Tag: பவள சங்கரி

  • கூடா நட்பு

     

     

    கூடா நட்பு

     

    இந்த ஆண்டும் வழக்கம் போல பள்ளி ஆண்டு விழாவின் விளையாட்டுப் போட்டியை ஆசிரியர் அறிவித்துக் கொண்டிருந்தார். எல்லாப் போட்டிகளிலும் தவறாது கலந்து கொண்டு முதல் இரண்டு பரிசுகளையும் ஆளுக்கொன்றாக தட்டிச் செல்வதில் இணை பிரியாத் தோழிகளான கண்மணியையும், தமிழ்ச்செல்வியையும்  அடித்துக்கொள்ள வேறு எவரும் இல்லை என்பது அந்தப் பள்ளியில் அனைவருக்கும் தெரியும். இது பல மாணவர்களின் கண்களை உறுத்திக்கொண்டிருந்தது. எப்படியாவது இந்த ஆண்டு இவர்கள் இருவரையும் தோற்று ஓடச் செய்ய வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு அலைந்த அந்த வகுப்பு மாணவர்களில் சிலர் அதற்கான வேலையை தந்திரமாக செய்ய ஆரம்பித்தனர். அதன் முதல் படியாக கண்மணியையும், தமிழ்ச்செல்வியையும் பிரிக்க வேண்டும் என்று முடிவு செய்தார்கள்.

    “ஏய் கண்மணி எப்படியும் இந்தப் போட்டியிலும் வழக்கம் போல நீதான் வெற்றி பெறப் போகிறாய்” என்றாள் மணிமொழி.

    “அதெல்லாம் இல்லப்பா விளையாட்டுப் போட்டி என்று வந்தால் தமிழ்ச் செல்வியை யாரும் முந்திச் செல்ல முடியாது” என்றாள் கண்மணி.

    “அப்படியெல்லாம் இல்லைப்பா. நீதான் இந்த முறை விருது வாங்கப் போகிறாய் என்று நான் பந்தயம் கட்டியுள்ளேன்” என்றாள் மணிமொழி

    இதற்கு 4 மாணவிகள் ஒத்து ஊதிக்கொண்டிருந்தார்கள். எப்படியும் கண்மணிக்கு ஆசை காட்டி தமிழ்ச்செல்வியை சண்டைக்கு இழுக்க வைக்க முயற்சி செய்தார்கள். கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் என்பது போல கண்மணியை தொடர்ந்து மூளைச் சலவை செய்தவர்கள், இறுதியாக,

    “கண்மணி இந்தப் போட்டியில் கட்டாயம் முதல் பரிசு உனக்குத்தான். அதற்கு நாங்கள் பொறுப்பு. நீ மட்டும் நாங்கள் சொன்னபடி கேட்டால் போதும். சுழற்கோப்பை இந்த முறை உனக்குத்தான்” என்றபோது கண்மணிக்கு மெல்ல சபலம் தட்ட ஆரம்பித்தது. இதைப் பயன்படுத்திக்கொண்டு மணிமொழி குழுவினர் அவளை மெல்ல தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர். எப்படியும் சுழற்கோப்பையை அடைந்தே தீரவேண்டும் என்ற வெறி தலைக்கேற ஆரம்பிக்க புதிய நண்பர்களின் பேச்சை முழுமையாக நம்ப ஆரம்பித்தாள் கண்மணி. மற்ற போட்டியாளர்களைக் காட்டிலும் பல படிகள் அதிகமாகப் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தனர் இருவரும்.

    புதிய நண்பர்கள் கண்மணியிடம் ஒரு பெரிய திட்டத்தை சொல்லிக் கொண்டிருந்தனர். எப்படியாவது இருவரையும் தோற்கச் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டிருந்தனர்.

    “கண்மணி ஓட்டப் பந்தயத்தில் நீ வெற்றி பெற வேண்டுமானால் நாங்கள் சொல்வதுபோல் நீ செய்ய வேண்டும்”

    “என்ன அது..  இதனால் வேறு பிரச்சனைகள் வராது அல்லவா?”

    “அதெல்லாம் ஒன்றும் வராது. எப்படியும் நீங்கள் இருவரும்தான் முன்னிலையில் ஓடி வந்து கொண்டிருப்பீர்கள். ஒரு குறிப்பிட்ட இடத்தில் வந்தவுடன் நாங்கள் சைகை காட்டுவோம். அப்போது மெதுவாக ஒரு கல்லை வழியில் உருட்டி விடுவோம். நீ அந்த நேரம் பார்த்து தமிழ்ச்செல்வியின் காலை இடறச் செய்துவிட்டால் போதும். அவள் கீழே விழுந்து விடுவாள். நீ முன்னால் ஓடிச் சென்று பரிசை தட்டிச் செல்லலாம்” என்றார்கள்.

    இதற்கு 4 நண்பர்களும் நான்கு விதமாக கண்மணியை தயார்படுத்திக் கொண்டிருந்தனர். ஆனாலும் கண்மணியின் மனதில் ஏதோ உறுத்திக் கொண்டேதான் இருந்தது. இவர்கள் பேச்சைக் கேட்டுக்கொண்டு அன்புத் தோழி தமிழ்ச்செல்வியை இக்கட்டில் மாட்டி விடக்கூடாது என்று மனம் எச்சரிக்கை விடுத்தாலும் புதிய நண்பர்களின் ஆசை வார்த்தைகள் அவளை மதியிழக்கச் செய்தது.

    அன்று போட்டி நாள். எப்போதும் உற்சாகமாகக் கிளம்பும் கண்மணி அன்று ஒரு பதட்டத்திலேயே கிளம்பிக் கொண்டிருந்தாள். இதை கவனித்த அவளுடைய அம்மா,

    “கண்மணி இன்று ஏன் இப்படி உற்சாகமே இல்லாமல் இருக்கிறாய். இத்தனை முறை காரணம் கேட்டும் சொல்லவும் மறுக்கிறாய். இந்த மனநிலையில் போனால் எப்படி போட்டியில் வெற்றி கிடைக்கும். ஏதாவது பிரச்சனை இருந்தால் என்னிடம் சொல்” என்று கனிவுடன் கேட்டார்கள். அவளும் அவசர அவசரமாக, “அதெல்லாம் ஒன்றுமில்லையம்மா” என்றபோதே அவள் அம்மா ஏதோ பிரச்சனை இருப்பதை கண்டுபிடித்து விட்டார்கள். எப்படியோ நல்ல வார்த்தை சொல்லி மகளை அனுப்பி வைத்தாலும் அந்தத் தாய்க்கு ஏதோ அசம்பாவிதம் நடக்கப் போகிறது என்று தெரிந்துவிட்டது. அவரும் அதற்குமேல் மகளை தொல்லை கொடுக்கக் கூடாது என்று முடிவு செய்தவர் போட்டி நடக்கும் மைதானத்திற்கு தானும் வந்து சேர்ந்தார்.

