Tag: மாணிக்கவாசகர்

  • திருவெம்பாவை – 20 | போற்றி அருளுக

    திருவெம்பாவை – 20 | போற்றி அருளுக

    திருவெம்பாவை – 20

    மாணிக்கவாசகர்

    பாடியவர் : ஸ்ருதி நடராஜன், டெக்சாஸ்

    போற்றி அருளுக நின் ஆதியாம் பாதமலர்
    போற்றி அருளுக நின் அந்தமாம் செந்தளிர்கள்
    போற்றி எல்லா உயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்
    போற்றி எல்லா உயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்
    போற்றி எல்லா உயிர்க்கும் ஈறாம் இணையடிகள்
    போற்றி மால் நான்முகனும் காணாத புண்டரிகம்
    போற்றி யாம் உய்ய ஆட்கொண்டருளும் பொன்மலர்கள்
    போற்றியாம் மார்கழி நீராடேலோர் எம்பாவாய்.

    பொழிப்புரை:

    எப்பொருளுக்கும் முதலாயுள்ள உன் திருவடி மலருக்கு வணக்கம். எவற்றுக்கும் முடிவாயுள்ள, செந்தளிர் போலும் திருவடிகளுக்கு வணக்கம்; எல்லாவுயிர்களுக்கும் தோன்றுதற்குக் காரணமாகிய பொன்போன்ற திருவடிகளுக்கு வணக்கம், எல்லாவுயிர் களுக்கும் நிலைபெறுதற்குரிய பாதுகாப்பாகிய அழகிய கழலணிந்த திருவடிகளுக்கு வணக்கம். எல்லாவுயிர்களுக்கும் முடிவு எய்துதற்குக் காரணமாகிய திருவடிகள் இரண்டிற்கும் வணக்கம். திருமாலும், பிரமனும், காணமுடியாத திருவடித் தாமரை மலருக்கு வணக்கம். நாம் உய்யும்படி ஆட்கொண்டருளுகின்ற தாமரை மலர்போலும் திருவடி களுக்கு வணக்கம். இங்ஙனம் கூறிப் போற்றி இறைவனை வணங்கி, நாம் மூழ்குவதற்குரிய மார்கழி நீரில் ஆடுவோமாக.

     

    உரைக்கு நன்றி – தேவாரம் தளம் (http://thevaaram.org)
    படத்திற்கு நன்றி – விக்கிப்பீடியா
    https://upload.wikimedia.org/wikipedia/commons/a/a1/Gajasurasamhara_%28Temple_de_Chennakeshava_%C3%A0_Belur%2C_Inde%29_%2814481874186%29.jpg

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • திருவெம்பாவை – 19 | உங்கையிற் பிள்ளை

    திருவெம்பாவை – 19 | உங்கையிற் பிள்ளை

    திருவெம்பாவை – 19

    மாணிக்கவாசகர்

    பாடியவர் – ஸ்ருதி நடராஜன், டெக்சாஸ்

    உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம் என்று
    அங்கப் பழஞ்சொல் புதுக்கும் எம் அச்சத்தால்
    எங்கள் பெருமான் உனக்கொன்று உரைப்போம்கேள்
    எங்கொங்கை நின்னன்பர் அல்லார்தோள் சேரற்க
    எங்கை உனக்கல்லாது எப்பணியும் செய்யற்க
    கங்குல் பகல் எங்கண் மற்றொன்றும் காணற்க
    இங்கிப் பரிசே எமக்கு எங்கோன் நல்குதியேல்
    எங்கெழிலென் ஞாயிறு எமக்கேலோர் எம்பாவாய்.

    பொழிப்புரை:

    எங்கள் தலைவனே! உன் கையில், என் குழந்தை அடைக்கலப் பொருளாகும் என்று வழங்கிவரும் அப்பழமொழியைப் புதுப்பிக்கின்றோம் என்று அஞ்சி, உனக்கு ஒரு விண்ணப்பத்தைச் செய்கின்றோம். கேட்டருள்வாயாக. எங்கள் தனங்கள் உன்னடியவர் அல்லாதார் தோள்களைத் தழுவாதிருக்க; எம் கைகள் உனக்கன்றிப் பிறதேவர்க்கு எவ்வகையான தொண்டும் செய்யாதிருக்க; இரவும், பகலும், எம் கண்கள் உன்னையன்றி வேறு எந்தப் பொருளையும் காணாதிருக்க; இந்நிலவுலகில் இம்முறையே எங்கள் தலைவனே! நீ எங்களுக்கு அருளுவாயாயின், சூரியன் எத்திக்கில் உதித்தால் எங்களுக்கு என்ன?

     

    உரைக்கு நன்றி – தேவாரம் தளம் (Thevaaram dot org)
    படத்திற்கு நன்றி – விக்கிப்பீடியா
    https://commons.wikimedia.org/wiki/Category:Shiva_with_tiger_skin#/media/File:Shakta_Ardhanari.jpg

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • திருவெம்பாவை – 18 | அண்ணா மலையான்

    திருவெம்பாவை – 18 | அண்ணா மலையான்

    திருவெம்பாவை – 18

    மாணிக்கவாசகர்

    பாடியவர் – ஸ்ருதி நடராஜன், டெக்சாஸ்

    அண்ணா மலையான் அடிக்கமலம் சென்றிறைஞ்சும்
    விண்ணோர் முடியின் மணித்தொகை வீறு அற்றாற்போல்
    கண்ணார் இரவி கதிர்வந்து கார்கரப்பத்
    தண்ணார் ஒளிமயங்கித் தாரகைகள் தாம்அகலப்
    பெண்ணாகி ஆணாய் அலியாய்ப் பிறங்கொளிசேர்
    விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகிக்
    கண்ணார் அமுதமாய் நின்றான் கழல்பாடிப்
    பெண்ணே இப்பூம்புனல்பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய்.

    பொழிப்புரை:

    தோழியே! திரு அண்ணாமலை அண்ணலது திருவடித் தாமரையைப் போய் வணங்குகின்ற தேவர்களது முடியிலுள்ள இரத்தினங்களின் தொகுதி, ஒளி இழந்தாற்போல கண்களுக்கு நிறையும் சூரியன் தனது கிரணங்களுடன் தோன்றினமையால், இருளானது மறைய நட்சத்திரங்கள் குளிர்ச்சி பொருந்திய ஒளி குன்றி ஒழிய அப்போழ்தில், பெண்ணாகியும், ஆணாகியும், அலியாகியும், விளங்குகின்ற ஒளி பொருந்திய ஆகாயமாகியும் பூமியாகியும் இத்தனைக்கும் வேறுபட்டும் கண்ணால் பருகப்படுகின்ற அமுதமாய் நின்றவனாகிய இறைவனது திருவடியைப் பாடி இப்புது நீரில் வீழ்ந்து ஆடுவாயாக.

    உரைக்கு நன்றி – தேவாரம் தளம் (http://thevaaram.org)
    படத்திற்கு நன்றி – விக்கிப்பீடியா

    By Unknown author – QwHFUq6AHDDEBQ at Google Cultural Institute maximum zoom level, Public Domain, https://commons.wikimedia.org/w/index.php?curid=21982354

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • திருவெம்பாவை – 17 | செங்கண் அவன்பால்

    திருவெம்பாவை – 17 | செங்கண் அவன்பால்

    திருவெம்பாவை – 17

    மாணிக்கவாசகர்

    பாடியவர் – ஸ்ருதி நடராஜன், டெக்சாஸ்

    செங்கண் அவன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால்
    எங்கும் இலாதோர் இன்பம் நம்பாலதாக்
    கொங்குஉண் கருங்குழலி நந்தம்மைக் கோதாட்டி
    இங்கு நம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச்
    செங்கமலப் பொற்பாதம் தந்தருளும் சேவகனை
    அங்கண் அரசை அடியோங்கட்கு ஆரமுதை
    நங்கள் பெருமானைப் பாடி நலந்திகழப்
    பங்கயப் பூம்புனல் பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய்.

    பொழிப்புரை:

    மணம் பொருந்திய கரிய கூந்தலை உடைய பெண்ணே! சிவந்த கண்களையுடைய திருமாலிடத்தும், நான்முக னிடத்தும், பிற தேவர்களிடத்தும், எங்கும் மற்றவர்களிடத்தும் இல்லாததாகிய, ஒப்பற்ற ஆனந்தம் நம்மிடத்து ஆகும்படி, நம்மைப் பெருமைப் படுத்தி, இவ்வுலகிலே நம் வீடுகள் தோறும் எழுந்தருளி வந்து, செந்தாமரை போன்ற அழகிய திருவடியைக் கொடுத்தருளு கின்ற வீரனை, அழகிய கருணை நோக்குடைய மன்னனை, அடிமை களாகிய நமக்கு அமுதம் போல்வானை, நம் தலைவனைப் புகழ்ந்து பாடி, நன்மைகள் பெருக, தாமரை மலர் நிறைந்த நீரில் குதித்து ஆடுவாயாக.

     

    உரைக்கு நன்றி – தேவாரம் தளம் (http://www.thevaaram.org)
    படத்திற்கு நன்றி – விக்கிப்பீடியா
    https://upload.wikimedia.org/wikipedia/commons/8/8b/Dasabuja_rishaba_thandava_moorthy.jpg

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • திருவெம்பாவை – 15 | ஓரொருகால் எம்பெருமான்

    திருவெம்பாவை – 15 | ஓரொருகால் எம்பெருமான்

    திருவெம்பாவை – 15

    மாணிக்கவாசகர்

    பாடியவர்: ஸ்ருதி நடராஜன், டெக்சாஸ்

    ஓரொருகால் எம்பெருமான் என்றென்றே நம்பெருமான்
    சீரொருகால் வாய் ஓவாள் சித்தம் களிகூர
    நீரொருகால் ஓவா நெடுந்தாரை கண் பனிப்பப்
    பாரொருகால் வந்தனையாள் விண்ணோரைத் தான் பணியாள்
    பேரரையற்கு இங்ஙனே பித்துஒருவர் ஆமாறும்
    ஆர்ஒருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர் தாள்
    வாருருவப் பூண்முலையீர் வாயார நாம்பாடி
    ஏருருவப் பூம்புனல்பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய்.

    பொழிப்புரை:

    கச்சணிந்த அழகிய அணியுடன் கூடிய கொங்கை களை உடையீர்! ஒவ்வொரு சமயத்தில், எம்பெருமான் என்று சொல்லி வந்து இப்பொழுது நம்மிறைவனது பெருமையை ஒருகாலும் வாயினாள் கூறுதலை நீங்காதவளாகிய இவள் மனம் மகிழ்ச்சி மிக விழிகளினின்றும், ஒருபொழுதும் நீங்காத நீரின் நீண்ட தாரைகள் ஒழுகப் பூமியின்மேல் ஒருமுறையே வீழ்ந்து எழாது வணங்குவாள். பிற தேவரைத் தான் வணங்கமாட்டாள். பெரிய தலைவனாகிய இறைவன் பொருட்டு ஒருவர் பித்தராகுமாறும் இவ்வாறோ? இவ் வாறு பிறரை அடிமை கொள்ளும் ஞான உருவினர் யார் ஒருவரோ, அவருடைய திருவடியை நாம் வாயாரப் புகழ்ந்து பாடி, அழகிய தோற்றமுடைய மலர்கள் நிறைந்த நீரில் நீர் குதித்து ஆடுவீராக.

     

    உரைக்கு நன்றி – தேவாரம் தளம் (http://thevaaram.org)
    படத்திற்கு நன்றி – விக்கிப்பீடியா
    By Sharvarism – Own work, CC BY-SA 4.0, https://commons.wikimedia.org/w/index.php?curid=87535488

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • திருவெம்பாவை – 14 | காதார் குழையாட

    திருவெம்பாவை – 14 | காதார் குழையாட

    திருவெம்பாவை – 14

    மாணிக்கவாசகர்

    பாடியவர் – ஸ்ருதி நடராஜன், டெக்சாஸ்

    காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்
    கோதை குழலாட வண்டின் குழாம் ஆடச்
    சீதப் புனல்ஆடிச் சிற்றம் பலம்பாடி
    வேதப் பொருள்பாடி அப்பொருள் ஆமா பாடி
    சோதி திறம்பாடிச் சூழ்கொன்றைத் தார் பாடி
    ஆதி திறம்பாடி அந்தம் ஆமா பாடிப்
    பேதித்து நம்மை வளர்த்துஎடுத்த பெய்வளை தன்
    பாதத் திறம்பாடி ஆடேலோர் எம்பாவாய்.

    பொழிப்புரை:

    காதில் பொருந்திய குழை அசையவும், பசிய பொன்னால் ஆகிய அணிகள் அசையவும் பூமாலை கூந்தலில் இருந்து அசையவும் மாலையைச் சுற்றும் வண்டின் கூட்டம் அசையவும், குளிர்ச்சியாகிய நீரில் மூழ்கித் தில்லைச் சிற்றம்பலத்தைப் புகழ்ந்து பாடி, வேதப் பொருளாகிய சிவபிரானைப் பாடி, அப்பொருள் நமக்கு ஆகும் வண்ணம் பாடிப் பரஞ்சோதியின் தன்மையைப் பாடி, இறைவன் சென்னியில் சூழ்ந்துள்ள கொன்றையைப் பாடி, அவன் ஆதியான தன்மையைப் பாடி, அவன் அந்தமான முறையைப் பாடி, பக்குவமுறைகட்கு ஏற்ப வேறுபடுத்தி, நம்மை ஆக்கமாய வேறுபாடுறுத்தி உயர்த்திய, வளையலை உடைய உமாதேவியின் திருவடியின் தன்மையைப் பாடி ஆடுவாயாக.

     

    உரைக்கு நன்றி – தேவாரம் தளம் (http://thevaaram.org)
    படத்திற்கு நன்றி – விக்கிப்பீடியா
    By Artist Genius Shri K.R.Venugopal Sharma
    https://commons.wikimedia.org/wiki/File:KAMAKSHI_.jpg

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • திருவெம்பாவை – 12 | ஆர்த்த பிறவி

    திருவெம்பாவை – 12 | ஆர்த்த பிறவி

    திருவெம்பாவை 12

    மாணிக்கவாசகர்

    பாடியவர்: ஸ்ருதி நடராஜன், டெக்சாஸ்

    ஆர்த்த பிறவித் துயர்கெட நாம் ஆர்த்துஆடும்
    தீர்த்தன் நற்றில்லைச் சிற்றம்பலத்தே தீயாடும்
    கூத்தன் இவ்வானும் குவலயமும் எல்லோமும்
    காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி
    வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார்கலைகள்
    ஆர்ப்பரவம் செய்ய அணி குழல்மேல் வண்டார்ப்பப்
    பூத்திகழும் பொய்கை குடைந்து உடையான் பொற்பாதம்
    ஏத்தி இருஞ்சுனைநீர் ஆடேலோர் எம்பாவாய்.

     

    பொழிப்புரை

    நம்மைப் பிணித்த பிறவித் துன்பம் ஒழியும்படி, நாம் மகிழ்ந்து ஆடுகின்ற தீர்த்தமாய் உள்ளவன், அழகிய தில்லையின் கண்ணுள்ள ஞான சபையில் அனலேந்தி ஆடுகின்ற கூத்தப்பிரான். விண்ணுலகத்தையும் நிலவுலகத்தையும் நம் எல்லோரையும், தோற்று வித்தும் நிலை பெறுத்தியும், நீக்கியும், விளையாடுபவனாகிய இறை வனது பொருள் சேர் புகழை உரைத்து, வளையல்கள் ஒலிக்கவும், நீண்ட மேகலை முதலிய அணிகள் அசைந்து ஓசை எழுப்பவும் அழகிய கூந்தலின் மேல், வண்டுகள் எழுந்து முழங்கவும் மலர்கள் விளங்குகின்ற பொய்கையில் ஆடி, நம்மை உடைய இறைவனது பொன் போன்ற திருவடிகளைத் துதித்துப் பெரிய மலைச் சுனை நீரில் மூழ்குவாயாக.

    நன்றி – http://thevaaram.org/
    படத்துக்கு நன்றி – விக்கிப்பீடியா

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • திருவெம்பாவை – 11 | மொய்யார் தடம்

    திருவெம்பாவை – 11 | மொய்யார் தடம்

    திருவெம்பாவை – 11

    மாணிக்கவாசகர்

    மொய்யார் தடம் பொய்கை புக்கு முகேர்என்னக்
    கையாற் குடைந்து குடைந்து உன் கழல்பாடி
    ஐயா வழியடியோம் வாழ்ந்தோம் காண் ஆர் அழல் போற்
    செய்யா வெண்ணீறாடி செல்வா சிறுமருங்குல்
    மையார் தடங்கண் மடந்தை மணவாளா
    ஐயா நீ ஆட்கொண்டருளும் விளையாட்டின்
    உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உயர்ந்தொழிந்தோம்
    எய்யாமற் காப்பாய் எமையேலோர் எம்பாவாய்.

    நாம் குளத்தில் குதிக்கும்போது, குபீர், தொபீர், படீர், தொபுக்கடீர் என்றெல்லாம் ஒலியெழுவதைப் பார்த்திருக்கிறோம், படித்திருக்கிறோம். திருவெம்பாவையில் மாணிக்கவாசகர், வேறு ஓர் ஓசையைக் குறிப்பிடுகிறார். பாவை நோன்பு இருக்கும் பெண்கள், குளத்தில் குளிக்கச் செல்கிறார்கள். அது, வண்டுகள் மொய்க்கும் மலர்கள் கொண்ட பொய்கை. அதில் முகேர் எனச் சப்தம் எழுமாறு குதித்துக் குளிக்கிறார்களாம். இந்த மாணிக்கப் பொய்கையில் நீங்களும் பாய்ந்து குளியுங்கள். டெக்சாஸ்வாழ் ஸ்ருதி நடராஜனின் மந்திரக் குரலில் இந்த இனிய பாடலைக் கேளுங்கள்.

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • திருவெம்பாவை – 10 | பாதாளம் ஏழினும்

    திருவெம்பாவை – 10 | பாதாளம் ஏழினும்

    திருவெம்பாவை – 10

    மாணிக்கவாசகர்

    பாதாளம் ஏழினும்கீழ் சொற்கழிவு பாதமலர்
    போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே
    பேதை ஒருபால் திருமேனி ஒன்றல்லன்
    வேதமுதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும்
    ஓத உலவா ஒருதோழன் தொண்டருளன்
    கோதில் குலத்து அரன் தன் கோயில் பிணாப்பிள்ளைகாள்
    ஏதவன் ஊர் ஏதவன் பேர் ஆர் உற்றார் ஆர் அயலார்
    ஏதவனைப் பாடும் பரிசேலார் எம்பாவாய்.

    இறைவனுக்கு உருவம் கொடுத்தாலும் அது ஓர் அடையாளமே. அதுவே முழுமையான உருவம் இல்லை. எங்கும் நிறைந்திருக்கும் அவனை எப்படி ஓர் எல்லைக்குள் சுருக்க முடியும்? அதனால்தான் மாணிக்கவாசகர், சிவபெருமானை ஓத உலவா ஒருதோழன் என்கிறார். அவன் ஊர் எது? பேர் எது? உற்றார் யார்? அயலார் யார்? இத்தகையவனை எவ்வாறு பாடுவது? எனக் கேட்கிறார். தன் திருமேனியில் பேதை ஒருபால் கொண்ட தோழனை டெக்சாஸிலிருந்து ஸ்ருதி நடராஜன் உளமாரப் பாடுகிறார். கேட்டு மகிழுங்கள்.

     

    படத்துக்கு நன்றி – விக்கிப்பீடியா
    https://en.wikipedia.org/wiki/Shiva#/media/File:Shiva_as_the_Lord_of_Dance_LACMA_edit.jpg

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • திருவெம்பாவை – 9 | முன்னைப் பழம்பொருட்கும்

    திருவெம்பாவை – 9 | முன்னைப் பழம்பொருட்கும்

    திருவெம்பாவை – 9

    முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே
    பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப் பெற்றியனே
    உன்னைப் பிரானாகப் பெற்றவுன் சீரடியோம்
    உன்னடியார் தாள்பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம்
    அன்னவரே எம்கணவர் ஆவர் அவர் உகந்து
    சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணி செய்வோம்
    இன்ன வகையே எமக்கு எம்கோன் நல்குதியேல்
    என்ன குறையும் இலோம் ஏலோர் எம்பாவாய்.

