Blog

  • முன்-ஒப்புதல் வழங்கப்பட்ட கடன்கள் | ராமகிருஷ்ணன் நாயக்

    முன்-ஒப்புதல் வழங்கப்பட்ட கடன்கள் | ராமகிருஷ்ணன் நாயக்

    முன்-ஒப்புதலுடன் கூடிய கடன்கள் எப்படி, யாருக்கு, எந்த அடிப்படையில் வழங்கப்படுகின்றன? அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர் ராமகிருஷ்ணன் நாயக் விளக்குகிறார். உங்களுக்கு ஏதும் ஐயம் இருந்தால் கேளுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

     

    Share
  • பாராளுமன்றத்தில் பாரதி!

    பாராளுமன்றத்தில் பாரதி!

    வணக்கம்.

    பாராளுமன்றத்தில் பாரதி!

    நாளை, செப்டம்பர் 18, சனிக்கிழமை நமது பாராளுமன்ற வளாகத்தில் உள்ள பாலயோகி அரங்கில்,

    வானவில் பண்பாட்டு மையம்
    இந்திரா காந்தி தேசிய கலாசார மையம்
    தில்லி தமிழ்ச் சங்கம்

    இணைந்து வழங்கும்

    மாபெரும் பாரதி விழா!

    மதியம் 3.45 க்கு நேரலையில் காணுங்கள்:

    https://www.youtube.com/vanavilculturalcentre

    உற்ற நண்பன் ரவியின் ஒரு கனவு நிறைவேறுகிறது!

    இன்னும் பல கனவுகள் மெய்ப்படும்!

    அன்புடன்,
    ரமணன்

    Share
  • வசந்த பவன் வி.பி. சிக்னேச்சர் உணவகம் எப்படி?

    வசந்த பவன் வி.பி. சிக்னேச்சர் உணவகம் எப்படி?

    சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வசந்த பவன் வி.பி. சிக்னேச்சர் (VB Signature) என்ற உயர்தர சைவ உணவகத்தில் நாங்கள் குடும்பத்துடன் சென்று உணவருந்தினோம். உணவகம் எப்படி? உணவுகள் எப்படி? இதோ எங்கள் அனுபவம்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • நவீன அரசியலுக்கு வழிகாட்டிய சிந்தனையாளர் – நிக்கலோ மாக்கியவெல்லி

    நவீன அரசியலுக்கு வழிகாட்டிய சிந்தனையாளர் – நிக்கலோ மாக்கியவெல்லி

    -மேகலா இராமமூர்த்தி

    துணிச்சலான அரசியல் சிந்தனைகளை வெளியிட்டதற்காக அன்றைய அரசியல் உலகில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியவர் இத்தாலியைச் சேர்ந்த நிக்கலோ மாக்கியவெல்லி (Niccolo Machiavelli).

    மாக்கியவெல்லி என்ற பெயரைக் கேட்டவுடன் அரசியல்வாதிகளும் முடிமன்னர்களும் ஏதோ பேய் பிசாசுகளைக் கண்டவர்களைப்போல் அன்று அரண்டு போனதுண்டு. கிறித்தவ மதகுருமார்கள் மாக்கியவெல்லியைப் ‘பிசாசு’ என்று அழைத்ததும் உண்டு. மேனாட்டு மத நூல்களில் பிசாசுக்கு ’நிக்’ என்ற பெயர் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

    மாக்கியவெல்லியின் முதல் பெயரான நிக்கலோ என்பதிலிருந்து தான், அந்தப் பழைய பிசாசு தனக்கு ‘நிக்’ என்ற புதிய பெயரை எடுத்துச் சூட்டிக் கொண்டது என்று வெறுப்புக் கலந்த வேடிக்கையுடன் அவரைப் பற்றி அன்று பேசியோர் உண்டு. மாக்கியவெல்லியனிசம் என்றாலே அரசியல் அயோக்கியத்தனம் என்றும் அரசியல் கொடுமை என்றும் பொருள் கூறுவோரும் உண்டு.

    மாக்கியவெல்லி இவ்வளவு பழிப்புக்கு ஆளாகும்படி என்ன செய்தார் என்று ஆராய்ந்து பார்த்தால், தம் மனத்தில் தோன்றிய கருத்துக்களை ஒளிவு மறைவில்லாமல் சொன்னார்; அவ்வளவுதான்! ”யதார்த்தவாதி வெகுஜன விரோதியாக இருப்பதில் வியப்பில்லைதானே?”

    ”மன்னர்கள் கொடுங்கோலர்களாக இருக்கவேண்டும் எனச் சொன்னார் மாக்கியவெல்லி” என்று கூறுகின்ற பலர் அவர் எந்தச் சூழ்நிலையில் அவ்வாறு இருக்கச் சொன்னார் என்பதனைக் குறிப்பிடுவதில்லை. ஓர் அரசு நிலைப்பதற்காக அதற்கு எதிராகச் சதி செய்கின்ற ஒரு சிலரைக் கொல்ல வேண்டிய தேவையிருந்தால் அவ்வாறு கொல்வது தவறன்று என்று குறிப்பிடுகின்றார் மாக்கியவெல்லி.

    ”கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
    களைகட் டதனொடு நேர்”
    (550) என்று நம் பேராசான் வள்ளுவர் கூறியிருப்பதை மாக்கியவெல்லியின் கருத்தோடு நாம் பொருத்திப் பார்க்கலாம்.

    மக்களுக்கு நன்மை செய்வதற்காக அல்லது மக்கள் நலமாக வாழக் கூடியபடி ஓர் அரசை நிலை நிறுத்துவதற்காக ஓர் அரசன் தொடக்க காலத்தில் நிலைமைக்குத் தகுந்தாற்போல் கொடுஞ்செயல்கள் புரிவதில் பிழையில்லை என்பதே மாக்கியவெல்லியின் கருத்தாக இருந்திருக்கின்றது.

    அரசியல் அறிஞராகவும், அரச தந்திரியாகவும் விளங்கிய நிக்கோலோ மாக்கியவெல்லி நாடகாசிரியர், இசைக் கலைஞர் எனும் வேறுபல திறன்களும் கொண்டவராய்த் திகழ்ந்திருக்கின்றார். 1469-ஆம் ஆண்டு மே மாதம் 3-ஆம் நாளன்று பெர்னார்டோ (Bernardo) மாக்கியவெல்லி என்பவருக்கு மகனாக இத்தாலியிலுள்ள பிளாரன்ஸ் நகரிலே பிறந்தவர் நிக்கோலோ மாக்கியவெல்லி. இவர் பிறந்தபோது பிளாரன்சில் குடியாட்சி நடைபெற்று வந்தது.

    1494-ஆம் ஆண்டு தம்முடைய இருபத்தைந்தாவது வயதில் அரசியலில் ஈடுபடத் தொடங்கினார் மாக்கியவெல்லி. பொதுவாழ்வில் புகுந்த நான்கே ஆண்டுகளில் அவர் குடியரசு அரசாங்கத்தின் செயலர் (Secretary) ஆகவும், இரண்டாவது ஆலோசனைத் தலைவராகவும் ஆனார். இப்பதவிகளில் பதினைந்து ஆண்டுகள் அவர் நிலைத்திருந்தார்.

    இதற்கிடையில் இத்தாலியில் உள்ள சிறிய அரச சபைகளுக்கும் ஐரோப்பாவில் உள்ள பல அரசுகளின் தலைநகரங்களுக்கும் பிளாரன்ஸ் அரசாங்கத்தின் தூதராகச் சென்றார் அவர். அவருடைய சாதுரியமான செயல்திறனால் பிளாரன்ஸ் குடியாட்சி பல நன்மைகளைப் பெற்றது. அவரும், பல நாடுகளுக்கும் பயணங்கள் சென்றுவந்த அனுபவத்தின் பயனாய் அரசியல் குறித்தும் ஐரோப்பிய நாடுகள் குறித்தும் நன்கு அறிந்துகொண்டார்.

    1503-ஆம் ஆண்டு இத்தாலிய அரசியல்வாதியான சீசர் போர்ஜியாவிடம் (Cèsare Borgia) தூதுசென்று திரும்பியபின்னர், தம்முடைய ஆர்வத்தை இராணுவத் துறையில் செலுத்த ஆரம்பித்தார் மாக்கியவெல்லி. இராணுவத் துறையில் அறிவையும் அனுபவத்தையும் வளர்த்துக் கொண்டபிறகு, 1506ஆம் ஆண்டு அவருக்குப் புதிய பதவியொன்றும் வழங்கப்பட்டது. பிளாரன்ஸ் அரசாங்கத்திற்கென்று மக்கள்படை ஒன்றை ஏற்படுத்துவதற்காக உண்டாக்கப்பட்ட சிறப்புப் பிரிவிற்கு அவர் செயலராக நியமிக்கப்பட்டார். புகழின் உச்சிக்கு மாக்கியவெல்லி சென்ற காலமது. அதே சமயத்தில் அவருக்கு எதிரிகளும் உருவானார்கள்.

    1512-ஆம் ஆண்டு பிளாரன்சில் குடியாட்சி அகற்றப்பட்டு பழைய அரச வம்சத்தினரான மெடிசி குடும்பத்தை (Medici family) சேர்ந்தவர்களின் ஆதிக்கத்திற்கு பிளாரன்ஸ் மீண்டும் உட்பட்டபோது, மாக்கியவெல்லி தம் பதவியினின்றும் நீக்கப்பட்டார்.

    மெடிசி குடும்பத்தினருக்கு எதிராய், அவர்களுடைய ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு அப்போது ஒரு சதி நடந்தது. அந்தச் சதியில் கலந்து கொண்டவர்களின் பட்டியலில் மாக்கியவெல்லியின் பெயரையும் சேர்த்துவிட்டார்கள் அவருக்கு வேண்டாதவர்கள். அதனை உண்மையென்று நம்பிய மெடிசி அரச குடும்பத்தினர், மாக்கியவெல்லியைப் பிடித்து 1513-ஆம் ஆண்டு விசாரணை நடத்தினர். விசாரணையின் முடிவில் அவர் குற்றமற்றவரென்று உணர்ந்து விடுவித்தார்கள். ஆனபோதும் மீண்டும் அரசியல் பணியில் அவரை அமர்த்தவில்லை.

    மாக்கியவெல்லியின் வாழ்வில் துன்பங்களின் சாயை மெல்லப் படர ஆரம்பித்தது. அவர்பட்ட துன்பங்களைத் தம்முடைய நண்பரும் உரோம் நகரத்தின் தூதருமான பிரான்செஸ்கோ வெட்டோரி (Francesco Vettori) என்பவருக்கு எழுதிய கடிதங்கள் வாயிலாக நாம் அறிந்துகொள்ள முடிகின்றது.

    அக்கடிதத்தில் தம்முடைய நாள் எவ்வாறு தொடங்கி எவ்வாறு கழிகின்றது என்பதை உணர்வுபூர்வமாய் விளக்கியிருக்கின்றார் மாக்கியவெல்லி. அதன் ஒரு பகுதியிது…

    “சூரியன் உதிக்கும்பொழுதே நான் எழுந்துவிடுவேன். எனக்குச் சொந்தமான சிறு காட்டுக்குப் போவேன். அங்கேயுள்ள மரங்களை வெட்டும்படி ஏற்பாடு செய்திருக்கின்றேன். அங்கு மரம் வெட்டுபவர்களோடு சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு, நீரோடைப் பக்கமாய்ப் போவேன். அங்கிருந்து தோப்புப் பக்கமாகச் செல்வேன். என்னுடைய மேல் சட்டைக்கு அடியில் நான் வழக்கமாகக் கொண்டு செல்லக்கூடிய கவிதை நூலை எடுத்து வைத்துக்கொண்டு படிக்க ஆரம்பிப்பேன். பெரும்பாலும் அவை மகா கவிகள் தாந்தே (Dante), பெட்ரார்க் (Petrarch) ஆகியோரின் நூல்களாகவோ, கவிஞர் டிபுல்லஸ் (Tibullus), ஓவிட் (Ovid) ஆகியோரின் நூல்களாகவோ இருக்கும். அவர்களுடைய ஆசைக் கனவுகளையும், காதல் கதைகளையும் படித்து, அவற்றை என் வாழ்க்கையோடு ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டே நீரோடைப் பக்கமாக உலவிக் கொண்டிருப்பேன்.

    மாலைக்காலம் வந்தவுடன் வீட்டிற்குத் திரும்பிச்சென்று என் படிக்கும் அறைக்குள் நுழைவேன். அப்படி நுழையுமுன், நான் தினமும் பகலில் உடுத்திக் கொண்டிருக்கும் அழுக்கும் புழுதியும் நிறைந்த ஆடைகளைக் களைந்துவிட்டு, அரசாங்க உடைகளை அணிந்துகொண்டு, முன்னோர்களான அந்தப் பெரியோர்களின் புத்தக சாலைக்குள் நுழைவேன். அங்கே அவர்கள் என்னை அன்போடு வரவேற்பார்கள். எனக்கே சொந்தமான உணவுகளை நான் அவ்விடத்தில் உண்பேன். எவற்றை உட்கொள்ளுவதற்காக நான் பிறந்திருக்கின்றேனோ அவற்றை நான் உண்பேன்.

    பிறகு ஊக்கத்துடன் நான் அவர்களோடு உரையாடுவேன். அவர்களுடைய செயல்களுக்கெல்லாம் காரணம் என்னவென்று கேட்பேன். அவர்கள் எனக்கு மரியாதை காட்டி விருப்பத்தோடு என் வினாக்களுக்குப் பதிலளிப்பார்கள்; அந்த நான்கு மணி நேரமும் என் மனக் கவலைகளையெல்லாம் நான் மறந்திருப்பேன். அந்த நேரத்தில் நான் என் வறுமையைக் கண்டு அஞ்சமாட்டேன்; சாவும் என்னைப் பயமுறுத்தாது. நான் அவர்களோடு முழுக்க முழுக்க ஒன்றி விடுவேன்.” என்று குறிப்பிட்டிருக்கின்றார்.

    தாம் பழங்காலத்து அறிஞர்களின் நூல்களைப் படிப்பதையும் அவற்றிலுள்ள கருத்துக்களைச் சுவைப்பதையுந்தான் மாக்கியவெல்லி, இப்படிக் கற்பனையாகத் தம் நண்பருக்கு எழுதியிருக்கின்றார்.

    இக்கடிதம் அவருடைய வறுமையின் ஆரம்ப காலத்தில் அவர் தம் நண்பருக்கு எழுதியது. வறுமையின் உச்சக் கட்டத்தில் அவர் எழுதியுள்ள கடிதத்தில், “என் தொண்டின் பெருமையை அறியக் கூடியவர் யாரும் இல்லையே! நான் எதற்காவது பயன்படுவேன் என்று நினைக்கக் கூடியவர் எவரும் இல்லையே!” என்று தம் கடிதங்களில் வேதனையோடு விளம்பியுள்ளார்.

    வரும்படிக்கு வழியில்லாமல் வறுமையில் உழன்றுகொண்டிருந்த அந்தக் காலத்தில்தான் மூன்று பெரிய நூல்களை எழுதி முடித்தார் மாக்கியவெல்லி. அவை: லிவியின் புத்தகங்களைப் பற்றிய ஆராய்ச்சி (The Discourses on the First ten of Titus Livy), அரசன் (The Prince), மற்றும் போர்க் கலை (The Art of War) என்பன.

    ‘லிவியின் புத்தகங்களைப் பற்றிய ஆராய்ச்சி’ என்ற நூலில் உரோம் நகரத்தின் புகழ்பெற்ற வரலாற்றறிஞரான டைடஸ் லிவியின் முதல் பத்துப் புத்தகங்களை ஆராய்ச்சி செய்திருக்கின்றார் மாக்கியவெல்லி.

    இந்த நூலில் உரோமானியரின் ஆட்சிமுறையைப் பல இடங்களில் போற்றுகின்றார் அவர். தம் காலத்தவர்கள், வரலாறு படிக்காத காரணத்தினால்தான், புகழ்வாய்ந்த அந்தக் காலத்துப் பேரரசர்கள், பெரியோர்களின் பாதையை விட்டு விலகி நடக்கிறார்கள் என்றும், அதனால்தான் சமூகத்திற்குப் பல கேடுகள் ஏற்பட்டனவென்றும் சுட்டிக் காட்டுகின்றார்.

    ’போர்க் கலை’ என்ற தலைப்பில் ஏழு புத்தகங்கள் எழுதியிருக்கின்றார் மாக்கியவெல்லி.  அவற்றில் போருக்குச் செல்லுகின்ற அரசர்களும், அரசாங்க அதிகாரிகளும் கையாளவேண்டிய தந்திரங்கள், சாமர்த்தியங்கள், கொள்கைகள் ஆகியவை விளக்கி உரைக்கப்பெற்றுள்ளன.

    மாக்கியவெல்லியின் நூல்களில் அவருக்குப் பெரும் புகழையும், கடுமையான விமர்சனங்களையும் ஒருங்கே பெற்றுத்தந்த நூல் ’அரசன்.’

    அரசன் என்ற நூலில் முடியரசுகளைப் பற்றி ஆராய்கின்றார் மாக்கியவெல்லி. அரசறிவியல் என்று சொல்லக்கூடிய முறையில் அரசியலைப் பற்றிய புதுமையான சிந்தனைகளை முதன்முதலில் இந்த நூலில் அவர் வெளிப்படுத்தியிருக்கின்றார். அவருக்கு முன்பு அரசியல் குறித்து இப்படிச் சிந்தித்தவர்கள் யாரும் கிடையாது என்றுதான் சொல்லவேண்டும். எப்பாடுபட்டேனும் அரசியலில் வெற்றியை நிலைநாட்ட வேண்டும் என்ற எண்ணத்தை இந்நூலில் விதைத்திருக்கின்றார் அவர்.

    அவற்றிலிருந்து சில கருத்துக்கள்…

    ”ஓர் அரசன் போரைப் பற்றியும், அதற்கு வேண்டிய படையமைப்பைப் பற்றியும், அந்த அமைப்பின் ஒழுங்கைப் பற்றியும் தவிர வேறு எதையும் குறிக்கோளாகக் கொள்ளவோ, நினைக்கவோ கூடாது. ஏனெனில், ஆதிக்கஞ் செலுத்தக்கூடிய ஒருவனுக்குத் தேவையான கலை போர்க்கலை ஒன்றுதான்!

    போர்களற்ற காலத்திலும்கூட அரசன் போர்ப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். செயல் மூலமாகவும், படிப்பின் மூலமாகவும் அதை அதிகப்படுத்திக் கொள்ளலாம். செயல் மூலமாகப் பயிற்சியை நடாத்துவதற்கு, அவன் தன் படை வீரர்களைத் தினமும் பயிற்சிபெறச் செய்தும், ஒழுங்கு முறையுடன் இருக்கச் செய்தும் வருவதோடு அடிக்கடி வேட்டைக்குச் சென்று தன் உடலைக் கடின உழைப்பில் பழக்கப்படுத்திக் கொள்ளவேண்டும்.

    அரசன் வேட்டைக்குச் செல்வதால் நாட்டையும், நாட்டில் உள்ள காடு மலைகளின் அமைப்பையும் பற்றிய அறிவைப் பெறுகின்றான். இவ்வாறு ஒரு நாட்டின் அமைப்பைப் பற்றிய இயற்கையறிவைப் பெற்ற ஒருவன்தான் புதிதாகக் காணக்கூடிய வேறொரு நாட்டின் இயற்கையமைப்பைப் பற்றியும் எளிதாகப் புரிந்துகொள்ள முடியும். நாட்டின் இயற்கையமைப்பு பற்றிய அறிவு நிரம்பிய அரசன், தன் எதிரியை எவ்வாறு கண்டுபிடிப்பது, எவ்வாறு களம் அமைப்பது, படை நடத்துவது, போர்த்திட்டம் வகுப்பது, கோட்டையைப் பிடிப்பது என்பன போன்ற விஷயங்களையும் நன்றாகத் தெரிந்து செயலாற்றுவான்.

    ஓர் அரசன் நல்ல குணங்கள் எல்லாவற்றையும் உடையவனாயிருப்பது போற்றுதலுக்குரியதுதான். ஆனால், மனித இயற்கை அவை எல்லாவற்றையும் கடைப்பிடிக்க அனுமதிப்பதில்லை. எனவே முன்யோசனையுள்ள அரசன் தன்மீது எவ்விதமான பழிச்சொல்லும் ஏற்படாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும். தேவைக்குத் தக்கபடி நல்லவனாகவும் கெட்டவனாகவும் நடந்து கொள்ளவும் அவன் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

    ஒவ்வோர் அரசனும் தான் கொடுங்கோலனாக மதிக்கப்படுவதைவிட அருளுடையவனாக நினைக்கப்படுவதையே விரும்ப வேண்டும். ஆயினும், அவனுடைய அருளுடைமையைத் தவறான முறையில் பயன்படுத்தாமல் கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டியதும் அவசியம்.”

    இவ்வாறு, ஓர் அரசன் வெற்றிகரமாக ஆட்சிசெய்வதற்கு வேண்டிய பல யோசனைகளும் உத்திகளும் இந்நூலில் பேசப்படுகின்றன.

    அரசியல் வெற்றிக்காகச் சூழ்ச்சிகளையும், நேர்மையற்ற முறைகளையும் கொடுமைகளையும்…ஏன் கொலைகளையும் கூடச் செய்யலாம் என்று மாக்கியவெல்லி இந்நூலில் குறிப்பிடுவது ஏற்றுக்கொள்ளத் தக்கதாக இல்லையென்றாலும், வீழ்ச்சியடைய விரும்பாத ஓர் அரசன் அவற்றைக் கையாளுவதைத் தவிர வேறு வழியில்லை என்ற சூழ்நிலைக்கு ஆட்படுகின்றபோது அவை(யும்) ஏற்றுக்கொள்ளத்தக்கவையாகவே இருக்கின்றன.

    இந்த நூலைப் படிக்கின்றபோது, வரலாற்று நூலைப் படிப்பதுபோன்ற சுவையற்ற உணர்வோ,  ஆராய்ச்சி நூலைப் படிப்பது போன்ற அலுப்போ ஏற்படுவதில்லை. மாறாகத் துப்பறியும் கதையைப் படிப்பதுபோன்ற விறுவிறுப்போடு செய்திகளைத் தந்திருக்கின்றார் மாக்கியவெல்லி.

    நிலைத்த நல்லரசு ஏற்பட்டு மக்கள் மகிழ்வோடு வாழ வேண்டும் எனும் நோக்கத்தை மையமாக வைத்துத்தான் மாக்கியவெல்லி ’அரசன்’ என்ற நூலை எழுதினார். ஆனால் அரசாங்கத்திற்கு வழிகாட்டும் நூலாக அமைவதற்குப் பதிலாக அது கொடுங்கோலர்களுக்குத் துணைபோகும் நூலாகக் கருதப்பட்டது வருந்தத்தக்கதே!

    1527-ஆம் ஆண்டு பிளாரென்ஸ் நகரம் மீண்டும் முடியாட்சியிலிருந்து விடுபட்டுக் குடியாட்சிக்கு மாறியது. ஆனால் மாக்கியவெல்லியின் வாழ்வில் அது மலர்ச்சியைத் தரவில்லை. குடியாட்சியினர் அவருக்கு எந்தப் பதவியையும் அளிக்கவில்லை. அதே ஆண்டு ஜூன் மாதம் 22ஆம் நாள் வயிற்றுவலியின் காரணமாய்த் தம் உலக வாழ்வை நீத்தார் அரசியல் அறிஞரான மாக்கியவெல்லி.

    உலகிற்குப் புதிய அரசியல் சித்தாந்தங்களை விட்டுச்சென்ற அவர் தம் குடும்பத்துக்கு விட்டுச்சென்றதென்னவோ கொடிய வறுமையை மட்டுமே. எனினும், நவீன அரசறிவியலை மேற்குலகுக்கு அறிமுகப்படுத்திய முன்னோடிகள் வரிசையில் நிக்கலோ மாக்கியவெல்லியின் பெயர் என்றும் அழியாது நிலைத்திருக்கும்.

    *****

    கட்டுரைக்குத் துணைசெய்தவை:

    1. https://en.wikipedia.org/wiki/Niccol%C3%B2_Machiavelli

    2. https://www.history.com/this-day-in-history/niccolo-machiavelli-born

    3. https://www.encyclopedia.com/people/social-sciences-and-law/political-science-biographies/niccolo-machiavelli.

    4. https://courses.washington.edu/hsteu401/Letter%20%20to%20Vettori.pdf

     

    Share
  • பேரறிஞர் அண்ணா உரை – 2 | திருவள்ளுவர் படத்திறப்பு விழா

    பேரறிஞர் அண்ணா உரை – 2 | திருவள்ளுவர் படத்திறப்பு விழா

    1967இல் கூட்டுறவு வங்கி சார்பில் நடைபெற்ற திருவள்ளுவர் படத்திறப்பு விழாவில், வள்ளுவர் படத்தைத் திறந்து வைத்து, பேரறிஞர் அண்ணா ஆற்றிய சமத்காரமான உரை இங்கே. நண்பர்கள் கேட்டு மகிழுங்கள். நல்ல சமயமிது, நழுவவிடக் கூடாது.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • Lakshmi Paatti

    Lakshmi Paatti

    Baskar Seshadri

    She is Mrs Lakshmi but fondly called as Krithika mess Patti of Madippakkam. She is above seventy and has been running a mess in that belt for quite some time. Her husband was the pillar of strength for her endeavor and they both were running the mess and many people used to eat in that mess for the Patti and The food purely out of affection and respect for the age and Pricing.

    She lost her daughter sometime back and the couple was struggling to make out both ends meet during the covid times all these days. People who live in that area may know her for her smiling and courteous service.

    Unfortunately months back her husband too died and she is being now supported by a known person to run the mess with Patti Heading the cooking area.

    My Friend Rangabharati who shared this news with me told that he went there with his friend  Mr Sai Santhosh.

    I shared in turn this with my friend  Mr Muralidaran KN and he extended his help through his friend Mr Om Sai and had wired me a sum of Rs 5000/ which was given to her  through a local resident Mrs Nagarajan. And Nagarajan fondly called as Raja was my class mate in college days and i thank him for his help in hand delivering the same to Paatti .

    Thanks to Rangabharathi, Sai Santhosh, Om Sai and Murali for the timely action. Will share more on this based on the response from the friends along with the photos and donations if any.

    Share
  • சேக்கிழார் பாடல் நயம் – 145 (அப்பதியில்)

    சேக்கிழார் பாடல் நயம் – 145 (அப்பதியில்)

    திருச்சி புலவர் இராமமூர்த்தி

    13. மானக்கஞ்சாற நாயனார் புராணம்

    வரலாறு

    கஞ்சாறூர் என்ற ஊர், தலைச்சடைமேல் கங்கையணிந்த பெருமான் விரும்பிய  ஊராகும். நூல்கல் காட்டும்  அறவழியை உணர்ந்த புலவர் போற்றும் சிறப்புடையது. கொம்புகளில் கட்டிய  கூடுகளிலிருந்து தேன் பொழியப்  பழுத்த கனிகளின்  சாறு ஒழுகும்  வயல்களின் கரும்புகளின் சாறு  மணக்கும் ஊராகக் கஞ்சாறூர் விளங்கியது.

    நீலநயனங்கள் உடைய உழத்தியர்கள் களைபிடுங்கியபோது தப்பித்த கழுநீர்ப்பூக்கள் சிவந்து மலர்ந்தன. அதனைக் கண்டு நெற்கதிர்கள் தலை வணங்கின! இவ்வாறு மண்வளம் சிறந்த ஊர் கஞ்சாறூர். அங்கே  மேகம்போன்ற கூந்தலின்  இயல்பைக்  கண்ட மயில்கள் தம் தோகையை விலக்கி ஒதுங்கின. வான்மதியைத்  தோற்பிக்கும் முகத்தியராகிய உழத்தியர் கால்களைக் காட்டும் வயல்கள்  கதிர் காட்டின.

    அவ்வயலில் விளைந்த செந்நெல்லின் கதிர்கள் மேலும் வளர்ந்து அருகிலுள்ள வேலியில் வளர்ந்த பாக்கு மரங்களை உரசிய காட்சி, அம்மரங்களை அறுப்பது போல விளங்கின.  அருகில் வீட்டு மாடங்களில் வெயிலின் ஒளி வீசியது. அங்கு தோரணங்களாகிய துணிக்கொடிகளுடன், பூரண கும்பம் ஏந்திய  பெண்கொடிகளும், வீதிகளில்  சேர்வோரை மயக்கும்!

    வீடுகளில், அறவழியில்  பொருளீட்டும் உழவுத்தொழில் சிறந்தது. அங்கே மயிலனைய பெண்டிர் நடனமாட, முழவதிர்ந்து விழாக்கோலம் புனைந்து வீதி விளங்கியது.

    இந்த வருணனை மானக்கஞ்சாறர்  இல்லத்தில் நிகழும் திருமண விழாவை நமக்கு உணர்த்துகிறது.

    பாடல்

    அப் பதியில் குலப் பதியாய் அரசர் சேனா பதியாம்
    செப்ப வரும் குடி விளங்கத் திரு அவதாரம் செய்தார்;
    மெய்ப் பொருளை அறிந்து உணர்ந்தார்; விழுமிய வேளாண் குடிமை
    வைப்பு அனைய மேன்மையினார்; மானக்கஞ் சாறனார்.

    பொருள்

    உண்மைப் பொருளை அறிந்து அதனை எப்போதும் சிந்தித்து உணர்வினிற் கொண்டவரும், தூய வேளாள மரபின்சேமவைப்புப்போன்ற மேன்மையுடையவருமாகிய மானக்கஞ்சாறனார்,  அந்தத் தலத்தில் வழிவழி வாழ்கின்ற மேம்பாடுடையவராய் அரசரது சேனாபதியாகிய சுட்டிக் கூறத்தக்க குடிவிளங்கும்படி திருவவதாரஞ் செய்தனர்.

    இப்பாட்டினால் நாயனாரது மரபும், மரபின் உட்குடியும், உள்ள நிறைவும், வழிவழி வாழ்க்கையும் முதலிய சிறப்புக்கள் பலவும் ஒருங்கு பேசப்பட்டன.

    அறிந்து உணர்ந்தார் என்ற தொடர்  அறிதல் – உணர்தல் ஆகிய  வெவ்வேறு உணர்ச்சி நிலை குறித்தன. அறிந்து என்றதனாற் கேட்டலும் சிந்தித்தலும், உணர்ந்து என்றதனாற் தெளிதலும் நிட்டை கூடலும் உணர்த்தப்பட்டன. மெய்ப்பொருளானது ஞானேந்திரிய அறிவு அந்தக்கரண அறிவு என்னும் பாசவறிவினாலும், உயிரறிவு எனப்படும் பசு அறிவினாலும் அறியப் படாதாயும், சிவஞானமாகிய மெய்யுணர்ச்சியால் மட்டும் அறியப் படுவதாயும் உள்ள பொருளென்பது இங்குக் குறிக்கப்பட்டது.

    அவ்வூரில் வழிவழி நிலைத்த குடிகளுள் முதன்மையுடையவர். இக்காரணம்பற்றியே முதன்மையார், முதலியார் என்ற குடிப்பெயர்கள் போந்தன என்ப. இவர்களுக்கு ஊராண்மை நாட்டாண்மை முதலிய ஊர் முதன்மைப் பட்டப் பெயர்களும் வழங்கும். இவர்களின் குடிச்சிறப்புக்களை ஆசிரியர் பல இடத்தும் விதந்து பேசுகிறார். அரசர் சேனாபதியும் செப்பவருங் குடி – அரசரிடத்துச் சேனாபதியாகும் தொழிலும் வேளாளர்க்கு உரியது. இது இவர்களுட் சில குடிகளில் வழிவழியாய் வருவதொன்றாதலின் இவ்வாறு கூறினார். இந்நாயனாரது மகளாரை மணம் புரியவந்த ஏயர்கோனாரும் இதுபோலவே சேனாபதிக்குடியினில் வந்தவர் என்பது “ஓங்குகுல மரபினராய்” , “எந்தமது மரபினுக்குத் தகும்பரிசா லேயுமென” என்றவற்றாலும், ஏயர்கோனார் புராணத்தினுள் “ஏயர்கோக்குடிதான்”, “மன்னிநீடிய வளவர் சேனாபதிக்குடியாம்”  என்று கூறுவதனாலும் விளங்கும்.

    திலகவதியம்மையாருக்கு மணம்பேசிய கலிப்பகையாரும் அரசர் சேனாபதியாராகப் போர்புரிந்து உயிர் கொடுத்துப் புகழ் கொண்ட சரிதத்தையும் இங்கு நினைவு கூர்க. இதனை “வேந்து விடுதொழிலிற் படையுங் கண்ணியும், வாய்ந்தன ரென்ப வவர்பெறும் பொருளே”  என்ற தொல்காப்பியத்துள்ளும் காண்க.

    குடிவிளங்க – இவர் அவதரித்த குடி இவரால் விளக்கமடைய, குலவிளக்கு, குலதனம் முதலிய வழக்குக்கள் காண்க. ஒரு குலத்தில் வந்த பெரியார்  ஒருவரைச்  சுட்டி அக்குலம் பெருமையடைதல் வழக்கிற் காண்க. ஆசிரியர் சேக்கிழாரைக் குடிப்பெயராலே வழங்குவது இதனை விளக்கும்; “இருவர்ச் சுட்டிய பல்வேறு தொல்குடி” என்ற திருமுருகாற்றுப்படையும் சிந்திக்க. “கானவர்குலம் விளங்கத் தத்தைபாற் கருப்ப நீட”  என்றதும்  காண்க.

    விழுமிய வேளாண் குடிமை வைப்பு – வேளாண் குடியின் விழுப்பமாவது வாய்மை திறம்பாமையும், நினைப்பினாலும் தீமையில்லாமையும், தொழிலால்  தூய்மையும், கரவா வள்ளண்மையும் ஆம். “தீயவென்பன கனவிலு நினைவிலாச் சிந்தைத் தூய மாந்தர்” “தம்முரையும் வணிகனுக்கொருகால், சொன்ன  மெய்ம்மையும் தூக்கியச் சொல்லையே காக்கப், பெற்ற மேன்மை” , “நம்பு வாய்மையினீடு”,”அனைத்துவித நலத்தின்கண் வழுவாத நடைமரபிற் குடி”  என்பன முதலாக ஆசிரியர் ஆங்காங்கும் காட்டிப் போந்தவை காண்க. “வேளாளரென்றவர்கள் வள்ளன்மையால் மிக்கிருக்குந், தாளாளர்”, “இன்மையாற் சென்றிரந்தார்க் கில்லையெனா தீந்துவக்குந் தன்மையார்”, என்ற ஆளுடைய பிள்ளையார் தேவாரமுங் காண்க.

    விழுமம் – நன்மை (விழுமியார் – நல்லோர்). குடிமை வைப்பு அனைய – குடிக்குச் சேம நிதிபோல. முயற்சியின்றி யாவரும் பயன்பெறக் கூடியதும் எடுக்கக் குறையாததும் சேம நிதியாம். இவரது கரவாத வள்ளன்மை குறித்தது.

    மேன்மையினார் மானக்கஞ்சாறனார். இந்நாயனாரது இயற்பெயர் விளங்கவில்லை. மேன்மையினாராதலின் இப்பேர் பெற்றார் என்று பேர்ப்பொருள் விளக்கம் செய்தவாறு.

    இப்பாடலில்  மானக்கஞ்சாறனார்  பண்பும், ஒழுக்கமும் அவரில்லத்திலும்  வீதியிலும் அனைவரும் ஆடிப்பாடி விழாக்கோலம்  கொண்டதும், இதே வரலாற்றின்  முன்னோட்டமாக  விளங்கின!

    Share
  • கடனுக்குக் காப்பீடு தேவையா?

    கடனுக்குக் காப்பீடு தேவையா?

    கடனுக்குக் காப்பீடு தேவையா? அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர் ராமகிருஷ்ணன் நாயக் விளக்குகிறார். உங்களுக்கு ஏதும் ஐயம் இருந்தால் கேளுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • பேரறிஞர் அண்ணா உரை | இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு

    பேரறிஞர் அண்ணா உரை | இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு

    சென்னையில் 1968ஆம் ஆண்டு நடைபெற்ற இரண்டாவது உலகத் தமிழ் மாநாட்டில், பேரறிஞர் அண்ணா ஆற்றிய தலைமையுரை இங்கே.

    இந்தப் பதிவு, 2008ஆம் ஆண்டு, அண்ணாகண்ணன் ஆசிரியராக இருந்து தயாரித்த, தமிழ் சிஃபி அண்ணா நூற்றாண்டுச் சிறப்பிதழில், இணையத்தில் முதன்முதலில் வெளியானது.

    நன்றி – வீ.சு.இராமலிங்கம், செம்பியன் இராமலிங்கம், அறிஞர் அண்ணா பேரவை

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • அருள்தரும் வனபத்ரகாளியம்மன் பேச்சியம்மன் திருக்கோயில்

    அருள்தரும் வனபத்ரகாளியம்மன் பேச்சியம்மன் திருக்கோயில்

    முனைவர்  வே. விக்னேசு,
    தமிழ்  உதவிப்பேராசிரியர்,
    பூ. சா. கோ. கலை அறிவியல் கல்லூரி,
    கோயம்புத்தூர் 641014.
    9597203214.

    “ஓம் காளி! வலிய சாமுண்டீ!
    ஓங்காரத் தலைவி! என் இராணி!”
                                                                       – பாரதியார்

    தோற்றுவாய் 

    பார்க்குமிடமெங்கும் ஒரு நீக்கமற நிறைகின்ற பரிபூரணானந்தமான இறைவன், தம்மை நாடிவரும் அடியார்கட்கும் பக்தர்கட்கும் அருள்புரியும் நிலைகளாக விளங்குபவையே திருக்கோயில்களாம். அவ்வகையில், தம்மை உள்ளன்புடன் வணங்கும் பக்தர்கட்கு அருள் செய்து காக்கும் வண்ணம் ஆதியும் அந்தமும் இல்லாத பரம்பொருள் தம் அருவநிலையிலிருந்து திரிந்து பல்வேறு உருவத் திருமேனிகளை ஏற்றக்கொண்டு எழுந்தருளி அருள்பாலிக்கும் திருத்தலங்கள் பலவாம். அவற்றுள் எல்லாம் வல்ல சக்தியாக, வேண்டியார்க்கு வேண்டியாங்கு அருள்வழங்கும் அருள்மிகு வனபத்ரகாளியம்மன் பேச்சியம்மன் திருக்கோயிலும் ஒன்றாம். அக்காள் தங்கை வடிவினில் அம்மை அருள்பாலிக்கும் இத்திருக்கோயிலின் வரலாற்றையும் வழிபாடுகளையும் இக்கட்டுரை சுருங்க விளக்குகிறது.

    திறவுச் சொற்கள்வனபத்ரகாளியம்மன், பேச்சியம்மன், காளி, திருக்கோயில், கோயம்புத்தூர்

    திருக்கோயில் அமைவிடம் 

    “யாதுமாகி நின்றாய் காளி! எங்கும் நீ நிறைந்தாய்
    தீது நன்மை யெல்லாம் நின்றன் செயல்களன்றில்லை”

    என்று மகாகவி பாரதியாரால் போற்றப்பட்ட காளி அன்னை, கொங்கு மண்டலத்தில் கோவையம்பதியில் உக்கடம் பகுதியில் ராஜு செட்டியார் வீதியில், கன்னட நாயக்கர் வாலிபர் சங்கத் திருமண மண்டபத்தின் பின்புறம் கோழிப்பண்ணை என்னுமிடத்தில் “அருள்மிகு வனபத்ரகாளியம்மன் பேச்சியம்மன் திருக்கோயில்” என்னும் தலத்தில் வீற்றிருந்து அருள்வழங்கி வருகின்றனள்.

    ஆதிமூலத்தானம் 

    ஓங்காரத் தலைவியான வனபத்ரகாளியம்மன் பல்லாண்டுகட்கு முன்னர், கோயம்புத்தூரின் மேற்கே வெள்ளியங்கிரி செல்லும் வழியில், கரடிமடை என்னும் ஊரினில், அய்யாசாமி மலை எனப்படும் கருமலையில் கரும்பாறை அருகிலுள்ள கன்னிமார் சுனையின் அருகில் வனக்காளி என்னும் திருப்பெயருடன் சுயம்பு வடிவில் அருள்புரிந்து வந்தனள். 1930-ஆம் ஆண்டளவில் பொன்னம்மாள் என்னும் பெண்மணி அவ்விடத்திற்கு விறகு சேகரிக்கச் சென்றபொழுது, அன்னை வனக்காளி, அந்தப் பெண்மணியின் மேல் இறங்கிவிடுகின்றனள். பின்னர் அந்தப் பெண்மணியின் மேலுற்ற வனக்காளி, கரும்புக்கடை என்னும் பகுதியில் நொய்யலாற்றங்கரையில், சுடுகாட்டின் அருகில் தான் வீற்றிருப்பதை ஊரார்க்கு உணர்த்தினள்.

    வனக்காளியின் அருள்வாக்கின்படி நாகப்பச்செட்டியார், மருதாசல செட்டியார், முருகேசன், காரமடைநாயக்கர் என்னும் அன்பர்களின் உறுதுணையுடன் பொன்னம்மாளும், நஞ்சுண்ட நாயக்கர் பூசாரியும் இணைந்து, அம்மன் தான் வீற்றிருப்பதாக உணர்த்திய அவ்விடத்தில் சுயம்பு வடிவில் வனக்காளியையும், பேச்சியம்மன்னையும் பிரதிட்டை செய்தனர். அழகிய எழில் சூழ்ந்த நொய்யலாற்றங்கரையில்; வெற்றிலைக்கொடிக்கால் தோட்டம் அருகில்; கரும்புகள் அடர்ந்த காட்டினில் எளிய மேடையின் மீது வனக்காளியும் பேச்சியம்மனும் வீற்றிருந்து தம்மை நாடிவரும் பக்தர்கட்கு அருள் சுரக்கலாயினர். இங்ஙனம் அருள்வழங்கும் அன்னை வனக்காளி மற்றும் பேச்சியம்மனின் ஆதிமூலத்தானம் கருமலையிலுள்ள கன்னிமார் சுனைப் பகுதியேயாம்.

    திருக்கோயில் இடமாற்றம் 

    வனக்காளியும் பேச்சியம்மனும் அக்காள் தங்கையாக வீற்றிருந்து அருள்புரிந்து வர, அம்மனால் நலன் பெற்றோர் பலரும் ஒன்றிணைந்து அம்மன் வீற்றிருக்கும் தலத்தினை விரிவுபடுத்த எண்ணினர். அதன்படி, மட்டைசாலையின் மீது நாணல் புல் வேயப்பட்டிருந்த அமைப்பினை மாற்றி, ஓடுகளால் வேய்ந்தனர். பின்னர் மக்களின் வரவு அதிகரித்தமையானும், இடப்பற்றாக் குறையினானும் கோயிலை மாற்றி அமைக்க வேறிடம் பார்க்க வேண்டியதாயிற்று.

    தற்போது அம்மனின் திருக்கோயில் அமைந்துள்ள இடம் தெரிவு செய்யப்பெற்றது. இவ்விடம் பொன்னம்மாளின் தங்கை ருக்மணி அம்மாளுக்குரியதாம். ஆகலின், அவ்வம்மையாரிடம் இடம் கேட்கப்பட்டது. அவ்வம்மையார் நிலத்தைக் கொடுக்கத் தயங்கினாராம். அன்று இரவே, அவ்வம்மையாரின் கனவில் வனக்காளி நெருப்பின் மீது வீற்றிருப்பதாகக் காட்சியளித்தனள். நடுக்குற்ற அவ்வம்மையார், மறுநாளே அவ்விடத்தினைத் திருக்கோயிலுக்கே வழங்கிவிடுகிறார்.

    இங்ஙனம் தெரிவு செய்யப்பெற்ற அவ்விடத்திற்கு வனக்காளி, பேச்சியம்மன் இடமாற்றம் செய்யப்பட்டனர். சுற்றிலும் மண்சுவர் அமைத்து ஓலையால் வேய்ந்து, அதனுள் வனக்காளியையும் பேச்சியம்மனையும் பிரதிட்டை செய்தனர். ஊருக்குள் இடமாற்றம் செய்யப்பெற்றமையின் வனக்காளியை வனபத்ரகாளி என்று அழைக்கலாயினர். பொன்னம்மாள் அம்மையாரும், நஞ்சுண்ட நாயக்கர் பூசாரியும் திருக்கோயில் பூசைகளைச் செய்து வந்தனர். இவ்விருவரின் மறைவுக்குப்பின் பொன்னம்மாளின் வளர்ப்பு மகன் காளப்பன் அவர்களே தலைமைப் பூசாரியானார்.

    கற்சிலை வடித்தல் 

    கருமலையினை மூலத்தானமாகக் கொண்ட அன்னை வனபத்ரகாளிக்கும் பேச்சியம்மனுக்கும் கற்சிலை வடிவமைக்க எண்ணிய பூசாரி காளப்பன் அவர்களும் அன்பர்களும், கோவை அவினாசிக்குச் சென்று பலசிற்பசாலைகளைக் கண்டு, தாங்கள் எண்ணியாங்கு, அஃதாவது எட்டுக்கரங்களுடன், அமர்ந்த கோலத்தில், முகத்தினில் அமைதிதவழும் வண்ணம் உள்ள காளிசிலையைத் தேடினர்.

    ஆயினும் எச்சிற்பச் சாலையிலும் அவர்கள் எண்ணியாங்கு சிலை தென்பட்டிலது. ஆகலின், அவினாசியப்பரை வழிபட்டு வேண்டி நின்றனர். அங்ஙனம் வழிபட்டுக் கோயிலை விட்டு வெளியே வரும் பொழுது மயில் ஒன்று அவர்களின் தலையினை ஒட்டிப்பறந்து சென்று, கோயில் எதிர்புறம் உள்ள சிற்ப சாலையின் மேலுள்ள மூங்கில் கம்பின் மீது அமர்ந்து அகவியதாம். இதனைக்கண்ட இவர்கள், இந்நிகழ்வினை அம்மன் அருளாசியாகவே எண்ணி, அந்தச் சிற்பச்சாலையை அடைந்து தாங்கள் எண்ணிவந்த காளியின் சிலை உள்ளதா என வினவினர்.

    அச்சிற்பச்சாலையின் உரிமையாளரும் சிறந்த சிற்பியுமான செல்வராஜ் சிற்பி என்பவர் ஒரு சிலையைச்சுட்டி, இச்சிலை கல்கத்தா கொண்டு செல்வதற்காக இரண்டாண்டுகட்கு முன்பு ஒருவரால் முன்பணம் கொடுத்து, சிலை வடிவமைக்கத் தொடங்கப்பட்டது. ஆயின், அவர் வராமையின் சிலைவடிமைக்கும் பணி இடை நிறுத்தப்பட்டது. தங்களுக்கு வேண்டுமாயின், இச்சிலையை முழுமைசெய்து தருவேன். தவிர, தாங்கள் எண்ணி வந்தவாரே இச்சிலையும் எட்டுக்கரங்களுடன் அமைக்கத் தொடங்கப்பட்டது என்று கூறுகிறார். இதனைக்கேட்ட பூசாரி காளப்பன் அவர்களும் அன்பர்களும் அம்மையின் திருவருளை நினைந்து அகமகிழ்ந்து முன்பணமாக ஐந்நூறு ரூபாயைக் கொடுத்து ஒப்புதல் அளித்துவிட்டு மகிழ்வோடு திரும்பினர். அங்ஙனமே, கையில் குழந்தையுடன் பேச்சியம்மன் சிறபம் ஒன்றையும் வடிவமைக்கக் கூறினர்.

    சிலை எடுத்து வரும் நிகழ்வு

    சிலை வடிவமைக்கக் கூறிய பின்னர் அன்பர்கள் உதவியால் வாராவாரம் ஐந்நூறு ரூபாயைக் கொண்டு சென்று சிற்பியிடம் கொடுத்தனர். மூன்று மாதத்திற்குப் பிறகு நான்காயிரம் ரூபாய் கொடுத்து சிலையை எடுத்துவரத் திட்டமிட்டனர். அதன்படி,ஒரு நன்னாளில் பூசாரி காளப்பன், அவரின் மனைவி நாகலட்சுமி, அன்பர்கள் என முப்பதின்மர் அவினாசி சிற்பச்சாலை சென்றடைந்தனர்.

    சிலையை எடுத்து வருவதற்கு முன்னர் செல்வராஜ் சிற்பி சிலைகளுக்குப் பூசை செய்யத் தொடங்கினார். ஆயின், அவரால் பூசை செய்ய இயலவில்லை. ஆகலின், பூசாரி காளப்பன் அவர்களையே பூசை செய்யும் படிக்கூற, அவரும் பூசை செய்தார். பூசை முடிந்த வேளையில், மஞ்சள் பட்டணிந்து, கழுத்தில் அழகிய மாலையுடன் அம்மன் ஆகாயத்திலிருந்து சிலைக்குள் இறங்கியதாக அரிய தெய்வீகக் காட்சி அங்குக் குழுமியிருந்தவர் ஐவரின் கண்களுக்குக் கிட்டியது. இக்காட்சியைக்கண்ட ஐவரும் அம்மையின் அருட்திறத்தை எண்ணி வியந்து தாம்கண்ட அரிய காட்சியைத் தம்முள் பரிமாறிக் கொண்டனர்.

    சிற்பியின் கூற்று

    பூசை முடிந்தபின் செல்வராஜ் சிற்பி தான் வடிவமைத்த காளி சிற்பத்தின் சாத்திரங்களைக் கூறினார். அதன்படி, இச்சிலையைக் கொண்டு சென்று கோபுரம், விமானம் கொண்ட கோயிலில் நீங்கள் பிரதிட்டை செய்திடினும் ஐந்தாண்டுகட்கு பின்னர் மீண்டும் கோயிலைப் புதுப்பித்து, மறுபிரதிட்டை செய்வீர்கள். தவிர, நூறு ஆண்டுகள் வரை இச்சிற்பத்திற்கு சக்தி இருக்கும். இவ்அம்மனைத் தரிசிக்க வெளியூர் பக்தர்கள் அதிகளவில் வருவர் என்பது இச்சிற்ப சாத்திரப்படித் தெரிகிறது என்பது சிற்பியின் கூற்றாகும்.

    சிலைப் பிரதிட்டை

    அவினாசியிலிருந்து வடிவமைத்துக் கொண்டு வரப்பெற்ற வனபத்ரகாளியம்மன், பேச்சியம்மன் சிற்பங்களை சுற்றிலும் செங்கல் சுவரும் ஓடுகளால் வேயப்பட்ட கட்டடத்தினுள் அந்தணர்களைக் கொண்டு உரிய பூசைகளைச் செய்து பிரதிட்டை செய்தனர். முன்பிருந்த சுயம்புகளையும் இச்சிலைகளின் கீழே பிரதிட்டை செய்தனர். இங்ஙனம் பிரதிட்டை செய்யப்பெற்ற அம்மைக்கு மூன்று வேளை பூசைகள் சிறப்பாக நடத்தப் பெற்று வரலானது. பக்தர்களும் அதிக அளவில் வந்து அம்மையின் அருள் பெற்றனர். சிற்பியின் கூற்றுப்படி, டெல்லி, பெங்களூர், மைசூர், சென்னை போன்ற இடங்களிலிருந்து அதிகளவில் பக்தர்கள் வருகை புரிந்து அம்மையின் அருள் வேண்டி நன்மைகளடைந்தனர்.

    அம்மன் நினைவூட்டுதல்

    வனபத்ரகாளியம்மன் பேச்சியம்மன் சிலைகள் பிரதிட்டை செய்யப்பெற்று ஐந்தாண்டுகள் நிறைவடைந்த வேளையில், வனபத்ரகாளியம்மன் பேச்சியம்மன் இருவர் சிலைகளின் கண்களினின்றும் நீர் வரத்தொடங்கிற்று. இக்காட்சியைக் கண்ட பூசாரி காளப்பன் அவர்களும் அன்பர்களும் பக்தர்களும் ஏதோ தீயது நிகழ்ந்து விட்டதோ என அஞ்சி நடுக்குற்று, அம்மனிடம் அருள் வாக்குக்கேட்டு இதற்குத் தீர்வு வேண்டி நின்ற பொழுது, அம்மன் தன் அருள்வாக்கில், “இன்றோடு ஐந்தாண்டுகள் நிறைவடைகின்றன. மறுபிரதிட்டை செய்தாக வேண்டும். பணியைத் தொடங்குங்கள்; மக்களை யான் திரட்டித் தருவேன்” என்று உரைத்தனள். தன் பிள்ளைகள் மறந்தாலும் உரிய நேரத்தில் நினைவூட்டிய அன்னையின் திருவருட் கருணையை நினைந்துருகிய அன்பர்கள் அன்னையின் அருள்வாக்கின்படி திருக்கோயிலைப் புதுப்பிக்கும் பணியைத் தொடங்கினர்.

    குடமுழுக்கு

    தடுத்தாட்கொண்ட அம்மையின் அருட்செல்வத்தை நினைந்து நினைந்து உருகும் அடியார் பலரும் ஒன்று கூடி, திருக்கோயிலைப் புதுப்பிக்கும் பணியைத் தொடங்கலாயினர். அதன்படி, வாம்டெக்ஸ் வெங்கடாசலம், பெரியசாமி, வக்கீல் அசோகன், இராமசாமி, சங்கர் என்னும் அன்பர்களின் பெருமுயற்சியால் கருவறையும் விமானமும் முன்மண்டபமும் கட்டி நிறைவு செய்யப்பெற்றன. இக்கட்டுமானப் பணியில், திருக்கோயில் பூசாரிகாளப்பன், அவரின் துணைவியார் நாகலட்சுமி, அவர்தம் மக்கள் கனகராஜ், கார்த்திகேயன் ஆகியோர் கல்லும் மண்ணும் சுமந்து அல்லும் பகலும் ஓய்வு ஒழிவின்றி உழைத்தனர். இப்பணியில் அவர்களின் உழைப்பு பெரிது; மிகப்பெரிது.

    இங்ஙனம் இவர்களின் உழைப்பாலும் பல அன்பர்களின் முயற்சியாலும் கட்டப்பெற்ற அருள்மிகு வனபத்ரகாளியம்மன் பேச்சியம்மன் திருக்கோயிலின் குடமுழுக்கு ஸ்ரீமுகவருடம் பங்குனிமாதம் 14-ஆம் தேதி (27.03.1974) ஞாயிற்றுக்கிழமை, பௌர்ணமி திதியும், உத்திர நட்சத்திரமும் கூடிய நன்னாளில் குன்றாச் சிறப்புடன் இனிதே நடைபெற்றது. இக்குடமுழுக்கின் பொழுது விநாயகர், பாலமுருகன், ஓங்காரேசுவரர், துர்க்கை, மாரியம்மன், மாகாளியம்மன், கன்னிமார், நவநாயகர் ஆகிய உபதெய்வங்களும் பிரதிட்டை செய்யப்பெற்றன. தவிர, இக்குடமுழுக்குப் பெருவிழா கௌமார மடாலய சுந்தரசுவாமிகளின் தலைமையில், சந்திரசேகர சிவாச்சாரியார் அவர்களால் வேள்விச்சாலை பூசனைகள் செய்யப்பெற்ற சிறப்பினதாம். இத்திருக்கோயில் கட்டுமானத்தில் அஃதாவது, விமானம், கருவறை, மகாமண்டபம், மடப்பள்ளி என்பன கட்டப்பட்டதில் வாம்டெக்ஸ் திரு.யு. வெங்கடாசலம் அவர்களின் சீரிய முயற்சி அறிந்து போற்றத்தக்கதாம்.

    இத்திருக்கோயிலின் இரண்டாம் குடமுழுக்குப் பெருவிழா 20.01.2007-ஆம் நாள், கௌமார மடாலய குமரகுருபர சுவாமிகள் மற்றும் ராஜராஜேஸ்வரி மடாலய விஜயராகவ சுவாமிகளின் தலைமையில், ராஜசர்மா அவர்கள் வேள்விச்சாலைப் பூசனைகள் செய்ய இனிதே நடைபெற்றது.

    தெய்வ அமைப்பு

    வனபத்ரகாளியம்மன் பேச்சியம்மன் திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள தெய்வங்களின் அமைப்புகளைப் பற்றி அறிந்து கொள்வதும் இன்றியமையாததாம்.

    வனபத்ரகாளியம்மன்

    திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள வனபத்ரகாளியம்மனின் சிலை ஆதாரபீடத்துடன் சேர்;ந்து ஆறேமுக்கால் அடி உயரமும், ஆதார பீடமின்றி, சிலை மட்டும் நான்கரை அடி உயரமுடையதாம். சிற்ப சாத்திரத்தின்படி, வனபத்ரகாளியானவள் எட்டுக்கரங்களுடனும் திரிசூலத்தை உயர்த்திப்பிடித்துக் கீழ்நோக்கிப் பிரயோகிக்கும் நிலையிலும், வலக்காலை பீடத்தின் மேல் உயர்த்தி வைத்தும், இடக்காலைத் தொங்க விட்டநிலையிலும் கோரைப் பற்களுடனும் உக்கிர நிலையில் இருப்பள். ஆயின், இத்திருக்கோயில் மக்கள் வசிக்கும் பகுதியில் அமைந்துள்ளமையின் சிலை வடிவமைக்கும் பொழுதே அம்மையின் வடிவம் எட்டுக்கரங்களுடன் இருப்பினும் அமைதியான நிலையில் அமைந்திருக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்ளப்பட்டதற்கிணங்க, வனபத்ரகாளியின் சிலை அமைதி தவழும்படி வடிக்கப்பட்டுள்ளது.

    அன்னை வனபத்ரகாளி எட்டுக்கரங்களுடன் வலக்காலைப் பீடத்தின் மேல் மடித்து வைத்தும் இடக்காலைத் தொங்கவிட்ட நிலையிலும் கோரைப்பற்களின்றி அமைதியே உருவாய்க் காட்சி தருகின்றனள். அன்னையின் தலைக்குப்பின் அக்கினிச்சுடரும், காதுகளில் மகரகுண்டலங்களும் அணி செய்கின்றன. எண்கரங்களுள் வலப்பக்கக் கரங்களில் திரிசூலம், உடுக்கை, சிறுகத்தி, அசுரனின் தலை ஆகியனவும், இடப்பக்கக் கரங்களில் அக்கினிச்சட்டி, கேடயம், மணி, கபாலம் என்பனவும் விளங்குகின்றன. எட்டுக்கரங்களிலுமுள்ள ஆயுதங்கள் யாவும் இயல்பாகப் பிடித்த நிலையிலேயே உள்ளன. குறிப்பாக, திரிசூலம் பிரயோகிக்கும் நிலையின்றி, இயல்புநிலையில் பிடித்தவாறே உள்ளமை குறிப்பிடத்தக்கதாம்.

    அன்னை தன்னுடைய இடக்காலை அசுரனின் தலைமீது ஊன்றியுள்ளனள். எட்டுக்கரங்களில் ஆயுதங்கள் ஏந்தியவளாக அன்னை விளங்கிடினும், அவளுடைய கண்கள் அன்பைப் பொழிவனவாய்க் கண்டாரை ஈர்க்க வல்லனவாய் இலங்குகின்றன. அங்ஙனமே, அன்னையின் முகம் அமைதியே உருவாய்; பெண்மையின் பொலிவுகாட்டுவதாய்; மெல்லிய புன்னகையுடன் எழிழுடையதாய் விளங்குகிறது.

    அன்னை வனபத்ரகாளியம்மன், பிறவுயிர்க்குத் துன்பம் விளைவிப்பவரை அழிப்பவளாகவும், உள்ளன்போடு நினைந்துருகும் அடியார்க்கு அருளையும் அன்பையும் வாரிவழங்குபவளாகவும் திகழ்கின்றனள் என்பதையே அன்னையின் இத்திருவடிவம் நமக்குணர்த்துகிறது என்பதில் ஐயமில்லை. தவிர, நொய்யலாற்றங்கரையில் கரும்புக்காட்டினில் பிரதிட்டை செய்யப் பெற்றிருந்த சுயம்பும் அன்னை வனபத்ரகாளியின் கீழே பிரதிட்டிக்கப்பட்டுள்ளது என்பதும் அறியத்தக்கதாம்.

    பேச்சியம்மன்

    பிள்ளைப்பேறு இல்லாதவருக்கு மக்கட் செல்வத்தை வழங்குபவளான பேச்சியம்மன் சிலை, ஆதாரபீடத்துடன் சேர்ந்து நான்கே முக்கால் அடி உயரம் உடையது. அன்னை பேச்சியம்மன் இடது காலை மடித்து, வலக்காலைத் தொங்கவிட்ட நிலையில் நான்கு திருக்கரங்களுடன் காட்சி தருகின்றனள். அன்னையின் மேல்வலது திருக்கரம் திரிசூலத்தையும் மேல்இடது திருக்கரம் உடுக்கையையும் பிடித்துள்ளது. கீழ்வலது திருக்கரம் எலுமிச்சைப் பழத்தைப் பிடித்த வகையிலும் அமைந்துள்ளது. அன்னை தன்னுடைய இடக்காலின் தொடைப் பகுதியின் மீது சிறிய குழந்தையை அமர்த்தித் தன்னுடைய கீழ் இடது திருக்கரத்தால் அக்குழந்தையைப் பிடித்துள்ளனள்.

    அங்ஙனமே, அன்னை தன்னுடைய வலக்காலைத் தாமரை மலரின் மீது ஊன்றியுள்ளனள். அன்னை தன் கூந்தலை முடிந்து வலப்பக்கம் கொண்டையிட்ட அமைப்புடன் அன்பே உருவாய் அமைதி கொஞ்சும் வடிவுடன் திகழ்கிறாள்.

    சகஸ்ரலிங்கேசுவரர்

    இத்திருக்கோயிலின் குடமுழுக்கின் பொழுது சிவபெருமானை ஓங்காரேசுவரர் என்னும் திருப்பெயரில் இலிங்க வடிவில் பிரதிட்டை செய்தனர். இரண்டாம் குடமுழுக்கின் பொழுது, இந்த இலிங்கத்தை மாற்றி, சகஸ்ரலிங்கேசுவரர் என்னும் இலிங்கத்தைப் பிரதிட்டை செய்தனர். இந்த  இலிங்கம் மூன்றடி உயரத்திலும், இலங்கபானத்தில் ஆயிரம் சிறிய இலிங்கங்களும் வடிவமைக்கப்பட்டுள்ளன.

    இங்ஙனமே, விநாயகர், பாலமுருகன், மாரியம்மன், மாகாளியம்மன், கன்னிமார், விஷ்ணு துர்க்கை, சிவதுர்க்கை, பைரவர், தென்முகக்கடவுள், நவநாயகர் ஆகிய பரிவார மூர்த்தங்களும் சிற்பசாத்திரத்தின் படியே வடிவமைக்கப்பட்டுள்ளன.

    உற்சவ மூர்த்திகள் 

    இத்திருக்கோயிலில் வனபத்ரகாளியம்மன், பேச்சியம்மன், விநாயகர், முருகன், பிரதோசநாயகர், லலிதாம்பிகை, மகிசாசுரமர்த்தினி என்னும் உற்சவ மூர்த்திகள் (பஞ்சலோக சிலைகள்) உள்ளன.

    அவற்றுள் வனபத்ரகாளியம்மன் உற்சவர் நின்ற திருக்கோலத்தின் நான்கு திருக்கரங்களுடன், மேலிரு திருக்கரங்களில் உடுக்கை, அக்கினி என்பனவும், கீழிரு திருக்கரங்களில் திரிசூலம், கபாலம் ஆகியவற்றை ஏந்தியபடி அமைந்துள்ளது.

    பேச்சிம்மன் உற்சவர் நின்ற நிலையில் பன்னிரு திருக்கரங்களுடன் அமைந்துள்ளது. கரங்களில் முறையே உடுக்கை, அங்குசம், அக்கினி, கதாயுதம், கத்தி, அபயக்கரம், சூலம், பாசக்கயிறு, தண்டம், கேடயம், கபாலம், எலுமிச்சை என்பவை உள்ளன. அன்னையின் திருப்பாதங்களின் முன்பு, குழந்தை ஒன்று நின்ற நிலையில் உள்ளது.

    திருவிழாக்கள் 

    வனபத்ரகாளியம்மன் பேச்சியம்மன் திருக்கோயிலின் ஆண்டுத்திருவிழா மிகச்சிறப்பாகக் கொண்டாடப்படுவதுடன், ஒவ்வொரு மாதமும் சிறப்பான நாட்களில் பல்வேறு விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. தவிர, அன்றாட பூசை, வாரம், மாதம் எனப் பல்வேறு பூசைகள் சிறப்பாக நடைபெறுகின்றன. அவற்றையெல்லாம் ஒருங்கே தருவதாயின் இக்கட்டுரை வரைகடந்து செல்லும் என்பதால், இன்றியமையாத சிலவற்றை மட்டும் இங்குக் காண்பது சாலும்.

    வருடாந்திரத் திருவிழா 

    இத்திருக்கோயிலின் வருடாந்திரத்திருவிழா ஒவ்வோராண்டும் ஆனிமாதத்தில் கொண்டாடப்படுகிறது. திருக்கோயில் கரும்புக்காட்டில் அமைந்திருந்த பொழுது வருடத்திருவிழா (நோம்பி) மூன்று நாட்கள் கொண்டாடப்பட்டு வந்தது. அதன்படி, முதல்நாள் திருப்பேரூர் பட்டீசுவரர் திருக்கோயிலின் அருகேயுள்ள நொய்யலாற்றிலிருந்து திருமஞ்சனத்தீர்த்தம் எடுக்கப்பட்டு, அலங்கரிக்கப்பட்ட யானையின் மீது வைத்து ஊர்வலமாக வந்து அம்மனுக்கு அப்புனித நீரால் அபிடேகம் செய்து தீபாராதனை செய்வர். இரண்டாம் நாள் ருத்ரபாராயணம் செய்து அம்மனுக்கு அபிடேக ஆராதனை செய்வர். மூன்றாம் நாள் மூன்று திருக்கரகங்கள் அலங்கரித்து ஊர்வலமாகக் கொண்டுவந்து அபிடேக ஆராதனை செய்வதுடன் விழா நிறைவடையும். இங்ஙனம் இத்திருக்கோயிலின் முதலாண்டுத் திருவிழா 1948-ஆம் ஆண்டில் நடைபெற்றது.

    திருக்கோயில் கோவை உக்கடம் தொறையர் வீதியில் தற்போது அமைந்துள்ள இடத்திற்கு மாற்றப்பட்டவுடன், அன்பர்களின் வருகை அதிகரிப்பினாலும், பக்தர்களின் உறுதுணையாலும் மூன்றுநாள் திருவிழா எட்டுநாள் விழாவாக விரிவுபடுத்தப்பட்டது. அதன்படி, முதல்நாள் கணபதி ஹோமம் செய்து, அன்றுமாலை பேரூர் நொய்யலாற்றிலிருந்து திருமஞ்சனத்தீர்த்தம் கொண்டு வந்து இரவு திருக்கொடியேற்றுதல். இரண்டாம் நாள் வனபத்ரகாளியம்மனுக்கு சுத்தஹோமம் செய்து விசேட அபிடேகமும் அன்னாபிடேகமும் செய்தல். மூன்றாம் நாள் இரவு அம்மனுக்கு சக்திக்கரகம் (சக்தி விஞ்ஜை) அழைத்து வருதல், நான்காம் நாள் திருவிளக்கு வழிபாடும், ஐந்தாம் நாள் இரட்டைக்கரகம் பூவோடு (அக்கினிச்சட்டி) எடுத்து ஊர்வலமாக வந்துத் திருக்கோயிலை அடைதல், ஆறாம் நாள் மஞ்சள் நீராடி திருக்கொடியிறக்குதல். ஏழாம் நாள் அம்மன் திருவீதியுலாவும், இறுதிநாள் பேச்சிம்மனுக்கு அபிடேக ஆராதனை செய்து மறுபூஜை செய்து அன்னதானம் வழங்குவதுடன் விழா நிறைவடைகிறது. இங்ஙனம் இத்திருக்கோயிலின் வருடத்திருவிழா ஊரார்போற்றும் விதத்தில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.

    பல்வேறு சடங்குகள் 

    வருடாந்திரத்திருவிழா சிறப்பான முறையில் நடத்தப்பெறுவதுடன் ஒவ்வொரு மாதமும் வரும் அமாவாசை, பௌர்ணமி தினங்களில் சிறப்பு வேள்வி செய்து அம்மன் அருள் வாக்குக் கூறப்படுகிறது. இவ்வேளையில் எலுமிச்சை, நெய்த்தேங்காய் ஆகியவற்றைச் சுற்றி இட்டால் கண்ணேறு கழியும் என்கின்றனர்.

    இவைதவிர, வாரந்தோறும் வரும் செவ்வாய், வெள்ளி தினங்களில் மதியம் உச்சிக்காலப் பூசை சிறப்பு வாய்ந்ததாக உள்ளது. பூசை முடிந்தபின் அம்மன் அருள்வாக்கும் உண்டு. அங்ஙனமே பிரதோச காலத்தில் சகஸ்ரலிங்கேசுவரருக்கும் நந்திதேவருக்கும் அபிடேக ஆராதனை நடைபெறுகிறது. தவிர, விநாயகப் பெருமானுக்கு சங்கடஹர சதுர்த்தி, முருகப்பெருமானுக்கு சஷ்டி, கிருத்திகை விரதங்களிலும் அபிடேக திபாராதனை நடைபெறுகிறது. இவ்வாறே, விஷ்ணு துர்க்கைக்கு ராகுகாலத்தில் வழிபாடும் நடைபெறுகிறது.

    ஆடல்வல்லானான நடராசப் பெருமானுக்கு வருடத்தில் மூன்று திருமஞ்சனங்கள் சிறப்பாக நடத்தப்படுகின்றன. மேலும் சுவர்ண ஆகர்சன பைரவருக்குத் தேய்பிறை அட்டமி நாளில் சிறப்பு அபிடேக ஆராதனை செய்யப்படுகிறது. இங்ஙனமே, ஒவ்வொரு நாளும் மூன்று வேளை பூசைகள் தவறாது நடைபெறுகின்றன.

    இவ்வாறு இத்திருக்கோயிலில் ஆண்டு முழுவதும் விழாக்களும் சடங்குகளும் உரியமுறையில் நடைபெற்று வருகின்றன என்பது குறிக்கத்தகுந்த சிறப்பினதாம்.

    நம்பிக்கைகள்; வழிபாடுகள் 

    வனபத்ரகாளியம்மன் பேச்சியம்மன் திருக்கோயிலில் நம்பிக்கைகளின் அடிப்படையில் பல்வேறு வழிபாடுகள் நடைபெறுகின்றன. அவற்றுள் சிலவற்றைக் காண்போம்.

    பிள்ளைப்பேறு; மருத்துவச்சிக் கூலி

    மக்கட்பேறு இல்லாதோர், வனபத்ரகாளியம்மனையும் பேச்சியம்மனையும் வேண்டி வழிபடுகின்றனர். ஒன்பது வாரம் அம்மனுக்குச் செவ்வரளி மாலை சூட்டி நம்பிக்கையுடன் வழிபட்டவர் உறுதியாக நன்மக்கட் பேறு பெறுவர். இங்ஙனம் பிள்ளைப்பேறு பெற்றவர்கள் இன்றும் பலருண்டு. அங்ஙனம் பிறந்த குழந்தைகள் காளியின் வரத்தில் பிறந்த குழந்தைகள் என அழைக்கப்படுகின்றனர். அக்குழந்தைகட்கு அருள்வாக்கின் பொழுது அம்மனே பெயர் சூட்டுகிறாள்.

    கருவுற்றிருக்கும் பெண்டிர் தங்களுக்கு நன்முறையில் சுகப்பிரசவம் ஆக வேண்டுமென்பதற்காக அம்மையை உளமுருக வேண்டிக்கொள்கின்றனர். அதன்படி சுகப்பிரசவம் ஆன பெண்டிர், தங்கள் வேண்டுதலை நிறைவேற்றும் விதத்தில், பேச்சியம்மனுக்கு ஐந்துபடி அரிசி, ஐந்து அச்சு கருப்பட்டி, உப்பு, மிளகு இன்னோரன்ன பொருட்களைக் காணிக்கையாகச் செலுத்துகின்றனர். இப்பொருட் தொகுதிக்கு மருத்துவச்சிக் கூலி எனப்பெயர் வழங்கப்படுகிறது.

    திருமணத்தடை நீக்கம்

    திருமணத்தடையுள்ளவர்கள் இருபத்தியொரு வாரம் இத்திருக்கோயிலுக்கு வந்து வழிபடின் அத்தடை நீங்கி நல்ல வாழ்க்கைத்துணை பெறுவர்.

    பேயோட்டுதல்

    காற்று, கருப்பு என்பவற்றால் பாதிக்கப்பட்டோர் பதினொரு வெள்ளிக்கிழமை இத்திருக்கோயில் வந்து அம்மனை வழிபடின் தீயசக்திகள் நீங்கப் பெறுவர். அங்ஙனம் நீங்க நற்பலன் அடைந்தோர் இன்றும் பலருளர்.

    அடியவர்கள்

    இவற்றுக்கெல்லாம் மேலாக இத்திருக்கோயிலையே; அன்னை வனபத்ரகாளியம்மன், பேச்சியம்மன்னையே தன் விருப்ப தெய்வங்களாகப் போற்றிவரும் அன்பர்; அடியவர் பலராவர். அவர்கள் யாவரும் அன்னையின் அருள்வாக்கின்படியே தன் வாழ்க்கையை அமைத்துக் கொண்டுள்ளனர்; அன்னையின் ஆணைப்படியே அனைத்தையும் செய்து வருகின்றனரென்பதும் சிறப்பாகச் சுட்டத்தக்கதாம்.

    அம்மனின் திருப்பெயர்

    வனபத்ரகாளியம்மன் மலையடிவாரத்தில் சுனையருகில் வீற்றிருந்தமையின் வனக்காளி என்றே அழைக்கப்பட்டனள். பின்னர் திருக்கோயில் ஊருக்குள் மாற்றி அமைக்கப்பட்டமையின் வனக்காளி என்னும் திருப்பெயரை வனபத்ரகாளி என்று மாற்றினர். ஆயினும், பக்தர்கள் அனைவரும் அன்;னையைக் ‘காளி’ என்றே உளமுருக அழைத்து மகிழ்கின்றனர். இங்ஙனமே, பேச்சியம்மனைப் ‘பேச்சி’ என்றே அன்புடன் அழைக்கின்றனர்.

    இறுவாய்    

    கொங்குமண்டலமாம் கோவையம்பதியில் உக்கடம் ராஜுசெட்டியார் வீதியில் வீற்றிருந்து அருள்புரியும் அருள்மிகு வனபத்ரகாளியம்மனும் பேச்சியம்மனும் தம்மை உள்ளன்போடு நினைந்து வேண்டுபவர்க்கு வேண்டிய வரங்களைத் தந்தருள் செய்யும் தெய்வங்களாகவும் தம்மை, நேயமோடு காளி என்றும் பேச்சி என்றும் வாயினிக்க அழைத்துக் கசிந்துருகும் அன்பர்கட்கு ஒரு தீங்கும் நேராது காக்கும் ஒப்பற்ற சக்திகளாகவுந் திகழ்கின்றனரென்பதை, இத்திருக்கோயிலுக்கு வந்து வழிபடுவோர் நன்குணர்வர் என்பதில் எட்டுணையும் ஐயமில்லை.

    Share
  • கம்பராமாயணத்தில் மூவகை கற்பு நிலை

    கம்பராமாயணத்தில் மூவகை கற்பு நிலை

    முனைவர்  க. மங்கையர்க்கரசி                                                   
    உதவிப்பேராசிரியர்
    அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி                                              
    மீனம்பாக்கம், சென்னை – 600 114.

    முன்னுரை:

    கணவனை இழந்த மகளிர் நிலை மிகவும் இரங்கத்தக்கதாகவே இருந்தது. கணவனின் இறப்பு மனைவிக்கு நிரந்தரமான பிரிவு. ‘இறந்த கணவன் இறந்த வேலினால் தன்னையும் மாய்த்துக்கொண்ட ஆஞ்சிக்காஞ்சியும், இறந்த கணவன் தலையொடு தன் முகத்தையும் மார்பையும் சேர்த்துக் கொண்டோளும் மாய்ந்த முதுகாஞ்சியும், கணவனை இழந்த தாபதநிலைக்காஞ்சியும், மனைவி இறந்த கணவனோடு ஈமம் ஏறிப் பெருந்தீயில் புகும்போது இடைப்பட்டோருக்குக் கூறும் பாலைக்காஞ்சியும்     என்று தொல்காப்பியர் கூறியுள்ளார். பிரிவாற்றாமையினால் கணவனுடன் உயிர்த்துறத்தல், உடன்கட்டை ஏறுதல், கைம்மைநோன்பு நோற்று   தம் இறுதிக் காலத்தைக் கடத்தியுள்ளனர். ‘தலைக்கற்பு’ ‘இடைக்கற்பு’, கடைக்கற்பு’ என்ற மூவகைக் கற்பு நிலைகளும் கம்பராமாயணத்தில் அமைந்துள்ளதைக் காண்போம்.

    கணவனுடன் உயிர்விடுதல்:

    கணவனுடன் உயிர்விடும் நிலை தொல்காப்பியர் காலத்திலேயே வழக்கில் இருந்தது. தொல்காப்பியர் கணவர் இறந்த பின்னர் மனைவியின் நிலையினை இரு பிரிவுகளாகப் பிரித்துள்ளார். அவை

    1. கணவனோடு உடன் உயிர்விடுதல்.
    2. கணவன் இறந்தபின் தவ வாழ்வை மேற்கொள்ளல்.

     இது ‘தாபதநிலை’ என்ற பெயரில் சுட்டப்படுகிறது.

    கணவனுடன் உயிர்விடும் மனைவியர் நிலைக் குறித்துத் தொல்காப்பியர்

    “நீத்த கணவன் தீர்த்த வேலின்
    பேஎத்த மனைவி ஆஞ்சியானும்” (தொல்காப்பியம்- புறத்திணையியல் நூ22)

    என்று இறந்த கணவன் விட்ட வேலினாலே தன் உயிரை மாய்த்துக் கொள்ளும் மனைவி தலையோடு, மார்பையும், முகத்தையும் சேர்த்து இறக்கும் மனைவி ‘ மூதானந்தம்’ என்று சிறப்பித்துக் கூறுவர்.(உயிரைமாய்த்துக் கொள்வது,) போரில் அன்றி வேறு காரணத்தினாலோ தன்  கணவன் இறந்தபோது, ‘அவனின்றி பிறர் தனக்குத் துணையாகார்’ என்று கணவனின் மார்பைப் பொருந்தியோ, இணையடி தொழுதோ  உயிர் துறப்பவர் புகழப்படுவர்.

    உடன்கட்டை ஏறி தீயில் உயிர்விடுதல் (சதி)

    கணவனது சிதைத்தீயில் மனைவி வீழ்ந்து தற்கொலை செய்து கொள்ளுதலை ‘உடன்கட்டை ஏறுதல்’ (சதி) என்ற சொல்லாட்சி குறிப்பிடுகிறது. தொல்காப்பியர் இதனை

                        “நல்லோள் கணவனோடு நனியழல் புகீஇச்
    சொல்லிடை இட்ட பாலைநிலையும்” (தொல்காப்பியம்பொருளதிகாரம்- புறத்திணையியல்-நூ22)

    என்று தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ளார், .இந்நூற்பா உடன்கட்டை ஏறுதலை ‘அழல் புகுதல்’ என்ற சொல்லால் குறிப்பிடுகிறது.

    புறப்பொருள்வெண்பாமாலையில் ஐயனாரிதனார், தொல்காப்பியர் கூறிய கருத்தையே உடன் கொண்டு உடன்கட்டை ஏறுதலைக் குறிப்பிடுவார் என்பதை,

                                      “காதற்கணவனொடு கனையெரி மூழ்கும்
    மாதற் மெல்லியல் மலிபுரைத்தன்று” (புறப்பொருள்வெண்பாமாலை காஞ்சி 22)

    என்ற பாடலடி மூலம் அறியமுடிகிறது.

                              “பெருங்கோட்டுப் பண்ணிய கருங்கோட்டு ஈமம்.
    நுமக் கரி தாடுகதில்ல வெடிக்கெம்
    பெருஞ் தோட்கணவன் மாய்ந்தென வரும்பற
    வள்ளி தழுவித்த தாமரை
    நள்ளிரும் பொய்கையுந் தீயுமோரற்றே” (புறநானூறு 246)

    என்று கூறுவதன் மூலம் தீஉண்டாக்குதல், தீப்பாயும் இடம், தீப்பாயும் பெண்களின் நிலை, தீப்பாயும் தன்மைப் போன்ற செய்திகளால் தெரிகின்றன.

    உடன்கட்டை ஏறுதலை வடமொழியில் ‘ஸதி’ (சதி) என்ற சொல்லால் குறித்தனர். இவ் வடமொழி சொல்லிற்கு ‘நற்குணமுடைய மனைவி’ என்பது பொருளாகும். என்றாலும் இச்சொல் கைம்பெண் கணவனோடு மரித்ததற்குத் ‘தற்கொலை செய்து கோடல்’ என்று மருவி பொருள்படுவதாயிற்று.

    நாயகனுடன் மரணமடைந்த கற்புடையாள் தங்கள் தேகத்தில் உரோமவரிசைகள் எவ்வளவு உண்டோ அவ்வளவு காலம் சொர்க்கத்து  உறைவர் என்கிறது ‘அபிதான சிந்தாமணி’  என்று ‘சங்க இலக்கியம் கருத்தியல் வளம்’ என்ற நூலில் கூறப்பட்டுள்ளது.

    இறப்பிற்குப் பின்னால் ஒரு வாழ்க்கை உண்டென என்னும் பெண்களுக்கு மேலுலக வாழ்க்கை சொர்க்கமாக அமையும் என்று ஆசையூட்டி, உடன்கட்டை ஏறுவதில் தவறில்லை என்ற எண்ணத்தை உருவாக்கிவிட்டனர். கல்வியறிவற்ற, கணவர்மீது அன்பும், அக்கறையும் கொண்ட பெண்கள், கணவனுக்காக என்று கூறினால், எந்தக் கட்டுக்கதைளையும் நம்பிவிடுவர் என்றே எண்ணினர். இறந்த கணவனோடு சொர்க்கம் உறைவதும், உடன்கட்டை ஏறினால் சாத்தியமாகும் என்று வலியுறித்தினர். பெண்களும் அதை அப்படியே நம்பினர்.

    கைம்மைநிலை:

    கைம்மைநோன்பு மிக்க கடுமையான விதிகளைக் கொண்டதாக இருந்தது. கைம்பெண்கள் அணிகளைக் களைந்து, கூந்தலை நீக்கி, தம்மை அழகற்றவர்களாக ஆக்கிக் கொண்டனர். காம   உணர்வுகளை தூண்டும் உணவு வகைகளை நீக்கிவிட்டு, உயிர் வாழ்வதற்குத் தேவையான உணவுகளைமட்டுமே உண்ணவேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. இவற்றுக்கு மேலாக இளம்பெண்கள் இயற்கை உணர்வுகளைக் கட்டுப்படுத்த வேண்டி யிருந்தது. கணவன் இறந்த நிலையில் காமுறுதல், காமுறப்படல் ஆகியவற்றிற்கான உணர்வுகள் தம்பால் தோன்றாமைக்கு உதவும் வகையில் மனைவியர் மேற்கொண்ட செயல்களே கைம்மைநோன்பின் நிகழ்ச்சிகள் ஆயின.

    கணவனை இழந்த பெண்கள் கணவனின் நினைவாக நோன்பு நோற்று வாழ்வதனை ‘கைம்மைநோன்பு’ என்று குறிப்பிடுவர். இலக்கியங்களில் நோன்பு நிற்கும் பெண்களை ‘உயவற்பெண்டிர், கழிகலமகளிர்’ என்று குறிப்பிடுகிறது.

    கைம்மைமுறைகளை

    1. கூந்தல் களைதல்

    2. அணிகலன்கள் களைதல்

    3. தரையில் பாயின்றி படுத்துறங்குதல்

    4. உணவில் கட்டுப்பாடு

    5. கணவனுக்குப் பிண்டமளித்தல்

    6. குளிர்ந்த நீரில் மூழ்குதல்

    என்று 6 வகைகள் கூறப்படுகின்றன..

    தலைக்கற்பு:

    தலைவன் இறந்த செய்தியைக் கேட்ட அளவில் தலைவியும் உடன்  உயிர்த்துறத்தல் ‘தலைக்கற்பு’ எனப்பட்டது.

    இடைக்கற்பு:

    தலைவன் இறந்தபின் அவன் பிரிவுத்துன்பம் தாழாமல் அவனை எரிக்கும் சிதையிலேயே வீழ்ந்து உயிர் விடுதல் ‘இடைக்கற்பு’ எனப்பட்டது.  கடைக்கற்பு:

    கணவனை இழந்த பெண்கள் கணவனின் நினைவாக நோன்பு நோற்று வாழ்தல்   ‘கடைக்கற்பு’ எனப்பட்டது.

    கம்பராமாயணத்தில் தலைக்கற்பு:

    இராவணன் இறந்துகிடக்க அவன் மனைவி மண்டோதரி “கொடியவளான எனக்கு நேர்ந்திருப்பது பெருந்துயரம். நான் அரக்கர் தலைவனான என்னுடைய கணவன் இறந்த பின்பா இறப்பது? அவருக்கு முன்னால் இறக்க வேண்டும் என்ற கருத்தையும் பெற்றவள் ஆகவில்லை” என்று பலப்பல புலம்பி அழைத்தவளாய் ஏக்கம் கொண்டு எழுந்து பொன் அணிகலன்களால் பொருந்தியிருக்கும் அந்த இராவணனின் ஒப்பில்லாத மார்பினைத் தன்னுடைய தளிர் போன்ற கைகளால் தழுவி தனித்தன்மையுடன் நின்று உரத்தக் குரலினால் அழைத்துப் பெருமூச்சுவிட்டாள் உயிர் நீங்கினாள் என்பதை

                             “என்று அழைத்தனள் அங்கு எழுந்து அவன்
    பொன் தழைத்த பொரு அரு மார்பினைத்
    தன் தழைக் கைகளால் தழுவித் தனி
    நின்று அழைத்து உயிர்த்தாள் உயிர்நீங்கினாள்” (யுத்தகாண்டம்-இராவணன் வதைபடலம் 3885)

    என்ற பாடலடி மூலம் அறியமுடிகிறது.

    மழையைப் போல நீரைப் பெருக்கும்   விழிகளை உடையவரான அரக்க மகளிர், தம் கணவருடைய வயிரம் போல வலிமையான உடல்களைத்தேடிப் போர்க்களத்தில் புகுந்தனர். அம்மகளிர் பிணங்களாகிய பெரிய மலைகளில் தம் கணவன் உடலிலிருந்து பிறந்த ரத்த ஆற்றினில் மூழ்கியவராய்  இனிய உயிரை விட்டனர் என்பதை

    “மாரி ஆக்கிய கண்ணியர் கணவர்தம்வயிரப்
    போர் யாக்கைகள் நாடி அப்பொருகளம் புகுந்தார்” (யுத்தகாண்டம் – படைத்தலைவர் வதைப்படலம்  2310)

    மூலம் அறியமுடிகிறது.

    போரில் இழந்த தம் கணவருடைய உருவத்தைத் தெரிந்து கொள்ள முடியாத அரக்கமகளிர் அவ்வுடல்களை நெருங்கி, தம் வசம் இழந்தவராகி பிறகு அவ்வுடலில் கவசத்தை நீக்கிவிட்டு, தோள்களின் மேலே கொடிகள் போன்ற தம் கூர்மையான நகத்தால் செய்த பெருங்குறி இருப்பதைப் பார்த்துத் தங்கள் அரிய உயிரை நீக்கினர் என்பதை,

    “துவசம் அன்ன தம்கூர் உகிர்ப் பெருங்குறி தோள்மேல்
    கவசம் நீக்கினர் கண்டு கண்டு ஆர் உயிர் கழிந்தார்”  (யுத்தகாண்டம் – படைத்தலைவர் வதைப்படலம் 2309)

    மூலம் அறியமுடிகிறது.

    கம்பராமாயணத்தில் இடை க்கற்பு:

    அயோத்தியாகாண்டம் தைலமாட்டுப் படலத்தில் , தசரதன் இறந்தவுடன் அவனது அறுபதினாயிரம் மனைவியரும், இறந்துவிட்டவனான தம் உயிர் போன்ற கணவனைக் கண்டு கலங்கினர்.  தசரதனை வானுலகத்திலும் பின் தொடர மன உறுதி மேற்கொண்டனர். சத்ருக்கணன் ஈமச்சடங்குகளைச் செய்தபோது தசரதன் மனைவியர் அறுபதினாயிரம் பேரும் தாம்அணிந்த  மாலைகளும், மற்றுள்ள அணிகலன்களும் தம்முடைய இடைகளும் விளங்கித் தோன்ற   இலையில்லாத தாமரை மலர்கள் நிறைந்த பூக்காட்டிலே  மலைக் குகையில் வாழும் மயில்கள் போல ஈமத்தீயில்  இறங்கிமூழ்கினர். தாம் கணவனுடன் உயிர் விடுவதால் கற்புடை மகளிர் செல்லும் சொர்க்கலோகத்தை தீக்குளித்த தேவியர் அனைவரும் அடைந்தனர் என்பதை

                                     “இழையும் ஆரமும் இடையில் மின்னிட
    குழையும் மா மலர் க் கொம்பு அனார்கள் தாம்
    தழை இல் முண்டகம் தழுவு கானிடை
    மொழியில் மஞ்ஞைபோல் எரியில் மூழ்கினர்” (அயோத்தியாகாண்டம் – பள்ளியடைப்படலம் 926)

    மூலம் அறியமுடிகிறது.

    கம்பராமாயணத்தில் கடைக்கற்பு:  (கைம்மைநிலை)

    அணிகலன்கள் களைதல் மற்றும்  திலகம் இழத்தல் தன்னுடைய அழகுத்தன்மையைக் குறைத்தல் என்பது கம்பராமாயணத்தில் கூறப்பட்டுள்ளது. கூந்தலில் மலர்கள் சூடுவதில்லை.

    வாலியின் மனைவியான தாரை, வாலி இறந்துவிட்டதால் கைம்மைநிலை வாழ்வை வாழ்ந்தாள். கார்காலம் முடிந்தபிறகு சீதையைத் தேடலாம் அதுவரை அரண்மணையில் இரு என்று இராமன் கூறினான். மாதங்கள் முடிந்தும் சுக்ரீவன் வராததால் கோபம் கொண்ட இராமன் இலட்சுமணனை அனுப்பினார். கோபத்துடன் சென்ற இலட்சுமணனை அனுமன் ஆலோசனைபடி தாரை எதிரில் வந்து பேசினாள். அவளுடைய சொல்லைக்கேட்ட அளவில் பேசியவர் யார் என்பதை அறிய இலட்சுமணன் விளங்கும் வெண்மையான முழுமதி பகற்பொழுதிலேயே பூமியில் வந்த தோற்றத்தைப் போன்ற ஒளி விளங்கும் குன்றிய அழகு விளங்கும் முகத்தையுடையவளான, தாரையின் முகத்தைப் பார்த்தான். திருமாங்கல்யத்தை ஒழித்து மணிகள் பதித்துச் செய்யப்பெற்ற மற்ற அணிகலன்களையும், அணியாமல் நீக்கி, நறுமணம் உள்ளதும், மலர் மாலையையும் அணியாது விலக்கிக் குங்குமப்பூவின் குழம்பையும், சந்தனக்குழம்பையும் பூசிக் கொள்ளாத பருத்தக்கொங்கைகள், பாக்குமரம் போன்ற கழுத்துடன் மறையும்படி மேலாடையில் நன்கு போர்த்துள்ள   மகளிரில் சிறந்தவளான இந்தத் தாரைப் பார்த்த இலக்குமணன்  இரங்கத்தக்க அத்தோற்றத்தைக் கண்டதாலும் தன் தாயரை நினைத்ததாலும்   கண்களில் நீர் வர வருத்தம் அடைந்தான்.  என்னைப் பெற்ற தாயர் இருவரும் இத்தகைய   கைம்மைக் கோலம் கொண்டுதானே இருப்பர் என்று உள்ளம் கொதிந்தான் என்பதை,

                              “மங்கல அணியை நீக்கி மணி அணி்துறந்து வாசக்
    கொங்கலர் கோதைமாற்றி க் குங்குமம் சாநரதம் கேட்டுப்
    பொங்கு வில் முலைகள் பூசக் கழுத்தொடு மறையப் போர்த்த
    நங்கையைக் கண்ட வள்ளல் நயனங்கள் பனிப்ப நைந்தீன்”

    (கிட்கிந்தா காண்டம்- கிட்கிந்தைப் படலம் 612) பாடலடி மூலம்  அறியமுடிகிறது. கணவனை இழந்த தாரை  கைம்மையாக அணிகலன்களை நீக்கி, பூ அணியாமல்  கழுத்துமறையும்படியான ஆடையை உடுத்தியிருந்தாள் என்பதும், அவளைக் கண்டபோது இலட்சுமணன் தன்னுடைய தாயரும் இப்படித்தானே இருப்பர் என்று நினைக்கிறான் என்பதும்  புலப்படுகிறது.

    முடிவுரை:

    கணவன் இறந்தவுடன் மனைவியும் இறந்த தலைக்கற்பும், கணவனுடைய சிதைத் தீயில் மனைவியும் விழுந்து இறத்தல் இடைக்கற்பாகவும், கணவன் இறந்தபின் கைம்மைநோன்பு நோற்று வாழும் கடைக்கற்பு என்ற மூவகைக் கற்பு நிலைகளும் கம்பராமாயணத்தில் கூறப்பட்டுள்ளதை அறியமுடிகிறது.

    துணை நூற்பட்டியல்

    1. இராமசுப்பிரமணியன், வ.த. புறப்பொருள் வெண்பா மாலை, மீனாட்சி புத்தக நிலையம், மதுரை, 2009.

    2. இளம்பூரணர் உரை, தொல்காப்பியம்-பொருளதிகாரம், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்  லிமிடெட் சென்னை, 1953.

    3. பாலசுப்பிரமணியன்.கு.வை (உரை.ஆ) புறநானூறு மூலமும் உரையும், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பிரைவேட்) லிமிடேட்    சென்னை, 2004

    4. பூவண்ணன், கம்பராமாயணம் மூலமும் தெளிவுரையும் தொகுதி 1,2,3,4,5,6,7,8 வர்த்தமானன் வெளியீடு, சென்னை, 2011

    Share
  • 2002இல் சிங்கப்பூர்

    2002இல் சிங்கப்பூர்

    2002இல் சிங்கப்பூர்

    படப்பதிவு – ஹேமமாலினி

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • நவீன சக்கராயுதம்

    நவீன சக்கராயுதம்

    நவீன சக்கராயுதம்

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • ‘காலங்களில் அவன் வசந்தம்’ தொடர் நிகழ்ச்சியின் 69ஆவது நிகழ்ச்சி இன்று நடைபெருகிறது

    ‘காலங்களில் அவன் வசந்தம்’ தொடர் நிகழ்ச்சியின் 69ஆவது நிகழ்ச்சி இன்று நடைபெருகிறது

    வணக்கம்.

    ‘காலங்களில் அவன் வசந்தம்’ தொடர் நிகழ்ச்சியின் 69 ஆவது நிகழ்ச்சி..

    இன்று, செப்டம்பர் 14, 2021, மாலை 6.30 மணிக்கு..

    சிறப்பு விருந்தினர்:

    செய்தி வாசிப்பாளர், கிரி டிரேடர்ஸ் இயக்குனர், அருமையான ஒலிப்பதிவுக் கூடமான சுரங் ஸ்டூடியோ அதிபர், இனிமையான பாடகர், எங்கள் “பாரதி யார்?” நாடகத்தில் செல்லம்மாவின் அண்ணன் அப்பாத்துரையாக வந்து கலக்குபவர்…

    இன்முகம் கொண்ட என் நண்பர், புன்னகையாலும், இனிய குரலாலும் நம்மைக் குளிர்விக்க வருகிறார்!

    வாருங்கள்! கண்ணதாசனைக் கொண்டாடுவோம்!

    நிகழ்ச்சி நேரலை: https://youtu.be/WdiqyKWn5jg

    அன்புடன்,
    ரமணன்

    Share
  • ஜீரோ வட்டி என்பது உண்மையா?

    ஜீரோ வட்டி என்பது உண்மையா?

    வங்கிகள், மின்னங்காடிகள், சந்தைகள், நிறுவனங்கள் எனப் பலவற்றிலும் ஜீரோ வட்டி (Zero cost EMI / No cost EMI) எனப் பார்க்கிறோம். உண்மையிலேயே இந்தக் கடன்களுக்கு வட்டி இல்லையா? அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர் ராமகிருஷ்ணன் நாயக் விளக்குகிறார். உங்களுக்கு ஏதும் ஐயம் இருந்தால் கேளுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share