Blog

  • நாகேஸ்வரி அம்மன் வீதி உலா | தாம்பரம்

    நாகேஸ்வரி அம்மன் வீதி உலா | தாம்பரம்

    ஆடித் திருவிழாவை முன்னிட்டு, சென்னை தாம்பரம் முத்துரங்கம் பூங்காவில் கோவில் கொண்டுள்ள அருள்மிகு நாகேஸ்வரி அம்மன், தாம்பரம் சந்தைக் கடைத்தெருவில் வீதி உலா வரும் காட்சி.

    நாகேஸ்வரி அம்மன் தேருக்கு முன்னால், வாத்தியக் குழுவினர், நடந்துகொண்டே வாசித்தனர். அம்மன் வருகையை மங்கல இசையால், மக்களுக்கு அறிவித்தனர். நாகஸ்வரமும் மேளமும் இழையும் இந்த இன்னிசையைக் கேட்டு மகிழுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • புதல்விக்கு மடல்

    புதல்விக்கு மடல்

    சி. ஜெயபாரதன், கனடா

    களைத்து
    அந்திப் பொழுதில் கதிரோன்
    அடிவானில் மூழ்குது.
    மங்கிடும் மாலை 
    மயங்கிக் கருகிடும். 
    இருளும் கண்கள் நீர் சொட்ட
    கால் முடங்குது.
    காபி தம்ளர் கனக்குது,
    கையில் வலுவின்றி.
    காலன் வந்துவிட்டான்,
    மருத்துவமனையில்
    காப்பாற்ற 
    முனையுது மருத்துவக் குழுவும்
    துணைக் குழுவும்.
    மூக்குக் குழல் வேண்டாம்
    நாக்கு முடங்கி
    வாய்க் குழல் எதற்கு?
    ஆயுள் நீடிப்பு எதற்கு 
    உயிர்வாயு எதற்கு?
    போக விடுவீர் என்னை,
    பிழைத்திட முயலாதீர்,
    உழைத்தது போதும்,
    உயிர் இனி இயங்க
    முடியாது,
    முடங்கிப் போனது 
    உடம்பு.
    வலி தெரியாது
    எடுத்துக்கொள்வீர்:
    இருதயம், கிட்னி, காற்றுப் பை,
    கண்கள், இவை
    என் இறுதிக் கொடை. 
    அறுத்துக்கொள்வீர்
    செத்தும் கொடுப்பேன்,
    ஆயினும்
    விடுவிப்பீர் எனை.
    மீள் பிறப்பு இருந்தால்
    மீண்டும் 
    ஏழ் பிறப்பிலும்
    பாரதியார் வாழ்ந்த 
    தமிழ்த் தாரணியில்
    தவழ 
    எனக்கு வரம் தா.

    Share
  • சிரிப்பு யோகா – பயிற்சி 4

    சிரிப்பு யோகா – பயிற்சி 4

    ‘சிரிப்பு யோகா’ தொடரில் நான்காவது பயிற்சியை இன்று வழங்குகிறார், ஹாஹோ சிரிப்பானந்தா. உங்கள் வாழ்வையே தலைகீழாக மாற்றக்கூடிய பயிற்சி இது. செய்து பாருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • புதிய பிள்ளைப்பருவங்கள்-7

    புதிய பிள்ளைப்பருவங்கள்-7

    மீனாட்சி பாலகணேஷ்     

    சமையல் பழகுதல்-7        

    (புதிய பருவங்கள்- பெண்பால் பிள்ளைத்தமிழ்)

    புதிய பருவங்களில் அடுத்து நாம் காணப்போவது சமையல் பழகுதல் என்பதாகும். பெண்குழந்தைகள் ஐந்தாறு வயதுச் சிறுமிகளாக உள்ளபோது பாவனையாகப் பொய்தல் விளையாட்டு விளையாடுவார்கள். மூன்று கற்களை அடுப்பாக்கி, சிவந்த நிறம் கொண்ட மாதுளை மலர்களை நெருப்பாகக் கொண்டு, சிறு மண்சட்டிகளையோ அல்லது பெரிய சங்குகளையோ பானையாகக் கொண்டு அதில் ஆற்றுநீரை உலைநீராகப் பெய்து, மணலையோ சிறு கற்களையோ அரிசியாக இட்டுச் சோறாக்கி விளையாடுவர்.

    இவற்றை அழித்துச் சிதைக்க வரும் சிறார்களை அவ்வாறு செய்யாதிருக்க வேண்டுவதனை ஆண்பால் பிள்ளைத்தமிழின் சிற்றிற்பருவத்தில் முன்பே கண்டோம். இது தொடர்பான பல விளையாட்டுக்களையும் கண்டுள்ளோம். பத்து ஆண்டுகள் நிரம்பிவரும் சிறுமி உண்மையான சமையல் செய்வதனை அன்னையுடன் அருகிருந்து கற்றுக் கொள்வாள். இவளே பின்பு சிறு பெண்குழந்தைகளுடன் விளையாடும்போது உண்மைச் சமையலின் சில பகுதிகளைத் தானே மேற்கொண்டும் செய்வதுண்டு. இதனையும் இந்தப் பொய்தல் விளையாட்டில் காண்கிறோம்.

    சமையல் செய்வதனை ஆசையாகக் கற்றபெண் திருமணம் முடிந்து கணவனுக்குத் தான் செய்யும் புளிப்பான மோர்க்குழம்பை அவன் சுவைத்து உண்டதில் மகிழ்ச்சி அடைந்ததனை ஒரு சங்கப்பாடல் நமக்கு விளக்குகிறது.

    சமையல் செய்யும் அவசரத்தில், புளித்த தயிரை விரல்களால் பிசைகிறாள்; கழுவ நேரமுமின்றித் தனது ஆடையிலேயே துடைத்துக் கொள்கிறாள். ஈர விறகோ என்னவோ, அடுப்பும் வேறு ஒத்துழைக்க மறுத்து, புகை மண்டுகிறது; அவளது குவளைமலர் போலும் கண்களில் புகுந்து தொல்லை செய்கிறது! இவ்வாறெல்லாம் பாடுபட்டுச் சமைத்த இனிய சுவையான மோர்க்குழம்பைக் கணவன் ‘நன்றாக உள்ளது,’ எனக்கூறிச் சுவைத்து உண்கிறான். இப்பெண்ணின் முகம் நுட்பமான மகிழ்ச்சியை அடைந்து மகிழ்ந்தது – என்று செவிலித்தாயின் கூற்றாக அமைந்த குறுந்தொகைப் பாடல்.

                                 முளிதயிர் பிசைந்த காந்தண் மெல்விரல்
                                கழுவுறு கலிங்கங் கழாஅ துடீஇக்
                                குவளை யுண்கண் குய்ப்புகை கமழத்
                                தான் றுழந் தட்ட தீம்புளிப் பாகர்
                                இனிதெனக் கணவ னுண்டலின்
                                நுண்ணிதின் மகிழ்ந்தன் றொண்ணுதன் முகனே1.

    இவ்வாறெல்லாம் இல்வாழ்க்கைக்குத் தம்மை உருவாக்கிக் கொள்ளும் இளம்பருவத்தின் ஒரு இனிய கட்டமே சமையல் பழகுதலாகும். நாம் இப்போது முற்றும் வித்தியாசமாக, உலகுக்கே படியளக்கும் அன்னை உமையவளாம் அன்னபூரணி தன் இளமைப்பருவத்தில் எவ்வாறு சமையல் பழகினாள் எனப் பார்த்து மகிழலாமா?

    மணம்புரிந்து கொண்ட பரமனுடன் இல்வாழ்க்கைக்குத் தயாரான மங்கை அன்னபூரணியிடம் பரமன் இருநாழி நெல்லை மட்டுமே அளித்து, “நீ உலகத்தோர் உய்யுமாறு முப்பத்திரண்டு அறங்களையும் வழுவாமல் செய்வாய்,” என்று அன்புடன் கூறிவிட்டான். அவளும் தனது கருணையினால் பரமன் கூறியவாறு அனைத்துலகங்களையும் அன்னமும் மற்றனைத்தும் குறைவறத் தந்து புரந்தளித்துக் காப்பது சுவர்க்கத்தையும் மோட்சத்தையும் தரும் காசிமா நகரில் அன்னபூரணியாக இருந்துகொண்டு தானே அன்றோ!

                            பொன்னனைய பூவையுனைப் போற்றிப் புகழும்
                                பித்தன்பே ரருளான்
                       மன்னுலகை யெலாம்நீ மகிழ்ந்துபு ரந்தளிக்க
                                விருநாழி நெற்றந்து
                       சொன்னசொற் றவறாது சுவர்க்க மோட்சந்தருங்
                                காசிமா நகருறையு                 
                       மன்னபூர ணித்தாயே! அன்னமளித் துலகை
                                யளித்த ருள்வாயே2!

    தான் உயிர்களைப் புரக்க ஆக்கிய இன்னமுதில் ஒரு பங்கினை ஐயன் தன்னிடமே ஏந்தி நிற்கும் சட்டியிலும் படைக்கிறாள் தாய் அன்னபூரணி! சங்குவளையலை அணிந்த அவள் (மணமான பெண்கள் சங்குவளைகள் அணிவது வட இந்திய வழக்கம்) சிற்றில் விளையாடிய காலத்தில் சமையல்கலையைப் பழக்கிக் கொண்டாள்; அவள் ஐயனின் இடப்பாகத்தில் வாழும் உமையவள்; வாராணசி நகரிலுறையும் அன்னபூரணித்தாய்!

                            அங்கர மலர்கொடு ஆக்கிய அடிசிலை
                                அன்புடன முதமென
                       சங்கர னேந்திய சட்டியில் வட்டிக்கும்
                                சங்குவளைக்  கையளே!
                       சங்கரி யே!சிற்றில் பயில் சுந்தரியே
                                எமைவாழ் வித்திடுமையன்
                       பங்கில் வாழுமையே வாராணசி நகருறை
                                யன்னபூ ரணியளே3!

    இப்பூவுலகில் நான் உனக்கொரு விளையாட்டுப் பாவை (பொம்மை!) தானே! ஆகவே என்னை நீ சீராட்டி வளர்த்து, பல நலங்களையுமளித்தருளி, வாழ்வில் முன்னேற நம்பிக்கையொளி தந்து நல்ல எண்ணங்களுடன் இருக்க அருளுகிறாய். தேனும் பாலுமான நற்பொருட்களைத் தேடியெடுத்து என் வாழ்வை இனிதாக்கி, அது திகட்டாத வண்ணம் அமுது செய்விக்கிறாய். ஆதரவு தருகிறாய். உனது மானின் விழிகளை நிகர்த்த கண்களால் என்னப் நோக்கி இந்த மாநிலத்தில் நான் மயங்கி விழாமல் காப்பாற்றி மதி, நிதி, நலம் அனைத்தையும் குறையின்றிக் கொடுப்பவள் நீயே எமக்கு வாய்த்த ஒரு பெருஞ்செல்வம். உன்னிடம் கொண்ட குறையற்ற அன்பினால் உடல் உயிர் அனைத்தையும் உனக்கேயளித்து வாழும் அடியார்களுக்கு உன் கருணையால் வீடுபேற்றையும் இறுதியில் தரும் உமையவளே! உன்மத்தனாம் சிவனின் அருளென விளங்குபவளே! (காசிமாநகர் வீடுபேறு தருமிடமாதலால் அங்கு வாழும் உமையான அன்னபூரணி வீடுபேறு தருபவளென்பது பெறப்படும்!).

                            நானொரு பாவையெனை நன்றாகச் சீராட்டி
                                நானிலத்தே நலம்பலவு மளித்து
                           நாளும் பொழுதும் நம்பிக்கை யொளிதந்து
                                நல்லெண் ணங்கூட்டி வைத்து
                       தேனொடு பானமுத மானனற் பொருட்களை
                                தேடியெடுத் துச்சிறுகூழ் சமைத்து
                          தித்திக்க வென்வாயில் திகட்டாத முதுசெய்வித்
                                தணைத் தாதரவு மளிக்கும்
                       மானொடு கண்ணிணை மயங்கவே நோக்கி
                                மாநிலத்தில் மயங்கி வீழாமல்
                           மதியுநிதி யுநலமு மங்காமலே கொடுக்கு
                                மாநிதிச் செல்வி யன்னாய்!     
                       ஊனொடு வுயிருமுள் ளன்பால் தந்திடு
                                முழுவலடி யார்தம் பாலுள
                            முருகிவீ டுபேறுந் தந்திடு முமையே!
                                உன்மத்த சிவனின் அருளே3!

    அனைத்து மானிடர்க்கும் அன்னையின் அருளை வேண்டுகிறேன்.

    அடுத்து சில ஆண்பால் பிள்ளைத்தமிழ்ப் பருவங்களை நோக்குவோம்.

    (புதிய பிள்ளைப்பருவங்கள் தொடரும்)

                                       ————————–

    பார்வை நூல்கள்:

    1. குறுந்தொகை

    2, 3, 4. மீனாட்சி பாலகணேஷ்- காசி அன்னபூரணி அம்மை மீதான பிள்ளைத்தமிழ் பாடல்கள்.

    Share
  • கொய்யா அறுவடை – 5

    கொய்யா அறுவடை – 5

    இன்றைய கொய்யா அறுவடை, மகிழ்ச்சி!

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • வி.கிருத்திகா ஓவியங்கள் – ஒரு மதிப்பீடு

    வி.கிருத்திகா ஓவியங்கள் – ஒரு மதிப்பீடு

    திண்டிவனத்தில் எட்டாம் வகுப்புப் படிக்கும் வி.கிருத்திகாவின் ஓவியங்களை ஓவியர் நாமக்கல் பாலமூர்த்தி மதிப்பிடுகிறார். உங்கள் வீட்டுப் பிள்ளைகளின் ஓவியங்களையும் மதிப்பீடு செய்ய வேண்டுமா? அவர்களின் ஓவியங்களை annakannan@yahoo.co.in என்ற முகவரிக்கு அனுப்புங்கள். வாட்ஸாப் – 91-9841120975.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 25

    தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 25

    புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள் 
    உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை 
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
    விளார் புறவழிச்சாலை, 
    தஞ்சை மாவட்டம் – 613006.
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    உவமக் கோட்பாடுகளில் மரபின் தாக்கம்

    முன்னுரை

    ஒரு பொருளுக்குப் பல பொருட்களையும் ஒரு வினைக்குப் பலவினைகளையும் ஒரு பண்புக்குப் பல பண்புகளையும் ஒரு பயனுக்குப் பல பயன்களையும் உவமிப்பது உவமத்தின் தொடக்க நிலை. ‘நிலை’ என்றால் படைப்பாளனின் சிந்தனைப் பெருக்கும் அழகியல் உணர்ச்சியின் விரிவும் எனக் கருத வேண்டும். ‘தாமரைபோன்ற முகம்’ என்பது வளர்ந்து ‘தாமரையோ? செவ்வந்தியோ? நிலவோ?’ என்றெல்லாம் எழுதினார்கள். இவ்வாறு எழுதுவது ஏனைய உவமங்களுக்கும் பொருந்தும். இது பற்றிச் சென்ற கட்டுரைகளில் ஆராயப்பட்டிருக்கிறது. இதன் தொடர்ச்சியாக வேறு இரண்டு நிலைகளும் காணப்படுகின்றன. ஒன்று ஒரே நிகழ்வுக்குப் பல காரணங்களைக் கற்பித்து உவமமாக்குவது. இரண்டு கருத்து, கற்பனை, நிகழ்வு இவற்றின் மாறுபடுகளுக்கேற்ப ஒரு பொருளின் நிகழ்வை அதாவது எழுவாயின் வினையை இடம் மாற்றி உவமித்துக் காட்டுவது. இவை பற்றிய சில கருத்துக்கள் இந்தக் கட்டுரையில் ஆராயப்படுகின்றன.

    அசலும் நகலும்

    சில நேர்வுகளில் ஆர்வக் கோளாறு காரணமாக ஏடு கற்கும் சிலர் தாமே சில பாடல்களை எழுதி அதாவது மூலநூல் ஆசிரியர் நடையிலேயே எழுதி அவற்றையும் சுவடிகளில் இணைத்துவிடுவர். இது காலங்காலமாக நடந்துவரும் தமிழ்த்திருத்தொண்டு. இராவணன் முதல்நாள் போரில் தோல்வியுற்று வீரமும் களத்தே போட்டு வெறுங்கையோடு இலங்கை புக்க’ நிலையைக் கம்பன் மிகச்சிறப்பாகப் பல பாடல்களில் பாடியிருக்கிறான். ஒரு பாடலில் சீதை சிரிப்பாளே என்று ‘நாணத்தால் சாம்புகின்றான்’ என்றும் கம்பர் எழுதுகிறார். இதுபோன்ற சூழல்களில் மனம் பறிகொடுத்த ஒருவர்,

    “விடங்கொண்ட  மீனைப் போலும்
    வெந்தழல் மெழுகு போலும்
    படங்கொண்ட பாந்தள் வாயில்
    பற்றிய தேரை போலும்
    திடங்கொண்ட இராம பாணம்
    செருக்களத் துற்ற போது
    கடன் கொண்டான் நெஞ்சம் போலும்
    கலங்கினான் இலங்கை வேந்தன்”

    என்று இவராகவே ஒரு பாடலை எழுதி அதனையும் கம்பராமாயணத்தில் சேர்க்க, நம்முடைய சான்றோர்களும் அதனைக் கம்பன் பாட்டே என எண்ணியும் சொல்லியும் வந்திருக்கிறார்கள். இப்பொழுது இங்கே சொல்ல வருவது படித்தவர் எழுதிய அந்தப் பாட்டில் கூட இராவணனின் துன்பத்திற்கு ஒரே உவமம் சொல்லப்படாமல் ஒன்றுக்கு மேற்பட்ட உவமங்களைப் பந்தி வைப்பதைக் காணலாம். படைப்பாளனுக்கு மட்டுமன்று படைப்பைப் படிப்பவனுக்கும் இத்தகைய உணர்வு வந்திருக்கிறது என்பதை நோக்க வேண்டும். இதற்கு அடுத்த நிலையில்தான் ஒரே நிகழ்வுக்குப் பல காரணங்களைக் கண்டறியும் உவமச் சிறப்பைக் காணமுடிகிறது.

    கதிரவன் தோற்றமும் கவிஞன் உள்ளமும்

    பொருளையே உவமமாகச் சொல்லும் கவிதை மரபு தமிழில் இன்றும் தொடர்கிறது.  அத்தகைய உவமைகளில் மனிதநேய உணர்வுகளும் மானிட மதிப்புக்களும் அழகியல் வெளிப்பாடுகளும் கலந்தமைந்திருப்பது சுட்டுதற்குரியது. நிகழ்வு ஒன்று. அதற்கான காரணங்களைப் படைப்பாளன் நிரல்படுத்துகிறபோது கவிஞனின் அழகியல் உணர்வு, பன்முக நோக்கு, சமுதாயச் சிந்தனை, மனித நேயம் முதலிய அனைத்தையும் அறிந்து கொள்ள முடிகிறது. காலைக்கதிரவன் தோற்றத்தை முடியரசன் பாடுகிறார்.

    “இன்னலுறும் பிணியாளன் துயரம் தீர்க்க
    இனியமொழி வழங்கவரும் நண்பன் போலத்
    பன்னரிய பெருங்காதல் பிணிப்புண் டாங்கண்
    பைதலுறும் மாவேழன் நிலைமை காணத்
    துன்னுமிருள் செகுத்தெழுந்து கீழை வானில்
    சுடர்க்கதிரோன் முகங்காட்டி விரைந்து வந்தான்”.

    காப்பியத்தின் நாயகன் மாவேழன். அவனுக்கு உற்ற தோழர் பலரிருப்பினும் உயிர்த்தோழர் சிலர் களத்தில் தம் நண்பனுக்கு உற்ற துன்பத்தை அறிந்து கொள்ளத் துடித்து வருவார் போலக் கதிரவன் கீழ்த்திசையில் விரைந்து வந்ததாக உவமிக்கிறார். இதே கதிரவன் உதயத்திற்குத்,

    “தினவெடுத்த திண்டோளர்  தருக்கி நின்று
    செயும்போரை எதிர்நின்று காண்பான் போல
    முனமடுத்த இருளென்னும் திரையை நீக்கி
    முகங்காட்டிச் செங்கதிரோன் எழுந்து வந்தான்”

    களக்காட்சியை நேரில் மற்றும் அருகில் காண்பதற்காகச் செங்கதிரோன் எழுந்து வந்தான் என்று பாடுகிறார்.

    “ஆயிழையின் மனத்தகத்தே அடக்கி வைத்த
    ஆர்வமெலாம் திரண்டுருண்டு வடிவு கொண்டு
    மாயிருநீர்க் கடற்பரப்பில் உருவுகாட்டி
    வருவதுபோல் செங்கதிரோன் கீழை வானில்
    ஞாயிறென முகங்காட்டித் தோன்றி வந்தான்”

    என்னும் வரிகளில் மனத்துள் அடக்கிவைத்த ஆர்வத்தையே உருண்டை வடிவத்தில் தேக்கிவைத்த கதிரவன் காலைப்பொழுதில் கீழ்த்திசையில் எழுந்து வந்ததாக எழுதுகிறார்.

    காலைக் கதிரவன் கீழ்க்கடலில் எழுகின்ற ஒரே காட்சியை நண்பன் போல வந்தான் என்றும், போர்க்களத்தை விருப்பத்துடன் காண்பவன் போல வந்தான் என்றும், ஆர்வமே உருக்கொண்டு வந்ததைப் போல் வந்தான் எனவும் பலபட உவமத்தால் விளக்குவதையும் அவ்வுவமங்களெல்லாம் நட்பு, வீரம், உணர்ச்சி  ஆகியவற்றைச் சார்ந்து அமைந்திருப்பதையும் காணமுடிகிறது.

    மழையும் வைரமுத்தும்

    இருபதாம் நூற்றாண்டுக் கவிஞர்களில்  இயற்கையைப் பாடுவதில் பாவேந்தருக்கு அடுத்த நிலையில் இருப்பவர் வைரமுத்து என்பது தரவுகளால் உறுதி செய்யப்பட்ட உண்மையாகும். மழைத்துளியை வைரமுத்து அனுபவித்துப் பாடும் கவிநேர்த்தியை அவருடைய கவிதைகளில் பரக்கக் காணலாம். இங்கே மழையையும், அதன் துணைவினைகளையும் கவிதைகளில் உவமமாக்கும் அவருடைய தனித்திறன் ஆராயப்படுகிறது. போலிக்காதலுக்கு மயங்கிச் சீரழிந்த ஒரு பெண்ணின் புலம்பலில்,

    “மழையூறிய காகிதமானேன்”

    என்னும் உவமத்தை வைத்துக் காட்டுகிறார். மழை விழுந்து காகிதம் ஊறிவிடுமானால் சேதாரம் காகிதத்திற்கேயன்றி மழைக்கன்று. ஆணின் பசப்பலுக்குப் பெண்மை ஏமாறும் பொழுது அழிவு பெண்மைக்கன்றி ஆணுக்கன்று என்னும் உண்மையை விளக்குதற்குக் காகிதத்தை ஊறச் செய்யும் மழையின் துணைவினை ஈண்டு உவமமாக்கப்பட்டுள்ளதை அறியலாம். இதனை ‘நீரூரிய காகிதம்’ என்னாது, மழையூறிய  காகிதம் எனக் கூறியது காகிதம் நீருக்குள் விழுந்தால் அது நீரூரிய காகிதம்! கிடந்த காகிதத்தின் மேல் மழைபெய்து நனைந்தழியுமானால் அது மழையூறிய காகிதம். கிடந்த காகிதம் என்பது பெண் என்பதைக் கற்பித்துக் கொண்டால் நுட்பம் புரியும்.

    மழைபெய்த களிமண் நிலமும் மனித மனமும்

    மழையூறிய காகிதத்தைத் தடமாறிய பெண்ணுக்கு உவமமாக்கிய வைரமுத்து அதே மழைபெய்த களிமண் நிலத்தை மனிதனின் மனத்துக்கு உவமமாக்கியிருக்கிறார்.

    “மழைக்கு வெளியே நின்று
    மழையை ரசியுங்கள்
    மழை பெய்த களிமண் நிலமாய்
    மனம் எப்போதும் நெகிழ்ந்திருக்கட்டும்”

    மழை பெய்து நனைத்த இடங்களாக காகிதத்தையும், களிமண்ணையும் கொண்டு, சீரழிந்த பெண்ணுக்கும் சிந்தையின் நெகிழ்ச்சிக்கும் உவமமாக்கிக் கொள்கிறார். மழைபெய்த ‘செம்புலத்தைச்’ சங்க இலக்கியம் காட்டுகிறது. மழைபெய்த களிமண் நிலத்தைப் ‘பெய்யெனப் பெய்யும் மழை’ காட்டுகிறது. முன்னது காதல் கலப்பிற்கு உவமை. பின்னது மாந்தர் மனம் இருக்க வேண்டிய நிலைக்கு உவமை. மழைபெய்து கலக்கும் மணலை விடச், செம்மண்ணை விட, வேறு மண்வகையை விட இளகி நெகிழ்ந்து கிடக்கும் நிலம் களிமண் என்பது உண்மை. இரக்கம், அன்பு, பாசம், நேசம் ஆகிய மாந்த உணர்வுகளின் குறியீடாகவும் இதைக் கொள்ளலாம். சிற்றூர் வாழ்க்கையில் திளைத்தவராதலின் மழைபெய்த களிமண் நிலம் கவிஞர்தம் உள்ளத்தைப் பெரிதும் ஈர்த்துள்ளது என்பது,

    “மழைபெய்த களிமண் நிலமாய்
    புலவர்  மனம் பொசுக்கென்று நெகிழ்ந்தது”

    என இதே உவமையைத் தமது புதினமொன்றிலும் நெகிழ்ச்சிப் பொருண்மையை விளக்கக் கையாண்டிருப்பதால் உணர்ந்து கொள்ள முடியும். மேலும்,

    “கள்ளமனம் நமைவெற்றிக் கொள்வ தில்லை!
    கடல் நீரை மழைபெய்து நனைத்த தில்லை”

    என்னும் கவிதை வரிகளில் மழை பெய்தும் நனையாத இடமாகக் கடலைச் சுட்டிக்காட்டுகிறார்.  மழைநீரால் கடலை நனைக்க முடியாதது போலவே கள்ள மனத்தால் நல்ல மனத்தை வெற்றி கொள்ள இயலாது என்னும் வாழ்வுண்மையையும் விளக்கிக் காட்டுகிறார்.

    இடம் மாறி விழுந்த மழை!

    இதே மழைத்துளி நனவு கனவானதற்கும் உவமமாகப் பயன்பட்டிருப்பதை வைரமுத்து கவிதைகளில் காணமுடிகிறது. தன் எழுத்துக்களையெல்லாம் அச்சில் ஏற்றி நூலாக்கி அதன் மூலம் வருவாய் ஈட்டலாம் என்னும் மகாகவி பாரதியின் கனவு,

    “கடலில் விழுந்த மழைத்துளியாய்க் காணாமல் போயின”

    என உவமத்தால் விளக்குவார் வைரமுத்து. கடலென்னும் பரந்துபட்ட நீர்நிலையையும், அதில் விழும் ஒரு சொட்டு மழைத்துளியையும் ஒப்பிட்டுப் பார்த்தால் உவமையின் ஆளுமை புரியக்கூடும். பாரதியின் ஆசை உருவம் இழந்து ஒன்றுமில்லாமல் போனதற்குத்தான் இந்த உவமை பயன்படுத்தப்படுகிறது. உருவமில்லாமல் போவதைச் சுட்டுதற்குப் பயன்பட்ட இந்த உவமத்தில் சிறிது மாற்றம் செய்து,

    “சுடுமணலில் கொட்டிய மழைத்துளி போல”

    எனப் பயன்படுத்தியிருப்பதையும் காணமுடிகிறது. சுடுமணலில் கொட்டிய மழைத்துளி, விரைந்து மண்ணுக்குள் வடிந்துவிடும். பாரதியின் வாழ்க்கையில் சுவை குறைந்து போய்விட்டதைக் குறிப்பதற்குச் சுடுமணலில் விழுந்த மழைத்துளியைப் பொருத்தமாகப் பயன்படுத்துகிறார் வைரமுத்து. புலப்படுத்தும் பொருண்மைகளுக்கேற்பக் ‘கடல்’, ‘சுடுமணல்’ என மழைத்துளி விழும் இடத்தையும் மாற்றிக் கொள்ளும் படைப்புத் திறன் குறிப்பிடத்தக்கது.

    சிதறும் மழைத்துளியால் சிதறும் சிந்தனைகள்

    தான் கண்ணீர் விட்ட சூழ்நிலைகளை நினைவுக்குக் கொண்டு வரும் வைரமுத்து உறவுகளால் தான் கைவிடப்பட்டதைச் சுட்டுகிறார்.

    “சிகரத்தில் விழுந்த மழையாய்ச்
    சிதறிய உறவுகளின்
    சேராத பாசத்தில்”

    தான் விட்ட கண்ணீரில் வங்கக்கடல் மூழ்கியதாகக் கற்பனை செய்கிறார். கடல், சுடுமணல் ஆகிய இரண்டோடு, சிகரமும் மழைத்துளி விழுந்த இடமாகக் கவிஞரால் கண்டறியப்படுகிறது. அழிதல், இறங்குதல், சிதறுதல் ஆகிய வினைகளோடு வழிதல் ஆகிய வினைக்கேற்பவும் மழைத்துளி உவமமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. விடுதலைப் போராட்டத்தில் அரவிந்தருடைய வரலாறும் வ.வே.சு. அய்யரின் வரலாறும் கொஞ்சம் வேறுபட்டது. அவர்கள் விடுதலை வீரர்களாய்த் தோன்றி ஆன்மீகச் செல்வர்களாய் வாழ்க்கையை முடித்துக் கொண்டவர்கள். அப்பெருமக்களைப் பாரதி சந்தித்ததன் விளைவு அவர் உள்ளத்தில் உணர்ச்சித் தீ கொஞ்சம் கொஞ்சமாகக் குறையத் தொடங்கியது.

    “கொதித்துக் கொதித்துக்
    கொப்புளித்த உணர்ச்சி
    வாழைமரத்தில் விழுந்த
    மழைத்துளியாய்
    வழியத் தொடங்கியது”

    கதிரவனின் வெப்பத்தைத் தனது கவிதைகளில் தேக்கிய பாரதியின் பிற்காலச் செயல்பாடுகள் வேகம் குறைந்ததற்கு அரவிந்தர், அய்யர் ஆகியோரைச் சந்தித்ததுதான் காரணம் என்னும் கருத்தை முன்மொழியும் வைரமுத்து, வாழைமரத்தில் விழுந்த மழைத்துளியை உவமமாக்குகிறார். மழைத்துளி மற்ற மரங்களில் விழுவதற்கும் வாழை மரத்தில் விழுவதற்கும் நுட்பமான வேறுபாடு உண்டு. வாழை மரத்தில் எந்தப் பக்கம் நீர் விழுந்தாலும் தேங்கி நிற்பதற்கான வழியே கிடையாது. வழிந்து விடும். பாரதியின் உணர்ச்சி மளமளவென்று குறைந்து போனதற்கு மழைத்துளி விழுந்த இடமாக வாழை மரத்தைக் கண்டது நுட்பமான சிந்தனையாகும்.

    இயற்கையைப் பாடும்பொழுது சமுதாயச் சிந்தனைகளையும் சமுதாயச் சிந்தனைகளைப் பதிவு செய்கிறபோது இயற்கைக் கூறுகளையும் உவமமாக்குவது கவிஞர்களுக்கு இயல்பு. இயற்கையோடு கவிஞர்கள் கொண்டிருந்த உறவும், சமுதாயத்தோடு அவர்கள் கொண்டிருந்த நேசமும் இத்தகைய ஆற்றலை அவர்களுக்குத் தந்திருக்கக் கூடும். தமிழிலக்கிய வரலாற்றில் முதிர்கன்னிகளைப் பற்றிய சிந்தனை திருவள்ளுவர் காலத்திலேயே தொடங்கிவிட்டது. கவிதைகள் தொடர்கின்றன. அவர்கள் கண்ணீர்தான் காயவில்லை. வைரமுத்து தமது கவிதையொன்றில் காலம் கடந்த முதிர்கன்னிகளின் திருமணத்தைக் கூறும் பொழுது,

    “கழிந்து போனது காலம்.
    இனி மறந்து மழை பெய்தாலும்
    அது
    வேரில் விழும் மழையா?
    விறகில் விழும் மழையா?”

    என உவமத்தால் வினவுகிறார். ‘வேர்’ என்பது பருவத்தில் மணம் செய்ய வேண்டிய கன்னி. ‘விறகு’ என்பது பருவந்தவறி மணம் செய்து கொள்ளும் கன்னி. மழை திருமணம். மழை வேரிலே விழுந்தால் பயிர் தழைக்கும். அதே மழை விறகிலே விழுந்தால் விறகும் தழைக்காது. மழையாலும் பயனில்லை. பருவம் கழிந்து நடைபெறும் திருமணத்தால் கன்னிக்கும் பயனில்லை., கணவனுக்கும் பயனில்லை. மழை பெய்கிற இடத்தைப் பசுமையான வேராகவும், காய்ந்த மரமாகவும் மாற்றித் தான் சொல்ல வந்த கருத்தைத் தெளிவுபடப் பதிவு செய்யும் திறன் நோக்கத்தக்கது.

    பாலைவனப் புல்லில் விழுந்த மழைத்துளி

    மழைத்துளி ஒன்றானாலும் அது விழுகின்ற இடங்களின் மாற்றங்களுக்கேற்பக் கவிதையின் பொருண்மைகளில் ஏற்படும் மாற்றம் தொடர்ந்து ஆராயப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக மழைத்துளி பாலைவனத்துப் புல்லில் விழுவது அவரது உரைநடைப்பகுதியிலும் உவமமாக்கப்பட்டுள்ள திறன் ஒப்பீட்டுக்காகச் சுட்டப்படுகிறது.

    “ஒரு பாலைவனப் புல்லின் மீது எப்போதாவது ஒரு மழைத்துளி விழுந்தால் அந்தப் புல் எப்படிப் புளகிக்குமோ அந்தச் சிலிர்ப்பை என் ஜீவன் உணர்கிறது.”

    கவிதை எழுதுங்கால் ஏற்படுகிற உணர்ச்சி  மெய்யுணர்ச்சி எனவும் திரைப்படப் பாடல் எழுதுங்கால் ஏற்படுகிற உணர்ச்சி பொய்யுணர்ச்சி என்றும் முன்வைக்கும் கருத்தை நளினமாக மறுத்துரைக்கிறார் வைரமுத்து. திரைப்படப் பாடல்களிலும் கவிதைக் கூறுகள் அரிதாக அமைந்துவிடும். அந்த அருமையையே பாலைவனப் ‘புல்லின் மீது பெய்த மழைத்துளி’ என்று உவமிக்கிறார். இந்த உவமையால் திரைப்படங்கள் இலக்கியச் சோலைகள் அல்ல என்பதும்  திரைப்படப் பாடல்கள் அனைத்துமே இலக்கியத்தரம் வாய்ந்ததல்ல என்னும் உண்மையும், அவற்றுள்ளும் இலக்கியத் தரமுடைய உணர்ச்சிகளின் வெளிப்பாடுகள் அரிதாக  அமைவதுண்டு என்பதும் விளக்கமாகின்றன.

    பாலைவனத்தில் விழுந்த மழைத்துளியைப் போலவே பாறையில் விழுந்த மழைத்துளியையும் கருத்து விளக்கத்திற்காகத் தனது வரலாற்றுப் புதினமொன்றில் உவமமாகப் பயன்படுத்தியிருப்பதையும் அறியமுடிகிறது. ‘வில்லோடு வா நிலவே’ என்னும் தமது வரலாற்றுப் புதினத்தில் ‘மாமூலர்’ என்னும் புலவர் பாத்திரம், மாறுவேடத்தில் வந்த சேரலாதனை அடையாளம் கண்டு வணங்கியபோது சேரனுடைய பதற்றத்தைப் பதிவு செய்யும் வைரமுத்து,

    “பாறையில் விழுந்து சிதறும் மழைத்துளியாய்ப்”

    பதறி எழுந்ததாகக் கூறுகிறார். பாலைவனத்து மழைத்துளி மணலின் உள்ளிறங்கப், பாறையில் விழும் மழைத்துளி சிதறும் என்னும் உண்மையை முன்னிறுத்தி, அதனைச் சேரலாதனின் பதற்றத்திற்கு உவமமாக்கியிருப்பது (கட்டுரை கவிதை உவமங்களைப் பற்றியதாக இருப்பினும்) ஒப்பீட்டுக்காக ஈண்டுச் சுட்டப்படுகிறது.

    இவ்வாறு சுடுமணல், சிகரம், வாழைமரம், வேர், விறகு, கடல், பாலைவனம், பாறை என மழைத்துளி விழும் இடங்களின் அடிப்படையில் அதன் விளைவுகளையும் பயன்களையும் கருத்திற் கொண்டு கையாளப்படும் உவமைகள் பொருண்மைகளை ஆளும் திறத்தை அளவிடமுடிகிறது.

    நிறைவுரை

    ஒரே நிகழ்வுக்குப் பல உவமங்களை நிரல்படுத்தும் நிலையிலிருந்து ஒரே நிகழ்வுக்குப் பல காரணங்களைக் கற்பித்து அவற்றை உவமமாக்குவதும், மழை முதலிய எழுவாய்களின் வினைபடு களத்தை மாற்றி அமைப்பதன் மூலம் சொல்லவரும் கருத்துக்களுக்குக் கூடுதல் தெளிவு தர முயல்வதும் தமிழ்க்கவிதை உவமக்கோட்பாடுகளின் நுண்ணியமாகும். திருவள்ளுவர் பிறர்க்குப் பயன்படும் செல்வம் உள்ளவனைப் ‘பழுமரம்’ என்றும் மக்கட் பண்பில்லாதவனை ‘மரம் போல்வர்’ என்றும் பாடியிருக்கிறார். இதனால் மேலே சுட்டிய உவமத்தின் பிற்காலப் பரிணாமம் மரபு சார்ந்ததே என்பது பெறப்படும்.

    (தொடரும்…)

    Share
  • கதையும் மொழிதலும் – 6 கு.ப.ராஜகோபாலனின் ‘கனகாம்பரம்’

    கதையும் மொழிதலும் – 6 கு.ப.ராஜகோபாலனின் ‘கனகாம்பரம்’

    முனைவர் ம. இராமச்சந்திரன்
    உதவிப் பேராசிரியர் மற்றும் ஒருங்கிணைப்பாளர்
    ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிப் பிரிவு-தமிழ்
    ஸ்ரீவித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி) ஊத்தங்கரை கிருஷ்ணகிரி மாவட்டம்.
    ramachandran78.blogspot.com
    9360623276

    “அணுக்களின் ஆக்ரோஷ செயல்பாட்டில் வினையாற்றும் உடலங்களின் இயக்கமே காமம். ஏற்றுக்கொள்ளுதலுக்கும் எதிர்பார்ப்புக்கும் இடையிலும் நடைமுறைக்கும் ஒவ்வாமைக்கும் இடையிலும் ஏற்படுகின்ற உணர்வு இடைவெளியில் மொழி ஆளுமை செலுத்துகிறது. சொற்களால் கட்டமைக்கப்படும் எண்ணங்கள் ஆண் பெண் உறவு நிலையில் பல சிக்கல்களைத் தோற்றுவிக்கின்றன.”

    சி.சு.செல்லப்பா, க.நா.சு ஆகியோரால் பாராட்டப்பட்ட சிறுகதை எழுத்தாளர் கு.ப.ராஜகோபாலன். கு.ப.ரா.வும் ந.பிச்சமூர்த்தியும் நெருங்கிய நண்பர்கள். மணிக்கொடி கால எழுத்தாளர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கான தனித்தன்மையில் இயங்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களாக இருந்தனர். சிறுகதை அமைப்பு அக்காலத்தில் முக்கிய இலக்கிய வடிவமாக அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு, பல புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. அந்த வகையில் ஆண் பெண் உறவுச் சிக்கலை மையமாக வைத்துக் கதைகள் எழுதி, வியப்பில் ஆழ்த்தியவர் கு.ப.ராஜகோபாலன்.

    மனித வாழ்க்கையில் அடிநாதமாக ஒலித்துக்கொண்டே இருப்பது காமமும் காதலும். இதன் விசையிலேயே அனைத்துச் சமூகப் பண்பாட்டு அரசியல் பொருளாதாரக் கூறுகள் பின்னப்படுகின்றன. மனித வாழ்க்கைக்கு ஒரு அர்த்தத்தைத் தருவது பெண் சார்ந்த இல்லற வாழ்க்கை. குடும்பம் என்ற நிறுவனம் மனிதர்களை ஒரு கட்டுக்கோப்பில் இயங்கச் செய்து சமூக வினையாற்றுகிறது. அந்தக் குடும்ப அமைப்பில் ஆண் பெண் சார்ந்த உறவுச் சிக்கல்கள் பேசாப் பொருளாக மனத்தின் ஆழத்தில் பொதிந்து கிடக்கின்றன. அந்த மறைபொருளை விவாதப் பொருளாகத் தனது கதைகள் மூலம் கொண்டு வந்தவர் கு.ப.ராஜகோபாலன்.

    இவரின் பெரும்பாலான கதைகள், இத்தகைய உள்ளடக்கம் கொண்டவையாகவே இருக்கின்றன. இவரின் கதைக் களமானது, ஆண் பெண் உறவுச் சிக்கலை மையமாகக் கொண்டதாக இருக்கிறது. இந்தச் சிக்கல், இரண்டு சமூகக் கட்டமைப்புகளைக் கொண்ட நமது சமூகத்தில் எவ்வாறு உளவியல் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்பதை இவரின் கதைகள் மூலமாக உணர முடிகிறது. கிராமம் சார்ந்த பழைய பண்பாட்டுச் சமூக விழுமியங்களுக்கும் இன்றைய அறிவொளி கால முற்போக்கு எண்ணங்களுக்கும் இடையில் மனம் ஏற்றுக்கொள்ள மறுக்கும் நடைமுறை யதார்த்தங்களை இவரின் பல கதைகள் எடுத்துரைக்கின்றன. அத்தகைய கதைகளில் ஒன்றே கனகாம்பரம்.

    புதிதாகத் திருமணமாகி வந்திருக்கக்கூடிய தம்பதிகள் வாழ்ந்து வரும் சூழலில், கணவன் படித்தவனாக இருக்கிறான். இன்றைய நவீன நாகரிகத் தன்மையுடன் தன் மனைவி நடந்துகொள்ள வேண்டும் என்று பல நடைமுறைகளை அவளுக்குக் கற்றுத் தருகிறான். கிராமத்தில் பண்ணையார் மகளாக வளர்ந்து வந்த அவளுக்கு நாகரிகச் சூழலைப் புரிந்து நடந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. குறிப்பாகத் தன் கணவனின் விருப்பத்திற்கு மற்றும் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப நடந்துகொள்ள வேண்டும்  என்ற உணர்வு இருக்கிறது. எனவே கணவனின் நடத்தை அறிவுரைகளைக் கவனமாகக் கடைப்பிடிக்க எண்ணுகிறாள். கணவன் படித்தவன் நகர வாழ்க்கையில் இருக்கக் கூடியவன் அவனைத் தேடி நண்பர்களும் வேண்டியவர்களும் வருவார்கள், நாம் நலம் விசாரித்து அவர்களிடம் முறையாகப் பேச வேண்டும், கிராமத்துப் பெண் போல கூச்சப்படக் கூடாது என்பன போன்ற வழிகாட்டல்களை, அறிவுரைகளை அவளின் மனது கணவனின் எண்ணங்களை நிறைவுசெய்யும் வகையில் இருக்கவேண்டும் என்று கவனமாகச் செயல்படுகிறது.

    ஒருநாள் கணவரின் நண்பன், அவனைத் தேடி வீட்டிற்கு வந்துவிட்டான். அடுப்படியில் வேலையாக இருந்த இவள், நண்பரை வரவேற்று மிகவும் பழக்கப்பட்ட அறிமுகமான நபரைப் போல பேசுகிறாள். அது அவனுக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அதே நேரத்தில் அவள் ‘வீட்டிற்குள் வாங்க’, ‘அவர் சற்று நேரத்தில் வந்துவிடுவார்’ என்றும் ‘வந்து உட்காருங்கள்’ என்றும் கூறுகிறாள். இது அவனுக்கு மேலும் வியப்பைத் தருகிறது. ‘எந்தத் தைரியத்தில் கணவன் இல்லாத நேரத்தில் தன்னை உள்ளே வந்து உட்காருங்கள்’ என்று கூறுகிறாள் எனத் தயங்கி பிறகு வருவதாகக் கூறிச் சென்று விடுகிறான். அவளுக்கு மனநிறைவு. கணவனின் நண்பரை நாகரிகமாக வரவேற்றோம், இதனைக் கேட்டால் கணவன் மகிழ்ச்சி அடைவார் என்று எண்ணி அடுப்படியில் விட்டு வந்த வேலையில் மும்முரமானாள்.

    கணவன் வந்ததும் நடந்தவற்றை விரிவாகச் சொன்னாள். அவன் யாராக இருக்கும் என்ற குழப்பம் அவனுக்கு. அதுமட்டுமல்ல, வந்தது யார் என்று தனக்குத் தெரியவில்லை. இந்த நிலையில் அவனை வீட்டிற்குள் அழைத்து உட்காரச் சொல்லி இருக்கிறாள் என்ற மன நெருடல் அவனை நிலைகுலைய செய்துவிட்டது. என்னதான் இருந்தாலும் என் நண்பனாகவே இருந்தாலும் வீட்டில் தான் இல்லாத போது வேறு ஒருவனை உள்ளே அழைப்பது அவனது மனத்தளவில் ஏற்றுக்கொள்ள முடியாததாக இருந்தது. தனது செயல்பாடுகளைக் கேட்டு தன்னைப் பாராட்டுவார் என்று எண்ணிய அவளுக்குச் சற்று மனக்குறையாக இருந்தது. அவனும் நடந்தவற்றைப் பற்றிப் பெரிதாகப் பேசிக்கொள்ளவில்லை. கனகாம்பரப்பூ வைத்துக்கொண்டு அதனை நூலில் கட்டுவதற்காகச் செயல்பட்டுக் கொண்டிருந்த அவளிடம் ‘இதை தலையில் யார் சூட்டுவார்கள்?’ என்று கூறுகிறான்.

    அவளும் மற்றவர்கள் தலையில் கொத்துக்கொத்தாக வைத்துக்கொண்டு வருகிறார்கள் என்று கூறுகிறாள். சினிமா நடிகைகள் கூட தலை முழுவதும் இதைத்தான் சூடிக்கொள்வதையும் சுட்டிக் காட்டினாள். பேச்சின் போக்கில் அவன் ‘முன்ன பின்ன தெரியாத நபர்களை, யாராவது வீட்டிற்குள் அழைப்பார்களா’ என்று நேற்று நடந்த நிகழ்வின் சிக்கலைக் கூறிவிட்டான். இப்போது அவளுக்குப் புரிந்துவிட்டது கணவன் முக மாறுபாட்டுக்கு இது தான் காரணம் என்று. தன் மேல் நம்பிக்கை இல்லாமல் இப்படி அவன் கூறியதில் அவளுக்கு மிகவும் மனவருத்தம். அவனிடம் தனது கோபத்தை வெளிப்படுத்திக்கொண்டு சென்றுவிட்டாள்.

    இவனின் நண்பன் பிறகு சந்தித்துக் கொள்ளும்போது, நண்பனின் மன உணர்வின் மூலமாக ஒரு சமூக இயக்கப் போக்கையே உளவியல் ரீதியாகப் பின்னிச் செல்கிறார் கதையாசிரியர். அவனைப் பார்க்கச் சென்று அவனது மனைவி தன்னிடம் கூறியதை எப்படிச் சொல்வது என்று அதனைச் சொன்னால் அவளுக்கு ஏதேனும் குடும்பச் சிக்கல் ஏற்பட்டு விடுமோ என்றும் நண்பன் சிந்திக்கிறான். ஒருவேளை நடந்ததை அவள் இவனிடம் கூறியிருக்கலாம் என்றும் யோசிக்கிறான். பிறகு வேறு வழியில்லாமல் இருவரும் சந்தித்துக்கொள்கிறார்கள். அன்று வீட்டிற்கு வந்தது இவன் தான் என்றும் தன் மனைவி அவ்வாறு பேசியதும், மன நெருடலும், எப்படி இதனைப் புரிந்துகொள்வது என்ற சிக்கலும், ஆக இவர்களின் நட்பு தொடர்கிறது. அதேவேளையில் ஆசிரியர் கதையை நிறைவு செய்கிறார்.

    கதையின் பின்புலம் பிராமணக் குடும்பச் சூழ்நிலையில் பின்னப்பட்டுள்ளது. ஆண்கள் வீட்டிற்குள் வந்தால் வீட்டின் உள்ளறையின் கதவு இடுக்கு வழியாகப் பார்த்துப் பேசும் நிலையில், அறிமுகம் இல்லாத ஒருவனை இவள் வீட்டிற்குள் வந்து உட்காரச் சொல்லும் துணிவும் மரபு மீறலும் இங்கே சமூகம் மாறிக்கொண்டே வருவதை உணர்த்துவதாக இருக்கிறது. என்றாலும் உபதேசங்கள் கூறினாலும் நடைமுறையில் அதனை மனம் ஏற்றுக்கொள்ள மறுப்பது, இதனால் ஏற்படும் அவநம்பிக்கை, குடும்பச் சிக்கல், ஆண்-பெண் புரிதல் என்று நுண்மையான கூறுகளைச் சற்று மேலோட்டமாகத் தொட்டுச் செல்கிறார்.

    பெண் என்பவள் ஆண்களால் எப்படிப் பார்க்கக் கற்றுக் கொடுக்கப்பட்டு உள்ளது என்பதும் இங்கே உற்று நோக்க வேண்டிய பண்பு நிலை. பெண் காமத்தின் உருவம், சதைகளின் வடிவம், இச்சையின் தூண்டுதல் என்று சமூகக் கற்பிதங்களும் பெண்வெளி மறுக்கப்பட்ட அல்லது தவிர்க்கப்பட்ட ஒரு காலக்கட்டத்தில் குடும்பச் சூழல் இங்கே நமக்கு உணர்த்தப்படுகிறது. இன்றைய காலப்போக்கில் இதனைப் படிக்கும் போது மிகச் சாதாரண ஒரு நிகழ்வாகத் தெரியும் நிலையில், இது நிகழும் தொடக்கக் காலங்களை எண்ணும்போது இக்கதை தனது முக்கியத்துவத்தைப் பெற்று நிற்கிறது.

    இக்கதையில் பெண்ணைப் பயிற்றுவிப்பு நிலையில் உருவாக்கி, இத்தகைய பயிற்றுவிப்பு, ஆண் மனத்தில் எத்தகைய எதிர்வினையை உருவாக்கும் என்ற கண்ணோட்டம் வெளிப்படுகிறது. கதை முழுவதும் அவளின் சொற்களால், பாதிக்கப்படும் ஆண்கள் என்ற போக்கில் மிகுந்து நிலவுகிறது. கணவன் மனைவியின் சிக்கல், மனச்சிக்கல், இதுபோன்று பெண்கள் நடந்துகொள்ளக் கூடாது என்று கதையாசிரியர் வலியுறுத்துவதாகப் படுகிறது. பிற்போக்குத்தனத்தின் சார்பாளராகக் கு.ப.ரா இங்கே வெளிப்படுகிறார். காலமாற்றத்தால் சிதைந்து அழிந்து வருகிற குடும்பப் பெண் அடிமைத்தனத்தின் பிரதிநிதியாகத் தன்னை வரித்துக்கொண்டு ஆணின் மனச்சிக்கலை இங்கே வெளிப்படுத்தியிருக்கிறார். பயிற்றுவிப்புகள் எப்போதும் சுயச் சிந்தனையை, சுதந்திரத் தன்மையை உருவாக்கும் என்பதற்கு இக்கதை சான்றாகும். அதே நேரத்தில் இவற்றை ஏற்றுக்கொள்ள முடியாது தவிக்கும் மனப்போக்கையும் இங்கே சிந்திக்க முடிகிறது. எளிமையான கதை. அதே வேளையில் முக்கியமான கதையும் கூட.

    Share
  • குறளின் கதிர்களாய்…(360)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்...(360)

    அறனீனு மின்பமு மீனுந் திறனறிந்து
    தீதின்றி வந்த பொருள்.

    – திருக்குறள் – 754(பொருள் செயல்வகை)

    புதுக் கவிதையில்...

    நேர்மையான
    வழிவகை அறிந்து,
    தீய வழி ஏதுமின்றி
    மக்களுக்குத் துன்பம் வராமல்
    மன்னன் சேர்த்த செல்வம்
    அவனுக்கு
    அறத்தைத் தருவதுடன்
    இன்பத்தையும்
    இணைத்தே தரும்…!

    குறும்பாவில்...

    பொருள்சேர்க்கும் வகையை அறிந்து
    தீதின்றிச் சேர்த்த செல்வம் அரசனுக்கு
    அறத்துடன் இன்பமும் தருமே…!

    மரபுக் கவிதையில்...

    பொருளைச் சேர்க்கும் வழியினிலே
    பொய்மை யில்லா நேர்வழியின்
    அருமை தன்னை நன்கறிந்தே
    அடுத்த வர்க்குத் தீங்கின்றிப்
    பெரிதாய்ச் சேர்த்த செல்வமெலாம்
    பேரு தவியா யாகியேதான்
    அரசர் தமக்கே அறத்துடனே
    அதிக இன்பம் தந்திடுமே…!

    லிமரைக்கூ...

    சேர்க்கும் பொருளது வந்திடும்
    வழியறிந்து தீதின்றி சேர்த்த செல்வம்,
    அறத்துடன் இன்பமும் தந்திடும்…!

    கிராமிய பாணியில்...

    சேக்கணும் சேக்கணும்
    பொருளச் சேக்கணும்,
    சேக்கிற வழியறிஞ்சிப்
    பொருளச் சேக்கணும்..

    பொருளச் சேக்கிற
    மொற தெரிஞ்சி,
    நல்ல வழியில
    மக்களுக்குத் தீங்கில்லாம
    சேக்கிற செல்வம்
    ராசாவுக்கு
    அறம் மட்டுமில்லாம
    இன்பத்தயும் குடுக்குமே..

    அதால
    சேக்கணும் சேக்கணும்
    பொருளச் சேக்கணும்,
    சேக்கிற வழியறிஞ்சிப்
    பொருளச் சேக்கணும்…!

    Share
  • சுய இயங்கு செப்பெர்டு ராக்கெட் விண்சிமிழில் பயணித்து, விண்வெளி விளிம்பில் முதன்முதல் மிதந்த நான்கு தீரர்கள்

    சுய இயங்கு செப்பெர்டு ராக்கெட் விண்சிமிழில் பயணித்து, விண்வெளி விளிம்பில் முதன்முதல் மிதந்த நான்கு தீரர்கள்

    The New Shepard Rocket Lifts off the Launching Site near Van Horn, Texas, USA

    சி. ஜெயபாரதன், B.E. (Hons), P. Eng [Nuclear], Canada

    From left: Mark Bezos, Jeff Bezos, Oliver Daemen, Wally Funk

    From left: Mark Bezos, Jeff Bezos, Oliver Daemen, Ms Wally Funk

    2021 ஜூலை 20 ஆம் தேதி அமெரிக்கக் கோடீஸ்வரக் கோமான், அமேஸான் தொழில் அதிபர் : ஜெஃப்ரி பெஸாஸ் [Jeffry Bezos] முதன்முதல் தன்னுடன் மூன்று பொது நபர்களை, சுய இயங்கு ராக்கெட் விண்சிமிழில் ஏற்றிக்கொண்டு, விண்வெளியில் 62 மைல் [100 கி.மீ] உயரம் ஏறி, பூஜ்ஜிய ஈர்ப்பு [Zero Gravity] மிதப்பு நிலை உணர்ந்து, பாதுகாப்பாக மீண்டு, பூமியில் வந்திறங்கினர். விண்வெளிச்சிமிழ், பூமியைச் சுற்றாது, உயரத்தை எட்டியதும் இறங்க ஆரம்பித்தது. அப்போது பளு தூக்கிய ராக்கெட் பிரிந்து, தானாக முன்குறித்த இடத்தில் செங்குத்தாகக் கீழே இறங்கியது. முன்பு இவ்வாறு இறங்கிய இந்த ராக்கெட், இப்போது மூன்றாம் தடவை மீண்டும் பயன்படுகிறது.

    Jeff Bezos Blue Origin Launch: Amazon Boss Lifts Off to Space on New Shepard SpacecraftThe New Shepard Rocket Reaches The Zero Gravity Limit 62 miles (100 km) [The Karman Line]

    The New Shepard booster performed an autonomous landing, the third consecutive landing for this booster.

    ஜெஃரி பெஸாஸ் பயணத் தலைவர், வயது : 57 , சகோதரர் மார்க் பெஸாஸ் வயது :52 முன்னாள் நாசா விண்வெளி விமானி மிஸ் வாலி ஃபன்க் வயது : 82, வாலிபன் ஆலிவர் தேமன் வயது : 18. அந்த மூவரையும் தன்னுடன் சேர்த்து விண்சிமிழில் ஏற்றிக் கொண்டு, வான் ஹார்ன், டெக்ஸஸ் பாலைவனத்தில் [Van Horn, TX, USA] ஜூலை 20 ஆம் தேதி புதிய சுய இயங்கு செப்பெர்டு ராக்கெட், காலை 9 : 11 மணிக்கு ஏவப் பட்டது. எந்த சிக்கலும் நேராமல், ராக்கெட் செங்குத்தாக ஏறி, 250,000 அடி [75 km] உயரத்தில் விண்சிமிழ் பிரிந்து, [கார்மன் எல்லை] [Karman Line Zero Gravity Limit] 62 மைல் [100 கி.மீ.], பூஜிய ஈர்ப்பு [Zero Gravity] அரங்கில் சில நிமிடங்கள் உடல் மிதப்பு நிலையை விமானிகள் உணர்ந்தனர். பிறகு சுய இயங்கு ராக்கெட் தானாகக் குறிப்பிட்ட வட்டத்துள் கீழே இறங்கியது. விண்சிமிழ் பூமியைச் சுற்றுப் பாதையில் சுற்றாமல் புவிக்குப் பாராசூட் குடைகள் மூலம் மீண்டது. ராக்கெட் இறங்கிய தளத்துக்கு இரண்டு மைல் தூரத்தில் விண்சிமிழ் தானாக பாதுகாப்பாக நான்கு விமானிகளை இறக்கியது. வியக்கத் தக்க இந்த விண்வெளிக் காட்சி அனைத்தும் சுமார் 10 நிமிடங்கள்தான் நீடித்தன.

    முதன்முதல் அப்பொல்லோ 11 ராக்கெட் 1969 ஜூலையில் நிலவை நோக்கிச் சென்று, நீல் ஆர்ம்ஸ்டிராங் சந்திரனில் கால் வைத்த நினைவு நாளில், ஜெஃரி பெஸாஸ் குழுவினர் நால்வர் 2021 ஜூலை 20 இல் பூஜிய ஈர்ப்பு விண்வெளி எல்லைக்குப் பயணம் செய்து பாதுகாப்பாக மீண்டார்.

    https://www.bbc.com/news/science-environment-57849364?fbclid=IwAR3V508bGGdjPSqnjQxJI-4qAnSdbycy1SgZ3XldLCdmb-cF4G_Pc8BJ00M

    Jeff Bezos Launches to Space Aboard Blue Origin Rocket
    The New Shepard and crew capsule’s flight trajectory.

    Source: Blue Origin/YouTube

    Oliver Daeman,Wally Funk, Jeff Bezos, Mark Bezos

    Capsule, Jeff Bezos, Shepherd Rocket

    Jeff Bezos Coming out of Capsule

    Jeff Bezos and Richard Branson – Space Sight-Seeing Pioneers

    தகவல்:

    1. Jeff Bezos launches to space aboard New Shepard rocket ship – BBC News
    2. Jeff Bezos Launches to Space Aboard Blue Origin Rocket (interestingengineering.com)
    3. Jeff Bezos Launches to Space Aboard Blue Origin Rocket (interestingengineering.com)
    4. Amazon’s Jeff Bezos makes history with all-civilian suborbital flight (nbcnews.com)
    5. Jeff Bezos reaches edge of space, returns safely on Blue Origin’s New Shepard rocket – The Washington Post
    6. Watching Jeff Bezos Go to Space Was More Depressing Than Inspiring (yahoo.com)
    7. ttps://ca.finance.yahoo.com/news/watching-jeff-bezos-space-more-160034618.html

    Share
  • படித்தேன்! சுவைத்தேன்! பகிர்ந்தேன்! – 2

    படித்தேன்! சுவைத்தேன்! பகிர்ந்தேன்! – 2

    முனைவர் ச. சுப்பிரமணியன்

    கரடி குளத்தில் ஒரு காளமேகம்!

    ‘சொல்லேர் உழவர்’ என்று ஒரு தொடர் திருக்குறளில் வரும். ‘சீரிய கூரிய தீஞ்சொல்’ என்பது கம்பராமாயணம். நீங்களும் நானும் பேசுகிறபோது இந்தச் சொற்கள் இப்படி அமையா. காரணம் நமக்குச் சீரிய சொல்லும் தெரியாது. கூரிய சொல்லாக்கவும் இயலாது. அதனால் அது தீஞ்சொல்லாகவும் அமையாது. சிந்தனைச் செல்வர்கள் செந்தமிழ் வித்தகர்கள் பயன்படுத்துகிறபோது அவர்கள் ஆற்றல் காரணமாகச் சாதாரண சொற்களும் கூர்மை பெறும். சிந்திக்க வைக்கும். திகைக்க வைக்கும். சில நேர்வுகளில் சிரிக்கவும் வைக்கும். கம்பதாசனும் கண்ணதாசனும் வாணிதாசனும் நாம் பேசுகிற தமிழைத்தான் பேசினார்கள் எழுதினார்கள். அவர்களுக்குத் தீஞ்சொல்லாக அமைகிறது. நமக்குத் தீய்ந்த சொல்லாகிவிடுகிறது. என்ன செய்வது? விதியை மாற்ற முடியுமா என்ன? அவ்வாறு திகைக்கவும் வியக்கவும் சிரிக்கவும் வைக்கின்ற சொல்லாடல்கள் அமைந்ததொரு இலக்கியத்தைச் ‘சிலேடை’ என்று வழங்கினார்கள். தமிழிலக்கிய வரலாற்றில் இடைக்காலம் வரை இவ்வாறான கவிதைக் கூறு இருந்ததற்கான இலக்கிய வரலாற்று ஆவணங்கள் ஏதுமிருப்பதாகத் தெரியவில்லை. இந்த இலக்கிய வித்தையில் விருதுகள் பெற்ற சிலருள் ஒருவர் காளமேகம்.

    மரபிலக்கிய வடிவங்களில் சிலேடை

    மரபிலக்கிய வடிவங்களில் சிலேடைக்குத் தனியிடம் உண்டு. அந்த வடிவத்தால் பேரிலக்கியமோ காவியமோ அமையாவிடினும் தேநீர் அருந்தி மகிழ்வதுபோல ஒருவகையான தற்காலிக இன்பத்தைத் தருகின்ற வகையில் அதற்கும் ஒரு சிறப்பிடம் உண்டு. சிலேடை பெரும்பாலும் நேரிசை வெண்பாவில் அமைந்துவிடுவதாலும் வெண்பாவை மரபுக்கவிதை எனக் கருதிவிடும் மயக்கத்தாலும் தடுமாற்றம் ஏற்படுவது இயல்பு. ‘சிலேடை’ என்பது பெரும்பாலும் வெண்பா யாப்பினால் அமைந்த மரபுக்கவிதை. சிலேடை என்பது உள்ளடக்கம். வெண்பா என்பது உருவம். உருவமும் உள்ளடக்கமும் அத்வைதம் அடைந்தால்தான்  அது மரபுக்கவிதை. சரியா?

    விருத்தத்திலும் சிலேடை அமையலாம்.

    ஒரே பொருளுக்கான பல சொற்களையும் இருபொருட்களின் அதாவது இரண்டு எழுவாய்களின் வினைகளாக ஒரே வினைச்சொல்லையும் சாதுரியமாகக் கையாளும் கவிதைத் தொழில் நுட்பக்கலைக்குச் சிலேடை என்று பெயர். ‘சிலேடித்தல்’ என்னும் சொல்லுக்கு இருவகையாக நோக்குதல் என்பது தண்டியலங்கார உரைப்பகுதி.

    “இம்பர்வான் எல்லைரா மனையே பாடி
    என்கொணர்ந்தாய் பாணாநீ?’ என்றாள் பாணி!
    ‘வம்பதாம் களபம்’ என்றேன் ‘பூசும்’ என்றாள்!
    ‘மாதங்கம்’ என்றேன்யாம் ‘வாழ்ந்தேம்’ என்றாள்!
    ‘பம்புசீர் வேழமெ’ன்றேன் ‘தின்னும்’ என்றாள்!
    ‘பகடெ’ன்றேன் ‘உழும்’ என்றாள் பழனந்தன்னை!
    ‘கம்பமா’ என்றேன்’நற் களி’யாம் என்றாள்!
    ‘கைம்மா’ என்றேன் சும்மா கலங்கினாளே!”

    என்று ஒரு பாட்டு அந்தகக்கவி வீரராகவ முதலியார் எழுதியது. முற்றிலும் வேடிக்கை மிகுந்து காணப்படினும் தமிழின் மொழிவளம் சிறக்க நின்ற சிலேடைப் பாடல் இது. இது எண்சீர்க் கழிநெடில் ஆசிரிய விருத்தம் என்னும் யாப்பில் அமைந்தது. வெண்பாவில்தான் சிலேடை அமையும் என்பதற்கு எதிரான கருத்தியல் கொண்டது. எந்தப் பாவிலும் இனத்திலும் அமையலாம். பாட்டில் சிலேடை இப்படி அமைகிறது.

    1. இராமன் என்னும் செல்வந்தனைப் பாடி யானையைப் பரிசாகப் பெற்று வந்தான் பாணன். ‘அவனைப் பாடி ‘என்ன கொண்டு வந்தாய்?’ என்று பாணன் மனைவி பாணினி வினவுகிறாள். அதற்குப் பாணன் ‘களபம்’ கொண்டு வந்தேன் என்கிறான். ‘களபம்’ என்பது சந்தனத்திற்கும் யானைக்குமான பொதுச்சொல். பாணினி சந்தனம் எனக் கருதி தனக்குப் பூசிவிடச் சொல்கிறாள்.
    2. பாணினிக்குத் தெளிவாகப் புரிதல் வேண்டி ‘மாதங்கம்’ என்றான் பாணன். ‘மாதங்கம்’ என்பது யானைக்கு மற்றொரு பெயர். பாணினி என்ன நினைத்துவிட்டாள்? மா தங்கம் எனப் பிரித்துத் தங்கக் குவியல் என எண்ணி ‘வாழ்க்கைக்குப் போதும்’ என்கிறாள்.
    1. குழப்பத்தைத் தீர்க்க எண்ணிய பாணன் தொடர்ந்து ‘பம்புசீர் வேழம்’ என்றான். ‘வேழம்’ என்றால் யானைக்கும் கரும்புக்கும் பொதுச்சொல். பாணினி அதனைக் ‘கரும்பு’ எனக் கருதி ‘தின்னலாம்’ என்கிறாள்.
    1. தன் முயற்சியில் சளைக்காத பாணன் மீண்டும் தான் பெற்று வந்தது ‘பகடு’ என்றான். பகடு என்பது யானைக்கும் உழுமாட்டிற்கும் பொதுச்சொல். பாணினி அதனை ‘உழுமாடு’ எனக் கருதிப் ‘பழனத்தை உழலாம்’ என்றாள்.
    1. எப்படியாவது பாணினிக்குப் புரியவைத்துவிட வேண்டும் என எண்ணிய பாணன் ‘கம்பமா’ என்றான். ‘கம்பம்’ என்றால் கட்டுத்தறி. ‘கட்டுத்தறியில் கட்டக்கூடிய விலங்காகிய யானை’ என்று அவன் கூறினான். அப்போதும் இவள் ‘கம்பு மாவு’ எனக் கருதி அதனைக் கொண்டு களிசெய்து உண்ணலாம் என்றாள்.
    1. இறுதியாகப் பாணன் சொன்னான் தான் பெற்றுவந்தது ‘கைம்மா’ என்றான். ‘கைம்மா’ என்பதற்கு ஒரு பொருள்தான் உண்டு. ‘கையை உடைய விலங்கு’ யானை மட்டுமே. அப்போதுதான் தன்னுடைய மொழியறிவின் பற்றாக்குறையை எண்ணி வருந்தினாளாம் பாணினி.

    இது ஒரு கற்பனை. சொற்களால் நெய்து காட்டப்படும் கவிதைப் பட்டு. கிட்டுவது தற்காலிக இன்பமாக இருந்தாலும் தமிழ்மொழியின் சொற்களஞ்சியத்தைக் கவித்துவம் குறையாமல் வெளிப்படுத்தி நிற்கிறது என்பதை உணரமுடியும். இதில் களபம் என்பதைச் சந்தனத்திற்கும் ஆக்கியது செம்மொழிச் சிலேடை. மாதங்கம் என்பதை மா தங்கம் எனப் பிரித்து நிறைய தங்கம் எனப் பொருள் கொண்டது பிரிமொழிச் சிலேடை. பிரிக்காமலேயே இருபொருள் தருமானால் அது செம்மொழிச் சிலேடை. பிரித்து இருபொருள் தருமானால் அது பிரிமொழிச் சிலேடை. சரியா?

    விடுகதை வேறு! சிலேடை வேறு!

    விடுகதைக்கும் சிலேடைக்கும் வேறுபாடு தெரியாது மயங்குவதும் உண்டு. விடுகதையை ஆங்கிலத்தில் ‘RIDDLE’ என்பர். ஒன்றுக்கான பல பரிமாணங்களை அல்லது அடையாளங்களை நிரல்படச் சொல்லி இறுதியில் விடையை வரவழைப்பது விடுகதை அல்லது புதிர். ஒரே பொருளை அல்லது அப்பொருளுக்கான செயலை இருபொருட்களில் ஒரே வகையாக நோக்கி எழுதுவது சிலேடை.

    விடுகதை அல்லது புதிர்

    அந்தக் கால மன்னன் ஒருவனுக்கு உள்ளங்காலில் அரிப்பு வந்ததாம். மருந்து காணாமல் திரிந்த மன்னனுக்கு மருந்தறிந்த புலவர் மருந்தின் பெயரைச் சொன்னாராம். தற்கால மருத்துவர் எழுதும் குறிப்புச் சீட்டையாவது முயன்றால் புரிந்து கொள்ளலாம். அந்த மருந்துப் பெயரோ மன்னனுக்கும் புரியவில்லை. மற்றவருக்கும் புரியவில்லை. காரணம் அது முன்பே சொல்லியதுபோலச் ‘சொல்லேர் மருத்துவர்’ சொல்லிய மருந்து அது. அவர் என்ன சொன்னார்?

    “பத்துரத மன்னவனின்
    புத்திரனின் மித்திரனின்
    சத்துருவின் பத்தினியின்
    காலை வாங்கித் தேய்!”

    எதுகை இருந்தாலே கவிதை என்பது அந்த மருத்துவருக்கும் தெரிந்திருக்கிறது. தமிழ்க்கவிதைகளின் கேட்டின் தொடக்கக்காலம் அதுவாக இருக்கலாமோ? எல்லாரும் குழம்பினார்கள். மருந்தின் பெயரும் தெரியவில்லை. இறுதியில் பாட்டை எழுதியவனே உரை சொல்வது போல, அந்த மருத்துவரே மருந்தை விளக்கினார்.

    “தசம் என்றால் வடமொழியில் பத்து. பத்து ரதம் இருந்ததால் அயோத்தி மன்னனுக்குத் ‘தசரதன்’ என்று பெயர். ‘புத்திரன்’ என்றால் மகன். தசரதனுக்கு மகன் இராமன். மித்திரன் என்றால் நண்பன்  இராமனுக்குப் நண்பன் சுக்ரீவன். சத்துரு என்றால் பகை. சுக்ரீவனுக்குப் பகையானவன் வாலி. சத்துருவாகிய வாலியின் பத்தினி தாரை. தாரையை என்ன செய்வது? காலை வாங்க வேண்டுமாம்? இன்றைய சட்டம் இடங்கொடுக்குமா? ஆனால் அன்றைக்குக் காலை எடுத்தார்கள். விளைவு? ‘தாரை’ தரையானாள்!  காலை எடு! தேய்! அரிப்பு அடங்கும். தரையில் அடியை நன்கு தேய்த்தால் அரிப்பு அடங்கும்”

    இதுதான் மருத்துவப் புலவர் சொன்னது. இதனை ஆய்வாளர் பலரும் சிலேடைக்கு எடுத்துக்காட்டியிருக்கிறார்கள். அது பொருந்தாது. இது புதிர்!

    பூரி பிடிக்காத ஜெகந்நாதன் உண்டா?

    அனந்தவர்மன் சோதங்கதேவன் என்னும் சோழமன்னனால் கட்டப்பட்டது தற்போதைய ஒடிசா மாநிலத்தில் உள்ள பூரி செகந்நாதர் ஆலயம். இங்கே பெருமாள் மூலவர் அறிவியலுக்குப் புலப்படாத பல மர்மங்களைத் தன்னகத்தே கொண்டிலங்கும் இந்தக் கோயில் கோபுர நிழலும் தஞ்சை பெரியகோயிலைப் போலவே மண்ணில் விழாது. கோயில் கொடி காற்றுக் எதிர்த்திசையில் பறக்கும். அந்தக் கோயிலில் வீற்றிருப்பவர் செகந்நாதர். அது  அமைந்திருக்கும் இடம் பூரி. ஒருமுறை வாகீச கலாநிதி ஒரு சொற்பொழிவுக்காக அங்கே சென்றிருந்தார். காலைச் சிற்றுண்டிக்காகப் பூரி செய்திருந்தார்கள். அவரைப் பார்த்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் “ஐயா, தங்களுக்குப் பூரி பிடிக்குமா?” என்று வினவ, அடுத்த நொடியே கி.வா.ஜ. “செகந்நாதனுக்குப் பூரி பிடிக்காமல் இருக்குமா?” என்றாராம்.

    இதுதான் சிலேடை. இந்தச் சொல்லாடலில் ‘பூரி’ என்பது ஊரையும் உணவையும் குறிக்க ஜெகநாதன் என்பது கலைமகள் ஆசிரியரையும் திருக்கோயில் மூலவரையும் குறித்தது காண்க.  இந்தச் சிலேடையின் பயன்கள் வெகு குறைவுதான். அதனாலேயே இதனை எளிமையாகப் பாடிவிடலாம் என்பது அறியாமை. சொற்களஞ்சியப் பெருக்கமும் ஆழ்ந்த புலமையும் பாடல் புனைவதில் பேராற்றலும் வடிவத்தில் தெளிவும் நோக்கில் கூர்மையும் இருந்தாலேயொழிய இந்த இலக்கிய வித்தையில் அகரம் வரும். அடுத்த எழுத்து வராது.

    செருப்பைச் சிறப்பித்த வள்ளிமுத்து

    ‘கண்ணீர்ப்பூக்கள்’ என்னும் தமது கவிதை நூலில் கவிஞர் மேத்தா செருப்பை நேர்காணல் செய்திருப்பார். வள்ளிமுத்து செருப்பை நாயோடும் ஒப்பிடுகிறார். நிலவோடும் ஒப்பிடுகிறார். இரட்டைக்கிளவி என்னும் இலக்கணத்தோடும் ஒப்பிடுகிறார்.

    “சேர்ந்திருக்கும் சீரளவைக் கொள்ளும் அடியொற்றி
    ஊர்ந்து நடப்பின் ஒலிக்குறிப்பும் உண்டாம்
    பிரித்தால் பொருள்தராத பாதணியைப் பேசு
    இரட்டைக் கிளவிதான் என்று”

    செருப்பு இணையானது. இரட்டைக் கிளவி இரட்டையாகவே வரும். அடுக்குத் தொடர்போல மூன்றாக நான்காக அமையாது. குறுகுறு மொறுமொறு என்பனபோல அளவோடு அமையும். இணை செருப்புக்கள் ஒரே அளவாகவே அமையும். இரட்டைக் கிளவி செய்யுளடிக்குரியது. செருப்பு பாதத்திற்குரியது. இரட்டைக்கிளவி குறிப்புப் பொருளைத் தரும். நடக்கிறபோது செருப்பு ‘கீரீச்’ ஒலி எழுப்புவது உண்டு. இரட்டைக் கிளவியைப் பிரித்தால் பொருள் தராது. ஒற்றைச் செருப்பை வைத்து ஒன்றும் செய்ய இயலாது.

    இந்தப் பாடலில் செருப்பின் இணை, இணையளவு, இருசொல்லாகவே வருதல், ஒலியெழுப்புதல், ஒற்றைச் செருப்பால் பயனின்மை ஆகியவை நோக்கப்பட்டிருக்கின்றன. இரட்டைக் கிளவியோடு ஒப்பிட்ட கவிஞர், அடுத்து செருப்பை முழுமதியோடு ஒப்பிடுகிறார்.

    “கோல உடல்தேயும் கூடவரும் கால்நடக்க
    நீலகண்டன் சென்னியிலும்  நின்றதுண்டாம் — நாளும்
    கறைபடியும் நீர்மிதக்கும் காணவெளி நிற்கும்
    நிறைநிலவும் காலணியும் நேர்”

    செருப்பின் அழகு தேய்வதனால் குறையும் முழுநிலாவிலிருந்து தேய்பிறை தொடங்கும். செருப்போடு நாம் நடப்போம். நாம் நடக்கும்போது நிலவும் கூடவருவதுபோல் தோன்றும். ‘பிறைசூடீ’ என்று சிவனுக்குப் பெயர். கண்ணிடந்தப்ப கண்ணப்பன் சிவலிங்கத்தின் மீது தன் செருப்பணிந்த காலை வைத்தார். நிலவில் முயலுண்டு. செருப்பில் கறையுண்டு. நீர்நிலைகளில் நிலவு தோன்றும். காதலர்கள் அதனைக் கையில் பிடித்து விளையாடுவார்கள். செருப்பு நீரில் மூழ்காது. மிதக்கும். செருப்பு இல்லத்தின் வெளியே கிடக்கும். நிலவும் வான் வெளியில் திரியும்.

    இந்தப் பாட்டில் செருப்பு தேய்தல், அடியொடு நடத்தல், கண்ணப்பன் செருப்பு, கறையும் அழுக்கும் படிதல், தோலிலே ஆனதால் நீரிலே மிதத்தல், வீட்டுக்கு வெளியில் ஆதரவின்றிக் கிடத்தல் என்பனவற்றைக் கவிஞர் நோக்கியிருக்கிறார். தொடர்ந்து நாயோடு செருப்பினை ஒப்பிட்டு இப்படி எழுதுகிறார்.

    “கட்டிவைத்த வாரணியும் காப்பவர் தாள்பணியும்
    எட்டுமட்டும் ஊர்சுற்றி வீடேகும் – ஒட்டி
    உறவாடார் கால்கடிக்கும், ஒப்பென்றே சொன்னேன்
    சிறப்புடன் நாயும் செருப்பு”

    செருப்பில் வார் உண்டு. நாய் கழுத்தில் வார் அணியும். அணிந்தவர்  தாளில் அடங்கிக் கிடக்கும். புரப்பவர் கண்டால் .வாலைச்சுருட்டிப் படுத்துக் கொள்ளும். செருப்பு, கால் செல்லும் வழியெல்லாம் சென்று வீடு திரும்பும். நாயும் ஊரெல்லாம் சுற்றி வீடு திரும்பும். புதுசெருப்பு கடிக்கும். அறியாதாரை நாய் கடிக்கும்.”

    கூந்தலைப் பாடிய கவிஞர்

    தமிழிலக்கியத்தில் நான் அறிந்தவரை ‘‘மயிர்நீப்பின்’ என்ற குறட்பாவிலும் ‘குஞ்சியழகும்’ எனத் தொடங்கும் நாலடியார் பாடலிலுந்தான் ஆண்களுக்கான தலைமயிர் பாடுபொருளாகியிருக்கிறது. அதனைக் கூடப் பால்பிரித்துப் பார்க்கக் கூடாது என்பர். அதனை ஏற்றால், எல்லா இடங்களிலும் தோகையரின் கூந்தலே பாடுபொருளாகியிருக்கிறது என்றுதான் கொள்ள வேண்டும். கூந்தலுக்கு ‘ஐம்பால்’ என்பது  இலக்கிய வழக்கு. முடி, கொண்டை, குழல், பணிச்சை, சுருள் என ஐந்துவகையாக அள்ளி முடிவதால் அதற்கு அத்தனைப் பெயர். இன்னொரு வகையாகவும் கவிஞர்கள் ஆராய்ந்திருக்கிறார்கள். கருமை, மென்மை, திரட்சி, நீளம், நெளிவு என்னும் ஐந்து பண்புகள் இருந்ததால் ஐம்பால் என்றும் அழைத்தார்கள் என்பாரும் உண்டு. எது எப்படியாயினும் இந்த அனுமானங்கள் எல்லாம் தற்காலத்தில் காட்டலாகாப் பொருள்! கழிந்ததற்கு இரங்கலே!.

    கூந்தலும் சிலந்தியும்

    இந்தக் கூந்தலைச் சிலந்தியோடும் முல்லையோடும் ஒப்பிடுகிறார் கவிஞர்.

    “நேருச்சி மேலெடுக்கும் நீள் பின்னல் கொள்வதுண்டாம்!
    சீரெழிலால் பூச்சிக்கும் நூல் சேர்க்கும்! தேர்ந்திடுவீர்!
    காலெட்டும் கண்வளர்ப்பார் ஒட்டடையும் வன்சிலந்தி
    கோலப்பெண் கூந்தலொப்பாய்க் கொண்டு”

    என்னும் பாட்டில் சிலந்தியோடு ஒப்பிடுவதைக் காணலாம். கூந்தலில் உச்சியில் வகிடு எடுப்பர். சிலந்தி வீட்டின் உச்சியில் வலை பின்னும். பின்னல் ஜடை உண்டு. சிலந்தி வலையில் பின்னல்கள் உண்டு. நூலால் கட்டப்பட்ட பூக்களைக் கூந்தலில் சூடுவர். சிலந்தி வலையில் பூச்சிகள் சிக்கிக் கொள்ளும். கூந்தல் அடிப்பாதம் வரை நீளும். எட்டுக்கால்கள் உண்டு சிலந்திக்கு! கூந்தலில் ஈரும் பேனும் ஒட்டும் அடையும். சிலந்திவலையால் ஒட்டடை பெருகும். இப்போது அந்தக் கூந்தலை முல்லையோடு ஒப்பிடுகிறார்.

    கூந்தலும் முல்லையும்

    “வெட்ட முளைத்தலால் மொட்டை எடுத்தலால்
    கட்டி முடித்தலால் கொட்டி உதிர்தலால்
    பின்னிப் படர்தலால் பெண்கூந்தல் முல்லையுடன்
    ஒன்றெனவே ஊரோர்க்கு உணர்த்து”

    “கூந்தல் வெட்ட வெட்ட வளரும். முல்லைக்கொடி வெட்ட வெட்ட வளரும். கூந்தலை மொட்டையடிப்பர். மொட்டுக்களைக் கட்டி முடிப்பார்கள். கூந்தலைக் கட்டி முடிப்பார்கள். முல்லைச் சரத்தைக் கட்டி முடிப்பார்கள். கொய்யாத பூக்கள் உதிரும். கூந்தல் கொட்டுவதும் உண்டு. காற்றில் முல்லை படர்ந்தாடும். மகளிர் கூந்தல் காற்றில் ஆடும்.

    வள்ளிமுத்து நோக்கும் காளமேகத்தின் நோக்கும்

    கூந்தலை இருவேறு பொருள்களுடன் ஒப்பிடுகிறபோது கூந்தலைப் பற்றிய ஆழமான பார்வை கவிஞனுக்கு இருந்திருக்கிறது. வகிடு எடுத்தல், பின்னல் ஜடை, பூக்களைக் கூந்தலில் சூடுதல், அடிப்பாதம் வரை நீளும். கூந்தலில் ஈரும் பேனும் ஒட்டும் அடைதல், வெட்ட வளரும். கட்டி முடித்த கூந்தலை மொட்டையடித்தல், உதிர்தல், காற்றில் ஆடுதல் என்னும் கூந்தலின் அத்தனை அழகியல் பரிமாணங்களையும் கவிஞர் நோக்கியிருக்கிறார்.

    இவற்றுள் முதலில் காட்டிய மூன்று பாடல்களில் பாராட்டுக்குரியது. செருப்பின் அத்தனைப் பரிமாணங்களையும் உற்றுத் தொகுத்து அவற்றை மூன்று பொருள்களோடு ஒப்பிட்டுக் காட்டியிருப்பதுதான். பிந்தைய இரண்டு பாடல்களில் கூந்தலின் தோற்றம், வினை உள்ளிட்ட அத்தனைப் பரிமாணங்களையும் உற்றுத் தொகுத்து அவற்றை வேறு இரண்டு பொருள்களோடு ஒப்பிட்டுக் காட்டியிருக்கிறார். இதுதான் மரபின் தாக்கம் அல்லது வெளிப்பாடு! கிளியை வானவில்லோடும் வெற்றிலையோடும் குதிரையைப் பாசியோடும் மத்தளத்தோடும் கோழியை மண்புழுவோடும் பெண்ணோடும் சிவனைத் தேங்காயோடும் விளக்குமாற்றோடும் ஆற்றோடும் சிலேடித்திருக்கிறார் வள்ளிமுத்து.

    காளமேகம் பாடிய பரத்தையும் பாம்பும்

    இது எப்படி மரபாகும்? காளமேகம் என்ன செய்திருக்கிறார் என்றால் வேசியின் பல்வேறு சாகசங்களை உற்று நோக்கித் தொகுத்து அவற்றைப் பனை, தென்னை மற்றும் வெற்றிலையோடு ஒப்பிட்டுப் பாடியிருக்கிறார். அவற்றை விரித்தால் பெருகும். பரத்தையரைப் பல்வகைப் பொருளோடு ஒப்பிட்டுப் பாடியதைப் போலவே காளமேகம் பாம்பையும் பல்வகைப் பொருட்களோடு ஒப்பிட்டுப் பாடியிருக்கிறார்.

    “நஞ்சிருக்கும் தோலுரிக்கும் நாதர்முடி மேலிருக்கும்
    வெஞ்சினத்தில் பல்பட்டால் மீளாது”

    எனப் பாம்புக்கும் வாழைப்பழத்துக்கும் சிலேடை கண்டிருக்கிறார்.

    “ஆடிக் குடத்தடையும் ஆடும்போதே இரையும்
    மூடித் திறக்கில் முகம் காட்டும்  —  ஓடி மண்டை
    பற்றிற் பரபரெனும் பாரில் பிண்ணாக்கும் உண்டாம்”

    எனப் பாம்புக்கும் எள்ளிற்கும் பொருத்தம் பார்த்துச் சொல்லியிருக்கிறார்.

    “பெரிய விடமே சேரும் பித்தர் முடியேறும்
    அரியுண்ணும் உப்புமேலாடும் – எரிகுணமாம்”

    என்னும் வரிகளில் பாம்பின் விடத்திற்கும் வாழைப்பழத்தின் சிறப்புக்கும் ஒப்புமைக் கண்டிருக்கிறார்.

    மேற்கண்ட மூன்று பாடற்பகுதிகளிலிருந்து பாம்பைப் பற்றிய காளமேகத்தின் உற்று நோக்கல் மிகத் தெளிவாகும். படைப்புக்கு அடிப்படையே உற்றுநோக்கலே. சாதாரண பொருளைச் சாதாரணமானவன் பார்ப்பதற்கும் படைப்பாளன் அதிலும் கவிஞன் பார்ப்பதற்குமான வேறுபாடே கவிதைக்கான மூலம். விடமிருக்கும், தோலுரிக்கும், சிவன் முடிமீது இருக்கும், பல்பட்டால் கடிபட்டவன் பிழைப்பதரிது, ஆடும், குடத்துக்குள் சென்றுவிடும், ஆடும் போது இரையும், குடத்தைத் திறந்தால் சீறி எழுந்து முகம் காட்டும்,  கடித்தால் மண்டை எரியும், பிளவுபட்ட நாக்கு, காற்றை உண்ணும், உப்பும், மேல்நோக்கியாடும் எனப் படமெடுக்கும் பாம்பைப் படம்பிடித்துக் காட்டுவது காளமேகத்திற்குக் கைவந்த கலை. அந்தக் கலை கரடி குளத்தாருக்கும் வந்திருக்கிறது என்பதுதான் கட்டுரையின் சாரம்!

    இந்தக் கட்டுரை திறனாய்வுக் கட்டுரையன்று, கவிதை அனுபவத்தின் களிப்பான வெளிப்பாடு. சிலேடை வேடிக்கையானது என்பதாலேயே சிலேடை பாடுவதும் வேடிக்கையானது என்று பொருளன்று. படைப்பாளரின் வித்தகம் அனைத்தும் வெளிப்படும் பாட்டுத்தளம். வித்தகம் இல்லாதார் இதனைப் படைக்க முயலலாம். வெற்றி பெறுவது அவ்வளவு எளிதன்று. இந்தப் படைப்பாற்றல் எல்லாருக்கும் கைவராது. வள்ளிமுத்துக்கு வந்திருக்கிறது. செந்தமிழ்த்தாயின் புன்னகையில் வள்ளிமுத்து சிலேடைக்கும் காப்புரிமை உண்டு! ‘கரடி குளத்தில் ஒரு காளமேகம்’ என்பது மோனைத் தொடரன்று’ என்பது ஓரளவு புரியக் கூடும்!

     

    சிலேடைக்குச் சிக்கெடுத்த பேச்சிமுத்து வள்ளிமுத்து

    ‘நீரால் நிரம்பும் பல குளங்களுக்கு நடுவே தான் பிறந்த கரடி குளத்தைச் சீரால் நிரப்பியவர் இவர்! கழுகுமலை முருகன் மீது காவடிச் சிந்து பாடிய அண்ணாமலை ரெட்டியார் இவருக்கு அடுத்த  ஊர்க்காரர்!

    தானாகத் தமிழ் படித்துத் தேனாகக் கவிபாடுபவர். ‘நகுமோமு’ ஆலாபனை பாடி முடித்த களைப்பு நீங்க ‘என்ன கவி பாடினாலும்’ எனத் தொடங்குவாரே மதுரை சோமு, அவர் போலக், ‘காக்கைக்குத் தூது’ விட்ட களைப்பு நீங்கப் பாடிய சிலேடைகள் பல.

    ‘தெள்ளுதமிழில் இசைத்தேனைப் பிழிந்தெடுத்துத் தின்னும் தமிழ் மறவர் கூட்ட’த்தின் தென்திசைத் தளபதி! வகுப்பறைகளில் பாடநூற்பகுதிகளோடு பண்பாட்டுக் கூறுகளையும் பக்குவமாகப் பந்திவைப்பவர்.

    கவிதை மாதிரி எழுதிக் கொண்டு ‘கவிஞர்’ எனத் தம்மைக் காட்டி என்னை நடுங்க வைத்தவர் நடுவே சித்திரக் கவிதைகளால் ஒத்தடம் கொடுத்தவர். இந்தச் சிலேடைகள் இவரது குடியிருப்பு முகவரி அன்று. பாடிவீட்டுத் தற்காலிக முகவரி. தமிழ்க்கவிதை உலகம் தனது நம்பிக்கை வலையை விரித்தபோது சிக்கிய சுறா மீன்கள் சிலவற்றில் இவரும் ஒருவர்! மரபு என்பது யாப்பு மட்டுமன்று என்னும் உண்மையை இவருடைய கவிதைகளும் இவைபோன்ற சிலேடைகளும் புரிய வைக்கக்கூடும். கரடிகுளத்தில் பிறந்து தாரமங்கலத்தில் பணியாற்றும் இவருக்குக் கனவுகளில் நம்பிக்கை உண்டு! ஆம்! கவிதைக் கனவுகள்! கனவு மெய்ப்பட வேண்டும்!