    மரபில் வேர்விட்டு, நவீனத்தில் கிளைவிரித்தலை இன்று பல துறைகளில் பேசுகிறோம். ஆனால், இதை முதலில் காட்சிப்படுத்தியவர், மாணிக்கவாசகர். முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே, பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப் பெற்றியனே என்ற அவரது அடியொற்றியே இன்றும் நாம் மரபையும் நவீனத்தையும் ஒருசேர இணைத்துக் காண்கிறோம். அப்படி இணைந்திருப்பதை விரும்புகிறோம்.

    பழமைக்குப் பழமையாய், புதுமைக்குப் புதுமையாய் விளங்கும் பரஞ்சோதியாம் சிவபெருமானைப் போற்றுவோம். திருவாசகத்தின் 9ஆவது பாடல் முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளைப் பின்னைப் புதுமைகள் பல மேவிய டெக்சாஸிலிருந்து ஸ்ருதி நடராஜன் பாடுவதைக் கேளுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • திருவெம்பாவை – 8 | கோழி சிலம்ப

    திருவெம்பாவை – 8 | கோழி சிலம்ப

    திருவெம்பாவை – 8

    கோழி சிலம்பச் சிலம்பும் குருகு எங்கும்
    ஏழில் இயம்ப இயம்பும் வெண்சங்கு எங்கும்
    கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை
    கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ
    வாழி ஈதென்ன உறக்கமோ வாய்திறவாய்
    ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ
    ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை
    ஏழைபங்காளனையே பாடேலோர் எம்பாவாய்.

    தமிழர்களிடம் ஒரு நல்ல வழக்கம் உண்டு. ஒருவரைச் சற்றே குறைசொல்லும் முன், முதலில் அவரை வாழ்த்திவிட்டு, பிறகே அதைச் சொல்வார்கள். 9ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மாணிக்கவாசகர், இதை நயமாகச் சொல்கிறார்.

    கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை
    கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ
    வாழி ஈதென்ன உறக்கமோ வாய்திறவாய்

    ஒப்பற்ற ஒளிப்பிழம்பை, நிகரற்ற கருணையை உடைய சிவபெருமானின் இணையற்ற புகழைப் பாடினோம். உனக்குக் கேட்கவில்லையா? வாழ்க, இது என்ன உறக்கமோ? வாய்திறந்து பேசு என்கிறார். இது என்ன உறக்கமோ எனக் குட்டுவதற்கு முன், வாழ்க என வாழ்த்துகிறார்.

    உறங்குவது போலும் சாக்காடு என வள்ளுவர் சொல்கிறார். எனவே உறங்குவோரை, உறங்கச் செல்வோரை, உறங்கி விழிப்போரை நாம் எப்போதும் வாழ்த்தியே தொடங்க வேண்டும். அது நல்லதிர்வுகளைத் தோற்றுவிக்கும். இதுபோல், விடைபெற்றுச் செல்வோரை, வெளியே புறப்படுபவரை, புதிய செயல் செய்யத் தொடங்கும் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு முறையும் நாம் வாழ்த்த வேண்டும்.

    திருவெம்பாவையின் இந்த நயமான பாடலை, ஸ்ருதி நடராஜன் (டெக்சாஸ்) குரலில் கேளுங்கள்.

     

    படத்துக்கு நன்றி விக்கிப்பீடியா

    https://upload.wikimedia.org/wikipedia/commons/8/8f/Gods_AS.jpg

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • திருவெம்பாவை – 6 | மானே நீ நென்னலை

    திருவெம்பாவை – 6 | மானே நீ நென்னலை

    திருப்பாவை வெளியிட்ட போது, திருவெம்பாவை எங்கே என்று அன்பர்கள் கேட்டார்கள். இதோ, அமெரிக்காவின் டெக்சாஸ் மாநகரிலிருந்து நமக்காகப் பாடுகிறார், திருமதி ஸ்ருதி நடராஜன். இவரை நமக்கு அறிமுகப்படுத்திய திருமதி சுதா மாதவன் அவர்களுக்கு நன்றி.

    திருவெம்பாவை பாடல் 6
    இயற்றியவர்: மாணிக்கவாசகர்
    பாடியவர்: ஸ்ருதி நடராஜன், டெக்சாஸ், அமெரிக்கா
    ராகம்: கமாஸ்

    மானே நீ நென்னலை நாளை வந்து உங்களை
    நானே எழுப்புவன் என்றலும் நாணாமே
    போன திசை பகராய் இன்னம் புலர்ந்தின்றோ
    வானே நிலனே பிறவே அறிவரியான்
    தானே வந்து எம்மைத் தலையளித்து ஆட்கொண்டருளும்
    வான்வார் கழல்பாடி வந்தோர்க்கு உன் வாய் திறவாய்
    ஊனே உருகாய் உனக்கே உறும் எமக்கும்
    ஏனோர்க்கும் தம் கோனைப் பாடேலோர் எம்பாவாய்

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • திருச்சதகத்தில் மணிவாசகர்

     திருச்சதகத்தில் மணிவாசகர்

    முனைவர் இரா. மதன் குமார். உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, கற்பகம் உயர்கல்வி கலைக்கழகம், கோயம்புத்தூர் – 21.

    முன்னுரை

    தொல்லை இரும்பிறவிப் பிணி தீர்க்கின்ற அருமருந்தென விளங்குவது, ‘திருவாசகம்’. அதன் ஐந்தாம் திருப்பாடல் தொகுப்பாக இடம்பெறுவது, நூறு திருப்பாடல்களைக்கொண்ட திருச்சதகமாகும். மெய்யுணர்தல் முதலாக, ஆனந்தாதீதம் ஈறாகிய பத்துத் தலைப்புகளின் கீழுள்ள,   ஒவ்வொரு திருப்பாடலின் சொல்லும் பொருளும், மணிவாசகரின் சிவானுபவப் பதிவுகளாக உள்ளன. அத்திருப்பாடல்கள், தாயைத் தேடி அலைகின்ற குழந்தையின் ஆராத தவிப்பாக, கண்ணொளி பெற்று அதனை மீண்டும் இழந்தானின் தீராத ஆற்றாமையாக, உலக வாழ்க்கையை ஆற்றாது, சிவத்தைச் சேர மணிவாசகர் கொண்ட ஞானத்தவிப்பின் பதிவுகளாக விளங்குகின்றன. அவ்வகையில், திருச்சதகத் திருப்பாடல்களில் புலனாகும், மணிவாசகரின் பக்தி அனுபவத்தை இக்கட்டுரை எடுத்துரைக்கிறது.

    ஞானநாடகம்

    ‘உலகும், உடம்பும், இளமையும், செல்வமும் நிலையில்லாதன’ என உணர்தலும், ‘சிவமே மெய்ப்பொருள்’ என்று தெளிதலுமே, மெய்யுணர்தலாகும். ஏதேனும் ஒன்றைப் பற்றி நிற்பதே உயிரின் இயல்பாகும். உயிரானது, பொய்ப்பொருளைப் பற்றி நிற்கின்ற அறியாமை மயக்கிலிருந்து தெளிகின்றபோது, மெய்ப்பொருளாகிய சிவத்தைச் சார்கின்ற பேரறிவு வாய்க்கின்றது. அப்பேரறிவானது, பற்றற்றவனாகிய பரத்தையே நாளும் பற்றுகின்ற மெய்யுணர்வை மேன்மேலும் உயிரிடத்தில் விளங்கச்செய்கிறது. மணிவாசகர், திருப்பெருந்துறையில் இறைவன் தமக்கு ஞானகுருவாக வந்தருளிய நொடிமுதலாக, சித்தத்தைச் சிவன்பாலே வைக்கின்ற மெய்யுணர்வில் முழுமையாக ஆழ்ந்தார். பெருமான் அவர்பொருட்டு, நரியைக் குதிரைகளாக்கியும், பிட்டுக்கு மண் சுமந்தும் நிகழ்த்திய விளையாடல்களின் வழியே அவர்தம் அருள்சிறப்பினைத் தென்னவன் உணர்ந்தான். அவன், தனது ஆட்சிப்பொறுப்பை அடிகளிடம் தந்து, தம்மையும் மக்களையும் உய்விக்க வேண்டினான். அடிகள், தமது ஞானத்தெளிவாகிய மெய்யுணர்வால், நாடாளுகின்ற பேற்றினையும் தாழ்வென ஒதுக்கினார். ‘தம்மை ஆள்கின்ற நாதன் பாதம் பணிவதே, உயிர்க்கு உறுதி’ என்ற மெய்யுணர்வில் நிலைகொண்டார். நிலையில்லா உலகியல் இன்பங்களின் மீதான மயக்கம் தீர்தலும், திருவடியில் கண்ணீர்ப் பெருக்குதலும், அன்பை மறவாத பற்றுறுதியுமாகிய மணிவாசகரின் மெய்யுணர்வு அனுபவங்கள், திருச்சதகத்தில், ‘மெய்யுணர்தல்’ என்னும் தலைப்பின்கீழ் உரைக்கப்பெற்றுள்ளன.

    ‘மெய்தான் அரும்பி விதிர்விதிர்த் துன்விரை யார்கழற்கென்

    கைதான் தலைவைத்துக் கண்ணீர் ததும்பி வெதும்பியுள்ளம்

    பொய்தான் தவிர்ந்துன்னைப் போற்றி சயசய போற்றியென்னும்

    கைதான் நெகிழ விடேன்உடை யாயென்னைனைக் கண்டுகொள்ளே’ (திருச்சதகம்:1)

    என்றமைந்த பாடலின் இறுதி அடியிலுள்ள, ‘கை’ என்பது, ‘ஒழுக்கம்’ எனப் பொருள்படும். ‘நெகிழவிடேன்’ என்பது, ‘கைவிடேன்’ என்னும் பற்றுறுதியைக் குறிக்கும். ’பெருமானைப் பணிவதே பணி’ என மணிவாசகர் பெற்ற மெய்யுணர்வின் வெளிப்பாடாக இத்திருப்பாடல் அமைந்திலங்குகிறது.

