Tag: பீ.பெரியசாமி

  • அகநானூற்றில் ஐந்திணை நீர் மேலாண்மை

    -பீ.பெரியசாமி

    முன்னுரை

    அகநானூற்றில் ஐந்திணை மக்கள் வாழ்வியல் குறித்த செய்திகள் பல இடம்பெற்றுள்ளன. அவற்றுள் இன்றைய தேவையான நீர்மேலாண்மை குறித்த செய்திகள் என்னென்னவெல்லாம் இடம்பெற்றுள்ளன என்பதனை இக்கட்டுரையில் காண்போம்.

    குறிஞ்சி நிலப் பாடல்களில் நீர் மேலாண்மை

    கடல்நீரை முகந்து மேகங்கள் நெய்தல் நிலத்தில் அழகுடன் காணப்பட்டாலும் முதலில் மழைப்பொழிவைத் தொடங்குவது குறிஞ்சி நிலத்திலேதான். இதனை,

    கார்கதம்பட்ட கண்அகன் விசும்பின்
    விடுபொறி ஞெகிழியின் கொடிபட மின்னி
    படுமழை பொழிந்த பானாட் கங்குல்(அகம்.108)

    எனும் அகப்பாடல், அகன்ற ஆகாயத்தில் சினந்து எழும் மேகங்கள் பொறிவிடுகின்ற கொள்ளிக்கட்டை போல வரிசையாக மின்னி நள்ளிரவில் மிக்க மழையைப் பொழிந்தது என்று குறிப்பிடுகின்றது.மலைகளின் மீது இயற்கையாக அமைந்திருக்கும் நீர்நிலை சுனையாகும். இது வளமையான பாறைகளின்மேல் அமைந்திருந்ததாக,

    மல்லல் அறைய மலிர்சுனை……”(அகம்.308)

    எனும் அகப்பாடல் குறிப்பிடுகிறது. மேலும், வளமையான பாறையில் அமைந்துள்ள தெளிந்த பெருகிய நீரினை உடைய சுனை என்பதனால் சுனை பாறையின் மீதமைந்துள்ளது புலப்படுகின்றது.  சுனைகள் பறையின் கண் போன்று இருந்ததாக அகநானூற்றுப் புலவர்கள் கூறியுள்ளனர்.

    “பாறைக் கண் அன்ன நிறைச்சுனை பருகி”(அகம்.178)

    என்ற அகப்பாடல்கள் சுனையின் வடிவு பாறையின் கண்ணையொத்ததாக இருந்ததைக் குறிப்பிடுகின்றன.

    பாறை நெடுஞ்சுனை” (அகம்.2)

    என்ற அகப்பாடலடிகள் நீர் நிரம்பிய நீண்ட சுனைகள் இருந்ததாகவும், அவை பாறைகளின் இடையே இருந்ததாகவும் குறிப்பிடுகின்றது. அதேபோல் குறுகிய சுனைகள் இருந்ததாகவும் பாடல்களில் காண முடிகின்றது.

    பாடுஇன் அருவிப் பனி நீர்இன் இசை(அகம்.82)

    அருவிகள் விழும் ஓசை இனிய இசையினைப் போன்றுள்ளதென புலவர் கூறியுள்ளார்.

    சிறுகோட்டுப் பெருங்குளம் காவலன் போல
    அருங்கடி அன்னையும் துயில்மறந் தனளே”(அகம்.252)

    என்ற நக்கண்ணையார்  பாடல் தலைவியின் காதலை அறிந்த தாய்  சிறிய கரையினையுடைய பெரிய குளத்தைக் காவல் செய்பவன் அதன் கரை உடைந்து போகாதபடி இரவெல்லாம் துயிலாது அதனைக் காப்பான் அதுபோல தன்னைக் காத்து நிற்பதாகத் தலைவி கூறும் உவமை வழி குளத்தைப் பாதுகாக்க பாதுகாவலர்கள் இருந்தது தெரியவருகின்றது. குளக்கரைகளைக் கட்டுமானங்களையே கவனத்தோடு கட்டிய மக்கள் அதையும் மீறி அணைகளில் உடைப்பு ஏற்பட்டு விடாமல் இருக்க பாதுகாவலர்களை நியமித்தது அவர்களின் நீர்ப்பராமரிப்புத் திறத்தைப் புலப்படுத்துவதாக உள்ளது. 

    முல்லை நிலப் பாடல்களில் நீர் மேலாண்மை

    முல்லை நில பாறைகளின் நடுவே சுனைகள் இருந்ததனை,

    பாறைக் கண் அன்ன நிறைச்சுனை தோறும்”(அகம்.324)

    எனும் அகப்பாடல் கூறியுள்ளது. மேலும்,

    பணை முழங்கு எழிலி பௌவம் வாங்கி
    தாழ் பெயற் பெருநீர் வலன் ஏர்பு வளைஇ” (அகம்.84)

    எனும் அகப்பாடல் மேகங்கள் வலமாகச் சுழன்று எழுந்தால் மழைப்பொழிவு நிகழுமெனக் குறிப்பிடுகின்றது. மேலும், மேகங்கள் எந்ததிசையில் தோன்றினாலும் கிழக்கு நோக்கி நகர்ந்தால் மழை தவறாது பொழியும் என்று கூறியுள்ளனர். 

    புன் காழ் நெல்லிப் பைங் காய் தின்றவர்
    நீர்குடி சுவையின் தீவிய மிழற்றி
    பண்ணன் சிறுகுடிப் படப்பை நுன்நுரை”(அகம்.54) சிறிய இலைகளையும், புல்லிய விதைகளையுமுடைய நெல்லிக்காயினை உண்டுவிட்டு நீர் குடித்தால் சுவையாயிருக்கும் என்பதை அக்கால மக்கள் அறிந்துள்ளனர். பாலை வழிச் செல்லும் வழிப்போக்கரின் உயிரைப் போகடிக்காது தடுத்து நிறுத்தும் சுவைமிக்க காய்களைக் கொண்டது நெல்லி மரம் என்று மேற்கண்ட அகப்பாடல்கள் எடுத்துரைக்கின்றன. உணவு உண்டவுடன் தோன்றும் நீர் தாகத்தைத் தணிக்க கள் உண்டுள்ளனர். 

    மருத நில பாடல்களில் நீர் மேலாண்மை

    மருதநிலத்தில் மீன்களும், மலர்களும் நிறைந்த நீர்நிலையினை,

    துணிநீர் இலஞ்சி கொண்ட பெரு மீன்(அகம்.236)

    எனும் அகப்பாடலில் முதுநீர் இலஞ்சி என்று அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், 

    நெடுநீர்ப்பொய்கை ……. ……….”(அகம்.246)

    நீள்இரும் பொய்கை ……. …… .”(அகம்.276)

    எனப் பொய்கை ஆழமானதாகவும், நீண்ட பெரிய நீர்நிலையாக இருந்ததையும் மேற்கண்ட அகப்பாடல்கள் சுட்டுகின்றன.

    மருதநிலப் பெண்கள் நீர்நிலைகளிலிருந்து நீர்  எடுத்துவர அழகிய வேலைப்பாடமைந்த குடங்களைப் பயன்படுத்தியுள்ளனர்.

    தெண்கட் தேறல் மாந்தி மகளிர்
    நுண்செயல் அம்குடம் இரிஇ”(அகம்.336)

    பாவைக் கொட்டிலார் என்ற அகநானூற்றுப் புலவர் நுண்ணிய வேலைப்பாடமைந்த குடங்களில் நீர் எடுக்க மருத நிலப் பெண்கள் நீர்த்துறைக்கு வந்ததாகக் குறிப்பிடுகின்றார். எனவே தண்ணீர் எடுத்து வரத் தாழி, குடம் போன்ற பொருள்களைப் பயன்படுத்தியிருப்பதையறிய முடிகின்றது. 

    நெய்தல் நிலப் பாடல்களில் நீர் மேலாண்மை

    நெய்தல் நிலக் குளிர்ச்சியுடைய குளத்தில் குவளை மலர்கள் பூத்து நிறைந்து காணப்பட்டதை,

    தண் கயத்து அமன்ற ஒண்பூங் குவளை”(அகம்.180) எனும் அகப்பாடலில் காணலாம்.

    பாலை நிலப் பாடல்களில் நீர் மேலாண்மை

    பாலை நிலத்தில் கோடை காலத்தில் சுனை நீர் வற்றி இருந்தது  ‘வறுஞ்சுனை’ என்றழைக்கப்பட்டுள்ளது. இதனை,

    நிலம் நீர் அற்று நீள்சுனை வறப்ப
    குன்று கோடு அகைய கடுங்கதிர் தெறுதலின்(அகம்.295) 

    ”……………………….. வறுஞ் சுனை
    மை தோய் சிமைய மலைமுதல் ஆறே(அகம்.119)

    வறட்சி காலங்களில் நீரின்றி உட்பகுதி வற்ண்டு காணப்பட்டுள்ளது. இதனை மேற்கண்ட அகப்பாடல்கள் எடுத்துரைக்கின்றன.

    மலையின் மீதிருந்து கொட்டும் நீர்வீழ்ச்சியே அருவியாகும். மழை பெய்தால்தான் அருவிகள் விழும். மழைக்காலங்களில் மட்டுமே காணவியலும் அழகிய இயற்கை காட்சியது இதனை, 

    கழைநரல் வியல்அகம் வெம்ப மழைமறந்து
    அருவி ஆன்ற வெருவரு நனந்தலை(அகம்.241) என்ற அகநானூற்றுப் பாடல் விளக்குகிறது. மழை பொழியாததால் அருவிகள் இல்லாமல் போயின என்று குறிப்பிடுகின்றது. எனவே அருவி தோன்றுவதற்கு முக்கிய ஆதாரம் மழையே ஆகும்.

    ஆயர்கள் கூவல் தோண்டும் முறைமையினை அறிந்ததோடு அதிலிருந்து நீர் எடுக்கும் தொழில்நுட்ப முறையினையும் நன்கறிந்தவர்களாக இருந்துள்ளனர். கூவலிலுள்ள நீர் உவர்ப்புத்தன்மை உடையதாக இருந்துள்ளது. இதனை, 

    பிணர்அழி பெருங்கை புரண்ட கூவல்
    தெண்கன் உவர் குறைகுட முகவை
    அறனிலாளன் தோண்ட வெய்து உயிர்த்து
    பிறைநுதல் வியர்ப்ப உண்டனள் கொல்லோ ?”(அகம்.207)

    பாலை நிலத்தின்வழி உடன்போக்குச் சென்ற தலைவன் தாகத்தால் வருந்திய தலைவியின் தாகத்தைத் தணிக்கக் கூவலை மேலும் சிறிது தோண்டுகிறான். அப்போது உவர்நீர்  ஊறுகிறது. தலைவி அந்நீரை குடிக்கிறாள். எனவே பாலையில் உவர் நிலத்தில் அமைக்கப்படுவது ‘கூவல்’ என்பது புலனாகிறது. அவ் உவர் நிலத்திலுள்ள நீரும் உவர்ப்புத் தன்மையுடையதாதலால் கூவல் “உவர் நீரையுடைய நீர்நிலை” என்பது புலனாகிறது. வன்புல நிலத்தைத் தோண்டி செய்யப்பட்ட கூவலில் ஆநிரைகள் நீர் அருந்தச் செல்லும் . இதனை, 

    வன்புலம் துமியப் போகி கொங்கர்
    படு மணி ஆயம் நீர்க்கு நிமிர்ந்து செல்லும்(அகம்.295) என அகநானூற்றுப் பாடல் கூறியுள்ளது. இதன்வழிப் பாறை நிலத்தையுடைத்துச் செய்யப்பட்டதே கூவல் என்பது புலனாகிறது.

    கோவலர்கள் தான் கூவலை முதன்முதலில் தோண்டியிருக்க வேண்டும். ஏனெனில் கோவலர்கள் ஆடுமாடுகளை மேய்ச்சலுக்காக நெடுந்தூரத்திற்கு ஓட்டிச் செல்லும் போது அவைகள் தாகத்தால் வருந்தமுறும். அதனால் அவைகளின் தாகத்தைத் தணிக்க அவர்களால் அமைக்கப்பட்டதே இந்தக் கூவலாக இருக்கும். கோவலர்கள் ‘கூவல்’ தோண்டுவதற்கு முதன் முதலில் பயன்படுத்தியது அவர்கள் கையிலிருந்த கோலையே ஆகும். இதனை,

    “…………. ………….. …………. கோடை முகத்தலின்
    நீர்க்குஇயங்கு இனநிரைப் பின்றை வார்கோல்(அகம்.225) 

    நீர் பருகுவதற்குச் செல்லும் பசுக் கூட்டத்திற்குப் பின்னே நீண்ட கோலுடைய ஆயர்கள் வந்தனர் என்று இப்பாடல் கூறுகின்றது. 

    கடற்றுஅடை மருங்கின் கணிச்சியின் குழித்த
    உடைக்கண் நீடுஅமை ஊறல் உண்ட
    பாடுஇன் தென்மணி பயம்கெழு பெருநிரை(அகம்.399)

    நிறையப் பசுக்கூட்டங்களையுடைய கோவலர்கள் அவற்றின் தாகங்களைப் போக்குவதற்காக மலங்காட்டினைச் சார்ந்த பகுதியில் குந்தாலி என்ற கருவியால் குழி தோண்டினர். அதில் ஊறிய நீரைப்பருகிய இனிய ஓசையை உடைய மணிகளைக் கொண்ட பால் கொடுக்கும் பசுக்கள் என்பதன் வழி ஆநிரைகளுக்காக கோவலர்கள் நீர்க்குழிகள் அமைத்தனர் என்பதை அறியலாம். 

    பயநிரை சேர்ந்த பாழ்நாட்டு ஆங்கண்
    நெடுவிளிக் கோவலர் கூவல் தோண்டிய
    கொடுவாய்ப் பத்தல் வார்ந்து உகு சிறுகுழி
    நீர்காய் வருத்தமொடு சேர்விடம் பெறாது(அகம்.155)

    ஆநிரைகள் நிறைந்த பாழ்பட்ட நாட்டின் பல இடங்களிலும் கோவலர்கள் தாம் தோண்டிய கூவலிலிருந்து வளைந்த வாயினை உடைய பத்தலால் நீர்  இறைத்துச் சிறுகுழியில் ஊற்றினர். பாலை நிலத்தின் வெப்பத்தினால் சிறுகுழியில் ஊற்றிய நீரானது காய்ந்து போனதாகக் கூறப்படுகின்றது. இதிலிருந்து கூவலிலிருந்து நீரை எடுத்துச் சிறுகுழியில் ஊற்றப் ‘பத்தல்’ என்ற கலனைப் பயன்படுத்தியதாக அறியமுடிகின்றது. மேலும், பத்தல் என்பது மரத்தாலான நீர் இறைக்கும் கருவி ஆகும்.

    பாலை நிலத்தில் அழுகல்நீர்தான் இருக்கும். அந்நீர் இனிய தன்மையையும், மனநிறைவையும் தராது. அவ்வாரிருக்கும் நீரின் அழுகியவாடையும், உவர்ப்பும் தெரியாமலிருக்க பாலை வழியாகச் செல்வோர் நெல்லிக்காய் உண்டபின் அந்நீரை அருந்தியுள்ளனர்.

    நெடுஞ்சேண் வந்த நீர்நசை வம்பலர்
    செல்உயிர் நிறுத்த சுவைக்காய் நெல்லிப்
    பல்காய் அம்சினை அகவும் அத்தம்(அகம்.271) 

    விளர்ஊன் தின்ற வேட்கை நீங்க
    துகள்அற விளைந்த தோப்பி பருகி(அகம்.265)

    எருதின் ஊனை உண்ட ஆறலை கள்வர்கள் ஆதனால் எழும் மிகுந்த நீர் தாகத்தைப் போக்கும் பொருட்டுத் தூயமுதிர்ந்த நெல்லினால் சமைத்த தோப்பிக் கள்ளினைக் குடித்தனர் என்ற அகநானூற்றுப் பாடல் வழி உணவு உண்டபின் நீர்  தாகத்தைப் போக்க ஆறலை கள்வர்கள் கள் குடித்தது புலனாகிறது. மேலும், பாலை நிலத்தில் வாழும் ஆறலைக் கள்வர்கள் தாகத்தால் வருந்தி மரப்பட்டையை உறிஞ்சித் தாகம் தணித்தனர். ஆயர்கள் தோண்டிய கூவல் வழிச் செல்வாரின் தாகத்தை  தணிக்கவும் பயன்பட்டது.

    கல்லுடை அதர கனம் நீந்தி
    கடல்நீர் உப்பின் கணம்சால் உமணர்
    உயங்குபகடு உயிர்ப்ப அசைஇ முரம்பு இழத்து
    அகல்இடம் குழித்த அகல்வாய்க் கூவல்
    ஆறுசெல் வம்பலர் அசைவிட ஊறும் .(அகம்.295)

    நெய்தல் நிலத்தைச் சார்ந்த உப்பு விற்கும் உமணர்  கூட்டம் பாலை நிலத்தைக் கடந்து சென்றது. உப்புச் சுமையினை இழுத்து வந்த எருதுகள் இளைப்பாறும் பொருட்டு ஓரிடத்தில் தங்குகின்றனர். அவ்விடத்தில் வலிய நிலத்தை இடித்துத் தோண்டின அகன்ற வாயினையுடைய கூவல் நன்கு நீர் ஊறி உமணர்கள் மற்றும் எருதுகளின் தாகத்தைத் தணிக்கக் கூடியதாக அமைந்தது. 

    கயம்துகள் ஆகிய பயம்தபு கானம்”(அகம்.11)

    என்று குளம் வறண்டு குளத்தின் அடிப்பகுதி துகள்களாகக் காணப்பட்டதை மேற்கண்ட பாடல் எடுத்துரைக்கிறது.

    வேனில் நீடிய வான் உயர் வழிநாள்
    வறுமை கூரிய மண்நீர்ச் சிறு குளத்
    தொடு குழி மருங்கில் துவ்வாக் கலங்கல்(அகம்.121)

    வெம்மையுடைய கோடை நிலைபெற்ற காரணத்தால் குளத்திலுள்ள நீர் வறண்டது. அதனால் குளிக்கும் சிறு குளத்தில் தோண்டப்பட்ட சிறுகுழியில் குடிப்பதற்குப் பயன்படாத கலங்கல் நீர் காணப்பட்டது. மழைக்காலங்களில் வெள்ளம் பெருக்கெடுக்கும் போது அந்நீரை குளங்களில் தேக்குகின்றனர். குளங்களில் தேக்கும் நீர் இதர பிற தேவைகளுக்கு பயன்பட்டாலும் கூட அடிப்பகுதியின் வழியாக நீர் கசிந்து தேக்கங்களிலுள்ள நீரின் ஒரு பகுதி நிலத்தடி நீராகிறது நீரற்று வறண்ட கோடைக்காலங்களில் அக்குளங்களில் சிறுகுழியமைத்து அதை மேலும் மேலும் தோண்டும் போது நிலத்தின் அடுத்தடுத்த அடுக்குகளில் தேங்கியிருக்கும் நிலத்தடி நீர் வெளிப்படுகின்றது. இம்முறை சங்ககாலம் தொட்டு இன்றளவும் நடைமுறையிலுள்ளது. 

    கல்லறுத்து இயற்றிய வல்உவர்ப் படுவில்” (அகம்.79) என்ற அகநானூற்றுப்பாடல் கருங்கல்லைச் சமமான வடிவத்தில் அறுத்தெடுத்து குழியமைத்ததாகக் குறிப்பிடுகின்றது. இதன்வழி அருவி நீரினைத் தேக்கி வைக்கப் பாறையினை அறுத்தெடுத்து குழியாக்கி நீரினைக் குறிஞ்சி நில மக்களின் சேகரித்து வைத்துள்ளனர் என்பதனை அறிய இயலுகின்றது.

