குறளின் கதிர்களாய்…(360)

செண்பக ஜெகதீசன்

குறளின் கதிர்களாய்...(360)

அறனீனு மின்பமு மீனுந் திறனறிந்து
தீதின்றி வந்த பொருள்.

– திருக்குறள் – 754(பொருள் செயல்வகை)

புதுக் கவிதையில்...

நேர்மையான
வழிவகை அறிந்து,
தீய வழி ஏதுமின்றி
மக்களுக்குத் துன்பம் வராமல்
மன்னன் சேர்த்த செல்வம்
அவனுக்கு
அறத்தைத் தருவதுடன்
இன்பத்தையும்
இணைத்தே தரும்…!

குறும்பாவில்...

பொருள்சேர்க்கும் வகையை அறிந்து
தீதின்றிச் சேர்த்த செல்வம் அரசனுக்கு
அறத்துடன் இன்பமும் தருமே…!

மரபுக் கவிதையில்...

பொருளைச் சேர்க்கும் வழியினிலே
பொய்மை யில்லா நேர்வழியின்
அருமை தன்னை நன்கறிந்தே
அடுத்த வர்க்குத் தீங்கின்றிப்
பெரிதாய்ச் சேர்த்த செல்வமெலாம்
பேரு தவியா யாகியேதான்
அரசர் தமக்கே அறத்துடனே
அதிக இன்பம் தந்திடுமே…!

லிமரைக்கூ...

சேர்க்கும் பொருளது வந்திடும்
வழியறிந்து தீதின்றி சேர்த்த செல்வம்,
அறத்துடன் இன்பமும் தந்திடும்…!

கிராமிய பாணியில்...

சேக்கணும் சேக்கணும்
பொருளச் சேக்கணும்,
சேக்கிற வழியறிஞ்சிப்
பொருளச் சேக்கணும்..

பொருளச் சேக்கிற
மொற தெரிஞ்சி,
நல்ல வழியில
மக்களுக்குத் தீங்கில்லாம
சேக்கிற செல்வம்
ராசாவுக்கு
அறம் மட்டுமில்லாம
இன்பத்தயும் குடுக்குமே..

அதால
சேக்கணும் சேக்கணும்
பொருளச் சேக்கணும்,
சேக்கிற வழியறிஞ்சிப்
பொருளச் சேக்கணும்…!

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *