Blog

  • “லிட்டில் பாய்” – சுடோமு யமகுச்சி

    TOKYO, Japan – Photo shows the late Tsutomu Yamaguchi speaking in Nagasaki in June 2009 about his experience of surviving the 1945 atomic bombings of Hiroshima and Nagasaki. The Japanese Embassy in London has sent a written protest against the BBC for introducing him as ”The Unluckiest Man in the World” in its TV program that aired on Dec. 17, 2010, with the show’s personalities and the audience laughing. A producer of the show has apologized via e-mail. (Photo by Kyodo News Stills via Getty Images)

    1945ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6-ம் தேதி, இதே நாளில் அமெரிக்கா, ஹிரோஷிமா மீது வீசிய லிட்டில் பாய் என்பதுதான் உலகின் முதல் குண்டு வீச்சு. அதன் கதிர்வீச்சின் தாக்கத்தால் பல்வேறு வகையான புற்றுநோய்களால் பின்னாளிலும் ஏராளமானோர் இறந்தனர். இந்த இரட்டை குண்டுவெடிப்புகளிலும் தப்பிய ஒரே மனிதர் என்று ஜப்பான் அரசு அங்கீகரித்திருந்த, இரண்டையும் நேரடியாகக் கண்ட ஒரே சாட்சி சுடோமு யமகுச்சி. இரண்டு குண்டு வீச்சுகளிலிருந்தும் யமகுச்சி உயிர் தப்பியவர் 2010-ல் தனது 93 வயதுவரை உயிர் வாழ்ந்த மன உறுதியை என்ன சொல்வது.

    தனிமனித வளர்ச்சியே ஒரு சமுதாயத்தின் வளர்ச்சி. சமுதாயத்தின் வளர்ச்சியே ஒரு நாட்டின் வளர்ச்சி. ஹிரோஷிமா நாகசாகி என்ற பெயரைக் கேட்டாலே சிறுவர்கள் கூட ஒரு முறை உடல் சிலிர்த்து அதிர்ந்துவிடுவார்கள். 1945ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6-ம் தேதி, அமெரிக்கா ஹிரோஷிமா மீது வீசிய லிட்டில் பாய் என்பதுதான் உலகின் முதல் குண்டு வீச்சு. 12-15 ஆயிரம் டன் டிஎன்டி வெடிபொருள் சக்தியைக் கொண்ட அந்த அணுகுண்டு 13 சதுர கிலோ மீட்டர் பரப்பை சுடுகாடாக்கியது. குண்டு விழுந்த ஐநூறு அடி சுற்றளவில் இருந்த அனைவரும் நொடியில் எரிந்து சாம்பலானார்கள். 70% கட்டிடங்கள் அழிந்து மண்ணோடு மண்ணாயின. அங்கு வசித்த 3,50,000 மக்களில் 1,50,000 பேர் கொல்லப்பட்டனர்.

    குண்டுவெடித்து இரண்டு மணி நேரத்துக்குப் பிறகு கறுப்பாக அமில மழை பெய்தது. விண்ணை முட்டும் மரண ஓலமும், கை, கால், தலையில்லாத குழந்தைகளின் பெற்றோரின் கதறல் என அல்லோகல்லோலப்பட்டது ஹிரோஷிமா.

    அடுத்த மூன்று நாட்களில், நாகசாகி நகரத்தின் மீது, குண்டு மனிதர் (ஃபேட் மேன்) என்ற குண்டு மீண்டும் வீசப்பட்டது. 6.4 கிலோ புளுட்டோனியம் உள்ளிட்ட இதன் எடை 4,670 கிலோ. ‘குட்டிப் பைய’னைவிட திறன்மிகுந்த இதனால் 74,000 பேர் கொல்லப்பட்டனர். 1945 ஆக்ஸட் 8-ம் தேதியன்று ஜப்பான் மீது சோவியத் ரஷ்யா போர்ப் பிரகடனம் செய்ததும் ஜப்பான் வேறு வழியில்லாமல் அதே மாதம் 14-ம் தேதி நேச நாடுகளிடம் சரணடைந்ததும் என தொடர்ந்த பேரிடர்களைச் சந்தித்து வந்தது. நான்கு நாட்களுக்குள் இரண்டு அணுகுண்டு வீச்சினால் நடுங்கிப்போனது ஜப்பான். இச்சம்பவங்கள் நிகழ்ந்து பல்லாண்டுகளான பின்பும் சதைப் பிண்டங்களாக, கை,கால், கண், மூக்கு போன்ற உடல் பாகங்களின்றி குழந்தைகள் பிறக்கின்றன. அணுகுண்டின் தாக்கத்தால் மாதக்கணக்காக, வருடக்கணக்காக குற்றுயிரும் குலையுயிருமாகப் பரிதவித்து கதிர்வீச்சின் தாக்கத்தால் மடிந்தவர் பலர். வேதனையில் துடிப்பவர்களுக்கு
    சிகிச்சை அளிக்க மருத்துவமனைகளும் மருத்துவர்களும், செவிலியர்களும்கூட மிஞ்சவில்லை. அடுத்தடுத்து மேலும் சுமார் ஒரு லட்சம் பேர் உயிரிழந்தனர். கதிர்வீச்சின் தாக்கத்தால் பல்வேறு வகையான புற்றுநோய்களால் பின்னாளிலும் ஏராளமானோர் இறந்தனர். இந்த இரட்டை குண்டுவெடிப்புகளிலும் தப்பிய ஒரே மனிதர் என்று ஜப்பான் அரசு அங்கீகரித்திருந்த, இரண்டையும் நேரடியாகக் கண்ட ஒரே சாட்சி சுடோமு யமகுச்சி, ஜப்பானியக் கப்பல் பொறியாளர். இரண்டு குண்டு வீச்சுகளிலிருந்தும் யமகுச்சி உயிர் தப்பியவர் 2010-ல் தனது 93 வயதுவரை உயிர் வாழ்ந்த மன உறுதியை என்ன சொல்வது. தீயில் கருகி சாம்பலான பீனிக்ஸ் பறவை மீண்டும் மீண்டும் எழுந்து வருவதுபோல் உறுதியான சிந்தை கொண்டவர்களே வாழ்க்கையின் எத்தகைய பேரிடரையும் கடந்து வென்று வருபவர்கள். தன் மூலதன பங்குகளில் சுமார் 40% அழிந்துபட்ட நிலையிலும் 1960களின் பிற்பகுதியில், வியக்கத்தக்க வகையில் ஜப்பானிய பொருளாதாரம் வெகு விரைவில் மீண்டதோடு, தொடர்ந்து இலாபங்களைக் குவித்ததுதான் ஆச்சரியமான செய்தி. மேற்கத்திய நாடுகளின் சவால்களை எதிர்கொண்ட ஜப்பானியர்கள் செல்வந்தர்களாக மாறியவர்கள், அவர்களுடைய சமூக, பொருளாதார, கல்வி முறைகளுக்கு ஈடாக, போராடி தங்களை தயார்படுத்திக்கொண்டனர். ஜப்பானை உலகின் பணக்கார நாடுகளில் ஒன்றாக மாற்றிய மக்களின் கடின உழைப்பும் தியாகமும் அதிசயிக்கத்தக்கது. இரண்டாம் உலகப் போரின் பேரழிவிற்குப் பின்னர் 20-ம் நூற்றாண்டில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடைந்துள்ள ஜப்பான் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரத்தைக் கொண்டுள்ளது. சர்வதேச சமூகத்தில் அதன் பங்கு கணிசமானது. மக்களின் கடுமையான உழைப்பினால் தொழில்துறை உற்பத்தி 1951-ல் மீண்டுவர ஆரம்பித்து 1960-ல் 350 சதவிகிதத்தை எட்டி உலகையே அண்ணாந்து பார்க்க வைத்தது. அரசாங்கத்தின் வெற்றிகரமான பொருளாதார சீர்திருத்தம் ஒரு காரணம் என்றாலும் மக்கள் எஃகு, நிலக்கரி, பருத்தி உள்ளிட்ட மூலப்பொருட்களின் உற்பத்தியில் அதிக கவனம் செலுத்தி, ஜவுளி உற்பத்தியிலும் முன்னிலை வகித்து வெற்றிக்கு வித்திட்டனர்.

    #ஹிரோஷிமா #நாகசாகி #லிட்டில்பாய் #ஜப்பான் #உழைப்பு #அனுகுண்டு #அழிவு #hiroshima #nagasaki #japan #Japanhardwork #TsutomuYamaguchi #சுடோமுயமகுச்சி

    Share
  • கவியரசர் கண்ணதாசனின் பாடல்களில் ஆன்மீகம் – 19

    கவியரசர் கண்ணதாசனின் பாடல்களில் ஆன்மீகம் – 19

    சக்தி சக்திதாசன்

    “கலைமகள் கைப்பொருளே”

    கவியரசர் கண்ணதாசனின் பாடல்களில் ஆன்மீகம் என்ற தொடரில் இன்று நாம் ஆராயப் போகும் பாடல், “கலைமகள் கைப்பொருளே”.

    வசந்த மாளிகை எனும் திரைப்படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேஷன் , வாணிஸ்ரீ சம்பந்தப்பட்ட காட்சி.

    திரைப்படத்தில் இது ஒரு எளிய காட்சியாகத் தோன்றுகிறது.

    அன்பிற்காக ஏங்கும் ஒரு இளைஞன். செல்வம் இருந்தும் மனநிம்மதி இல்லாத வாழ்க்கை.

    தவறான பழக்கங்களின் பிடியில் சிக்கித் தவிக்கும் அவன்.

    அவனை நல்வழிப்படுத்த வேண்டும் என்ற தூய எண்ணத்துடன் வரும் ஒரு இளம் பெண்.

    கவனிப்பாரற்று மூலையில் கிடந்த வீணையை எடுத்துத் தூசி தட்டி இசைக்கிறாள்.

    கதைக்கு இது போதும்.

    ஆனால் கவியரசருக்கு அது போதாது.

    அவரது சொற்கள் கதையைத் தாண்டி மனித வாழ்க்கைக்குள் நுழைகின்றன.

    அதையும் தாண்டி ஆன்மாவின் வாசலைத் தட்டுகின்றன.

    வீணை என்பது வெறும் இசைக்கருவி அல்ல.

    அது மனித மனம்.

    அதன் நரம்புகள் மனிதனின் எண்ணங்கள்.

    அதை மீட்டும் விரல்கள் இறையருள் அல்லது ஞானகுருவின் வழிகாட்டுதல்.

    இவ்வாறு பார்க்கத் தொடங்கும்போது இந்தப் பாடல் முழுவதும் ஒரு ஆன்மீக உபநிடதமாக நமக்குள் விரிகிறது.

    **”கலைமகள் கைப்பொருளே
    உன்னை
    கவனிக்க ஆளில்லையோ”**

    இங்கு வீணையைப் பார்த்து கேட்கப்படும் கேள்வி, உண்மையில் மனிதனைப் பார்த்து கேட்கப்படும் கேள்வி.

    ஒவ்வொரு மனிதனும் கலைமகளின் படைப்பே.

    ஒவ்வொரு உயிரும் இறைவனின் அற்புதமான வடிவமைப்பு.

    அளவற்ற திறமைகள், கருணை, அன்பு, அறிவு, ஞானம் ஆகியவற்றை உள்ளடக்கிய பொக்கிஷம்.

    ஆனால் அந்தப் பொக்கிஷத்தை கவனிக்க யார் இருக்கிறார்கள்?

    பெரும்பாலான மனிதர்கள் வெளி உலகத்தை வெல்வதற்காக வாழ்கிறார்கள்.

    ஆனால் தங்களுடைய உள்ளத்தை அறிந்து கொள்ள நேரம் ஒதுக்குவதில்லை.

    வீணை தூசி படிவது போல மனித மனமும் ஆசை, அகந்தை, பொறாமை, பயம், கோபம் ஆகிய தூசிகளால் மூடப்படுகிறது.

    அந்தத் தூசியை துடைக்காமல் இசை வராது.

    மனதைத் தூய்மைப்படுத்தாமல் ஆன்மீகம் மலராது.

    **”விலையில்லா மாளிகையில்
    உன்னை
    மீட்டவும் விரலில்லையோ”**
    இந்த “விலையில்லா மாளிகை” என்பது மனித உடல்.

    உலகிலுள்ள எந்த அரண்மனையையும் விட விலைமதிப்பற்றது.

    ஏனெனில் இதில் உயிர் இருக்கிறது.

    உணர்வு இருக்கிறது.

    சிந்தனை இருக்கிறது.

    ஆன்மா இருக்கிறது.

    இவ்வளவு அற்புதமான உடலுக்குள் இருக்கும் மனம் இசைக்கப்படாமல் கிடக்கிறது.

    வீணை தனியாக இசைக்க முடியாது.

    அதை மீட்டும் விரல்கள் வேண்டும்.
    அதேபோல மனித வாழ்க்கைக்கும் விழிப்புணர்வு வேண்டும்.

    அது தியானமாக இருக்கலாம்.
    ஞானமாக இருக்கலாம்.

    குருவின் உபதேசமாக இருக்கலாம்.

    இறையருளாக இருக்கலாம்.

    **”உன்னிடம் ஆயிரம் ராகங்களே
    என்றும் உனக்குள் ஆயிரம் கீதங்களே”**

    இந்த வரிகளில் கவியரசர் மனிதனின் எல்லையற்ற ஆற்றலைச் சொல்கிறார்.

    ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் எண்ணற்ற திறமைகள் உறங்கிக் கிடக்கின்றன.

    அதேபோல ஆன்மீகப் பயணத்திற்குத் தேவையான எல்லா விதைகளும் அவனுக்குள்ளேயே உள்ளன.

    அன்பு…
    கருணை…
    மன்னிப்பு…
    அமைதி…
    தியாகம்…
    பேரானந்தம்…

    இவை வெளியிலிருந்து வருவதில்லை.

    அவை அனைத்தும் உள்ளேயே இருக்கின்றன.

    ஆனால் அவை விழித்தெழ வேண்டும்.

    ஒரு விதைக்குள் முழு மரம் இருப்பது போல, ஒரு மனிதனுக்குள் முழுமையான ஞானியின் சாத்தியமும் மறைந்தே இருக்கிறது.

    அதனால்தான் கவியரசர் “ஆயிரம் ராகங்கள்” என்று கூறுகிறார்.
    அதாவது எண்ணற்ற பரிமாணங்கள்.

    எண்ணற்ற உயர்வுகள்.

    எண்ணற்ற சாத்தியங்கள்.

    **”இசையறிந்தோர்கள் மீட்டுங்களே
    இல்லை எனக்கேனும் வழி காட்டுங்களே”**

    இது பாடலின் மிக ஆழமான ஆன்மீக வரிகளில் ஒன்று.

    இசையறிந்தோர் என்றால் வீணை வாசிப்பவர்கள் மட்டுமல்ல.

    வாழ்க்கையின் இசையை அறிந்தவர்கள்.

    உள்ளத்தின் மொழியை அறிந்தவர்கள்.

    ஞானிகள்.
    சித்தர்கள்.
    மகான்கள்.
    உண்மையான குருக்கள்.

    நமக்குள் இருக்கும் இறையொளியை அவர்கள் அறிந்திருக்கிறார்கள்.

    அவர்களால் நம்மை விழித்தெழச் செய்ய முடியும்.

    அப்படி யாரும் இல்லையெனில்,
    “எனக்காவது வழி காட்டுங்கள்” என்று பணிவுடன் வேண்டுகிறது இந்த வரி.

    ஆன்மீகத்தின் முதல் படி பணிவே.

    “எனக்கெல்லாம் தெரியும்” என்று நினைப்பவன் கற்றுக்கொள்ள மாட்டான்.

    “எனக்குத் தெரியாது” என்று ஒப்புக்கொள்பவனே ஞானத்தை அடைகிறான்.

    “நான் யார் உன்னை மீட்ட வரும்”
    இது சாதாரண வசனம் அல்ல.

    இது மனிதனின் நித்தியக் கேள்வி.
    “நான் யார்?”

    இந்தக் கேள்வியே அனைத்து ஆன்மீகப் பயணங்களின் தொடக்கம்.

    உடலா நான்?
    மனமா நான்?
    எண்ணமா நான்?
    பெயரா நான்?
    புகழா நான்?
    இல்லை.

    இவை அனைத்தையும் கடந்து நிற்கும் சாட்சியே நான்.

    இந்த உணர்வை நோக்கிச் செல்லும் அழைப்பாகவே இந்த வரி ஒலிக்கிறது.

    **”ஏனோ துடிக்கின்றேன்
    அதன் இனம் தெரியாமல் தவிக்கின்றேன்”**

    மனிதனின் அமைதியின்மைக்கு இதைவிட அழகான விளக்கம் இருக்க முடியுமா?

    ஒவ்வொருவரும் ஏதோ ஒன்றைத் தேடிக்கொண்டே இருக்கிறார்கள்.

    பணம்.
    புகழ்.
    பதவி.
    உறவுகள்.
    வெற்றிகள்.

    இவற்றையெல்லாம் அடைந்த பிறகும் ஏன் ஒரு வெறுமை?

    ஏனெனில் ஆன்மா இறைவனைத் தேடுகிறது.

    ஆனால் மனம் பொருள்களைத் தேடுகிறது.

    இந்த இரண்டிற்கும் இடையிலான போராட்டம்தான் மனிதனின் தவிப்பு.

    அந்தத் தவிப்பின் காரணம்.

    தெரியாததால் அவன் வாழ்க்கை முழுவதும் அலைந்து திரிகிறான்.

    “சொர்க்கமும் நரகமும் நம் வசமே”
    இது ஆன்மீகத்தின் மிகப் பெரிய உண்மை.

    சொர்க்கம் ஒரு இடமல்ல.

    நரகம் ஒரு இடமல்ல.

    அவை மனநிலைகள்.

    அன்பு நிறைந்த மனம் சொர்க்கம்.

    வெறுப்பு நிறைந்த மனம் நரகம்.

    மன்னிக்கும் மனம் சொர்க்கம்.

    பகை கொள்ளும் மனம் நரகம்.

    தியானம் செய்யும் மனம் சொர்க்கம்.

    அமைதியற்ற மனம் நரகம்.

    வெளியில் சொர்க்கத்தைத் தேடுபவன் ஏமாறுகிறான்.

    உள்ளே சொர்க்கத்தை உருவாக்குபவன் ஞானியாகிறான்.

    “நான் சொல்வதை உன் மனம் கேட்கட்டுமே”

    மனம் எப்போதும் வெளியில் ஓடுகிறது.

    ஆனால் ஆன்மாவின் குரல் எப்போதும் உள்ளிருந்து அழைக்கிறது.

    அந்தக் குரலைக் கேட்பதே தியானம்.

    அந்தக் குரலைப் பின்பற்றுவதே ஆன்மீகம்.

    அந்தக் குரலோடு ஒன்றுபடுவதே முக்தி.

    “சத்தியம் தர்மங்கள் நிலைக்கட்டுமே”

    மனித சமுதாயம் சட்டங்களால் நிலைப்பதில்லை.

    சத்தியத்தாலும் தர்மத்தாலுமே நிலைக்கிறது.

    சத்தியம் இல்லாத அறிவு அழிவைத் தரும்.

    தர்மம் இல்லாத அதிகாரம் கொடுமையை உருவாக்கும்.

    ஆகவே மனிதன் முதலில் தன்னுள் சத்தியத்தை நிலைநிறுத்த வேண்டும்.

    பிறகு தர்மத்தை வாழ வேண்டும்.

    அப்போதுதான் உலகமும் அமைதியடையும்.

    “இது தாய்மையின் குரலாய் ஒலிக்கட்டுமே”

    ஆன்மீகத்தில் இறைவன் பல வடிவங்களில் பேசுகிறார்.

    சில நேரங்களில் குருவாக.

    சில நேரங்களில் நண்பனாக.

    சில நேரங்களில் வாழ்க்கை அனுபவமாக.

    ஆனால் மிக உயர்ந்த வடிவம் தாய்மை.

    தாய் கண்டிப்பாள்.

    ஆனால் அன்பால்.
    தாய் திருத்துவாள்.

    ஆனால் கருணையால்.
    அதேபோல் இறையருளும் மனிதனை வழிநடத்துகிறது.

    இந்தப் பாடல் முழுவதும் அந்தத் தாய்மையின் அழைப்பாகவே ஒலிக்கிறது.

    கவியரசர் கண்ணதாசனின் பெருமை என்னவென்றால், அவர் எழுதிய பாடல்களை ஒரு காதல் பாடலாகவும் ரசிக்கலாம்.

    ஒரு வாழ்க்கைத் தத்துவமாகவும் சிந்திக்கலாம்.

    ஒரு ஆன்மீக உபதேசமாகவும் அனுபவிக்கலாம்.

    இந்தப் பாடலில் வரும் வீணை, ஒவ்வொரு மனிதனின் இதயம்.
    அதன் நரம்புகள் நமது எண்ணங்கள்.

    அதன் இசை நமது வாழ்க்கை.
    அதை மீட்டும் விரல்கள் ஞானமும் இறையருளும்.

    அந்த இசை ஒலிக்க வேண்டுமெனில் முதலில் நம்மீது படிந்துள்ள அறியாமை என்னும் தூசியை அகற்ற வேண்டும்.

    அப்போதுதான் நமக்குள்ளே உறங்கிக் கிடக்கும் ஆயிரம் ராகங்கள் விழித்தெழும்.

    ஆயிரம் கீதங்கள் ஒலிக்கும்.

    அப்போது மனித வாழ்க்கை வெறும் வாழ்வாக இருக்காது.

    அது இறைவன் இசைக்கும் ஒரு தெய்வீக வீணையாக மாறிவிடும்.

    “உன்னிடம் ஆயிரம் ராகங்களே; என்றும் உனக்குள் ஆயிரம் கீதங்களே” என்ற கவியரசரின் வரிகள்,

    ஒவ்வொரு மனிதனின் உள்ளேயும் உறங்கிக் கிடக்கும் அளவற்ற ஆன்மீகச் செல்வத்தை நினைவூட்டும் நித்திய மந்திரமாக என்றும் ஒலித்துக்கொண்டே இருக்கும்.

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் – 315 (பகுதி-1)

    இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் – 315 (பகுதி-1)

    அன்பினியோரே!

    அன்பு வணக்கம்.

    நீங்கள் நலமா ?

    நான் நலமேயுள்ளேன்.

    எனது இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் எனும் இந்த தொடரின் இனிவரும் ஐந்து மடல்களும் இன்றைய இங்கிலாந்து அரசியல் நிலைகளை ஐந்து பகுதிகளாக பிரித்து அலசும் மடல்களாக வரும்.

    வாரமொரு பகுதியாக வரைய இருக்கிறேன்.

    அன்பானவர்களே ! நான் கவிஞனுமில்லை, கலைஞனுமில்லை, ரசிகனுமில்லை, பெரிய எழுத்தாளனுமில்லை.

    இங்கிலாந்தில் கடந்த 51 ஆண்டுகளாக வசிக்கும் ஒரு 69 வயதான சாதாரண புலம்பெயர் தமிழன் என்பதே எனது தகுதி.

    ஈழம் எனது அடையாளம், தமிழ் எனது முகவரி.

    இன்றைய. அவசர உலகிலே அரசியல் மாற்றங்கள் இமைக்கும் பொழுதினில் நடந்தேறுகின்றன.

    நான் இப்பகுதிகளை எழுதிக்கொண்டிருக்கும் போதே அதை மறுதலிக்கும் நிகழ்வுகள்.

    அப்படி நான் பதிவிடுவதற்கு மாக எதுவும் நடப்பின் அதற்கு நான் பொறுப்பல்ல .

    அதற்காக முன் மன்னிப்பை வேண்டிக்கொள்கிறேன்

    மாற்றத்தின் வாசலில் நிற்கும் பிரிட்டன்

    51 ஆண்டுகளாக இங்கிலாந்தில் வாழும் ஒரு புலம்பெயர் தமிழனின் அரசியல் சாட்சியம்

    பகுதி – 1

    ஐம்பத்தொரு ஆண்டுகள் என்பது ஒரு மனிதனின் வாழ்க்கையில் வெறும் கால அளவல்ல.

    அது ஒரு நாட்டின் அரசியல் பரிணாமத்தை கண்முன்னே பார்த்து பதிவு செய்யும் நீண்ட பயணம்.

    நான் இங்கிலாந்தில் காலடி எடுத்து வைத்த காலத்தில், இந்நாடு இன்னும் தனது பேரரசின் நினைவுகளோடு வாழ்ந்து கொண்டிருந்தது.

    தொழிற்சாலைகளின் புகை வானத்தை மூடியிருந்தது.

    தொழிலாளர் சங்கங்கள் அரசியலில் வலுவான தாக்கம் செலுத்தின. குடியேற்றம் குறித்து கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், இன்று காணும் அளவுக்கு சமூக ஊடகங்கள் அரசியலை வடிவமைக்கவில்லை.

    இந்த ஐம்பத்தொரு ஆண்டுகளில் நான் பல பிரதமர்களைக் கண்டிருக்கிறேன்.

    பல தேர்தல்களை நேரில் அனுபவித்திருக்கிறேன்.

    மக்களின் மனநிலைகள் எவ்வாறு மாறுகின்றன என்பதையும் கவனித்திருக்கிறேன்.

    அரசியல் என்பது வெறும் கட்சிகள் மோதும் களம் அல்ல.

    அது மக்களின் நம்பிக்கைகளும், ஏமாற்றங்களும், எதிர்பார்ப்புகளும் சந்திக்கும் இடம் என்பதை இந்த நாடு எனக்குக் கற்றுக் கொடுத்தது.

    ஒரு ஜனநாயகத்தின் வலிமை அதன் அரசாங்கத்தில் மட்டும் இல்லை.

    ஆட்சியை மாற்றும் உரிமையை மக்கள் அமைதியாகப் பயன்படுத்தும் பண்பாட்டில்தான் இருக்கிறது.

    அந்த வகையில் உலகிற்கு முன்னுதாரணமாக விளங்கும் நாடுகளில் இங்கிலாந்தும் ஒன்று.

    கடந்த பத்து ஆண்டுகளை எடுத்துப் பார்த்தாலே பிரிட்டிஷ் அரசியலில் நிகழ்ந்த மாற்றங்கள் மிகவும் ஆழமானவை.

    ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறிய பிரெக்சிட், அதன் பொருளாதார விளைவுகள், வாழ்க்கைச் செலவின் உயர்வு, தேசிய சுகாதார சேவையின் சவால்கள், குடியேற்றக் கொள்கைகள், உலக அரசியல் மாற்றங்கள் இவை அனைத்தும் மக்களின் அரசியல் சிந்தனையையே மாற்றியுள்ளன.

    ஒரு காலத்தில் இரண்டு பெரிய கட்சிகளான லேபரும் கன்சர்வேடிவும் மாறி மாறி ஆட்சி செய்த அரசியல் அமைப்பு, இன்று பல திசைகளில் இழுக்கப்படுகிறது.

    வலதுசாரி தேசிய உணர்வை முன்வைக்கும் சக்திகள் வலுவடைகின்றன.

    மைய அரசியலை வலியுறுத்துபவர்கள் புதிய கூட்டணிகளைத் தேடுகின்றனர்.

    இளைஞர்களின் வாக்கு முறையும், வயதான வாக்காளர்களின் முன்னுரிமைகளும் மாறுபடுகின்றன.

    இந்த மாற்றங்களின் மையத்தில் இன்று ஒரு புதிய அரசியல் சமநிலை உருவாகிக் கொண்டிருக்கிறது.

    இன்றைய பிரதமராக உள்ள ஆண்டி பர்ன்ஹாம், தொழிலாளர் இயக்கத்தின் மரபை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதி.

    அவருடைய தலைமையால் லேபர் கட்சி புதிய கட்டத்தை எட்டியுள்ளது.

    அதே நேரத்தில், நைஜல் ஃபராஜ் தலைமையிலான ரீபோர்ம் கட்சி, பாரம்பரிய வலதுசாரி அரசியலை முற்றிலும் மாற்றும் சக்தியாக உருவெடுத்துள்ளது.

    இதனால் கன்சர்வேடிவ் கட்சி தனது அரசியல் அடையாளத்தை மறுபரிசீலனை செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

    லிபரல் டெமகிரட்ஸ் கட்சி இன்னும் மத்திய அரசியலின் குரலாக இருக்க முயற்சித்தாலும், இரு துருவங்களுக்கிடையில் தனது இடத்தை உறுதிப்படுத்த போராடுகிறது.

    இவை வெறும் கட்சிகளின் கதைகள் அல்ல.

    இவை பிரிட்டிஷ் சமூகத்தின் உள்ளார்ந்த மாற்றங்களின் பிரதிபலிப்புகள்.

    நான் இந்த நாட்டிற்கு வந்தபோது, தேர்தல் பிரச்சாரங்கள் தெரு மேடைகளிலும், செய்தித்தாள்களிலும் நடந்தன.

    இன்று அவை கைப்பேசியின் திரையில் நடக்கின்றன.

    ஒருகாலத்தில் குடும்ப மரபே வாக்கை நிர்ணயித்தது.

    இன்று ஒரு வைரல் காணொளி கூட வாக்காளரின் மனதை மாற்றுகிறது.

    இந்த மாற்றத்தை நேரில் பார்த்தவன் என்ற முறையில், அரசியல் என்பது நிலையாக இருக்கும் கட்டிடம் அல்ல காலத்தோடு வடிவம் மாறும் உயிருள்ள அமைப்பு என்பதையே நான் உணர்ந்திருக்கிறேன்.

    இந்தக் கட்டுரையில் நான் எந்தக் கட்சியையும் புகழவோ, குறைக்கவோ முயலவில்லை.

    ஒரு பாமர மனிதனின்அரசியல் ஆய்வாகவும், ஐம்பத்தொரு ஆண்டுகளாக இந்த நாட்டின் வளர்ச்சியையும் வீழ்ச்சியையும், வெற்றியையும் சவால்களையும் பார்த்து வாழ்ந்த புலம்பெயர் தமிழனாகவும், நான் கண்ட உண்மைகளை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

    ஒரு நாட்டின் அரசியல் அதன் நாடாளுமன்றத்தில் மட்டும் எழுதப்படுவதில்லை.

    அது பேருந்து நிறுத்தங்களில் பேசப்படுகிறது.

    தொழிற்சாலைகளில் விவாதிக்கப்படுகிறது.

    பல்கலைக்கழகங்களில் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது.

    குடியேற்றக் குடும்பங்களின் உணவுமேசைகளில் அனுபவமாகப் பகிரப்படுகிறது.

    அந்த உயிருள்ள அரசியலின் சாட்சியாக இந்த ஆய்வை நான் பதிவு செய்கிறேன்.

    அன்பன்
    சக்தி சக்திதாசன்
    லண்டன்
    03.08.2026

    அடுத்த வாரம் ………

    (தொடரும் – பகுதி 2: “ஆண்டி பர்ன்ஹாம் – நாடாளுமன்ற உறுப்பினரிலிருந்து பிரதமர் வரை: அரசியலமைப்பும் அரசியல் பயணமும்”)

    Share
  • சக்தியும் சிவனும் நித்தியம் ஆவார்!

