Tag: முனைவர் சு.சத்தியா

  • சுவடி கூறும் தமிழறி மடந்தை கதை

    சுவடி கூறும் தமிழறி மடந்தை கதை

    -முனைவர் சு. சத்தியா
    உதவிப்பேராசிரியர்
    தமிழ்த்துறை
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி
    தஞ்சாவூர்.

    *****

    கதை என்பது ஏதாவது ஒன்றினை விரித்துக் கூறுவதாகும். பழங்காலத்திலிருந்து இன்றுவரை நம் மக்களிடையே கதை சொல்லும் வழக்கம் இருந்த வண்ணமாகவே உள்ளது. பாட்டி கதை முதல் கட்டபொம்மன் கதை வரை எண்ணற்ற கதைகளை நம் தமிழர் கூறுவதில் கைதேர்ந்தவர்கள் என்றால் மிகையாகாது! அவ்வகையில் நம் இலக்கியங்கள் கதை வரலாறாக அமைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும். நம் பழந்தமிழ் இலக்கியங்கள் அனைத்துக்கும் அடிச்சுவடே சுவடிதான் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே!

    தமிழ்ச் சுவடியியல் வரலாற்றினை ஆராய்ந்தோமென்றால் இலக்கண இலக்கியத்தின் உயிர் நாடியாய்ச் சுவடிகள் இருந்துள்ளதையும் அவையே நம் தமிழ்மொழியின் பெருமையையும் தமிழரின் பண்பாட்டினையும் நிலைநிறுத்தியுள்ளதையும் அறியமுடியும். சுவடிகள் இலக்கணம், இலக்கியம், மருத்துவம், சோதிடம், வானியல், எண்கணிதம் என்று பல்வேறு பிரிவுகளிலும் நமக்குச் செய்திகள் தந்தபோதிலும் கதை சொல்லவும் தவறவில்லை என்பதை மெய்ப்பிக்கும் வகையில் இக்கட்டுரை அமைகிறது.

    காப்புடன் தொடங்கும் கதை

        சண்பகமே வீசுந் தமிழறிவாளன் பேரில்
        பண்புடனே செந்தமிழைப் பாடுதற்கு –  என்புவியில்
        வேளைவிழித் தெரித்த வித்தகனார் பெற்றெடுத்த
        காளை மதக்களிறே காப்பு!

    என்ற காப்புச் செய்யுளுடன் இக்கதை வரலாறு தொடங்குகிறது.

    தமிழறி மடந்தை கதை –  வரலாறு

     முன்னொரு காலத்தில் அளகாபுரி என்னும் நகரத்தினை அளகேஸ்வரன் என்னும் மன்னன் சிறப்புடன் ஆட்சி செய்து வந்தான். அவனுக்கு ஏழாங்குழலாள் எனும் அழகிய மகள் பிறக்கிறாள். கல்வி கேள்விகளில் வல்லவளாக வளர்ந்து வருகிறாள். இன்னொரு புறத்தில் பாடலிபுத்திரத்தின் அதிபதியான பத்திரகிரி என்ற மன்னனுக்கு சந்தனகுமாரன்  என்ற அழகிய மகன் இருக்கிறான். படிப்பிலே ஆர்வமில்லாதவன் தந்தையுடன் சண்டையிட்டு வீட்டைவிட்டு வெளியேறுகிறான். கண்கண்ட தேசம் எல்லாம் சுற்றி அதன் அழகினைக் கண்டு இரசித்து வந்தவன் வழியில் அளகாபுரியினை வந்தடைகிறான். அவ்வேளையில் தோழியருடன் பந்து விளையாடிக் கொண்டிருந்த ஏழாங்குழலாளினைக் கண்டு மனத்தைப்  பறிக்கொடுக்கிறான். அவளும் இவன் அழகில் மயங்கிப் பார்வையாலே இருவரும் காதல் கொண்டனர். அரசகுமாரியோ வித்தைகள் கற்றவளாதலால் தன் காதில் அணிந்திருந்த ஓலையில்  கை நகத்தினால்  சாவடிக்கு இரவு வருமாறு செய்தியினைக் கீறி அதைச் சந்தனகுமாரன் முன்பு எவரும் அறியா வண்ணம் தூக்கிப் போடுகிறாள்.

     எழுதப் படிக்கவே தெரியாத சந்தனகுமாரன் அதனைக் கையில் எடுத்து ஒன்றும் புரியாமல் விழித்துக்கொண்டே சாவடி முன்பு படுத்துக்கிடந்த குஷ்டரோகியிடம் காட்டுகிறான். வஞ்சகனான குஷ்டரோகன் சூழ்ச்சியால் அரசகுமாரியை அடைய விரும்பி, இந்நகரின் மன்னன் தங்களை எங்கு கண்டாலும் கொன்றுவிடுமாறு ஆணையிட்டுள்ளார். அதனால், இந்நகரினைவிட்டு தாங்கள் வெளியேறிவிடுங்கள்  என்று தவறாகப் படித்துக் காட்டினான். இதனைக் கேட்ட அரசகுமாரனுக்கு ஒன்றுமே புரியவில்லை. தான் தவறு ஏதும் செய்யவில்லையே!. ஏன்? இவ்வாறு என்று தனக்குள் பேசிக்கொண்டு அவ்வூரினைவிட்டு வெளியேறுகிறான்.

     அன்றிரவு அரசகுமாரி தான் ஓலையில் குறிப்பிட்டப்படி சாவடிக்கு வருகிறாள். அரசகுமாரன் தான் கூறியபடி வந்துள்ளான் என்று எண்ணி அங்கிருந்த குஷ்டரோகியைக் கட்டியணைத்து முத்தமிடுகிறாள். அவன் மீதுள்ள இரத்தமும் சீழும் அரசகுமாரியின் உடல் முழுவதும் பட்டு ஈரமாகிவிடுகிறது. நாற்றம் தாங்காது உண்மையறிந்த அரசகுமாரி தான் ஏமாந்ததை அறிந்து அவமானம் தாங்காமல் தன் உயிரையே மாய்த்துக் கொள்கிறாள். இதனைக் கேள்வியுற்ற சந்தனகுமாரனும் தற்கொலை செய்துகொள்கிறான். இதன்பிறகு இருவரும் பேயாக உருவெடுத்து அலைகின்ற வேளையில் ஒளவையின் ஆசியினால், இருவரும் மீண்டும் மறுபிறவி எடுக்கின்றனர்.