    அறிவுறுத்தல்

    உலகியல் வாழ்வில் உயிர்கள், ‘யானே அனைத்தையும் செய்கின்றேன்’ என்ற அகப்பற்றுடனும், ‘எல்லாம் எனது உடமை’ என்னும் புறப்பற்றுடனும் அறியாமைக் கூத்தாடி, அன்றாடம் வாழ்நாளை வீணே கழிக்கின்றன. பயனற்ற அறியாமைக்கூத்தின் அவலத்தை உயிர்க்கு அறிவுறுத்தி மீட்டருள வேண்டியே பெருமான், அம்பலத்தின்கண் ஓயாது ஆனந்தக்கூத்தாடுகின்றான். ‘அம்பலமாகிய அண்டக்கூத்தே, பிண்டத்திலும் விளங்குகிறது; அனைத்து உயிரினுள்ளும் இருந்து பெருமானே அனைத்தையும் இயக்குகின்றான்’; அவனே உள்ளிருந்து, தன்னையும் இயக்குகின்றான்’ என்னும் மெய்யுணர்வு பாழாகாதவகையில், பெருமானை இடையறாது தொழுது பக்தியில் ஆழ்வதே நன்னெறியாகும்’ என மணிவாசகர் நெஞ்சுக்கு அறிவுறுத்துகின்றார்.

    ‘வாழ்கின்றாய் வாழாத நெஞ்சமே வல்வினைப்பட்டு

    ஆழ்கின்றாய் ஆழாமற் காப்பானை ஏத்தாதே

    சூழ்கின்றாய் கேடுனக்குச் சொல்கின்றேன்

    வீழ்கின்றாய் நீஅவலக் கடலாய வெள்ளத்தே’          (திருச்சதகம்: 20)

    சுட்டறுத்தல்

    பொறி முதலிய கருவிகளின் துணையால், குறித்த ஒன்றினைச் சுட்டி நம் சிற்றறிவுக்கு எட்டியவாறு உணர்தல், சுட்டறிவாகும். ஆனால், ‘பெருமான், அத்தகைய பசுஞானத்தால் உணர வல்லவன் அல்லன்’. அதனைப் பெருமானே உயிர்க்கு அறிவுறுத்தித் தெளியச்செய்தலே சுட்டறுத்தலாகும் (சிற்றறிவு அகற்றல்). ’ஊனக்கண் பாசம் உணராப் பதியை ஞானக்கண்ணினில் சிந்தை நாடுக’ என்பது சிவஞானபோதம். அவனருளையே கண்ணாகக் கொண்டு காணமுற்பட்டால் மட்டுமே, இறைவன் அனைத்து பொருள்களின் குண குணியாகவும், அவற்றைக் கடந்த அரும்பொருளாகவும் விளங்குகின்ற பரத்துவத்தை உணரலாம். திருவருளே கண்ணாக இருந்து, உயிர்க்குப் பெருமானை உணர்த்துகிறது. ‘காண வல்லார்க்குக் கண்ணின் மணி’ என்பது திருமந்திரம் (பாடல்: 2823).

    ‘இனையன்நான் என்றுன்னை அறிவித் தென்னை

    ஆட்கொண்டெம் பிரான் ஆனாய்’                 (திருச்சதகம்: 22)

    என்னும் தொடர்கள், ‘தகுதிநோக்காது பெருமான், தானே எளியனாக எழுந்தருளி, இன்ன தன்மையன் என்பதைக் காட்டியருளினன்’ என்று, மணிவாசகரின் அருளனுபவத்தைச் சுட்டுகின்றன.

    ‘யான்’ ; ‘எனது’ என்னும் பற்றற்ற உயிர், தன்னை மறந்து, தன்னைச் சிறுபொருளாக உணர்ந்து, தன்னிலும் மேலான பெரும்பொருளை அறிதற்கு ஞானப்பேராவல் கொள்கிறது. தன்னை உணர்ந்த மெய்யணர்வு நிலையே, உயிர்க்கு, அன்பென்னும் அகக்கண்ணையும், அருளென்னும் வழித்துணையையும் தந்து, பெருமானுடன் பிரிவரியாத திருவருளுறவுக்கு வகைசெய்கிறது. ‘தனது அறிவென்னும் குறையுணர்வால், பெருமானைக் குறைவுற உணர்கின்ற அவலம் நேராதவகையில், பெருமானே தமக்கு குருவாகிவந்து, திருவருளையே கண்ணாகத் தந்தருளி, ஞானநிலையினை உணர்த்தியருளிய பெருங்கருணைக்கு நன்றியுடையவராக மணிவாசகர், தம்மை, ‘நாய்’ என்று குறித்தருளியுள்ளார்.

    ‘நாட்டார்கள் விழித்திருப்ப ஞாலத் துள்ளே

    நாயினுக்குத் தவிசிட்டு நாயி னேற்கே

    காட்டா தனவெல்லாங் காட்டிப் பின்னுங்

    கேளா தனவெல்லாங் கேட்பித் தென்னை

    மீட்டேயும் பிறவாமற் காத்தாட் கொண்டான்

    எம்பெருமான் செய்திட்ட விச்சை தானே’                 (திருச்சதகம்: 28)

    சுட்டறிவின் வழியல்லாது, அவனருளால் அவனைக் காணும்படியான வித்தையினைப் பெருமான் செய்தருளிய கருணையின் பெருமிதத்தை மணிவாசகர்,

    ‘சிந்தனைநின் தனக்காக்கி நாயி னேன்தன்

    கண்ணினைநின் திருப்பாதப் போதுக் காக்கி

    வந்தனையும் அம்மலர்க்கே யாக்கி வாக்குன்

    மணிவார்த்தைக் காக்கிஐம் புலன்க ளார

    வந்தனை ஆட்கொண்டுள்ளே புகுந்த விச்சை’                 (திருச்சதகம்: 26)

    என்று குறித்தருளியுள்ளார். இப்பாடலில், ‘வாக்கு உன் மணிவார்த்தைக்கு ஆக்கி’ என்றமைந்த தொடர், பெருமானின் திருவடியில் அன்புபெருக்கி, மணிவாசகங்களால், திருவாசகத்தை அருளிச் செய்கின்றவகையில், பெருமான் தம்மிடத்தில் கீழான சுட்டறிவை மாய்த்துச் சிவஞானத்தை விளங்கச்செய்ததனைக் குறிப்பதாகும்.

    ஆத்துமசுத்தி

    சுட்டறிவாகிய சிற்றறிவுநிலை அகன்று, மனம், மொழி, மெய் ஆகிய முக்கரணங்களாலும் உயிர் தூய்மைபெற்று விளங்குவதே ‘ஆத்துமசுத்தி’ (ஆன்மத்தூய்மை) என்பதாகும். அத்தகைய தூய்மைநிலை, ‘மெய்யன்பு’ எனப்பெறும்; மெய்யன்பாகிய தூய்மைநிலை, தன்னை மறந்து, உலகியலை முற்றிலும் துறந்து, ஆன்மநாயகனாகிய பெருமானை உள்ளும் புறமும் இடையறாது தேடித் திரிகின்ற ஆன்மவிழிப்பைத் தருகிறது; இமைப்பொழுதும் பெருமானைப் பிரியாது, அன்பு மிகுந்து, ஆடுதலும், பாடுதலும், தேடுதலும், திகைத்தலும், தெளிதலுமாகிய அருளனுபவங்கள் உயிர்க்கு வாய்க்கிறது. அத்தகு அருளனுபவங்களுக்கு இடையூறு நேருங்கால், உடல் தாங்கி வாழவும் அவ்வுயிர் பொறுப்பதில்லை. அவ்வகையில் மணிவாசகரும் ஆத்துமசுத்தியுடன், பெருமானை அணுப்பொழுதும் பிரிந்திருக்க ஆற்றாமல், தீயில் வீழவும், மலையிலிருந்து பாயவும், பெருங்கடலில் வீழவும் துடிக்கின்றார்.

    ‘தாயி லாகிய இன்னருள் புரிந்தஎன் தலைவனை நனிகாணேன்

    தீயில் வீழ்கிலேன் திண்வரை உருள்கிலேன் செழுங்கடல் புகுவனே’   (திருச்சதகம்: 39)

     கைம்மாறு கொடுத்தல்

    கைம்மாறு கொடுத்தலாவது, பிறர் செய்த உதவிக்கு நன்றியாக நாம் அவர்கட்கு மீள உதவுதல். ‘கருணையே உருவமாகி, அனைத்து உயிர்க்கும் இரங்குதலே இறைவன், உயிர்கட்குப் புரிகின்ற பேருதவியாகும்; தாயைப் பிரிந்த கன்றெனப் பெருமானை இடையறாது தேடுதலே, நாம் அவனுக்குச் செய்கின்ற கைம்மாறாகும். அடிகளுக்கு அருளவேண்டி பெருமான், திருப்பெருந்துறையில் அருமையில் எளிய அழகனாக வந்தான். அதுகாறும் தாம், ‘அறிவீனன்’ என்னும் நிலையிலேயே இருந்ததாகவும், பெருமானே அருங்கருணையால் அடியவனாக ஆட்கொண்டு, அவனை முற்றும் அறிகின்ற சிவஞானத்தையும் தந்தருளினான்’ என்றும், அதனால் அவனிடத்தில் உண்மையான பக்தி செலுத்துதலே அதற்குரிய மேலான கைம்மாறு என்றும் மணிவாசகர் அறிவிக்கின்றார்.

    ‘அறிவ னேயமு தேயடிநாயினேன்

    அறிவ னாகக்கொண் டோஎனை ஆண்டது

    அறிவி லாமையன் றேகண்ட தாண்டநாள்

    அறிவனோவல்ல னோஅரு ளீசனே’                 (திருச்சதகம்: 50)

    என்றமைந்த பாடலில், ‘தாம் அறிவுடையவரா? அன்றி அறிவற்றவரா?’ என்று அடிகள் பெருமானிடத்தில் ஞானவினா எழுப்புகின்றார். அவ்வினா, அடிகள் தம்மை உணர்ந்த ஞானத்தெளிவின் வெளிப்பாடாகும்.

