Blog

  • சிரிப்பு யோகா – பயிற்சி 2

    சிரிப்பு யோகா – பயிற்சி 2

    ‘சிரிப்பு யோகா’ தொடரில் இரண்டாவது பயிற்சியை இன்று வழங்குகிறார், ஹாஹோ சிரிப்பானந்தா. இரட்டிப்புக் கரவொலியுடன் உங்களை இந்தப் பயிற்சிக்கு வரவேற்கிறோம். வருக! வருக!

    இந்தப் பயிற்சியை நீங்கள் செய்யும் காட்சியை வீடியோ எடுத்து எங்களுக்கு அனுப்பினால், அதையும் வெளியிடுவோம். உங்கள் வீடியோ காட்சிகளை annakannan@yahoo.co.in என்ற முகவரிக்கு அனுப்புங்கள். வாட்ஸாப் – 91-9841120975.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • சக்தி கானம் 4 – பொழுது விடிந்தது

    சக்தி கானம் 4 – பொழுது விடிந்தது

    ஆடி மாதம், அம்மன் மாதம். சக்தி கானம் இசைத் தொகுப்பிலிருந்து இதோ, அடுத்த பாடல். இந்த இடர்காலம் நீங்கி, நல்ல பொழுது விடிய, நம் ஆத்தாள் பாதாளப் பொன்னியம்மன் அருளட்டும்.

    பாடல் – பொழுது விடிந்தது
    பாடலாசிரியர் – வாரணா
    இசையமைப்பாளர் – கிறிஸ் மார்ட்டின் போனாமி
    பாடியவர் – சம்ப்ரிதா
    தயாரிப்பாளர் – ரமேஷ் வெங்கட்ரமணன்
    தயாரிப்பு நிறுவனம் – ஆர்.எம்.கிரியேஷன்ஸ்
    படங்களுக்கு நன்றி – www.wikimedia.org, ஹேமமாலினி

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • கொய்யா அறுவடை – 4

    கொய்யா அறுவடை – 4

    மாடியிலிருந்து பார்த்தபோது, மஞ்சள் நிறத்தையும் கடந்து நல்ல சந்தன நிறத்தில் கொய்யாப் பழங்கள் மின்னின. பறித்துச் சாப்பிட்டுப் பார்த்தேன், ஆஹா என்ன சுவை, என்ன மணம். நம் தோட்டத்தில் இன்று மீண்டும் கொய்யா அறுவடை.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • சிரிப்பு யோகா – பயிற்சி 1

    சிரிப்பு யோகா – பயிற்சி 1

    ‘சிரிப்பு யோகா’ தொடரில் முதல் பயிற்சியை இன்று வழங்குகிறார், ஹாஹோ சிரிப்பானந்தா. பலத்த கரவொலியுடன் உங்களை இந்தப் பயிற்சிக்கு வரவேற்கிறோம். வருக! வருக!

    இந்தப் பயிற்சியை நீங்கள் செய்யும் காட்சியை வீடியோ எடுத்து எங்களுக்கு அனுப்பினால், அதையும் வெளியிடுவோம். உங்கள் வீடியோ காட்சிகளை annakannan@yahoo.co.in என்ற முகவரிக்கு அனுப்புங்கள். வாட்ஸாப் – 91-9841120975.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 34

    கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 34

    -மேகலா இராமமூர்த்தி

    அரசியலறிவும் அதுசார்ந்த அனுபவங்களும் நிரம்பப் பெற்றவனான இராமன், கிட்கிந்தையின் புதிய அரசனாக முடிசூட்டிக்கொண்ட சுக்கிரீவனிடம் நல்லாட்சி நடத்துதற்கு ஓர் அரசனுக்குத் தேவையான பண்புநலன்கள் யாவை என்பவற்றை 11 பாடல்களில் விளக்கியுரைப்பதாக அமைத்துள்ளார் கம்பநாடர்.

    ”சுக்கிரீவா! இந்த உலகம் எப்படிப்பட்டது தெரியுமா? ஓரிடத்தில் புகை உண்டெனில் ஆங்கே கிளர்ந்தெழும் நெருப்புண்டு என்று ஊகித்தறியும் சிறப்பறிவைக் கொண்டது. ஆதலால், அரசனாகப் பொறுப்பேற்பவனுக்கு நூலில்வல்லாரின் சூழ்ச்சித்திறனும் வேண்டற்பாலது. பகையுடையோரிடத்தும், பயன்கொள்ளும் வகையில், அவர்களின் இயல்பறிந்து பண்போடு நடக்கவும் மலர்ந்த முகத்தினனாய் இன்சொற்கள் பேசவும் ஓர் அரசன் அறிந்திருக்க வேண்டும்.” என்றான் இராமன்.

    புகை உடைத்து என்னின் உண்டுபொங்கு
          அனல் அங்கு என்று உன்னும்
    மிகை உடைத்து உலகம்
         நூலோர் வினையமும் வேண்டற்பாற்றே
    பகையுடைச் சிந்தையார்க்கும் பயன்
          உறு பண்பின் தீரா
    நகையுடை முகத்தை ஆகி இன்
          உரை நல்கு நாவால். (கம்ப: அரசியற் படலம் – 4227)

    மனத்தில் உள்ள பகைமையை பகைவர்களிடம் வெளிக்காட்டிக் கொள்ளாமல் சூழ்ச்சித் திறத்தோடு நடந்துகொள்ள வேண்டும் என்று அறத்தின் நாயகனான இராமனே குறிப்பிடுவதன்மூலம் எல்லாக் காலத்திலும் சூழ்நிலைக்கேற்ற வகையில் சமயோசிதமாக நடந்துகொள்ளும் அறிவு அரசர்களுக்குத் தேவைப்பட்டிருக்கின்றது என்பதனை நாம் உய்த்துணரமுடிகின்றது.

    வள்ளுவரும்,  பகைவர் நண்பராகும் காலம் வரும்போது முகத்தளவில் நட்புக்கொண்டு அகத்தில் நட்புநீங்கி வாய்ப்புக் கிடைத்தபோது அதனையும் விட்டுவிடவேண்டும் என்று கூறியிருப்பதை உன்னுக.

    பகைநட்பாம் காலம் வருங்கால் முகநட்டு
    அகநட்பு ஒரீஇ விடல்.
    (குறள் – 830)

    ”குடிமக்களைத் தாய்போல் பேணிக் காப்பாய்! அதேசமயம் நாட்டிற்குத் தீமைவந்து சேருமாயின் அத்தீச்செயல்களில் ஈடுபடுவோரை அறத்தின் எல்லை கடவாது தண்டிப்பாய்!” என்று அறிவுறுத்திய இராமன், அடுத்து மிக முக்கியமானதொரு கருத்தைத் தன் சொந்த அனுபவத்தின் அடிப்படையில் சுக்கிரீவனுக்கு உரைக்கின்றான்.

    ”திரண்ட தோள்களை உடையவனே! நம்மைவிட உருவிலும் திருவிலும் வலுவிலும் சிறியர் என்றெண்ணி யாரையும் இகழ்ந்து துன்பம் செய்துவிடாதே! இந்த நன்னெறியைக் கடைப்பிடியாது யான் (சிறுவயதில்) ஓர் தீமைசெய்த காரணத்தினால் பகையுணர்ச்சி நீண்டு, குறுகிய உடலையுடைய கூனி என்பவளால் வறுமைகள் எய்திக் கொடிய துன்பக்கடலில் வீழ்ந்தேன்!” என்றான்.

    சிறியர் என்று இகழ்ந்து நோவு
          செய்வன செய்யல் மற்று இந்
    நெறி இகழ்ந்து யான் ஓர் தீமை
          இழைத்தலால் உணர்ச்சி நீண்டு
    குறியது ஆம் மேனி ஆயக்
          கூனியால் குவவுத் தோளாய்
    வெறியன எய்தி நொய்தின் வெந்
          துயர்க் கடலின் வீழ்ந்தேன். (கம்ப: அரசியற் படலம் – 4230)

    ‘பண்டை நாள் இராகவன் பாணிவில் உமிழ் உண்டை உண்டதனைத் தன் உள்ளத்து உள்ளுவாள்’ என்ற காப்பிய அடிகள் இந்நிகழ்ச்சியை விளக்கும்.

    தொடர்ந்து மேலும் சில அறவுரைகளைச் சுக்கிரீவனுக்குச் சாற்றிய இராமன், “அரசர்க்கென்று நூல்கள் வகுத்துச்சொன்ன முறைப்படி ஆட்சிநடத்து! மாரிக்காலம் கழிந்தபின் வாரிதிபோன்ற உன் பெருஞ்சேனையுடன் என்னைக் காண வா! இப்போது கிட்கிந்தைக்குப் போய் வா!” என்று விடைகொடுத்தான்.

    சீதையைத் தேடுதற்கு மழைக்காலம் வசதியற்றதாய் இருக்குமாதலின்
    ‘மாரிக்காலம் கழிந்தபின் வா’ என்றான் இராமன்.

    இராமனுக்கு முடிசூட்டத் தயரதன் ஏற்பாடுசெய்த வேளையில், தயரதனின் ஆசானான, வசிட்டர் இராமனுக்கு ஒரு நல்லரசன் எவ்வாறு நடந்துகொள்ளவேண்டும் என்று உபதேசித்ததை இந்த அறவுரைகளோடு நாம் ஒப்பிட்டுப் பார்க்கலாம். அரசப் பதவிக்கு வருபவன் என்னதான் கல்வி கேள்விகளிலும் வீரத்திலும் சிறந்தவனாய் விளங்கினாலும் அவன் பதவியில் அமர்வதற்குமுன்பு அறிவிற்சிறந்த பெரியோர் அவனுக்கு நல்லறிவு கொளுத்தும் நோக்கில் நயமான அறவுரைகளை அந்நாளில் புகன்றிருப்பது வரவேற்பிற்குரிய அணுகுமுறையாகவே இருக்கின்றது.

    சீதையைத் தேடுதற்கேற்ற காலம் வரும்வரை இராமலக்குவர்கள் தம்மோடு கிட்கிந்தைக்குவந்து தங்கியிருக்கவேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொண்டு இராமனின் அடியிணைகளில் வீழ்ந்து வணங்கினான் சுக்கிரீவன்.

    அதனை முறுவலோடு மறுத்த இராமன், ”தவ வாழ்க்கை மேற்கொள்ள வேண்டிய நாங்கள் உன்னோடுவந்து அரண்மனையில் தங்குதல் பொருந்தாது; நாங்கள் அங்குவந்தால் எம்மை உபசரிக்கவே உனக்கு நேரம் சரியாக இருக்கும்; நீ நல்லாட்சி நடத்தத் தவறிவிடுவாய். அதுமட்டுமன்று! நீ சொல்வதுபோல் நான் உன்னோடுவந்தால் தன் தேவி அரக்கனின் காவலில் அல்லலுற்றிருக்க, இராமன் தன் நண்பர்களோடு இன்பப் பொழுதுபோக்கினான் என்று உலகம் என்னை ஏசாதா? பழிபோட்டுப் பேசாதா? அப்பழியானது என்றும் நிலைத்திருக்குமே!

    சுக்கிரீவா! இல்லற நெறியைக் கைவிடாதவர்களுடைய இயல்பினைக் கைவிட்டும், போரில் வில்லறம் துறந்தும் வாழ்பவனாகிய எனக்கு நண்பர்களோடு இனிதாய் இருத்தல் மேன்மையை நல்கா அற்பச் செயலாகும். ஆதலால், நான் செய்திருக்கும் குற்றங்கள் நீங்குமாறு ஒவ்வொரு நாளும் தவம்செய்யப் போகின்றேன்” என்றான் தாமரைக் கண்ணனான இராமன்.

    இல்லறம் துறந்திலாதோர் இயற்கையை
          இழந்தும் போரின்
    வில் அறம் துறந்தும் வாழ்வேற்கு
          இன்னன மேன்மை இல்லாச்
    சில் அறம் புரிந்து
          நின்ற தீமைகள் தீருமாறு
    நல் அறம் தொடர்ந்த நோன்பின்
          நவை அற நோற்பல் நாளும். (கம்ப: அரசியற் படலம் – 4241)

    கைபிடித்த மனைவியைக் காத்தல் இல்லறக் கடமையாகும்; தான் மனைவியைப் பாதுகாவாது விட்டமை குறித்து, ‘இல்லறம் துறந்திலாதோர் இயற்கையை இழந்தும்’ எனவும், வாலியை மறைந்துநின்று கொன்றது குறித்து, ‘வில்லறம் துறந்தும் வாழ்வேற்கு’ எனவும் இப்பாடலில் இராமன் குறிப்பிடுவதாகக் கொள்ளலாம்.  

     அதன்பின்னர் இராமனைத் தன்னோடு வரும்படிச் சுக்கிரீவன் வற்புறுத்தவில்லை; அவனை வணங்கி விடைபெற்றான்.

    அடுத்து, தன்னை வணங்கிய அங்கதனை அருகழைத்து, ”ஒழுக்கத்தில் சிறந்தவனே! சுக்கிரீவனை உன் சிறிய தந்தை என்று எண்ணாதே! தந்தையாகவே எண்ணி அவன் சொற்படி நட” என்று அறிவுறுத்தி அனுப்பினான் இராமன்.

    சுக்கிரீவனும் அங்கதனும் போனபின், அங்கே நின்றுகொண்டிருந்த அனுமனிடம், ”பேரெழில் வீரனே! நீ சுக்கிரீவனுக்கு வேண்டுவன ஆற்றி அவனோடு இரு!” என்று இராமன் உரைக்க, அதனை ஏற்கத் தயங்கிய அனுமன்,

    “ஐய! நாயேனாகிய நான் உம்முடனேயே இருந்து உமக்குக் குற்றேவல் செய்து வருவேன்” என்று மொழியவே, அதனை ஏற்கமறுத்த இராமன், “அரசர்க்குரிய பண்புநலன்கள் நிரம்பிய ஒப்பற்ற மன்னன் ஒருவன் பாதுகாத்ததும், கடையெல்லை இல்லாததும், எல்லாச் செல்வ வளங்களும் நிறைந்ததுமான அரசாட்சியை வேறோர் அரசன் வலியக் கைப்பற்றிக் கொண்டால் அந்நாட்டில் நன்மைகளேயன்றித் தீமைகளும் (புதிய மன்னனை எதிர்த்துப் புரட்சி முதலியவை) தோன்றக்கூடும். அத்தகு சூழலில் உன்னைப்போல் பொறுமையும் அறிவும் நிறைந்தவர்களாலேயே இவ்வரசு நிலைபெறும். ஆகலின், அறத்தின் வடிவான நீ, சுக்கிரீவனுக்குத் துணையாய் அங்கிருப்பதே நல்லது” என்றுரைத்தான்.

    நிரம்பினான் ஒருவன் காத்த நிறை
          அரசு இறுதி நின்ற
    வரம்பு இலாததனை மற்று ஓர்
          தலைமகன் வலிதின் கொண்டால்
    அரும்புவ நலனும் தீங்கும்
          ஆகலின் ஐய நின்போல்
    பெரும் பொறை அறிவினோரால்
          நிலையினைப் பெறுவது அம்மா. (கம்ப: அரசியற் படலம் – 4247)

    ”தங்கள் கட்டளை அதுவாகில் அவ்வாறே செய்கிறேன்” என்ற மாருதி இராமனை வணங்கிவிட்டுக் கிட்கிந்தை நோக்கிச் சென்றான்.

    நிரம்பினான் ஒருவன் காத்த நிறையரசு” என்பது இங்கே வாலியின்
    ஆட்சிக்கு இராமன் தரும் நற்சான்றுப் பத்திரமாகும்.

    அனைவரும் கிட்கிந்தைக்குச் சென்றபிறகு, இராமனும் இலக்குவனும் அருகிலிருந்த பிரசிரவண மலை எனும் மலைக்குச் சென்று தவ வாழ்க்கை மேற்கொள்ளலாயினர்.

    மாரிக்காலமும் அதைத்தொடர்ந்து வந்த கூதிர்காலமும் ஒருவாறு கடக்க, அதுவரை ஒடுங்கிக் கிடந்த அன்னங்கள் பொன்னனைய சீதையை நாம் தேடிச்செல்வோம் என்று புறப்பட்டதுபோல் திசைகள்தோறும் பறக்கத் தொடங்கின.

    கல்வியில் சிறந்த கணக்காயர் (ஆசிரியர்) பாடத்தைச் சொல்லச் சொல்லக் கூடவே ஆரவாரத்தோடு அதனைத் திருப்பிச்சொல்லும் மாணாக்கர்போல், விடாது கத்திக்கொண்டிருந்த தவளைகளும் தம்சொல் செல்லுபடியாகும் இடத்திலன்றிப் பிற இடங்களில் ஒரு சொல்லையும் சொல்லாத நல்லறிவுடையவர்கள்போல் நாவடங்கின.

    கல்வியின் திகழ்
          கணக்காயர் கம்பலைப்
    பல் விதச் சிறார் எனப்
          பகர்வ பல் அரி
    செல் இடத்து அல்லது
          ஒன்று உரைத்தல்செய்கலா
    நல் அறிவாளரின்
          அவிந்த நா எலாம்.  (கம்ப: கார்காலப் படலம் – 4367)

    இந்தச் செய்யுளின் கருத்து வால்மீகி இராமாயணத்திலும், துளசிதாசர் இராமாயணத்திலும் காணக் கிடைக்கின்றது.

    [தொடரும்]

    *****

    கட்டுரைக்குத் துணைசெய்தவை:

    1. கம்பராமாயணம் – கோவைக் கம்பன் அறநிலை விளக்க உரைக்குழு.
    2. கம்பரும் வால்மீகியும் – பேரா. அ. பாண்டுரங்கன், எம்.ஏ., பிஎச்.டி., டிப் (மொழி), தமிழரங்கம் பதிப்பு, புதுவை – 605 008.
    3. கம்பர் கருவூலம் – தொகுப்பாசிரியர், பேரா. மு. சாயபு மரைக்காயர், கங்கை புத்தக நிலையம், சென்னை – 600 017.
    4. கம்பனில் மக்கள்குரல் – பேரா. ந. சுப்புரெட்டியார், வானதி பதிப்பகம், சென்னை – 17.

     

     

    Share
  • ஜிம்முக்குப் போகாமலே ஜம்மென்று வாழலாமே!

    ஜிம்முக்குப் போகாமலே ஜம்மென்று வாழலாமே!

    ஜோதிர்லதா கிரிஜா

    மேல்தட்டு நடுத்தரக் குடும்பங்களையும், பணக்காரக் குடும்பங்களையும் சேர்ந்த இளைஞர்கள், ஜிம்முக்குப் போய் உடற்பயிற்சி செய்வது பரவலாய்க் காணப்பட்டு வருகிறது. ஜிம்மில் வைக்கப்பட்டுள்ள உடற்பயிற்சிக் கருவிகளில் சிலவற்றைப் பார்க்கும் போது சிரிப்புத்தான் வருகிறது. சில கருவிகளைக் குறை சொல்ல முடியாதுதான். ஆனால் வேறு சில கருவிகள் நம் கைகளையும் கால்களையும் கவ்வி அசைப்பதைப் பார்க்கும்போதுதான் கேலிக்கூத்தாக இருக்கிறது. நாமே நம் கைகளையும் கால்களையும் அசைத்தால் நிகழும் இரத்த ஓட்டம் அதிகப் பயனுள்ளது என்பதை உணரப் பெரிய அறிவொன்றும் தேவையில்லை. தெம்பின்றித் தளர்ந்து போய்க் கைகால்களை அசைக்கவே முடியாமல் இருக்கும் ஒருவருக்கு உடலின் பகுதிகளில் இரத்த ஓட்டம் ஏற்படச் செய்ய வேண்டுமெனில் அவற்றைப் பிடித்து மற்றவர்களோ அல்லது கருவிகளோ அசைக்கலாம். அதில் சிரிப்பதற்கு ஒன்றும் இல்லை! ஆனால் கை, கால்கள் ஒழுங்கான நிலையில் இருக்கின்றவர்கள் தாங்களாகவே அவற்றை அசைத்து அவற்றில் இரத்த ஓட்டம் ஏற்படுத்திக் கொள்ளுவதற்குப் பதிலாக, அவை பிறராலோ, கருவிகளாலோஅசைக்கப்படுவது என்பது சிரிப்புக்கு உரியதுதான்.

    ஜிம்முக்குப் போய் அங்குள்ள கருவிகளைப் பயன்படுத்துவது என்பது எல்லாருக்கும் ஒத்துக்கொள்ளும் என்றும் சொல்ல முடியாது. எனக்குத் தெரிந்த ஒரு பெண் – அப்படியொன்றும் ரொம்பவும் குண்டாக இல்லாதவர் – தான் மேலும் இளைத்தால் ‘சிக்’ கென்று இருக்கலாமே எனும் ஆசையில் ஜிம் ஒன்றில் சேர்ந்தார். ஆனால் அவருக்கு அது ஒத்துக்கொள்ளவில்லை. உடம்பில் சதை போடத் தொடங்கியது. இவ்வளவுக்கும் உணவுப் பழக்கங்களில் அவர் எந்த மாற்றமும் செய்யவில்லையாம். எனவே, வீட்டில் உள்ளவர்கள் கூறிய அறிவுரைப்படி ஜிம்முக்கும் போவதை நிறுத்தினார். ஒரே மாதத்துக்குள் அவரது இயல்பான சற்றே சதைப் பிடிப்புள்ள உடம்பு திரும்பி வந்துவிட்டது. எனினும், ஜிம்முக்குப் போய்ப் பயிற்சி செய்ததற்கும் தன் உடம்பு மேலும் குண்டானதற்கும் தொடர்பு இருக்காது என்றும் அதற்கு வேறு காரணங்கள் இருக்கக் கூடும் என்றும் தீர்மானித்த அவர் மறுபடியும் ஜிம்முக்குப் போகலானார். மறுபடியும் உடல் குண்டானது. நடையிலும் ஒரு மாற்றம் ஏற்பட்டு, சற்றே சாய்த்துச் சாய்த்து நடக்கலானார். எனவே அதற்கு முற்றுப் புள்ளி வைத்து விட்டார். பழைய உடம்பு திரும்பிவிட்டது. ஜிம் என்பது யாவருக்கும் ஒத்துக்கொள்ளக் கூடியதன்று என்பதற்காக இதைச் சொல்லலாயிற்று.

    குண்டு உடல் இளைப்பதற்கு மிக எளிய உடற்பயிற்சிகள் உள்ளன. தொப்பை குறைய வேண்டுமா? கால்களை நெருக்கமாய் வைக்காமல் சற்றே இடைவெளி விட்டு நேராக நின்று கொண்டு மூச்சை உள்ளிழுத்த பிறகு, இரண்டு கைகளையும் உயரே தூக்கி, முதுகுப்புறமாய்ச் சற்றே வளைத்துப் பின் அவற்றை மெல்லக் கீழே கொண்டுவந்து இரண்டு கைகளாலும் இரண்டு கால்கட்டை விரல்களைத் தொடவும். இவ்வாறு குனியும் போது மூச்சை மெல்ல வெளியேற்ற வேண்டும். பின் பழைய நிலைக்கு மெல்ல இரு கைகளையும் உயர்த்தவும் இப்போது மூச்சை உள்ளிழுக்க வேண்டும். இவ்வாறு தொடக்கத்தில் பத்துத் தடவைகள் செய்யலாம். போகப் போக, எண்ணிக்கையை அதிகரிக்கலாம். உடற்பயிற்சி செய்கையில், உடலை மிகவும் தளர்வாகவும் வைத்துக்கொள்ளக் கூடாது. அளவுக்கு மீறிய இறுக்கத்திலும் வைத்துக்கொள்ளக் கூடாது. நடுநிலையான இறுக்கத்துடன் உடல் இருக்க வேண்டும்.

    இதே போல் நின்றுகொன்டு இரண்டு கைகளையும் பக்கவாட்டில் நீட்டி, அதன் பின் குதிகால்களை உயர்த்திக்கொண்டு முன்னங்கால்களல் நின்று, மூச்சை உள்ளிழுக்க வேண்டும். பிறகு குதிகால்களைப் பழைய நிலைக்குக் கொண்டு வந்தவாறே, மூச்சை வெளியேற்றி, கைகளை அவை இணையாக இருக்கும்படி முன்புறமாக நீட்ட வேண்டும். மீண்டும் பக்கவாட்டில் மூச்சிழுத்து நிறுத்திப் பின் முன் சொன்ன பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும். இதையும் சிறுகச் சிறுக அதிகரித்துக்கொண்டே போகலாம். இது நுரையீரலை வலுவாக்கும். இடக் காது முனையைக் வலக்கையாலும், வலக் காது முனையை இடக் கையாலும் பற்றியபடி — இவ்வாறு இரு காது முனைகளையும் பிடித்துக்கொண்டே – உட்கார்ந்து எழ வேண்டும். இதையும் கொஞ்சங்கொஞ்சமாய் அதிகமாக்கலாம். இந்த உடற்பயிற்சி இடை, தொடை, கால் தசைகள், கைகள் ஆகியவற்றை வலுப்படுத்தும். நாம் தோப்புக்கரணம் என்று சொல்லும் இதை அமெரிக்காவில் அண்மைக்காலமாய் உடற்பயிற்சி நிலையங்களில் புகுத்தியிருக்கிறார்களாம்! இதனால் கண்பார்வைக் கோளாறுகள் நீங்குவதாய்க் கண்டு பிடித்திருக்கிறார்களாம்.

    இவற்றையெல்லாம் செய்வதற்குப் பதினைந்து நிமிடங்கள் போதும். இருபத்துநான்கு மணிப் பொழுதில் இதற்கு நம்மால் கால்மணி நேரம் கூட ஒதுக்க முடியாதா என்ன?

    இவற்றைச் செய்ய முடியாத முதியோர்க்கு மட்டுமே நடைப்பயிற்சி சிறந்ததாகும். முடிந்த அளவுக்கு விரைந்த நடை நல்லது. ‘ஜாகிங்’ எனப்படும் நெளிந்த நடை யாருக்குமே உகந்ததன்று என்பதைக் கொஞ்ச நாள்களுக்கு முன்னால் அமெரிக்க மருத்துவர்கள் கண்டறிந்து சொல்லியிருக்கிறார்கள். சில மருத்துவமனைகளில், முதுகுவலி, இடுப்பு வலி, சுளுக்கு, பளுப்பிறழ்வு (disc-prolapse) ஆகியவற்றுக்கு ஆளானவர்களின் பழக்க வழக்கங்கள் பற்றிக் கேட்டறிந்த மருத்துவர்கள், அவர்களில் 90 விழுக்காட்டினர் ‘ஜாகிங்’ செய்பவர்கள் என்பதைக் கேட்டறிந்த பிறகு இவ்வாறு அறிவித்துள்ளனர்.

    சில ஆண்டுகளுக்கு முன்னால், வடநாட்டைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் ஒருவர் தம் உடல் இளைப்பதற்காக ஜிம் ஒன்றில் சேர்ந்து அந்தப் பயிற்சிகள் ஒத்துக்கொள்ளாததால் படுத்த படுக்கையாகி, முடிவில் நடைப்பிணமாகவே ஆகி இறந்து போனார். இப்போது கண்டவர்களெல்லாம் ஜிம்மை நடத்துவதால் ஆபத்துகள் அதிகம் என்று சொல்லலாயிற்றே ஒழிய, ஜிம்மை ஒட்டு மொத்தமாய்க் குறைத்துப் பேசுவதாக நினைக்க வேண்டாம். அண்மையில் கூட ஒரு பெண்மணி தம்

    கணவர் ஜிம்மில் மயங்கி விழுந்து சிறிதே பொழுதில் உயிர் நீத்தது பற்றி உள்ளம் உருக்கிய கட்டுரையை எழுதியிருந்தார். எந்த ஜிம்மிலும் டாக்டர் ஒருவரும் இருப்பதாய்த் தெரியவில்லை.

    கடைசியாக, ஜிம்மால் நமக்கு ஆகும் ஆயிரக்கணக்கான பணச் செலவை நம் வீட்டிலேயே செய்யக் கூடிய எளிய பயிற்சிகள் வாயிலாக மிச்சப்படுத்தலாமே. அந்தப் பணத்தை ஏழை எளியவர்க்குத் தரலாமே.

    Share
  • Proud of Young Tejasvi

    Proud of Young Tejasvi

    Baskar Seshadri

    The Blue cross of India had kept the water bowls in many streets near Mandaveli. But that was in ceramic and it could not last long. They  get damaged very soon.

    Tejasvi is a young  energetic boy who used to play cricket in the street (angry Batsman) had noticed this and wanted to do something. He smartly approached a mason who was doing a housing project nearby  and asked him whether he could do a small bowl at some nominal cost and it did happen in just a day. Now it’s cured and ready to quench the birds, cattle and few dogs that roam over.

    I Never thought of this angle and I feel proud of Young Tejasvi for having stumbled upon this idea.

    Kudos Tejas. The Bowl he did is in Tirvengadam street.

    Friends can think on these lines in their respective streets.

    Share
  • பழகத் தெரிய வேணும் – 76

    பழகத் தெரிய வேணும் – 76

    நிர்மலா ராகவன்

    மறக்காவிட்டாலும், மன்னித்துவிடு!

    ”எனக்கு அவளை/அவனைப் பிடிக்கவே பிடிக்காது!”

    “அந்த இனத்தைக் கண்டாலே எனக்கு வெறுப்பு!”

    ஏதோ ஒரு தருணத்தில் இவ்வாறு கூறியிருப்பார்கள் பலரும்.

    கதை

    ஏதோ கட்டாயத்தின்பேரில், வேறொரு சாதியைச் சேர்ந்த ஒருவனை மணந்தாள் குமுதா.

    கணவனிடம் வெகுவாக வதைப்பட்டபின், அவனை விவாகரத்து செய்தாள்.

    “ஈன ஜாதி இப்படித்தான் நடக்கும், நிர்மலா!” என்று குமைந்தாள், தான் மேல்சாதி என்ற பெருமையுடன்.

    கணவன்மேல் கொண்ட ஆத்திரத்தில், அவனது துணிகளை எரித்து, அவன் நட்டுவைத்த மரத்தை எரித்து, என்று என்னென்னவோ செய்துபார்த்திருக்கிறாள்.

    பழிக்குப் பழி என்று நடந்தால், அதற்கு ஏது முடிவு!

    பல வருடங்களுக்குப் பின்னரும் குமுதா தன் கணவனை மறக்கவுமில்லை, அவன்பால் கொண்ட வெறுப்பும் தணியவில்லை என்றவரை எனக்குப் புரிந்தது.

    ஆனால், என்னைவிடப் பெரியவளான அவளுக்கு எப்படி ஆறுதல் சொல்வதென்று எனக்குத் தெரியவில்லை. நிறையக் கேள்விகள் கேட்டு, அவள் மனப்பாரத்தைச் சிறிதாவது இறக்கிவிட முயற்சி செய்தேன்.

    `நம்மை ஏன் ஒருவர் அவ்வாறு வருத்தினார்?’ என்ற கேள்விக்கே இங்கு இடமில்லை.

    நாம் ஒருவரை எண்ணி ஆத்திரப்படுவதால், மன அமைதியை இழந்து, தன்னிரக்கத்துடன் வாடுவது நாமாகத்தான் இருக்கும். நம் வெறுப்புக்கு ஆளானவருக்கு என்னவோ, அது தெரியப்போவதில்லை. அதனால் அவருக்கு எந்த பாதிப்பும் கிடையாது.

    யாரை மறக்கவேண்டும் என்று எண்ணுகிறோமோ, அவரைப்பற்றி ஏதாவது குறை சொல்லிக்கொண்டே இருந்தால், அவரிடமிருந்து விலகமாட்டோம் – எத்தனை தொலைவில் இருந்தாலும். உணர்ச்சிபூர்வமாக தொடர்புகொண்டு, அவர் நம்மை வதைத்துக்கொண்டேதான் இருப்பார்.

    `மெல்ல மெல்ல விஷம் அருந்துவதுபோல்’ என்று இப்போக்கைக் குறிப்பிடுகிறார்கள்.

    `மறதிதான் மகிழ்ச்சிக்கு இன்றியமையாத மருந்து!’ என்று சும்மாவா சொல்லி வைத்திருக்கிறார்கள்!

    இதைத் தடுத்து, நிம்மதியும், மகிழ்ச்சியுமான எதிர்காலத்திற்கு வழிசெய்ய ஒரே வழி: மன்னிப்பு!

    கதை

    இரவில் நண்பர்களுடன் விளையாடப் போவதாக மனைவியிடம் கூறிவிட்டு, அடிக்கடி வெளியில் போய்விடுவான் சாமா.

    `நண்பர்கள்’ என்று கணவன் குறிப்பிட்டது தன் காதலியைத்தான் என்றறிந்து, தான் எவ்வளவு முட்டாளாக இருந்திருக்கிறோம் என்று தன்மேலேயே வெறுப்பு எழுந்தது சாவித்திரிக்கு. கொதித்தெழுந்தாள்.

    எதையும் மறைக்காது, உண்மையை ஒத்துக்கொண்டான் சாமா. வழக்கம்போல், சண்டை, அழுகை.

    “விவாகரத்து வேண்டாம். இனி உன்னை ஏமாற்றவே மாட்டேன்!” என்று கணவன் கெஞ்சியபோது, அவனை மன்னித்து ஏற்றுக்கொள்வதைத் தவிர வேறு வழி தெரியவில்லை அவளுக்கு.

    “எப்படி அவன் உனக்குச் செய்த துரோகத்தைப் பொறுத்துக்கொள்கிறாய்!” என்று ஆச்சரியப்பட்டுக் கேட்ட தோழியிடம், “நான் மட்டும் தப்பே செய்திருக்க மாட்டேனா! குழந்தைகளிடமும், என்னிடமும் அன்பாகத்தானே நடந்துகொள்கிறார்!” என்று பதிலளித்தாள் சாவித்திரி. “கடந்துபோனதை நான் நினைவுபடுத்துவதில்லை. அதற்காக, அதை மறந்துவிட்டேன் என்று அர்த்தமில்லை”.

    மன்னிக்கலாம். ஆனால், எதற்காக மறப்பது?

    ஒரு முறை அவதிப்பட்டால், அதன்பின் கவனமாக இருக்கவேண்டாமா?

    மீண்டும் மீண்டும் கட்டுப்பாட்டுக்குள் அடங்கி வருந்துவதோ, வதைப்படுவதோ என்ன புத்திசாலித்தனம்?

    மன்னித்தபின், பாதித்தவரிடம் கடந்தவைகளைப் பற்றி நினைவுபடுத்துவதும் வேண்டாத வேலை. `குப்பை!’ என்று ஒதுக்கவேண்டியதுதான். இல்லாவிட்டால், நிம்மதி பறிபோய்விடும்.

    நீண்ட காலம் இணைந்து வாழும் தம்பதிகளின் ரகசியம் புரிந்ததா? பல முறை மன்னித்து, ஒருவரையொருவர் ஏற்றிருப்பார்கள்.

    ஒவ்வொரு முறையும் ஒருவரே மன்னிப்பு கேட்பார் என்பதில்லை. விட்டுக்கொடுத்துக்கொண்டே இருக்கமுடியுமா?

    அவர்கள் சண்டையே போட்டிருக்க மாட்டார்களா, என்ன!

    அவர்களில் ஒருவர் சில நாட்கள் முகத்தைத் திருப்பிக்கொண்டு போயிருக்கலாம். அதன் முடிவில், தம்பதியரில் ஒருவர், `ஸாரி,’ என்றுவிடுவார், யார்மேல் தவறு என்று அலசிப் பார்க்காது. இல்லையேல், சமாசாரத்தை அடியோடு மறந்துவிட்டதுபோல் நடந்துகொள்வார்.

    மன்னிப்பு கேட்பதற்குக்கூட மனோபலம் வேண்டும். மன்னித்தபின் சக்தி கூடியதுபோல உணர முடியும்.

    வெறுத்துக்கொண்டே இருந்தாலோ, அவர் நம்மீது செலுத்தும் ஆக்கிரமிப்பு குறையாதிருக்கும்.

    யாரை மன்னிக்கவேண்டும்?

    தவறு என்று புரிந்தே, நமக்குக் கெடுதல் செய்தவர்களை.  அவமதிப்பவர்களை. இப்படிச் செய்பவர்கள் நண்பர்களாகவோ, உறவினர்களாகவோ இருக்கலாம்.

    அவர்களை மன்னிப்பது நாம் அவர்களுக்குச் செய்யும் நற்காரியமல்ல. நமக்கே செய்துகொள்வது.

    எத்தனை காலம்தான் கடந்தவைகளிலேயே நிலைத்து நின்று, வருந்துவது! அதனால் நம் முன்னேற்றம் தடைப்பட்டுவிடாதா!

    பிறரை வருத்திக்கொண்டே இருப்பவர்கள்

    கதை

    அண்ணாசாமிக்கு யாரும் மரியாதையாகப் பேசக் கற்றுக்கொடுக்கவில்லையோ என்பதுபோல்தான் நினைக்கத் தோன்றும், அவன் வாயைத் திறந்தால். எல்லாரிடமும் சண்டை. தான் செய்த தவறு பிறரால் வந்தது என்று விதண்டாவாதம் புரிவான்.

    அவன் குணம் புரியாதவர்கள் தம்மிடம்தான் தவறு என்று முதலில் நினைப்பார்கள்.

    பெரிய குடும்பத்தில் வேண்டாத பிள்ளையானதால், இளம்பிராயத்தில் அவனை யாரும் சரிவரக் கவனிக்காததாலோ, சிறு தவறு செய்தாலும், அதற்காகத் தண்டனை பெற்றதாலோ அவன் வயதுக்கேற்ற முதிர்ச்சி அடையவில்லை.

    அந்த வருத்தம் அவனையும் அறியாது, பிறரும் தன்னைப்போல் வருந்தி, குழம்பவேண்டும் என்பதுபோல் வெளிப்பட்டது.

    இது புரிந்து, அவன் மனைவி மக்கள் அவனை எதிர்த்து வாயாடாது, அடங்கிப்போனார்கள்.

    எப்போதோ ஒருமுறை மன்னித்து, மறந்தால் போதாது; அதை ஒரு பழக்கமாகவே ஆக்கிக்கொண்டால்தான் நிம்மதி கிடைக்கும் என்று புரிந்தவர்கள் அவனுடைய குடும்பத்தினர். அதனால், அவர்கள் பலகீனமானவர்கள் என்றாகாது.

    சுயநலக்காரர்கள் ஒரு பொருட்டல்ல

    இப்போதெல்லாம், பலரும் சுயநலமிகளாகத்தான் இருக்கிறார்கள். மற்றவர்களின் மனப்போக்கை அறிய அக்கறையோ, ஆர்வமோ காட்டுவதில்லை.

    ஒருவர் வெற்றி பெற்றால், அவரது நட்பைப் பெற பலர் விரும்புவார்கள். ஒரு முறை தோல்வியடைந்தாலும், விலகிவிடுவார்கள். இவர்கள் உண்மையான நண்பர்களா என்பது யோசிக்கவேண்டிய சமாசாரம்.

    முன்பு நண்பர்களாக இருந்தவர்களும், வெற்றி பெற்றவரிடம் குறை கண்டுபிடிப்பார்கள். விலகுவார்கள்.

    கதை

    சிறந்த அறிவாளியும், உழைப்பாளியுமான ரகுவிற்கு உத்தியோகத்தில் பெரிய பதவி அளிக்கப்பட்டது. அவன் கல்வித்திறனுக்குக் கூடுதலான அந்த உயர்வு பழைய நண்பர்களின் பொறாமையைத் தூண்டப் போதுமாக இருந்தது.

    “நீ படித்த படிப்புக்கு..! எந்த அதிகாரியை, எப்படியெல்லாம் காக்காய் பிடித்தாயோ!” என்று பலவாறாகக் கேலி செய்தனர். அவனுடன் முன்போல் பேசப் பிடிக்காது ஒதுங்கினர்.

    நண்பர்களின் பராமுகத்தால் ஆரம்பத்தில் வருத்தம் ஏற்பட்டாலும், அப்படிப்பட்டவர்களின் ஏச்சுப்பேச்சை அலட்சியம் செய்யப் பழகிக்கொண்டான் ரகு.

    `இவர்களுக்கெல்லாம் பயந்து, வெற்றி பெறத் தயங்கலாமா?’ என்று தன்னைத் தேற்றிக்கொண்டதில், முன்பு அவனுடைய மேலதிகாரியாக இருந்தவரைவிட அதிகமான பரிசுகளும் விருதுகளும் பெற்றான்.

    `இதுதான் உலகம்!’ என்ற விரக்தி ஏற்பட்டு, அதிலேயே உழன்றிருந்தால், வாழ்வில் முன்னேற முடியாது என்று தெளிவுபெற்றான்.

    முக்கியமான வேறுபாடு!

    பிறர் தமக்குச் செய்த தீங்கை ஆண்கள் எளிதில் மறந்துவிடுவார்கள். ஆனால், மன்னிக்கமாட்டார்கள்.

    பெண்களோ, மன்னித்துவிடுவார்கள். ஆனால், மறக்கமாட்டார்கள்!

    எப்போதோ நடந்ததைக் கிளறும் குணம் பெண்களுக்குத்தான். சும்மாவா, பெண்களை கணினிக்கு ஒப்பிடுகிறார்கள்!

    Share
  • சிரிப்பு யோகா – அறிமுகம்

    சிரிப்பு யோகா – அறிமுகம்

    இந்தப் பெருந்தொற்றுக் காலத்தில், பலரும் சிரிப்பையே மறந்துவிட்ட நிலையில், சிரிப்பு யோகா மூலம் உடலுக்கும் மனத்துக்கும் ஒருசேரப் புத்துணர்ச்சி ஊட்டுகிறார், ஹாஹோ சிரிப்பானந்தா. நம் யூடியூப் அலைவரிசையின் மூலம், நேயர்களுக்குச் சிரிப்பு யோகா கற்றுத் தர முன்வந்துள்ளார். இந்த ஜாலியான பயிற்சியில் நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் நண்பர்களும் இணைந்து பங்குபெறுங்கள். வாய்விட்டுச் சிரிப்போம், வாருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • விடிவெள்ளி

    விடிவெள்ளி

    பாஸ்கர்

    (நடிகர் திலகத்தின் நினைவு நாள் இன்று)

    சைக்கிள் ஓட்டுவதில் நண்பர் சிதம்பரம் கெட்டிக்காரன். பெரும் பொறுமை. எந்த இடர்ப்பாடும் இல்லாமல் ஓட்டும் அந்த லாகவம் எனக்குச் சுட்டுப் போட்டாலும் வராது. எங்கள் இணைப்புப் பாலம், இரவுக் காட்சி. அது வெலிங்டனா, சித்ராவா என்று நினைவு இல்லை. கணேசனைப் பார்ப்பது எங்களுக்கு ஒரு பெரும் சந்தோஷம். இதில் மணியும் எங்கள் கட்சி.

    அவனுடன் நான் செல்வது தனிப் பந்தி. விடிவெள்ளியில் தோரணம் கட்டும் காட்சியில் அவர் காட்டும் அதிர்ச்சியோ, அல்லது பச்சை விளக்கில் அவர் திருக்குறள் சொல்லும் அழகோ, உயர்ந்த மனிதனில் அசோகனிடம் கைகளை மடக்கி அவன் நல்லா பைட் பண்றாண்டா எனச் சிவகுமாரைப் பார்த்துச் சொல்லும் பாங்கோ.. தெய்வ மகனில் தம்பியிடம் பணம் கொடு எனக் கண்களால் பேசுவதோ… எனக் கணேசனைச் சுமந்துகொண்டே போகலாம்.

    எந்தப் பெரிய பின்புலமும் இல்லாமல் நாடகத் திறமையைக் கொண்டு ஒரு பாத்திரத்தில் ஊறி, அதைச் செம்மையாகக் கொண்டு வருவதில் அவருக்கு நிகர் இல்லை.

    ஒரு படத்தில் அவர் பாட அமரும் முன் அந்தப் பெரிய சபையைப் பார்த்துப் பிரமித்து பயப்படும் நிலையை முகத்தில் காட்ட, சிரித்தவாறு வியர்வையைத் துடைத்துக்கொள்ளும் ஒரு பிரில்லியன்ட் பெர்போர்மேர் அவர்.

    பாசமலரில் அவர் ஜெமினியோடு பேசும்போது பென்சிலைச் சீவிக்கொண்டே முறைக்கும் முறைப்பு நினைவு உண்டா? எனக்கு விஸ்வநாதன் இடது என்றால், நடிகர் திலகம் வலது கண்.

    Share
  • வண்டியை வெளியே எடுப்பது எப்படி?

    வண்டியை வெளியே எடுப்பது எப்படி?

    மண்ணில் சக்கரங்கள் புதைந்த இந்த வண்டியை, ஓரிரு மணி நேரம் முயன்ற பிறகு வெளியே எடுத்தார்கள். எப்படி வெளியே எடுத்தார்கள், தெரியுமா? இந்தச் சூழ்நிலையில் நீங்கள் என்ன செய்திருப்பீர்கள்?

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • சக்தி கானம் 3 – பவனி வரா

    சக்தி கானம் 3 – பவனி வரா

    ஆடி மாதத்திற்கு அழகு சேர்க்க வருகிறது, இந்த அம்மன் பாடல். சக்தி கானம் இசைத் தொகுப்பிலிருந்து இதோ, ‘பவனி வரா பவனி வரா பாளையக்காரி’.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • வாடாமல்லியில் வண்ணத்துப்பூச்சி – 2

    வாடாமல்லியில் வண்ணத்துப்பூச்சி – 2

    வாடாமல்லியிலும் துளசியிலும் மாறி மாறி அமரும் வண்ணத்துப்பூச்சி, தன் பட்டுச் சிறகை விரித்துத் தேனருந்தும் பேரழகுக் காட்சி.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • சேக்கிழார் பாடல் நயம் – 137 (பணிந்தெழுந்து)

    சேக்கிழார் பாடல் நயம் – 137 (பணிந்தெழுந்து)

    திருச்சி புலவர் இராமமூர்த்தி

    வரலாறு

    திண்ணனார்  குடுமித்தேவரை  தரிசித்தபோது இருள் பரவத்தொடங்கியது. மூங்கிலிலிருந்து முத்துக்கள் உதிரும் மலைமேல் நிலவு ஒருபக்கம் ஒளி வீசியது. குகைகளில் நாகம் உமிழ்ந்த மணிகள் வெயில்போல் ஒளி வீசின. அங்கிருந்த பலவகை மாணிக்க மணிகளின் ஒளியும், பச்சைக்கற்கள் நீல மணிகள் ஆகியவை உண்டாக்கிய ஒளியும் சூரிய சந்திரர் போல் விளங்க அதுகண்டு இருளும் இரவும் ஒதுங்கின, ஒளிவீசும்  தீப மரங்கள், குரங்குகள் குகையில் வைத்த மணிகளாகிய விளக்குகள், ஐம்புலம் அடங்கியவரின் தியானசோதி ஆகியவை எப்போதும் இருப்பதால் திருக்காளத்தி மலையில் இரவின் இருளே இல்லை. அங்கே கண் துயிலாத திண்ணனார்  நள்ளிரவில் பறவைகள் எழுப்பும் ஒலி கேட்டார். இறைவனுக்கு அமுது கொண்டு வர எண்ணி அங்கிருந்து நீங்கினார். பன்றி முதலாயின எழுந்து  இயங்காத போதில் கையில் வில்லுடன் திண்ணனார் சென்றார். திண்ணனார் சென்ற அழகை உலகிற்குக் காட்ட, முகம் காட்டிய கதிரவன் அவர் வேட்டையாடுவதைக் காட்ட இருளை நீக்கிக் கதிர்க்  கைகாட்டினான்.  அப்போது, சிவாகம விதிப்படிப் பூசை புரிவதற்கேற்ற மலரும், நீரும் கொண்டு  மலைமேலிருந்த மருந்தாகிய பெருமானை வழிபடும் வழக்கமுடைய  சிவகோசரியார்,  சிந்தையில் பக்தியுடன் தேவர் தலைவராகிய பெருமானை நோக்கிச் சென்றார்.