    தாகத்தால் வருந்திய யானை யாமரப்பட்டைகளை உரித்துத் தாகம் தீர்த்துக் கொண்டதாக, 

    மிசைமரம் சேர்த்திய கவைமுறி யாஅத்து
    நூர் அரை மருங்கின் நீர்வரப் பொளித்து(அகம்.257) எனும் அகப்பாடல் கூறியுள்ளது. அதாவது, தாகத்தால் வருந்திய யானைகள் நீருக்காக அலைந்து திரிந்து நீரற்ற நிலையில் யாமரத்தின் பட்டைகளைச் சுவைத்து அதிலுள்ள நீரினை உண்டதாகக் கூறப்பட்டுள்ளது.

    நீரற்று தாகத்தால் வருந்திய மான் கூட்டங்கள் சிறிய இலையினையும், பெருத்த அடியினையும் உடைய நெல்லிக்கனியினைத் தின்று தாகம் தணித்ததாக,

    “………………………………. புல் இலைப்
    பராரை நெல்லி அம் புளித் திரள் காய்
    கான மட மரை கண நிரை கவரும்(அகம்.69) என்ற அகநானூற்றுப்பாடல் குறிப்பிடுகின்றது.

    கேணிகள் மருதநிலத்தில் இருந்ததனை,

    ஆறு செல் வம்பலர் சேறுகிளைத்து உண்ட
    சிறுபல் கேணி ……………..” (அகம்.137)

    எனும் அகப்பாடல் சிறிய பலவேறு வகையான கேணிகள் இருந்ததாகக் குறிப்பிடுகின்றது. மேலும் மக்கள் குடிநீர் எடுக்கின்ற உண்ணுநீர்த் துறையாகவும் ‘கேணி’ விளங்கியுள்ளது.

    புனல்பொரு புதவின் உறந்தை எய்தினும்” (அகம்.237)

    என்று ‘புதவு’ பற்றிய குறிப்புக்கள் சங்க அகநானூற்றில் இடம் பெற்றுள்ளது. புதவு என்பது “தண்ணீர் வெளியேறும் சிறியவழி” (தமிழகப் பாசன வரலாறு, ப.29) என்று தமிழகப்பாசன வரலாறு குறிப்பிடுகின்றது.

    ஓங்குநிலைத் தாழி மல்கச் சார்த்தி
    குடைஅடை நீரின் மடையினள் எடுத்த(அகம்.275)

    வயலைச் செடிக்கு நீர் ஊற்றுவதற்கு நீர் நிலையிலிருந்து நீர் எடுத்துவர தாழியைப் பயன்படுத்தியுள்ளதாகத் தெரிகின்றது. தாழி என்பது மண்ணாலாகி கலமாக இருக்கலாம். பனங்குடைகளில் தண்ணீர் எடுத்துக் கலத்தை நிரப்பி, பின்பு வீட்டிற்கு நீர் எடுத்து வந்துள்ளதை மேற்கண்ட அகநானூற்றுப்பாடல் சுட்டுகின்றது. குடிநீர் எடுத்து வரவும் மேலே கண்ட முறையினையே அவர்கள் பயன்படுத்தியிருக்கக் கூடும்.

    நிலனும் விசும்பும் நீர் இயைந்து ஒன்றி
    குறுநீர்க் கன்னல் எண்ணுநர்(அகம்.43)

    எனும் அகநானூற்றுப்பாடலில் ‘நீர்க்கன்னல்’ என்பது நீர்க்கடிகாரத்தைக் குறிக்கிறது. எண்ணுநர் என்பது நாழிகைகளைக் கணக்கிட இருந்த நாழிகைக் கணக்கர்களைக் குறிக்கிறது. எனவே நீர்க்கடிகாரம் ஒன்றை உருவாக்கி அதன் மூலமாக பொழுதுகளைக் கண்டறிய நாழிகைக் கணக்கர்களை அமைத்திருந்தும் புலனாகிறது. 

    முடிவுரை

    முதலில் குறிஞ்சி நிலத்தில் மழைப்பொழிவு தொடங்கும்.மலைகளின்மீது சுனைகள் மழைநீரைச் சேகரித்தது. சுனைகள் பார்ப்பதற்குப் பாறைகளின் கண்களைப்போல காட்சியளித்த்து. அருவிகளின் வீழ்ச்சி இனிய ஓசையாய் அமைந்திருந்த்து. பெரிய குளங்களைக் காவலர்கள் காவற்காத்தனர். மேகங்கள் வலமாகச் சுழன்று எழுந்தால் மழைப்பொழிவு நிச்சயம். மேகங்கள் எந்தத் திசையில் தோன்றினாலும் கிழக்கு நோக்கி நகர்ந்தால் மழை தவறாது பொழியும். நெல்லிக்காயினை உண்டுவிட்டு நீர் குடித்தால் சுவையாயிருக்கும். உணவு உண்டவுடன் தோன்றும் நீர் தாகத்தைத் தணிக்கக் கள் உண்டனர்.

    மருதநிலத்தில் மீன்களும், மலர்களும் நிறைந்த நீர்நிலை முதுநீர் இலஞ்சி என்று அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. மருதநிலப் பெண்கள் நீர்நிலைகளிலிருந்து நீர்  எடுத்துவர அழகிய வேலைப்பாடமைந்த குடங்களைப் பயன்படுத்தியுள்ளனர்.

    நெய்தல் நிலக் குளிர்ச்சியுடைய குளத்தில் குவளை மலர்கள் பூத்து நிறைந்து காணப்பட்டன.

    பாலை நிலத்தில் கோடைக் காலத்தில் சுனை நீர் வற்றி இருந்தது  ‘வறுஞ்சுனை’ என்றழைக்கப்பட்டுள்ளது. ஆயர்கள் கூவல் தோண்டும் முறைமையினை அறிந்ததோடு அதிலிருந்து நீர் எடுக்கும் தொழில்நுட்ப முறையினையும் நன்கறிந்தவர்களாக இருந்துள்ளனர். கோவலர்கள் ‘கூவல்’ தோண்டுவதற்கு முதன் முதலில் பயன்படுத்தியது அவர்கள் கையிலிருந்த கோலையே ஆகும். ஆநிரைகளுக்காகக் கோவலர்கள் நீர்க்குழிகள் அமைத்தனர். கூவலிலிருந்து நீரை எடுத்துச் சிறுகுழியில் ஊற்றப் ‘பத்தல்’ என்ற கலனைப் பயன்படுத்தினர். பத்தல் என்பது மரத்தாலான நீர் இறைக்கும் கருவி ஆகும். பாலை நிலத்தில் வாழும் ஆறலைக் கள்வர்கள் தாகத்தால் வருந்தி மரப்பட்டையை உறிஞ்சித் தாகம் தணித்தனர். வலிய நிலத்தை இடித்துத் தோண்டின அகன்ற வாயினையுடைய கூவல் நன்கு நீர் ஊறி உமணர்கள் மற்றும் எருதுகளின் தாகத்தைத் தணிக்கக் கூடியதாக அமைந்தது.

    வெம்மையுடைய கோடை நிலைபெற்ற காரணத்தால் குளத்திலுள்ள நீர் வறண்டது. அதனால் குளிக்கும் சிறு குளத்தில் தோண்டப்பட்ட சிறுகுழியில் குடிப்பதற்குப் பயன்படாத கலங்கல் நீர் காணப்பட்டது. அருவி நீரினைத் தேக்கி வைக்கப் பாறையினை அறுத்தெடுத்து குழியாக்கி நீரினைக் குறிஞ்சி நில மக்கள் சேகரித்து வைத்துள்ளனர். மக்கள் குடிநீர் எடுக்கின்ற உண்ணுநீர்த் துறையாகவும் ‘கேணி’ விளங்கியுள்ளது. ‘புதவு’ பற்றியக் குறிப்புக்கள் சங்க அகநானூற்றில் இடம்பெற்றுள்ளது. புதவு என்பது “தண்ணீர் வெளியேறும் சிறியவழி”. வயலைச் செடிக்கு நீர்  ஊற்றுவதற்கு நீர் நிலையிலிருந்து நீர் எடுத்துவரத் தாழியைப் பயன்படுத்தியுள்ளதாகத் தெரிகின்றது. தாழி என்பது மண்ணாலாகிய கலமாக இருக்கலாம். பனங்குடைகளில் தண்ணீர் எடுத்துக் கலத்தை நிரப்பி, பின்பு வீட்டிற்கு நீர் எடுத்து வந்துள்ளனர். நீர்க்கன்னல்’ என்பது நீர்க்கடிகாரத்தைக் குறிக்கிறது. எண்ணுநர் என்பது நாழிகைகளைக் கணக்கிட இருந்த நாழிகைக் கணக்கர்களைக் குறிக்கிறது. எனவே நீர்க்கடிகாரம் ஒன்றை உருவாக்கி அதன் மூலமாகப் பொழுதுகளைக் கண்டறிய நாழிகைக் கணக்கர்களை அமர்த்தியுள்ளனர். இவ்வாறாக அகநானூற்றில் நீர்மேலாண்மை குறித்து ஐந்திணைப் பாடல்களில் பேசப்பட்டுள்ளது.

    *****

    கட்டுரையாளர் – தமிழ்த்துறைத்தலைவர்
    D.L.R. கலை மற்றும் அறிவியல் கல்லூரி
    விளாப்பாக்கம்   – 632 521.

     

     

     

    Share
  • அகத்திற்கும் புறத்திற்கும் பொதுவான மெய்ப்பாடுகளும் அகநானூறும் – உரையாசிரியர்களின் உரைகளை முன்வைத்து ஓர் ஆய்வு – 2

    -பீ.பெரியசாமி

    1:1:23. விரைவு

    விரைவென்பது, “ஒரு பொருளைச் செய்ய நினைத்தான் அது தாழ்க்கில் அப்பயன் எய்தான்; கடிதின் முடித்தல் வேண்டுமெனக் குறித்த மனநிகழ்ச்சி”( இளம்., இராசா., மெய்.12) எனவும், “இயற்கைவகையானன்றி ஒரு பொருட்கண் விரைவு தொழில்பட உள்ள நிகழும் கருத்து.” (பேரா, குழந்தை., மெய்.12) எனவும், “வேகம், ஆர்வமிகுதியாலெழுவது” (பாரதி., மெய்.12) எனவும், “காலத்தையும் இடத்தையும் சுருக்கி மேற்செல்லக் கடிதுவிழையும் உள்ள எழுச்சி. இஃது உவகைக்குப் பொருளாக அமையும்.” (பாலசுந்., மெய்.12) எனவும் உரையாசிரியர்கள் உரை கொள்வர். விரைவு என்பது எதனையும் விரைவாக அடைதலாகும். இதனை விளக்க இளம்பூரணரும் பாலசுந்தரமும், புறம்.275, 82 ஆகிய பாடல்களையும்; பாரதி, குறுந்.250, 189 ஆகிய பாடல்களையும் எடுத்தாண்டுள்ளனர். இம்மெய்ப்பாட்டினை விளக்க உரையாசிரியர்கள் அகநானூற்றுப் பாடல் எதையும் எடுத்தாளவில்லை.

    1:1:24. உயிர்ப்பு

    உயிர்ப்பென்பது, “முன்புவிடும் அளவினன்றிச் சுவாசம் நீளவிடுதல்.” (இளம், இராசா, தாசன்., மெய்.12) எனவும், “வேண்டிய பொருளைப் பெறாதல்வழிக் கையறவெய்திய கருத்து; அது, நெட்டுயிர்ப்பிற்கு முதலாகலின் அதனையும் உயிர்ப்பென்றானென்பது.” (பேரா., குழந்தை., மெய்.12) எனவும், “ஆனாக் காதலின் நெட்டுயிர்த்தல்” (பாரதி., மெய்.12) எனவும், “ஆற்றாமை காரணமாக எழும் நெடுமூச்சு. இஃது இளிவரலுக்குப் பொருளாக அமையும்.” (பாலசுந்., மெய்.12)எனவும் உரையாசிரியர்கள் பொருள் கொள்வர். உயிர்ப்பென்பது விரும்பியது கிடைக்காத பொழுது வெளிப்படும் நீண்ட சுவாசமாகும். இதனை விளக்க இளம்பூரணரும் தாசனும், குறுந்.142-ஆம் பாடலையும்; பாரதி, குறுந்.142, 359, நற்.253 ஆகிய பாடல்களையும்; பாலசுந்தரம் புறம்.44-ஆம் பாடலையும் எடுத்தாண்டுள்ளனர். இம்மெய்ப்பாட்டினை விளக்க உரையாசிரியர்கள் அகநானூற்றுப் பாடல் எதையும் எடுத்தாளவில்லை.

    1:1:25. கையாறு

    கையாறென்பது, “காதலர் பிரிந்தால் வரும் துன்பம் அந்நிகரனவும் வருவது.” இளம், (இராசா, தாசன், மெய்.12)எனவும், “அவ்வுயிர்ப்புமின்றி வினையொழ்தயர்தல்” (பேரா., குழந்தை, மெய்.12) எனவும், “வசமழிவு, அதாவது செயலறிவு; இதுவும் காழ்த்த காதனோயால் வருவது (பாரதி, மெய்.12) எனவும், “விருப்பிற்குரிய பொருளைப் பிரிதலும் இழத்தலும் பற்றி வரும் செயலறவு. இஃது அழுகைக்குப் பொருளாக அமையும்.” (பாலசுந்., மெய்.12) எனவும் உரையாசிரியர்கள் பொருள் கொள்வர். கையாறு என்பது தனக்குரிமையுடைய பொருளோ உறவுகளோ பிரியுமிடத்து தோன்றும் துன்பமாகும். இதனை விளக்க இளம்பூரணரும் தாசனும், கலி.24 ஆம் பாடலையும்; பாரதி, குறுந்.169, 391, 48 ஆகிய பாடல்களையும்; பாலசுந்தரம், புறம்.240 ஆம் பாடலையும் எடுத்தாண்டுள்ளனர். இம்மெய்ப்பாட்டினை விளக்க உரையாசிரியர்கள் அகநானூற்றுப் பாடல் எதையும் எடுத்தாளவில்லை.

    1:1:26. இடுக்கண்

    இடுக்கணென்பது, “துன்பமுறுதல்” (இளம்., தாசன், இராசா, மெய்.12) எனவும், “மலர்ந்த நோக்கமின்றி மையனோக்கம்பட வரும் இரக்கம்” (பேரா., குழந்தை, மெய்.12)  எனவும், “காதலால் வருந்தும் துன்பம்” (பாரதி., மெய்.12) எனவும், “இடையூறு காரணமாக வரும் துன்பம் இஃது அழுகைக்குப் பொருளாக அமையும்.” (பாலசுந்., மெய்.12) எனவும் உரையாசிரியர்கள் பொருள் கொள்வர். இடுக்கணென்பது ஏதேனும் ஓர் இடையூறு காரணம் பற்றி வரும் துன்பமாகும். இதனை விளக்க இளம்பூரணரும் தாசனும், குறள்.625-ஐயும்; பாரதி, குறுந்.240, 48, நற்.299, குறள்.1175, 1229 ஆகிய பாடல்களையும்; பாலசுந்தரம் புறம்.210-ஆம் பாடலையும் எடுத்தாண்டுள்ளனர். இம்மெய்ப்பாட்டினை விளக்க உரையாசிரியர்கள் அகநானூற்றுப் பாடல் எதையும் எடுத்தாளவில்லை.

    1:1:27. பொச்சாப்பு

    பொச்சாப்பென்பது, “மறத்தல்”( இளம், குழந்தை, பாரதி, இராசா, தாசன்., மெய்.12) எனவும், “அற்றப்படுதல்; அஃதாவது, பாதுகாத்துச் செல்கின்ற பொருட்கண் யாதானும் ஓரிகழ்ச்சிரியான இடையறவுபடுதல்”(பேரா., மெய்.12) எனவும், “மறத்தல் கூடாதவற்றை மறந்திருத்தல். இஃது இளிவரலுக்குப் பொருளாக அமையும்.”( பாலசுந்., மெய்.12) எனவும் உரையாசிரியர்கள் உரைகொள்வர். பொச்சாப்பென்பது மறக்கக் கூடாதவற்றை மறத்தலால் ஏற்படும் உணர்வாகும். இதனை விளக்க இளம்பூரணரும் தாசனும், குறள்.199-ஐயும்; பாலசுந்தரம் புறம்.149-ஆம் பாடலையும் எடுத்தாண்டுள்ளனர். இம்மெய்ப்பாட்டினை விளக்க உரையாசிரியர்கள் அகநானூற்றுப் பாடல் எதையும் எடுத்தாளவில்லை.

    1:1:28. பொறாமை

    பொறாமையென்பது, “பிறர்க்கு ஆக்க முதலாயின கண்ட வழியதனைப் பொறாது நடக்கும் மன நிகழ்ச்சி. அழுக்காறு என்ப” (இளம், இராசா, தாசன், மெய்.12)எனவும், “அழுக்காறு; அஃதாவது பிறர் செல்வங்கண்டவழி வேண்டாதிருத்தல்.” (பேரா., மெய்.12)எனவும், “காதலர் ஒருவர் பழி ஒரு ஆனாமை, ஒல்லாமை, இயற்பழிக்கும் தோழி கூற்றும், ஏனோர் தூற்றும் பழியும் தாங்காது தலைவி வெறுத்தல் காதலியல்பாம்.” (பாரதி., மெய்.12) எனவும், “செருக்கும் திறலும் காரணமாக ஒன்றைப் பொறுத்தலாற்றாத பண்பு. இது பெருமிதத்திற்குப் பொருளாக அமையும். அழுக்காறு என்னும் பொறாமை வேறு; இதுவேறு என உணர்க. அழுக்காறு அறனில் குணமாகலின் அதனை மெய்ப்பாட்டிற்குரிய பொருளாகக் கூறுதல் ஒவ்வாதென அறிக.” (பாலசுந்., மெய்.12) எனவும் உரையாசிரியர்கள் பொருள் கூறுவர். பொறாமையென்பது, பிறரது வளார்ச்சிகளைக் கண்டு மனதில் எழுவதோர் எரிச்சலாகும். அழுக்காறு எனினும் ஒக்கும். கழகத் தமிழகராதி அழுக்காறு என்பதற்கு “பொறாமை; பொய்; தீயநெறி.” (க.த.அ.ப.56) என பொருள் கூறுவதால் இதனை அறியலாம்.  இம்மெய்ப்பாட்டினை விளக்க இளம்பூரணரும் தாசனும், குறள்.168-ஐயும்; குறுந்.181, 187, 288, ஐந்.எழுபது.2-ஆகிய பாடல்களையும்; பாலசுந்தரம் புறம்.8-ஆம் பாடலையும் எடுத்தாண்டுள்ளனர். இம்மெய்ப்பாட்டினை விளக்க உரையாசிரியர்கள் அகநானூற்றுப் பாடல் எதையும் எடுத்தாளவில்லை.

    1:1:29. வியர்த்தல்

    வியர்த்தலென்பது, “தன் மனத்தில் வெகுட்சி தோன்றிய வழிப்பிறப்பதோர் புழுக்கம்,” (இளம்., தாசன், இராசா, மெய்.12) எனவும், “பொறாமை முதலாயினபற்றி மனப்புழுக்கம்” (பேரா., குழந்தை, மெய்.12) எனவும், “நாணாலும் நடுக்கத்தானும் வேர்த்தல், இது காதலரியல்பாதலை. ‘பொறிநுதல் வியார்த்தல்’ என இதன் பின் சூத்திரத்து வருதலானுமறிக.” (பாரதி., மெய்.12)எனவும், “இகல் காரணமாக வரும் உள்ளப்புழுக்கம், மெய்ப்புழுக்கம் சிறுபான்மை வரினும் கொள்க. இது வெகுளிப் பொருளாக வரும் “பெயர்த்தனென் முயங்கயான் வியர்த்தனென் என்றனள்.” என்பது மெய்ப்புழுக்கம். இஃது இளிவரல் பற்றி வரும்.” (பாலசுந்., மெய்.12) எனவும் உரையாசிரியர்கள் உரை கொள்வர். வியர்த்தலென்பது மனப்புழுக்கமாகும். இது காமம், வெகுளி, சினம் போன்றவற்றால் ஏற்படும். இதனை விளக்க இளம்பூரணர்,  தாசன், பாலசுந்தரம் ஆகியோர் குறள்.487-ஐயும், பாரதி

    நின் பிறைநுதற் பொறிவியல்
    உறுவளியாற்றச்
    சிறுவரை திற”  அகம்.136

    எனும் அகப்பாடலையும் எடுத்தாண்டுள்ளனர். மேற்கூறிய அகப்பாடலில், நான் அவளை நெருங்கி அவள் முகத்தைக் காண விரும்பி மிக்க புழுக்கத்தால் உனது நெற்றியில் அரும்பிய வியர்வையைக் காற்று நீக்குமாறு சிறிதுதிற என்று கூறி அன்பின் மிகுதியால் போர்வையை நீக்கினேன் என தலைமகன் தன் நெஞ்சிற்குக் கூறியது. இதில் காம உணர்வினால் தலைவியின்பால் வியர்வை உண்டாகியது என்பது புலப்பட்டுள்ளமையால். இது வியர்த்தலின் பாற்படும்.

    1:1:30. ஐயம்

    ஐயமென்பது, “ஒரு பொருளைக் கண்டவழி யிதுவெனத் துணியாத நிலைமை” (இளம்., தாசன், இராசா, மெய்.12)எனவும், “ஒரு பொருண்மேல் இருபொருட்டன்மை கருதி வரும் மனத் தடுமாற்றம்.” (பேரா., குழந்தை., மெய்.12)  எனவும், “காதல் மிகையாற் கடுத்தல் இது முதற்காட்சியினிகழும் ஐயமன்று; அது தெறிந்தபின் எழாதாதலின், ஈண்டு ஊடலில் எழுமையவுணர்வைக் குறிக்கும்.” (பாரதி., மெய்.12)எனவும், “ஒரு பொருளை இன்னது என வரைந்துணர்தற் காகாத மனத்தடுமாற்றம். ஈண்டு இஃது உவகைக்குப் பொருளாக நின்றது. இது பிற மெய்ப்பாட்டிற்குரிய பொருளாகவும் வரும்.” (பாலசுந்., மெய்.12) எனவும் உரையாசிரியர்கள் உரைகொள்வர். ஐயமென்பது ஒன்றனைக் கண்டு அதுவோ, இதுவோ என துணிய இயலாத நிலையாகும். இதனை விளக்க இளம்பூரணரும் தாசனும், குறள்.1081-ஐயும்; பாலசுந்தரம், புறம்.257, 49 ஆகிய பாடல்களையும் எடுத்தாண்டுள்ளனர். இம்மெய்ப்பாட்டினை விளக்க உரையாசிரியர்கள் அகநானூற்றுப் பாடல் எதையும் எடுத்தாளவில்லை.

    1:1:31. மிகை

    மிகையென்பது, “ஒருவனை நன்கு மதியாமை” (இளம்., மெய்.12)எனவும், “கல்லாமையுஞ் செல்வமும் இளமையும் முதலாக வரும் உள்ளமிகுதி” (பேரா., குழந்தை, மெய்.12) எனவும், “கைம்மிகு காதலான் வரும் நிறையழிவு” (பாரதி, மெய்.12) எனவும், “பழிவழிச் செல்லும் செருக்கு – குற்றம். இஃது வெகுளிப் பொருளாக அமையும்.” (பாலசுந். மெய்.12) எனவும் உரையாசிரியர்கள் உரை கொள்வர். மிகையென்பது உள்ளச் செருக்காகும். இதனை விளக்க இளம்பூரணரும் தாசனும், குறள்.158-ஐயும்; பாலசுந்தரம், குறுந்.292-ஐயும் எடுத்தாண்டுள்ளனர். இம்மெய்ப்பாட்டினை விளக்க உரையாசிரியர்கள் அகநானூற்றுப் பாடல் எதையும் எடுத்தாளவில்லை.

    1:1:32 நடுக்கம்

    நடுக்கமென்பது, “யாதானும் ஒரு பொருளை இழக்கின்றோமென வரு மனநிகழ்ச்சி” (இளம்., தாசன், இராசா, மெய்.12) எனவும், “அன்பும் அச்சமும் முதலாயின உடம்பிற் புலப்படுமாற்றான் உள்ள நடுங்குதல்; புதல்வர்க்குப் பிணி இல்வழியும் எவனாங்கொலன்று நடுங்குதல் அன்பான் நடுங்குதலுமாம், அச்சமென்னுஞ் சுவை பிறந்ததன் பின்னர் அதன் வழித் தோன்றிய நடுக்கம் அச்சத்தாற்றோன்றிய நடுக்கமென்பது.”(பேரா., குழந்தை, மெய்.12) எனவும், “காதலர்க்கு உணர்வு மிகையானாம் பனிப்பு” (பாரதி, மெய்.12) எனவும், “துயர் நேருங்கொல் என்னும் உளக்கலக்கத்தான் உடம்பு அதிர்தல். இஃது அச்சத்திற்குப் பொருளாக அமையும்.” (பாலசுந். மெய்.12)எனவும் உரைகொள்வர். நடுக்கமென்பது தமக்கும் தம்மைச் சார்ந்தோர்க்கும் துன்பம் நேரும் என நினைக்கும்வழி தோன்றுவதோர் உணர்வு. இதனை விளக்க இளம்பூரணரும் தாசனும்,  கலி.13-ஆம் பாடலையும்; பாரதி, குறுந்.178, 53 ஆகிய பாடல்களையும்; பாலசுந்தரம்,

    வெம்மை தண்டா எரியுடு பறந்தலை
    கொம்மை வாடிய இயவுள் யானை
    நீர்மருங் கறியாது தோர்மருங் கோடி
    அறுநீ ரம்பியின் நெறிமுதல் உணங்கும்
    உள்ளுநர்ப் பனிக்கும் ஊக்க ருங்கடன்”    (அகம்.29)

    எனும் அகப்பாடலையும் எடுத்தாண்டுள்ளனர். மேற்கூறிய அகப்பாடலில், கொடிய வெம்மையால் தலைமையுடைய வலிமையற்ற யானை நீர் உண்பதற்காகக் கானல் நீரை நீர் என்று கருதி ஓடுகின்ற, நினைப்பவர்கள் நடுங்கும் அரிய பாலைநிலம் பெருவழியைக் கடந்து பொருளீட்டும் விருப்பத்தோடு நான் அங்குச் சென்றாலும் என் உடம்பு அங்கிருந்ததே தவிர என் உள்ளம் உன்னிடம் தானே இருந்தது எனத் தலைவன் தலைவியிடம் கூறினான். இதில் யானைகளை நினைக்கும்போது நடுக்கம் உண்டாயிற்று என்பதில் நடுக்கம் எனும் மெய்ப்பாடு வெளிப்பட்டுள்ளது.

    1:2. உரையாசிரியர்களின் மாறுப்பட்ட உரைகளும் தீர்வும்

    உரையாசிரியர்கள் இந்நூற்பாவினை பல்வேறு விதமாக பொருள் கொண்டுள்ளனர். அவை,

    “மேற்சொல்லப்பட்டன ஒருபக்கமாக, ஒருக்கமுடைமை முதலாகச் சொல்லப்பட்ட முப்பத்திரண்டும் உள, அவையல்லாத விடத்து என்றவாறு. எனவே, ஆமிடத்து இவை யங்கம் ஆகும். இத்தனையும் கூறப்பட்ட அகத்திற்கும் புறத்திற்கும் பொதுவென்று கொள்க.”( இளம்.மெய்.12 )

    என இளம்பூரணர் கூறியுள்ளார். இதனை நோக்குமிடத்து மேற் சொல்லப்பட்ட முப்பத்திரண்டு போல இங்கே சொல்லப்படும் முப்பத்திரண்டும் அகத்திற்கும் புறத்திற்கும் பொதுவானது எனவும் இவை மெய்ப்பாட்டிற்குரியவை என்பதும் இளம்பூரணரின் கருத்தாகும். இதனைப் பேராசிரியர் கூறுமிடத்து,

    “மேற்கூறிவந்த எண்ணான்குமன்றி இவை முப்பத்திரண்டும் அவை போல்வன மெய்ப்பாடென்ப துணர்த்துதல் நுதலிற்று. ………..சொல்லப்பட்ட முப்பத்திரண்டும் ஒரு கூறாக; ஒரு பாலென்பது இனிச் சொல்லுகின்ற ஒருகூறென்றவாறு; பின்னர் அவற்றையெல்லாம் எண்ணி ‘இவையுமுளவே அவையலங் கடையே’ யென்றார். ஈண்டெண்ணப்பட்டவையே ஆண்டடங்குவனவும் உள.அப் பொருண்மைய வல்லாதவிடத்து இவை முப்பத்திரண்டும் ஈண்டு மெய்ப்பாடாகும்.” (பேரா,மெய்.12 )

    எனக் கூறியுள்ளார். இதனை நோக்குமிடத்து மேற் சொல்லப்பட்ட முப்பத்திரண்டு போல இங்கே சொல்லப்படும் முப்பத்திரண்டும் அகத்திற்கும் புறத்திற்கும் பொதுவானது எனவும், இவை மெய்ப்பாட்டிற்குரியவை என்பதும் இவை மேற்சொல்லப்பட்ட முப்பத்திரண்டில் அடங்காதவிடத்து  தோன்றும் என்பதும் பேராசிரியர் கருத்து. மேலும், பாரதி கூறுமிடத்து,

    “…………….. ஆங்கவை ஒருபாலாக பிரித்து நிறுத்தி, “ஒருபால்” என வேறுதொடங்கி எவ்வெட்டாய் வகுத்து இச்சூத்திரத் தெண்ணப் பெறும் உணர்வு முப்த்திரண்டும் புறக்குறிச் சுட்டின்றி வாளா கூறப்பெறுதலாலும், நகை முதலிய புறக்குறி பெறும் பான்மைய எண்ணான் குணர்வின் மெய்ப்பாடு எட்டே எனக் குறித்து விலக்கிதாலும் இதில் நாலெட்டும் முன் எண்ணான்கென்ற மெய்பாட்டு வகைகளின் வேறாய்ச் செய்யுட் பொருள் சிறக்க வரும் உணர்வுகளாதல் தேற்றமாகும். இன்பான்மை வேறுபாடு விளங்க, இச்சூத்திரத் துவக்கத்தில் இவ்வுணர்வுகளை எண்ணத் தொடங்குமுன் “ஆங்கவை ஒரு பாலாக, ஒருபால்” என நிறுத்த சொற்பெய்த குறிப்புமறிக. இவை புறக்குறிச்சுட்டுப் பெறாமையால் மெய்ப்பாடாகச் சிறவாவெனினும் மெய்ப்பாடுகள் போலச் செய்யுட்பொருள் சிறக்கவரும். உள்ளுணர்வுகளாதலின் இவ்வியலில் ஒப்பமுடித்துக் கூறப்பெற்றன. இனி இவ்வாறு எண்ணான்கும் நாலெட்டுமாய் வகைபெறலொன்று புறக்குறிச் சார்புடைமையும் இன்மையும் ஒன்று, ஆக இவ்விருதிற வேறுபாட்டையுமன்றி, இவற்றிடை இன்னுமொரு தன்மை வேறுபாடுமுளது. மெய்ப்பாடுவகை எண்ணான்கும் அகப் புறப் பொருட் பகுதிகளிரண்டிற்கு மொப்ப வருபவை. இதிற் குறிக்கும் உணர்வுவகை நாலெட்டும் அகத்துறைக்குச் சிறப்புரிமை பெறுவன. இவை எவ்வெட்டாய் முறையே “இயற்கைப் புணர்ச்சியும் இடந்தலைப்பாடும் பாங்கொடுதழாஅலும் தோழியிற் புணர்வு மென்றாங்கந்நால் வகையினு மடைந்த சார்பொடு” கண்ணிய நால்வகைக் கேற்பத் தொகுக்கபட்டுள.” (பாரதி, மெய்.12 )எனக் கூறியுள்ளார். இவை புறக்குறிச் சுட்டு பெறாமையால் மெய்பாடாகாது. ஆனாலும் செய்யுட் பொருள் சிறக்க வரும் உள்ளுணர்வாகும் என்பதும், புறக்குறிச் சார்பின்மை என்பதும், மேற்கூறப்பட எண்வகை மெய்ப்பாடுகளும் அகத்திற்கும் புறத்திற்கும் பொதுவானவை. இங்கே சொல்லப்படும் முப்த்திரண்டும் அகத்திற்குச் சிறப்புடையவை, இவை எட்டு எட்டாக பிரிக்கப்படுபவை என்பது பாரதியின் கருத்து. இது மேற்கூறிய இளம்பூரணர் மற்றும் பேராசிரியரின் கருத்துக்கு மாறுபட்டது. அவர்கள் இம்முப்பத்திரண்டும் மேற்கூறிய முப்பத்திரண்டுபோல அகத்திற்கும் புறத்திற்கும் பொதுவானவை என்றும் அவை மெய்ப்பாடுகள் என்றும் உரை கொள்கின்றனர். மேலும், குழந்தை கூறுமிடத்து,

    “ ‘ஆங்கவை ஒருபாலாக ஒருபால்’ என்றதனால், பால் அல்லது கூறு எனப்படுவன தம்மின் ஒத்த எண்ணாதல் வேண்டுமாகலின், அவை 4-11 முப்பத்திரண்டெனவே, இவையும் முப்பத்திரண்டெனத் தொகை கொள்ளப்பட்டது. அவை ஒருபால் ஆக, இவை ஒருபால் என்க. பால் – கூறு. ஆங்கவை – அங்குக் கூறியவை, முன் கூறியவை. எனா – எண்ணிடைச் சொற்கள்.” குழந்தை., மெய்.12

    என்கிறார். இவை முப்பத்திரண்டும் மேற் கூறியதைப் போல அகத்திற்கும் புறத்திற்கும் பொதுவானவை என்பது பாரதியின் கருத்து. மேலும், பாலசுந்தரம்,

    “இவை முப்பத்திரண்டும் எள்ளல் முதலியவற்றைப் போல வரையறைப்பட்டு அடங்காமல் எண்வகை மெய்ப்பாட்டினுள் விரவி வருதலானும் புறத்திணைக்குச் சிறந்துரிமை பெற்று நிற்றலானும் வேறாகத் தொகுத்து ஓதப்பெற்றன. மற்று ஈண்டுக் கூறப்பெற்றுள்ள வியர்த்தல், தன்மை, விரைவு, வாழ்த்தல், நாணுதல், உயிர்ப்பு, கையாறு, முனிதல், ஆராய்ச்சி, ஐயம் முதலியவாக வருவனவற்றொடு பின்னர்; அகத்திணைக்குரியவாக ஓதப் பெற்றனவற்றுள் வரும், பொறிநுதல் வியர்த்தல், இல்வலியுறுத்தல், பாராட்டெடுத்தல், அலர், நாணல், புலம்பித் தோன்றல், கையறவுரைக்தல், இன்பத்தை வெறுத்தல், ஏதமாய்தல், ஐயஞ் செய்தல் முதலியவை ஒத்தனவாக உள்ளமையின் இங்ஙனம் ஈரிடத்துங் கூறியது என்னை யெனின்? அவ்வாறு வருவன ஒருபுடை ஒக்குமாறும் அகத்தினைச் செய்யுட்டு மெய்ப்பாட்டுறுப்புக் கூறுங்கால் உடைமை, இன்புறல் முதலிய பொருள்பற்றிக் கூறாமல் புகுமுகம்புரிதல்  முதலாய சிறப்புப் பொருள் பற்றியும் எள்ளல் முதலாய பொதுப்பொருள் பற்றியும் எள்ளல் முதலாய பொதுப்பொருள் பற்றியும் கூறல் வேண்டுமென்பதும் புறத்திணைச் செய்யுட்கு மெய்ப்பாட்டுறுப்புக் கூறுங்கால் புகுமுகம்புரிதல் முதலாய அகத்திணைக்கே உரிபொருள் பற்றிக்கூறாமல் உடைமை, இன்புறல் முதலாய சிறப்புப்பொருள் பற்றியும் எள்ளல் இளமை முதலாய பொதுப்பொருள் பற்றியும் கூறல் வேண்டும் என்பதும் அறிவித்தற்கென்க. அது பெறுமாறியாங்ஙனமெனின்? ஈண்டு வியர்த்தல், நாணல் எனவும் ஆண்டுப் பொறிநுதல் வியர்த்தல், ஈரமில் கூற்றம், ஏற்றலர் நாணல் எனவும் வேறுபடுத்துக் கூறுதலான் பெறிவது மென்க.” (பாலசுந்.மெய்.12)

    என கூறியுள்ளார். இதில் எள்ளல் முதலாய மெய்ப்பாடுகள் பொதுமெய்ப்பாடுகள் எனவும்; உடைமை முதலானவை சிறப்புக்குரிய மெய்ப்பாடுகள் எனவும் கூறப்பட்டுள்ளது. எள்ளல் முதலாய மெய்ப்பாடுகள் முதனிலை மெய்ப்பாடுகள் இவை பொருந்தாதவிடத்து, உடைமை முதலாய துணைநிலை மெய்ப்பாடுகள் தோன்றும் என்பதே பொருத்தமுடையதாகும். ஏனெனில், இரண்டும் ஒருவகையாகுமெனில் இம்முப்பத்திரண்டையும் முன் கூறிய எண்வகை மெய்ப்பாடுகளைப் போல கூறியிருக்கலாம். அவ்வாறு அல்லாமல் அவற்றை முன்னர் வைத்து இம்முப்பத்திரண்டைப் பின்னர் உணர்த்துதலின் மேற்கூறியவாறேஅமையும்.

    1:3. பழைய உரையாசிரியர்கள் உரைகளைப் பின்னை உரையாசிரியர்கள் மறுப்பு

    பழைய உரையாசிரியர்களான இளம்பூரணர் மற்றும் பேராசிரியரின் உரைகளைப் பின்னைய உரையாசிரியர்களான பாரதி, பாலசுந்தரம் ஆகியோர் மறுத்துரைத்துள்ளனர். அவர்களுள் பாரதி,

    “இவ்வாறு அகத்துறைகளுக்குச் சிறந்துரிய இவற்றையும் முன் “எட்டே மெய்ப்பாடு” என வகுத்துப் பிரித்த எண்ணான் குணர்வு போலவே, அகத்துக்கும் புறத்துக்கும் ஒப்பவருவன எனக் கருதுவர் பழையவுரைக்காரர். நானான்காய் எட்டுவகை பெற்றுப் புறந்தோன்றவால் மெய்ப்பாடாமெனச் சுட்டி அவற்றை ஒருபால் எனப்பிரித்து நிறுத்தி, பின் மற்றொரு பாலெனக் குறிக்கப்பெற்ற இவை முப்பத்திரண்டையும் தனித்தும் நானான்காயும் எண்ணாமல், எவ்வெட்டாய் நான்குவகை யிற்றொகுத்த தன் குறிப்பும் பயனும் அவருரையில் விளக்கப் பெறாமையானும், இவை முன் முப்பத்திரண்டின் வேறுபட்ட பான்மைய எனச் சூத்திரச் சொற்றொடர் சுட்டுதலானும், அவருரை பொருந்தாமையுணர்க. அன்றியும், இவையும் முன்னவை போலப் பொருட் பகுதிகளிரண்டிற்கும் பொதுவாய் வருமெனில் பொது உணர்வு பலவிருக்க இவற்றை இவ்வாறு ஈண்டுத் தொகுத்துக் கூறுதலிற் சிறப்பின்மையோடு இவற்றுட் சில முன் மெய்ப்பாடு வகையில் வந்தனவால் ஈண்டு மீண்டுங் கூறுதல் மிகையுமாகும். இதில் வெரூஉதலும் நடுக்கமும் முன் அச்சமாகும்; அரற்றல் முன் அழுகையினடங்கும்; இன்புறல் முன் உவகையாகும்; மடிமை முன் அசைவிலடங்கும்; இடுக்கண் முன் வருத்தமாகும்; இதனாலும் இவர் கருத்து இச்சூத்திரப் பொருளன்மை தேறப்படும். பிறிதொரு பான்மைத்தாம் இவை முப்பத்திரண்டும் நான்காயும் தனித்தும் எண்ணப்படாமல் எவ்வெட்டாய் நான்கு வகையுற்றொகுத்த தன் குறிப்பு அவர் கூறாமையானும், இவை முன்னவற்றின் வேறுபட்ட பான்மைய என இதில் தெளிக்கப்பட்டமையானும், அவர் கூற்றுப் பொருந்தாமை ஒருதலை.” (பாரதி, மெய்.12)

    என கூறியுள்ளார். இவர் கூற்றுப்படி இங்கே சுட்டப்படும் முப்பத்திரண்டு மெய்ப்பாடுகளும் மேற்சொன்ன முப்பத்திரண்டில் அடங்கும் என்பதாகும். பாலசுந்தரம்,

    “இனி இளம்பூரணரும் பேராசிரியரும் இக்கூறிய முப்பத்திரண்டினையும் நகை முதலாய எண்வகை மெய்ப்பாடுகட்குரிய பொருளெனக் கருதாமல் இவற்றையே மெய்ப்பாடு என்று கருதி உரை விளக்கம் செய்து போந்தனர். நாவலர் சோமசுந்தர பாரதியார், இவை முப்பத்திரண்டும் மெய்ப்பாடு போன்று செய்யும் பொருள் சிறக்க வரும் உணர்வுகள் என்றும் களவிற்குரிய இயற்கைப் புணர்ச்சி முதலிய நான்கற்கும் முறையே எட்டெட்டாக உரிமை பெற்று வரும் என்றும் வலிந்தும் நலிந்தும் பொருள் கூறிச் சென்றனர். அவர் கருத்து நூல்நெறிக்கு ஒவ்வாமையை விளக்கப்புகின் விரயுமாதலின் பின் வரும் உரைக்குறிப்புகளை நோக்கி உணர்ந்து கொள்க. எண்வகை மெய்ப்பாடுகட்கும் அடிப்படையாக எள்ளல் முதலிய முப்பத்திரண்டு பொருளும் ஒரு பகுப்பாகி அமைய அவையல்லாதவிடத்துப்  பிறிதொரு பகுப்பாக உடைமை, இன்புறல் முதலியனவாக வரும் இவை முப்பத்திரண்டும் பொருளாதற்கு உளவாகும். இவை, உடைமையின்புறல், நடுவுநிலையருளல் என்றாற் போல ஒருங்கு எண்ணுதற்கு ஏற்ப நிற்றலான் இவற்றை முப்பத்திரண்டாக எண்ணிக் கோடல் வேண்டுமென உணர்ந்த ஆங்கவை ஒருபாலாக் ஈங்கிவை ஒருபால் எனக்கூறினார் ஆசிரியர் என்க. அவையும் என்னும் எச்சவும்மை அவற்றின் சிறப்பின்மை தோன்ற நின்றது. உயிர்ப்பெனாஅ, நடுக்கெனாஅ என்பவை செய்யுளின் நிறைக்க வந்த அளபெடை எனா என்பவை எண்ணின்கண் வந்தன. இவை முப்பத்திரண்டும் இடத்திற்கேற்பப் பிற மெய்ப்பாடுகளுக்கும் பொருளாக வருமென அறிக. உரையாசிரியன்மர் இவற்றிற்கு அகப்பொருள் பற்றிய செய்யுட்களையும் உதாரணமாகக் காட்டியுள்ளனர். ஆசிரியர் அகத்திணைக்குரிய பொருள்களை வகுத்து விதந்து பின்னர் ஓதுதலான் அங்ஙனங் காட்டுதல் மயங்கவைத்தலாம் என்க.” (பாலசுந். மெய்.12) எனக் கூறியுள்ளார். மேற்சொன்ன முப்பத்திரண்டு மெய்ப்பாடுகளும் பொருந்தாதவிடத்து,  பிறிதொரு பகுப்பாக உடைமை, இன்புறல் முதலியனவாக வரும் இவை முப்பத்திரண்டும் பொருளாதற்கு உளவாகும் என்பது பாலசுந்தரம் கருத்தாகும். இங்கே பாலசுந்தரம் கூற்றுப்படி இங்கே சுட்டப்படும் முப்பத்திரண்டு மெய்ப்பாடுகளும் மேற்சொன்ன முப்பத்திரண்டில் அடங்குமென்பது பொருந்தாது. அவை முதன்மையானவை இவை துணைமையானவை என்பதே பொருந்தும்.

    1:4. முடிவுரை

    நடுவுநிலையென்பது எவற்றின் மீதும் பற்றில்லாத உணர்வுநிலை. இதனை சமநிலை என பேராசிரியரும் குழந்தையும் கூறுமிடத்து; பாலசுந்தரமும் பாரதியும் இதனை மறுத்துரைக்கின்றனர். இவர்களின் கருத்துப்படி, நடுவுநிலையென்பது அறநெறிதவறாமை. இதுவே சரியானது. சமநிலையும், நடுவுநிலைமையும் வெற்வெறானவை. வரைதலென்பது நாணம் ஏற்படும்வரை மகிழ்ந்த பலவும் நாணம் வந்தவழி விலகும் மனநிலை எனவும்; காதலுக்குரியது எனவும்; செய்யத்தகுவனவும் செய்யதகாதனவும் உணர்ந்து ஒழுக்கத்தோடு வாழும் நிலையெனவும் இருவேறு கருத்துக்களை முன் வைக்கின்றனர் உரையாசிரியர்கள். இவற்றுள், வரைவு என்பது திருமணத்தை உணர்த்துவது எனவே வரைதலென்பது காதலுக்குரிய ஒழுக்கமாகக் கொள்வதே பொருந்தும். பிறனை வாழ்த்துதல் – பிறரால் வாழ்த்தப்படுதல் – தெய்வம் போற்றுதல் எனும் மூன்று வேறுபட்ட கருத்துக்கள் உரையாசிரியார்களிடையே காணப்படுகிறது. இவை மூன்றுமே வாழ்த்துதலின் பாற்படும். ஏனெனில், தான் பிறரை வாழ்த்துதலும், பிறர் தன்னை வாழ்த்தினாலும், தெய்வத்தை மக்கள் போற்றினாலும் அது வாழ்த்துதலின் பாற்படும். கருதலென்பது, குறிப்பு  – ‘மனக்குறிப்பு’ ஆகும். மனதில் தோன்றும் ஆழ்ந்த சிந்தனையே மனக்குறிப்பு எனவே இவைகள் இங்கே பொருத்தமுடையன. ஆனால், பேராசிரியரும் குழந்தையும் ‘மறந்ததனை நினைத்தல்’ என்கின்றனர். ஏற்கனவே, நினைத்தல் என்பதற்கு இவ்வாறுபாடம் கொண்டுள்ளதாலும், அதுவே பொருத்தியுள்ளதாலும் இங்கு இது பொருந்தாது. எள்ளல் முதலாய மெய்ப்பாடுகள் முதனிலை மெய்ப்பாடுகள் இவை பொருந்தாதவிடத்து, உடைமை முதலாய துணைநிலை மெய்ப்பாடுகள் தோன்றும் என்பதே பொருத்தமுடையதாகும். ஏனெனில், இரண்டும் ஒருவகையாகுமெனில் இம்முப்பத்திரண்டையும் முன் கூறிய எண்வகை மெய்ப்பாடுகளைப் போல கூறியிருக்கலாம். அவ்வாறு அல்லாமல் அவற்றை முன்னர் வைத்து இம்முப்பத்திரண்டைப் பின்னர் உணர்த்துதலின் மேற்கூறியவாறே அமையுமென்க. அகத்திற்கும் புறத்திற்குமான முப்பத்திரண்டு மெய்ப்பாடுகளில், கனவு, வெரூஉதல், மடிமை, வியர்த்தல், நடுக்கம் எனும் ஐந்து மெய்ப்பாடுகளை விளக்க மட்டுமே உரையாசிரியர்களால் அகநானூற்றுப் பாடல் எடுத்துக்காட்டாக எடுத்தாளப்பட்டுள்ளது. ஏனைய இருபத்து ஏழு மெய்ப்பாடுகளுக்கும் உரையாசிரியர்கள் அகநானூறறுப் பாடலை எடுத்துக்காட்டாக எடுத்தாளவில்லை.

    *****

    கட்டுரையாளர்
    தமிழ்த்துறைத்தலைவர்
    D.L.R. கலை மற்றும் அறிவியல் கல்லூரி
    விளாப்பாக்கம், ஆற்காடு

     

     

    Share
  • அகத்திற்கும் புறத்திற்கும் பொதுவான மெய்ப்பாடுகளும் அகநானூறும் – உரையாசிரியர்களின் உரைகளை முன்வைத்து ஓர் ஆய்வு – 1

    -பீ.பெரியசாமி

    1.0 – முன்னுரை

    எண்வகை மெய்ப்பாடுகளையும் அதன் விரிகளையும் periyasamiமுதலில் கூறிய தொல்காப்பியர், அதனைத் தொடர்ந்து அகத்திற்கும் புறத்திற்கும் பொதுவான, உடைமை, இன்புறல், நடுவுநிலை, அருளல், தன்மை, அடக்கம், வரைதல், அன்பு, கைம்மிகல், நலிதல், சூழ்ச்சி, வாழ்த்தல், நாணுதல், துஞ்சல், அரற்று, கனவு, முனிதல், நினைதல், வெரூஉதல், மடிமை, கருதல், ஆராய்ச்சி, விரைவு, உயிர்ப்பு, கையாறு, இடுக்கண், பொச்சாப்பு, பொறாமை, வியர்த்தல், ஐயம், மிகை, நடுக்கம் எனும் மெய்ப்பாடுகளைக் கூறியுள்ளார். ( தொல். மெய்-12)   இவ்வியலில் தொல்காப்பியர் கூறியுள்ள இம்மெய்ப்பாடுகளும் அகநானூற்றுப் பாடல்களும் உரையாசிரியர்களின் வழிநின்று ஆராயப்படவுள்ளன.

    1:1. அகத்திற்கும் புறத்திற்குமுரிய நிலைகளன்கள்

    மேலே கூறப்பட்ட எண்வகை மெய்ப்பாடுகளும் அதனைத் தொடர்ந்து கூறப்படும் முப்பத்திரண்டும் அகத்திற்கும் புறத்திற்குமான நிலைக்களன்களாகும் இதனை, “இவை முப்பத்திரண்டும் மேற்கூறிய முப்பத்திரண்டும் போல அகத்திற்கும் புறத்திற்கும் பொதுவாகி நிகழும் மெய்ப்பாடெனக் கொள்க” (பேரா, மெய்.12) என பேராசிரியர் கூறியுள்ளார்.

    1:1:1. உடைமை

    உடைமையென்பது “யாதானு மொருபொருளை உடையனாயினால் வருதலாகும் மனநிகழ்ச்சி” (இளம்., இராசா, தாசன், மெய்.12) எனவும், “உடைமையென்பது, செல்வம்; செல்வநுகர்ச்சியாயின் உவகைப் பொருளாம்; இஃது அன்னதன்றி நுகராதே அச்செல்வந்தன்னை நினைந்தின்புறுதற்கு ஏதுவாகிய பற்றுள்ளம்; அஃதாவது நிதிமேனின்ற மரம்போலச் செல்வமுடைமையான்வரும் மெய்வேறுபாடு” (பேரா., குழந்தை, மெய்.12) எனவும், “மேற்கூறிய துய்க்கப்படும் செல்வத்தின் வேறுபட்டுப் பிறவாக வரும் கிழமைப் பொருள்களாம். இஃது உவகை என்னும் மெய்ப்பாட்டிற்குப் பொருளாக அமையும்” (பாலசுந், மெய்.12)  எனவும் உரையாசிரியர்கள் உரைகொள்வர்.  உடைமை என்பது யாதானும் ஒரு பொருளுக்கு உரிமை கொண்டவழி மனத்தில் தோன்றும் மனவியல்பாகும். இதனை விளக்க இளம்பூரணரும், பாலசுந்தரரும், புறம்.72-ஆம் பாடலையும்; மேலும், பாலசுந்தரம் புறம்.188-ஆம் பாடலையும்;  தாசன், புறம்.2ஆம் பாடலையும் எடுத்தாண்டுள்ளனர். இம்மெய்ப்பாட்டினை விளக்க உரையாசிரியர்கள் அகநானூற்றுப் பாடல் எதையும் எடுத்தாளவில்லை.

    1:1:2. இன்புறல்

    இன்புறலாவது, “நாட்டாராகிப் பிரிந்து வந்தோரைக் கண்டவழி வருவதோர் மன நிகழ்ச்சி போல்வது” (இளம்., மெய்.12) எனவும், “அவ்வுடைமையை நினையுந்தோறும் இடையிட்டுப் பிறக்கும் மனநிகழ்ச்சி” (பேரா., மெய்.12) எனவும், “அக்கிழமையுணர்வால் விளையுமகிழ்வாகும்.” (பாரதி, மெய்.12) எனவும், “தமது உடைமைகளையும் செயல்களையும் பற்றித் தாமே எண்ணி மகிழ்தல் இதுவும் உவகைக்குப் பொருளாக அமையும்.” (பாலசுந்.மெய்.12) எனவும் உரையாசிரியர்கள் உரை கொள்வர். இன்புறலென்பது தனக்கு உரிமையுடைய நபரையும் உடைமைகளையும் செயல்களையும் எண்ணி தாமே தமக்குள் மகிழும் மனவியல்பாகும். இதனை விளக்க இளம்பூரணர், நற்.182, 3  – ஆகிய பாடல்களையும்; பாலசுந்தரம் குறள். 66, 228 ஆகியவற்றையும் எடுத்தாண்டுள்ளனர். இம்மெய்ப்பாட்டினை விளக்க உரையாசிரியர்கள் அகநானூற்றுப் பாடல் எதையும் எடுத்தாளவில்லை.

    1:1:3. நடுவுநிலைமை

    நடுவுநிலையாவது, “ஒருமருங்கு ஓடாது நிகழும் மனநிகழ்ச்சி” (இளம், தாசன், ராசா., மெய்.12) எனவும், “ஒன்பது சுவையுள் ஒன்றென நாடகநிலையுள் வேண்டப்படுஞ் சமநிலை; அஃதாவது “செஞ்சாந் தெறியினுஞ் செத்தினும் போழினு நெஞ்சோர்ந்தோடா நிலைமை” அது காம வெகுளி மயக்க நீங்கினோர் கண்ணே நிகழ்வது; இது சிறு வரவிற்றாகலான் அவற்றோடு கூறினான்.” (பேரா.குழந்தை., மெய்.12) எனவும், “தமரெனக் கோல் கோடாது பிறரெனக் குணங் கொல்லாது நிற்கும் நயனுடைமையாகிய தகவு. இதனை வடமொழி நாடக நூலார் கூறும் சாந்தம் என்னும் சுவையாகக் கருதி விளக்குவர் உரையாசிரியன்மார். சாந்தம் வேறு; நடுவுநிலை வேறு என அறிக.”( பாலசுந்., மெய்.12) எனவும், “காதலும் கடனும் மோதக்  கோடா மனச் செப்பம்; விழைவுக்கடிமையாகாது அறமறவாக் காதற் செவ்வி. நடுவுநிலை ஈண்டுச் சமநிலை எனும் சுவை சுட்டாது, தனை மறக்கும் கற்புக் காதலின் உணார்வையே  குறிக்கும்” (பாரதி., மெய்.12) எனவும் உரையாசிரியர்கள் உரைகொள்வர். நடுவுநிலையென்பது எவற்றின் மீதும் பற்றில்லாத உணர்வுநிலை. இதனை சமநிலை என பேராசிரியரும் குழந்தையும் கூறுமிடத்து; பாலசுந்தரமும் பாரதியும் இதனை மறுத்துரைக்கின்றனர். இவர்களின் கருத்துப்படி, நடுவுநிலையென்பது அறநெறிதவறாமை. இதுவே சரியானது. ஏனெனில் நடுநிலைமை எனும் திருக்குறள் அதிகாரத்தை விளக்கும் பரிமேலழகர், “பகை, நொதுமல், நண்பு என்னும் மூன்று பகுதியினும் அறத்தின் வழுவாது ஒப்ப நிற்கும் நிலைமை.” (திருக்குறள், பரிமேலழகார்  உரை., ப.46) என்கிறார். ஆகவே, சமநிலையும், நடுவுநிலைமையும் வெற்வெறானவை.  இதனை விளக்க இளம்பூரணர், பாலசுந்தரம், தாசன் ஆகியோர் குறள்.118-ஐ எடுத்தாண்டுள்ளனர். மேலும், பாலசுந்தரம் புறம்.192-ஆம் பாடலையும் எடுத்தாண்டுள்ளார். இம்மெய்ப்பாட்டினை விளக்க உரையாசிரியர்கள் அகநானூற்றுப் பாடல் எதையும் எடுத்தாளவில்லை.

    1:1:4. அருளல்

    அருளலென்பது “எல்லாவுயிர்க்கும் அளிசெய்தல்” (இளம், இராசா, தாசன், மெய்.12) எனவும், “தவறுணரா அன்பின் பெருக்கம்.”( பேரா.குழந்தை, மெய்.12) எனவும், “எல்லா உயிர்களிடத்தும் அன்பின் முதிர்ச்சியாகிய கனிவுள்ளத்தாற் புரியும் செயல். இஃது உவகைக்குப் பொருளாக அமையும். வடநூலார் கூறும் கருணையை ஒப்புடை ஒக்கும். இரக்கம் வேறு; இவ்வருள் வேறு என அறிக.” (பாலசுந்., மெய்.12) எனவும் உரையாசிரியர்கள் பொருள் கொள்வர். எல்லாவுயிர்களிடத்தும் அன்பு செலுத்துதலே அருள் எனப்படும். இது வடநூலார் கூறும் கருணையின் பாற்படும். இதனை விளக்க இளம்பூரணர், பேராசிரியர், தாசன் ஆகியோர் கலி.11-ஆம் பாடலையும்; பாலசுந்தரம் புறம்.141-ஆம் பாடலையும் எடுத்தாண்டுள்ளனர். இம்மெய்ப்பாட்டினை விளக்க உரையாசிரியர்கள் அகநானூற்றுப் பாடல் எதையும் எடுத்தாளவில்லை.

