ல முடியவில்லை.

    இராமலிங்கர் பணி மன்றத்தில் அன்பர்கள் புடைசூழ அருட்செல்வரோடு ஊரன் அடிகளாரும் இரண்டு சீருந்துகளில் தருமை சென்றதும், தம்பிரான் சாமிகள் செங்கோல் ஏற்றதும் வரலாற்று நிகழ்வுகளாகும். கசிந்துருகித் திருமுறைகளை ஓதுவதும் – சொக்கேசரைத் தொழுதபடி சிவபூசையிலேயே வாழ்வைக் கழித்ததுமாகக் குருமகா சந்நிதானத்தின் தலைமை நிறைவெய்தியது.

    கால நேரம் கருதாமல் காண்போரிடம் உரையாடி மகிழ்வதிலேயே நெடுநேரத்தைச் செலவழிப்பார்கள். சிவ சிந்தனையும், சைவ சித்தாந்தப் பொருண்மையும்தான் அவருடைய உரையாடலில் மிதந்து வரும். தொண்ணுற்றைத் தொடுவது என்பது நெடிய வயதுதான். நடக்க முடியாமல் அடியவர் இருவரின் தோளைப் பற்றி மெல்லச் சோர்ந்து இடறி நடந்ததைக் கண்டு நான் கண் கலங்கினேன்.

    நண்பர் தாமோதரனும் நானும் அணுக்கமாக இருந்து தியாகராய நகர் திருமடத்தில் பேசிக் கழித்த பொழுதுகள் இனி என்றும் வாரா.

    குரு மகா சந்நிதானம், திருவடிப்பேறு எய்தியது, காலத்தின் நிறைவிதுதான் என்பதைக் காட்டுகிறது.

    தருமையின் பெருமைச் சரிதத்தின் இருபத்தாறாவது குருமகா சந்நிதானத்தின் நெடும் புகழ் நிலைத்து நிற்கும்.

    Share
  • நூலறி புலவ!  ஆசிரியர் பெரும!

    நூலறி புலவ! ஆசிரியர் பெரும!

    ஔவை நடராசன்

    ஆசிரியர் தினமாகிய இன்று என் தந்தையைப் பற்றிய நினைவு பற்றிப் படருகிறது. 117 ஆண்டுகளுக்கு முன்னர், ஔவையார் குப்பம் என்ற சிற்றூரில் பிறந்த திரு.துரைசாமி, திரு.மயிலாசனம், திரு.முத்துக்குமாரசாமி, திரு.சுப்பிரமணியன் ஆகிய மூவருக்குப் பின் பிறந்த இரட்டைப் பிள்ளைகளில் ஒருவராவார்.

    என் தந்தையார் பிறந்த ஓர் ஆண்டுக்குள் இரட்டைப் பிறப்பில் ஒரு பிறப்பு மறைந்தார். என்னுடைய பாட்டனார் பெயர் திரு.சுந்தரம், என் பாட்டியார் பெயர் திருமதி சந்திரவதி அம்மையார். என் பாட்டியார் 6 அடி உயரத்திற்கு மேல் இருப்பார். சிவந்த தோற்றத்துடன் திகழ்ந்தவர்.

    என் தந்தையார், திண்டிவனம் உயர்நிலைப்பள்ளியில் படிப்பதற்காக மயிலம் வழியாக அன்றாடம் சென்று வந்ததாகக் கூறியது என் நினைவில் உள்ளது. “எஎஎம்” என்று அழைக்கப்பெறும் அந்தப் பள்ளிக்கூடம், டானிசு பணி மன்ற அறத்தினால் நடைபெற்றதாக நினைவு.

    என் தந்தையாரோடு காஞ்சி மாமுனிவரும் உடன் பயின்றதாக ஒரு முறை கூறினார். அந்தப் பள்ளியில் பயிலும்போதுதான் பள்ளிக்கு வந்த இரண்டு துரைசாமிகளுள் என் தந்தையார், ஔவை துரைசாமி என்று அழைக்கப்பெற்றார்.

    பத்தாம் வகுப்புப் பயின்ற அவர், வேலூர் சென்று ஊரிசு கல்லூரியில் எப்.ஏ. என்னும் வகுப்பில் சேர முயன்று, வறுமைச் சூழலால் கல்வியை நிறுத்திக்கொண்டார். பின்னர், துப்புரவுக் கண்காணிப்பாளராகப் பணியாற்றியதாகவும் ஓராண்டுக்குள் கரந்தை சென்று, தமிழ்க் கல்வி தொடர்ந்ததாகவும் கூறினார்.

    வாழ்நாள் முழுவதும் இறுதி மூச்சுவரை அவர் மேடைப் பேச்சு நின்றதுண்டே தவிர, அவர் எழுதிய உரை முத்துகள் ஒருகணமும் நின்றதில்லை.

    உரைவேந்தரின் உயர்ந்த புகழுக்குச் சிறந்த துணையாகத் தம் நலிந்த உடலோடு வாழ்ந்தவர் என் அன்னையார் திருமதி லோகாம்பாள்.

    உரைவேந்தரின் பிள்ளைகள் என்று இன்று நாங்கள் பிறருக்குச் சொல்லும்போது எங்கள் உடலில் சில அணுத்துகளேனும் அறிவுத்திறம் அமைந்திருக்குமோ என்று எண்ணுகிறேன்.

    117 ஆண்டுகள் முன்னர் இருந்த தமிழகம், இந்நாள் மிளிரும் தமிழகம் என எவ்வளவு மாற்றங்கள் பெற்றுள்ளன.

    என் தந்தையார், பகலில் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றி, அந்தி வந்தால் தன் வீட்டில் ஆர்வம் கொண்ட மாணவர்களுக்குப் பழந்தமிழ் இலக்கியங்களை இரவு 08.00 மணிவரை நடத்துவார்.

    ஆசிரியர் என்ற பெயரைத் தாம் வழிபட்ட முருகனுக்கு இட்ட பெயர் என்று சொல்லி, தான் கையொப்பம் இடும்போது தமிழ் ஆசிரியன் என்றே ஒப்பம் இடுவார். தந்தையாரின் புகழை நிறுவிய பெருந்தகைதான் புலவர் கா.கோவிந்தன் அவர்களாவார். ஆசிரியரை எண்ணும்போது, தம் 90ஆம் அகவையிலும் கண்களில் நீர் துளித்தபடி நிற்பார். ஆசிரியர் நாளன்று இப்படி ஆசிரியர் உரைவேந்தர் ஔவையை நினைக்கும்போது நெகிழ்கிறோம்.

    சேயாறு உயர்நிலைப்பள்ளியில் என் தந்தையார் தமிழாசிரியராக வாழ்வு தொடங்கிய நாளில்,

    “இன்று ஆசிரியர் ஓங்கினால்
    நாளை நாடு ஓங்கும்”

    “இன்று ஆசிரியர் தேங்கினால்
    நாளை நாடு தேங்கும்”

    “இன்று ஆசிரியர் தூங்கினால்
    நாளை நாடு தூங்கும்”

    என்று பேரறிஞர் அண்ணா, ஆசிரியர்களைப் பாராட்டிப் பேசிய பொன் வரிகளை நினைவுகூர்வது இன்றும் பொருத்தமானதே.

    —–

    Share
  • கடமையால் உயர்ந்த காவற் கோபுரம்

    கடமையால் உயர்ந்த காவற் கோபுரம்

    ஔவை நடராசன்

    கல்வியாளரும், அறிவிற்சிறந்த மரபின் கிளையாகவும் திகழ்ந்த காவல்துறைத் தலைவர் வி.ஆர்.இலட்சுமி நாராயணன் அவர்கள், இந்திய நாடு முழுவதும் நன்கறிந்த காவல்துறையின் ஒப்பற்ற தலைவராகத் திகழ்ந்தார்.

    சிறந்த ஆங்கிலப் புலமையும் சிந்தனை வளமும் செயல் நேர்மையும் அவர் புகழுக்கு அணி சேர்த்தன.

    பல முறைகள் அண்ணா நகரில் நான் அவரைக் கண்டு பேசியிருக்கிறேன். மறைந்த வழக்கறிஞர் நண்பர் தெய்வசிகாமணி தான், அவர் இல்லத்துக்கு என்னை அழைத்துச் சென்றார்.

    எண்ணிப் பத்தாண்டுகளுக்கு முன்னர் அவர் ஆங்கில இந்து நாளிதழில் எழுதிய கடிதங்கள், அவரின் சிந்தனைப் பெருமிதத்தைக் காட்டின. நானும் அவரும் பல இலக்கிய மேடைகளிலும், இசை அரங்குகளிலும் பங்குகொண்டு பேசியிருக்கிறோம்.

    ஒரு முறை நீதியரசர் மேதை வி.ஆர்.கே. இல்லத்தில் விருந்துண்டதாக நினைவு .

    முதுமை என்பது, காலம் செல்லச் செல்லக் கனிந்து பழுத்ததும் காம்பிலிருந்து உதிரச் செய்து விடுகிறது. அந்த வகையில்தான், அறிஞர் இலட்சுமி நாராயணன் மறைந்தார்.

    எ.எஸ்.பி. ஐயர் தலைமுறையின் ஒரு மாமணியை இழந்துவிட்டோம். காவல்துறையில் பணியாற்றியபோதும் கனிவு ததும்பும் கடமை உணர்ச்சிக்கு அவர் உயரிய எடுத்துக்காட்டாக ஒளிர்ந்தார்.

    நான் அவரிடத்தில் பேசிய போதெல்லாம் அவரின் அண்ணன் நீதியரசர் விஆர்.கிருஷ்ணய்யரைப் பற்றித்தான் பேசினார் .

    தனக்குப் புகழ் வேண்டாத தலைவராக வாழ்ந்தார் .  ஒரு முறை அருளைக் கண்டு ஆரத் தழுவி, அப்பாவை நீ மிஞ்சுகிறாய் அதற்கு அடையாளம் தெரிகிறது என்று பாராட்டி என்னிடத்தில் புகழ்ந்தார்.

    அண்ணா நகர் சிகரப் பூங்காவில் அமைதியாக நடந்து வந்த நடையாளரை இழந்த துயரத்தை எண்ணி இரங்குகிறேன்.

    Share
  • மாசிலா மணியே! வலம்புரி முத்தே!

    மாசிலா மணியே! வலம்புரி முத்தே!

    ஔவை நடராசன்

    என் மாமனாரை நான் இளம் பருவத்தில் இருந்து அறிவேன். தாத்தா என்று அழைத்துப் பழக்கப்பட்டேன். என் தந்தையாரின் தாய்மாமன் என்ற உறவு வகையில் பின்னி வருபவர். உழைப்புக்கு இன்னொருவரை என்னால் சான்று காட்ட முடியவில்லை.. மனம் வருந்தியதால் பிடிவாதமாகத் தன் இரு மக்கட் செல்வங்களையும் கையில் ஒரு மகளும், தோளில் ஒரு மகளுமாக நான் வளர்த்துக் காட்டுகிறேன் என்று சூளுரைத்து வந்து, தன் வியர்வையையும் உதிரத்தையும் கண்ணீரையும் குடம் குடமாகச் சிந்தி, ஒப்பற்ற மகளிர் திலகங்களாக இருவரையும் வளர்த்தார்.

    என் உறவினர்கள் யாரும் எட்ட முடியாதிருந்த கான்வென்டு பள்ளியில் சேர்த்துத் தாயாகி, தந்தையாகித் தெய்வமாக ஒவ்வொரு நாளும் வளர்த்தார்.

    சென்னையில் வாழ்ந்தபோது, அப்போதுதான் இரண்டாம் உலகப் போர் அச்சம் நிலவியது. சென்னையை விட்டு எல்லோரும் குடி பெயர்ந்தார்கள். பெயருக்கு ஏற்ற மாசிலாமணியாகத் திகழ்ந்த என் தாத்தா, வேலூருக்குக் குடிபெயர்ந்தார். வேலூரில், தன் மக்கட் செல்வங்களை நாளும் காலையில் கொண்டு போய்ப் பள்ளியில் விடுவதும், தாமே உணவு சமைத்து மதியம் பள்ளி வந்து ஊட்டுவதும் உருக்கம் தரும் காட்சியாகும்.

    இந்நிலையிலும் கூட, விடியலில் எழுந்து தாம் வல்லவராக இருந்த தச்சுப் பணியில் தம் கை நோக உழைத்தார். உடன் இருந்தவர்கள் எல்லாம் இந்தப் பெண் மக்களுக்குப் பத்தாம் வகுப்பு போதாதா என்று கேட்டபோது, வெகுண்டு எவ்வளவு படிக்க விரும்புகிறார்களோ, எந்த உயரத்துக்கு எட்ட விரும்புகிறார்களோ அந்த அளவுக்கு உயிர் உள்ள வரையில் அவர்களை உயரே அமர்த்திப் பார்ப்பதுதான் நான் எடுத்துக்கொண்ட சபதம் என்று வாழ்ந்து காட்டினார். உழைப்புக்கும் உறுதிக்கும் ஒரே சான்று என் மாமன்தான் என்று என் தந்தை சொல்வார் . தாராவைப் பார்த்துத் தான் மரபார்ந்த எங்கள் குடும்பத்தினரும், உறவினரும், பெண் மக்களுக்கும் கல்வி கற்பிக்க வேண்டும் என்று உறுதி பூண்டார்கள்.

    என் துணைவியார் தாரா ஒருவர் தான், எங்கள் மரபிலேயே மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து, பயின்று முதன் முதலில் வெற்றிச் சிறப்புப் பெற்றார். என் துணைவியார், மருத்துவக் கல்லூரியில் சேர முடியாத மனச் சோர்வு முதலில் வந்தது. ஆந்திர மாநிலத்து விசாகப்பட்டினத்தில் அவருக்கு இடம் தந்து அங்கே வரச் சொன்னார்கள். வேலூரில் இருந்து மீளவும் திரும்பிச் சென்னைக்கு வந்து துன்பக் கடலில் தாயில்லாத தனிமைத் துயரில் தவித்துக்கொண்டிருக்கும் நாங்கள் விசாகப்பட்டினத்துக்கு எப்படிச் செல்ல முடியும்? ஒரு மகளைச் சென்னையிலும் மற்றொரு மகளை விசாகப்பட்டினத்திலும் நான் போய்ச் சேர்ப்பதா என்று எள்ளளவும் என் மாமனார் மனம் கலங்கவில்லை.

    மன உறுதி மட்டும் இருந்தால் போதும். மலைகளையும் கூடத் தகர்த்துவிடலாம் என்று தன் மகளை விசாகப்பட்டினத்துக்கு அழைத்துச் சென்றார். மொழி தெரியாத மாநிலம், உறவினர்கள் என்று ஒருவர்கூட இல்லாத நிலை. கை உழைப்பைத் தவிர வேறு கதி இல்லாத நிலை.

    வீட்டுத் திண்ணை கிடைத்தால் போதும். என் கண்ணிலும் மடியிலும் வளர்ந்த மகளைத் தோளில் சுமந்தாவது துன்பம் வராமல் அவளைக் காப்பது என் கடமை என்று உறுதிபூண்டார். ஒரு கதை படித்தது போல இருக்கும். தாரா அம்மையாரின் தளராத மனமும் தந்தையின் கனவை நிறைவேற்ற வேண்டும் என்கிற தனிப்பெரும் முயற்சியும் பத்து நாளில் சென்னை மருத்துவக் கல்லூரியிலேயே மாற்றம் பெற்று வந்து சேரும் ஆணையைப் பெற்றார்கள்.

    ஓர் இனத்துக்கு மாசிலாமணி பிள்ளை போன்ற ஒரு கடமையாளர் இருந்தால் அந்த இனம் தலை நிமிர்ந்து நிற்கும்.

    முதலில், என் திருமணம் அவர் மனத்துக்குப் பேரிடியாக இருந்தது. சென்னைக்கு நான் வந்து வாழத் தொடங்கியதும், பழகப் பழக மெல்ல மெல்ல என் மீது பரிவைக் கொட்டினார். என் கடமை முடிந்துவிட்டது. என் அருமை மகளைப் போல இன்னொரு திருமகளை நான் எந்தப் பிறவியில் பெறப் போகிறேன் என்றாலும், என் மகள் தான் எனக்கு அன்னை. எனக்குக் கடவுள் நம்பிக்கை இல்லை என்றாலும் என் பிள்ளைகள் தான் எனக்குக் குல தெய்வங்கள் என்று புலம்பிய நிலையில் தான் அவர் உயிர் பிரிந்தது.

    உலகின் எத்தனை நாடுகளுக்கு நீ போவதென்றாலும் நான் உடன் வருவேன் என்று சொல்லி, மலை போன்ற மனத்துணிவை மகளுக்கு ஊட்டினார். இப்போதும்கூட, என் மனைவியைப் பார்த்து நான் பேசும்போதெல்லாம் என் மனக்கண்ணில் அவர் தான் நிற்கிறார்.

    “தாயாகி, தந்தையாகி எம்மைத் தாங்கி நின்ற தெய்வம்” என்ற தொடர்தான் அவர் கல்லறையில் எழுதப்பெற்றது.

    அவர் வளர்த்த குடும்பக் கொடி, இன்று செழித்தோங்கி நிற்கிறது. மகனும் பெயர்த்தியும் எனக் குடும்பத்தினரும், உறவினரும் மருத்துவ மணிகளாகத் மிளிர்கிறார்கள். எந்த உயர்வு அவர்களுக்கு வந்தாலும் மாசிலாமணி அவர்களின் நினைவுக்குத்தான் காணிக்கையாக்குகின்றனர்.

    ஒப்பற்ற ஒரு தந்தையாக, உலகத்துக்கு ஓர் எடுத்துக்காட்டாக வாழ்ந்து மறைந்தார்.

    இன்று அவரின் 49ஆவது நினைவு நாளாகும்.

    Share
  • ஔவை நடராசன் – 81

    Avvai Natarajan and Annakannan

    புகழ் பூத்த தமிழறிஞர் ஔவை நடராசன் அவர்கள், அண்மையில் முத்து விழா கண்டுள்ளார். 80 வயது நிறைந்து, 81ஆம் ஆண்டில் நுழைந்துள்ளார். கனிந்த வயதில், நிறைந்த வாழ்வில்,  செறிந்த அனுபவங்கள் கொண்ட அவருடன் அண்ணாகண்ணன், 2016 மே 2ஆம் நாள் நிகழ்த்திய தொலைபேசி உரையாடல் இங்கே.

     

    Share