Blog

  • படித்தேன்! சுவைத்தேன்! பகிர்ந்தேன்! – 28

    படித்தேன்! சுவைத்தேன்! பகிர்ந்தேன்! – 28

    முனைவர். ச. சுப்பிரமணியன்

    அழகு மழலைக்கு ஆயிரம் கவிதைகள்

    முன்னுரை

    ஏதாவது ஒரு கவிதையையோ கட்டுரையையோ நாம் படிக்கிறபோது அவற்றை முன்பு எஙகோ படித்த நினைவு நமக்கு வருவது இயல்பு. யாரோ சொல்லியிருந்த நினைவு! இத்தகைய நினைவு எல்லாப் படைப்புக்களுக்கும் வருவதில்லையென்றாலும் ஒரு சில படைப்புக்களைப் படிக்கிறபோது வருவதை நாம அனைவரும உணர்ந்திருக்கிறோம். பதிணென் கீழ்க்கணக்கு நூல்களைப் படிக்கிற எவருக்கும் திருக்குறள் நினைவுக்கு வராமல் போகாது. சான்றோர்கள் ஒரே மாதிரியாகத்தான் சிந்திக்கிறார்கள் என்பதற்கு இலக்கிய அளவில் எண்ணற்ற எடுத்துக்காட்டுக்கள் உண்டு. முகநூல் கவிதைகளைப் படிக்கிற சில பொழுதுகளில் அத்தகைய அனுபவத்தை நான பெற்றிருக்கிறேன்.! தம்பி தாரமங்கலம் முத்துசாமியின் கவிதையொன்றினைப் படிக்கிறபோது எழுந்த அனுபவத்தை வாசகர்களோடு பகிர்ந்து கொள்வதையே இந்தக் கட்டுரை தனது தலையாய நோக்கமாகக் கொண்டு அமைகிறது.

    விவேக சிந்தாமணியும் திருக்குறளும்

    விவேக சிநதாமணியில் ஒரு பாட்டு. ஒரு பெண்ணின் வால் எயிறு ஊறிய நீர் அதாவது எச்சில் எத்தகையது என்பதை விளக்குகிற பாட்டு அது. அந்தப் பாட்டு இப்படி அமைந்திருக்கிறது

    வண்டுமொய்த் தனைய கூந்தல்
    மதனபண் டார வல்லி
    கெண்டையோடு ஒத்த கண்ணாள்
    கிளிமொழி வாயின் ஊறல்
    கண்டுசர்க் கரையோ தேனோ?
    கனியொடு கலந்த பாலோ?
    அண்டமா முனிவர்க் கெல்லாம்
    அமுதம்என் றளிக்க லாமே!

    யாருடைய எச்சில் ஊறியதோ அவளைப் பற்றிய தோற்ற வண்ணனையைப் பாட்டின் முதல் இரண்டடிகளில் மிக அழகாகச் சித்திரித்திருக்கிறார் புலவர். அவள் கூந்தல் வண்டுகள் கூடுகட்டினால் எப்படியிருக்குமோ அப்படிருக்குமாம்.

    “வண்டுமொய்த்தனைய கூந்தல்”

    மதன் மன்மதன்! பணடாரம் பொக்கிஷம். அதாவது கருவூலம்.  வல்லி கொடி! காமக்கருவூலமாய்க் கொடி போன்றவள்

    மதன பண்டார வல்லி!

    அவள் கண் கெண்டை மீனை ஒத்திருந்ததாம். பெண்களின் கண்களுக்குக் கெண்டை மீனை உவமிப்பது ஓர் இலக்கிய மரபு. இது பற்றிய இன்னொரு பாடலை இங்குச் சுட்டுவது பொருத்தமாக இருக்கலாம்!.

    “தண்டுலாவிய தாமரைப் பொய்கையில்
    மொண்டு நீரை முகத்தருகேந்தினள்!
    கெண்டைகெண்டை எனக் கரை ஏறினள்
    கெண்டை காணாமல் நின்று தயங்கினள்!”

    பெண்ணொருத்தி நீரிலே குனிந்து பார்த்திருக்கிறாள். இவள் கண்ணிழல் நீரிலே படிந்திருக்கிறது. அவற்றைக் கெண்டை மீன் என மயங்கிய  அந்தப் பெண் தன் உள்ளங்கையால் ஒரு கை நீரை மொண்டு அந்தக் கெண்டைமீனைப் பார்க்க முனைந்திருக்கிறாள். குளத்தில் தோன்றிய கண்ணிழல் உள்ளங்கையில் தோன்றுமா என்ன? உடனே கெண்டையைக் காணோம் என்று அரற்றி மயங்கினாளாம்!, புலவர் என்ன சொல்ல வருகிறார்? அவள் கண் கெண்டை மீனைப் போல இருந்தது என்ற செய்தியைத்தான்! இப்படிச் சொல்வதும் ஒரு இலக்கியச் சுவைக்காகவே!

    “கெண்டையை ஒத்த கண்ணள்”

    காதல் மயக்கத்தில் பெண்கள் சொன்னதையே திருப்பிச் சொல்வார்கள்! பறவைகளில் பேசுகிற பறவை கிளி!. கிளி பேசுமா என்றால் பேசாது! அது வளர்ப்பவர் சொல்வதையே திருப்பிச் சொல்லும்! இந்தப் பெண் காதல் மயக்கத்தில் சொன்னதையே திருப்பித் திருப்பிச் சொல்லுவாள் ஆதலின் கிளியைப் போல் பேசுகிறளாம்!

    கிளிமொழி!

    இப்போது அந்தப் பெண்ணின் உருவத்தை வண்ணனைச் செய்யும் சொற்களை இணைத்துப் பார்த்தால் அவளின் புற அழகு புலப்படும்.

    வண்டுமொய்த் தனைய கூந்தல்
    மதனபண் டார வல்லி
    கெண்டையோடு ஒத்த கண்ணாள்
    கிளிமொழி!

    இத்தகைய பேரழகையுடைய அவள் வாய் எச்சில் எத்தகைய இனிமை பயக்குமாம் என்று ஒரு பட்டியல் போடுகிறார் புலவர்! “கற்கண்டாக இருக்குமோ? சர்க்கரையாக இருக்கலாமா? மலைத்தேனாக இருக்கலாமா?  முக்கனிச் சாற்றோடும் கலந்த பாலாக இருக்கலாமா?  என்றெல்லாம் ஐயப்படுகிறார்!. எச்சிலுக்கு இது மாதிரியான வேதியல் பண்புகள் இல்லை என்பது அனைவருக்கும் தெரியும். காதல் மயக்கமல்லவா?  எனவேதான் தலைவள் உளறுகிறான்.

    கண்டுசர்க் கரையோ தேனோ?
    கனியொடு கலந்த பாலோ?

    அமுதத்தை உண்பதற்காகப் பாற்கடலைக் கடைந்தார்களாம் தேவர்களும் முனிவர்களும். அவ்வளவு சிரமம் ஏன்? தேவையில்லை. இவள் வாயில்  ஊறும் இந்த எச்சில் அமுதமாகாதா? அதனைக் கொடுத்தால் போதாதா? என்று வினவுகிறார் புலவர்!

    அண்டமா முனிவர்க் கெல்லாம்
    அமுதம்என் றளிக்க லாமே!

    தேவர்கள் அமுதம் உண்டார்கள் என்பது கற்பனை! யாரும் அனுபவிக்க முடியாதது. தலைவியின் எச்சிலாகிய அமுதத்தை உண்பது யாருக்கும் கைகூடுவது. உண்மை!. அதன் சுவைதான் காதலர்களுக்கேற்ப மாறுபடுமே தவிர உண்டலாகிய வினை உண்மை! இந்தப் பாடலைப் படிக்கின்ற போது எனக்குத் திருவள்ளுவர் பாட்டு நினைவுக்கு வந்தது. திருக்குறள் காமத்துப்பால் நாடகப் பாங்கில் அமைக்கப்பட்ட இலக்கியம். அந்தப் பாலின் இருபத்தைந்து அதிகார்களும் தலைவன், தலைவி தோழி கூற்றாகவே அமையும். திருவள்ளுவர் ஒதுங்கிக் கொள்வார்.

    பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
    வாலெயிறு ஊறிய நீர் (1121)

    என்று தலைவியின் எச்சிலை உண்ட தலைவன் கூறுவதாகத் திருக்குறள் கூறுகிறது!  எயிறு ஊறாது. எயிறு என்னும் இடத்தில்  எச்சில்தான் ஊறும். குளம் நிறைந்தது என்றால் குளம் நிறையாது. நீர்தான் நிறையும். குளம் இடம். நீர் அவ்விடத்து ஊறுகின்ற நீர்.  பாலோடு தேன்கலந்தற்றே என்னும் இருசொற்களின் விரிவுரையை விவேக சிந்தாமணி விரித்துக் காட்டியிருக்கிறது.  திருக்குறளில் தலைவியின் எச்சிலை உண்ட தலைவனின் இந்த அனுபவத்தைப் படித்த ஒருவன் விவேகசிந்தாமணியைப் படித்தான் என்றால் திருக்குறள் நினைவுக்கு வராமல் போகுமா என்ன? இன்னொரு அனுபவததையும் நான் பகிர விரும்புகிறேன்.

    ‘மரகதம்’ என்று ஒரு திரைப்படம் வந்தது. அந்தப் படத்தில் ‘கண்ணுக்குள்ளே உன்னைப் பாரு! அது காவியம் ஆயிரம் கூறும்” எனத் தொடங்கும் பாடல் ஒன்று உண்டு. அந்தப் பாடலின் சரணத்தில்

    ‘இன்பத்தின் எல்லையில் கூடுகட்டி இன்னிசை பாடும் பறவைகள் நாம்’

    என்று ஒரு வரி சரணத்தில் வரும். இந்த வரியைக் கேட்போர் அதிர்ச்சிக்கு ஆளாக நேரிடும். ஆங்கிலத்தில் புகழ் பெற்ற ஒரு வரி அப்படியே அசை பிசகாமல் தமிழ்த் திரைப்படப்பாடலில விழுந்திருக்கிறது என்பதுதான் அந்த அதிர்சசிக்குக் காரணம்.  “WE ARE THE NEST OF THE SINGING BIRDS” என்பதுதான் அந்த ஆங்கில வரி. பாடல் எழுதிய பாலு என்பவர் ஆங்கில இலக்கியம் படித்தவரா என்பது நமக்குத் தெரியாது. படம் வந்து அறுபது ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. ஆசிரியர் குறிப்பு கிட்டவில்லை. என்ன ஒரு வியப்பு? இங்கிலாந்தில் இருந்த ஒரு கவிஞனின் சிந்தனை எப்படி இங்கே இருக்கிற ஒருவனுக்கு வந்திருக்கிறது? சத்தியக் கவிஞர்கள் ஒரே மாதிரிதான சிந்திக்கிறார்கள். இது சவலைக் கவிஞர்களுக்குப் புரியாது!.

    சத்தியக் கவிஞர் முத்துசாமி

    மகாகவி பாரதிபோல், கண்ணதாசனைப் போல் கள்ளங் கபடில்லாத உள்ளந்தான் கவிஞர்களுக்கு அடிப்படைத் தகுதியாகும் என்பது என் கருத்து. இது இயற்கையிலேயே அமைய வேண்டும். காட்சிக்கு எளியன் கடுஞ்சொல்லன் அல்லன் என்னும் இனிய பண்புகளின் தொகுப்பாக இருப்பவனே கவிஞன். தம்பி முத்துசாமி அத்தகைய இயல்புடைவராகவே இருக்க வேண்டும். இது அவருடைய படைப்புக்களிருந்து அறிந்து கொள்ள முடிகிற உண்மையாகும்.

    பாவலர் முத்துசாமியும்  பாவேந்தரும்

    முததுசாமி எழுதி முகநூல் பதிவில் நான் கண்ட ஒரு கவிதைதான் இந்தக் கட்டுரைக்கு மூலம். முன்பே சொன்ன படி சத்தியக் கவிஞர்கள் ஒரே மாதிரியாகத்தான் சிந்திக்கிறார்கள். மானுடம் தாண்டிய நேச மனப்பான்மையை வளர்த்துக் கொள்கிறார்கள். “காக்கை குருவி எங்கள் சாதி” என்று பாரதி பாடியதற்கும் “ஓடையும் தாமரைப்பூக்களும்” பாவேந்தரிடம் பாசம் காட்டியதற்கும் மனித நேயத்தைத்தாண்டிய இந்த அருட் பண்பே காரணம். அததகைய பண்பாளராக இந்தக் கவிதையில் முத்துசாமி எனக்கு விளங்குகிறார்.

    சூரியனைச் சொந்தம் கொணடாடும் முத்துசாமி

    இயற்கையை ரசிப்பதும் அதனோடு உறவாடுவதும் அதனை உற்று நோக்குவதும் உண்மைகளை அறிவதுமே கவிஞர்களைப் பிற மக்களிடமிருந்து பிரித்துக் காட்டும் கோடுகளாகும். இயற்கையை ரசிக்கத் தெரியாதவன் கவிஞன் என்றால் விழியே இல்லாதவன் நிலவைப் பாடினான் என்பது போலாகும்.

    “காலைக் கதிரவன் கவினுற நின்று
    கவிதை பாடுக என்றான் – மலர்ச்
    சோலை வண்டு சொந்தம் கொண்டு
    சொல்லுக கவிதை என்றது !”

    நிலவுக்குச் செல்வதற்கு இஸ்ரோ முயன்று கொண்டிருக்கும்போது முத்துசாமியின் இருப்பிடம் தேடிக் கதிரவன் வந்ததாம். அருமை! வெப்பக் கோளமான கதிரவன் கவிஞரைத் தன்னைப் பாடுக என்று வேண்டுகோள் விடுத்ததாம். வெப்பத்தோடு கதிரவன் பேசிக் கொண்டிருக்கும் போதே கவிஞருக்குக் குளிர்ச்சியைத தர எண்ணிய வண்டுகள் ரீங்காரம் செய்து கொண்டே அவரிடம் வந்ததாம். இந்த வண்டைப் பாட வந்த கவிஞர் மலர்ச்சோலை வண்டு என்று அடைகொடுத்து எழுதுகிறார். வண்டு என்று எழுதாமல் சோலை வண்டு என்று எழுதுகிறார். சோலை என வாளா கூறாமல் மலர்ச்சோலை என்றும் எழுதுகிறார். இது மரச்சோலை அல்லவாம். மலர்ச்சோலையாம். மலர் குளிர்சசி! சோலை குளிர்ச்சி! வண்டு குளிர்ச்சி! அதனால் அதன் குரலும் குளிர்சசி. ஒரு சிறிய கண்ணியல் பொருள் முரணால் கவிதை மிடைந்திருக்கிறார் முத்துசாமி.

    குரலெடுத்துக் கேட்ட குயிலும் மயிலும்

    கவிஞர் எழுதத் தொடஙகுகிறார். முதலில் கதிரவன் வந்தது. வண்டு இடைமறித்தது. இப்போது வானத்து முறை. வானத்து நிலவு பூமிக்கு வருவதைக் கவிஞர்கள் கற்பனை செய்திருக்கிறார்கள். ஆனால் தம்பி முத்துசாமி வானமே பூமிக்கு வந்து தன்னைப் பாடுக என்றதாம். அடடா! என்னவொரு கற்பனை? எல்லாரும் நிலவையும் கதிரவனையும் மண்ணுக்கு வரச்சொல்லியிருக்கிறார்கள். நான வானத்தையே வரச்சொல்லுகிறேன் என்று சொல்லிவிட்டு எழுதப்பட்டதல்ல இந்தக் கவிதை. இயல்பாக அமைந்த கவிதை. இந்தக் கற்பனை வந்த கற்பனையேயன்றி வரவழைக்கப்படட கற்பனை அன்று.

    “நீல வானம் நிலத்தில் வந்து
    நீண்ட கவிதை கேட்டது – புதுக்
    கோல மயிலும் கொஞ்சும் குரலில்
    கூறிடு கவிதை என்றது !”

    என்னும் இந்தக் கண்ணிகளில் மயிலும் வந்து தன்னைப் பாடுக என்றதாம். அது சாதாரணம்தான். ஆனால் கொஞ்சும் குரலில் கெஞ்சியதாம் என்பதுதான் அழகிய கற்பனை. மயிலுக்குச் சாயல் பேசப்படுகிற அளவுக்கு அதன அகவல் ஒலி பேசப்படுவதில்லை. கவிஞரின் கவிதையில் தானும் இடம்பிடித்துவிட வேண்டும் என்னும் ஆவல் அதற்கும் வந்ததாம்.

    விண்மீன் கூட்டமும் விரிந்த மலைத்தொடரும்

    வானம் நிலத்துக்கு வந்து கவிதை கேட்டது பகலில். இப்போது அந்தி வந்துவிட்டது. “வானம் கேட்டு எழுதுகிற கவிஞர் நமக்குத் தானம் அளிக்க மாட்டாரா? என்று தவித்துப் போனதாம் விண்மீன் கூட்டம்.

    “விண்மீன் கூட்டம் விருந்து வைத்து
    வேண்டும் கவிமழை என்றது – உயர்
    பொன்னிற மலையும் பொங்கி வழிந்து
    பூந்தமிழ்க் கவிமலர் கேட்டது !”

    இல்லாத  வானத்தில் இருக்கின்ற உடுக்களும் கவிஞரை நோக்கிப் பயணப்பட்டபோது மலை அமைதியாக இருக்குமா என்ன? அதுவும் இருந்த இடத்தில் இருந்தே ஒரு விண்ணப்பத்தைப் போடுகிறதாம். ‘பொங்கி வழிந்து’ என்று ஒரு தொடர் வருகிறது. மலை எப்படிப் பொங்கும்? அது என்ன எரிமலையா? இல்லையே!. பொங்கி வழிந்து என்னும் தொடர் மலையின் அருவியைக் குறித்தது. அருவியொலி மலை பேசுவதாகக் கற்பனை செய்கிறார். அருவிமொழியால் மலையும் கவிஞரின் கவிதைப்பொருளாக வேண்டும் என்று விரும்பியதாம்.

    அன்னமும் மின்னலும்

    தொடர்ந்து கற்பனை செய்கிறார் கவிஞர். பறவைகளில் மயில் கேட்டதை அறிந்த அன்னப்பறவை அருகில் வந்ததாம். வானமும் விண்மீனும் தன்னைவிடடுச சென்றுவிட்டதை அறிந்த மின்னலும் கவிஞரிடம் போனதாம். இரண்டும் ஒரு கூட்டு விண்ணப்பத்தைக் கொடுத்ததாம்

    “அன்னப் பறவை அசைந்து வந்து
    அழகினைப் பாடுக என்றது – விண்
    மின்னற் கீற்று மிரட்டியே என்னை
    முழங்கிடு கவிதை என்றது !”

    மின்னல் இடிக்கு வாழ்க்கைப்பட்டது. மின்னல் முன்னால் வரும் இடி பின்னால் வரும் ஒளியின் வேகம் முன்னால் ஒலியின் வேகம் பின்னால். அதற்கு இடியோசைதான் இன்னோசை. மின்னலுக்கு இடியோசைதான் பின்னணி இசை. அதனாலே அது கவிஞரிடம் அமைதியாகப் பேசாமல் இடிபோல் பேசியதாம்.  அப்படிப் பேசுவது தன்னை மிரட்டியது போல இருந்ததாகக் கவிஞர் கற்பனை செய்கிறார்.

    கவிஞரைக் கெஞ்சும் மாலையும் சாலையும்

    இந்த நிகழ்ச்சிகளையெல்லாம் கூர்ந்து கவனித்து வந்த அந்தி வானம் தன்னையும் பாட வேண்டுமென்று கேட்டதாம்.  ‘தங்கம் உருக்கித் தழல் குறைத்துத் தேனாக்கி எங்கும் பரப்பியதோர் இங்கிதமோ?  என்று பாரதி பாடியும் அதற்கு அடங்கவி`ல்லையாம்.

    தேன்செய்யும் மலரும் தீயும்!
    செந்தீயும் நீறாய்ப் போகும்!
    கான், செய், ஊர், மலை, கா, ஆறு
    கடலெலாம் எரிவ தோடு
    தான்செய்த தணலில் தானும்
    எரிகின்றான் பகலோன்! அங்கு
    வான்செய்த வெப்பத் தால்இவ்
    வையத்தின் அடியும் வேகும்!
    உச்சியில் இருந்த வெய்யோன்,
    ஓரடி மேற்கில் வைத்தான்,
    நொச்சியின் நிழல்கி ழக்கில்
    சாய்ந்தது! நுரையும், நீரும்,
    பச்சையும், பழுப்பு மான
    பலவண்ண முகில்கள் கூடிப்
    பொய்ச்சான்று போல, யானை
    புகழும் பின் மலையைக் காட்டும்!.

    என்று பாவேந்தர் பாடியும் போதவில்லையாம். “ மேற்றிசையில் அனற்காட்டில் செம்பரிதி வீழ்ந்து வெற்று நீறாகாமல் இருப்பதொரு வியப்பே” என்று அவர் பாடியது பசிக்குப் போதவிலலையாம்! “வானமகள் நாணுகிறாள் வேறு உடை பூணுகிறாள்” என்று வைரமுத்து பாடியும் அதற்கு மகிழ்ச்சி இல்லையாம்;

    “பைங்கிளி ஒன்று பறந்து வந்து
    பழந்தமிழ்க் கவிதைக் கேட்டது – குளிர்
    தங்கிடும் நிலத்தில் தவழ்ந்து நடந்து
    தந்திடு கவிதை என்றது !”

    “மாலைப் பொழுதும் மயக்கும் மொழியில்
    மணித்தமிழ் கவிதைக் கேட்டது – நீள்
    சாலை மரங்கள் சரமாய்க் கவிதை”
    சமைத்துத் தருக என்றன !

    முத்துசாமி பாடலை மாலை கேட்டதாம். அதனால் சாலையும் கேட்டதாம்.  ஆனால் அவர் மயங்கவில்லையாம்!.

    மானும் முயலும்

    மானைப் பாடாத புலவரில்லை என்பது மானுக்குத் தெரியாதா என்ன? ஆனால் முத்துசாமி இதுவரை தன்னைப் பாடவில்லை என்னும் மனக்குறை அதற்கு இருந்ததாம். அதனால் அவரை வந்து தன்னைப் பாடும்படி வேண்டியதாம்.  “தூமயிர் குறுந்தாள் நெடுஞ்செவி குறுமுயல்” என்று சங்கப்புலவ்ன் பாடியிருக்கிறான் என்பது முயலுக்குத் தெரியும். வீரத்திற்கு அழகில்லை என்பதற்குத் திருவள்ளுவர் தன்னை உவமமாகப் பயன்படுத்திக் கொணடார் என்பதும் முயல் அறிந்ததே!. வேகமாக ஓடி ஓய்வெடுத்துத் தோல்வி கண்ட கதையில் தான் தவறாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது முயலுக்கும் தெரியும். அதனைவிட ஆமைக்குத் தோற்ற அவமானத்தை அது இன்னும் மறக்கவே இல்லை.

    “மான்க ளிரண்டு மகிழ்ச்சியில் திளைத்து
    மாத்தமிழ்க் கவிதைக் கேட்டன – அடர்
    கானக முயல்கள் காதினை நீட்டி
    கவிதை என்றெனைக் கேட்டன !

    ‘மான்கள் இரண்டும் மகிழ்ச்சியில் திளைத்தபின்” என்பதால் ஆண்மானும் பெண்மானும் என்பதைக் குறிப்பாகக் காடடுகிறார் கவிஞர். மான் இணையாக வந்தது போலவே முயல்களும் கூட்டமாகவே வந்தனவாம்.

