புது வாழ்க்கை!

-த.ஆதித்தன் 

கனகத்திற்குத் துக்கம் தாங்கவில்லை. நகரத்தில் இருந்து ஊருக்கு வந்திருந்த மருமகள் தனது வீட்டிற்கு வராமல் இருந்திருந்தால்கூட இவ்வளவு கவலைப் பட்டிருக்கமாட்டாள். எதிர்வீட்டு பாலு, பக்கத்துக் கடை அண்ணாச்சியிடம் எல்லாம் வந்து நலம் விசாரித்தவள் அப்படியே ஒரு எட்டு வந்து தன்னையும் பார்த்துவிட்டுப் போயிருக்கலாமே என்ற ஆதங்கம்தான் அவளை வாட்டியது. பேரக்குழந்தைகளை வேறு பார்க்கவேண்டும் போல் இருந்தது.

மருமகள் திலகாவைத் தனது மகள்போல் தான் பார்த்துக்கொண்டாள் கனகம். வறுமை வாட்டிய போதும் மருமகள், பேரக்குழந்தைகளுக்குத் துன்பம் தெரியாமல் பார்த்துக்கொள்வாள். ஊரார் மெச்சும் மாமியார் மருமகளாகவே வாழ்ந்தனர்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கணவர் விபத்தில் இறந்தபிறகு வேறு திருமணம் வேண்டாம் என்பதில் உறுதியாக இருந்துவந்தாள் திலகா. பக்கத்து வீட்டுச் சித்ரா சென்னையில் வேலைபார்க்கும் செல்வத்தை நல்ல பையன் எனத் திலகாவிற்கும் கனகத்திற்கும் அறிமுகப்படுத்தினாள். சென்ற மாதம்தான் அனைவரும் சேர்ந்து செல்வத்தோடு திலகாவிற்கு மறுமணம் செய்து வைத்தனர்.

ஒரு மாதத்திற்குள் திலகா மாறிவிட்டதைக் கனகத்தால் ஜீரணிக்கவே முடியவில்லை. புது வாழ்க்கையும், சுகமும் இந்த அளவிற்கா மாற்றிவிடும். திலகாவிற்கு ஃபோன் பண்ணினாள், “மாமி நல்லா இருக்கிறீங்களா?” என்றாள் திலகா.

“நல்லா இருக்கிறோம். பேரப்பிள்ளைங்க நீங்க எல்லாரும் நல்லா இருக்கீங்களா?” என்ற கனகத்திடம், “ம்…. உடம்பைப் பாத்துக்குங்க மாமி, ஊர்ல எல்லாரும் நல்லா இருக்காங்களா?” என வெகு இயல்பாக கேட்டாள் திலகா. கனகத்தால் இதற்குமேலும் அடக்க முடியவில்லை. “ரெண்டு நாளுக்கு முன்னால நீ ஊருக்கு வந்துட்டு போனத சொன்னாங்க…. என் மேல என்ன கோபம் திலகா? இந்த வயசான உசிரையும் பார்த்துட்டு போயிருக்கலாம்ல்ல….” என்றாள்.

“நேரமில்ல மாமி அதுதான் வந்துட்டோம்…. அப்புறமா ஃபோன் பண்ணுறேன் மாமி” என்றபடி ஃபோனை வைத்த திலகாவிற்கு அழுகை பீறிட்டது. ஊருக்கு சென்றிருந்தபோது மாமியார் வீட்டிற்கும் போய் வரலாம் என்று புது கணவனிடம் சொன்னதும்,” பழைய நினைப்பும் அவன்மேலுள்ள பாசமும் இன்னமும் மாறல போல…….” என்று அவன் கூறிய வார்த்தைகள் என்னமோ செய்தது அவளை.

Share

Comments

4 responses to “புது வாழ்க்கை!”

  1. Magesh Selvakumar

    Very good heart touching story..!!!

  2. Abu AD

    Nice Story..

  3. Venkatesan.R

    this story is wounderful. culturestory i wish author dr athithan
    .

  4. Krishnamoorthy

    Very short and sweet story sir.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *