Tag: பிள்ளைத்தமிழ்

  • ஈழம் தந்த பிள்ளைத்தமிழ் நூல்கள்-9

    ஈழம் தந்த பிள்ளைத்தமிழ் நூல்கள்-9

    மீனாட்சி பாலகணேஷ்

    1. பழனி மலையண்ணல் பிள்ளைத்தமிழ்

              இப்பிள்ளைத்தமிழினின்றும் முழுமையாகப் பதிப்பிடப் பெறாத ஒரேயொரு பாடலே கிடைத்துள்ளது. அதுவும் என்ன பருவம் என்றும் உய்த்துணர வழியில்லை. விரைவில் முழு பிள்ளைத்தமிழும் கிடைக்க முருகனையே வேண்டுவோம்.

    1. பள்ளம்புலம் குமரகோட்டம் திருமுருகன் பிள்ளைத்தமிழ்

              இலங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சரவணையூரில் குடிகொண்டுள்ள குமரப்பெருமான் மீது பாடப்பட்ட பிள்ளைத்தமிழாகும் இது. தீவகம் வே. இராசலிங்கம் என்பவர் இயற்றியது. 2013aஇல் தான் பாரதி பதிப்பகம், கனடா-வினால் வெளியிடப்பட்டுள்ளது.

              வழக்கம்போன்று பருவத்திற்குப் பத்துப் பாடல்கள் கொண்டது இப்பிள்ளைத்தமிழ். காப்புப்பருவ முதற்பாடல் திருமால் மீதன்றி விநாயகர் மீது அமைந்துள்ளது.

              சிற்றில் பருவத்துப் பாடலொன்று பிற புலவர்கள் முருகனைப் போற்றிப் பாடிய நயத்தை அழகுறக் கவிதையில் பொருத்திக் காட்டுகின்ற அழகைக் காண்போமா?

              முருகனின் பெருமைகளைப் புகழ்ந்து அருணகிரியார் புகழ்ப்பாடல்களாகத் திருப்புகழ் பாடினார். இதனால் முருகனும் பெருமை (கனம்) பெற்றான். பொய்மை பேசாத வள்ளற்பெருமான் பாடிடும் பேசும் தெய்வமாக முருகன் நின்றான். குமர குருபரரும்  புள்ளிருக்குவேளூர் முருகன்மீது பிள்ளைத்தமிழ், கந்தர் கலிவெண்பா ஆகிய நூல்களைப் பாடினார். இதனைக் ‘கொஞ்சும் முருகுப்பா’ என்றார் நம் புலவர். தமிழுக்கு ஆசான் முருகன் என்கிறார். இது தொடர்பான கதையைப் பற்றிய ஓர் செய்தியையும் தந்துள்ளார்.

              இதுதான் கதை: இறையனார் களவியலுக்குப் பாண்டிய மன்னர் ஆணைப்படி, புலவர்கள் பலர் உரை கண்டனர்.  உப்பூரி குடிகிழார் என்பவரின் மகனான உருத்திர சன்மன் எனும் ஐந்து வயதேயான ஊமைப்பிள்ளையிடம் ஒவ்வொருவராகத் தம் உரையைப் படித்துக் காண்பிக்க, அவன் சலனமின்றி இருந்து, நக்கீரரின் உரையைக் கேட்டபோது மட்டும் மெய்சிலிர்த்து வியந்தானாம். ஆக நக்கீரர் உரையே சிறந்தது எனக் கொள்ளப்பட்டது. (இவ்வுருத்திரசன்மன் முருகப்பிரானின் திருவடிவமே! இவன் ஊமையாகப் பிறந்தது சிவபிரானுடைய சாபத்தால் விளைந்தது; அது வேறொரு கதை).

              இத்தகைய பெருமை வாய்ந்த முருகன் இட்டும் தொட்டும், மணலினாற் சிற்றில் அமைத்தும் விளையாடும் சிறுமியர்கள் மனத்தில் உறைபவன். சிறுவர்கள் மனம் பெருமையில் ஓங்கி விளங்க, நீ சிற்றிலைச் சிதைக்காதே அப்பா என முருகவேளை வேண்டுவதாக இப்பாடல் அமைந்தது.

              புகழ்ப்பா தந்த அருணகிரிப்

                     பொய்கைத் தமிழிற் கனம்பெற்றாய்!

             பொய்யா வள்ளற் பெருமானார்ப்

                     பேசும் தெய்வம் எனநின்றாய்!

             குகப்பா குமரக் குருபரரும்

                     கொஞ்சும் முருகுப் பாதந்தார்!

             குழந்தை நீயே என்பதுவும்

                     கொஞ்சும் தமிழுக் காசானாய்

             அகப்பா கண்ட உன்றனுயர்

                     அழகே குழந்தை வடிவன்றோ! 

             இட்டும் தொட்டும் அழைந்தாடி

                     இல்லம் அமைத்து விளையாடும்

             மகப்பா மடவார் மனத்துறையும்

                     மயிலோய் சிற்றில் சிதையேலே!

             வண்ணச் சிறுவர் மனமோங்க

                     வரையும் சிற்றில் சிதையேலே!

                                            — என்பது பாடல்.

                                  ~~~~~~~~~~~~~~~~~~~~~~~

    1. மண்டூர்ப் பிள்ளைத்தமிழ்

              சைவமாமணி விஸ்வலிங்கம் என்பவரால் இயற்றப்பெற்ற இந்நூல் 1988ஆம் வருடம் பதிப்பிடப்பட்டுள்ளது.

              கிழக்கிலங்கையில் உள்ள மட்டக்களப்புச் சதுப்பேரியின் மேற்கரையை அடுத்துத் தென்திசையில் அமைந்து விளங்கும் பழந்தமிழ் ஊரே மண்டூர் ஆகும். சிவமணம் கமழும் இவ்வூர், மருதநிலத்தின் பாற்பட்டதாம். ஒரு தில்லை மரத்தினில் பாய்ந்த வேல் வேடவர்களால் தொன்றுதொட்டு வழிபடப்பட்டு, பிற்காலத்தில் இதனை மூலத்தானமாகக் கொண்டே ஆலயம் எழுப்பப்பட்டதனால் இவ்வூர் தில்லை மண்டூரென அழைக்கப்படுகிறது.

              காப்புப் பருவத்து முதற்பாடல் பிள்ளைத்தமிழ் இலக்கணத்திற்கேற்ப, திருமாலை வேண்டிக் குழந்தையைக் காக்க வேண்டுகின்றது.

              செங்கீரைப் பருவத்து முதற்பாடல் புதிய கருத்துகளையும் புதுக் காட்சிகளையும் கண்முன் வைக்கிறது. சிறப்பான கருத்துகளுடன் அமைந்த இப்பாடலைக் காண்போமா?

              உனது மந்தரமலை போன்ற புயத்தின்கண் புனையப்பட்டு மார்பில் தவழும் மாலையில் வண்டுகள் மொய்த்து ஆடுகின்றன; மல்லிகை, முல்லை இவற்றின் நறுமணம் கமழவும் மந்தார மலர்கள் அணியப்பட்டும் உன் அழகான முகத்தில் பட்டும் சுருள்சுருளான தலைமயிர் ஆடுகின்றது. தனது கடைசி நாட்கள் வந்துவிட்டதென சூரபத்மன் சிந்தை தளர்ந்து பயந்து தினமும் வருத்தம் கொள்ளவும், உனது நிலவினை ஒத்த முக மண்டலமனைத்திலும் சிறுமியர் முத்தமிட, செந்தமிழானது ஓங்கி வளரும் வண்ணம் வரம் தந்திடும் செல்வக்குமரா, நீ செங்கீரையாடிடுக! சிவந்த நெற்கதிர்களால் வளம்பெறும் மண்டூரின் தெய்வமே, செங்கீரை ஆடியருளுக.

              மந்தர வரைபுரை யுந்திரு மார்பிடை

                              வண்டார் நின்றாட

                     மல்லிகை முல்லை மணங்கம ழுஞ்செழு

                              மந்தாரஞ் சாரத்

             சுந்தர நிறைவத னம்படு குஞ்சிசு

                              ருண்டுசு ருண்டாடத்

                     தொல்லைவ ரந்தொலை யுங்கடை நாள்வந்

                              துற்றதே னச்சூ ரன்

             சிந்தைத ளர்ந்துப யந்துறு மின்னல்தே

                              ரிந்துநி தம்வா டத்

                     திங்களை நிகர்முக மண்டில மெங்குஞ்

                              சிறுவியர் முத்தா ரச்

             செந்தமி ழோங்கவ ரந்தரு செல்வா

                              செங்கோ செங்கீ ரை

                     செந்நெல்வ ளம்பெறு மண்டூ ரையா

                              செங்கோ செங்கீ ரை.

              இதுபோன்ற இனிய பல பாடல்களைக் கொண்டது இப்பிள்ளைத்தமிழ்.

                                  ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

    1. மாவைப் பிள்ளைத்தமிழ்

              இந்நூல் பண்டிதர் மு. கந்தையா அவர்களால் இயற்றப்பட்டது. 1962இல் இயற்றப்பட்ட இந்நூல், 1967ஆம் ஆண்டு முதன்முதலாகப் பதிப்பிக்கப்பட்டது.

              மாவை முருகன் கோவிலானது ஈழத்தின் சரித்திரத்துடன் தொடர்புடையது. ‘வையாபாடல்’ எனும் ஈழ வரலாற்றைக் கூறும் நூலினின்றும் பெயர்க்காரணத்தைச் சுட்டி, இக்கோவிலுடன் தொடர்புடைய ஒரு கதையைக் காணலாம்.

             ‘கீரிமா மலையிலாடினள் தீர்த்தம், அம்முகமகன்றது, அன்னதால் மாவிட்டபுரம்’ எனும் வையாபாடல் ஆகிய நூலில் காணப்படும் பாடலின்கண் இக்கதை தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.

              மாருதப்புரவீகவல்லி என்பவள், சோழ இளவரசி ஆவாள். இவள் பெயரில் குமாரத்தி பள்ளம் எனும் பெயரில் ஒரு இடம் இன்னும் இந்த மாவைக் கோவிலருகே உள்ளது.

              மாருதப்புரவல்லி எனும் பெண் திசை உக்கிரசோழன் மகள். அவளுடைய தாய் ஒரு கின்னரப்பெண் அளித்த சாபத்தால் குதிரைமுகத்துடன் கூடிய ஒரு மகளைப் பெற்றெடுத்தாள். எண்ணற்ற நீர்நிலைகளில் நீராடி வழிபட்டும் குணமடையாத அப்பெண் இங்கு வந்து பாதாள கங்கைத் தீர்த்தத்திலாடி குதிரைமுகம் மாறப்பெற்றாள். பின் மாவிட்டபுரக் கோவிலைத் தன் தந்தையின் பொருளுதவியால் அமைத்தாள். கதிரைமலையினின்று அரசாண்ட உக்கிரசிங்கசேனன் என்பவனை மணந்து வாழ்ந்தாள். கோவிலுக்கான சுப்பிரமணியர் விக்கிரகமும் சோழநாட்டிலிருந்து ஒரு குருக்களும் கப்பலில் வந்து சேர்ந்தனர். இக்கப்பல் வந்து சேர்ந்த துறை காங்கேயன் துறை எனப்பட்டது.

              பிள்ளைத்தமிழ் பாடிய புலவனார் இப்பதிவை ஒரு பாடலிலும் வைத்துள்ளார். இலங்கைத்தீவின் வடதிசையில் கீரிமலை எனும் தலம் உள்ளது. அங்கு கீரிமலை என வழங்கும் நகுலேசுவரம் எனும் கோவில் உள்ளது. அதனருகேயுள்ள மலைப்பாறைக்குகையினின்றும் ஊற்றாகப் பாதாள கங்கைத் தீர்த்தம் பாய்கின்றது.

              கீரி மாமலை வாரிதி யாடியே

                     கிரீச னாநகு லேசனை நாடியே

             சேரு மன்பொடு சிந்தனை செய்துமேற்

                     றிசைகோ ளுக்கிர சோழரா சன்மகள்

             மாரு தப்பிர வல்லியென் பேரினாள்

                     வாவு வெம்பரி மாமுக மோடிநோய்

             தீர நீங்கின ளித்தலத் தேயெனிற்

                     செப்பி லங்கையி லொப்பிதற் கில்லையே.

              இக்கருத்தைக் கொண்ட ஒரு வாரானைப் பருவப் பாடலைக் காண்போம். குமரகுருபரனாரின் ‘பெருந்தேனிறைக்கு நறைக்கூந்தற் பிடியே’ என்பதற்கிணையான சொற்களுடன் தொடங்கும் இப்பாடல், அருமையான கருத்துகளைப் பேசுகிறது.

              மிகுதியான தேனைச் சொரிகின்ற கொன்றைமலரைச் சூடிய சிவபிரானின் காதுகளுக்கே பிரணவத்துப் பொருளை உரைத்த குழந்தையான பெருமானே வருக! இங்கு சிவபிரானுக்கே என்றது அனைத்திற்கும் உயர்வான இறைவனான அவனுக்கே முருகன் பிரணவத்துப் பொருளை விளக்கினான் என்னும் வியப்புத் தோன்ற அமைந்த பாடற் கருத்தாகும். பெரும் தவம் இயற்றியவர்கள் அடையும் பெரிய விருந்து எனும் தவப்பயன் முருகன் நீ வருக!

              மேற்கண்ட ஈழத்துச் சரித்திரத் தொடர்பு அடுத்த வரியில் அறியக் கிட்டுகிறது. நகுலமுனிவர் என்பவர் கீரிமலையில் தவம் செய்து,  தீர்த்தத்திலாடி  கீரி முகமாய் விகாரப்பட்டிருந்த விரூபமுகம் நல்லமுகமாக மாறிய முனிவர் ஒருவர்; திசையுக்கிர சோழன் எனும்சோழமன்னனின் மகளான மாருதப்புரவீகவல்லி ஒரு சாபத்தால் குதிரைமுகம் பெற்றாள். அவள் குன்மநோயும் உடையவளாயிருந்தாள். அவள் இந்த கீரிமலைத் தீர்த்தத்திலே வழிபட்டுத் தீர்த்தமாடி குதிரைமுகம் நீங்கி மனிதமுகம் பெற்றாள். அவளுடைய பெருநோயும் குணமாயிற்று.

              மலைமடந்தையான பார்வதி அன்னையின் மனைமாண்புக்குச் சான்றாய், ஒரு நன்மகனாய் உதித்து வையகத்தை வாழவைத்தவொரு பெருவாழ்வே வருக! நன்கு வாழத் தெரியாதவர்களும், திருந்தாத குணமுடையவர்களுமான அசுரர்கள் செருக்கினை அழித்து ஒழித்த தேவனே! வருக, வருகவே!

    சிவமே விளைவாக விளங்கும் திறன்படைத்த மாவைப்பதியின் திருவாக இருப்பவனே! வருவாயாக என விளிக்கும் வாரானைப் பருவப்பாடல்.

              பெருந்தே னிறைக்கு நறுங்கொன்றைப்

                              பிரானார் செவிக்கே பிரணவத்துப்

                     பேசாப் பொருள்பே சியகுழவிப்

                              பெருமான் வருக! பெருந்தவத்தோர்

             விருந்தே வருக! நகுலமுனி

                              விரூப முகமும் மாருதப்ர

                     வீக வல்லி மாமுகமும்

                              விலகாப் பெருநோய் விலக்குமலை

             மருந்தே வருக! மலைமடந்தை

                              மனைமாண் பினுக்கு நன்கலமாய்

                     வையம் வாழ வாழ்ந்தபெரு

                              வாழ்வே வருக! வாழ்வறியாத்

             திருந்தா வசுரர் செருக்கொழித்த

                              தேவே வருக! வருகவே!!

                     சிவமே விளைக்குந் திறன்மாவைத்

                              திருவே வருக! வருகவே!!

              என்பது பாடல்.

                                  ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

    1. விசவத்தனை முருகன் பிள்ளைத்தமிழ்

              பண்டிதர் அ. ஆறுமுகம் என்பவரால் இயற்றப்பட்டுள்ள இந்நூல் 1982ஆம் ஆண்டில் விசவத்தனை முருகன் கோவில் கும்பாபிடேகத்தின்போது முதல் பதிப்புக் கண்டுள்ளது.

              விசவத்தனை முருகன் கோயில், இலங்கை பண்ணாகத்தில் அமைந்துள்ளது. பண்ணாக மக்களின் குலதெய்வம் இந்த முருகன். 200- 250 ஆண்டுகள் பழமையான கோவில் இது.

              இப்பிள்ளைத்தமிழ் நூல் சொல்நயம், பொருள்நயம், பக்திச்சுவை, கற்பனைவளம், எளிதில் விளங்கிக் கொள்ளக்கூடிய சொற்சிறப்பு ஆகியனவற்றைத் தன்பாற் கொண்டது. பருவத்திற்கு ஏழு பாடல்களைக் கொண்டமைந்தது. நக்கீரர், ஔவையார், பொய்யாமொழியார் ஆகிய புலவர்களுக்கு முருகன் அருள்பாலித்த பெருமை பாடல்களில் ஆங்காங்கே சிறப்பாகக் கூறப்பட்டுள்ளது.

              அனைத்துப் பாடல்களுமே மிக அருமையாய் விளங்கிடும் இந்த நூலில் சிறுபறைப் பருவத்துப் பாடல்கள் சில மிகுந்த நகைச்சுவை உணர்வோடு பாடப்பட்டுள்ளன; எனினும் உட்கருத்து ஆழமானது. ஓரு பாடலைக் காண்போம்.

              ‘தந்தையானவர் திருக்கயிலாய மலையில் உறைபவர் (மலையாள தேசத்தவன் எனவும் பொருள்கொள்ளலாம்). பித்தன்- பைத்தியக்காரன் அல்லது மிக்க அன்புடையவன் என இரு பொருள்படும். நள்ளிருளில் சடைவிரித்துக்கொண்டு நடனமாடுபவன் (நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனே எனும் வரிகளை நினைவு கூரலாம்). நாற்றம்பிடித்த கபாலத்தை (தான் கொய்த பிரம்ம கபாலத்தை) ஏந்தி, அதில் பிச்சை எடுத்துண்பவன். நரைத்த கிழட்டு எருதின் மீதேறுபவன்.

              ‘தாயானவளோ (உமையம்மை) பெரும் நீலநிற (கறுத்த) மேனியினள்; உனது அண்ணனோ பெருத்த பானைவயிறு உடையவன்; யானைமுகம் கொண்டவன். கும்பமதம், கன்னமதம், கோசமதம் எனும் மூன்று மதங்களையுடையவன். உனது தாய்மாமனான திருமாலோவெனில் மாடு மேய்க்கும் இடையன்; பேய்ச்சியின் முலைப்பாலினை உண்டு அவள் உயிரையும் சேர்த்து உறிஞ்சியவன். உனக்கு வாய்த்த மைத்துனனான பிரம்மனோ (திருமாலின் மகனாகக் கருதப்படுவதனால் அவர் மகளான தெய்வயானையின் சகோதரன்; அதனால் முருகனின் மைத்துனன்) எண்ணெய் விற்பவன் (வெண்மை நிறமான வாணியை, சரசுவதியைக் கொண்டவன்,’ என இவ்வாறு உனது வழி, கோத்திரங்கள் இவற்றையெல்லாம் பலவிதமான கதைகளாகக் கூறி (புகழ்ந்து) உன்னை வணங்கும் அடியார்களின் வினைகள் அனைத்தையும் விலகி ஓடுமாறு துரத்திடும் உயர் சேவகனே! (அடியவர்களுக்காக அனைத்தையும் செய்வதனால் முருகனை ‘சேவகா’ என அன்புமேலிட அழைக்கிறார்) சிறுபறை முழக்கி அருளுவாயாக! விசவத்தனைத் தேவதேவா, சிறுபறை முழக்கியருளுக என வேண்டிடும் பாடல்.

             தந்தையோ மலையாளி பித்தன்நள் ளிருளிலே

                              சடைவிரித் தாடி நாற்றத்

                     தலையோடு கொண்டிரந் துண்ணிநரை யெருதேறி

                              தாயோ பெருத்த நீலி

             முந்தியநின் அண்ணனோ பேழ்வயிறு யானைமுகம்

                              மூன்றுமத வடுவு டையவன்

                     முதியதாய் மாமனோ மாட்டிடையன் பேய்ச்சியின்

                              முலையுண்டு உயிரு முண்டோன்.

             வந்தமைத் துனன்வெள்ளை வாணியன் எனநினது

                              வழிகோத் திரங்க ளெல்லாம்

                     வாயார வண்ணவண் ணக்கதைக ளாற்சொல்லி

                              வந்திக்கும் அன்பர் வினைகள்

             சிந்திட முழங்கித் துரத்துமுயர் சேவகா

                              சிறுபறை முழக்கி யருளே

                     திருமேவு விசவத் தனைத்தேவ தேவனே

                              சிறுபறை முழக்கி யருளே.       

    என்பது பாடல்.

              இதுபோலும் பலப்பல பாடல்கள். படித்து மகிழ வேண்டிய பக்திக் கருவூலங்கள்.

     

     (வளரும்)

    ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

     பார்வை நூல்கள்:

    1. வையா பாடல் – கொழும்புத் தமிழ்ச் சங்க வெளியீடு- 1980

    Share
  • குழவி மருங்கினும் கிழவதாகும்- 11.1  (சிற்றில்பருவம்- ஆண்பால்) 

    குழவி மருங்கினும் கிழவதாகும்- 11.1  (சிற்றில்பருவம்- ஆண்பால்) 

    -மீனாட்சி பாலகணேஷ்

    ஆண்பால் பிள்ளைத்தமிழ் நூல்களில்  எட்டாவது அல்லது ஒன்பதாவது பருவமாகப் பாடப்படுவது சிற்றில் பருவமாகும்.  

    இச்சிற்றில் பருவத்தில் சிறுமியர் மணலால் கட்டி விளையாடும் சிறுவீடுகளைக் காலால் உதைத்து அழிக்கும் செயலைச் செய்யும் சிறுவர்களின் (குழந்தையின்) விளையாட்டு கூறப்படும். எவ்வாறு சப்பாணிப் பருவம் தெய்வக் குழந்தையின் கைகளின் பெருமையைப் போற்றுகின்றதோ, அவ்வறே சிற்றிற் பருவத்தில் பாட்டுடைத் தலைவனாகிய ஆண் மகவின் கால்களின்/ திருவடிகளின் பெருமையும், உயர்வும் சிறப்பும் போற்றப்படுகின்றதனைக் காணலாம். இது ஆண் மகவின் பதினேழாம் திங்களில் பாடப்படும். இரண்டு முதல் மூன்றாண்டு நிறைந்த ஆண் மகவாகவும் கொள்ளலாம். இன்னும் சிறிது வளர்ந்த குழந்தையாகவும் கொள்ளலாம். ஏனெனில் இத்தகைய செயல்களைச் செய்வதற்கு குழந்தை சிறிது வளர்ந்தவனாகவும், ஓடியாடுபவனாகவும் இருத்தல் வேண்டும்.

    இவ்விளையாட்டு பெரும்பாலும் ஆண்பால் பிள்ளைத்தமிழுக்கு உரியது. சிறுபான்மையாகச் சில பெண்பால் பிள்ளைத்தமிழ் நூல்களில் சிறுமியர் சிற்றிலிழைப்பதனை ஒரு பருவமாகக் குறிப்பிட்டுப் புலவர்கள் பாடியுள்ளனர். இதுவும் பிள்ளைத்தமிழின் இலக்கணத்திற்கு உட்பட்டதாகும். இதுபற்றி பிறிதொரு கட்டுரையில் காண்போம். 

    சிற்றில் விளையாட்டு எனப்படும் பொய்தல் விளையாட்டு ஆண்-பெண் இருபாலரும் சிலசமயம் இணைந்தும், சில பொழுதுகளில் சிறுவர்கள் சிறுமியர் இழைத்த சிற்றிலை அழித்தும் விளையாடும் விளையாட்டாகும். இது ‘பொய்தல் விளையாட்டு’ எனப்படும். அதாவது, பொய்யாக, பாவனையாக, சிறிய ஒரு மணல் வீட்டினைக் கட்டி, கணவன் – மனைவி குடும்பம் நடத்துவது போன்று பாவனையாக, பொய்யாக, கற்பனையாக,  சிறுமியர் பாவைகளை வைத்து விளையாடுவது. சிறுசோறும் பாவனையாகவே சமைக்கப்படும். 

    கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் எழுந்த சிலப்பதிகாரத்தில் பொய்தல் விளையாட்டு பற்றிய குறிப்புகளைக் காணலாம். ஆகவே இது காலகாலங்களாகச் சிறுவர், சிறுமியர்களால் விளையாடப்பட்டுவரும் ஒரு விளையாட்டு எனத் தெளிகிறோம்.

    கைதை வேலிக் கழிவாய் வந்து, எம்
    பொய்தல் அழித்துப் போனார், ஒருவர்
    பொய்தல் அழித்துப் போனார், அவர்நம்
    மையல் மனம் விட்டு அகல்வார் அல்லர்1. 

    மேலும் சங்க இலக்கியமான பரிபாடலும், ‘ஆடுவார் பொய்தல் அணிவண்டு இமிர்மணல்2,’ என்று சிறுபெண்கள் இழைத்து விளையாடும் சிற்றில்கள் வைகை ஆற்றுமணலை அழகு செய்வதாகக் கூறும்.

    இந்தச் சிற்றில் விளையாட்டு தொடர்பான நிகழ்வுகளைக் கலைசை செங்கழுநீர் விநாயகர் பிள்ளைத்தமிழ் பாடலொன்றில் விளக்கமாகக் காணலாம். அதில் சிற்றிலிழைத்த சிறுமியர், சிறுசோறாக உண்ணச் சிறுவன் கணேசன் கொண்டுவரும் உண்மையான தின்பண்டங்களுக்காகக் காத்திருக்கின்றனர். பொய்யாக, மணலையும், சிறுமுத்துக்களையும் பெய்து சிறுசோறு சமைத்த சிறுமியர், மற்ற சிறார்கள் தமது மனைகளிலிருந்து கொண்டுவரும் உண்மையான தின்பண்டங்களைச் சுவைத்து மகிழ்வர் என்பது கண்கூடு. சிறுவர்களும் இவர்களுடன் சேர்ந்து விளையாட்டிலும், விருந்திலும் பங்கேற்று மகிழ்வர் என்று இப்பாடலின் பொருள்கொண்டு அறியலாம்.

    ஒரு சிறுமியர் கூட்டம்; மண்ணால் சிறுவீடுகட்டி, சிற்றிலிழைத்து விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்; மூன்று கற்களை அடுக்கி, ஒரு சிறுமி சிவந்த மாதுளை மலர்களைப் பறித்துவந்து அவ்வடுப்பிலிட்டுப் நெருப்புப் பற்றவைத்தும் விட்டாள். வயதில் சற்றே பெரியவளான மற்றொரு சிறுமி அதன்மீது ஒருசிறு மண்சட்டியை ஏற்றி அதில் நிறைய மணலினையும் இட்டு சோறுசமைப்பதாகப் பாவனை செய்கிறாள். “ஆஹா, வெண்பொங்கலா அக்கா?” என மோப்பம் பிடிக்கின்றனர் மற்ற சிறுமிகள். அனைவருக்கும் பசி வயிற்றை உண்மையாகவே கிள்ளுகின்றது. இப்போது இவர்களுக்கு வேண்டியது எல்லாம் சிறுவர்கள் விரும்பும் விதம்விதமான -உண்மையான- தின்பண்டங்கள்தாம்.

    உடனே ஒருசிறுமி, “அதோ பாருங்களடி! நமது நண்பன் கணேசன் தொலைவில் தொந்தியசைய வருகிறான் பாருங்கள்,” என உற்சாகமாகக் கைகளைத் தட்டியவண்ணம் குதூகலிக்கிறாள். எல்லாரும் அத்திசையையே ஆவலாகப் பார்க்கின்றனர்.

    கணேசனேதான்! மெல்ல ஆடியசைந்து வருகின்றான்; இடதுபக்கம் இடுக்கிக்கொண்டிருக்கும் பாத்திரம் நிறையத் தின்பண்டங்கள்; வலது கையில் பாதி தின்றதொரு பணியாரம். அதனையும் அவசரஅவசரமாகத் தின்றுகொண்டேவருகிறான்! நண்பர்களை வந்தடையுமுன் முடிந்தமட்டும் தன்னிடமுள்ள பணியாரங்களைத் தின்றுவிடவேண்டும் என்ற பேராசை. சிறிது மிகுந்தால், ‘போனால் போகட்டும்,’ என அவர்களுக்குக் கொடுத்துவிடலாம் என்பது அவன் எண்ணம்போலும்!

    ஒருவழியாக அவன் பக்கத்தில் வந்து நிற்கிறான். சிறுமிகள் அனைவரும் ஓடோடிச் சென்று ஆவலுடன் அவனைச் சுற்றிவளைத்துக் கொள்கின்றனர். அவர்கள் பார்க்கப் பார்க்க அவன் பணியாரங்களை வாயிலிட்டு மென்று சுவைக்கிறானே தவிரப் பகிர்ந்துகொள்வதாகக் காணோம்! வாய்த்துடுக்கு மிக்கவளான ஒரு சிறுமி அவனிடம், “கணேசா! தொந்தியை ஆட்டிக்கொண்டு, மெல்ல வருகிறாயே! இன்று நமது விளையாட்டிற்கு நீ பணியாரம் கொண்டுவருவதாகக் கூறியதை மறந்துவிட்டாயோ? நீ சாப்பிட்டுவிட்டுப் பாத்திரத்தில் மிகுந்ததையாவது எங்களுக்குத் தருவாய் என்று நாங்கள் ஆசையாகக் காத்துக் கொண்டிருக்கிறோம் என்று தெரியவில்லையா உனக்கு? எங்களுக்குக் கொடுக்காமல் நீயே தின்றுவிடப்போகிறாயா?” என்று கடிந்துகொள்வதுபோலக் கேட்கிறாள்.

    கணேசனுக்கு எப்போதும் சினமே வராது. இன்று என்னவோ உண்டமயக்கம் போலும்! அவர்கள் பாடுபட்டுக் கட்டிவைத்திருக்கும் சிறுமண்வீட்டினைத் தன் காலால் விளையாட்டாக எற்றி உதைக்கிறான்; கூரை பிய்ந்து, ஒருபக்கச்சுவரும் உடைந்துவிழுகின்றது. சிறுமிகளுக்குக் கண்களில் நீர்தளும்புகின்றது.

    “இடையூறுகள் செய்வதில் மன்னன்’ எனும் பெயரை எங்களிடமிருந்து பெற்றுக் கொள்வதில் உனக்கு என்ன ஆசையோ கணேசா! ஏன் எங்கள் சிற்றிலைச் சிதைத்தாய்? நீ எவ்வளவு நல்லவன்? எங்களுக்கெல்லாம் பெரியவன்; எங்களிடம் மிகுந்த அன்பு கொண்டவன் அல்லவா? தயவு செய்து எங்கள் சிற்றிலைச் சிதைக்காதே,” என்று அவன் கரத்தைப்பற்றிக்கொண்டு கெஞ்சுகின்றனர் அச்சிறுமிகள்.

