Blog

  • அட!

    அண்ணாகண்ணன்

    உலகம் மாறவே இல்லை
    என்பது உண்மை.
    உலகம் அடியோடு மாறிவிட்டது
    என்பதும் உண்மை.
    இரண்டும் வெவ்வேறு உலகங்கள்.

    பொழுது போகவில்லை
    என்பார் ஒருவர்.
    பொழுது பறக்கிறது
    என்பார் அடுத்தவர்.
    இரண்டும் சரி.
    இருவரின் பொழுதுகளும் வெவ்வேறு.

    அட,
    ஒரே ஆளே
    கடந்த நொடியில் ஒருவராகவும்
    இந்த நொடியில் இன்னொருவராகவும்
    இருக்கிறாரே!

    Share
  • அம்முவும் அப்பாவும்

    அம்முவும் அப்பாவும்

    எங்கள் முதல் முயற்சி. உங்கள் கருத்துகளை வரவேற்கிறோம்.

    கரு – ஹேமமாலினி லோகநாதன்

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 48

    தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 48

    புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள் 
    உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை 
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
    விளார் புறவழிச்சாலை, 
    தஞ்சை மாவட்டம் – 613006.
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    வைரமுத்து கவிதை உவமங்களில் மரபு

    முன்னுரை

    தற்காலத் தமிழ்க்கவிதை உலகில் சில கழிநெடிலடி ஆசிரிய விருத்தங்களை எழுதி வைத்துக்கொண்டு தன்னையொரு ‘மரபுப்பாவலர்’ என்று சொல்லும் போக்கு பெருகிவருகிறது. இத்தகைய போக்கு  உண்மையில் இரண்டு வகையில் நெடிய தமிழ்க்கவிதை மரபினைப் பாதிக்கிறது. ஒன்று மரபு என்பது யாப்பு மட்டுமல்ல என்னும் புரிதலுக்கு எதிராக அமைகிறது. இரண்டு உண்மையான தமிழ்க்கவிதை மரபுகளை மீட்டுருவாக்கம் செய்யும் பணி முற்றிலும் தடைபடுகிறது. மரபு பற்றிய நிலைப்பாடு இதுவெனின் புதுமை பற்றிய நிலைப்பாடு இன்னும் மோசமாக இருக்கிறது. ‘சொல்புதிது பொருள்புதிது சோதிமிக்க நவகவிதை’ என்னும் மகாகவியின் தொடர் எவ்வளவு தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என்பதைத் தற்காலத்தில் வெளியாகும் கவிதை நூல்கள் தெளிவாகக் காட்டுகின்றன. மரபின் வேர்களிலிருந்து பிறக்க வேண்டிய புதுமைப்பூக்களைத் தவிர்த்து இறக்குமதிச் சரக்குகளைப் புதுமை என எண்ணும் போக்கும் நிலவுகிறது. புதிய பேனாவில் புதிய தாளில் எழுதுவதெல்லாம் புதுக்கவிதை ஆகிவிடாது. இந்தப் பின்புலத்தில் வைரமுத்து கவிதைகளில் இயல்பாகவே ஊடுருவி நிற்கும் மரபிழைகளை இந்தக் கட்டுரை சுருக்கமாக ஆராய முற்படுகிறது.

    பொருளதிகாரத்தின் உள்ளடக்கம்

    எழுத்துக்கும் சொல்லுக்கும் இலக்கணம் வகுத்த தொல்காப்பியம் அச்சொற்களால் அமையும் இலக்கியத்தைப் பற்றிப் பேசியதே பொருளதிகாரம். தமிழ்மீது அதீதப் பற்றும் உணர்ச்சி வசப்படும் இயல்பும் கொண்ட அறிஞர் சிலர் தொல்காப்பியப் பொருளதிகாரத்தைத் தமிழர்தம் வாழ்வியல் கூறும் நூல் என்று மயங்கினர். மயங்கி அக்கருத்தை வலியுறுத்தினர். வலியுறுத்தவே வல்லான் வகுத்ததே வாய்க்கால் என்பவாகலின் உலகிலேயே வாழ்வுக்கு இலக்கணம் வகுத்தவன் தொல்காப்பியன் என்னும் பெருமைக்குள் அவரைத் திணிக்க முற்பட்டனர். காலம் செல்லச் செல்ல உலகம் தழுவிய இலக்கியம் மற்றும் திறனாய்வுக் கொள்கைகள் வெளிச்சத்திற்கு வந்த காரணத்தால் அவ்வாறு சொன்ன அறிஞர்களே தமது கருத்துக்களிலிருந்து பின்வாங்கினர். தொல்காப்பியம் அரிஸ்டாட்டிலின் ‘கவிதையியல்’ (POETICS) போலக் கவிதையிலக்கணம் கூறும் நூல் என்பதைப் புரிந்து கொள்ள நெடுங்காலத்தை நாம் இழந்திருக்கிறோம். எழுத்தினைத் தொடர்ந்து சொல், சொல்லினைத் தொடர்ந்து இலக்கியந்தானே இருக்க வேண்டும்? என்ற சாதாரண புரிதல் கூட இல்லாமல் போனது பேரிழப்பாக முடிந்தது. இந்த இழப்புத்தான் செய்யுள் மரபு அல்லது கவிதை மரபு என்பதைப் பற்றிய சரியான தெளிவான புரிதல் நம்மவர்க்கு இல்லாது போனதற்குக் காரணமாக அமைந்தது. அறிஞர் தமிழண்ணல், அ.சா.ஞானசம்பந்தனார் முதலிய அறிஞர்கள் காலம் கடந்து உணர்ந்த இந்த உண்மையை உணர்ந்து வெளிப்படுத்தினர். வளைந்து கோணிக் கொண்டு சென்ற தமிழ்க்கவிதைகள் பற்றிய கொள்கை விளக்கம் பெறுவதற்கு அவர்கள் உதவினர்.

    தமிழ்க்கவிதை மரபு

    வாழ்வியலைப் பேசுகிறவன் செய்யுளுக்கு இலக்கணம் செய்வானா? தொல்காப்பியச் செய்யுளியல் எந்த வகையில் வாழ்வியலாக முடியும்? தொல்காப்பியப் பொருளதிகாரத்தைக் கவிதை பற்றிய கொள்கை விளக்கக் குறிப்பு என்று தொடக்கத்திலேயே கண்டிருந்தால் தமிழ்த் திறனாய்வு இந்நேரம் உலக உச்சத்திற்குச் சென்றிருக்கும். இலக்கிய உருவாக்கத்தில் தொல்காப்பியத்தின் சட்ட திட்டங்கள் ஒரு பண்பட்ட சமுதாயத்தின் இலக்கியப் படைப்பாற்றலை எதிரொளிக்கிறது என்பதே உண்மை. இன்னார்தான் உவமம் சொல்ல வேண்டும்! இப்படித்தான் உவமிக்க வேண்டும்! இப்படித்தான் உவமம் அமைதல் வேண்டும்! தெரியாத பொருளை உவமம் சொல்லக் கூடாது. பெற்ற தாய் பேசவே கூடாது! என்றெல்லாம் ஓர் இலக்கியக் கட்டமைப்பை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தூக்கி நிறுத்திய இலக்கியப் பேராசிரியர் தொல்காப்பியர். தமிழில் ‘மரபு’ என்னும் சொல்லின் பொருளடர்த்தி மிகவும் ஆழமானது. தொல்காப்பியர் ‘நூன்மரபு’, ‘மொழிமரபு’, ‘தொகைமரபு’, ‘விளிமரபு’, ‘மரபியல்’ என்றெல்லாம் அதனை ஆராய்ந்திருக்கிறார். இவற்றைத் தவிர திணை மரபு, சொல் மரபு, பொருள் மரபு, கூற்று மரபு, யாப்பு மரபு எனப் பல்வகை மரபு சார்ந்த பொருண்மைகள் அவரால் ஆராயப்பட்டுள்ளன. ‘மரபுவழாநிலை’, ‘மரபுவழுவமைதி’ முதலியனவும் அவரால் ஆராயப்பட்டனவே. தொல்காப்பியத்தின் ‘அகப்பொருள் மரபு’ தமிழுக்கே சிறப்பானதும் நுட்பமானதுமாகும். மரபுக்கவிதைகள் என்றால் பொருண்மை, வடிவம், உத்தி ஆகியவற்றில் மரபு சார்ந்திருக்கும் கவிதைகளைக் குறிப்பதாகும். புதுக்கவிதைகள் என்பவை இவற்றின் மாறாக அமைந்திருப்பவை. வடிவத்தை இழப்பதானலேயே புதுக்கவிதை ஆகிவிடாது. இழப்பதனாலேயே ஒன்று புதுமையாகிவிடவும் முடியாது.

    ‘மரபு’ என்னும் சொற்பொருள் விளக்கம்

    ‘மரபு’ என்னும் சொல்லுக்குரிய வரைவிலக்கணம் தொல்காப்பியத்துள் காணுமாறில்லை. ஆனால் அச்சொல்லுக்கு விளக்கம் கூறப்புகும் உரையாசிரியர்கள் உள்ளிட்ட அறிஞர் பலரும் பல்வேறு சூழலுக்கேற்ப அதன் பொருளை விரித்துக் காட்டியுள்ளனர். தொல்காப்பியர் தனிமொழியாகவும் தொகைமொழியாகவும் சற்றொப்ப முப்பது இடங்களில் ‘மரபு’ என்னும் சொல்லைப் பயன்படுத்தியுள்ளார். இத்தகைய இடங்களில் எல்லாம் அச்சொல் பல்வேறு பொருளைக் குறித்து நின்றாலும் ‘உயர்திணை அஃறிணை ஆகிய இருவகைப் பொருட்களை, உலகியல் வழக்கு, செய்யுள் வழக்கு என்னும் இருவகை வழக்குகளிலும் சான்றோர் தொன்றுதொட்டு வழங்கிவரும் முறைமை’ என்னும் அளவிலேயே அதன் பொருள் புலப்பாடு நிறைவு பெற்றுவிடுவதாகத் தெரிகிறது.

    “மரபென்ற பொருண்மை என்னையெனில் கிளவியாக்கத்து மரபென்று வரையறுத்து ஓதப்பட்டனவும், செய்யுளியலுள் மரபென்று வரையறுத்து ஓதப்பட்டனவுமன்றி இருதிணைப் பொருட்குணனாகிய இளமையும் ஆண்மையும் பெண்மையும் பற்றிய வரலாற்று முறைமையும் உயர்திணை நான்கு சாதியும் பற்றிய மரபும் அஃறிணை புல்லும் மரனும் பற்றிய மரபும் அவைபற்றி வரும் உலகியல் மரபும் நூன்மரபும் என இவையெல்லாம் மரபெனப்படும்”

    என்னும் பேராசிரியர் விளக்கத்தால் காணமுடிகிறது. இதனால் தொல்காப்பியத் தளத்துள் மரபு பற்றிய களங்கள் விரிந்து பரந்துள்ளன என்பதைத் தெளிவாக உணரமுடிகிறது. திருக்குறள், அகரத்தில் தொடங்கி னகரத்தில் முடியுமாப் போலத், தொல்காப்பியத்துள் ஓதப்பட்ட அனைத்துக் கருத்துக்களும் தமிழ்நெறியே என்பதற்குச் சான்றாக, ‘நூன்மரபு’ எனத் தோற்றுவாய் செய்து ‘மரபியல்’ என முடித்துக் காட்டும் ஆசிரியரது சதுரப்பாட்டினை ஓர்ந்துணர்ந்து கொள்க.

    மரபு பற்றிய தற்கால மதிப்பீடு

    மரபியல் சார்ந்த கருத்துக்களும் சிந்தனைகளும் தொல்காப்பியத்துள்ளும் அதன் உரைகளுள்ளும் பல்வேறாகக் காணக்கிடக்கின்றன. கிடப்பினும் மரபியலை நன்குணர்ந்த ஆய்வறிஞர்கள் தற்காலத்துக்கு ஏற்ற வகையில் புதிய பொருண்மைகளை உள்ளடக்கிக் கூறும் விளக்கம் இங்குச் சுட்டப்படுவது பொருத்தமாகலாம்.

    “மரபு என்பது இலக்கணம் மட்டுமல்ல., மரபு என்பது இலக்கியத்திற்கு மட்டுமல்ல., மரபு என்பது முந்தையத் தலைமுறைகள் சேர்த்து வைத்திருக்கும் அனுபவம், அறிவு, முடிவு ஆகிய அனைத்தும் சேர்ந்தது. கால நீட்சியில் மானுடவாக்கம் தன் அறிவுத் தோட்டத்தில், அனுபவத் திளைப்பில் உணர்ந்துத் தெளிந்து உருவாக்கிய முடிவுகள் அவை. வருங்காலத்திற்கென்று இலக்கியமாக, சமயமாக, அறநெறியாக, பிற அறிவுத்துறைகளாக முந்தையத் தலைமுறை விட்டுச் சென்ற அனுபவத் திரட்டுதான் மரபு. மத, சமூக அமைப்புக்களுக்குச் சடங்குகள் சம்பிரதாயங்கள் இருப்பது போல, இலக்கியத்திற்கும் மரபு இருக்கிறது. இலக்கிய மரபு என்பது வெறும் யாப்பு மரபு அல்லது இலக்கண மரபு மட்டுமல்ல. இலக்கிய ஆசிரியர்கள் காலம் தோறும் முன்வைத்து வந்திருக்கும் சிந்தனைகள், எண்ணங்களின் மரபும் இலக்கிய மரபுகள்”

    எனப் பேராசிரியர் பாலா தரும் விளக்கம், மரபின் விரிந்து பரந்த ஆதிக்கத்தையும் அவ்வாதிக்க எல்லைக்குள் அதனுடைய பொருள் புலப்பாட்டுத் திறனையும் தெளிவாக்குவதாக உள்ளன.

    வைரமுத்து உவமைகளில் மரபு போற்றுதல்

    பாரதிதாசனுக்குப் பின் வந்த கவிஞர்கள், ‘புதுக்கவிதை’ என்னும் பெயரால் வடிவமாகிய உருவத்திலும் சிந்தனையாகிய உள்ளடக்கத்திலும் பெரும் மாற்றத்தைச் செய்தனர். கவிதைக்குக் ‘கருத்துக்களுக்கே முதன்மை’ என்னும் புதிய கருதுகோள் உருவாக்கப்பட்டது. உள்ளடக்கத்துக்கு அடுத்த நிலையிலேயே உருவம் மதிப்பிடப்பட்டது. இவ்வாறு காலத்திற்குக் காலம், வாழ்க்கையை இன்னதென்று அடையாளம் காட்டும் முயற்சியில், தமிழ்க்கவிஞர்களின் சிந்தனையும் மாறி வந்திருக்கிறது என்பதை அறியமுடிகிறது. உள்ளடக்கத்திற்குப் பொருந்தும் மேற்கண்ட நிலைப்பாடு, அதனை வெளிப்படுத்தும் உத்திகளில் ஒன்றான உவமைக்கும் பொருந்தும். ‘மரபின் தாக்கம் அல்லது மரபின் ஆளுமை’ என்ற அளவில், மரபை ‘அப்படியே பின்பற்றுதல்’ என்னும் முறையில் வைரமுத்து கவிதைகளில் அமைந்துள்ள உவமைகளை இப்பகுதி ஆராய்கிறது. மரபு வழியாகப் பயன்படுத்தப்படும் உவமைகளின் பொருளாளுமை மிகவும் பொருத்தமாக இருந்ததாலும், அதற்கிணையான வேறொரு உவமம் கிட்டாத நிலையிலும் மரபு அப்படியே பின்பற்றப்படும். உண்மையில் இது முதன்முதலாக அவ்வுவமையைப் பயன்படுத்தியவரின் இலக்கிய ஆளுமைக்குக் கிடைத்த வெற்றியாகக் கருதப்படலாம். அவ்வெற்றியைப் ‘பாட்டன் தேட்டம் பேரனுக்கு’ என்பது போலப் பின்னாள் தோன்றுகிற படைப்பாளர் அனைவரும் அனுபவிக்கின்ற உவம இன்பமாகும்.

    இருவகை அழலிலும் எரியாத  உவமம்

    முறையான தமிழ்க்கல்வியைப் பெறக்கூடிய வாய்ப்பு கிட்டிய தமிழ்க்கவிஞர் சிலருள் வைரமுத்தும் ஒருவர். பழந்தமிழ் இலக்கியச் சிந்தனைகளும் அச்சிந்தனைகளை வெளிப்படுத்தி நிற்கும் சொற்களும் அவரையும் அறியாமல் அவருள்ளத்தில் பதிந்திருக்கின்றன. இதனால் மரபு என்பது அவர் மனத்துள் எல்லா நிலைகளிலும் எளிதாகப் பதிந்து போனதை உறுதி செய்யலாம். சான்றாகத்,

    “திரியழல் காணின் தொழுப, விறகின்
    எரியழல் காணின் இகழ்ப, ஒரு குடியில்
    கல்லாது மூத்தானைக் கைவிட்டுக், கற்றான்
    இளமை பாராட்டும் உலகு.”

    என்னும் கீழ்க்கணக்கு வெண்பா ஒன்று, ‘அழலாகச் சுடுவதனாலேயே சுடரையும் நெருப்பையும் ஒன்றாகக் கருதமுடியாது. அதுபோல, அகவை மூத்திருப்பதாலேயே கல்லாதவனை மதித்துவிட முடியாது., கற்றவனுடைய இளமையே பாராட்டுக்குரியதாகும்’ என்னும் கருத்தைச் சுட்டுகிறது. விளக்குச் சுடரும் எரிநெருப்பும் ஒன்றாயினும் வேறுபடும் மதிப்பீட்டிற்குள்ளாவன. மூப்பு எல்லாருக்கும் பொதுவாயினும் கல்வியே மதிப்பிடும் கருவியாகும். இக்கருத்தையும் உவமத்தையும் உள்வாங்கிக் கொண்ட கவிஞர், தம்முடைய கன்னித் தொகுப்பான ‘வைகறை மேகங்களில்’ கோவலனின் ஒழுக்கச் சிதைவு அளவுக்கு மீறியது என்னும் கருத்து விளக்கத்திற்குப் பயன்படுத்திக் கொண்டிருப்பதைக் காணமுடிகிறது.

    “அளவாகத் தீயெரிந்தால் அதனை விளக்கென்போம்
    அளவுக்கு மீறிவிட்டால் அதனை நெருப்பென்போம்’
    அளவுக்கு மேல்பொறுமை அன்னமே நீ காட்டியதால்
    களவுக்குப் போனதம்மா காத்து வைத்த உன்சொத்து”

    இவ்வரிகளில் நான்மணிக்கடிகையின் சாரம் அப்படியே படிந்திருப்பதைக் காணலாம். கோவலனின் புறவொழுக்கத்திற்கு ‘அளவு’ காணும் கவிஞரின் கருத்துப் பற்றி இங்கு ஆராய்வது நோக்கமில்லையாயினும், தொடக்கத்திலேயே கண்டிக்கப்பட்டிருக்க வேண்டும் என்னும் கவிஞரின்  கருத்து நிலைக்காக, மரபு சார்ந்த உவமத்தைப் பயன்படுத்தியிருக்கிறார் என்பது ஈண்டுச் சுட்டப்படுகிறது.

    கவரிமாவை(னை)ப் பின்பற்றும் கவிஞர்

    ‘கவரிமா’ என்பது விலங்கினங்களில் ஒன்று. ‘மா’ என்பது பொதுப்பெயர். ‘கவரி’ என்பது சிறப்புப் பெயர். எனவே ‘கவரிமா’ என்பது இருபெயரொட்டுப் பண்புத்தொகை. இதனைக் ‘கவரிமான்’ என்றே தமிழிலக்கிய உலகம் வழங்கிவருகிறது. ‘கவரிமான்’ என்னும் வழக்கு திருக்குறளில் இல்லை. இந்தக் கவரிமாவின் சிறந்த இயல்பைத் திருவள்ளுவர் தம் திருக்குறளில் குடிப்பிறந்தார்க்கு உவமையாகப்  பயன்படுத்துகிறார்.

    “மயிர் நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
    உயிர் நீப்பர் மானம் வரின்”

    என்னும் குறட்பாவில், தன் மயிர்த்திரளின் ஒரு மயிர் நீங்கினும் உயிர் வாழாத கவரிமாவின் இயல்பை, மானத்தைக் காப்பதற்காக உயிரையே விடும் சான்றோர்களுக்கு உவமமாக்கியிருப்பதைக் காணலாம். மானத்தைக் காப்பதற்குப் பெரும்பாலும் உவமமாகப் பயன்படும் கவரிமாவைக் கவிஞரும் அதே பொருள் விளக்க நோக்கத்திற்காக,

    “மயிருதிர்ந்தால் வாழாத மானமுள்ள மான்போல”

    எனப் பயன்படுத்துவதை அறியமுடிகிறது. பிணத்தைப் பற்றிப் பாடவரும் கவிஞர் மயிரிழந்த மானை உயிரிழந்த பிணத்திற்கு உவமமாக்குகிறார். ‘உயிர்த்துடிப்பு போனதனால் உதவாத உடல் ஓடமாகிவிட்ட பிணத்தின் மான உணர்வை கவரிமானாகிய உவமம் கொண்டு விளக்குவதைக் காணமுடிகிறது.

    பசித்தவன் முன் பசும்பால்

    பசியால் வாடுபவனின் துடிப்பைப் பாவேந்தர் பாரதிதாசன் அழகியல் உணர்வை வெளிப்படுத்துதற்கு உவமையாக்கியிருக்கிறார்.

    “பசித்த மக்கள்
    சிறிது கூழ் தேடுங்கால் பானை ஆரக்
    கனத்திருந்த வெண்சோறு காணும் இன்பம்”

    முழு நிலவைக் காணும் இன்பத்திற்கு உவமையாக்கப்பட்டிருப்பது போலவே கவிஞரும்,

    “உலகம் தண்ணீர்ப்
    ‘பஞ்சத்தில் தவிக்கின்ற போதில் நானும்
    பசுப் பாலைப் பார்ப்பதுபோல்”

    தண்ணீர்ப் பஞ்சத்தில் தவிக்கிறவன் பசும்பாலைக் கண்டதுபோல் தன் காதலியைக் கண்டு மகிழ்ந்தான் என உவமிப்பதைக் காணமுடிகிறது. இது போன்ற நேர்வுகளில் கவிஞர் அப்படியே மரபினை எவ்வித மாற்றமும் இல்லாமல் பின்பற்றிவிடுவதை அறியமுடிகிறது.

    அடக்கமும் ஆமையும்

    திருக்குறளில் ஒருமுறை ஒரு கருத்து விளக்கத்திற்காகப் பயன்படுத்திய உவமை, வேறொரு இடத்தில் வேறொரு கருத்து விளக்கத்திற்காகப் பயன்படுத்தப்பட்டிருப்பதைக் காணமுடியவில்லை. மனம், மொழி, செயல் ஆகியவற்றில் அடக்கத்தைக் கடைப்பிடிக்க வற்புறுத்தும் நூல் திருக்குறள். அதனுள் மெய்யடக்கத்தை வற்புறுத்துதற்கு ஆமையை உவமமாகப் பயன்படுத்திக் கொள்வதை அறியமுடிகிறது.

    “ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
    எழுமையும் ஏமாப் புடைத்து”

    என்னும் குறட்பாவில் இடர்புகாமல் தனது ஐந்துறுப்புக்களையும் ஆமை அடக்கிக் கொள்வது போலப், பாவம் புகாமல் ஒருவன் தனது ஐம்பொறிகளையும் அடக்கிக் கொள்ள வேண்டும் என்னும் கருத்து விளக்கம் புலப்படுவதைக் காணலாம்.

    பாவேந்தர் கண்ட ஆமை

    உண்மையான பெண்ணுரிமைக்கு உரத்த குரல் எழுப்பியவர் பாவேந்தர். பிறப்பாலும் புலன்களாலும் ஆணுக்கிணையானவள் பெண் என்பது பாவேந்தர் கருத்து. தனிக்கவிதையாயினும் காப்பியமாயினும் பெண்ணைப் பற்றிப் பாடும் பொழுதெல்லாம் பண்பாட்டுக்குப் பங்கம் வராத உண்மையான பெண்ணுரிமையை அவர் வலியுறுத்த தவறியதே இல்லை. சஞ்சீவிப் பர்வதத்தின் சாரல் என்னும் காப்பியத்தின் பாத்திரமொன்றின் வாயிலாக,

    “ஊமை என்று பெண்ணை உரைக்குமட்டும் உள்ளடங்கும்
    ஆமை நிலைதான் ஆடவர்க்கும் உண்டு.”

    என ஆடவரின் பின்னடைவுக்கு ஆமையை உவமம் காட்டுகிறார். திருக்குறள் உவமையில் ஆமையின் ஒடுக்கம் நேர்முகமானது., பாவேந்தர் உவமையில் அது எதிர்முகமானது., கூடாதது. பெண்ணை மதிக்காவிடின் ஆடவரின் முன்னேற்றம் ஆமையின் உறுப்புக்கள் போல் உள்ளொடுங்கிவிடும் என்பது கருத்து.

    வைரமுத்து கண்ட ஆமை

    பாவேந்தரைப் பின்பற்றி மரபுக்கவிதை செய்யும் வைரமுத்து, உவமையால் மரபு காத்து, உறுப்பினரை மாற்றிவிடுகிறார். அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்னும் நாற்குணங்களைக் கணவனோடு தனியாக இருக்கும் போது காட்டக்கூடாது என்பதைக் கூறவரும் கவிஞர், கணவன் வாய்மொழியில்,

    “ஓட்டுக்குள் ஆமைபோல் உன்னை யொளித்தாய்”

    எனப் பதிவு செய்கிறார். அடங்குதற்கு உவமமான ஆமை, ‘குறிப்பிட்ட சூழலில் அடக்கம் அதன் பயனைத் தராது’ என்பதற்கும் உவமமானது தமிழ்க்கவிஞர்களின் கவிதைத் தொழில்நுட்பத் திறனை வெளிப்படுத்துவதாகலாம்.

    உள்ளும் புறமும்

    ஓர் உண்மையை வலியுறுத்துவதற்குப் பல உத்திகளைப் படைப்பாளர் கையாளுவர். காணமுடியாத கடவுளின் உண்மையை நிலைநாட்ட திருவள்ளுவர் ஒலிவடிவான அகரத்தின் எழுத்துத் தலைமையை உவமையாக்கி உரைக்கிறார். கண்ணால் காண இயலவில்லை என்பதற்காக அகர ஒலியே இல்லையென்றாகிவிடாது., மாறாக எல்லா மொழிகளுக்குள்ளும் எல்லா ஒலிகளுக்குள்ளும் அவ்வகரம் மறைந்தே நிற்கிறது. அதுபோலக் கண்ணால் காணமுடியவில்லை என்பது கொண்டே இறைவனை இல்பொருளாக்கிவிட முடியாது., உணர்ந்து அனுபவித்து அறியவேண்டிய உண்மை அது. இது திருவள்ளுவர் கையாண்ட உவம நுட்பமாகும். இத்தகைய உவம உத்தியை திருக்குறளில் வேறுசில இடங்களிலும் அவர் கையாண்டிருக்கிறார் என்பதும் அதுவே உவம மரபாக மாறிவிடுகிறது என்பதும் ஈண்டுச் சுட்டப்பட வேண்டிய செய்தியாகும்.

    மணிக்குள் நூலும் மொட்டுக்குள் மணமும்

    கண்டதைக் கொண்டு காண இயலாததை உறுதி செய்து கொள்ளும் அளவையியலைச் சார்ந்த இவ்வுத்தியைத் காமத்துப்பால் தலைவனும் பின்பற்றுவதைக் காணமுடிகிறது. தலைவி தானுற்ற காதலை வெளிப்பட உரைத்தல் இயல்பன்றாதலின், தலைவன் இரண்டு உவமைகளைப் பயன்படுத்தித் தலைவியின் காதல் குறிப்பை உணர்ந்து கொள்கிறான்.

    “மணியில் திகழ்தரு நூல்போல் மடந்தை
    அணியில் திகழ்வதொன் றுண்டு”

    என்னும் தலைவன் கூற்றில், ‘மணியில் மறைந்திருக்கும் நூல்போல் இத்தலைவியின் அழகுக்குள் மறைந்திருப்பது ஒன்றுண்டு’ என்னும் கருத்து புலப்படுவதைக் காணலாம். ‘திகழ்தரு நூல்’ என்பதற்கு ஆசிரியர்  பரிமேலழகர், “அகத்துக் கிடந்து புறத்துப் புலனாகா நூல்போல” என்னும் பதவுரையை ஈண்டுச் சுட்டுவது பொருத்தமாகலாம். மேலும்,

    “முகைமொக்குள் உள்ளது நாற்றம்போல் பேதை
    நகைமொக்குள் உள்ளதொன் றுண்டு”

    என்னும் தலைமகன் கூற்றிலும், ‘மொட்டுக்குள் மறைந்திருக்கும் மணம்போல் இத்தலைவியின் புன்னகையில் மறைந்திருப்பது ஒன்றுண்டு’ என்னும் கருத்து புலப்படுவதைக் காணலாம். ‘மொக்குள் உள்ளது நாற்றம் போல்’ என்னுந் தொடருக்கு ஆசிரியர் பரிமேலழகர் ‘முகிழ்ப்பின் உளதாய்ப் புறத்துப் புலனாகாத நாற்றம் போல’ எனக் கூறும் பதவுரையை நினைவு கூறலாம்.

    அப்பர் கண்ட  ஆண்டவன்

    நாயன்மார்களில் ஒருவரான அப்பரடிகள், இறைவனின் உண்மையைக் கூறுதற்குத் திருவள்ளுவர் பயன்படுத்திய உவம உத்தியையே பயன்படுத்திப் பதிகம் பாடியிருக்கிறார். ‘அவனருளாலே அவன் தாள் வணங்கி’ முயன்றாலன்றி இறைவனைக் காண்பது அரிது என்னும் உண்மையை எடுத்துக்காட்டும் அப்பர்  பெருமான்,

    “விறகில் தீயினன் பாலில் படுநெய்போல்
    மறைய நின்றுளன் மாமணிச் சோதியான்”

    என இரண்டு உவமைகளால் உறுதி செய்வதைக் காணமுடிகிறது. விறகின்றி நெருப்பில்லை., விறகே நெருப்பில்லை., விறகுக்கு உள்ளேதான் நெருப்பு. பற்ற வைத்தால் விறகு நெருப்பாகும்., இல்லையெனின் விறகு விறகாகவே இருந்துவிடும்., பாலின்றி நெய்யில்லை., பாலே நெய்யில்லை., பாலுக்கு உள்ளேதான் நெய். பிறை ஊற்றித் தயிர், மோர், வெண்ணெய் என்னும் படிநிலைகளைத் தாண்டினால் கிடைப்பது நெய். படிநிலை இல்லையெனின் பால் பாலாகவே இருந்து விடும். மானுடத்தின் முயற்சியினால் கிட்டுவது இறைநிலை. இந்த உண்மையை விளக்குதற்கு அப்பர் கையாளும் உவம உத்தி தொடர்ந்து மரபாகி வைரமுத்து கவிதைகளிலும் இழைவதைக் காணமுடிகிறது.

    வெடிக்குள் தீயான காதலன்

    திருக்குறளிலும் தேவாரப் பதிகத்திலும் கையாளப்பட்டுள்ள இவ்வுவம உத்தியை வைரமுத்து கவிதைகளிலும் காணமுடிகிறது. கவிஞர் வைரமுத்து தமது கவிதைகளின் கன்னித் தொகுப்பான ‘வைகறை மேகங்களிலேயே’ இந்த உத்தியைப் பயன்படுத்தியிருக்கிறார். காதலனைப் பிரிந்த காதலியின் புலம்பலாக அமைந்திருக்கும் கவிதையொன்றில்,

    “தீ நின்ற வெடியாகச் சிதறிப் போகும்
    தேன்நின்ற என்னுயிரைப் பார்”

    என்னும் வரிகளில் தலைவியின் உயிர் வெடி. வெடிக்குள் தீயிருக்கிறது. வெடியே தீயில்லை. பற்ற வைத்தால் வெடித்துத் தீ சிதறும். தலைவனைப் பற்றிய எண்ணங்கள் தீ. தீயை உள்ளடக்கியது அவள் உயிர். ‘வருவான்’ என்றெண்ணிய தலைவன் வரவில்லையாதலின் அவள் உயிர் சிதறுகிறது. இத்தகைய பொருண்மைகளையெல்லாம் உள்ளடக்கிய மரபு சார்ந்த உவமமாக இது அமைந்திருக்கிறது.

    கவிதைக்கு அழகூட்டும் காரணிகளில் முரணுக்கு முக்கியமான பங்குண்டு. அது சொல்லாலும் அமையலாம். பொருளாலும் அமையலாம். மேற்கண்ட எடுத்துக்காட்டில் தலைவன் அருகிருக்கும் போது தேனாக இருப்பது அவன் பிரிந்த போது தீயாக மாறுகிறது என்னும் முரண் கவிதைக்கு அழகு சேர்ப்பதைக் காணலாம்.

    தீப்பெட்டிக்குள் சிறைகிடக்கும் தீ

    ‘கவிராஜன் கதை’ என்னும் பாரதி காவியம் முழுமையும் பாரதி கதிரவனாகவும் நெருப்பாகவும் உருவகம் செய்யப்பட்டிருக்கிறார். கவிஞர் பாரதியை ‘நெருப்பு’, ‘தீ’ என்னும் இரு சொற்களால் உருவகம் செய்வார். ‘தீயை’ யாரும் கட்டுப்படுத்த முடியாது. கட்டுப்படுத்தி வைத்தால் என்றாவது ஒரு நாள் பற்றிக் கொள்வது உறுதி. காசியில் தன் அத்தை வீட்டிலிருந்து திரும்பிய பாரதிக்கு எட்டையபுர அரண்மனையில் ஒரு பதவி கிடைத்தது. அந்தப் பதவி புயல் ஓய்வெடுக்கப் போதுமானதாக இல்லை. அந்த நிலையை விளக்க வரும் கவிஞர்,

    “தீப்பெட்டிக்குள் சிறைகிடக்கும்
    தீ மாதிரி
    அரண்மனை வேலை
    அவனை அடக்கியது”

    எனப் பதிவு செய்கிறார். இவ்வுவமையில் தீ தீக்குச்சிக்குள் சிறையிருக்கிறது. தீக்குச்சிகள் தீப்பெட்டிக்குள் சிறையிருக்கின்றன. எனவே தீ தீப்பெட்டிக்குள் சிறையிருக்கிறது. தீப்பெட்டியே தீயில்லை. ஆனால் தீப்பெட்டிக்குள்தான் தீயிருக்கிறது. மகாகவி பாரதியை உரசினால் பற்றிக் கொள்ளும் தீக்குச்சிக்குள் தீயாகக் காணும் கவிஞரின் பார்வை பெரிதும்  சிந்தனைக்குரியது.

    நிறைவுரை

    பண்பாடு குறையாத மரபுவழிக் கருத்துக்களையும் அழகியல் நிறைந்த கற்பனையையும் பாடும் நோக்கத்திற்கேற்ப உணர்ச்சியையும் கவிதைக் கட்டுக்கோப்பு சிதையாத வடிவத்தையும் கொண்டிலங்கும் வைரமுத்தின் கவிதைகளில் உவமங்களும் மரபியல் தழுவியனவாகவே அமைந்துள்ளன. பொருளாதாரம் காரணமாக நகர்ப்புற வாழ்க்கையில் தன்னை ஒப்படைத்துக் கொண்டாலும் வடுகப்பட்டியில் பிறந்து வாழ்ந்த நாள்களை மறக்காத படைப்பாளராகவே அவர் இருக்கிறார். இதற்கு அவருடைய ‘கள்ளிக்காட்டு இதிகாசமும் கருவாச்சி காவியமும்’ சான்றாகத் திகழ்கின்றன. மரபு சார்ந்த உவமங்களில் கூடச் சமுதாயப் பார்வையும் வாழ்வியல் நுண்ணியமும் ஆழமாகப் பதிவாகியிருக்கின்றன.  அவற்றை இன்னும் ஆழமாக நோக்கிப் படித்துச் சுவைத்துப் பயன்பெறுவதற்கு இந்தக் கட்டுரை ஒரு கைகாட்டியாகலாம்!

    (தொடரும்…)

    Share
  • குறளின் கதிர்களாய்…(384)

    குறளின் கதிர்களாய்…(384)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்…(384)

    அறனறிந்து மூத்த வறிவுடையார் கேண்மை
    திறனறிந்து தேர்ந்து கொளல்.

    – திருக்குறள் – 441 (பெரியாரைத் துணைக்கோடல்)

    புதுக் கவிதையில்

    அறமதின் நுட்பத்தை
    ஆராய்ந்து அறிந்து
    அகவையில் தன்னிலும் மூத்த
    அறிவுடையோரின் நட்பை
    அரசன்
    அதன் சிறப்பை யுணர்ந்து
    அவர் மகிழும்
    வகையறிந்து
    வைத்துக்கொள்ள வேண்டும்…!

    குறும்பாவில்

    அறமுணர்ந்த தன்னிலும் மூத்த
    அறிவுடையோர் நட்பை அதன் சிறப்பறிந்து
    அரசன் கொள்ள வேண்டும்…!

    மரபுக் கவிதையில்

    அறத்தின் நுட்ப மதறிந்தே
    அகவை தன்னில் தன்னைவிடச்
    சிறப்பாய் மூத்த அறிஞருடன்
    செயலில் கொள்ளும் நட்பதனைப்
    பெறவே யதனின் சிறப்புடனே
    பெருமை யெல்லாம் சேர்த்தறிந்த
    பிறகே யதனைப் புவிமன்னன்
    பிடிப்பாய்க் கொள்ள வேண்டுமாமே…!

    லிமரைக்கூ

    அறமதனை உணர்ந்த நல்லார்
    அறிவுடைய அகவையில் மூத்தோரே அரசன்
    அறிந்து நட்புகொள்ள வல்லார்…!

    கிராமிய பாணியில்

    கொள்ளணும் கொள்ளணும்
    நட்பு கொள்ளணும்,
    நம்மவிடப் பெரியவங்கள
    நல்லவங்களப் பாத்து
    நட்பு கொள்ளணும்..

    அறத்தோட நுட்பமறிஞ்ச
    வயசுல மூத்த
    அறிவு நெறஞ்ச பெரியவங்களோட
    நட்பில
    அதனோட பெரும தெரிஞ்சி
    அரசன்
    நட்பு கொள்ளணும்..

    தெரிஞ்சிக்கோ
    கொள்ளணும் கொள்ளணும்
    நட்பு கொள்ளணும்,
    நம்மவிடப் பெரியவங்கள
    நல்லவங்களப் பாத்து
    நட்பு கொள்ளணும்…!

    Share
  • புளி இஞ்சி செய்முறை

    புளி இஞ்சி செய்முறை

    சுவை, சத்து, மணம் மிகுந்த, மிக எளிதில், விரைவில் செய்யக்கூடிய புளி இஞ்சி என்கிற இஞ்சி புளி செய்முறையை வழங்குகிறார் சுதா மாதவன். நீங்களும் செய்து பாருங்கள். உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • மூக்குத்தி அவரை விதை வேணுமா?

    மூக்குத்தி அவரை விதை வேணுமா?

    நம் வீட்டு மாடித் தோட்டத்தில் மூக்குத்தி அவரை விதைகளைச் சேகரித்து வைத்தோம். உங்களுக்கு இந்த விதைகள் வேணுமா?

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • பேஸ்புக் அறிவிப்புகளை முடக்குவது எப்படி?

    பேஸ்புக் அறிவிப்புகளை முடக்குவது எப்படி?

    பேஸ்புக், தினமும் ஆயிரத்தெட்டு அறிவிப்புகளை அனுப்பிக்கொண்டே இருக்கிறது. இவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்பதிலேயே நம் நேரம் பெருமளவு செலவாகிறது. இத்தகைய அறிவிப்புகளை முடக்குவது எப்படி? இதோ ஒரு வழிகாட்டி.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • ஈஷா வளாகம் – ஒரு சிறு உலா

    ஈஷா வளாகம் – ஒரு சிறு உலா

    கோவை மாவட்டம், வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஈஷா வளாகம், இயற்கை எழில் சூழ அமைந்துள்ளது. அத்துடன் கலையெழில் மிளிரத் திகழ்கின்றது. கலையெழில் என்பது ஒரு வார்த்தையாகக் கொள்ளக் கூடாது. இந்த வளாகத்தில் வாய்ப்புள்ள ஒவ்வோர் அணுவிலும் துணுக்கிலும் கலையெழில் மிளிர்கின்றது. முகப்பு, மதில், கதவு, விதானம், நடைபாதை, சிலைகள், அறிவிப்புகள், அலங்காரம்… என ஒவ்வொன்றிலும் தனித்துவமான கலையெழில் கண்ணையும் கருத்தையும் கவர்கின்றது.

    கார்ப்பரேட் பாணியில் இந்த வளாகம் அமைந்திருந்தாலும், நல்ல திட்டமிடலும் செயல்திறனும் தொலைநோக்கும் பளிச்சிடுகின்றது. பண்பாட்டுக் கூறுகளை உள்வாங்கி, அவற்றைத் தனி முத்திரையாக (Brand) முன்வைப்பதில் ஈஷா, ஆன்மீகத் துறையில் உள்ளோருக்கு முன்னோடியாகவும் வழிகாட்டியாகவும் விளங்குகிறது.

    இந்தியா முழுவதுமிருந்தும் இங்கே பக்தர்கள் வருகை தருகின்றனர். ஆன்மீகத் தலமாகவும் சுற்றுலாத் தலமாகவும் இது பரிணமித்து வருகிறது. இதோ ஈஷா வளாகத்தின் உள்ளே ஒரு சிறு உலா.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • படித்தேன்! சுவைத்தேன்! பகிர்ந்தேன்! – 9

    படித்தேன்! சுவைத்தேன்! பகிர்ந்தேன்! – 9

    முனைவர் ச. சுப்பிரமணியன்

    நூல் மதிப்பீடு

    முன்னுரை

    ‘நீ நொண்டி சிந்து எழுதினாய் தமிழ் எழுந்து நடந்தது’ என்று எழுதினான் ஒரு கவிஞன். நொண்டி சிந்து எழுதியவன் பாரதி! அவனைப் பாராட்டி எழுதிய கவிஞன் பெயர் தெரியவில்லை. யார் எழுதினால் என்ன? உண்மையை யார் சொன்னால்தான் என்ன? கவனிப்பதற்கு ஒன்று உண்டு.  எழுந்து நடந்தது என்று பாராட்டுகிறானே கவிஞன், அது எங்கே விழுந்து கிடந்தது? எங்கே முடங்கிக் கிடந்தது? இடைக்கால மன்னர் அரண்மனைகளின் அந்தப்புரங்களிலிருந்து எட்டையபுரத்து இளைக்காத சமஸ்தானம் வரை தமிழ் உள்ளூரிலேயே அடிமைப்பட்டுக் கிடந்தது. தமிழைப் பிணித்திருந்த அந்த அடிமைச் சங்கிலியை நொறுக்கி எளிய பதங்கள், மக்களுக்கு ஏற்ற மெட்டு எனப் புதியன பெய்து தமிழுக்குப் புதுமுகம் காட்டிய புலவன் பாரதி! அதனாலே என்ன ஆனது? தமிழ் புலவர்களுக்கானது அன்று நமக்கானது! நம் தாய்மொழி தமிழ்’ என்னும் புரிதல் தமிழர்களுக்கு வந்தது. இதுதான் பாரதி செய்த வித்தை! பாரதி பிறந்திருக்காவிட்டாலும் நாடு விடுதலையடைந்திருக்கும்! ஆனால் அவன் பிறந்திருக்காவிட்டால் இந்தக் கட்டுரை இந்த நேரத்தில் வல்லமையில் வெளிவந்திருக்க முடியாது. இந்தப் பின்புலத்தில் பாட்டுக் கட்டும் உரிமை மக்களுக்குச் சென்றது. புலவர்களின் தனியுடைமை நிராகரிக்கப்பட்டது. மக்களைப் பற்றிப் பாடியவர்கள் மக்கள் கவிஞர்கள் என அழைக்கப்பட்டனர். மக்களே கவிஞரும் ஆனார்கள். மக்களால் மக்களுக்காக மக்களைப் பற்றி எழுதப்படும் கவிதையே தமிழ்க்கவிதை என்னும் புதிய வரைவிலக்கணப் பரிமாணத்தை வரையறை செய்தனர். தமிழை முறையாகப் படித்தவர்கள்தாம் எழுத வேண்டும் என்ற நிலை மெல்ல மெல்ல ஆனால் நிலையாக உறுதியாக மாறியது, உட்கார்ந்து தமிழைப் படிக்காதவர்கள் ஓராயிரம் நூல்களைப் படைத்தார்கள். ஆர்வத்தால் யாப்பிலக்கணம் கற்றார்கள். அதன் கடுமையை உணர்ந்தார்கள். இருப்பதைக் கொண்டு எழுதிப் பார்ப்போமே என்று எழுதினார்கள். தங்கள் வாழ்க்கையில் தாங்கள் பட்ட இன்னலை எழுதினார்கள். எல்லார்க்கும் பாடமாக்கினார்கள். யாப்பிலக்கணத்தோடும் எழுதினார்கள். யாப்பு இல்லாமலும் எழுதினார்கள். யாப்பு இருந்தால்தான் அது கவிதை என்னும் மரபையும் உடைத்தெறிந்தார்கள். கல்லுக்குள் ஒளிந்திருக்கும் சிற்பத்தைக் கண்டறிவதுபோலத் தங்கள் திறமையைத் தாங்களே அறிந்து கொண்டார்கள். அவ்வாறு அறிந்து கொண்டவர்களில் ஒருவர்தான் குளித்தலை அன்பர் தண்டபாணி. தொழிற்சாலைகளின் கணக்கு வழக்குகளின் தணிக்கையாளர் அவர். கணிதத்தைத் தணிக்கை செய்யலாம். அவர் கவிதையைத் தணிக்கை செய்ய இயலுமா? இதயத்தை மூளையால் அளப்பது எப்படி? அவர் எழுதிய ‘கவிதை ஊருணி’ என்னும் அளவில் சிறிய கவிதை நூல் என் பார்வைக்கு வந்தது! படித்தேன்! சுவைத்தேன்! சுவைத்ததைச் சுருக்கமாக இங்கே பகிர்கிறேன்! பந்தி வைக்கிறேன். இது ஏழைவீட்டுப் பந்தி! பலகாரங்களின் எண்ணிக்கை குறையலாம். சுவை குறையாது!

    புரியாதவன் இன்னும் தேடுகிறான்

    கண்ணப்ப நாயனார் புராணத்தில் பெரும்பாலோர் திண்ணனின் ஆழமான பக்தியைச் சிலாகித்துப் பேசுவார்கள். பெரியபுராணத்தை நோக்குவார்க்கு ஒன்று நன்கு புரியும். அறுபத்து மூன்று தனியடியார்களும் தொண்டினால் உயர்ந்தவர்கள். சிவபதம் பெற்றவர்கள்! ‘தொண்டு’ என்பது மனித நேயத்தின் பழைய வழக்கு. காளத்திநாதரைச் சிவகோசரியார் சிலையாகத்தான் எண்ணினார். கடவுளாக எண்ணி வழிபட்டார். ஆனால் கண்ணப்பன் தன் தந்தையாகக் கருதினான்! ‘அத்தனார்க்கு அடுத்த தென்னோ?’  கடவுளுக்குக் கேடு வருமா? என்பது பகுத்தறிவாகக் கருதுவர். தந்தைக்குக் கேடு வரலாம் அல்லவா? தாய் மட்டுமன்று தந்தையும் பசித்திருக்கக் கூடாது என்பதுதான் மனித நேயம்!

    கையில் சூலம் கொண்டோ
    சங்குச் சக்கரம் கொண்டோ
    ஒளியின் திருவாய் மலர்ந்தோ
    இறைவன் நம்மிடம் வருவதில்லை!”

    வீழும்போது தூக்கி விடுவோரும்
    தாழும் போது தோள் கொடுப்போரும்
    நற்செயலை நாளும் செய்வோரும்
    நான் காணும் கடவுளின் வடிவங்கள்

    புரிந்தவன் கடவுளைக் காணுகிறான்
    புரியாதவன் இன்னும் தேடுகிறான்

    தனக்குப் பல நூற்றாண்டுக் காலம் முன்னே தோன்றிய திருமூலர் சொன்ன அறச் சிந்தனைதான் பத்தொன்பதாம் நூற்றாண்டு வள்ளலாருக்கு வந்தது.

    படமாடக் கோயில் பகவற்கு ஒன்று ஈயில்
    நடமாடக் கோயில் நம்பர்க்கு அங்குஆகா
    நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில்
    படமாடக் கோயில் பகவற்கு அதுஆமே

    என்னும் திருமந்திரத்தைப் பசிப்பிணி என்னும் கொடுநோய் போக்கி வள்ளலார் நடைமுறைப்படுத்தினார். பொதுவாகக் கவிதை எழுதுபவர்கள் இன்றும் ஆறு, குளம், குட்டை, ஏரி, மேகம், வான் என்று புவியியல் தலைப்புக்களாகவே சிந்திப்பார்கள். கேட்டால் இயற்கையைப் பாடுகிறேன் என்பார்கள். அவர்கள் பார்வையில் மனிதன் செயற்கைபோலும்! மனிதனுடைய வாழ்வியல் சிக்கல்கள் செயற்கை போலும்! ஆனால் விதிவழியே எல்லாம் நடக்கும் என்றும் சொல்வார்கள்! ஆனால் அல்துறைக் கவிஞர் தண்டபாணி சமுதாயத்தையே தனது கன்னிப்படைப்பின் கருப்பொருளாக்கியிருக்கிறார்!

    பெரு வியப்பின் நுண் இருப்பு

    எதனையாவது யாருக்காவது எப்பொழுதாவது எப்படியாயினும் சிலவற்றைச் சொல்ல வேண்டும் என்னும் உள்ளத் துடிப்பு எல்லார்க்கும் இயல்பு. கவிஞர்களுக்கு அல்லது கவியுள்ளம் படைத்தவர்களுக்கு வெகு இயல்பு. நேர்மையாக வாழ வேண்டும் என்ற தேவை கூட இல்லை. இனியாவது நேர்மையாக வாழ வேண்டும் என்ற எண்ணத்தோடு முதலடி எடுத்து வைக்கிறபோதே அதற்கு எதிர்மறையானதொரு சமுதாயக் கட்டமைப்பை ஒருவன் எதிர்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் இருக்கிறது.  அங்கிங்கு எனாதபடி ஒரு போலித்தனத்தையே போர்வையாகப் போர்த்திக் கொண்டு நிற்கும் இரங்கத்தக்க நிலை நீக்கமற நிறைந்திருக்கிறது. மனம், மொழி, மெய்களால் சத்தியம் காக்க வேண்டும் என்ற உயரிய நெறிக்குப் பதிலாக மானுடத்தைச் சீரழிக்கும் சிந்தனைகள்!, வெளிப்பாடுகள்!, செயல்பாடுகள்!.

    ஒப்பனை செய்த சிரிப்பு
    ஒத்திகை பார்த்த அழுகை
    கடன்
    கொடுத்தவனிடம் கனிவு
    கொடுத்த கடன்
    கேட்பவனிடம் கோபம்

    வாழ்பவனைக் கண்டு வயிற்றெரிச்சல்
    வழுக்கி
    வீழ்ந்தவனைக் கண்டால் எகத்தாளம்!
    காசு பணம் தேவைக்காக நட்பு!
    நம்பிக்கைக்காகக் கொஞ்சம் நடிப்பு!
    எளியவனைக் கண்டால் அகங்காரம்
    வலியவனைக் கண்டால்
    காலில் விழும் கலாச்சாரம்

    மேலே கவிஞர் சொல்லியிருக்கிற அல்லது வெளிப்படுத்தியிருக்கிற வரிகளால் அவர் குடும்பத்திற்கு என்ன நன்மை? ஒரு நன்மையும் இல்லை என்பது அவருக்கும் தெரியும். நமக்கும் தெரியும். பிறகு ஏன் எழுதுகிறார்? ஆற்றாமை! சமுதாயத்தின் எதிர்மறை போக்குக் கண்டு தாங்க முடியாத ஓர் இதயத்தின் இளகிய வெளிப்பாடு! மனிதனாக வாழ்வது எப்படி என்று நீதிநூல்கள் கற்பிக்கின்றன!. அதனைப் படித்துணர்ந்து செப்பம் செய்து கொள்ள வேண்டிய சமுதாயம் அதற்கு நேர் எதிர்த்திசையில்! வாழ்வியல் உண்மைகளையும் சமுதாயப் போக்குகளையும் நூலறிவு மற்றும் பட்டறிவு கொண்டு அறிந்து கொண்ட சாதாரண மனிதன் ‘ஊருக்கு வந்தது தனக்கு’ என்று எண்ணிச் சமாதானமடைகிறான். ஆனால் சமுதாய அக்கறையும் பிறரை மதித்து நேசிக்கும் ஒரு வேறுபட்ட படைப்பாளனால் அவ்வாறு இருக்க முடிவதில்லை.

    தேடிப்பார்க்கிறேன்!
    இருக்கும் மனிதர்களில் பெரும்பாலும்
    மனிதனவன்
    எவரும்
    மனிதனாக இல்லை!”

    என்று எழுதுகிறார் தண்டபாணி. மனிதர்களாயிருந்தால் வாழ்வார்கள். அல்லது வாழ்பவர்கள்தாம் மனிதர்கள்! ‘இருப்பவர்கள்’ மனிதர்கள் அல்லர். ‘LIVING’  என்பது வேறு. ‘EXISTING’ என்பது வேறு. ‘எப்படி இருக்குறீங்க?’ என்றுதான் நலம் விசாரிப்போம்! ‘ஏதோ இருக்குறேன்!’ என்றுதான் விடையளிப்பார்கள்! இங்கே பிறப்பார்கள்!. இருப்பார்கள்! இறப்பார்கள்! முடிந்தது வாழ்வு! இந்த வாழ்வு வாழப்படாதா? என்று ஏங்குகிறார் தண்டபாணி! மானுடம் தன் பெயரைத் தக்கவைத்துக் கொள்ளாதா? ‘மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே’ என்று வேண்டிப் பெற்ற வாழ்வு வீணாகிவிடுமோ என்று வேதனைப்படுகிறவர் பலர். அப்படிப் பாடியவர்களில் வேதனைப் பட்டவர்களில் ஒருவராகத் திகழ்கிறார் தண்டபாணி!

    கவிதைகளில் எல்லாச் சொற்களும் நினைக்கப்படா. நிலைக்கவும் செய்யா. ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’, ‘அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே’ என்பன போன்ற தொடர்கள் ஊழிக்காலத்திற்கும் உலாவரும். தண்டபாணி எழுதியுள்ள,

    சிறந்த மனிதம்
    தன் பெருமை தானறியாத்
    தத்துவத்தின் சிறுகுறிப்பு
    தவிர்க்கவே முடியாத
    பெருவியப்பின் நுண் இருப்பு!”

    இந்த வரிகளில் உள்ள ‘பெருவியப்பின் நுண்ணிருப்பு’ என்னும் தொடர் மிகவும் ஆழமான தத்துவார்த்த சித்திரிப்பாகவே அமைந்துள்ளது. இது  போன்ற தொடர்கள் இவருக்கேகூட எல்லாப் பாடல்களிலும் அமைவதில்லை.  மனிதன் தன்னை உணரவேண்டும். சிறந்த மனிதன் தன்னை உணர்ந்தே ஆகவேண்டும் ஆனால் இந்தப் பிறவியின் மகத்துவம் உணராது, தன்னுடைய பெருமையைத் தானே உணராத மானுடத்தை எண்ணி மருகுகிறார். அரக்கனை அழிக்க இறைவன் எடுத்த வடிவம் மானுடம். இறைவன் வருந்தி எடுத்த பிறவியை எளிதாகப் பெற்றதனால் இப்பிறப்பின் அருமையை உணரவில்லையோ என எண்ணி வருந்துகிறார். ‘விசித்திர நாடகங்கள்’ என்னுந் தலைப்பில் கவிஞர் எழுதியிருக்கும் இந்த வரிகளை மகாகவி பாரதியின்,

    தேடிச்சோறு நிதம் தின்று பல
    சின்னஞ்சிறு கதைகள் பேசி மனம்
    வாடித் துன்பமிக உழன்று பிறர்
    வாடப் பலசெயல்கள் செய்து நரைக்
    கூடிக் கிழப்பருவம் எய்திக் கொடுங்
    கூற்றுக்கு இரையெனப் பின் மாயும் பல
    வேடிக்கை மனிதரைப் போலே நான்
    வீழ்வேன் என்று நினைத்தாயோ

    என்னும் வரிகளோடு ஒப்பிடலாம். மகாகவி எந்தச் சமுதாயத்தைப் பற்றி என்றைக்குப் பாடினானோ அந்தச் சமுதாயம் அன்றைக்கு எப்படி இருந்ததோ அப்படியே தான் செக்கு மாடுபோல் ஒரே இடத்தைத்தான் சுற்றிக் கொண்டிருக்கிறது என்பதைத் தண்டபாணியின் வரிகள் தெளிவாகப் படம் பிடிக்கின்றன. படைப்பாளர்கள் படத்திறப்பு விழாவுக்கும் படைப்புக்கள் பட்டிமன்றத்தில் சிலர் காசு சேர்ப்பதற்குமே பயன்படுகிறது. கம்பன் பிறந்தும் இங்குக் காவியம் செழிக்கவில்லை! திருவள்ளுவன் எழுதியும் இங்கு நீதி தழைக்கவில்லை! வள்ளலார் தோன்றியும் இங்குப் பசி போகவில்லை! வேலு நாச்சியார் வாழ்ந்தும் இங்கு வீரம் சிறக்கவில்லை! மொத்தத்தில் மானுடம் தன் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ளவில்லை!

    எங்கே தேடுவேன்?

    ஒரு கவிதை இப்படித் தொடங்குகிறது. அறிவியல் வளர்ச்சி என்ற பெயராலும் நவீனத்துவம் என்ற பெயராலும் நகர்ப்புற மேம்பாடு என்ற பெயராலும் மரங்கள் வெட்டப்படுகின்றன. மாறாகக் கட்டடங்கள் விதைக்கப்படுகின்றன. பசுமை நிறப்பெயராகவே அறியப்படுகிறது.

    நான்கு வழிச்சாலையில்
    வெப்பத்தை உள்வாங்கி
    நெருப்பை உமிழ்ந்து
    கொண்டே தேடுகிறேன்

    தான்தோன்றி மலைகளைத் தேடுகிறார். காட்டுக் குயிலினங்கள் கானம் ஒலித்த கருவேலங்காடுகளைத் தேடுகிறார். ஆர்ப்பரித்துச் சென்ற ஆற்றுப் படுகைகளைத் தேடுகிறார். ஏரிகளைச், சாலைகளை என்று எல்லா இடங்களிலும் தேடுகிறார் இயற்கையை! எப்படி நிறைவு செய்கிறார் தெரியுமா?

    என் இளமையைத் தாலாட்டிய
    இயற்கையே!
    பேராசைப் பேய்களின்
    பெருத்த வயிற்றுக்குள்
    இரையாகிப் போன
    உன்னை
    எங்கே தேடுவேன்!”

    மனிதனைத் தேடி ஏமாந்தவர் இப்போது இந்தப் பாட்டில் இயற்கையைத் தேடி ஏமாந்து நிற்கிறார்!

    கவிதை குடியிருக்கும் காட்டாறு

    எவ்வகைப் பயனையும் எதிர்பாராது ஒரு தனிமனிதன் பொருட்செலவைப் பொருட்படுத்தாது ஒரு நூலை எழுதி வெளியிடுகிறான் என்றால் அதன் காரண நுண்ணியம் கருதத்தக்கது. எந்த விளைவையும் ஏற்படுத்தப் போவதில்லை என்பது அவனுக்குத் தெரியும். இருந்தும் செலவழித்து வெளியிடுகிறான் என்றால் அவன் உள்ளம் ஏதோ ஒன்றினைச் சொல்ல வேண்டும் என்று தவிப்பதாகத்தான் கொள்ள வேண்டியதிருக்கிறது. ‘தண்டபாணியின் கவித்துவம் இந்த நூலின் எல்லாப் பக்கங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கிறது’ என்பது உயர்வு நவிற்சி! இன்னும் துணிந்துத் தெளிவாகச் சொன்னால் போலிப் புகழ்ச்சி! நூலெல்லாம் சமூக ஆர்வலராக, ஒரு படைப்பாளியாகத் தோன்றும் அரிமா தண்டபாணி.

    காட்டு வெள்ளம் வந்து போகும்
    காட்டாறு ஓடைகள்

    என்னும் இரண்டு வரிகளில் கவிஞர் தண்டபாணியாக அவதாரம் எடுக்கிறார். மேற்கில் தோன்றிக் கிழக்கில் கலப்பது இந்திய நதிகளின் இயற்கை. காட்டாறு என்பது மழைவந்தால் வரும். மழை போனால் ஆறும் போய்விடும். என்ன ஒரு கவித்துவம் பாருங்கள்? ஆற்றினை விருந்தாளியாக்கிப் பார்க்கிறார். வந்து போகும் ஆறாம்! கவிதையைத் தொழிலாகச் செய்பவனுக்கும் அவ்வளவு எளிதாக வர இயலாத கற்பனை இது! ஆலயங்களில் பக்தர்கள் வந்து போவார்கள்! வழித்தடங்களில் பேருந்துகள் வந்து போகும்! ஆறு என்பதன் இலக்கணமே ஒரு இடத்தில் தோன்றி வேறொரு இடத்தில் இன்னொரு ஆற்றில் கலக்கும் அல்லது பெரும்பாலும் கடலில் கலக்கும். இதுதான் ஆறு. ஆற்றுக்கு ஒருமுகப் பயணம்தான்! காட்டாற்றுக்கும் இது பொருந்தும். ஆனால் காட்டாறு தோன்றுவதும் மறைவதும் அதாவது வருவதும் போவதும் மழையைப் பொருத்ததேயன்றி ஊற்றினைப் பொருத்ததன்று தலைக்காவிரி போல!

    எது தவறு?

    வாழ்க்கை ஒரு சக்கரம்! சுழல்வது அதன் இயல்பு! அது சுற்றுகிறது என்பதைப் புரிந்து கொள்கிறவன் தனக்கான வாய்ப்பு வரும்போது தக்கவைத்துக் கொள்கிறான். விழித்துக் கொண்டே தூங்குகிறவன் ஏமாந்து போகிறான். சிரிப்பு அழுகையில் முடிவதும் அழுகை சிரிப்பாக மாறுவதும் உலகியற்கை!

    அழுவது தவறில்லை
    விழுவதும் தவறில்லை!
    ஆனால்
    அழுதபின்பு சிரிக்காமல் இருப்பதும்
    வீழ்ந்த பின்பு எழாமல் இருப்பதுமே தவறு

    அறியாமை குற்றமன்று. அறியாமல் போனோமே என்று வருந்தாமல் இருப்பது தவறு. அதனைத் தொடர்ந்து அதனை அறிந்து கொள்ள முயலாமை பெருந்தவறு. எனவே ஒரு சிக்கலில் எது தவறு என்பதை அறிவதற்கும் ஞானம் தேவைப்படுகிறது. ‘வாழ்க்கைச்சிக்கல்’ ஒரு நூற்கண்டு என்று உருவகித்தால் அதன் நுனியைக் காணும் திறன் வேண்டும். அத்திறன் வாய்க்கப் பெற்றால் அழுகை சிரிப்பாகும்! வீழ்ச்சி உயர்ச்சியாகும்! வெற்றி தொடர்ச்சியாகும்! கீழே விழுவதெல்லாம் எழுந்திருப்பதற்காகவே! அதற்காக ‘எழுந்திருப்பதெல்லாம் விழுவதற்காகவே’ என்று எண்ணினால் வாழ்க்கையின் நோக்கம் திசைமாறும்! ஏக்கம் எக்காளமிடும்!

    அந்தாதி அறிவுரை

    ‘தலை உள்ளவன் எல்லாம் தலைவனாக முடியாது. தலையில் உள்ளவன்தான் தலைவனாக முடியும்” என்பது உலகியல். எதனையும் யாரையும் தன் இயல்பால், தன் அறிவால், தன் ஆற்றலால் தன்வசப்படுத்திக்  கொள்பவன் வாழ்க்கையில் நிற்கிறான்., நிலைக்கிறான். சூழ்நிலையின் கைதியாகும் எவனும் அல்லது அதில் கரைந்து போகிற எவனும் வாழ்க்கைப் போராட்டக் களத்தில் எதிர் நீச்சல் போட இயலாது. தண்டபாணி எழுதுகிறார்,

    சூழ்நிலைக்குள் கரைந்து போகிறவன்
    சாதாரணத் தலைவன்!
    சூழ்நிலையைத் தகர்த்து எழுபவனே
    சாதனைத் தலைவன்!
    எண்ணுபவர் விழிப்பர்!
    விழிப்பவர் உழைப்பர்!
    உழைப்பவர் உயர்வர்!
    உயர்வாருக்கே இவ்வுலகம்!”

    தொடை விகற்பம் என்பது யாப்பு வல்லார்க்கானது. தணிக்கையாளரும் இந்த விகற்பத்தைத் தம் கவிதையில் கையாண்டுள்ளார். எதிலும் ஆர்வம் இருந்தால் எதுவும் கைகூடும் என்பதற்கு இந்த ‘அந்தாதித் தொடை அறிவுரை’ அழிக்க முடியாத ஒரு சான்றாகத் திகழ்கிறது.

    நிறைவுரை

    குளிர்பதன அறையில் வசதியான திண்டில் சாய்ந்து கொண்டு ‘வானத்தைப் பார்த்தேன் பூமியைப் பார்த்தேன் மனுஷனை இன்னும் பார்க்கலையே?’ மனிதனைத் தேடாமலேயே காணோம் என்று சொல்லிக் காசு பார்ப்பவர் ஒருபுறம். பணி ஓய்வு பெற்றுப் பேரக் குழந்தைகளுடன் கொஞ்சி மகிழ வேண்டிய நேரத்தில் அக்கறையோடு புலம்புகிறவர்கள் மற்றொரு புறம். முன்னவன் பணத்திற்காக எழுதுகிறான். இவர் பாசத்தோடு எழுதுகிறார். அவன் தத்துவம் சொல்வதாகக் கருதிக் கொண்டு சம்பாதிக்கிறான். இவர் சம்பாதித்த காசைப் பொருட்படுத்தாது தான் வாழுகிற சமுதாயத்தின் மீது தான் கொண்டிருக்கும் அக்கறையை வெளிப்படுத்துகிறார். தொழிலாளர் நலன் சார்ந்தும் நிறுவனங்கள் சார்ந்தும் அமைந்த தணிக்கைத் துறை அலுவலர் பணி ஓய்வு பெற்ற பின்பு எழுதிய கவிதைகளின் தொகுப்பு இது! தன்னைச் சுற்றிய சமுதாயத்தைப் பற்றித் தானே சிந்தித்ததைத் தனக்குத் தெரிந்த மொழியில் தானே பதிவிட்டிருக்கும் இந்த எழுபது வயது இளைஞருடைய கவிதைகளை இந்த எண்பது வயது முதியவன் படித்தேன்! சுவைத்தேன்! அதனால் பகிர்ந்தேன்! நீங்களும் சுவைக்க வேண்டுமென்பதற்காக!

    தணிக்கையாளர் அரிமா .தண்டபாணி M.A.,M.L.M.,M.B.A.,

    (தொடரும்…)

    Share
  • பழகத் தெரிய வேணும் – 99

    பழகத் தெரிய வேணும் – 99

    நிர்மலா ராகவன்

    தானே வராது வாய்ப்பு

    “எனக்கு அதிர்ஷ்டமே கிடையாது!” பலரும் முனகுவார்கள்.

    நாம்தான் அதைத் தேடிப் போகவேண்டும் என்று அவர்களுக்குப் புரிவதில்லை.

    அதிர்ஷ்டம் எப்படிக் கிடைக்கும்?

    முதலில் உழைப்பு. அதன்பின், உழைப்பைப் பாராட்டி புதிய வாய்ப்புகள் கிடைக்கும்போது அவற்றை நழுவ விடாதிருப்பது.

    கதை

    இசைத் துறையில் பட்டம் பெற்ற இளைஞர் குருசாமி.

    திரையுலகில் சேர்ந்தால், புகழுடன் நிறைய பணமும் கிடைக்குமே என்ற பேரவா அவருக்கு.

    தான் மெட்டமைத்த பாடல்களைப் பதிவு செய்து, ஓர் இயக்குநருக்கு அனுப்பினார்.

    “உடனே வாருங்கள்,” என்ற அழைப்பு வந்தது.

    இப்போது குருசாமிக்குத் தயக்கம் ஏற்பட்டது. திரையுலகைப் பற்றித் தாறுமாறாகப் பேசுகிறார்களே! அங்கு போய், தான் மாறிவிட்டால்?

    “நான் அங்கு சென்றால், எப்போதும்போல் நல்லவனாகவே இருக்க முடியுமோ என்ற பயம் வந்துவிட்டது,” என்று என்னிடம் தெரிவித்தார்.

    இதை முதலிலேயே யோசித்திருக்க வேண்டாமா?

    போதாக்குறைக்கு, `கல்யாணமானா, நிச்சயம் குழந்தை இருக்கணும்,’ என்று எவளோ கூறியிருக்கிறாள். அப்படித் தன் மனத்தைக் கலைத்தது அவள் தவறு என்பதுபோல், அதையே பலமுறை ஆத்திரத்துடன் கூறினார்.

    ஆரம்பிக்கும் முன்னரே அச்சமும் தயக்கமும் அடைந்தால் வாய்ப்பு நழுவிவிடாதா!

    எந்த வாய்ப்பையும் பயன்படுத்திக்கொள்ளுமுன், அதனால் நன்மையும், நீடித்த மகிழ்ச்சியும் கிடைக்குமா என்று யோசிக்க வேண்டுவது அவசியம். அதற்கு ஆரோக்கியத்தைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.

    அதன்பின், குருசாமி போயிருக்க வேண்டிய இடத்திற்கு வேறு ஒருவர் நியமிக்கப்பட்டு, பெரும் புகழை அடைந்தார்.

    கிடைத்த நல்ல சந்தர்ப்பத்தை உரிய காலத்தில் பற்றிக்கொள்ளாத வருத்தம்தான் குருசாமிக்கு நிலைத்தது.

    இலக்கு சரியாக இருந்து, அதற்கான ஆராய்ச்சியைச் செய்து, திறமைகளையும் வளர்த்துக்கொண்டால் தோல்வி வராது.

    ஊக்கமளிக்கும் உறவினர்களும், ஓரிரண்டு நண்பர்களும் இருந்தால் கூடுதல் நன்மை.

    ஏன் தோல்விக்கு மேல் தோல்வி?

    “நான் என்னென்னவோ செய்து பார்த்துவிட்டேன். எல்லாவற்றிலும் தோல்விதான்!” என்று புலம்புகிறவர் தன்னால் என்ன முடியும் என்பதை உணராதவர். தன் மனத்தின் குரலைவிடப் பிறருடையதற்கு அதிகம் முக்கியத்துவம் கொடுப்பவர். நம் முன்னேற்றத்தில் நம்மைவிட யாருக்கு அதிக அக்கறை?

    சவால்கள், அவமதிப்பு போன்றவற்றைப் பொறுத்துக்கொண்டு அலட்சியப்படுத்தினால்தான் முன்னேற முடியும்.

    எந்த வாய்ப்பும் பிரச்னையாகத்தான் ஆரம்பிக்கும்.

    கதை

    எங்கள் பள்ளியில், கேள்வித்தாள்களை ஆசிரியர்களே கணினியில் தட்டச்சு செய்துவிடவேண்டும் என்று புதிய விதிமுறையைக் கொண்டுவந்தனர்.

    உணர்ச்சிவசப்பட்டு, `எப்போதும் நான் என் கைப்படத்தான் எழுதுவேன்!’ என்று பிடிவாதம் பிடித்தால் புதியனவற்றைக் கற்று முன்னேறும் வாய்ப்பு கிடைக்குமா?

    ஒரு கணினி வாங்கிப் பழகத் தொடங்கினேன். நாற்பது வயதுக்குமேல் எதையும் கற்பது எளிதல்ல. எரிச்சலாக இருந்தது.

    அதை மாற்றி, உற்சாகம் அளித்துக்கொள்ளும் வகையில், தினசரியின் முதல் பக்கத்திலிருந்த செய்திகளிலிருந்து முதலிரண்டு வார்த்தைகளை ஒன்றாக இணைத்து ஒரு வாக்கியம் அமைத்தேன்.

    அது இப்படி இருக்கும்: மந்திரி – மரண தண்டனை – கற்பழிப்பு, கொலைக் குற்றத்திற்காக …

    எனக்கே சிரிப்பு வர, அலுப்பு மறைந்தது.

    சுமாராகத் தட்டச்சு செய்ய வந்தபின், உட்கார்ந்திருந்த போதெல்லாம் விரல்கள் நர்த்தனம் ஆடிக்கொண்டே இருக்கும், மனக்கண்ணால் இசைப்பலகையை இயக்குவது போல்.

    “டீச்சர்களுக்கெல்லாம் கம்ப்யூட்டர் பயன்படுத்தத் தெரியுமா?” என்று ஒரு மாணவன் அதிசயப்பட்டுக் கேட்க, பெருமையாகிவிட்டது.

    முதலில் ஆங்கிலம், அதன்பின், தமிழ்.

    கட்டாயம் என்பதால் கற்றது இப்போது பல வகைகளிலும் பயனுள்ளதாக இருக்கிறது.

    கிடைக்கும் சந்தர்ப்பங்களால் நமக்கு என்ன நன்மை விளையும் என்று எப்போதும் அலசுவது சரிதானா?

    கோலாலம்பூரில் பெருவெள்ளம்

    கடற்கரைப் பகுதியில் இல்லாத தீபகற்ப மலேசியத் தலைநகரில் நூறு வருடங்களாக வெள்ளம் கிடையாது.

    இப்போதோ, பாதுகாப்பு வேண்டி, மக்கள் கூரைமேல் ஏறினார்கள்.

    ஒருவர் தாம் வைத்திருந்த படகால் அவர்களுக்கு உதவி செய்யலாமே என்று தோன்ற, காரின்மேல் படகுடன் சென்றார் – பலமுறை.

    நல்லது செய்தாலும், சந்தேகப்படவென்று சிலர் இருப்பார்களே!

    குருத்வாரா

    சீக்கியர்கள் ஒன்றுகூடவும் வழிபடவும் அமைக்கப்பட்ட இடங்கள், குருத்வாரா.

    சேவை மனப்பான்மை கொண்ட பிற இனத்தவரும் இணைந்து, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு தயாரித்து வழங்கினர்.

    “சீக்கியர்கள் தயாரிக்கும் உணவை நாம் சாப்பிடலாமா? ஹலாலாக (halal) இருக்குமா?” என்ற கேள்விகள் எழுந்தன, மலாய்க்காரர்களிடமிருந்து.

    அது என்ன, ஹலால்?

    ஆடு, மாடு, கோழி போன்றவற்றை இஸ்லாமியரே பூசை செய்தபின் கொல்வதாம். இதற்கு விலக்கு மீன், முட்டை.

    “மத, இன வித்தியாசம் பாராது, பிறருடைய கொள்கைகளை மதித்து, தன்னலமின்றி சேவை செய்பவர்களை அவமதிப்பதா?” என்று ஒரு மலாய்ப் பெண்மணி காரசாரமாக இணையத்தில் கேட்டிருந்தார்.

    சுற்றிலும் தண்ணீர் இருந்தாலும், குடிநீர்ப் பற்றாக்குறை.

    உணவு மட்டுமின்றி, ஆடை, குடிநீர், சிசுக்களுக்கான டயாபர் போன்றவற்றையும் பொதுமக்கள் அளித்தனர். பலர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளைச் சுத்தம் செய்ய முன்வந்தனர்.

    `இதனால் நமக்கு என்ன நன்மை?’ என்று யோசிக்க அவர்கள் அரசியல்வாதிகள் அல்லர். `பிறரது துன்பத்தில் பங்குபெற முடிந்ததே!’ என்ற நிறைவு போதும் அவர்களுக்கு. அவர்களே வெள்ளத்தில் மாட்டிக்கொண்டும் இருக்கலாம். அந்த அனுபவத்தையும் சவாலாக எடுத்துக்கொண்டிருப்பார்கள்.

    `நம்மால் இவ்வளவு செய்ய முடியுமா!’ என்ற அதிசயம் எழ, அதனால் நிறைவும் ஏற்பட்டிருக்கும்.

    கதை

    குமரன், பத்து வயதுப் பையன். பொருளாதார வசதி குறைந்த விதவைத் தாய் மறுமணம் செய்துகொண்டதும், எங்கள் உறவினர் வீட்டில் வேலையாளாகச் சேர்ந்தான். படிப்பைத் தொடர்ந்தாலும், தேர்ச்சி பெற முடியவில்லை.

    வீட்டு வேலை முடிந்ததும், ஓயாது தொலைக்காட்சிதான் துணை.

    “நேரத்தை இப்படி வீணடிக்கிறாயே!” என்று அவனைச் செஞ்சிலுவைச் சங்கத்தில் சேர்த்துவிட்டார்கள்.

    அலுவலகம் ஒன்றில் உத்தியோகம் கிடைத்தபோதும், தொடர்ந்து உழைத்தான். பிறருக்கு உதவும் மனப்பான்மை வலுத்தது.

    ஆனால், அதைப் பெருமையாகக் கருதவில்லை.

    தீயணைக்கும்போதோ, வெள்ளம் பெருகியபோதோ தான் அடைந்த அனுபவங்களை ரசித்துக் கூறுவான்.

    அந்த வேலைகளெல்லாம் எளிதாக இருந்திருக்குமா? உயிருக்கே ஆபத்து ஏற்பட்டிருக்கலாமே!

    எதையும் எதிர்பார்த்துக் குமரன் பிறருக்கு உதவவில்லை. ஆனாலும், சவால்களை `வாய்ப்பு’ என்று எடுத்துக்கொண்டதால், உத்தியோகத்தில் பதவி உயர்வு கிட்டியது குமரனுக்கு.

    “Smooth seas do not make skilful sailors” (கடலில் கொந்தளிப்பு இல்லாவிட்டால், தேர்ந்த மாலுமிகளாக ஆக முடியாது (ஆப்பிரிக்கப் பழமொழி).

    “எனக்குச் சரியான சந்தர்ப்பம் அமையவில்லை!” என்று மூக்கால் அழுபவர்கள் வாய்ப்புகளை நழுவ விடுகிறார்கள், அவை கஷ்டம் என்று.

    `கஷ்டமாக இருந்தால் என்ன!’ என்று துணிகிறவர்களே அந்த சந்தர்ப்பத்தையே நல்ல வாய்ப்பாக ஆக்கிக்கொள்கிறார்கள்.

    யாருக்குத்தான் கஷ்டங்கள் இல்லை?

    அவற்றை நாம் எப்படி எதிர்கொள்கிறோம் என்பதில்தான் வெற்றி, தோல்வி அடங்கியிருக்கிறது.

    Share
  • எமிலி டிக்கின்ஸன் கவிதைகள்

    எமிலி டிக்கின்ஸன் கவிதைகள்

    எமிலி டிக்கின்ஸன் கவிதைகள்-8: கொடிய இரவுகள் 

    ஆங்கில மூலம் : எமிலி டிக்கின்சன்
    தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

    கொடிய இரவுகள் ! கொடிய இரவுகள் !
    உன்னோடு சுகிக்க இருந்தால்
    இன்ப உணர்வு இரவுகள் நமக்கு
    ஆடம்பரச் சுகம் அதுதான் !

    காற்றால்  எந்தப் பயனில்லை.
    துறைமு கத்தில் வடமிட்டு
    கட்டிய கப்பலுக்கு,
    திசைக் கருவி, வரைப் படம்
    உதவி செய்யா விடில்.

    படகு ஏடனுக்குப் போகும்
    கடல் பயணம் !
    இன்றிரவு  அதில் அடைபட்டு
    உன்னோடு  கூடல் !

    *******************

    Wild nights – Wild nights

    Wild nights – Wild nights!
    Were I with thee
    Wild nights should be
    Our luxury!

    Futile – the winds –
    To a Heart in port –
    Done with the Compass –
    Done with the Chart!

    Rowing in Eden –
    Ah – the Sea!
    Might I but moor – tonight –
    In thee!

    ************************

    எமிலி டிக்கின்ஸன் கவிதைகள் -9: இரவுப் பகிர்வு உன்னோடு

    ஆங்கில மூலம் : எமிலி டிக்கின்சன்
    தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

    நமது இரவுப் பகிர் வு தாங்குவது
    நமது காலைப் பகிர்வு அடுத்து
    நமக்கு இடைவெளி, இனிய நிரப்பு
    நமக்குப் பிரிவு, மிக மிக வெறுப்பு

    இங்கோர் தாரகை, அங்கோர் தாரகை
    அவற்றில் சில பாதை தவறி யவை.
    இங்கோர் மூடுபனி, அங்கோர் மூடுபனி.
    அதற்குப் பின் வருவது பகல்.

    **************

    Our share of night to bear—
    Our share of morning—
    Our blank in bliss to fill
    Our blank in scorning—

    Here a star, and there a star,
    Some lose their way!
    Here a mist, and there a mist,
    Afterwards—Day!

    **************

    எமிலி டிக்கின்ஸன் கவிதைகள் -10: நம்பிக்கை

    ஆங்கில மூலம் : எமிலி டிக்கின்சன்
    தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

    “நம்பிக்கை” என்பது சிறகு முளைத்தது
    ஆத்மா வேரில் தோன்றி  எழுவது.
    இசை பாடும் ஏது சொற்கள் இன்றி !
    நிற்காது ஒரு போதும் அந்த இசை !

    மிக்க இனிப்பது புயல் வரும் போது
    புண்பட்டு புள்ளினம் தவிக்கும் போது
    நன் நம்பிக்கை  பல்லுயிர் காக்கும்.

    குளிர் நாட்டில் கேட்டுளேன் நானதை
    கொந்தளிக்கும் கடல்களில் கேட்டுளேன்
    எல்லை மீறிய நிகழ்வில் நம்பிக்கை
    எச்சிறு துண்டும் கேளாது என்னிடம்.

    *******************

    “Hope” is the thing with feathers –
    That perches in the soul –
    And sings the tune without the words –
    And never stops – at all –

    And sweetest – in the Gale – is heard –
    And sore must be the storm –
    That could abash the little Bird
    That kept so many warm –

    I’ve heard it in the chillest land –
    And on the strangest Sea –
    Yet – never – in Extremity,
    It asked a crumb – of me.

    ************

    எமிலி டிக்கின்ஸன் கவிதைகள் – 11: வர்த்தக வாழ்வு 

    ஆங்கில மூலம் : எமிலி டிக்கின்சன்
    தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

    என்னைக் கொடுத்தேன் அவனுக்கு நானே
    அவனை வசீகரித்தது பண வரவுக்கு,
    அமைதி வாழ்வுக்கு அது ஓர் உடன்பாடு
    அவ்விதம் ஒப்புக் கொள்ளப் பட்டது.

    நானே ஏழைக்கு ஓர் உதாரணம்
    என் சொத்து மதிப்பு ஏமாற்றம் தருவது
    வர்த்தகன்  எதிர்பார்ப் புக்கு மாறாய்.
    காதல் மதிப்பு கண்ணை மறைப்பது.
    வர்த்தகன் குதிரை வாங்கும் வரை
    மசாலா தீவில் அது தனித்தி ருக்கும்.

    ஒருவகையில் இருவர்க்கும் பண நொடிப்பு
    சில பேர் அதிலும் ஊதியம் காண்பார்
    வாழ்வுக்கு இனிய  உடல் கொடுப்பு,
    ஒவ்வோர் இரவிலும்  கடன் கொடுப்பு
    ஒவ்வோர் பகலிலும்  பண இழப்பு.

    *********************

    I Gave Myself To Him

    I gave myself to Him
    And took Himself, for Pay,
    The solemn contract of a Life
    Was ratified, this way

    The Wealth might disappoint
    Myself a poorer prove
    Than this great Purchaser suspect,
    The Daily Own — of Love

    Depreciate the Vision
    But till the Merchant buy
    Still Fable — in the Isles of Spice
    The subtle Cargoes — lie —

    At least — ’tis Mutual — Risk —
    Some — found it — Mutual Gain —
    Sweet Debt of Life — Each Night to owe —
    Insolvent — every Noon —

    Share
  • கண்ணனைப் பணி மனமே | விஜயலட்சுமி

    கண்ணனைப் பணி மனமே | விஜயலட்சுமி

    ‘கண்ணனைப் பணி மனமே’ என்ற இனிய பாடலைத் தமது 72 வயதில் திருமதி விஜயலட்சுமி பாடுகிறார், கேட்டு மகிழுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • புடலங்காய் அறுவடை

    புடலங்காய் அறுவடை

    நம் வீட்டு மாடித் தோட்டத்தில் இன்று புடலங்காய் அறுவடை.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • ஆழியாறு அணை – அசர வைக்கும் அழகு

    ஆழியாறு அணை – அசர வைக்கும் அழகு

    கோவையிலிருந்து 65 கி.மீ. தொலைவில் உள்ள ஆழியாறு அணை, நீர் நிரம்பி நிற்கிறது. மலைகள் சூழ அமைந்துள்ள இந்த அணை, பெருந்தலைவர் காமராஜர் ஆட்சியில் கட்டப்பட்டுள்ளது. இயற்கையின் கொடையாக, அமைதியின் முனையாக உள்ள ஆழியாறு அணையின் அசர வைக்கும் அழகு இதோ.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • செம்போத்தின் குரல்

    செம்போத்தின் குரல்

    செம்போத்தின் குரல் இதோ. குரலெழுப்பும்போது இதன் உடலே அதிர்கிறது என்பதை இன்றுதான் கண்டேன்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share