    1:1:5. தன்மை

    தன்மையென்பது, “சாதியியல்பு” (இளம், தாசன், இராசா, மெய்.12) எனவும், “பார்ப்பாராயிற் குந்திமிதித்துக் குறுநடைகொண்டு வந்து தோன்றலும், அரசராயின் எடுத்த கழுத்தொடும் அடுத்த மார்பொடும் நடந்து சேறலும், இடையராயிற் கோற்கையுங் கொடுமடியையும் விளித்த வீளையும் வெண்பல்லுமாகித் தோன்றலுமென்று இன்னோரன்ன வழக்கு நோக்கிக் கொள்க.” (பேரா., மெய்.12) எனவும் உரையாசிரியர்கள் பொருள் கொண்டுள்ளனர். ஏனைய உரையாசிரியர்களின் உரையும் இதன்வழிப்படும் எனக்கொள்க. இதனை விளக்க இளம்பூரணரும் தாசனும், புறம்.13, 315, கலி.108 ஆகிய பாடல்களையும்; பாலசுந்தரம், புறம்.152, 154, முருகு.50-51, முருகு.126-137 ஆகிய பாடல்களையும் எடுத்தாண்டுள்ளனர். இம்மெய்ப்பாட்டினை விளக்க உரையாசிரியர்கள் அகநானூற்றுப் பாடல் எதையும் எடுத்தாளவில்லை.

    1:1:6. அடக்கம்

    அடக்கமென்பது, “மனமொழிமெய்யினடங்குதல். அது பணிந்தமொழியும் தானை மடக்கலும் வாய்புதைத்தலும் போல்வன.” (இளம், பேரா, குழந்தை, தாசன், இராசா, மெய்.12) எனவும், “தன் தலைமை நிலை மறந்து காதலால் மனமொழி மெய்யாற் பணிதல். “ஞாட்பினு ணண்ணாரும் உட்குமென்பீடு ஒண்ணுதற் கோஒ உடைந்தது” எனவும், “நாணொடு நல்லாண்மை காதலுக்கு முன் பண்டுடையேன்” எனவும் வருவனவற்றால் அன்பு அடக்கம் தருதலறிக. இனி, அடக்கம் மறை பிறரறியாமற் காக்கும் நிறையைக் குறிக்குமெனினும் அமையும்.” (பாரதி., மெய்.12) எனவும், “செல்வமும் ஒளியும் மிகினும், இகலும் இகழ்ச்சியும் நேரினும் பொங்காது நிற்கும் பொறையும் உயர்ந்தோர் மாட்டுப் பணிந்தொழுகும் ஒழுக்கமுமாம். இஃது உவகைக்குப் பொருளாக அமையும்.”( பாலசுந்., மெய்.12) எனவும் உரையாசிரியர்கள் உரைகொள்வர். அடக்கமென்பது ஐம்புலன்களை அடக்குதலும், தன்னுடைய குறைகளைப் பிறர் அறியாதவாறு காத்தலும்; செல்வம் போன்றன மிகுந்தாலும் குறைந்தாலும் தன் நிலையிலிருந்து மாறாத இயல்பும்;  பெரியோரை மதித்து நடத்தலுமாகும். இதனை விளக்க இளம்பூரணரும் தாசனும், குறள்.124, 126, 127 ஆகியவற்றையும்; பாலசுந்தரம், புறம்.191, 216 ஆகியவற்றையும் எடுத்தாண்டுள்ளனர். இம்மெய்ப்பாட்டினை விளக்க உரையாசிரியர்கள் அகநானூற்றுப் பாடல் எதையும் எடுத்தாளவில்லை.

    1:1:7. வரைதல்

    வரைதலென்பது “காப்பன காத்து கடிவன கடிந்தொழுகும் ஒழுக்கம்; அவை: பார்ப்பாராயினும் முத்தீ வேட்டலும் புரவுங்கள்ளும் முதலாயின கடிதலுமென்று இன்னோரன்ன கொள்க வரைதலென்பது தொழிலாதலான் இது தன்மையெனப்படாது.” (பேரா., மெய்.12)  என பேராசிரியர் கூறியுள்ளார். இளம்பூரணர், குழந்தை, இராசா, பாலசுந்தரம், தாசன் ஆகியோரின் உரையும் இதன்வழிப்படும். மேலும் பாரதி, “நாணுவரை யிறந்துமுன் உவந்த பலவும் வெறுத்து விலக்கும் மனநிலை; இது காதலினெழுவது.” (பாரதி, மெய்.12) என கூறியுள்ளார். வரைதலென்பது நாணம் ஏற்படும்வரை மகிழ்ந்த பலவும் நாணம் வந்தவழி விலகும் மனநிலை எனவும்; காதலுக்குரியது எனவும்; செய்யத்தகுவனவும் செய்யதகாதனவும் உணர்ந்து ஒழுக்கத்தோடு வாழும் நிலையெனவும் இருவேறு கருத்துக்களை முன் வைக்கின்றனர் உரையாசிரியர்கள். இவற்றுள், வரைவு என்பது திருமணத்தை உணார்த்துவது எனவே வரைதலென்பது காதலுக்குரிய ஒழுக்கமாகக் கொள்வதே பொருந்தும். இதனை விளக்க இளம்பூரணரும் தாசனும், திரிகடுகம்.29-ஆம் பாடலை எடுத்தாண்டுள்ளனர். இம்மெய்ப்பாட்டினை விளக்க உரையாசிரியர்கள் அகநானூற்றுப் பாடல் எதையும் எடுத்தாளவில்லை.

    1:1:8. அன்பு

    அன்பென்பது, “பயின்றார் மாட்டுச் செல்லுங் காதல்” (இளம், தாசன், இராசா, மெய்.12) எனவும், “அருட்கு முதலாகி மனத்தினிகழு நேயம்; அஃதுடையார்க்குப் பிறர் கட்டுன்பங் கண்டவழிக் கண்ணீர் விழுமாகலின் அவ்வருளானே அன்புடைமை விளங்குமென்பது. இவையெல்லாந் தத்த மனத்தினிகழ்ச்சியை வெளிப்படுவனவாகலின் மெய்ப்பாடெனப்பட்டன. இனி வருகின்றவற்றிற்கும் இஃதொக்கும்.” (பேரா, பாரதி, குழந்தை, மெய்.12) எனவும், “தொடார்புடையார் மாட்டும், நட்டார் மாட்டும் தம் விருப்புடைய பொருள்கள் மாட்டும் செலுத்தும் கைம்மாறு கருதாத நேயம் இஃது உவகைக்குப் பொருளாக அமையும்.” (பாலசுந்., மெய்.12)  எனவும் உரையாசிரியர்கள் உரைகொள்வர். அன்பென்பது தான் அறிந்தவர்களிடமும், உறவுகளிடமும், எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் தன்னிடம் வெளிப்படும் ஓர் மனிதநேய உணார்வாகும். இதனை விளக்க இளம்பூரணரும் தாசனும், குறள்.79-ஐயும்; பாலசுந்தரம் புறம்.91, குறுந்.181 ஆகிய பாடல்களையும் எடுத்தாண்டுள்ளனர். இம்மெய்ப்பாட்டினை விளக்க உரையாசிரியர்கள் அகநானூற்றுப் பாடல் எதையும் எடுத்தாளவில்லை.

    1:1:9. கைம்மிகல்

    கைம்மிகலென்பது, “குற்றமாயினும் குணமாயினும் அளவில் மிகுதல்” (இளம், இராசா, தாசன், பாலசுந்., மெய்.12) எனவும், “ஒழுக்கக்கேடு; அது சாதித்தருமத்தினை நீங்கினமை தன்னுள்ள நிகழ்ச்சியானே பிறர் அறியுமாற்றால் ஒழுகுதல்.” (பேரா., குழந்தை, மெய்.12) எனவும், “அடங்காக் காதற்பெருக்கு.  “நோய் மவி நெஞ்சமொடு இணையல் தோழி” என்பதும், “ஆற்றார் காதல் நோயட இவளணி வாட” என்பதும் போல வருவன காண்க. “காதல் கைம்மிகல்” எனக் களவியலிலும் சூ.116 முன் இவ்வியலிலும் சூ-23 சுட்டுவதானுமுணர்க.” (பாரதி., மெய்.12) எனவும் உரையாசிரியர்கள் உரைகொள்வர். கைம்மிகலென்பது, அளவில் மிகுதல் அது காதலாயினும் கடமையாயினும் பொருந்தும். இதனை விளக்க இளம்பூரணரும் தாசனும், மெய்.23, குறள்.868 ஆகியவற்றையும்; பாலசுந்தரம், புறம்.44, குறள்.567, குறள்.539 ஆகியபாடல்களையும் எடுத்தாண்டுள்ளனர். இம்மெய்ப்பாட்டினை விளக்க உரையாசிரியர்கள் அகநானூற்றுப் பாடல் எதையும் எடுத்தாளவில்லை.

    1:1:10. நலிதல்

    நலிதல் என்பது, “பிறரை நெருக்குதல்” (இளம், இராசா, தாசன், மெய்.12) எனவும், “பிறர்க்கின்னா செய்து நெருங்குதல்; அது தீவினைமாக்கட்கண் நிகழும். அவரைக் கண்டு அச்சம் எழுந்ததாயின் அஃது அச்சத்தின்கண் அடங்குமாகலின் அஃதன்று இஃதென்பது.” (பேரா., மெய்.12) எனவும், “இடுக்கணுறுதலும் உறுத்தலுமாம். இஃது தன்வினைக்கும் பிறவினைக்கும் பொதுவாய சொல். இஃது இளிவரலுக்குப் பொருளாக அமையும்” (பாலசுந்., மெய்.12) எனவும் உரையாசிரியர்கள் பொருள் கொள்வர். நலிதலென்பது பிறரை துன்புறுத்தலாகும். இதனை விளக்க இளம்பூரணர், நெடுநல்.இறுதிவெண்பாவும், பாலசுந்தரம், புறம்.19, 276 ஆகிய பாடல்களையும் எடுத்தாண்டுள்ளனர். இம்மெய்ப்பாட்டினை விளக்க உரையாசிரியர்கள் அகநானூற்றுப் பாடல் எதையும் எடுத்தாளவில்லை.

    1:1:11. சூழ்ச்சி

    சூழ்ச்சி என்பது, “எண்ணம்” (இளம், இராசா, தாசன், மெய்.12) எனவும், “சுழற்சி, சூழ்வருவானைச் சுழல்வருமென்பவாகலின்; அது வெளிப்படுவதோர் குறிப்பின் அவன்கட் டோன்றின் அதுவும் மெய்ப்பாடு; அஃதாவது மனத்தடுமாற்றம்.” (பேரா, குழந்தை, மெய்.12)எனவும் “நேராக் கூட்டம் நிகழவழியாராய்தல்” (பாரதி., மெய்.12) எனவும், “புறநிகழ்ச்சிகளைப் பற்றி ஆழ்ந்து எண்ணுதல். இஃது அச்சத்திற்குரிய பொருளாக அமையும்.” (பாலசுந்., மெய்.12) எனவும் உரையாசிரியர்கள் உரைகொள்வர். சூழ்ச்சி என்பது மனதில் உதிக்கும் ஆழ்ந்த சிந்தனை. இதனை விளக்க இளம்பூரணரும் தாசனும், குறள்.445 -ஐயும்; பாலசுந்தரம், புறம்.246, குறள்.639 ஆகிய பாடல்களையும் எடுத்தாண்டுள்ளனர். இம்மெய்ப்பாட்டினை விளக்க உரையாசிரியர்கள் அகநானூற்றுப் பாடல் எதையும் எடுத்தாளவில்லை.

    1:1:12. வாழ்த்தல்

    வாழ்த்தலென்பது, “பிறனை வாழ்த்துதல்” (இளம்., இராசா, தாசன், மெய்.12) எனவும், “பிறரால் வாழ்த்தப்படுதல்” (பேரா, குழந்தை, மெய்.12) எனவும், “இது பிறவினையன்றோவெனின், ஒருவனை நீடுவாழ்க என்று வாழ்த்தல் பிறவினையாயினும் அவன் வாழ்விக்கப்படுதலின் அவன் அவ்வாறு கூறல் அமையுமென்பது” (பேரா., மெய்.12) எனவும், “காதலால் நெஞ்சையும் பிறவற்றையும் வாழ்த்துதல் “வாழி என்னெஞ்சே”, “நீ வாழிபொழுது”, “வாழிஅனிச்சமே”, “காதலை வாழிமதி”, “புண்கண்ணை வாழி மருண்மாலை” என வருவன காண்க”  (பாரதி, மெய்.12) எனவும், “உலகநலங் கருதி இறையையும் தெய்வ முதலியவற்றையும் போற்றுதல் இஃது உவகைக்குப் பொருளாக அமையும்.” (பாலசுந்., மெய்.12) எனவும் உரையாசிரியர்கள் உரைகொள்வர். இவற்றுள் பிறனை வாழ்த்துதல் – பிறரால் வாழ்த்தப்படுதல் – தெய்வம் போற்றுதல் எனும் மூன்று வேறுபட்ட கருத்துக்கள் உரையாசிரியர்களிடையே காணப்படுகிறது. இவை மூன்றுமே வாழ்த்துதலின் பாற்படும். ஏனெனில், தான் பிறரை வாழ்த்துதலும், பிறர் தன்னை வாழ்த்தினாலும், தெய்வத்தை மக்கள் போற்றினாலும் அது வாழ்த்துதலின் பாற்படும். வாழ்த்து என்பதற்கு கழகத் தமிழராதி “ஆசி; துதி; மங்களம்” (க.த.அ.,ப.840) என பொருள் கூறியுள்ள வழி இதனை அறியலாம். இம்மெய்ப்பாட்டினை விளக்க இளம்பூரணர், ஐங்குறு.6-ஆம் பாடலையும்; பாலசுந்தரம், ஐங்குறு.1, சிலம்பு.கடவுள் வாழ்த்து பாடல்களையும்; தாசன் ஐங்குறு.1, புறம்.9 ஆகிய பாடல்களையும் எடுத்தாண்டுள்ளனர். இம்மெய்ப்பாட்டினை விளக்க உரையாசிரியர்கள் அகநானூற்றுப் பாடல் எதையும் எடுத்தாளவில்லை.

    1:1:13. நாணல்

    நாணலென்பது, “தமக்குப் பழி வருவன செய்யாமை” (இளம்., இராசா, தாசன், மெய்.12) எனவும், “நாணுள்ளம் பிறர்க்கு வெளிப்பட நிகழும் நிகழ்ச்சி” (பேரா., குழந்தை., மெய்.12) எனவும், “வெண்குதல், காமமும்; நாணும் உயிர்க்காவாத் தூங்கும் என்நோனா உடம்பினகத்து எனவும், “பல்லோர்கூற யாம் நாணுதுஞ்சிறிதே” எனவும், “யானோக்குங் காலை நிலனோக்கும்” எனவும், “கொண்க னுர்ந்த கொடிஞ்சி நெடுந்தேர்…………………… காணவந்த நாணப்பெயரும்” எனவும் வருவன காண்க.”( பாரதி., மெய்.12) எனவும், “சான்றோர் பழிப்பனவற்றை ஏலாமையும் புரியாமையுமாம். தன்புகழ் கேட்டவழி எய்தும் மென்மையும் இதன்கண் அடங்கும். இது பெருமிதத்திற்குப் பொருளாக அமையும்.” (பாலசுந்., மெய்.12) எனவும் உரையாசிரியர்கள் பொருள் கொள்வர். நாணலென்பது பழிவருவன செய்யாமை. இதனை விளக்க இளம்பூரணரும் தாசனும், குறள்.1015, 1017 ஆகிய குறள்களையும்; பாலசுந்தரம், புறம்.65, 394, 43, கலி.119 ஆகிய பாடல்களையும் எடுத்தாண்டுள்ளனர். இம்மெய்ப்பாட்டினை விளக்க உரையாசிரியர்கள் அகநானூற்றுப் பாடல் எதையும் எடுத்தாளவில்லை.

    1:1:14. துஞ்சல்

    துஞ்சலென்பது, “உறக்கம் உறங்காமை போலாமையின் மெய்ப்பாடாயிற்று.” (இளம்., மெய்.12) ஏனைய உரையாசிரியர்களின் உரையும் இதன்பாற்படும். துஞ்சலென்பது உறக்கம். இதனை விளக்க இளம்பூரணரும் தாசனும், குறுந்.6-ஆம் பாடலையும்; பாலசுந்தரம், புறம்.2, 159 – ஆகிய பாடல்களையும் எடுத்தாண்டுள்ளனர். இம்மெய்ப்பாட்டினை விளக்க உரையாசிரியர்கள் அகநானூற்றுப் பாடல் எதையும் எடுத்தாளவில்லை.

    1:1:15. அரற்று

    அரற்றென்பது, “உறக்கத்தின்கண் வரும் வாய்ச்சோர்வு அதுவும் ஏனைச் சொல்லின் வேறுபடுதலின் அரற்றென ஒரு மெய்ப்பாடாயிற்று. முன் உறக்கம் வைத்தலானும் பின் கனவு வைத்தலானும் இப்பொருள் உரைக்கப்பட்டது.” (இளம்., இராசா, தாசன், மெய்.12) எனவும், “அழுகையன்றிப் பலவுஞ்சொல்லித் தன்குறை கூறுதல்; அது காடுகெழு செல்விக்கும் பேய்கூறும் அல்லல்போல வழக்கினுள்ளோர் கூறுவன.” (பேரா., குழந்தை., மெய்.12) எனவும், “அறிவொடுபடாது வெருவுதலும் உறக்கத்தின்கண் வாய் சோர்தலுமாம். இது மருட்கைக்கும் உவகைக்கும் பொருளாக அமையும்.” (பாலசுந்., மெய்.12)  எனவும் உரையாசிரியர்கள் உரைகொள்வர். அரற்று என்பது உறக்கத்தின்கண் வரும் வாய்ச்சோர்வு ஆகும். இதனை விளக்க இளம்பூரணரும் தாசனும், கலி.24ஆம் பாடலையும்; பாலசுந்தரம் புறம்.198 -ஆம் பாடலையும் எடுத்தாண்டுள்ளனர். இம்மெய்ப்பாட்டினை விளக்க உரையாசிரியர்கள் அகநானூற்றுப் பாடல் எதையும் எடுத்தாளவில்லை

    1:1:16. கனவு

    கனவென்பது, “நனவுபோலாமையின் மெய்ப்பாடாயிற்று” (இளம்., மெய்.12) எனவும், “வாய்வெருவுதல்; அதனானும் அவனுள்ளத்து நிகழ்கின்ற தொன்று உண்டென்டறறியப்படும்.”(பேரா, குழந்தை, தாசன், மெய்.12)  எனவும், “தூக்கத்திற்றோற்றுவது இதுவும் காதலில் கனிவது”(பாரதி., மெய்.12)  எனவும், “உறக்கத்தில் நிகழும் உணர்வு வெளிப்பாடு. இது பெரும்பாண்மை உவகைக்கும் சிறுபான்மை மருட்கைக்கும் ஏனையவற்றிற்கும் பொருளாக அமையும்.” (பாலசுந்., மெய்.12) எனவும் உரையாசிரியர்கள் உரைகொள்வர். கனவென்பது உறக்கத்தின்போது நனவுபோல வெளிப்படுவதோர் உணர்வு. இதனை விளக்க இளம்பூரணரும் தாசனும், குறள்.1215-ஐயும்; பாரதி குறுந்.147-ஐயும்; பாலசுந்தரம்       கலி.49-ஆம் பாடல் மற்றும்,

    கடற்சிறு காக்கை காமர் பெடையொடு
    கோட்டுமீன் வழங்கும் வேட்டமடி பரப்பின்
    வெள்ளிறாக் கனவும் நள்ளென் யாமத்து” (அகம்-170)

    எனும் பாடலையும் எடுத்தாண்டுள்ளனர். மேற்கூறிய அகப்பாடலில், தாழையின் தாழ்ந்த கிளையில் கடல்காக்கைத் தன் பெடையோடு பசிக்கு ஒன்றும் பெறாமல் சோர்வாய் அமர்ந்திருக்கும். அப்போது கடலில் பரதவர் வேட்டையாடாத இடத்தில் சுறாமீனைத் தான் பிடித்துத் தின்பதாகக் கனவுக் காணும் என தலைவி நண்டிடம் கூறியுள்ளாள். இதில் கனவு எனும் மெய்ப்பாடு வெளிப்பட்டுள்ளது. “காக்கை பெடையோடு யாமத்து இறாக் கனவும் என்பதால், தலைவி தலைவனுடன் கூடி, முன்பு, பெற்ற இன்பத்தை நினைத்து வருந்துகிறாள் என்னும் பொருள் குறிப்பாகப் புலப்படுகிறது.” (நா.மீனவன், அகநானூறு,(மணிமிடைபவளம்), ப.11) என நா.மீனவன் கூறியுள்ளார்.

