Tag: த.ஆதித்தன்

  • சமிக்கை

    த. ஆதித்தன்

    இரைச்சல்களுக்குள்
    பொதிந்து கிடக்கின்றன
    சமிக்கைகள்.

    தேர்ந்தெடுக்கும் திறன்
    அபரித ஆற்றலாய்
    மறுபடிகட்டிற்கு
    தேர்ந்தெடுத்தல்
    இங்கு
    உரிமையாய்…

    தேர்ந்தெடுப்பின் விளைவு
    சிலவற்றிற்கு, ம்…
    பலவற்றிற்குக் கூட
    மறுதலிப்பு பதிலாய்…
    தம் திறன்
    தேர்ந்தெடுப்பில்
    தொலைகையில்
    இயலாமையின் பிடியில்…

    கொண்டாடுங்கள்
    புறக்கணிப்பை
    ம்… அங்கு
    தேர்ந்தெடுப்பின்
    பூரணத்துவம்

    பிரம்மமாய்!
    பெரும் ஏகாந்தம்
    பரந்துபட்ட வெளியாய்
    தேர்ந்தெடுப்பின் களம்.

    இலக்கு வெளிப்பட
    தப்பிச் சென்றிடு
    சலசலப்பில்….

    ஒதுங்கி நிற்பது
    நாம்
    தொலைந்திட, தொலைத்திட அன்று…
    கண்டறிதலின்
    சூட்சமம் அது.
    சமிக்கைகளைக் கண்டறியும்
    வாய்ப்பாடு.
    ஆய்ந்தறிந்து புலப்படுத்தும்
    வித்தையல்ல,
    இயந்திர ஓட்டத்தில்…
    ஒதுங்கி நிற்றல்
    சமிக்கை அறிதலின்
    அத்தியாவசிய தந்திரமாய்…

    Share
  • தொட்டிச் செடி (சிறுகதை)

    தொட்டிச் செடி (சிறுகதை)

    த. ஆதித்தன்

    அது உணவு இடைவேளைக்கு முந்தைய வகுப்பு. வகுப்பறையில் ஆர்வத்தோடு பாடம் நடத்திக்கொண்டிருந்தாள் தன்வி டீச்சர்.

    திடீரென சாப்பாட்டு வாசம். யாரோ ஒரு மாணவன் மதிய உணவைத் திறந்ததால் வந்த வாசம் அது.

    கோபத்தோடு அனைவரையும் உற்றுப் பார்த்த தன்வி, “டிபன் பாக்ஸ் திறந்தது யாருனு மரியாதையா சொல்லிடுங்க என்றார். யாரும் ஒத்துக்கொள்ளவில்லை. கத்தித் தீர்த்துவிட்டாள். இயல்புக்கு வந்து வகுப்பினைத் தொடர பத்து நிமிடம் ஆயிற்று.

    கரும்பலகையில் தன்வி எழுதும்போது இரண்டாம் வரிசையில் இருந்து மெதுவான பேச்சுக்குரல். யாரென மிகச் சரியாகக் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆவேசமாகி அடங்கினாள். மீண்டும் ஐந்து நிமிடம் வீணாயிற்று.

    பாடம் தொடர்கையில், நான்காவது வரிசையாக இருக்க வேண்டும் வைபரேட் மோடில் ஏதோ ஒரு மொபைல் ஃபோன் அதிரும் உணர்வு. இவள் பார்வையைத் திருப்ப…. அமைதியானது ஃபோன். “ஃபோனை மரியாதையா குடுத்திட்டீங்கனா…. போகும்போது குடுத்திடுறேன். நானா எடுத்தா இந்த வருசம் முழுதும் கிடைக்காது”. என்னன்னமோ பேசியும் யார் ஃபோன் என்பதை அறிய இயலா ஆத்திரத்தை அடக்கி, அறிவுரை கூறி முடிக்கையில் வகுப்பும் முடிந்தது. போராட்டம் போல் தோன்றினாலும், வகுப்பறையை விட்டு வெளிவரும்போது திருப்தியுடன் மனது.

    இந்நிகழ்வுகளை அசைபோட்டபடியே நேரலை இணையவழி வகுப்பிற்காகக் கணினியை இயக்கினாள் தன்வி. அறையினைச் சிக்கெனப் பூட்டியபடி தடையில்லாமல் பாடம் நடத்தினாள் தன்வி. மிக நன்றாக நடத்தினாலும் ஏனோ உயிர்ப்பில்லாத உணர்வு.

    கணினியை அணைத்துத் திரும்புகையில் கண்ணில் பட்டது அறைக்குள் இருந்த தொட்டிச் செடி. அழகுக்காய் வெட்டப்பட்டு செடியாய் மாறியிருந்தது அந்த மரம். சன்னல் திறந்தாள். வெளியே உயர்ந்து வளர்ந்த மரம். அதில் அணில் பழத்தைத் தின்றபடி…, குருவிகள் சலசலப்புடன் மரத்தினுள் மறைந்து விளையாடின…, காற்றின் வருடலில் கிளைகள் அசைந்தன.

    Share
  • சுவடிப் பாதுகாப்பில் அறிவியல் நெறி

    முனைவர் த. ஆதித்தன்,

    இணைப்பேராசிரியர்,

    அரிய கையெழுத்துச் சுவடித் துறை,

    தமிழ்ப் பல்கலைக்கழகம்,

    தஞ்சாவூர் – 613 010

    இன்று கிடைக்கும் பழஞ்சுவடிகள் நம் முன்னோர்களின் அறிவுச் செல்வங்களாகும்.  அக்கால மக்களின் நாகரிகம், பழக்கவழக்கங்கள் முதலானவற்றை அறிந்து கொள்வதற்கு அவை பெரிதும் உதவுகின்றன.  அத்தகைய சிறப்பு வாய்ந்த சுவடிகளைக் காலம் காலமாகப் பல்வேறு வழிமுறைகளைப் பின்பற்றி பாதுகாத்து வருகிறோம்.

    இயற்கை முறையில் பல்வேறு வகையான பூச்சி எதிர்ப்புப் பொருள்களைப் பயன்படுத்தி சுவடிகளை முன்னோர்கள் பாதுகாத்து வந்தனர்.  அறிவியல் வளர்ச்சியின் விளைவாக இன்று சுவடிப் பாதுகாப்பு முறைகளிலும் பல்வேறு உத்திகளைக் கையாளத் தொடங்கியுள்ளோம்.  அவற்றைக் குறித்து எடுத்துரைப்பதே இக்கட்டுரையின் நோக்கம் எனலாம்.  அறிவியல் வழிப் பாதுகாப்பு குறித்து, “அறிவியல் வளர்ச்சியினால் அறிவுப் பூர்வமாகச் சிந்தித்துப் பல்வேறு கண்டுபிடிப்புகளிலும் நவீன கருவிகள் மற்றும் வேதிப்பொருள்களைப் பயன்படுத்திச் செய்யப்படும் பாதுகாப்பு முறைகளை அறிவியல் வழிப் பாதுகாப்பு என்பர்.  அதாவது, அறிவியல் வழிப் பாதுகாப்பு என்பது அறிவியல் வளர்ச்சியினால் கண்டறிந்துள்ள பல்வேறு வேதிப்பொருள்களைச் சுவடிப் பாதுகாப்பிற்காகப் பயன்படுத்துதல் மற்றும் பாதுகாப்புச் சாதனங்களைத் தேர்வு செய்து சுவடிகளின் தன்மை, பாதிக்கும் காரணிகள், பயன்படுத்தும் பொருள்களினால் ஏற்படும் பாதிப்பு போன்றவற்றை ஆய்வு செய்து தேவையான முறைகளை, காலமுறையில் பயன்படுத்துதல் ஆகும்.”1  என்கிறார் மோ.கோ. கோவைமணி.

    அறிவியல் முறையினில் பல்வேறு வகையான இரசாயனங்களைப் பயன்படுத்தி வருகிறோம்.  சுவடிகளின் வைப்பிடங்கள், சுத்தம் செய்யும் முறை, ஒன்றோடொன்று ஒட்டியச் சுவடிகளைப் பரித்தெடுத்தல், சுவடிகளின் உறுதித்தன்மையை மேம்படுத்துதல் என அனைத்து வகையான பாதுகாப்பு முறைகளலும் இந்த இரசாயனங்களின் பங்கு முதன்மையிடம் பெறுகிறது.

    அறிவியல் முறையில் சுவடிகள் வைக்கும் அறையானது தட்பவெட்ப நிலை மாறுபாடுகளால் எளிதில் பாதிக்கப்படாதவாறு அமைதல் அவசியம்.  அதே போன்று சுவடிகளை மர அலமாரிகளில் வைத்துப் பாதுகாப்பது உகந்தது என்கின்றனர் சுவடியலாளர்கள்.  ஏனெனில் உலோகங்களால் ஆன அலமாரிகளில் வைக்கும்போது அவை எளிதில் வேதிவினைகளுக்கு ஆட்படக்கூடும்.  உதாரணமாக இரும்பு அலமாரிகள் எளிதில் துருபிடிக்கக் கூடியவை.  அவற்றில் ஏற்படும் துரு சுவடிகளையும் பாதிக்கும். சிதைவடையச் செய்யும்.  எனவே இரும்பு போன்ற ஆக்கிசிஜனேற்றத்தால் எளிதில் பாதிப்படையும் உலோகங்களால் ஆன அலமாரிகளைப் பயன்படுத்துவது அறிவியல் நெறியின்படி உகந்ததல்ல என்கின்றனர்.

    சுவடிகளை அறிவியல் முறையில் தூய்மை செய்வதற்கு எத்தில் ஆல்கஹால், கிளிசரின், அசிட்டோன் அல்லது கார்பன் டெட்ரா குளோரைடு ஆகியன பயன்படுத்தப்படுகின்றன.

    சுற்றுப்புற மாசினால் படியும் தூசானது சுவடிகளைப் பெரிதும் பாதிக்கின்றன.  அவற்றை முதலில் பஞ்சு அல்லது மென்மையான துணிகளால் துடைத்துச் சுத்தம் செய்ய வேண்டும்.  அதன்பின்பும் இருக்கக்கூடிய கறைகளைப் போக்க இரசாயனப் பொருள்கள் பயன்படுத்தப்படுகின்றன.  இது குறித்து, “கறைகள் மற்றும் பூச்சிகளின் எச்சங்கள் இருப்பின் அவற்றைச் சுத்தமான நீருடன் சம அளவில் எத்தில் ஆல்கஹால் சேர்த்துச் சுத்தம் செய்யலாம்.  வேதிமக் குணம் கொண்ட படிவுகளை வேதிமக் கரைசலான அசிட்டோன் அல்லது கார்பன் டெட்ரா குளோரைடை குறைவான அளவு பயன்படுத்திச் சுத்தம் செய்யலாம்.

    அதிகமாக வேதிமக் கரைசலைப் பயன்படுத்தினால் சுவடிகளில் உள்ள சேர்ப்புப் பொருள்கள் கரைந்து சுவடியின் உறுதித்தன்மை இழக்க நேரிடும்.  ஓலைகளைக் கிளிசரின் மற்றும் சுத்தமான  நீர் 1:10 விகிதத்திலும் அல்லது கிளிசரின் மற்றும் எத்தில் ஆல்கஹால் (1:1)  விகிதத்திலும் கலந்து கொண்டு சுத்தம் செய்யலாம்”என்கிறார்.  மோ.கோ. கோவைமணி.

    இவ்வாறு சுத்தம் செய்யப்பட்டச் சுவடிகள் நீண்ட காலம் பிரித்துப் பார்க்கப் படாமல் கட்டி வைத்தப்படியே இருந்தாலும் பாதிப்புக்குள்ளாகும்.  அவற்றில் பூஞ்சைக் காளான், புத்தகப்புழு போன்றவை உருவாகும்.  படியும் தூசு ஈரப்பதத்தோடு சேரும்போதும் சுவடிகளின் மீது பூசப்படும் மேற்பூச்சுத் தைலங்கள் மிகுதியாக இருப்பின் அவற்றிலும் பூஞ்சை எளிதில் ஏற்படும்.  இதனால் சுவடிகளின் ஓலைகள் ஒன்றோடொன்று ஒட்டிக்கொள்ளும்.  இச்சுவடிகளைப் பிரித்தெடுப்பதற்குப் பொதுவாக இருமுறைகள் பின்பற்றப்படுகின்றன.  ஒன்று குளிரூட்டுவது மற்றொன்று நீராவியல் வெப்பமூட்டிப் பிரிப்பது.  இவ்விரு முறைகளிலும் புத்தகப்புழு,  பூஞ்சைக் காளான் ஆகியவை அழிந்துவிடும்.  ப. பெருமாள் பிரித்தெடுக்கும் முறை  குறித்து,

    “ஒட்டியுள்ள சுவடிகளைக் குளிரூட்டப்பட்ட அறையில் 24 மணிநேரம் வைத்துப் பிரிக்கலாம்.  மேலும் நீராவியில் 15 முதல் 30 நிமிடங்கள் வைத்து ஒட்டியுள்ள ஓலைச் சுவடிகளைப் பிரித்தெடுக்கும் முறையும் பயன்படுத்தப்படுகிறது.  மேலை நாடுகளில் குளிர்ந்த அல்லது வெப்பமான நீராவி வெளிவிடும் இயந்திரத்திலிருந்து நீராவியைப் பாய்ச்சி பிரிக்கப்படுகிறது.  இம்முறைகளில் பிரித்தெடுக்கச் சிரமம் இருப்பின் பாதுகாப்புத் தைலம் அல்லது சுத்தமான நீருடன் சம அளவு எத்தில் ஆல்காஹால் சேர்த்துப் பூசிப் பரித்தெடுக்கலாம்” 3 என்கிறார்.

    சுவடிகளைப் பராமரிக்க எண்ணெய் பூசப்படும்பொழுது ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்ப்பதற்கு லெமன்கிராஸ் தைலம், பாலி எதிலின் கிளைகால் ஆகியவற்றை குறிப்பிட்ட விகிதாச்சாரத்தில் கலந்து பயன்படுத்தலாம் என்பர்.  இவ் இரசாயனக் கலவையைப் பயன்படுத்தும்போது சிதிலமான சுவடிகள் கூட விரைவாக உறுதியடைந்து வளைந்து கொடுக்கும் என்கின்றனர் சுவடியியலாளர்கள்.

    மரபுவழிப் பாதுகாப்பில் கிழிந்தஓலைகளை நூல்கொண்டு தைப்பதுண்டு. அவ்வாறு செய்யும்பொழுது சுவடிகளில் சிறுபிளவோ, வேறு பாதிப்புகளோ ஏற்படுவதுண்டு  எனவே இதற்கு மாற்றாக முதலில் பசை நாடா(செல்லோடேப்) கொண்டு ஒட்டும் வழக்கத்தைக் கொண்டு வந்துள்ளனர்.  ஆனால் நாளடைவில் பசை நாடாவில் உள்ள பசை அதனைத் தாண்டி பக்கத்தில் ஊடுருவி ஒட்டப்பட்ட ஓலைகளிலும் ஒட்டுவதுண்டு.  அந்நிலையில் உள்ள ஓலைகளைப் பிரித்தெடுக்கும்போது அவை உடைந்துவிடுவதுண்டு.  எனவே இம்முறையும் கைவிடப்பட்டுள்ளது.  தற்பொழுது பயன்பாட்டில் உள்ள முறைகள் குறித்து மோ.கோ.கோவைமணி, “உடைந்த ஓலைகளை ஒட்டுவதற்குப் புதிய ஓலைகளின் பொடியுடன் பி.வி.ஏ. எமல்ஸன் சேர்த்து ஒட்டும் முறையை லக்னோ தேசிய பாதுகாப்பு ஆய்வகம் பயிற்றுவிக்கிறது.  இம்முறையில் ஒட்டப்பட்ட சுவடிகள் நல்ல நிலையில் வளையும் தன்மை கொண்டுள்ளது.  மேலை நாடுகளில் உடைந்த ஓலைகளைச் சேர்த்து மெல்லிய டிசு காகிதத்தின் நார்ப்பொருட்களைக் கொண்டு ஒட்டப்படுகிறது.

    மிகவும் சிதிலமான சுவடிகளைப் பாதுகாக்க ஓலைச்சுவடிகளின் இருபுறமும் செல்லுலோஸ் அசிடேட் தாள் மற்றும் ஜப்பான் டிசுத்தாள் கொண்டும், சீபான் துணி, மெதில் செல்லுலோஸ் பசை கொண்டும் லேமினேசன் செய்யப்படுகின்றது.  மேலை நாடுகளில் சிதிலமான சுவடிகளைப் பாதுகாக்கவும், கையாளவும் தற்பொழுது என்கேப்புசுலேசன் என்ற முறை பயன்படுத்தப்படுகிறது.”4 என்கிறார்.

    இவ்வாறு அறிவியல் நெறிகளின் அடிப்படையில் புதிய பராமரிப்பு முறைகள் பலவற்றை சுவடியியலாளர்கள் பின்பற்றி வருகின்றனர்.  இரசாயனப் பொருள்களைப் பயன்படுத்துவதுதான் அறிவியல் நெறி என்னும் கருத்து பொதுவாக நிலவி வருகிறது.  அது ஏற்புடையதல்ல.  இயற்கையாகக் கிடைக்கும் பொருள்களைக் கொண்டு வழிவழியாக நாம் பயன்படுத்தி வந்த முறைகளை அறிவியல் முறைகளுக்கு உட்படுத்த வேண்டும்.  அவற்றை எந்த விகிதாச்சாரத்தில் பயன்படுத்தினால் எத்தகைய விளைவுகள் ஏற்படும் என்பனவற்றை அறிவியல் அணுகுமுறையில் துல்லியமாக ஆராய்தல் வேண்டும்.  அவ்வாறு முறையாக ஆராயும்பொழுது பல புதிய உத்திகளும் அதன் காப்புரிமைகளும் கூட நம்மவர்களுக்குக் கிடைக்கக் கூடும்.  மேலும் பாதுகாப்பு நெறிமுறைகளில் புதியமைல் கல்லையும் நாம் எட்டமுடியும்.

    சான்றெண் விளக்கம்:

    1. கோவை மணி , மோ.கோ., ஓலைச்சுவடியியல், பாமொழி பதிப்பகம், பாரதிநகர், தமிழ்ப் பல்கலைக்கழக அஞ்சல், தஞ்சாவூர் – 613 010., இரண்டாம் பதிப்பு – செப்டம்பர் 2016, பக்கம் எண்:160
    2. மேலது, பக்கம் எண்:161
    3. பெருமாள்.ப., சுவடிப்பாதுகாப்பு வரலாறு, கோவிலூர் மடாலயம், கோவிலூர் – 630 307., இரண்டாம் பதிப்பு- மார்ச் 2014., பக்கம் எண்:138
    4. கோவை மணி , மோ.கோ., ஓலைச்சுவடியியல், பாமொழி பதிப்பகம், பாரதிநகர், தமிழ்ப் பல்கலைக்கழக அஞ்சல், தஞ்சாவூர் – 613 010., இரண்டாம் பதிப்பு – செப்டம்பர் 2016, பக்கம் எண்:162

    Share
  • சங்க இலக்கியச் சடங்குகளும் நம்பிக்கைகளும்

    -த. ஆதித்தன்

    உலகில் தாம் வாழும் சூழ்நிலைகளுக்கேற்ப ஒவ்வொரு பகுதியில் வாழும் மக்களும் சில பழக்கவழக்கங்களையும், நம்பிக்கைகளையும் கொண்டுள்ளனர்.  ஒரே பகுதியில் வெவ்வேறு இனக்குழுக்களைச் சார்ந்த மக்கள் சேர்ந்து ஒற்றுமையாக வாழ்ந்து வருவதைக் காண்கிறோம். அவ்வாறு வெவ்வேறு சமுதாய மக்கள் சேர்ந்து நெடுங்காலம் வாழ்ந்து வரும்போது அப்பகுதி மக்களின் நம்பிக்கைகளிலும் சடங்குகளிலும் சில பொதுமைக் கூறுகள் ஏற்படுவதுண்டு.  இருப்பினும் சமுதாயம் சார்ந்த சில நம்பிக்கைகளை அவர்கள் தனித்தன்மையோடு பின்பற்றி வருவதையும் அறிய முடிகிறது.  சமூகத்தோடு பின்னிப் பிணைந்துள்ள மக்களின் நம்பிக்கைகளும் அதைச்சார்ந்த சடங்குகள் பலவும் ஏதேனும் ஒரு வடிவத்தில் மக்களால் இன்றும் கடைப்பிடிக்கப்படுகின்றன.  இச்சடங்குகள் குறித்து, “வாழ்வின் தகுதிப் பெயர்வினை அடையாளப்படுத்தும் வகையில் நிகழ்த்தப்படும் முறையான செயல் முறைகளே சடங்குகள்.  இச்செய்முறைகள் ஒவ்வொரு தகுதிப் பெயர்வின் போதும் பல்வேறுவிதமான காரணங்களை நிலை நிறுத்திச் செல்கின்றன.  முன்னோரிடமிருந்து பெற்ற ஒவ்வொரு சடங்கும் அடுத்தடுத்த தலைமுறைக்காக மாற்றியளிக்கப்படுகின்றது.

    இம்மண்ணில் பிறக்கும் குழந்தைக்கு முன்னோர் மேற்கொண்ட பழக்கங்களைப் பெற்றோர் செய்வதும் பின்னர் அக்குழந்தை வளர்ந்து தான் புரிந்து கொண்டவற்றைத் தன் சந்ததிகளுக்குக் கற்றுக் கொடுப்பதும் மாறாத செய்முறையாகவே தொடர்கின்றது.  குழந்தை பிறந்தது தொடங்கி ஒவ்வொரு பருவ மாற்றத்தின்  அடையாளமாக அதன் உடல் வளர்ச்சிக்கும், மன வளர்ச்சிக்கும் தொடர்புடைய சடங்குகள் மேற்கொள்ளப்படுகின்றன.  பிறப்பு, பூப்பு, திருமணம், இறப்பு என ஓர் உலகம் நேர்க்கோட்டில் சென்று ஒட்டுமொத்தமாக அழிந்து விடுவதில்லை.  மாறாகப் பிறப்பு, பூப்பு, திருமணம், இறப்பு, மீண்டும் பிறப்பு… எனச் ‘சுழலேணி’ முறையில் வட்டமிட்டு உயர்ந்து செல்லும் இயங்கியலைக் கொண்டிருக்கிறது. வாழ்க்கை வட்டச் சடங்குகள் அனைத்தும் தம் குலங்கள் தழைத்து வாழவேண்டும் என்ற மனித வளத்தை முதன்மைப்படுத்தியே செய்யப்படுகின்றன.  அதனால்தான் மனிதனின் பிறப்பையும், வாழ்தலையும் மையமாகக் கொண்டு வாழ்க்கை என்ற வினைச்சொல் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது”1 என்று க.அ. ஜோதிராணி குறிப்பிடுகிறார்

    பொதுவாக மனிதன்,  பிறந்தது முதல் இறப்பது வரையிலும் பல்வேறு வகையான சடங்குகளைப் பின்பற்றுகிறான்.  அச்சடங்குகளைச் சமய நம்பிக்கை சார்ந்த சடங்குகள், வாழ்வியல் பழக்கவழக்கங்கள் சார்ந்த சடங்குகள் என இருவகையாகப் பிரிக்கலாம்.  இத்தகைய சடங்குகளும், நம்பிக்கைகளும் அந்த அந்தக் காலக் கட்டத்தில் தோன்றும் இலக்கியங்களில் பதிவு செய்யப்பட்டு வருவதைக் காணலாம்.  அவ்வகையில்  நமது சங்க இலக்கிய நூல்களில் இருந்து சில சடங்குகளையும், நம்பிக்கைகளையும்  எடுத்துரைப்பதாக இக்கட்டுரை அமைகிறது.

    நம்பிக்கைகள்

    பழங்காலம் தொட்டே மக்கள் பல்வேறு வகையான நம்பிக்கைகளைக்  கொண்டிருந்தனர். இயற்கையைப் போற்றி வழிபடுவதும் அந்த நம்பிக்கையின் பால்பட்டதே.  தொடர்ந்து மனித மனம் நம்புபவையே காலப்போக்கில் நம்பிக்கைகளாகவும் சடங்குகளாகவும் மாறிவிடுகின்றன.  இந்நம்பிக்கை குறித்த செய்திகள் சங்ககாலம் தொட்டு இன்று வரையிலும் இலக்கியங்களில் காணக்கிடைக்கின்றன. இந்நம்பிக்கைகள் குறித்து, “ஒவ்வொரு மனிதனும் ஆயிரக்கணக்கான நம்பிக்கைகளின் குவியலாகக் காணப்படுகின்றான்.  நன்மையைத் தேடும் மனதின் பற்றுக்கோடாக நம்பிக்கை துணைநிற்கிறது.  கடலிலே அகப்பட்டுத் தவிக்கும் ஒருவனுக்குக் கையில் கிடைத்த சிறிய மரக்கட்டையும் தெப்பமாகத் தெரியும்.  அதுபோல் அலைக்கழிக்கப்படும் மனது, நம்பிக்கைகளைப் பற்றிக் கொள்ளும்பொழுது புத்துணர்ச்சி பெறுகிறது”2 என்கிறார் எஃப் பாக்கியமேரி.

    இந் நம்பிக்கை தொடர்பான செய்திகள் சங்க இலக்கியங்கள் முதல் இன்று வரையிலான இலக்கியங்கள் வரை காணக் கிடைக்கின்றன. அவற்றுள் ஒன்று கடவுள் நம்பிக்கை.  உலகின் மிகத் தொன்மையான காலத்தில் இயற்கை வழிபாடே இருந்திருக்க வேண்டும்.  அதாவது இயற்கையின் சீற்றங்களுக்குப் பயந்த மனிதன் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள எண்ணி அவ்வியற்கையை வழிபடத் தொடங்கினான் என்பர்.  சூரிய வழிபாடு, பிறைவழிபாடு போன்றவையும் இத்தகைய இயற்கை வழிபாட்டின் கூறுகளே ஆகும்.  சங்க இலக்கிய நூல்களுள் ஒன்றான குறுந்தொகையிலும் பிறைவழிபாடு குறித்த குறிப்பு இடம் பெற்றுள்ளது.

    “வளை உடைத்தனையது ஆகி, பலர் தொழ
    செவ்வாய் வானத்து ஐயெனத் தோன்றி
    இன்னாப் பிறந்தன்று, பிறையே; அன்னோ,”3 என்னும் பாடல் குறுந்தொகையில் அமைந்துள்ள கடம்பனூர்ச் சாண்டிலியனின் பாலைத் திணைப்பாடல் ஆகும்.  இப்பாடலில் பிறைத்திங்களுக்கு வண்ணத்தாலும் வடிவாலும் ஒத்ததாக உள்ள உடைந்த சங்குவளை உவமையாகச் சொல்லப்பட்டுள்ளது.  இத்தகைய பிறைநிலா மாலையில் செவ்வானத்தில் தோன்றும். அப்பொழுது பலராலும் தொழப்பெறும் பெருமையுடையது என்று கூறப்பட்டுள்ளது.  இதன் மூலம் பிறை நிலவை வழிபடும் நம்பிக்கை பழங்காலத்திலேயே தமிழ் மக்களிடம் இருந்துள்ளதை அறிய முடிகிறது.

    முற்பிறப்பு மற்றும் விதி என்பன மீதும் மக்களுக்குப் பரவலாக நம்பிக்கை உள்ளது.  இன்று தலைவிதி என்று கூறப்படுவதையே அன்றைய காலத்தில் ஊழ் என்று குறிப்பிட்டுள்ளனர் எனலாம்.  நல்வினை நல்ல ஊழினை அதாவது விதியினைக் கொடுக்கும் என்றும் தீவினை தீய விதியினைக் கொடுக்கும் என்றும் மக்கள் நம்பி வருகின்றனர்.  இந்நம்பிக்கை அன்று முதல் இன்றுவரை மக்களிடையே காணப்படுகிறது.

    பதினெண் மேற்கணக்கு நூல்கள், பதினெண்கீழ்க் கணக்கு நூல்கள் மட்டுமன்றிச் சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி போன்ற காப்பியங்களிலும் இத்தகைய செய்திகள் இடம்பெற்றுள்ளன.  முற்பிறப்புப் பற்றியும் ஊழ்பற்றியும் இடம்பெற்றுள்ள செய்திகளை மட்டும் தனி ஆய்வுக்கு உட்படுத்த முடியும் என்கிற அளவிற்குப் பல செய்திகள் இடம் பெற்றுள்ளன.

    சிறுவயதில் பகைவர்கள் போன்று இருந்தவர்கள் தலைவனும் தலைவியும், வளர்ந்த பின்னர் அவர்களுள் காதல் உருவாக ஊழ்வினையே காரணம் என்னும் கருத்தமைந்த பாடல் ஒன்று குறுந்தொகையில் உள்ளது.