    குழந்தையின் புன்னகை கோடி பெறும்

    சூழ்நிலை கவிஞனை உருவாக்குகிறது. கவிதை பிறக்கிறது. தன் பிள்ளையின மழலையில் மனம் பறிகொடுத்தவர் முத்துசாமி. கவிதை எழுத வேண்டும் என்ற எண்ணமே இல்லாமல் அமர்ந்திருந்த அவரை வானம் கேட்டது!  இடி இறைஞ்சியது. மின்னல் வேண்டியது! அன்னம் அழுதது! மானும் மண்டியிட்டது! முயலும் முயன்று பாரத்தது! கிளி பேசியும் பார்த்தது! மாலையும் கேட்டது! சாலையும் கேட்டது! அப்பொழுதெல்லாம் இளகாத கவிஞர் மனம் தன் மழலைக்கு இளகியதாம்! இரங்கியதாம். எவ்வளவு மென்மையான கற்பனை! “குழலையும் யாழையும் புறந்தள்ளும் மழலை” என்பார திருவள்ளுவர். “கொஞ்சும் மழலை கேட்கையிலே குழலும் யாழும் பொய்யன்றோ?” என்பார் மருதகாசி!. பொருள் புரியாத மழலைக்கு மயங்கினாராம் முத்துசாமி கவிஞர்.

    “அத்துணைப் பேரும் அனுதினம் கேட்டும்
    அகத்தின் கதவு திறக்கல – என்
    புத்தெழில் மழலைப் புன்னகை சிந்திட
    புலர்ந்தது ஆயிரம் கவிதை !”

    மேலே சொலலப்பட்ட பொருள்கள் எல்லாம் ஒரு நாள் அல்ல இரு நாள் அல்ல பல நாள் வந்து கேட்டும் பயனில்லை என்பதை இறுதி வரியிலே சொல்கிறார் கவிஞர். பலநாளும் விடடு விட்டு இலலையாம். “அனுதினம்” கேட்டும் என்கிறார். இடையீடு இல்லாமல் கவிஞரின் கவிதையில் பாடுபோருளாகிவிட வேண்டும் என்னுந் துடிப்பால் வந்து அலைந்தனவாம்! அஃறிணை உயிர்களோடு கவிஞரின் உறவு நிலையைப் புரிந்து கொள்ள இந்த வரிகள் உதவுகின்றன. கவிஞனின் மனம் இயல்பாகவே இப்படித்தான் இருக்க வேண்டும். கவிதை பிறக்க வேண்டும். பலபேர் புனைந்து கொண்டிருக்கிறார்கள்.

    மருதகாசியும் முத்துசாமியும்

    திரைக்கதையில் அறக்கருத்துக்களையும் சமுதாய நீதிகளையும் கலை நயம்பட எடுத்துக் கூறுவதில் மருதகாசி தனித்து விளங்குபவர். “மனமுள்ள மறுதாரம்” என்று ஒரு திரைப்படம் ஐம்பதுகளில் வெளிவந்தது. அந்தப் படத்தில் மருதகாசி எழுதிய பாடல் ஒன்றின் சரணம் இப்படி அமைந்திருக்ககிறது.

    “மாடி மனை கோடி பணம் வாகனம் வீண் ஜம்பம்!
    வாழ்வினிலே ஒருவனுக்குத் தருவதல்ல இன்பம்!
    மழலைமொழி வாயமுதம் வழங்கும் பிள்ளை செல்வம்
    மார்மீது உதைப்பதிலே கிடைபபதுதான் இன்பம்”

    மழலைகளைப் பாரத்தவுடன் முத்துசாமிக்கு ஆயிரம் கவிதைகள் மலர்ந்ததாம். மருதகாசியின் உள்ளம் இடமாறியிருக்குமோ?

    தமிழினக் கனவும் பாவேந்தரும்

    இனத்துக்காகவும் மொழிக்காகவும் பாடியவர் பாவேந்தர். பாரதி ஒளியில் பாவேந்தர் பாடிய உலகப் பார்வை ஒளியிழக்கச் செய்யப்பட்டது.

    எனையீன்ற தந்தைக்கும் தாயக்கும் மக்கள்
    இனமீனும் தமிழ்நாடு தனக்கும் என்னால்
    தினையளவு நலமேனும் பயக்கு மென்றால்
    செத்தொழியும் நாள் எனக்குத் திருநாளாகும்”

    என்று பாடியவர் அவர். ஒரு நாள் கவிதை எழுத உட்கார்ந்தாராம். தாளை எடுத்ததுதான் தெரியுமாம்.  ஒரு எழுத்துக் கூட வரவிலலையாம்! எழுத இயலவில்லையாம்!

    ஏடெடுத்தேன் கவி ஒன்று வரைந்திட”

    என்ன ஆனது? எதுபற்றி எழுத ஏட்டினை எடுத்தார்? ஏன் எழுத இயலவில்லை?  என்பதையெலலாம் பாட்டின் இறுதி வரியில் பதிவு செய்கிறார். வந்த தடைகளை வரிசைப்படுத்துகிறார்.

    1. வானம் தன்னை எழுதென்று சொன்னதாம்.
    2. ஓடையும் தாமரைப் பூக்களும் தங்களைப் பற்றி எழுதுக என்றனவாம்.
    3. அடர்ந்த காடும் பசிய வயலும் கருத்த மேகமும் தங்களை எழுதக் கூடாதா என்று கெஞ்சினவாம்.
    4. சாயலில் மயிலையொத்த மங்கையர் அருகில் வந்து தங்களைப் பாடுக என்றனராம்.
    5. சோலை தந்த குளிர்ச்சியோடு தென்றல் வந்ததாம்.
    6. தோகையுடைய மயிலும் மருண்ட மானும் வந்தனவாம்
    7. மாலைக் கதிரவன் தன் மாணிக்க ஒளியினைக் காட்டியதாம்.
    8. களங்கண்ட தமிழ் வீரன்; மலையினை யொத்த தன்தோளை வரைக என்றானாம்.
    9. இத்தனை அழகும் தங்கள் பாடுக என எத்தனித்தனவாம்! வற்புறுத்தினவாம்!

    ஆனால், ஆண்ட தமிழினம் அடிமைப்படட்டுக் கிடக்கின்ற காட்சியினைக் கண்டவருக்குக் கவிதை வரவில்லையாம். கவலை வந்ததாம். அந்தக் கவலைக்கு மூல காரணம் தாய்மொழிவழிக் கல்வி இல்லாததுதானாம். உண்மைதானே! உலகிலேயே தாய்மொழி வழி கலலாத ஒரு கீழினமாக இருப்பது தமிழினமே. “மொழி வளர்ந்தால் இனம் வளரும். இனம் வளர்ந்தால் நாடு வளரும். இது ஒரு பரிணாமம். எனவே தாய்மொழிவழிக் கல்வி பெற்றுவிட்டால் துன்பங்கள நீங்கும் சுகம் வரும் நெஞ்சில் தூய்மை உண்டாகிடும். விரம் வரும்”. இனத்தைப் பற்றித்தான எழுத நினைத்தாராம்! இனந்தான் எழுந்திருக்க முடியாமல் இப்படி இடுப்பொடிந்து கிடக்கிறதாம்! அதற்குக் காரணம் தாய்மொழிப் பற்றின்மைதான் காரணமாம். பாவேந்தர் எழுதுகிறார்.

    ஏடெடுத்தேன் கவி ஒன்று வரைந்திட — என்னை
    எழுதென்று சொன்னது வான்
    ஓடையும் தாமரைப் பூக்களும் — தங்களை
    ஓவியம தீட்டுக என்றுரைக்கும்
    காடுகழனியும் முன்னே வந்து
    கண்ணைக் கவர்ந்திட எத்தனிக்கும்
    ஆடும் மயில் நிகர் பெண்களெல்லாம்
    தங்கள் அன்பினைச் சித்திரம் செய்கவென்றார்

    சோலைக் குளிர் தரு தென்றல் வரும் — பசுந்
    தோகை மயில் வரும்! அன்னம் வரும்.!
    மாலைப பொழுதினில் மேற்றிசையில் — வரும்
    மாணிக்கப் பரிதி காட்சி தரும்!
    வேலைச் சுமந்திடும் வீரரின் தோள் – “உயர்
    வெறபென்று” சொல்லி வரைக என்னும்
    கோலங்கள் யாவும் மலைமலையாய்
    கூவின என்னை! இவற்றிடையே

    இன்னலிலே தமிழ்நாட்டிலே — யுள்ள
    என்தமிழ் மக்கள் துயின்றிருந்தார்!
    அன்னதோர் காட்சி இரக்கமுணடாக்கி — என்
    ஆவியில் வந்து கலந்ததுவே!
    இன்பத் தமிழ்க்கல்வி யாவரும் கற்றவர்
    என்றுரைக்கும் நிலை எய்திவிட்டால்
    துன்பங்கள் நீங்கும் சுகம் வரும் நெஞ்சினில்
    தூய்மை உண்டாகிடும் வீரம் வரும்

    இவ்வளவு சிக்கல்களில் தன் இனம் சிக்கிக் கொண்டிருக்கும்போது ஏடுதான் என்ன செய்யும்? எழுதுகோல்தான் என்ன செய்யும் என்பது பாவேந்தர் சிந்தனை. உலகத்து இன்பங்களையெல்லாம் தன் கள்ளங் கபடமற்ற சிரிப்பால் கொள்ளை கொள்ளும் மழலையின் சிரிப்புக்கு முன்னே உலகத்து உயிர்களைக்கவனிக்கவே நேரமில்லை முத்துசாமிக்கு! தாய்மொழிவழிக்கல்வி பாவேந்தர் சிந்தனையை ஆக்கிரமித்துக் கொண்டதைப்போல மழலையின் சிரிப்பு முத்துசாமியின் இதயத்தை ஆட்கொண்டது. கவிஞர்கள் ஒரே மாதிரிதான் சிந்திக்கிறார்கள்.

    நிறைவுரை

    நகல் எடுப்பது என்பது வேறு. தாக்கம் என்பது வேறு. முன்னது போலித்தனம். பின்னது மரபுவழிப் பயணம். முன்னது அறிந்து செய்வது. பின்னது தானே படிவது!. சமுதாய நிகழ்வுகளிலும் இயற்கை அசைவுகளிலும் மனம் பறி கொடுக்காத எவரும் கவிதையாக்கத்தில் வெற்றி பெற இயலாது. பாவேந்தரும் முத்துசாமியும் இயற்கையில் மனம் பறிகொடுத்தவர்கள்.  அவருள் ஒருவருக்கு இனப்பற்று மிகுந்திருந்த காரணத்தால் இயற்கையின் வேண்டுகோளை நிறைவேற்ற இயலவில்லை. மற்றவருடைய மனம் மழலையில் இலயித்துப் போனதால் இயற்கையைக் கவனிக்க நேரமில்லை. இரண்டு கவிஞர்களும் இயற்கையை முன்னிறுத்தித் தாம் சொல்ல வந்த கருத்துக்களைக் கவிதையாக்கியருப்பதுதான் சிந்திக்க வேண்டியது. இயற்கை சங்க இலக்கியங்களைப் பாதித்தது. பின்னாலே பாவேந்தரைப் பாதித்தது. அதற்கும் பின்னாலே முத்துசாமியைப் பாதித்திருக்கிறது!. இந்தப் பாதிப்புக்களைப் பாவேந்தர் சமுதாயச் சிக்கலோடும் முத்துசாமி மழலையோடும சார்த்திப் பாடியிருக்கிறார்கள். முத்துசாமியின் முகநூல் பதிவு  என்னைப் பாவேந்தர் பக்கம் அழைத்துச் சென்றது. இயற்கை அவர்களை அழைத்தும் அவர்கள் கவனிக்கவில்லை. இயற்கையைப் போற்றிப் பாடினாலும் இனிக்கிறது! அதனை மறுதலித்துப் பாடினாலும் இனிக்கிறது!  கனத்த இதயத்திற்குக் கருணை காட்ட இவற்றைவிட வேறு என்ன வேண்டும்!

    (தொடரும்)

    Share
  • குறளின் கதிர்களாய்…(478)

    குறளின் கதிர்களாய்…(478)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்…(478)

    துறந்தார்குந் துவ்வா தவர்க்கு மிறந்தார்க்கு
    மில்வாழ்வா னென்பான் துணை.

           – திருக்குறள் –42 (இல்வாழ்க்கை)

    புதுக் கவிதையில்…

    துறவு வாழ்க்கை மேற்கொண்டோர்க்குத்
    துணையாய் இருந்தே
    வேண்டுவன செய்வதாலும்,
    வறுமையில் வாடுவோர்க்கு
    உணவு போன்றவை வழங்கி
    உதவுவதாலும்,
    இறந்தோர்க்கு
    இவ்வுலகில் நீர்க்கடன்
    போன்றவை செய்வதாலும்,
    இவர்களுக்கு
    இல்லறத்தில் வாழ்பவன்
    என்பவன்
    ஏற்ற துணையாவான்…!

    குறும்பாவில்…

    துறவு வாழ்வில் உள்ளோர்க்கும்
    வறுமையில் வாழ்வோர்க்கும், இறந்து பேர்னோர்க்கும்
    இல்லறத்தான் என்பவனே துணை…!

    மரபுக் கவிதையில்…

    துறவில் வாழ்வைக் கழிப்போர்க்குத்
         துணையாய் இருந்தே உதவலாலும்,
    உறவு போல வறியவர்க்கே
         உற்ற உதவி செய்வதாலும்,
    இறந்து போன மாந்தர்க்கே
         எள்நீர்க் கடன்கள் ஆற்றலாலும்,
    அறமாம் இல்வாழ் வதிலுள்ளோன்
         ஆவான் இவர்க்குத் துணையெனவே…!

    லிமரைக்கூ…

    வாழும் பெரியோர் துறவில்,              
    வறுமையில் நலிந்தோர், இறந்தோர் இவர்களுக்கு
    இல்லறத்தான் துணையாமே உறவில்…!

    கிராமிய பாணியில்…

    பெரும மிக்கது
    இல்லறம்தான்,
    பெறருக்கு ஒதவுற
    பெரும மிக்கது
    புருசன் பொஞ்சாதியா
    சேந்து வாழுற இல்லறம்தான்..

    ஓலகத்தில
    தொறவு வாழ்க்க வாழுறவுங்களுக்குத்
    தொணயாயிருந்து ஒதவுறதாலயும்,
    இல்லாதவனுக்கு வறும தீரக்
    குடுத்துக் காப்பாத்துறதாலயும்,
    எறந்து போனவனுக்கு
    நீர்க்கடமயெல்லாம் செய்யிறதாலயும்,
    இவுங்களுக்கெல்லாம்
    சரியான தொண
    இல்லறத்தில இருக்கவன்தான்..

    அதால
    பெரும மிக்கது
    இல்லறம்தான்,
    பெறருக்கு ஒதவுற
    பெரும மிக்கது
    புருசன் பொஞ்சாதியா
    சேந்து வாழுற இல்லறம்தான்…!

    Share
  • கற்பகதரு என்னும் அற்புதம் (அங்கம் – 6)

    கற்பகதரு என்னும் அற்புதம் (அங்கம் – 6)

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா 

    இரண்டு தாத்தாக்களை நாங்கள் மறந்துவிட முடியாது. ஒருவர் எங்கள் ஈழத்தவரான தங்கத் தாத்தா சோமசுந்தரப்புலவர். மற்றவர் தமிழ் நாட்டினைச் சேர்ந்த உ.வே.சா என்று அழைக்கப்படும் உத்தமதா னபுரம்  வேங்கட  சுப்பையர் சாமிநாத ஐயர் அவர்கள். ஈழத்துத் தாத்தா கற்பகதருவாம் பனைக் கென்றேதாலவிலாசம்“  பாடிப் பனையினை வியந்து நின்றார். பனையின் ஓலையினை எங்கள் தங்கத் தாத்தா………

         ஐந்து வயதினிற் கையி லெடுக்கின்ற
                    வரிவரி யேடு முதலாக
         முந்து பலகலை யாகம மோலையில்
                 முன்ன மெழுதினார் ஞானப்பெண்ணே

    என்று பனை ஓலையின் பிறப்பாகிய எங்களின் ஓலைச் சுவடிகளை மனமிருத்தும் வகையில் பாடிப் பதித் ருக்கிறார். இந்தியத் தாத்தாவோ பனையின் கொடையான பனை ஓலையால் அமைந்த ஏடுகளை ஊரூராய்ச் தேடிச் சென்று எமக்களித்து உயர்ந்து நிற்கிறார்.

    எங்கள் முன்னோர்கள் மெஞ்ஞானத்திலும் உயர்ந்து நின்றார்கள். விஞ்ஞானத்திலும் உயர்ந்தே இருந்தி ருக்கிறார்கள். அவர்களின் அருமையான ஒரு தெரிவுதான் கற்பகதருவாய் பனையினை எடுத்தது எனலாம். பனையின் சாதாரண ஓலையினை உற்று நோக்கி அதனை சிந்தனைகளைப் பதிவிடும் ஒன்றாக மாற்றிட நினைந்தமையை வியக்காமல் இருந்திட முடியுமா! அவர்களிடம் தோன்றிய அந்தச் சிந்தனை அறிவியலின் விளைவு என்றுதானே கொள்ள முடிகிறது. குறைந்த செலவில் நிறைந்த பயனையுடைய அவர்களின் தேடலும் , அதற்காக அவர்களின் நாடலுமாகிய நிலையினை எண்ணி எண்ணி வியந்து நிற்கிறோம் அல்லவா!எத்தனையோ வகை இருக்கஎத்தனையோ மரமும் இலைகளும் இருக்க பனையின் இலையை அதாவது அதன் ஓலையினை எப்படித்தான் தேர்ந்தெடுத்தார்களோ தெரியவில்லை. அந்தத் தெரிவினால் எங்களுக்கு சிந்தனைச் செல்வங்களும் கிடைத்தன. கற்பகதருவாம் பனையும் எங்கள் வாழ்வியலுடன் இணைந்து போயும் விட்டது என்பதைக் கருத்திருத்துதல் கட்டாயமாகும்.

    பனை மரங்களில் நிறைய வகைகள் உண்டு.  எல்லாப் பனைகளது ஓலைகளும் ஏட்டுக்குப் பொருத்தமாய் அமைந்திருப்பதில்லை. தாளப்பனை  கூந்தல்பனைலாந்தர்பனை  போன்ற பனை மரங்களினது ஓலை களே  ஓலைச்  சுவடிகள் செய்ய ஏற்றனவாக அமைந்தன என்று அறிய முடிகிறது. பழுப்பு நிறம் கொண்ட ஓலைகளையே ஓலைச்சுவடிகள் தயாரிக்கத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். பொருத்தமான பனை ஓலைகளைத் தேர்ந்தெடுத்த பின்னர் – சுவடிகள் தயாரிப்பதற்கு – முதலில் பனை ஓலைகளைத் தேவையான அளவில் கத்தரித்துக் கொள்வர். இவ்வாறு கத்தரிக்கப்பட்ட ஓலைகள் மிக நன்றாக உலர்த்தப்படும். ஈரமின்றி நன்றாகக் காய்ந்த பிறகு இவ்வோலைகள் தண்ணீரில் இட்டு வேகவைக்கப்படும். இவ்வாறு இவை கொதிக்க வைக்கப்படுவதால் ஓலைகளில் ஒரு இலகுத்தன்மை ஏற்படுகிறதாம். பிறகு ஓலைகள் மறுபடியும் நன்கு காயவைக்கப்படும்காய்ந்த பிறகு கனமான சங்கு அல்லது மழுமழுப்பான கல்கொண்டு ஓலைகளை நன்றாகத் தேய்ப்பார்கள். இப்படிச் செய்வதால் எழுதுவதற்குத் தயாரான ஓலைகள் அதாவது ஏட்டுக்கு ஒரு பளபளப்பு ஏற்படும். மேலும் நேராகத் தகடுபோலவும் ஆகிவிடும். இவ்வாறு பதப்படுத்தப் படுவதனால்  ஏடு எழுதுவதற்கு ஏற்ற நிலையை அடைந்து விடுமாம். வேறு ஒரு முறையும் இதில் இருக்கிறது என்றும் அறிய முடிகிறது. அதாவது  ஓலையின்மீது  நல்லெண்ணெய் பூசி ஊற வைப்பார்களாம். இவ்வாறு செய்வதை ஓலை வாருதல்” என்று அழைத்தார்கள். குறிப்பிட்ட பனை ஓலைகளைப்  அதாவது பதப்படுத்திய ஓலைச் சுவடிகளை ஒரே அளவில் வெட்டிய பிறகு அவற்றை ஓன்று சேர்த்து இடது பக்கம் கயிறு கட்டுவதற்காக ஓட்டை போடுவார்கள். அதில் மஞ்சள் தடவிய கயிறாய் கோர்த்து ஏடுகள் விழாமல் கட்டுவார்கள். கயிற்றின்  மேல்முனையில் துளையிட்ட   செப்புக்காசினை  வைத்து விடுவார்கள். ஓலைச் சுவடியின் நீளம் அதிகமாக இருந்தால், வலது பக்கமும் ஒரு துளையிட்டு அந்த  துளையில் இரும்பினால் ஆகிய கம்பியால் சேர்த்துக் கட்டுவார்கள். இதனை ‘நாராசம்’ என் று பெயர் சொல்லி அழைத்தார்கள். 

    பனை ஓலைகளால் ஆகிய சுவடிகளை ஒன்றாக இணைக்கும் பொழுது அவற்றின் ஆரம்பத்திலும் முடிவிலும் அதாவது ஓலைச்சுவடிகளின் இருபக்கமும் தேக்கு மரத்தால் ஆன பலகையை சேர்த்து கட்டுவார்கள். ஓலைகள் பாதுகாப்பாய் இருப்பதற்கும் குலைந்து போகாமல் ஒழுங்காய் இருப்பதற்கும் இவ்வாறு எமது முன்னோர்கள் செய் திருக்கிறார்கள். நூல்களை அச்சடிக்கும் இக்காலத்தில் முன்னட்டை பின்னட்டை நூலுக்குப் பாதுகாப்பாய் இருப்பது போல் பலகையினைக் கட்டுவது இருந்திருக்கிறது. அக்காலத்தில் ஏட்டின் முன்னும் பின்னும் பலைகையினைக் கட்டியதுதான் இக்காலத்தில் நூல்களின் பின்னும் முன்னும் அட்டைகளை கட்டுவதற்கு வழி சமைத்திருக்கலாம் என்றும் எண்ண முடிகிறதல்லவா! முன்னோர்களின் சிந்தனை அறிவியல் மயமாய் இருந்தே இருந்திருக்கிறது என்பதை ஒவ்வொரு செயல்களாலும் நாம் கண்டு பெருமைப்படவைக்கிறது ! 

    பனை ஓலையினால் ஆகிய ஓலைச்சுவடிகளில் எழுதுவது என்பது இலகுவான காரியம் அல்ல. ஓலையில் எழுதுவதற்கு ஏற்றது எது என்று எண்ணி அதற்கான ஒரு கருவியையும் கண்ட எங்கள் முன்னோரை வியக்காமல் இருக்கவே இயலாது.   ஓலையில் எழுதுவதற்கென்று வடிவமைக்கப்பட்ட கருவியே எழுத்தாணி ஆகும். இதனைக் கொண்டே பனை ஓலைகளினால் தயாரிக்கப்பட்ட சுவடிகளில் எழுதினார்கள். எழுதிக் குவித்தார்கள் எனலாம். பொதுவாக இது இரும்பினால் செய்யப்பட்டதாக இருக்கும்.  ஆனால்  அரசர்களும் வசதி படைத்தவர்களும் தங் கம்வெள்ளிதந்தம்  போன்றவற்றில் செய்த எழுத்தாணிகளை வைத்திருந்தார்கள் என்றும் அறிய முடிகிறது. தந்தம் என்றவுடன் எங்களுக்கு விநாயகப் பெருமானே வந்து நிற்பார். பனை ஓலை ஏட்டுக்கும் விநாயகப் பெருமானுக்கும் ஒரு இணைப்பு இருக்கிறது. கிறித்துவுக்கு முன் எழுந்ததுதான் வியாசரது மகாபாரதம். அந்தப் பாரததத்தை வியாசர் சொல்லச் சொல்ல விநாயகப் பெருமானே எழுத்தாணி கொண்டு எழுதினார் என்பது வழங்கிவரும்  ஒரு செய்தியாகவே இருக்கிறது. வியாசர் வேகமாக கதையினைச் சொல்லி வரும்போது – எழுதிய எழுத்தாணி முறிந்து விட – விநாயகப் பெருமான் கதை இடையில் நின்று விடக்கூடாது என்று எண்ணி – தன்னுடைய ஒரு கொம்பினை அதாவது தந்தத்தை ஒடித்து பாரதக் கதையினை எழுதினார் என்பது மரபாய் நீண்ட காலம் இருந்து வருகிறது. இங்கு முக்கியமாய் மனமிருத்த வேண்டியது தந்தினாலும் எழுத்தாணி கொண்டு பனை ஓலைச் சுவடிகள் எழுதப்பட்டிருக்கின்றன என்பதே ஆகும். அத்துடன் மிகவும் தொன்மையான அதாவது பாரதக் கதையினை எழுதுவதற்கும் எங்கள் கற்பகதருவாம் பனையின் ஓலைகள் துணையாக இருந்திருக்கின்றன என்னும் செய்தியும் எனலாம். எழுத்தாணி மூலம் எழுதப்பட்ட ஓலைகளில்,  மஞ்சள்,  விளக்குக்கரிகோவை  இலைச்சாறு, ஊமத்தை இலைச் சாறு –போன்ற வற்றில் ஏதாவது ஒன்றை பூசியிருக்கிறார்கள்.ஏனென்றால்  சுவடியில் உள்ள எழுத்துக்கள் தெளிவாக தெரியவருவதற்காகவாம்.எங்களின் முன்னோர்களின் அறிவியல் முறைமையினை இங்கு கண்டு தெளிகிறோம் அல்லவா !