    1:1:17. முனிதல்

    முனிதலென்பது, “வெறுத்தல்” (இளம், பேரா, குழந்தை, இராசா, தாசன், மெய்.12) எனவும், “அஃது அருளுஞ் சினமுமின்றி இடைநிகர்த்தாதல். ‘வாழ்க்கை முனிந்தா’ எனவும், “உறையுண் முனியுமவன் செல்லுமூரே” எனவுஞ் சொல்லுபவாகலின்” (பேரா., மெய்.12) எனவும், “உளம் கொள்ளாவழியும் மாறுபட்ட வழியும் எய்தும் வெறுப்பு. இஃது வெகுளிக்குப் பொருளாக அமையும்.” (பாலசுந்., மெய்.12) எனவும் உரையாசிரியர்கள் உரைகொள்வர். முனிதலென்பது ஒன்றனை வெறுத்தலாகும். இதனை விளக்க இளம்பூரணர், குறுந்.45-ஆம் பாடலையும், பேராசிரியர், புறம்.96-ஆம் பாடலையும்; பாலசுந்தரம், புறம்.208, 176 ஆகிய பாடல்களையும் எடுத்தாண்டுள்ளனர். இம்மெய்ப்பாட்டினை விளக்க உரையாசிரியர்கள் அகநானூற்றுப் பாடல் எதையும் எடுத்தாளவில்லை.

    1:1:18. நினைத்தல்

    நினைத்தலென்பது, “கழிந்ததனை நினைத்தல் அது மறந்தாங்கு மறவாது பின்புந் தோன்றுதலின் மெய்ப்படாயிற்று” (இளம், தாசன், மெய்.12) எனவும், “விருப்புற்று நினைத்தல், நின்னை மிகவும், நினைத்தேனென்பது, வழக்காதலின்; அந்நினைவுள்ளம் பிறர்க்குப் புலனாதலின் மெய்ப்பாடாயிற்று”( பேரா., மெய்.12) எனவும், “ஒன்றனது பயனை விரும்பி அதனை இடைவிடாது எண்ணுதல் கழிந்ததனை மீள எண்ணுதலுமாம். இஃது உவகைக்கும் சிறுபான்மை அச்சத்திற்கும் பொருளாக அமையும்”( பாலசுந்., மெய்.12) எனவும் உரையாசிரியர்கள் உரை கொள்வர் ஏனைய உரையாசிரியர்களின் உரையும் இதன்பாற்படும். நினைத்தலென்பது நீங்கிய நினைவுகளை மீள நினைக்கும்போது ஏற்படும் உணர்வாகும். இதனை விளக்க இளம்பூரணரும் தாசனும், குறள்.1203-ஐயும்; பாரதி, குறுந்.102, 99, நற்.253 ஆகிய பாடல்களையும் எடுத்தாண்டுள்ளனர். இம்மெய்ப்பாட்டினை விளக்க உரையாசிரியர்கள் அகநானூற்றுப் பாடல் எதையும் எடுத்தாளவில்லை.

    1:1:19. வெரூஉதல்

    வெரூஉதலென்பது, “அச்சம் போல நீடுநில்லாது  கதுமெனத் தோன்றி மாய்வதோர் குறிப்பு. அதனைத் துணுக்கு என்றானென்பது.” (இளம்., தாசன், மெய்.12) எனவும், “விலங்கும் புள்ளும் போல வெருவி நிகழும் உள்ள நிகழ்ச்சி; அஃது அஞ்ச வேண்டாதன கண்டவழியும் கடிதிற் பிறந்து மாறுவதோர் வெறி.” (பேரா., குழந்தை., மெய்.12) எனவும், “பிரிவும் ஊறும் அஞ்சுதல்”( பாரதி., மெய்.12) எனவும், “விரும்பத்தகாதன கண்டுழியும் நிகழ்வழியும் எய்தும் விதிர்ப்பு. இஃது அச்சத்திற்குப் பொருளாக அமையும்” (பாலசுந்., மெய்.12) எனவும் உரையாசிரியர்கள் பொருள் கொள்வர். வெரூஉதல் என்பது பிரிவின் கண்ணும், துன்பத்தின் கண்ணும் அச்சம் போல தோன்றி திடிரென மறையும் ஓர் உணர்வு. இதனை விளக்க இளம்பூரணரும் தாசனும்,           கலி.87-ஆம் பாடலையும்; பாரதி, குறுந்.117, 300, 217, நற்.253 ஆகிய பாடல்களையும்; பாலசுந்தரம்,

    காடுகவர் பெருந்தீ ஓடுவயின் ஓடலின்
    அதற்கெடுத் தலறிய சாத்தொடு ஓராங்கு
    மதர்புலி வெரீஇய மையல் வேழத்து
    இனந்தலை மயங்கிய நனந்தலைப்” (அகம்-39)

    எனும் பாடலையும் எடுத்தாண்டுள்ளனர். மேற்கூறிய அகப்பாடலில், உன்னை மறக்கவில்லை என்பதற்கு ஒரு சான்று தருகிறேன் கேள். காட்டுவழியில் மூங்கில்கள் ஒன்றுடன் ஒன்று உராய்ந்து தேய்வதால் மூங்கில் சொரியும் தீப்பொறிகள் அங்கு கீழே விழுந்துள்ள சறுகுகள் மறையும்படி தீப்பற்றி எழுந்து ஊகம் புல்லின் பகுதிகளையும் எரியில் உண்டாக்கிக் காற்று பரவும் இடமெல்லாம் பறந்து எரிந்தது. அதைக்கண்டு அலறி அழும் வணிகக் கூட்டம் பயந்து ஓடியது. அதோடு செருக்கை உடைய புலியைக் கண்டு யானைக் கூட்டம் பல இடங்களுக்கும் சென்றது. அந்நிலையில் கதிரவன் மறைந்தான் என தலைவன் தலைமகளிடம் கூறினான். இதில் வெரூஉதல் எனும் மெய்ப்பாடு வெளிப்பட்டுள்ளது.

    1:1:20. மடிமை

    மடிமையென்பது, “சோம்புதல்” (இளம், பேரா, குழந்தை, தாசன், மெய்.12) எனவும், “ஆற்றாமையின் அயர்வு” (பாரதி., மெய்.12) எனவும், “செய்தற்குரியவற்றைச் செய்யாது சோர்ந்திருத்தல். அஃதாவது முயற்சியின்றிக் கிடத்தல். இஃது இளிவரலுக்குப் பொருளாக அமையும்”( பாலசுந்., மெய்.12) எனவும் உரையாசிரியர்கள் பொருள் கொள்வர். மடிமையென்பது செய்ய வேண்டிய செயலை செய்யாது சோம்பி கிடத்தல். இதனை விளக்க இளம்பூரணரும் தாசனும், குறுந்.608-ஐயும்; பாரதி, குறுந்.396, 316 ஆகிய பாடல்களையும்;  பாலசுந்தரம்,

    அறந்தலைப் பிரியா தொழுகலும் சிறந்த
    கேளிர் கேடுபல ஊன்றலும் நாளும்
    வருந்தா உள்ளமொடு இருந்தோர்க்கில்”  ( அகம்.173)

    எனும் அகப் பாடலையும் எடுத்தாண்டுள்ளனர். மேலே கூறப்பட்ட அகப்பாடலில், இல்வாழ்வை முறைப்படி நடத்துதல், சுற்றத்தாரின் துன்பம் நீக்குதல் ஆகிய இரண்டும் முயற்சி இன்றி ஊக்கமின்றி இருந்தவர்க்கு இல்லை என்று கருதி நம் தலைவர் பொருள் ஈட்டும் முயற்சியை மேற்கொண்டார் எனத் தோழி தலைமகளுக்குக் கூறியது. இதில் மடிமையினால் என்ன நேரும் என்பது வெளிப்பட்டுள்ளது.

    1:1:21. கருதல்

    கருதலென்பது, “குறிப்பு” (இளம், பாரதி, இராசா, தாசன்., மெய்.12) எனவும், “மறந்ததனை நினைத்தல்” (பேரா, குழந்தை., மெய்.12) எனவும், “ஒன்றைச்சுட்டி ஆழ்ந்து எண்ணுதல். இது பெருமிதத்திற்குப் பொருளாக அமையும்” (பாலசுந்., மெய்.12) எனவும் உரையாசிரியர்கள் பொருள் கொள்வர். கருதலென்பது, குறிப்பு  – ‘மனக்குறிப்பு’ ஆகும். மனதில் தோன்றும் ஆழ்ந்த சிந்தனையே மனக்குறிப்பு எனவே இவைகள் இங்கே பொருத்தமுடையன. ஆனால், பேராசிரியரும் குழந்தையும் ‘மறந்ததனை நினைத்தல்’ என பொருள் கொள்வர். ஏற்கனவே நினைத்தல் என்பதற்கு இவ்வாறு பாடம் கொண்டுள்ளதால் இங்கு இது பொருந்தாது. இதனை விளக்க இளம்பூரணரும் தாசனும், குறள்.1095-ஐயும்; பாரதி, குறள்.1097, குறுந்.298 ஆகிய பாடல்களையும்; பாலசுந்தரம், புறம்.236-ஆம் பாடலையும் எடுத்தாண்டுள்ளனர். இம்மெய்ப்பாட்டினை விளக்க உரையாசிரியர்கள் அகநானூற்றுப் பாடல் எதையும் எடுத்தாளவில்லை.

    1:1:22. ஆராய்ச்சி

    ஆராய்ச்சியென்பது, “ஒரு பொருளைக் குறித்த அதன் இயல்பு எத்தன்மைத்தென வாராய்தல்” (இளம், இராசா, தாசன்., மெய்.12) எனவும், “ஒரு பொருளை நன்று தீதென்று ஆராய்தல்.” (பேரா., குழந்தை., மெய்.12) எனவும், “காதலரன்பு கனி வழிசூழ்தல்” (பாரதி., மெய்.12) எனவும், “ஒன்றனது நலந்தீங்குகளை நடுவுநின்று நோக்கியறிதல். இது பெருமிதத்திற்குப் பொருளாக அமையும்.” (பாலசுந்., மெய்.12) எனவும் உரையாசிரியர்கள் பொருள் கொள்வர். ஆராய்ச்சி என்பது ஒரு செயலினால் பின்விளையும் நன்மை, தீமைகளை ஆராய்ந்து முடிவெடுத்தல். இதனை விளக்க இளம்பூரணரும் தாசனும், குறள்.73 ஆம் பாடலையும்; பாலசுந்தரம் நற்.276, கலி.84 ஆகியப் பாடல்களையும் எடுத்தாண்டுள்ளனர். இம்மெய்ப்பாட்டினை விளக்க உரையாசிரியர்கள் அகநானூற்றுப் பாடல் எதையும் எடுத்தாளவில்லை.

    (தொடரும்)

    *****

    கட்டுரையாளர்
    தமிழ்த்துறைத்தலைவர்
    D.L.R. கலை மற்றும் அறிவியல் கல்லூரி
    விளாப்பாக்கம், ஆற்காடு

     

     

    Share
  • மெய்ப்பாட்டியல் முதலாமவத்தையில் உரையாசிரியா்களின் அகநானூற்றுத் திறன்

    -பீ.பெரியசாமி

    1.முன்னுரை

    முதலில் எண்வகை மெய்ப்பாடுகளை உணா்த்தி அதன் பின் அகத்திற்கும் புறத்திற்குமான முப்பத்திரண்டு மெய்ப்பாடுகளை எடுத்தோதிய தொல்காப்பியா், (நு-3-12). அதன்பின்னே அன்பின் ஐந்திணைக்குரிய மெய்ப்பாடுகளை எடுத்தோதியுள்ளார். அவற்றை உரையாசிரியா்கள் அவத்தைகள் எனக் கொள்வா். (நூ 13-18) அவத்தைகள் ஆறு. அவற்றுள் முதலாமவத்தையும் அதன் விரிகளையும் தொல்காப்பியா் விரித்தோதியுள்ளார். அவற்றுக்கு உரைவகுத்துள்ள உரையாசிரியா்கள் தங்கள் உரைகளில் அகநானூற்றுப் பாடல்களை எவ்வாறு எடுத்தாண்டுள்ளனா் என்பதனை இக்கட்டுரை ஆராய்கிறது.

    1.1   முதலாமவத்தையும் அதன் விரிகளும்:
    முதலாமவத்தையின் விரிகளைத் தொல்காப்பியா்,

    “புகுமுகம் புரிதல் பொறிநுதல் வியா்த்தல்
    நகுநயம் மறைத்தல் சிதைவுபிறா்க் கின்மையொடு
    தகுமுறை நான்கே ஒன்றென மொழிப“ (நூ.13)
    எனும் நூற்பாவில் கூறியுள்ளார். 

    1.2   உரையாசிரியா்கள் பார்வையில் முதலாமவத்தை:

    உரையாசிரியா்கள் (இளம்பூரணர், பேராசிரியா், ச.சோ.பாரதி) ஒருவனும் ஒருத்தியும் எதிர்பட்டவழிக் கரந்தொழுகும் உள்ள நிகழ்ச்சி பெண்பாலதாகலாற் பெரும்பான்மையும் அவள் கண்ணே ஈண்டுக் கூறுகின்ற மெய்ப்பாடு சிறந்ததென்பது எனக் கூறுகின்றனா்.

    1.2.1 பொறிநுதல் வியர்த்தல்

    பொறிநுதல் வியா்த்தலென்பது அவ்வழி முகம்புக்கு அவனைப் பொருந்திய தலைமகள் உட்கும் நாணும்  வந்துழி வரும் நுதல்வியா்ப்பு என இளம்பூரணரும் (இள.மெய்.நூ-3) தலைமகன் தன்னை நோக்கியவழி உட்கும் நாணும் ஒருங்கு வந்தடைதலின் வியா்பொறித்த நுதலளாதலும், இம்மெய்ப்பாடு தலைமகற்குரித்தன்று; உட்கும் நாணும் அவற்கின்மையின் எனப் பேராசிரியரும் (பேரா.மெய்.நூ-13) நோக்கெதிர்ந்து தலைவன் காதற்குறிகண்டு மகிழுந் தலைவிக்கு உள்ளுணா்வு பொங்கப் பொள்ளெனப் புறம்வியா்த்தல் இயல்பாதலின் மறையா அவள் சிறுநுதலின் குறுவோ்வை தோன்றும் என ச.சோ.பாரதியும் (ச.சோ.பா.மெய்.நூ-13) உரை கொள்வா். இவற்றின் வழித் தலைமகன் தலைமகளை நோக்கியவழி தலைமகளிடையே அச்சமும் நாணமும் தோன்ற நுதல் வியா்தல், பொறிநுதல் வியா்த்தல் எனப்படும் என்பது அறியப்படுகிறது. இதனை விளக்கப் பேராசிரியரும் ச.சோ.பாரதியும்,

    “பெரும்புழுக் குற்றநின் பிறைநுதா் பொறிவியா்
    உறுவளி யாற்றச் சிறுவரை திறவென“ (அகம்-136)

    எனும் அகப்பாடலை எடுத்தாண்டுள்ளனா். இப்பாடலில் படுக்கையில் என் உயிருக்கு உடம்பாக வந்த தலைவி உடம்பு முழுவதையும், புத்துடையால் போர்த்திக் கிடந்தாள். நான் அவளை நெருங்கி அவள் முகத்தைக் காண விரும்பி மிக்க புழுக்கத்தால் உனது நெற்றியில் அரும்பிய வியா்வையைக் காற்று நீக்குமாறு சிறிது திற என்று கூறி அன்பின் மிகுதியால் போர்வையை நீக்கினேன் என்பதில் பொறிநுதல் வியா்த்தலெனும் மெய்ப்பாடு வெளிப்பட்டுள்ளமையை அறிய முடிகிறது.

    1.2.2 நகுநயம் மறைத்தல்

    நகுநயம் மறைத்தலென்பது தலைமகன் கூறுவனகேட்டு நகை வந்துழி நயத்தலாகிய விருப்பத்தினைப் புலனாகாமை மறைத்தல் என இளம்பூரணரும்; தலைமகன்கட்டோன்றிய குறிப்புகளான் அதற்கேதுவாகிய நயனுடைமை மனத்திற் பிறந்த வழியும் நகாது நிற்றலும் எனப் பேராசிரியரும்; முதற்காட்சியில் தலைவன் நோக்கெதிர்ந்து அவன் காதற் குறிப்பறிந்து தலைவி மகிழ்வான் முகிழ்க்குந் தன் முறுவலை “பிணையோ; மடநோக்கும் நாணுமுடையள் ஆதலின் மறைக்குமவள் முயற்சியைக் குறிப்பதாகும். மேல் மூன்றாஞ் செய்யுளில், “நாணினளிறைஞ்சி மிகை வெளிப்படாது நகைமுகங்கரந்த நன்னுதல் அரிவை“ என வருதல் காண்க என ச.சோ.பாரதியும் பொருள் கொள்வா். இதன் வழி நகுநய மறைத்தலென்பது தலைவன் தலைவியை நோக்கிச் செய்யும் செயலினால் தலைவிக்கு நகை தோன்றியவழி அதனைத் தலைவனுக்கும் புலனாகாமல் மறைத்தலே நகுநய மறைத்தல் என்பது அறியப்படுகிறது. இம்மெய்ப்பாட்டினை விளக்கப் பேராசிரியா். குறுந்.169, குறள்.1274 ஆகிய பாடல்களையும், ச.சோ.பாரதி, குறள்.1098, 1271, 1274 ஆகிய குறட்பாக்களையும் எடுத்தாண்டுள்ளனா்.

    1.2.3 சிதைவு பிறர்க்கின்மை

    சிதைவு பிறா்க்கின்மையென்பது தன்மனனழிவு பிறா்க்குப் புலனாகாமை நிற்றல். ஒடு எண்ணின்கண் வந்தது என இளம்பூரணரும்; நகுநய மறைத்த வழியும் உள்ளம் சிதைந்து நிறையழியுமாகலின் அச்சிதைவு (தலைவிக்கன்றிப்) புறத்தார்க்குப் புலனாகாமை நெஞ்சினை நிறுத்தலும் எனப் பேராசிரியரும்; நாணிறந்து பெருகுங் காதலால் உருகுந் தலைவி தன்நிறையழிவு பிறரறியாவாறு மறைக்கு முயற்சி என ச.சோ.பாரதியும் உரை கொள்வா். இவற்றின் வழி நகுநய மறைத்தும் தலைவன் மீதான அளவுக்கடந்த காதலால் மனன் சிதைந்தவழி அதனை புறத்தார்க்குப் புலப்படாது காத்தல் (சிதைவு பிறர்க்கின்மை) என்பது அறியப்படுகிறது. இதனை விளக்க பேராசிரியா் தொல். பொருள்.98 ஆம் நூற்பாவில் ச.சோ.பாரதி குறள்.1253, சீவக 710-712 ஆகியவற்றினையும் எடுத்தாண்டுள்ளனா;. மேலும் பேராசிரியா்,

    “அகமலி யுவகைய ளாகி முகனிகுந்து
    ஒய்யென இறைஞ்சி யோளே“ (அகம்.86)

    எனும் பாடலை எடுத்தாண்டுள்ளார். இப்பாடலில் அகத்தே பொலிந்த மகிழ்ச்சியளாய் நாணினால் முகத்தை வளைத்து விரைவு வணங்கினாள் தாழ்ந்தாள் என்றவழிச் சிதைவு பிறா்க்கின்மை எனும் மெய்ப்பாடு வெளிப்பட்டமையை அறிய இயலுகிறது.