    பெருத்த வயிறு தயங்கமெல்லப் பெயர்ந்து நடந்து குடங்கைமிசைப்
    பெரும்பண் ணியமு மேந்தியேம்பாற் பேணி வருநின் கரவினைக்கண்
    டருத்தி யொடுநீ யுண்டபரி கலசே டத்தை யடியேங்கட்
    களிக்க வருவாயென்றுவகை யரும்பி வழிபார்த் திருந்தேமை
    வருத்த லழகோ விக்கினஞ்செய் மன்னனெனும்பேர் பேதையரேம்
    மாட்டுத் தெரிப்ப தொருபுகழோ மடவாரூடன் மவுணரென்றும்
    திருத்துங் கலைசைச் செங்கழுநீர்ச் சிறுவா சிற்றில் சிதையேலே
    தெள்ளித் தெளிந்தோர்க் கள்ளூறுஞ் செல்வா சிற்றில் சிதையேலே3

    சிவஞான முனிவர் இவ்வருமையான பிள்ளைத்தமிழை இயற்றியுள்ளார். சிறுவர்களின் விளையாட்டை நுணுக்கமாகக் கண்டு பதிவு செய்ததாக அமைந்த பாடலிது. கடவுளுக்குப் படைத்து எஞ்சியதனை (சேடத்தை) தாம் உண்ண விரும்புவதாகச் சிறுமியர் கூறுவது கணேசன் என்னும் சிறுவனை அவர்கள் கடவுளெனக் கண்டு தெளிந்ததாலும், ஆயினும் அவர்களுடன் அவன் விளையாட வந்ததனால் அவனைத் தங்களுக்குச் சமதையாகப் பாவித்து சண்டைபோடுவதனையும் இப்பாடலில் ஒருசேரக்கண்டு களிக்கலாம்!

    இதே தொனியிலமைந்த இன்னொரு பாடல் குறுக்குத்துறை குமரன் பிள்ளைத்தமிழில் அமைந்துள்ளது.

    சிறுமியர் சிலர் ஆற்றங்கரை மணலில் சிற்றில் எனப்படும் சிறுவீடுகளைக் கட்டி விளையாடிக் கொண்டுள்ளனர். குறும்புத்தனம் நிறைந்த சிறுவன் ஒருவன் அந்தச் சிறுவீட்டைக் காலால் எற்றி உதைத்து அழிக்க ஓடோடி வருகிறான். தினமும் நடக்கும் நிகழ்ச்சிதான் இது! இன்றும் சிற்றிலை அழிக்க அவன் ஓடோடி வருவதனைக் கண்டு அச்சிறுமியர் அவனிடம் இனிய மொழிகளைப் பேசி, சிற்றிலை அழிக்காமலிருக்க வேண்டுகின்றனர்.

    “உன்னைப் பெற்றெடுக்க உனது தாய் முற்பிறப்பில் பெரிய அரிய தவம் செய்தவளல்லவோ?” என்கிறாள் ஒரு சிறுமி.

    “அவ்வாறு உன்னை முயன்று பெற்றவள், எல்லாத் தெய்வங்களையும் அழைத்து உன்னைக் காப்பாற்ற வேண்டிக்கொண்டும் உள்ளாள்,” இரண்டாமவள்.

    “நீயும் வளர்ந்து முகத்தினை உயர்த்தி நோக்கித் தவழ்ந்து செங்கீரையாடியவண்ணம் (இவ்வாறு குழந்தை தவழுவது செங்கீரையாடுவது எனப்படும்) பொருளற்ற மழலை மொழிகளைப் பேசினாய்,” முதலாமவள். (‘கீர்’ என்றால் தமிழில் சொல் எனவும் ஒரு பொருள் உண்டு. ஆகவே குழந்தை செங்கீரையாடுவதனை, அது பொருளற்ற குதலைமொழி பேசுவதாகவும் கொள்ளுவர்).

    “இவ்வாறு தவழ்ந்துவரும் உனக்குத் தாலாட்டுப் பாடல்கள் பாடி உறங்கவும் வைத்தாள் உன் அன்னை.

    “பின் உன்னைக் குந்தி உட்காரவைத்துக் கரங்களைச் சேர்த்துச் சப்பாணி கொட்டி விளையாடப் பழக்கினாள்,” என் இன்னொருத்தி!

    “உன்னிடம் தனக்கு ‘முத்தம் தா’வென வேண்டினாள். உன்னைக் கூவி அழைத்து “வருக,” எனக் குறுநடை பழகி வருமாறு வேண்டி, கொஞ்சியும் குலவியும் உன்னை எடுத்து அணைத்துக் கொண்டாள்,” எனப் பட்டியலிடுகிறாள் வேறொரு சிறுமி.

    “பின்பு நீ உணவுண்ண மறுத்தபோதெல்லாம் அந்தி சாய்ந்தபின்பு ஆகாயத்தில் வரும் அம்புலியை உனக்கு வேடிக்கை காட்டியும் விளையாட அழைத்தும் உணவூட்டினாள்.

    “இவையனைத்தையும் செய்தவள், ‘குழந்தாய், நீ சென்று ஓடியாடி விளையாடுவாயாக!’ என உன்னைத் தெருவில் விளையாட அனுப்பியும் வைத்தாள். நீ என்னடா என்றால் இங்கு வந்து எமது சிறுவீட்டினை அழிக்க முயல்கிறாய். நாங்கள் இதற்காக உன்னை இங்கனுப்பிய தாயையே நொந்துகொள்ள வேண்டும். உன்னை நொந்து கொள்வது முறைமையல்லவே. நீர்நிலைகளால் சூழப்பெற்ற குறுக்குத்துறை எனும் ஊரின்கண் வாழும் முருகா, எங்கள் சிற்றிலைச் சிதைக்காமல் இருப்பாயாக!” என வேண்டுகின்றனர் சிறுமியர்.

    ‘முந்தித் தவமே புரிந்துன்னை முயன்று பெற்றுக் காப்பாற்றி
        முகமே தூக்கிச் செங்கீரை மொழிந்தே ஆடத் தாலாட்டிக்
    குந்திக் கரத்தால் சப்பாணி கொட்டச் செய்து முத்தமிட்டுக்
        கூவியழைத்து வருகவெனக் கொஞ்சிக் குலவி யெடுத்தணைத்தே
    அந்திப் பொழுதைக் கடந்துவரும் அம்பு லிகாட்டிப் பின்னருனை
        ஆடி நீவா எனமறுகில் அனுப்புந் தாயர் தமைவிடுத்து
    நொந்திங் குன்னைக் குறைகூறல் நேர்மை யாமோ உணர்ந்திதனை
        நீர்சூழ் குறுக்குத் துறைவாழும் நிமலா சிற்றில் சிதையேலே4.’

    பிள்ளைத்தமிழின் முதல் ஏழு பருவங்களிலும் நடைபெறும் நிகழ்ச்சிகள் தாய்மார்களின் செயலாதலால் சிற்றிலை அழிக்க வரும் சிறுவனைத் தெருவில் விளையாட அனுப்பியதனையும் அதனால் ‘சிறுவன் சிற்றிலை அழித்தாலும், அது தாயின் தவறே’ என அதனையும் அவளுடைய செயலாகத் தாய்மீதே ஏற்றிக் கூறுகிறார் புலவர். பிள்ளைத்தமிழின் எட்டுப் பருவங்களை ஒன்றுடன் ஒன்று கோர்வையாகத் தொடர்புபடுத்திப் பாடியுள்ள புலமை போற்றற்குரியதாம்.

    குமரகுருபரனார் இயற்றிய மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழில், செங்கீரைப் பருவத்தில் சிற்றில் சிதைத்தல் நிகழ்ச்சி இடம் பெறுகின்றது. ஆச்சரியமாக இருப்பினும், அழகுதிகழ அமைந்த இப்பாடல், சிறு குழந்தைகளுக்கிடையேயான ஒரு விளையாட்டைப் பாடும் முகமாக, உலகியல், மானுட உளவியல், தெய்வத் தத்துவம், உலக உருவாக்கம் எனும் தொடர்ந்து நடக்கும் பிரபஞ்சத்தின் இயற்கைச் சுழற்சி முதலியனவற்றை உட்பொருளாகக் கொண்டு திகழ்கின்றது.   

    சிறு குழந்தைகள் வளர்ந்து வரும் பருவத்தில், ஆண் குழந்தைகள் சிலர் முரட்டுத்தனமான விளையாட்டுகளை விளையாடுவர்.  மற்றக் குழந்தைகளின் விளையாட்டுப் பொருள்களை உடைப்பது, அவர்கள் கட்டும் மணல் அல்லது சிறு மண்வீட்டைக் காலால் எற்றி உதைத்துச் சிதைப்பது, அவர்கள் பின்னலைப் பிடித்திழுத்து அவர்களைத் துன்புறுத்துவது என்பன இவற்றுள் சில. 

    உளவியல் ரீதியாக இதைக் காணப் போனால், நாம் வாழும் மானிட சமுதாயத்தை ஆதாரமாகக் கொண்டே இவை நிகழ்கின்றன எனலாம். அன்னையர் சமைப்பது, வீட்டிற்குரிய பணிகளைச் செய்து வீட்டை நன்முறையில் பராமரிப்பது, தமது குழந்தைகளைப் பேணுவது போன்றவற்றை நோக்கியே சிறுமியரும் தாய்மாரின் அடிச்சுவட்டில் சிற்றில் இழைத்து மணல் சோறாக்கி, குழந்தைகளைப் பேணும் விளையாட்டை விளையாடுவர். சிறுவர்களும் தந்தை, அண்ணன் முதலானோர் உடல் வலிமை தேவைப்படும் செயல்களைச் செய்வது போலத் தாமும் செய்ய முயல்வர். இவையே, சிற்றில் சிதைத்தல், சிறுபறை  முழக்குதல், சிறுதேர் உருட்டல், என்ற விளையாட்டுகளாகப் பரிணமித்ததோ என்னவோ! 

    உலகங்களையே சிறிய வீடாக உருவாக்கி விளையாடும் சிறுமியாக மீனாட்சியன்னை உருவகிக்கப் படுகிறாள். இவ்வாறு அவள் பெருமையைப் பேசுமிடத்து, சிற்றில் சிதைத்தல் நிகழ்ச்சி இடம் பெற்றுள்ளது. அன்னை உருவாக்கும் அழகிய சிற்றிலையும் ஒருவன் சிதைக்க இயலுமா? அவ்வாறு செய்யத் துணிந்த அவன் யார்? அவன் ஒரே ஒருவன் தான்- அவனே அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய் நிறைந்த தலைவனான சிவபிரான்.

    இந்தப் பாட்டைக் கண்டு மகிழலாமா?

    சிறுமி மீனாட்சி சிற்றில் இழைக்கின்றாள்; எவ்வாறு? முதலில், நெடிய சக்கரவாள மலையை எல்லா உலகங்களையும் வளைத்து நிற்கும் சுவராக அமைக்கிறாள். எட்டுத் திக்கிலும் எட்டு மலைகளை இந்தச் சுவர்களுக்குப் பொருத்தமான அடைசுவர்களாக நிறுத்துகிறாள். அடுத்து மேருமலை எனப்படும் தூணை நடுவில் நிலை நிறுத்துகின்றாள். ஆகாயமாகிய விண்ணின் உச்சியை மூடி, சூரியன், சந்திரன் ஆகிய இரண்டு ஒளிவிளக்குகளைப் பொருத்தி விடுகிறாள். முழுதும் எழுந்தெழுந்து மோதும் ஊழிக்கால வெள்ளத்தில் கழுவப்படும் புவனங்களே அவளுடைய பழைய பாத்திரம் பண்டங்கள்; அவற்றை வரிசையாக அடுக்கி வைத்து,  புதுக்கூழான இனிய அமுதத்தைச் சமைக்கிறாள். இவ்வாறு பலமுறை தாயாகிய மீனாட்சி சலிப்பின்றிச் செய்து வருகிறாள்.

    அவற்றை அழித்த வண்ணமாக இருக்கிறான் பித்தனான சிவபிரான். அவன் ஒரு முற்றவெளியான தில்லையில், சிதம்பரத்தில் திரிகின்றவன்; ஊமத்தம்பூவை அணிந்திருக்கும் பெரும் பித்தன்; கூத்தன் அவன் அழித்ததுடன் நில்லாது  மீனாட்சியின் முன் நின்று கூத்தாடுகின்றானாம்! 

    வழக்கமாக இத்தருணத்தில் சிறுமியர், “எமது சிற்றிலைச் சிதையேலே,” என வேண்டுவார்கள். அல்லது மேற்காணும் பாடல்களில் கண்டபடி, சினம் கொண்டு கூச்சலிடுவார்கள்; இல்லாவிடில் அழுவார்கள். ஆனால் அம்மை மீனாட்சி என்ன செய்கிறாளாம்? இவ்வாறெல்லாம் செய்யும் கூத்தனான சிவபிரானை வெறுக்காது, நாள்தோறும் மீண்டும் மீண்டும் அவற்றை எடுத்துப் பொறுமையாக வரிசையாக அடுக்கி, பெரிய பழைய அண்டத்தை மூடுகின்ற சிறுவீடு கட்டி விளையாடிய வண்ணம் இருக்கிறாளாம்! ‘இவ்வாறு விளையாடுகின்ற ஒப்பற்ற இளமையுடன் கூடிய பச்சைப் பெண்பிள்ளையே! செங்கீரை ஆடி அருளே!’ என வேண்டுகிறார் குமரகுருபரர்.

    சுற்றுநெடு நேமிச் சுவர்க்குஇசைய

    ………………………………..

    இன்னமுதமும் சமைத்து அன்னைநீபன்முறை
    இழைத்திட அழித்தழித்தோர்
    முற்றவெளி யில்திரியும் மத்தப்பெரும்பித்தன்
    முன்னின்று தொந்தமிடவும்

    …………………………………..

    சிற்றில்விளை யாடும்ஒருபச்சிளம் பெண்பிள்ளை
    செங்கீரை ஆடியருளே5

    தாயான மீனாட்சி (பராசக்தி) உலகத்தை அடிக்கடி ஆக்குதலையும் அவற்றைச் சிவபிரான் அடுத்தடுத்து அழித்தலையும் ஆகிய செய்கைகள் சிறுமியர் சிற்றில் இழைத்தலும், சிறுவர்கள் அவற்றை அழித்தலும் ஆகிய செய்கைகளாக உருவகித்துக் கூறப்பட்டன. மானிடப் பெண்கள் வீட்டிற்கு வேண்டியவற்றைச் செய்வது போல, எல்லா உலகங்களையும் படைக்கும் பராசக்தியும் தன் கடமைகளாக இவற்றைச் செய்கின்றாள். அவற்றைத் திரும்பத் திரும்ப அழித்துத் திருவிளையாடல் புரிகிறான் சிவபெருமான். 

    எற்றுபுனல் என்பது அலை மோதும் ஊழிப் பெருவெள்ளமாகும். இதில் அண்டங்களைக் கழுவி எடுத்து அன்னை புதுக்கூழாகிய இன்னமுதைப் படைக்கின்றாள். இவ்வாறாக உலகை உருவாக்குவதையே மீனாட்சி சிற்றில் இழைப்பதாகப் புலவர் கற்பனை செய்கிறார். உன்மத்தம் கொண்டு பித்தனாகிய கூத்தபிரான் மீண்டும் மீண்டும் சிதைக்கிறான். இவ்வாறு உலக உருவாக்கமும் அழிவும் மாறி மாறி வருவது சுட்டப்படுகிறது. அவை மீனாட்சி அம்மையின் சிற்றில் உருவாக்கமாகவும் ஈசனின் சிற்றில் சிதைத்தலாகவும் அமைந்துள்ளன. 