    தற்காலத்தில் காகிதத்தில் அச்சடிக்கும் முறை வந்துவிட்டது. ஆயிரக்கணக்கில் பல நூல்கள் குறிப்பிட்ட மணி நேரத்தில் அல்லது நாளில் எங்களின் கைகளுக்கு வந்துவிடும். அதே வேளை அந்த நூல்களுக்கான நகல்களையும் இலகுவாகப் பெற்றிடவுமான வாய்ப்பும் இன்று எமக்குக் கிடைத்துள்ளது. ஓலைகளில் எழுத் தாணி கொண்டு எழுதப்பட்ட பல நூல்களையும் அக்காலத்தில் பிரதிபண்னும் நிலையும் காணப்பட்டது என்பதையும் அறிந்து கொள்ள முடிகிறது. சுந்தரமூர்த்தி நாயனாரைத் திருமணம் செய்யவிடாமல் எம்பெருமான் கிழப்பிராமண வடிவத்தில் வந்து வாதங்கள் செய்துதடுத்தாட் கொண்டார் என்பதைப்  புராணத்தால் அறிகிறோம். சுந்தரரும் அவர் வழி வந்தவர்களும் தனக்கு அடிமை என்று சபையில் கூறி அதற்கான ஆதாரமாக தன் மடியில் இருந்த ஓலையினைக் காட்டுகிறார். கிழப்பிராமணர். அந்த ஓலையினை எட்டிப்பறித்து சுந்தரர் கிழித்து விடுகிறார். அப்பொழுது அந்தக் கிழப்பிராமணர் “நீ எப்படியும் இந்த மூல ஓலையைக் கிழிப்பாய் என்று தெரிந்தே நான் இதன் நகல் ஓலையினையும் கொண்டு வந்திருக்கிறேன்” என்று சபையில் நகலினைக் காட்டி சுந்தரரை ஆட் கொண்டார் என்று புராணத்தால் அறிகிறோம். இங்கு முக்கியமான செய்தி என்ன வென்றால் மூல ஓலைக்குப் படி ஓலை எடுக்கும் வழக்கமும் இருந்திருக்கிறது என்பதேயேயாகும். நூல்களைப் பல பிரதிகள் அச்சடிப்பது போல அன்று மூல ஓலைச் சுவடிகளில் இருந்து அதை பிரதி எடுத்து எழுதும் முறையும் இருந்திருக்கிறது. அவ்வாறு எழுதுவதற் கென்றே தனியாக  எழுத்தாளர்களும் இருந்திருக்கிறார்கள். 

    அப்படியான –  அவர்கள் வாழ்ந்த தெருவுக்கு எழுத்துக்காரத் தெரு என்று பெயரும் வைக்கப்பட்டிருக்கிறது. இப்படி நகல் எடுப்பவர்கள் அந்தச் சுவடிகளின் கடைசி வரியின் கீழ் கையெழுத்திட்டு தமது பெயரையும்ஊரையும் எழுதி இருந்தார்கள் என்பதையும் அறிகின்றோம். நகல் எடுப்பவர்கள் பலர் இருந்த படியால்த்தான் முன்னோர்களின் பல ஏட்டுச் சுவடிகளை அச்சடித்த நூலாக்கி நாங்கள் எங்களின் அறிவினை அகலமும் ஆளமும் ஆக்கிட முடிகிறது என்பதையும் கருத்திருத்தல் அவசியமேயாகும். இன்னு மொரு செய்தியையும் இங்கு நாம் பார்த்திட வேண்டும். அதாவது-ஓலை எழுதுவதையே தொழிலாகக் கொண்டோர் தமிழ் மண்ணில் வாழ்ந்திருக்கின்றார்கள். அவர்களுக்கு முறையாக ஊதியமும் வழங்கப் பட்டும் இருக்கிறது. இவர்களுக்கு வழங்கப்பட்ட ஊதியத்தைக் குறிக்க ஓலைக்காசுஓலை எழுத்துப் போறு, போன்ற சொல்லாடல் பயன்படுத்தப்பட்டிருப்பதாக பிற்காலச் சோழர் காலத்திய கல்வெட்டுகள் வாயிலாக அறியக்கிடக்கிறது. பழம் பெரும் சொத்துக்களாய் அமைந்திருக்கும் பனை ஓலையினால் ஆன ஏடுகளைப் பக்குவமாய் பேணிக் காத்திட எங்கள் முன்னோர்கள் கோவில்களையும்,   அரண்மனை களையும்,   மடங்களையும்அருங்காட்சி அகங்களையுமே தேர்ந்தெடுத்தார்கள் என்பதும் மனங்கொள்ளத் தக்கதாகும்.

    தமிழர்களின் எழுத்து மரபுக்குத் தனித்துவமான குணமுண்டு. அது பனை தந்த விழுதுகளால் வேர்விடத் தொடங்கியது. பனை ஓலைகள் தமிழர்  வரலாற்றைத்  தாங்கி நின்ற அரண்களாகி இருக்கின்றன அல்லவா ! ஆதித் தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட ஏடுகள் பனை மர ஓலைகளே என்பதும் கற்பதருவுக் கான பெருமை அல்லவா !  மன்ன ராட்சி கால நிகழ்வுகளை விளிக்குமிடத்து மன்னர்களுக்கும் அமைச்சர்களுக்குமிடையே நடைபெறும் உரையாடல்களின் போது ஓலை என்கின்ற சொல்லாட்சி இடம் பெற்றி ருப்பதையும் அறிய முடிகிறது. சங்க இலக்கியங்களான அகத்திணை,  கலித்தொகைஅகநானூறு,  நவ நீதிப்பாட்டியல் போன்றவைகளில் “ஓலையைக் குறிக்கும் சிறப்புப் பெயர்கள் இடம் பெற்றிருப்பதும் நோக்கத்தக்கதாகும்.

    சங்க கால மக்களின் மரபார்ந்த அறிவுச் செழுமையைச் சமகாலத் திற்கு கைமாற்றிய ஊடகமாக கற்பக தருவாம் பனை விளங்குகின்றது என்பதும் கருத்திருத்த வேண்டியதே!. பனை ஓலைகள் இல்லாதிருந்தால் தொடக்க காலத்தில் புழக்கத்தில் இருந்த தமிழ் இலக்கணஇலக்கியங்கள் யாவும் புலவர்களின் நாவிலே தவழ்ந்து காற்றோடு கலந்தே போயிருக்கும்.

    பனை மரத்திலிருந்து பெயர்த்து எடுக்கப்பட்ட ஓலைக் கீற்றில் எடுத்த எடுப்பிலேயே எழுத்தாணி கொண்டு எழுத்தை எழுதிவிட முடியாது. எழுதுவதற்கு ஏற்ப ஓலைகளைப் பதப்படுத்தும் தொழில் நுட்பத்  தினைத் தமிழர்கள் அறிந்திருக்கிறார்கள். அருங்காட்சியகத்தில் ஓலைச் சுவடிகள் இன்றும் காட்சிப் படுத்தப்படுவதற்கு பதப்படுத்தல் சார்ந்த நுட்பமும் காரணமாகும். ஓலைகளை எழுத்தாணி கொண்டு எழுதுவதற்கு ஏற்றாற்போன்று தயார்ப்படுத்துவதற்கு “ஏடு பதப்படுத்துதல்‘ என்கின்ற தொழில் நுட்பத்தினைக் கையாண்டிருக்கின்றார்கள் எங்களது முன் னோர்கள் என்பது வியப்பாய் இருக்கிறதல்லவா ! அரேபிய நாட்டைச் சேர்ந்த பயணி அல்புருணி என்பவர் 1030இல் தென் இந்தியாவுக்கு வருகை தந்தபோது எழுதிய பயணக்குறிப்பில் பனைமரம் குறித்தும் பனை ஓலையில் எழுதும் முறை குறித்தும் வியந்து எழுதியுள்ளார். கிறித்தவ மதத்தைப் பரப்பும் நோக்கில் இந்தியாவில் தரங்கம்பாடி என்னும் இடத்துக்கு கி.பி 1706 இல் வந்தவர்தான் சீகன்பால்கு என்னும் மத போதகராவர். இவர் தமிழை நன்கு கற்றார். ஜேர்மனியிலுந்து அச்சு யந்திரங்களை வரவழைத்து  ஏட்டில் இருந்த பல தமிழ் நூல்களை அச்சில் கொண்டுவந்து சேர்த்தார். அச்சிலே ஏற்றுவதற்கு இவர் பல தமிழ் ஏட்டுச்சுவடிகளைத் தனது கைகளால் தொட்டுப் பெருமிதம் அடைந் திருக்கிறார். தமிழர்கள் பனை ஓலையினைத் தேர்ந்தெடுத்து அதனை ஏடுகள் என்னும் முறையில் ஒழுங் கமைத்து அதில் எழுதியதையும்பராமரித் ததையும் கண்டு வியந்து மிகவும் பெருமைப்படக் கூறினார் என்றும் அறியமுடிகிறது. இப்பொழுது செய்திகளை அனுப்பிடப் பலவழிகளும்பல நிறுவனங்களும் இருப்பதுபோன்று – அக்காலத்திலும் இருந்திருக்கின்றன. அதாவது செய்தியினைத் தூதாக அறிவிப்பதில் பனையின் ஓலைகள் எந்தளவு முக்கியத்துவம் உடையனவாக விளங்கி இருந்திருக்கின்றன என்பதற்கு அக்கால நாட்டார் பாடல்கள் சான்றாகி இருக்கின்றன. இந்த வகையில் கி.பி நான்காம் நூற்றாண்டினைச் சேர்ந்த கல் வெட்டு ஒன்றினால் ஓலைதூது” முறை இருந்ததாய் அறிய முடிகிறது.  

    (வளரும்) 

    Share
  • வணிகர் வீரம் உரைக்கும் கல்வெட்டுகள்

    வணிகர் வீரம் உரைக்கும் கல்வெட்டுகள்

    சேசாத்திரி ஸ்ரீதரன்

    பண்டைய காலத்தில் எல்லாப் பொருளும் ஒரே இடத்தில் கிடைப்பதில்லை என்பதால் செல்வர்களும் அரசர்களும் பொருள் கிடைக்கும் இடத்திற்கு ஆளை அனுப்பி பொருளை தருவித்துக் கொண்டனர். பொருள் கொண்டு வந்து கொடுக்கும் ஆளை  “அர்ஈதன்” இதாவது, பொருள் கொண்டு போய் கொடுப்பவன் (delivery man) என்றனர். இந்த அர்ஈதன்கள் (அர் – பொருள்; ஈதன் – கொடுப்பவன்) கால ஓட்டத்தில் தாமே பொருள்களை கிடைக்கும் இடத்தில் வாங்கி தேவைப்படுவோருக்கு இன்னொரு பொருளுக்கு மாற்றாக விற்று வந்தனர். இவ்வாறான வினையில் ஈடுபட்டோர் இதனால் வணிகர் எனப்பட்டனர். தமிழ் பிராமி கல்வெட்டுகள் “அரிதன்” என்று குறிப்பது பொருள் கொண்டு போய் கொடுப்பவர்களையே ஆகும். இந்த வணிகரால் செல்வர், அரசர் மட்டும் இன்றி இனி எளிய மக்களும் தொலைவில் கிடைக்கும் பொருள்களை எளிதில் வாங்கி நுகர முடிந்தது. இப்படி ஒரு இடை மனிதராக (middle man) உருவானவரே வணிகர். அர்ஈதனாக இருந்த போது கொண்டு கொடுப்பதற்கு கூலி மட்டுமே பெற முடிந்தது ஆனால் வணிகர் ஆன போது செல்வச் செழிப்பில் மிதந்தனர். வாழ்க்கைத் தரம் உயர்ந்தது. ஆனால் அவர் தொழிலுக்கு கேடாக ஆறலைக் (ஆறு – வழி, அலை – திரியும்) கள்வர் என்னும் வடிவில் நாட்டுக் கிழார்கள் (knight), வேள் (duke) என்னும் அரசர்கள் வணிகரைக் கொன்று அவர் பொருளைக் கவர்ந்து கொண்டனர். இதனால் தம் உயிரையும் பொருளையும் காக்க வணிகர் குழுவாக செயற்பட்டு தமக்கென ஒரு தனி படையையே (private army) கட்டிப் பேணினர். இதற்கு ஆகும் செலவை வணிகர் குழுக்கள் பகிர்ந்து கொண்டன. இதற்கு சான்றாக வணிகர் பலர் போர் வீரராக உயிர் நீத்த வரலாறு கல்வெட்டுகளில் பதிவாகி உள்ளன. இத்தகைய வணிகர் படையை வேந்தர்களும் அவ்வப்போது கூலிப்படையாக துணை கொண்டுள்ளனர். இப்படி வணிக வீரர் ஈட்டித் தந்த வெற்றிக்கு கைமாறாக எட்டி, காவிதி ஆகிய பட்டங்களை வேந்தர் வணிகருக்கு வழங்கினர். எட்டி என்ற உயர்ந்தோன் என்ற சொல் பின்பு சகர முன்மிகை பெற்று “செட்டி” ஆனது. இனி வணிகர் குறித்த கல்வெட்டுகளுக்கு விளக்கம்.

    திருப்பூர் மாவட்டம் ஆலங்காயம் வட்டம் ஏழுமலை என்னும் ஏலகிரி குண்ட்ரெட்டியூர் மலைச்சரிவில் உள்ள தென்னந்தோப்பில் காணப்படும் 6 வரி & 16 வரி நடுகல் கல்வெட்டுகள்

    1. சகரை யாண்டு தொள்ளாயிர தொ
    2. ன்றாவதில் மிலாட்டு பாகனூருடைய ப 
    3. கழன் சாத்த பிரானாகி காவூர் செட்டி 
    4. எருமைத் தொறுக்  கொள பூ 
    5.  _ _ _  கைக்க
    6. ளன் பட்டார் 

    சாத்த பிரான் – வணிகர் தலைவன்; தொறு – மந்தை;

    விளக்கம்: 10 ஆம் நூற்றாண்டு 979 இல் வெட்டப்பட்ட கல்வெட்டு. மேலை கங்கர் – சோழரிடையே போரின் காரணமாக இப்பகுதி அவ்வப்போது ஆட்சி மாறி இருக்க வேண்டும் போல தோன்றுகிறது. இதனால் வேந்தர் பெயர் குறிக்காமல் சக ஆண்டு 901 என்று குறிக்கப்பட்டது. மிலாடு நாட்டின் பாகனூருடைய புகழன் வணிகர் தலைவனாகிட (சாத்த பிரான்) அவனது ஆள் காவூரில் வாழும் செட்டி எருமை மந்தையை கொள்ளையிட அப்போது நடந்த பூசலில் கைக்களன் வீர சாவடைந்தான்.  அவனுக்கு இந்நடுகல் நடப்பட்டது. தொடக்கத்தில் தமக்கென படை பேணிய செட்டிகள் பின்பு இடையில் அரசர் நிதி உதவியின்மையால் பிறர் செல்வங்களைக் கவர ஆறலை கள்வர்கள் போல செயற்பட்டது இதில்  தெரிகிறது.    

    ஸ்ரீ சகர யா / ண்டு தொள் / ளாயிர / த்து ஒன்றா / வது எயிலு / டைய மாணிக் / க சட்டன் துக்/ கையனாகி   பி / ருதி ராமசெட் / டி தம்பி  குண / ராமனாகிய  எரி / யும் வீரசெட்டி ஐ / யம் புழுகூர் நாட் / டு எருமை தொறுக் / கொள்ள _ __ / ம் மெதிச்சுமாந்  

    விளக்கம்: 10 ஆம் நூற்றாண்டு 979 இல் வெட்டப்பட்ட கல்வெட்டு. மேலை கங்கர் – சோழரிடையே போரின் காரணமாக இப்பகுதி அவ்வப்போது ஆட்சி மாறி இருக்க வேண்டும் போல தோன்றுகிறது. இதனால் வேந்தர் பெயர் குறிக்காமல் சக ஆண்டு 901 என்று குறிக்கப்பட்டது. எயில் நாட்டு மாணிக்கச் சட்டன் துக்கையனாகிய போது பிருதி ராம செட்டியின் தம்பி குணராமனாகிய சினம் கொண்ட (எரியும்) வீர செட்டி ஐம்புழுகூர் நாட்டின் (வாணியன்பாடி) எருமை மந்தையைக்  கொள்ளையிட மெதிச்சுமான் என்பவன் வீர சாவடைந்துள்ளான். 

    பார்வை நூல்: நடுகல் கல்வெட்டுகளும் சிற்பங்களும், தொகுதி I  பக்கம் 286 & 287. ஆசிரியர்: ச. கிருஷ்ணமூர்த்தி. வெளியீடு: மெய்யப்பன் பதிப்பகம்

    கிருஷ்ணகிரி மாவட்டம் சென்ன சமுத்திரம் மலையடிவாரத்தில் உள்ள மலையதிம்மன் கோயில் 9 வரிக் கல்வெட்டு

    1. சுவஸ்திஸிரி மனை_ _ _ த்த _ _ _ [கை]  
    2. சுரப்பாலமரசர் மகந் துக்கமரசர்கள் 
    3. உலோக்கமாணிக்க செட்டி கூ _ _ _ 
    4. முக்கித் தட்ட மினயர்த் தம்பி உலோ 
    5. க்கமாணிக்க செட்டி தன் அள பூசல் 
    6. போகி அளவை காத்து அமை
    7. கிலந் திரிகிலந்  முனைகிலந்
    8. அணிகிலந் இ[வீர]ங் கவா 
    9. லை 

    கூ(டு கு)முக்கி – மூங்கில் கூட்டை உடைத்து; தட்ட – கவர; அள – உப்பு; அமைகில் – அமராமல்; திரிகில் – நடமாடாமல்; முனைகில் – முயலாமல்; அணிகில் – மாற்று உடை பூணாமல்; கவா – இரண்டு குன்றுகள் கூடும் கவடு; ஆலை – கோவில் 

    விளக்கம்: 14 ஆம் நூற்றாண்டு கல்வெட்டு. அரசர் பற்றிய குறிப்பு ஏதும் இல்லை. கைசுரப்பாலமரசர் மகன், துக்கமரசர்கள் ஆகியோர் உலோக மாணிக்க செட்டியின் உப்பு சேமித்த மூங்கில் கூடையை உடைத்து உப்பைக் கவர்ந்து கொண்டு போக  மீனவர்த் தம்பி  உலோகமாணிக்க செட்டி தன் உப்பை மீட்க சண்டையில் போய் உப்பை மீட்டுக் காத்து தனக்கு மருத்துவம் கூட மேற்கொள்ளாமல் உட்காராமல், எங்கும் நகராமல், முனைப்பு ஏதும் காட்டாமல், மாற்று உடை அணியாமல் அப்படியே இருந்தபடி இருந்து இறந்து போனான். இந்த வீரனுக்கு மலை கூடும் இடத்தில் ஆலயம் அமைக்கப்பட்டது.

    “மீனவர் தம்பி” என்பது  மினயைர்த் தம்பி என்று பிழையாக தட்டச்சு செய்யப்பட்டுள்ளது. அச்சாகும் முன் இன்னொருவரை கொண்டு பிழை சரிபார்த்த பின் அச்சுக்கு அனுப்ப வேண்டும். உப்பு வணிகம் மீனவரே மேற்கொள்வது என்பதை வைத்து பிழையை ஊகிக்க முடிந்தது. உலோக மாணிக்கம் மீனவச் செட்டியார் ஆவான். உப்பு வணிகர் கடற்கரையில் இருந்து நெடுந்தொலைவு சென்று கிருஷ்ணகிரியில் உப்பு விற்றதற்கு இக்கல்வெட்டு சான்றாகிறது.

    பார்வை நூல்: த நா தொ து வெளியீடு, கிருஷ்ணகிரி மாவட்ட கல்வெட்டுகள், பக்கம்  48

    தருமபுரி மாவட்டம் அரூர் வட்டம் கணப்பனூர் 7 வரி நடுகல் கல்வெட்டு

    1. ஸ்ரீ சிவமார பருமற்கு யாண்டு நாற்பத்தே 
    2. ழாவது கந்த வாணதி அரைசரு புறமலை நாடா
    3. ள அவர் மகனார் தெளிய நி[ஒ]ஆர் சேவகர் வாணிக
    4. ச்  சடைனார் வெட்டக்கியார் கூடல் [வந்துவிட] அவர் 
    5. மே ஆனயா
    6. டி நின்று செ
    7. ன்று பட்டார்   

    சேவகர் – படைத் தலைவர்;  ஆடி – போரிட்டு; நின்று – நிறுத்திவிட்டு

    விளக்கம்: மேலை கங்க வேந்தன் முதலாம் சிவமாரனின் 47 ஆம் ஆட்சி ஆண்டு கி.பி. 726 இல் அவருக்கு அடங்கி புறமலை நாட்டை கந்த வாண அரசர் ஆண்டு கொண்டிருந்த போது அவரது மகன் தெளிய நி[ஒ]ஆரின் படைத் தலைவர் வாணிகச் சடையனார் அரசன் வெட்டக்கியார் கூடல் ஊர் மீது படையெடுத்து வந்துவிட அவர் மேல் யானை மீது போர் புரிந்து நிறுத்திவிட்டு இளைப்பாறி பின் மீண்டும் போருக்கு சென்று வீரச்சாவடைந்தான் வாணிகச் சடையன். படைத் தலைவரான வணிகர்  சடையனார் வாணர் சார்பில் யானை மீது ஏறி போரிட்டுள்ளார் என்பது அவர் யானை ஏற்றப் போரில் நல்ல பயிற்சி பெற்றவர் என்பதை உணர்த்துகிறது.

    பார்வை நூல்: த நா தொ து வெளியீடு, தருமபுரி கல்வெட்டுகள் தொகுதி I, பக்கம் 7. எண் 1973 /  47

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டம் எல்காம் வலசு என்னும் ஊரில் கிட்டிய 13 வரிக் கல்வெட்டு இப்போது கோவை அகழ்வைப்பகத்தில் உள்ளது.