    1.2.4 புகுமுகம் புரிதல்

    புகுமுகம் புரிதலென்பது தலைமகன் புணா்ச்சிக் குறிப்பினனாய்ப் புகுது முகத்தினை மாறுபடாது பொருந்துதல் என இளம்பூரணரும்; ஒருவனும் ஒருத்தியும் எதிர்ப்பட்டவழித் தன்மை அவன் நோக்குதற்கண் விரும்பும் உள்ள நிகழ்ச்சி; புகுதலென்பது தலைமகன் நோக்கிய நோக்கெதிர் தான் சென்று புகுதல்; முகமென்பது அங்ஙனந் தான் புகுதற்கிடமாகிய நோக்கு; நோக்கெதிர் நோக்குதலை முகநோக்குதல் என்பவாகலின் இந்நோக்கினை முகமென்றானென்பது. புரிதலென்பது, மேவுதல் என்றவாறு; அஃதாவது, தலைமகன் காண்டலைத் தலைமகள் வேட்டல் என்றவாளாம்; மற்றது தலைமகற்கு உரித்தன்றோவெனின் அவன்தான் காண்பினல்லது தற்காண்டலை நயவான், அது தலைமையன்றாகலி னென்பது அது எனப் பேராசிரியரும்; “புகுமுகம்“ என்பதை “முன்றில்“, “தொழுதெழும்“, “வணங்கி வீழ்ந்தான்“ என்பன போலச் சொன்மாற்றிப் பொருள் கொள்க. புரிதல், விருப்பங் குறிக்கும் என ச.சோ.பாரதி உரைகொள்வா். இவற்றின் வழி புகுமுகம் புரிதலென்பது தலைவனும் தலைவியும் முதற்முதலாய் எதிர்ப்பட்ட வழி தலைமகன் தலைமகளை நோக்கிக் காமக் குறிப்பினனாய் அவள் முகத்தை நோக்குதல் என்பது அறியப்படுகிறது. இம்மெய்ப்பாட்டினை விளக்க இளம்பூரணர் குறள்-1085 ஐயும். பேராசிரியா் குறள்-1094ஐயும்; ச.சோ.பாரதி குறள்.1082 ஆகியவற்றையும் எடுத்தாண்டுள்ளனா்.

    1.3   முடிவுரை

    முதலாமவத்தையினை விளக்க இளம்பூரணர்; ஒரு திருக்குறளையும் பேராசிரியா் இரண்டு திருக்குறள், இரண்டு அகநானூற்றுப்பாடல், ஒரு குறுந்தொகைப் பாடல், ஒரு தொல்காப்பிய நூற்பா என ஆறு எடுத்துக்காட்டுகளையும்; ச.சோ.பாரதி ஆறு திருக்குறள்களையும், அகநானூற்றுப் பாடல் ஒன்றையும், சீவகசிந்தாமணிப் பாடலடி ஒன்றையும் என எட்டு எடுத்துக்காட்டுகளையும் எடுத்தாண்டுள்ளனா். இவற்றின் வழி உரையாசிரியா்கள் திருக்குறள் (1085, 1094, 1274, 1082, 102, 1098, 1271) ஏழும், அகநானூறு (136, 86) இரண்டும், குறுந்தொகை (169) ஒன்றும், தொல்காப்பிய நூற்பா (தொ.பொ.98) ஒன்றும் எனப் பதினொரு எடுத்துக்காட்டுகளை எடுத்தாண்டுள்ளனா். இதில் அதிகமாகத் திருக்குறளும் அடுத்தப்படியாக அகநானூற்றுப் பாடலும் எடுத்தாளப்பட்டுள்ளது என்பது முடிவு.

    *****

    கட்டுரையாசிரியர்
    தமிழ்த்துறைத்தலைவர்
    டி.எல்.ஆர். கலைமற்றும் அறிவியல் கல்லூரி
    விளாப்பாக்கம்

    Share
  • நாட்டுப்புறப் பாடல்களில் குழந்தைப் பாடல்களின் தாக்கம்

    -பீ.பெரியசாமி

    முன்னுரை

    நாட்டுப்புற இலக்கியத்தைப் பற்றி தொல்காப்பியா் கூறும் போது,

    naatupuramபொருள்மர பில்லாப் பொய்ம்மொழி யானும்
    பொருளோடு
    புணா்ந்த நமைமொழி யானும்“ (தொ.செய்.173) என்று கூறுகின்றார். இவ்விருவகையும் நாடோடிக் கதைகளைப் பற்றியனவே யாகும். குழந்தை இலக்கியம் குறித்த நாட்டார் பாடல்களைப் பற்றிப் பேசும் சா.வளவன் “தாலாட்டுப் பாடல்களைக் கொண்டு நாட்டுப்புறத்தாரின் சமுதாயப் பண்பாட்டினையும் குழந்தைப் பேறு, காதல் வாழ்க்கை, பரத்தமை நெறி, தொழில், கல்வி, ஏழ்மை, சாதி, உறவின் பெருமை என்ற தலைப்புகளில் எடுத்தியம்பும்“ எனக் கூறுகின்றார். இவற்றையெல்லாம் நோக்கும்போது குழந்தை இலக்கியம் அக்காலக்கட்டத்தில் நிலவிய சமூக, பண்பாட்டு மாற்றங்களையும் நம்பிக்கைகளையும் எடுத்துரைப்பனவாகவே உள்ளன என்பதை நம்மால் அறிய இயலுகின்றது. அது எவ்வாறு இலக்கியத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதை விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

    குழந்தைப் பேறு இன்மை

    பெண் என்பவள் தாயாய் மாறிய பிறகே முழுமை அடைகின்றாள் என்பது நம் சமூகக் கட்டமைப்பு ஆகும். இதற்கு மாறாக ஒரு பெண் தாயாகவில்லை என்றால் அவளை இச்சமூகம் ஒதுக்கி வைத்து கொடுமைப்படுத்துவது இன்று நேற்று இல்லை இது காலகாலமாய் நடைமுறையில் இருப்பதே யாகும். ‘மக்களைப் பெற்றவளே – மகராசி’  அப்படி பெறாதவளை ‘வரடி’, ‘மலடி’  எனத் தூற்றுகிறது சமுதாயம் – (நாட்டார் வழக்காற்றியல் – ப.193) என தே.லூர்து அவா்கள் தம் நூலில் கூறியுள்ளார். இதே கருத்தை இளையதம்பி பாலசுந்தரம் அவர்ள், “குழந்தைப் பேற்றினைப் பற்றி அறியாத மக்கள் குழந்தைப் பேறு பெறுவதற்காக வேண்டிப் பல்வேறு நம்பிக்கைகளைக் கொண்டிருக்கின்றனா். சொத்துரிமையுள்ள சமூகத்தில் குழந்தைப்பேறு இன்றியமையாததும் கூட. குழந்தைப் பேறு இல்லாத பெண்கள் சமூகத்தில் மலடி என்று சொல்லி மங்கள நிகழ்ச்சிகளில் இருந்து புறக்கணிப்பது ஈழத்திலும் நடைபெறுகிறது“  (ஈழநாட்டார் பாடல்கள் ப.281) என்று கூறுகின்றார். இதனை கீழ்க்கண்ட சொல்லாடலின் மூலம் தெளிலாம்.

    மலடி விளைநிலத்திற்குத் தீங்கானவள்
    மலடி
    விளைநிலத்தைப் பாழ் நிலமாக்கினாள்“ (க.கிருட்டினசாமி (தொ.ஆ) கொங்கு நாட்டுப்புறப்பாடல்கள், ப.83)

    மலடியால் ஏற்படும் தீங்குகளைப் பற்றிய மக்களின் நம்பிக்கைகள் பலவற்றைத் தமிழக நாட்டுப்புறப் பாடல்கள்  பலபடக் கூறுகின்றன. இவற்றால் புத்திரப்பேறு அடையாத பெண்நிலை நன்கு அறிய இயலுகிறது.

    குழந்தை வேண்டிச் செய்யும் நோன்புகள்

    தன்னுடைய வம்சம் தழைக்க வேண்டும் என்பதற்காகவும், தனக்கென்று கொள்ளிவைக்க ஒரு பிள்ளை வேண்டும் என்பதற்காகவும் பெண்கள் குழந்தை வரம் வேண்டி நோன்பிருத்தல் காலகாலமாக நடக்கும் ஒரு வழக்கமாகும். இதனை,

    அரசே உனைவேண்டி
    ஆடாத
    தீர்த்தமில்லை
    பொருளே
    உனைவேண்டி
    போகாத
    கோயிலில்லை“    (தாலாட்டுக்கள், ஐநூறு.ப.149)

    என்று தாய் தன் குழந்தையைப் பார்த்துப்பாடும் பாடலின் கருப்பொருளாக உள்ளது. மேலும்,

    உறையூரு சென்று நீங்கள் ஒரு பன்றி வாங்கி வந்தால்
    பன்றியை
    வளா்ந்திருவே நமக்குப் பாலன் பிறக்குமென்றாள்“ (சக்திக்கனல், க.பெ.பழனிசாமி (ப.ஆ) அண்ணன்மார்  சுவாமி கதை.ப.63)

    என்ற மனைவி தன் கணவனிடம் தான் பிள்ளையைப் பெற வேண்டி பன்றி வளா்க்கலாம் என்கிறாள். மேலும்,

    காசி விசிறி கொண்டு
    கைலங்கிரி
    செம்பு கொண்டு
    போகிறார்
    உங்கள் ஐயா  – உன்னைப் போல்
    ஒரு
    புத்திரன் வேண்டுமென்று“    (தாலாட்டுக்கள் ஐநூறு.ப.172)

    என்று தன் குழந்தையிடம் தாய் கூறும் படியாக இப்பாடல் அமைந்துள்ளது.

    குழந்தைப் பேறு

    குழந்தைப்பேறு குறித்த நம்பிக்கைகள் காலகாலமாக நம் சமூகத்தில் வேரூன்றி உள்ளன. அவற்றுள் ஒன்று,

    தை மாதப் பிறை பார்க்கத்
    தவம்
    பெற்று வந்தவனே“       (தாலாட்டுக்கள் ஐநூறு.ப.51)

    இதில் தை மாதம் குழந்தை பிறப்பது நல்லது என்பது புலப்படுகின்றது.

    தலைச்சன் பிள்ளை பெற்றவருக்குத் தாலாட்டும்
    அகமுடையான்
    செத்தவருக்கு அழுகையும் தானேவரும்“  (க.பஞ்சாங்கம், தமிழ் இலக்கியத் திறனாய்வு வரலாறு.ப.79)

    என்பதில் தலைச்சன் பிள்ளை பிறந்தவுடன் தாய்க்கு தானாகவே தாலாட்டு வரும் என்பது தெரிகின்றது.

    பத்து வருஷமா என் கண்ணே –  நீ
    பாலனில்லா
    வாசலிலே
    கை
    விளக்குக் கொண்டு நீ
    கலி
    தீர்க்க வந்தவனோ“     (நா.வானமாமலை (தொ.ஆ) தமிழர் நாட்டுப்பாடல்கள் ப.117)

    என்பதின் மூலம் குழந்தைபேறு எவ்வளவு முக்கியம் என்பது தெளிவு.

    ஏழ்மை

    தாம் ஏழ்மையில் இருக்கும் போது ஒரு பிள்ளை பிறந்தால் அதை வேண்டாம் என்று யாரும் சொல்வதில்லை. தம் ஏழைக் குடிசையில் பிறந்த குழந்தையைத் தாலாட்டும் தாயொருத்தி

    முத்துச் சிரிப்பழகா
    முல்லைப்பூ
    பல்லழகா
    வெத்துக்
    குடிசையிலே
    விளையாட
    வந்தாயோ?“    (தமிழண்ணல், தாலாட்டு.ப.99)

    என்று பாடுகின்றாள்.

    தாலாட்டு

    தாலாட்டு என்பது தாய் தன்  நாவிலிருந்து எழுப்பும் ஓசையினால் வெளிப்படுவதேயாகும். தால் –  நாக்கு,  ஆட்டு  –  அசைத்தல், நாவசைவினால் ஏற்படும் ஓசையே தாலாட்டாகும். “தாலாட்டுப் பாடுகின்றபொழுது முதலில் ராரி ராரி ராராரோ“  (கொங்கு நாட்டுப்புறப்பாடல்கள், ப.42) என்றோ “தூரி தூரி ராராரோ“ (மேலது-43) என்றோ ஆரம்பிக்கப்பட்டது என்கின்றார்  க.கிருட்டினசாமி அவா்கள் அப்படிப் பாடப்பட்ட பாட்டொன்று

    ஆராரோ ஆராரோ – கண்ணே நீ
    ஆரிரரோ
    ராரோ
    ஆரடித்தார் 
    நீ அழுக “  கண்ணே உன்னை
    அடித்தவரை
    சொல்லி அழு“  (கி.வ.ஜ, மலையருவி.ப.294)

    மேலும்,

    பாட்டி உன்னை அடித்தாளோ
    பாலலூற்றும்
    கையாலே?
    நீட்டி உன்னை அடித்தானோ
    நெய்யூற்றும்
    கையாலே?“   (மேலது.பா.46)

    எனும் தாலாட்டுக்கள் குழந்தையின் மென்மையையும் தாயின் குணத்தையும் பிரதிபலிப்பனவாக உள்ளன.

    ஏந்தான் அழுவானோ
    ஏலம்பூ
    வா(ய்) திறந்து
    கொஞ்சி
    அழுவானோ
    கோவக்
    கனி வா(ய்) நோவ“     (கொங்கு நாட்டுப்புறப் பாடல்கள்.ப.46)

    எனும் பாடலில் ஏன் குழந்தை அழுகிறான் என்பதை தெரியாத தாயின் மனத்துடிப்பு இங்கே புலப்படுகிறது.

    விளையாட்டுப் பாடல்கள்

    விளையாட்டு என்பது குழந்தைப் பருவ வரம் ஆகும். ஒரு தாய் தன் குழந்தையை சாய்ந்தாட வேண்டி பாடுகிறாள்.

    சாய்ந்தா டம்மா சாய்ந்தாடு
    சாயக்
    கிளியே சாய்ந்தாடு
    அன்னக்
    கிளியே சாய்ந்தாடு
    …………  …………  ………….
    ………… …………. …………….
    மாடப் புறர்வே  சாய்ந்தாடு” (கி.வா.ஜ.ப.326 மலை அருவி)

    மேலும், கைவீச பழக்குதல்

    கைவீ சம்மா கைவீசு
    கடைக்குப்
    போகலாம் கைவீசு
    மிட்டாய்
    வாங்கலாம் கைவீசு
    மெதுவாய்த்
    தின்னலாம் கைவீசு
    சொக்காய்
    வாங்கலாம் கைவீசு
    சொகுசாய்ப்
    போடலாம் கைவீசு”    (மேலது)

    கல்லாங்காய் விளையாட்டு

    கொக்குச்சி கொக்கு
    ரெட்டை
    சில்லாக்கு
    மூக்குச்
    சிலந்தி

    ……………… …………… …………..
    …………… ………….. …………….
    பது;துப்பழம் சொட்டு?       (மேலது.ப.500)

    சடங்குகள்

    “மனித நாகரிகத்தின் முன்பிருந்தே சில பழக்கவழக்கங்களை மக்கள் மேற்கொண்டிருந்தனா். தொழில்கள் மாறியதால் சமுதாய மாற்றமும் நிகழ்ந்தது. சமுதாய மாற்றத்தால் பழக்க வழக்கங்களும் காலத்திற்கு ஏற்ப மாறி வந்துள்ளன. உலகில் உள்ள அனைத்து மக்களிடமும் பழக்க வழக்கங்கள் இருக்கின்றன. ஆனால், அவை நாட்டிற்கு நாடு இனத்திற்கு இனம் மாறுபடுகின்றன. மக்களின் வாழ்க்கை நடைமுறைக்கு ஏற்பப் பழக்க வழக்கங்கள் அமைகின்றன“ (நாட்டுப்புற இலக்கியம், ப.133) என்கிறார். கிருட்டினசாமி அவா்கள். “பன் மடங்கு பெருகும் என்ற நம்பிக்கையில் செய்யப்படும் ஒருவகை வளமைச் சடங்காரும்“ (The Indian Mother Goddess, P.3)  என்கிறார். வில்லியம் க்ரூக் அவா்கள், ‘தீமை தரும் ஆவிகள் தலை, வாய், காது, மூக்கு ஆகிய உறுப்புகளின் வழியாக எளிதில் புகுந்துவிடும் என்ற நம்பிக்கையில் காதில் துளையிட்டு அதில் தீய ஆவிகளை விரட்டும் சக்தி படைத்த ஏதாவது ஒரு உலோகத்தை அணிவித்தால் காது வழியாக தீய ஆவிகள் நுழைவதை தடுக்கலாம் என்ற எண்ணத்தில் இப்பழக்கம் ஏற்பட்டிருக்கலாம்’  (Religion and Folklore of Northern India, P.306) என்று கூறுகின்றார்.

    காது குத்துதல்

    “காது குத்துகின்ற பொழுது புத்தாடை உடுத்தித் தட்டாரை அழைத்துக் காதில் துளையிட்டுக் கடுக்கன் (காதோலை) அணிவிக்கின்றனா்“  என்கிறார் சோமலே அவா்கள். (தமிழ்நாடு மக்களின் மரபும், பண்பாடும் ப.99) தாய் மாமன் காதுகுத்த சீர்  கொண்டு வருவான் என்ற செய்தி இப்பாடலில் காணமுடிகின்றது.

    மன்னன் மருமகனோ?
    என் அரசன்காது குத்த“   (நா.வானமாமலை (தொ.ஆ) தமிழ்நாட்டுப்பாடல்கள்.ப.116)

    மூக்குக் குத்துதல்

    தமிழ் பெண்களுக்கு அழகு மூக்குக் குத்துதல் இதனை புகழேந்திப் புலவா், முகத்துக்கழகாக மூக்குத்தி தானணிவித்தான்“  (துரோபதை குறம்.ப.10) என்று கூறுகின்றார்.

    முடிவுரை

    இவ்வாறாகக் குழந்தைப் பாடல்களில் குழந்தைப் பேறின்மையினால் வரும் அவலங்கள், குழந்தை வேண்டி செய்யும் நோன்புகள், குழந்தைப் பேற்றின் அவசியம், ஏழ்மை, தாலாட்டு, விளையாட்டுப் பாடல்கள், சடங்குகள் குறித்தும் சமூகத்தில் நிலவும் பண்பாட்டின் வெளிப்பாடே இவையெல்லாம் என்பதையும் விளக்கும் விதமாக இக்கட்டுரை அமைந்தது. குழந்தைப் பாடல்கள் என்பவை சமூத்தின் காலக் கண்ணாடி எனில் மிகையாகா.