    ஆண்பால் பிள்ளைத்தமிழில் ஒரு தனிப் பருவமாகப் பாடப் பெறும் சிற்றில்பருவம் பெண்பால் பிள்ளைத்தமிழில் செங்கீரைப்பருவத்தில் விளக்கப்பட்டு, சிவபிரானையே இப்பாடலின் பாட்டுடைத் தலைவனாகவும் கொண்டமைந்துள்ளது. குமரகுருபரரின் தெய்வப்புலமை பணிந்தேத்த வேண்டியதாம்.

    இறைவனின் படைத்தலும் காத்தலும் கரத்தலும் அழித்தலும் அருளுதலும் ஆகிய ஐந்தொழில்கள் ஓயாது நடை பெறுவதை  தத்துவ விளக்கமாக இப்பாடல் அழகுறக் காட்டுகிறது. அதுவும் சிவபெருமான் தான் செய்யும் திருவருள் தொழில்களைத் தனது திருமேனியாக விளங்கும் சக்தி மூலமாகவே செய்தருள்கிறான் என்பது மறைபொருளாக விளங்குகிறது.

    இன்னும் சில பிள்ளைத்தமிழ் நூல்களிலும் இக்கருத்து கூறப்பட்டுள்ளது. குமரகுருபரனாரின் கருத்தை அவர்கள் வழிமொழிந்திருக்கலாம்.

    சேயூர் முருகன் பிள்ளைத்தமிழ் நூலின் (ஆண்பாற்) சிற்றிற்பருவத்துப் பாடலொன்று சிறுபெண்கள் எவ்வாறு ‘பாவனை’யாக, பொய்யாக விளையாடுகின்றனர் என்பதனை நயமுற விளக்குகிறது.

    ‘ஒளி பொருந்திய குளிர்ந்த முத்துக்களாலான அரிசியும், அதற்கு உலைபெய்த நறுந்தேனும் கவிழ்ந்து சிதறாதோ? சமைக்கும் பாண்டமாகப் பயன்படுத்தும் (நந்தின் கடமான) சங்கு உடைந்து போய்விடாதோ? மாதுளைமலர்களைப் பெய்து நாம் அமைத்த உலைத்தீ அவிந்து விடாதோ? பவளக்கொடிகளால் எம் சிறுவீட்டிற்கு நாம் ஆசையாக இட்டுள்ள விளக்கு அணைந்துவிடாதோ? நாங்கள் (பாவைத்)திருமணம் எனக்கூறிச் செய்துவைத்துள்ள பலவகை விருந்து வீணாகப் போகாதோ? (பாவனையாக) முலைப்பாலருந்துவித்து உறங்க வைத்துள்ள எமது மகவு (பாவை) தாமரை போன்ற தனது கண்களை விழித்தெழுந்து தேம்பி அழும் அல்லவோ? ஆகவே எமது சிற்றிலைச் சிதைக்க வேண்டாம்,’ என வேண்டுவதாக அமைந்த பாடல். 

    நகைத்தண் டரளத் திரளரிசி நறுந்தே னுலையுங் கவிழாதோ
               நந்தின் கடமு முடையாதோ நளிமா துளைத்தீ யவியாதோ
    தொகைத்தண் பவள விளக்கணைந்து விடாதோ வடியேம் வதுவையெனச்
               சொல்லிச் சொல்லிக் கொணர்ந்தசிறா விருந்தும் வருந்திச் சோராதோ
    முகைபபுண் டரிக முரம்பிணித்து முலையென் றறிந்து னிடத்திரங்கி
               மொழிந்து துயிற்று மணற்குழந்தை முழுத்தா மரைக்கண் விழித்துமனந்
    திகைப்புண் டழுது தேம்பாதோ சிறியேம் சிற்றில் சிதையேலே
               சேயே சேயூர்ப் பெருமானே சிறியேஞ் சிற்றில் சிதையேலே.6 

    என்பன பாடல் வரிகள். இது ஆண்பாற் பிள்ளைத்தமிழானதனால் சிறுமியர் சிறுவீடு கட்டுவதும், சிறுசோறு சமைப்பதும், பாவை விளையாடலும் (குழமணம் மொழிதல்) ஒருங்கே கூறப்பட்டுள்ளன. இவையே பெண்பால் பிள்ளைத்தமிழில் மூன்று வகைகளாகப் பிரிக்கப்பட்டுப் புலவரின் கற்பனைக்கேற்பப் பாடப்படுகின்றன. இதனைப் பிறிதொரு கட்டுரையில் காணலாம்.

    ___________&____________

    பார்வை நூல்கள்:

    1. சிலப்பதிகாரம், கானல்வரி
    2. பரிபாடல்
    3. கலைசை செங்கழுநீர் விநாயகர் பிள்ளைத்தமிழ்- சிவஞான முனிவர்
    4. குறுக்குத்துறை குமரன் பிள்ளைத்தமிழ்-
    5. மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்- குமரகுருபரர்
    6. சேயூர் முருகன் பிள்ளைத்தமிழ்- அந்தகக்கவி வீரராகவ முதலியார்

    Share
  • குழவி மருங்கினும் கிழவதாகும்- 9.2

    குழவி மருங்கினும் கிழவதாகும்- 9.2

    -மீனாட்சி பாலகணேஷ்

    குழவி மருங்கினும் கிழவதாகும்- 9.2
    (நீராடற்பருவம்)

    நீராடத் தேவையானவை வாசனைப் பொடிகளாகிய சுண்ணப்பொடிகளும், எண்ணெய் முதலானவைகளுமாகும். இந்த சுண்ணப்பொடிகளை இடிக்கும் நுணுக்கங்களும், முறைமைகளும் எத்தனை நுணுக்கமானவை! அது அத்தனை எளிதான காரியமல்ல!
    சங்ககாலம் தொட்டே தமிழகத்தில் சுண்ணப்பொடி என்பது பெண்கள் நீராடும்போது உபயோகிப்பதற்காகவும், நீராடியபின் இக்காலத்து நறுமணப்பொருட்கள் போன்று உடலில் பூசிக்கொள்வதற்காகவும் பெண்களால் மிகுந்த அக்கறையுடன் வீடுகளிலேயே உரலில் இடித்துத் தயாரிக்கப்பட்டது. சந்தனம், அகில், புனுகு, சவ்வாது, இவற்றைப் பலவிகிதங்களில் கலந்து பலவகைகளாகத் தயாரிப்பார்கள். சிலவகைகளில் பொன்துகள்களையும் சேர்ப்பர். வாசமிகு நறுமலர்களை (தாழம்பூவின் உள்ளிருக்கும் மகரந்தப்பொடி, உலர்த்திய சண்பக மலர்கள், மல்லிகை, காய்ந்தபின்பும் மணம்வீசும் மகிழம்பூ, நிறம்கூட்டச் செம்பருத்திப்பூ, மருத்துவ குணம் செறிந்த மருதோன்றிப்பூ ஆகியனவற்றையும்) உலர்த்திச் சேர்ப்பார்கள்.

    நீராடும்போது உடலில் தேய்த்துக் கொள்வதற்காக (தற்காலத்து நறுமணக் கட்டியான சோப்பு போல) பத்துவகைத் துவர்ப்புப் பொருட்களைக் கலந்து தயாரிக்கப்படும் பொடியினைத் ‘துவர்’ எனக்கூறுவார்கள்.

    ‘பத்துத் துவரினும் ஐந்து விரையினும்
    முப்பத்திரு வகை ஓமா லிகையினும்
    ஊறின நன்னீர் உரைத்தநெய் வாசம்
    நாறிரும் கூந்தல் நலம்பெற ஆட்டி1..’ என

    மாதவி தன்னை ஒப்பனை செய்து கொள்ளுமுன் எவ்வாறு எத்தகைய நீரில் நீராடினாள் என இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் விளக்கியுள்ளார்.

    பத்துத் துவர்களும் நாவல், கடுக்காய், நெல்லி, தான்றிக்காய், ஆல், அரசு, அத்தி, இத்தி, முத்தக்காசு, மாந்தளிர் என்றும், விரை ஐந்தும் கொட்டம் (நறுமணப்பொருள்), துருக்கம் (கஸ்தூரி), தகரம் (மயிர்ச்சாந்து), அகில், ஆரம் (சந்தனம்) எனவும் அறிகிறோம். இத்துடன் மேலும் முப்பத்திருவகை நறுமணப்பொருள்களையும் ஊறவைத்து நீராடுவர் எனத் தெரிகின்றது.

    மஞ்சளையும் இதில் சேர்ப்பது வழக்கு எனத் ‘திருப்பொற்சுண்ணத்’தில் இருந்து அறியலாம்.

    ‘மெய்யெனும் மஞ்சள் நிறைய அட்டி2,’ என்பன திருவாசகப் பாடல்வரிகளாகும்.

    மகளிர் வைகையில் நீராடுவதற்காக என்னவற்றையெல்லாம் செய்தனர் எனப் பரிபாடல் சுவைபட விளக்குகின்றது.

    சில மகளிர் நீராடுவதற்காக வேண்டி, சிவந்த குங்குமக் குழம்பினையும், சேறுபோன்ற அகிற் குழம்பினையும், பலவகையான கர்ப்பூரங்களையும் இதற்காகவே உண்டான சாந்து அம்மியில் இட்டு அவை தீக்கழங்குகள் போன்று சிவந்து சேர்ந்து ஒன்றாய் ஆகும்படி அரைத்தனராம். இவை நதிக்கரையில் செய்யப்படும் செயல்கள்.

    ‘செங் குங்குமச் செழுஞ்சேறு
    பங்கம் செய் அகில் பல பளிதம்
    மறுகுபட அறை புரை அறு குழவியின்
    அவி அமர் அழலென அரைக்குநர்3′ என்பன

    பரிபாடல் வரிகள்.

    மேலும் சிலர் கூந்தலில் பத்துவகைத் துவர்களையும் கொண்டு செய்யப்பட்ட பொடிகளைத் தேய்த்துக்கொண்டு நீரில் முழுகினர்; நறுமண எண்ணெய் தடவிய கூந்தலில் எண்ணெய் போகுமாறு நுண்ணிய அரப்புத்தூளை இட்டுப் பிசைந்தனர். இன்னும் சிலரோ, மாலை, சாந்து, மது, அணிகலன்கள் ஆகியவற்றையும் அந்த வைகை நீரில் இட்டுக் களித்தனர்.

    தண் அம் துவர் பல ஊட்டிச் சலம் குடைவார்
    எண்ணெய் கழல இழை துகள் பிசைவார்
    மாலையும் சாந்தும் மதமும் இழைகளும்
    கோலம் கொள நீர்க்குக் கூட்டுவார்.3…. என்பன

    பரிபாடல் வரிகள்

    இவ்வாறு பலவிதமாக நீராடிக் களிப்பதற்காகவே நதிகளுக்குச் சென்றனர் மகளிர். நறுமணச் சுண்ணங்களும் தேவைக்கேற்பத் தயாரிக்கப்பட்டு பூசிக்கொள்ளப்பட்டன. மகளிர் தமக்குப் பூசிக்கொள்ள மட்டுமன்றி, நெடுநாள் பயணம் சென்ற தலைவன் வீடுதிரும்புவதனை எதிர்பார்த்து, அவனுடைய நீராடலுக்காகவும் வாசனைப்பொடியைத் தயாரிப்பார்கள்.

    பொற்சுண்ணம் இடிப்பதற்குப் பலவிதமான வாசனைப்பொருட்களை அதிகமாக உரலில் இட்டு இடிக்க வேண்டும். இரண்டு அல்லது நான்குபெண்கள் எதிரெதிராக நின்றுகொண்டு இடிப்பார்கள். உரலில் உள்ள குழியோ சிறியது. ஒரு உலக்கைதான் போகமுடியும்; நான்குபேர் மாற்றிமாற்றி உலக்கைபோட்டு இடிக்க வசதியாக ஒரு தாளகதியை அமைத்துக்கொண்டு, இடிக்கும் சிரமம் தெரியாதிருக்கப் பாடல்களையும் இதற்காக இயற்றிக் கொண்டனர். இதற்குத் தொல்காப்பியத்திலும், சங்க இலக்கியங்களிலும் வள்ளைப்பாட்டு (உலக்கைப்பாட்டு) என்றே பெயர் இருந்தது. இருபெண்கள் நான்கு கைகளால் மாற்றிமாற்றி உலக்கை போடும்போது வளையல்களும் மூச்சும் இழைந்தொலிக்கப் பண்ணிசை உண்டாகுமே அதற்கு வள்ளைப்பாட்டு எனப்பெயர்.

    ஒருவீட்டில் திருமணம் நிச்சயமானவுடன் செய்யும் முதல் மங்கலச்செயல் மஞ்சளை நிறையச்சேர்த்து வாசனைப்பொடி இடிப்பதுதான். தற்காலத்திலும் கூட இவ்வழக்கம் நடைமுறையில் உள்ளது. இதனைக்கண்ணுற்ற மாணிக்கவாசகருக்கு ஈசனுடைய அபிடேகத்திற்கு பொற்சுண்ணம் இடித்துப்பார்க்கும் பேரவா எழுகின்றது. தனது இறையனுபவங்களைச் சுண்ணமிடிக்கும் பாடல்களாக்கி பெண்களுக்காகவே இயற்றுகிறார். அப்பெண்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து சிவபிரானுக்காகப் பொற்சுண்ணம் இடிக்கின்றனர்.

    ‘அழகான முத்துமாலைகள், மாவிலைத்தோரணங்களல் வீட்டை அலங்கரித்து, நவதானியங்களைக் கிண்ணங்களில் நிரப்பி முளைப்பாரி வைத்து, அதன் நடுவே, தூபம், தீபம் அனைத்தையும் வையுங்கள் பெண்களே! பல்லாண்டு பாடுங்கள், கவரி வீசுங்கள்; அப்பன் திருவையாறனைப் பாடி நாம் பொற்சுண்ணம் இடிப்போம்,’ என்று அனைவரையும் அழைத்துச் சுண்ணமிடிக்கத் தொடங்குகிறார்கள்.

    ‘முத்துநல் தாமம்பூ மாலைதூக்கி
    முளைக்குடம் தூபம்நல் தீபம் வைம்மின்
    ………………………………………….
    அத்தன் ஐயாறன்அம் மானைப்பாடி
    ஆடப்பொன் சுண்ணம் இடித்தும் நாமே4′

    இந்தச் சுண்ணப்பொடிகள் பிள்ளைத்தமிழ்ப் பாடல்களிலும் இடம்பெற்றுத் திகழும் அருமையும் ஒரு அழகுதான். அக்காட்சியை நாமும் காணவேண்டாமா?

    சின்னஞ்சிறுமி. விளையாட்டில் முனைப்பாக இருப்பவளை நீராட வரும்படி ஆசைகாட்டுகிறார்கள் தாதியர். “உன் நீராடலுக்காக எத்தனைவிதமான சுண்ணப்பொடிகள் கொண்டுவந்திருக்கிறோம். தேன்சிந்தும் மலர்களைச் சேர்த்துக்கலந்த ஒரு சுண்ணக்கலவை; களபம் எனும் சந்தனம், கஸ்தூரி மஞ்சள் முதலானவை சேர்த்த இன்னொரு சுண்ணம்; பச்சைக் கர்ப்பூரம் சேர்த்த குளிர்ச்சியான ஒரு சுண்ணக்கலவை. தனிச் சந்தனக்கலவை ஒன்று; பலவிதமான சாந்துக்குழம்புகள். வண்டுகள் தேனை அருந்தி ரீங்காரமிடும் மலர்மாலைகள்! வா குழந்தாய்! வந்து பாலாற்றில் துளைந்து நீராடுக!” என ஆதிபுரி (திருவொற்றியூர்) வடிவுடையம்மையை நீராடத் தாயும் சேடியரும் அழைப்பதாகப் புலவரொருவர் பாடியுள்ளார்.

    ‘கள்ளோ டலர்ந்தநறு மென்மலர்ச் சுண்ணமும்
    களபப் பசுஞ்சுண்ணமும்
    கர்ப்புரச் சுண்ணமும் கலவையும் சுண்ணமும்
    கமழ்கின்ற பலசாந்தமும்.5..’

    நாம் உயர்வாக எண்ணும் பலபொருள்களையும் செயல்களையும் இறைவனுக்காகவே அர்ப்பணிப்பதில் உண்டாகும் பேரானந்தத்திற்கு ஈடுஇணையில்லை அன்றோ?

    சிறுமியாகிய அன்னை திருநிலைநாயகி நீராடுவதற்காக மேலே நாம் கண்டவாறு தயாரிக்கப்பட்ட சுண்ணப்பொடியை, தூவினால் நிலத்தில் விழுமுன்பே வண்டுகள் சுழன்று விரைந்துண்ணும் தரம் உயர்ந்த சுண்ணப்பொடியை அரம்பையர்களும், மதுநிறைந்த மலர்களை இந்திராணியும், துகில், காம்பு நேத்திரங்கள் ஆகிய பட்டாடை வகைகளைப் பல மகளிரும் ஏந்தி நிற்கின்றனராம். முகவாசம் எனப்படும் வெற்றிலை, மற்றும் தாம்பூலம், சந்தனம், மானின் கத்தூரி ஆகியவற்றைக் கலைமகளும், இரத்தினம், பவளம் ஆகிய நவமணிகளாலான அணிகலன்களை மலர்மகளான இலக்குமியும் ஏந்தியவாறு உனது ஏவலை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கின்றனர்…’ என்பது புலவரின் கூற்று.

    தூவினில மேல்விழ விடாதுவரி வண்டுகள்
    சுழன்று துய்க்குஞ் சுண்ணமொய்
    சுரிகுழ லரம்பையர்கள் மதுமலர்க ளிந்த்ராணி
    துகில்காம்பு நேத்திரங்கள்
    காவிமுக வாசதாம் பூலாதி சந்தனம்
    கத்தூரிமா னின்மதம்
    கலையின்மக ளரதனம் பவளமுதல் நவமணிக்
    கலன்மலரின் மகளேந்தி நின்று
    ஆவலின் ஏவல்வழி நிற்கிறார்6…….  (சீகாழி திருநிலைநாயகி பிள்ளைத்தமிழ்)

    ஈண்டு புலவர், அன்னைக்காகத் தயாரிக்கப்பட்ட சுண்ணத்தின் தரத்தைப் புகழ்ந்து கூறுவது சீவக சிந்தாமணியில் காணும் கருத்தை ஒத்திருப்பது நயக்கத்தக்கது.

    சீவக சிந்தாமணியின் குணமாலையார் இலம்பகத்தில், அவளுக்கும் சுரமஞ்சரிக்கும் இடையேயான சுண்ணம் தயாரிக்கும் போட்டியில் எவரின் சுண்ணம் தரத்தில் உயர்ந்ததெனக் காணவேண்டியபொறுப்பு சீவகனிடம் அவன் திறமையை அடிப்படையாகக் கொண்டு தரப்பட்டது. அவன் இருவரின் சுண்ணப்பொடிகளையும் சிறிது அள்ளி விண்ணில் தூவி விடுகிறான். குணமாலையின் சுண்ணப்பொடி நிலத்தில் விழும்முன்பே வண்டுகள் பாய்ந்தோடிவந்து அதனை உண்ணுகின்றதைக் கண்டு அனைவரும் ஆச்சரியத்தில் கூக்குரலிட்டனர். சுரமஞ்சரியின் பொடிகள் நிலத்தில் விழுந்தன. வண்டுகள் அதன் பக்கமே நெருங்கவில்லை! “வண்டுகள் உண்ட பொடி (குணமாலையுடைய பொடி) நல்ல கோடைக்காலத்தில் இடித்துத் தயாரிக்கப்பட்டது; மற்றது (சுரமஞ்சரியுடையது) குளிர்ச்சியுடைய மழைக்காலத்தில் தயாரிக்கப்பட்டது. அதனால் சிறிது தரம் தாழ்ந்தது,” எனச் சீவகன் விளக்கினான்.

    நல்ல சுண்ணம் இவைஇவற் றில்சிறிது
    அல்ல சுண்ணம் அதற்கென்னை என்றிரேல்
    புல்லு கோடைய பொற்புடைப் பூஞ்சுண்ணம்
    அல்ல சீதம்செய் காலத்தின் ஆயவே.7 (சீவக சிந்தாமணி- குணமாலையார் இலம்பகம்)

    இதனையே புலவரும் பிள்ளைத்தமிழ் பாடலில் எடுத்தாண்டுள்ளார்.

    தாயும் தோழியரும் நீராட அழைத்துச் செல்வதென்னவோ சிறு பெண்மகவினைத்தான். ஆனாலும் (இலங்கை) சுதுமலை புவனேசுவரி பிள்ளைத்தமிழ் பாடிய புலவர் உலகிற்கே அன்னையான பராசக்தியையே அச்சிறுமியிடம் தமது உள்ளுணர்வால் தரிசிக்கிறார்.

    புவனேசுவரியன்னையின் நீராடல் விளையாட்டின்போது, நிகழும் விளையாட்டொன்றினை வருணனையாக்கி, தேவர்கள் அதனை தேவிக்குச் செய்யும் கனகாபிஷேகமாக்கிச் சிறப்பித்துக் கூறுகிறது இப்பாடல். சில சேடிப்பெண்டிர் நீரினுள் மூழ்கி ஒளிந்து கொள்கின்றனர். தாமரையின் அடித் தண்டுகளை அறுத்து அவற்றைத் தமது வாயில் வைத்துக் குழல்போல ஊதி விளையாடுகின்றனர். அவர்கள் ஊதுவதனால் உள்ளிருக்கும் காற்று மேலெழுந்து வெளிப்படும்போது, அவற்றினுள்ளிருக்கும் மஞ்சள்நிற மகரந்தத் தாதுகளை நீராடும் அன்னைமீது பொழியச் செய்கின்றதாம். இது அன்னைக்குக் கனகாபிஷேகம் செய்வது போலுள்ளது என்கிறார். கருத்திற்கினிய நீர்விளையாட்டொன்றினை அன்னை தெய்வத்திற்குச் செய்யும் சீராட்டாகவும் அமையுமாறு கற்பனை செய்தது சிறப்பாக அமைந்துள்ளது.

    சேறாடு செந்நெலம் கழனிசூழ் சுதுவையில்
    சீர்த்தசங் களைப்பதிபெறும்
    திரையாடு தீர்த்திகைச் சீராட விளையாடு
    சேடியர் குதூகலத்தால்
    நீறாடு மகரந்த நிறைகமல நீள்தண்டு
    நீரிடைப் புகுந்தறுத்து
    நிகரில்வாய் வைத்தூத………
    ………………………………………
    பெருமையொடு பொன்தூவி அன்னையை முழுக்காட்டு
    பெரிய கனகாபிஷேக
    வீறாடு விளையாட்டின் மகிழ்வாடும்8……………

    பின்னும் அன்னையை மோன ஞானவெள்ளம் மூழ்கி இருப்பவள் எனவும் வருணனை செய்கிறார்; அதாவது தேவியின் கருணைவெள்ளத்தில் மூழ்கியிருக்கும் யோகியர் தமது மூலாதாரத்தில் மூண்டெழும் குண்டலினியைச் சுழுமுனை நாடி வழி மேலேற்றுகையில் அவர்கள் சிரசினின்றும் ஊற்றெடுக்கும் அமிருதப் பிரவாகம் அமிர்தகங்கை எனப்படும். அது சுழுமுனை வழியே பாய்ந்து ஆறாதாரங்களிலும் தேங்கும். அவையனைத்தும் அடியார் உள்ளத்தே உள்ள தீர்த்தங்களாகும்.

    கள்ளத்த மாயவியல் கைகழுவி நின்னருட்
    கருணைக்கை ஏறுமுரவோர்
    காண்பினிய சுழுனைவழி மேலேறு கடவுண்மாக்
    கங்கைபுகு சுனைகளாக
    உள்ளத்தி னுள்ளபல தீர்த்தங்க ளுறமூழ்கி
    உலவாவின் புறுதம்சரதம்.9.’ (புவனேசுவரி பிள்ளைத்தமிழ்)

    திருமூலரும் இவற்றில் மூழ்குவோர் புண்ணியராவர் என்கின்றார்.

    ‘மறியார் வளைக்கை வருபுனற் கங்கை
    பொறியார் புனல் மூழ்கப் புண்ணியமாமே10′ (திருமந்திரம்).

    புவனேசுவரி அன்னையை அவள் வைதிகத்தின் வேர் எனப் பெருமைப்படுத்துகிறார். இவள் நாம் வழிபடும் பராசக்தியே என உணர்ந்த அடியாரின் நிலையில் நின்றும் இப்புலவர் பரவசமடைகிறார்.

    சேது பர்வதவர்த்தனியம்மை பிள்ளைத்தமிழானது இராமேச்சுவரத்தில் உறையும் அம்பிகைமீது பாடப்பட்டது. பிள்ளைவரம் வேண்டுவோர் இராமேச்சுவரம் சென்று வேண்டிக்கொள்வது மரபு. இப்பிள்ளைத்தமிழ் தேவிகோட்டை ஜமீந்தாரும் பெரும்புகழ் வள்ளலுமாகிய அருணாசலஞ் செட்டியாரவர்களுக்கு ஒரு குழந்தை உதிக்கவேண்டி, மற்றவர்கள் அருணாசலக் கவிராயரை வேண்டிக்கொள்ள, அவரால் இயற்றப்பெற்றது. புலவரின் வாக்கு விசேடத்தாலும், அம்மையின் அருளும் கூடிட, ஜமீந்தருக்கு, அழகான ஆண்மகவு பிறந்தது என அறிகிறோம்.

    இராமேசுவரம் அமைந்துள்ள தீவில் உள்ளும் வெளியிலுமாக அறுபத்துநான்கு புனித தீர்த்தங்கள் உள்ளதாகக் கூறப்படுகின்றது. கந்தபுராணம் இவற்றுள் இருபத்துநான்கை மிக முக்கியமானவையெனக் கூறுகிறது. இந்தப் புண்ணிய தீர்த்தங்களில் நீராடி, வெவ்வேறு விதமான பாவங்களைத் தொலைக்கலாம். இவற்றுள் பல இராமநாதசுவாமியின் திருக்கோவிலின் உட்புறமே உள்ளன.
    சேதுபர்வதவர்த்தனி அம்மையை நீராட அழைக்கும் புலவர், மிகப்பொருத்தமாக, மானிடர்களாகிய நாம் நீராட உகந்த சில புனித தீர்த்தங்களின் கதையை அழகுற இப்பாடல்களில் இணைத்துப் பாடியுள்ளார். அவை என்னவென்று பார்க்கலாமே!

    பறந்து சென்று ஊறு விளைவிக்கும் மலைகளின் இறகுகளை அரிந்தவனின் பிரமகத்திப்பாவம் தொலையுமாறு செய்வது சீதைகுண்டமாகும். கோடி வேதப் பிராமணர்களைக் கொலைசெய்த பாவத்தைக் குறைப்பது பிரமகுண்டம் எனும் தீர்த்தமாகும்; இராமன் பிரதிட்டை செய்த மணல் இலிங்கத்தை வாலினால் ஈர்த்து, முடியாது வாலிற்றுப்போய் அநுமன் வீழ்ந்த இடத்தில் ஊற்றெடுத்தது அநுமகுண்டம் எனும் தீர்த்தமாகும். இதில் ஊற்றெடுக்கும் நீரை எடுத்து அதில் நீராடுவோருக்கு மகப்பேற்றினை அடைவிக்கும் அநுமகுண்டமிதுவாகும். இத்தகைய தீர்த்தங்களிலாடுவோர் எண்ணிய நற்பயன்களைப் பெறுவர் என்று இயம்பும் இராமேச்சுவரத்தில் இராமநாதசுவாமியாகிய ஈசனின் பக்கம் இருக்கும் இளமயில் என அன்னை பர்வதவர்த்தினியை ஏற்றுகிறார். “நீ தமிழ்முனிவனாம் அகத்தியனின் மலையான மலயம் எனப்படும் பொதியமலையில் இருந்து உற்பத்தியாகும் பொருநைவெள்ளத்தில் நீராடியருளுக! உண்மையன்பர் தொழும் பர்வதவர்த்தனியே நீராடுக!” என வேண்டுவதாக அமைந்துள்ள பாடலிது.

    ‘குன்றிற கரிந்தவன் பிரமகத் திப்பவம்
    குறைசெய்த சீதைகுண்டம்
    ………………………………………………
    வென்றிபெறு தமிழ்முனிவன் மலயநின் றெழுபொருநை
    வெள்ளநீ ராடியருளே
    மெய்த்தவர் தொழும்பர்வத வர்த்தனி வரும்புதிய
    வெள்ளநீ ராடியருளே.11′

    காஞ்சி காமாட்சியம்மை பிள்ளத்தமிழில் நீராடல் பருவத்தில் புலவரின் கற்பனை அற்புதமாக விரிகின்றது. ‘ஆகாயமே அழகான பட்டுக் கருநீலச் சேலையாகி இருக்கின்றது. அதில் பதித்த நல்வைரங்களாகத் தாரகைகள் மின்னுகின்றன. இந்தச்சேலைக்கு விலைகூறவும் இயலுமோ? இத்தகைய விலைமதிப்பற்ற சேலையினை நீ விரும்பி அணிய வேண்டுமென எட்டு மகளிர்களாகிய அட்ட இலக்குமிகள் ஏந்தி நிற்கின்றனர்.

    ‘ஈரம் நிரம்பிய கடல் நீரை முகந்து கொண்டெழும் கருமுகிலின் கரையாக வானவில் ஒளிர்கின்றது. மழைக்கு இறைவனாகிய இந்திரன், கடற்கடவுள் வருணன், தண்மையான காற்றின் இறைவனெனப்படும் மாருதக்கடவுள் ஆகியோரின் அருமைப் பத்தினிகள் தங்கள் தலைவியாகிய நீ அணிந்துகொள்ள அத்தகைய வானவில் கரையிட்ட மேகமாகிய கருநீலச் சேலையைக் கையில் ஏந்திக்கொண்டு, கச்சி எனும் காஞ்சிமாநகரின் தடாகக் கரையில், நீ நீராடி வருவதற்காகவும் உனது கண்ணசைவின் ஏவலுக்காகவும் காத்திருக்கின்றனர். நீயும் நீராடி அருளுக! முக்கண்ணனின் இடப்பாகத்தைப் பகிர்ந்து கொண்டவளே! நீராடியருளுக!’ என வேண்டுவதாக அமைந்த பாடல் மிகுந்த நயம் வாய்ந்தது.