    அங்கே இறைவன் திருமுன்பு வெந்த இறைச்சி, எலும்பு ஆகியவற்றைக் கண்டு விலகியோடி, ‘’உசிதமற்ற இந்தப் பொருள்களைக் கண்டு, ‘’ஐயோ கெட்டேன், இதனை யார் செய்தார்?’’ என்று மனமழிந்தார்.  சற்றும் அச்சமற்ற வேடுவரே இதனைச்  செய்திருப்பார். இவ்வாறு அவர் செய்து போகலாமா?இது நின் திருவுளத்துக்கு ஏற்றதோ? ஏறி பதறி அழுதார்.

    மலைமேல் எழுந்தருளும் இறைவனின் பூசனை தாமதமாகியதால் இனியும் நான் உயிர்வாழ்வதோ? என்று கூறி அங்கிருந்த இறைச்சி, எலும்புடன் இலையும், செருப்படி மண்ணும், நாயடி மண்ணும் தம் கையில் இருந்த திருவலகால்  ஒதுக்கித்  தள்ளினார். பின்னர் பொன்முகலி  நீரில் மூழ்கி விரைந்து வந்தார்;  உசிதமற்ற செயலால் விளைந்த தீமையினை நீக்கப் பவித்திரமான கழுவாய் புரிந்தார்; பின்னர் திருமஞ்சனம் முதலாகிய முழுமையான வழிபாட்டைப் புரிந்தார். இறைவன் திருவடி பணிந்தார்.

    பணிந்தெழுந்து, “தனிமுதலாம் பர” னென்று பன்முறையால்
    துணிந்தமறை மொழியாலே துதிசெய்து, சுடர்த்திங்கள்
    அணிந்தசடை முடிக்கற்றை யங்கணரை விடைகொண்டு
    தணிந்தமனத் திருமுனிவர்  தபோவனத்தி  னிடைச்சார்ந்தார்.

    பொருள்

    பணிந்து எழுந்து, “எல்லார்க்கும் சிவபெருமானே முழுமுதற் கடவுளாவார்” என்று பலமுறையாலும் துணிந்து ஒலமிடும் வேத மந்திரங்களினாலே துதித்து, ஒளியையுடைய சந்திரனை யணிந்த சடைக்கற்றை முடி யினையுடைய அங்கணராகிய காளத்தியப்பரிடம் விடைபெற்றுக்கொண்டு, தணிவு பெற்ற மனமுடைய சிவகோசரியாராகிய திருமுனிவர் தாம் தவஞ் செய்யும் வனத்திற் சார்ந்தனர்.

    விளக்கம்

    “தனிமுதலாம் பரன்” என்று பன்முறையால் துணிந்த மறை மொழி – விசுவகாரணன், விசுவரூபன், விசுவாதிகன், விசுவசேவியன் என்பன முதலாக வேதங்களாலே பலவகையாலும் துணிந்து துதிக்கப் பெற்ற வேதமந்திரங்கள்.

    பன்முறையால் என்பது,  பல முறைகளாலும்  என்பதைக் காட்டியது. பன்முறையாவன நமக சமகங்களிற் கூறியபடியும் மற்றும் பலபடியும் சிவபெருமானே முழுமுதற் கடவுள் எனத் துணிந்து துதித்தல். இவற்றை, சிவபெருமான் யாவுமானவர்; அவரே யாவுமல்லாதவர்; சிவனை ஒப்பாரும் அவனின் மிக்காருமில்லை; சிவன் எண்குணமுடையவர்; சிவபெருமான் ஒருவரே பிறப்பில்லாதவர்; சிவன் வேதாகம் முதலிய எல்லா நூல்களுக்குங் கர்த்தா; சிவபெருமான் எண்ணிறந்த கண், கால், சிரம் முதலியவற்றை யுடையவர்; அவர் எல்லா நாமங்களாலுங் கூறப்பட்டு எல்லாமாயுள்ளார்; அவர் சோதியுட் சோதி; சிறியதிற் சிறியர்; பெரியதிற் பெரியர்; சிவனே பசுபதி; அவரே தேவதேவர் என்பன வேதவாக்கியங்களாகும்.

    மறை மொழி – அதர்வசிகை, சுவேதாசுவரம் முதலியன. இங்குப் பவன் முதலிய எட்டு நாமங்களாற் றுதித்துப்பூசை முடிவில் அட்டபுட்பம் சாத்தும்முறை குறிக்கப்பட்ட தென்பார்.

    சுடர்த்திங்கள்   என்ற தொடர்,  முன்னர்க் குறைந்த ஒளியை மீண்டும் சிவனருளால் வளரப்பெற்று அந்த ஒளியை உணர்த்தியது.

    திங்கள் – மூன்றாம் பிறைச் சந்திரன். திருவருளாலே வளர்த்த ஒளி என்று குறிக்கச் சுடர் என்று சிறப்பித்தார்.

    திங்கள் அணிந்தசடை – அங்கணர் – இவ்விரண்டும் சேரக் கூறியது, இறைவர் தமது திருமுன்பே இவ்வநுசிதம் நிகழப் பார்த்தனரே என்றெழுந்த முனிவரது மனக்கொதிப்பையும் பதைப்பையும் மாற்றி அங்கண்மையுடன் அவர்க்கு உண்மையன்பின் திறத்தைத் தேற்றம்பெற உணர்த்தியருளும் திருவருளின் அங்கண்மை பற்றியாம்.

    தணிந்தமனம் – காம முதலிய தீக்குணங்களை யெல்லாம் வென்று? ஆன்ற சாந்தமுடைய மனம். இது பெருமுனிவர்களது மனத்தின் நன்மை யென்பார் திருமுனிவர் என்றார். இக்கருத்துபற்றியே வரும்பாட்டிற் பெருமுனிவர் என்றதும் காண்க.

    “அறத்திற்கே யன்புசார் பென்பவறியார்,
    மறத்திற்கு மஃதே துணை” என்றதிருக்குறளும் காண்க.

    “பற்றி லாநெறிப் பரசம யங்களைப் பாற்றும்,
    செற்ற மேவிய சீலமு முடையராய்த்திகழ்வார்”.

    என்றதும், “மறைக ணிந்தனை சைவ நிந்தனை பொறாமனமும்” என்று திருநந்திதேவர் கேட்ட வரமும் காண்க. முன்னர்க்கொதித்த மனம் பூசையினால் தணிந்த மனமாயிற்றென்று உரை கூறுவாருமுண்டு.

    விடைகொண்டு – வழிபாட்டின் முடிவில் இறைவனை வணங்கி விடை பெற்றுச் செல்லுதல் மரபு.

    இப்பாடலில், சிவகோசரியார்  உள்ளத்துடிப்பும், பதற்றமும், பின்னர் அவர் செய்த கழுவாயும், மீள் பூசையும், வேடன் செய்த  வழிபாட்டின் மேல் கொண்ட சினமும்  புலப்படுகின்றன. இச்செயல்  இயல்பானதே!

    Share
  • தனித்தமிழ் வளர்த்த தகைசால் அறிஞர்!

    தனித்தமிழ் வளர்த்த தகைசால் அறிஞர்!

    -மேகலா இராமமூர்த்தி

    தமிழொடு ஆங்கிலத்திலும் வடநூற்கடலிலும் கரை கண்டவர்; பன்மொழிகள் பயின்றாலும் நன்மொழியாம் தமிழே தமக்கு உயிரென்னும் கொள்கை கொண்டவர்; பிறமொழிக் கலப்பின்றித் தூயதமிழில் தமிழர் அனைவரும் பேசவும் எழுதவும் வேண்டும் என நனிவிரும்பித் தனித்தமிழ் இயக்கம் தோற்றுவித்தவர்; சைவ சமயத்தின்பால் ஆழ்ந்த பற்றுள்ளம் கொண்டு பழந்தமிழர் சமயம் சைவமே எனத் தம் நூல்வழி நிறுவியர்; இத்துணைச் சிறப்புகளுக்குரியவர் மறைமலையடிகள் எனும் சான்றோர் பெருந்தகை.

    1876ஆம் ஆண்டு சூலைத் திங்கள் 15ஆம் நாள், நாகப்பட்டினத்திற்கு அருகிலுள்ள காடம்பாடியில் சொக்கநாதப் பிள்ளைக்கும் சின்னம்மையாருக்கும் மகனாய்ப் பிறந்தவர் அவர். பல்லாண்டுகள் மக்கட்பேறில்லாமல், திருக்கழுக்குன்றத்து இறைவன் அருளால் பிறந்தவராக மறைமலையடிகளாரை அவர் பெற்றோர் கருதியமையால், அவருக்கு அத்தலத்து இறைவனின் திருப்பெயரான வேதாசலம் என்பதைச் சூட்டி மகிழ்ந்தனர்.

