Blog

  • படித்தேன்! சுவைத்தேன்! பகிர்ந்தேன்! – 20

    படித்தேன்! சுவைத்தேன்! பகிர்ந்தேன்! – 20

    முனைவர் ச. சுப்பிரமணியன்

    வசந்தராசன் பாடிய ‘கருவறைப் பதிகம்’

    முன்னுரை

    தம்பி வசந்தராசன் உணர்ச்சிக் கவிஞர். தன்னைப் பாதித்த பொருண்மைகளைக் கவிதையாக்கும் பேராற்றல் படைத்தவர். ‘நிறைத்ததும் நிறைந்ததும் நானேதானே! நிறைத்தவர் நிறைந்தவர் நீங்கள்தானே! என்னும் பண்பாட்டுக்கும் மனிதநேயத்திற்கும் நெருக்கமானவர். கவிதையை வணிகமாக்காமல் வாழ்க்கைத் தடமாக மாற்ற முயல்பவர். பெற்றெடுத்து வளர்த்த தாயைப் பேணிப் புரக்க முடியாத வேதனைச் சூழலை எண்ணி மருகும் இவர், “பூப்படையல் வாடிவிடும் பொன்படையல் மங்குமென்று” அந்தத் தாயைப் பாப்படையல் தலைவியாக்கிப் பாடிய நூல்தான் ‘தாயின் மடியில்’ என்பதாகும். தாயின் மடியில் என்னும் இச்சிறுநூல் பதினேழு எண்சீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தங்களால் ஆனது. தேமா, புளிமாக்களைச் சீராகக் கருதாமல் தாயின் சிறப்புக்களையே சீராக்கி எழுதியிருக்கிறார். எழுதியவர் வைத்த பெயர் ‘தாயின் மடியில். பாடல்களை மனமுருகிப் படித்த நான் சூட்டிய பெயர் ‘கருவறைப் பதிகம்’. இளையராஜாவை இசைஞானியாக்கியவர் கலைஞர். பாடல்களைப் பதிகமாக்கியவன் நான். பெயரில் என்ன இருக்கிறது பெருமை? தாயின் பேதைமையில் அல்லவா இருந்தது நம் வாழ்வு?. இளகிய இதயத்திலிருந்து இறக்கிவைத்த சுமை. எல்லாருக்கும் பொதுவான உணர்வு கவிதையாகிறபோது என்னையும் பாதிக்கும் உங்களையும் பாதிக்கும்! கவிதையின் வெற்றி அதுதானே! வாருங்கள் கருவறைக்குள் செல்லலாம்!

    தான் எழுதும் அனைத்துக் கவிதைகளும் பிறரால் சுவைக்கப்படல் வேண்டும் என்று ஒரு கவிஞன் கருதலாம். எதிர்பார்க்கலாம். அது அவனுடைய துடிப்பு கலந்த ஆர்வம். எதிர்பார்ப்பு. ஆனால் நடப்பியல் முற்றிலும் வேறானது. முற்றும் எல்லா வகையிலும் சிறப்பாக அமைந்து அப்படியும் சுவைக்கப்படலாம். ஏதாவது சில பகுதிகள் சுவையாக இருக்கலாம். அலலது  ஒரு சில பாடல்களோ ஒரு பாடலோ கூட அற்புதமாக அமைந்துவிடலாம். அது மட்டுமன்று. ஒரு நீண்ட கவிதையில் அனைத்தும் கவிதைப்பதமாகவே அமைந்துவிடும் என்று சொல்வதற்கில்லை. பத்தாயிரம் பாடல்களுக்கு மேற்பட்ட கம்பராமாயணத்தின் அனைத்துப்பாடல்களுமா கம்பனைக் கவிச்சக்கரவர்த்தி ஆக்கிவிடுகின்றன? ஆனால் ஒரு சில பாடல்களில் அவன் உலகக்கவிகளுக்கெல்லாம் கவிவேந்தன் ஆகிவிடுவதைக் காணலாம். ‘கனி வரும் காலத்து ஐய! பூக்கொய்யக் கருதலாமோ?” ‘அழகெலாம் ஒருங்கே கண்டால் யாவரே ஆற்ற வல்லார்,’ என்னும் கம்பனின் வினாக்கள் அவனை உலககவி வேந்தனாக்கும். காரணம் ‘கவிதைப்பதம்’ ஒரு நீண்ட கவிதையிலும் அமையலாம். சிறிய கவிதையிலும் அமையலாம் ஒரு அடியில் மட்டுமே அமைந்திருக்கலாம். ஒரு சீரில் அல்லது அசையில் கூட அமைந்திருக்கலாம்.  இந்த அளவை நான் என் கட்டுரைகள் பலவற்றில் வாய்ப்பு கிட்டியபோதெல்லாம் பதிவிட்டு வருகிறேன். ஒரு படைப்பை முழுமையாகப் படிப்பது வேறு. படைப்பாளன் ஒருவனின் அனைத்துப் படைப்புக்களையும் முழுமையாகப் படிப்பது என்பது வேறு. நம் உள்ளத்தை எது கவர்கிறது? எப்படிக் கவர்கிறது? அந்தக் கவர்ச்சிக்கு எது காரணம்? என்பதைப் பொருத்துத்தான் அந்தச் சுவையுணர் திறன்  அமையும்.

    அம்மாவும் தாயும்

    எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவாக இருப்பினும ஒவ்வொரு சொல்லுக்கும் ஒரு தனித்த காரணம் உண்டு. பலபொருள் ஒரு சொல் என்பதற்கும் இது பொருந்தும். சான்றாக ‘கொக்கு பறந்தது’ என்றால் பறந்தது என்ற வினையால் கொக்கு என்பது பறவையைக் குறிக்கும். ‘கொக்கு காய்த்தது’ என்றால் காய்த்தது என்ற வினையால் அது மாமரத்தைக் குறிக்கும். இரண்டிடத்தும் இருவேறு பொருளைத் தருகிற ‘கொக்கு’ என்பது ஒரு சொல் அல்ல. அந்தச் சொல்லில் உள்ள எழுத்துக்களின் ஒற்றுமை சொல்லின் ஒற்றுமையாகக் கருதப்படும். உண்மையில் பலபொருள் ஒரு சொல் என்பதே கிடையாது. அதாவது ஒரு சொல் ஒரு பொழுதில் ஒரு பொருளைத்தான் குறிக்கும். ‘அம்மா’ ‘தாய்’ ‘அன்னை’ என்னும் சொற்களும் அத்தகையனவே. எல்லாச் சொற்களும்  தாய்மையோடு தொடர்புடையதுதான். ஆனால் அம்மா என்பது தாயினும் வேறுபட்டது. ‘அம்’ என்னும் வேரிலிருந்து கிளைத்த சொற்களில் அதுவும் ஒன்று. ‘அம்’ என்றால் அழகிய என்று பொருள். ‘அம்ம கேட்பிக்கும்’ என்பது தொல்காப்பியம் ‘அம்ம’ வாழி தோழி என்பது சங்க இலக்கியங்களில் பெருவழக்கு. தான் பெற்றெடுத்த குழந்தைக்காக எதனையும் யாரிடத்தும் கேட்பவள் ஆதலின் அவள் அம்மா எனவே பெற்றவள்தான் அம்மா. ஆனால் தாய் என்பவள் அம்மாவினும் வேறானவள். குழந்தை பெறுகின்ற எல்லாரும் தாய்தான். தாய் உறவுச் சொல் அன்று. அம்மாதான் உறவுச்சொல். அம்மா என்பது வியப்பிடைச் சொல்லாக வரும். தாய் என்பது அவ்வாறு வராது. ஒருவனுடைய தாய் மற்றவனுக்கும் தாய்தான். ஆனால் ஒருவனுடைய அம்மா மற்றவனுக்கு அம்மாவாக முடியாது.

    ‘அன்னை’ என்ற சொல் முழுக்க முழுக்கப் பண்பைக் குறிக்கும் சொல். தாய்மை உணர்வால் தன்னைச் சாராதனவற்றையும் தழுவிக்கொள்ளும் தூய நல் உள்ளங் கொணடவரையே அன்னை என்று அழைக்கிறோம். அன்னை தெரசா, அன்னை வேளாங்கண்ணி, அன்னை மரியாள், என்பன காண்க. இவற்றுக்கு மாற்றாக ‘அம்மா தெரசா’ என்றோ ‘தாய் தெரசா’ என்றோ நாம் அழைப்பதில்லை.

    இந்த வேறுபாடு தெரியாவிட்டால் பெறுகின்ற மொழிப்பயன் என்பது ஏதுமில்லை. தமிழ் அழகான மொழிமட்டுமன்று. ஆழமான மொழியும் கூட.

    ஒரு துளியின் பனிஉண்டு கால மெல்லாம்
    உயிர் வாழும் சக்ரவாகப் பறவை போல
    ஒருபருக்கைச் சோற்றினிலும் உயிர்த்திருப்பார்!
    உணவுமலை குவிந்திருக்கு! எழுந்து வாம்மா!
    ஒரு கண்ணால் உறங்குகின்ற ஆற்றல் பெற்றாய்!
    மறுகண்ணால் எமைகாக்க விழித்தி ருந்தாய்
    இருகண்ணும் உறங்கிவிட்டால் என்ன செய்யும்?
    எமைகாக்க இயேசுவைப்போல் எழமாட் டாயா?”

    முதலை விழித்துக் கொண்டே தூங்குமாம். அதாவது முதலையின் கண்களுக்கு இமைகள் கிடையாது. ஒரு தாயும் முதலையைப் போல்தான். இல்லறக் கடமைகளில் களைத்துப் போன தாய் ஒரு கண்ணால் கண்ணயர்கிறாள்.. மற்றொரு கண்ணால் தான் பெற்ற மக்களைக் காக்கிறாள். மீன தன் பார்வையாலேயே குஞ்சு பொரிப்பதாகச் சொல்கிறார்கள். சமைத்த உணவு மலையைப் பிள்ளைகளுக்குக் கொடுத்த அந்தத் தாய் ஒரு பருக்கைச் சோற்றிலேயே உயிர்வாழ்கிறாளாம். இன்று மறைந்து போனாள். அவள் இருகண்ணும் மறைந்தன! அவளும் தூங்கவில்லை. எங்களைக் காப்பதற்கும் ஆளில்லையே என்றெல்லாம் புலம்பித் தீர்க்கும் கவிஞர், இறுதியிலே சொல்கிறார்.

    எமைகாக்க இயேசுவைப்போல் எழமாட் டாயா?”

    இவ்வுலகில் உயிர்த்தெழுந்த அருளாளர் இயேசு ஒருவரே. அவரை உவமமாக்குகிறார். படையலிலே வைத்த பண்டம் படைப்பவர்க்கு ஆகுமேயன்றிப் படம் இறங்கி உண்பதில்லை என்பது அறிவியல் உண்மை. ஒரு நம்பிக்கைதான். ‘உணவு மலை குவிந்திருக்கும் எழுந்து வாம்மா’ என்னும் தொடர் காலம் கடந்த யதார்த்த சூழலைக் காட்டுவதாக அமைந்துள்ளது.

    இலக்கிய நெறிகள் இரண்டு

    வாழ்க்கை நெறிகளையும் வாழ்வியல் தத்துவங்களையும் தமிழிலக்கியப் பகுதிகள் இரண்டுவகையாக வெளிப்படுத்தி நிற்கின்றன.  மயிலிறகால் வருடுவதைப் போன்று அறநெறி கூறும் போக்கில் நேர்முகமாக உண்மையை மறைத்து இலைமறை  காய்மறையாக உணர்த்துவது ஒன்று. பொட்டென்று போட்டுடைத்து நடப்பியலை முன்னிறுத்தி ‘மருந்து கசக்கும் உண்மை சுடும்’ என்ற கோட்பாடுகளின் அடிபபடையில் நம்பிக்கை வைத்து உணர்த்துவது மற்றொன்று.

    பரத்தையர் பிரிவை இலக்கியமாகவே பாடியிருக்கும் பழந்தமிழிலக்கியங்கள் பரத்தையினால் வரும் நோய்பற்றிப் பாடவில்லை. பரத்தையர் தொடர்பு ஒரு தனிமனிதனின் சமுதாய மதிப்பைப் பாழடிக்கும் பாங்கினைப் பாடவில்லை. மாறாகப் பரத்தையர்களை இரக்கத்திற்குரியவர்களாகவும் அவர்களின் அந்த நிலைக்கு ஆண்களே காரணம் என்பதுபோலவும் பாடினார்கள். பாடிவருகிறார்கள்.

    உண்மையைப் போட்டுடைக்கும் நெறியை அருணகிரிநாதர், பட்டினத்தார், கண்ணதாசன் முதலிய கவிஞர்களிடத்தில் காணலாம். உருவகத்திற்கு மட்டுமே பயன்படுத்தப்படும் உருப்படியாகவே தாய் கருதப்பட்டிருக்கிறாள். சமுதாய வாழ்வில் தாய் பெற்ற இடத்தை இலக்கியத்தில் அவளால் பெற முடியவில்லை என்பது உண்மையா பொய்யா? ‘பெற்ற மனம்’ என்ற நாவலோடு முடித்துக் கொள்ளலாமா? இல்லை ‘அம்மா வந்தா(ள்)ல்’ போதுமா?

    தாய்மைக்குத் தனி இலக்கியம் உண்டா?

    தாய்க்குத் தனி இலக்கியம் தமிழில் இல்லை. தாய்மையைப் புகழ்ந்து பாடும் பெருங்காவியமும் இல்லை. சிறுகாவியமும் இல்லை. உலகப்பொதுமறை என்று போற்றப்படும் திருக்குறளில் தாயைப் பற்றிய குறிப்புக்கள் பிற உறவுகளைச் சார்ந்தே குறிப்பிடப்படுகிறது, ‘ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும்’ ‘சான்றோன் எனக் கேட்ட தாய்’ என்பன அவற்றுள் சில. மனைவிக்காக ‘வாழ்க்கைத் துணை நலம்’ பாடிய திருவள்ளுவர் தாய்க்காகத் தனிஅதிகாரத்தை எழுதவில்லையே! ‘ஈன்றாள் பசி காண்பான் ஆயினும்’ என்று பசிக்க மட்டுமே தாய் பயன்பட்டிருக்கிறாள். அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்றும் மாதா பிதா குரு தெய்வம் என்றும் அமைதியடைந்தோம். தாய்க்குப் பின் தாரம் என்ற திரைப்படத் தலைப்பில் மயங்கினோம். அவள் பட்ட துயரத்தைப் பாட ஒரு புலவன் இல்லாமல் போனது ஏன்?

    கவிதைகளிலும் வழக்கிலும் தாய்நாடு, தாய்மொழி, தாய்மேல் ஆணை தாய்மேல் சத்தியம் ‘என்றெமது அன்னை கை விலங்குகள் போகும்? என்பன போன்ற சொற்களோடு தாய்மை இலக்கியம் தன்னிறைவு பெற்றதா?இலக்கியப் பெரும்பரப்பில் காணப்படும் இந்த வறட்சிநிலைதான் திரைப்படங்களில் இடம் பெறும் தாய்மை பற்றிய பாடல்களில் பெரும் ஈர்ப்புக்குக் காரணமானது என்பது ஒரு கசப்பான உண்மை. ‘அன்னையைப் போல் ஒரு தெய்வமில்லை” என்னும் ஷெரீப் பாடலிலும், தாயிற்சிறந்த கோயிலுமில்லை என்னும் உளுந்தூர்பேட்டை சண்முகம் பாடலிலும் ‘அம்மா என்றழைக்காத உயிரில்லையே என்னும் வாலியின் வரிகளிலும் இலட்சக்கணக்கான ரசிகர்கள் மனம் பறிகொடுப்பதற்கு அன்னை பற்றிய இலக்கிய வறட்சியே காரணம் என்பது என் துணிபு. .கர்நாடக இசைக்கச்சேரிகளில் இறுதியாகப் பாடும் தமிழ்த் துக்கடாக்களைப் போலவே தாய் பற்றிய சிந்தனைகள் தமிழிலக்கியக் கச்சேரியில் துக்கடாவாகிப் போனதற்கான காரணம் அறியக் கூடவில்லை!

    எண்ணி மருகும் கவி நெஞ்சு!

    ‘இரக்கமுடையவர்கள் பேறுபெற்றவர்கள்’ என்பது விவிலியம். இரக்கமில்லாதவர்கள் கவிதை எழுத முடியாது என்பது தமிழியம். வசந்தராசன் இரக்கமுடையவர். இளகிய மனம் படைத்தவர். இது அவருடைய படைப்புக்களிலிருந்தே பெறப்படும் உண்மையாகும். தன் அன்னை பெற்ற வேதனையை ஒவ்வொன்றாக எண்ணி வருந்துகிறார். துடிக்கிறார்.

    பள்ளி சென்ற பிள்ளை மழையில் நனைந்து கொண்டே வீடு திரும்பினால் நனைந்து வந்த காரணத்தால் பையனைத்தான் திட்டுவான் தந்தை. ‘மழை நின்ற பிறகு வரக்கூடாதா?’ என்று பிள்ளையைக் கண்டிக்கிற தாய் “நாசமாப் போன மழை எம் புள்ள வீடு வந்த சேர்ந்தபிறக பெய்யக்கூடாதா?” மழையை ஏசுவாள்.

    அரைநேரப் பள்ளியில் நண்பகல் வீடு திரும்பினால் மகனின் சுடுகின்ற உச்சி தொட்டுக் கதிரவனை வைவாள்!

    ‘எம்புள்ள தப்பு செய்ய மாட்டானே’?  நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவாள் தாய்.

    பிறரெல்லாம் அளந்து சொல்வதை கன்னியம்மாள் கண்ணால் கண்டே சொல்வாராம். உண்மைதானே!

    ‘இந்தா இம்புட்டு’ என்பதுதானே அந்தக் கால டீ ஸ்பூன்! ‘கையறி மடமை’ என்பார் இளங்கோ அடிகள்.

    அகத்தின் அழகு முகத்திலே என்பதற்குத் தமிழாசிரியர் உரை சொல்வதற்குள் முகம் கருத்துவிடும்.! தாயோ FACE IS THE INDEX OF THE MIND  என்பதை அடுத்த நொடியே வெளிப்படுத்திக் காட்டிவிடுவாள்! .

    ஒரு வரி எழுதுகிறார் இராசன்! முகம் பார்த்தே விடைசொல்வாய்!’ அருமையிலும் அருமை!

    தாய் தன் முந்தானையால் நனைந்த மகனை அல்லது குளித்து வந்த மகனைத் துவட்டுகிறாளாம். அந்த முந்தானை வழி அவளுடைய அனுபவமும் அறிவும் பாய்ச்சப்படுகிறதாம்.

    மூளை படிப்பதற்கும் சிந்திப்பதற்குமான கருவி. முழங்கால் நடப்பதற்கும் நாலுபேரிடம் பழகுவதற்குமான கருவி. இரண்டும் இணைந்தால்தான் அறிவு. படிப்பறிவு பட்டறிவு என்பவை இவைதான்!.

    மழையில் நான் நனைந்தாலும் வானை வைவாய்!
    மண்டையிலே சூடென்றால் கதிரை வைவாய்!
    பிழையே நான் செய்தாலும்எனது பிள்ளை
    பிழைசெய்யான் எனச் சொல்லி வாதம் செய்வாய்!
    முழம்போட்டுப் பார்க்காமல் அளவு சொல்வாய்!
    முகம் பார்த்தே விடைசொல்வாய்! மூளை யோடு
    முழங்காலும் முடித்து வைக்கும் அனுபவத்தை
    முந்தானைத் துவட்டிலிலே புரிய வைப்பாய்!”

    கவிதை உலகியல் சார்ந்து அமையவேண்டும். நடப்பியல் அதனுள் நர்த்தனம் புரிய வேண்டும். வெறுங்கற்பனை விழலுக்கு இறைத்த நீர்! வசந்தனின் இந்த அனுபவம் வாழ்கின்ற அத்தனைக் கோடிப் பேரின் அனுபவம். இவர் எழுதுவது என்பது எழுத்துப் பேறு!

    பட்டினத்தாரும் பண்ணையாரும்

    பொதுவாகத் தாயின் பெருமை அவள் மறைவுக்குப் பின்தான் உணரப்படுகிறது. இந்த நிலை மாறிப் பெற்றவள் பெருமையை அவள் இருக்கும் போதே உணரவைப்பதுதான் இத்தகைய இலக்கியங்களின தலையாய நோக்கமாக இருக்க முடியும். முதியோர் இல்லங்களுக்கு மூடுவிழா நடத்தும காலம் நெருங்க வேண்டும். ஓர் உண்மையான இலக்கியத்தின் பயன் என்பது அதுதான். பணக்காரர் பட்டினத்தார் கூட நிலைமையாமை உணர்ந்த பிறகுதான் தாயின் பாசத்தை உணர்ந்தார். பாடினார். தமிழ்ப்புலவர்களும் பேராசிரியர்களும் அந்தப் பாடல்களைப் படித்து மனப்பாடம் செய்ய வேண்டும். மேலைநாட்டுத் திறனாய்வாளர்கள் இலக்கியக் கூறு அல்லது கவிதைக் கூறு எனக் கதைக்கும் உணர்ச்சி பட்டினத்தடிகள் பாட்டில் அமைந்துள்ள பாங்கை அனைவரும் உணர்ந்து பார்க்க வேண்டும்.

    காதென்று மூக்கென்று கண்ணென்று காட்டி என் கண்ணெதிரே
    மாதென்று சொல்லி வரும் மாயை தன்னை மறலிவிட்ட
    தூதென்று எண்ணாமல் சுகமென்று நாடும் .இத் துர்ப் புத்தியை
    ஏதென்று எடுத்துரைப்பேன்?
    என்பெற்ற தாயரும் என்னைப் பிணமென்று இகழ்ந்துவிட்டார்
    பொன்பெற்ற மாதரும் என்னைப் போவென்று சொல்லி புலம்பிவிட்டார்
    கொன்பெற்ற மைந்தரும் பின்வலம் வந்து குடமுடைத்தார்

    என்று பாடியவர் பட்டினத்தார் தாயை உறவுகளில் ஒன்றாகக் கருதிய அவர் பின்னாளில் உறவுகளுக்கெல்லாம் தாய் என்று தாய்மையைக் கொண்டாடினார். அந்தக் கொண்டாட்டம் அவர் அம்மாவின் அந்திமக் காலத்தில் நடைபெற்றது.

    முந்தித் தவங்கிடந்து முன்னூறு நாளசுமந்து
    அந்திப் பகலாய்ச் சிவனை ஆதரித்துதொந்தி
    சரியச் சுமந்து பெற்ற தாய்

    நொந்து சுமந்து பெற்று நோவாமல் தந்தமுலை
    தந்து வளர்த்தெடுத்துத் தாளாமேஅந்திபகல்
    கையிலே கொண்டென்னை காப்பாற்றும் தாய்

    ‘சுமந்து பெற்ற தாய்’, ‘காப்பாற்றும் தாய்’ என்றெல்லாம் பட்டினத்தார் பலபடப் பேசுவதை வசந்தராசனும் பாடியிருக்கிறார். பட்டினத்தடிகள் பாடலில் காணப்படும் ‘சுமந்து’ என்ற சொல்லை வசந்தராசன்  சுமப்பதில் எத்தகைய சுகம் காண்கிறது பாருங்கள்!

    களைபறித்தாய் அறுப்பறுத்தாய்! கல்சுமந்தாய்
    கைத்தறியில பஞ்சாக நைந்தி    ருந்தாய்!
    தளையணிந்தாய் வறுமைக்காய்! இறுக்கிப்போட்டு
    தன்வயிற்றுப் பசியடைத்தாய்! பத்துத் திங்கள்
    கருசுமந்து எனைமகனாய்ப் பெற்ற தன்றிக்
    காரணந்தான் வேறுண்டோபத்துத் திங்கள்
    உருசுமந்தாய்! உயிர்சுமந்தாய்! அம்மா! இன்று
    உனைச்சுமக்க முடியாமல் தவிக்கின்றேனே!

    மரபுக்கவிதை என்ற கதைத்துக் கொண்டு யாப்புப் பெட்டிக்குள்  கவிதைச் சவத்தை அடக்கம் செய்வார் இடையில் வசந்தராசன் எதுகையை எங்கேயோ தூக்கி எறிகிறார். தங்குதடையின்றி  நுங்கும் நுரையுமாகப் பொங்கிவரும் பிரவாகத்தில் எதுகை மோனை பார்ப்பவன் எதற்கும் ஆகாதவன். வசந்தராசன் எல்லாவற்றுக்குமானவர். தாய் தன்னைச் சுமந்ததைப் படடினத்தார் பாடி நிறுத்திக் கொள்கிறார். வசந்தன் அடுத்த நிலைக்குச் செல்கிறார். அவலத்தின் அகலத்தைப் பதிவு செய்கிறார். எப்படி?

    உருசுமந்தாய்! உயிர சுமந்தாய்! அமமா! இன்று
    உனைச்சுமக்க முடியாமல் தவிக்கின்றேனே!’

    என்ற வரிகளின் நுண்ணியத்தைக் காண வேண்டும். தாய் உருவம் என்றால் கரு மற்றொரு உருவம். தாய் உயிர் என்றால் கருவின் உயிர் மற்றொரு உயிர். எனவே உடலுக்குள் உடல். உயிருக்குள் உயிர். எந்த உறவுக்கும் இந்த வாய்ப்பு கிட்டாது. கிடைக்காது. ‘தன்னைச் சுமந்த தாயைத் தான் சுமக்க இயலவில்லையே என ஏங்குகிறார். அந்த ஏக்கம் இறுதிவரை ஏக்கமாகத்தான் முடியும். எல்லாருக்கும். முடிந்தால் ‘முடியாத’ தாயைச் சுமக்கலாம். இறந்து போனால் தாயின் சவத்தைத் தூக்கலாம். ஆனால் எவனும் எந்த நாளும் தாயின் உயிரைச் சுமக்கவே முடியாது. உயிரிலிருந்து உயிர் என்பது தாய்க்கு மட்டுமே பொருந்தும். பிற உறவுகளுக்கு ஆகாது, பொருந்தாது.

    கருவறைக் காட்சிப்படலம்

    வாழ்க்கையின் மூடநம்பிக்கைத் திணைகளைத் துறைகளாகப் பகுத்துத் தன், பாடல்களால் முரித்துக் காட்டியவர் உடுமலையார். அவரைத் தொடர்ந்து கலைவாணர் மற்றும் பட்டுக்கோட்டையார் அந்தப் பணியைத் திறம்படச் செய்தார்கள். கண்ணதாசன் ஆறுதல் சொல்வாரேயன்றி முன்னவரைப் போலச் சமுதாயச் சிக்கல்களை அந்தந்தத் தளத்திலேயே சந்திக்க அஞ்சியவர். தனிமனித மனக்கோணல்களையும் அவலங்களையும் விரக்தியுடன் பாடியவர். கண்ணதாசனின் அனைத்துப் பாடல்களிலும் ஒரு வகையான சோகம் இழையோடுவதற்கு இதுதான் காரணம். பலராலும் பல சூழலிலும் ஏமாற்றத்துக்கு ஆளானவர். எனவே வாழ்க்கைச் சிக்கல்களைத் தற்காலக் கவிஞர்களைப் போல் அவரால பாட முடியாமல் போய்விட்டது.

    முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் வந்த ஒரு திரையிசைப்பாடல். வாலி எழுதியது. அம்மா என்றழைக்காத உயிரில்லையே’ என்ற பல்லவியோடு தொடங்கும் அந்தப்பாடல். அதன் சரணத்தில் ஒரு வரி இப்படி அமைகிறது.

    “அடுத்திங்கு பிறப்பொன்று அமைந்தாலும் நான் உந்தன்
    மகனாகப் பிறக்கின்ற வரம் வேண்டுமே”

    அடுத்த பிறவி ஒன்று இருந்தால் நீ என்னைச் சுமந்ததுபோல் நான் உன்னைச் சுமக்க வேண்டும் அம்மா’ என்னும் எக்கத்தை வெளிப்படுத்துவதாய் அமைந்திருக்க வேண்டிய அந்தப் பாடல் மீண்டும் அதே தாய்க்கு மகனாகப் பிறக்க வேண்டும் என்ற அளவோடு நிறைவடைந்துவிடுவதைக் காணலாம். கற்பனையேயானாலும் நீ என்னைச் சுமந்ததுபோல் அடுத்தப் பிறவியில் நான் தாயாகி உன்னைச் சுமகக வேண்டும் அம்மா என்று எழுதுவதான் நெறி. சுமந்தவளுக்கு நாம் செய்ய வேண்டிய கடமை. பாட்டுக்கும் படைப்புக்கும் சிறப்பு. வாலியின் கற்பனை மகன் கடன் நிறைவேற்றுவதாய அமையாமல் தாயை அடுத்த பிறவியிலும் துன்புறுத்துவதாய் அமையவில்லையா இசையாலும் பாடகரின் குரலாலும் பெருவெற்றி யடைந்த அந்தப் பாடலில் இன்னொரு வரி இப்படி அமைகிறது.

    ஈரைந்து மாதங்கள் கருவோடு எனைத்தாங்கி
    நீ பட்ட பெரும்பாடு அறிவேனம்மா

    எனத் தாய்பட்ட வேதனையைச் சுட்டுவதாக அமைந்துள்ளது. வசந்தராசன் எழுதுகிறார். பெரும்பாடு அறிந்தும் அதே பாட்டை மீண்டும் அவளுக்கே தர வேண்டும் என்று எண்ணிப பாடுவது புதுமையானது அன்று.

    உன்வயிற்றில் உயிர் பெற்றேன்! உருவம் பெற்றேன்!
    உன்வயிற்றில் குடியிருந்தேன்! உணவும் பெற்றேன்!
    உன்வயிற்றைக் காயாமல் பார்த்துக் கொண்டேன்!
    உன்வயிற்றை குளிர்நிலவாய் நிரப்பி வைத்தேன்!
    உன்வயிறே ஆனாலும் தனிதான் என்று
    உணத்திடவோ வெறும்வயிறாய் காய்ந்தா யோ நீ!
    என்வயிற்றில் உனைச்சுமக்க ;முடிய வில்லை!
    எண்ணத்தில் சுமக்கின்றேன்! சுமக்கின் றேனே!”

    ‘என் வயிற்றில் உனைச் சுமக்க முடியவில்லை’ எனறு உண்மை பேசுகிறார். வாலி ‘அடுத்து’வரும்  பிறவியிலும் அந்தத் தாய்க்கு மகனாகவே பிறக்க வேண்டும் என்று விரும்புகிறார். வசந்தராசன் என்னைச் சுமந்ததுபோல் உனனைச் சுமக்க முடியவல்லையே என ஏங்கித் தவிக்கிறார். அடுத்த பிறவி என்பதும் அதில் தான் ஒரு பெண்ணாகப் பிறக்க இயலும் என்பதும் சென்ற பிறவிகளின் நினைவுகளோடு மறுபிறவியும் அமையும் என்பதும் யதார்த்தத்திற்கு முரணானது. உடலால் சுமக்க முடியாத தாயை இந்தப் பிறவியிலேயே எண்ணத்தில் சுமககிறாராம். எந்த எண்ணத்தில்? அங்கேதான் கவிதை சிறக்கிறது.

    என்வயிற்றில் உனைச்சுமக்க ;முடிய வில்லை! (என்ற)
    எண்ணத்தில் சுமக்கின்றேன்! சுமக்கின் றேனே!”

    வயிற்றில் சுமப்பது இயலாது. எண்ணத்தில் சுமப்பது இயல்பானது. சுமக்க முடியவில்லையே என்ற வேதனையைத்தான் எண்ணத்தில் சுமக்கிறாராம். ‘மலடி’ என்பது நெருப்புச் சொல். மசக்கை என்பது  மயக்கச் சொல். வசந்தன் கன்னியம்மாள் கருவறையில் புரண்டபோது குளிர்நிலவாய் ஆக்கி வைத்திருந்தாராம்.அருமை!

    கள்ளிப்பட்டி அழகம்மாளும் குருவாடிப்பட்டி கன்னியம்மாளும்

    பேயத்தேவருக்குக் கள்ளிப்பட்டியில் வாழ்க்கைப்பட்டவள் அழகம்மா. குருவாடிப் பட்டியில் துரைவேலருக்கு வாழ்க்கைப்பட்டவர் கன்னியம்மாள். இந்தக் கன்னியம்மாள் தெய்வத்தைப் பற்றித்தான் அவர் மூத்தமகன் வசந்தராசன் தாயின் மடியில் என்று  தாயக்குப் பதிகம் பாடியிருக்கிறார். முன்னாலே சொன்ன அழகம்மாளும் தமிழகத்தின் தென்பகுதி சிற்றூர் ஒன்றில் தோன்றி வாழ்ந்திருக்கலாம். ஆனால் பேயத்தேவருக்கு வாழ்க்கைப்பட்டது கள்ளிக்காட்டு இதிகாசத்தில். கன்னியம்மாள பதிகத்தை நான் படிக்கிறபோது அழகம்மாளின் நினைவும் இணைந்து வந்ததற்கு வைரமுத்து காரணமா? வசந்தராசன்? காரணமா என்று எனக்குத் தெரியாது. ஒருவேளை படைப்புக்களோடு ஒன்றியதும் காரணமாக இருக்கலாம். ஆனால் இணைந்து வந்தது உண்மை. ஊதாரி மகன் சின்னுவால் சிதலமடைந்து போனவள் அழகம்மா. மூத்த மகள் செல்லத்தாயினாலும் இளையமகள் மின்னலுவினாலும் ஆற்றொணாத் துயரத்தில் அழுந்திப்போன  குடும்பம் அது.

    மின்னாமல் இடித்ததுபோல் அழகம்மா இறந்து விடுகிறாள். நாற்பத்தைந்து ஆண்டுக்காலத் தாம்பத்ய வாழ்க்கை கிளை முரிந்தது போல முரிந்து விடுகிறது. வாழ்க்கையில் முதன் முதலாகத் தனிமைப் படுகிறார் பேயத்தேவர். அவர் தனிமையில் கட்டிலில் படுக்கும் காட்சியை வைரமுத்து இப்படிச் சித்திரிக்கிறார்.

    குடல் தொங்கிச் சரிந்து கிடந்த கயிற்றுக் கட்டிலில்  கிழிந்த சமுக்காளம் விரித்து அழகம்மா இறந்த நாள் முதலாய் அவரது தலைக்கு வைத்துப் படுக்கும் அவள் புடவையைத் தேடினார். அதுவச்சஇடத்தில் இல்லை.”

    அவர் தலைமாட்டுக்குத தலையணயாக இருந்த அழகம்மாவின சேலை காணாதது கண்டு கலங்கித் துடிக்கிறார். விசாரிக்கிறார். அதன் வீச்சம் தாங்காமல் சலவைத்தொழிலாளி தங்கைய்யாவிடம் சலவைக்குக் கொடுத்துவிட்டதாக அறிகிறார். அலறுகிறார்.

    வீச்சமெடுத்துருச்சா? ……..வீச்சமா அது?….? அழகம்மா ஆவியடியம்மா அதுஏங்கூட அது பேசும். …அது கூட நான் பேசுவேன்.. ராசாவுக்குக் கீரிடம் மாதிரியடியம்மா ஏந் தலைக்கு அவ சீல. அத அடிச்சித் தொவைச்சுருந்தா அதுல ஒட்டியிருந்த அவ வாசம் போயிருமே. இப்ப அது அழுக்குல கிடக்கோ? இல்ல கம்மாயிலே தொவைச்சிக் காயக் கிடக்கோ

    என்று அழுது புலம்பி வெள்ளாவி வைப்பதற்குள் சென்றுவிட வேண்டுமே? வெள்ளாவி வைத்திருக்கக் கூடாதே என்றெல்லாம் மருகித் துடித்த பேயத் தேவர் அங்கே தன் அழகம்மாளின் புடவை அழுக்கோடு அழுக்காக வெந்து கொண்டிருந்ததைக் கண்டார்.

    “ஆத்தே இந்த அழுக்குக்குள்ளேயா அடஞ்சுப் போச்சு என் அழகம்மா சீல….?

    என்று புலம்பியவர் ஒருவழியாகத் தங்கையாவின துணையோடு வேகிற வெள்ளாவியைப் பிரித்து மூலைக்குறி சொல்லி தன் அழகம்மாளின் புடவைக் காண்கிறார். கண்ணீர் விடுகிறார். கலங்கி நிற்கிறர். அந்த நிலையை வைரமுத்து இப்படிச் சித்திரித்துக காட்டுகிறார்

    வெள்ளாவிச் சீலையின் கீழே உவர்மண் வாசனைக்கீழே சின்னதாய்சன்னமாயஉரிமைக்காரன் மட்டும் உணர்வதாய்  — நாபத்தஞ்சு வரு லருசமாய்  நாசியில் படர்ந்திருக்கும் அனுபவமாய்புடவையின் வெந்து போகாத ஆன்மாவின் அடிமடிப்பில் இன்னும் ஒடடியிருந்தது அழகம்மாவின் அந்த வாசம்ஃ

    அழகம்மாவின் புடவையைத் தனியாக எடுத்துப் பள்ளிக்;கூடத்துல ஆயிரம் பிள்ளைகள் படிச்சாலும்  பெத்தவளுக்குத் தெரியாதா பிள்ளையோட அடையாளம்?” என்று பேயத்தேவரின் அவரின் கையிலேயே சுருட்டிக் கொடுத்தான் அழகம்மா சேலையை.”

    வசநதராசன் தாயுடன் கூடிய தன் பாச நினைவுகளைப பதிவு செய்கிறார்.

    குளிருக்கும் பழம் புடவைப் போர்வை தந்தாய்!

    “செய்யும தொழில் எல்லாம் சீர் தூக்கிப் பார்த்தாலும் நெய்யும் தொழிலுக்கு நேருண்டோ?’ என்று கவிதை பாடினாலும் வறுமைதானே அவர்களது நண்பன். அந்தத் தாயும் பழைய புடவையைத்தான் கட்டியிருந்தாள். அவள் என்ன இந்தக் கால இடைநிலை ஆசிரியையா? நித்தம் ஒரு புடவை கட்ட? குளிரினிலே நடுங்கிய மயிலுக்குப் போர்வை தந்தான் பேகன். மன்னனுக்கு மட்டுமா கொடைமடம்? மாதாவிற்கும் உண்டல்லவா?  அது கொடை. இது கடன். இந்தக் கடனை எப்படி அடைப்பது? தொடர்ந்து எழுதுகிறார்.

    கொடுத்ததிலே உன் வாசம் பிடித்துத் தந்தாய்!

    அழகம்மாளின் வாசத்தை அவள் புடவை காட்டியது. கன்னியம்மாளின் புடவை வாசம் வசந்தராசனின் தாயை அடையாளம் காட்டியது. குளிர்காலத்தில் தாயும் மகனுமாக அணைத்துக் கொண்டு கம்பளிக்குள் உறங்கிய காலத்து தாயிடமிருந்து மகனுக்குச் சென்ற அந்த மணத்தைத்தான் வசந்தராசன் தேடுகிறார். தேம்புகிறார். தேடியது கிட்டாதபோது தேம்புவதுதானே குழந்தையின் இயல்பு! கவிஞர் இன்னும் குழந்தையாகவே இருந்து தன் தாயை நினைக்கிறார்.

    குளிர்காலக் கம்பளிக்குள் உனது வாசக்
    குடியிருப்பைத் தேடுகிறேன்! தேம்பு கின்றேன்1

    எதுகை மோனைக்காகப் பாட்டெழுதுவது வேறு. எழுதுகிற வரிகளில் அவை வந்து அமர்வது வேறு. வானத்து மேகங்கள் இணைந்தும் கலைந்தும் நாம் எண்ணாத உருவத்தைக் காட்டுவதில்லையா? அதுபோல! ‘குளிர்காலக் கம்பளி’ என்னும் தொடருக்கு குடியிருப்பைத் தேடுகிறேன் என்னுந் தொடர் மோளையழதைக் கொடுத்ததென்றால், ‘தேடுகிறேன்! தேம்புகிறேன்!’ என்ற தொடர்கள் இணையின்பததைத் தருவது உணர்தல் வேண்டும். முதற்சீரை மையப்படுத்தித் தொடைவிகற்பங்களைக் கணக்கிடுவது இலக்கணம். எந்த இடத்தில் எது கிடைத்தாலும் சுவைத்து மகிழ்வது கவிதை இலக்கியம்.

    குளிருக்கும் பழம் புடவைப் போர்வை தந்தாய்!
    கொடுத்ததிலே உன் வாசம் பிடித்துத் தந்தாய்!
    குளிர்காலக் கம்பளிக்குள் உனது வாசக்
    குடியிருப்பைத் தேடுகிறேன்! தேம்பு கின்றேன்1
    மடியுறக்கச சுகமெல்ல்லாம்  இன்று பஞ்சு
    மெத்தைக்குள் தேடுகிறேன்! இல்லை தாயே!”

    உண்டுகொண்டே தூங்குவது மழலைப் பருவம். உண்ட பிறகு உலாவந்து பிறகு தூங்க முயல்வது நாகரிகம். முன்னது தாயின் மடியில்! பின்னது செயற்கையிழை படுக்கையில். முன்னது உண்மை! பின்னது போலி! முன்னது தனக்காக! பின்னது சமுதாயத்திற்காக! தாயின் கதகதப்பு பஞ்சு மெத்தையில் கிட்டுமா? கவிஞர் பஞ்சு மெத்தை என்பதைக் கவிதைக்காக எழுதியிருக்கிறார். ஆனால் உண்மையில் இன்றைய நாட்டு நடப்பு அவ்வாறு இருப்பதாக நம்ப முடியவில்லை.!

    கண்ணீரில் குளித்த தேகம்

    வாலி எழுதிய முதற்பாடல் எனக்கு 34 ஆண்டுகள் ஆசிரியப் பணிக்கு உதவி செய்த வரலாறு உண்டு. நான் படித்த காலத்திலிருந்து தற்குறிப்பேற்ற அணிக்கு அந்த மதுரை மதிலில் சாயம் போன பின்பும் இடவலமாகப் பற்நது கொண்டிருந்த கொடியைத்தான் எடுத்துக்காட்டாகக் கூறினார்கள். இன்றைக்கும் அந்த நிலை தொடர்கிறது. தமிழாசிரியர் வருகிறார்கள். இருக்கிறார்கள். போகிறார்கள். அந்தக் கொடி இன்னும் அங்குதான் பறந்து கொண்டிருக்கிறது. வாலி அப்படி என்ன எழுதினார்? இப்படி எழுதினார்!

    தேன்மலராடும் மீன்விளையாடும்  அருவியின் அழகைக் காணீரோ?”

    என்று காதலி வினவுகிறாள். காதலன் சொல்கிறான்

    நான் வரவில்லை என்பதனால் உன் மீன் விழி சிந்திய கண்ணீரோ?”

    அந்த இளம்பருவத்தில் என் உள்ளங்கவர்நத வரிகளையே என் பத்தாம் பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கு எடுத்துக்காட்டாக்கி மகிழச் செய்தேன். இன்றைக்கு இந்த முதுமையில் நூற்றுக்கும் மேற்பட்ட தற்குறிப்பேற்ற அணிக்கான எடுத்துக்காட்டுக்கள் என்னிடம் உண்டு. அவற்றில் ஒன்றுதான்  இந்தக் கருவறைப் பதிகத்தில் தம்பி வசந்தராசன்

    ஒருமைலின் தூரத்தில் தூறெடுத்து
    ஒருகுடம் நீர் சுமந்தாலே வலி தெறிக்கும்!
    ஒருநூறு குடம்சுமந்தாய் தினந்தோ றும்நீ!
    ஒருநாளும் அலுத்ததில்லை ஒவ்வோர் நாளும்
    திருநாளாய் பொழுதுபோகும்! அதைமனத்தால்
    தீண்டுகிற பொழுதெல்லாம்  அந்த நீரே
    திரும்ப வரும் கண்ணீராய்! அதுதான் உந்தன்
    தேகத்தைக் கழுவுதற்கும் வந்த நீரா?

    தமிழகத்து வீடுகளில் நிகழும் இறுதிச் சடங்குகளில் நீரெடுத்தல் என்பதும் ஒன்று. இற்நதவர் உடம்பை முறைகாரர்கள் எடுத்துவரும் நீரால் உடம்பைக் குளிப்பாட்டி அடக்கம் செய்வார்கள். கலைந்து போன காட்சியைக் கண்ணுக்கு முன்னால் கொண்டு வருவது எப்படி என்னும் செப்படி வித்தை தெரிந்தவர் தம்பி வசந்தராசன். பாட்டைப் பலமுறை படித்துப்பார்த்தால் நமக்கும் கண்ணீர்வரும். வட ஆற்காடு மாவட்டத்தில் அன்றைய பொழுது அப்படித்தான் கழிந்திருக்கும். ஒரு குடம் தண்ணிக்கு ஒரு மைல். மிகவும் கவனமாகக் கிலோ மீட்டர் என்பதைத் தவிர்த்துவிடுகிறார். தாய் நடந்த தடத்தில் தமையனின் சிந்தனை நடந்ததால் மொழி, தடம் மாறாமல் நடக்கிறது. ஒரு குடும்பத்திற்குத் தேவையான  தண்ணீரை மொண்டு வருவதற்கு எவ்வளவு நேரமாகும்? குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப வேண்டும்! நண்பகல் உணவு சமைக்க வேண்டும்! தாய் படும் துன்பத்தை அன்றைக்குக் காணத்தான் முடிந்தது. அந்தத் துன்பத்தை உணர முடியாத காரணத்தால் அது திருநாளாக முடிந்தது. இன்றைக்கு உணர முடிகிறது. அதனால் கண்ணீரைக் கொப்பளிக்கிறார் வசந்தராசன்.

    அந்த நீரே
    திரும்ப வரும் கண்ணீராய்! அதுதான் உந்தன்
    தேகத்தைக் கழுவுதற்கும் வந்த நீரா?”

    கன்னியம்மாள் தனக்குத்தானே நீரெடுத்துக் கொணடாராம்! என்ன கொடுமையான கற்பனை? தண்ணீர்க் குடம் குடமாகச் சுமக்கிறபொழுது வழியும் வேர்வையால் மேனி நனைகிறதல்லவா? அது அவர் உடம்பைக் குளிப்பாட்டுவதுபோல் இருந்ததாம். தன் உழைப்பால் வந்த வேர்வையினால் தன் தேகத்தைத் தானே தூய்மைப்படுத்திக் கொண்டாராம்.? எந்தத் தாய் தனக்காக என்றைக்கு யாரை எதிர்பார்த்தருக்கிறாள்?

    உடம்போடு உயிர்வளர்க்க உனது பாசம்!
    உடைந்த நிலா கரைவதற்கோ எனது பாசம்?

    குழந்தைகளின் தற்கால அறையாடை மலங்கழிக்கவும் சிறுநீர்கழிக்கவுமான வசதி என்பதை விட குழந்தைகள் அவற்றைக் கழிக்கையில் காணும், கண்டு தூய்மைப்படுத்தும் துணிச்சலும் தியாக உள்ளமும் அருகிப் போன்றவற்றைக் காட்டும் நிலைக்கண்ணாடி  விதண்டாவாதம் செய்கின்ற சிலர் இதனை மறுக்கக்கூடும். அவர் உரிமை அது. உண்மை அதுவன்று. ஒட்டுமொத்த சமுதாயத்தில் குறைந்து வருகின்ற சகிப்புத் தன்மையும் தன்னல மறுப்பும் தியாக உள்ளமும் தாய்மையிலும் வெளிப்பட்டு நிற்கிறது என்பதே உண்மை.

    சமுதாய வளர்ச்சிநிலை என்பது வேறு முரண் என்பது வேறு. ‘எல்லாம் அன்றைக்கு இருந்தது., அன்றைக்கு இருந்தது இன்றைக்கு இல்லை’ என்பதை அப்படியே ஒதுக்கித்தள்ளிவிட முடியாது. சமுதாயத்தின் புறநிலையில் மாற்றங்கள் வந்திருக்கலாம். அது தேவையைப் பொருத்தது. ஆனால் அகம் மாறுவதற்குக் காரணமில்லை. அன்புக்கு மாற்றமுண்டா? இன்று மாறியிருக்கிறது. பாசத்திற்கு மாற்றமுண்டா? இன்று மாறியிருக்கிறது! நட்புக்கு மாசு உண்டா? இன்று உண்டாகியிருக்கிறது. எனவே இத்தகைய மாற்றங்களை வளர்ச்சி எனக் கொள்ளுதல் ஏற்புடையதன்று, ஒரு வகைத் தேய்மானம் என்றுதான் சொல்ல வேண்டும்ஃ இந்தப் புின்புலத்தில்தான் தாயைப் பாடிய வசந்தன் கவிதைகளை நோக்க வேண்டியதிருக்கிறது.

    “அடம்பிடித்தேன் உண்பதற்கு! ஓயாமல்நான்
    அழுதிருந்தேன் மலங்கழித்தேன் நீர் கழித்தேன்!
    கடமைக்கா செய்தாய் நீ! இல்லை யம்மா!
    கட்டுண்டு செய்தாய்!”

    ‘கடன்காரன் வந்தால் கலங்காத நெஞ்சம் அடங்காத பிள்ளை அழுதாலே அஞ்சும்’ என்பார் கண்ணதாசன்!

    “நீயும் கூட
    அடம்பிடித்தாய் உண்பதற்கு என்னைப் போல!
    அப்படியே எல்லாமும் குழந்தை போல!”

    தன் மகன் அடம்பிடித்தால் தாயும் அடம்பிடித்து அன்பால் அவனைச் சீராட்டுவது நற்றாயின் கடமை. இயல்பு. தான் அடம்பிடித்த நிகழ்வுகளையும் மாற்றாகத் தன் தாய் அடம்பிடித்து அழுத நினைவுகளையும் ஒரு சேரப் பதிவு செய்திருக்கிறார்.

    உடம்போடு உயிர்வளர்க்க உனது பாசம்!
    உடைந்த நிலா கரைவதற்கோ எனது பாசம்?”

    என்ற இந்த விருத்தத்தின் இறுதியடி அரையடி இயைபில் அமைந்து மனத்தைப் பிசைகிறது. தன் உடம்பை உருக்கித் தன் மகனின் உயிரையும் உடம்பையும் பேணிவளர்த்தவள் தாய். ஆனால் அந்தத் தாயின்மீது மகன் கொண்டிருந்த பாசம் சிதறிக் கரையும் நிலாவானது என்பது ஓர் அவலக் கற்பனை!. வேறுவாய்பாட்டில் பதிவு செய்தால் கன்னியம்மாளின் பாசம் ஆக்கத்திற்கானது! மகன் வசந்தராசனின் பாசம் அவலத்திற்கானது!

    வைரமுத்தும் வசந்தராசனும்

    கள்ளிப்பட்டி அழகம்மாள் அந்த இதிகாசத்தில் பாத்திரமாக உலவினாலும் அவள் வைரமுத்தின் அம்மா அங்கம்மாளே! அங்கம்மாள் வைரமுத்தின் அம்மா! அவளை அப்படியே உரித்து வைத்த பாத்திரம். பேயத்தேவருக்கு அவள் செய்த பணிவிடைகளையெல்லாம் கன்னியம்மாள் தனக்குச் செய்ததாகப் பாடி மருகுகிறார் வசந்தராசன். அங்கம்மாவை எண்ணி வைரமுத்து இபபடிக் கலங்குகிறார்.

    பாசமுள்ள வேளையில
    காசுபணம் சேரலையே!
    காசுவந்த வேளையிலே
    பாசம் வந்து சேரலையே

    பாசம், காசு, வேளை, சேரல் என்னும் நான்கே சொற்களைக் கொண்டு கவிபுனையும் ஆற்றல் வைரமுத்துக்கு உண்டு. பாமர வழக்கில் பாடுகிறார். நாட்டுப்புறப் பாடல் வடிவம் இயல்பாக அமைகிறது. உணர்ச்சியின் ஊர்வலத்தில் கவிதை முழுமை பெறுகிறது. இந்த வரிகள் எந்த பாவிலும் அவற்றின இனத்திலும் அடக்க முடியாது என்பதையும் அறிதல் வேண்டும். இந்த அவலத்தை வசந்தராசன் இப்படி எழுதுகிறார்.

    தறிநெய்து தார் திரித்து நூலிழைத்துத்
    தவமாகப் பேருழைப்பை தந்த தாயே!
    உறிசோறு உனக்காகக் காத்தி ருக்க
    ஊர்வலமாய் வீதியில் நீ போகலாமா?

    நெய்தவர் தாய். திரித்தவர் தாய். இழைத்தவர் தாய். தந்தவர் தாய். இதில் எந்தச் செயலையும் திருப்பிச் செய்து கடன் தீர்க்க முடியாத நிலையைத்தான் கவிதையில் பாடுகிறார். “சோறூட்டி வளர்த்த நான் இருக்கிறேன். உனக்கு ஊட்ட வேண்டிய சோறு இங்கிருக்கிறது? நீ எங்கேயம்மா போனாய்?’ என்று அவலத்தின் கொடுமுடிக்குச் செல்கிறார். ‘உணவு இங்கே! ஊட்டியவள் எங்கே?’ என்று கண்ணதாசன் பாணியிலும் கேட்கலாம்.

    கவிதையின் கூறுகள் பற்றித் தமிழிலக்கண நூல்கள் அவ்வளவாக ஆராய்ந்திருப்பதாகத் தெரியவில்லை. அதற்குக் காரணம் அவர்கள் கவிதையை வாழ்வியலோடு ஒன்றியே நோக்கினர். பாரதியைப்போல் ‘நமக்குத் தொழில் கவிதை’ அதனைத் தொழிலாக்கிக் கொள்ளவில்லை. பழந்தமிழ்ப் புலவர்களுக்குக் கவிதை தற்கிழமை. பிறிதின்கிழமையன்று. பயன் நோக்கி ஒழிந்தனர். ‘அறம் பொருள் இன்பம் வீடடைதல்’ நூற்பயன் என்பதே தமிழ்க்கவிதை ஆராய்ச்சி. கற்பனை உணர்ச்சி கருத்து, வடிவம் என்பது மேலைநாட்டு ஆராய்ச்சி. அந்த அடிப்படையில்தான் தற்கால இலக்கிய ஆய்வுகள் தொடர்கின்றன. இது சரியா? தவறா? என்பது தனி ஆய்வுக்குரியது. தம்பி வசந்தராசன் உணர்ச்சியின் உச்சிக்குச் செல்கிறார். விருத்தங்களை வேண்டிய அளவுக்கு இழுத்தணைத்துக் கொள்கிறார். கற்பனையின் எல்லை தொடுகிறார். இவற்றையெல்லாம் தன் தாய்க்குப்; படையலிட்டிருக்கிறார் பாட்டில்! அன்னையைத் தெய்வம் என்பதோடு அமைதியடைந்துவிட்ட தமிழ்க்கவிதை உலகில் தாயின் உழைப்பை மில்லி லிட்டரில் அளந்து கவிதையில் கொட்டியிருக்கிறார். கவிதை அவருடையதாக இருக்கலாம். ஆனால் இது ‘அம்மா’ அனைவருக்குமான கவிதை!

    நிறைவுரை

    செய்யும் தொழில் சிறந்த நெய்யும் தொழிலால் ஒரு குடும்பத்திற்கே நங்கூரமாய் நின்ற ஓரு தாயைப் பற்றி, அன்பின் வடிவமான அன்னையைப் பற்றித் தன்னைப் பெற்ற அம்மாவைப் பற்றி இப்படி எழுதி நான் படித்ததில்லை. எல்லாருக்கும் பொதுவான அனுபவந்தான். மனத்துக்குள்ளேயே முடங்கிப் போன அந்த அனுபவத்தை .வசந்தராசன் தன் எழுத்துக்களால் உலவ விட்டிருக்கிறார். “மண்ணின் பொறுமைதான் மலை! கரியின் பொறுமை வைரம்! தாயின் பொறுமைதான் நாம்!” ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஊருண்டு. ஆனால் எல்லாருக்கும் பொதுவான ஊர். கருவூர். கருவூரில் தான் குடியிருந்த கருவறை பற்றி தம்பி வசந்தராசன் பாடிய இந்தப் பாடல் தொகுப்பினைக் ‘கருவறைப் பதிகம்’ என்றால் என்ன? ஒருவருக்கு ஒரு பெயர்தான் இருக்க வேண்டும் என்பது சட்டமா என்ன? இராமசாமிக்குப் ‘பெரியார்’ என்று பெயரில்லையா?  அரங்கநாதனுக்குக்  குன்றக்குடி  அடிகள் என்று பெயரில்லையா?

    (தொடரும்)

    Share
  • முக்தி

    முக்தி

    உடுமலை கி. ராம்கணேஷ்

    சற்று நேரம் பொறுத்திருங்கள்
    அதற்குள் என்ன அவசரம்
    வாரிச் சுருட்டிக் கொண்டு
    எங்கேயும் ஓட முடியாது
    உங்கள் பேச்சுகளுக்குள் சிக்கி
    மூச்சு விட சிரமமாயிருக்கிறது
    அசைபோட இருக்கின்றன
    ஆயிரமாயிரம் விசயங்கள்
    எல்லாவற்றையும்
    மென்று ஜீரணிக்கும் வரை
    காத்திருந்தால் தான் என்ன?
    அதற்குள் நீங்கள் பேசுவதை
    எப்படி ஜீரணிப்பது?
    இன்னும் சற்று நேரத்தில்
    எல்லாம் என்னென்னமோ
    ஆகப்போகிறது.
    முடித்து விட்டேன்
    இப்போதாவது பேசுங்கள்
    என்னைப் பற்றி
    ஏதாவது நல்லதாக…
    நான் விடை பெறப்போகிறேன்
    அப்போது …
    நல்ல மவராசன்
    உயிர் போக இத்தனை பாடா?
    என்ற குரல் காதில் விழ
    இப்போது தன்யனானேன்…
    முக்தியடைந்து விட்டேன்.

    Share
  • மகாத்மா காந்தி ஆற்றிய உரை

    மகாத்மா காந்தி ஆற்றிய உரை

    1947இல் மகாத்மா காந்தி ஆற்றிய உரை இங்கே. எவ்வளவு இயல்பாகவும் எளிமையாகவும் நகைச்சுவை உணர்வோடும் அவர் பேசுகிறார் என்று கேளுங்கள்.

    M. K. Gandhi’s Speech at Inter-Asian Relations Conference, 1947

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • தீப ஜோதியாய் வருவாய்!

    தீப ஜோதியாய் வருவாய்!

    திருமகளைப் போற்றும் ‘தீப ஜோதியாய் வருவாய்’ என்ற இந்தப் பாடலை, தபோவனத்தில் தினசரி அதிகாலை பாடுகிறார்கள். கன்னிப் பெண் ஒருவர் கையில் விளக்கேந்தி நடக்க, ஆசிரமத்தில் உள்ள அனைவரும் அவரைச் சூழ்ந்து பாடியபடி செல்வது வழக்கம். இந்த இனிய பாடலை, ‘கான பிரம்மம்’ கிருஷ்ணகுமாரும் அவர் மகள் ஷ்ரேயா கிருஷ்ணகுமாரும் பாடக் கேளுங்கள். இந்த நவராத்திரியில் திருமகளின் அருள், எங்கும் நிறைவதாக!

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • கற்பக விநாயகர் கோவில் கொலு

    கற்பக விநாயகர் கோவில் கொலு

    சென்னை, தாம்பரம், அரங்கநாதபுரம் அருள்மிகு கற்பக விநாயகர் ஆலயத்தை அலங்கரிக்கும் நவராத்திரி கொலுவைக் கண்டு களியுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • அம்மனுக்கு ரூபாய் நோட்டு அலங்காரம்

    அம்மனுக்கு ரூபாய் நோட்டு அலங்காரம்

    சென்னை, தாம்பரம், அரங்கநாதபுரம் அருள்மிகு கற்பக விநாயகர் ஆலயத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மனுக்கு, நவராத்திரியை முன்னிட்டு, ரூபாய் நோட்டு அலங்காரம். வளம் தரும் வரலட்சுமியாக அருள் பாலிக்கும் அன்னையின் திருக்கோலத்தைக் கண்டு களியுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • எங்கும் உன் ஆடலடி தாயே

    எங்கும் உன் ஆடலடி தாயே

    நவராத்திரியில் அன்னைக்கு இசை ஆராதனை. ‘எங்கும் உன் ஆடலடி தாயே’ என்ற இனிய பாடலை, ‘கான பிரம்மம்’ கிருஷ்ணகுமார் குரலில் கேட்டு மகிழுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • அருளோடு பொருளை அளித்திடுவாய் அம்மா! [இலக்குமித் துதி – நவராத்திரி நன்னாள்]

    அருளோடு பொருளை அளித்திடுவாய் அம்மா! [இலக்குமித் துதி – நவராத்திரி நன்னாள்]

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண் …. ஆஸ்திரேலியா 

    பாருலகில் வாழப் படைத்துவிட்டாய் தாயே
    வாழ்வு வளமாகத் தனம்வேண்டுந் தாயே
    தினம் போற்றுமெம்மை திகப்படையா வண்ணம்
    அனுதினமும் எமக்கு அருள்புரிவாய் தாயே

    பொருளில்லா உலகில் பொழுது விடியாதே
    பொருளின்றி எதுவும் எமையணுக மாட்டா
    அருளோடும் பொருளும் உன்னிடத்தே உண்டு
    அருளோடு பொருளை அளித்திடுவாய் அம்மா

    நோயின்றி வாழ நூல்கள்பல கற்க
    வாய்மையுட னிருக்க வறுமையது போக
    ஆதார மனைத்தும் உன்கருணை அம்மா
    அருள்சுரந்து எம்மை அரவணைப்பாய் அம்மா

    தானதர்மம் செய்ய பெருமாசை தாயே
    தனமட்டும் எமக்குத் தங்குதில்லை தாயே
    ஆனமட்டும் நாமும் உழைக்கின்றோம் அம்மா
    ஆனாலும் தனமோ அணுகவில்லை அம்மா

    நீமனது வைத்தால் நிறைந்துவிடும் அம்மா
    நினைப் பெல்லாம் நீயாயிருக்கிறாய் அம்மா
    வாழ்நாளில் நாமும் வறுமையின்றி வாழ
    வரமருள்வாய் இலக்குமித் தாயேநீ எமக்கு

    Share
  • நீயே கதி ஈஸ்வரி

    நீயே கதி ஈஸ்வரி

    1958ஆம் ஆண்டு வெளியான ‘அன்னையின் ஆணை’ திரைப்படத்தில், மருதகாசி இயற்றிய ‘நீயே கதி ஈஸ்வரி’ என்ற பாடலை, ‘கான பிரம்மம்’ கிருஷ்ணகுமார் பாடக் கேளுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • கணித்தமிழ்க் கருவிகள் | அண்ணாகண்ணன் உரை

    கணித்தமிழ்க் கருவிகள் | அண்ணாகண்ணன் உரை

    அறிவியல், பொறியியல், தொழில்நுட்பங்களைத் தமிழில் எழுதுதல் என்ற தலைப்பிலான பயிலரங்கு, 19.09.2022 அன்று காஞ்சிபுரத்தில் நடைபெற்றது. சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள பொறியியல், தொழில்நுட்பத் தமிழ் வளர்ச்சி மையமும் காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரியும் இணைந்து இதை நடத்தின. இதில், ‘கணித்தமிழ்க் கருவிகள்’ என்ற தலைப்பில் முனைவர் அண்ணாகண்ணன் ஆற்றிய உரை இங்கே.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • இவ்வுலகில் எம்மைக் காத்திடுவாய் அம்மா!

    இவ்வுலகில் எம்மைக் காத்திடுவாய் அம்மா!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண் … ஆஸ்திரேலியா

    ஈரமுடை நெஞ்சை ஈந்திடுவாய் தாயே
    இணையில்லா திருவடியைப் பற்றுகிறோம் தாயே
    கோரமுடை நினைப்பைக் கொன்றொழிப்பாய்  தாயே
    குவலயதில் வாழத் துணைநீயே தாயே

    ஆணவமாம் நினைப்பை அகற்றிவிடு தாயே
    அகந்தை அகமேறா ஆக்கிவிடு தாயே
    தீமையெமை அணுகா திருப்பிவிடு தாயே
    திக்கெட்டும் நிறைந்தாய் துர்க்கையம்மா நீயே

    சோர்வடையும் எண்ணம் துடைத்தெறிவாய் தாயே
    தொலைநோக்குப் பார்வை கொடுத்தருள்வாய் தாயே
    வாய்மையுடன் வாழ வரமருள்வாய் தாயே
    மாநிலத்தில் எமக்குத் துணைநீயே தாயே

    அச்சமதை அகற்ற அருகணைவாய் அம்மா
    ஐயநிலை போக்க அருள்புரிவாய் அம்மா
    இச்சைகொண்டு உன்னை இறைஞ்சுகிறோம் அம்மா
    இவ்வுலகில் எம்மைக் காத்திடுவாய் அம்மா

    Share
  • ஜெய கணேச ஜெய கணேச பாஹிமாம்

    ஜெய கணேச ஜெய கணேச பாஹிமாம்

    கொலு என்பது கலைகளின் சங்கமம். இசைக்கும் அதில் முக்கியப் பங்கு உண்டு. இதோ, கொலுவின் முன்னால் குழந்தைகள் பாடுகிறார்கள். ‘ஜெய கணேச ஜெய கணேச பாஹிமாம்’ என்ற புகழ் பெற்ற பாடலை, மூவரசம்பட்டுச் சகோதரிகள் (மாதங்கி & மனஸ்வினி) இனிமையாகப் பாடுவதைக் கேளுங்கள். நவராத்திரி நல்வாழ்த்துகள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • நவராத்திரி கொலு பொம்மைகள் 2022 | காஞ்சிபுரம் சுரேஷ்

    நவராத்திரி கொலு பொம்மைகள் 2022 | காஞ்சிபுரம் சுரேஷ்

    பொம்மைக் கலைக்குக் கைநேர்த்தியும் செய்நேர்த்தியும் பொருந்தி வர வேண்டும். இவை ஒருங்கே கைவரப் பெற்றவர், பொம்மைக் கலைஞர் சுரேஷ். காஞ்சிபுரம், பொம்மைக்காரத் தெருவில் உள்ள இவரது வீட்டில் அணிவகுத்து நிற்கும் அழகிய பொம்மைகளைக் கண்டு மகிழுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • (Peer Reviewed) தமிழில் ஆற்றுப்படை இலக்கியம் – ஒரு வரலாற்றாய்வு

    (Peer Reviewed) தமிழில் ஆற்றுப்படை இலக்கியம் – ஒரு வரலாற்றாய்வு

    புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள்    
    உதவிப்பேராசிரியர், மொழிகள் துறை 
    பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், 
    பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக்கழகம்,
    வல்லம், தஞ்சை மாவட்டம் – 613403.   
    மின்னஞ்சல் முகவரி-   egowrisss@gmail.com

    முன்னுரை

    இலக்கியம் வெற்றி பெறுவது உத்திகளால். உத்தி பலவகைப்படும். வெளிப்பாட்டு உத்தி என்பது அவற்றுள் ஒன்று. கவிஞன் தன் உள்ளத்துக் கருத்துக்களையும் கற்பனைகளையும் பலவகையாக வெளிப்படுத்த முடியும். தனக்குத்தானே சொல்லிக் கொள்வதைத் தன்னுணர்ச்சிப் பாடல்கள் என்பர். முன்னிலைப்பொருளை நோக்கி விளித்துச் சொல்கிற இலக்கியங்களும் உள. கவிதையைப் கேட்பதற்கான பொருள்களை அழைத்துப் பாடுவதும் தூது என்ற இலக்கிய வகையில் அடங்கும். ஒருவன் தன்னுடைய வாழ்வியல் அனுபவங்களை, வழிப்போக்கர்களை நோக்கிச் சொல்வதும் அக்காலத்தில் ஒரு இலக்கிய வகையாகக் கருதப்பட்டிருக்கிறது. இங்கே வழிப்போக்கர்கள் என்பது வறுமை தீர்க்கும் இடம் நோக்கிச் செல்வாரைக் குறிக்கும். ‘தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்னும் பரந்த மனப்பான்மையின் பழந்தமிழ்ச் சான்றாகத் திகழ்கின்ற இந்தக் கவிதை உத்திக்கு ‘ஆற்றுப்படை’ என்று பெயரிட்டு வழங்கியமையை அறிய முடிகிறது. இது பற்றிய சில செய்திகளை ஆராய்வதாக இக்கட்டுரை வடிவமைக்கப்பட்டுள்ளது.

    கட்டுரைக் கட்டமைப்பு

    இந்தக் கட்டுரை ஒரு இலக்கிய வகைமையின் உள்ளடக்கச் சுருக்கமாக  அமையாமல் அதன் தோற்றம் மற்றும் வளர்ச்சி பற்றிய வரலாற்றை ஆராய முயல்வதாக அமைகிறது. எனவே காலமுறைத் திறனாய்வு பின்பற்றப்படுகிறது. ஒவ்வொரு கால இலக்கியத்திலும் இதன் தாக்கம் எவ்வாறு அமைந்திருந்தது என்பதைப் பற்றியும் புதுக்கவிதை, ஹைக்கூ, லிமரைக், சென்ட்ரியூ முதலியன வளர்ச்சியடைந்திருக்கும் தற்காலத்தில் மரபார்ந்த இலக்கியங்களின் இரங்கத்தக்கநிலை பற்றியும் சுட்டிக் காட்டுகிறது.

    ஆற்றுப்படை – ஒரு விளக்கம்

    ‘தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்பது பிற்காலத்திய வழக்கு. அன்றைய ஆற்றுப்படையின் அடிப்படையே அதுதான். வழி தெரியாதவனுக்கு வழி சொல்லவே மறுக்கும் அல்லது தவறான வழிகாட்டும் தற்கால அவசர உலகத்தில் ஆற்றுப்படையின் ஊடிழையான மனிதநேய மாண்பினைப் புரிந்து கொள்வது அவ்வளவு எளிமையானதன்று. குழு வாழ்க்கை நடத்திய முன்னோர்களின் வாழ்க்கைத் தடத்தில் ஆற்றுப்படுத்தல் கோடையிலே வீசிய குளிர் தென்றல்!. ‘எங்கிருந்து வருகிறாய்? என்று வறுமையாளன் கேட்கிறான். இன்னாரிடம் சென்றேன்! இவையிவை பெற்றேன்! அங்கிருந்து வருகிறேன்! அன்பனே! நீயும் செல்! அன்பனே அங்கே உனக்கு அன்பும் கிட்டும் ஆதரவும் கிடைக்கும் உனது வறுமை ஒழியும் வாழ்வு சிறக்கும்’ என்று ஒருவனை மற்றொருவன் வழிநடத்துவதே, (வழிகாட்டலே) ஆற்றுப்படையின் உள்ளடக்கமாகும்.

    தொல்காப்பியமும் ஆற்றுப்படையும்

    தொல்காப்பியப் பொருளதிகாரம் ‘கவிதையியல் பற்றிய இலக்கணம்’ என்னும் கருதுகோள் ஒப்புக்கொள்ளப்படுமானால், ‘ஆற்றுப்படை’என்பது இலக்கியத்தின் வெளிப்பாட்டு உத்திமுறைகளில் ஒன்று என்பதும் ஒப்புக்கொள்ளப்பட வேண்டியதொன்றாகும். ‘ஆற்றுப்படை’ இலக்கியம் அன்றைய சமுதாயத்தின் தனிமனித வறுமை நிலையையும் பிறர்நலம் பேணும் பெற்றியையும் ஒருசேரப் படம்பிடித்துக்காட்டும் இலக்கியத் தொழில்நுட்பமாகும்.

    கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும்
    ஆற்றிடைக் காட்சி உறழத் தோன்றிப்
    பெற்ற பெருவளம் பெறாஅர்க்கு அறிவுறீஇச்
    சென்றுபயன் எதிரச் சொன்ன பக்கம்

    என்பது தொல்காப்பியம் காட்டும் அக்கால ஆற்றுப்படை இலக்கணம். இதனுள் ‘பெற்ற பெருவளம் பெறாஅர்க்கு’என்னும் தொடர் ஆற்றுப்படுத்துவோர்  ஆற்றுப்படுத்தப்படுவோர் ஆகியோர்தம் பொருளாதார நிலையைக் குறிப்பாகச் சுட்டுகிறது.  தற்போது பெற்றவன் முன்பு பெறாதவனாகத்தான் இருந்தான் என்பது குறிப்பு. இத்துடன், பத்துப்பாட்டில் அமைந்துள்ள ‘திருமுருகாற்றுப்படை’ முருகப்பெருமானாகிய ஒருவனே ஆற்றுப்படுத்துவோனாகவும் ஆற்றுப்படுத்தப்படுவோனாகவும் என்னும் இருநிலைப் பாத்திரமாகத் தோன்றுவதையும் கருத்திற் கொள்ளலாம். இறைவன் ஆதலின் இது சாத்தியமாயிற்று என்பதும் ஒன்று. கூத்தனைக் கூத்தன் ஆற்றுப்படுத்துவது கூத்தராற்றுப் படை என்றால் பாணனை பாணன் ஆற்றுப்படுத்துவது பாணாற்றுப்படை என்றால், முருகனை முருகன் ஆற்றுப்படுத்துதல் அல்லவா முருகாற்றுப்படை என்றாகும்? இருப்பவன் ஒருவனே! இதற்கு எப்படிப் பொருளமைதி கூற வேண்டுமெனின் இறைவனுடைய கந்தழி பெற்றான் ஒருவன் முருகனாகவே மாறிவிடுகிறான். கந்தழி பெற்றவன் பெறாதவனை முருகனிடத்தில் ஆற்றுப்படுத்துகிறான். இதுபற்றிய விரிவான விளக்கத்தைப் பேராசிரியர் துரை.அரங்கசாமி தனது ‘அன்பு நெறியே தமிழர் நெறி’ என்னும் நூலில் ஆராய்ந்துள்ளார்.

    தொல்காப்பியர் காலச் செல்வாக்கு

    ஆற்றுப்படை இலக்கியம் தொல்காப்பியர் காலத்துக் கூத்தராற்றுப்படை, பாணாற்றுப்படை, பொருநராற்றுப்படை, விறலியாற்றுப்படை என நான்காக இருந்தது. இலக்கிய வகைமைகளை எடுத்துக் கூறும் தொல்காப்பியர் ஏனைய இலக்கிய வகைகளைக் காட்டிலும் இந்த ஆற்றுப்படை இலக்கியத்தை விதந்தோதுகிறார். எனவே அவர் காலத்துக்கு முன்பே இவ்வகை இலக்கியம் சிறந்திருந்திருக்கலாம் என்பதை ஓரளவு அனுமானிக்க முடியும்.

    இலக்கிய வரலாறு எழுத வேண்டிய முறை

    பொதுவாக இலக்கிய வரலாறு எழுதுகின்ற ‘பேராசிரியர்கள்’ இலக்கியம் ஒன்றின் நதிமூலத்தைக் கண்டறிவதில்லை. அதற்கான முயற்சியும் மேற்கொள்ளப்படுவதில்லை. இலக்கியத்தின் உள்ளடக்கத்தையே அவர்கள் வரலாறு என்று கருதிவிடுவதுதான் இதற்குக் காரணம். சான்றாகத் தூது இலக்கியத்தின் வளர்ச்சி என்றால் அதன் முளை  இராமாயணத்தில் அங்கதன் தூது, பாரதத்தில் கண்ணன் தூது என்றவிடத்திலிருந்து அல்லவா தொடங்க வேண்டும்? பிறகு வரலாற்றில் தூது என்பது தொண்டைமான் இளந்திரையனிடத்தில் அதியமானுக்காக ஔவையார் சென்ற தூதும்  பிரபந்தங்களில் காணப்படும் தூதுக் கூறுகளும் ஆராயப்படல் வேண்டும். இத்தகைய தொடராய்வுக்குப் பின்பே தூது எவ்வாறு தனித்த இலக்கியமாக உருப்பெற்றது என்பது ஆராயப்படல் வேண்டும். அதுவன்றித் தூது கலிவெண்பாவில் பாடப்பெற வேண்டும் என்பதும் அது அகப்பொருள் சார்ந்து அமைய வேண்டும் என்பதும் அதன் வகைகள் இன்னின்ன எனப் பட்டியலிடுவதும் இன்னின்ன பொருளைத் தூதாக விடுக்கலாம் என்பதும் சரியான வரலாறாகவோ வரலாற்றாய்வாகவோ அமையாது.

    ஆற்றுப்படை இலக்கியத்தின் தோற்றமும் கட்டமைப்பும்

    ஆற்றுப்படை இலக்கியத்தைக் கலைஞர்களின் இலக்கியமாகவும் கருதலாம். காரணம் இந்த நூல்களின் நாயகர்களாக அமைந்தவர்கள் கலைஞர்களே. மன்னன் பாட்டுடைத் தலைவனாக இருந்தாலும் அவனைப் பற்றிய அத்தனைச் செய்திகளையும் பரிசில் பெற்றுவரும் இரவலனே எடுத்துக் கூறுகிறான். அதாவது மன்னர்களின் திருவோலக்கத்தில் குழுவாக அமர்ந்து பாடப்பெற்ற மன்னன் பெருமை நாட்டின் சாதாரண வறுமை நீங்கப் பெற்ற இரவலனால் பாடப்பெற்றது. சுருங்கச் சொன்னால் புரவலன் பெருமையை இரவலன் பாடினான். இரவலர்கள் அனைவரும் இசை வல்லுநர்கள். ஆற்றுப்படை இலக்கியத்தின் வளர்ச்சிக்கு இவர்களே காரணம்.  மொழிக்கு முன்னே தோன்றியது இசை என்பதும் இசையிலிருந்தே மொழி தோன்றியிருக்க வேண்டும் என்பதும் மொழியியலார் கருத்து. எனவே மொழியும் மொழியில் தோன்றிய பாடல்களும் தொடக்கத்தில் இசையாகவே இருந்திருக்க வேண்டும். இசையாகவே பாடப்பெற்றவையாதலின் இவை நாட்டுப் பாடல்களைப்போலப் பெரும்பாலும் வாய்மொழி இலக்கியங்களாகத்தான் தோன்றியிருக்க வேண்டும்.

    பழுமரம் தேடும் பறவையினராய் எங்கோ ஒரு மன்னனிடம் சென்று அவனைப் புகழ்ந்து பாடிய இரவலர்கள் தாம் பரிசில் பெற்ற வரலாற்றின் வாய்மொழி வடிவமே ஆற்றுப்படை எனலாம்.

    அவ்வப்பொழுது மன்னன் முன்னிலையில் பாடப்பெற்ற பாடல்கள் தங்களைப் போன்றோரும் தம்மைப் போன்றே பரிசில் பெற வேண்டும் என்னும் வேட்கையின் வெளிப்பாடே இதன் அடுத்த நிலையாகக் கருதப்படலாம்.

    இதன் தொடர்ச்சியாகத் தான் பரிசில் பெற்ற மன்னனின் திருவோலக்கத்தை அடைவதற்கான வழிமுறைகளை எடுத்துக்கூறுவதாக வளர்ச்சியடைந்திருக்க வேண்டும்.

    பாணர்கள் கையிலிருந்துப் புலவர்களுக்கு மாறிய ஆற்றுப்படை

    ஒப்பாரிக்கு யாப்பிலக்கணம் கிடையாது. காரணம் அது மக்கள் வழக்கு. அவலத்தின் ஆற்றல் கூறுவது. அடர்த்தி வெளிப்படுவது. ஆனால் இந்த ஒப்பாரி திரைப்படத்தில் இடம்பெறுகிறபோது திரையிசைப் பாடலாசிரியர் கையில் வந்துவிடுகிறது. அந்த நிலையில் அது தனித்தன்மை பெறுகிறது. அந்தத் தனித்தன்மை முந்தைய பாமர வழக்கினின்றும் சிறந்துமிருக்கலாம். சிறவாமலும் அமையலாம். தூது இலக்கியமும் அவ்வாறே. கலிவெண்பாவில் பாடப்பெற வேண்டிய தூதிலக்கியம் தற்காலத்தில் எல்லா யாப்பு வகையிலும் பாடப்பெறுகிறது என்பதையும் திரையிசைப்பாடல்களில் இசையமைப்பாளரின் இசைக்கேற்ற வகையில் பாடப்பெறுகின்றன என்பதையும் கருத்திற் கொள்ள வேண்டியதிருக்கிறது. ஆற்றுப்படை இலக்கியமும் அதுபோன்றதுதான். தொழில்முறைப் பாணர்களிடமிருந்து அதாவது இசைக்கலைஞர்கள் கையில் தவழ்ந்த ஆற்றுப்படைப்பாட்டு தமிழ்ப் பாநெறி அறிந்த புலவர்கள் கையில் வந்தபோது பல மாற்றங்களை அடைந்தது. அவ்வாறு அடைந்த மாற்றங்களுள் ஆற்றுப்படைப் பாடப்படும் பாவகையும் முறையும் மிகவும் கவனிக்கத்தக்க ஒன்றாகக் கருதப்படுகிறது.

    ஆசிரியப்பாவில் பாடப்பெறும் ஆற்றுப்படை

    இரவலர்கள் கையிலிருந்த ஆற்றுப்படை இலக்கியம் புலவர்கள் கையில் வந்தபோது அடைந்த மாற்றங்களில் பாவகை தலையாயது என்பது சென்ற பத்தியில் உணர்த்தப்பட்டது. பாணர்களுக்கு இசை தெரியும். புலவர்களுடைய பாடல்களில் பொருள் நயத்தை உணர முடியும். அந்தப் பாடல்களில் இசை பற்றிய குறிப்புக்கள் இருக்கலாமே தவிர இசையே பாடலாக அமையவில்லை. பெரும்பாலும் ஆசிரிய உரிச்சீர்கள் பயின்று வருவதால் ஆசிரியப்பா என்பாரும் உளர். உண்மையில் உரைநடைக்கு அடுத்த பாநிலையின் தொடக்கமாக அமைந்ததாலும் பெரும்பாலான ஆசிரியர்கள் பயன்படுத்தியதாலும் அதற்கு அப்பெயர் வந்திருக்கக் கூடும். ஆசிரியர் என்பதற்குப் புலவர் என்பதும் ஒரு வழக்கு. ‘ஆசிரியர் நக்கீரர்’ என்பது காண்க. இவ்வாறு இசைவாணர்களுக்கான ஆற்றுப்படை இலக்கியம் புலவர்கள் கைக்குத் தொல்காப்பியத்துக்கு முற்பட்ட நிலையிலேயே வந்திருக்க வேண்டும். பின்னாலே வந்த புலவர் பெருமக்கள் தாம் பாடிய ஆற்றுப்படைத் துறையில் தமக்கு முன்னோர்களாகிய பாணர்களை ஒரு பாத்திரமாக இடமளித்துப் பெருமைப்படுத்தினர் எனலாம். புலவர்களது கற்பனைத்திறன், வரலாற்றறிவு, இயற்கை ஈடுபாடு ஆகியனவற்றுக்கெல்லாம் ஆற்றுப்படை இலக்கியம் இலக்கியத் தளமானது,. களமானது என்றால் அது மிகையில்லை.

    சங்க இலக்கியங்களில் ஆற்றுப்படை

    ‘ஆற்றுப்படை’என்பது தமிழிலக்கியத்தின் புறத்துறைகளில் ஒன்றாகக் கருதப்பட்டது என்பதற்கான சான்றுகள் சங்க இலக்கியங்களில் காணக்கிடக்கின்றன.  புறநானூற்றில் ‘பாணாற்றுப்படை’என்ற வகையில் (68, 69, 70, 138, 141, 155, 180) சில பாடல்களும், ‘விறலியாற்றுப்படை’என்னும் வகையில் (64, 103, 105, 133) சில பாடல்களும் ‘புலவராற்றுப்படை’என்னும் வகையில் (48) ஒருபாடலும் கிடைத்துள்ளன. பதிற்றுப்பத்திலும் ‘பாணாற்றுப்படை’, ‘விறலியாற்றுப்படை’ என்னும் வகையில் பல ஆற்றுப்படைப் பகுதிகள் உண்டு. ‘தொல்காப்பியர் காலத்தில் நான்காக இருந்த ஆற்றுப்படை வகைகள் சங்கக்காலத்தில் ஐந்தாக வளரச்சியடைந்தது. கூத்தரும், பாணரும், பொருநரும், விறலியும் என்பாருடன் புலவர்களும் ஆற்றுப்படுத்தியதாகப் புறநானூற்றில் குறிப்பு உண்டு. புலவர்களும் பரிசிலராதலால் பரிசு பெறத்தக்க புலவர்களைத் தாம் பரிசில் பெற்ற மன்னர்களிடத்தில் ஆற்றுப்படுத்தியிருக்கலாம். பத்துப்பாட்டில் முதுற்பாட்டாக அமைந்த திருமுருகாற்றுப்படை ஏனைய ஆற்றுப்படை அமைப்பிலிருந்து சற்று வேறுபட்டு அமைந்திருப்பது முன்னரே சுட்டப்பெற்றது.

    இறைவனிடம் புலவர்களை ஆற்றுப்படுத்தியதாக அமைக்கப்பட்ட புது வண்ண ஆற்றுப்படைகளை அடியொட்டிப் பிற்கால இலக்கண நூல்கள் அவற்றுக்கு இலக்கணத்தை வரையறை செய்த முறையையும் வரலாற்றில் காணமுடிகிறது.

    இருங்கண் வானத்து இமையோர் உழைப்
    பெரும்புலவன் ஆற்றுப்படுத்தன்று

    எனப் புறப்பொருள் வெண்பா மாலையும்,

    “புலவ ராற்றுப்படை புத்தேட்கும் உரித்தே”

    எனப் பன்னிரு பாட்டியலும் இலக்கணம் வகுத்திருப்பதை அறிய முடிகிறது. பாணாற்றுப்படை என்னும் ‘ஒருபெயர்’ வழக்கே, சிறுபாணாற்றுப்படை பெரும்பாணாற்றுப்படை என ‘இருபெயர்’ வழக்காக வகைப்பட்டது. சீறியாழை வைத்திருப்பவன் சிறுபாணன் எனவும் பேரியாழை வைத்திருப்பவன் பெரும்பாணன் எனவும் பிரித்துணரப்பட்டனர்.

    பாணாற்றுப்படை ஒரு விளக்கம்

    பாணாற்றுப்படைகளில் ஒன்றான சிறுபாணாற்றுப்படை என்னும் இலக்கியம் பத்துப்பாட்டுள் ஒன்றாகக் கோக்கப்பட்டுள்ளது. இது நல்லியக்கோடனைப் பாட்டுடைத்தலைவனாகக் கொண்டு இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் என்னும் சான்றோரால் பாடப்பெற்றது. தொண்டைமான் இளந்திரையனைப் பாட்டுடைத்தலைவனாகக் கொண்டு கடியலூர் உருத்திரங்கண்ணனார் என்னும் சான்றோரால் பாடப்பெற்ற பெரும்பாணாற்றுப்படையும் பத்துப் பாட்டுள் அமைந்துள்ளது.

    பொதுவாகப் பெரும்பாணாற்றுப்படைத் துறையில் புறநானூற்றில் முன்பே குறிப்பிட்டுள்ளபடி ஏழு பாடல்களும் பதிற்றுப்பத்தில் ஒன்றுமாக அமைந்துள்ளது.

    விறலியாற்றுப்படை என்னும் பெயரால் ஏனைய ஆற்றுப்படை நூல்களைப் போல் தனிநெடும் பாட்டு கிட்டவில்லையெனினும் தொகை நூல்களில் மிகுதியாகக் காணப்படுவன இத்துறை சார்ந்த பாடல்களே. புறநானூற்றில் நான்கும் பதிற்றுப்பத்தில் ஐந்துமாகக் கூடுதல் ஒன்பது பாடல்கள் இத்துறையில் கிட்டியுள்ளன.

    ஏனைய தொகுதிகளில் காணப்படாத பொருநராற்றுப்படையும் கூத்தராற்றுப்படையும் பத்துப்பாட்டில் மட்டுமே கோக்கப்பட்டுள்ளன. கூத்தராற்றுப்படைக்கு ‘மலைபடு கடாஅம்’ என்னும் பெயர் வழக்குமுண்டு. நன்னனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு பெருங்குன்றூர் கௌசிகனார் கூத்தராற்றுப்படையைப் பாட, பெண்பாற்புலவர் எனக் கருதப்படும் முடத்தாமக் கண்ணியார் கரிகால் பெருவளத்தானைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு பொருநராற்றுப்படையைப் பாடியிருக்கிறார்.

    இவ்வாறு தனிப்பெருந்துறையாக ஆற்றுப்படைத் துறை விளங்கியிருக்கிறது. தொல்காப்பியம் வாழ்வியல் நூல் என்னும் கருத்தியலிலிருந்து விலகி மாபெரும் இலக்கியவியல் அல்லது பாவியல் நூல் என்பதற்கு இதுவும் ஒரு வலுவான சான்றாகும். தனிநெடும் பாடல்களாகப் பத்துப்பாட்டுள் அமைந்த இவ்வாற்றுப்படைத்துறை சிறுகுறு பாடல்களுக்கான துறையாகத் தொகை நூல்களில் அமைந்திருக்கின்றது என்பது நோக்கத்தக்கது.

    ஆற்றுப்படையின் பிற்கால வளர்ச்சி

    சங்க இலக்கியத்தில் காணப்படும் ஆற்றுப்படைப் பாடல்களை மையமாகக் கொண்டு பன்னிரண்டாம் நூற்றாண்டில் தோன்றிய ‘பன்னிரு பாட்டியல்’ என்னும் இலக்கண நூல் ஆற்றுப்படைக்கு இலக்கணம் கூறியிருக்கிறது. தமிழைப் பொருத்தவரையில் இலக்கிய வளர்ச்சி என்பது மொழியின் எளிமையாகவே கருதப்பட்டிருக்கிறது. சங்க இலக்கியத் தொகுப்புக்களின் மொழிநடையும் அவற்றைத் தொடர்ந்து இலக்கியங்களின் மொழிநடையும் இலக்கியத்தின் ஏனைய கூறுகளில் சிறந்து விளங்கினாலும் மொழிநடையைப் பொருத்தவரையில் எளிமையே அரசாண்டது. இது நீர்த்துப் போகும் அளவுக்கு இன்றைக்கு நிலைமை இருக்கிறது.

    ஆற்றுப்படை இலக்கியங்களின் வளர்ச்சிநிலையைப் பொருத்தவரையில் திருஞான சம்பந்தப் பெருமான் பாடிய கோடிக்கரை ஆற்றுப்படை குறிப்பிடத்தக்கது. பதினெட்டாம் நூற்றாண்டில் தோன்றிய கச்சியப்ப முனிவரால் இயற்றப்பட்ட திருத்தணிகையாற்றுப்படையும் ஆசிரியர் பெயர் தெரியாத திருப்பாணாற்றுப்படையும் இலக்கிய வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளன. சில பத்திகளுக்கு முன்னர் கூறியவாறு சங்க இலக்கியங்களில் காணப்படும் புலவராற்றுப்படை பதினேழாம் நூற்றாண்டுவரை தொடர்ந்துள்ளது. திருமேனி இரத்தினக் கவிராயர் என்பார் எழுதிய புலவராற்றுப்படை இந்த நிரலில் வரும். இடைக்கால இலக்கியங்களில் ஏகம்பவாணன் ஆற்றுப்படையும் அருணகிரிநாதர் எழுதிய மற்றொரு திருமுருகாற்றுப்படையும் சிந்திக்கத்தக்கன.

    ஆற்றுப்படை இலக்கியப் படைப்பில் இஸ்லாமியர்

    குலாம் காதிர் நாவலர் என்பாரால் எழுதப்பட்ட ‘புலவராற்றுப்படை’ கவனத்தைக் கவர்கின்றதொரு ஆற்றுப்படையாகும். இது மதுரைத் தமிழ்ச் சங்கத்தலைவர் பாண்டித்துரைத் தேவரிடம் புலவர் ஒருவரை ஆற்றுப்படுத்துவதாக அமைந்துள்ளது. பெரும்பாலான ஆற்றுப்படை நூல்களில் இரவலர்களும் புலவர்களும் நடந்து சென்று பாட்டுடைத் தலைவனைக் காண்பதைத்தான் கண்டிருக்கிறோம். இந்த ஆற்றுப்படையில் ஆற்றுப்படுத்தப்படுகிறவன் புகைவண்டியில் செல்வதாக அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பரிசில் பொருளாகக் கைக்கடியாரத்தைப் பெற்றதாகவும் பாடப்பெற்றுள்ளது. சொற்பொழிவாற்றுப்படை, காதலியாற்றுப்படை, மாணாக்கர் ஆற்றுப்படை, ஆசானாற்றுப்படை, செந்தமிழ்ச் செல்வியாற்றுப்படை எனப் பல்வகையாக ஆற்றுப்படைகள் தோன்றியிருக்கின்றன.

    ஆற்றுப்படை ஒரு பண்பாட்டுக் கருவூலம்

    “பசித்தவனுக்கு உணவை வழங்குவதை விட, அதை உருவாக்கிக் கொள்ளும் வழியை அவனுக்குச் சொல்லிக் கொடுப்பதே சிறந்த அறம்” என்பது மேல்நாட்டுப் பொன்மொழி. இன்றைய நடப்பியலின் எதிர்மறைப் போக்கினைச் சிந்தித்தால் அன்றைய ஆற்றுப்படை இலக்கியம் ஒரு பண்பாட்டு இலக்கியம் என்பதை அறிந்து கொள்ள முடியும். தான் தேடிய செல்வத்தைத் தானே துய்ப்பதும் துய்க்க இயலாக் காலத்து மாண்டு போவதும் தேடிய செல்வம் வீணாவதும் நிகழ்கால நடப்பியல். ஆனால் தனக்குப் பரிசளித்தவனின் முழு முகவரியைக் கூறி அந்த முகவரிக்குச் செல்லும் தடத்தினைச் சிறிதும் வழுவில்லாமல் எடுத்துரைத்து ‘இன்ன பரிசில் யான்பெற்றேன் எனப் ‘பெற்ற பெருவளத்தை’ மறைக்காமல் காட்டி மற்றொருவனையும் வாழச்செய்யும்’ மனநிலையின் மொழிவழி வெளிப்பாடே ஆற்றுப்படை இலக்கியத்தின் சாரமாகும். சங்க காலத்துக் கலைஞர்களின் பண்பாட்டையும் வாழ்வையும், அவர்களை ஆதரித்துக் கலை வளர்த்த புரவலர்களின் ஈர உள்ளத்தையும், வீர நெஞ்சத்தையும் ஆற்றுப்படைகள் இலக்கிய ஓவியங்களாகக் காட்டி நிற்கின்றன. ‘கொடுப்பதூஉம் அழுக்கறுப்பார்கள்’ நிறைந்த உலகில் கொடுப்பவன் இருக்கும் இடத்திற்கு வழிகாட்டும் இரவலர்கள் புரவலர்களினும் உயர்ந்தவர்களாகவே கருதப்படுவர்.

    இருபதாம் நூற்றாண்டில் ஆற்றுப்படை இலக்கியம்

    தமிழிலக்கிய வரலாற்றில் சங்ககாலத்திற்குப் பின் ஏனைய இலக்கிய மரபுகள்  உருவத்தாலும் உள்ளடக்கத்தாலும் தொடர்ந்து வந்திருப்பினும், ஆற்றுப்படை இலக்கியம் மட்டும் அத்தகைய தொடர்ச்சியைப் பெற்று வந்ததற்கான அடையாளத்தைக் காண இயலவில்லை. சங்க இலக்கியங்களுக்குப் பிறகு மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவை இருபதாம் நூற்றாண்டில்தான் தோன்றினவோ என எண்ணுமாறே வரலாறு அமைந்துள்ளது.

    1. திருச்சியைச் சார்ந்த அமிர்தம் சுந்தரநாதபிள்ளை எழுதிய ‘புலவராற்றுப்படை’
    2. மேலூர் பி.கே. சீனிவாச ஆச்சார்யா எழுதிய ‘மன்பதை ஆற்றுப்படை’
    3. தஞ்சை பழநிவேல் பிள்ளை எழுதிய ‘வரமுருகாற்றுப்படை’
    4. திம்மப்ப அந்தணர் எழுதிய ‘ஞானியார் ஆற்றுப்படை’
    5. இராமகோவிந்தசாமிப் பிள்ளை எழுதிய ‘ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்யா ஆற்றுப்படை’
    6. பி.எம் வேணுகோபால் எழுதிய ‘வடஅரங்க ஆற்றுப்படை’
    7. டி.எஸ்.சீனிவாசஆச்சார்யா எழுதிய ‘நமசிவாய மூர்த்தி ஆற்றுப்படை’
    8. வே.ரா. தெய்வசிகாமணி எழுதிய ‘சென்னிமலை முருகன் ஆற்றுப்படை’

    முதலிய ஆற்றுப்படை நூல்கள் இந்த நூற்றாண்டில் தோன்றியவற்றுள் சிலவாகலாம்.

    ஆற்றுப்படை இலக்கியங்களும் அ.கி.பரந்தாமனாரும்

    தமிழில் ஆற்றுப்படை இலக்கிய வடிவத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர் பேராசிரியர் அ.கி.பரந்தாமனார் ஆவார். அவரெழுதிய ஆற்றுப்படை நூல்கள்,

    1. 1926 இல் எழுதிய ‘தமிழ் மகள் ஆற்றுப்படை’ (189 வரிகள்)
    2. 1943 இல் எழுதிய ‘திருத்தொண்டர் ஆற்றுப்படை’ (297 வரிகள்)
    3. 1958 இல் எழுதிய ‘அன்னை இயற்கை ஆற்றுப்படை’ (303 வரிகள்)

    மேற்கண்ட ஆற்றுப்படைகளுள் ‘திருத்தொண்டர் ஆற்றுப்படை’ புதியதொரு சிந்தனையை உள்ளடக்கியது. ‘திருத்தொண்டர்’’ என்னும் திருநாமம் சைவ அடியவர்களுக்கே உரியது. அதனைத் தமிழ்த்தென்றல் திரு.வி.க. அவர்களுக்குரியதாக்கி, அவர்பால் ஆற்றுப்படுத்துவதாக அமைந்தது இது. திரு.வி.க.விடம் கல்வி பயின்றுப் பொதுவாழ்வு நெறியைக் கற்றுக் கொண்ட ஒருவர் மற்றொருவரை நோக்கி, அத்தகைய பண்புநலன்களைப் பெற்றுப் பொதுத்தொண்டு செய்யுமாறு ஆற்றுப்படுத்துவது  இதன் உள்ளடக்கமாகும்.

    இருபதாம் நூற்றாண்டு ஆற்றுப்படை இலக்கியங்களில் மரபும் புதுமையும் 

    இருபதாம் நூற்றாண்டு ஆற்றுப்படை நூல்கள் பெரும்பாலும் ‘யாப்புத் தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட்ட செயற்கைச் ‘செய்யுள் தளவாடங்களாகவே’ தோன்றுகின்றன. ‘கலம்பகம் பார்த்தொரு கலம்பகம்’, ‘அந்தாதி பார்த்தொரு அந்தாதி’என்னும் பாவேந்தரின் கூற்றை உறுதி செய்வனவாக அவை அமைந்துள்ளன. இருப்பினும், பத்துப்பாட்டுள் செம்பாதியாய் நின்று ‘உமாமகேசுவரராகத்’தோன்றும் இவ்வாற்றுப்படை இலக்கியங்களுள், உருவத்தால் மரபுசார்ந்தும் உணர்ச்சி — உள்ளடக்கம் ஆகியவற்றால் புதுமை சார்ந்தும் கற்பனை நயம் சார்ந்தும் கருத்துக்களின் பெட்டகமாகத் திகழ்கின்ற படைப்புக்களும் உண்டு.

    1. ‘மாணவர் ஆற்றுப்படை’என்பது பேராசிரியர் டாக்டர் சி. இலக்குவனார்அவர்களால் புதுக்கோட்டைக் கல்விச் செல்வரும் வள்ளலுமான பி.ஏ. சுப்பிரமணியபிள்ளை அவர்களைப் பற்றி, 1959ஆம் ஆண்டு 190 வரிகள்  கொண்டதொரு நூலாக எழுதப்பட்டது.
    1. கரந்தைக் கவியரசு வேங்கடாசலம் பிள்ளை தன்னுடைய ஆசிரியரும் பீட்டர்ஸ் உயர்நிலைப்பள்ளி தமிழாசிரியருமான ஆ.சுப்பிரமணிய அய்யர் அவர்களிடம் தம் நெஞ்சை ஆற்றுப்படுத்துவதாகப் பாடியது ‘ஆசான் ஆற்றுப்படை’ நூலாகும்.

    ஆற்றுப்படைகளின் பாடுபொருள்கள் பல்வகையாக அமைந்திருப்பினும், மேற்சுட்டியனபோலக் கல்வி தொடர்பான ஆற்றுப்படைகள் எண்ணிக்கையிலும் தரத்திலும் தனித்தும் சிறந்தும் விளங்குகின்றன. அறியாமையாகிய இருட்டை விலக்குவதிலும் குருவணக்கத்திலும் கவிஞர்களுக்குள்ள ஆர்வத்தையும் மனப்பான்மையையும் இவை வெளிப்படுத்துவதாகக் கொள்ள முடியும். ‘மாணவர் ஆற்றுப்படை’ என்றும் ‘மாணாக்கர் ஆற்றுப்படை’ என்றும் ‘ஆசான் ஆற்றுப்படை’ என்றும் அவை தாங்கியுள்ள பெயர்களே அவற்றின் பொருண்மையை விளக்கப் போதுமானவையாக உள்ளன.

    கடவூர் மணிமாறனின் மாணாக்கர் ஆற்றுப்படையின் தனித்தன்மை

    மரபுசார்ந்த வடிவங்களோ, சொல்லாட்சிகளோ புதியன தோன்றுவதற்குத் தடையாக இருப்பதில்லை. உத்தியால் மரபுசார்ந்தும் பாடுபொருளாலும் கற்பனையாலும் புதுமை கூட்டியும் அமைந்துவிடுமானால் எந்தவொரு படைப்பிலக்கியத்திற்கும் தனித்தன்மை தானாகவே அமைந்துவிடும். பாவேந்தர் பாரதிதாசனின் பெரும்பாலான படைப்புக்கள் இவ்வாறு அமைந்தனவே. கவிஞர் கடவூர் மணிமாறன் படைத்திருக்கும் மாணாக்கர் ஆற்றுப்படையும் இதற்கோர் எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது.  கல்வி சார்ந்த பொருண்மைகள் ஆற்றுப்படை நூல்களின் உள்ளடக்கமாக அமைந்ததற்குச் சமுதாய வரலாறு சார்ந்த மற்றொரு காரணமும் உள்ளது. பொதுவாக இந்தியாவில் சிறப்பாகத் தமிழகத்தில் கல்வியின் பெருமை உணரப்பட்டதும் அதற்கான உரிமை பெற்றதும் இருபதாம் நூற்றாண்டில்தான். அனைவருக்கும் கல்வி என்பதே இருபதாம் நூற்றாண்டில் தமிழகத்தில் அமைந்த எந்த அரசுக்கும் கொள்கையாக அமைந்தது. படைப்பாளர்களும் கவிஞர்களும் சமுதாயத்தின் இந்தத் தேவையைத் தங்கள் படைப்பாற்றல் மூலம் வெளிப்படுத்தினார்கள் என்பதுதான் உண்மையாகும்.

    பரிசில் பெற்ற ஒருவர் பெறாத ஒருவரைக் குறிப்பிட்டதொரு வள்ளலை நோக்கி ஆற்றுப்படுத்துவதே ஆற்றுப்படையின் பொதுவிலக்கணம். அதாவது அவ்விருவரும் ‘வளத்தைப் பெற்றதையும் பெறாததையும் தவிர’வேறு எல்லா வகையினும் ஒரே தன்மையினராய் இருப்பர். இவ்வடிப்படையில் நோக்கினால், ‘மாணாக்கர் ஆற்றுப்படை’ மாணவர் ஒருவர் மற்றொரு மாணவரை ஆற்றுப்படுத்துவதாக அமைந்திருத்தல் வேண்டும். அவ்வாறின்றி, ஆசிரியர் ஒருவர் மாணவர்களை ஆற்றுப்படுத்துமாறு அமைத்துக் காட்டியது ஆற்றுப்படை இலக்கணப் பொருண்மையை இன்னும் விரிவுபடுத்தியதாகக் கருதமுடியும்.

    ஆக்கம் நாடி அரும்பயன் தேடும்
    நோக்கம் மிகுந்தோர் ஒருங்கக் கூடுமின்!”

    என்னும் வரிகளால் மணிமாறனின் மாணாக்கார் ஆற்றுப்படையின் தனித்தன்மையைக் கீழ்க்கண்டவாறு வரையறுக்க முடிகிறது.

    1. ஆற்றுப்படுத்தும் ஆசிரியர் ஒருவராகவும் ஆற்றுப்படுத்தப்படும் மாணவர்கள் பலராகவும் இருப்பது
    2. ஆற்றுப்படுத்தப்படும் இடம், பாட்டுடைத்தலைவனின் திருவோலக்கத்திற்குப் பதிலாகக் கல்வி நல்கும் பள்ளியாக இருப்பது.
    3. கல்விக்காக வேற்றிடம் சென்று அல்லற்பட வேண்டாமென்று அறிவுறுத்துவது.

    மேற்கண்ட மூன்று கூறுகளால் மணிமாறனின் மாணாக்கர் ஆற்றுப்படை, ஏனைய ஆற்றுப்படைகளினின்றும் தனித்தும் சிறந்தும் விளங்குகிறது.

    பின்னத்தூராரின் ஒருவரும் மணிமாறனின் பலரும்

    இருபதாம் நூற்றாண்டின் முதல் ஆற்றுப்படை நூல் கும்பகோணம் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணிபுரிந்த பின்னத்தூர் நாராயணசாமி அய்யரால் எழுதப்பட்டது. ‘மாணாக்கர் ஆற்றுப்படை’என்னும் பெயரால் 1900ஆம் ஆண்டு எழுதப்பட்ட இந்நூல் 335 வரிகளைக் கொண்டுள்ளது. நகராட்சிப் பள்ளியில் படித்து நன்னிலையில் உள்ள ஒருவர் கற்பதற்கு வசதியற்ற ஒரு மாணவனை, அப்பள்ளிக்கு ஆற்றுப்படுத்துவதாக அமைந்துள்ளது. இதனுள் தனிமனிதரிடம் ஆற்றுப்படுத்தும் தொல்காப்பிய மரபு புதுவடிவம் பெற்று, ஒரு நிலையத்தை நோக்கி ஆற்றுப்படுத்துவதாக அமைந்துள்ள புதுமைப் போக்கு நோக்கத்தக்கது. பின்னத்தூராரின் ஆற்றுப்படை உட்பட, ஆற்றுப்படை நூல்கள் அனைத்தும் ஒருவர் மற்றொருவரை ஆற்றுப்படுத்துவதாக அமைய, கடவூர் மணிமாறனின் மாணாக்கர் ஆற்றுப்படை, ஒருவர் பலரை ஆற்றுப்படுத்துவதாக அமைந்திருக்கிறது. கல்விப்பணியில் ஆசிரியர் ஒருவராகவும் மாணவர் பலராகவும் அமைந்துவிடுவது இயல்பாதலின், இத்தகைய அமைப்பு ஆற்றொழுக்கான உணர்ச்சி வெளிப்பாட்டுக்குத் துணையாகிவிடுவதைக் காணமுடிகிறது.

    திணைச்சிறப்பும் துறையமைதியும்

    புறத்திணைகளில் பாடாணும் காஞ்சியும் தனித்துவம் மிக்கன. நிலையாமையை எடுத்துக் கூறி அறத்தை முன்னிறுத்துவது காஞ்சியெனின், மனிதனின் விழுமியங்களை எடுத்துக்கூறி வீரத்தினும் அவை சிறந்தன என்னும் உண்மையை எடுத்துக் கூறுவது பாடாணாகும். அதாவது பாடாண் திணை என்பது மனிதனின் தலைமைப் பண்புகளாகிய அறிவு, ஆற்றல், தன்னலமறுப்பு, ஈகை, அன்பு, அருள் முதலிய பண்புகளைப் பாடுகின்ற திணை. மேற்கண்ட தனித்த இலக்கிய வரலாற்றை உள்ளடக்கிய ஆற்றுப்படை இலக்கியத்தின் கட்டமைப்பை ஓர் இலக்கியச் சான்று கொண்டு விளக்கி இக்கட்டுரை நிறைவு பெறுகிறது.

    பாடாண்திணை, புலவராற்றுப்படைத் துறையில் பொய்கையார் பாடியதாக ஒரு பாட்டு புறநானூற்றில் காணப்படுகிறது. இந்தப் பாட்டில் இன்னின்ன வளமுடையது எம்மூர். அவ்வூரை ஆள்கிறவன் இவன் எம் மன்னன். அவனிடம் சென்று பரிசு பெறுகிறபோது வழிகாட்டிய என்னை மறந்துவிடாதே’ எனச் சொல்வது போல் அமைத்திருக்கிறது. .

    நாட்டுவளத்தைக் குறிப்பாக வண்ணனைச் செய்கிறார் புலவர். வளமில்லாதவன் வள்ளலாகத் திகழ்வது இயலாது ஆதலின் அது முதலில் கூறப்படுகிறது. மலர்களை வைத்து வளத்தைக் கூறுகிறார் பொய்கையார். கோதையாகிய சேரனைக் கோதையாகிய பெண்கள் தழுவுகிறார்கள். அவ்வாறு தழுவுகிற பெண்களைக் கோதைகள் (மாலைகள்) தழுவுகின்றன.

    கோதை மார்பிற் கோதை யானும்
    கோதையைப் புணர்ந்தோர் கோதையானும்

    என்று கோதை என்ற சொல்லைச் சேரனுக்கும் மங்கையர்க்கும் மலர்களுக்கும் ஆக்கிப் பாடுகிறார். கரிய கழிகளில் பூத்த நெய்தல் மலர்களாலும் தேன் நாறுகின்ற தொண்டி என்பார்.

    மாக்கழி மலர்ந்த நெய்த லானும்
    கள் நாறும்மே கானலந் தொண்டி

    என்று பாடுகிறார். கோதை ஆள்கிற சிறப்பும், அவனைத் தழுவுகிற மாதர்ச் சிறப்பும், மாதரைத் தழுவுகிற மாலையின் சிறப்பும், கழியில் மலர்ந்த நெய்தல் சிறப்பும் வழிகாட்டுகிற பொய்கையாருக்குத் தற்போது சேய்மையாதலின் அந்த ஊர்தான் தன்னுடைய ஊர் என்று புலவரிடம் கூறுகிறாராம்.

    அஃது எம் ஊரே!’

    என்பது புலவர் மொழி!. ‘அந்த ஊரைத் தலைநகராகக் கொண்டு ஆளுகிற கோதை மார்பன் தன்னுடைய அரசன்’ என்பதை,

    அவன் எம் இறைவன்!’

    எனப் பாடுகிறார். இந்த இடத்தில் மன்னன் என்னாது இறைவன் எனப் புலவர் சொல்லியதற்கு ஒரு காரணம் உண்டு. அரசநீதி செலுத்துகிற இடத்தில்தான் அவன் மன்னன் அல்லது அரசன். புரவலனாக மாறிப் புலவர்களுக்கு உதவுகிறபோது அவன் இறைவன் என்பது குறிப்பு. ‘எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்’ என்பது நோக்குக.

    ‘அன்னோன் படர்தி’

    என்று முன்னிலையில் ஆற்றுப்படுத்துகிறான். ஒருவேளை இரவலனுக்கு விருப்பமில்லாவிடின், என்ன செய்வது? ‘படர்தியாயின்’ என்னும் ஐயக்கிளவியால் ‘சென்றால் பெறலாம்’ என்பதோடு நிறுத்திக் கொள்கிறான்.

    எம்மும் உள்ளுமோ முதுவாய் இரவல!
     அமர் மேம்படூஉங் காலை நின்
    புகழ் மேம்படுநனைக் கண்டனம் எனவே!”

    என்னும் இறுதி வரிகளில் “புலவரே! அவனைக் கண்டால் காணுமிடத்து போர்க்களத்தில் நீ அடைந்த மேம்பாட்டைப் பாடி நின் புகழை மேம்படுத்தியவனைக் கண்டேன்” என்று என்னையும் நினைப்பாயாக” என்று பொய்கையார் பாடுகிறார்.

    கோதை மார்பிற் கோதை யானும்
    கோதையைப் புணர்ந்தோர் கோதையானும்
    மாக்கழி மலர்ந்த நெய்த லானும்
    கள் நாறும்மே கானலந் தொண்டி
    அஃது எம் ஊரே! அவன் எம் இறைவன்!
    அன்னோர் படர்தி யாயின் நீயும்
    எம்மும் உள்ளுமோ முதுவாய் இரவல!
    அமர் மேம்படூஉங் காலை நின்
    புகழ் மேம்படுநனைக் கண்டனம் எனவே!” (புறம். 68)

    ஆற்றுப்படுத்தப்பட்ட மன்னனின் வரலாறு மருட்சியை ஏற்படுத்துகிறது.    கோதை மார்பன் என்பவன் சேர மன்னருள் ஒருவன். இவனுக்கும் மதுரையிலிருந்து ஆட்சிபுரிந்த பழையன்மாறன் என்பவனுக்கும் பகைமை இருந்தது. கிள்ளிவளவன் என்ற சோழ மன்னன் பழையன் மாறன் என்பவனைப் போரில் வென்றான். அதாவது சேரனுக்கும் பாண்டியனுக்கும் பகையாம். ஆனால் சோழன் பாண்டியனை வெல்கிறானாம். அதனால் சேரன் மகிழ்ந்தானாம்.

    நெடுந் தேர்,
    இழை அணி யானைப் பழையன் மாறன்,
    மாட மலி மறுகின் கூடல் ஆங்கண்,
    வெள்ளத் தானையொடு வேறு புலத்து இறுத்த
    கிள்ளி வளவன் நல் அமர் சாஅய்,
    கடும் பரிப் புரவியொடு களிறு பல வவ்வி,
    ஏதில் மன்னர் ஊர் கொள,
    கோதை மார்பன் உவகையின் பெரிதே. (அகநானூறு 345)

    தமிழன் ஒற்றுமை எவ்வளவு உயர்ந்ததாகப் பாடப்படுகிறது பார்த்தீர்களா????? ‘‘பாண்டியன் ஏதில் மன்னராம்’!. அவ்வாறு மகிழ்ந்த சேரனிடத்துப் புலவர் பொய்கையார் மற்றொரு புலவரை ஆற்றுப்படுத்துவதாக அமைந்திருக்கிறது இந்தப் பாடல். “தலைவனது ஊரையும் இயல்பையும் கூறிமுதுவாய் இரவல எம்மும் உள்ளெனத் தம் தலைமை தோன்றக் கூறினமையின் இது புலவராற்றுப்படை ஆயிற்றுஎன்னும் பாடலின் பின் குறிப்பு புலவர்களின் செம்மாந்த மனநிலையைக் காட்டுவதாக அமைந்திருக்கிறது.

    ஆற்றுப்படையை அறிந்தால் அனைத்தும் அறியலாம்.

    படித்துக் கெட்டவர்கள் யாருமிலர். படிக்காமல் கெட்டவர்கள் இருக்கக் கூடும். எனவே இலக்கியச் சுவையுணர் திறனும், இலக்கிய ஆய்வுத் திறனும் கைவரப் பெற்றவர்கள் ஒரு நூலைப்பற்றிய தோற்றத்தையும் வளர்ச்சியையும் அறிந்து கொண்டால் அவ்விலக்கியத்தை முற்றும் அறிந்ததாகக் கருதப்படுவர். இசை, கூத்து என்னும் நுண்கலைகள் எவ்வாறு பழந்தமிழகத்தில் போற்றப்பட்டன என்பதையும் கலைஞர்கள் எவ்வாறு ஆட்சியாளர்களால் மதிக்கப் பெற்றனர் என்பதையும் அறிந்து கொள்ள முடியும். அழுக்காறு அறியா அக்காலக் கலைஞர்களின் அகவழகையும் மக்கள் வாழ்வியல் நுட்பங்களைக் கவிதையாக்கும் பழந்தமிழ்ப் புலவர் பெருமக்களின் புலமைத்திறத்தையும் அறிந்து கொள்ள முடியும். வாரி வழங்கும் மன்னர்கள் ஆண்ட திறத்தையும் அவர்தம் வள்ளன்மையைப் பாடிப் புகழ்ந்த இரவலர்கள் மற்றும் புலவர்களின் நன்றியுணர்ச்சியையும் அறிந்து கொள்ளலாம். சுருங்கச் சொன்னால் சங்கக் காலம் தமிழகத்தின் பொற்காலம் என்பதற்கான சான்றுகளில் ஆற்றுப்படை இலக்கியச் சான்றுகள் தனித்துவம் மிக்கன.   

    நிறைவுரை

    இலக்கியக் கூறுகளில் காலத்திற்கேற்பக் கருத்துக்களும் பாடுபொருளும் வடிவமும் மாறுபடும். ஆனால் கற்பனையும் உணர்ச்சியும் மாறுபடாது. அவை புதுமையாகவும் அடர்த்தி வேறுபாட்டோடும் வெளிப்படும். தமிழ்க்கவிதைகளைப் பொருத்தவரை ஹைக்கூ, லிமரைக், சென்ட்ரியூ என ஜப்பானிய இறக்குமதிக் கவிதை வடிவங்களைப் பயன்படுத்திப் படைப்புத் தொழிலைச் செய்ய எத்தனிக்கிறோம். இந்த மண்ணின் மரபுக்கேற்ற இலக்கியங்களை அத்தகைய வடிவங்கள் முழுமையாக்குமா என்பது ஐயமே!  ஆற்றுப்படை ஓர் இலக்கிய வடிவம். இலக்கிய வடிவங்களைப் பொருத்தவரையில் தொல்காப்பியம் நெகிழ்ச்சியுடையது. அந்த அடிப்படையில் தற்காலத்திற்கேற்பத் திருத்தலங்களை நோக்கியோ, புகழ்மிகு கல்வி நிலையங்களை நோக்கியோ, அறிஞர்களின் இல்லம் நோக்கியோ கவிஞர்களின் இருக்கை நோக்கியோ ஆற்றுப்படை இலக்கியங்கள் தோன்றியிருக்க வேண்டும். நிலைமை அவ்வாறில்லை. பழைமையில் புதுமை தேக்குகின்ற முயற்சி பாரதி, பாரதிதாசனோடு முடிவடைந்துவிட்டதோ என எண்ணத் தோன்றுகிறது. அவ்வாறின்றி ‘இன்று ‘புதிதாய்ப் பிறந்தோம்” என்று இலக்கியங்களும் மகிழ வேண்டும் என்றால் ஆற்றுப்படை முதலிய பழந்தமிழ் வடிவங்கள் தற்காலக் கவிஞர்களின் சிந்தனையிலும் கணிப்பொறியிலும் எழுதுகோலிலும் நர்த்தனம் புரிதல் வேண்டும்.

    துணை செய்த நூல்கள்

    1. கடவூர் மணிமாறன் மாணாக்கர் ஆற்றுப்படை, விடியல் வெளியீட்டகம்,109, மேலத்தெரு, கிருஷ்ணராயபுரம், கரூர் மாவட்டம்.

    2. ஒளவை துரைசாமிப்பிள்ளை புறநானூறு மூலமும் உரையும், தெ.இ.சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்,  சென்னை. மறுபதிப்பு – 1967.

    3. துரை. அரங்கனார் கருவிலே திருவுடையான், மீனாட்சி புத்தக நிலையம், 60, மேலக்கோபுரத் தெரு, மதுரை – 1, இரண்டாம் பதிப்பு – 1964.

    4. தொல்காப்பியர்    தொல்காப்பியம் – பொருளதிகாரம், கு.சுந்தரமூர்த்தி (ப.ஆ.), 14, தெற்குத் தெரு, திருப்பனந்தாள் அஞ்சல், தஞ்சை மாவட்டம், இரண்டாம் பதிப்பு – 1970

    5.    நக்கீரர் நெடுநல்வாடை, தி.தெ.இ.சை.சி.நூ.ப.கழகம் லிமிடெட், சென்னை, மூன்றாம் பதிப்பு – 1955

    6.   மர்ரே பதிப்பகம் 1955இல் வெளியிட்ட பாட்டும் தொகையுமாகிய தொகுப்பு நூல்கள்.


    ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review):

    தமிழில் ஆற்றுப்படை இலக்கியம் – ஒரு வரலாற்றாய்வு’  என்னுந்  தலைப்பில் அமைந்த இக்கட்டுரையைப் பலமுறை பயின்று கட்டுரையின் அனைத்துக் கூறுகளையும் உள்வாங்கி ‘வல்லமை’ முன்மதிப்பீட்டு விதிகளைக் முழுமையாகக் கருத்திற்கொண்டு செய்யப்படும் முன் மதிப்பீடு 

    1. ‘வாய்மொழி இலக்கியங்கள் படைப்பிலக்கியங்களாகப் பரிணாமம் பெறும்’ என்னும் இலக்கிய வரலாற்றின் நுண்ணியத்தைச் சிறப்பாக அணுகியிருக்கும் கட்டுரையாசிரியர். ஆற்றுப்படை இலக்கியத்தைச் சரியான தளத்தில் வைத்து ஆராய முயன்றிருக்கிறார். 
    1. பெரும்பாலான தமிழ்ப் பேராசிரியர்கள் எழுதும் இலக்கிய வரலாறு என்பது குறிப்பிட்ட நூலின் உள்ளடக்க அமைதியைப் பந்திவைப்பதாகவே அமைந்துள்ளதை அனைவரும் அறிவர். இவர் ‘வரல் ஆறு’ என்பதற்கேற்ப நூல் வந்த மூலத்தையும் நடந்த தடத்தையும் கண்டறிவதையே இலக்கிய வரலாறாகக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்துவது நோக்கத்தக்கது. 
    1. பாடாண் திணை  மற்றும் ஆற்றுப்படைத் துறை முதலியன பற்றிய விளக்கத்தையும், சங்கக் காலத்திற்குப் பிறகு தவளைப் பாய்ச்சலாக ஆற்றுப்படை இலக்கியம் அமைந்து போனது என்பதையும் தக்க சான்றுகளுடன் நிறுவுகிறார். 
    1. ஏனைய ஆற்றுப்படைகளிலிருந்து திருமுருகாற்றுப்படை வேறுபடும் நுண்ணியத்தைப் பதிவிடும் ஆசிரியர் அதுபோன்றதொரு விளக்கத்தை ‘மாணாக்கர் ஆற்றுப்படைக்கும்’ தந்து சமன்செய்து சீர் தூக்கும் கோல்போல் இலக்கியத் தரநிர்ணயத்தைச் செய்வது .ஆய்வுக்குத் தேவையான நடுநிலைப் பண்பைப் புலப்படுத்துவதாக அமைகிறது. 
    1. வரலாற்றை முன்னே சொல்லி, புலவராற்றுப்படையில் அமைந்த ஒரு பாட்டைப் பின்னே சொல்லி விளக்கியிருப்பது ‘இலக்கணம் கண்டதற்கு இலக்கியமாக’ மாறுபட்டதொரு சுவையினைத் தருகிறது. 
    1. பல ஆற்றுப்படை நூல்களைப் பற்றிய விளக்கமும் பட்டியலும் கட்டுரையாசிரியரின் உழைப்பையும் பொறுப்புணர்வையும் உணர்த்துவதாக உள்ளது.


    Share
  • கனடாவில் இந்தியர்களுக்கு ஆபத்தா?

    கனடாவில் இந்தியர்களுக்கு ஆபத்தா?

    கனடாவில் வெறுப்புக் குற்றச் செயல்களும் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளும் அதிகரித்துள்ளன. எனவே இந்தியர்கள் கனடாவில் பயணிக்கும் போதும் படிக்கும் போதும் எச்சரிக்கையோடும் விழிப்போடும் இருக்குமாறு இந்திய வெளியுறவுத் துறை கேட்டுக்கொண்டுள்ளது. இந்தத் திடீர் அறிக்கையின் பின்னணி என்ன? கனடாவில் இந்தியர்களுக்கு ஆபத்தா? கனடாவின் கள நிலவரம் என்ன? கேனெக்ஸ்ட் குடியேற்றச் சேவைகள் நிறுவனத்தின் (CANext Immigration Services) தலைவர் நட்ராஜ் ஸ்ரீராம் உடன் ஓர் உரையாடல்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share