தனித்தமிழ் வளர்த்த தகைசால் அறிஞர்!

0

-மேகலா இராமமூர்த்தி

தமிழொடு ஆங்கிலத்திலும் வடநூற்கடலிலும் கரை கண்டவர்; பன்மொழிகள் பயின்றாலும் நன்மொழியாம் தமிழே தமக்கு உயிரென்னும் கொள்கை கொண்டவர்; பிறமொழிக் கலப்பின்றித் தூயதமிழில் தமிழர் அனைவரும் பேசவும் எழுதவும் வேண்டும் என நனிவிரும்பித் தனித்தமிழ் இயக்கம் தோற்றுவித்தவர்; சைவ சமயத்தின்பால் ஆழ்ந்த பற்றுள்ளம் கொண்டு பழந்தமிழர் சமயம் சைவமே எனத் தம் நூல்வழி நிறுவியர்; இத்துணைச் சிறப்புகளுக்குரியவர் மறைமலையடிகள் எனும் சான்றோர் பெருந்தகை.

1876ஆம் ஆண்டு சூலைத் திங்கள் 15ஆம் நாள், நாகப்பட்டினத்திற்கு அருகிலுள்ள காடம்பாடியில் சொக்கநாதப் பிள்ளைக்கும் சின்னம்மையாருக்கும் மகனாய்ப் பிறந்தவர் அவர். பல்லாண்டுகள் மக்கட்பேறில்லாமல், திருக்கழுக்குன்றத்து இறைவன் அருளால் பிறந்தவராக மறைமலையடிகளாரை அவர் பெற்றோர் கருதியமையால், அவருக்கு அத்தலத்து இறைவனின் திருப்பெயரான வேதாசலம் என்பதைச் சூட்டி மகிழ்ந்தனர்.

நாகையிலிருந்த வெஸ்லியன் தொண்டு நிறுவனக் கல்லூரியைச் சேர்ந்த உயர்நிலைப் பள்ளியில் நான்காம் படிவம் வரை கல்வி பயின்றார் மறைமலையடிகள். அப்போது எதிர்பாராதவிதமாகத் தம் தந்தையை இழந்த அவரால் பள்ளிப்படிப்பைத் தொடர இயலவில்லை. ஆகையால், நாகையில் ஓலைச்சுவடிகள் விற்பனை செய்துவந்தவரும், அத்தோடு தமிழ் கற்பிக்கும் பணியையும் ஆற்றிவந்தவருமான வெ. நாராயணசாமிப்பிள்ளை என்பவரிடம் தொல்காப்பியம், இறையனார் அகப்பொருள் முதலிய இலக்கண நூல்களையும், தர்க்க நூல்களையும் முறையாகக் கற்றுத்தேர்ந்தார். அடிகளாருக்குத் தமிழ் பயிற்றுவித்த நாராணசாமிப்பிள்ளையவர்கள், மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளையிடம் முறையாகத் தமிழ் பயின்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. ‘சைவ சித்தாந்த சண்டமாருதம்’ என்று புகழ்பெற்றிருந்த சோமசுந்தர நாயகரிடம் சைவ சித்தாந்தம் கற்றார் மறைமலையடிகள்.

வெஸ்லியன் பள்ளியில் படித்தமையால் நல்ல ஆங்கிலப் புலமையும், வடமொழிப் புலமையும் அடிகளாருக்கு இருந்தது. பின்பு, தாமாகவே முயன்று அவ்விருமொழிப் புலமையையும் நன்கு வளர்த்துக்கொண்டார் அவர்.