    இயற்கையின் எழிலார்ந்த அமைப்பான கருமுகிலிலும், நீலக்கடலிலும், வானவில், சந்திரன், தாரகைகள் இவற்றிலும் இறைமையைக்கண்டு, அவை இறைமையின் அமைப்புகள், அணிகலன்கள் எனக்கொண்டு இரசனையுடன் வழிபட்டு வந்தனர் நம் முன்னோர்கள். கருமுகிலைக் காமாட்சி அம்மைக்கான அழகானதொரு சேலையாகக் கண்டு களிப்பெய்தும் அடியாரின் கருத்தில் பூத்தவொரு மலர் இப்பிள்ளைத்தமிழ்ப் பாடல். இயற்கையை இறைவடிவாகக் கண்டு போற்றிப்பரவும் வழக்கு இன்றுமே தொடர்கின்றது.

    விண்பட் டாடை யதனுடலில்
    மின்னும் பொறிகளு டுவமைத்த (பொறி- பொட்டு)
    விலையில் தானை உகந்தருள (தானை- சேலை)
    வேண்டு மெனுமெண் மலர்மகளிர்
    ஒண்பா வாடை எடுத்தெழவும்
    ஓதக் கலிங்கக் கருமுகிலின்
    ஒருபால் வானச் சிலையருகிட்
    டும்பர் கோன்மா மழைக்கிறைவன்
    தண்ணென் மாரு தக்கடவுள்
    தங்கள் அருமைப் பத்தினியர்
    தலைவிக் கெனவத் துகில்விரித்துத்
    தழையும் கச்சித் தடக்கரையில்
    கண்ணே வற்குக் கருத்திருத்தக்
    கடிநீர் ஆடி யருளுகவே!
    கண்மூன் றுடையா ரிடம்பகிர்வோய்
    கடிநீர் ஆடி யருளுகவே!12

    நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் எனும் பஞ்சபூதத் தலங்களுள் முதன்மையான தலமாக விளங்குவது காஞ்சி. இங்குறையும் காமாட்சியம்மை மீது இப்பிள்ளைத்தமிழ் நூலானது காஞ்சி இரா. குப்புஸ்வாமி அவர்களால் 1959-ல் இயற்றப்பெற்றது.
    இதுபோன்ற பல பிள்ளைத்தமிழ் நூல்களும், குழந்தைப் பருவத்தைப் போற்றிக் கொண்டாடும் முறைமையில் தமது விருப்பமான தெய்வங்களைக் குழந்தையாகக் கொண்டும், அவர்கள் தெய்வத்தன்மையை மறவாது போற்றியும் கற்பனை வளத்துடன் பாடப்பட்டுள்ளன என்பது வியக்கத்தக்கதாம்.

    பார்வை நூல்கள்:

    1. சிலப்பதிகாரம்
    2. திருவாசகம்- திருப்பொற்சுண்ணம்.
    3. பரிபாடல்- பாடல் 10-
    4. திருவாசகம்- திருப்பொற்சுண்ணம்.
    5. ஆதிபுரி வடிவுடையம்மை பிள்ளைத்தமிழ்
    6. திருநிலைநாயகி பிள்ளைத்தமிழ்
    7. சீவக சிந்தாமணி- குணமாலையார் இலம்பகம்
    8. சுதுமலை புவனேசுவரி பிள்ளைத்தமிழ்
    9. சுதுமலை புவனேசுவரி பிள்ளைத்தமிழ்
    10. திருமந்திரம்
    11. சேது பர்வதவர்த்தனியம்மை பிள்ளைத்தமிழ்
    12. காஞ்சி காமாட்சியம்மை பிள்ளைத்தமிழ்

    Share
  • குழவி மருங்கினும் கிழவதாகும் – 9.1

    குழவி மருங்கினும் கிழவதாகும் – 9.1

    முனைவர் மீனாட்சி பாலகணேஷ்

    குழவி மருங்கினும் கிழவதாகும்- 9.1
    (நீராடற்பருவம்)

    பெண்பால் பிள்ளைத்தமிழில் அடுத்த பருவமாக நாம் காண்பது, நீராடற் பருவம். நதியில் நீராடும் இனிய அனுபவத்தை, விளையாட்டை, வளர்ந்த சிறுமிகள் ஐந்து முதல் ஒன்பது வயதில் செய்வார்கள். ஆயினும் முதலில் சிறுபெண்களுக்கு வயதில் பெரிய பெண்களும் தாயும் செவிலியருமே நதியில் இறங்கி நீந்தவும், நீராடவும் கற்றுக் கொடுப்பார்கள். பிள்ளைத்தமிழ் இலக்கிய மரபு பெண் குழந்தையின் ஐந்து முதல் ஒன்பது வயதில் இது நிகழும் என்கிறது.

    நதியில் நீராடுவதென்பது சிறுமிகளுக்கும் பெண்களுக்கும் ஒரு நல்ல பொழுது போக்காகவும், உடற்பயிற்சியாகவும் அக்காலத்தில் விளங்கியதைக் காணலாம். அது மட்டுமின்றி, நாட்டு நலனுக்காகவும், வீட்டு நலனுக்காகவும் செய்யும் வேண்டுதல்களுக்கும் இதுவொரு களமாக விளங்கியது எனவும் அறிகிறோம்.

    ஆடிமாதம், புதுவெள்ளத்தில் நீராடுவதென்பது நதியைப் போற்றி வழிபட்டு விளையாடி மகிழ்வதற்காக ஏற்பட்டது! புலராத அதிகாலை நேரத்துக்குளிரில், மார்கழிமாதம் நீராடுவது நாட்டில் நல்லமழை பெய்வதற்காகவும் நல்ல கணவனைப் பெறுவதற்கு வேண்டி நோன்பிருக்கவும் ஏற்பட்டது. ஆண்டு முழுவதுமே ஆற்றங்கரையில் தினசரிக் கடன்களைச் செய்தும், துணிமணிகளைத் துவைத்தும், நீரில் துளைந்து விளையாடியும், வாழ்வினைப் பல பொழுதுபோக்குகள் நிறைந்ததொரு இனியபயணமாக அமைத்துக் கொள்வதற்கென்றே ஏற்பட்டது எனலாம்!

    தம் நீர்ப்பெருக்கால் நமக்கெல்லாம், நாம் விதைக்கும் பயிர்களுக்கெல்லாம் உணவளித்து, உயிரூட்டி, அரவணைத்து வளர்த்துவரும் கங்கை, காவேரி, வைகை, இன்னும் பல நதிகளை நாம் தெய்வமெனக் கொண்டாடிப் பூசைகள்செய்து வழிபடுகிறோம். ‘நீரின்றி அமையாது உலகு,’ என்பது நாமறிந்த உண்மை! குழந்தைகள் தாயிடம் விளையாடுவதுபோல, ஆற்றுவெள்ளத்தில் ஆடிப்பாடி நீர்விளையாட்டுகளில் ஈடுபட்டுக் களிக்கிறோம். நிலம், நீர் (ஆறு) முதலியன வாழ்வின் இன்றியமையாத தேவைகளாக இருப்பதனால், அவற்றை இயற்கை தெய்வங்களாகக் கொண்டு போற்றுகிறோம். இவை உயர்வான நமது நாகரிகத்தின் வெளிப்பாடுகளே!

    ‘காவேரியே! உன் கணவனுடைய சோழநாடே உன்குழந்தையாகும்; நீதான் அதனை வளர்க்கும் தாயானவள். எத்தனையோ ஊழிக்காலங்களாக இந்தச்செயலைச் செய்துவருகின்றாய். இதற்குக் காரணம், உயிர்களைப் பாதுகாத்து, ஆணைச்சக்கரம் செலுத்துகின்ற சோழவேந்தனின் நடுவுநிலைமை தவறாத ஆட்சியே அல்லவா? நீடூழி வாழ்வாயாக காவேரியே!’ எனத் தலைவி வாழ்த்துவதாக சிலப்பதிகாரத்தில் கானல்வரிகளைக் காண்கிறோம்.
    ‘வாழி அவன்தன் வளநாடு மகவாய் வளர்க்கும் தாயாகி
    ……………..
    ஊழி உய்க்கும் பேருதவி ஒழியா தொழுகல் உயிரோம்பும்
    ஆழி ஆள்வான் பகல்வெய்யோன் அருளே வாழி காவேரி.1’
    (சிலப்பதிகாரம்- கானல்வரி- புகார்க்காண்டம்- கடலாடு காதை)

    சிவபிரானுக்கு உகந்த திருவாதிரை நாளில் பௌர்ணமி தினமும் கூடியிருந்த முன்பனிக்காலம் எனப்படும் மார்கழிமாதத்து நாளன்று வைகறைப்பொழுதிற்கு முன்பே வைகைக்கரையில் சிறுமியரும் மகளிரும் அந்தணர்களும் சிறுவர்களுமாகக் கூட்டம் கூடியுள்ளது; வைகையின் நீர்ப்பெருக்கிற்கு ஈடாக மக்கள்கூட்டம் கரைபுரண்டோடுகின்றது. வாணி(சரஸ்வதி), யமுனை, கங்கை ஆகிய மூன்று நதிகளின் கலவை எனப் புகழப்படும் வையை எனும் பாண்டியன் குலக்கொடி, மகிழ்ச்சியில் பொங்கிப் பெருகிப் புரண்டோடுகிறாள்.
    அந்தணர்கள் நீராடி முடித்துப் பொற்கலங்களிில் வையையின் நீரை நிரப்பிக் கொண்டு மந்திரங்களை உச்சரித்தவாறு வேள்விக்காக அமைக்கப்பட்ட சாலைகளை நோக்கி விரைந்தனர். வேள்விச்சாலைகளில் தீ வளர்க்கப்பட்டு மந்திரங்கள் முழங்கத் துவங்கிவிட்டன. தாய்மார்கள் தங்கள் சிறு மகள்களின் கைகளைப் பற்றிக்கொண்டு நீரில் மெல்ல இறக்கி நீராடவைக்கின்றனர்.

    சிவபிரானை வாழ்த்தி எழும்பும் அந்தணர்களின் மந்திர முழக்கம் வானைமுட்டுகிறது. இன்னும் பல தாய்மார்களும் சிறுமிகளும் இளம்கன்னியர்களும் அவர்களைப்போல் வேள்விக்குண்டங்களைச் சூழ்ந்து நிற்கிறார்கள். பற்களைக்கிட்டிக்கும் குளிரில், ஈர ஆடையில், சிறுமிகளின், ஏன் தாய்மார்களின் உடல்களும்கூட இலேசாக நடுங்குகிறன. ஓங்கியெழும் வேள்வித்தீயின் நாக்குகள் உமிழும் வெப்பத்தில் அப்பெண்களின் ஈர ஆடைகளிலிருந்து நீர் ஆவியாக வெளிப்படுகின்றது. பெண்களும் குளிரிலிருந்து சிறிது ஆசுவாசமடைகின்றனர்.

    ‘இவ்விளங்குழந்தைகள் தங்கள் தாய்மார்களுடன் கூடிநின்று வைகைக்கரையில் நீராடலாகிய இந்தத் தவத்தினைச் செய்வதற்கு, முன்பு என்ன தவம் செய்திருந்தனரோ,’ எனக் காண்போருக்கு எண்ணத்தோன்றுகிறது.*

    அம்பா ஆடலின் ஆய்தொடிக் கன்னியர்,
    முனித்துறை முதல்வியர் முறைமை காட்ட,
    பனிப்புலர்பு ஆடி, பருமணல் அருவியின்
    ஊதை ஊர்தர, உறைசிறை வேதியர்
    …………………………………………….
    தீ எரிப்பாலும் செறிதவம் முன்பற்றியோ,
    தாய் அருகா நின்று தவத் தைந்நீராடுதல்?
    நீ உரைத்தி, வையை நதி!2
    (*பரிபாடல்-11- ஆசிரியர்: நல்லந்துவனார்)
    *****

    இனி குமரகுருபரர் காட்டும் மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழைக் காணலாம்! பொய்யாக் குலக்கொடியான வையை என்னும் நதியின் கரையில் கும்மாளமிடும் இளம்பெண்களின் கூட்டம்! குதூகலம் கொப்பளிக்க பாண்டிய இளவரசி தடாதகை தன் தோழியருடன் நீராட வருகிறாள். பற்பல கதைகளையும் பேசிக் களித்து மகிழ்ந்த வண்ணம் தடாதகையும் தோழிகளாகிய திருமகளும் கலைமகளும் இன்னும் பல பெண்களுடன் வைகைத் துறையை அடைகின்றனர். “பொங்கி வரும் வைகைப் புது நீரில் நீராடுவாயாக அம்மையே,” என்று தடாதகையிடம் கூறுகின்றனர்.

    வைகை நீர் பொங்கிப் புரண்டோடி வரும் அழகைக் கண்டு, மெய்ம்மறந்த பரவசத்தில் ஆழ்ந்து நிற்கிறாள் அங்கயற்கண்ணி. ‘இந்தப்படித்துறை பண்டு எம்பெருமான் பிட்டுக்கு மண்சுமந்த இடமாகும்,’ எனத் தோழியான வாணி சொல்கிறாள். அதனைக் கேட்டவுடன் தடாதகையின் உள்ளம் கசிந்துருகிக் காதலில் கண்களிலிருந்து ஆனந்த வெள்ளம் பொழிகின்றதாம்.

    நீர் பெருகிக் கரையுடைத்துக் கொண்டோடிய வைகையும், பிட்டு விற்கும் வந்திக்கு உதவ வேண்டி, கூடையில் மண்ணை வாரித் தலைச்சுமை எடுத்துக் கரையமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த காதல் கொழுநனும், அவனைப் பிரம்பால் அடித்த பாண்டியனும் ஆகிய காட்சிகள் அம்மையின் மனக்கண்ணில் படமாக விரிகின்றன. கலைமகளும் தன் வாக்கு வன்மையினால் அந்தக் கதையை சுவைபட எல்லாருக்கும் விவரிக்கிறாள்.

    ‘என் உள்ளங்கவர் காதலர் மண் சுமந்த இடமல்லவா இது?’ என்ற பெருமிதத்தில் மீனாட்சியின் நெக்குருகி, நெஞ்சு விம்ம, கண்கள் சிவந்து ஆனந்த வெள்ளம் பெருகுகின்றது. அப்படியே சிலை போல நிற்கிறாள்.

    ‘இழியும் புனல் தண்துறை முன்றில் இதுஎம் பெருமான் மண்சுமந்த
    இடமென்று அலர்வெண் கமலப்பெண் இசைப்பக் கசிந்துள் உருகியிரு
    விழியும் சிவப்ப ஆனந்த வெள்ளம் பொழிந்து நின்றனையால்3..’

    “இப்படிக் கண்களிலிருந்து வெள்ளத்தைப் பெருகவிட்டுத் திரும்பவும் அப்பெருமானுக்கு வேலை வைப்பது பிழையல்லவா? விரைவில் நீராடுவாய்,” என அழைக்கின்றனர் தோழிகள்.

    ‘விழிநீரை மீண்டும் பெருக விடுத்து அவற்கோர்
    வேலை இடுதல் மிகையன்றே!’ என்கின்றனர்.

    ஆனால் எண்ணங்களில் ஆழ்ந்து அசையாமல் சிற்பமென நிற்கிறாள் இளவரசி தடாதகை. அவளை விரைந்து நீராடவைக்கத் தோழியர் இன்னொரு உபாயத்தைக் கையாளுகின்றனர்!

    “மடங்கி வரும் அலைகளையும் குளிர்ச்சி பொருந்திய நீரையுமுடைய வைகை நதியில், வண்டல் இடுகின்ற மண்ணைக் கூடையில் அள்ளி வைத்து முன்பே சுமந்தவர் உன் காதலர்தானே? நீரிலிறங்கி ஆடினாயானால் உன் மார்பிலணிந்துள்ள சிவந்த குங்குமச்சேறு கரைந்து வண்டல்மண் போல நீரில் சேர்ந்துவிடும். அதைத் திரும்பக் கூடையில் அள்ள எம்பெருமான் ஆசையாக விரைந்தோடி வருவார் பார்!” எனக்கூறுமுன்பே, மற்றொரு தோழி குறும்பாக, “அவ்வமயம் வெள்ளைப்பிட்டை அள்ளியள்ளிக்கொடுக்க வந்திக்கிழவி வேண்டுமே! பிரம்பினால் அடித்து வேலைவாங்கப் பாண்டிய மன்னன் வேண்டுமே,” எனப் பொய்யாகக் கவலைப்படுகிறாள்.

    ‘………………………. ஒருத்தி
    வெண்பிட் டிடவும் அடித்தொருவன் வேலைகொளவும் வேண்டுமெனக்
    குறிக்கும் இடத்தில் தடந்தூநீர் குடையப் பெறின் 4….’

    “சிவனாரை உன்னிடம் வரவழைக்க இது நல்ல உபாயமல்லவா? இமயமலையிலும் மீன்கொடி பறக்கவைத்த பெண்ணரசியே, நீராடி அருளுகவே, பொருநைத் துறைவன் பொற்பாவாய் புதுநீராடி அருளுகவே,” என்று வேண்டுகின்றனர். இவை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழில் நீராடல் பருவத்தில் குமரகுருபரர் தீட்டும் அழகான சொற்சித்திரங்கள்! அசதியாடல் எனும் நயத்தை இழைத்து அமைத்த இனிய பாடல்கள்.

    சொன்னயங்களும் கருத்து நயங்களும் பலவிதமாக வெளிப்படும் பாடல்களைக் கொண்டமைந்தது குமரகுருபரனார் இயற்றியருளியுள்ள மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் நூல்.
    அங்கயற்கண்ணி அம்மை, வேகவதி எனப்படும் வைகையில் நீராடிய போது, அவள் கைகளில் அணிந்துள்ள வெண்மையான வளைகள் ஒலித்தன; பவளம் போன்ற சிவந்த உதடுகள் வெளுத்தன; கருங்குவளை மலர்க் கண்கள் சிவந்து செங்குவளை போன்று காணப்பட்டன; கரிய மணல் போன்று காணப்பட்ட கூந்தல் சரிந்து விழுந்தது. இது, பெருகிடும் கங்கையாறு, சிறு திவலையாகி, ஆனந்தப் பெருங்கடலாக விளங்கும் சிவபெருமானுடன் (மீனாட்சியம்மை) கூடிக்கலந்து விளையாடியதால் உண்டாகிய வேறுபாடுகளை ஒத்திருந்ததாம்.

    ‘செழுந்தரங்கக் கங்கை நுண்
    சிறுதிவலையாப் பொங்கும் ஆனந்த மாக்கடல்
    திளைத்தாடுகின்ற தேய்ப்ப5…’ என்கிறார்.

    குழந்தை மீனாட்சி வளர்ந்து வரும் ஒவ்வொரு பருவத்தையும் சுவைமிகுந்த நிகழ்ச்சிகளால் பாடி வரும் குமர குருபரர் பின்வரும் பாடலில் உலகம் முழுவதுமே உமை அன்னையின் வடிவம் எனக் கண்டு பேரானந்தம் கொண்டு பாடிக் களிக்கிறார்.

    “கிளி பேசுவது போன்ற பண் பொருந்திய சொற்களைப் பேசும் பாவையே! நீராடும் உனது திருமேனி அழகிய பச்சை மரகத நிறத்தைப் பரப்பி ஒளி வீசுகின்றது. இதனால் எல்லாப் பொருள்களும் அந்த நிறத்தைத் தாமும் பெற்று ஒளிர்கின்றன. நதி நீரில் மிதக்கும் குளிர்ந்த பவளக்கொடி, பச்சை நிறம் பெற்று, பேரழகுடன் பசிய இளங்கொடி போலக் காட்சியளிக்கின்றது; பருத்த வெண்மையான முத்துக்கள் மரகத மணிகளாக மாறி விட்டன! நதியின் குளிர்ச்சி மிகுந்த துறைகளில் தங்கி விளையாடும் அன்னப் பறவைகள் பச்சை நிறம் அடைந்து களிப்பு மிகுந்த தோகை மயில்களாக மாறி விட்டன! இது, ‘எல்லாப் பொருள்களும் உனது அழகிய திருவடிவம் தான்,’ என்று வேதங்கள் காலகாலங்களாக முழங்கி வரும் பொருள் முற்றிலும் உண்மையே என நிரூபிப்பது போல உள்ளதம்மா.

    ‘சகலமும் நின் திருச் சொரூபம் என்று ஓலிடும்
    சதுர் மறைப் பொருள் வெளியிட…’ என வர்ணிக்கிறார்.

    அத்தனை பெண்களும் குடைந்து குடைந்து நீராடுவதனால் அவர்கள் தம் மார்பில் அணிந்திருக்கும் சிவந்த சாந்து (செங்களபம்), கருமையான கஸ்தூரிக் குழம்பு, வெண்கற்பூரம் ஆகியவை கரைந்து வைகை நீரில் கலக்கின்றன. இது சரஸ்வதி (வாணி எனப்படும் சிவந்த நிறமுள்ள சோணை நதி), யமுனை (கரிய நிறம் கொண்ட காளிந்தி ஆறு), வெண்மை நிறம் கொண்ட கங்கை எனப்படும் வான் நதி மூன்றும் கலந்து வைகையாற்று நீரில் விளையாடுவது போல உள்ளதாம்.

    ‘……………………………………வாணியும்
    காளிந்தியும் கங்கையாம்
    விண் ஆறும் அளவளாய் விளையாடு புதுவைகை
    வெள்ள நீர் ஆடியருளே
    விடைக் கொடியவர்க்கு ஒரு கயற்கொடி கொடுத்த கொடி
    வெள்ள நீர் ஆடியருளே.6’ என்கிறார்.

    அனைத்துப் பொருள்களும் அவளே! அவளிடம் இருந்தே உற்பத்தியாகி அவளிடமே அனைத்தும் தஞ்சம் அடைகின்றன. அவளை இடைவிடாது சிந்தையில் வைப்பவர்கள் அவளாகவே ஆகி விடுகின்றனர். ‘எங்கும் வியாபித்திருப்பவள், பலவகையான உருவம் கொண்டவள், ‘வ்யாபினீ, விவிதாகாரா7,’ என அம்பிகையை லலிதா சஹஸ்ர நாமம் போற்றுகிறது. (ஸ்லோகம் 87).

    நதிகளைப் பெண்மைக் குணம் கொண்டவர்களாக பெரியோர்கள் வருணித்துள்ளனர். அவற்றின் ஆற்றலும், இயக்கமும், ஓரிடத்தில் நில்லாது ஓடிக்கொண்டே இருக்கும் தன்மையுமே இதற்குக் காரணங்கள். கமலைநதி திருவண்ணாமலையருகே ஓடுகின்றது. அந்த நதிப்பெண் உண்ணாமுலையம்மையை நோக்கிக் கூறுவதாக அமைந்தவொரு அழகான பாடல்:

    “குறிஞ்சி நிலத்தில் வாழும் வெற்றி மிக்க வீரனான குமரனுக்கு சேவல்கொடியைக் காட்டிலிருந்து கொண்டு கொடுத்தவள் அன்னை நீதான்!

    “பாலைக்குமரி எனப்படும் பாலைநிலத்து தெய்வமான கொற்றவைக்கு கொடிய சிங்கத்தையும் வாகனமாகக் கொடுத்தாய்!

    “செழித்த முல்லைநிலத்துக் கடவுளான கோவிந்தனுக்கு அழகான மூங்கிலாலான புல்லாங்குழலை அளித்தாய்.

    “மருதநிலத்து இறைவனான இந்திரனுக்கு அவன் மகிழும்வகையில் நீர்வளத்தைக் கொடுத்தாய்.

    “நெய்தல் நிலக்கடவுளான வருணனுக்கு அந்நிலத்தின் புலால் வாசனை தீரும்விதத்தில் (தாழம்புதர்கள் முதலியவற்றிலிருந்து வரும்) நறுமணமும் கொடுத்த அன்னை நீதானே!

    “உனக்கு என்னால் எதனை அளிக்க முடியும்? ஆகவே, அன்னையே, நீயே வந்து என்னில் ஆழ்ந்து நீராடித் திளைக்க வேண்டும்; நான் அதனால் உருகிப்பெருகிப் பேரின்பமான கடலில் சென்று சேர்வேன்,” எனக்கூறுகின்றாள் கமலை எனும் நதிப்பெண்ணாள்,’ என்கிறார் உண்ணாமுலைப் பிள்ளைத்தமிழின் ஆசிரியரான சோணாசல பாரதியார்.

    மெய்சிலிர்க்க வைத்து, பக்தியில் திளைக்கும் மிக அருமையான கற்பனை இதுவன்றோ!

    ‘கொற்றக் குறிஞ்சிக் குமரனுக்குக்
    கொடியும் பாலைக் குமரிக்குக்
    கொடுங்கோ ளரியுஞ் செழுமுல்லைக்
    கோவிந் தனுக்குக் குழல்வேயு
    மற்ற மருதப் போகிக்கு
    மகிழ்வு நெய்தல் வருணனுக்கு
    மன்னும் புலவு தீர்மணமும்
    வழங்கு வேனிற் கென்னளிப்பேன்8

    பல தலைமுறைகளாக நீர் விளையாட்டுகளில் ஈடுபட்டும், நீரினைத் தெய்வமாகக் கொண்டு போற்றியும், நீர்நிலைகளில் தெய்வ வழிபாடுகளை முறையாக நடத்தியும் வாழும் பண்பாடு – நாகரிகம் நம்முடையது. நீரின், ஆறுகளின் பின்னணியில் புலவர் பெருமக்கள் இயற்றியளித்த இப்பாடல்கள் இனிமை நிரம்பித்ததும்பி நமது உள்ளங்களில் அழகுணர்ச்சியையும், ஆனந்தத்தையும் பக்திப் பெருக்கினையும் நிரப்பி மகிழ்விக்கின்றன அல்லவா?

    _______________&________________

    பார்வை நூல்கள்:

    1. சிலப்பதிகாரம்- கானல்வரி- புகார்க்காண்டம்- கடலாடுகாதை
    2. பரிபாடல்- பாடல் 11- நல்லந்துவனார்.
    3. மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்- குமரகுருபரர்- நீராடல் பருவம்
    4. மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்- குமரகுருபரர்- நீராடல் பருவம்
    5. மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்- குமரகுருபரர்- நீராடல் பருவம்
    6. மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்- குமரகுருபரர்- நீராடல் பருவம்
    7. ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம்
    8. உண்ணாமுலையம்மை பிள்ளைத்தமிழ்- சோணாசல பாரதியார்

    Share
  • குழவி மருங்கினும் கிழவதாகும் – 7.2

    – மீனாட்சி பாலகணேஷ்  

    குழவி மருங்கினும் கிழவதாகும் – 7.2

                                       (7. அம்புலிப் பருவம்)

    இத்துணை கூறியும் எதற்கும் அசைந்து கொடாத சந்திரனிடம் சலிப்போடு,”பார் அம்புலியே! இவன், என் குழந்தையாகிய இச்சிறுவன், கையில் சங்கு சக்கரம் ஏந்தியவன். அவனுக்கு உறக்கம் வருகின்றது. கொட்டாவி விடுகின்றதைக் கண்டாயா? இவன் உறங்காவிடில் இவனருந்திய தாய்ப்பால் செரிக்காது. ஆகவே நீ விரைந்தோடி வா!” எனக் கூறுகிறாள் தாய்.

    ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரியார் இதற்கு அருமையான விளக்கம் தருகிறார்; ‘கையில் கதை, சங்கு, சக்கரம், வில் ஆகியவற்றுடன் இருக்கும் இந்த அழகனை வந்து தரிசித்து வணங்கிப் போ! இவற்றின் பராக்கிரமத்திற்கு இலக்காகி முடிந்து போகாதே!’ எனச் சந்திரனை மறைமுகமாக எச்சரிக்கிறாளாம் தாய்!

    இதனை பேத உபாயம் என எண்ண இடமுள்ளது. மனத்தில் வேறுபாட்டை (பேதத்தை, கலக்கத்தை) உண்டுபண்ணி, பணியச் செய்தல்.

                தண்டொடு சக்கரம் சார்ங்கமேந்தும் தடக்கையன்

              கண்துயில் கொள்ளக்கருதிக் கொட்டாவி கொள்கின்றான்

              உண்ட முலைப்பா லறாகண்டாய் உறங்காவிடில்

              விண்தனில் மன்னிய மாமதீ விரைந் தோடிவா.

                                                                (பெரியாழ்வார் திருமொழி – 5)

    இளவரசி மீனாட்சியின் தாயும் சேடியரும் அவளுடன் விளையாட வராத நிலவினை, “நீ என்ன இழிசெயல்களையெல்லாம் செய்துள்ளாய், பாண்டியர் குலக் கொழுந்தாகிய மீனாட்சி இவளைக் கண்டு, மகிழ்ந்து வாழாமல், உணவையும் உடையையும் இழந்து, சிறுமிகள், எளிய மண்பாத்திரத்தில் சமைக்கும் கூழாகிய புதுமையான உணவினை இரந்து உண்டு களங்கம் உண்டாக்கினாய். இதுவும் போதாமல், உன்னுடன் ஒளி நிறைந்த வான்வெளியில் திகழும் உனக்கு ஒப்பானவனான சூரியன் எனும் ஒருவன் தன் கைகளால் வாரியுண்ட மிச்சிலை, மிச்சத்தை, யாரும் காணாமல் நள்ளிரவில் வாரியுண்டு அவன்பின் ஓடுகிறாய், என்ன இழிவு இது!” எனக் கூறிப் பழிக்கின்றனர். தங்கள் செல்வியுடன் வந்து விளையாடாமல் இவ்வாறெல்லாம் இழிசெயல்கள் செய்யும் சந்திரனிடம் அவர்களுக்குச் சினம் ஏற்படுகின்றது.

                ………………………………. வாழாமல் உண்ணமுது

                                 கலையொடும் இழந்து வெறுமட்

              கலத்திடு புதுக்கூ ழினுக்கிரவுபூண்டொரு

                                 களங்கம்வைத் தாயி துவலால்

              ஒளி தூங்கு தெளிவிசும்பினினின்னொ டொத்தவன்

                                 ஒருத்தன் கரத்தின் வாரி

              உண்டொதுக் கியமிச்சில்நள்ளிருளில் அள்ளியுண்

                                 டோடுகின் றாயென் செய்தாய்….

    தாயின் அன்பு மற்ற எந்த சமாதானத்தையும் ஏற்பதில்லை;  தன் குழந்தையே முதன்மை. அனைவரும் அவளுக்குப் பணிசெய்தல் வேண்டும் எனும் எண்ணமே மேலோங்கி நிற்கின்றது. தற்காலத்தும் சில தாய்மார்கள், “வந்து என் குழந்தையுடன் சிறிது நேரம் விளையாடினால் நீ குறைந்தா போய்விடுவாய்?” என மற்ற சிறுவர்களைக் கேட்பதனைக் கண்டுள்ளோம் அல்லவா? அதுபோன்றதே இதுவுமாகும்.

    பேரூர் பச்சைநாயகியம்மையின் தோழியரும் செவிலித் தாயரும் அம்புலியிடம், “நீ இவளுக்கு சமமானவள் எனக் கருதி இவள் உன்னை விளையாட அழைக்கிறாள்; ஆயினும் உங்கள் இருவருக்கும் பல வேற்றுமைகள் உண்டு: நீ மாதம் ஒருநாள் மட்டுமே முழுமையான உருவை உடையவன்; இவளோ பரிபூரணனான சிவபிரான் தனது நெஞ்சில் இடையறாது எண்ணிக்கொண்டிருக்கும் நிறைந்த பெருமை பொருந்தியவள்.”

                மாதம் ஒருநாள் புரணம் ஆதல் உற, மிக்க பிர

                       மாதம் உளை நீ; இவள் அருள்

                       மன்னு பரிபூரணன் உள் உன்னும் விரிகாரண மெய்

                       மாட்சி நிறை காட்சி உடையாள்;

    குற்றம் பொருந்திய உனது அமுத கிரணங்களை, காம மிகுதியால் பெண்களின் குற்றேவல் புரியும் மாந்தர்களே விரும்புவார்கள். ஆனால் இவளுடைய கண்களின் அருட்கிரணங்களான நோக்கம் பட்டவர்கள் (அடியார்கள்) மிகுந்த உயர்வான வீடாகிய வீடுபேற்றினை அடையவல்லோராவர்.

                        கோதமையும் உனது சுதை கொண்டவர்கள் ஒண்தொடியர்

                       குற்றேவலாளர்; இவள்கண்

                       கொண்டபேர் தம்கண் எதிர்கண்ட பேர்க்கு உயர்வீடு

                       கொள்ளைகொள நல்கவல்லோர்;

    குளிர்ச்சி பொருந்திய உடற்பகுதிகளை ஆதவனிடமிருந்து மாதத்தில் அமாவாசை எனப்படும் ஒரு நாளில் ஏற்கமுடியாத சிறுமை படைத்தவன் நீ; இவளோ தனது பெருமை வாய்ந்த காதணியால் ஒரே நாளில் கோடி நிலவுகளை உண்டு பண்ணிவிடும் திறன் வாய்ந்தவள்: (ஈண்டு அபிராமி பட்டருக்கு அன்னை தன் காதணியை வானிலெறிந்து அமாவாசையன்று முழுநிலவைக் காட்டிய கதை கூறப்பட்டுள்ளது).

                        சீதள இயல்கலைகள் ஆதவனிடத்து ஒரு

                       தினத்து அதிகம் ஏற்கமுடியாச்

                       சிறியை நீ; தாயிவள் தன் நறிய காதணிகோடி

                       திங்கள் ஓர்தினத்து ஆக்குமால்..

    “ஆயினும் இவள் தன்னுடைய கருணையால் உன்னைத் தனக்குச் சமமானவனாகப் பாவித்து விளையாட அழைக்கிறாள்: வந்துவிடுவாய்,” எனக் கூவி அழைக்கின்றனராம்.

    இவ்வாறு உங்கள் இருவருக்குள்ளும் பேதங்கள், வேற்றுமைகள் இருந்தாலும், அதனைப் பொருட்படுத்தாது குழந்தை விளையாட அழைக்கிறாள் எனும் நயம் மிகவும் இரசிக்கத்தக்கதாம். இதனைப் பேத உபாயம் என்பர்.

                                                                *********

    சேடியரும் செவிலியரும் இவ்வாறெல்லாம் வேண்டியும் வராத சந்திரனைக் கடைசியாகப் பயமுறுத்தியாவது வரவழைக்க முயல்கின்றனர்.

    “சிங்கக்குட்டியான எனது இந்தக் குழந்தையை இவன் சிறுவன், என எண்ணி விடாதே அப்பா! சிறுவன் என்பதற்குப் பொருள் மகாபலியிடம் (மாவலி) சென்று கேட்டுணர்ந்து கொள்வாயாக! சிறு வாமனனாக, மாணிக்குறளனாக வந்து மூவுலகையும் ஈரடியால் அளந்து கொண்டான் தெரியுமா? நிறைமதியே! இவன் உன்னை விரைவாக வருமாறு அழைக்கிறான். உன் பிழையை- இவன் சிறியவன் என நீ எண்ணுவதை- உணர்ந்தால் நீ வந்து இவனுக்குத் தொண்டு செய்யும் உரிமையைப் பெறலாம் அல்லவோ?” என அறிவுரை கூறுகிறாளாம் தாய். இதனையும் பேதம் அல்லது தண்ட உபாயம் எனக் கருதலாம்.

               சிறியனென் றுஎன்னிளஞ் சிங்கத்தை இகழேல்கண்டாய்

              சிறுமையின் வார்த்தையை மாவலியிடைச் சென்றுகேள்

              சிறுமைப் பிழைகொள்ளில் நீயும்உன் தேவைக்குரியைகாண்

              நிறைம தீநெடு மால்விரைந்து உன்னைக் கூவுகின்றான்.

                                                                            (பெரியாழ்வர் திருமொழி-5)

    சந்திரன் எதற்குமே மசியவில்லை! தாய்க்குச் சினம் கட்டுமீறுகின்றது! கூறுவாள்: “தனது பெரிய கைகளால் வெண்ணெய்த் தாழியிலிருந்து வாரி வாரி அமுது செய்ததனால் பெருவயிறு உடைய எங்கள் கண்ணன் உன்னை அழைக்கிறான் பார்! நீ வரவில்லையானால் உன்கதி அதோகதி தான்! சக்கராயுதத்தினால் உன் தலையைச் சீவி விடுவான் என்பதில் எனக்கு ஐயமேயில்லை. உயிர் மீது உனக்கு ஆசையுண்டானால், மகிழ்ந்தோடி எம் ஐயனோடு விளையாட வா,” என அச்சம் காட்டி அழைக்கிறாள். இது தண்ட உபாயம்!

                தாழியில் வெண்ணெய் தடங்கையார விழுங்கி

              பேழை வயிற்றெம் பிரான்கண்டாய்உன்னைக் கூவுகின்றான்

              ஆழிகொண் டுஉன்னையெறியும் ஐயுற வில்லைகாண்

              வாழ வுறுதியேல் மாமதீ மகிழ்ந்தோடிவா.

                                                                (பெரியாழ்வர் திருமொழி – 5)

    அம்புலிமாமா அசைந்து கொடுத்ததோ இல்லையோ அருமையான இலக்கிய நயம் பொங்கும் ஆழ்வார் பாசுரங்கள் நமக்குக் கிடைத்துள்ளன. பொருளுணர்ந்து படித்து மகிழலாமே!

    தண்டனை கொடுப்போம் என்றுகூறி அம்புலியை மிரட்டுகிறார்கள் பெண்கள்!

    ஒருத்தி சொல்கிறாள்: “ஏ அம்புலியே! தான் கூப்பிட்ட உடனே நீ ஏன் வரவில்லை என்று மீனாட்சி அம்மை எங்களைக் கேட்டாள். அவள் உன் மேல் மிகுந்த கோபம் கொண்டிருந்தாள். நாங்கள் என்ன சொன்னோம் தெரியுமா? ‘அம்மா, உன் ஒளி பொருந்திய முக அழகின் முன் தோற்று ஒதுங்கியதால் அவன்  உன் எதிரில் வர நாணம் கொண்டான் போலுள்ளது; அல்லது சிவபிரானின் முடியிலுள்ள பாம்புகள் அவன் பின் வந்து துன்பம் விளைவிக்கும் என அஞ்சியே வராமல் காலம் தாழ்த்துகிறான் போலும்,’ எனவெல்லாம் ஒருவாறாகச் சொன்னோம். நாங்கள் தான் உன்னை அவளுடைய சினத்துக்கு ஆளாகாமல் இவ்வாறு காத்தோம். அவள் சினம் கொண்டால் நீ பிழைக்க இனி ஒருவழியும் இல்லை! செல்ல வேறு இடமும் இல்லை என்று தெரிந்து கொள்!

                       ‘மழைக் கொந்தளக்கோதை வம்மினென்றளவில் நீ

                                 வந்திலை எனக் கடுகலும்…………

                       …………………………..யாம்

                       இத்துணையும் ஒருவாறு தப்புவித்தோம் வெகுளில்

                                 இனியொரு பிழைப்பில்லை காண்…’ என்று சொல்லி, “எங்கள் அம்மையைக் காண இது நல்ல சமயம்,” என இந்த நகரின் பெருமதில்களே உன்னை உரக்கக் கூவி அழைக்கின்றன பார்! மரியாதையாக எங்கள் மதுரைக்கரசியுடன் விளையாட வந்து விடு; உன் நன்மைக்காகத் தான் இதைச் சொன்னேன்!” என்று எச்சரிக்கிறாள்.

    “ஆக்கல், அளித்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்ற ஐந்து தொழில்களையும் செய்து நடனமாடும் சிவபிரானால் தெய்வ நதியாகிய கங்கையுடன் அவர் முடியில் வைத்துக்கொள்ளப்பட்டாய். எதனால் தெரியுமா? வேதத்தின் முடியில் அரசு செலுத்தும் இவளுடைய சிறந்த அடிகள் உன் இதய பீடத்திலும் பொலிந்து திகழ வேண்டும் என்று அவர் பெரிய மனது பண்ணி இவ்வாறு செய்திருக்கிறார். உனக்கு இதை விடப் பெரிய பேறு எக்காலத்திலும் கிடைக்கப் போவதில்லை,” என்கிறாள் செவிலித்தாய் வாருணி.

                ‘ஏடகத் தெழுதாத வேதச் சிரத்தர

                       சிருக்குமிவள் சீறடிகள்நின்

                  இதயத் தடத்தும் பொலிந்தவா திருவுளத்து

                       எண்ணியன்றே கபடமா

              நாடகத் தைந்தொழில் நடிக்கும் பிரான்தெய்வ

                       நதியொடு முடித்தல் பெற்றாய்;

                  நங்கையிவள் திருவுள மகிழ்ச்சி பெறில் இது போலொர்

                                 நற்றவப் பேறில்லை காண்’

    “இவள் அரசாளும் மதுரையின் பெருமைகளை, அம்புலியே நீ அறிவாயோ? அங்கே நிலாமுற்றத்தில் பார்! அழகிய பெண்கள் மகரயாழில் இசையை எழுப்புகின்றனர். இந்த இன்னிசையின் நயத்திற்குப் பரிசு அளித்துப் பொன்னாடை போர்த்துவது போலக் குங்கும மரங்கள் மலர்களை அளித்து உதிர்க்கின்றன. செழித்த கோங்கமரங்கள் அசைகின்ற ஆடகப் பொற்கிழி போன்ற மலர்களை வழங்கி இசையைச் சிறப்பிக்கின்றன. இத்தகைய இசைவளம் பொருந்திய மதுரையின் அரசியாகிய இத்திருமகளுடன் விளையாட அம்புலியே, நீ கொடுத்து வைத்திருக்க வேண்டும். இனி உனக்கு என்னதான் சொல்ல முடியும்? எங்கள் மதுரைத் திருமகளுடன் விளையாட விரைந்து வா,” என்கிறாள் செவிலித்தாய்.

    முத்தமிழ் வளர்த்த மதுரையில் இசைக்கு வழங்கப்படும் சிறப்பைப் பாடலின் இப்பகுதியில் அருமையாக விளக்கியுள்ளார் குமரகுருபர அடிகளார்.

                    ‘மகரயாழ் மழலைக்கு மரவங்கள் நுண்துகில்

                       வழங்கக் கொழும் கோங்குதூங்கு

              ஆடகப் பொற்கிழி அவிழ்க்கும் மதுரைத்திருவொடு

                       அம்புலீ ஆடவாவே’

    இவ்வாறெல்லாம் கூப்பிட்ட பின்னும் அம்புலி வாராதிருந்தால் இழப்பு அம்புலிக்குத் தான்- குழந்தை மீனாட்சியோடு களித்தாடும் வாய்ப்பு எல்லாருக்கும் எளிதில் அமைந்து விடுமா? முன்னைத் தவப்பயனல்லவா அது? நமக்குப் புரிகிறது; அம்புலிக்கும் புரிந்தால் சரி!!

    மதிக்கு மதி (புத்தி) கெட்டு விட்டதோ என வினவி, மதி எனும் சொல்லைப் பன்முறை கையாண்டு சொல்பின்வருநிலையணியாக அமைத்துப் புலவனார் நடேச கவுண்டர் இயற்றிய எட்டிக்குடி முருகன் பிள்ளைத்தமிழ்ப் பாடல் ஒன்று. சந்த நயமும் அணிநயமும் பொருள் நயமும் பொங்கி வழியும் இனிய தமிழின் இணையற்ற ஒரு செய்யுள். வாய்விட்டுப் படித்தால் தமிழின் இனிமையில் நாவெல்லாம் தித்திக்கின்றது!

    ‘யாரையும் நான் மதியேன்’ எனச் செருக்குடையவனாக நீ எண்ணிக் கொண்டிருந்தால் உன்னுடைய அந்தச் சிறுமை வாய்ந்த மதியினை நாங்கள் என்னவென்று கூறுவது? நிலை பெற்ற பெரியாரை (முருகனை) மதிக்காதவனை உலகில் எவரும் மதிக்க மாட்டார்கள்.

    ‘மதியும் (சந்திரனாகிய நீயும்), ஆதவனும் (சூரியனும்), சிவனைத் தன் தீமதியால் மதிக்காது அவமதித்த தக்கனுடைய வேள்வியில் தமது அறிவு பிறழுமாறு உடல் தேய்வுற்றனர். சந்திரன் வீரபத்திரரது திருவடியால் தேய்க்கப்பட்டான்; சூரியன் கண்ணும் பல்லும் (அலர்விழி, வாள் நகை) இழந்தான்.

    ‘கடலைக் கடைந்தெடுத்த கொடிய விடத்தினை அருந்தியவனும் பிறையணிந்த சடையினை உடையவனுமாகிய இறைவன் பெரிதும் மதிக்கும்  அறிவாளி இம்முருகனாவான் (தந்தைக்கு உபதேசம் செய்த குருநாதன் இவன்). இவனை நீ மதிக்கவில்லையெனில், அதன் காரணமாக இவன் சினமுற்றால் உனது பெருவாழ்வு குலைந்து நாசமாகி விடும்.

    ‘நீ நன்மதி / நல்ல அறிவு உடையவன் எனில் இந்த முருகையனோடு ஆடுவதற்கு வா வா அம்புலியே! வளரும் எட்டிக்குடி முருகனோடு விளையாடிட வா வா அம்புலியே!’ என அச்சுறுத்தி அழைக்கின்றனராம்!

                மதியே மென்று நினைத்தனை யேலுன் மதியினை என்சொல்கேம்

                       மன்னும் பெரியரை மதியா தவனை மதிப்பவ ராருலகில்

              மதியா தவர்மதி யாதவன் வேள்வி மதித்துறு தீமதியால்

                       மதிமாழ் குறவுடல் தேய்வுற் றலர்விழி வாணகை போயினராலி

              மதிதீ விடநுகர் மதிசேர் சடையிறை வன்மதி மதியனிவன்

                       மதியில் சினமுறின் மதியே உன்பெரு வாழ்வு குலைந்திடுமே

              மதியா யெனின்முரு கையனோ டாடிட வாவா அம்புலியே

                       வளரெட் டிக்குடிமுருக னொடாடிட வாவா அம்புலியே.

    வான்மதியின் பதினாறு கலைகளையும் அறிவிப்பதே போன்று மதி எனும் சொல் இப்பாடலில் பதினாறு முறை வருவது மெய்சிலிர்க்க வைக்கின்றது.

    இத்தகைய நயங்கள் கொண்ட பிள்ளைத்தமிழ் நூல்களைப் படிக்கப் படிக்க, அவை தெவிட்டாத தமிழின்பம் தருவன என உணரலாம்.

    (தொடரும்)

    Share