    சக்தியும் சிவனும் நித்தியம் ஆவார்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    ஆர நவமணி மாலைகள் ஆட
    அம்மை யோடப்பன் ஆடினார் நடனம்
    ஆடும் அரவம் அசையா நின்றது
    அமரர் அனைவரும் அரகரா என்றனர்

    நாரதர் தம்புரா நயமாய் மீட்டினார்
    நந்தியின் மத்தளம் சேர்ந்துமே ஒலித்தது
    வாணியின் வீணை வழங்கிய நாதம்
    மாதொரு பாகனின் ஆட்டத்தில் கலந்தது

    மண்ணும் மகிழ்ந்தது விண்ணும் மகிழ்ந்தது
    மாதொரு பாகனின் அடியார் மகிழ்ந்தார்
    திருமுறைச் செல்வர்கள் திருவடி தொழுதனர்
    ஆனந்தக் கடலில் அனைவரும் மூழ்கினர்

    வேதம் அனைத்தும் கையைக் குவித்தது
    தத்துவம் எல்லாம் தம்மை மறந்தது
    தீமைகள் அனைத்தும் தெறித்து ஓடின
    நன்மைகள் மலர்ந்து நறுமணம் எழுந்தது

    மாதொரு பாகன் ஆடா நின்றால்
    பூமியில் எதுவும் அசையா நின்றிடும்
    இறைவனின் நடனமே இயக்கும் சக்தி
    சக்தியும் சிவனும் நித்தியம் ஆவார்!

    Share
  • அகந்தை விட்டோடினால் தெரிந்திடுவான் சிவனாய்!

    அகந்தை விட்டோடினால் தெரிந்திடுவான் சிவனாய்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 
    மேனாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநர் 
    மெல்பேண், ஆஸ்திரேலியா 

    காலனைக் காலால் உதைத்ததும் சிவமே
    கண்ணப்பன் கண்ணை ஏற்றதும் சிவமே
    ஆலமாம் விஷத்தை உண்டதும் சிவமே
    அனைத்துமாய் எங்கும் இருப்பதும் சிவமே

    பிட்டுக்காய் மண்சுமந்து நின்றதும் சிவமே
    பிரம்படி ஏற்றிட வந்ததும் சிவமே
    கெட்டவர் ஆயினும் கேட்டிடும் வரத்தைக்
    கொட்டியே கொடுப்பதும் சிவமே ஆகும்

    விண்ணும் சிவமே மண்ணும் சிவமே
    உண்ணும் உணவெலாம் கொடுப்பதும் சிவமே
    எண்ணம் சிவமே எழுத்தும் சிவமே
    இயக்கம் சிவமே இயக்குநர் சிவமே

    ஆதியும் அந்தமும் இல்லா சிவமே
    அனைத்துக்கும் ஆதியாய் அமைந்தது வியப்பே
    சோதியின் தொடக்கம் யாருக்குந் தெரியா
    சோதியாய் ஆனதும் யாரெனத் தெரியோம்

    விடை தெரியாத வினாக்கள் பற்பல
    விடை தெரியாது தவிக்கிறோம் யாவரும்
    மாலும் தேடினார் அயனும் தேடினார்
    விளங்கா நிலையில் சிவத்தை நாடினார்

    உப்புக் கடலருகே உவப்பான நீருக்கு
    உயர்வான மலைகளிலே உன்னத மருந்திருக்கு
    சிப்பிக்குள் முத்திருக்கும் சிலந்திக்குள் திறனிருக்கு
    எப்படித்தான் வந்ததுவோ எவருக்கும் தெரியாது

    இருப்பார்க்கு இருப்பான் இல்லார்க்கு இல்லான்
    இல்லானே என்பார் இயற்கையே என்பார்
    ஏகனும் அவனே அநேகனும் அவனே
    இயற்கையும் அவனே இயக்கமும் அவனே

    அவனின்றி ஓர் அணுவும் அசையாது
    அணுவாயும் இருப்பான் அதைத்தாண்டி இருப்பான்
    ஆணவத் தோடவனைத் தேடினால் தெரியான்
    அகந்தை விட்டோடினால் தெரிந்திடுவான் சிவனாய் !

    Share
  • புரிதல் (சிறுகதை)

    முனைவர் த. ஆதித்தன்
    இணைப் பேராசிரியர்
    அரிய கையெழுத்துச் சுவடித்துறை
    தமிழ்ப் பல்கலைக்கழகம்
    தஞ்சாவூர்-613 010.

    சந்திரன் தனது ஆசிரியரின் வீட்டின்முன் சாலையோரத்தில் தனது மிதிவண்டியை நிறுத்தினான்.  நுழைவாயில் கதவின் வழியே எட்டிப்பார்த்தான்.  வீட்டுத் திண்ணையில் முன் அறையைப் பார்த்தபடி தமது வகுப்பு மாணவர்கள் முருகனும், இராமனும் நின்றிருந்தனர்.  சந்திரன் சுற்றுச்சுவர் வாயிலைத் தாண்டி உள்ளே நுழைந்தான்.

    “டேய் முருகா, இராமா ரெண்டுபேரும் ஏன் வெளியயே நிக்கிறீங்க…….. உள்ளே போவோம்”? என்றபடி வீட்டினுள் சந்திரன் நுழைந்தான்.  முன் அறையில் இருந்த மேஜையில் பரிசுப் பொருள்களும், சால்வைகளும் நிறைந்திருந்தன.  ஆசிரியர் பணியாற்றிய பள்ளியின் ஆறாம்வகுப்பு மாணவர்கள் அறையில் நிறைந்திருந்தனர்.  அன்று பணி ஓய்வு பெற்றிருந்த அவர்களின் வகுப்பாசிரியர் புண்ணியகோடி நாற்காலியில் அமர்ந்தபடி மாணவர்களிடம் பேசிக்கொண்டிருந்தார்.  அப்பொழுது உள்ளே நுழைந்த சந்திரன் சுவரில் ஒரு கையை வைத்தபடி நின்றான்.  ஆசிரியர், “சந்திரா விலகி அந்தபக்கமா நில்லுடா     கையைக் கொண்டுபோய் சுவிட்ச் போர்டு மேல வச்சிருக்க…. கரண்ட் புடிச்சுக்கப் போகுது….” என்று அதட்டினார்.  வேகமாகக் கையை எடுத்தபடி சற்று தள்ளி நின்றான்.  ஆசிரியர் சுற்றிலும் பார்த்துவிட்டு, உன் கூட்டாளிங்க எங்க என்றார்.

    சந்திரன் மெதுவாக வாசலைப் பார்த்து,  “உள்ள வரலியா? எல்லோரும் இங்கதான் இருக்கிறோம்” என்றான்.  இராமன் உள்ளே வந்தான்.  அனைவருக்கும் தேநீர் வழங்க தொடங்கினார்  ஆசிரியரின் மனைவி.  அனைவரும் தேநீர் அருந்தி கொண்டிருக்கும்போது சுவர்க்கடிகாரம் ஐந்துமுறை அடித்து ஓய்ந்தது.

    “சார்  மணி ஐந்து ஆகிடிச்சு.. நாங்க கிளம்புறோம்.  உங்க ஓய்வுக்காலம் நல்லா இருக்கனும் சார்..”  என்று சந்திரன் சொன்னதை அனைத்து மாணவர்களும் ஆமோதித்ததோடு, அன்று ஓய்வு பெற்றிருந்த ஆசிரியரோடு பள்ளியில் இருந்து வீடுவரை வந்த மாணவர்கள் வீடுதிரும்பத்தொடங்கினார்கள்.  ஒருமாணவன் மனதுக்குள் இருந்து வந்த பிரிவுத்துன்பத்தில் கண்கலங்கி விம்மத் தொடங்கினான்.  பிற மாணவர்கள் கண்களும் கலங்கின.

    “ஸ்கூலுக்கு எதுத்தாப்புல தான வீடு இருக்கு.  நினைக்கிற போது நீங்க வந்திடலாமே.  நானும் வருவேன், எல்லோரும் நல்லா படிக்கணும்.   நல்லா வரணும்”    என்றார் ஆசிரியர்.  தொடர்ந்து பேசினால் குரல் உடைந்து நா தழுதழுக்கும் போலிருந்தது.  அடக்கியபடி புன்னகையுடன் நின்றார்.

    “வாரோம் சார்” என்றபடி செல்லத்தொடங்கிய மாணவர்களை நோக்கி கைகளை அசைத்து விடைகொடுத்துக் கொண்டிருந்தார் ஆசிரியர்.   மாணவர்கள் அனைவரும் சென்றிவிட்டநிலையில் திண்ணையில் தூணில் சாய்ந்து ஒதுங்கி நின்றுகொண்டிருந்த இராமன் கண்ணில் பட்டான்.

    “இராமா என்னடா இங்க நிக்குற….” என்றார் புண்ணியகோடி.

    “இல்ல சார் முருகனும் இங்கதான் நின்னுகிட்டு இருந்தான்.  இப்பதான் போனான்”.

    “அவன் உள்ள வந்தானா …. கண்ணுல படலயே….”

    “இண்ணைக்குக் காலையில முருகன் பாக்கெட்ல இருந்து பான்மசாலா பாக்கெட் விழுந்தத பார்த்திட்டு நீங்க திட்டி தீர்த்ததோட அடிச்சிங்கல சார் … அதுதான் தயங்கி நின்னுட்டான். நீங்க அடிச்சது அவன்மேல உள்ள அக்கறையிலதான்கிறத சொல்லி  அவனைத் தேத்திக்கிட்டு இருந்தேன்.  நீங்க வெளியே வர்த பார்த்ததும் உங்ககிட்ட முகத்தக்காட்டக்கூட தயங்கி ஓடிப்போயிட்டாள்…. இத தெரியப்படுத்ததான் நிக்கிறேன் சார்…” என்றான் இராமன்.

    இதனைக் கேட்டதும் ஆசிரியரின் மனம் வலித்தது.  “எனக்குத் தெரியாதா என்ன…. முருகனுக்கு அந்தப் பழக்கம் கிடையாதுன்னு     ஆனா  அந்த பாக்கெட்ட வெளியில தூய்மைப் பணியாளர்கள் குப்பைப்கு வைத்திருந்த நெருப்புல போட சொல்லியும் போடாம நின்னுகிட்டிருந்தானே  அதாண்டா கோபம்”  என்றார் குற்ற உணர்வோடு.

    “அந்த பாக்கெட்ட அவன் நிக்கர்பாக்கெட்ல பின்பண்ணி விட்டதோட இன்றைக்கு முழுவதும் அப்படியே இருக்கணும்னு சொன்னதுல ரொம்பவே நொந்துட்டான் சார்….”

    “அப்படியே தான் வைத்திருந்தானா”?

    “ஆமா சார்.  இப்பதான் ஓடிப்போகும்போது பின்ன கழட்டிட்டு பாக்கெட்டுக்குள்ள வைத்தான்”.

    “என்னடா சொல்ற….. ”

    “முருகன் ரெம்ப நல்லபையன் சார்.  பத்தாம் வகுப்பு படிக்கிற கோகுல்தான் காலையில் பிரேயர் முடிஞ்சு வரும்போது அவன்கிட்ட இருந்தா மாட்டிகிடுவோம்னு இவன் பாக்கெட்ல போட்டுட்டான்.  பத்தாம் கிளாஸ் டீச்சர் அவங்க பசங்கள செக் பண்றதா சொல்லியிருந்தாகளாம் சார்…. அதனாலதான்…..”

    “இந்த பையன் உண்மைய சொல்லியருக்கலாம்ல…”

    “பயம் சார். கோகுல் அண்ணா சாயங்காலம் கேட்கும் போது கொடுக்கணும்னு மிரட்டிட்டுவேற போனான் சார்….”

    “அட பாவமே….. நாளைக்குக் காலையிலயே முருகன அவன் வீட்ல போயி பார்க்கிறேன்.  அப்பதான் என் மனது ஆறும்.  நீ பத்திரமா போயிட்டு வாடா….” என்று சிரித்தபடி வழியனுப்பினார்.  ஆனால் அவர் மனம் கனத்திருந்தது.  தனது மொத்த பணிக்காலத்தில் எந்த ஒரு மாணவனையும் இப்படி தண்டிக்காதவர், தமது கடைசி பணிநாளில் தவறிழைத்துவிட்டோமே என கண் கலங்கினார்.

    ••••

    மறுநாள் கலையில் மழைபெய்து கொண்டிருந்தது.  மழை நிற்பது போல் தெரியவில்லை. வீட்டுத்திண்ணையில் நின்றபடி எப்பொழுது மாணவன் முருகனைப் பார்க்கலாம் என துடித்துக் கொண்டிருந்த புண்ணியகோடி மனைவியிடம்   “ரெயின் கோட்ட எடுத்திட்டு வா…  பக்கத்து ஊருவர போயிட்டு வந்திடுறேன்”, என்றார்.

    வீட்டினுள் இருந்து வெளியே வந்த அவர்  மனைவி,   “இன்னயில இருந்து ஓய்வா இருப்பீங்கணு பார்த்தா….. மழையில எங்கபோறீங்க….  உங்க மழைக்கால பொக்கிசம் ரெயின் கோட்ட பிடிங்க…” என்றபடி கொடுத்தார்.

    அதனை மாட்டிக்கொண்டு,  “வந்து விசயத்தைச் சொல்கிறேன்…” என்றபடி இருசக்கர வாகனத்தில் வீட்டிலிருந்து புறப்பட்டார்.

    ••••

    வீட்டு மாடியில் இருந்து கொட்டிய மழை நீருக்கு அடியில் முருகன் மகிழ்ச்சியாகக் குளித்துக்கொண்டு இருந்தான்.  வாசலில் நின்று மகனைப் பார்த்துக் கொண்டிருந்த அவனது தந்தை கதிர்,  “இயற்கை கொடுத்த  ஃபீரீ ஷவர்ல  ஃபிரீயா குளியல்….. செருப்பு இல்ல, துணி இல்ல இயற்கையோட இயற்கையா நீ  ஃபிரீயா ஆட்டம் போடுறத பார்க்கும்போதுதான்  தெரியுது சந்தோசத்திற்கு எதுவுமே தேவையில்லைன்னு…”     என்றார்.

    எந்த கவலையுமின்றி ஆட்டம் போட்டவனுக்குத் தந்தையின் கிண்டல் பேச்சைக் கேட்டதும் வெட்கம் மேலிட்டது.  உதடுகளின் ஓரத்தில்  அரும்பிய சிரிப்பை அடக்க முடியன்றான்.  கன்னத்தில் விழுந்த சிறுகுழி அவனின் வெட்கத்தை வெளிப்படுத்தியது.  உடம்பைக் கூச்சத்தால் குலுக்கிக் கொண்டு   “அப்பா ஒரு ஐஞ்சு நிமிசம்பா”  என்றான்.

    கதிர் மகனின் மகிழிச்சியான முகத்தைப் பார்த்தார். அதை கெடுக்க மனமில்லாமல்  “சரி சரி சீக்கிரமா”? என்றபடி நிமிர்ந்தார்.  வெளியே தெருமுனையில் முருகனின் ஆசிரியர் வண்டியில் வருவதைக் கண்டதும், வாசலில் உட்புறமாக இருந்த குடையினை எடுத்துக் கொண்டு கீழே இறங்கினார்.  மதில்சுவர் தாண்டி தெருவிற்கு வந்தார்.  ஆசிரியரை நோக்கி நடக்கத் தொடங்கினார்.

    ஆசிரியர்  புண்ணியகோடி முருகனின் வீட்டருகில் வந்துவிட்டார்.  கதிரைக் கண்டதும் தெருவோரத்தில் வண்டியை வைத்துவிட்டு,   “வணக்கம் சார்”   என்றார்.

    “வணக்கம் சார்    நேற்று பணி ஓய்வு பெற்றுவிட்டதா கேள்விப்பட்டேன்.  ஓய்வுக்காலம் சந்தோசமா அமையட்டும் சார் .  கொட்டுற மழையில இந்த பக்கமா….. ஏதாவது விசயமா சார்”?

    “இல்ல முருகன பார்க்கணும்னுதான் வந்திட்டு இருந்தேன்.   நேற்று என்னோட கடைசி வேலைநாள்ல பார்த்து….. செய்யாத தப்புக்கு முருகனை தண்டிச்சிட்டேன்.  அதான்…”

    வெளியே அப்பா யாருடனோ பேசுவதைக் கேட்டான் முருகன்.  அது புண்ணியகோடி சாருடைய குரல்.  வேகமாக நகர்ந்து சுவர் அருகே வந்தான்.  அப்பாவிடம் ஆசிரியர் பான்மசாலா கதையை விளக்கும் சம்பவம் தொடர்ந்தது.

    “என்னாச்சு சார்… பெரிய அசம்பாவிதம் நடந்தமாதிரி முகத்த வச்சிருக்கீங்க…”

    “நம்ம ஸ்கூல்ல பத்தாம் வகுப்பு படிக்குற ஒருத்தனுக்கு பான்மசாலா பயன்படுத்துற கெட்ட பழக்கம் இருக்கு சார்.  நேற்று கிளாஸ்ல திடீர் செக்கிங் நடக்கபோகுதுனு தெரிந்சதும, தான் மாட்டிக்கிடக்கூடாதுன்னு அவங்கிட்ட இருந்த பான்மசாலா பாக்கெட்ட முருகனோட நிக்கர் பாக்கெட்டுக்குள்ள நைசா சொருகிவெச்சிருக்கான்.  அது தெரியாம முருகன நாலு சாத்து சாத்திட்டேன்…” என்றார் ஆசிரியர் கவலையுடன்.

    கதிர் உண்மையான ஆனந்தத்தோடு, “நிஜமாவா சார். எனக்கு நின்றுபோன இதயத்துடிப்பே வந்தது போலிருக்கு”.

    “என்ன சொல்றீங்க…”

    “நேற்று ஆபீஸ்ல இருந்து லேட்டத்தான் வந்தேன்.  வந்ததும் முருகன பார்க்கலாம்னு போனேன்.  அவன் கும்பகர்ணன் மாதிரி தூங்கிட்டு இருந்தான்.  யூனிஃபாம்  சட்டய கூட கழட்டல.  ஆனா நிக்கர கழற்றி கையில் பிடித்தபடி தூங்கினான்.  ஒழுங்கா படுக்க வைக்கறதுக்காக நிக்கர பிடித்து இழுத்தேன்.  டொப்னு உள்ள இருந்து பான்மசாலா பாக்கெட் விழுந்தது.  எனக்கு என்னென்னமோ தோணுச்சி.  இந்தப்பழக்கம் எப்படி வந்திருக்கும்.  எப்படி திருத்தப்போறோம்னு யோசிச்சி யோசிச்சி இரத்த அழுத்தமே  ஏறிடுச்சி சார்.  அன்பாலதான் திருத்தணும்.  இத பெரிசாக்கிடக்கூடாதுங்குற பயத்துல அவங்க அம்மாகிட்டகூட சொல்லல சார்…. முருகனுக்கும் தெரியாது, இப்பதான் நிம்மதியா இருக்கு சார்.  ரொம்ப நன்றிங்க சார்…”

    மழையின் வேகம் அதிகரித்தது.  முருகனின் அப்பா முகமெல்லாம் புன்னகையோடு ஆசிரியரை உள்ளே அழைத்தார்.

    “வாங்க சார்… வீட்டுக்குள்ள வாங்க … சூடா ஒரு காஃபி சாப்பிடலாம்.  மழை நின்னுதுக்கப்புறம் போய்க்கலாம்”.

    “பரவாயில்ல சார்.  நான் வந்த வேலையைச் சரியா முடிச்சிட்டு கிளம்புறேன்.  முதல்ல உங்க பையன் முருகன பார்க்கணும்”.

    “வாங்க சார்…. கொட்டுற மழையில முருகன் குளிச்சிட்டு இருக்கான்…” இதனைக் கேட்டதும் மீண்டும் முருகன் மாடியில் இருந்து விழும் மழைநீரில் பெரும்வெட்கத்தோடு குளியலைத் தொடர்ந்தான்.

    கதிரும், ஆசிரியரும் பேசிக்கொண்டே வீட்டின் முற்றத்திற்கு வந்தனர்.  முருகன் ஆசிரியரைப் பார்த்ததும் நாணினான்.  அவரிடம்,

    “நீங்க அப்பாகிட்ட பேசுனதைக் கேட்டுக்கிட்டுத்தான் இருந்தேன் சார்…. என்னய புரிஞ்சுகிட்டதே போதும்சார்…” என்றபோது ஆசிரியர் புரிந்து கொண்டாரே என்ற நிம்மதியும், நன்றியும், சிறுவனுக்கே உரிய வெட்கமும் ததும்பி வழிந்தன.

    கதிர் முருகனிடம், “இப்பதான் முழுமையா தெரிஞ்சுகிட்டார் சார்…” என்றபடி சிரித்தார்.

    “உங்க அப்பா சொன்னது உன் நல்ல மனச மட்டும் இல்ல…. இந்த மழை குளியல்ல உன்னோட மொத்த லட்சணத்தையும் பார்த்ததுதான்”, என்ற ஆசிரியரின் கேலிப் பேச்சைக் கேட்டதும் அவன் இதழ்களில் அரும்பிய சிறுபிள்ளைத்தமான புன்னகை, சூழலை அழகாக மாற்றியது.

    மேலிருந்து கொட்டும் மழைநீரின் குளிரும், ஆசிரியரின் கேலிப்பேச்சும் சேர்ந்து முருகனுக்கு உடலெங்கும் ஒரு சிலிர்ப்பு பரவியது. அவனது சிலிர்ப்பு குளிரால் வந்ததா, தம்மை முழுமையாகத் தெரிந்துகொண்டார்கள் என்ற மகிழ்வால் வந்ததா, அல்லது சட்டென ஏற்பட்ட வெட்கத்தால் வந்ததா என சொல்லமுடியாதபடி குறுநகையோடு நின்றான் முருகன்.

    Share
  • எங்கும் இருப்பான் முருகனே!

    எங்கும் இருப்பான் முருகனே!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    கால் வண்ணம் கண்டேன்
    கழல் தொழுது நின்றேன்
    வேல் வண்ணம் கண்டேன்
    விழுந்து நான் விட்டேன்

    மால் மருகன் முருகன்
    மா அடியைப் பற்றினேன்
    பால் வண்ணங் கண்டேன்
    பரவசத்தில் மூழ்கி விட்டேன் !

    சேல் கொண்ட கண்ணழகி
    தேவ யானை கண்டேன்
    மனத்தால் அரு கணைந்த
    வனக்குறவர் மகள் கண்டேன்

    ஒளவை பால் அன்பால்
    அமுதத் தமிழ் கொட்டியது
    அருணகிரி மேல் அன்பால்
    அருந்து கிறோம் தத்துவப்பால்

    திருமுகன் வைத்த அன்பால்
    குமரகுரு தமிழ்ப் பாலை
    பக்தி மயம் ஆக்கியே
    பருகிடவே வைத்து விட்டார்

    வஞ்சத்தால் மனம் மாறா
    வஞ்சகராம் சூரர் தமை
    வெஞ்சினத்தால் வேர் அறுத்த
    வேல்முருகன் கால் பணிந்தேன்

    பால் எல்லாம் முருகனே
    பல் சுவையும் முருகனே
    வேல் என்றால் முருகனே
    நால் வேதம் முருகனே

    எல்லாப் பாலிலும் முருகனே
    எல்லாச் சுவையிலும் முருகனே
    இல்லா இடமே இல்லையே
    எங்கும் இருப்பான் முருகனே!

    Share
  • பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி – 41

     

    63 நாயன்மார்கள் வரலாறு – 34 சிறுத்தொண்ட நாயனார் (பகுதி – 2)

    ஒரு குடும்பத்திற்கு ஒரே புதல்வனாக இருக்க வேண்டும். அந்த மைந்தனைத் தாய் பிடிக்க, தந்தை அரிய வேண்டும். தாயும் தந்தையும் தம்முள் மனம் உவந்த துன்பமின்றி அமைந்த கறியைத்தான் தாம் உண்பது என்கிறார் பைரவ அடியார்.

    பள்ளிக்குச் சென்ற சீராளத் தேவரை அழைத்து வந்து நீராட்டி, அணிகலன்களைப் பூட்டி அழகு செய்து, வழமைபோல் அள்ளியணைத்து முத்தமிட நினைத்த திருவெண்காட்டு நங்கையார் வெருவுற்று நீங்கினார். அடியவருக்கு அமுதாகப் போகின்ற சீராளத் தேவரை முத்தமிட்டு எச்சில் செய்வதா என்று அந்த எண்ணத்தை மாற்றிக்கொண்டார்.

    தாங்கள் பெற்றெடுத்த தெய்வச் செல்வனை, மழலை மாறா இனிய புதல்வனைச் சலங்கை கொஞ்சும் அழகிய கால்கள் இரண்டையும் மடியில் வைத்துப் புடை இடுக்கி மகனுடைய இரண்டு கைகளையும் தாய் பிடிக்கத் தந்தையார் கருவி கொண்டு தலையரிவார். பைரவர் தாயும் தந்தையும் தம்முள் மகிழ்ந்து துன்பமின்றி அரிந்து கறிசமைக்க வேண்டும் என்றதனால், தாயும் தந்தையும், சீராளத் தேவர் என்னும் மகன் இருந்ததால் தங்கள் திருத்தொண்டு முற்றுப் பெறாமல் தொடர்ந்து நிகழ வாய்ப்பளித்தான் என்று மகிழ்ந்திருந்தார் சிறுத்தொண்டர். திருவெண்காட்டு நங்கையோ இன்று அடியவர் அமுது செய்யவில்லையானால் தன் கணவர் உயிர் வாழார், சீராளத் தேவர் அடியவருக்கு அமுதாக இருந்து தன் கணவர் உயிரைக் காத்து தன் தாலியை தமக்களித்தான் என்று இருவர் மனமும் மகிழ உணவு சமைத்தார்.

    சந்தனத்தாதியார் கறியைப் பல்வேறு வகையாக, விரைந்து சமைத்து சிறுத்தொண்டருக்கு விவரம் அளித்தவுடன், அவரும் பைரவ அடியாரைச் சென்று அழைத்து வந்து, அவரின் பாதங்களைத் தூய்மை செய்து, ஆசனத்தில் அமரச் செய்து மாலைகள் சூட்டிப் புனித நீரால் பாதங்களைக் கழுவினார். அப்புனித நீரை வீடு முழுக்கத் தெளித்துத் தூப தீபம் காட்டிப் பூசனை செய்து வேண்டினார். மனைவியுடன் வணங்கி திருவமுது செய்ய வேண்டும் என்று பணிந்து வேண்டி நின்றார். பைரவ அடியாரும், சிறுத்தொண்டரைப் பார்த்து, தாம் சொன்ன முறையால் உறுப்பெல்லாம் கொண்டு சுவையாக கறியமைத்தீரா என்று கேட்டார். அதற்குப் பதிலளித்த திருவெண்காட்டு நங்கை தலைக்கறி அமுதுக்காகாது என்று கழித்துவிட்டதாகக் கூறியபோது, அதுவும்கூட தாம் உண்போம் என்றார். இணையர் இருவரும் சிந்தை கலங்கித் திகைத்து நின்றனர். உடனே சந்தனத்தாதியார் அதையும் சமைத்து வைத்திருப்பதாகக் கூறி எடுத்துக் கொடுத்தார்.

    பைரவ அடியாருக்கு எவ்விதக் குறையுமின்றி அமுது படைப்பதில் மகிழ்ந்த திருவெண்காட்டு நங்கையார் தலைக்கறியைப் பரிமாறினார். ஆனால் அதன் பின்னும் பைரவ அடியார், தாம் தனித்து உண்ண மாட்டோம் என்றும் சிவனடியார் யாராவது இருந்தால் அழைத்து வரவேண்டும் என்றும் கூறினார். வெளியில் தேடிய சிறுத்தொண்ட நாயனார், எவரையும் காணவில்லை என்று கூறுகிறார். பைரவ அடியாரும், திருவெண்ணீறு அணிந்திருக்கும் அவரும் அடியார்தான் என்பதால் சிறுத்தொண்டரும் தன்னுடன் அமுது உட்கொள்ள வேண்டும் என்றார். அடியார் திருவமுது செய்யும் பொருட்டு தாமும் உடனமர்ந்து உணவருந்துவதாகக் கூறி உண்ண ஆரம்பித்தார். அது கண்ட பைரவ அடியார். “உமக்கு ஓர் பிள்ளை இருக்கிறான் அல்லவா? அவனையும் அழைத்து வா. அவனும் நம்முடன் திருவமுது செய்யட்டும்” என்றார். அது கேட்டு சிறுத்தொண்ட நாயனார் கண் கலங்கி தங்கள் மைந்தன் அதற்கு உதவான் என்றார். ஆனால் பைரவ அடியார் அவர்களது மைந்தனும் வந்தால் தான் தாம் அமுது உண்பேன் என்று உறுதியாகக் கூறிவிட்டார். சிறுத்தொண்ட நாயனார் செய்வதறியாது திகைத்து நின்றவர், செய்வதறியாது கணவன், மனைவி இருவரும் வாயிற்புறத்தில் நின்று மகனே வருவாய் என்று அழைக்க ஆரம்பித்தபோதும் மகன் வரவில்லை.

    சிறுத்தொண்டர் மீண்டும் இப்போது அடியார் அமுதுண்ண நீ வேண்டும் மகனே, என் துன்பத்தை நீக்கும் மைந்தா வருக என்று வேண்டியபோதும் வரவில்லை. திருவெண்காட்டு நங்கையோ, பிள்ளையைத் தந்தை அரிய கால்களைப் புடை இடுக்கி அழுத்திப் பிடித்தபோது சீராள தேவர் கால்களை உதறிய நேரத்தில் அந்தப் பிஞ்சுக் கால்களில் அணிந்திருந்த சிலம்பின் மணி ஒலிகள் தம் காதுகளில் ஒலித்த அந்த நொடியே அது கடைசிக் காட்சியாக ஆகிவிட்டாலும் அதனையே வைத்து மீண்டும் அழைத்தார்.

    வையம் நிகழும் சிறுத் தொண்டர்

      மைந்தா வருவாய் என அழைத்தார்

    தையலாரும் தலைவர் பணி தலை

      நிற்பாராய்த் தாம் அழைப்பார்

    செய்ய மணியே சீராளா வாராய்

      சிவனார் அடியார் யாம்

    உய்யும் வகையால் உடன் உண்ண

      அழைக்கின்றார் என்று ஓலம் இட. 

    எம்பெருமான் திருவருளால் அந்த அதிசயமும் நடந்தது. குழந்தை சீராளன் பாடசாலையிலிருந்து ஓடி வரும் குழந்தை போல துள்ளிக் குதித்து ஓடி வந்த அன்பு புதல்வனை அள்ளியெடுத்த அன்னை வாரிக் கையிலெடுத்து கணவரிடம் கொடுக்க, சிவனடியார் அமுதுண்ணப் பெற்றோம் என இருவரும் அகமகிழ்ந்தனர். மகனை அழைத்துக்கொண்டு வேகமாக ஓடிவந்த சிறுத்தொண்டர் பைரவரைக் காணாது சிந்தை கலங்கித் திகைத்துக் கீழே விழுந்தார். கலத்தில் இருந்த கறியமுதும் காணாமல் அஞ்சினார். பைரவரைத் தேடி வீட்டின் பகுதியில் பார்த்தார். மறைந்த பைரவர் விடை மீது எம்பெருமாட்டியோடும் முருகப் பெருமானோடும் காட்சிக் கொடுத்த அதிசயமும் நடந்தது. திருத்தொண்டில் மூவரும் ஈடுபட்டதால் மூவருக்கும் அருள் செய்ய எம்பெருமான் மூவராகவே வந்தனர் போலும்!

    தனி வெள் விடை மேல் நெடும்

      விசும்பில் தலைவர் பூத கண நாதர்

    முனிவர் அமரர் விஞ்சையர்கள் முதலாய்

      உள்ளோர் போற்றி இசைப்ப

    இனிய கறியும் திரு அமுதும்

      அமைத்தார் காண எழுந்து அருளிப்

    பனி வெண் திங்கள் முடி துளங்கப்

      பரந்த கருணை நோக்கு அளித்தார்

     

    சிறுத்தொண்ட நாயனார் புராணம் சொல்லும் கருத்து

    திருத்தொண்டில் வல்வினையும் நல்வினையும்!

    சிவனடியார்களின் திருத்தொண்டுகள் பற்றிய நூலாகிய திருக்களிற்றுப்படியார், அடியார்களின் செயல்களின் தன்மை சார்ந்து அவற்றை மெல்வினை, வல்வினை என வகைப்படுத்துகிறது. அவற்றுள், ஏறுமாறாக இல்லாமல், மிக இயல்பாக, எவரும் செய்யக்கூடிய எளிமையான சரியை கிரியைத் தொண்டுகள் மெல்லினையெனவும், நினைக்கவே அச்சமூட்டுகின்றனவும், பதற்றமும் ஏற்படுத்துகிற, அடுத்தவர்களால் எளிதாகச் செய்ய முடியாதனவாக உள்ளத் தொண்டுகள் வல்வினை எனவும் குறிப்பிடப்படுகின்றன. அவற்றுள் மெல்வினையை இலக்கண வகையாலுரைத்த திருக்களிற்றுப்படியார் வல்வினையை உதாரணங்கள் மூலமே காட்டியிருத்தல் குறிப்பிடத்தகும்.

    “வரங்கள் தருஞ்செய்ய வியிரவர்க்குத் தங்கள்
    கரங்களினாலன்று கறியாக்க – இரங்காதே
    கொல்வினையே செய்யுங் கொடுவினையே யானவற்றை
    வல்வினையே யென்றதுகாண் மற்று.”

    திருஞானசம்பந்தர் தேவாரத்தில், “சிறப்புலவன் சிறுத்தொண்டன்” என்றும் “சீராளன் சிறுத்தொண்டன்”

    சிறுத்தொண்ட நாயனார் குறிக்கப்பட்டுள்ளார்

    சேக்கிழார் தம் வாக்கில்,

    “சீதமதி அரவினுமின் செஞ்சடைமேற்

    செறிவித்த நாதனடியார் தம்மை நயப்பாட்டு

    வழிபாட்டால் மேதகையாரவர் முன்பு மிகச்

    சிறியராயடைந்தார் ஆதலினாற் சிறுத்தொண்டராய்

    நிகழ்ந்தா ரவனியின் மேல்”

    என்பார்.

    சிவனடியார்களுக்குச் செய்யும் தொண்டும், அளவற்ற அன்பின் காரணமாகச் செய்யப்படும் செயல்கள் உலக இயல்புக்கு மாறானவை என்றாலும் அவை முக்தி தரும் என்கிறார். பைரவர் (சிவன்) வடிவில் வந்த அடியாருக்குத் தனது கைகளாலேயே தன் மகனைக் கறியாக்கிச் சமைத்து அன்போடு படைத்த சிறுத்தொண்ட நாயனாரின் வல்வினை பற்றி குறிப்பிடுகின்றது.

    உயிர் உள்ள ஆடு, கோழி போன்றவற்றை அறுத்தார்கள் எனும்போது, உயிர் அற்ற காய்கறிகளை அரிந்தார்கள் என்பது வழக்கு. சீராளத் தேவர் சிவயோக நிலையில் உயிர் பொருளாக இருந்த காரணத்தால் தெய்வச் சேக்கிழார் பெருமான் அரிந்தார் என்ற சொல்லையே பயன்படுத்தியுள்ளதோடு, அரியவினை செய்தார் என்று இரு பொருள்படக் கூறுகிறார். அதாவது ஒன்று அருமையான செயல் என்று குறிப்பிடுவது. மற்றொன்று சீராளத் தேவர் அரிகின்ற செயல் என்பதாம்.

    இத்தகைய அரிய செயல் செய்தவரை ஆண்டவன் அருள் செய்தது சற்று கடினமான முறைதான் என்றாலும் பெற்ற பிள்ளையை அரிந்து சமைக்கச் செய்தது கருணையின்பால் படுமா என்று தோன்றலாம். யாரை எப்படி ஆட்கொள்வது என்பதை அந்த இறைவனே முடிவு செய்கிறான். வடபுலத்தில் படையெடுத்துச் சென்ற பரஞ்சோதியார் வாதாபித் தென் நகரைத் தீக்கிரையாக்கியுள்ளார். அதில் பல உயிர்களும், குழந்தைகளும் உயிர் நீத்துள்ளனர். பரஞ்சோதியாரைப் பொருத்தவரையில் அது தனது தேசபக்தியின் வெளிப்பாடு என்பார். பற்றின்றி விருப்பு வெறுப்பின்றித் தேச பக்தியால் வாதாபியை வீழ்த்தியவர் தெய்வ பக்திக்காகப் பற்றற்று தம் பிள்ளையை அரிவாரோ என்று சோதிப்பார் போலும்! இவ்வினாவிற்கான விடையாக சிறுத்தொண்டர் வரலாற்றால் அடியவர்களின் பற்றற்ற நிலையை உலகிற்கு விளக்கியருளுகிறார்.

    சிறுத்தொண்டர் நாயனார் பல்லவ மன்னனின் படைத் தளபதியாக ‘வாதாபி’ சென்று சாளுக்கியர்களோடு போர் செய்து வாகை சூடி வந்தபோது தம்முடன் கொண்டு வந்த (வாதாபி) விநாயகரை இக்கோயிலில் நிர்மாணம் செய்துள்ளார். இவரது குருபூசை தினத்தன்று அனைத்து சிவாலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.

    திருச்சிற்றம்பலம்

     

    Share
  • அப்துல் கலாமின் புத்தாக்கக் கருவிகள்

    அப்துல் கலாமின் புத்தாக்கக் கருவிகள்

    அண்ணாகண்ணன்

    ஏவுகணை, விண்வெளி, பாதுகாப்புத் துறையில் பல்வேறு திட்டங்களுக்குத் தலைமை தாங்கி முன்னெடுத்தவர், அப்துல் கலாம். இவை மட்டுமின்றி, புத்தாக்கக் கருவிகள் இரண்டை அவர் உருவாக்கினார்.

    இலகுரகச் செயற்கைக் கால்கள் (lightweight floor / leg calipers and artificial prosthetics)

    டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம், தம் அறிவியல் குழுவினருடன் இணைந்து, ஏவுகணைகள் மற்றும் விண்வெளி ராக்கெட்டுகளுக்காக முதலில் பயன்படுத்தப்பட்ட மேம்பட்ட கார்பன்-கலவைப் பொருட்களைக் கொண்டு,புரட்சிகரமான இலகுரக தரை/கால் அளவிகளையும் செயற்கை உறுப்புகளையும் உருவாக்கினர்.

    முக்கிய அம்சங்கள் மற்றும் புதுமை எடை குறைப்பு: இந்த விண்வெளிக் காலத்து கலவைப் பொருளானது, பாரம்பரிய கால் அளவிகளின் எடையை 4 கிலோவிலிருந்து சுமார் 300 முதல் 400 கிராமாகக் குறைத்துள்ளது (இதனால் அவை 10 முதல் 15 மடங்கு வரை எடை குறைந்தவையாக மாறியுள்ளன).

    மூலப்பொருட்களின் தோற்றம்:அக்னி ஏவுகணையின் மூக்குக் கூம்பிற்குப் பயன்படுத்தப்பட்ட அதே வெப்ப-எதிர்ப்பு கலவைப் பொருட்களைக் கொண்டு இது உருவாக்கப்பட்டது.

    கட்டுப்படியாகும் விலை: இது, சுமார் ₹500 முதல் ₹850 வரை செலவாகும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ₹3,500 முதல் ₹4,000 வரை விலை கொண்ட பழைய, கனமான உலோகம் மற்றும் தோல் மாடல்களை விட கணிசமாக மலிவானது.

    கலாம்-ராஜு ஸ்டென்ட் (Kalam-Raju Stent)

    கலாம்-ராஜு ஸ்டென்ட் (Kalam-Raju Stent) என்பது இந்தியாவின் முதல், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட, மிகக் குறைந்த விலையுள்ள இதய கரோனரி ஸ்டென்ட் ஆகும். 1994ஆம் ஆண்டில், முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் மற்றும் பிரபல இருதய நோய் நிபுணர் டாக்டர் சோம ராஜு ஆகியோர் இணைந்து இதனை உருவாக்கினர்.

    முக்கிய அம்சங்கள் மற்றும் சிறப்புகள்:

    ஏவுகணைத் தொழில்நுட்பம்: பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆய்வகம் (DRDL), ஏவுகணைகளுக்காகப் பயன்படுத்திய உயர்தர மருத்துவக் தரத்திலான எஃகு (High-grade Steel) பொருளைக் கொண்டு இது வடிவமைக்கப்பட்டது.

    விலைக் குறைப்பு: அந்தக் காலக்கட்டத்தில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஸ்டென்ட்டுகள் ₹75,000 முதல் ₹1 லட்சம் வரை விற்கப்பட்ட நிலையில், இந்த சுதேசி ஸ்டென்ட் வெறும் ₹10,000 விலையில் ஏழை மக்களுக்குக் கிடைத்தது. இது சந்தை விலையை 50%க்கு மேல் குறைக்க உதவியது.

    உயிர் காத்த திருப்தி: “மக்களைக் கொல்லும் ஏவுகணைகளை உருவாக்கிய நான், வாழ்க்கையின் இறுதியில் மனித உயிர்களைக் காக்கும் ஒரு கருவியைக் கண்டுபிடித்ததில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்” என்று கலாம் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

    கலாமின் விஞ்ஞானப் பார்வையும் புத்தாக்க முனைப்பும் தலைமுறை தோறும் விரிவடைய வேண்டும். அதுவே அவரது நினைவைப் போற்றச் சிறந்த வழி.

    Share
  • கவிமணி தமிழைக் கனிரசம் ஆக்கினார்!

    கவிமணி தமிழைக் கனிரசம் ஆக்கினார்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    படிக்கும் பாங்கில் எடுத்துச் சொற்களை
    பாட்டாய் ஆக்கிடும் தமிழ்மணி கவிமணி
    எழுத்தும் பொருளும் இயல்பாய் இணைய
    இனிய கவிதைகள் தருவார் கவிமணி

    வித்துவம் காட்டா வித்தகர் கவிமணி
    சத்தியம் நேர்மை மிக்கவர் கவிமணி
    உழைப்பை உயர்வாய் நினைப்பவர் கவிமணி
    உளத்தில் இறையை இருத்தினார் கவிமணி

    குழந்தைக் கவிதைகள் கொஞ்சிக் கொடுப்பார்
    படித்தவர் குழந்தையாய் ஆகியே மகிழ்வார்
    அமுதாய் தேனாய் கவிதைகள் இனிக்கும்
    அன்னைத் தமிழும் அணைத்தே நெகிழும்

    தத்துவக் கருத்துகள் சமயக் கருத்துகள்
    வித்துவ நிலையில் விளம்பிட மாட்டார்
    கற்பவர் கருத்தினில் பதிந்திடும் வண்ணம்
    கவிமணி கனிவாய் கவிதைகள் தருவார்

    அகமும் முகமும் அன்பே இருக்கும்
    எளிமை இனிமை நிறைந்தே இருக்கும்
    பக்தியின் வழியில் பயணப் படுவார்
    பசுந்தமிழ் பாவலர் கவிமணி ஆவார்

    சமத்துவம் கவிமணி தனித்துவம் ஆகும்
    உள்ள உயர்வே உன்னதம் என்பார்
    நல்லதன் நிறைவே செல்வம் என்பார்
    சொல்வதைச் சுவையாய் சொல்வார் கவிமணி

    மலரும் மாலையும் மனமமர் இலக்கியம்
    ஆசிய ஜோதி அருந்தமிழ் பொக்கிஷம்
    மணி மணியாகத் தமிழ்பதம் எடுத்து
    கவிமணி தந்தார் கவிதை மாலையாய்

    கவிமணி கவிதை கற்கண்டாய் இனிக்கும்
    செவிகளில் தேனாய் பாய்ந்துமே செல்லும்
    அவரது கவிதை அருந்தமிழ்ச் சொத்தே
    கவிமணி மீண்டும் பிறந்திட வேண்டும்

    பாட்டுக் கொரு புலவன் பாரதியடாயெனத்
    துணிவுடன் சொன்னவர் கவிமணி ஆவார்
    பாரதி தமிழை இனிக்குது என்றான்
    கவிமணி தமிழைக் கனிரசம் ஆக்கினார்!

    Share
  • காந்திய அடித்தளத்தில் பெண் முன்னேற்றத்திற்கான பல்வேறு பரிமாணங்கள்

    காந்திய அடித்தளத்தில் பெண் முன்னேற்றத்திற்கான பல்வேறு பரிமாணங்கள்

    முனைவர் கு. வளர்மதி,
    உதவிப்பேராசிரியர்,
    இளங்கலைத் தமிழ்த்துறை,
    தி ஸ்டாண்டர்டு ஃபயர்ஒர்க்ஸ் இராஜரத்தினம் மகளிர் கல்லூரி,
    சிவகாசி.

    முன்னுரை

    இன்றைய உலகில் பெண்களின் பங்கு மகத்தானது. ‘மங்கையராகப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா’ என்ற கவிமணியின் வாக்கினை ஏற்ற பல தலைவர்களுள் அண்ணல் காந்தியடிகளும் ஒருவர். பெண்ணைக் காட்டிலும் சிறந்தது வேறு இல்லை என திருவள்ளுவரும், வருங்காலம் பெண்ணுடையது தான் என வினோபாஅடிகளும் கூறுகின்றனர். அடிப்படையில் ஆண், பெண் இருவருக்கும் ஆன்மா ஒன்றே. இருவருக்கும் உணர்வுகளும் ஒன்றே. ஒருவர் மற்றவர் உதவியின்றி வாழமுடியாது. ஆண் காலங்காலமாக பெண் மீது ஆதிக்கம் செலுத்தி வந்திருப்பினும், ஆடவரிடையே தோன்றிய மகான்கள் பெண்ணை ஆணுக்குச் சமமென்றே மதித்திருக்கிறார்கள். பெண்களின் முன்னேற்றத்தில் காந்தியடிகளின் பங்கு கணிசமானது என்பதை மறைக்க முடியாது. காந்திய அடித்தளத்தில் பெண் முன்னேற்றத்திற்கான பல்வேறு பரிமாணங்களை விளக்குவதாக இக்கட்டுரை அமைகிறது.

    அகிம்சையின் அவதாரம் – பெண்

    அகிம்சை என்றால் எல்லையற்ற அன்பு. அதற்கு எவ்வளவு துன்பம்வரினும் ஏற்கும் ஆற்றல் உண்டு. பெண் தனது தாயன்பை உயிரினங்கள் அனைத்திலும் வெளிப்படுத்துகிறாள். போரில் மூழ்கி அமைதிக்காகத் தவித்துக் கொண்டிருக்கும் உலகிற்கு அவ்வமுதைப் புகட்ட வேண்டியவர்கள் பெண்களே ஆவர். அகிம்சையின் அவதாரம் பெண் என்கிறார், காந்தியடிகள்.

    பெண் முன்னேற்றத்திற்கான அடிக்கல்

    பெண்முன்னேற்றம் குறித்து அண்ணல் காந்தியடிகள், முதலில் சீதை, தமயந்தி, திரௌபதி போன்ற தூய உறுதிவாய்ந்த தீரமாதரைத் தோற்றுவித்தாக வேண்டும். நாம் அவர்களை உண்டாக்கிவிட்டால், இன்றைய சூழலில் பெண்கள் சொல்லுபவையும் செய்பவையும் சாஸ்திரங்களைப் போலவே மதிக்கப்பெறும் என்கிறார்.

    தியாகத்தின் உறைவிடம்

    பெண்ணினத்தை பலவீனமானது என்றல்ல, ஆணை விட சிறந்ததே என்று கருதுகிறார் அண்ணல் காந்தியடிகள். ஏனென்றால் இன்றும் பெண்ணினமே தியாகத்திற்கும், வாய்திறவாது கஷ்டங்களைச் சகிப்பதற்கும், பணிவுக்கும், பக்திக்கும், ஞானத்திற்கும் உறைவிடமாக இருந்து வருகிறது.

    பெண்ணுரிமை

    வீட்டிலேயே பெண் அடிமையாக வாழ்வதனைக் காந்தியடிகள், நம் அநாகரிகத்தின் சின்னமென்று கருதினார். இன்று அதிகப்பெண்கள் அரசியலில் கலந்து கொள்வதில்லை. பெரும்பாலோர் சுயமாகச் சிந்திப்பதில்லை. தம் பெற்றோர் அல்லது கணவர் ஏவலைச் செய்வதோடு திருப்தியாயிருக்கிறார்கள். பெண்களை இழிவுபடுத்தியதன் விளைவாக கடுந்தண்டனையை ஆண்கள் அனுபவித்தேயாக வேண்டும். பெண் ஆணின் வலைக்குத் தப்பிஇ தன் தகுதியையும் பெருமையையும் உணர்ந்து அவர்கள் இயற்றியுள்ள சட்டங்கள்இ சம்பிரதாயங்கள் ஆகியவற்றை மீறிக் கிளம்பும்போது அது அகிம்சை முறையில் இருந்தால் தக்கபயன் அளிக்கத் தவறாது என்பது அண்ணல் காந்தியடிகளின் நம்பிக்கையாகும். ‘நான் பெண்ணாகப் பிறந்திருந்தால், பெண்களெல்லாம் தம் கைப்பாவைகள் என்று ஆண்களிடையே நிலவும் கட்டுக்கதையை எதிர்த்துப் புரட்சி செய்வேன்’ என்று 1927-ஆம் ஆண்டு யங்இந்தியா நாளிதழில் குறிப்பிட்டுள்ளார்.

    பெண்களுக்கான உரிமையில் அண்ணல் காந்தியடிகள் உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தார். ஆண்களுக்கு இல்லாத சட்டரீதியான சிரமங்கள் எதுவும் பெண்களுக்கும் இருக்கக்கூடாது என்பது காந்தியடிகளின் கருத்தாகும். பெண் பிள்ளைகளும் ஆண்பிள்ளைகளும் சரிசமமாக நடத்தப்பட வேண்டும் என்கிறார்.

    ஆணும் பெண்ணும் சமம்

    ஆண்களும் பெண்களும் ஒரே கல்வி நிலையங்களில் பயிலும் கூட்டுக்கல்வி முறையை காந்தியடிகள் வலியுறுத்தினார். இந்தச் சோதனைமுயற்சியினை வீட்டிலிருந்தே தொடங்க வேண்டும் என்பது காந்தியடிகளின் விருப்பமாகும். பெண்களுக்குத் தக்க கல்வியளிக்க வேண்டுமென்று காந்தியடிகள் விரும்பினார். பெண், ஆடவனது சமஅறிவுள்ள சகி. அவன் ஈடுபடும் எல்லா காரியங்களிலும் கலந்து கொள்ள உரிமையுள்ளவள். ஆணைப்போலவே சுதந்திரமாக வாழ வேண்டியவள். ஆடவனுக்குத் தன்துறையிலுள்ள தலைமையும் உரிமையும் பெண்களுக்கும் தன்துறையில் இருத்தல் வேண்டும்.

    ஆணும் பெண்ணும் சமமென்றால் அவர்கள் செய்யும் வேலைகளும் ஒன்றாயிருக்க வேண்டும் என்பதல்ல. ஒரு பெண் வேட்டையாடுவதையோ ஈட்டியை எடுத்து வீசுவதையோ சட்டம் தடுக்காதிருக்கலாம். ஆனால், ஆண்களுக்கே உரிய இம்மாதிரியான காரியங்கள் செய்ய இயல்பாகவே கூசும் சுபாவம் கொண்டவர்கள். இயற்கை இருபாலரையும் ஒன்றையொன்று நிரப்பும் வகையில் அமைத்திருக்கிறது. உருவங்களைப் போலவே அவர்கள் வேலையும் வெவ்வேறானவை.

    பெண்களைத் தம்நண்பர்கள் என்று எண்ணாது, தம்மை அவர்களின் அதிபர்களென்று எண்ணி ஆடவர் உலகம் அடிமைப்படுத்துகின்றனர். பழக்கவழக்கமும் சட்டமும் சேர்ந்து பெண்ணை அடக்கி வந்திருக்கின்றன. தன்வாழ்க்கையை உருவாக்குவதில் ஆண்களுக்கு இருக்கின்ற உரிமை பெண்களுக்கும் உண்டு. தன் வாழ்க்கைத்துணையைத் தேர்ந்தெடுக்கும் உரிமை பெண்களுக்கு இருத்தல் வேண்டும். சமுதாயத்தில் வரதட்சணைக் கொடுமை ஒழிந்து, ஆணும் பெண்ணும் சமமாக வேண்டும்.

    கைப்பாவையல்ல பெண்

    நாட்டில் பெண்ணுக்கு அளிக்க வேண்டிய சரியான கல்வி, தனது கணவனுக்கு கைப்பாவையல்ல என்பதை உணர்த்த வேண்டும். ஆண்களைப் போன்று பெண்களுக்கும் தனது தேவைகளைப் பூர்த்தி செய்ய உரிமை உண்டு. சீதையை இராமனுக்கு அடிமைபூண்டு வாழ்ந்தவள் என்று எண்ணுகிறவர்கள், அவள் அனுபவித்த சுதந்திரத்தின் சிறப்பையோ இராமன் எல்லா விஷயங்களிலும் அவளுக்கு அளித்து வந்த மதிப்பையோ புரிந்து கொள்ளவில்லை என்று தான் ஆகிறது. தன்னையும் தன்மானத்தையும் காத்துக்கொள்ள முடியாத கையாலாகாத பெண்ணல்ல சீதை என்பது அண்ணலின் கருத்தாகும்.

    கைம்பெண் மணம்

    கணவன் இறந்தபின்பு, பெண்கள் கைம்மை வாழ்க்கை மேற்கொள்கின்றனர். சிறுவயதினரான விதவைகளுள்ள வீட்டார் தைரியமாகத் தம்பொறுப்பிலுள்ள அக்குழந்தைகளுக்கு மறுமணமல்ல, முறைப்படி நன்றாக மணம்செய்வித்து இச்சீர்திருத்தத்தைத் தொடங்க வேண்டும். ‘மறுமணம்’ என்று சொல்லாதது அவர்களுக்கு முதலில் நடந்தது மணமே அல்ல என்பதனால்தான், என்று யங் இந்தியா நாளிதழில் 1926-இல் காந்தியடிகள் குறிப்பிட்டுள்ளார்.

    தாய்மை

    பெண்ணின் தாயன்பு எப்போதும் காந்தியடிகளுக்கு உயர்ந்ததும் உவகையளிப்பதுமாகவே இருந்தது. ஒருதாய் தன்குழந்தைகளை உயிருக்கு உயிராக நேசிக்கும்போது அவர்களை வளர்க்கும் அறிவு அவளுக்கு இல்லாமல் இருக்கலாம் என்ற மிலிபோலாக்கின் கருத்திற்கு ‘அன்பே அவளுக்கு அதையும் கற்றுக்கொடுக்கும்’ என்கிறார், காந்தியடிகள்.

    கருத்தடைக்குப் புலனடக்கம்

    பிறக்கும் குழந்தைகளின் தொகையைக் கட்டுப்படுத்துவதற்குள்ள தலையாய ஒரேமுறை புலனடக்கமே ஆகும். செயற்கை முறைகளினால் கட்டுப்படுத்துதல் மனித இனம் தற்கொலை செய்துகொள்ளுதலாகும். அவை சரியாக இருந்தபோதும் செயற்கைமுறைகளினால் தீங்கே விளையும் என்பது காந்தியடிகளின் கருத்தாகும்.

    பெண் மானம்

    பெண்ணைப் பாதுகாத்தல் ஆண்களின் கடமையென்றாலும் தன்னைக் காக்க ஆடவன் ஒருவன் இல்லாதபோதும், இப்புனிதப்பணியை அவன் செய்யத் தவறியபோதும் இந்தியப்பெண் யாரும் என்ன செய்வேன்? என்று ஏங்கக்கூடாது என்கிறார், காந்தியடிகள். ஒருபெண் தாக்கப்படுகையில் அவள் இம்சை, அகிம்சை பற்றியெல்லாம் யோசித்துக் கொண்டிருக்கத் தேவையில்லை. அப்போது அவளின் முதற்கடமை ‘தற்காப்பே’ ஆகும். தன்மானத்தைக் காப்பதற்கு அவளுக்குத் தோன்றும் எந்த முறையையும் அல்லது சாதனத்தையும் அவள் உபயோகித்துக் கொள்ளலாம். கடவுள் அவளுக்கு நகங்களும் பற்களும் அளித்திருக்கின்றார். அவற்றை அவள் தன்னால் முடிந்த மட்டும் உபயோகித்துக் கொள்ளலாம். சாகத்துணிந்த ஆடவனாலும் பெண்ணாலும் தன்னை மட்டுமல்லஇ பிறரையும் தன்னுயிரை அளித்துக் காக்க இயலும்.

    தேவதாசிகள் ஒழிப்பு

    சட்டத்திற்கும் நியாயத்திற்கும் மாறாக தன் இச்சைக்காக செயல்படும் சிலரால் பல பெண்களின் வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகிறது. பெண்கள் சிலர் இதற்கு கட்டாயமாக்கப்பட்ட கொடுமைகளும் நிகழ்ந்துள்ளது. இப்பெண்களை தேவதாசிகள் என்று அழைப்பதனால், மதத்தின் பெயரால் இறைவனையே அவமானப்படுத்துகிறோம். இத்தகு கொடுமைகளிலிருந்து விடுத்துப் பெண்களைப் பாதுகாக்க வேண்டும். தேவதாசி முறையை ஒழிப்பதற்காக, இந்தியா விடுதலை அடைந்ததை அடுத்து 1947, அக்டோபர் 9-ஆம் நாளன்று ‘தேவதாசி ஒழிப்புச் சட்டம்’ கொண்டுவரப்பட்டது.

    பெண்களுக்கென்று இழைக்கப்பட்ட அநீதிகள் எண்ணிலடங்காதவைகள். இதுபோன்ற சமூகநோயிலிருந்து விடுபட, தூயோர் ஒவ்வொருவரும் தாம் எங்கிருந்தாலும் தம் சுற்றுவட்டாரங்களில் தீமையில்லாது பார்த்துக் கொள்ளவேண்டும் என்று காந்தியடிகள் வலியுறுத்தினார்.

    ஆபரணப் பித்தம்

    ஆபரண சேர்க்கையானது அழகு சேர்ப்பதற்காகப் பயன்படும் ஒரு சாதனமே ஆகும். விலை அதிகமுள்ள நகைகள் அணிவதனால், பொருளாதார அளவில் நாட்டிற்கு நிச்சயம் ந~;டமே என்பது அண்ணலின் கருத்து. ஏனெனில், தொழிலுக்குப் பயன்படக்கூடிய அவ்வளவு முதலீடுகளும் முடக்கப்பட்டும் தேய்ந்தும் போகிறது. இந்தச் சுயதூய்மை இயக்கத்தில் ஆண்களும் பெண்களும் தம் ஆபரணங்களை அளிப்பதால், சமூகத்திற்கு நிச்சயம் நன்மையே என்பது காந்தியடிகளின் எண்ணம் ஆகும்.

    போராட்டக் களத்தில் பெண்கள்

    உலகிலேயே பெண்களை அதிகஅளவில் திரட்டி நடத்தப்பட்ட போராட்டங்களில் மிகவும் பிரம்மாண்டமானது இந்தியப்போராட்டம் என்றால், முன்னோடிப் போராட்டம் என்பது தென்னாப்பிரிக்காவில் நடந்த சத்தியாக்கிரகம்தான். இவையாவுமே காந்தியடிகளால்தான் சாத்தியமானது. கிறிஸ்துவத் திருமணங்களைத் தவிர மற்ற திருமணங்கள் ட்ரான்ஸ்வாலில் செல்லாது என்று அந்நாட்டில் சட்டம் இயற்றப்பட்டது. இதனை எதிர்த்து, ‘ட்ரான்ஸ்வால் சகோதரிகள்’ என்று அழைக்கப்பட்ட 11பேர் கொண்ட குழுவானது காந்தியடிகளால் அமைக்கப்பட்டு போராட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டனர். இவர்கள் நியூகேஸில் சுரங்கப்பகுதிகளுக்குச் சென்றார்கள். அங்கு ஒப்பந்தத் தொழிலாளர்களை வேலை நிறுத்தத்தில் ஈடுபடுத்தி பேரளவிளான போராட்டங்களை நடத்தி வெற்றியும் பெற்றனர்.

    இந்தியாவில் பெண்களின் நிலை

    காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவில் இருந்து திரும்பிய காலத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள், சாதி ஆணவக்கொலைகள் போன்றவை காந்தியடிகளை வேதனைக்குள்ளாக்கியது. இந்தியர்கள் தங்கள் பெண்களை அடிமையிலும் மோசனான நிலையிலேயே வைத்திருந்தனர். பெண்ணடிமைத்தனம் போன்றவற்றை ஒழிக்காமல், தேசவிடுதலை சாத்தியமில்லை என்றே காந்தியடிகள் கருதினார்.

    பொதுவாக பலகூட்டங்களில் பேசும்போது, காந்தியடிகள் தன்கையைக் காட்டி முதல்விரல் தாழ்த்தப்பட்ட மக்களுக்குச் சமத்துவம்; இரண்டாவது விரல் நூல் நூற்றல்; மூன்றாவது மது உள்ளிட்ட போதைவகைகளைத் தவிர்த்தல்; நான்கு இந்து – முஸ்லீம் ஒற்றுமை; ஐந்து ஆண்-பெண் சமத்துவம் போன்றவைகள் நிறைவேற்றப்படல் வேண்டும் என்று வலியுறுத்தினார். பெண்களையே தனது வழித்துணையாகவும் உறுதுணையாகவும் தேர்ந்தெடுத்துக்கொண்டார். அவரோடு விவாதிக்கும்படியும், மாறுபாடான கருத்தைக் கொண்டிருந்தால் தைரியமாக வெளிப்படுத்தும்படியும் பெண்களை காந்தியடிகள் ஊக்குவித்தார். முடிவுகளை எடுப்பதில் மனைவிக்கு முதலிடம் கொடுக்க வேண்டுமென்றும் காந்தி கூறினார்.

    தற்காலப் பெண்கள்

    பெண்கள், மேனாட்டாருக்கே பொருத்தமான பழக்கவழக்கங்களைப் பின்பற்றிப் பயனில்லை; இந்தியச் சூழ்நிலைக்கும் இயல்புக்கும் பொருத்தமான முறைகளைக் கையாள வேண்டும். நம் பண்பாட்டின் சிறந்த அம்சங்களை விடாது பற்றிப் பாதுகாப்பதில் கலங்காத உறுதியும்இ அதன் தீயஅம்சங்களைத் தயங்காது விலக்குவதில் திடமும் பெண்கள் பெற்றிருக்க வேண்டும். தற்காலப் பெண்கள் ஆடை அணிவது காற்று, மழை வெயிலிலிருந்து தன் உடலைக் காக்க அல்;ல. பார்ப்போர் கவனத்தைக் கவரவே! பல செயற்கை அழகுசாதனங்களைக் கொண்டு, பலபெண்கள் இயற்கை செய்யத் தவறியதைச் செய்து, விசித்திரமாகக் காட்சியளிக்கிறார்கள். அகிம்சைவழி இதுமாதிரியான செயல்கள் பெண்களுக்கு உகந்ததல்ல என்கிறார், காந்தியடிகள். சுதந்திர காலகட்டத்தில் இருந்த பெண்களின் நிலை கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பு போன்றவற்றில் பன்மடங்கு வளர்ச்சி கண்டுள்ளது. பெண்களின் முன்னேற்றமானது சமத்துவ சமுதாயத்திற்கு இன்றியமையாததாகும்.

    தொகுப்புரை

    பெண்களுக்கு அளிக்கப்பட்ட அநீதிகள் குறித்தும் அவற்றிலிருந்து பெண்களைப் பாதுகாத்தல் குறித்தும் அண்ணல் காந்தியடிகளின் வலிமைமிக்க கருத்துகள் தொகுத்துக் கூறப்பட்டுள்ளன.

    சமூகத்தில் பெண்களின் நிலை குறித்தும் அவர்களின் அடிப்படைத் தேவைகள், உரிமைகள், சமத்துவம், சகோதரத்துவம் போன்றவை அனைத்துத்தரப்பு பெண்களுக்கும் தடையின்றி கிடைக்கப்பெற வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

    பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளான வரதட்சணைக் கொடுமை, தேவதாசி முறை போன்றவற்றிலிருந்து முழுமையாகப் பாதுகாத்து அவர்களின் முன்னேற்றத்திற்கு ஆண்கள் உறுதுணையாக இருக்க வேண்டுமென்பதே அண்ணல் காந்தியடிகளின் கருத்தாகும் என்பது புலப்பட்டுள்ளது.

    பெண்களின் இயல்புகள் குறித்தும், சமுதாயத்தில் பெண்களின் முக்கியத்துவம் மற்றும் தற்காலப் பெண்களின் மனநிலை குறித்தும் பலதளங்களில் குறிப்பிடப்பட்ட அண்ணல் காந்தியடிகளின் கருத்துகள், ‘காந்திய அடித்தளத்தில் பெண் முன்னேற்றத்திற்கான பல்வேறு பரிமாணங்கள்’ எனும் இக்கட்டுரையில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

    Share
  • ஜனநாயகன் – விஜயின் பிரம்மாஸ்திரம்

    ஜனநாயகன் – விஜயின் பிரம்மாஸ்திரம்

    – அண்ணாகண்ணன்

    தேர்தலுக்கு முன்னால் இந்தப் படம் வெளியாகியிருந்தால், அத்தனைத் தொகுதிகளையும் விஜய் அள்ளியிருப்பார். இதைத் தடுத்து நிறுத்தியதால், எல்லாம் முடிந்துவிட்டது என்று பொருள் இல்லை. அடுத்து, இடைத்தேர்தல், உள்ளாட்சித் தேர்தல், மக்களவைத் தேர்தல், 2031 சட்டமன்றத் தேர்தல் என இனி நடக்கப் போகிற ஒவ்வொரு தேர்தலிலும் ஜனநாயகன், மிகப் பெரிய தாக்கத்தைச் செலுத்தும்.

    இதில் உள்ள குறிப்பிட்ட சில காட்சிகளைத் தொலைக்காட்சியில் மீண்டும் மீண்டும் ஒளிபரப்பினால் அல்லது சமூக ஊடகங்களில் பகிர்ந்தால், அதன் விளைவும் வீச்சும் நினைத்துப் பார்க்க முடியாத அளவு இருக்கும். தமிழில் ஜனநாயகன், தெலுங்கில் ஜனநாயகுடு, இந்தியில் ஜன் நேதா எனப் பல மொழிகளில் வௌியாகியிருப்பதால், இந்திய அளவில் விஜயின் செல்வாக்கு உயரும்.

    அந்த அளவுக்குத் தேர்தலை மையப்படுத்திய படம் இது. குழந்தைகள், பெண்கள், கிராமத்து மக்கள் எனப் பல்வேறு தரப்பினரையும் கவரும் வகையில் திரைக்கதை அமைத்திருக்கிறார்கள். மக்களின் உணர்வுகளைத் தூண்டும் வகையிலும் உடனே செயலாற்ற உந்தும் வகையிலும் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை மக்கள் தீர்மானிக்கும் வகையிலும் இந்தப் படம் அமைந்துள்ளது.

    விஜய் மட்டுமின்றி, அமைச்சர்கள் என்.ஆனந்த், அருண்ராஜ் ஆகியோரும் திரையில் தோன்றுகிறார்கள். தளபதி வெற்றி கொண்டான் என்ற பெயரில் விஜயின் பட்டப் பெயர், விஜய் என்ற பெயரின் பொருளான வெற்றி ஆகியவை இடம் பெற்றுள்ளன. அத்துடன் இந்தப் பெயர்ச் சுருக்கமும் கட்சியின் பெயர்ச் சுருக்கமும் (டிவிகே) ஒன்றாக வருமாறு வைத்திருக்கிறார்கள். சமூகப் பிரச்சினைகள் பலவற்றையும் இதில் விஜய் அதிரடியாகத் தீர்த்து வைக்கிறார். தங்களுக்காக ஒருவர் சூப்பர்மேனாக நின்று போராட வேண்டும் என்ற மக்களின் நீண்ட கால எதிர்பார்ப்பைப் பரபரப்பாக நிறைவேற்றி இருக்கிறார்கள்.

    எம்.ஜி.ஆர். பாடல்கள், அதிமுகவுக்கு இன்றும் வாக்குகளைச் சேர்த்து வருகின்றன. அது போல், இந்தப் படத்தின் காட்சிகளும் பாடல்களும் த.வெ.க.வுக்கு மிகப் பெரிய பலம் சேர்க்கும். எம்.ஜி.ஆரும் விஜய் பக்கம் இருப்பது போல் காட்சிகள் உள்ளதால், எம்.ஜி.ஆர். ரசிகர்களும் விஜய் பக்கம் வருவார்கள்.

    ஜனநாயகன் என்ற பெயரிலேயே கன் (Gun) இருப்பதால், படத்திலும் ஏராளமான துப்பாக்கிகள் வெடிக்கின்றன. வன்முறை அதிகம் என்பதால், வயது வந்தோருக்கான படம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    குழந்தைகளுக்குச் சில நல்ல செய்திகளை விஜய் அழுத்தமாகச் சொல்கிறார். ஆனால், வயது வந்தோருக்கான படம் எனச் சான்றிதழ் பெற்றுள்ளதால், குழந்தைகளிடம் அந்தச் செய்திகள் சென்று சேருமா? ஏனெனில் அவர்களால் திரையரங்கிற்குச் சென்று இதைப் பார்க்க முடியாது. தொலைக்காட்சியிலும் ஓடிடி தளங்களிலும் இந்தப் படம் வெளியாகும்போது, என்ன நடக்கும் என்று தெரியவில்லை.

    இதைப் பொழுதுபோக்குப் படம் என்பதை விட, அதிரடி அரசியல் திரைப்படம் என்றே சொல்ல வேண்டும். தனது திறமை என்ன, வலிமை என்ன என்று இயக்குநர் எச்.வினோத் நிரூபித்திருக்கிறார்.

    இதை எதிர்கொள்ள, இன்னும் நிறைய அரசியல் திரைப்படங்கள் வரலாம். ஆனால், ஜனநாயகனுக்கு வலிமை சேர்ப்பது கதை மட்டுமில்லை, விஜய் என்னும் ஆளுமை. அவரது பிரம்மாஸ்திரம், இந்த ஜனநாயகன். இது செல்லும் இடமெங்கும் வெல்லும்.

    Share
  • கூடா நட்பு (பள்ளி நாடகம்)

     

    காட்சி அறிமுகம்

    அனைவருக்கும் வணக்கம்.

    முகத்தின் இனிய நகாஅ அகத்தின்னா
    வஞ்சரை அஞ்சப் படும்.

    என்பது கூடா நட்பு அதிகாரத்தின் 824வது குறட்பா.

    இதன் பொருள், முகத்தால் இனிமையாகச் சிரித்துப் பழகி அகத்தில் தீமை கொண்டுள்ள வஞ்சகருடன் நட்பு கொள்வதற்கு அஞ்ச வேண்டும்.

    ஒரு மனிதனுடைய வெற்றிக்கும், தோல்விக்கும் பெரும்பாலான நேரங்களில் நண்பர்களே காரணமாய் இருக்கிறார்கள். நண்பர்களுடன் பேசும்போது நம்முடைய மனம் நேர்மறை சிந்தனைகளில் அல்லாமல் எதிர்மறை சிந்தனைகளில் வளர்கிறதெனில் அந்த நட்பு தவறானது என்பதைக் கண்டு கொள்ள வேண்டும். கூடா நட்பு கேடாய் தான் முடியும் .

    “உன் நண்பனைக் காட்டு, நீ யாரென்று சொல்கிறேன்”, என்பார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக எதற்காகவும் பழகிய நட்புக்கு துரோகம் செய்யக் கூடாது. அதன் வலி தாங்கமுடியாதது என்பதையும் உணரச் செய்யும் காட்சிகளைத்தான் காண இருக்கிறோம். வாருங்கள் நிகழ்ச்சிக்குள் போகலாமா…

    காட்சி – 1  பள்ளி வகுப்பறை

    ஆசிரியர் : வணக்கம் குழந்தைகளே! ஒரு நல்ல செய்தி. இந்த ஆண்டும் வழக்கம்போல் ஆண்டு விழாவில் விளையாட்டுப் போட்டிகள் நடக்கப் போகின்றன. கண்மணி, தமிழ்ச்செல்வி தவிர வேறு யாரெல்லாம் பெயர் கொடுக்கப் போகிறீர்கள்?

    மாணவர்கள் ஒன்றாக டீச்சர் ஏன் அவர்களைத் தவிர என்கிறீர்கள்? என்ற கூச்சல்.

    ஆசிரியர்: ஆமாம் அவர்கள் எப்போதும் கலந்து கொள்பவர்கள்தானே. அதான் நானே அவர்களுடைய பெயர்களை எழுதிக்கொண்டேன்..

    ஓ …..

    ஆசிரியர்: சரி, விரைவில் மற்றவர்களும் பெயர்களைக் கொடுங்கள். இப்போது பாடத்திற்குச் செல்லலாம்.

     

    காட்சி – 2

    கண்மணி : “தமிழ், எப்படியும் இந்த முறையும் நீதான் சுழற்கோப்பையை தக்க வைத்துக்கொள்ளப் போகிறாய். அப்படித்தானே?”

    தமிழ்ச்செல்வி : அதெல்லாம் இல்லைப்பா. எனக்குப் போட்டியாத்தான் எப்பவும் நீ இருக்கிறாயே? அப்புறம் எப்படி ?

    (தமிழ்ச்செல்வி அந்த இடத்தை விட்டு அகன்றாள்)

    மணிமொழி : “ஏய் கண்மணி எப்படியும் இந்தப் போட்டியிலும் வழக்கம் போல நீதான் வெற்றி பெறப் போகிறாய்”

    கண்மணி : “அதெல்லாம் இல்லப்பா விளையாட்டுப் போட்டி என்று வந்தால் தமிழ்ச்செல்வியை யாரும் முந்திச் செல்ல முடியாது”

    மணிமொழி : “அப்படியெல்லாம் இல்லைப்பா. நீதான் இந்த முறை கோப்பையை வாங்கப் போகிறாய் என்று நான் பந்தயம் கட்டியுள்ளேன்”

    மற்ற 3 மணவிகள் : ஆமாம் .. ஆமாம். மணிமொழி சொல்வது சரிதான். நீதான் இந்த முறை கோப்பையை வெல்லப் போகிறாய்.

    “கண்மணி இந்தப் போட்டியில் கட்டாயம் முதல் பரிசு உனக்குத்தான். அதற்கு நாங்கள் பொறுப்பு. நீ மட்டும் நாங்கள் சொன்னபடி கேட்டால் போதும். சுழற்கோப்பை இந்த முறை உனக்குத்தான்”

    கண்மணிக்கு மெல்ல சபலம் தட்ட ஆரம்பித்தது. யோசிக்க ஆரம்பிக்கிறாள். “எப்படியும் சுழற்கோப்பையை அடைந்தே தீரவேண்டும்” என்று தனக்குத்தானே சபதம் மேற்கொள்கிறாள்.

    (புதிய நண்பர்களின் பேச்சை முழுமையாக நம்ப ஆரம்பித்தாள் கண்மணி. கண்மணியிடம் ஒரு பெரிய திட்டத்தை சொல்லிக் கொண்டிருந்தனர். எப்படியாவது இருவரையும் தோற்கச் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டிருந்தனர்).

    “கண்மணி ஓட்டப் பந்தயத்தில் நீ வெற்றி பெற வேண்டுமானால் நாங்கள் சொல்வதுபோல் நீ செய்ய வேண்டும்”

    கண்மணி : “என்ன அது..  இதனால் வேறு பிரச்சனைகள் வராது அல்லவா?”

    தோழிகள் : “அதெல்லாம் ஒன்றும் வராது. எப்படியும் நீங்கள் இருவரும்தான் முன்னிலையில் ஓடி வந்து கொண்டிருப்பீர்கள். ஒரு குறிப்பிட்ட இடத்தில் வந்தவுடன் நாங்கள் சைகை காட்டுவோம். அப்போது மெதுவாக ஒரு கல்லை வழியில் உருட்டி விடுவோம். நீ அந்த நேரம் பார்த்து தமிழ்ச்செல்வியின் காலை இடறச் செய்துவிட்டால் போதும். அவள் கீழே விழுந்து விடுவாள். நீ முன்னால் ஓடிச் சென்று பரிசை தட்டிச் செல்லலாம்” .

    கண்மணி : (மனதிற்குள்)  மனசு என்னமோ உறுத்திக் கொண்டே இருக்கிறதே. இவர்கள் பேச்சைக் கேட்டுக்கொண்டு அன்புத் தோழி தமிழ்ச்செல்வியை இக்கட்டில் மாட்டி விட்டுவிடுவோமா? சே..சே.. அப்படியெல்லாம் ஆகாது. பார்த்துக்கலாம் …

     

    காட்சி – 3

    அன்று போட்டி நாள். எப்போதும் உற்சாகமாகக் கிளம்பும் கண்மணி அன்று ஒரு பதட்டத்திலேயே கிளம்பிக் கொண்டிருந்தாள். இதை கவனித்த அவளுடைய அம்மா,

    அம்மா :  “கண்மணி இன்று ஏன் இப்படி உற்சாகமே இல்லாமல் இருக்கிறாய். இத்தனை முறை காரணம் கேட்டும் சொல்லவும் மறுக்கிறாய். இந்த மனநிலையில் போனால் எப்படி போட்டியில் வெற்றி கிடைக்கும். ஏதாவது பிரச்சனை இருந்தால் என்னிடம் சொல்”.

    கண்மணி : “அதெல்லாம் ஒன்றுமில்லையம்மா”

    அம்மா மனதிற்குள் .. : ஏதோ பிரச்சனை இருக்கிறது. என்னமோ அசம்பாவிதம் நடக்கப் போவதாகத் தோன்றுகிறதே. பேசாமல் போட்டி நடக்கும் மைதானத்திற்கு போய்விடலாம்”.

    போட்டி ஆரம்பித்தது. மூன்றாவது விசிலும் ஊதப்பட்டது. எல்லோரும் பந்தயத்திற்கு தயாராகி விட்டனர். கண்மணியின் மனதில் மட்டும் ஒரு சலனம். தேவையற்ற இந்த மனக்குழப்பம் அவளுடைய வெற்றிப் பாதைக்கு ஒரு தடைக்கல்லாகவும் நின்றது.

    சில மாணவிகள் வந்து கண்மணியிடம் இரகசியம் பேசிச் செல்கிறார்கள்.

    அம்மா மனதிற்குள் : “போட்டி நடக்கும்போது அந்தப் பிள்ளைகள் ஏதோ செய்யப் போகிறார்கள். அதைத் தடுக்க வேண்டும்”.

     

    குறிப்பிட்ட அந்த இடம் வந்தவுடன் கண்மணியின் அம்மா கவனித்துக் கொண்டிருந்ததைப் பார்த்த மணிமொழி குழுவினர் மெல்ல பின்வாங்க ஆரம்பித்தனர். கண்மணியும் வேகமாக முன்னேறி வந்து கொண்டிருந்தாலும் அந்த இடத்திற்கு வந்தவுடன் அவளையறியாமல் கால்கள் அச்சத்தில் பின்னிக் கொண்டன. வேகம் குறைய ஆரம்பித்தது. கீழே விழப் போனவளை ஒரு நொடியில் அணைத்து காப்பாற்றி விட்டு முன்னேறிச் சென்ற தமிழ்ச் செல்வியைப் பார்த்து கூனிக்குருகி நின்றாள்.

    “தமிழ்ச்செல்வி முதல் இடத்தைப் பிடித்து விட்டாள்” என்ற அறிவிப்பு வருகிறது.

    கண்மணிக்கு மகிழ்ச்சியாகவே இருந்தது.

    கண்மணி மனதிற்குள் : நல்ல வேளை. கூடா நட்பினால் நல்ல தோழியை இழக்க நேர்ந்த விபத்திலிருந்து தப்பி விட்டோம்”

    அம்மாவும் அதைப் புரிந்து கொண்டு அவள் முதுகில் அன்பாக தட்டிக் கொடுத்தார்.

    இறுதிக் காட்சி

    “நண்பர்களே, கூடா நட்பு கேடாய் முடியும் என்பதை புரிந்து கொண்ட கண்மணி அதைத் தன் வாழ்க்கைப் பாடமாக எடுத்துக் கொண்டாள். நமக்கும் இது ஒரு பாடம்தானே?

    நன்றி, வணக்கம்.”

     

     

    Share
  • காதல் எதுவரை?

    காதல் எதுவரை?

    நிர்மலா ராகவன்

    நீடிக்கும் உறவுகள்

    அன்பு என்பது ஒருவரை அவர் உள்ளபடியே ஏற்பது. மற்றவரிடம் எதை எதையோ எதிர்பார்த்தால் ஏமாற்றம்தான் உண்டாகும்.

    திரைப்படங்களில் நாம் காண்பது – கணவர் அலுவலகத்திற்குப் புறப்படுமுன் மனைவி வாசலுக்கு வந்து அவருக்குத் தேவையானவற்றைக் கையில் கொண்டுவந்து கொடுக்கிறாள். அவருக்குச் சுயமாக எடுத்துக்கொள்ளத் தெரியாதா?

    இப்படிப் பழக்கப்பட்ட ஆண் தன் மனைவி ஒரு தனி நபர், ஒரு பெண்ணுக்கும் எதிர்பார்ப்புகள் இருக்கலாம் என்பதை உணர்வதில்லை.

    அவள் தன்னையும் கவனித்துக்கொண்டால், அது சுயநலமாகாது. அவளுக்கென்று ஆசைகள், தனிப்பட்ட கருத்துகள் இருக்காதா, இருக்கக்கூடாதா?

    `எனக்குத் திரைப்படங்கள் பார்க்கப் பிடிக்காது. அதனால் நீயும் பார்க்கக்கூடாது!’ என்றானாம் என் சக ஆசிரியையின் கணவன்.

    தம்மிடமிருந்து, தாம் நம்புவதிலிருந்து, மாறுபட்டவர்களைக் கண்டால் இவனைப்போன்ற பலருக்கும் ஏதோ பயம். அது கோபமாக மாறுகிறது. அது புரிந்து, மனைவியும் விட்டுக்கொடுத்துக்கொண்டே போகிறாள். அவளால் முடிந்தது – தன் தோழிகளிடம் சொல்லி வருந்துவதுதான்.

    பெண் அழகாக இருந்தாலும் ஆபத்துதான்.

    ஒரே பார்வையில், `அழகாக இருக்கிறாள்!’ என்று எடைபோட்டு ஒரு பெண்ணை மணக்கச் சம்மதித்துவிட்டு, மணமானதும் பிற ஆண்களும் அப்படித்தானே மயங்கிவிடுவார்கள் என்ற சந்தேகமும் பொறாமையும் எழ, அவளை ஒரேயடியாக அடக்குவார்கள் பல கணவன்மார்கள்.

    திருமணமானதும் பழக்கவழக்கங்கள் மாறிவிடும். அனேகமாக, பெண்கள்தாம் ஐந்திலிருந்து பத்து கிலோவரை எடை கூடுகிறார்கள் என்கிறது ஓர் ஆராய்ச்சி.

    பதினெட்டு வயதுவரை உடல் வளர்வதால் சாப்பிடும் அளவும் அதிகரிக்கும். அதன்பின் குறைத்துக்கொள்ள வேண்டியதுதான்.

    அழகாக இருந்தால் ஆண்களை வசீகரிக்கலாம் என்று கவனமாக உடலைப் பார்த்துக்கொள்ளும் பெண்கள் திருமணம் நிச்சயம் ஆனதுமே வழக்கத்திற்கு விரோதமாக நிறைய சாப்பிட ஆரம்பிக்கிறார்கள். மகிழ்ச்சியால் பூரிக்கிறார்களாம்!

    பிள்ளை பெற்றதும், `வீட்டு வேலை, குழந்தைகளைக் கவனிப்பதற்கே நேரம் போதவில்லை! உடற்பயிற்சி வேறா!’ என்ற சாக்கு. சமையலுக்குப் பலவிதமான இயந்திரங்கள்வேறு. இதனால் உடல் பருத்துக்கொண்டேபோகிறது.

    நாற்பது வயதுக்குமேல் அழகு குறைந்துபோக, எப்போதும் தனக்கு அடங்கி நடக்கும் மனைவியைக் கண்டால் எரிச்சல் எழுகிறது. அவளைப்போல் இல்லாது, இளமையுடன் கலகலப்பாகவும் இருக்கும் பெண்களிடம் மனம் போகும். மனைவிக்கோ, தன்னம்பிக்கை குறைந்துகொண்டே போக, சற்றே கூனல் விழுகிறது.

    கதை

    என்னுடன் ஒரே மாதம் வேலைபார்த்த கணபதி, “நீங்கள் வெஜிடேரியனா?” என்று கேட்டபோது, “ஆமாம்,” என்றேன்.

    உடனே கோபமாக, “எத்தனை பிராமணர்கள் `எல்லாவற்றையும்’ சாப்பிடுகிறார்கள், தெரியுமா?” என்று கத்தினார்.

    நான் அமைதியாக, “நீங்கள் என்னைப்பற்றிக் கேட்டீர்கள். அதற்கு நான் பதில் சொன்னேன். `எல்லா பிராமணர்களும்’ என்று கேட்டிருந்தால், வேறு விதமாக பதில் அளித்திருப்பேன்,” என்றேன்.

    அவருடைய முகம் சுருங்கிப்போயிற்று.

    மனைவி என்றால் தனது அதிகாரத்தை ஏற்கவிருப்பவள் என்று எண்ணுவதுபோல் நடப்பவர் பேசும் சுதந்திரத்தைக்கூட தன் மனைவிக்கு அளித்திருக்கமாட்டார்.

    ஏன் தன் மனைவி கலகலப்பாக இல்லை என்ற குழப்பம் எழ, “என் மனைவி படித்தவள். (இதை இருமுறை அழுத்தமாகக் கூறினார்). ஆனால், உங்களைப்போல் இல்லையே!” என்று என்னிடம் குறைப்பட்டார் கணபதி.

    என் பதில்: “நீங்கள் நினைப்பதை, சொல்வதை, பிறர் அப்படியே ஏற்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள். அப்படி இல்லாவிட்டால் கோபம் வருகிறது. உங்களுக்கு என்னைப்போன்ற மனைவி சரிப்படமாட்டாள்”.

    கணவன் மனைவியருக்குள் போட்டி எதற்கு? தான் மனைவியைவிட ஏதோ ஒரு வகையில் தாழ்ந்தவன் என்ற மனப்பான்மை கொண்டவன்தான் பிறர் முன்னிலையிலும் அவளைக் கட்டுப்படுத்துகிறான். குறையைத் தன்னிடம் வைத்துக்கொண்டு, மனைவி தான் எதிர்பார்த்தபடி இல்லையே என்று வருந்தி என்ன பயன்?

    துணுக்கு

    ஓர் இளைஞன் தன் தாயிடம் பெருமையாகச் சொன்னான்: என் காதலி நான் வேடிக்கையாகப் பேசுபவன், ஆணழகன், புத்திசாலி என்று சொல்கிறாள்.

    தாய் கேட்டாள்: உனக்கு அவளிடம் என்ன பிடிக்கும்?

    பதில்: அவள் என்னை வேடிக்கையாகப் பேசுபவன், ஆணழகன், புத்திசாலி என்று புகழ்வது.

    கதை

    திருமண வாழ்க்கையில் பெண்ணாலும் மகிழ்ச்சி குன்றுவிடக்கூடும்.

    புதுமணத் தம்பதிகளான பிரபாவும் பார்த்திபனும் ஈராண்டுகள் மகிழ்ச்சியாகக் கழித்தனர். அப்போது மனைவியின் முகம் சிறிது கோணினாலும், உடனே மன்னிப்பு கேட்டுவிடுவான் பார்த்திபன். தான் தவறு செய்திருக்கலாமோ என்ற சந்தேகத்தால் அல்ல. உடல் நெருக்கம் மட்டுமே முக்கியமாக இருந்த காலம் அது.

    அழகு, கல்வி, பொருளாதாரம் எல்லாவற்றிலும் கணவனைவிடச் சிறந்திருந்ததால் பிரபாவின் கை ஓங்கியது. அதன்பின், அறிவு முதிர்ச்சி இன்றி, எந்த வாய்ச்சண்டையிலும் தான்தான் வெல்லவேண்டும் என்று நினைப்பவளாக ஆனாள்.

    `என்ன பேச ஆரம்பித்தாலும், ஏனோ வாக்குவாதத்தில் முடிகிறதே!’ என்று பார்த்திபன் அவளிடமிருந்து லேசாக விலகலானான்.

    மனைவி தன்னை எப்போதும் சாடுகிறாளே என்று வருந்தியவனின் குமுறல்: “நான் அவளுக்குப் பூரண சுதந்திரம் கொடுத்திருக்கிறேன். அவள் பணக்கார குடும்பத்திலிருந்து வந்தவள், வீட்டு வேலை செய்யப் பிடிக்காது என்று வீட்டில் சமையலுக்குக்கூட ஆள் போட்டிருக்கிறேன். அவளுடைய சொந்த உபயோகத்திற்கு கார். இன்னும் என்ன வேண்டும்?”

    கணவனுக்குப் பெரிய வேலை, அதனால் பொறுப்புகள் நிறைய இருக்கும் என்பதெல்லாம் அவளுக்கும் புரியாமலில்லை.

    வேலை நிமித்தம் வெளிநாட்டுக்குப் போய்வரும்போதெல்லாம் பரிசுப்பொருட்கள் வாங்கி வருகிறான். இருந்தாலும், தனக்காக அவ்வளவு நேரத்தைச் செலவழிப்பதில்லை என்ற வருத்தம் கோபமாக மாறிவிட்டது.

    காதலனாக இருந்தபோது இப்படியா இருந்தான்! எவ்வளவு எதிர்பார்ப்புடன், குடும்பத்தை எதிர்த்து அவனை மணந்தாள்!

    இப்போது அவளுக்கு வேண்டியது அவனுடைய அன்பான கவனிப்பு. வேறு எதுவும் அதற்கு ஈடாகாது.

    வெளிப்படையாகக் குறைகூறாது அனுசரித்து நடந்தால், இருவரில் ஒருவர் தானாக மாறலாம். இல்லை, மாற்ற முடியாததை ஏற்க வேண்டும்.

    ஐம்பது வருடங்களுக்குமேல் தாம்பத்தியத்தில் இணைந்திருப்பவர்களைப் பார்த்தால், அவர்களுக்குள் சண்டையே வந்திருக்காதா, எப்படி மனம் ஒத்துப்போயிற்று என்றெல்லாம் அதிசயமாக இருக்கும்.

    நெருக்கமான உறவில் மட்டும் அடுத்தவருக்குப் பிடிக்காத குணங்கள் இருக்காதா, என்ன! வருத்தமும் ஆத்திரமும் ஏற்படுத்திய சம்பவங்களும் நடந்திருக்கலாம். இருப்பினும், அவைகளைக் கடந்தால்தான் உறவு நீடிக்கும் என்று புரிந்தவர்கள் அவர்கள்.

    பொதுவாக, எல்லாத் தம்பதிகளையும்போல் பிரபாவின் பெற்றோரும் அவ்வப்போது வாக்குவாதம் செய்வதுண்டு. மௌனமாக இருப்பதற்கு அது மேல் என்று புரிந்தவர்கள்.

    பிரபா தாயிடம் கலந்து ஆலோசித்தாள். “அது எப்படி, நீயும் அப்பாவும் இத்தனை வருடங்களாக ஒருவரையொருவர் பொறுத்துப்போனீர்கள்?”

    “யாரிடம்தான் குறையில்லை? அடி, உதையில் இறங்காதவரை, பொறுத்துப்போக வேண்டியதுதான்,” என்று வாழ்க்கைத் தத்துவத்தை விளக்கினாள் தாய். “அப்பா சிறு தவற்றைச் செய்யும்போது, அதை கவனிக்காததுபோல் இருந்துவிடுவேன். அவரைப்பற்றிப் பிறரிடம் புகார் செய்வதும் கிடையாது”.

    அமைதியாகப் பேசினால் பயன் கிடைக்கும். மௌனம் சாதித்தால், ஒருவர் மனதில் இருப்பதை மற்றவர் எப்படிப் புரிந்துகொள்ள இயலும்?

    “குறையே இல்லாதவராக இருக்கவேண்டும் என்று எதிர்பார்த்தால் நடக்கிற காரியமா? நான் மட்டும் என்ன, தப்பே செய்யமாட்டேனா? விட்டுப்பிடி,” என்று முடித்தாள் பிரபாவின் தாய்.

    கதை

    அமெரிக்கப் பெண்மணி காதரின் கலகலப்பானவள். அவளுடைய கணவரோ நேர்எதிர். அழுமூஞ்சி என்று சொல்லத்தக்கவர்.

    சற்று பழகியதும், நான் அவளிடம் கேட்டேன்: “உனக்கும் உன் கணவருக்கும் பொருத்தமே இல்லையே! எப்படி அவருடன் இருக்கிறாய்?”

    உடனே, “அப்படிப் பார்த்துக்கொண்டே இருந்தால், முடிவே கிடையாது,” என்று பதிலளித்தாள். சற்றுப் பொறுத்து, “என் கணவர் விவாகரத்து ஆனவர். அவருடைய முதல் மனைவியை ஒருமுறை சந்தித்தேன். என்னைப்போலவே இருந்தாள்,’ என்று தெரிவித்தாள்.

    வெளிப்படையாகக் கட்டுப்படுத்தாது, அவருடைய குறைகளைப் புரிந்து, அவற்றுடன் அவரை ஏற்கும் விவேகம் நிறைந்தவள் அவள். அதனால் அவர்களுடைய தாம்பத்தியம் குறுகிய காலத்தில் முடிந்துவிடவில்லை. தன் குறைகளை உணர்ந்த கணவரும் அவளிடம் நன்றி செலுத்தும் விதமாக மிக்க அன்புடன் நடந்துகொண்டார்.

    காதலர்களாக இருக்கும்போது, உல்லாசமாக ஊர்சுற்றி, செலவைப் பார்க்காமல் ஒருவர் மற்றவருக்கு ஏதாவது வாங்கிக்கொடுத்து, சிரிப்பும் களிப்புமாக இருந்திருக்கலாம். ஆனால், வாழ்க்கை நம்மைப் புரட்டிப் போடும்போது ஒருவருக்கொருவர் ஆதரவாக நடக்க வேண்டியதும் அவசியம்.

    Share
  • எல்லாமும்

    எல்லாமும்

    முனைவர் த. ஆதித்தன்
    இணைப் பேராசிரியர்
    அரிய கையெழுத்துச் சுவடித்துறை
    தமிழ்ப் பல்கலைக்கழகம்
    தஞ்சாவூர்-613 010.

    வாழ்வைச் சுருக்கிடும்
    கூர் அஸ்திரங்களாய்…
    கட்டுபாடு இழப்பு,
    திக்குமுக்காடல் உணர்வு,
    அதீத களைப்பு!

    மீண்ட பயணத்தில்
    துல்லியத் திட்டம், கூர்நோக்கு
    துணைநிற்கும்
    நல்வினையாய்…

    மேம்படுத்துதலில்
    நீக்குதல் அங்கமாகிட
    சேர்ப்பதும் அம்சமாய்…

    மொத்தத்தில்
    எல்லாமும்
    எண்ணவெளிப்பாடாய்…

    Share