Blog

  • குறளின் கதிர்களாய்…(361)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்...(361)

    கரப்பிலா நெஞ்சிற் கடனறிவார் முன்னின்
    றிரப்புமோ ரேஎ ருடைத்து.

    – திருக்குறள் – 1053(இரவு)

    புதுக் கவிதையில்...

    ஓளிவு மறைவு இல்லாத
    மனம் உடையவராய்,
    ஈவது
    தன் கடமையென
    நன்கு அறிந்தவரின்
    முன்னே நின்று இரந்து
    ஓன்றை அவரிடம்
    கேட்பதும்
    கேட்பவர்க்கு அழகுதான்…!

    குறும்பாவில்...

    நெஞ்சில் ஒளிவு மறைவின்றி
    கொடுப்பது கடமை என்றறிந்தவர் முன்னின்று
    கேட்டு இரப்பதும் அழகே…!

    மரபுக் கவிதையில்...

    இருப்பதை மறைத்தே இல்லையெனா
    இயல்பினைக் கொண்டே கையிருப்பை
    விரும்பியே கொடுத்தல் கடனென்ற
    விபரம தறிந்த நல்லோர்முன்
    இரந்திடச் சென்றே யவர்களிடம்
    இருப்பதைக் கொடுக்க வேண்டுவதும்
    பெருமையா யெண்ணிப் பெறுவதுவும்
    பேரழ கென்றே கருதலாமே…!

    லிமரைக்கூ...

    இல்லை அவரிடம் கரத்தலே,
    கொடுப்பது கடமையெனக் கொடுப்பவர், அழகுதான்
    அவரிடம் சென்று இரத்தலே…!

    கிராமிய பாணியில்...

    அழகுதான் அழகுதான்
    எரப்பதும் அழகுதான்,
    மனசு நெறஞ்சவங்கிட்டபோய்
    எரப்பதும் அழகுதான்..

    வச்சிக்கிட்டு இல்லங்கிற
    ஒளிவு மறவு இல்லாம,
    இல்லாதவனுக்குக்
    குடுக்கிறதக் கடமண்ணு
    அறிஞ்சிச் செய்யிறவன்
    முன்னால போயி
    எரந்து
    கேக்கிறது கூட அழகுதான்..

    தெரிஞ்சிக்கோ
    அழகுதான் அழகுதான்
    எரப்பதும் அழகுதான்,
    மனசு நெறஞ்சவங்கிட்டபோய்
    எரப்பதும் அழகுதான்…!

    Share
  • எல்லோரையும் பாடுவேன் – ஆனந்த ராவ் நேர்காணல்

    எல்லோரையும் பாடுவேன் – ஆனந்த ராவ் நேர்காணல்

    உழைக்கும் வர்க்கப் பாடகர் ஆனந்த ராவ், ஓட்டல்களில் உணவு பரிமாறுபவராக (சப்ளையர்) வேலை பார்த்தவர். 79 வயதிலும் படபடவெனப் பேசுகிறார். திரைப்பாடல் மெட்டுகளில் தானே பாட்டுக் கட்டி, இனிய குரலில் பாடுகிறார். விவசாயப் பணியாளர், கட்டடத் தொழிலாளர், சமையல் கலைஞர், தையல் கலைஞர், ஆட்டோ ஓட்டுநர்… எனப் பலரையும் பாடியவர். அத்துடன் நில்லாமல் கலைஞர், ஜெயலலிதா, மோடி, அம்பானி… எனப் பலரையும் புகழ்ந்து பாடியிருக்கிறார். யாரைப் பற்றியும் பாட முடியும், எல்லோரையும் நேசிக்கிறேன் என்கிறார். இந்தப் பதிவில் தமது பாடல்கள் பலவற்றையும் நம்முடன் பகிர்ந்துகொள்கிறார். சுவையான இந்த உரையாடலைக் கேட்டு மகிழுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • சிரிப்பு யோகா – பயிற்சி 8 | குரு சிரிப்பு

    சிரிப்பு யோகா – பயிற்சி 8 | குரு சிரிப்பு

    ‘சிரிப்பு யோகா’ தொடரில் எட்டாவது பயிற்சியை இன்று வழங்குகிறார், ஹாஹோ சிரிப்பானந்தா. இதைத் தொடர்ந்து செய்து வர, அனாவசிய கொழுப்புகள் குறையும், வாழ்க்கைத் தரம் மேம்படும். ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கலாம், வாங்க.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • நாகேஸ்வரி அம்மன் தேர் ஆயத்தம்

    நாகேஸ்வரி அம்மன் தேர் ஆயத்தம்

    சென்னை தாம்பரம் அருள்மிகு நாகேஸ்வரி அம்மன் கோவிலில் ஆடித் திருவிழாவும் பிரம்மோற்சவமும் ஒருசேர நடைபெற்று வருகின்றன. இன்று மதியம், தேரில் அம்மன் பவனி வந்தாள். அதற்கு முன்னதாக நடந்த தேர் ஆயத்தப் பணிகளை இங்கே காணலாம். சிவப்புக்கல் மூக்குத்தியும் நீலக்கல் மூக்குத்தியும் அணிந்து, சர்வாலங்காரத்துடன் அன்னை வீற்றிருக்கும் அழகைப் பாருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • கொய்யா அறுவடை – 6

    கொய்யா அறுவடை – 6

    இன்றைய கொய்யா அறுவடை, அமோகம்!

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • சிரிப்பு யோகா – பயிற்சி 7 | தேநீர்ச் சிரிப்பு

    சிரிப்பு யோகா – பயிற்சி 7 | தேநீர்ச் சிரிப்பு

    தேநீர்ச் சிரிப்பு (Tea Laughter) பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இதோ பயிற்சி வழங்குகிறார், ஹாஹோ சிரிப்பானந்தா. அவருடன் சேர்ந்து, தமிழ்நாடு சிமென்ட் கார்ப்பரேஷன் ஊழியர்களும் அட்டகாசமாகச் சிரிப்பதைப் பாருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • சிரிப்பு யோகா – பயிற்சி 6

    சிரிப்பு யோகா – பயிற்சி 6

    ‘சிரிப்பு யோகா’ தொடரில் ஆறாவது பயிற்சியை இன்று வழங்குகிறார், ஹாஹோ சிரிப்பானந்தா. சர்க்கரை நோய் எனப்படுகிற நீரிழிவைச் சரிசெய்கிற பேராற்றல், இந்தப் பயிற்சிக்கு உண்டு. தொடர்ந்து தொண்டு ஆற்றுவோம், சேவை ஆற்றுவோம், வாருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • Life is Crude

    Life is Crude

    Baskar​ ​Seshadri

    When I was motoring I could hear some devotional song from somewhere but there was no function or any event. Listening to the rendering  while driving  I found this couple standing in a corner of a road singing with the little musical instruments on South Mada street Mylapore. I could see the big face of a penury and grief stricken couple who happened to be differently- abled.

    Yes they can’t see and their vision was lost decades back and they manage their life by doing this singing wherever they go. I felt very heavy inside and it was almost an ache and I was unable to stand there further. I personally know the pain of what poor vision is and this sight was so deep in me and made me unmoved for a while.

    No answer can redress this couple and no money can ever satiate what they need. Don’t understand the crudeness of this imbalanced life. What’s the fun in posting a photo, poetry or sarcasm on a wall? I am sensible to understand in being absurd as someone remarked to me the other day. He was cultured enough to describe me gently. I don’t fit anywhere. I am a shapeless sapien. I should not compare, but a comforting mind of life hits me on my face.

    Share
  • செஞ்சி தமிழினியனின் ‘ஊராகாலி’ சிறுகதைகள் காட்டும் மனிதம் மாறா கிராமங்கள்

    செஞ்சி தமிழினியனின் ‘ஊராகாலி’ சிறுகதைகள் காட்டும் மனிதம் மாறா கிராமங்கள்

    முனைவா் அரங்க. மணிமாறன்
    முதுகலைத் தமிழாசிரியா்
    அரசு மேனிலைப்பள்ளி பரமனந்தல்-606710
    செங்கம்-திருவண்ணாமலை மாவட்டம்          
    Mail: maranvmctamil@gmail.com

    முன்னுரை

    “ஒரு ஊர்ல ஒரு ராஜா” என்று ராசாக்களின் கதைகளே பெரும்பாலும் எழுதப்பட்டு வந்தன. குடிமக்கள் காப்பியமான சிலப்பதிகாரமும் விலையுயா்ந்த முத்துமாலையை மிக அதிக விலை கொடுத்து வாங்குமளவு வசதிப் படைத்த வாணிக குடும்பத்தினரின் வாழ்வையே பேசுகிறது. ஆனால் அடித்தட்டு மக்களின் வாழ்வை பேசினார் மிகக்குறைவே.

    “கிராமங்களே இந்தியாவின் முதுகெலும்பு” என்கிறார் மகாத்மா காந்தியடிகள். கிராமங்களில் வாழ்ந்தோர் படித்து முன்னேறி நகர்ப்புறங்களில் வாழ்ந்தாலும் அவா்களின் மனங்களில் அவா்களது கிராமமும் நினைவுகளும் வாழ்ந்த மனிதர்களின் வாழ்வியலும் என்றும் அழியா ஓவியங்களாய் நிலைத்து நிற்கும் என்பதில் ஐயமில்லை.

    செஞ்சிதமிழினியன்

    விவேகானந்தன் என்ற இயற்பெயரையுடைய செஞ்சிதமிழினியன் வரலாற்று சிறப்பு மிக்க செஞ்சிக்கருகிலுள்ள பென்னகர்  என்னும் சிற்றூரில் சாதாரண விவசாய நடுத்தரக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவா். பொறியியல் கற்று கட்டடப் பொறியாளராக பணியாற்றி வருபவா். ஆரம்பத்தில் கவிதைகள் எழுதி ‘ராக்காச்சி பொம்மை’ ‘சொப்புக் கடை’ ‘மரத்தின் நிழல்’(ஐக்கூ) என மூன்று நூல்கள் வெளிவந்துள்ளன.

    முதன்முதலில் துப்பறியும் சாகசக்கதைகளை எழுதினார். அதனையடுத்து தான் சந்தித்த மனிதா்களின் வாழ்வியலை கதைகளாக சித்தரித்து சிற்றிதழ்கள் பலவற்றில் வெளியிட்டுள்ளார்.  பரவலாக பாராட்டப்பட்ட இக்கதைகளை 2019 ஆம் ஆண்டு  ‘ஊராகாலி’ என்ற சிறுகதை நூலாக வெளியிட்டுள்ளார்.தற்போது ‘மொடாக்குடியன்’ எனும் சிறுகதைத் தொகுப்பை வெளியிட இருக்கிறார்.

    “எந்த ஒரு உணர்ச்சியை அல்லது கருத்தை அது தன்னகத்தே கொண்டிருக்கிறதோ அதைப் படிப்பவரின் நெஞ்சில் மின்வெட்டைப் போல் பாய்ச்சும் ஆற்றல் சிறுகதைக்கு வேண்டும்”1 எனும் அகிலனின் கூற்றுக்கிணங்க சிறந்த கதைகளை இவா் படைத்துள்ளார் .

    கதைகளுக்குரிய தொடக்கம், வளர்ச்சி, முடிவு முதலிய முதலிய கட்டமைப்பு இலக்கணங்கள், நெகிழ்ச்சித் தன்மை, கணத்தன்மை முதலிய கூறுகளில் அதிக அக்கறைப்படாமல் தம் கிராமிய உணா்வுகளை தனக்கேயுரிய பாணியில் கதைப்படுத்தி இருக்கிறார் செஞ்சிதமிழினியன் அவா்கள்.

    அழிந்து வரும் வேளாண்மை

    இந்திய நாட்டில் குறிப்பாக தமிழகம் வேளாண்மையை முதுகெலும்பாகக் கொண்ட பூமி. இங்கு வாழும் மக்களுக்கு மண்ணும் மானமும் இரு கண்ணாக மதிக்கத்தக்கவைகளாக உள்ளன. வேளாண்மை என்பது ஒரு பொருளீட்டும் வெறும் தொழில்மட்டுமல்ல.உயிரோடும் உணர்வோடும் கலந்துவிட்ட வாழ்வு. தனக்கும் தன் குடும்பத்திற்கும் மட்டுமின்றி ஊருக்கே சோறு போடும் தவவாழ்வு வேளாண்மைத்தொழில்.

    நாகரிக மாற்றம், சரியான மழைவளம் இன்றிப் போனதால் ஏற்பட்டுள்ள நீர்வளக் குறைவு, சரியான விளைச்சல் இன்மை, ஆட்கள் பற்றாக்குறை, விளைபொருட்களுக்கான சரியான விலையின்மை இடைத்தரகு போன்றவை மூலம் பெருமுதலாளிகளுக்கே இலாபம் கிடைத்தல் வேளாண்மைத்தவிர மற்ற தொழில்களில் குறுகிய காலங்களில்  கிடைக்கும் அதிக வருவாய் போன்றவை வேளாண்மைத்தொழில் குறைந்து வருவதற்கு காரணிகளாக உள்ளன. கிடைக்கின்ற வேளாண்பொருட்களைக் மூலப்பொருட்களாகக் கொண்டு பல்வேறு உபரித் தொழில்கள் செய்வதற்கான வசதிகள் இன்மை ஆகியவையும் வேளாண்மை மீது இளையத் தலைமுறைக்கு அக்கறையும் நாட்டமும் இல்லாமைக்கான காரணங்களாக அமைகின்றன. இதில் உழைப்பு அதிகம் வருவாய்க் குறைவு. ஆனால் நம் மண்ணின் விவசாயிகள் அத்தனைத் தடைகளையும் தயக்கங்களையும் தாண்டி வேளாண்மையை தம் உயிராகக் கருதி செய்து வருகின்றனா். வேளாண்மையை நம்பினோர் கெடுவதில்லை என்பது கண்கூடு.

    “பொன்னேரு” சிறுகதையில் பொன்னேறு கட்டி புதுநெல்லை விதைக்கும் பாரம்பரிய நிகழ்வுகளை அழகாக நம் மனக்கண்ணில் ஓட்டிக்காட்டியுள்ளார்.

    கந்தாயப்பலன் பார்த்தல், விதைநெல் ஊறவைத்தல், நாற்றங்கால் ஓட்டி தெளியவைத்தல், மறுநாளில் முளைக்கட்டிய விதைநெல்லை சுமந்து சென்று விதைத்தல், அவல் இடித்தல் போன்ற நிகழ்வுகளை படம்பிடித்துள்ளார். பொன்னேறு பூட்டி உழுதல் நிகழ்வை

    “சித்திரையில் புதுமழை பொழிஞ்சா பொன்னேரு கட்டுவாங்க. ஈரம் பதமா இருக்கும்போது நல்லநாள் பார்த்து கலப்பைக்கு புது கொழு மாட்டி மாடுகளை குளிப்பாட்டி மஞ்சள் குங்குமம் வச்சி சனி மூலைக் கழனியில புள்ளையார புடிச்சி தயாராய் இருக்கும் தேங்கா உடைச்சி ஏர் பூட்டுவாங்க”2 என்று ஒவ்வொன்றையும் பண்பாட்டு முறைகளோடு செய்து ஏற்றம் இறைத்து நீர்பாய்ச்சி பயிர்விளைவித்து வந்த நிலம் தாத்தாவிற்குப்பின் அப்பாவும் பெரியப்பாவும் பாடுபட்டு நெல்லும் மணிலாவும் தானியங்களும் விளைந்த பூமி.

    காலமாற்றத்தில் விளைச்சல் குறைந்து வேளாண்மையே அருகிப்போன நிலையில் கம்பெனிகள் விளைநிலங்களை ஆக்கிரமிப்பு செய்து அழித்து வரும் அவலநிலையைச் சுட்டி  கதையை முடிக்கிறார். கம்பெனிகளின் முள்வேலிக்குள் அகப்படாமல் பிடிவாதமாய் நிற்கும் நிலம் காலத்தின் கையில் புதிராய் நிற்கிறது என்று வேளாண்மையின் இன்றைய அவல நிலையை இக்கதையில் உணர்த்தியிருக்கிறார்.

    கிராமத்து மனிதர்கள்

    செஞ்சிதமிழினியன் தன் கதைகளில் கிராமத்தையும் அதில் வாழும் மனிதர்களையும் அவா்களது வாழ்வியலையும் மிக நுணுகிப் பார்த்து எழுதியுள்ளார்.

    “கதைகளுக்கான கருவைத் எங்கும் தேடி அலையவேண்டியதில்லை. காதுகளையும் கண்களையும் திறந்து வைத்திருந்தாலே போதுமானது.வாழ்வில் நடக்கும் அத்தனையும் கதைக்கு உரியதாகும்”3 என்கிறார் மா.இராமலிங்கம்.

    கிராமத்து மக்கள் மண்ணை நேசிப்பவா்களாகவும் மற்ற மனிதர்களோடு அன்பும் பாசமும் கொண்டவா்களாகவும் சக மனிதர்களுக்கு உதவக்கூடியவா்களாகவும் நேர்மையாளா்களாகவும் இருப்பதை தமதுக் கதைகளில் எடுத்துக் காட்டியுள்ளார்.

    ‘செத்துப்போன பூமி’ சிறுகதையில் வரும் பழமலை தாத்தா, விதைநெல் தாத்தாவாகவே அறியப்படுகிறார். செஞ்சி தமிழினியனின் சிறுகதைத் தொகுப்பில் முடிமணியாக இக்கதை அமைகிறது.

    பழமலை தாத்தாவுக்கு மகன்கள் இருந்தாலும் பணிநிமித்தமாக நகரங்களில் குடும்பத்தோடு தங்கிவிட தாத்தா மட்டும் தன் தம்பி மகள் உதவியோடு தன் ஊரோடே இருந்துவிடுகிறார். தன் ஊரையும் தன் நிலத்தையும் விட்டுப் பிரிய அவருக்கு மனமில்லை.

    தன் மகனின் நகரத்தில் உள்ள அடுக்கக குடியிருப்பின் புதுமனை புகுவிழாவிற்கு சென்றாலும் விழா முடிந்தததும் உடனடியாக கிராமத்திற்குச் சென்றுவிட வேண்டும் என்று பிடிவாதமாக கிளம்பிவிடுகிறார்.

    பிள்ளைகளும் பேத்திகளும் எவ்வளவு வற்புறுத்தியும் பிடிவாதமாக ஊரோடே தங்கி வாழ்கிறார். பாசி படிந்த குளத்தில் குளிப்பது, இரண்டு வேளை உணவே உண்பது, தன் தம்பி மகள் மலரின் மகள் அம்முவைக் கொஞ்சுவது எல்லாவற்கும் மேலாய் விதைநெல் கேட்டுவரும்  அனைவருக்கும் அளந்து கொடுத்து வேளாண்மையை அழியாமல் காப்பது ஆகியவை  வாழ்வியலாகக் கொண்டு வாழ்பவா். நாகரிக மாற்றத்தில் விளைநிலங்கள் எல்லாம் வீட்டு  மனைகளாகவும் கார்ப்பரேட் கம்பெனிகளின் ஆக்கிரப்பிலும் செல்வதைக்கண்டு மனம்பதைக்கிறார். படுத்த படுக்கையாகிறார். உயிரையே விட்டுவிடுகிறார்.