1898இல், சென்னை கிறித்தவக் கல்லூரியில் தமிழ்ப்பேராசிரியராகப் பணியாற்றுவதற்காக அக்கல்லூரியில் பணிபுரிந்துகொண்டிருந்த பரிதிமாற்கலைஞரைச் சந்தித்தார் மறைமலையடிகள். அப்போது பரிதியார், ‘‘குற்றியலுகரத்துக்கு எடுத்துக்காட்டு சொல்லுங்கள்’’ என்று மறைமலையடிகளிடம் வினவ, ‘‘அஃது எனக்குத் தெரியாது’’ என்றார் அடிகள். ‘‘நீங்கள் தேர்வு செய்யப்பட்டுவிட்டீர்கள்’’ என்றார் பரிதிமாற்கலைஞர். ‘‘தெரியாது என்று சொல்பவரை எப்படித் தெரிவு செய்யலாம்?’’ என்று மற்ற உறுப்பினர்கள் ஆட்சேபம் தெரிவித்தபோது, ‘‘அஃது என்பது ஆய்தத்தொடர்க் குற்றியலுகரம்; எனக்கு என்பது வன்தொடர்க் குற்றியலுகரம். தெரியாது என்பது உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்’’ என்று பதிலளித்தார் பரிதிமாற்கலைஞர். அடிகளின் தமிழ்ப்புலமைக்கு இது தக்கதோர் எடுத்துக்காட்டு.

கிறித்தவக் கல்லூரியில் பணியாற்றிக்கொண்டிருந்தபோது, இளங்கலைத் தமிழ் படித்துவந்த மாணாக்கர்களின் வேண்டுகோளுக்கிணங்க, 1903ஆம் ஆண்டு, பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்றான ’முல்லைப்பாட்டுக்கு’ எளிய ஆராய்ச்சியுரை ஒன்றையெழுதி வெளியிட்டார் அடிகள்.

அதில் பாட்டினியல்பு பற்றி அவர் கூறும் அரிய கருத்துக்கள் சிலவற்றைக் காண்போம்.

“உலக இயற்கையில் கண் முதலான புலன்களுக்கு விளங்கித் தோன்றும் அழகையெல்லாம் தன்னகத்தே நெருங்கப் பொதிந்துவைத்துப் பின் அவற்றை நம் அறிவினிடத்தே புலப்படும் வண்ணந் தோற்றுவித்து, பொருள் நிகழ்ச்சியோடு மாறுபடுதல் இல்லா இனிய ஓசையுடன் இசைந்து நடைபெறும் இயல்பினை உடையதுதான் பாட்டென்று அறிதல் வேண்டும். இன்னும் எங்கெங்கு நம் அறிவைத் தம்வயப்படுத்துகின்ற பேரழகும் பேரொளியும் பெருந்தன்மையும் விளங்கித் தோன்றுகின்றனவோ அங்கெல்லாம் பாட்டு உண்டென்றே அறிதல் வேண்டும்.

மக்கள் அறிவு என்கின்ற தித்திப்பான அரிய அமிழ்தம் பலவகையான குற்றங்களொடுங் கலப்புற்றுத் தூயதன்றாய்ப் போக, நல்லிசைப் புலவன் தன் பேரறிவினால் அதனைத் தெளிய வடித்து அதன் இன்சுவையினை மிகுதிப்படுத்தி நாமெல்லாம் அதனைப் பருகிப் பெரியதோர் ஆறுதலடையக் கொடுப்பன்; அங்ஙனங் கொடுக்கப்படுந் தூய இனிய அறிவின் விளக்கம் பாட்டென்றே அறிதல் வேண்டும். இக்கருத்துப் பற்றியே மில்டன் எனும் ஆங்கிலமொழிவல்ல நல்லிசைப்புலவரும், ’பாட்டென்பது மக்கள் மன அறிவினின்றும் வடித்து இறக்கப்பட்ட தூய அமிழ்தமாம்’ என உரை கூறினார்” என்று பாட்டு குறித்து அருமையாய் விளக்குகின்றார் அடிகள்.

இவ்வாறே 1906ஆம் ஆண்டு, கிறித்தவக் கல்லூரியில் பயின்ற தமிழ் இளங்கலை மாணாக்கர்களுக்குப் பட்டினப்பாலை எனும் சங்கநூல் பாடப்பகுதியில் வைக்கப்பெற்றது. அவர்கள் அதற்கும் ஓர் எளிய ஆராய்ச்சியுரையை அடிகள் இயற்றித்தர வேண்டும் என்று கோரிக்கை வைக்கவே, அந்நூலுக்கும் பொருட்செறிவுமிக்க ஆராய்ச்சியுரை ஒன்றைப் படைத்தளித்திருக்கின்றார் மறைமலையடிகள்.

அதில் பட்டினப்பாலையின் அமைப்பையும் அதன் ஆசிரியர் சிறப்பையும் விளக்கவரும் அவர்…

”இப்பட்டினப்பாலை முழுவதூஉம் முந்நூற்றோர் அடிகளான் அமைக்கப்பட்டிருக்கின்றது. இவற்றுள் இருநூற்றுத் தொண்ணூற்றேழு  அடிகளில் புறப்பொருள் விரிவும், ஏனைய நான்கடிகளில் மாத்திரம் அகப்பொருட் சுருக்கமும் சொல்லப்பட்டிருக்கின்றன. இவ்வாறே, திருமுருகாற்றுப்படை முதலிய செய்யுட்களினும் புறப்பொருட் சிறப்பே பெரும்பான்மையால் கூறிவைத்து, ஏனை அகவுணர்வின் திறனெல்லாம் மிகச் சுருங்கவே சொல்லப்பட்டன. புறத்தே விரிந்த அறிவெல்லாம் முறைமுறையே சுருக்கப்பட்டு அகத்தே செல்வுழி, அஃதொன்றின் மாத்திரமே உறைந்து நிற்றலின், புறப்பொருள்வழி வைத்து விளக்கப்படும் அகப்பொருளெல்லாம் மிகச் சுருக்கிக் கூறுதலே மன இயற்கைக்கு இயைந்ததாம். இந்நுட்பம் செவ்விதின் அறிந்த உருத்திரங்கண்ணனாரது அறிவின் மாட்சி அளவிடற்பாற்றன்று.” என்று வியக்கின்றார்.

கிறித்தவக் கல்லூரியில் அடிகளாரிடம் நேரடியாகப் பயிலக்கூடிய பேறுபெற்றவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள், நாவலர் ச.சோமசுந்தர பாரதியார், இரசிகமணி டி.கே.சிதம்பரநாத முதலியார், பேராசிரியர் எஸ். வையாபுரிப்பிள்ளை, தணிகைமணி வ.சு.செங்கல்வராயப் பிள்ளை முதலியோர்.

செய்யுள், புதினம், நாடகம், கட்டுரை, மொழிபெயர்ப்பு, ஆராய்ச்சி எனப் பல்துறைகளிலும் அளவற்ற நூல்களை அடிகள் படைத்துள்ளார். திருவொற்றியூர் முருகன் மும்மணிக்கோவை, சோமசுந்தரக் காஞ்சியாக்கம் முதலியன அவர் இயற்றிய செய்யுள் நூல்களாகும். சிந்தனைக் கட்டுரைகள், அறிவுரைக் கொத்து, சிறுவர்க்கான செந்தமிழ், முற்காலப் பிற்காலத் தமிழ்ப் புலவோர், இந்தி பொது மொழியா? போன்றவை அவரின் கட்டுரை நூல்கள். குமுதவல்லி நாகநாட்டரசி, கோகிலாம்பாள் கடிதங்கள் முதலியன அவருடைய புதின நூல்கள். வடமொழியில் காளிதாசர் படைத்த சாகுந்தலத்தைத் தமிழில் மொழிபெயர்த்து சாகுந்தல நாடகம் என்று அதற்குப் பெயரிட்டுள்ளார். அம்பிகாபதி அமராவதி என்ற நாடக நூலையும் இயற்றியுள்ளார்.

மறைமலையடிகளின் ஆராய்ச்சி நூல்களை இலக்கிய ஆராய்ச்சி, கால வரலாற்று ஆராய்ச்சி, வாழ்வியல் ஆராய்ச்சி என்ற மூன்று பிரிவுகளில் அடக்கலாம். பண்டைக்காலத் தமிழரும் ஆரியரும், மாணிக்கவாசகர் வரலாறும் காலமும், முற்காலப் பிற்காலத் தமிழ்ப் புலவோர், சோமசுந்தர நாயகர் வரலாறு முதலியன கால வரலாற்றை உணர்த்தும் ஆய்வு நூல்களாகும். பொருந்தும் உணவும் பொருந்தா உணவும், வேளாளர் நாகரிகம், மக்கள் நூறாண்டு வாழ்வது எப்படி? என்பன வாழ்வியல் ஆய்வு நூல்களாக விளங்குகின்றன.