    ஏழாங்குழலாள் தமிழறி மடந்தையாகவும் சந்தனகுமாரன் விறகுத் தலையனாகவும் பிறக்கின்றனர். தமிழறிமடந்தை தன் தமிழ்ப்புலமை மீது கொண்ட ஆணவத்தை அடக்க விறகுத் தலையன் நக்கீரரின் உதவியை நாடுகிறான். நக்கீரருக்கும் தமிழறி மடந்தைக்கும் நடக்கும் வாத உரையில் இறுதியில் நக்கீரர் வெற்றி பெறுகிறார். இருவரும் தங்கள் பிறப்பினை எண்ணி மீண்டும் ஒன்று சேர்வதாக இக்கதை நிறைவுறுகிறது.

    தமிழறி மடந்தை –  நக்கீரரின் வாத உரை

     வெண்பா   

    பாய்ச்சி மறித்திடுவார் பாதமே நான்குடையார்
      வாய்ச்ச கனல்புகுந்து வாழ்ந்திருப்பார் – வீச்சிப்
      படைவரா தார்தங்களுக் குப்பாரின்மேற் காணா
      அடைமாவு மல்ல வது.

    என்று தமிழறிவாள் கூறியதற்கு நக்கீரர்,

    வெண்பா

      தங்கைபல வைச்சடியிற் கால்களொரு நான்குளதாம்
      பைம்போர்க்கள மேறிப்பாய்ச் சுதலா –  லெம்பெரிய
      மாவல்ல நல்லமாக் காலேமா நிலமன்
      பூவலருங் கோதாய் பொருள்.

    என்று கூறியபின்,மேலும் தமிழறிவாள்,

     சந்தவிருத்தம்

    அங்காடி கொள்ளப் போயானை கண்டேன்
      அணிநகர மன்றினிலே சேனை கண்டேன்
      கொங்காளு முத்தரசர் தம்மைக் கண்டேன்
      கொடிக்கரும் பெரிமாவுங் கூடக் கண்டேன்
      அங்கொருவ ரெதிர்நின்று வெட்டக் கண்டேன்
      அதுகண்டுயான் றலையைத் தாழ்த்த லுற்றேன்
      இங்கிதனை யின்னதென் றியம்பு வோர்க்கே
      எதிரில்லை யிப்புவிக்கு ளென்றவாறே

    என்று கூறியதைக் கேட்ட நக்கீரர்,

     சந்தவிருத்தம்

     எதிராங்க மன்றினிலே யேறக் கண்டேன்
     எழுத்தரிய தேமாவு மனிதர் கண்டேன்
     அதிராங்க மாயிருவ ராடக் கண்டேன்
     அவ்விருவ ரெதிர்நின்று வெட்டக் கண்டேன்
     சதுரங்க மிதுகாணும் வேறொன் றல்ல
     தார்குழலே தீதலையைத் தாழ்த்த லேனோ
     விதிரரங்க முடையதொரு மானே கேளாய்
     வீணருக்கும் வேந்தருக்கும் வேலைதானே

    என்று கூறுகிறார். இவ்வாறு இருவருக்கும் வாதம் மேன்மேலும் பாடல் வழியில் வினா விடையாகத் தொடர்கிறது. இறுதியில் விறகுத் தலையனாக வேடமிட்டிருந்த நக்கீரர் வெற்றியடைகிறார்.

    கதை நுட்பம்

    இக்கதையில் கைளாப்பட்டுள்ள செய்யுள் நடையும் உரைநடையும் படிப்பவருக்கு விருந்தளிப்பதோடு, தமிழ்ச்சங்கப் புலவர் நக்கீரர், கரிகாற் சோழப்பெருவளத்தான், ஒளவையார், பாண்டிய மன்னர் என்று பல்வேறு கதாபாத்திரங்கள் வலம்வருவது இக்கதைக்கு மணிமகுடமாகிறது. பழந்தமிழ்ச் சொற்கள் விரவிவருவது இக்கதைக்கு மேலும் வலுச்சேர்க்கிறது.

    இக்கதையினைப் படிப்பவர் தமிழின் சிறப்பினையும் தமிழரின் கதை நுட்பத்தையும் அறிவர். பழைய சொல்வளத்தையும் ஆராய முயல்வர்.

    *****

    பார்வை நூல்:

    தமிழறி மடந்தை கதை, பதிப்பாசிரியர் மணி. மாறன், தமிழ்ப் பண்டிதர், சரசுவதி மகால் நூலகம் மற்றும் ஆய்வு மையம், தஞ்சாவூர், 2013.

     

    Share
  • பன்மொழிப் புலவர் மு.ச. சிவம் – வாழ்வும் பணியும் ஓர் ஆய்வு

    பன்மொழிப் புலவர் மு.ச. சிவம் – வாழ்வும் பணியும் ஓர் ஆய்வு

    முனைவர் சு. சத்தியா,
    உதவிப் பேராசிரியர்,
    தமிழ்த் துறை,
    பான்செக்கர்ஸ் மகளிர் கல்லூரி,  தஞ்சாவூர்.

    **********

    சங்க காலத்திலிருந்து இன்றுவரை எண்ணற்ற புலவர்கள் தோன்றித் தமிழின் பெருமையையும் தமிழனின் வாழ்வியலையும் அவர்தம் படைப்புகள்வழிப் பறைசாற்றி வருகின்றனர். அவர்களுள் வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்கள் மனத்தில் நிற்பவர் யார்? என்றால் குறிப்பிட்ட நபர்களைத்தாம் நம்மால் சொல்ல முடியும். அக்குறிப்பிட்ட நபர்களுள் தமிழுக்காகத் தம் வாழ்நாளையே அர்ப்பணித்த பெருமைக்குரியவர்தாம் பன்மொழிப் புலவர் மு.ச. சிவம். இவர்தம் வாழ்வையும் தமிழ் வளர்ச்சிக்காக இவர் ஆற்றிய பணிகளையும் வெளிக்கொணர்வதாக இக்கட்டுரை அமைகிறது.

    பிறப்பும் வாழ்வும்

    சேலம் மாவட்டம் திருச்செங்கோடு வட்டத்திலுள்ள உஞ்சனைக் கவுண்டம் பாளையம் கிராமத்தில் 1936இல் நெசவுத்தொழிலாளியான முருகேசன், பொன்னம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்தவர்தாம் மு.ச.சிவம் எனும் சதாசிவம் ஆவார். சிறுவயதிலிருந்தே தந்தையுடன் இணைந்து நெசவுத்தொழிலை செய்துகொண்டே திண்ணைப் பள்ளியில் ஐந்தாம் வகுப்புவரை படித்தார். பிறகு, அருகில் உள்ள உலகப்பம்பாளையம் நடுநிலைப்பள்ளியில் ஆறு முதல் எட்டாம் வகுப்புவரை பயின்றார். “விளையும் பயிர் முளையிலேயே தெரியும்” என்பதற்கு ஏற்ப, ஆறாம் வகுப்புப் படிக்கும்போதே 11-ஆம் வகுப்புத் தமிழ்ப்பாடத்திலுள்ள கம்பராமாயணம், திருக்குறள், நளவெண்பா முதலியவற்றைப் படித்து தமிழின்மீது அளவில்லாத காதல் கொண்டார். மேலும் திருச்செங்கோட்டிலுள்ள உயர்நிலைப் பள்ளிக்கு மிதிவண்டியிலேயே சென்று படிப்பினைத் தொடர்ந்தார். இரவு வெகுநேரம்வரை தறிக்குழியில் மிதிப்பலகை ஓட்டித் தந்தை நெய்யும் நெசவுத்தொழிலுக்கு உறுதுணையாய் இருந்துள்ளார். தறி நெய்யும்போது பக்கத்திலேயே புத்தகத்தை வைத்துப் படித்து வந்துள்ளார். மனப்பாடப் பகுதிகளைத் தாளிலே எழுதிவைத்து மிதிவண்டியில் பள்ளிக்குச் செல்லும்போதும் திரும்பும்போதும் படித்த வண்ணமாக இருந்துள்ளார்.

    இத்தகு விடாமுயற்சியால் 1952இல் நடைபெற்ற பள்ளி இறுதித்தேர்வில் 77 விழுக்காடு எடுத்து முதல் மதிப்பெண் பெற்று பெற்றோருக்குப் பெருமை சேர்த்துள்ளார். இவ்வளவு மதிப்பெண் பெற்றவருக்கு மேல்படிப்பினைத் தொடரமுடியாத வறுமைநிலை! பெற்றோரோ தவித்தனர். என்ன? செய்வதென்ற இனம்புரியாத வேளையில், உறவினர்களின் உதவியால் மேல்படிப்பினைத் தொடர வாய்ப்புக் கிடைத்தது. தன்னுடன் உயர்நிலைப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர் க.ர.கந்தசாமி அவர்கள் உதவியால் இலயோலாக் கல்லூரியில் கணிதப்பிரிவைச் சிறப்புப் பாடமாக எடுத்து பயின்றுள்ளார். கணக்கு இவரை முழுவதும் வணங்கியது. தமிழோ இவரை முழுதும் ஆட்கொண்டது. ஓய்வு நேரங்களில் தமிழ் நூல்களைப் பயின்றவர் உள்ளத்தைக் குறுந்தொகை கொள்ளைகொண்டது. இடைநிலைத்தேர்வு முடிந்ததும் தமிழ்மேல் உள்ள அளவில்லாத காதலால் தமிழ்த்துறையில் தடம்பதித்தார்.

     தமிழ்த்தேடல்

    1953இல் இலயோலாவில் படிக்கும்போதே விடுப்பு எடுத்துவிட்டு பச்சையப்பன் கல்லூரியின் தமிழ்ப்பேராசிரியர் டாக்டர் மு. வரதராசனார் வகுப்புக்குச் சென்று அவரது அனுமதி பெற்றுப் பாடம் கேட்டுள்ளார். தம் நண்பரின் உதவியால் மு.வ. அவர்களின் அனுமதியுடன் அவரை ஒருநாள் ஆசானாக ஏற்று அகநானூற்றுப் பாடத்தைக் கேட்டு மகிழ்ந்ததோடு நில்லாமல் தன்னையே தமிழுக்கு அர்ப்பணித்தார். கவிஞர் மரிய விசுவாசம் தொகுத்த “முயற்சியின் வழிகாட்டி மு.வ.” என்ற நூலில் “என் ஒரு நாள் பேராசிரியர்” என்ற தலைப்பில் மு.ச.சிவம் அவர்கள் சில பாடல்களை எழுதியுள்ளார். பேராசிரியர் அன்பழகன் அவர்கள் வகுப்பில் சென்று பாடம் கேட்டுள்ளார். இத்தகு விடாத்தேடலால் தமிழில் முதல் வகுப்பில் தேர்ச்சியும் பெற்றார். எதிர்பாராத விதமாகத் திரு.வி.க. அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பினைப் பெற்றது இவர் வாழ்வில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.

    பிறகு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மூன்றாண்டுகள் தமிழ்த்துறையில் படிக்கத் தொடங்கினார். அங்குதான் பல்துறை வித்தகரானார். அனைத்துத் துறைக்கும் சென்று மாலைதோறும்   நடைபெறும் சிறப்புக் கூட்டங்களில் பங்கேற்று பல்துறை அறிவையும் வளர்க்கலானார். ஆர்வமுடன் வடமொழித் துறைக்குச் சென்று சிறப்புச் சொற்பொழிவுகளைக் கேட்டவர். திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களுடன் ஓராண்டு ஆங்கில வகுப்பில் படித்த பெருமைக்குரியவர். அவ்வப்போது நடைபெறும் பெரியாரின் சொற்பொழிவினை ஆர்வமுடன் கேட்டு மகிழ்ந்தவர்.

    உந்துதல் சக்தியாக அமைந்தவை       

    காரைக்குடி கம்பன் அடிப்பொடி சா.கணேசன், தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் முனைவர் ச.வே.சுப்பிரமணியம், தென்மொழி ஆசிரியர் பாவலரேறு பெருஞ்சித்திரனார், மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர், திருக்குறளார் வீ. முனுசாமி போன்றோரின் உரைகள் இவரின் தமிழ் வளர்ச்சிப் பணிகளுக்கு உந்துசக்தியாக இருந்தன.

    பரிசும் பாராட்டும்

    1954-இல் இராமலிங்க அடிகளாரின் திருவருட்பாவைப் பற்றிய ஆய்வுக் கட்டுரையைப் படித்து பாராட்டினைப் பெற்றார்.

     1955-1956 இரண்டு ஆண்டுகளிலும் தொடர்ந்து டாக்டர் ஆர்.கே. சண்முகம் செட்டியார் ஆராய்ச்சிப் பரிசினைப் பெற்றார். மேலும், திருக்குறள் அமைச்சியல், மணிமேகலை எனும் தலைப்புகளில் ஆராய்ச்சிக் கட்டுரை எழுதிப் பாராட்டினைப் பெற்றார்.

     1955-இல் குறுந்தொகை விளக்கம் என்ற நூலைத் திறனாய்வு செய்து எழுதிய கட்டுரைப் போட்டியில் மகாவித்துவான் ஆர். இராகவையங்கார் ஆராய்ச்சிப் பரிசினை வென்றார். அதே ஆண்டில் நடைபெற்ற திருக்குறள் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார்.

    1956-ஆம் ஆண்டில் திருச்சி சிந்தனைக் குழுவினர் நடத்திய திருவள்ளுவர் உருவக் காட்சிப் போட்டியில் நூறு பக்கத்துக்குமேல் ஆய்வுக் கட்டுரை எழுதி முதல் பரிசு 100 ரூபாயும் ஒரு சவரன் தங்கப் பதக்கமும் பெற்றார்.

    இவ்வாறு படிக்கும்போதும் பணியாற்றும்போதும் பல்வேறு பரிசுகளையும் பாராட்டுகளையும் பெற்ற பெருமைக்குரியவர் ஆனார்.

    புகழ் பெற்ற நண்பர்களுடனான தொடர்பு

    குமரிஅனந்தன், தமிழறிஞர் ச.அகத்தியலிங்கம், வேலூர் வேலம்மையார் போன்றோருடன் படித்த பெருமைக்குரியவர். கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம், தமிழ்ப் பேராசிரியர் பெ.வரதராசன், டாக்டர் சோ.ந. கந்தசாமி போன்றோரிடம் தோழமை கொண்டவர்.

    மு.ச.சிவத்தின் பொன்மொழி

    “படியாத நாளெல்லாம் பிறவாநாளே”
    “படியாமல் ஒருநாளும் படுக்கவேண்டா”

    ஒரு நாளில் 24 மணிநேரம்தான் இருக்கிறது என்று வருத்தமுற்றவர். 1959-இல் திருமணம் செய்து கொண்டவர். குடும்பத்தைவிடப் புத்தகமே உலகம் என்று கல்விசார் நிலைக்கே முதலிடம் கொடுத்து வாழ்ந்துள்ளார்.

    ஆசிரியர்! நூலகர்! பன்மொழிப் புலவர்!

    கோவை அரசினர் கலைக்கல்லூரியில் ஓராண்டு ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். நூல் பசி! அறிவு பசி! என்று வாழ்ந்தவருக்குச்  சென்னைக் கீழ்திசைச் சுவடி நூலகத்தில் நூலகர் பணி கிடைக்கவே மகிழ்வோடு பணியாற்றிட முனைந்தார். வேலை பார்த்துக்கொண்டே மாலை நேரங்களில் பிரெங்சு, இந்தி, வடமொழி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் முதலிய மொழிகளைக் கற்றுத் தேர்வு எழுதி தேர்ச்சியும் பெற்றார்.

     பதிப்பும் அகராதித் தொகுப்பும்

    சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தில் பதிப்பாசிரியராகப் பணியில் சேர்ந்து பதிப்பித்தல், அச்சுப்பிழை திருத்தல், கட்டுரைகள், நூல்கள் எழுதுதல், அகராதிகள் தொகுத்தல், மொழிபெயர்த்தல் போன்றவற்றைக் கற்றுக்கொண்டதோடு நில்லாமல் செயலாக்கப்படுத்தவும் முனைந்தார்.

     “A SHORT  ACCOUNT  OF  SANGAM  LITERATURE”  எனும் ஆங்கில நூலினை 1961இல் எழுதி வெளியிட்டுள்ளார். இருபது ஆண்டுகளாக அகராதிப் பணியில் தம்மை முழுதும் அர்ப்பணித்துப் பல்வேறு அகராதி நூல்களைத் தொகுத்து வெளியிட்ட பெருமைக்குரியவர். அவை,

    1. அடுக்குமொழி அகராதி
    2. ஒலிக்குறிப்பு அகராதி
    3. ஒருபொருட் பன்மொழி அகராதி
    4. ஐம்பொறி அகராதி
    5. கருத்துக்களஞ்சியம்
    6. மன அகராதி
    7. பல பொருள் அகராதி
    8;. காரணப்பெயர் அகராதி
    9. பெண்மைச்செல்வம்
    10. பெண்ணோவியம்
    11. எதுகை இன்பம்
    12. அழகுத்தொடர் அகராதி
    13. தமிழின் அழகுகள்
    14. நயமொழி அகராதி
    15. அகப்பொருள் அகராதி
    16. இலக்கியச் சொல்லகராதி
    17. இலக்கியச் சொற்றொடர் அகராதி
    18. உவமை அகராதி
    19. உருவக அகராதி
    20. தொடர் அகராதி

    இவ்வாறு 150க்கும் மேற்பட்ட நூல்களை இயற்றித் தமிழுக்கும் தமிழனுக்கும் பெரும் புகழினைத் தேடித்தந்துள்ளார்.

    வெளிநாட்டவரின் பாராட்டு

    1972இல் அமெரிக்கக் கவிஞர் எட்வர்டு லூடர்சு  தலைமையில் ஐத்ராபாத் அமெரிக்க ஆய்வுக்கழகத்தில் நடந்த கருத்தரங்கில் வால்ட் விட்மனின் கவிதைச் சிறப்பினை ஒருமணி நேரம் ஆங்கிலத்தில் சொற்பொழிவாற்றிய பெருமைக்குரிய மாண்பாளர். மேலும், யுகோஸ்லோவியா நாட்டுத் தமிழறிஞர் கமில் சுவலபில் இவரது அகராதித் தொகுப்பினைப் பார்த்துப் பாராட்டியுள்ளார். அதுமட்டுமல்லாது, எண்ணற்ற ஆங்கில நூல்கள், 25க்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளை ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதிப் பல்வேறு அறிஞர்களின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளார்.