    “இவன் இவள் ஐம்பால் பற்றவும், இவள் இவன்
    புன்தலை ஓரி வாங்குநள் பரியவும்,
    காதற் செவிலியர் தவிர்ப்பவும் தவிராது
    ஏதில் சிறுசெரு உறுப மன்னோ;
    நல்லைமன் றம்ம பாலே- மெல் இயல்
    துணைமலர்ப் பிணையல் அன்ன இவர்
    மணம்மகிழ் இயற்கை காட்டி யோயே”4

    தலைவன் தலைவி இருவரும் இளம் வயதில் தெருவில் விளையாடும்போது அவளின் ஐவகையாகப் பின்னப்பட்ட தலைமுடியினை அவள் அறியாதவாறு அவன் பிடித்து இழுப்பான்.  அதனை அறிந்து அவள் அவனின் வெட்டப்பட்ட தலைமுடியினை வளைத்துப் பிடித்த வண்ணம் ஓடுவாள்.  இவ்வாறு அவர்கள் அயலாரைப் போன்று பகைபாராட்டி நிற்பர்.  அவர்கள் மீது அன்பு கொண்ட செவிலியர் அவர்களின் சண்டையை விலக்குவர்.

    இப்பொழுது இவர்கள் உள்ளத்தால் வெறுத்ததை அறவே மறந்து தொடுக்கப்பட்ட மாலை போல இணைந்து மகிழ்ச்சியுடன் இருப்பது விதியே என்பதாக மோதாசனார் குறுந்தொகையில் கூறியுள்ளார்.

    இதேபோன்று பல்லியின் ஓசையை வைத்துப் பலன்களைக் கணிக்கும் பழக்கமும் மக்களிடையே தொன்மையான நம்பிக்கையாக உள்ளது.  காகம் கரைந்தால் விருந்தினர் வருவார்கள் என்பதும் அத்தகைய நம்பிக்கையே ஆகும்.  இத்தகைய ஏராளமான நம்பிக்கைகள் உலகம் முழுவதும் உள்ள மக்களிடையே காணப்படுகின்றன.  அவை தொடர்ந்து மரபு வழியாகத் தொடரும் போது சடங்குகளாக மாறிவிடுகின்றன எனலாம்.

    திருமணச் சடங்கு

    திருமண அறிவிப்புத் தொடங்கித் திருமணம் முடியும் வரையிலும் பல சடங்குகள் கடைப்பிடிக்கப்படுகின்றன.  இவை குறித்த செய்திகள் சங்க இலக்கியங்களிலும் காணப்படுகின்றன.

    தம் மகள் திருமணத்தை ஊரார் அனைவரும் அறிய வேண்டும் என்பதற்காகப் பெற்றோரால் செய்யப்படும் சடங்கு ஒன்று கயமனார் பாடியுள்ள அகநானூற்றுப்  பாடலில் இடம் பெற்றுள்ளது.

    “ நனைவிளை நறவின் தேறல் மாந்தி,
    புனைவினை நல்இல் தருமணல் குவைஇ,
    ‘பொம்மல் ஓதி எம்மகள் மணன்’ என,
    ‘வதுவை அயர்ந்தனர் நமரே; அதனால்,அரும்புகளில் இருந்து பெறப்பட்ட கள்ளின் தெளிவை உண்டு மகழ்ந்திருந்தனர்.  வீடானது நன்றாக அலங்கரிக்கப்பட்டிருந்தது.  நல்ல சிறந்த வேலைப்பாடுகள் அமைந்தாகவும் அவ்வீடு காணப்பட்டது.  அங்குப் புதிதாகக் கொண்டு வரப்பட்ட மணலைக் குவித்துப் பரப்பி வைத்திருந்தனர்.  பொலிவான கூந்தலை உடைய தமது மகளுக்குத் திருமணம் என்ற உறுதியை அறிவிக்கும் விழாச் சடங்கு அவ்விடத்தில் நிகழ்ந்தது என இவ் அகநானூற்றுப் பாடல் தெரிவிக்கின்றது.

     கலித்தொகைப் பாடல் ஒன்று திருமணம் நடைபெறப்போகும் வீடு குறித்தும் அங்கு அமைக்கப்பட்டிருந்த மணப்பந்தல் குறித்தும்,

          “தருமணல் தாழப்பெய்து, இல் பூவல் ஊட்டி,
          எருமைப் பெடையோடு, எமர் இங்கு அயரும்
                           பெரு மணல் எல்லாம்…”6 என்று குறிப்பிடுகின்றது அதாவது கொண்டு வந்து குவிக்கப்பட்டிருந்த புதிய மணலைத் தரை முழுவதும் நன்றாகப் பரப்பினர்.  வீடு செம்மண்ணால் பூசப்பட்டிருந்த்து.  பெண் எருமையின் கொம்பினைத் தெய்வமாக வைத்து வழிபாடும் செய்யப்பட்டது.  இவ்வாறாகத் திருமண நிகழ்ச்சி நடைபெறுகிறது என இக்கலித்தொகைப் பாடல் தெரிவிக்கிறது.

    இறப்புச் சடங்கு

    உலகில் தோன்றிய உயிர்கள் அனைத்தும் உயிர் துறப்பது இயற்கை.  விலங்குகள், பறவைகள் உள்ளிட்ட அனைத்து உயிர்களும் தனது கூட்டத்தைச் சார்ந்த உயிரின் மறைவைக் கண்டு துயரப்படுவதைக் காணமுடிகிறது.  மனித சமூகமும் அதற்கு விதிவிலக்கல்ல.  ஒவ்வொரு பகுதியிலும் வாழ்கின்ற மனிதர்கள் இந்த இறப்பினை ஒட்டி ஒவ்வொரு வகையான சடங்குகளைப் பின்பற்றி வருகின்றனர்.  இவை பற்றிய குறிப்புகள் சங்க இலக்கியங்களிலும் இடம் பெற்றுள்ளன.

    சங்க இலக்கியங்களுள் மிகச் சிறந்த வரலாற்று ஆவணமாகப் போற்றப்படுவது புறநானூறு ஆகும்.  அதில் சிறுகுழந்தைகள் மரணம் அடைந்தால் உடலை வாளால் பிளந்து அடக்கம் செய்தல், வீரர்களின் மரணத்தைப் போற்றும் வகையில் நடுகல் அமைத்தல் போன்ற பல மரணச் சடங்குகள் குறித்த தகவல்கள் இடம் பெற்றுள்ளன.

    சேரமன்னன் கணைக்கால் இரும்பொறை போரில் தோல்வியடைந்தான்.  வெற்றி பெற்ற சோழன் செங்கணான், சேரனைக் குடவாயில் கோட்டத்துச் சிறையில் அடைத்தான்.  அப்பொழுது கடுமையான நீர்த்தாகத்தால் சிறைக்காவலரிடம் தண்ணீர் கேட்டான் இரும்பொறை.  அவன் காலம் தாழ்த்தித் தண்ணீர் கொண்டு வந்ததால் வருந்திய சேரன் தண்ணீர் அருந்தாமலேயே உயிர் நீத்தான் அப்போது தன்னுடைய நிலைக்குத் தானே இரங்கிப் பாடியதாக இப் புறநானூற்றுப் பாடல் அமைந்துள்ளது.

    “குழவி இறப்பினும் ஊன்தடி பிறப்பினும்,
    ஆள் அன்று என்று வாளின் தப்பார்;
    தொடர்ப் படுஞமலியின் இடர்ப்  படுத்து இரீஇய
    கேள் அல் கேளிர் வேளாண் சிறுபதம்
    மதுகை இன்றி, வயிற்றிதுத் தீத் தணிய,
    தாம் இரந்து உண்ணும் அளவை
    ஈன்மரோ, இவ் உலகத்தானே?”7

    இப்பாடல் பழங்காலத்தில் மன்னர்கள் போரின்போது விழுப்புண்பட்டு மடிவதையே பெருமையாகக் கருதினர் என்பதற்குத் தகுந்த சான்றாகத் திகழ்கிறது.  மேலும் சேரன் கணைக்கால் இரும்பொறையின் மானமிகு வாழ்வையும் எடுத்தியம்புகிறது.

    பாடலில், ‘பிள்ளை  இறந்து பிறந்தாலும் – தசைப் பிண்டமாகப் பிறந்தாலும் – அல்லது பிறந்த குழந்தை இறந்தாலும் அதனையும் ஒரு நபராகவே கருதி உயர்வு தருவர்.  அந்த இறந்த குழந்தையின் உடலையும் வாளால் பிளந்து வடுப்படுத்தி அடக்கம் செய்வர்.  அதேபோன்றே மன்னராக இருப்பவர் போரில் பகைவரின் வாளால் வடுப்பட்டு இறந்திடல் வேண்டும்.  அவ்வாறு இன்றிப் பிழைத்து விட்டால் நாயைச் சங்கிலியால் பிணைப்பதைப்போன்று விலங்கு பூட்டித் துன்புறுத்துவர் பகைவர்.  அத்தகைய பகைவரிடம் நீரை இரந்து கேட்டு வயிற்றுத் தீயை தணிக்க வேண்டாம்.  இவ்வுலகில் அத்தகைய இழிந்த இயல்புடையவரைஅரசர்களும் பெறுவார்களோ! என்று பாடியுள்ளார் சேரமான் கணைக்கால் இரும்பொறை.

    இதன்மூலம் சிறு குழந்தை இறந்தாலும் சரி, குழந்தை இறந்து பிறந்தாலும் சரி இறுதிச் சடங்கின்போது அவற்றிற்கு வடு ஏற்படுத்திப் புதைக்கும் முறை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட நம் தமிழ்ச் சமூகத்தில் இருந்துள்ளமையை அறியமுடிகிறது.

    வழிபாடு தொடர்பான சடங்குகள்

    மனிதன் ஆரம்பத்தில் இயற்கையை வழிபட்டிருக்கக்கூடும்.  பின்னர்ப் படிப்படியாகக் கடவுள் வழிபாடு வரை வந்துள்ளது.  இவ்வழிபாடுகள் அனைத்தும் என்று தொடங்கியது என்று அறுதியிட்டுக் கூற முடியாத அளவிற்கு மிகத் தொன்மையானதாக உள்ளன.

    உலகம் முழுவதும் உள்ள இலக்கியங்களில் புராணக்கதைகள், கடவுள் வழிபாடு போன்ற பதிவுகள் இடம் பெற்றுள்ளன.  தமிழ்மொழியில் இன்று கிடைக்கப்பெற்றுள்ள மிகப் பழமையான சங்க இலக்கியங்களிலும் இறைவழிபாடு குறித்தும் அவை தொடர்பான சடங்குகள் குறித்தும் சில செய்திகள் இடம் பெற்றுள்ளன.

    பத்துப்பாட்டில் முதலில் வைத்து எண்ணக் கூடியதாக,  திருமுருகாற்றுப்படை உள்ளது.  நலம் வேண்படுபவர்களை முருகக் கடவுளிடம் ஆற்றுப்படுத்துவதாக நக்கீரரால் படைக்கப்பட்ட நூலே திருமுருகாற்றுப்படை.  இதில் இறைவழிபாட்டுச் சடங்கு குறித்த குறிப்புகள் இடம் பெற்றுள்ளன.

    “ பைங்கொடி, நறைக்காய் இடை இடுபு, வேலன்
    அம்பொதிப் புட்டில் விரைஇ, குளவியொடு
    வெண்கூதாளம் தொடுத்த கண்ணியன்;
    நறுஞ்சாந்து அணிந்த கேழ்கிளர் மார்பின்
    கொடுந்தொழில் வல்வில் கொலைஇய கானவர்
    நீடுஅமை விளைந்த தேக்கண் தேறல்
    குன்றகச் சிறுகுடிக் கிளையுடன் மகிழ்ந்து
    தொண்டகச் சிறுபறைக் குரவை அயர”8 என்னும் அடிகளில், முருகக்கடவுளுக்குப் பூசை செய்யும் வேலன் பச்சிலைக் கொடியால், நல்ல மணமுடைய சாதிக்காயை இடை இடையே சேர்த்துக் கட்டுகிறான்.  அதனோடு அழகிய புட்டியைப் போன்ற வடிவுடைய தக்கோலக்காயையும் கலந்து காட்டு மல்லிகைப்பூ, வெண்டாளிப்பூ ஆகியவற்றையும் சேர்த்துக் கட்டுகிறான்.  இம்மாலையை அணிந்தவனாக வேலன் நிற்கிறான்.  அங்குவரும் குறவர்கள் நல்ல வாசனை வீசும் சந்தனத்தைப் பூசிய மார்பை உடையவர்கள்.  வேட்டை காரணமாகக் கொலைத் தொழிலைச் செய்பவர்கள் அந்தக் குறவர்கள்.  அவர்கள் நீண்ட மூங்கில் குழாய்களில் ஊற்றி நெடுநாள் வைத்து முற்றி விளைந்த தேனால் ஆன கள்ளின் தெளிவைத் தமது சுற்றத்தாரோடு சேர்ந்து உண்டு மகிழ்ந்திருந்தனர்.  தம் குறிஞ்சி நிலத்திற்குரிய வாத்தியக் கருவியாகிய  ‘தொண்டகம்’ எனப்பெறும் சிறுபறையை அடித்தனர்.  அதனது தாளத்திற்கு ஏற்பக் குரவைக் கூத்தாடினர் எனக் கூறப்பட்டுள்ளது. இதன்மூலம் முருக வழிபாட்டுச் சடங்கில் குரவைக் கூத்து இடம் பெறுவது, குறவர்கள் அந்த ஆட்டத்தின்போது சிறுபறையை அடிப்பது, கள்அருந்தி மகிழ்ந்திருப்பது போன்ற செய்திகளைத் தெரிந்து கொள்ள முடிகிறது.

    சங்க இலக்கியங்களுள் ஒன்றான நெடுநல் வாடையிலும் இறைவழிபாடு பற்றி குறிப்பு உள்ளது.  மாலைக் காலத்தில் பெண்கள் தெய்வத்தை வணங்குவது குறித்துக் குறிப்பிடும் போது,

    “மடவரல் மகளிர் பிடகைப் பெய்த
    செவ்வி அரும்பின் பைங்கால் பித்திகத்து,
    அவ்விதழ் அவிழ் பதம் கமழ, பொழுது அறிந்து
    இரும்பு செய்விளக்கின் ஈர்ந்திரிக் கொளீஇ,
    நெல்லும் மலரும் தூஉய், கைதொழுது,
    மல்லல் ஆவணம் மாலை அயர”9  என்கிறார் மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார். நெடுநல்வாடையில் குளிர்கால வர்ணனை இடம் பெறும் பகுதியிலேயே இவ்வடிகள் இடம்பெற்றுள்ளன.  பகலிலும் மழைமேகம் சூழ்ந்து இருளாகக் காட்சித் தருவதால் மாலைக் காலத்தை அறிய முடியாமல் மக்கள் தவிக்கின்றனர்.  அப்பொழுது மகளிர் பசுமையான காம்புகளைக் கொண்ட செம்முல்லை அரும்புகளை அழகிய பூந்தட்டுகளில் இட்டு வைக்கின்றனர்.  அவை மலர்ந்து மணம் வீசுவதைக் கொண்டு மாலை நேரம் வந்துவிட்டது என்பதனை அறிந்துக் கொள்கின்றனர்.

    இம்மாலைப் பொழுதில் இறைவனை வழிபடுகின்றனர்.  அதற்கு இரும்பினால் செய்யப்பட்ட விளக்கில், நெய்தோய்ந்த திரியைக்  கொளுத்துகின்றனர்.  நெல்லையும் மலரையும் தூவிக் கைக்கூப்பி இல்லுறை தெய்வத்தை வழிபடுகின்றனர்.  வளம்பொருந்திய ஆவண வீதிகளில் உள்ள வீடுகளில் இவ்வாறு இறை வழிபாடானது மாலை வேளையில் இடம் பெறுகிறது.  இவ்வாறு நெல்லையும் மலரையும் தூவிக் கைகளைக் குவித்து விளக்கேற்றி வழிபடும் முறையை நெடுநல்வாடை விவரிக்கின்றது.

    பழங்காலம் முதல் இன்றுவரை மக்கள் கொண்டிருந்த நம்பிக்கைகளையும், பின்பற்றி வருகின்ற சடங்குகளையும் இலக்கியங்கள் வாயிலாகவே தெளிவாக அறிந்து கொள்ள முடிகின்றது.

    இவற்றின் மூலம்,  மக்கள் தங்களுடைய நம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள் சார்ந்தே தத்தமது வாழ்க்கையை அமைத்துக் கொண்டுள்ளனர் என்பதையும் உணரலாம்.  இவ்வாறு தொடர்ந்து பின்பற்றிவரும் அதாவது மரபு வழியாகத் தொடரும் நம்பிக்கைகள் காலப்போக்கில் சடங்குகளாக மாறுகின்றன.

    சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படுகின்ற மக்களின் நம்பிக்கைகளையும், சடங்குகளையும் குறித்து நுணுகி ஆராய்ந்து மேலாய்வுகளை மேற்கொள்ளலாம்.  அவ்வாறு ஆராயும்போது சங்ககால  மக்களின் பண்பாட்டுக் கூறுகளைத் தெளிவாக அறிந்துகொள்ள இயலும்.

    சான்றெண்விளக்கம்

    1.ஜோதிராணி.க.அ, தமிழர் பண்பாட்டுத் தளத்தில் சடங்குகள், தன்னனானே, கோடம்பாக்கம், சென்னை-34, முதல் பதிப்பு – டிசம்பர் 2004,  பக்கம் எண்:9-10

    2.பாக்கியமேரி.எஃப், தமிழர் பண்பாடும் பயன்பாடும், அஞ்சனச்சிமிழப் பதிப்பகம், மயிலாப்பூர், சென்னை- 600 004, இரண்டாம் பதிப்பு – 2013. பக்கம் எண்:23

    3.குறுந்தொகை,  நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிமிடெட், அம்பத்தூர், சென்னை – 600 098, மூன்றாம் பதிப்பு – பிப்ரவரி 2007, பாடல் எண்: 307

    4. குறுந்தொகை, நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிமிடெட், அம்பத்தூர், சென்னை – 600 098, மூன்றாம் பதிப்பு – பிப்ரவரி 2007, பாடல் எண்: 229

    5. அகநானூறு, நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிமிடெட், அம்பத்தூர், சென்னை – 600 098, மூன்றாம் பதிப்பு – பிப்ரவரி 2007, பாடல் எண்: 221

    6. கலித்தொகை, நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிமிடெட், அம்பத்தூர், சென்னை – 600 098, மூன்றாம் பதிப்பு – பிப்ரவரி 2007, பாடல் எண்: 114

    7.புறநானூறு,  நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிமிடெட், அம்பத்தூர், சென்னை – 600 098, மூன்றாம் பதிப்பு – பிப்ரவரி 2007, பாடல் எண்: 74

    8.பத்துப்பாட்டு-பகுதி1 (திருமுருகாற்றுப்படை, அடி:190-197),  பகுதி1 நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிமிடெட், அம்பத்தூர், சென்னை – 600 098, மூன்றாம் பதிப்பு – பிப்ரவரி 2007, பக்கம் எண்: 13

    9. பத்துப்பாட்டு – பகுதி 2(நெடுநல்வாடை, அடி:39-44, நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிமிடெட், அம்பத்தூர், சென்னை – 600 098, மூன்றாம் பதிப்பு – பிப்ரவரி 2007, பக்கம் எண்: 178

    *****

    கட்டுரையாசிரியர் – இணைப் பேராசிரியர்
    அரிய கையெழுத்துச் சுவடித் துறை
    தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.
    பேச:9841152393
    மின்னஞ்சல்:kumaritathithan@gmail.com

     

     

    Share
  • குயவன்

     

     

     

    த. ஆதித்தன்

     

    பெற்றோர்களின் வறுமையால் சொந்த கிராமத்தை விட்டு சென்னைக்கு வந்துவிட்டான் சட்டைநாதன்.  ஆட்டோ ஓட்டும் அவன் சித்தப்பா மாநகராட்சிப் பள்ளியில் அவனை ஒன்பதாம் வகுப்பு  சேர்த்து விட்டிருக்கிறார்.

     

    காலையில் ஐந்து மணிக்கு எழுந்திருந்து சித்தப்பாவின் ஆட்டோவைத் துடைத்துக் கொடுப்பது, தெருக்குழாயில் வீட்டிற்குத் தேவையான தண்ணீர் பிடித்துக் கொடுப்பது,  கடைக்குச் சென்று வீட்டிற்கு வேண்டியவற்றை வாங்கி கொடுப்பது உள்ளிட்ட காலைக் கடன்களை முடித்து விட்டு பள்ளிக்குத்  தயாராக மணி காலை 8.30 ஆகிவிடும்.  பின்னர் இரண்டு கிலோமீட்டர் நடந்து சென்றால் பள்ளிக் கூடம் வந்துவிடும்.  ஓட்டமும் நடையுமாக சென்றால் வீட்டுப் பாடங்களை முடிக்க நேரம் கிடைக்கும்.  மாலையில் வீடு சென்றால் பீடி சுற்றும் தொழிலாளியான சித்திக்கு உதவி செய்வதிலேயே நேரம் கடந்துவிடும் இவனுக்கு வீட்டுப்பாடம் செய்வதற்கு நேரம் ஏது.

    வகுப்பாசிரியை தெரசாவின் கோபக் கணைகள் மட்டும் இல்லை என்றால் இவை ஒன்றும் அவனை பாதித்திருக்காது.

    இதேபோன்று ஆசிரியர்கள் இருப்பார்களோ;  மாட்டார்களோ           தெரியாது.  ஆனால் தெரசா டீச்சர் மட்டும் அப்படி.

    அவர் வகுப்பு நடத்தாமல் ஊர்க்கதை பேசுவதுதான் அதிகமாக இருக்கும்.  அப்படி பொதுவாகப் பேசும்போது கூட அவரின் பேச்சில் அன்பைக் காண முடியாது.  அதிகாரத்தைதான் காணமுடியும்.

    சட்டைநாதன் ஒருநாள் பள்ளிக்கு வர தாமதமாயிற்று,  காரணம் அன்று தெருக்குழாயில் தண்ணீர் வராததால் இரண்டு தெரு தள்ளி உள்ள அடிபைப்பில் இருந்து தண்ணீர் பிடிக்க வேண்டியதாயிற்று.  அந்த சோர்வால் பள்ளிக்கு வேகமாக நடந்து வர முடியவில்லை

    “ குட் மார்னிங் டீச்சர் ”என்றான்.

    தெரசா டீச்சரின் முகம் அனலைக்கக்கியது. “ ஏண்டா லேட்டு?”

    “லேட்டாயிடுச்சி டீச்சர்”

    “காரணம் கேட்டா அதையே சொல்ரே”?  சீறி விழுந்ததோடு “வீட்டுப்பாட நோட்டை எடு” என்றார்.

    வீட்டுப் பாடம் முடிக்கலை டீச்..ச…ர்…” சொல்லி முடிக்கும் முன்பே அவர் கையில் இருந்த பிரம்பு அவனைப் பதம் பார்த்தது.

    “வகுப்புக்கு உள்ள வராத …, வெளிய நின்னே பாடத்த கவனி… மதியம் சாப்பாட்டு டைம்ல ஸ்டாப் ரூமுக்கு வந்து வீட்டுப் பாடத்த முடிச்சுக் குடுத்திட்டு வகுப்புக்கு உள்ள போ” என்றார்.

    வகுப்பாசிரியர் சொன்னதால், அதிலும் தெரசா டீச்சர் சொன்னதால் எந்த பாட வேளையிலும் உள்ளே செல்ல முடியவில்லை.

    நேரம் ஆக ஆக கால் வலித்தது.  உள்ளே தமிழ் வகுப்பு நடந்தது, “  நல்ல களிமண்னைக் கொண்டு எத்தகைய உருவத்தையும் செய்ய முடியும்.  அது குயவன் கையாளும் விதத்தைப் பொறுத்தது.  அதுபோல மாணவர்களே உங்களை வடிவமைப்பது சமூகக் குயவன்.  ஆம் சமூகமாகியக்  குயவன்” என பாடத்தை நடத்திக் கொண்டிருந்தார்.

    மதிய உணவு வேளை வந்ததும் ஆசிரியர் அறையின் வெளியே அமர்ந்து வீட்டுப் பாடங்களை முடித்தான்.  தெரசா டீச்சரிடம் கொடுத்துவிட்டு சத்துணவு சாப்பிட வேகமாக ஓடிச் சென்றான். பசி வயிற்றைக் கிள்ளி எடுத்தது.  எல்லோரும் சாப்பிட்டு முடித்திருந்தார்கள்.  சத்துணவுக் கூடத்திற்குள் எட்டிப் பார்த்தான்.  பாத்திரங்களைக் கழுவிக் கொண்டிருந்தார்கள்.  வெளியே மாணவர்கள் கொட்டியிருந்த மீதமான சாப்பாடு ஒர மரத்தடியில் கிடந்தது.  தண்ணீர் குடிக்கலாம் என அருகில் இருந்த குழாயைத் திருகினான்.  ஏற்கனவே காலியாகியிருந்ததால் சொட்டு சொட்டாக சில துளிகள் விழுந்தன.  அப்படியே அருகில் இருந்த திண்டில் ஏறி வெளியில் பார்த்தான்.

    சாலையின் எதிர்புறம் ஒரு தனியார் பள்ளி.  அப்பள்ளியின் கேண்டீன் கண்ணில் பட்டது.  இவன் வயதை ஒத்த மாணவர்கள் இருவர் ஐஸ்கிரீமை ஒருவர் மீது ஒருவர் வீசி விளையாடிக் கொண்டிருந்தனர்.

    அப்படியே திண்டில் இருந்து இறங்கி குழாய் அருகில் அமர்ந்தான்.  குழாயில் இருந்து சிறு துளி மண்ணில் விழுந்தது.

    சட்டை நாதன் மனதுள் என்னென்னவோ தோன்றியது.  “இவ்வளவு கஷ்டங்களையும் நான் எதுக்குத் தாங்கிக்கணும்?”

    “வயிற்றுப் பிழைப்புக்காகவா?

    “ஏழையாய் பிறந்ததற்காகவா?

    அவன் அருகில் எந்த குயவனும் இல்லை.

    …..

     

     

     

    Share
  • புது வாழ்க்கை!

    -த.ஆதித்தன் 

    கனகத்திற்குத் துக்கம் தாங்கவில்லை. நகரத்தில் இருந்து ஊருக்கு வந்திருந்த மருமகள் தனது வீட்டிற்கு வராமல் இருந்திருந்தால்கூட இவ்வளவு கவலைப் பட்டிருக்கமாட்டாள். எதிர்வீட்டு பாலு, பக்கத்துக் கடை அண்ணாச்சியிடம் எல்லாம் வந்து நலம் விசாரித்தவள் அப்படியே ஒரு எட்டு வந்து தன்னையும் பார்த்துவிட்டுப் போயிருக்கலாமே என்ற ஆதங்கம்தான் அவளை வாட்டியது. பேரக்குழந்தைகளை வேறு பார்க்கவேண்டும் போல் இருந்தது.

    மருமகள் திலகாவைத் தனது மகள்போல் தான் பார்த்துக்கொண்டாள் கனகம். வறுமை வாட்டிய போதும் மருமகள், பேரக்குழந்தைகளுக்குத் துன்பம் தெரியாமல் பார்த்துக்கொள்வாள். ஊரார் மெச்சும் மாமியார் மருமகளாகவே வாழ்ந்தனர்.

    இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கணவர் விபத்தில் இறந்தபிறகு வேறு திருமணம் வேண்டாம் என்பதில் உறுதியாக இருந்துவந்தாள் திலகா. பக்கத்து வீட்டுச் சித்ரா சென்னையில் வேலைபார்க்கும் செல்வத்தை நல்ல பையன் எனத் திலகாவிற்கும் கனகத்திற்கும் அறிமுகப்படுத்தினாள். சென்ற மாதம்தான் அனைவரும் சேர்ந்து செல்வத்தோடு திலகாவிற்கு மறுமணம் செய்து வைத்தனர்.

    ஒரு மாதத்திற்குள் திலகா மாறிவிட்டதைக் கனகத்தால் ஜீரணிக்கவே முடியவில்லை. புது வாழ்க்கையும், சுகமும் இந்த அளவிற்கா மாற்றிவிடும். திலகாவிற்கு ஃபோன் பண்ணினாள், “மாமி நல்லா இருக்கிறீங்களா?” என்றாள் திலகா.

    “நல்லா இருக்கிறோம். பேரப்பிள்ளைங்க நீங்க எல்லாரும் நல்லா இருக்கீங்களா?” என்ற கனகத்திடம், “ம்…. உடம்பைப் பாத்துக்குங்க மாமி, ஊர்ல எல்லாரும் நல்லா இருக்காங்களா?” என வெகு இயல்பாக கேட்டாள் திலகா. கனகத்தால் இதற்குமேலும் அடக்க முடியவில்லை. “ரெண்டு நாளுக்கு முன்னால நீ ஊருக்கு வந்துட்டு போனத சொன்னாங்க…. என் மேல என்ன கோபம் திலகா? இந்த வயசான உசிரையும் பார்த்துட்டு போயிருக்கலாம்ல்ல….” என்றாள்.

    “நேரமில்ல மாமி அதுதான் வந்துட்டோம்…. அப்புறமா ஃபோன் பண்ணுறேன் மாமி” என்றபடி ஃபோனை வைத்த திலகாவிற்கு அழுகை பீறிட்டது. ஊருக்கு சென்றிருந்தபோது மாமியார் வீட்டிற்கும் போய் வரலாம் என்று புது கணவனிடம் சொன்னதும்,” பழைய நினைப்பும் அவன்மேலுள்ள பாசமும் இன்னமும் மாறல போல…….” என்று அவன் கூறிய வார்த்தைகள் என்னமோ செய்தது அவளை.

    Share