வாழ்வியல் ஆராய்ச்சி நூல்களுள் சைவ சித்தாந்த ஞானபோதம், சாதி வேற்றுமையும் போலிச் சைவரும், கடவுள் நிலைக்கு மாறான கொள்கைகள் சைவமாகா, பழந்தமிழ்க் கொள்கையே சைவ சமயம், தமிழர் மதம் முதலியன சமயத் தொடர்புடைய நூல்களாகும். வாழ்வியல் ஆய்வு நூல்களிலே, மரணத்தின்பின் மனிதர் நிலை, யோகநித்திரை அல்லது அறிதுயில், தொலைவிலுணர்தல் என்னும் மறைபொருளுணர்ச்சி, மனிதவசியம் அல்லது மனக்கவர்ச்சி முதலிய நான்கு நூல்களும் மறைபொருளியலை உணர்த்தும் நூல்கள் ஆகும்.

1911-ஆம் ஆண்டு தம்முடைய தமிழாசிரியர் பணியிலிருந்து விலகிய அடிகள், சைவ சித்தாந்தப் பணிகளிலும் நூல்கள் எழுதுவதிலும் தம்மை முழுமையாய் ஈடுபடுத்திக் கொண்டார். இல்லறத்திலிருந்து துறவுபூண்டு காவியுடுத்து சுவாமி வேதாசலம் ஆனார்.

1916ஆம் ஆண்டு ஒருநாள் தம்முடைய வீட்டுத் தோட்டத்தில் மகள் நீலாம்பிகையுடன் உலவிக்கொண்டிருந்த அடிகள், இராமலிங்க வள்ளலார் அருளிச்செய்த அருட்பாவிலிருந்து,

”பெற்ற தாய்தனை மக மறந்தாலும்
பிள்ளையைப் பெறும் தாய் மறந்தாலும்
உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும்
உயிரை மேவிய உடல் மறந்தாலும்
கற்ற நெஞ்சகம் கலை மறந்தாலும்
கண்கள் நின்றிமைப்பது மறந்தாலும்
நற்றவத்தவர் உள்ளிருந் தோங்கும்
நமச்சி வாயத்தை நான் மறவேனே.”
என்ற பாடலைப் பாடச்சொல்லிக் கேட்டின்புற்றார்.

பிறகு தம் மகளிடம், “இப்பாட்டில் உள்ள ‘தேகம்’ என்ற வடசொல்லுக்கு மாற்றாக அவ்விடத்தில் ’யாக்கை’ என்ற தமிழ்ச்சொல் இருக்குமானால் செய்யுளின் ஓசையின்பம் இன்னும் சிறக்கும்” என்றார். அதுகேட்ட நீலாம்பிகையார் தந்தையிடம், “நாம் இனி அயல்மொழிச் சொற்களை அறவே நீக்கித் தனித்தமிழிலேயே பேசுதல் வேண்டும்; அதற்கான முயற்சிகளைக் கைவிடாது செய்தல் வேண்டும்” என்று ஆர்வத்துடன் கூறியிருக்கின்றார்.

அத்தோடு, சுவாமி வேதாசலம் என்ற பெயரைத் தம் தந்தையார் தனித்தமிழில் மாற்றிவைத்துக்கொள்ள வேண்டும் என்றும் மகளார் வேண்டுகோள் விடுக்கவே, அதனையேற்றுத் தம் பெயரை மறைமலையடிகள் என்று மாற்றிவைத்துக் கொண்டார் அடிகள். அதுமுதல் மறைமலையார் தனித்தமிழிலேயே எழுதலானார். தனித்தமிழில் சொற்கள் கிடைக்காதபோது புதியசொற்களைத் தமிழில் உண்டாக்கி எழுதினார். 

ஞானசாகரம் என்ற தம் திங்கள் வெளியீட்டிற்கு அறிவுக்கடல் என்றும், தாம் ஆரம்பித்து நடாத்திவந்த சமரச சன்மார்க்க நிலையத்திற்குப் பொதுநிலைக் கழகம் என்றும் பெயர்மாற்றம் செய்தார். பின்னர் 1916ஆம் ஆண்டு தனித்தமிழ் இயக்கம் அமைத்துத் தமிழ் வளர்த்தமையால் ’தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை’ என்ற பெருமையைப் பெற்றார்.