    1. ஸ்வஸ்திஸ்ரீ  தெந் க
    2. ரை நாட்டு நீலம்
    3.  பேரூர் னானாதேசி 
    4. திசை மடி எறி
    5.  யூர் எறிவீரபட்ட
    6. ணக் கல். அஞ்சு 
    7. கரை நாடும் 
    8. அடிக்கீழ் தளமு
    9. ம்  பதினெண்  வி
    10. ஷயமும் எம்மி
    11. லிசைந்தபடி மீதளத்தில்  நாலுவாசலி 
    12. ல் பட்டயார் வசம் நாலு காலும் சிங்காத
    13. னமும் உடையாராக 

    எறிவீர பட்டணம் – காவல் வீரருக்கு சிறப்பு உரிமை தந்து தங்குவதற்கான மனை கொண்ட வணிகர் ஊர்; மீதளம் – மேல் தளம், கண்காணிக்கும் கோபுரம்; நான்கு கால் – நான்கு சாவடி; பட்டாயர் – படை நோட்டகர்;  

    விளக்கம்: 14 ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டு என கருதப்படுகிறது. அரசர் ஆட்சி ஆண்டு குறிப்பு ஏதும் இல்லாத வணிகர் உடன்படிக்கைக் கல்வெட்டு. தென்கரை நாட்டு (தாராபுரம்) நீலம் பேரூரில் உள்ள நானா தேசிக வணிகரும் திசை ஆயிரத்து  ஐந்நூற்றுவரும் மடிஎறியூரில் நிறுத்திய காவல் வீரருக்கான தங்கும் மனையின் உடன்படிக்கைக்  கல்வெட்டு. ஐந்துக்கரை நாட்டு வணிகரும் அடிக்கீழ்த்தள வணிகரும் பதினெண் விஷயக் குழு வணிகரும் ஏற்படுத்திக் கொண்ட உடன்பாட்டின்படி கண்காணிப்பு கோபுரத்தில் நான்கு வாசலில் நிற்கும் படை நோட்டகர் வசம் நான்கு சாவடியும் சிம்மாசனத்தையும் கண்காணிக்கும் பொறுப்பை ஒப்படைப்பதாக உடன்பட்டனர். பல வணிகர் குழுக்கள் நிதி பங்களிப்பதால் இந்த உடன்பாடு தேவைப்பட்டது போலும்.

    பார்வை நூல்: த நா தொ து வெளியீடு, திருப்பூர் மாவட்ட கல்வெட்டுகள், பக்: 142 – 143

    கோயம்புத்தூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை வட்டம் கடத்தூர் ஊரில் அமைந்த மருதீசர் கோவில் கோபுர வாசல் இடது நிலைக் காலில் உள்ள 11 வரிக் கல்வெட்டு

    1. ஸ்வஸ்தி ஸ்ரீ  வீர 
    2. ராஜேந்திர தேவற்கு 
    3. யாண்டு பத்தாவ
    4. து கடற்றூர் வெ
    5. ள்ளாந் கள்ளந் ப
    6. றையந் நரவீரகே
    7. ரழச் சிலை செட்டி 
    8. இட்ட திருநிலை வாய் 
    9. முகவணை உ
    10. த்தரமும் திருக்க
    11. தவும் இட்டேந்   

    திருநிலை – கதவு நிலை; முகவணை – முகப்பு; உத்தரம் – விட்டம்  

    விளக்கம்: கொங்குச் சோழன் வீரராசேந்திரனின் 10 ஆம் ஆட்சி  ஆண்டு கி.பி. 1217 இல் கடத்தூர் மருதீசர் கோவில் நுழைவாயிலுக்கு கதவுத்  திருநிலைகள், வாயில் முகப்பு, விட்டம், கதவு ஆகியனவற்றை வெள்ளாளன், கள்ளன், பறையன், நர வீரகேரள சிலை செட்டி ஆகிய நால்வரும் செய்வதற்கு வேண்டிய பெரும் பொருள் உதவியும் பண உதவியும் நல்கினர். நான் அவற்றை செதுக்கிப் பொருத்தினேன் என்கிறார் சிற்பி. வெள்ளாளன், பறையன், கள்ளன், செட்டி ஆகிய நால்வரும் வணிகருடைய தனிப் படையில் (private army) இருந்ததால் நால்வரும் சேர்ந்து இந்த திருவாசலை கட்டியுள்ளனர். கட்டி முடிந்த பின் கோவில் உள்ளே சென்று சாமி கும்பிட்டுள்ளனர். இதனால் பறையர் தீண்டாமை அப்போது இருந்திருக்க வாய்ப்பில்லை என்பதை உணர முடிகிறது. மனுஸ்மிரிதிப்படி போர்த் தொழில் சத்திரியருக்கு மட்டுமே உரியது. ஆனால் அதை மீறி வணிகர் போரில் ஈடுபட்டதோடு அல்லாமல் அவர்ணரான பறையரையும் போரில் ஈடுபடுத்தி மனுஸ்மிருதியை அவமதித்துள்ளனர். அதே போல தமக்கு தராத உரிமையை மீறிப் போர்த்  தொழிலில் ஈடுபட்டு பறையரும் மனுஸ்மிருதியை அவமதிதுள்ளனர். அட என்ன இது இங்கே மனுஸ்மிருதியையே  வர்ணாசிரமத்தையே காணோமே? எங்கே ஓயாமல் மனுஸ்மிருதியை வசைபாடும் இந்த தலித்தியர், திராவிடர், கம்யூனிஸ்டுகள் இந்த விதிமீறலுக்கு விடைசொல்ல வருவாரா?

    பார்வை நூல்: த நா தொ து வெளியீடு, கோயம்புத்தூர் மாவட்ட கல்வெட்டுகள் தொகுதி -I, பக்கம் 190

    தருமபுரி மாவட்டம் அரூர் வட்டம் சுல்தானிப்பாடி (நரிப்பள்ளி) ஊரில் தனியார் கொள்ளையில் உள்ள 13 வரி நடுகல்

     _ _ _ / னார் மீய் / கொன்றை நாட்டு / மைற்றம்பள்ளி / மாம்கோடு பெரு / மக்கள் பறைகட் / டியாரு  பாப்பம் / பாடி எறிந் / து தொறு கொண்ட ஞான்று  / வாண இரவஞ்சி / பட்டான் / கொற்றன் காடன் / (நடுவித்த) கல்  

    விளக்கம்:  பல்லவன் சிம்மவிஷ்ணுவின் மூன்றாம் ஆட்சி ஆண்டு கி.பி. 557 இல் (தருமபுரி கல்வெட்டுகள் தொகுதி  I எண் 1974/63 பக். 19 இதே செய்தியை கூறுவதில் இருந்து அறிந்தது). மேல் கொன்றை நாட்டின் மைற்றம்பள்ளி மாங்கோடு ஊரில் உள்ள பறை கட்டியார் பாப்பம்பாடியை அழித்து கால்நடை மந்தையை கவர்ந்து சென்ற போது அப்போரில் வாண இரவஞ்சி என்பவன் வீர சாவடைந்தான். அவனுக்கு கொற்றன் காடன் நடுகல் நட்டுவித்தான். கட்டி என்பது கங்கருடைய பட்டப்பெயர். அதை ஊர் தலைவனான பறையன் ஒருவன் இங்கே தாங்கி உள்ளான். மேற்கண்ட கல்வெட்டிற்கு சான்றாக பறையர் தொறு பூசலில், போரில் பங்கு கொண்டது.

    பார்வை நூல்: பண்டைய தமிழ்ச் செவ்விலக்கியங்களும் நடுகற்களும், ர. பூங்குன்றன், பக்கம் 180 செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவன வெளியீடு.  

    தருமபுரி மாவட்டம் பால்வாடி ஊரின் கிழக்கேயுள்ள வேடியப்பன் கோயில் 2 வரிக் கல்வெட்டு

    ஸ்ரீ தகடூர் படையு ளெறிந்து /  பட்டார் பரைகளியனார் கல்  

    விளக்கம்:  இது வேந்தன் பெயர் குறிப்பில்லாத 8 ஆம் நூற்றாண்டு நடுகல் கல்வெட்டு. இது கால்நடைகளை கொள்ளையிட்ட சண்டை அல்ல, மாறாக தகடூர் படையுள் சீறிப்பாய்ந்து பகைவரை வெட்டி வீரசாவடைந்த பறையன் களியனின் நினைவில் நட்டுவித்த கல். பறையர் போரில் பங்குகொண்ட பதிவுடைய அரியதான கல்வெட்டுகளில் இதுவும் ஒன்று. 

    பார்வை நூல்: த நா தொ து வெளியீடு, தருமபுரி  மாவட்ட கல்வெட்டுகள், எண் 1973/127

    மன்னராட்சி என்றாலே பாகுபாடு (discrimination) தான். ஒரே படைத் துறையில் பணியாற்றிய பறையருக்கு பள்ளரைக் காட்டிலும் கூடுதல் சலுகைகள், சமூக உரிமைகள். இதனால் சில நூற்றாண்டுகள் கழித்து பறையருக்கும் பள்ளருக்கும் இடையே பிணக்கு, சச்சரவு மேலெழுந்தது. அதை காஞ்சிபுரத்திற்கு போய் கல்வெட்டு பார்த்து தெளிவுபடுத்திக் கொண்டனர். அதே போல பட்டடை (படைக்) குடிகளான கைக்கோளர், வாணியர் இடையே இந்த சலுகைகள், சமூக உரிமை குறித்து சர்ச்சை எழுந்தது. வாணியர் உடைத்த சலுகைக் கல்வெட்டை கைக்கோளர் மீண்டும் கல்வெட்டாக வெட்டிக் கொண்டனர். இது ஏனென்றால் அவரவர் இயலுமைக்கு தக்கபடி வாழலாம் என்று மன்னர்கள் உரிமை தரவில்லை என்பதால் தான். மன்னர்கள் இப்படி ஏற்படுத்திய படைத்துறைப் பாகுபாடு மன்னராட்சி ஒழிந்த பின்னும் சமூகத்தில் ஏற்றத் தாழ்வை நிலைப்படுத்தி விட்டது. நிலவுடைமை சாதிகளுக்கும் ஒடுக்கப்பட்ட சாதிகளுக்கும் இடையே நிலவும் இன்றைய சாதி ஏற்றத் தாழ்வுகளுக்கு மன்னராட்சியில் இருந்த பாகுபடுத்திய சலுகைகளே, சமூக உரிமைகளே காரணமாக உள்ளன. ஆனால் மன்னர்கள் ஏற்படுத்திய இந்த ஏற்றத் தாழ்வை இந்து மதம் தான் ஏற்படுத்தியது, சனாதன தர்மம் தான் ஏற்படுத்தியது, வர்ணாசிரம  மனுஸ்மிருதி தான் ஏற்படுத்தியது, பிராமணர் தான் ஏற்படுத்தினர் என்று அரசியலார் பொய் புகட்டி வெறுப்பை வளர்த்துவிட்டுள்ளனர் குறிப்பாக திராவிடர், தலித்தியர், கம்யூனிஸ்ட்டுகள் போன்றோர். இவர்கள் ஏன் ஆண்ட பரம்பரை என்போரை இதற்கு பொறுப்பாக்கவில்லை? கொங்குநாட்டில் இந்த தனி சலுகைகள், உரிமைகள் குறித்த கல்வெட்டுகள் ஆங்காங்கே அறியப்பட்டுள்ளன. கீழே அத்தகையதோர் கல்வெட்டு.
    https://www.vallamai.com/?p=90405

    https://www.vallamai.com/?p=109402

    கோயம்புத்தூர் மாவட்டம் அவிநாசி வட்டம் அவிநாசியில் கருணாம்பிகை  கோயில் அர்த்த மண்டப வடக்கு சுவரில் உள்ள  19 வரிக் கல்வெட்டு 

    1. ஸ்வஸ்திஸ்ரீ  திரிபுவந சக்கரவர்த்தி கோநேரிந்மை  கொண்
    2. டாந்  வட பரிசார நாட்டிற் பாப்பார் சாந்றாற்கு நம்மோலை குடு
    3. த்தபடியாவது இவர்கள்  நம் சரக்குக்குப் பொருள் வைத்தமை
    4. யில் இவர்களுக்கு நாம் குடுத்த வரிசையாவது மேலே
    5. ற்றமுந் துலாகமுங் கிழேற்றங் குதிரையிந் தழையுஞ் 
    6. சீனக்குடையுஞ் சேகண்டியும் பெற்று வருவார்களாக 
    7. வும்  மைச்சுக்கு சாந்திடப் பெறுவார்களாகவும் இரட்டை
    8. த்தலைக் கடைக்குக் கோற்  கட்டிக் கொள்ளப் பெறுவார்
    9. களாகவும்  படைக் கணிக்கு ஆரம் பூணப் பெறுவார்களாகவு
    10. ம் பச்சைப்பிடாம் போர்க்கப் பெறுவார்களாகவும் தங்
    11. கள்  மக்களுக்குப் பொந்நிந்  காறைக் கட்டப் பெறுவார்களா
    12. கவும் கல்லியாணத்துக்கு கட்டணங் கட்டி ஏறி ஊர்  
    13. சூழப்  பெறுவார்களாகவும். இவ்வரிசைகள்  இவர்கள் மக்கள் 
    14. மக்களுக்கு சந்திராதித்தவரை  செல்வதாகவும் இப்படி 
    15. செம்பிலுஞ் சிலையிலும் வெட்டிக் கொள்ளப் பெறுவார்களா
    16. கவும் நம்மோலை குடுத்தோம். இவை எல்லாம் வல்ல சோ
    17. ழ  மூவேந்த வேளாந் எழுத்து. யாண்டு பதிநஞ்சாவது  
    18. நாள் முந்நூற்றிருபத்திரண்டில். இப்படிக்கு வாண
    19. ராய தேவந் எழுத்து.          

    சான்றார் – அறவோர்; சரக்கு – கருவூலம்; வரிசை – சலுகை, உரிமை; மேலேற்றம் – மேலே சாயும்;  துலாகம் – ஏற்ற ஏணி, picotah; கிழ்ஏற்ற குதிரை – சேணத்தில் ஏறாத குதிரை; தழை – மயில்தோகை விசிறி; மைச்சு – சுவர்; கடைக்கோல் – இணைக்கும் கோல்; படைக்கணி – படுக்கும் கட்டிலின் கால், தலை தடுப்பு பலகைக்கு அழகிய பித்தளை,மரச் செதுக்கலை அணிவிக்கலாம்; பச்சைப்பிடாம் – போர்வை ; பொன் காறை – பொன் கழுத்தணி; கட்டணம் – சுமந்திடும் தோளி (doolie)

    விளக்கம்: கொங்குச் சோழன் வீர ராசேந்திரனின் 15 ஆம் ஆட்சி ஆண்டு கி.பி. 1222 இல் 322 ஆம் நாளில் இக்கல்வெட்டு வெட்டப்பட்டது. வடபரிசார நாட்டுப் (அவிநாசி) பார்ப்பனரான சான்றோர்க்கு சலுகைகள், உரிமைகள் அளிப்பதை இது சுட்டுகிறது. “இந்த பார்ப்பனர் என் கருவூலத்திற்கு பொருளாக வரி கட்டியதால் இவர்கள் பாசனத்திற்கு மேலாக சாயும் ஏற்ற ஏணியையும் (picotah), சேணத்தில் உட்காராத ஆனால் வண்டி இழுக்கும் குதிரையையும், பீலிவிசிறியும் சீனப்பட்டுக் குடையும், நன்மை தீமைகளுக்கு சேகண்டி இசையும் பயன்படுத்தலாம். சுவற்றுக்கு சுண்ணம் பூசிக்  கொள்ளலாம். இரட்டைக் கதவு வைத்து அதற்கு அடைக்கும் கோல் இடலாம். படுக்கும் கட்டிலில் தலைப்புறம் கால் புறம் உள்ள தடுப்பில் ஒப்பணையான பித்தளை, மர வடிப்புகளை பொருத்திக் கொள்ளலாம். பச்சைப்  போர்வை போர்த்திக் கொள்ளலாம். தம் பிள்ளைகளுக்கு பொன் கழுத்தணி அணிவிக்கலாம். திருமணத்தின் போது தோளி (doolie) கட்டி ஏறி ஊர்வலம் வரலாம். இந்த சலுகைகள், உரிமைகள் யாவும் இவர்தம் பிள்ளை, பேரப் பிள்ளை என்று தலைமுறை தலைமுறையாக சந்திர சூரியன் நிலைக்கும் காலம் வரை அனுபவிக்கலாம் என்பதை கல்வெட்டிலும் செப்பேட்டிலும் ஆவணமாக எழுதிக் கொள்ளலாம்” என்று ஆணை ஓலை கொடுத்தேன். இவை அனைத்தும் வல்ல சோழ மூவேந்த வேளாண் ஒப்புதல் எழுத்து. இப்படிக்கு வாணதேவ ராயன் ஒப்புதல் எழுத்து.

    இதன் மூலம் இந்த உரிமைகள் இதற்கு முன் பிராமணர்களுக்கு  வழங்கப்பட்டிருக்கவில்லை என்று அறிய முடிகிறது. இந்த உரிமைகள் படைத்தலைவர்கள், அரசர்கள் குடும்பத்தாருக்கு மட்டுமே இருந்து மெல்ல மெல்ல பிற சாதிகளுக்கு வழங்கப்பட்டு பொது மக்களுக்கு பரவலாக்கப்பட்டதை உணர முடிகிறது.  இப்படி வரி கட்டுவோருக்கு மட்டுமே சலுகை, உரிமை அப்படி காட்டாதவருக்கு ஏதும் இல்லை என்பது ஒரே சாதியில் ஏற்றத் தாழ்வை ஏற்படுத்தும் அல்லவா? வரி கட்டாதவரால் இந்த ஏற்பாட்டில் இயன்ற சிறு சலுகையை கூட அனுபவிக்க முடியாது. இதனால் Military rank order இல் உள்ள ஏற்ற தாழ்வை அப்படியே சமூகத்திலும் பரவவிட்டு விட்டது இந்த சலுகை என்ற முடிவிற்கே வரமுடிகிறது. கொங்கு நாட்டில் தான் இந்த நிலை என்று இல்லை சேர, சோழ, பாண்டிய நாடுகளிலும் இதே சமூக ஏற்ற தாழ்வு தான் நிலவி இருந்திருக்க வேண்டும். கொங்கு நாட்டை பல்லவர், மேலை கங்கர் ஆகியோர் கொங்கு சோழருக்கு முன் ஆண்டுள்ளனர். அவர் நாட்டில் இந்த உரிமைகள் முன்னமே இருந்திருந்தால் கொங்கு நாட்டிலும் இந்த உரிமையை அவர் ஆட்சியிலேயே வழங்கி இருப்பர். எனவே தொண்டை நாட்டிலும் கன்னட நாட்டிலும் கூட இந்த சலுகைகள் உரிமைகள் மக்களுக்கு இருந்திருக்கவில்லை.

    பார்வை நூல்: த நா தொ து வெளியீடு, கோயம்பத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள் தொகுதி-I, பக்: 5 – 6.

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் வேப்பூர் வாகீசுவரர் கோவில் தென் சுவர் 6 வரிக் கல்வெட்டு

    1. ஸ்வஸ்திஸ்ரீ ஸகல லோகச்சக்ரவத்தி இராசநாராயணன் வேப்பூர் உடையார்  வாகீஸ்வரம்  உடைய நாயனார் கோவில்த் தானத்தார்க்கு இன்னாயநார்க்கு ஆறாவது  
    2. ஆடி மாதம் முதல் திருமடை விளாகமாக சக்கிலி வாய்க்காலுக்கு வடக்கு மேற்பாற்கெல்லை  இவ்வாய்க்காலுக்கு கிழக்கும் வடபாற்கெல்லை  ஐய்யனுக்கு வாய்த்த விழுப்பரையன் வீடும் இத்தெரு
    3. வும் விட்ட கீழ்பாற்கு எல்லை பிடாரி கோயிலுக்கு மேற்கு இந்த நான்கு எல்லைக்கு  வுட்பட்ட நிலத்தில் ஏறும் பல காசாயக்குடி ஆன செட்டிகள், கைக்கோளர், வாணிகர், சேனையங்காடிகள், கோயிலங்காடிகள் செக்குக்குடி மக்கள் [மக்]கள்  மற்றும் ஏறும் பல 
    4. குடிகளுக்கும் செட்டிகள், கைக்கோளர்,  வாணிகர், சேனையங்காடிகள், கோயிலங்காடி, செக்குக்குடி மக்கள் இவர்கள் பேரால் பேர்க்கடமை, செக்குக்கடமை, தறிக்கடமை, நூலாயம், பட்டடை ஆயம், கற்றவட ஆயம் திருவிளக்கு மன்றாடிகள் பேர்க்கடமை,  பள்ளிகள் பேரால் விலைப்பண
    5. ம்  மற்றும் இப்பற்றில் கொள்ளும் ஆயமும் பல வரிகளும் சூல வரியும் பல உபாதியும் உட்பட ஸர்வ மாந்ய இறைஇலி ஆக சந்த்ராதித்தவரையும்  செல்ல பூசைக்கும் திருப்பணிக்கும் குடிஏற்றிக்  கொண்டு இன்னான்கு எல்லைக்கும் திரிச்சூல ஸ்தாபநம் பண்ணி கல்லிலும் செம்பிலும் 
    6. வெட்டிக் கொள்ளச் சொன்னோம். இன்னாள் முதல் இப்படி செய்து  ஸ்ரீ மாஹேஸ்வர ரக்ஷை  

    விளக்கம்: 14 ஆம் நூற்றாண்டு வண வேந்தர் இராசநாராயண சம்புவராயர் ஆட்சியில் வேப்பூர் வாகீசுவரர் கோவில் பொறுப்பாளர்களுக்கு நேரடியாக வேந்தனால் வழங்கப்பட இறையிலி அறிவிக்கை. வேப்பூர் வாகீசுவரருக்கு ஆடி மதம் ஆறாம் நாள் முதல் கோவிலை சூழ்ந்து குடியிருப்பு இடமாக ஆக்கிட சக்கிலி வாய்க்காலுக்கு வடமேற்கு பக்க எல்லையில் இந்த வாய்க்காலுக்கு கிழக்கும் வட பக்க எல்லையில் இறைவனுக்கு வாய்த்த விழுப்பரையனுக்கு வீட்டையும் அந்த தெருவைக்க கடந்து கிழக்கு பக்க எல்லையில் உள்ள பிடாரி கோவிலுக்கு மேற்கு வரையான இந்த நான்கு எல்லைக்கு உட்பட்ட நிலத்தில் குடியேறும் பல்வகை காசாக வரி செலுத்தும் குடிகளான செட்டிகள், கைக்கோளர், வாணிகர், சேனையங்காடிகள், கோயிலங்காடி, செக்குக்குடி மக்கள் குடியேறும் பல பிற மக்களில் செட்டிகள், கைக்கோளர், வாணிகர், சேனையங்காடிகள், கோயிலங்காடி, செக்குக்குடி மக்கள்  தரும் குடும்ப வரி, செக்கு வரி, தறிவரி, நூல் வரி, படை வரி, தென்னங்கயிறு வரி, கோயிலுக்கு நெய் தரும் இடையர் குடும்ப வரி, உழவர் குடும்ப விலைப்பணம், மேலும் இந்த ஊரில் வரும் பல வரிகள், சூலவரி, உபாதியும் சேர்த்து முழு மானிய இறையிலி ஆக சந்திர சூரியன் நிலைக்கும் வரை தொடர கோவில் பூசைக்கும்  விழாக்களுக்குக்கும் வேண்டி குடியேற்றிக்கொண்டு இந்த நான்கு  எல்லைக்கும் திரிசூலக்கல் நாட்டி இந்த ஆணையை கல்லிலும் செம்பிலும் வெட்டிக்கொள்ளலாம். இந்த நாள் முதல் இதை செய்து காப்பது மாகேசுவரர் கடமை ஆகும். இக்கல்வெட்டால் வேப்பூரில் செட்டியார்களின் குடியேற்ற ஊர் அமைந்ததை அறிந்து கொள்ள முடிகிறது.

    பார்வை நூல்: த நா தொ து வெளியீடு, தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் XXI வேலூர் மாவட்டக் கல்வெட்டுகள் தொகுதி III பக். 54 – 55

    நாமக்கல்  மாவட்டம் ராசிபுரம் பெருமாள் கோவில் முன்னுள்ள 22 வரிக் கல்வெட்டு

    ஸ்வஸ்தி ஸ்ரீ சகலகு / லம் வை / த்த கோ / இராஜ இரா / ச தேவற் / கு 14 வது / ஐப்பசி மாதம் 13 திய / தி  பல மண்டலத்து வீ / ர பெரு நிரவியாரோம் / இராசிபுரத்து ஊர் மன் / றத்து இவ்வூர் நகரத்தா / கு சமஸ்த சகல / சந்திராத்தித்தியம் உரித்தா / வதாக  வீரப்பட்டின / க்கல்ந் நாட்டிக்கு / டுத்தோம் பல / மண்டலத்து வீ / ர பெருநிரவியோ / ரோம் இது பல ம / ண்டலத்து நிர / வியார் /ரக்ஷை  

    விளக்கம்: எல்லாக் குலமும் வாழ