    (தொடரும்…)

    Share
  • மறக்க முடியாதுதான்! (சிறுகதை)

    மறக்க முடியாதுதான்! (சிறுகதை)

    நிர்மலா ராகவன்

    “முப்பது வருஷத்துக்கு மேல ஆச்சு! இன்னும் என்ன, அவனைப்பத்திப் பேச்சு?” சாருவின் குரலில் எரிச்சலும், பொறாமையும் கலந்திருந்தன.

    மகளுக்கு என்ன பதில் கூறுவது!

    தம்பி நான்கு வயதாக இருந்தபோது, அவன் தாயின் மடியில் அமர்ந்ததைப் பார்த்து, “என்னடா, நீ இன்னும் சின்னக் குழந்தையா?” என்று கேலி செய்தவள்தானே!

    அதன்பின், ஏதோ தவறு செய்பவன்போல், சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு, அக்கா அருகில் இல்லை என்று உறுதிப்படுத்திக்கொண்டு, தாயின் மடியில் வந்து மெல்ல அமர்வான் கடைக்குட்டி பாபு.

    `எனக்கு இந்தப் பாக்கியம் அதிக நாள் நிலைக்காது!’ என்று அவனுக்குத் தெரிந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால், அம்மாவின் – மடியில் இல்லை – பக்கத்தில்கூட யார் அமர்ந்தாலும், “என் அம்மா!” என்று சண்டை போடுவானா?

    அந்த நினைப்பு எழுந்தபோதே, அவ்வளவு துக்கத்திலும் சிரிப்பு வந்தது சாந்தாவுக்கு.

    ஒரு முறை, அவளுடைய கணவர் அவள் பக்கத்தில் அமர்ந்து தொலைக்காட்சி பார்த்தார்.

    வீம்புடன், “என் அம்மா!” என்று சொந்தம் கொண்டாடியபடி, அவரைத் தள்ள முயற்சித்தான் பாபு.

    அவரும் விடாப்பிடியாக, “என் ஒய்ஃப்!” என்றபோது, அர்த்தம் புரியாது, அவனும் அதே வார்த்தைகளைத் திருப்பிச்சொல்ல, எப்படிச் சிரித்தாள் சாந்தா!

    இரு ஆண்களும் மாறி மாறி அவளது அண்மைக்காக போட்டி போட்டார்கள்.

    “அவன்தான் குழந்தை! ஒண்ணும் புரியல. நீங்க எதுக்கு அவனுக்குச் சரியா சண்டை போட்டு, அழவிடறேள்!” என்று கணவரை விரட்டியடித்தது மறக்கக்கூடியதா!

    அப்பாவை எப்படி எதிர்ப்பது என்று புரியாது, பெரிதாக அழ ஆரம்பித்திருந்தான் பாபு. அக்காவாக இருந்தால் கடிக்கலாம். அப்பாவைக் கடிக்கவோ, அடிக்கவோ முடியாதே!

    அப்பாவும் ஒரு பையனாக இருந்தவராம். அம்மாதான் சொல்லி இருக்கிறாளே!

    `நானும் அப்பாமாதிரி பெரியவனாப் போவேனா? அப்போ எனக்கும் மீசை இருக்குமா?’ என்று தினமும் நச்சரிப்பானே!

    தான் அதை அனுபவிக்கவே போவதில்லை என்று உணர்ந்துவிட்டதால், அவனுக்குள் எழுந்த இனம்புரியாத தாபம்தான் அப்படி வெளிப்பட்டது என்பது காலம் கடந்தபின்தான் புரிந்தது.

    “அம்மா! எனக்கு ஏன் மீசை இல்லை?”

    “நீ பெரியவனாப் போனதும் முளைக்கும்,” என்ற அவள் சமாதானம் அவனுக்குப் புரியவில்லை.

    வீட்டுக்கு யாராவது நண்பர் வந்தால், பின்னாலிருந்து அவருடைய அடர்த்தியான மீசையைப் பிடித்து இழுத்துவிட்டு, “இது என்னோடது!” என்று அடம்பிடித்தபோது, மரியாதைக்குறைவாக நடந்துகொண்டதற்குத் திட்டு வாங்கினான்.

    விடாப்பிடியாக, அவன் தன் ஏக்கத்தை வெளிப்படுத்தியபோதுதான் சாந்தாவுக்குப் புரிந்தது, `தான் எப்போது பெரியவனாக ஆவது, எப்போது மீசை முளைப்பது!’ என்று அவன் அயர்ந்திருப்பது.

    புருவம் தீட்டும் பென்சிலால் பாபுவின் மேலுதட்டில் ஒரு சிறு கோடு இழுத்தாள். “இதோ! மீசை!”

    கண்ணாடியில் தன்னழகை ரசித்ததோடு நிற்கவில்லை பாபு. நண்பர்களுக்கும் காட்டவேண்டாமா!

    தெருவிற்கு ஓடினான். அவனைவிடச் சற்று பெரியவர்களான பையன்கள் பலமாகச் சிரித்தபோது பெருமையாக இருந்தது.

    “மீசை ஜோரா இருக்கே!” ஒரு சிறுவன் தன் விரலால் அதை அழுத்தித் துடைத்து அழிக்க முயற்சிக்க, அவர்கள் சிரிப்பு பலத்தது.

    கண்களில் நீர் பெருக, தாயிடம் கூறி அழ ஓடி வந்தபோது..!

    யமன் எருமை மாட்டின்மேல் ஏறி வருகிறானோ, என்னவோ, பாபுவுக்கு எதிரில் வேகமாக வந்த கார்தான் யமனாக ஆயிற்று.

    அத்தனை துக்கத்திலும் சாந்தாவுக்கு ஓர் ஆறுதல். ஏக்கம் இல்லாமல் அவனை அனுப்பிவிட்டோம்!

    `ஆண்மையின் அடையாளமாக மீசை முளைப்பதைப் பார்த்து மகிழ்ச்சியடைய நான் இருக்கமாட்டேன்!’ என்று பாபுவுக்குச் சொல்லத் தெரியவில்லை. அதனால்தான் அவ்வளவு ஏங்கியிருக்கிறான்!

    மகளுக்குப் பன்னிரண்டு வயதாக இருந்தபோது பிறந்த அருமைக் குழந்தை!

    பல வருடங்கள் ஆகியும், தன் பக்கத்தில் அவன் இருக்கிறானா என்று தன்னிச்சையாகத் தடவிப்பார்த்து, வெற்றிடத்தை உணர்ந்து, வெறித்த பார்வையுடன் உட்கார்ந்திருப்பாள் சாந்தா.

    தாயின் துக்கம் அதீதமாகப்பட்டது சாருவுக்கு. அவளுக்குப் புரியவில்லை பெற்றவளின் வேதனை. `என்னமோ, ஒலகத்திலே யாருமே சாகாத மாதிரிதான்!’ என்று முகத்தைச் சுழித்துக்கொண்டாள்.

    எப்படியாவது, தாயின் முகத்தில் மீண்டும் சிரிப்பைக் கொண்டுவர வேண்டும் என்று வெறியுடன் படிப்பில், விளையாட்டில், இன்னும் தான் ஈடுபட்ட எல்லாக் காரியங்களிலும் சிறந்தாள்.

    அந்த முயற்சிகளெல்லாம்  பலனளிக்காதபோது, ஏமாற்றம்தான் வந்தது. அது கோபமாக மாறியது.

    “நான் எல்லாத்திலேயும் ஜெயிக்கிறேனேம்மா. அதுக்காகவாவது நீ சந்தோஷப்படக்கூடாதா?” என்றுகூடக் கெஞ்சிப்பார்த்தாள்.

    பதிலுக்கு, ஒரு வரண்ட புன்னகைதான் சாந்தாவிடமிருந்து கிடைத்தது.

    “எந்த துக்கமும் ஒன்றரை ஆண்டுகளுக்குமேல் நிலைப்பதில்லை”.

    எவனோ ஒரு முட்டாள்தான் அப்படிச் சொல்லி வைத்துவிட்டுப் போயிருக்கிறான் என்று தோன்றியது அவளுக்கு.

    அவனும் ஒரு பெண்ணாக இருந்து, தன் உடலின் ஒரு பாகமாக நீண்ட காலம் தங்கியிருந்ததை இழந்தால் இப்படிப் பேசியிருக்கமாட்டான்.

    கையோ, காலோ, அல்லது வேறு எந்த அங்கமோ போனால் கதறுகிறார்களே!

    இன்னொரு உயிர்!

    அதற்கு மதிப்பே கிடையாதா?

    சாந்தாவின் பேச்சு குறைந்தது. ஓயாது வேலை செய்து, தன் வேதனையை மறக்க முயன்றாள்.

    மகளுக்கு மணமாகி, பேரக்குழந்தைகளுடன் பழகும்போது, `இப்படித்தானே பாபுவும்..!” என்ற நினைப்பே மேலோங்கியது.

    அவர்களுக்கு அருமையான மாமா ஒருவன் இருந்ததைக் கதை கதையாகச் சொன்னாள். அப்போதெல்லாம், என்றோ மறைந்துவிட்ட மகன் தன்னுடன் இருப்பதைப்போல் மகிழ்ச்சி எழுந்தது.

    அதுவும் பொறுக்கவில்லை சாருவிற்கு.

    தாயின் ஏகமனமான அன்புக்காக இன்னும் அவனுடன் போட்டி போட வேண்டியிருக்கிறதே!

    “முப்பது வருஷத்துக்கு மேல ஆச்சு! இன்னும் என்ன, அவனைப்பத்திப் பேச்சு?” என்று எரிந்து விழுந்தாள்.

    `நான் இருக்கப்போறது இன்னும் அஞ்சு வருஷமோ, பத்து வருஷமோ! அதுவரைக்கும் பாபுவை என்கூடவே வெச்சுக்கறேனே!’ என்று கூறத் தோன்றியதை அடக்கிக்கொண்டாள் சாந்தா.

    `சொன்னால் இவள் புரிந்துகொள்ளப்போகிறாளா, என்ன!’ என்ற அலட்சியம் எழுந்தது.

    அத்தாயை அத்தனை காலம் காத்திருக்க விடவில்லை கோவிட் தொற்றுநோய்.

    “கடைசியாக ஒருமுறை அம்மா முகத்தைப் பார்க்கக்கூட எனக்குக் கொடுத்துவைக்கவில்லையே! அனாதையாக மருத்துவ மனையில் கிடந்து போய்விட்டாளே!” ஊரடங்குச் சட்டத்தால் வீட்டைவிட்டு நகரமுடியாத சாரு கதறினாள்.

    மகனுடன் மீண்டும் சேர்ந்த ஆனந்தத்தில் அந்த முகத்தில் தங்கியிருந்த புன்னகையைக் கண்டிருந்தால் என்ன நினைத்திருப்பாளோ!

    Share
  • நம் மாடித் தோட்டத்து அறுவடை

    நம் மாடித் தோட்டத்து அறுவடை

    நம் மாடித் தோட்டத்தில் காராமணி, தக்காளி, நட்சத்திர வெண்டை, யானைத் தந்த வெண்டை, முள்ளங்கி ஆகியவற்றை இன்று அறுவடை செய்தோம். இளசான, குளிர்ச்சியான, பசுமையான காய்கறிகளைப் பார்த்து மகிழுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • சிரிப்பு யோகா – பயிற்சி 3

    சிரிப்பு யோகா – பயிற்சி 3

    ‘சிரிப்பு யோகா’ தொடரில் மூன்றாவது பயிற்சியை இன்று வழங்குகிறார், ஹாஹோ சிரிப்பானந்தா. உற்சாகத்துக்கு நாங்கள் உத்தரவாதம்.

    இந்தப் பயிற்சியை நீங்கள் செய்யும் காட்சியை வீடியோ எடுத்து எங்களுக்கு அனுப்பினால், அதையும் வெளியிடுவோம். உங்கள் வீடியோ காட்சிகளை annakannan@yahoo.co.in என்ற முகவரிக்கு அனுப்புங்கள். வாட்ஸாப் – 91-9841120975.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • கிருஷ்ண கமலம்

    கிருஷ்ண கமலம்

    கிருஷ்ண கமலத்திற்குப் பாண்டவ கௌரவர் பூ என இன்னொரு பெயர் உண்டு. இந்தப் பூ, மகாபாரதத்தையே தன்னுள் கொண்டுள்ளதாகச் சித்திரிக்கப்படுகிறது. சுற்றிலும் இழை இழையாக உள்ளவை கௌரவர்கள். நடுவில் உள்ள ஐந்து மகரந்த இழைகள் பாண்டவர்கள். மையத்தில் உருண்டையாக உள்ளது திரௌபதி. அதற்கும் மேலே உள்ள மூன்று இழைகள் பிரம்மா, விஷ்ணு, சிவன் என்ற மும்மூர்த்திகள். உட்புறம் தெரியும் கருநீல (பர்ப்பிள்) வளையம் கிருஷ்ணர் கையிலிருக்கும் சுதர்சனச் சக்கரம் என வர்ணிக்கிறார்கள். இந்தப் பூவை வீட்டில் வளர்த்தால் ஐஸ்வர்யம் பெருகும் என்பது பலரின் நம்பிக்கை. இதைப் பார்த்து மகிழுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share