    அநுபோகசுத்தி

    செயல்கள், உயிர்க்கு வினைத்தொடர்பை ஊட்டுகின்றன. வினைத்தொடர்பால் உயிர் மேலும் பல பிறவிகளில் பிறந்திளைக்க நேரிடுகிறது. பிறவிகளை வாய்ப்பாகக்கொண்டு, ஆணவம், கன்மம், மாயையாகிய மும்மலங்களும், சார்ந்ததன் வண்ணமாக விளங்கவல்ல உயிரைக் கீழ்நிலைகளில் செலுத்தி, அதன் தூய்மையினைச் சிதைக்கின்றன. ஆனால், தன்னை உணர்ந்து, திருவருள் தொடர்பில் ஆழ்கின்ற சிவஞானிகளிடத்தில், ஆணவமலம் மெலிகிறது. மாயையின் மயக்கமும் நீங்குகிறது. அவர்களது கருவி கரணங்கள், சிவகரணங்களாகவும், சிந்தை, சிவச்சார்பிலேயே ஆழ்ந்தும், செயல், சிவனது அருள்விளையாடல்களாகவும் மேம்படுகின்றன. அவ்வுயர்நிலையினைச் சீவன்முத்தநிலை என்பர். அந்நிலையில், சிவத்துடன் பிரிப்பின்றிக் கலந்திருந்து, அழுந்தி அறிதலாகிய பேறு உயிர்க்கு வாய்க்கிறது. சீவன்முத்தரெனச் சித்தத்தைச் சிவன்பாலே வைத்த உறைப்பினாலேயே திருஞானசம்பந்தர், ‘எனதுரை தனதுரையாக’ என்று பாடியருளினார். மணிவாசகரும் அத்தகைய அருளுறுநிலைக்குத் தடையாக உள்ள உடம்பைச் சுமக்க ஆற்றாமல் புலம்புகின்றார். சீவன்முத்தர்களாகிய உண்மையடியார்கள் சிவச்சார்பில் உறுதிஉடையவர்கள்; அவர்கள், பெருமானது திருக்குறிப்பையே திருவருளாணையாக ஏற்றுப் பணிபவர்கள்; வினைத்தொடர்பினை ஒழித்த அவர்களது உயர்வு, திருப்பெருந்துறையில் அவர்கள், பெருமானின் கழல் அடைந்துய்ய வகைசெய்தது. ஆனால், தான்மட்டும், வினைத்தொடர்பை மேன்மேலும் பெறுகின்றகின்றவாறு உடம்பைப் பேணுகின்ற தாழ்வு கொண்டுள்ளதாகக் குறித்துள்ளார்.

    ‘மானேர் நோக்கி உமையாள் பங்கா வந்திங் காட்கொண்ட

    தேனே அமுதே கரும்பின் தெளிவே சிவனே தென்தில்லைக்

    கோனே உன்தன் திருக்குறிப்புக் கூடு வார்நின் கழல்கூட

    ஊனார் புழுக்கூ டிதுகாத்திங் கிருப்ப தானேன் உடையானே’     (திருச்சதகம்: 55)

    காருணியத்திரங்கல்

    தாம் இடையறாமல் திருவருள் திளைப்பில் களிப்பினும், அடிகளின் அன்புள்ளம், தில்லையில் பெருமானைச் சேர்கின்ற பேராவலில் ஓயாமல் தவித்தது. திருப்பெருந்துறையில் ஞானகுருவாக வந்த பெருமானுடன் வந்த அடியார்களும் சிவசோதியில் கலந்து மறைந்தனர். ‘நீர் மட்டும் மண்ணுலகில் சிலகாலம் தங்கியிருந்து, தில்லையை வந்தடைந்து எம்மைச் சேர்க!’ என்று அடிகளுக்குப் பெருமானால் அருளாணை அருளப்பெற்றது. அவர் அருளியவாறு, ‘தில்லைக்கூத்தனைச் சேர்கின்ற கருணைப்பேறு எந்நாளில் வாய்க்கும்?’ என்பதே அடிகளின் தீராத பேராவலாக இருந்தது. அதற்கென, தில்லைப் பெருமானை வேண்டி,

    ‘வருகவென் றென்னை நின்பால் வாங்கிட வேண்டும் போற்றி’    (திருச்சதகம்: 68)

    என்று பாடி, பெருமானின் கருணைக்கு ஏங்குகிறார்.

    ஆனந்தத்து அழுந்தல்

    சமயக்குரவர் முதலாயினோரின் மண்ணுலக இருப்பானது, மக்கள்தம் நல்வாழ்வின் பொருட்டு இறைவனால் அருளிச்செய்யப்பட்டதாகும். பிள்ளையாரும், அரசுகளும், நம்பிகளும் மண்ணுலகில் வாழ்ந்த பெரும்பேறே, சைவப்பெருஉலகின் தேவாரத் திருச்செல்வமாகத் திகழ்கிறது. அவ்வாறே, அடிகளின் மண்ணுலக வாழ்வும் நம்மைத் திருவாசகமென வாழ்விக்கிறது. அடிகள், திருவருள் திளைப்பில் ஆழ்ந்து, மண்ணுலகில் சீவன்முத்தரென வாழ்ந்தநாளில், தில்லை நகரடைந்து, அம்பலவனைக் கூடுவதே அவரின் பெருவிருப்பாக நிலைத்திருந்தது.

    அடிகள், தில்லையை அடைதலும், அங்கு பலநாள் தங்கியிருத்தலும், பௌத்தரை வாதில் வெல்லுதலும், திருக்கோவை பாடுதலும், பெருமானே திருவாசகத்தைப் படியெடுக்க வரவிருத்தலுமாகிய திருவிளையாடல்கள் தில்லையின்கண் நிகழ்தற்கு உரியகாலம் வாய்க்கின்றவரையில், அடிகள் தில்லையை அடைதற்குப் பெருமான் திருவருளாணை அருளவில்லை. ‘வேண்டத்தக்கது அறிவோய் நீ; வேண்ட முழுதும் தருவோய் நீ; வேண்டும் பரிசு ஒன்று உண்டென்னில், அதுவும் உன்தன் விருப்பன்றே’ என்ற ஞானத்தெளிவு கொண்ட அடிகள்,

    ‘உண்மையடியார்கள் அன்று உம்முடன் வர அருளி, என்னை மட்டிலும் மண்ணுலகில் விடுத்துச் சென்றீர்; ‘அவர்களது உண்மையான பூசனைப்பயனே அவர்கட்கு உம்மைப் பெற்றுத்தந்தது. அவ்வகையில் யானும் உம்மைப் பெறுதற்குக் கருவியாக, ‘பூசனைப்பேற்றினைத் தந்தருள்க!’ என பெருமானிடத்தில் வேண்டுகிறார். சிவானந்தத்தில் அழுந்தியிருக்கக் கருவியாகிய மெய்யன்பை விளைவிக்கின்ற பூசனைப் பேற்றை வேண்டுபவராக,

    ‘புணர்ப்ப தாக அன்றி தாக அன்பு நின்க ழற்கணே

    புணர்ப்ப தாக அங்க ணாள புங்க மான போகமே’ (திருச்சதகம்: 71)

    என்று பாடியுள்ளார். இத்தொடர்களில், ‘புங்கமான போகம்’ என்பது, மேலான பேறு என்பதாகும்.

    பூசனையே மேலான பேறாகும். ‘ஏடுடைய மலரால் முனைநாள் பணிந்தேத்த அருள்செய்த’ என்பது, பிள்ளையார் தேவாரம். அதனாலேயே அம்மையும் அப்பனை அடைவதற்குரிய பேறாகப் பூசனையை வேண்டினாள். அப்பனும் அவளது பூசனைக்கு உகந்து,  ‘நின் பூசனை என்றும் எம்பால் முடிவதில்லை’ என்று அருளியுள்ளான். அடிகளும் அத்தகைய அருள்பேற்றினைப் பெற விழைகின்றார். வழிபாடாகிய இன்பத்தில் இடையறாது திளைக்கின்ற வேட்கையைச் சுட்டுவதால் இத்திருப்பதிகத் தொகுதிக்கு, ‘ஆனந்தத்து அழுந்தல்’ என்னும் பெயர் பொருத்தமுடையதாகும்.

     ஆனந்த பரவசம்

    ‘இறைவனுடன் கூடியிருத்தலே, ‘சிவானந்தம்’. அத்தகைய பேற்றுக்கு மெய்யன்பே கருவியாகும்’ என்று தெளிந்த மணிவாசகர், தமது தாழ்நிலையினை உணர்ந்து கழிவிரக்கம் கொண்டார். ‘பெருமானை அடைந்து உய்வுற்ற அடியார்கள் அனைவரும், ‘உண்மையடியார்கள்’ என்னும் பக்குவநிலையும், ‘பழவடியார்’ என்னும் தகுதிநிலையும் பெற்றவர்கள். ஆனால், தமது தகுதியோ, அவர்களினும் குறைந்ததாக இருக்க, அவர்களைப்போலவே சிவனடி கூடிடக் காலம் தாழ்வதற்குக் கவலை கொள்வதில் பொருளில்லை’ என ஆற்றாமையால் தம்மைத்தாமே தேற்றிக்கொள்கின்றார். ‘நல்லபசுக்கள் இடையனைக் கண்டு அன்பின் பெருக்கில் கனைக்க, இடையனைக் காணக் கண்ணற்ற குருட்டுப் பசுவும், பிற பசுக்களுடன் கலந்து கனைக்கின்ற அறியாமையைப் போன்றதே தனது முயற்சியும்’ என்பது மணிவாசகரின் சிந்தனை.

    ‘தாராய் உடையாய் அடியேற் குன்தா ளிணையன்பு

    பேரா உலகம் புக்கா ரடியார் புறமே போந்தேன்யான்

    ஊரா மிலைக்கக் குருட்டா மிலைத்திங் குன்தா ளிணையன்புக்கு

    ஆரா அடியேன் அயலே மயல்கொண் டழுகேனே’ (திருச்சதகம்: 87)

     

    என்று பாடிய அடிகள், மெய்யன்பர்கள், தீ சேர் மெழுகாக உள்ளம் உருகிக் கரைந்ததே அவர்களின் தனித்தகுதியாக அமைந்ததனை உணர்ந்தார். தாமும் அவ்வகையையே பின்பற்றி, பெரும்பற்றப் புலியூரானைக் கூட எண்ணி,

    ‘ அழுகேன் நின்பால் அன்பாம் மனமாய் அழல்சேர்ந்த

    மெழுகே அன்னார் மின்னார் பொன்னார் கழல் கண்டு

    தொழுதே உன்னைத் தொடர்ந்தா ரோடுந் தொடராதே

    பழுதே பிறந்தேன் என்கொண் டுன்னைப் பணிகேனே’      (திருச்சதகம்: 88)

     

    என்று தெளிந்தார். சிவானந்தத்தைப் பெறுதற்குரிய பெருநெறியாக, அன்பென்னும் ஆறு கரையது புரள, கண்ணீர்ப் பெருவெள்ளம் பெருக அழுதலாகிய சிவானந்தப் பரவசத்தில் ஆழ்ந்தார்.

    ‘யானே பொய்என் நெஞ்சும் பொய்என் அன்பும்பொய்

    ஆனால் வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமே’       (திருச்சதகம்: 90)

    ஆனந்தாதீதம்

    அடிகளுக்குப் பெருமான் இடையறாத மெய்யன்பினை வழங்கிப் பித்தனாக்கினான்; அவன் அன்பருக்கும் அன்பனாக்கி அருளினான்; திருக்கோயில் தொறும், அழுது அரற்றி, அவனைத் தேடித் திரியும்படியும் செய்தருளினான். ‘தாம் வளர்த்த நச்சுமரத்தையும் வெட்டத்துணியாத பெரியோர் போல, தகுதியில்லாமையை அறிந்திருந்தும் பெருமான் தம்மை ஒதுக்காமல், பேரின்பப்பேற்றுக்குக் கருவியாகிய மெய்யன்பு மேன்மேலும் வளரும்படி அருளிய அருந்திறத்தை எண்ணியெண்ணி அடிகள், அளவிறந்த ஆனந்தவெள்ளத்தில் திளைத்தார். பெருமான், பக்தி என்னும் வயலுள், ‘மெய்ம்மை’ என்னும் வித்தின்றியே, ‘சிவானந்தம்’ என்னும் பெரும்பயிரை வளர்த்ததாகக் குறித்தருள் கின்றார். தமக்கு அருளிய பேற்றினை நினைந்த அடிகள்,

    ‘விச்ச தின்றியே விளைவு செய்குவாய்’            (திருச்சதகம்: 96)

    ‘நச்சு மாமர மாயி னுங்கொலார்

    நானும் அங்ஙனே உடைய நாதனே’     (மேலது பாடல்)

    எத்தகைய பிழை செய்தாலும், தம்மை அரவணைத்துக் காக்கின்ற பெருமான், திருவடிப்பேற்றுக்குத் தம்மைத் தகுதியுடையவனாக ஆக்கியதும், கல்லை மென்கனியாக்கிய வித்தை’ என்று வியக்கின்றார்.

    ‘கல்லை மென்கனி யாக்கும் விச்சைகொண்

    டென்னை நின்கழற் கன்ப னாக்கினாய்’    (திருச்சதகம்: 94)

    முடிவுரை

    அடிகளின் அருளனுபவப் பிழிவாக உள்ள திருச்சதகம், நமக்குப் பெருமானையே பெற்றுத்தர வல்லது; பக்தியின் பெயரால், அவனடியார் போல நடிக்கின்ற பொய்மையை நீக்கவல்லது; உயிரறிவாகிய சுட்டறிவை நீக்கி, பேரறிவால் பெருமானைத் தேட வழிகாட்டுவது; ‘ஞானம் ஈசன்பால் அன்பே’ என்னும் ஆன்மதூய்மையினை வலியுறுத்துவது; ‘நீங்காத அடிமைத்திறமே’ பெருமானுக்கு, நமது கைம்மாறு என நிறுவுவது. சிவானந்தத்துக்குத் திருவருளே கருவியாவதை விளங்கச்செய்வது; சிவானந்தத்தில் அழுந்தவும், மேன்மேலும் பரவசத்தில் திளைக்கவும், மெய்யன்பே மேன்மேலும் வகைசெய்யும் என்று விளக்குவது; தன்னை மறந்து, உள்ளம் உருகிக் கண்ணீர் சிந்துதலே, ‘உண்மையான பக்தி’ என்று உணர்த்தவல்லது.

    திருச்சதகத்தின் தெளிபொருளைச் சான்றோர், ‘பக்தி வைராக்கிய விசித்திரம்’ என்று வரையறுப்பர். பக்தியாவது, பெருமான்பால், அடிகள் கொண்ட நிலையான பேரன்பு; வைராக்கியமாவது, அவர்தம் பேரின்பப் பற்றுறுதி; விசித்திரமாவது, வியப்புணர்வு. பெருமானின் எளிவந்த கருணையினை எண்ணுந்தொறும், தகுதியின்மையினைப் பொருட்படுத்தாமல் பெருமான், தனக்கு இரங்குகின்றமையினை எண்ணுந்தொறும் எழுகின்ற பெருவியப்பு. இத்தகைய அருளனுபவப் பதிவுகள், ‘யானே பொய்என் நெஞ்சும் பொய்என் அன்பும்பொய்; ஆனால் வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமே’ எனப் பக்திநெறி காட்டவல்லன.

    துணைநூல்கள்:

    1. திருவாசகம் (மூலம்), சைவசித்தாந்தப் பெருமன்றம், சென்னை வெளியீடு, ஆண்டு: 1999.
    2. திருவாசகம்-திருச்சதகம் (பண்டிதமணி உரை), மேலைச்சிவபுரி சன்மார்க்கசபை வெளியீடு, ஆண்டு: 1985
    Share
  • மாணிக்கவாசகரின் பக்தி

    ஒரு அரிசோனன்

     

    Image result for சைவ குரவர்

    சைவக் குருமார் நால்வரின் பக்தி நோக்கு:

    சிவபெருமானின்மீது சைவக் குருமார் நால்வரும் நான்குவிதமாகப் பக்திசெலுத்தினார்கள்.  சிவபெருமானைத் தந்தையாக எண்ணிய திருஞானசம்பந்தர் அவ்விதமாகவே அவர் இயற்றிய தேனினுமினிய தேவாரப் பாக்களில் தன்னுடைய பக்திப் பரவசத்தை வெளிப்படுத்தினார்.  பெரும்பாலான பாடல்களில் சிவபெருமானையும், உமையவளையும் தனது தாய்தந்தையராகவே ஏத்தி உயர்த்துகிறார்.  தந்தையால் குளக்கரையில் தனித்துவிடப்பட்டு, ஏங்கியழுதபோது, உலகத்தாய் பார்வதி கருணைகொண்டு அவருக்கு ஞானப்பாலைப் புகட்டியது அவரைச் செல்லப் பிள்ளையாக்கியதுடன் காழிப்பிள்ளையார் என்ற சிறப்புப் பட்டத்தையும் தேடித்தந்தது போலும்!

    சுந்தரமூர்த்தி நாயனாரோ சிவபிரானைத் தமது தோழனாகவே கருதினார்.  அந்தத் தோழமையே எம்பெருமானைப் பித்தா என்று அழைக்கவும், பரவை நாச்சியாருக்கு தன்னுடைய காதலை எடுத்துச்சொல்ல ஒரு தூதுவனாகவும் அனுப்பவும் வைத்தது. எனவே, அவர் தம்பிரான் தோழர்[1] என்ற தனிச் சிறப்பையும் பெற்றார்.  மேலும், அவரது தேவாரப் பாக்கள் அவர் சிவபிரானின்மீது எடுத்துக்கொண்டிருக்கும் உரிமையை உள்ளங்கனி நெல்லிக்காயாக்குகின்றன.

    நீலகண்டப் பெருமானின் பணியாளராகவே பக்திசெலுத்தினார், நாவுகரசரான அப்பர் பெருமான்.  பெருமான் தரிசனத்திற்கு வரும் அடியார்களின் கால்களின் குத்தாமலிருக்கவேண்டும் என்று கோவில் பிரகாரங்களில் இருக்கும் முட்களைக் களைய எப்பொழுதும் தன் கையில் உழவாரத்தை ஏந்தி உழவாரப் பணிசெய்து சிறந்தவர் அவர்[2].  இந்த மனப்பாங்கு அவருடைய மிகவும் புகழ்பெற்ற, “தன் கடன் அடியேனையும் தாங்குதல், என் கடன் பணிசெய்து கிடப்பதே,”[3] என்னும் வரிகள் எம்பெருமானிடம் எப்படிப்பட்ட பக்திநிலையைக் கொண்டிருந்தார் என்று காட்டுகிறது.

    இருப்பினும், திருவாதவூரார் மாணிக்கவாசகருக்கும் சிவபெருமானுக்கும் இடையே உள்ள உறவு முற்றிலும் வேறாகவே வெளிப்படுகிறது.  அன்பிற்சிறந்த அப்பனுக்கும், வழிதவறிய மகனுக்கும் உள்ள அன்புப் பிணைப்பாகவே அது வெளிப்படுகிறது. அதை அவர் தனது திருவாசகத்தில் பலவிடங்களில் வெளிப்படுத்தியுள்ளார்.  சிவபுராணத்தில், நாயிற்கடையாய்க் கிடந்த அடியேற்குத் தாயிற் சிறந்த தயாவான தத்துவனே[4],” என்பது தம்மைத் தாழ்த்திக்கொண்ட மனப்பாங்கையும், சிவபெருமான் தாயைவிடக் கருணைகொண்டு அருளி ஆட்கொண்டார் என்றும் தெளிவுபடுத்துகிறார். அதுவே, பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப் பரிந்து,” என்று அவர் ஈசனைத் துதிப்பதிலிருந்து தெரிகிறது.

    இவண், நாம் மாணிக்கவாசகரின் பக்திப் பெருக்கையும், அவர் நமக்குத் தெரிவிக்கும் அறிவுரையையும் அறிந்துகொள்ள முயல்வோம்.

    சிவனின் கருணையைப் பெறும் வழி:

    தினந்தோறும் கடவுளர்பால் நாம் பக்திப்பாடல்கள் பலவற்றை முணுமுணுக்கிறோம்.  இப்படிச் செய்வது நமக்கு இறைவனின் அருளைப் பெற்றுத் தருமா?  வாழ்வு முடிந்ததும் நம்மால் அவர்களின் இருப்பிடத்தை எட்ட இயலுமா? சிவலோகத்தை அடைந்து முக்திபெறும் வழி என்ன? மாணிக்கவாசகர் அதற்கான வழியைக் காட்டுகிறார்:

    சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார்

    செல்வர் சிவபுரத்தி னுள்ளார் சிவனடிக்கீழ்

    பல்லோருமேத்தப் பணிந்து[5].        — சிவபுராணம்: 93-95

    சிவபுராணத்தில் அவர் செப்பிச்சென்ற மூன்று வரிகளும் இறைவனைத் துதிப்பதைப் பற்றிய நமது பல குருட்டுநம்பிக்கைகளை அடியோடு புரட்டிப் போட்டுவிடுகின்றன.  கிளிப்பிள்ளைபோல சொன்னதையே திரும்பத்திரும்பச் சொல்வதனால் பயனேதுமில்லை என்பதே அவரது கருத்து.  ஒரு டேப் ரிகார்டரோ, ஐபாடோ, டாப்லெட்டோ, சி.டி. பிளேயரோ நம்மைவிடச் சிற்ப்பாக துதிப்பாடல்களைப் பிழையேதுமின்றிப் பல்லாயிரம்முறை சொல்லும் திறன்படைத்தவை. பொருளறியாமல் சொல்லும் அவற்றிற்குக் கிடைக்காத முக்தியா, பிழையுடன் பொருளறியாது சொல்லும் நமக்குக் கிட்டிவிடும்?

     எப்படிப்பட்ட பாடல்களாலும், சுலோகங்களாலும், வேதமந்திரங்களாலும் நாம் சிவபெருமானைத் துதித்துப் புகழ்ந்தாலும், அவற்றின் பொருளை — அவை என்ன சொல்லுகின்றன என்பதின் அர்த்தத்தை — அவை சொல்லும் இறையுணர்வை — அறிந்து உணருவதுதான் சிவலோகம் செல்லச் சிறந்த வழி என்று ஆணித்தரமாக அடித்துச் சொல்லுகிறார்.  எப்பொழுது நாம் நமது துதிப்பாடல்களின் பொருளையும், அதனுள்ளிலிருக்கும் இறை உணர்வையும் அறிந்து மெழுகாய் உருகிநிற்கிறோமோ, அப்பொழுதே நமது துதி ஈசனைச் சென்றடைந்து அவனது கருணையை நம்பால் திருப்பிவிடுகின்றது என்று அறிவிக்கிறார்.

    எப்படிப்பட்ட சீர்திருத்தவாதியாக இருந்தால் அவரால் இப்படி வழிகாட்டமுடியும்!

    அவரின் அறிவியல் திறன்:

    எப்படிப்பட்ட விஞ்ஞான அறிவையும், கண்டுபிடிப்பையும் மேலைநாட்டாருக்கே தத்தம்செய்வதுதான் நம்முடைய தியாக உணர்வுக்குச் சான்றாக இருந்துவருகிறது.  சில நூற்றாண்டுகள் ஆங்கிலேயரின் ஆட்சிக்குப் பின்னர் அவர்கள் சொல்லும் எதையும் நாம் வேதவாக்காக அல்ல, அதற்கும் மேலாகவே எடுத்துக்கொள்கிறோம்.  ஆராய்ந்து நோக்கினால் உண்மை அதுவல்ல என்று உணரலாம்.  பள்ளிகளில் கற்பிக்கப்படும் பரிணாம வளர்ச்சிக் கொள்கை [The theory of evolution]’ சார்லஸ் டார்வினால் உருவாக்கப்பட்டது என்றே மாணவருக்குச் சொல்லித்தரப்படுகிறது.  இக்கொள்கை டார்வினுக்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே மாணிக்கவாசகரால் சிவபுராணத்தில் சொல்லப்பட்டிருக்கிறது என்பதை அறிந்தால் நமக்கு வியப்பாகத்தான் இருக்கும்.

    புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகி

    பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகி

    கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்

    வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்

    செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள்

    எல்லாப் பிறப்பும் பிறந்தி ளைத்தேன் எம்பெருமான்[6]                        சிவபுராணம்– 26-31

    Image result for டார்வின்

    உயிரினங்கள் மனிதராவதுவரைக்கும்தான் தனது பரிணாம வளர்ச்சிக் கொள்கையை டார்வின் எடுத்துரைக்கிறார்.  ஆயினும், மாணிக்கவாசகரோ, மனித வளர்ச்சியையும் தாண்டி, ஆவியுலகத்து உயிர்களையும், விண்ணுலக, பாதாள உலக — மண், விண் இரண்டிலும் வசிக்கக்கூடிய, கண்ணுக்குப் புலப்படாத தேவர்களையும் பரிணாம வளர்ச்சியில் சேர்த்துவிடுகிறார்.  அவர் வரிசைப்படுத்தியிருப்பதும் மனித இனம்வரை டார்வினை ஒத்ததாகவே அமைந்துள்ளது.  இந்த அறிவு அவருக்கு இல்லாதிருந்தால் எப்படிக் கோர்வையாக எடுத்தெழுதியிருக்க இயலும்?

    மேலும், உலகம் உருண்டை என்பதைக் கலீலியோ கலிலி [Galileo Galilei] என்ற இத்தாலிய விஞ்ஞானிதான் கண்டுபிடித்தார் என்றும், அதுவரை உலகமக்கள் உலகம் தட்டையாக இருந்தது என்றும் நினைத்தனர் என்றும் நமக்குச் சொல்லித்தரப்படுகிறது.  இது உண்மையல்ல, சைவத் தமிழ் குரவரான மாணிக்கவாசகர் அதை எழுதிவைத்துவிட்டார் என்றும் திருவாசகத்திலுள்ள திருவண்டப்பகுதியில் காணலாம்:

    அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்

    அளப்ப ரும்தன்மை வளப்பெரும் காட்சி

    ஒன்றனுக் கொன்று நின்றெழில் பகரின்

    நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன

    இல்நுழை கதிரின் துன்அணுப் புரையச்

    சிறியவாகப் பெரியோன்; — 1-6

    இந்த அண்டமானது உருண்டைகளான உலகங்களால் ஆனது, அவை அளவிடமுடியாதவை, மிகவும் அழகாகத் தோன்றுபவை, அவற்றின் அழகினை ஒவ்வொன்றாக ஒப்பிட்டு விவரித்தால், அவை நூறுகோடிக்கும் மேலாக [எண்ணவியலாத அளவுக்கு அதிகமானவை] விரிந்து பரந்திருக்கின்றன, கூரையிலுள்ள சிறு ஓட்டை மூலம் வீட்டுக்குள்ளே  நுழையும் சூரிய ஒளிக்கற்றையில் தெரியும் துகள்களுடன் அவற்றை ஒப்பிடலாம்.  பரம்பொருளான சிவனோ இவை அனைத்தையும்விடப் பெரியவன் என்று சிவபெருமானின் பெருமையை நமக்கு எடுத்து இயம்பும்போது தனது வானவியல் அறிவையும் அழகாக எடுத்துணர்த்துகிறார்.

    maxresdefault

    சிவபெருமான் எவ்வளவு பெரியவர் என்பதை நமது கோணத்திலிருந்து நமக்கு விளக்கமுனைகிறார்.  அவர் விவரித்திருக்கும் அண்டம், அதனுள் அடங்கியிருக்கும் விண்மீன்கள், அவற்றைச் சுற்றிவரும் கோள்கள், அவற்றின் எண்ணிக்கைகள் அனைத்தையும் விஞ்ஞானிகளும் விவரித்திருக்கிறார்கள் என்பதை நாமும் அறிவோம்.  நாம் புகழ்ந்துரைக்கும் மேலைநாட்டோர் உலகம் தட்டையானது, அதை யாராவது எதிர்த்துப் பேசினால், கம்பத்தில் கட்டிக் கொளுத்துவோம் என்று சொல்லிக்கொண்டிருந்தபோது அனைத்து உலகங்களும், விண்மீன்களும் உருண்டையானவை, அவை எண்ணிலடங்கா என்று எதற்கும் கவலைப்படாது மணிவாசகர் எயிற்றியிருப்பதைக் கண்ணுறும்போது நம்மால் வியக்காமல் இருக்கமுடியவில்லை.

    அடுத்து, அவரது மருத்தவ அறிவைப் பற்றிக் காண்போம்.  ஒரு கரு தாயின் கருப்பையில் எப்படி வளர்கிறது, அது வளரும்போது எப்படிப்பட்ட ஆபத்துகளைச் சந்தித்து, தாண்டித் தப்பிப் பிழைத்துப் பிறப்பெடுக்கிறது, எப்படிப்பட்ட வேதனைகளை அது அனுபவிக்கிறது என்பதையும் போற்றித் திருவகலில் விளக்குகிறார்.

    யானை முதலா எறும்பு ஈறாய

    ஊனமில் யோனியில் உண்வினை பிழைத்தும்

    மானுடப் பிறப்பினுள் மாதா உதரத்(து)

    ஈனமில் கிருமிச் செருவினில் பிழைத்தும்

    ஒருமதித் தான்றியின் இருமையில் பிழைத்தும்

    இருமதி விளைவின் ஒருமையில் பிழைத்தும்

    மும்மதி தன்னுள் அம்மதம் பிழைத்தும்

    ஈர்இரு திங்களில் பேரிருள் பிழைத்தும்

    அஞ்சு திங்களில் முஞ்சுதல் பிழைத்தும்

    ஆறு திங்களில் ஊறலர் பிழைத்தும்

    ஏழு திங்களில் தாழ்புவி பிழைத்தும்

    எட்டுத் திங்களில் கட்டமும் பிழைத்தும்

    ஒன்பதில் வருதரு துன்பமும் பிழைத்தும்

    தக்க தசமதி தாயொடு தான்படும்

    துக்க சாகரத் துயரிடைப் பிழைத்தும்                                 போற்றித் திருவகலல்11-25

    மிகப்பெரிய யானையாக இருந்தாலும், மிகச்சிறிய எறும்பாக இருந்தாலும், குறையில்லாத கருப்பையில்தான் கரு வளரமுடியும்;  அப்படி வளரத் துவங்கினாலும் அக்கரு கருப்பையில் இருக்கும் பல்லாயிரக்கணக்கான கிருமிகளிடமிருந்து தப்பிப் பிழைத்தால்தான் முழுவளர்ச்சி அடையமுடியும். இதை முதலில் சொல்லிவிட்டு, மாணிக்கவாசகர் மனிதத்தாயின் வயிற்றிலிருக்கும் கருப்பையில் எந்த அளவுக்குக் கரு வளர்க்கிறது, அது எப்படிப்பட்ட எதிர்ப்புகளையும், வேதனைகளையும் சந்திக்கிறது என்பதை மாதவாரியாகப் பட்டியலிடுகிறார்:

    தாயின் கருப்பையிலிருக்கும் முட்டையில் தந்தையின் விநது சேர்ந்து தனது வளர்ச்சியைத் துவங்கும் கரு கிருமிகளிடமிருந்து தப்பித்து, முதல் மாதத்தில் தான்றிக்காய் அளவே பெரிதாகிறது.  அது இரண்டாகப் பிளக்காமல் தப்பவேண்டும்.  அப்படி இரண்டாகப் பிளக்காமல் ஒன்றாக இருப்பினும், இரண்டாம் மாதவளர்ச்சியின்போது இடைவிடாத எதிர்ப்புகளிலிருந்து தப்பவேண்டும்.  மூன்றாம் மாதம் கொழுப்பு கலந்த நிணனீரில் முழுகி இறப்பதிலிருந்து தப்பவேண்டும்.  நாங்காம் மாதம் கூரிருட்டில் நிலைகுலையாது இருக்கவேண்டும்.  ஐந்தாம் மாதம் கருப்பையில் அதிகமாகச் சுரக்கும் நீரில் முழுகாமல் பிழைக்கவேண்டும்.  ஆறாம் மாதம் தாங்கமுடியாத உறுத்தலுக்கும் எரிச்சலுக்கும் பலியாகாமல் பொறுத்துக் கொள்ளவேண்டும்.   ஏழாம் மாதம் கனத்தால் கீழிறங்கும் தாயில் வயிற்றிலிருந்து நழுவிவிழாமல் தப்பவேண்டும்.  எட்டாம் மாதத்தில் எப்பொழுதும் கருப்பை தன்னைச் சுற்றி அழுத்தும் வலியைப் பொறுத்துக்கொள்ளவேண்டும். ஒன்பதாம் மாதத்திலேயே பிறந்துவிடாமலிருப்பதால் ஏற்படும் வலியைத் தாங்கவேண்டும்.  பத்தாம் மாதத்தில் பிரசவத்தில் வெளிவரும்போது தாயுடன் வேதனைப் பெருங்கடலில் நீந்தி வெளிவருவதோடு மட்டுமல்லாமல் இறப்பாய்யும் ஏமாற்றிப் பிழைக்கவேண்டும்.

    மனிதக் கருவுக்கு ஏற்படும் இத்தனை சோதனைகளையும், வேதனைகளையும் மாணிக்கவாசகர் விவரிக்கும்போது — பிரசவத்தில் ஒரு தாய்படும் வேதனையை, வலியை அறிந்து போற்றும் நாம், ஒரு கருவும் எப்படிப்பட்ட வேதனையும், கண்டங்களையும், வலியையும் பொறுத்து வெளிவருகிறது என்பதை அறியாமல்தான் இருந்திருக்கிறோம் என்பதை அறிந்துகொண்டு, அச்சிசுவின் பெருமையை உணர்கிறோம்.

    ஒரு சிசு தனது வேதனைகளை எடுத்துச் சொல்ல இயலாததால் பத்து மாதங்களும் அது தாயின் வயிற்றில் சுகமாக வாழ்கிறது என்று நாம் எண்ணக்கூடாது என்பதை மாணிக்கவாசகரின் மருத்துவ அறிவு தெளிவுபடுத்துகிறது. மேலே கொடுத்துள்ள இந்த விளக்கம் மருத்துவர்கள் அறிந்ததே.  மணிவாசகர் ஒப்பிலாச் சிவனடியார் என்பது அனைவரும் அறிந்த ஒன்றாக இருந்தாலும், அவர் பக்தியைத் தவிர வேறொன்றும் அறியாதவர் என்று நாம் எண்ணக்கூடாது என்பது அவரது பாடல்களில் தெரிகின்றது.

    கவி வன்மை:

    திருவாதவூராரின் செய்யுள்களையும் பாக்களையும் படித்துக் கற்கும்போது அவற்றின் பலதரப்பட்ட சுவைகளையும், கவிதையமைப்புகளையும், சொல்லும் திறமையையும் கண்டு நம்மால் வியக்காமல் இருக்கமுடிவதில்லை.  அவர் ஆசிரியப்பா, கலிப்பா, விருத்தம் போன்று பல அமைப்புகளில் தமது செய்யுள்களையும், பாக்களையும் வடிவமைத்துள்ளார்.

    அவரது பாடல்கள் நம் இதயத்தில் அடிப்பகுதியில் ஆழத்தில் பதிந்து நிற்பதோடு மட்டுமல்லாமல், நமது உள்ளத்தை உருக்கி, நம் அகந்தையையும் அழிக்கின்றன.  இதனாலேயே, ‘திருவாசகத்துக்கு உருகாதார் ஒருவாசகத்திற்கும் உருகார்’ என்ற அடைமொழியும் உருவாயிற்று போலும்!

    பலமுறை தன்னை ‘நாயினும் கடையேன்’ என்று தாழ்த்திக்கொள்கிறார், திருவாதவூரார்.  இப்படிப்பட்ட தன்னடக்கமே நமது இதயத்தைக் கொள்ளைகொண்டுவிடுகிறது.

    சிவபுராணத்தில் அவர் சிவபெருமானின் ஆதியும் அந்தமும் இல்லாத பழமைத் தன்மையையும், பெருமைகளையும், குணநலங்களையும் தமிழில் வேதமாக ஓதி உணர்த்துகிறார்.

    கீர்த்தித் திரு அகவலில் தமிழ்நாட்டிலிருக்கும் பல சிவத்தலங்களை எண்ணிக்கையிட்டு, அவற்றின் தலபுராணச் சுருக்கத்தையும் கொடுத்து, தமது வாழ்க்கையைப்பற்றியும் சிறிய விவரிப்பைத் தருகிறார்.  அச்சமயம் சிவபெருமானின் மகிமையை உயர்த்தவும் தவறாமலிருப்பதே அவரது சிறப்பு.  இந்தச் செய்யுள் தொகுப்பில் தமது வழிதவறிய நடத்தையையும், சிவபெருமான் கருணையையுடன் மௌனகுருவாகத் தன்னைத் தடுத்தாட்கொண்ட சீர்மையையும் செப்புகிறார்.

    திருவண்டப் பகுதியில் சிவபெருமானின் பெருஞ்சிறப்பையும், அவர் நாமிருக்கும் மாபெரும் அண்டத்தைவிடப் பெரியவர் என்ற பேருண்மையையும் முன்னுக்குக் கொணர்கிறார்.

    மரகதத் திருவுருவமாக ஆடுங்கோலத்தில் கோவிலில் குடிகொண்டிருக்கும் உத்தரகோசமங்கை மூதூரின் மன்னனான சிவபெருமானிடம் தன் உலகப்பற்றுகள் அனைத்தையும் நீக்கித் தன்னை அவன் திருவடியில் சேர்த்துக்கொள்ளும்படி அழுது முறையிடுகிறார், தமது நீத்தல் விண்ணப்பம் செய்யுள் கோர்வையில்.

    மார்கழி மாதந்தோறும் காலையில் பாடும் இருபது திருவெம்பாவைப் பாடல்களை நோக்குவோம்.  தூங்கும் தமது தோழியரை எழுப்பி, நீராடி, தமக்கு வாய்க்கும் கணவர் எப்படியிருக்கவேண்டும், தாம் எப்படிப்பட்டவருடன் பழகவேண்டும், எப்படிப்பட்ட குணநலன்கள் தமக்கு இருக்கவேண்டும் என்று சொல்வதைக் கவின் நயத்துடன் உரைத்து, தாம் தொழப்போகும் சிவபெருமானின் அருமைபெருமைகளைப் புகழும் இளம்பெண்டிராகவே அக்கவிதைகளில் மாறிவிடுகிறார்.

    இதே கவிதை லயத்திலேயே – என்றுமே இமைமூடாத முக்கண்ணனின் சிறப்பைப் பாடி, அவனைத் துயில்நீக்கமுயலும் தாயாகவே திருப்பள்ளியைழுச்சியில் மாறுகிறார்.  கோவிலில் அவனது காலைத் தரிசனத்திற்காக்கக் காத்திருக்கும் அடியார்களைப்பற்றியும், அவர்களின் கோலத்தையும், இயற்கையின் எழிலைப்பற்றியும் பாடிப் பரவசமடைந்து நம்மையும் பரவசப்படுத்துகிறார்.

    நாம் அவரது கவித்திறனைப் பற்றி எழுத ஒரு பெரிய புத்தகமே போதாது.

    ஒவ்வொரு இந்துவும், அவரது தாய்மொழி எதுவாக இருப்பினும், மாணிக்கவாசகரின் மணிமணியான சொற்களைத் தன்னுள் கொண்டிருக்கும் திருவாசகத்தின் சில பாடல்களையாவது கற்று, அவற்றின் உட்பொருளை அறிந்துணர்ந்து, இறையுணர்வைப்பெற்று, சிவபெருமானைத் துதிக்கவேண்டும்.  இந்துவல்லாத மற்ற தமிழரும், அவரது கவிதைச் சுவைக்காகவாவது உள்ளமுருக்கும் திருவாசகத்தைப் படித்தறியவேண்டும்.

    தென்னாடுடைய சிவனே போற்றி1 எந்நாட்டவற்கும் இறைவா போற்றி!! போற்றி, போற்றி!!!!

    ***

    நூல் உதவி:

    1. திருவாசகம் – மூலமும் உரையும், கா. சுப்பிரமணிய பிள்ளை, திருநெல்வேலி சைவசித்தந்த நூற்பதிப்புக் கழகம், 1997
    2. திருவாசகம் – மூலமும் உரையும், சுவாமி சித்பவானந்தா, ராமகிருஷ்ண மடம் வெளியீடு.

    [1]    Sundarar:  http://www.skandagurunatha.org/deities/siva/nayanars/63.asp

    [2]   Thirunavukkarasar Darisanam:  https://www.dharisanam.com/pages/thirunavukkarasar-appar

    [3]   அப்பர் தேவாரம்.

    [4]   மாணிக்கவாசகரின் திருவாசகம்:  சிவபுராணம் வரிகள்: 60-61

    [5]   Ebid. வரிகள்: 93-95

    [6]   Ebid. வரிகள்:26-31

    Share