    ******

    கட்டுரையாசிரியர்
    தமிழ்த்துறைத் தலைவர்
    டி.எல்.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி
    விளாப்பாக்கம்

     

     

    Share
  • அகநானூற்றில் முருக வழிபாட்டுப் பதிவுகள்

    -பீ.பெரியசாமி

    முன்னுரை

    சங்ககாலம் முதல் இன்றுவரை முருக வழிபாடு என்பது தமிழர் பண்பாட்டில் கலந்த ஒன்றாகவே இருந்து வருகிறது. இதனை, “மாயோன் மேய காடுறை உலகமும், சேயோன் மேய மைவரை உலகமும், வேந்தன் மேய தீம்புனல் உலகமும், வருணன் மேய பெருமணல் உலகமும், முல்லை, குறிஞ்சி மருதம், நெய்தல் எனச் சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே“ (தொல்.அக.5) எனத் தொல்காப்பியர் கூறியுள்ளார். இதன்வழி முருகனை மலையும் மலையைச் சார்ந்த நிலமுமாகிய குறிஞ்சி நிலக்கடவுளாக அக்கால மக்கள் வழிபட்டனர் என்பது காணக்கிடக்கிறது. இக்குறிஞ்சி நிலக்கடவுளின் வழிபாட்டுப் பதிவுகள் எங்கெல்லாம் எவ்வாறெல்லாம் அகநானூற்றில் எடுத்தாளப்பட்டுள்ளது என்பதை இக்கட்டுரை ஆராயவுள்ளது.

    வெறியாட்டு நடத்துதல்

    தொல்காப்பியம் களவியலில் வெறியாட்டு குறித்து கூறியுள்ளது. இதற்கென ஒரு துறையும் ஒதுக்கியுள்ளார் தொல்காப்பியர். முருகனுக்கு உரித்தான காந்தள் பூவினைச் சூடி ஆடுவது அது.

    ”வெறிஅறி சிறப்பின் வெவ்வாய் வேலன்
    வெறியாட்டு அயர்ந்த காந்தளும்”
    (தொல். கள)

    அகநானூற்றில்,

    ”சூர்உறை வெற்பன் மார்புறத் தணிதல்
    அறிதனள் அல்லல் அன்னை வார்கொல்
    …………………………………….. ………………. ……………………
    முருகன் ஆர் அணங்கு என்றலின்” 
    (அகம்.98)

    எனும் பாடலில், எனக்கு நேர்ந்த துன்பமானது தலைவனின் மார்பை அடைதல் அல்லாது விலகுவதில்லை. இதையறியாமல் அன்னையானவள் வெறியாட்டு நடத்த முனைகிறாள். வார்கோலினை வளைக்குமாறு கூறி என் வளை நெகிழ்தலை அன்னையானவள் அறிந்துகொண்டாள். இது என்னவென்று அறியாது குறிசொல்லும் முதுபெண்டிரிடம் கேட்டாள். அவர்கள் கையில் இருக்கும் பிரம்பால் என்னைத் தட்டிப் பார்த்து, ”முருகன் பிடித்து ஆட்டுகிறான்” என்று கூறினர். இதனை மனத்தில் கொண்டே தாய் வெறியாட்டுக்கு ஆயத்தம் செய்வதாக தலைவி கூறுகிறாள். மேலும்,

    ”அறியா வேலன் தரீஇ, அன்னை
    வெறிஅயர் வியன்களம் பொலிய ஏத்தி
    மறிஉயிர் வழங்கா அளவை”(அகம்.242) எனும் பாடலில், “பல பிரப்பரிசிகளைப் பலியாக வைத்தும், உண்மையறியாத வேலனைக் கொண்டுவந்து வெறியயரும் பெரிய களத்தினைப் பொலியுறுமாறு போற்றித் துதித்தும், ஆட்டுக்குட்டியின் உயிரைப் பலியிட்டும் வெறியாட்டு செய்வதற்கும் முனைந்தாள் அன்னை“ என்பதில் வெறியாட்டு நிகழும்போது முருகனுக்குப் பலியிடுதல் என்பது அக்காலப் பண்பாட்டு மரபில் இருந்துள்ளமையை அறிய முடிகிறது. இது காலப்போக்கில் மாறிவிட்டது. மேலும், வெறியாட்டுக் களத்தினைக் குறித்து, ”வேலன் வெறிஅயர் வியன்களம்“ (அகம்.182) எனும் பாடல்வரி கூறுகிறது. இதன்வழி வெறியாட்டு நிகழ்த்துவதற்கெனத் தனியிடம் அக்காலத்தில் இருந்திருக்க வேண்டும் என்பது பெறப்பட்டது.

    பலியிடும் மரபு

    சங்ககாலம் முதற்கொண்டே நம் தமிழினத்தில் பலியிடுதல் எனும் சடங்கு கடைப்பிடிக்கப்பட்டுள்ளது. இதனை அகநானூற்றுப் பாடல்களிலும் காணமுடிகிறது. அவற்றுள்,

    ”படியோர்த் தேய்த்த பல்புகழ்த் தடக்கை
    நெடுவேள் பேணத் தணிகுவள் இவள்என
    ……………………….. …………….. …………………….
    முருகாற்றுப் படுத்த உருகெழு நடுநாள்”
    (அகம்.22)

    எனும் பாடலில், வணங்காதவரைத் தேய்த்துப் பழித்த பலவாகிய புகழைக் கொண்டவன்; பெரிய கையினை உடைய நெடுவேளாகிய முருகன். அவனை வணங்கினால் இவள் துயரம் தீங்கும் என, அந்தவேளை அவர்கள் நினைத்தனர். அறிவுரை கூறுகின்ற முதுபெண்டிரும், அதுவே உண்மை என்று கூறினர். ஆகவே, வெறியாட்டுக்களம் நல்ல முறையில் அமைக்கப்பெற்று, வேலினை நிறுத்தி அதற்கு மாலையினையும் சூட்டினர். வலிமை நிறைந்த கோவிலிலே ஆரவாரம் உண்டாகுமாறு முருகனின் புகழினையும் பாடினர், பலியிட்டனர், செந்தினையினைக் குருதியுடன் கலந்து தூவினர். இவ்வாறு முருகனை அச்சம் பொருந்திய நடு இரவினில் அவ்விடத்திற்கு வரவழைத்தனர் என்பதன் வழி இரவினிலே பலியிடுதல் நடைபெற்றது என்பதும் குருதி கலந்த உணவு தூவப்பட்டது என்பதும் அறியப்படுகிறது.

    முருகனின் சிறப்பு

    முருகனின் சிறப்பினை அகநானூறு,

    ”உருகெழு சிறப்பின் முருகுமனைத் தழீஇக்
    கடம்பும் கணனும் பாடி நுடங்குடி”
    (அகம்.138)

    எனும் பாடலில், உட்குப் பொருந்திய சிறப்பினையுடைய முருகனைக் கையாற்றொழுது, மலையின்கண் வருவித்து, அவன் கடம்பையும் களிற்றையும் புகழ்ந்துப் பாடிப் பனந்தோடும் காந்தள் மாலையும் கைக்கொண்டு, இரவு முழுவதும் வறிதே அசைந்து ஆடினராதல் நன்றாகுமோ எனக் கூறப்பட்டுள்ளது. மேலும்,

    ”கடியுடை வியல்நகர்க் காவல் கண்ணி
    முருகு என வேலன் தரூஉம்
    பவருமாகப் பயந்தன்றால் நமக்கே
    ”    (அகம்.232)

    எனும் பாடலில், நாள்தோறும் விரவிய பூப்பலியோடு கலந்து, காவல் பொருந்திய பரந்த மனையினைக் காத்தல் கருதி, அன்னையானவள் நம் வேறுபாடு முருகனால் ஏற்பட்டதென்று எண்ணி, வேலனை அழைத்துவரும் காலமாகவே நமக்குவந்து விளைந்தது என்பதில் முருகன் மகளிரிடையே தோன்றும் வேறுபாட்டைக் களையும் தெய்வமாகக் காட்சிபட்டுள்ளார். மேலும்,

    ”மெய்ம்மலி உவகையன் அந்நிலைக் கண்டு
    முருகு என உணர்ந்து முகமன் கூறி
    உருவச் செந்தினை நீரோடு தூவிதூஉம்”   (அகம்.272)

    எனும் பாடல், நம் வீட்டினிடத்து, உள்ளத்திலே மிகுந்த மகிழ்ச்சியுடையவனாய் அவன்வந்து சேர்ந்தான். அந்தச் சூழலிலே, நம் தாயும் கண்டாள் எனின், முருகனே என நினைத்து முகமகிழ்ந்து வரவேற்பளிப்பாள். நல்ல நிறம் வாய்ந்த செந்தினையை நீரோடு தூவி, வந்தவனை முருகனெனவே நினைத்து வழிபடவும் தொடங்கிவிடுவாள் என்பதில் முருகனை எவ்வாறு அக்கால மக்கள் தன் மனத்தில் வைத்து வழிபட்டனர் என்பதை அறிய முடிகிறது.

    சூரபதுமனை அழித்தல்

    சூரபதுமன் எனும் அரக்கனை முருகப்பெருமான் அழித்ததனையும், அதனோடு தொடர்புடைய செய்திகளையும் அகநானூறு கூறுகிறது. இதனை,

    ”சூர்மருங்கு அறுத்த சுடர்இலை நெடுவேல்
    சினம்மிகு வேந்தன் தண்பரங்குன்றத்து”  
    (அகம்.59)

    எனும் பாடலில், சூரபத்மனை அவன் சுற்றத்தோடு தொலைத்த ஒளிச்சுடரும் முனையினையுடைய நெடுவேலினையுடையவன், சினம் மிகுந்த முருகன். அச்சினம் தணிந்து, அவன் அருளுடையவனாகக் கோயில் கொண்டிருக்கும் இடம் திருப்பரங்குன்றம் என்பதிலிருந்தும்,

    ”புரிகணத் தன்ன நாய்தொடர் விட்டு
    முருகன் அன்ன சீற்றத்துக் கருந்திறல்”   
    (அகம்.68)

    எனும் பாடலில், ஒலியையொத்த கடுஞ்சீற்றத்துடன் பகைவரை எதிர்க்கக் கூடியவனாகிய முருகனின் வலிமையை இவ்வடிகள் எடுத்துக் கூறுகின்றன.

    பெயர்

    முருகனை – செவ்வேள், முருகன், முருகு, வேலன் எனும் பெயர்களில் அகநானூற்றுப் பாடல்களில் சுட்டியுள்ளனர். இதனை, ”காடுகெழு நெடுவேள்” (அகம்.5) என்பதில், மலையும் மலையினைச் சார்ந்த இடத்துக்குமுரிய கடவுள் நெடுவேள் எனும் முருகன் என்பதை உணர்த்துகிறது.

    முடிவுரை

    முருகன் – மலையும் மலையினைச் சார்ந்த இடத்துக்குமுரிய கடவுள் என்பதும், முருகனை வழிபடும்போது பலியிடுதல் நடைமுறையில் இருந்தது என்பதும், அவ்வாறு செய்யப்பட்ட வழிபாட்டுக்கு வெறியாட்டு என்று பெயர் என்பதும், முருகன் சூரனை அழித்தான் என்பதும். அவ்வாறு அழித்தபின் சினம் தணிந்தபின் திருப்பரங்குன்றில் கோயில் கொண்டான் என்பதும் இக்கட்டுரை வாயிலாக அறியப்படுவனவாகும்.

    ******

    கட்டுரையாளர்
    தமிழ்த்துறைத்தலைவர்
    D.L.R.  கலை மற்றும் அறிவியல் கல்லூரி
    விளாப்பாக்கம், ஆற்காடு.

     

     

    Share
  • பெருமிதமெனும் மெய்ப்பாட்டில் உரையாசிரியா்களின் அகநானூற்றுத் திறன்

     -பீ.பெரியசாமி

       1.முன்னுரை

    FB_IMG_15018996565301641நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை என்ற எட்டையும் முதன்மையான எண்வகை மெய்ப்பாடுகள் என்கிறார் தொல்காப்பியா். (தொல்.மெய்.நூ3) அவற்றுள் பெருமிதமெனும் மெய்ப்பாட்டிற்கான தோற்றுவாய்களாக, கல்வி, தறுகண், புகழ்மை, கொடை என்பனவற்றை விரித்துரைத்துள்ளார். இக்கட்டுரை தொல்காப்பியா் விரித்துரைக்கும் பெருமிதத்திற்குரிய மெய்ப்பாடுகளுக்கு உரைவகுத்த உரையாசிரியா்களின் உரைகளில் அகநானூற்றுப் பாடல்கள் எவ்வாறு எடுத்தாளப்பட்டள்ளன என்பதனை ஆராய்கிறது.

           1.1  பெருமிதம் தோன்றும் களன்கள்

    பெருமிதமெனும் மெய்ப்பாடு தோன்றும் களன்களைத் தொல்காப்பியா்,

    கல்வி தறுகண் புகழ்மை கொடையெனச்
    சொல்லப்
    பட்ட பெருமிதம் நான்கே” (‘தொல்.மெய்.9)
    எனும் நூற்பாவினில் கூறியுள்ளார்.

    1.2  உரையாசிரியா்கள் பார்வையில் பெருமிதமெனும் மெய்ப்பாடு

    பெருமிதம் வீரத்திற் பிறப்பது என இளம்பூரணரும், பெருமிதமென்பது வீரம் எனப் பேராசிரியரும், பெருமிதம் – வீரம் எனப் புலவா் குழந்தையும் உரை கொள்வா். இவற்றின்வழி பெருமிதமென்பது வீரம் என அறியப்படுகிறது.

      1.2.1  கல்வி

    கல்வியென்பது தவ முதலாகிய விச்சை (பேரா.மெய்.நூ.9) எனப் பேராசிரியா் உரை கொள்வார். இதன்வழி கல்வி என்பது இயல், இசை, நாடகம் எனும் முத்தமிழறிவும், படைக்கல்வியும்,  நுண்கலையும் அடங்குமென்பது அறியப்படுகிறது. இதனை விளக்க பேராசிரியரும் புலவா் குழந்தையும் கலி.141ஆம் பாடலை எடுத்தாண்டுள்ளனா்.

      1.2.2  தறுகண்

    தறுகணென்பது அஞ்சத்தக்கன கண்ட இடத்து அஞ்சாமை எனப் பேராசிரியரும்; தறுகண்-தறுகண்மை-அஞ்சாமை எனப் புலவா் குழந்தையும் உரை கொள்வா். இவற்றின் வழி தறுகண் என்பது அஞ்சத்தகுந்தன நடத்தவிடத்து அஞ்சாது செயல்படுதல் என்பது அறியப்படுகிறது. இதனை விளக்க இளம்பூரணர் புறப். வெண்பா.78.ஐயும் பேராசிரியரும் புலவா் குழந்தையும் கலி.141 ஐயும் எடுத்துக்காட்டியுள்ளனா்.

       1.2.3  புகழ்மை

    புகழ்மை என்பதனை இசைமையெனப் பொருள் கொள்வர் பேராசிரியரும் புலவர் குழந்தையும்.  “இசைமை “ -புகழ்; ஒலி; சீர்த்தி – எனப் பொருள் கூறுகிறது கழகத் தமிழ் அகராதி (க.த.அ.ப.98).  “புகழ்மை“ – புகழ்; புகழுடைமை- (க.த.அ.ப.664) எனப் பொருள் கூறுகிறது கழகத் தமிழ் அகராதி. இதன்வழி, புகழ்மை எனினும் இசைமையெனும் புகழ் என்பதனை உணா்த்துகிறது என்பது அறிப்படுகிறது.

    இசைமையென்பது இன்பமும் பொருளும் இறப்பப் பயப்பினும் பழியொடு வருவன செய்யாமையென பேராசிரியரும், இசைமை-புகழ்; அதாவது, இன்பமும் பொருளும் மிகுதியாக உண்டாயினும் பழிக்கத் தகுவன செய்யாமை எனப் புலவா் குழந்தையும் பொருள் கொள்வா். இவற்றின் வழிப் புகழ்மையென்பது நம்வாழ்வில் மிகுந்த மகிழ்ச்சியும் செல்வமும் கிடைப்பதாக இருப்பினும் மற்றோர் பழிக்க நேரும் செயலை செய்யாது விடுத்தல் என்பது அறியப்படுகிறது. இதனை விளக்கப் பேராசிரியரும் புலவர் குழந்தையும்,

    கழியாக்  காதல  ராயினுஞ்  சான்றோர்
    பழியொடு  
    வரூஉம்  இன்பம்  வெஃகார்”    (அகம்-112)

    எனும் அகநானூற்றுப் பாடலை எடுத்தாண்டுள்ளனா். இப்பாடலானது நீங்காத காதலையுடையவராயினும் சான்றோர் பழியோடு வரும் இன்பத்தை விரும்ப மாட்டார்கள் என்கிறது. எனவே புகழோடு வருமின்பத்தை விரும்புவா் என்றமையால் புகழ்பற்றி வந்த பெருமிதத்தை உணா்த்தியது.

      1.2.4  கொடை

    கொடையென்பது உயிரும் உடம்பும் உறுப்பும் முதலாகிய எல்லாப் பொருளும் கொடுத்தல் எனப் பேராசிரியா் உரை கொள்வார். இதன்வழி கொடையென்பது தன்னிடம் உள்ள அனைத்தையும் வேண்டுவோருக்கு வேண்டியவாறு அளித்தல் என்பது அறியப்படுகிறது. இதனை விளக்கப் பேராசிரியா், கலி-141, புறம்-43 ஆகிய பாடல்களையும் புலவா் குழந்தை கலி-141 ஆம் பாடலையும் எடுத்தாண்டு ள்ளனா்.

      1.2.5  சொல்லப்பட்ட பெருமிதம்

    சொல்லப்பட்ட பெருமிதம் என்றமையால் உரையாசிரியா்கள் (பேராசிரியா், புலவா் குழந்தை) காமம் பற்றியும் பெருமிதம் பிறக்கும் என்கின்றனா். இதனை விளக்கப் பேராசிரியரும் புலவா் குழந்தையும் புறம் -73 ஆம் பாடலை எடுத்தாண்டுள்ளனா்.

        1.3   முடிவுரை

    பெருமிதமெனும் இம்மெய்ப்பாட்டினை விளக்க இளம்பூரணர் புறப்- வெண்பா ஒரு பாடலையும், பேராசிரியா் கலித்தொகை -1, அகநானூறு -1, புறநானூறு-2 என நான்கு பாடல்களையும், புலவா் குழந்தை கலித்தொகை, அகநானூறு புறநானூறு ஆகியவற்றில் தலா ஒரு பாடல் என மூன்று பாடல்களையும் எடுத்தாண்டுள்ளனா். கலி-141, ஆம் பாடலை மட்டும் பேராசிரியரும், புலவா் குழந்தையும் கல்வி, தறுகண், கொடை எனும் மூன்று மெய்ப்பாடுகளையும் விளக்க எடுத்தாண்டுள்ளனா்.

    உரையாசிரியா்கள் (இளம்பூரணர், பேராசிரியா், புலவா் குழந்தை) அகநானூற்றில் (112) ஒரு பாடலையும், கலித்தொகையில் (141) ஒரு பாடலையும் புறநானூற்றில் (43, 73) என இரண்டு பாடல்களையும் புறப் வெண்பா-78 ஆம் நூற்பாவையும் என ஐந்து உதாரணப்பாடல்களை எடுத்தாண்டுள்ளனா். இவற்றின் வழி புறநானூறு தவிர்த்த ஏனைய வற்றிலிருந்து தலா ஒரு பாடல் எடுத்தாளப்பட்டுள்ளது என்பது குறிப்பாக அகநானூற்றில் ஒரு பாடல் மட்டுமே எடுத்தாளப்பட்டுள்ளது என்பது முடிவு.

    *** 

    கட்டுரையாசிரியர்
    தமிழ்த்துறைத் தலைவர்
    டி.எல்.ஆர். கலைமற்றும் அறிவியல் கல்லூரி
    விளாப்பாக்கம்

     

     

     

    Share