    போட்டி ஆரம்பித்தது. மூன்றாவது விசிலும் ஊதப்பட்டது. எல்லோரும் பந்தயத்திற்கு தயாராகி விட்டனர். கண்மணியின் மனதில் மட்டும் ஒரு சலனம். தேவையற்ற இந்த மனக்குழப்பம் அவளுடைய வெற்றிப் பாதைக்கு ஒரு தடைக்கல்லாகவும் நின்றது. அவள் அம்மாவிற்கு மட்டும் ஒரு ஐயம் இருந்து கொண்டுதான் இருந்தது. அதற்கேற்றார்போல் சில மாணவிகள் வந்து அவளிடம் இரகசியம் பேசிச் சென்றதையும் கவனித்து விட்டார். போட்டி நடக்கும்போது அந்தப் பிள்ளைகள் ஏதோ செய்யப் போகிறார்கள் என்பதை உணர்ந்தவர் அதைத் தடுக்க ஆயத்தமாகவும் இருந்தார். குறிப்பிட்ட அந்த இடம் வந்தவுடன் கண்மணியின் அம்மா கவனித்துக் கொண்டிருந்ததைப் பார்த்த மணிமொழி குழுவினர் மெல்ல பின்வாங்க ஆரம்பித்தனர். கண்மணியும் வேகமாக முன்னேறி வந்து கொண்டிருந்தாலும் அந்த இடத்திற்கு வந்தவுடன் அவளையறியாமல் கால்கள் அச்சத்தில் பின்னிக் கொண்டன. வேகம் குறைய ஆரம்பித்தது. கீழே விழப் போனவளை ஒரு நொடியில் அணைத்து காப்பாற்றி விட்டு முன்னேறிச் சென்ற தமிழ்ச் செல்வியைப் பார்த்து கூனிக்குருகி நின்றாள். தமிழ்ச்செல்வி முதல் இடத்தைப் பிடித்து விட்டாலும் கண்மணிக்கு மகிழ்ச்சியாகவே இருந்தது. கூடா நட்பினால் நல்ல தோழியை இழக்க நேர்ந்த விபத்திலிருந்து தப்பி விட்டதில் பெருமிதம் கொண்டாள். அவள் அம்மாவும் அதைப் புரிந்து கொண்டு அவள் முதுகில் அன்பாக தட்டிக் கொடுத்தார். கூடா நட்பு கேடாய் முடியும் என்பதை புரிந்து கொண்டவள் அதைத் தன் வாழ்க்கைப் பாடமாக எடுத்துக் கொண்டாள்.

    முகத்தின் இனிய நகாஅ அகத்தின்னா
    வஞ்சரை அஞ்சப் படும்.

    நாம் காணும்போது முகத்தால் இனிதாகச் சிரித்து, மனத்தால் எப்போதும் பகைவராய் வாழும் வஞ்சகர்களுக்கு அஞ்சவேண்டும், என்ற வள்ளுவரின் குறள் அவர்களுக்கு வழிகாட்டியாக அமைந்தது.

     

    காட்சி அறிமுகம்

    அனைவருக்கும் வணக்கம்.

    முகத்தின் இனிய நகாஅ அகத்தின்னா
    வஞ்சரை அஞ்சப் படும்.

    என்பது கூடா நட்பு அதிகாரத்தின் 824வது குறட்பா.

    இதன் பொருள், முகத்தால் இனிமையாகச் சிரித்துப் பழகி அகத்தில் தீமை கொண்டுள்ள வஞ்சகருடன் நட்பு கொள்வதற்கு அஞ்ச வேண்டும்.

    ஒரு மனிதனுடைய வெற்றிக்கும், தோல்விக்கும் பெரும்பாலான நேரங்களில் நண்பர்களே காரணமாய் இருக்கிறார்கள். நண்பர்களுடன் பேசும்போது நம்முடைய மனம் நேர்மறை சிந்தனைகளில் அல்லாமல் எதிர்மறை சிந்தனைகளில் வளர்கிறதெனில் அந்த நட்பு தவறானது என்பதைக் கண்டு கொள்ள வேண்டும். கூடா நட்பு கேடாய் தான் முடியும் .
    “உன் நண்பனைக் காட்டு, நீ யாரென்று சொல்கிறேன்”, என்பார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக எதற்காகவும் பழகிய நட்புக்கு துரோகம் செய்யக் கூடாது. அதன் வலி தாங்கமுடியாதது என்பதையும் உணரச் செய்யும் காட்சிகளைத்தான் காண இருக்கிறோம். வாருங்கள் நிகழ்ச்சிக்குள் போகலாமா…

    காட்சி – 1  பள்ளி வகுப்பறை

    ஆசிரியர் : வணக்கம் குழந்தைகளே! ஒரு நல்ல செய்தி. இந்த ஆண்டும் வழக்கம்போல் ஆண்டு விழாவில் விளையாட்டுப் போட்டிகள் நடக்கப் போகிறது. கண்மணி, தமிழ்ச்செல்வி தவிர வேறு யாரெல்லாம் பெயர் கொடுக்கப் போகிறீர்கள்?

    மாணவர்கள் ஒன்றாக டீச்சர் ஏன் அவர்களைத் தவிர என்கிறீர்கள்? என்ற கூச்சல்.

    ஆசிரியர்: ஆமாம் அவர்கள் எப்போதும் கலந்து கொள்பவர்கள்தானே. அதான் நானே அவர்களுடைய பெயர்களை எழுதிக்கொண்டேன்..

    ஓ …..

    ஆசிரியர்: சரி, விரைவில் மற்றவர்களும் பெயர்களைக் கொடுங்கள். இப்போது பாடத்திற்குச் செல்லலாம்.

     

    காட்சி – 2

    கண்மணி : “தமிழ், எப்படியும் இந்த முறையும் நீதான் சுழற்கோப்பையை தக்க வைத்துக்கொள்ளப் போகிறாய். அப்படித்தானே?”

    தமிழ்ச்செல்வி : அதெல்லாம் இல்லைப்பா. எனக்குப் போட்டியாத்தான் எப்பவும் நீ இருகிறாயே? அப்புறம் எப்படி ?

    (தமிழ்ச்செல்வி அந்த இடத்தை விட்டு அகன்றாள்)

    மணிமொழி : “ஏய் கண்மணி எப்படியும் இந்தப் போட்டியிலும் வழக்கம் போல நீதான் வெற்றி பெறப் போகிறாய்”

    கண்மணி : “அதெல்லாம் இல்லப்பா விளையாட்டுப் போட்டி என்று வந்தால் தமிழ்ச்செல்வியை யாரும் முந்திச் செல்ல முடியாது”

    மணிமொழி : “அப்படியெல்லாம் இல்லைப்பா. நீதான் இந்த முறை கோப்பையை வாங்கப் போகிறாய் என்று நான் பந்தயம் கட்டியுள்ளேன்”

    மற்ற 3 மணவிகள் : ஆமாம் .. ஆமாம். மணிமொழி சொல்வது சரிதான். நீதான் இந்த முறை கோப்பையை வெல்லப் போகிறாய்.

    “கண்மணி இந்தப் போட்டியில் கட்டாயம் முதல் பரிசு உனக்குத்தான். அதற்கு நாங்கள் பொறுப்பு. நீ மட்டும் நாங்கள் சொன்னபடி கேட்டால் போதும். சுழற்கோப்பை இந்த முறை உனக்குத்தான்”

    (கண்மணிக்கு மெல்ல சபலம் தட்ட ஆரம்பித்தது. யோசிக்க ஆரம்பிக்கிறாள். “எப்படியும் சுழற்கோப்பையை அடைந்தே தீரவேண்டும்” என்று தனக்குத்தானே சபதம் மேற்கொள்கிறாள்.

    (புதிய நண்பர்களின் பேச்சை முழுமையாக நம்ப ஆரம்பித்தாள் கண்மணி. கண்மணியிடம் ஒரு பெரிய திட்டத்தை சொல்லிக் கொண்டிருந்தனர். எப்படியாவது இருவரையும் தோற்கச் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டிருந்தனர்).

    “கண்மணி ஓட்டப் பந்தயத்தில் நீ வெற்றி பெற வேண்டுமானால் நாங்கள் சொல்வதுபோல் நீ செய்ய வேண்டும்”

    கண்மணி : “என்ன அது..  இதனால் வேறு பிரச்சனைகள் வராது அல்லவா?”

    தோழிகள் : “அதெல்லாம் ஒன்றும் வராது. எப்படியும் நீங்கள் இருவரும்தான் முன்னிலையில் ஓடி வந்து கொண்டிருப்பீர்கள். ஒரு குறிப்பிட்ட இடத்தில் வந்தவுடன் நாங்கள் சைகை காட்டுவோம். அப்போது மெதுவாக ஒரு கல்லை வழியில் உருட்டி விடுவோம். நீ அந்த நேரம் பார்த்து தமிழ்ச்செல்வியின் காலை இடறச் செய்துவிட்டால் போதும். அவள் கீழே விழுந்து விடுவாள். நீ முன்னால் ஓடிச் சென்று பரிசை தட்டிச் செல்லலாம்” .

    கண்மணி : (மனதிற்குள்)  மனசு என்னமோ உறுத்திக் கொண்டே இருக்கிறதே. இவர்கள் பேச்சைக் கேட்டுக்கொண்டு அன்புத் தோழி தமிழ்ச்செல்வியை இக்கட்டில் மாட்டி விட்டுவிடுவோமா? சே..சே.. அப்படியெல்லாம் ஆகாது. பார்த்துக்கலாம் …

     

    காட்சி – 3

    அன்று போட்டி நாள். எப்போதும் உற்சாகமாகக் கிளம்பும் கண்மணி அன்று ஒரு பதட்டத்திலேயே கிளம்பிக் கொண்டிருந்தாள். இதை கவனித்த அவளுடைய அம்மா,

    அம்மா :  “கண்மணி இன்று ஏன் இப்படி உற்சாகமே இல்லாமல் இருக்கிறாய். இத்தனை முறை காரணம் கேட்டும் சொல்லவும் மறுக்கிறாய். இந்த மனநிலையில் போனால் எப்படி போட்டியில் வெற்றி கிடைக்கும். ஏதாவது பிரச்சனை இருந்தால் என்னிடம் சொல்”.

    கண்மணி : “அதெல்லாம் ஒன்றுமில்லையம்மா”

    அம்மா மனதிற்குள் .. : ஏதோ பிரச்சனை இருக்கிறது. என்னமோ அசம்பாவிதம் நடக்கப் போவதாகத் தோன்றுகிறதே. பேசாமல் போட்டி நடக்கும் மைதானத்திற்கு போய்விடலாம்”.

    போட்டி ஆரம்பித்தது. மூன்றாவது விசிலும் ஊதப்பட்டது. எல்லோரும் பந்தயத்திற்கு தயாராகி விட்டனர். கண்மணியின் மனதில் மட்டும் ஒரு சலனம். தேவையற்ற இந்த மனக்குழப்பம் அவளுடைய வெற்றிப் பாதைக்கு ஒரு தடைக்கல்லாகவும் நின்றது.

    சில மாணவிகள் வந்து கண்மணியிடம் இரகசியம் பேசிச் செல்கிறார்கள்.

    அம்மா மனதிற்குள் : “போட்டி நடக்கும்போது அந்தப் பிள்ளைகள் ஏதோ செய்யப் போகிறார்கள். அதைத் தடுக்க வேண்டும்”.

     

    குறிப்பிட்ட அந்த இடம் வந்தவுடன் கண்மணியின் அம்மா கவனித்துக் கொண்டிருந்ததைப் பார்த்த மணிமொழி குழுவினர் மெல்ல பின்வாங்க ஆரம்பித்தனர். கண்மணியும் வேகமாக முன்னேறி வந்து கொண்டிருந்தாலும் அந்த இடத்திற்கு வந்தவுடன் அவளையறியாமல் கால்கள் அச்சத்தில் பின்னிக் கொண்டன. வேகம் குறைய ஆரம்பித்தது. கீழே விழப் போனவளை ஒரு நொடியில் அணைத்து காப்பாற்றி விட்டு முன்னேறிச் சென்ற தமிழ்ச் செல்வியைப் பார்த்து கூனிக்குருகி நின்றாள்.

    “தமிழ்ச்செல்வி முதல் இடத்தைப் பிடித்து விட்டாள்” என்ற அறிவிப்பு வருகிறது.

    கண்மணிக்கு மகிழ்ச்சியாகவே இருந்தது.

    கண்மணி மனதிற்குள் : நல்ல வேளை. கூடா நட்பினால் நல்ல தோழியை இழக்க நேர்ந்த விபத்திலிருந்து தப்பி விட்டோம்”

    அம்மாவும் அதைப் புரிந்து கொண்டு அவள் முதுகில் அன்பாக தட்டிக் கொடுத்தார்.

    இறுதிக் காட்சி

    “நண்பர்களே, கூடா நட்பு கேடாய் முடியும் என்பதை புரிந்து கொண்ட கண்மணி அதைத் தன் வாழ்க்கைப் பாடமாக எடுத்துக் கொண்டாள். நமக்கும் இது ஒரு பாடம்தானே?”

     

    படத்திற்கு நன்றி

    Share
  • நடுவண் அரசின் சிறப்பான நடவடிக்கை!

    பவள சங்கரி

    மத்திய அரசு மக்கள் நலனுக்காக எடுத்துள்ள சிறப்பான நடவடிக்கைக்கு பாராட்டுகள்! இதுவரை தங்கம், வெள்ளி போன்ற பொருட்களுக்கு மட்டும் இருந்த தரக்கட்டுப்பாடு சென்ற வெள்ளிக்கிழமை முதல் சேவைத்துறைக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. தரக்கட்டுப்பாடு தங்கத்திலிருந்து, குடிக்கும் நீர் வரை, தொலைத்தொடர்புத் துறையிலிருந்து, விமானச்சேவை, இணையம் மூலமான வர்த்தகம், மருத்துவ சேவை போன்ற 12 வகையான சேவைகளும் தரக்கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. சுற்றுலா, தங்கும் விடுதி, உணவு விடுதி, போக்குவரத்து, நிதி நிறுவனச் சேவை மற்றும் வழக்கறிஞர் சேவை போன்ற அனைத்தும் இதற்குள் அடங்கும்!

    Share
  • காச நோய் …

    பவள சங்கரி 

     

     

    காச நோயை முற்றிலுமாக குணப்படுத்தக்கூடிய விலை அதிகமான வெளிநாட்டு மருந்துகள் நமது அரசிடம் 1000 பேருக்கு மட்டுமே உள்ள நிலையில் இந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் 1,30,000 பேர் (நோய் முற்றிய நிலையில் உள்ளவர்கள்) இந்த மருந்துகளை இந்தியாவிலேயே தயாரிப்பதற்கு அந்த நிறுவனங்கள் அனுமதி தர மறுக்கின்றனவாம். இந்தியாவில் இந்த மருந்தை தயாரிப்பது மட்டுமே விலை குறைவாகக் கிடைப்பதற்குரிய தீர்வாக அமையும். மத்திய அரசு பன்னாட்டு நிறுவனங்களின் மற்ற தயாரிப்புகளின் மீது கட்டுப்பாடு விதித்தாவது அல்லது உலக சுகாதார மையம் மூலமாகவாவது தக்க நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்ட நோயாளிகளைக் காப்பாற்ற வேண்டும்…. 🙁

    Share
  • பெருகிவரும் மன நோயாளிகள்…

    பவள சங்கரி

    மன அழுத்தம் என்பது உலகளாவிய அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டிய பெரும் பிரச்சனையாக உள்ளது. உலக சுகாதார அமைப்பின் சமீபத்திய மதிப்பீட்டின்படி, உலகெங்கிலும் 300 மில்லியனுக்கும் அதிகமானோர் மனச்சோர்வினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது 2005 மற்றும் 2015 க்கு இடையிலான காலகட்டத்தில் 18% அதிகரித்துள்ளது.

    இந்தியாவில், மனநல சுகாதார மற்றும் நரம்பியல் ஆய்வாளர்கள் (NIMHANS) நடத்திய, இந்தியாவின் தேசிய மனநல சுகாதார ஆய்வில், 2015-16, கணக்கெடுப்பு செய்யப்பட்ட மக்கள் தொகையில் 13.7% மக்கள் மன நோய்களின் பாதிப்படைந்திருப்பதை வெளியிட்டுள்ளது. மன அழுத்தம், பதட்டம் கோளாறுகள் உள்ளிட்ட பொது மனநல குறைபாடுகள் நம் இந்திய மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 10% பேரை பாதிக்கின்றன அதாவது இந்தியாவில் 20 பேரில் 1 நபர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். நம் நாட்டில் கிராமப்புறங்களில் மிக அதிகமாக இருக்கிறது.
    தேசிய மனநல சுகாதார திட்டத்தின் படி, ஒவ்வொரு முக்கியமான சுகாதார மையத்திலும் அடிப்படை மனநல பராமரிப்பை வழங்க வேண்டும் .
    பல கிராமப்புற பகுதிகளில், மனநோய்க்கு எதிரான மூட நம்பிக்கைகள் ஒரு கடுமையான சமூகக் களங்கமாகி உள்ளது என்பதை NIMHANS ஆய்வு உட்பட பல ஆய்வுகளில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.கிராமப்புறங்களில் மன நோய் என்பது “தீய ஆத்மாவின் உடைமை” என்று கருதப்படுகிறது. இந்த தீய ஆவியை அகற்றுவதற்காக, மன நோயாளிகளை குடும்ப உறுப்பினர்கள் பாரம்பரிய வைத்தியர்களையோ அல்லது மத குருமார்களையோ நம்பியிருக்கிறார்கள். மனக் கோளாறுகள் பற்றிய விழிப்புணர்வு இல்லாததால், இந்தப் பிரச்சனை மேலும் கடுமையாகிறது. மன நோயாளிகளிடம் சமூகத்தில் பாகுபாடு சிந்தைகள் அதிகமாக இருப்பதால் பெரும்பாலான குடும்பங்கள் மன நோயாளிகளை மற்றவர் முன்னிலையில் சொல்லவே தயங்கி, மறைக்கவும் முயல்கிறார்கள்.

    இந்தியாவில் பயிற்சி பெற்ற மன நோய் மருத்துவர்களின் எண்ணிக்கையில் பற்றாக்குறை அதிகமாகவே உள்ளது. 1,00,000 மக்கள் தொகையில் 0.2 உளவியல் நிபுணர்கள் மட்டுமே உள்ளனர். கிராமிய மற்றும் நகர்ப்புற இந்தியா முழுவதும் இந்தப் பிரச்சனை உள்ளது. மனநல குறைபாடுகளுடன் வாழும் பல தனிநபர்கள் சிகிச்சை அளிக்கப்படாத நிலையில், அதற்குரிய மனநல சுகாதார உள்கட்டமைப்புகளும் சரிவர இல்லாததால் பொது சுகாதார பிரச்சனைகளாலும் பாதிப்பு ஏற்படுகிறது. ஏழை குடும்பங்களைச் சேர்ந்த மன நோயாளிகள் பொருளாதார சிக்கலாலும் சரியான சிகிச்சை பெற முடியாமல் அவதிக்கு உள்ளாகிறார்கள். வெகு தொலைவில் இருக்கும் அரசு மருத்துவ மையங்களுக்கு அடிக்கடி செல்ல வேண்டிய சூழலில் போக்குவரத்துச் செலவைக்கூட அவர்கள் சமாளிக்க முடியாமல் போவதும் முக்கிய காரணமாகிவிடுகிறது. அரசும், தொண்டு நிறுவனங்களும் இந்தப்பிரச்சனையில் கவனம் செலுத்தி தீர்வு காண முயலவேண்டும்.

    Share
  • பொறியியல் மாணவர்களுக்கு நல்ல செய்தி!

    பவள சங்கரி

    தலையங்கம்

    30 சதவிகிதத்திற்குக் குறைவாக தொடர்ச்சியாக 5 ஆண்டுகள் மாணவர்களை தேர்ச்சியடையச் செய்யத் தவறும் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று AICTE தலைவர் அறிவித்துள்ளார்.

    பொறியியல் கல்லூரியில் பணியில் அமர்பவர்கள் 4 மாத பயிற்சியில் தேர்ச்சியடைய வேண்டியது அவசியம். இல்லையென்றால் கல்லூரிப் பணியில் அமர முடியாது!

    Share
  • கையூட்டு!

    பவள சங்கரி

    ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் உள்ள 16 நாடுகளில் கையூட்டு கொடுத்து காரியம் சாதிப்பதில் இந்தியாவிற்குத்தான் முதல் இடமாம்! 10/7 பேர் இலஞ்சம் கொடுத்துதான் காரியம் முடிப்பதாகக் கூறுகிறார்கள். மிகக்குறைவாக இலஞ்சம் கொடுப்பவர்கள் (0.2%) ஜப்பானியர்கள். என்ன கொடுமைடா சாமி இது? இதில் கொஞ்சம் ஆறுதல் என்னவென்றால் இந்திய அரசாங்கம் இலஞ்சத்திற்கு எதிர்ப்பாக எடுத்த நடவடிக்கைகளைப் பாராட்டியுள்ளதுதான். 40% சற்று அதிகமான மக்கள் இந்த 12 மாதங்களில் ஊழல் மிகவும் அதிகரித்துள்ளதாகக் கூறுகிறார்கள். 63% மக்கள் தனி மனிதப் போராட்டம் கூட நல்ல பலன் அளிக்கும் என்கிறார்கள்.

    Share
  • வேதனையின் உச்சம்!

    பவள சங்கரி

    இந்தியாவில் மொத்த பெண்கள் தொகை 40 கோடி. இதில் 40% பெண்கள் கிராமப்பகுதிகளில் விவசாயம் சார்ந்த பணிகளையே மேற்கொண்டுள்ளனர். இவர்களுக்கென்று சொந்தமாக விவசாய நிலங்களும் கிடையாது. அதனால் இவர்களுக்கு விவசாயி என்ற அங்கீகாரமோ அல்லது அரசின் உதவிகளோ, மானியங்களோ கிடைப்பதில்லை.

    Share
  • படக்கவிதைப் போட்டி…(60)

    பவள சங்கரி

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

    image

     

    திரு. வாசகன் பாலசூரியன் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (23.04.2016) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும், தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி. மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014-ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுக்களும், பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்.

    Share
  • சுட்டும் விழிச்சுடர்! – சர்வதேச யோகாசன தினம்!

    பவள சங்கரி

    27-suryanamaskar

    யோகம் என்பது ….

    சுட்டும்-விழி2-300x76

    வியத்தகு ஆற்றல் பெற்ற உடலும், மனமும் இணைந்து, இசைந்து, இயங்கும் கலைதான் யோகாசனம். நம் அன்றாட வாழ்வியலில், நம்மை உற்சாகமாக கடமையாற்ற வழியமைத்து, ஆரோக்கியத்தையும், உள்ளத் தெளிவையும் ஒருசேர பேணிக்காக்கக்கூடியது. நம் வாழ்க்கை புறப்பட்ட இடம் எது என்ற தெளிவு இருக்கும் ஒருவருக்கே தாம் இறுதியில் போய்ச் சேரப்போகும் இடம் பற்றிய விழிப்புணர்வும் இருக்கும். இந்தத் தெளிவே நம்முடைய இடைப்பட்ட காலத்தில் நாம் வாழும் முறையை நிர்ணயிக்கிறது. நம் வாழ்க்கைப் பயணம் இடறின்றி அமைய சிறு தூண்டுகோலாக செயல்படுவதும் யோகாசனம் என்றும் சொல்லலாம். கீதையில் கண்ணன், சத்துவ குணம், ரஜோ குணம் மற்றும் தமோ குணம் என மூன்றாகப் பிரிக்கிறார். மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரை இந்த மூன்றின் ஒரு நிலையில் நின்றுதான் நம் பயணம் செல்கிறது. சத்துவ குணம் எதையும் புன்னகையோடு அலட்சியப்படுத்தும். ரஜோ குணம் பழி தீர்க்க நினைக்கும். தமோ குணம் நடந்ததை நினைத்து அழுது, கவலை கொள்ளும். இதில் ரஜோ குணம் மற்றும் தமோ குணம் என அந்த பின்னிரண்டு குணங்கள்தான் நம்மை அலைக்கழித்து, நம் உடல் நிலையையும் பாதிக்கச் செய்கிறது. ஆக, புலன்களை அடக்கி, ஒருமுகப்படுத்தி, பகை உணர்ச்சி என்பதே துளியும் அணுகாமல் நிதானம் காப்பது, நம் உடல்நிலை ஒரே சீராக இயங்குவதற்கு அத்தியாவசியமாகிறது. மனித மனம் உணர்ச்சியின் வேகத்தில் தனது நிலை மறந்து உணர்ச்சி வயமாகி சூழ்நிலைகளுக்கேற்றவாறு மாற்றமடைகிறது. இந்த நிலையிலேயே துன்பங்களைப் பெருக்கும் பழிச் செயல்களும் பதிவுகளும் ஏற்படுகின்றன. இதை அறிவின் மயக்க நிலை, என்றும், மாயை என்றும் அழைக்கிறோம். இதிலிருந்து விடுபடவே நாம் எண்ணினாலும் சூழ்நிலைகள் மீண்டும், மீண்டும் நம்மை இழுத்துச் சென்றுவிடுகிறது. இந்த மனித இயல்பை, இயற்கை நிலையை கட்டுக்குள் கொண்டுவர ஒரு சிறந்த சாதானமாக இந்த யோகாசனத்தைக் கூறலாம். உடற்பயிற்சியுடன், மனப்பயிற்சியும் (தியானம்) இணைந்து தெளிவான சிந்தையை அன்றாடம் ஊக்குவிக்கக்கூடிய கலை என்றே சொல்லலாம்.

    ‘யோகா’ என்ற சொல் ‘யுஜ்’ என்ற சமசுகிருத சொல்லிலிருந்து வந்துள்ளது. இதன் பொருள் தனிப்பட்ட மற்றும் பிரபஞ்ச உணர்வுகளின் கூட்டமைப்பு என்பதே. யோகாசனம் என்பது மனித வாழ்க்கையை செம்மைப்படுத்தக்கூடிய, நம் பழமையான வேத இலக்கியங்களின் ஊற்று. ரிக் வேதம் என்பது மனித வரலாற்றில் மிகப் பழமையானதும், புனிதமானதுமான, எட்டாயிரம் முதல் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்டது.

    சர்வதேச அளவில் இன்று மிகப்பெரும் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ள யோகாசனம், கிட்டத்தட்ட ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பதஞ்சலி முனிவரால் எடுத்தாளப்பட்ட அற்புதமானதொரு கலை என்பதில் நாம் ஒவ்வொரு இந்தியரும் பெருமைப்பட வேண்டிய விசயம். பதஞ்சலி முனிவர் யோகாசனத்தின் எட்டு அங்கங்களை தெளிவாக்கியிருக்கிறார். அவைகளாவன: யாமா என்கிற சமூகப் பண்பாட்டுக் கூறுகள், நியமம் என்கிற தனிப்பட்ட நன்னெறி, ஆசனம் என்கிற பயிற்சி முறைகள், பிரணாயாமம் என்கிற மூச்சுப்பயிற்சி, பிரத்யாகாரம் என்கிற புலன்களை உள்முகமாக மாற்றும் முறை, தர்ணா என்கிற ஒருமுனைப்படுத்துதல், தியானம் மற்றும் சமாதி நிலை ஆகியவை. இன்றைய காலகட்டத்திற்கு ஏற்றவாறு அதனை ஒவ்வொரு மையங்களும் தங்களுக்குரிய பாணியில் ஆய்வு செய்து பயிற்சியளித்து வருகின்றனர்.

    “மனமெனும் தோணி பற்றி மதியெனும் கோலையூன்றி
    சினமெனும் சரக்கை ஏற்றி செறிகடல் ஓடும்போது
    மனனெனும் பாறை தாக்கி மரியும்போதறியவொண்ணா
    ஒற்றியூர் உடைய கோவே “

    என்பது அப்பர் சுவாமிகளின் அருமையான தேவாரப் பாடல். அதாவது, “மனம் எனும் தோணியில் அறிவு எனப்படும் கோலை நாட்டி, சினம் எனும் சரக்கை ஏற்றி உறவுகளுடன் பயணம் செல்லும்போது, மதம் எனப்படும் தீவினை தாக்கி நிலைகுலைந்து இறுதிக் காலத்திற்கு செல்லுவது உறுதி. இதனையெல்லாம் அறியாத நான் என் உணர்விலே, உன்னை எப்போதும் உறுதியுடன் நினைத்து வாழ அருள் செய்வாய் திருவொற்றியூர் பெருமானே’ என்கிறார்.

    ஒவ்வொருவரும் தத்தம் வாழ்க்கைக் கடலை கடப்பதற்கு எத்தனையோ முயற்சிகள் செய்தும், பலப்பல தடைக்கற்களைத் தாண்டியும் வரும்போது அதற்கான பின் விளைவுகளாக பல்வேறு விதமான நோய்களுக்கு ஆட்படுகிறோம். இதிலிருந்து மீள்வதற்கு பலவிதமான மருத்துவமும் மேற்கொள்கிறோம். அதனால் ஏற்படும் பின் விளைவுகளையும், தலைவலி போய் திருகுவலி வந்ததுபோல் அனுபவிக்கிறோம். இவையனைத்திற்கும் தீர்வு என்பது நம் முன்னோர்கள் வழிவழியாகக் கடைபிடித்து வந்த யோகாசனப் பயிற்சி முறைகள் என்றால் அது மிகையல்ல. பிரச்சனைகள் இல்லாத வாழ்க்கை அமைவது எவருக்குமே சாத்தியம் இல்லை என்றாலும், அந்தப் பிரச்சனைகளை அணுகும் முறையிலும், அதனைக் கையாளும் முறையிலும் ஒரு தனிப்பட்ட சக்தியை வழங்குவது யோகாசனப் பயிற்சிகள். அன்றையப் பணிகளை உற்சாகமாகத் தொடங்கவும், மனதை இலகுவாக வைத்துக்கொள்ளவும் இப்பயிற்சிகள் துணை புரிகின்றன.

    ஆரம்பத்தில் கிட்டத்தட்ட 18 ஆண்டுகளுக்கு முன்பு, ‘வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்’ என்ற தாரக மந்திரத்தை உயிர் மூச்சாகக் கொண்டு செயல்படும், திருமிகு யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி அவர்களின் மனவளக்கலை மன்றத்தின் யோகாசனப் பயிற்சியை மேற்கொண்டேன். எளிய உடற்பயிற்சிகளுடன் மன வளமும் ஏற்பட வழியமைந்தது அங்குதான். அகத்தாய்வுப் பயிற்சிகள் மூலம் அன்றாடப் பணிகளை அல்லல் இன்றி நிறைவேற்றும் வல்லமையும் பெற முடிந்தது.

    தற்சோதனை

    1547023501Copy-of-Scan10003

    நிறைவு செய்யமுடியாத நூறு ஆசைக் குப்பைகளை மனதில் சேர்த்து வைத்துக்கொண்டு திணறுவதில் யாருக்கு என்ன லாபம்; மன அமைதி முதலில் போயிற்று, மனதின் பலம் போயிற்று; செயல் திறன் போயிற்று, உடல் நலம் போயிற்று, நற்குணங்கள் போயின; எரிச்சலும் கோபமும் அடிக்கடி வந்தன. முகத்தில் தெளிவுபோய் சோகம் படிந்தது. நமது “மனவளக்கலை” பயிற்சியில் மனம் தன் திறமையையும், உறுதியையும், வல்லமையையும் பெருக்கிக் கொள்ளும் பயிற்சி தான் “அகத்தவ பயிற்சி” முறையாகும். தன்னைப்பற்றி, தன் தேவையைப் பற்றி, தன் செயலின் விளைவைப் பற்றி, தன் தகுதியைப் பற்றி, தன் மதிப்பைப் பற்றி ஆராய்வது தான் “தற்சோதனை” என்கிற தன்னை ஆராயும் பயிற்சியாகும். இந்தத் தற்சோதனை வெற்றி அடைந்த பின் பார்த்தால் மனம் கலகலப்பாக இருக்கிறது. மனதில் தைரியம் வந்துவிடுகிறது. எதையும் சாதித்துவிடலாம் என்ற உற்சாகம் மிகுந்து விடுகிறது. மனத்தின் குறுகல் ஒழிந்து விசாலம் வந்து விட்டதால் பொறுமை, அன்பு என்ற பல நற்குணங்கள் மிகுந்து இருக்கின்றன. கடமை உணர்ந்து பொறுப்புணர்ந்து எண்ணத்தில் தூய்மையோடு காரியங்களை ஆற்றுவதால் எடுத்த காரியத்தில் வெற்றியும் கிடைக்கிறது.
    – தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

    கீழகண்ட ஒன்பது தவங்களும் இங்கு பயிற்சியளிக்கப்பட்டன.

    மனவளக்கலை : ஒன்பது வகை தவங்கள்

    1. ஆக்கினை :
    மூலாதாரத்திலிருந்து உயிரை எழுப்பி புருவமத்திக்குக் கொண்டு வந்து உயிரை உணர்வது . பிட்யூட்டரி சுரப்பி நல்ல முறையில் வேலை செய்யும் .

    2. சாந்தி:
    மேலே புருவமத்திக்கு சென்ற உயிர் மையத்தைத் திரும்பவும் மூலாதாரத்திற்கு கொண்டு வருவது….

    3. துரியம்:
    உயிர் மையத்தைத் தலை உச்சிக்குக் கொண்டு வருவது. பீனியல் சுரப்பி நல்ல முறையில் செயல் புரியும் .

    4.துரியாதீதம் :
    உடலிலிருந்து வெளியே வந்து பிரபஞ்சம் வரை விரிந்து மேலும் பிரபஞ்சத்திற்கு அப்பாலுள்ள சுத்தவெளி என்ற இறைநிலையோடு கலக்க விடுவது.

    5. பஞ்சேந்திரியம்:
    மெய் ,வாய்,மூக்கு,கண், காது என்ற ஐம்புலன்களின் மூலம்தான் சீவகாந்தம் வெளியேறி உலகில் இன்ப துன்பங்களை அனுபோகிக்கின்றோம். ஐம்புலன்களுக்கும் ஆற்றலை கூட்டி அளவுமுறை காக்க உதவுகிறது.

    6.பஞ்சபூத நவகிரகம் :
    நாம் பூமி மீது வாழ்கின்றோம் . நிலம் , நீர்,நெருப்பு, காற்று ,விண் என்ற ஐந்து பெளதிகப் பிரிவுகளான பொருள்களிலிருந்து வரும் காந்த அலைகளுடன் இனிமை காப்போம். சூரியன் ,புதன், வெள்ளி, சந்திரன், வியாழன் , சனி, இராகு, கேது ஆகிய ஒன்பது கோள்களிலிருந்து வரும் காந்த அலைகளுடன் இணக்கம் கொள்கிறோம்.

    7.ஒன்பது மையம் :
    மூலாதாரம், சுவாதிஷ்டானம் மணிப்பூரகம், அநாகதம் , விசுத்தி, ஆக்கினை, துரியம், என்று உடலுக்குள் உள்ள ஏழு இயக்க மையங்களிலும் பிரபஞ்சம், சுத்தவெளி போன்றவற்றில் மனம் வைத்து தவம் செய்வது .

    8. நித்தியானந்தம்:
    உடல் முழுவதும் சீவகாந்த ஆற்றலை நன்கு பரவ செய்வது.உடலும் , மனமும் நாள் முழுவதும் புத்துணர்வோடு இருக்க உதவும்.

    9.இறைநிலை தவம்:
    இறைநிலையிலிருந்து மனிதன் வந்த வரலாற்றை உணர்ந்து மனதை இறைநிலையோடு கலக்க விடுவது.

    இந்த ஒன்பது வகை தவங்கள் மனவளக்கலை மூலமாக கற்றுக்கொடுக்கப் படுகின்றன. இவற்றை பயின்று வாழ்வில் எல்லா துறைகளிலும் வெற்றியும், மகிழ்ச்சியும் , மனநிறைவும் பெறுவதற்கு குருவருளும், திருவருளும் துணை புரியட்டும்.

    வாழ்க வையகம் வாழ்க வளமுடன் …

    மீண்டும் பத்தாண்டுகளுக்குப் பிறகு, திருமிகு. சிரீ சிரீ ரவிசங்கர் அவர்களின் வாழும் கலை யோகாசனப் பயிற்சி மேற்கொண்டேன். இதில் ‘சுதர்சன் கிரியா’ என்ற தன் நிலை உணரும் தவம், அற்புதமான பயிற்சி. ‘ஒரு பரவச நிலை’ என்பதன் பொருள் விளங்கும் தவம் என்றால் அது மிகையாகாது. மனதுக்கும்,உடலுக்கும் இணைப்பாக மூச்சு செயல்படுவதை ஐரோப்பிய விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். நமது ஒவ்வொரு உணர்ச்சிக்கும் ஏற்றபடி தனிப்பட்ட விதத்தில் நமது மூச்சின் தன்மை மாறுவதையும் அவர்கள் கண்டறிந்தனர்.

    srisrionsky1

    சுதர்சன் கிரியா, உடல், மனம், புத்தி, மற்றும் உணர்வுகளுக்கிடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்தும் தன்மையுடைய, இயற்கையாய் அமைந்த, மூச்சின் தாள ஒழுங்கைக் கொண்டது. இந்த தனிச்சிறப்புவாய்ந்த மூச்சுப்பயிற்சி நம்மிடமுள்ள மன இறுக்கம்,விரக்தி, மற்றும் எதிர்மறையான உணர்வுகளான கோபம்,சோர்வு,வருத்தம் ஆகியவற்றை வெளியேற்றி நம்மை அமைதியுடன் கூடிய உற்சாகத்துடனும், கவனத்துடன் கூடிய ஓய்வுடனும் வைக்கிறது.

    சுதர்சன் கிரியாவின் மூலமாக, நாம் மூச்சை திறமையாகப் பயன்படுத்தி, நமது உணர்ச்சிகளைக் கையாளமுடியும், மன இறுக்கத்துக்குக் காரணமான எதிர்மறை உணர்வுகளான கோபம், பதட்டம், சோர்வு, பயம் ஆகியவற்றை வெளியேற்றி மனதை அமைதியாக, ஆனந்தமாக, துடிப்புடன் வைத்துக்கொள்ள முடியும்.

    சுதர்சன் கிரியா, நமது முழு உடல், மன அமைப்பில் உள்ள மாசுகளையும் சேர்ந்துள்ள இறுக்கத்தையும் வெளியேற்றி அதை ஒழுங்குபடுத்துகிறது. நமது ஆரோக்கியத்துக்கு மிகவும் அவசியமான புரோலாக்டின் ஹார்மோனின் அளவு முதல் முதலாக சுதர்ஸன் கிரியா பயிலும் போதே அதிகரிப்பதை ஆராய்ச்சிகள் உணர்த்துகின்றன. இதை அனுபவப்பூர்வமாக உணர்ந்தேன்.

    ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு கோவை அருகில் உள்ள ஈஷா யோகா மையம் சென்றிருந்தோம். பிரம்மாண்டமான சிவலிங்கத் திருமேனியும், தியானம் செய்வதற்காக பிரத்யேகமாக அமைக்கப்பட்ட குகைகளும், விஞ்ஞானப்பூர்வமாக ஏதோ சில மாற்றங்களை எனக்குள் ஏற்படுத்துவதை உணர முடிந்தது. தியானத்திற்கு ஏற்ற வகையில் நுட்பமான முறையில் இங்கு கட்டிட அமைப்புகள் உள்ளன.

    ஈஷா யோக மையம்

    dhy1-20061108_SHA_0326

    தென்னிந்தியாவின் எழில்மிகு இடங்களுள் ஒன்றாகிய வெள்ளியங்கிரி மலைச்சாரலின் அடிவாரத்தில் ஈஷா யோக மையம் அமைந்துள்ளது. அடர்ந்த வனங்களும், மின்மினிப் பூச்சிகளும், வற்றாத நீர்வீழ்ச்சிகளும் வனவிலங்குகளின் உறைவிடங்களும் பின்னணியாகத் திகழும் இது, உள்நிலை மாற்றத்திற்கான சக்தி வாய்ந்த இடமாக உள்ளது. 150 ஏக்கர் நிலப்பரப்பிற்கும் அதிகமாக விரிந்துள்ள இந்த மையம், தியானலிங்கத் திருக்கோவில், ஸ்பந்தா ஹால், ஈஷா புத்துணர்வு மையம், ஈஷா இல்லப் பள்ளி மற்றும் ஈஷா குடியிருப்புகளுடன், ஒருவர் தம் உள்நிலைப் பயணத்தை மேற்கொள்வதற்கு உறுதுணையான ஒரு சூழலை வழங்குகிறது.

    2065848021sadguruinisha-centre

    பாராட்டப்பட வேண்டிய மற்றொரு முக்கிய அம்சம் இங்கு உள்ள குழந்தைகளுக்கான தங்கும் பள்ளி.

    ஈஷா ஹோம் ஸ்கூல்

    ஒரு குழந்தையின் முழுமையான வளர்ச்சிக்குத் தேவையான தரமான கல்வியை, வீட்டுச் சூழலில் அளிப்பதைக் குறிக்கோளாகக் கொண்டுள்ளது. உலகின் பல பகுதியைச் சார்ந்தவர்கள் இங்கு பணிபுரிகிறார்கள். குழந்தைகளுக்கு இயல்பாகவே உள்ள அறியும் மற்றும் கற்கும் ஆர்வம் தூண்டப்படும் வகையில் இதன் கற்கும் முறை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் புத்தக வழிக் கல்வியை விட வாழ்க்கைத் திறன்கள் மற்றும் வாழ்வின் மதிப்பீடுகளை வளர்த்தெடுக்கும் விதமாக இதன் கல்விமுறை இருக்கிறது. இந்த முறையினால், கல்வி என்பது, இங்கு, ஒன்றை ஆராய்ந்து அறிவதாகவும் ஆனந்தத்தை தருவதாகவும் உள்ளது.

    சமீபத்தில் அமெரிக்க நாட்டிற்குச் சென்றிருந்த போது, கிளப் மெட்ரோ என்ற உடற்பயிற்சி மையத்தில் 30 நாட்கள் யோகா பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டேன். நம்முடைய ‘ஓம்’ என்ற பிரணவ மந்திரம்தான் அங்கு பயிற்சியின் ஆரம்பத்தில் தியானம் செய்யும்போது உச்சரிக்கப்படும் ஆரம்ப மந்திரம். உண்மையில் நம் இந்தியத் திருநாட்டின் பாரம்பரிய, மிகப் பழமையான யோகக்கலையை மேலை நாட்டவர் பய பக்தியுடன் பயிற்சி செய்வதைப் பார்ப்பதற்கு மிகவும் பெருமையாக இருந்தது. வாரத்தில் இரண்டு நாட்களுக்கு ஜூம்பா நடனப் பயிற்சியும் கொடுக்கிறார்கள்.

    தவப்பயிற்சி

    நம் உடலிலுள்ள ஐம்பொறிகளையும் உள்ளத்தோடு ஒன்றும்படி செய்து, பின்னர் அந்த உள்ளமும் உயிரோடு ஒருமையடையப் பயிற்சி செய்வதே தவம். இப்பயிற்சியை முழுமையாக உணர்வுப்பூர்வமாக செய்யும்போது, உயிர் ஒளிமயமான இறையோடு கலந்து அமைதி பெற முடியும். இதையே தவப்பயன் என்பர் பெரியோர். இதன் பயனாக அன்றாட வாழ்வில் ஏற்படும் தொல்லைகள், துன்ப துயரங்களையும் பொருட்படுத்தாத மனத்திட்பம் பெற முடிகிறது. அதோடு பிற உயிர்களுக்கு எந்தவிதமான கேடும் நினையாமலிருக்கிற மனப்பண்பாட்டையும் பெற முடிகிறது. இதனையே வள்ளுவப் பெருந்தகை, தனக்கு உற்ற துன்பத்தை பொறுத்தலும் மற்ற உயிர்க்குத் துன்பம் செய்யாதிருத்தலும் ஆகிய அவ்வளவே தவத்திற்கு வடிவமாகும் என்கிறார்.

    உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை
    அற்றே தவத்திற் குரு.

    சுய விடுதலை

    உலகின் பந்த பாசம், ஆசை, சுகம், துக்கம், சினம், பொறாமை, வஞ்சம், புகழ், பணம், அற்ப சுகம் என நாம் அடிமைப்பட்டிருக்கும் இவை அனைத்திலிருந்தும் விடுதலை பெற்று நம்மை அமைதியாக வாழ வழியமைத்துக்கொடுக்கும் இந்த யோகக்கலை அமையப் பெற்றவர்கள் புண்ணியம் செய்தவர்கள் எனக்கொள்ளலாம். விடுதலை என்பது நமக்கு யாரும் தரக்கூடிய ஒன்றல்ல. அது நம் உள்ளம் என்னும் மையத்துக்குள் ஏற்படுகிற மறுமலர்ச்சி. உளவியல் ரீதியிலான இந்த அடிமைத் தளையை நம் முயற்சியால், நாம் மட்டுமே உடைத்தெறிய முடியும். அதற்கு ஒரு முக்கியமான கருவியாகச் செயல்படுவதுதான் யோகப்பயிற்சி! காற்றைப் போன்று கனமற்றும், வெளிச்சத்தைப்போல் வெளிப்படையாகவும் , தண்ணீரைப் போன்ற தடையில்லாத ஓட்டமும் அளிக்கவல்லது யோகப்பயிற்சி! அதுவே நம் சுய விடுதலையும் கூட. ஆக, யோகாசனப் பயிற்சியை அன்றாடம் முறையாக கடைபிடிப்பதன் மூலம் புற அழகோடு சேர்த்து அக அழகையும் பெற முடியும் என்பதே நிதர்சனம்! இத்தகைய அரிய கலையை நம் குழந்தைகளுக்கு பள்ளியில் பயிற்றுவிக்க வேண்டியதும் அவசியம். சில தனியார் பள்ளிகளில் யோகாசனப் பயிற்சி வகுப்பு இருந்தாலும், அரசுப் பள்ளிகளில் இல்லை. அரசாங்கம் உடனடியாக இதற்கான ஏற்பாட்டை செய்வது நலம். இதனால் நம் பாரதப் பிரதமர் மோடி அவர்களின் ஆக்கப்பூர்வமான செயல்பாடு  நிலைத்து நிற்கவும் ஏதுவாகும்.

    international yoga day 5656

    பி.கு. நான் யோகாசனப் பயிற்சியை தவறாமல் அத்தனை ஒழுங்காகக் கடைபிடிக்கிறேனா என்று கேட்டால், இல்லை என்றே வருத்தத்துடன் சொல்ல வேண்டியிருக்கிறது. இனி ஒரு விதி செய்வோம். அதை எந்த நாளும் காப்போம் என்று உறுதி கொள்வோம்! தவறாமல் யோகப் பயிற்சியை மேற்கொள்வோம் நண்பர்களே!

    Share
  • படக் கவிதைப் போட்டி – 4

    பவள சங்கரி

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

    16483711086_5e9d5432f1_z

     

     

    நித்தி ஆனந்த் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பு ஆசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (21.03.2015) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை முனைவர் அண்ணாகண்ணன் தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பல முறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். இது, கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்கு பெற அழைக்கிறோம்.

     

     

    Share
  • ஜெயந்தி சங்கரின் ‘திரிந்தலையும் திணைகள்’ நாவலுக்குக் கரிகாலன் விருது

    ’கரிகாலன் விருது’ பெற்றுள்ள சிங்கை எழுத்தாளர் திருமதி ஜெயந்தி சங்கர் அவர்களுக்கு வல்லமையின் மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    jeyanthi

    தஞ்சாவூர்த் தமிழ்ப் பல்கலைக் கழத்தில் அமைத்துள்ள தமிழ்வேள் கோ. சாரங்கபாணி இருக்கையின் வழியாக சிங்கப்பூர், மலேசியத் தமிழ் எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் சிங்கப்பூரின் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை ”கரிகாலன் விருது” இவ்வாண்டு சிங்கை எழுத்தாளர் திருமதி ஜெயந்தி சங்கருக்குக் கிடைத்துள்ளது.

    2012ஆம் ஆணடு முதல் பதிப்பாக வெளியான நூல்கள் பரிசீலனைக்கு எடுத்துகொள்ளப்பட்டன. சிங்கப்பூரிலிருந்து மொத்தம் 15 நூல்கள் வந்ததாகவும் அவற்றில் திருமதி ஜெயந்தி சங்கர் எழுதிய “திரிந்தலையும் திணைகள்” எனும் நாவல் விருதுக்குரியதாகத் தெரிவு செய்யப்பட்டதாகவும் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் அயலகத் தமிழ்த் துறைத் தலைவர் முனைவர் உதயசூரியன் தெரிவித்தார்.

    அதேபோல் மலேசியாவில் 2012ஆம் ஆண்டுக்கான விருது திருவாட்டி சுந்தராம்பாள் எழுதிய “பொன்கூண்டு” சிறுகதைத் தொகுப்புக்கு வழங்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

    தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள் அடங்கிய குழு விருதுக்குரிய நூல்களைத் தெரிவு செய்தது. அவர்களின் பரிந்துரை அடங்கிய அறிக்கைகள் இணைக்கப்பட்டுள்ளன.

    விருதுகளை வழங்கும் விழா டிசம்பர் மாதம் 14ஆம் தேதி சனிக்கிழமை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் நடைபெறவிருக்கிறது. அதனை ஒட்டி கருத்தரங்கு ஒன்றுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் சிங்கப்பூரில் தமிழ் வளர்ச்சி பற்றிய கட்டுரைகளை முனைவர் சீதாலட்சுமி, முனைவர் சு. கௌசல்யா, திருவாட்டி வீர. விஜயபாரதி ஆகியோர் படைப்பார்கள். கருத்தரங்கிலும் விருது வழங்கு விழாவிலும் கலந்துகொள்ள விரும்புவோர் கலந்து கொள்ளலாம்.

    நா. ஆண்டியப்பன்
    தலைவர்
    சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம்

    தேர்வுக்குழு அறிக்கை

    மக்களை உயர்திணை என்று சுட்டியும் இலக்கிய வாழ்வியலை அக, புறத் திணைகளாகப் பகுத்தும் திணை மரபு கண்ட தமிழினம் அரசியல், சமூக, பொருளாதார நெருக்கடிகளால் உயர்திணை, அஃறிணை கடந்து உணர்ச்சிகளோடு போராடும் எந்திர மயமாகி முதல், கரு, உரிப்பொருள்களும் விரவிக் கலந்து மயங்குமாறு புலம்பெயர்ந்து அகத்தும், புறத்தும் அலைவுறுதலை இரு தமிழ்ப்பெண்களின் ஊடாக ஜெயந்தி சங்கர் தம் புதினத்தில் நுட்பமாகச் சித்திரித்துள்ளார் இப்புதினத்திற்குத் “திரிந்தலையும் திணைகள்” என்று பெயரிட்டிருப்பது ஒன்றே ஆசிரியரின் வாழ்வியல் நோக்கத்திற்கு மொழித்திற நுட்பத்திற்கும் போதிய சான்றாகும். 21-ஆம் நூற்றாண்டின் தலைவாயிலில் தோன்றிய இப்புதினம் ஒரு கால கட்டத் தமிழர் வாழ்வின் உயிர்ப்புள்ள பதிவாக காலத்தை விஞ்சி இலக்கிய வரலாற்றில் நிலை பெறும். எனவே இவர் “கரிகாலன் விருதுக்கு” மிகவும் ஏற்றவர் எனத் தேர்வுக்குழு பரிந்துரைக்கிறது.

    Share