    “அவரை சுத்தி மூட்டை முடிச்சுகளாய் நிறைய இருந்தது. எல்லாம் நெல்லு கெவுரு வரகு தெனைன்னு வெதைங்க. விதைகளை நடை பாவாடை மேலே கொட்டினாங்க. வெத நெல்லு மேல மேல தாத்தா நடந்து போனாரு”4

    என்று தன் மண்ணையும் விவசாயத்தை உயிராக எண்ணி வாழ்ந்த மனிதர் தன் தலைமுறையிலேயே தன் கண்முன்னாலேயே கலர் கொடிகள் ஆடி வீட்டு மனைகளாகி

    அருகுவதைப் எண்ணி மனம்நொந்து உயிரைவிடும் நிலையினை படம்பிடித்துக் காட்டுகிறார் ஆசிரியா்.

    “இரக்கம்” சிறுகதையில் ஈச்சூா் நாமக்கார தாத்தா  சட்டை அணியாதவராகவும் ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டு தூய்மையாக குளித்து முடித்து நாமம் இட்டு பூஜை செய்த பிறகே உண்பவராகவும் பக்கத்து வீட்டாரின் சொந்தக்காரராக இருந்தாலும் நாயகனை பாசத்துடனும் பரிவுடனும் நேசிப்பவராகவும் இருக்கிறார். பஜனைப்பாடுதல், படைத்த

    உணவுப்பொருட்களை  அண்டையிலுள்ள குழந்தைகளுக்கு வழங்குகிறார்.

    பொய்பேசாதவராகவும் மாமிசம் உண்ணாதவராகவும் ஊரில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பவராகவும் இருக்கிறார். அத்தகு மனிதர் வாழ்வு முடிந்து இறந்துவிடுகிறார். நாயகன் இறப்புச் செய்தியறிந்து ஊருக்குச் செல்கிறார். அவரின் இறுதிச் சடங்கில் சனிக்கிழமை என்பதால் பாடையில் அறுப்பதற்கு கோழிக்குஞ்சு கட்டப்பட்டிருப்பதைக் கண்டு அதனை மற்றோர் அறியாதவாறு பறக்கவிட்டுவிடுகிறார் நாயகன்.

    “சாவுறதுக்கு முன்ன வரைக்கும் ஒரு உயிருக்கும் தீங்கு நெனைக்காம வாழ்ந்தவரு அமைதியா பாடையில போய்க்கொண்டு இருந்தாரு”5.

    கிராமத்தில் எவ்வுயிர்க்கும் தீங்கு நினைக்காத ஈகைகுணத்தோடும் வைதீகத்தோடும் வாழக்கூடிய எளிய மனிதர்களை அடையாளங் காட்டுகிறார் ஆசிரியா்.

    “கைமாறும் ஈச்சங் குச்சிகள்” கதையில் பச்சைத்துண்டுக்காரா், மனைவி இறந்துவிட்டபின் பிள்ளைகள் நகரங்களில் சென்று தங்கிவிடுகின்றனா். தனியொரு மனிதராக சோர்ந்து

    உக்கார்ந்துவிடாமல் விஷேசங்களில் நேர்மையான சமையல் மேற்பார்வையாளராகவும் சந்தைக்கு ஆடுகளையும் மாடுகளை ஓட்டிச்சென்று உதவுபவராகவும் இருக்கிறார்.வலிவும் இளமையும் சுறுசுறுப்பும் இருந்தும் வீணாகச் சுற்றித் திரியும் இளைஞர்களுக்கு மத்தியில்  எந்த வேலை செய்தாலும் சுறுசுறுப்பாகவும் நேர்மையாகவும் பொய் சொல்லாதவராகவும் எளிய உணவுமுறை கடைபிடிப்பராகவும் தனக்குக்கிடைத்த உணவை பிறா் உயிர்களுக்கும் கொடுத்து ஈகைகுணம் மிக்கவராகவும் ராமசாமி தரகா் போன்ற ஏமாற்றுக்காரர்களை மன்னிப்பவராகவும் உள்ளார்.

    “வெள்ளை வேட்டி பலராம நாயுடு” கதையில் வரும் நாயுடு நகரத்து பட்டு ஜவுளிக்கடைகளுக்கு வாடிக்கையாளா்களை அழைத்துச் சென்று உதவும் வேலை செய்கிறார். அதன் மூலம் வரும் சொற்ப வருமானத்தில் குடும்பம் நடத்தி பெண்பிள்ளைகளை கரை சேர்ப்பவராகவும் தன் உழைப்பில் சேர்த்த பணமென்றாலும் அதை முதலாளிக்குத் தெரியாமல் எடுக்கக்கூடாது என்ற எண்ணம்கொண்டவராகவும் உள்ளார்.காலமாற்றத்தில் கடை ஊழியா்கள் தன்னை அவமானப்படுத்தும்போதும் அதை பொறுத்துக்கொள்பவராகவும் படைக்கப்பட்டுள்ளார்.

    இவ்வாறு கிராமத்து மனிதர்கள் நேர்மையும் உழைப்பும் அன்பும் எளிய வாழ்வும் கொண்ட மனிதர்களாக வாழ்ந்து உலகையும் வாழ வைக்கும் பாங்கை தனது கதைகளில் வடித்து கதைகளை அழகுப்படுத்துகிறார் செஞ்சிதமிழினியன்

    பெண்ணியம்

    செஞ்சி தமிழினியன் கதைகளில் வரும் பெண்கள் ஆண்களுக்கு நிகராக உழைப்பும் நேர்மையும் வாழ்ந்து காட்டும் துணிவும் கொண்டவா்களாகப் படைக்கப்பட்டுள்ளனர்.

    “மாற்றம்” சிறுகதையில் சரசு தன் வீட்டுக்கு மூன்றாவது தெருவில் இருக்கும் முறைப்பையனான சங்கருக்கு பெண்பேசி நிச்சயதார்த்த நிகழ்வு நடந்துகொண்டிருக்கிறது.

    நிகழ்வில் பெண்ணுக்கு எத்தனை சவரன் போடுவீா்கள் எனவும் வண்டி வாங்கித்தரவேண்டும் என்று நிர்பந்திக்க சரசு சங்கரைப் பார்க்கிறாள். அவனும் மௌனமாக இருக்க அணிந்திருந்த மாலையை கழட்டிவிட்டு துணிந்து வந்து சபையில் பேசுகிறாள்.

    ”பெண் உரிமை என்பது என்னவெனில் ஆண்களைப்போலவே பெண்களுக்கு வீரம், வண்மை, கோபம், ஆளுந்திறன் உண்டென்பதை ஆண்மக்கள் ஒப்புக்கொள்ள வேண்டும் என்பதே ஆகும்”6 என்கிறார் தந்தை பெரியார்.

    தன் தகப்பனால் நகைநட்டு மட்டுமே போடமுடியும்.அதற்கே கடன்வாங்கிதான் போடமுடிகிறது.

    இதில் வண்டி வேறு வாங்கித்தர முடியாது எனவும் அப்படியே வாங்கினாலும் அக்கா வீட்டுக்காரருக்கும் செய்ய வேண்டும் என்றும் கூறுகிறாள். அப்படியென்றால் என் அண்ணன் மகளையே கட்டிவைப்பேன் என சங்கரின் அம்மா கூற சங்கர் எதுவும் கூறாமல் நிற்கிறான்.

    “இன்னும் மூணு வருஷத்துக்குப் பிறகு கல்யாணத்தை வெச்சிக்கலாம். கே.வி தியேட்டர்ல புதுசா செல்போன் தயாரிக்கிற கம்பெனி வந்திருக்குதாம். மாசம் ஐயாயிரம் ௹பா தர்றாங்கலாம். நானும் நாளைக்கு போய் சேர்ந்துட்றேன் என்றதும் கண்கள் ஈரமானது”7

    சொந்தமாக இருந்தாலும் நகைநட்டும் வண்டியும் கொடுத்தால்தான் திருமணமென்றதும் அதை நிறுத்திவிட துணிகிறாள். ஆனால் சங்கரின் அன்புக்கும் தந்தையின் வண்டி வரதட்சணை கொடுக்க முடியாத நிலைக்கும் இடையில் சிக்கித்தவிக்கும் சரசு தான் உழைத்து பொருளீட்டிய பின் திருமணம் வைத்துக்கொள்ளலாம் என துணிந்து வேலைக்குப் புறப்படும் புதுமைப் பெண்ணாகப் படைக்கப்பட்டுள்ளாள்.

    “கைம்மாறு” சிறுகதையில் குடிகார கணவனுக்கு வாக்கப்பட்ட கிழவி பெருமாத்தா அடிக்கடி கணவனோடு ஏற்படும் சிறுசிறு சண்டைகளிலும் அவனிடம் அடிபட்டாலும் கணவனை விட்டுக்கொடுக்காது வாழ்கிறாள். மளிகை கடை அண்ணாச்சிக்கு முதன்முதலாக கடைவைக்க இடம்பிடித்துக் கொடுத்துதவினாள். அவள் கைராசி மளமளவென அண்ணாச்சி வளர்ந்துவிடுகிறார். அவா் கடையை கூட்டி வாருவது, கோலம் போடுவது கடைப்பொருட்களை முறத்தில் புடைத்து சுத்தம் செய்து தருவது, அவா் வீட்டு சுபநிகழ்வுகளில் பொறுப்பாக பொருட்களை பாதுகாப்பது என எல்லாவற்றையும் மிக்க நேர்மையுடனும் அர்பணிப்புடனும் செய்கிறாள்.அவள் கணவனால் அடிபட்டு உடல்நலமின்றி வேலைக்கு வராததை அறிந்து அண்ணாச்சி மருத்துவ உதவி பண உதவி செய்து கைம்மாறு செய்கிறார்.

    பெருமாத்தா போன்ற பெண்கள் தனது கணவன்மார்கள் எவ்வளவு துன்புறுத்தினாலும் தன் பொறுமையெனும் பெருமை குணத்தால் குடும்ப வாழ்வில் நிலைத்து வெற்றிபெறுபதை

    “எவ்வளவுதான் இன்னமும் வம்பு பன்னிக்கிட்டு கிழவன் முனியன் திரிஞ்சாலும் மன்னிக்கிற பக்குவந்தா பெருமாத்தா கிழவியோட மனசு”8 என்று அழகாக வெளிப்படுத்தியுள்ளார் ஆசிரியா்.

    வைராக்கியத்தோடு சாதித்துக்காட்டியவள்

    “அங்கீகாரம்” சிறுகதையில் மலர் தன் வீட்டாரின் எதிர்ப்பையும் மீறி தன் மாமனான கணேசனை திருமணம் செய்து கொண்டு வாழ்கிறாள். தன் வாழ்வுக்கு அடையாளமாக பழனியை பெறுகிறாள்.

    மாமன் தன்னோடு சண்டைப்போட்டுக் கொண்டு ஊரைவிட்டும் மலரை கைவிட்டும் சென்றுவிட ஊரார் சொந்தம் பந்தம் என அத்தனையும் கைவிட தன் உழைப்பொன்றே துணையாய் வாழ்கிறாள்.சித்தாள் வேலை, பாத்திரம் கழுவும் வேலை, மண்டபங்களில் இலை எடுக்கும் வேலை, பள்ளி ஆயா வேலை என எத்தனையோ வேலைகளை செய்து தானும் பிழைத்து மகன் பழனியையும் காப்பாற்றி வருகிறாள்.

    தள்ளுவண்டியில் இட்லிக்கடை போட்டவள் தண்டல்காரனிடம் வட்டிக்கு பணம் வாங்கி ரோட்டோரமாக பழனி ஓட்டல் நடத்துகிறாள். அதற்கும் மாநகராட்சி மூலம் சாலை ஆக்கிரமிப்பு என சோதனை வந்து காலி செய்கின்றனர். எனினும் பதிமூன்று ஆண்டுகளாக வைராக்கியமாக அவள் கணவனுக்குச் சொந்தமான பூக்கார தெருவில் இருக்கும் காலி இடத்திற்குச் செல்லாதவள் தன் மகனுக்காக சென்று அங்கு குடிசைப்போட்டு கடை நடத்துகிறாள். மீண்டும் கலெக்டா் மாறிவிட்டதாகவும் ஓட்டல் நடத்திய பழைய இடத்திலேயே ஓட்டல் நடத்தவும் வாய்ப்பு கிடைக்கிறது என கதையை முடிக்கிறார் ஆசிரியா்.

    ஏழ்மையிலும் செம்மையாக வாழநினைத்தவள் கணவனால் கைக்குழந்தையோடு நிர்கதியாகவிடப்படுவதும் தன் உழைப்பால் முயற்சியால் பல்வேறு வேலைகளையும் செய்து முன்னேறுவதும் வாழ்வில் ஏற்படும் பல்வேறு தடைகளையும் தாண்டி முன்னேறியதை

    “எனக்கென்ன தலையெழுத்தா? அவன் ஒழுங்கா இருந்திருந்தா இப்படி எல்லாம்

    கேக்க வேண்டியதில்லை.

    அம்மா வீட்டு ஆதரவும் மாமியார் வீட்டு ஆதரவும் இல்லை. தனிக்குடித்தனம்தான் என்பொழப்பு.

    பதிமூணு வருஷமா தனியெ இருந்திருக்கன்னா சும்மாவா? எப்படி எல்லாம தப்பிச்சி வந்திருக்கேன் தெரியுமா?

    கணேசன் நடந்து வர்ற மாதிரியே இருக்கு அப்படியே உன் அப்பன உரிச்சி வச்சிருக்குறடா” என்று சொன்னதும் மலரு கண்கலங்கினாள்.கணேசன் கூட வாழ்ந்த வாழ்க்கைக்கு அங்கீகாரம் கெடச்சது போல இருந்தது.”9. என்று கணவனின் துணையின்றி தனியொருவளாக வாழ்ந்துகாட்டும் வைராக்கியமான பெண்ணைப் படைத்துக்காட்டியுள்ளார்.

    பழங்குடியினா் வாழ்வு

    தொல்குடியினரான பழங்குடியினா் வாழ்வு இருபத்தோராம் நூற்றாண்டிலும் விடியாமல் இருப்பதை தனது கதைகளில் விவரித்துள்ளார் செஞ்சிதமிழினியன். அவா்கள் அன்றாடங் காய்ச்சிகளாய் உணவுக்காய்  மட்டும் அலைய வேண்டியுள்ளது. கல்வி போன்ற உரிமைகளும் சரிவர வழங்கப்படவில்லை. கல்வி, வேலைவாய்ப்பு, அரசின் சலுகைகள் ஆகியவை பெற சாதிசான்றிதழ் போன்ற சான்றிதழ்கள் இலஞ்சம் கொடுக்க முடியாத காரணத்தால் கிடைக்காமல் இருப்பதால் பழங்குடி இனத்தைச் சேர்ந்த வண்டுவின் மகன் மாரி பள்ளிக்கூடம் சென்று படிக்க முடியாத நிலையை விவரித்துள்ளார்.

    “ஒரு குறிப்பிட்ட காலத்துச் சமூக நிலைமையின் பிரத்தியேகமான பண்புகளமைந்த பாத்திரங்களைக் கண்டறிந்து படைப்பவனே சமூக நாவல் ஆக்குகிறான்”10 என்கிறார் கைலாசபதி.

    ‘சில்லாக்கோல்கள்’ கதையில் ஊர்த்தலைவரின் வீட்டில் பாம்பு புகுந்துவிட மீசைக்காரா் வண்டுவும் அவரது மகன் மாரியும் சென்று பாம்பை பிடித்து அவா்களை பேராபத்திலிருந்து காக்கின்றனா். அப்பேருதவிக்குப் பிறகு அவா்கள் கொடுக்கும் மரியாதையும் பொருளும் அவா்களை திகைக்க வைக்கிறது.அவா் வீட்டை முதன்முதலாக உள்ளேச் சென்று பார்க்கின்றனா். அவா்கள் அடகு வைத்த அண்டா உள்ளே இருப்பதை காண்கின்றனா்.

    “இத்தினி நாளா ஏண்டான்னு கூப்பிட்டாங்க. இன்னிக்கு வாப்பா வண்டுன்னு கூப்பிட்டதுல பழைய காயத்துக்கெல்லாம் மருந்து போட்ட மாதிரி இருந்தது”11

    என்று அவா்களின் வலிகளை பதிவு செய்கிறார்.

    “ஒண்டி தச்ச ஒத்த கதவு கதை” இக்கதையின் தொடர்ச்சியாக அமைந்து அவா்களின் உழைப்புக்கேற்ற கூலி கிடைக்காத நிலையையும் எலி வளைகளை புகைப்போட்டு வளைகளில் இருக்கும் கழனி நெல்லை எடுத்தும் அதனையும் எங்க நிலத்து நெல்தானே என பறித்துக் கொள்ளும் கயவா்களின் நிலையையும் விளக்கியுள்ளார்.

    “லுங்கி முனையை அவிழ்த்து கொட்ட நெல்லோடு வண்டுவின் கண்ணீர் துளிகளும் சேர்ந்தே கூடைக்குள் விழுந்தன.” 12 என்று பழங்குடியினா்களின் வாழ்வியலை எடுத்துக்காட்டுகிறார்.

    விலங்குகள்

    கிராமத்தில் எல்லோர் வீடுகளிலும் பசு, எருது, பூனை, நாய்  என விலங்குகள் இருக்கும்.அவை அவா்களது வீடுகளில் ஓர் உறுப்பினராகவே வாழும்.குழந்தைகளில் பெண்களை வெறுப்பவா்கள் விலங்குளில் ஆணினத்தை வெறுப்பார்கள். பசுவும் ஆடும் பெண்ணாக இருப்பதால் குட்டி ஈனும் பால் தரும். இலாபம் தரும்.

    ஊருக்கு ஊர் தமட்டைகள் எனும் ஆண் இனமான எருதுகள் இனவிருத்திக்குப் பயன்படும்.

    இன்று அவை இல்லாத காரணத்தாலே செயற்கை முறையில் ஊசிகள் போட்டு கருவுற செய்ய வேண்டியுள்ளது. இதனால் நாட்டுவகை மாடுகள் கிடைப்பது அரிதாகிறது.

    “ஊராகாலி” சிறுகதையில் தன் இஷ்டப்படி சுற்றித்திரிந்து மேய்ந்து தண்ணீர் குடித்துவாழும் தமட்டை ஊரார்க்கு பயிரை மேய்தல் கொட்டகை மாடுகளை பாய்தல் போன்ற பெருந்தொல்லைகளை கொடுக்கிறது.

    “அது பொலியெருது. அதுக்கு கட்டுதலையே கெடையாது. யார் வீட்டு தொட்டியிலயும் தண்ணிக் குடிக்கும். அது மேய்ஞ்சா வெள்ளாம அதிகமா வெலையுமுன்னு நம்புவாங்க”13

    சில இளைஞா்கள் கூடி அதனை பிடித்து மூங்கணாங்கயிறு குத்தி பட்டியில் அடைப்பதும் இறுதியில் அது பூம்பூம் மாட்டுக்காரனிடம் தலையாட்டிக் கொண்டிருக்கும் சூழலையும் விவரிக்கிறார்.

    “டைகர் இருந்த சில நாட்கள்” கதையில் மகள் ராஜியின் விருப்பத்திற்காக நாய்க் குட்டி வாங்கி வளா்கிறார்கள். அதற்கு  டைகர் என பெயரிட்டு கழுத்துச் சங்கிலி பால் பிஸ்கட் வாங்கி கொடுக்கின்றனா். அது ஒரு நாள் தங்கை மகன் கார்த்தியை அது கடித்துவைக்க அதனை தூரத்தில் கொண்டு போய் விட்டுவிட்டு வருகின்றனா். கிராமங்களில் ஒரு உறவாகவே இருக்கும் நாய் நகரங்களில் தேவையற்ற தொல்லையாவதை விளக்கிக்காட்டுகிறார் ஆசிரியா்.

    “வெத்தல பாக்கு பையி” கதையில் தன் பையில் வைத்திருந்த ஒற்றை ஐம்பது ௹பாயை நடத்துநரிடம் கொடுக்கும் காற்றில் பறக்கவிட்டு நிர்தாட்சண்யமாக நடுத்தெருவில் இறக்கிவிடப்படும் மூதாட்டியின் நிலையை விளக்கியுள்ளார்.

    தன் முந்திரிக்கொட்டை அறிவினால் கோபப்பட்டு தன்னை அடித்துவிட்ட ஆசிரியைக்கு முருங்கைக்காயை கொண்டு வந்து கொடுக்கும் சிறுமியின் மூலம் ஆசிரியா் மாணவா் உறவின் பெருமையை “உன்னத உறவுகள்” கதை மூலம் விளக்கியுள்ளார்.

    முடிபுகள்

    1.இன்றைய நாகரிக வளர்ச்சியினால் கிராமமும் விவசாயமும் அழிந்து வருவதையும் தொழிற்சாலைகளும் நகரமயமாதலினால் விவசாய நிலங்கள் வீட்டு மனைகளாகவும் மாறி வருவதன் வேதனையை வெளிப்படுத்துகிறார்.

    2.விதைநெல் தாத்தா, ராமசாமிக்கவுண்டா், ஈச்சூா் நாமக்கார தாத்தா போன்ற பெரியோர்கள் கிராமியமும் விவசாயமும் நெறிப்பட்ட வாழ்வும் அருகி வருவதை எண்ணி வருந்துவதாகப் படைத்து அவா்களின் ஆதங்கத்தின் வழி தன் மனக்குமுறலை வெளிப்படுத்தியிருக்கிறார்.

    3. பழங்குடியினா் கல்வி, வேலைவாய்ப்பு, வாழ்க்கை நிலை ஆகியவற்றில் முன்னேற்றம் பெற்று வாழ்வில் உயர வேண்டும் என விழைகிறார்.

    4. பெண்களில் சரசு, பெருமாத்தா, மலர் போன்றோர் ஆண்வர்க்கத்தால் வஞ்சிக்கப்பட்டாலும் தங்களது விடாமுயற்சியாலும் உழைப்பாலும் சாதித்துக் காட்டுவதை படைத்து பெண்கள் எந்த சூழலிலும் நெருக்கடியிலும் துவண்டு விடாமல் மன உறுதியோடு உழைத்து முன்னேற வேண்டும் என்று விழைகிறார்.

    5. பச்சைத்துண்டுக்காரா், வெள்ளை வேட்டி பலராம நாயுடு போன்ற பெரியோர்கள் உறவுகளால் கைவிடப்பட்டாலும் ஏமாற்றப்பட்டாலும் உண்மையும் உழைப்பும் கொண்டு வயதான காலத்திலும் தன் சொந்தக்காலில் நின்று வாழ்வதை உணர்த்தி இன்றைய இளைஞர்களில் சிலர் தற்காலிமாக ஏற்படும் தோல்விகளாலும் ஏமாற்றங்களாலும் நெறி தவறி தீய வாழ்வையும் குறுக்கு வழிகளையும் பின்பற்றி வாழக்கூடாது. நெருக்கடியான நேரங்களிலும் உழைத்து வாழவேண்டும் என வலியுறுத்துகிறார்.

    6. தாம் வாழ்ந்த கிராமத்தையும் சந்தித்த மனிதர்களையும் நன்கு அனுபவித்து உள்வாங்கி இருப்பதால் அவா்களது உணர்வுகளையும் வாழ்வியலையும் குணாதிசயங்களையும் முரண்களையும் எளிதாக கதைகளாக்கி தந்து படிக்கும் வாசகர் மனங்களை செம்மையுறுத்தியுள்ளார் செஞ்சிதமிழினியன் என்பது தெளிவாகிறது.

    சான்றெண் விளக்கம்

    1. அகிலன்- கதைக்கலை ப.23 பொற்கொடி வெளியீடு சென்னை-1987
    2. செஞ்சி தமிழினியன்-ஊராகாலி சிறுகதை நூல்-பொன்னேரு-ப.18- விதைநெல் எண்.1,பாரதிதாசன் தெரு, பெரியகரம், செஞ்சி- மே 2019.
    3. இராமலிங்கம் மா.-இருபதாம் நூற்றாண்டு தமிழ் இலக்கியம் ப.63 தமிழ் புத்தகாலயம்- சென்னை-1972.
    4. செஞ்சி தமிழினியன்-ஊராகாலி சிறுகதை நூல்-செத்துப்போன பூமி ப.32 விதைநெல் எண்.1,பாரதிதாசன் தெரு, பெரியகரம், செஞ்சி- மே 2019.
    5. மேற்கூறிய நூல்-இரக்கம் ப.73
    6. பெரியார் ஈ.வெ.ரா பெண் ஏன் அடிமையானாள் ப.24- பெரியார் சுயமரியாதை பிரசுர நிறுவனம்-சென்னை-21 ஆம் பதிப்பு-2001.
    7. செஞ்சி தமிழினியன்-ஊராகாலி சிறுகதை நூல்-மாற்றம் ப.103- விதைநெல் எண்.1,பாரதிதாசன் தெரு, பெரியகரம், செஞ்சி- மே 2019.
    8. மேற்கூறிய நூல்-கைம்மாறு ப.120.
    9. மேற்கூறிய நூல்-அங்கீகாரம் பக்கங்கள் 37-39-41.
    10. கைலாசபதி.க தமிழ் நாவல் இலக்கியம் ப.224- குமரன் பப்ளிஷர்ஸ்- சென்னை-1999.
    11. செஞ்சி தமிழினியன்-ஊராகாலி சிறுகதை நூல்-சில்லாக்கோல்கள் ப.61 விதைநெல் எண்.1,பாரதிதாசன் தெரு, பெரியகரம், செஞ்சி- மே 2019.

        12 மேற்கூறிய நூல்-ஒண்டி தச்ச ஒத்த கதவு ப.96

    1. மேற்கூறிய நூல்- ஊராகாலி- பக்கங்கள் 45-46.

    ஆய்வறிஞர் கருத்துரை 

    கட்டுரையாளர் சிறுகதைத் தொகுப்பைப் படித்து முழுமையாக உள்வாங்கியுள்ளார். நகர வளர்ச்சி காரணமாக விளைநிலங்கள் வீணாக்கப்படும் சூழலையும் விவசாயம் சிறுக சிறுக அழிந்து வரும் சூழலையும் இக் கதைகள் மூலமாக சிறப்பாக எடுத்துக் கூறியுள்ளார். இன்றைய நவீன உலகமும் கிராம வாழ்க்கையும் எண்ணெயும் தண்ணியும் கலந்ததுபோல ஒட்டாமல் இணைந்திருப்பதும் மனிதர்கள் போலிமையான உறவு நிலையே தேவையானது என்ற வாழ்க்கைப் போக்கும் இன்றைய மனிதனைக் கேள்விக்குறியாக மாற்றியுள்ளதை இக்கட்டுரை சிறப்பாக எடுத்துக் கூறியுள்ளது. இன்றைய காலத்தின் இருவேறு உலகங்களை இதன்மூலம் அறிந்துகொள்ளவும், புரிந்துகொள்ளவும் முடிகிறது. கதைகளை விளக்கமுறையில் எடுத்துக்கூறுவதே பெரும்பாலும் நிகழ்ந்துள்ளது. சூழலியல் மாற்றம் (Climate change) சார்ந்த ஆய்வுத் தளத்திற்குப் பல கதைகளைக் கொண்டுசெல்ல முடியும். எனவே, இதை இலக்கியக் கட்டுரையாக வெளியிடலாம்.

     

    Share
  • பழகத் தெரிய வேணும் – 77

    பழகத் தெரிய வேணும் – 77

    நிர்மலா ராகவன்

    கஷ்டப்படு, வலிமை பெருகும்

    “கொடுத்துவைத்தவன்! பணக்கார வீட்டுச் செல்லப்பிள்ளை! கேட்டதெல்லாம் கிடைக்கிறது!”

    இவ்வாறு பிறரது பொறாமைக்கு ஆளாகும் ஒருவன் எந்தவித கஷ்டத்தையோ, துயரத்தையோ அனுபவித்திருக்கமாட்டான். அவன் அதிர்ஷ்டசாலிதானா?

    இல்லை. வாழ்வில் இடர்களைச் சந்தித்து, அவைகளிலிருந்து விடுபடும் முயற்சிகளால்தான் ஒருவன் வலிமை பெறுகிறான்.

    மாணவர்களிடமிருந்து நான் கேட்டறிந்த கதை

    காவல்துறையில் பெரிய பதவி வகித்திருந்தவரின் மகன் என் மாணவன் ரசாலி. அதனாலேயே, அவன் வயதுப் பையன்கள் செய்ய அஞ்சிய காரியங்களைத் துணிந்து செய்தான்.

    பதினான்கு வயதில், தான் எவ்வாறு நீலப்பட வீடியோக்களைக் கடையிலிருந்து வாங்குகிறோம் என்பதைப் பெருமையுடன் தெரிவித்தபோது, எவ்வித உணர்ச்சியையும் வெளிக்காட்டாது கேட்டுக்கொண்டேன்.

    தன் வகுப்பு நண்பர்களிடமிருந்து காசு வசூலித்து, யார் வீட்டிலேயாவது அவற்றைப் போட்டுக்காட்டுவான். (உடன் வரும் பெண்களுக்கு இலவசம்). அச்சமயத்தில் அவர்கள் `glue sniffing” என்ற முறையில் போதை அடைந்திருப்பார்களாம்.

    “அப்படியென்றால் என்ன?” என்று நான் அசட்டுத்தனமாகக் கேட்க, ஆசிரியைக்கே போதிக்கும் வாய்ப்பு வந்ததே என்ற மகிழ்ச்சியுடன், என்னைச் சூழ்ந்து உட்கார்ந்துகொண்டு, போட்டி போட்டுக்கொண்டு விளக்கினார்கள் பல மாணவர்கள்.

    அந்த வகுப்பின் மாணவத் தலைவன் ஒருவன் மட்டும் தங்களிடமிருந்து விலகியிருந்தது அவர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது.

    நான் அவனை அழைத்து விசாரிக்க, “பெண்களை இழிவுபடுத்துவதாக இருக்கின்றன இப்படங்கள்! எனக்குப் பிடிக்கவில்லை,” என்றான்.

    போதை மற்றும் படங்கள் அளித்த பாதிப்பால், கைரி என்ற பையன் தன்னுடன் வந்த பெண்ணிடம் தவறாக நடந்துகொள்ள முயற்சித்தான். `வேடிக்கை,’ என்றெண்ணி, அவனது நண்பர்கள் அவளது திமிறலை அடக்கி, உடலுறவுக்கு உள்ளாக்கினார்கள்.

    அவள் கருவுற்றதும்தான் பெற்றோருக்குத் தெரிந்தது. போலீஸ் விவகாரமாகி, பள்ளிக்கூடத்தில் பலரும் வேடிக்கை பார்க்க, கைரியை விலங்கிட்டு அழைத்துப்போனார்கள்.

    ரசாலியோ, “என் தந்தை எனக்குப் பக்கபலமாக இருக்கிறார். எனக்கு என்ன பயம்!” என்று திமிராக என்னிடம் கூறினான்.

    மனம்போனபடி நடக்கலாம், தான் மாட்டிக்கொள்ளாமல் எவராவது பார்த்துக்கொள்வார் என்று, ரசாலியைப்போல் நடப்பவர்களுக்கு மனோபலம் கிடையாது. எத்தனை காலம்தான் பிறரைச் சார்ந்திருக்க முடியும்!

    நான் இச்சம்பவத்தைச் சிறுகதையாக ஒரு பத்திரிகையில் எழுதினேன்.

    ஓராண்டுக்குப்பின், வேற்றூரிலிருந்து ஒருவர் என்னைத் தொடர்புகொண்டார். “என் நண்பனும் அந்த வயசிலே இதே காரியம் செய்து, சிறுவர்கள் சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்பப்பட்டான். இப்போ, நல்லாயிருக்கான். சொந்தமா மினிமார்க்கெட் வெச்சிருக்கான்!” என்று கூறினார்.

    “அவன் நல்லாயிருக்கான்,” என்று, அழுத்தமாகப் பலமுறை கூறினார்.

    `இதை வெளிப்படையாக ஒத்துக்கொள்ளலாமா?’ என்று நீண்ட காலம் யோசித்துவிட்டு, என்னுடன் தொடர்பு கொண்டிருக்கிறார்!

    `நண்பன் செய்தான்’ என்று, தான் செய்ததை வேறு ஒருவரின் தலையில் கட்டப்பார்க்கிறாரோ என்ற ஐயம் எனக்குள் எழுந்தது.

    யாராக இருந்தால் என்ன!

    தவறு செய்து தண்டனை அனுபவித்ததால், நல்லதோர் அனுபவம் கிடைத்திருக்கிறது. இனியும் தவறு செய்யக்கூடாது, நல்ல வாழ்க்கையை அமைத்துக்கொள்ளவேண்டும் என்ற உறுதி பிறந்திருக்கிறது அவருக்கு.

    இப்படிப்பட்டவர்களுக்கு உண்மையை ஒத்துக்கொள்ளும் துணிவும், கடின உழைப்பும் இருக்கும்.

    பழக்கமில்லாத காரியங்களில் ஈடுபடும்போது, அவற்றில் தேர்ந்த பிறரது ஆலோசனையை நாடலாம். அதனால் வலிமை குன்றிவிடாது.

    எவருக்கும் தனக்குள் இருக்கும் திறமை தெரிவதில்லை. எதையாவது இழந்தபின்னரோ, அல்லது ஏமாற்றம் ஏற்பட்டாலோ, ஆழமாகச் சிந்திக்கும்போதுதான் வெளிப்படும்.

    மாறவே மாட்டோம்!

    “என்ன, இப்படி மாறிவிட்டீங்களே!” என்று பிறரைப் பார்த்து அதிசயப்படுகிறவர், `நாங்க மாறவே மாட்டோம்!’ என்று பெருமை பேசுவார்.

    மாற அஞ்சி, ஒரே நிலையில் இருந்தால், புதிய அனுபவங்கள் எப்படிக் கிடைக்கும்?

    புதிய அனுபவங்களை நாடினால், `பிறரது கேலிக்கோ, ஏச்சுப்பேச்சுக்கோ ஆளாகிவிடுவோமோ!’ என்ற அச்சமே பலரை ஒரே நிலையில் இருக்கச்செய்கிறது. அதிகம் யோசிக்காது, பிறரது கட்டுப்பாட்டுக்குள் அடங்கிவிடுவர்.

    மற்றவர்கள் என்ன தவறு செய்கிறார்கள் என்று உன்னிப்பாகக் கவனித்து, அவர்களைக் கட்டுப்படுத்த நினைப்பவர் சுயக்கட்டுப்பாடு இல்லாதவர். ஆனாலும், தலைமைப் பதவியை நாடுபவர்.

    இந்த உண்மை புரிந்து, இத்தகையவர்களை அலட்சியம் செய்தால், முன்னேறலாம்.

    கதை

    தான் மணக்கப்போகிறவர் எப்படி எப்படியோ இருக்கவேண்டும் என்று, (எல்லாப் பெண்களையும்போல்) கனவு கண்டிருந்தாள் சுகன்யா.

    இறுதியில், அவளுக்குக் கொஞ்சமும் பொருத்தமில்லாத ஒருவன் வாய்க்க, `நினைத்ததெல்லாம் நடக்குமா!’ என்று தன்னைத்தானே சமாதானப்படுத்திக்கொண்டாள்.

    அந்த அனுபவத்தால், ஒரு கணவன் எப்படியெல்லாம் இருக்கக்கூடாது என்று புரிந்தது. பிற இளம்பெண்களுக்கு ஆலோசனை கூறினாள்.

    அவர்களில் எத்தனைபேருக்கு அது புரிந்ததோ!

    ஊருக்கு உபதேசம்

    பிறருக்கு அறிவுரை கூறினால், தம் வலிமை பெருகுகிறதென்று பலரும் நம்பி நடக்கிறார்கள்.

    என் சக ஆசிரியை மூன்றாவது முறையாகக் கருவுற்றிருந்தபோது, அவள் உடலில் ஏதோ பாதிப்பு.

    சும்மா விடுவார்களா பிற பெண்கள்?

    அவரவருக்குத் தோன்றியபடி அறிவுரை கூற ஆரம்பித்தார்கள்.

    நான் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன்.

    “ஏதாவது சொல்லுங்களேன்!” என்று என்னை ஒருத்தி வற்புறுத்த, “நான் டாக்டரில்லை. கர்ப்பம் தரித்தவளின் உடலுடன் விளையாடக்கூடாது!” என்றேன் கடுமையாக.

    காற்று போன பலூனைப்போல அவர்கள் சுருங்கிப்போய், கலைந்தார்கள்.

    யாருடன் பழகுவது?

    சிலர் அயல்நாட்டிற்குப் போய் தங்க நேரிட்டாலும், தம் நாட்டவர்களுடன்தாம் பழகுவார்கள். இவ்வாறு செய்வதில் ஒருவித பாதுகாப்பை உணர்ந்தாலும், புதிய அனுபவங்கள் கிடைக்குமா?

    பிறருடன் பழக நேரிடும்போது, நாம் கேலிக்கு உள்ளாகலாம். அது புரிந்தால், பெரிதாக பாதிப்பு அடையமாட்டோம்.

    நான் இறைச்சி உண்ணமாட்டேன் என்று சொல்லக்கேட்டு, “அப்படிக்கூட உயிர் வாழ முடியுமா?” என்றாள் ஒருத்தி, கேலியாக. அவள் உணவில் மாட்டிறைச்சி உண்டு.

    “என்னைப் பார்த்தால், சாகப்போகிறவள் மாதிரியா இருக்கிறது?” என்று பதில் கேள்வி கேட்டு, அவள் வாயை அடைத்தேன்.

    பிழைகளை எப்படித் தவிர்க்கலாம்?

    பள்ளிப் பரீட்சை முடிந்து, வினாத்தாளை மாணவிகளுக்குக் கொடுத்தபின், ஒவ்வொரு கேள்விக்கும் சரியான விடையை கரும்பலகையில் எழுதுவார்கள் சில ஆசிரியைகள்.

    தாம் எங்கு தவறு செய்தோம் என்று சிலருக்குப் புரியும். அடுத்தமுறை, கவனமாக இருப்பார்கள்.

    ஆனால், எல்லாரும் இவ்வகையில் கற்பார்கள் என்பதில்லை.

    வாழ்க்கையிலும் இப்படித்தான். தவறு செய்பவர்களுக்கெல்லாம் அனுபவம் கிடைக்கும் என்பதில்லை. செய்த தவற்றையே மீண்டும் மீண்டும் செய்வதில்லையா!

    சுயதணிக்கை ஏன்?

    எழுத்தாளர்களாக விரும்புகிறவர்களுக்கு என்ன எழுதலாம், எத்தனை நீளம் எழுதலாம், இப்படியெல்லாம் எழுதினால் பெயர் கெடுமோ என்றெல்லாம் ஐயம் பிறக்கும். தவறு செய்யப் பயந்து, யோசித்தபடியே இருப்பதால், எழுதவே மாட்டார்கள்.

    என் அனுபவம்: தோன்றுவதையெல்லாம், சுயதணிக்கை செய்துகொள்ளாது, எழுதவேண்டும். எழுதி முடித்ததும், அதை அப்படியே வைத்துவிட்டு, வேறு வேலைகளில் கவனம் செலுத்திவிட்டு, ஒரு வாரம் கழிந்தபின்னர் அந்த எழுத்துப்படிவத்தைப் படித்துப்பார்த்தால், சம்பந்தம் இல்லாதவை, வேண்டாதவை என்று சில தட்டுப்படும்.

    `கஷ்டப்பட்டு எழுதினேனே!’ என்ற தன்னிரக்கத்திற்கு இடங்கொடாது, அவற்றை வெட்டிவிட வேண்டியதுதான்.

    “முக்கியமான எதுவுமே சொல்லிக்கொடுக்கப் படுவதில்லை” என்கிறார் அயர்லாந்து நாட்டவரும், பிரபல நாடகாசிரியருமான ஆஸ்கர் ஒயில்ட்.

    வாழ்வில் சிறக்க, நாமே கஷ்டப்பட்டுதான் ஆகவேண்டும். யாரும் சொல்லிக்கொடுக்கப் போவதில்லை.

    எதிர்நீச்சல் போடு!

    ஆசிய எழுத்தாளர்களுக்காக நடத்தப்பட்ட ஆங்கிலச் சிறுகதைப்போட்டி ஒன்றின் இறுதிச்சுற்றில் என் பெயரும் இருந்தது.

    `அப்பட்டியலில் இடம்பெற்றிருந்த இருபது எழுத்தாளர்களுக்கிடையே இருந்த ஒற்றுமை’ என்று நீதிபதிகள் எதைக் குறிப்பிட்டிருந்தார்கள், தெரியுமா?

    அவர்கள் அனைவரும் இரு நாடுகளில் வாழ்ந்திருக்கிறார்கள்.

    புதிய நாட்டின் மொழி, மதம், கலாசாரம் போன்றவற்றில் பற்பல வித்தியாசங்களைக் கண்டு, தான் எவ்விதத்திலோ தாழ்ந்துவிட்டோம் என்று அஞ்சி, சுருங்கிவிடாது, தைரியமாக எதிர்நீச்சல் போட்ட அனுபவம் பிறவற்றிலும் கைகொடுத்திருக்கவேண்டும்.

    Share
  • உலகப் புலிகள் தினம் – ஜூலை 29

    உலகப் புலிகள் தினம் – ஜூலை 29

    உலகப் புலிகள் தினத்தில் இந்த வெள்ளைப் புலியைப் பாருங்கள்.
    Watch this in International Tiger Day.
    ஓவியம் – ஜெயந்தி சங்கர்
    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)
    Share
  • சக்தி கானம் 5 – உலகாளும் தாயே

    சக்தி கானம் 5 – உலகாளும் தாயே

    சமயபுரம் மாரியம்மனைக் கொண்டாடும் ‘உலகாளும் தாயே’ என்ற பாடலைக் கேட்டு மகிழுங்கள். சக்தி கானம் இசைப் பேழையிலிருந்து ஐந்தாவது பாடல். ஓம் சக்தி! பராசக்தி!

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • சிரிப்பு யோகா – பயிற்சி 5

    சிரிப்பு யோகா – பயிற்சி 5

    ‘சிரிப்பு யோகா’ தொடரில் ஐந்தாவது பயிற்சியை இன்று வழங்குகிறார், ஹாஹோ சிரிப்பானந்தா. இந்தப் பயிற்சியைத் தொடர்ந்து செய்து வந்தால், நமது முகமே சூரியகாந்திப் பூவைப் போல் மலர்ச்சி உடையதாக மாறிவிடும். செய்து பாருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • ஹரி நாராயணனின் சிரிப்பு யோகா

    ஹரி நாராயணனின் சிரிப்பு யோகா

    ஹாஹோ சிரிப்பானந்தா கற்றுத் தரும் சிரிப்பு யோகாவை, எங்கள் மகன், இரு வயதுச் சிறுவன் ஹரி நாராயணன் செய்கின்றான்.

    இந்தப் பயிற்சியை நீங்கள் செய்யும் காட்சியை வீடியோ எடுத்து எங்களுக்கு அனுப்பினால், அதையும் வெளியிடுவோம். உங்கள் வீடியோ காட்சிகளை annakannan@yahoo.co.in என்ற முகவரிக்கு அனுப்புங்கள். வாட்ஸாப் – 91-9841120975.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • சேக்கிழார் பாடல் நயம் – 138 (அவனுடைய)

    சேக்கிழார் பாடல் நயம் – 138 (அவனுடைய)

    திருச்சி புலவர் இராமமூர்த்தி

    அவனுடைய வடிவு எல்லாம் நம் பக்கல் அன்பு; என்றும்
    அவனுடைய அறிவெல்லாம் நமை அறியும் அறிவு; என்றும்
    அவனுடைய செயல் எல்லாம் நமக்கு இனியவாம்; என்றும்
    அவனுடைய நிலை இவ்வாறு; அறிநீ’ என்று அருள் செய்தார்.

    வரலாறு

    இவ்வாறு அந்தணர் சென்றபின், கையில் ஏந்திய வில்லை  வளைத்துக்  காட்டில்  வேட்டையாடித்  திண்ணனார் செய்த செயலை  மொழிந்து தீவினை தீருவேன் என்று  சேக்கிழார்  மொழிந்தார். மலைச்சாரலின் பாறைக ளிடையே மேய்ந்த  காட்டுப்பன்றிகள், மான் இனங்கள் ஆகியவற்றை  ஒளிந்து நின்று கொன்றார். இவ்வாறு பகல்நேரம் வேட்டையாடினர்.

    வேட்டையாடிய விலங்குகளை  ஓரிடத்தில் சேர்த்து , அவற்றை வாளால் வெட்டித்  துண்டுகளாக்கி, அவற்றையோக் கோலில்  கோத்துத் தேக்கிலையில்  தேனூற்றி, வரிசைப்பட அடுக்கினார். விறகுகளை முறித்து அடுப்பில் அடுக்கி , அரணிக்கட்டையில்,  தீ மூட்டி வளர்த்து. கோலில் கொத்தி எடுத்த இறைச்சிகளை வேகவைத்து, வதக்கி அம்பு நுனியால் கிழித்து  வகிர்ந்து அவற்றின் உறுப்பாகிய தசைகளை ஒரு தேக்கிலையில் வைத்து அவற்றின் சுவை காணாத தொடங்கினார்.

    எண்ணற்ற கடவுளருக்கு இடத்தக்க உணவை வேள்வித் தீயில் வைத்தது போல் திருக்காளத்தி இறைவர்க்கு ஏற்கும் வகையில் தம் வாயில்  இட்டுச்  சுவை பார்த்தார். பதத்துடன் வெந்த இறைச்சியை மீண்டும் தேக்கிலையில் உமிழ்ந்து, தேனைக் கலந்து, எடுத்துக்கொண்டு வழக்கம் போல் பூமாலையைத் தலையிலும்,  தூய அபிடேக நீரை  வாயிலும் எடுத்துக் கொண்டு மலைக்கு வந்து சேர்ந்தார். அவ்வாறு  வந்து காளத்தி மலை ஏறி காட்டில் திரிவோர்க்குத் தலைவனாகவும், தேவர்களின் தலைவராகவும்  விளங்கும் இறைவனை அடைந்து, முன்பு அந்தணர் செய்த பூசை அடையாளங்களை அகற்றி தாம்  செய்த பூசையையே மீண்டும் செய்து முடிப்பார்.

    தேக்கிலையில் ஊனையும் அமுதையும்  வைத்து, ‘’ இன்று மற்ற நாளை விட விடச்  சுவையாக இருக்கும்; பன்றி, மான், வரையாடு, கடமான் இவற்றின் உறுப்புக்களால்  நான் அமைத்த இறைச்சி அமுதை முன்னதாக, அடியேனும்   சுவைத்துப் பார்த்தேன்; தேனோடு  கலந்த இவ்வுணவு தித்திக்கும்!’’ என்று தாயன்போடு கூறினார்;  இவ்வாறே உணவூட்டி  தம் ஒப்பற்றது பூசைகளைச்  செய்து, மேலும் மேலும் பெருகிய அன்புடன் இரவெல்லாம் சிவனெதிரில் உறங்காமல், இரவில் வேட்டையாடிய  பொருள்களுடன் வந்து சேருவார்;

    சிவகோசரியாரும் நாள்தோறும் வந்து, காட்டுவேடர் தலைவராகிய திண்ணனார் செய்த பூசையைக் கண்டு மிகவும் மனத்தளர்ச்சி யடைந்து, அப்பூசை அடையாளங்களை நீக்கித்  தாம் கடைப்பிடிக்கும்  ஆகமவிதிப் படியே  தம்மாலான அருச்சனை செய்து வந்தார்.

    ஒவ்வொருநாளும்  சிவகோசரியார் வந்து, வேடன் செய்த பூசை கண்டு தளர்ச்சியடைந்தார். அது தீமை என்றெண்ணி ஆகம விதிப்படி அருச்சித்தார். திண்ணனாரின் உறவினர்கள் அவரிடம் பலவாறு பேசியும் அவர் கேளாமையால் அவரைக் கைவிட்டனர்.

    முன்னமே திருக்காளத்தி இறைந திருவருட் பார்வையால் திண்ணனார் வேதியில் வைத்த இரும்பு பொன்  ஆனாற்போல் தான் என்ற உணர்வு நீங்கி, இருவினைகளும் விளக்க மும்மலமும் அற்று அன்பே வடிவமாய்த் திரிந்தார். அதனை அறியாத  சிவ வேதியர், ‘’என்தலைவரே, இவ்வாறு தவறு  செய்தாரை நீங்களே தண்டிக்க வேண்டும் ‘’ என்று வேண்டினார்.

    அன்றிரவு  வேதியர் கனவினுள் சிவபெருமான் காட்சி தந்தார். அவனை வலிமை மிக்க வேடுவன் என்று நினைக்காதே! அவன் செய்த நற்செயலை நானே கூறுகிறேன், கேள்.”   என்று கூறியதாக  சேக்கிழார் பாடுகிறார்.

    ‘அவனுடைய வடிவு எல்லாம் நம் பக்கல் அன்பு; என்றும்
    அவனுடைய அறிவெல்லாம் நமை அறியும் அறிவு; என்றும்
    அவனுடைய செயல் எல்லாம் நமக்கு இனியவாம்; என்றும்
    அவனுடைய நிலை இவ்வாறு; அறிநீ’ என்று அருள் செய்தார்.

    விளக்கம்

    வடிவெல்லாம் நம்பக்கல் அன்பு என்றதொடர், இதனையே முன்னர்ப் பொருவில் அன்புருவம் , அன்பு பிழம்பாய்  என்றார். பிழம்பு , வடிவம் என்பன ஒரு பொருளன. அன்பே ஒரு உருவமாயிற்று என்பதாம்.

    அறிவு எல்லாம் நமைஅறியும் அறிவு  என்ற தொடர்,  அறிவு முழுமையும் நம்மையே யறிந்தது – வேறொன்றினும் செல்லவில்லை. என்பதைக் குறித்தது.

    செயல் எல்லாம் நமக்கு இனிய ஆம்  செயல்கள் என்ற தொடர் ,  எல்லாம் நமக்கு இனிமை செய்தற்பொருட்டே  நிகழ்ந்தன. அஃதாவது வைகறை எழுந்து போந்து வேட்டையாடி அமுது முதலியன கொண்டுவருதல், மஞ்சனமாட்ட முன்பூசை மலர்களைக் காற் செருப்பால் மாற்றுதல் முதல் இரவிற்றுயிலாது காத்தல் வரை எல்லாச் செயல்களும் நமக்கு இனியவை இவையிவையேயாம் என்று கொண்டு, அதன்பொருட்டே செய்யப்படுவன.

    “திருக்காளத்திநாயனார்க் கினிய செய்கை இவைகொ லாமென் றிதுகடைப் பிடித்துக் கொண்டு”  செய்யப்பட்டன என முன்னர்க் கூறியது காண்க. இவ்வாறு செய்யப்பட்டன ஆதலின் அவை நமக்கு இனியனவேயாம். இவை நாமே விதித்த ஆகமவிதிப்படி இனியன வல்ல என்று கொள்ளப்படினும், அவ்வாகமங்களே அன்பினை எல்லாவற்றுக்கு மேலாக விதித்தலால் இவை இனியனவென்று அன்பின்  பெருக்காற் செய்யப்பட்டன வாதலின் இவையெல்லாம் நமக்கு இனியனவேயாம் என்றபடி.

    “இனியன வல்ல வற்றை இனிதாக நல்கு மிறைவன்”

    என்ற  ஆளுடைய பிள்ளையார் தேவாரமுங் காண்க.

    செயல் எல்லாம் – செயல்கள் எவையாயினும் – விலக்கப்பட்டனவாயினும் – அவை முழுதும் என்றும் அறிவித்துப்  போயினர்.

    நிலை இவ்வாறு – அன்பு இச்சை என்பன ஒரு பொருளனவாதலின் அஃது இச்சையினையும், அறிவு ஞானத்தினையும், செயல் கிரியையினையும் உணர்த்துவன; எனவே அவரது இச்சை முதலிய மூன்றும் இறைவனையே விடயித்து நின்றன ஆதலின்

    “அவனே தானே யாகிய வந்நெறி, யேக னாகி யிறைபணி நிற்க,
    மலமாயை தன்னொடு வல்வினை யின்றே”

    என்று சிவஞானபோதத்திற் சொன்னபடி இறைவனது பணியில் நின்றார் திண்ணனார். அவரது இச்சை முதலியவை வேறொன்றினையும் கருத வில்லை.

    இங்கு நிலை இவ்வாறு என்றது இத்தன்மையிற் சிவத்தையேயன்றி மற்றொன்றிலும் செல்லாது சிவத்தோடு ஏகனாகி இறைபணி நின்ற நிலை குறித்தது. இந்நிலையில் நின்றாராதலின் மலமாயை தன்னொடு வல்வினையின்றாயின என்பதனை இந்தத் திருப்பாட்டில் விரித்துக் கூறினார்.

    அறிநீ – “அறிவிக்க வன்றி அறியா வுளங்கள்”  என்று சிவஞானபோதத்துக் கூறியபடி இறைவன் காட்டு கின்றாராதலின் அறிநீ – என்றார். அறிவிக்கும் முறை அடுத்த பாட்டிற் கூறுகின்றார். அருள் செய்வார் – செய்வாராகி. முற்றெச்சம். அருள்செய்வார் – மறை முனிவர்க்கருள் செய்து என அடுத்த பாட்டுடன் கூட்டுக.

    பின் குறிப்பு  (1806 – ன்கீழ் “பொருப்பினில் வந்து” என்பது முதலிய ஐந்து பாடல்கள் சில பிரதிகளிற் காணப்படுகின்றன. பல பிரதிகளில் அவை இல்லை. மேலும் கண்ணப்பதேவர் திருமறத்தில் நக்கீரர் அருளிய பொருள்களை அவை அப்படியே கைக்கொண்டு மொழிந்து கொண்டனர்  என்பது பின்னர் அவ்வவற்றின்கீழ்த் தந்துள்ள பகுதிகளால் இனிது விளங்கும். சரித ஆதரவாகக் கொள்ளுதலன்றி இவ்வாறு பிறர் பொருளை எடுத்தாளுதல் ஆசிரியர் சேக்கிழார் மரபன்று. அன்றியும் அவற்றிற் பல பொருள்கள் முன்னர் உரைக்கப்பட்டன. ஓரிடத்துரைத்த  உவமை முதலியவற்றை ஆசிரியர் கூறியது கூறல் என்னும் குற்றம்படப் பின்னுங்கூறார் அல்லாமலும்

    அவற்றின் வாக்கும் போக்கும் ஆசிரியருடையவற்றினின்றும் வேறுபடுகின்றன. இன்னும் பார்க்கின் அவையில்லாமலே சரிதம் தொடர்ந்து செல்கின்றதும் காணலாம். காஞ்சிபுரம் சபாபதி முதலியார், ஆறுமுகத் தம்பிரானார் முதலிய ஆசிரியர்கள் அவற்றை வெள்ளிப் பாடல்கள் என்றே கொண்டனர். இக்காரணங்களால் அவை இடைச்செருகல்கள் என்று அறியப்படுதலின் இங்குப் பதிக்கப்படவில்லை. ஆயினும் சில பிரதிகளிற் காணப்படுதலால் இப்புராண இறுதியிற் குறிப்புக்களுடன் பதிக்கப்பட்டன.

    Share