    “இலக்கியங்களை உணருவதற்குக் கருவியாக இருப்பதுடன் தானே இலக்கியமாகத் திகழும் சிறப்பினைப் பெற்றது அகராதி” என்பதை உலகுக்கு உணர்த்தியவர் மு.ச.சிவம் என்றால் மிகையாகாது! இவரது படைப்புகள் ஆய்வு மாணவர்களுக்கு ஆய்வுக்குரிய களமாகும். இவரது ஒவ்வொரு படைப்பினையும்  தனி ஆய்வுத் தலைப்பாகக் கொண்டு ஆய்வு செய்யலாம். மேலும் இன்றைய இளைய சமுதாயத்திற்கு இவரது படைப்புகள் ஒரு வழிகாட்டியாய் அமையும் என்பது திண்ணமே!

    *****

    பார்வை நூல் 

    பன்மொழிப் புலவர் மு.ச.சிவம் வாழ்க்கைக் குறிப்புகளும் தமிழுக்குச் செய்த ஆக்கப் பணிகளும், புலவர் இரா. வடிவேலன், முத்துநாராயணன் அச்சகம், ஈரோடு, முதற்பதிப்பு 1980.

     

    Share
  • இன்றைய சமூகம் !…….

     முனைவர் சு.சத்தியா

    உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை,

    பான் செக்கர்ஸ் மகளிர்   கல்லூரி, தஞ்சாவூர்.

     

    கூடி  வாழ்ந்து  கோடி  நன்மை   பெற்ற

    காலம்போச்சு!…

    நாடி  எங்கும்  கேடு  செய்யும்

    உலகமாச்சு!….

    மனிதன  மனிதன்  மதிக்கும்  காலம்

    மாண்டுபோச்சு!…

    மனிதன்  எங்கே  வசிக்கிறான்? என்ற

    நிலையாச்சு!….

    அன்பு   என்றால்  என்ன?

    என்பதாச்சு!…..

    வம்பு  என்பதே  இன்று

    வாடிக்கையாச்சு!….

    கருணை  என்பது  முதியோர்

    இல்லமாச்சு!….

    காசு  மட்டுமே  இன்று

    வாழ்க்கையாச்சு!..

    அது இல்லாதவர் வாழ்வோ

    கல்லறையாச்சு!….

    உழவனின்   வாழ்வோ

    உதிர்ந்துப்போச்சு!….

    நாற்பது  பக்க சுயவிவரம்

    செல்லாகாசாச்சு!….

    நாற்பது  லெட்சம்   கையூட்டே   இன்றைய

    நாகரீகமாச்சு!….

    இதுதான்   இன்றைய  சமூகம்

    என்பதாச்சு!…

     

     

    Share
  • கல்விக்கூடம் சந்தையானது

     முனைவர் சு. சத்தியா

     

     

    அதிகாலை எழுந்தேன் – இதோ

    விடி வெள்ளி ஒன்றைக்கண்டேன்  வானத்தில்

    என் வாழ்வில் என்று விடிவெள்ளி

    தோன்றுமென்ற  அச்சத்தில்

    எங்கு  சென்றாலும்  இருள் – காரணம்

    தேவை பொருள்

    பணமிருந்தால் வா! என்றது  சமூகம்

    பணமுள்ளவர் வாழ்வோ – நாளும்

    விடிவெள்ளியாய் சொலிக்குது

    பணமற்றவர் வாழ்வோ – எந்நாளும்

    சிரிப்பாய்ச் சிரிக்குது

    கல்வி  இன்று  மாட்டுச்சந்தையானது

    அறிவைப்  புகட்டும்  கல்விக்கூடம்

    ஆறறிவை விற்கிறது வியாபாரம் பேசி

    கால்  கிலோ  பணமிருந்தால் வா!

    என்கிறது  ஒரு பள்ளி

    அரைக்கிலோ  பணமிருந்தால் வா!

    என்கிறது  இன்னொரு  பள்ளி!

    ஒரு கிலோ  இருந்தால் மட்டுமே

    இடமுண்டென்கிறது மற்றொரு  பள்ளி

    இலஞ்சங்கள்  இலட்சங்களாக  மாறின

    பள்ளி நிர்வாகத்தில்!

    வஞ்சகநெஞ்சங்கள்  புகுந்து  விளையாடுவதால் – அந்தோ!

    ஏழையர்கள்  கூக்குரல்தான் காற்றில்  எங்கோ!

    என்றும் விடியாத வெள்ளியாய்!……

    Share
  • புலமையிலக்கணம்  கூறும்  தவறியல்பு

    -முனைவர் சு.சத்தியா

    sathiyaதமிழ் இலக்கணம்   மிகத்   தொன்மையானது. காலந்தோறும் இலக்கியங்கள் வளர்ச்சி அடைந்தது போலவே இலக்கணங்களும்  வளர்ச்சி அடைந்தன. தொல்காப்பியர்  காலத்தில் எழுத்து, சொல், பொருள் என்று  தொடங்கி இன்று பல்வேறு நிலையில் வளர்ச்சி அடைந்து எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி, புலமை என வளர்ந்து தற்பொழுது அறுவகை இலக்கணம் என்ற நிலையில் தமிழ் இலக்கணத்தின் வளர்ச்சி நிலையைக் காணமுடிகிறது. அவ்வகையில் ஆறாவது இலக்கணமான புலமையிலக்கணம் கூறும் தவறியல்பினை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது.

    புலமையிலக்கணம்

    தமிழ் இலக்கண வரலாற்றில் புதியதொரு சகாப்தத்தை ஏற்படுத்தியவர் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள். இவர் இயற்றிய அறுவகை இலக்கணம் எனும் நூலில் இலக்கணம் ஆறு வகைப்படும் அவை எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி, புலமையிலக்கணம் எனக் கூறியுள்ளார். இப்புலமையிலக்கணமாவது மேற்கூறிய ஐந்து இலக்கணங்களையும் கற்பவர் எவ்வகைப் புலமையோடு இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதாக இயற்றப்பட்டுள்ளது. போற்றுதற்குரியதாகும். புலமை என்பதற்கு,

    ”அறியும் தன்மையைப் புலமை ஆம்எனப்
    பற்பல பெரியோர் பகர்ந்தனர் அன்றே” என்று ஐம்புலனாலும் ஒரு பொருளை அறிதலே புலமையெனச் சுட்டியுள்ளார். இப்புலமையிலக்கணம் தேற்றவியல்பு, தவறியல்பு, மரபியல்பு, செயல்வகை இயல்பு என்னும் நான்கு பிரிவுகளைக் கொண்டுள்ளது. இவற்றுள் தவறியல்பின் சிறப்பினை இக்கட்டுரை எடுத்தியம்புகிறது.