அடிகளாரின் தனித்தமிழ் இயக்கம் ஆங்கிலம் மற்றும் வடமொழிபால் அவர்கொண்ட வெறுப்பால் தோன்றிய இயக்கமன்று; தமிழ்மீது அவர்கொண்ட தணியாத காதலால் மலர்ந்த இயக்கமாகும் என்பது எண்ணத்தக்கது.

‘‘எல்லா உறுப்புகளும் அமைந்த அழகான ஓர் உடம்பில், அந்த உறுப்புக்களை வெட்டி எறிந்துவிட்டு, மண்ணாலும், மரத்தாலும் செயற்கையாக அந்த உறுப்புகளைப்போல் செய்து அவற்றை அதற்கண் ஒட்டவைத்துப் பார்ப்பதற்கு ஒப்பாய் இருக்கின்றது, தமிழ்மொழியில் பிறமொழிச் சொற்களைச் சேர்ப்பது’’ என்று தேவையற்ற பிறமொழிக் கலப்பைக் கண்டிக்கின்றார் அடிகள்.

மறைமலையடிகளின் தனித்தமிழ்த் தாக்கத்தால் தமிழகத்தில் ‘அக்ராசனர்’ தலைவரானார்; ‘மகாஜனங்கள்’ பொதுமக்கள் ஆயினர்; ‘பிரேரணை’ தீர்மானமாயிற்று; ‘நமஸ்காரம்’ வணக்கமாயிற்று. அறிஞர் அண்ணா, இம்மண்ணுக்குத் ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்டியதும், தமிழ்நாட்டுத் தலைநகரத்திற்கு கலைஞர் கருணாநிதி ‘சென்னை’ என்று பெயர் சூட்டியதும் மறைமலையடிகளால் நேர்ந்த மாற்றங்களே எனலாம்.

”அடிகள் பேச்சு, பல பேச்சாளரைப் படைத்தது; எழுத்து, பல எழுத்தாளரை ஈன்றது; நூல், பல நூலாசிரியன்மாரை அளித்தது; அடிகளே தென்னாடு; தென்னாடே அடிகள் என்று கூறல் மிகையாகாது” என்று மறைமலையடிகளை மனங்கனிந்து பாராட்டியிருக்கின்றார் தமிழ்த்தென்றல் திரு.வி.க.

சிறந்த சிந்தனையாளர், பேரறிஞர், ஆராய்ச்சியாளர், பழந்தமிழ் நூல்களுக்குப் புத்துரை வரைந்த உரையாசிரியர், வீறுசால் பொழிஞர் எனப் பன்முக ஆற்றலாளராக, தமிழகத்துக்கோர் மாமலையாய் மிளிர்ந்த மறைமலையார், தமிழ்மாந்தர் அறிவுச்செழுமை அடைவதற்கும், நோயற்ற நெடுவாழ்வு வாழ்வதற்கும், ஆன்மநலம் உறுவதற்கும், தனித்தமிழ் உணர்வு பெறுவதற்கும் நல்வழி காட்டிச்சென்ற பெருமகனார் ஆவார்.

தமிழர்களாகிய நாம் அவர் படைத்தளித்த அருந்தமிழ் நூல்களை ஆர்வத்தோடு கற்போம்; தேவையின்றிப் பிறமொழிச் சொற்களைத் தமிழில் கலந்தெழுதுவதையும் பேசுவதையும் தவிர்ப்போம். நல்ல தமிழ்ப்பெயர்களையே பிள்ளைகளுக்குச் சூட்டுவோம். நம் வெல்லத் தமிழை மெல்லச் சாகாது காப்போம்!

கட்டுரைக்குத் துணைசெய்தவை:

1. https://ta.wikipedia.org/wiki/ மறைமலை_அடிகள்
2. https://www.hindutamil.in/news/opinion/columns/565268-maraimalai-adigal-birthday-1.html
3. http://www.tamilvu.org/courses/degree/p102/p1021/html/p1021551.htm
4. முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை, தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், 1962.
5. பட்டினப்பாலை ஆராய்ச்சியுரை, தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், 1957.

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *