Tag: டி.விப்ரநாராயணன்

  • வாழ்த்துக்கள்

    எல்லாம் தரும் இணைய இதழ்
    வல்லமை என்றொரு கலைக் களஞ்சியம்
    எல்லாப் படைப்புகளையும் வெளியிடும் தளம்
    எல்லோரையும் வரவேற்கும் அன்புத் தளம்
    நல்ல நல்ல செய்திகளைத் தரும் வலைத்தளம்
    சொல்லலாம் நம் எண்ணங்களை சுதந்தரமாக
    வெல்லலாம் வல்லமை விருதை ஆனந்தமாக
    மெல்ல மெல்ல ஆறு ஆண்டுகள் கடந்த
    வல்லமையே வாழ்க பல்லாண்டு

    விப்ரநாராயணன்

    Share
  • சித்திரையே வருக!

     

     

    விப்ரநாராயணன்
     mainpic_L

    சித்திரையே வருக—என்றன்
    நித்திரை நீங்கி விழித்திட—சித்திரையே
    அல்ல லுற்றேன் தெளிந்தே னல்லேன்
    அலைந்து திரிந்தேன் உணர்ந்தே னல்லேன்
    வல்வினைகள் சூழ்ந்தன வருந்தினேன் அல்லேன்
    நல்லெண்ணங்கள் தோன்றி நன்மைகள் செய்திட—சித்திரையே

    நூல்கள் பல படித்தேன் கல்வி பெறவில்லை
    நூறு ஆலயங்கள் சென்றேன் பக்தி வரவில்லை
    மொழிகள் பல கற்றேன் பேசத் தெரியவில்லை
    விழிப்புடன் என்றும் வாழ இறைவன் அருள் பெற—சித்திரையே

    நல்லோர்கள் குழுவில் சேர்ந்து நலம்பெறவும்
    எல்லோருடனும் இணைந்து நற்பணிகள் செய்யவும்
    கல்லாதவர்கள் கல்விகற்க துணை புரியவும்
    பொல்லாதவர்கள் திருந்தி மதிநலம் பெற்றிட—சித்திரையே

    இன்பம் வந்தாலும் துன்பம் வந்திடினும்
    அன்புடன் சமமாய் வாழும்நிலை பெறவும்
    நன்பனாய் நல்லாசிரி யனுமாய் அனைவர்க்கும்
    அன்பனாய் வாழ பரந்தாமன் அருள்கிட்டிட –சித்திரையே

    Share
  • அன்புள்ள தோழி மணிமொழிக்கு

    டி. விப்ரநாராயணன் 

    23-3-2014

    அன்புள்ள தோழி மணிமொழிக்கு

    உன் கடிதம் கிடைத்தது. உன் குழந்தைகள் எல்லோரும் நலமாக இருக்கிறார்கள் என்று உன் கடிதத்தின் மூலம் புரிந்து கொண்டேன். நானும் மனைவியும் இங்கே தனியாகத்தான் இருக்கிறோம். மூத்தவன் சான்பிரான்சிஸ்கோவிலும் இளையவன் கனெக்டிகட்டிலும் இருக்கிறான். இளையவனுக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. என் அத்தை காலமாகிவிட்டார்கள். என் மனைவி அத்தையின் மகள் தான் என்று உனக்கு நினைவிருக்கும். ஒரு துக்கம், ஒரு சந்தோஷம். இரண்டையும் ஒரே கடிதத்தில் சொல்கிறேனே என்று நினைக்கிறாயா? இரண்டையும் ஒன்றாகப் பார்க்கும் மனநிலையை பெறுவதற்கு முனைய வேண்டும். அதாவது குழந்தை பிறந்தால் அழவேண்டும்;  யாரேனும் இறந்தால் சந்தோஷப் படவேண்டும். ஒன்று பிறவிக் கடலில் துக்கப்பட பிறந்துள்ளது;. மற்றொன்று பிறவிக் கடலிலிருந்து விடுதலையாகிச் செல்கிறது என்று என் தாத்தா அடிக்கடி சொல்வார். ஆனால் நாம் நடைமுறையில் அப்படியிருக்க முடியவில்லை.

    இசைக்கச்சேரிகளுக்குப் போய்க் கொண்டிருக்கிறாயா? உபன்யாசங்களுக்குச் செல்கிறாயா? சென்ற கடிதத்தில் கீதையில்  இரண்டாவது அத்தியாயத்தில் 47 ஆவது ஸ்லோகம் புரியவில்லை என்று எழுதியிருந்தாய். அதுதான் கீதையின் அச்சாணி; நம் வாழ்விற்கும் அச்சாணி. ஸ்லோகத்தைக் கீழே தருகிறேன்

    கர்மண்யே வாதிகாரஸ்தே மாபலேஷு கதாசந                                       

    மாகர்ம பலஹேதுர்பூர்மாதே லங்கோஸ்தவ கர்மணி

    இதன் பொருளாவது — கருமத்தைச் செய்வதில் தான் உனக்கு அதிகாரம். அதன் பலன்களில் உனக்கு அதிகாரம் எப்பொழுதும் இல்லை. மற்றும் கரும பலன்களுக்கு காரணமாக ஆகாதே. ஆனால் கருமத்தைச் செய்யாமலிருப்பதில் மனத்தைச் செலுத்தாதே.

    ஒரு வேலை செய்தால் பலனை எதிர்பார்ப்பதுதானே மனித இயல்பு. எவ்வாறு பலனில் நமக்கு அதிகாரம் இல்லை என்று எப்படிச் சொல்லலாம்? —என்று நீ எழுதியிருக்கிறாய்.

    நீ கூறுவது நூற்றுக்கு நூறு உண்மைதான். அப்படியிருப்பதால்தான் சர்க்கரை வியாதி, இரத்த அழுத்தம், இதய நோய் போன்ற கடுமையான நோய்கள் நம்மை வந்து ஆட்கொள்ளுகின்றன. பலனை எதிர்பார்ப்பதற்கும் நோய்களுக்கும் என்ன தொடர்பு உள்ளது என்று நீ நினைக்கலாம்.

    ஒரு செயலைச் செய்கிறோம். அதன் பலனை எதிர்பார்க்கிறோம், அது கிட்டவில்லை என வைத்துக் கொள்ளலாம். உடனே நம் மனம் அதை எண்ணி அசைபோடுகிறது. பெருத்த ஏமாற்றம் விளைகிறது. யாருக்காக இந்த வேலை செய்தாயோ அவன் உன்னை சீண்டக்கூட இல்லை. அவனுக்குப் பலன் கிடைத்துவிட்டது. அவன் உனக்கு நன்றி கூடச் சொல்லவில்லை என்று உன் மனம் வேதனைப் படுகிறது. அவன்மேல் கோபம் உண்டாகிறது. கோபம் வெறுப்பாகிறது. அவனைப் பார்க்கக் கூடாது; அவனிடம் பேசக் கூடாது என்றெல்லம் உன் மனம் நினைக்கிறது. மற்றவர்களிடம் சொல்லிப் புலம்புகிறாய். தூக்கம் கெடுகிறது. மனவலி அதிகமாகிறது. மயக்கமாகி விடுகிறாய். மருத்துவர் சோதனை செய்கிறார்; இதயத்தில் கோளாறு என்று கணிக்கிறார். ஒரு சிறு எதிர்பார்ப்பு எங்கே உன்னை இட்டுச் சென்று விட்டது என்று பார்த்தாயா?

    காந்திஜி நமக்கு சுதந்திரம் வாங்கித் தந்தார். ஆனால் ஆகஸ்டு 15ஆம் நாள் சுதந்திர தின விழாவில் கலந்து கொள்ளவில்லை. அவர் நவகாளிக்கு யாத்திரையை மேற்கொண்டுவிட்டார். தான் பிரதமராவதற்கோ அல்லது ஜனாதிபதி ஆவதற்கோ அவர் தியாகம் புரியவில்லை. ஆகவே நாம் எந்த எதிர்பார்ப்பும் இல்லாது நம் கர்மங்களைச் செய்ய நாம் மனதைத் தயார் செய்துகொள்ள வேண்டும்.

    ஸ்ரீராமானுஜர் தன் குருவிடம் உபதேசம் பெற 18 முறை ஸ்ரீரங்கத்திலிருந்து திருக்கோஷ்டியூருக்கு நடந்தார். 18 ஆவது  முறையின்போதுதான் அவர் உபதேசம் பெற்றார். 18 முறை சென்றதற்குக் காரணம் அவர் அந்த உபதேசத்தைப் பேறுவதற்கு அவர் தயாராகவில்லை என்று அவர் குரு எண்ணினார். அந்த உபதேசத்தைப் பெற்றவுடன் அவர் அந்த மந்திரத்தை சாதி மத வேறுபாடின்றி எல்லோருக்கும் உபதேசம் செய்தார். தான் நரகம் புகுந்தாலும் மற்றவர்கள் வைகுண்டம் செல்ல வேண்டும் என்ற உன்னதமான எண்ணம்.  இவர்கள் எந்த பலனையும் எதிர்பார்க்காது மக்களுக்குத் தொண்டாற்றவே நாம் பிறந்திருக்கிறோம் என்று எண்ணிய மகான்கள்.

    நான் என் கடமையைச் செய்துவிட்டேன். இனி நான் ஓய்வெடுக்கப் போகிறேன் என்பதும், என் பிள்ளையை 10 மாதம் தோளில் சுமந்தேன், அவன் என்னைக் கவனிக்காமல் விட்டு விட்டான் என்பதும், நான் அவனை இந்த வயிற்றில் 10 மாதங்கள் சுமந்து பெற்றேன்; ஆனால் இன்று அவன் இந்த வயிற்றுக்கு ஒரு வாய் சோறு கூட போடமாட்டேனென்கிறான் என்று புலம்புவதும் எதிர்பார்ப்பின் பயனே.

    குழந்தைக்கு தாய் உணவு ஊட்டுகிறாள். அப்பொழுது அவன் பிற்காலத்தில் தன்னை சுகமாக வைத்திருப்பான் என்றா அவள் நினைக்கிறாள். இல்லையே. ஆனால் அவன் வேலைக்குப் போன பின்பு நினைக்கிறாள். அவனுக்குத்  திருமணம் நடந்தபின் இதையே நினைக்கிறாள். அவன் மனமோ தாயைப் பற்றிய சிந்தனையில்லாது இருக்கிறது. முடிவு முதியோர் இல்லம் தான். இவையாவும் எதிர்பார்ப்பின் விளைவே.

    காதலித்துத் திருமணம் செய்து கொள்கிறார்கள் இளம் சிட்டுகள். இரண்டு நாளில் பிரிந்து விடுகிறார்கள். காதலிக்கும்போது ஈருயிரும் ஓருடலுமாக இருந்தவர்கள் வெவ்வேறு உயிராக மாறிய விந்தைதான் எங்ஙனம்? எல்லாம் எதிர்பார்ப்பின் விளைவுதான். நான் சொன்னபடிதான் நீ இருக்கணும் என்று அவனும் தான் சொன்னபடி அவன் இருக்கணும் என்று அவளும் நினைக்க மணச் சிதைவு ஏற்பட்டுவிட்டது. பயத்தினால் எதிர்பார்ப்பு ஏற்படுகிறது.

     நாம் பிறருக்கு உதவி செய்தாலும், ஆலயங்களில் பணியாற்றினாலும் நமக்கு மோக்ஷம் கிட்டும் என்று மதங்களும் மறை நூல்களும் கூறுகின்றன. இம்மாதிரி கூறும் மதங்களைச் சாடுகிறார் வினோபாபாவே. மோக்ஷத்தைக் காட்டி பணி செய்யவைக்கக் கூடாது என்கிறார். ஆலயங்களில் எந்தவித ஊதியமுமின்றி பணியாற்றிக் கொண்டிருக்கிறார் ஒருவர். ஒருநாள் ”நாம் இத்தனை நாள் இங்கு பணியாற்றி வருகிறோம் இந்தக் கடவுள் கண்ணைத் திறக்க மாட்டேனென்கிறானே; இங்கு பணியாற்றினால் நம் பெண்ணுக்கு நல்ல வரன் வரும் என்று கூறினாரே அந்த ஜோஸியர்” என்றெல்லாம் அவர் மனம் அங்கலாய்க்கிறது. முடிவில் ஆலயத்திற்குச் செல்வதையே நிறுத்திவிட்டார்.

    அதனால் மணி மொழி நாம் நம் வேலையைச் செய்து கொண்டேயிருக்க வேண்டும். நம் கடன் பணி செய்வதே. அன்னை தெரசா, காஞ்சி பெரியவர், இரமண மகரிஷி, காந்திஜி, தியகராஜ ஸ்வாமிகள், ஸ்ரீராமகிருஷ்ணர், விவேகானந்தர் ஆகியோருடைய அறிவுரைகளையும் வாழ்க்கையையும் படிக்கவேண்டும். எதிர்பார்க்காமல் வாழ முடியாது; ஆனால் நம்மை நாம் செய்யும் கர்மத்தில் முழுமையாக ஈடுபட்டு அதில் ஆனந்தத்தைப் பெறும் வழியைக் கண்டால் எதிர்பார்ப்பு  என்ற சொல்லே நம் அரிச்சுவடியில் வராது. இது ஒரே நாளில் வரக் கூடிய பண்பு இல்லை.

    கோவிலுக்கு ஒரு பால்காரி பால்கொண்டு வருவது வழக்கம். மழையின் காரணமாக ஆற்றில் வெள்ளம் வந்துவிட்டது.. அவள் மெதுவாகக் ஆற்றைக் கடந்து தாமதமாகப் பாலைக் கொண்டு வந்து கொடுத்தாள். கோவில் பூசாரி அவளிடம் “நீ ஆண்டவனை மனதில் நினைத்திருந்தால் ஆறே உனக்கு வழி விட்டிருக்கும்“ என்றார். “அப்படியா! நான் முயன்று  பார்க்கிறேன்” என்றாள். மறுநாள் மழை பெய்தது. ஆற்றில் வெள்ளம் வடியவில்லை. ஆனால் அவளோ சீக்கிரம் பாலைக் கொண்டு வந்து விட்டாள். ”எப்படி?”என்று கேட்டார் பூசாரி. “நீங்கள் சொன்ன மாதிரி செய்தேன். ஆறு வழி விட்டது, வந்துவிட்டேன்” என்றாள் பால்காரி. உடனே பூசாரி ”என்னையும் அழைத்துச் செல்” என்றார். உடனே இருவரும் ஆற்றை நோக்கி வந்தனர். இருவரும் ஆற்றில் இறங்கினர். பால்காரி ஆற்றில் எளிதாக நடந்து சென்றாள். ஆனால் பூசாரியால் முடியவில்லை. காரணம் அவர் பால்காரி போல் அக்கறையுடன் ஆண்டவனைத் தியானிக்கவில்லை. பூசாரி ஆண்டவன் அருகில் சேவை செய்தும் அவருக்குப் பலன் கிட்டவில்லை. ஏனெனில் அவர் பலனை எதிர்பார்த்து பணியாற்றுகிறார். பொதுவாக கோயில் பூசாரிகள் தட்டில் விழும் பணத்தையே பார்த்துக் கொண்டிருப்பதை நாம் கவனித்திருக்கலாம்.

    மேலே சொன்ன செய்திகள் உனக்கு நன்றாகப் புரிந்திருக்கும். செய்யும் வேலையில் கவனமும் அன்பும் ஈடுபாடும் வேண்டும். பலன் தானாகவே வந்து சேரும். நீயும் நானும் படிக்கும்போது நம் பெற்றொர்கள் நம்மைப் போல் எந்த எதிர்பார்ப்பும் இல்லாதுதான் நம்மை வளர்த்தார்கள். அவர்களுக்கு. வாழ்க்கையைக் கண்டு பயமில்லை. அதனால்தான் என் உடன் பிறந்தவர்கள் ஆறு பேர், உன்கூடப் பிறந்தவர்கள் எண்மர். நம் பெற்றொர்கள் நம் எதிர்காலம் பற்றிக் கனவு கண்டு தங்கள் வாழ்க்கையைத் தொலைத்துக் கொண்டார்களா? இல்லையே. அவர்களுக்கு எந்த வியாதியும் வரவில்லை.

    எதிர்பார்ப்பு இல்லாமல் வாழ்வதற்கு ஒரே வழி கடந்தகால நினைவுகளையும் வருங்காலக் கனவுகளையும் விடுத்து நிகழ்காலத்தில் வாழ்வதுதான்.

    உன் பிள்ளைகளையும் பேரன் பேத்திகளையும் விசாரித்ததாகச் சொல்லவும். ஒருதடவை இங்கு வந்துவிட்டுப் போயேன்.

    உன் பிரியமுள்ள தோழன்,

    அருள்மொழி.

    Share
  • அன்புள்ள பேத்தி மணிமொழிக்கு

    டி.விப்ரநாராயணன்

    அன்புள்ள பேத்தி மணிமொழிக்கு

    எங்கள் ஆசீர்வாதம். உன் கடிதம் கிடைத்தது. உன் கையெழுத்து நன்றாக இருக்கிறது. பாட்டி உன் எழுத்திற்கு முத்தம் கொடுத்தாள். நீ பரீட்சையில் 100 மார்க்குகள் எடுத்தது பற்றி எங்களுக்கு ரொம்ப சந்தோஷம். நீ ஆங்கிலம் நன்றாகப் பேசுகிறாய் என்று அப்பா நேற்று போனில் சொன்னார். தமிழை மறக்கக் கூடாது. நீ தமிழில் கடிதம் எழுதியிருக்கிறாய். ரொம்ப சந்தோஷமாயிருக்கிறது. நன்றாகப் படி.

    கடவுளைக் கும்பிட வில்லையென்றால் கடவுள் நம் கண்களைக் குத்தி விடுவார் என்று அம்மா பயமுறுத்துகிறாள் என்று உன் கடிதத்தில் எழுதியிருந்தாய். கடவுள் ரொம்ப கொடுமையானவரா? என்று கேட்டிருக்கிறாய்.

    நீ பயப்படாதே.கடவுள் மிகவும் நல்லவர்; அன்பானவர்; கருணையுடையவர். தினமும் காலையிலும் மாலயிலும் சாமி படத்தின் முன் நின்று பாட்டு பாடு. அவர் சந்தோஷப் படுவார். இரவு தூங்கப் போகுமுன் கடவுளை வணங்கு. ஒருவேளை மறந்து விட்டால் கவலைப்படாதே.

    நீ சென்ற கடிதத்தில் தென்னை மரத்தைப் பற்றி ஒரு பாரா எழுதியிருந்தாய். படித்தேன். பாட்டியும் படித்தாள், நன்றாகவும் பிழையில்லாமலும் இருந்தது. சிறு புத்தகங்களைப் படித்துப் பழகு. நான் ஒரு பாடல் உனக்காக எழுதியிருக்கிறேன். நீ அதைப் பாடிப் பழகலாம்.

     காகமொன்று நீர் குடிக்க

    சுற்றி சுற்றி வந்தது.

    தாகம் தீர தண்ணீரைத்

    தேடித் தேடி அலைந்தது

    வேகமாகப் பறந்தது

    மெதுவாக நடந்தது

    நாகமொன்றைப் பார்த்தது

    நடுநடுங்கிப் போயிற்று

    சோகமாய்ப் பறந்து சென்று

    மரக்கிளையில் அமர்ந்தது

    செம்பொன்று கீழே

    இருந்ததைக் கண்டது

    ஜம்மென்று பறந்துவந்து

    செம்பிற்குள் எட்டிப் பார்த்தது

    தண்ணீரைக் கண்டதும்

    காகா என்று கத்தியது

    சுற்றுமுற்றும் பார்த்தது

    ஸ்ட்ரா ஒன்றைக் கண்டது

    ஸ்ட்ராவை எடுத்து உறிஞ்சிற்று

    தாகம் தீர்ந்தது, பறந்தது

    இந்தப் பாட்டைப் பாடிப் பழகு. நீயும் இந்த மாதிரி குட்டிப் பாடலை எழுதலாம். உன் தோழிகளுக்குப் பாடிக் காட்டு. நான் உன்னைப் பார்க்க வரும் போது பல பாடல்களும் கதைகளும் கொண்டு வருகிறேன்..

    பாடங்களைத் தவறாமல் படி. பயப்படாதே. உன் தம்பியுடன் நன்றாக விளையாடு.

    இப்படிக்கு

    உன் பிரியமுள்ள தாத்தா

    Share
  • அன்புள்ள மணி மொழிக்கு

    டி.விப்ரநாராயணன்

    24-3-2014

    அன்புள்ள சகோதரி மணி மொழிக்கு

    நலம் உன் நலத்தை அறிய ஆவலாயுள்ளேன், சென்ற  கடிதத்தில் நலம் பற்றிக் குறிப்பிடாமல் கடிதத்தைத் தொடங்கிவிட்டாய். எப்படியிருக்கிறார்கள் சரவணனும் அருணாவும். பேரன் இளங்கோ நன்றாகப் படித்துக் கொண்டிருக்கிறானா? உன் கணவர் மஸ்கட்டிலிருந்து வந்து விட்டாரா? இங்கு செந்தில் கனடா போயிருக்கிறான். அதனால் குழந்தையுடன் லக்ஷ்மி அவள் தாய் வீட்டிற்குச் சென்று இருக்கிறாள். அம்மாவிற்கு இரத்த அழுத்தம் அதிகமாகத்தான் இருக்கிறது. அப்பா நலமாக இருக்கிறார்.

    சென்ற கடிதத்தில் தாய்மையைப் பற்றி ஒரு கவிதை எழுதியிருந்தாய். நன்றாக இருந்தது. நானும் நம் நாடு “அன்றும் இன்றும்” என்ற தலைப்பில்  ஒரு கவிதை எழுதினேன். என் நண்பர் பாலாவிடம் காண்பித்தேன். நன்றாக இருக்கிறது என்று சொன்னார். கீழே அந்தக் கவிதையை தந்திருக்கிறேன். படித்துப் பார். உன் கருத்தைத் தெரிவி. உன் வீட்டு வேலைகளின் நடுவில் கவிதை, கட்டுரை என்று எழுதுகிறாய். உன்னைப் பாராட்டத்தான் வேண்டும். அம்மாவும் அப்பாவும் உன்னைப் பார்க்க அடுத்தமாதம் வரலாம் என்று நினைக்கிறார்கள். உன் கருத்தைத் தெரிவி.

    இப்படிக்கு

    உன் பிரியமுள்ள அண்ணன்

    தமிழ்ச் செல்வன்

    நம்நாடு அன்றும் இன்றும்

    பாரத நாடு பழம்பெரும் நாடு

    பாரினிலே அது சிறந்த நாடு

    ஏரெடுத்து வாழும் மக்கள்

    பேரெடுத்த  அருமை நாடு,

    வேதங்கள் தோன்றிய நாடு – மன

    வேதனைகள் நிறைந்த நாடு – பல

    சோதனைகள் கண்ட நாடு – பல

    சாதனைகள் படைத்த நாடு.

    ஆலைகள் அமைந்த நாடு — கல்விச்

    சாலைகள் உள்ள  நாடு – அழகுச்

    சோலைகள் மல்கிய  நாடு – மனச்

    சோலைகள்  இல்லா நாடு.

    மக்கள் அதிகம் உள்ள நாடு

    ஏக்கங்கள் நிறைந்த நாடு

    ஊக்கங்கள்  குறைந்த நாடு – அதனால்

    தாக்கங்கள் விளைந்த நாடு

    சிற்பத்திற்குச் சிறந்த நாடு

    வெற்பால் சூழ்ந்த நாடு

    கற்பிற்கோர்  சிறந்த நாடு— ஆனால் பலர்

    கற்பைச் சூறையாடிய நாடு.

    மதங்கள் பல கண்ட நாடு

    மதச் சண்டைகளும் காணும் நாடு

    சாதிகள்  ஆயிரம் உள்ள நாடு

    சாதிச் சண்டையும் மலிந்த நாடு

    புனிதர்கள் தோன்றிய நாடு – பல

    முனிவர்கள் வாழ்ந்த நாடு

    மனிதத் தன்மை குறைந்த நாடு—அதனால்

    புனிதத்  தன்மையும் குறைந்த நாடு

    புண்ணியத் தலங்கள் உள்ள நாடு —  ஆனால்

    புண்ணியம் இல்லாத நாடு

    பெண்ணியம் குலைந்த நாடு—மனத்

    திண்ணியம் இல்லாத நாடு

    விழாக்கள் கொண்டாடும் நாடு – அதன்

    விளைவையும் சந்திக்கும் நாடு

    விளைநிலங்கள் அதிகம் உள்ள நாடு – அவற்றை

    விளையாத நிலமாக மாற்றிய நாடு.

    ஆன்றோர்கள் பிறந்த நாடு

    சான்றோர்கள் வாழ்ந்த நாடு – நாட்டை

    வென்றோர்கள்  இருந்த நாடு—ஆனால்  மனத்தை

    வென்றோர்கள் இல்லாத நாடு.

    நாட்டுப் பற்றை வளர்த்த நாடு

    வீட்டுப் பற்றை ஒழித்த நாடு—இன்றோ

    நாட்டுப் பற்று குறைந்த நாடு – தன்

    வீட்டுப் பற்றை வளர்க்கும் நாடு

    ஏற்றங்கள் நிறைந்த நாடு

    குற்றங்கள் மலிந்த நாடு – கட்சிச்

    சீற்றங்கள் காணும் நாடு—ஆனால் பல

    மாற்றங்கள் கொணர்ந்த  நாடு

    உண்மைக்குப் பெயர் பெற்ற நாடு

    உண்மையைப் பெயர்த்தெடுத்த நாடு

    வண்மைக்குச் சிறந்த  நாடு — ஆனால்

    வன்மைக்கும் உள்ளாகும் நாடு

    ஆட்சிகள் பல கண்ட நாடு

    கட்சிகளும் பல கண்ட நாடு– மாட்சிமிக்க

    ஆட்சி யில்லாத நாடு – மனச்

    சாட்சி யில்லா நாடு

    உழவர்கள் நிறைந்த நாடு

    ஊழல்கள்  மலிந்த நாடு

    உழைப்பாளிகளை மதிக்காத நாடு

    உழைப்பையும் மதிக்காத நாடு

    Share
  • அன்புள்ள மணிமொழிக்கு

    டி.விப்ரநாராயணன்

    24-03-2014

    அன்புள்ள மகள் மணிமொழிக்கு

    நீ எப்படி இருக்கிறாய்? பேரன் அருண் நன்றாக படிக்கிறானா? மாப்பிள்ளைக்கு ப்ரொமோஷன் கிடைக்கப் போகிறது என்று சென்ற கடிதத்தில் எழுதியிருந்தாய். கிடைத்துவிட்டதா? மாமனார் மாமியார் எப்படியிருக்கிறார்கள்?

    எதிர் வீட்டுப் பெண் தனக்குப்பார்த்த மாப்பிள்ளையை நிச்சயதார்த்தம் நடந்த பத்து நாட்களுக்குப்பின்  மாப்பிள்ளையைப் பிடிக்கவில்லை என்று சொல்லி விட்டாளாம் என்று எழுதியிருந்தாய்..  மற்றொரு பெண் மாமனார் மாமியார் இல்லாத வீட்டில்தான் தான் கல்யாணம் செய்துகொள்வேன் என்று சொல்கிறாள் என்றும் குறிப்பிட்டிருந்தாய். மேலும் மிகவும் கவலைப் பட்டு எழுதியிருந்தாய்.. நீ சொல்வது உண்மைதான். இப்பொழுது பையனுக்கோ பெண்ணுக்கோ திருமணம் நடக்கும் வரைக்கும் பயமாக இருக்கிறது என்று பெற்றொர்கள் சொல்கிறார்கள். திருமணம் ஆனபின்பும் கவலைதான். முன்காலத்தில் மாமியார் கொடுமை, நாத்தனார் கொடுமை என்று கேள்விப்பட்டோம். இன்றோ மருமகள் கொடுமை என்று கேள்விப்படுகிறோம்.

    ஒரு நண்பர் ஒரு செய்தி சொன்னார்.நிச்சயமான பின்பு. பெண்ணும் பிள்ளையும் வெளியில் சென்றிருக்கிறார்கள். அப்பொழுது அவள் இளநீர் கேட்டிருக்கிறாள். அவனும் இளநீர் விற்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றிருக்கிறான் இளநீர் விற்பவரிடம் இளநீர் ஒன்றின் விலை என்ன என்று கேட்டிருக்கிறான். அவன் 25 ரூபாய் என்றிருக்கிறான். உடனே அந்தப் பையன் 20 ரூபாய் வைத்துக் கொள் என்று பேரம் பேசியிருக்கிறான். உடனே அந்தப் பெண் பேரம் பேசும் மாப்பிள்ளை வேண்டாம் என்று சொல்லிவிட்டு வீட்டிற்கு வந்து நடந்ததைக் கூறிவிட்டு திருமணத்தை நிறுத்தி விட்டாளாம் அந்தப் பெண். மற்றொரு செய்தி. ஒரு பையன் பெண்ணைப் பார்த்துவிட்டு பிடித்திருக்கிறது என்று சொல்லிவிட்டு திருமணம் ஆனபின்பு பெண்ணின் பெற்றொர்கள் தங்கள் பெண்ணைப் பார்க்க வரக் கூடாது என்றானாம். இவ்வாறு பல கதைகள் என் செவியில் விழுந்தன.

    நீ ஏன் இவ்வாறு நடக்கிறது ? இதற்குக் காரணம் என்ன என்று கேட்டிருந்தாய்?

    குழந்தைகளை வளர்ப்பதில் பெற்றொர்கள் தவறு செய்து விடுகிறார்கள். அவர்களின் எதிர்காலம் பற்றி ஒரு அச்சத்தை தோற்றுவித்தே குழந்தைகளை வளர்க்கிறார்கள். வாழ்க்கையை நேசிக்கக் கற்றுக் கொடுக்க வில்லை. சுதந்திரம் என்ற சொல்லின் பொருளைத் தவறாகத் தெரிந்துகொண்டு தங்கள் வாழ்வை அழித்துக் கொள்கின்றனர். .உன்னைத் திருமணம் செய்து கொடுத்தபோது இப்படியெல்லாம யோசித்தோமா.. மாப்பிள்ளயின் சம்பளம் ரூபாய் 200000 தான். அவர்கள் பெற்றொர்கள் உன்னுடன் தான் இருக்கிறார்கள்.. உனக்கு என்ன கஷ்டம் வந்து விட்டது. இப்பொழுது மாப்பிள்ளை நல்ல சம்பளம் வாஙுகுகிறார்.. வரவுக்கு ஏற்ற செலவு செய்து வாழ்க்கையை நன்றாகவும் சந்தோஷமாகவும் நடத்துகிறீர்கள்.

    வாழ்க்கையைக் கண்டு அச்சப்படக் கூடாது, 2020 பற்றி 2014-ல் சிந்தித்து வாழ்க்கையைத் தொலைப்பவர்கள் அனேகர். இக்காலப் பையன்களும் பெண்களும் – குறிப்பாக கணிணித் துறையில் பணிபுரிபவர்கள்—அதிக எதிர்பார்ப்பிலும் கற்பனையிலும் கருத்தைச் செலுத்தி நிகழ்காலத்தை இழந்து விடுகிறார்கள்.  பெண் பார்க்கும்போது  ஒரு பெண்  பையனிடம்,” தனக்குப் பிறக்கும் குழந்தை இண்டர் நேஷனல் பள்ளியில் படிக்கணும். அதற்கு நீங்கள் இப்பொழுது ஒப்புதல் தரவேண்டும் “ என்றாளாம்.இதெல்லாம் வேடிக்கையாக இருக்கிறது..நம் வாழ்க்கை இவ்வுலகில் நிரந்தரமல்ல. மரணம் எப்பொழுது. நிகழும் என்பது நமக்குத் தெரியாது.இலக்கு இருக்கவேண்டும். ஆசைகள் இருக்க வேண்டியதுதான் . ஆனால் ஆசையையும் தேவையயும் அதிகரித்துக் கொண்டே சென்றால் அழிவைத் தேடித்தான் செல்ல வேண்டியிருக்கும்.

    நான் உனக்கு power of now என்ற நூலைப் பற்றிக் கூறியிருக்கிறேன், நம் கையில்  இருப்பது இந்தக் கணம். நடந்ததைப் பற்றி சிந்திiப்பதோ வருங்காலத்தைப் பற்றி எண்ணிக் கற்பனை காண்பதோ வீணான செயல் என்று அந்த நூல் கூறுகிறது.

    நாம் யாரும் இவ்வுலகில் தனித்து வாழ முடியாது. பிறரைச் சார்ந்து வாழத்தான் வேண்டும்.. எல்லொரும் சேர்ந்து வாழப் பழகிக் கொள்ள வேண்டும். மேலை நாட்டின் தாக்கத்தால் உறவுகள் வேண்டாம் என்று பலர் எண்ணுகிறார்கள்…அது தவறு.  நான் என் நண்பர் வீட்டிற்குப் போயிருந்தேன். அங்கே அவர்களது பேரன் பேத்திகளைப் பார்த்தேன். அவர்கள் அமெரிக்காவில்  படிக்கிறார்கள்.. நாங்கள் பேசிக் கொண்டிருக்கும்போது ஒரு பெரியவர் வந்தார். அவரை அந்தக் குழந்தைகளுக்கு “இவர் உங்கள் தாத்தா: என்று அறிமுகப் படுத்தினார்கள். அதற்கு அந்தக் குழந்தைகள் ”so whaat”  என்று சொல்லிவிட்டுச் சென்று விட்டனர். அதனால் மேலை நாட்டு மோகம் பணத்திற்கு மரியாதை தருகிறது. மனித நேயத்திற்கு மதிப்புத் தருவது இல்லை.

    இந்தக் காலத்து இளம் சிட்டுகள் ஒரு குழப்பத்திலும் எதிர்காலத்தைப் பற்றிய பயத்திலும் சிந்தனைகளை ஓடவிட்டுக் கொண்டிருப்பதால் அவர்கள் சிந்தனையில் தெளிவு இல்லை. ஆகவே பெற்றொர்கள் தான் அவர்களை நல்வழிப் படுத்த வேண்டும்.

    சரி. நீ ஒருகதை எழுதப் போகிறேன் என்று எழுதியிருந்தாயே. எழுதத் தொடங்கி விட்டாயா? வினோபா எழுதிய கீதைப் பேருரைகளைப் படித்து முடித்து விட்டாயா? எப்பொழுதும் நிறைவான மனதுடன் வாழப் பழகிக் கொள்ள வேண்டும்.

    குழந்தைகளுக்கு என் அன்பைச் சொல்.

    இப்படிக்கு

    உன்பிரியமுள்ள அப்பா

    Share