முனைவர் சு. சத்தியா
அதிகாலை எழுந்தேன் – இதோ
விடி வெள்ளி ஒன்றைக்கண்டேன் வானத்தில்
என் வாழ்வில் என்று விடிவெள்ளி
தோன்றுமென்ற அச்சத்தில்
எங்கு சென்றாலும் இருள் – காரணம்
தேவை பொருள்
பணமிருந்தால் வா! என்றது சமூகம்
பணமுள்ளவர் வாழ்வோ – நாளும்
விடிவெள்ளியாய் சொலிக்குது
பணமற்றவர் வாழ்வோ – எந்நாளும்
சிரிப்பாய்ச் சிரிக்குது
கல்வி இன்று மாட்டுச்சந்தையானது
அறிவைப் புகட்டும் கல்விக்கூடம்
ஆறறிவை விற்கிறது வியாபாரம் பேசி
கால் கிலோ பணமிருந்தால் வா!
என்கிறது ஒரு பள்ளி
அரைக்கிலோ பணமிருந்தால் வா!
என்கிறது இன்னொரு பள்ளி!
ஒரு கிலோ இருந்தால் மட்டுமே
இடமுண்டென்கிறது மற்றொரு பள்ளி
இலஞ்சங்கள் இலட்சங்களாக மாறின
பள்ளி நிர்வாகத்தில்!
வஞ்சகநெஞ்சங்கள் புகுந்து விளையாடுவதால் – அந்தோ!
ஏழையர்கள் கூக்குரல்தான் காற்றில் எங்கோ!
என்றும் விடியாத வெள்ளியாய்!……

Leave a Reply