    தவறியல்பு

    இந்நூலாசிரியர் தமிழ் மாணவர்களிடமும் புலவர்களிடமும் இருக்கக் கூடாத பண்புகளையே தவறியல்பாகச் சுட்டுவதோடு அப்பண்பினை உடையவர் முழுவதும் மனமாற்றம் பெறவேண்டும் என்கிறார்.  இதனைப் பின்வரும் பண்புகள்  வழி அறியலாம்.

    புலமைக்காய்ச்சல்

    நன்கு கற்றறிந்த புலவர்களிடம் தற்பெருமை, புலமைக்காய்ச்சல் எனும் பொறாமை போன்ற தீயபண்புகள் இயல்பாகவே இருக்கும். இவை அறவே இருக்கக் கூடாது என்பதைத் தவறியல்பின் முதல் நூற்பா கீழ்வருமாறு உரைக்கிறது.

    சாராது ஒழிப்பரன் தவறுஇயல்பு உரைக்குதும்
    பேரா நலம்எனப்   பிணங்கவொண் ணாதே.                                                         (அறுவகை.புலமையி.34)

    புலமைச்செருக்கு

    நமது வாழ்க்கையில் எந்தச் சூழ்நிலையிலும் நான் எனும் செருக்குக் கொண்ட எண்ணம் எவருக்கும் ஏற்படக்கூடாது. குறிப்பாகக் கல்வி அறிவினைப் பெற விரும்புபவருக்கு எள்ளளவும் கூடாது என்பதை,

    எள்ளிடைப் புலமை இசையும் முன்னம்
    நெல்லிடை யாண்மை நிலவல்ஓர் தவறே. (அறுவகை.புலமையி.37 )

    எள்ளளவும் கல்வியறிவு பெறுவதற்கு முன் நெல்லளவும் செருக்கடைவது தவிர்க்கப்பட வேண்டுமெனக் கூறுகிறது. இதனையே ‘கற்றது கைம்மண்ணளவு கல்லாதது உலகளவு’ என நம் தமிழ் மூதாட்டி கூறியுள்ளது இங்கு ஒப்புநோக்குவதாகும். இதனை மாணவர்கள் நன்கு உணரவேண்டும். தானெனும் செருக்கு இருப்பவருக்கு கல்வியில் ஆர்வம் ஏற்படாததோடு எவ்வித அறிவு வளர்ச்சியுமிராது. கல்வியில் உண்மையான ஈடுபாடு கொண்டவர் துளியும் செருக்கின்றி வாழ்வர்.

    புலவரைப் புலவர் மதியாத நிலை

    மனிதனை மனிதன் மதித்து வாழ்வதே மனிதநேயமாகும். இருந்தும் புலவர் ஒருவர் மற்ற புலவர்களை மதிப்பதில்லை. இது மிகவும் தவறாகும் என்பதை,

    காகப் புள்என இனத்தொடு கவ்வாது
    ஞாளிபோற் பகைக்கும் நாவலர் பலரே. (அறுவகை.புலமையி.38)

    என்று காகத்தின் ஒற்றுமையுணர்வினைச் சுட்டி, இதுபோல் வாழாது நாயினது வேற்றுமை குணத்தையே தனது குணமாக்கி வாழும் புலவர் பலராவர். இப்பண்பு அவர்கள் கற்ற கல்வியினால் வந்த மமதையாகும் என்பதோடு அவ்வாறு இருப்பது தவறு என்றும் ‘உவப்பத் தலைக்கூடி உள்ளப்பிரிதலே புலவர் தொழிலாக’ வேண்டுமெனவும் கூறுகிறது.

    நிலையற்ற நட்பு

    தமிழின் சிறப்பை உணர்ந்த புலவர்களின் நிலையான நட்பைப் பார்க்கிலும் பொருட்செல்வத்தை மட்டுமே பெற்றிருக்கும் அரசர், அமைச்சர், பெருஞ்செல்வந்தரின் நிலையற்ற நட்பே சிறப்புடையதெனக் கருதுபவர் சிறந்த நூலாசிரியராகத் திகழ்ந்தாலும் அவர் புலவரிலும் இழிந்தவராவார் என்பதை,

    தமிழ்அறி புலவோர் தங்கள் உறவினும்
    பொருளுடை மன்னர் ஆதியர் பொய்உறவு
    உயர்வுஎனக் காண்பான் ஒள்ளிய பனுவற்
    காரன் எனினும் கடைப்படும் அன்றே. (அறுவகை.புலமையி.39)

    இன்றைய உலகில் அறிவுடன் கூடிய நட்பினைப் பார்க்கிலும் செல்வத்துடன் கூடிய நட்பையே எங்கும் காணமுடிகிறது. இத்தகைய நட்பினை இழிவென உரைக்கிறது இந்நூல்.

    பெரும்புலவர் இளம்புலவரைச் சோர்வடையச் செய்தல்:

    அறிவில் முதிர்ந்த பெரும்புலவர்கள் வளர்ந்து வரும் இளம் புலவர்களை இழிவுபடுத்தும் நிலையினை நாம் இன்றும் காணமுடிகிறது. இதனைத்தான்,

    தேறாப் புலவனைச் சிந்தை நோவப்
    படுத்தும் பாவலர் பதர்அனை யாரே. (அறுவகை.புலமையி.40)

    என்று பகர்வதோடு அத்தகையவர் உள்ளீடற்ற வெற்றுத்தானியம் போன்று பயனில்லாதவராவர் என்பதோடு குறிப்பாக அறிவில் தம்மைவிடக் கீழ்நிலையில் உள்ளவர்களைத் துன்புறுத்தவே கூடாது என்றும் வலியுறுத்துகிறது.

    சொல் திருடல்

    சிறந்த புலவர்களின் சொற்றொடர்களை அவர்கள் எழுதியவாறே எழுதித் தான் எழுதியது எனக் கூறும் புலவர்களின் செயல் பெருந்தவறாகும். இதனையே,

    சீரிய புலவர்தம் செஞ்சொல் திருடிப்
    பாழ்த்த புன்கவி பகர்வோர் பலரே. (அறுவகை.புலமையி.41)

    என்றுரைக்கிறது. பிறருடைய சொல்லையும் கருத்தையும் தன்னுடையதெனப் பொய்யாக மொழியும் இலக்கியத் திருட்டு கூடாதென்பதையே முன்வைக்கிறது.

    அகந்தை

    இன்று மட்டும் அல்ல காலந்தோறும் ஆற்றல் பெற்ற பெரும்புலவர்களில் சிலர் தானெனும் அகந்தையுடன் தனக்குப் பின்வரும் இளம்புலவர்களிடம் நடந்துகொள்வதைக் காணமுடிகிறது.அப்படிப்பட்டவர்களின் ஆணவத்தைத் தக்க முறையில் சான்றுடன் நிரூபித்து மூளியாக்க வேண்டும் என்பதை,

    “முறைப்படி வென்று மூளி ஆக்கான்” (அறுவகை.புலமையி.42)

    என்கிறது. சான்றாக, பாண்டியமன்னன் உக்கிரப் பெருவழுதி மதுரையில் சங்கம் அமைத்து தமிழ் வளர்த்த காலம். சங்கத்துப் புலவர்களெல்லாம் மதுரையில் கூடியிருந்தனர். தமிழ்ப் புலமையில், தங்களைவிட எவருமிலர் என்று அகந்தையுடனிருக்கையில் ஔவையார் அச்சங்கப்புலவர்களின் செருக்கினை அடக்க முனைந்து புலவர்கள் சூழ்ந்த அவையில், சைகையால் குறிப்புணர்த்தித் தம்முடைய ஐந்து விரல்களையும் மடக்கி மூடி சைகை காட்டினார். பின்னர் கையைக் கொஞ்சம் திறந்துக் காட்டினார். அதன்பிறகு சுட்டுவிரலை மாத்திரம் நீட்டிக் காட்டினார். பின் அதற்கு விளக்கம் கேட்டார். பதிலுக்குப் புலவரிலொருவர்,

    இவ்வளவு கண்ணுடையாள்
    இவ்வளவு சிற்றிடையாள்
    இவ்வளவு போன்ற
    இளமுலையாள்? இவ்வளவா
    நைந்த உடலாள்
    நலமேவு மன்மதன் தன்
    ஐந்து கணையால் வாடினாள்!
    என்று பாடினார். அதனைக் கேட்டு மனம் புழுங்கிய ஔவையார் அப்புலவர்களின் ஆணவத்தை அடக்கத் தமது குறிப்பினை உணர்த்தும் கீழ்வரும் பாடலைப் பாடலானார்.

    ஐயம் இடுமின்!
    அறநெறியைக் கைப்பிடிமின்!
    இவ்வளவேனும் அன்னம்
    இட்டு உண்மின்! தெய்வம்
    ஒருவனே என்று
    உணர வல்லீரேல்
    அருவினைகள் ஐந்தும் அறும்! (தனிப்பாடல்-2)

    எனப்பாடி புலவர்களின் செருக்கினை அடக்கினார்.  இது இங்கு ஒப்புநோக்கத்தக்கதாகும். ஒருவருக்கு கல்வியினால் பெரும்பயன் கருணையே அதுவே நாவலர்க்கு இறையாகும் என்பதை உணர்ந்து வாழ வேண்டும்.

    பொறுமை

    ‘பொறுத்தார் பூமி ஆள்வார்’, பொறுமை கடலினும் பெரிது’ என்பது ஆன்றோர் முதுமொழி. இதனை,

    முற்றும் பொறுத்தலும் மூக்கிற் கோபம்
    வைத்துத் திரிதலும் வண்டமிழ்ப் புலவர்க்கு
    ஆய தன்மைஎன்று அறையஒண் ணாதே.

    இவ்வாறு புலவர்கள் தனது கோபத்தை இடம், பொருள், ஏவல் அறிந்து காட்ட வேண்டும்.அதுவே சான்றாண்மையுமாகும் என்றுரைக்கிறது. அதற்காக அனைத்தையும் பொறுத்துக்கொள்ள வேண்டும் என்பது இல்லை. சூழ்நிலைக்கேற்றவாறு ஒழுகுதல் நன்று என்றே கூறுகிறது.

    காமச்சுவை

    காமக் கடலே கதிஎனக் கருதிப்
    போவார் புலமையிற் புண்ணியம் இன்றே. (அறுவகை.புலமையி.45)

    தமிழ்ப் புலமையை வெளிக்காட்ட வேண்டும் என்பதற்காக ஆபாசமான நாகரிகமற்ற பண்பாட்டைச் சீர்க்குலைக்கும் சொற்றொடர்களைக் கூறுவதால் எவ்விதப் பயனுமில்லை. இதனை உணர்ந்து புலவர்கள்  தமிழின் சிறப்பினை உயர்த்தும் வார்த்தைகளையே பயன்படுத்த வேண்டும். தமிழின் பெருமையை சீர்கெடச்செய்யும் விதமாகத் தமிழரின் அகவாழ்க்கையைக் கொச்சைப்படுத்தக் கூடாது என்பதையே வலியுறுத்துகிறது. மகாகவி பாரதியாரும் தன் சின்னச் சங்கரன் கதையில் இவ்வவல நிலையைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

    புரிந்துகொள்ளாத நாவலர்கள்

    கற்றோர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பர். குறிப்பாகத் தமிழ்க்கல்வி அறம், பொருள், இன்பம், வீடுபேறு எனும் நான்கு உறுதிப்பொருள்களை அளிக்கும் சாதனமாகும். இத்தகைய சிறப்பு வாய்ந்த நம் தாய்மொழிக்கல்வியால் பொருளீட்டவும் அதனால் இன்பம் அடைவதை மாத்திரமே குறிக்கோளாகக் கொண்டவர் புல்லியர் ஆவார். இதனை,

    தெய்வம் புகழும் சிறப்பும் செந்தமிழ்
    பொருந்தும்என்று உணராப் புலவர்புல் லியரே. (அறுவகை.புலமையி.46)

    என்று கூறுகிறது.பொருளுக்காகவும் அதனால் பெறும் இன்பத்துக்காகவும் தமிழ்க் கல்வியைப் பெறுதல் கூடாது என்பது தெள்ளிதின் புலனாகிறது.

    இரக்கம் இல்லாத புலவர்கள்

    அனைத்து உயிர்களிடமும் அன்புகாட்ட வேண்டும். எவ்விடத்தில் உண்மையான அன்பு மேலோங்கி நிற்கிறதோ அங்கே தெய்வ அருளினைக் காணலாம். இரக்கம் என்பது ஐந்தறிவு உயிரினங்களிடமும் அன்பு காட்டுவதாகும். உயிர்களைக் கொன்று உணவு சமைப்பவர்களின் இழிந்த செயல்களைப் போற்றிப் பாடுகின்ற இரக்கம் இல்லாத புலவர்களை மேலோர் பேய்க்குணம் வாய்த்தவரெனப் பழிப்பர் என்று கூறுவதோடு நூல் படைப்பதன் தலையாய நோக்கம் மக்களுக்கு நன்னெறி காட்டுவதற்கே என்றும் கூறுகிறது. அதைவிடுத்து உயிர்களைக் கொலைசெய்தல் கூடாதென்பதற்கு,

    கொல்லல்ஊன் சமைத்தல் ஆகிய விரித்துக்
    கழறுந் துணிவுடைக் கவிப்புல வோரைப்
    பேயர்என்று உலகம் பெரிதுஇகழ்ந் திடுமே. (அறுவகை.புலமையி.48) என்றுரைக்கிறது.

    புலமையை விலை பேசுதல்

    அரியநூலை இயற்றி அதனைப் பணத்திற்கு விலைபேசுதல் சிறப்பாகாது எனவே ஒருவரது புலமைத்திறன் விலைமதிப்பற்றது என்பதறிந்து அதனால் அதை விலைபேசுதல் தவறாகும் என்பதை உணர்ந்து தமிழ்த் தொண்டாற்ற வேண்டுமென்பதை,

    புகலரும் பனுவல் பொற்பணம் கருதி
    விற்கத் துணிவது மேம்பாடு அன்றே. (அறுவகை.புலமையி.49) எனவும் கூறுகிறது.

    கல்வியின் சிறப்பறியாதார்

    கல்வியின் சிறப்பையும் அதனைக் கசடறக் கற்றவரின் புலமைத்திறனையும் அறியாத ஒரு செல்வர் முன்சென்று தம் பெருமைகளைக் கூறி அவரை பாராட்டிப் பரிசில் வழங்குவார் என எதிர்ப்பார்ப்பது தவறாகும் என்பதை,

    அருமை அறியான் அவையிடைப் புகுந்து
    பெருமை பாராட்டலும் ஏனையும் பிழையே. (அறுவகை.புலமையி.50)

    என்பதோடு அவர்களிடம் கைநீட்டிப் பரிசில் பெறுவதை இழிவெனவும் கூறுகிறது.

    காரணம் காரியம் காணாப் புலமை

    எந்தவொரு நிகழ்வுக்கும் காரண காரியம் உண்டென்பதை உணர்ந்து கற்பவரே கற்றலில் முழுமை நிலையைப் பெறுவர். அவ்வாறு இல்லாதவரின் கல்வியாற்றலை முழுமைப் பெற்றதாகக் கூறமுடியாது என்பதோடு இவ்வுலக நிலையாமையை உணர்ந்து வாழ்பவரின் புலமையே நிலையானதாகும். இதனை உணர்ந்தவராய் வாழவேண்டும் என்றும் கூறுகிறது.

    தவறில்லாது தெளிவுற உரைத்தல்

    ”தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார்
    தோன்றலின் தோன்றாமை நன்று” எனும் வள்ளுவரின் குறளுக்கேற்ப தாம் பாடத்தொடங்கிய துறையில் தவறாகப் பாடுவாராகில் இவ்வுலகில் எவரும் அவரை மதிக்கமாட்டார். இப்படிப்பட்டவரை,

    கொண்ட துறையினைக் கோதுபடக் கூறின்
    மண்டலத் தாரும் மதியார் அன்றே. (அறுவகை.புலமையி.53) என உரைக்கிறது.

    அறிவு மயக்கத்தின் செருக்கு

    ‘அருட்பே ராளருக்கு அஞ்சாப் புலமை’
    இறை அருளின் மேன்மையைப் பெற்ற பெரியவர்களிடம் புலமைச் செருக்குடன் இருத்தல் கூடாது. அவர்களிடம் பணிவுடன் நடத்தல் வேண்டும். அதாவது பயப்பக்தியுடன் கூடிய மரியாதையுணர்வுடன் பேசவேண்டும் என்பதையே கூறுகிறது.

    புலவர்களின் அடிமைநிலை

    ஒரு புலவர் ஒரு செல்வந்தருக்கோ அல்லது தலைவருக்கோ அடிமையாய் இருத்தலைவிட வணிகனாக இருக்கலாம் என்கிறது. மேலும் ஒருவரது புலமையை அடிமையாக்குவது அல்லது விற்பது பெரும் தவறாகுமெனவும் சாடுகிறது.

    அறிவுடைமைக்குப் பொருந்தாதவை

    எவரேனும் ஒருவர் இயற்றிய நூலில் அல்லது பாடலில் ஏதாவதோரிடத்தில் தவறு இருப்பது தெரிந்து அந்நூல் முழுமையும் அல்லது அப்பாடல் முழுமையும் தவறெனக் கூறுவது அறிவுடையாருக்கு ஏற்ற செயலாகாது. இதனை,

    பலவகை நயங்களும் பாராது ஒருவிதக்
    குற்றம் கருதிக் குதிப்பதும் புலமைக்கு
    இழிந்த பான்மைஎன்று இயம்பிடல் இசைவே. (அறுவகை.புலமையி.62)

    என்பதோடு இழிவான செயலெனவும் கூறுகிறது.

    நற்புலமைக்கு ஆகாதன

    அரசியல், ஆதாயம், பொருள் வருவாய், எளிய வழியில் செல்வாக்கடைதல் போன்றவற்றைப் பெறவேண்டி தமிழ்ப்பற்றை மிகைப்படுத்திக் காட்டிக்கொள்ளும் காரியவாதியாக இருத்தல் தவறாகும். புலமைபெற்றவர்கள் தனது புலமைக்கு ஆகாதன எவையெவை என்பதை அறிந்து நற்புலமையையே கைக்கொள்ளவேண்டும். இவ்வாறு புலமையில் களைய வேண்டிய தவறுகளை 34 நூற்பாக்கள் வழியாக அறுவகையிலக்கணம் தவறியல்பாக எடுத்துரைக்கிறது.

    *****

    பார்வை நூல்கள்

    1.அறுவகை இலக்கணம், புலவர்.ப.வெ.நாகராசன்
    2.தனிப்பாடல் திரட்டு (ஔவையார்)

     

     

     

    Share