    நாகையிலிருந்த வெஸ்லியன் தொண்டு நிறுவனக் கல்லூரியைச் சேர்ந்த உயர்நிலைப் பள்ளியில் நான்காம் படிவம் வரை கல்வி பயின்றார் மறைமலையடிகள். அப்போது எதிர்பாராதவிதமாகத் தம் தந்தையை இழந்த அவரால் பள்ளிப்படிப்பைத் தொடர இயலவில்லை. ஆகையால், நாகையில் ஓலைச்சுவடிகள் விற்பனை செய்துவந்தவரும், அத்தோடு தமிழ் கற்பிக்கும் பணியையும் ஆற்றிவந்தவருமான வெ. நாராயணசாமிப்பிள்ளை என்பவரிடம் தொல்காப்பியம், இறையனார் அகப்பொருள் முதலிய இலக்கண நூல்களையும், தர்க்க நூல்களையும் முறையாகக் கற்றுத்தேர்ந்தார். அடிகளாருக்குத் தமிழ் பயிற்றுவித்த நாராணசாமிப்பிள்ளையவர்கள், மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளையிடம் முறையாகத் தமிழ் பயின்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. ‘சைவ சித்தாந்த சண்டமாருதம்’ என்று புகழ்பெற்றிருந்த சோமசுந்தர நாயகரிடம் சைவ சித்தாந்தம் கற்றார் மறைமலையடிகள்.

    வெஸ்லியன் பள்ளியில் படித்தமையால் நல்ல ஆங்கிலப் புலமையும், வடமொழிப் புலமையும் அடிகளாருக்கு இருந்தது. பின்பு, தாமாகவே முயன்று அவ்விருமொழிப் புலமையையும் நன்கு வளர்த்துக்கொண்டார் அவர்.

    1898இல், சென்னை கிறித்தவக் கல்லூரியில் தமிழ்ப்பேராசிரியராகப் பணியாற்றுவதற்காக அக்கல்லூரியில் பணிபுரிந்துகொண்டிருந்த பரிதிமாற்கலைஞரைச் சந்தித்தார் மறைமலையடிகள். அப்போது பரிதியார், ‘‘குற்றியலுகரத்துக்கு எடுத்துக்காட்டு சொல்லுங்கள்’’ என்று மறைமலையடிகளிடம் வினவ, ‘‘அஃது எனக்குத் தெரியாது’’ என்றார் அடிகள். ‘‘நீங்கள் தேர்வு செய்யப்பட்டுவிட்டீர்கள்’’ என்றார் பரிதிமாற்கலைஞர். ‘‘தெரியாது என்று சொல்பவரை எப்படித் தெரிவு செய்யலாம்?’’ என்று மற்ற உறுப்பினர்கள் ஆட்சேபம் தெரிவித்தபோது, ‘‘அஃது என்பது ஆய்தத்தொடர்க் குற்றியலுகரம்; எனக்கு என்பது வன்தொடர்க் குற்றியலுகரம். தெரியாது என்பது உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்’’ என்று பதிலளித்தார் பரிதிமாற்கலைஞர். அடிகளின் தமிழ்ப்புலமைக்கு இது தக்கதோர் எடுத்துக்காட்டு.

    கிறித்தவக் கல்லூரியில் பணியாற்றிக்கொண்டிருந்தபோது, இளங்கலைத் தமிழ் படித்துவந்த மாணாக்கர்களின் வேண்டுகோளுக்கிணங்க, 1903ஆம் ஆண்டு, பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்றான ’முல்லைப்பாட்டுக்கு’ எளிய ஆராய்ச்சியுரை ஒன்றையெழுதி வெளியிட்டார் அடிகள்.

    அதில் பாட்டினியல்பு பற்றி அவர் கூறும் அரிய கருத்துக்கள் சிலவற்றைக் காண்போம்.

    “உலக இயற்கையில் கண் முதலான புலன்களுக்கு விளங்கித் தோன்றும் அழகையெல்லாம் தன்னகத்தே நெருங்கப் பொதிந்துவைத்துப் பின் அவற்றை நம் அறிவினிடத்தே புலப்படும் வண்ணந் தோற்றுவித்து, பொருள் நிகழ்ச்சியோடு மாறுபடுதல் இல்லா இனிய ஓசையுடன் இசைந்து நடைபெறும் இயல்பினை உடையதுதான் பாட்டென்று அறிதல் வேண்டும். இன்னும் எங்கெங்கு நம் அறிவைத் தம்வயப்படுத்துகின்ற பேரழகும் பேரொளியும் பெருந்தன்மையும் விளங்கித் தோன்றுகின்றனவோ அங்கெல்லாம் பாட்டு உண்டென்றே அறிதல் வேண்டும்.

    மக்கள் அறிவு என்கின்ற தித்திப்பான அரிய அமிழ்தம் பலவகையான குற்றங்களொடுங் கலப்புற்றுத் தூயதன்றாய்ப் போக, நல்லிசைப் புலவன் தன் பேரறிவினால் அதனைத் தெளிய வடித்து அதன் இன்சுவையினை மிகுதிப்படுத்தி நாமெல்லாம் அதனைப் பருகிப் பெரியதோர் ஆறுதலடையக் கொடுப்பன்; அங்ஙனங் கொடுக்கப்படுந் தூய இனிய அறிவின் விளக்கம் பாட்டென்றே அறிதல் வேண்டும். இக்கருத்துப் பற்றியே மில்டன் எனும் ஆங்கிலமொழிவல்ல நல்லிசைப்புலவரும், ’பாட்டென்பது மக்கள் மன அறிவினின்றும் வடித்து இறக்கப்பட்ட தூய அமிழ்தமாம்’ என உரை கூறினார்” என்று பாட்டு குறித்து அருமையாய் விளக்குகின்றார் அடிகள்.

    இவ்வாறே 1906ஆம் ஆண்டு, கிறித்தவக் கல்லூரியில் பயின்ற தமிழ் இளங்கலை மாணாக்கர்களுக்குப் பட்டினப்பாலை எனும் சங்கநூல் பாடப்பகுதியில் வைக்கப்பெற்றது. அவர்கள் அதற்கும் ஓர் எளிய ஆராய்ச்சியுரையை அடிகள் இயற்றித்தர வேண்டும் என்று கோரிக்கை வைக்கவே, அந்நூலுக்கும் பொருட்செறிவுமிக்க ஆராய்ச்சியுரை ஒன்றைப் படைத்தளித்திருக்கின்றார் மறைமலையடிகள்.

    அதில் பட்டினப்பாலையின் அமைப்பையும் அதன் ஆசிரியர் சிறப்பையும் விளக்கவரும் அவர்…

    ”இப்பட்டினப்பாலை முழுவதூஉம் முந்நூற்றோர் அடிகளான் அமைக்கப்பட்டிருக்கின்றது. இவற்றுள் இருநூற்றுத் தொண்ணூற்றேழு  அடிகளில் புறப்பொருள் விரிவும், ஏனைய நான்கடிகளில் மாத்திரம் அகப்பொருட் சுருக்கமும் சொல்லப்பட்டிருக்கின்றன. இவ்வாறே, திருமுருகாற்றுப்படை முதலிய செய்யுட்களினும் புறப்பொருட் சிறப்பே பெரும்பான்மையால் கூறிவைத்து, ஏனை அகவுணர்வின் திறனெல்லாம் மிகச் சுருங்கவே சொல்லப்பட்டன. புறத்தே விரிந்த அறிவெல்லாம் முறைமுறையே சுருக்கப்பட்டு அகத்தே செல்வுழி, அஃதொன்றின் மாத்திரமே உறைந்து நிற்றலின், புறப்பொருள்வழி வைத்து விளக்கப்படும் அகப்பொருளெல்லாம் மிகச் சுருக்கிக் கூறுதலே மன இயற்கைக்கு இயைந்ததாம். இந்நுட்பம் செவ்விதின் அறிந்த உருத்திரங்கண்ணனாரது அறிவின் மாட்சி அளவிடற்பாற்றன்று.” என்று வியக்கின்றார்.

    கிறித்தவக் கல்லூரியில் அடிகளாரிடம் நேரடியாகப் பயிலக்கூடிய பேறுபெற்றவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள், நாவலர் ச.சோமசுந்தர பாரதியார், இரசிகமணி டி.கே.சிதம்பரநாத முதலியார், பேராசிரியர் எஸ். வையாபுரிப்பிள்ளை, தணிகைமணி வ.சு.செங்கல்வராயப் பிள்ளை முதலியோர்.

    செய்யுள், புதினம், நாடகம், கட்டுரை, மொழிபெயர்ப்பு, ஆராய்ச்சி எனப் பல்துறைகளிலும் அளவற்ற நூல்களை அடிகள் படைத்துள்ளார். திருவொற்றியூர் முருகன் மும்மணிக்கோவை, சோமசுந்தரக் காஞ்சியாக்கம் முதலியன அவர் இயற்றிய செய்யுள் நூல்களாகும். சிந்தனைக் கட்டுரைகள், அறிவுரைக் கொத்து, சிறுவர்க்கான செந்தமிழ், முற்காலப் பிற்காலத் தமிழ்ப் புலவோர், இந்தி பொது மொழியா? போன்றவை அவரின் கட்டுரை நூல்கள். குமுதவல்லி நாகநாட்டரசி, கோகிலாம்பாள் கடிதங்கள் முதலியன அவருடைய புதின நூல்கள். வடமொழியில் காளிதாசர் படைத்த சாகுந்தலத்தைத் தமிழில் மொழிபெயர்த்து சாகுந்தல நாடகம் என்று அதற்குப் பெயரிட்டுள்ளார். அம்பிகாபதி அமராவதி என்ற நாடக நூலையும் இயற்றியுள்ளார்.

    மறைமலையடிகளின் ஆராய்ச்சி நூல்களை இலக்கிய ஆராய்ச்சி, கால வரலாற்று ஆராய்ச்சி, வாழ்வியல் ஆராய்ச்சி என்ற மூன்று பிரிவுகளில் அடக்கலாம். பண்டைக்காலத் தமிழரும் ஆரியரும், மாணிக்கவாசகர் வரலாறும் காலமும், முற்காலப் பிற்காலத் தமிழ்ப் புலவோர், சோமசுந்தர நாயகர் வரலாறு முதலியன கால வரலாற்றை உணர்த்தும் ஆய்வு நூல்களாகும். பொருந்தும் உணவும் பொருந்தா உணவும், வேளாளர் நாகரிகம், மக்கள் நூறாண்டு வாழ்வது எப்படி? என்பன வாழ்வியல் ஆய்வு நூல்களாக விளங்குகின்றன.

    வாழ்வியல் ஆராய்ச்சி நூல்களுள் சைவ சித்தாந்த ஞானபோதம், சாதி வேற்றுமையும் போலிச் சைவரும், கடவுள் நிலைக்கு மாறான கொள்கைகள் சைவமாகா, பழந்தமிழ்க் கொள்கையே சைவ சமயம், தமிழர் மதம் முதலியன சமயத் தொடர்புடைய நூல்களாகும். வாழ்வியல் ஆய்வு நூல்களிலே, மரணத்தின்பின் மனிதர் நிலை, யோகநித்திரை அல்லது அறிதுயில், தொலைவிலுணர்தல் என்னும் மறைபொருளுணர்ச்சி, மனிதவசியம் அல்லது மனக்கவர்ச்சி முதலிய நான்கு நூல்களும் மறைபொருளியலை உணர்த்தும் நூல்கள் ஆகும்.

    1911-ஆம் ஆண்டு தம்முடைய தமிழாசிரியர் பணியிலிருந்து விலகிய அடிகள், சைவ சித்தாந்தப் பணிகளிலும் நூல்கள் எழுதுவதிலும் தம்மை முழுமையாய் ஈடுபடுத்திக் கொண்டார். இல்லறத்திலிருந்து துறவுபூண்டு காவியுடுத்து சுவாமி வேதாசலம் ஆனார்.

    1916ஆம் ஆண்டு ஒருநாள் தம்முடைய வீட்டுத் தோட்டத்தில் மகள் நீலாம்பிகையுடன் உலவிக்கொண்டிருந்த அடிகள், இராமலிங்க வள்ளலார் அருளிச்செய்த அருட்பாவிலிருந்து,

    ”பெற்ற தாய்தனை மக மறந்தாலும்
    பிள்ளையைப் பெறும் தாய் மறந்தாலும்
    உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும்
    உயிரை மேவிய உடல் மறந்தாலும்
    கற்ற நெஞ்சகம் கலை மறந்தாலும்
    கண்கள் நின்றிமைப்பது மறந்தாலும்
    நற்றவத்தவர் உள்ளிருந் தோங்கும்
    நமச்சி வாயத்தை நான் மறவேனே.”
    என்ற பாடலைப் பாடச்சொல்லிக் கேட்டின்புற்றார்.

    பிறகு தம் மகளிடம், “இப்பாட்டில் உள்ள ‘தேகம்’ என்ற வடசொல்லுக்கு மாற்றாக அவ்விடத்தில் ’யாக்கை’ என்ற தமிழ்ச்சொல் இருக்குமானால் செய்யுளின் ஓசையின்பம் இன்னும் சிறக்கும்” என்றார். அதுகேட்ட நீலாம்பிகையார் தந்தையிடம், “நாம் இனி அயல்மொழிச் சொற்களை அறவே நீக்கித் தனித்தமிழிலேயே பேசுதல் வேண்டும்; அதற்கான முயற்சிகளைக் கைவிடாது செய்தல் வேண்டும்” என்று ஆர்வத்துடன் கூறியிருக்கின்றார்.

    அத்தோடு, சுவாமி வேதாசலம் என்ற பெயரைத் தம் தந்தையார் தனித்தமிழில் மாற்றிவைத்துக்கொள்ள வேண்டும் என்றும் மகளார் வேண்டுகோள் விடுக்கவே, அதனையேற்றுத் தம் பெயரை மறைமலையடிகள் என்று மாற்றிவைத்துக் கொண்டார் அடிகள். அதுமுதல் மறைமலையார் தனித்தமிழிலேயே எழுதலானார். தனித்தமிழில் சொற்கள் கிடைக்காதபோது புதியசொற்களைத் தமிழில் உண்டாக்கி எழுதினார். 

    ஞானசாகரம் என்ற தம் திங்கள் வெளியீட்டிற்கு அறிவுக்கடல் என்றும், தாம் ஆரம்பித்து நடாத்திவந்த சமரச சன்மார்க்க நிலையத்திற்குப் பொதுநிலைக் கழகம் என்றும் பெயர்மாற்றம் செய்தார். பின்னர் 1916ஆம் ஆண்டு தனித்தமிழ் இயக்கம் அமைத்துத் தமிழ் வளர்த்தமையால் ’தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை’ என்ற பெருமையைப் பெற்றார்.

    அடிகளாரின் தனித்தமிழ் இயக்கம் ஆங்கிலம் மற்றும் வடமொழிபால் அவர்கொண்ட வெறுப்பால் தோன்றிய இயக்கமன்று; தமிழ்மீது அவர்கொண்ட தணியாத காதலால் மலர்ந்த இயக்கமாகும் என்பது எண்ணத்தக்கது.

    ‘‘எல்லா உறுப்புகளும் அமைந்த அழகான ஓர் உடம்பில், அந்த உறுப்புக்களை வெட்டி எறிந்துவிட்டு, மண்ணாலும், மரத்தாலும் செயற்கையாக அந்த உறுப்புகளைப்போல் செய்து அவற்றை அதற்கண் ஒட்டவைத்துப் பார்ப்பதற்கு ஒப்பாய் இருக்கின்றது, தமிழ்மொழியில் பிறமொழிச் சொற்களைச் சேர்ப்பது’’ என்று தேவையற்ற பிறமொழிக் கலப்பைக் கண்டிக்கின்றார் அடிகள்.

    மறைமலையடிகளின் தனித்தமிழ்த் தாக்கத்தால் தமிழகத்தில் ‘அக்ராசனர்’ தலைவரானார்; ‘மகாஜனங்கள்’ பொதுமக்கள் ஆயினர்; ‘பிரேரணை’ தீர்மானமாயிற்று; ‘நமஸ்காரம்’ வணக்கமாயிற்று. அறிஞர் அண்ணா, இம்மண்ணுக்குத் ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்டியதும், தமிழ்நாட்டுத் தலைநகரத்திற்கு கலைஞர் கருணாநிதி ‘சென்னை’ என்று பெயர் சூட்டியதும் மறைமலையடிகளால் நேர்ந்த மாற்றங்களே எனலாம்.

    ”அடிகள் பேச்சு, பல பேச்சாளரைப் படைத்தது; எழுத்து, பல எழுத்தாளரை ஈன்றது; நூல், பல நூலாசிரியன்மாரை அளித்தது; அடிகளே தென்னாடு; தென்னாடே அடிகள் என்று கூறல் மிகையாகாது” என்று மறைமலையடிகளை மனங்கனிந்து பாராட்டியிருக்கின்றார் தமிழ்த்தென்றல் திரு.வி.க.

    சிறந்த சிந்தனையாளர், பேரறிஞர், ஆராய்ச்சியாளர், பழந்தமிழ் நூல்களுக்குப் புத்துரை வரைந்த உரையாசிரியர், வீறுசால் பொழிஞர் எனப் பன்முக ஆற்றலாளராக, தமிழகத்துக்கோர் மாமலையாய் மிளிர்ந்த மறைமலையார், தமிழ்மாந்தர் அறிவுச்செழுமை அடைவதற்கும், நோயற்ற நெடுவாழ்வு வாழ்வதற்கும், ஆன்மநலம் உறுவதற்கும், தனித்தமிழ் உணர்வு பெறுவதற்கும் நல்வழி காட்டிச்சென்ற பெருமகனார் ஆவார்.

    தமிழர்களாகிய நாம் அவர் படைத்தளித்த அருந்தமிழ் நூல்களை ஆர்வத்தோடு கற்போம்; தேவையின்றிப் பிறமொழிச் சொற்களைத் தமிழில் கலந்தெழுதுவதையும் பேசுவதையும் தவிர்ப்போம். நல்ல தமிழ்ப்பெயர்களையே பிள்ளைகளுக்குச் சூட்டுவோம். நம் வெல்லத் தமிழை மெல்லச் சாகாது காப்போம்!

    கட்டுரைக்குத் துணைசெய்தவை:

    1. https://ta.wikipedia.org/wiki/ மறைமலை_அடிகள்
    2. https://www.hindutamil.in/news/opinion/columns/565268-maraimalai-adigal-birthday-1.html
    3. http://www.tamilvu.org/courses/degree/p102/p1021/html/p1021551.htm
    4. முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை, தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், 1962.
    5. பட்டினப்பாலை ஆராய்ச்சியுரை, தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், 1957.

     

    Share