புதல்விக்கு மடல்

சி. ஜெயபாரதன், கனடா
களைத்து
அந்திப் பொழுதில் கதிரோன்
அடிவானில் மூழ்குது.
மங்கிடும் மாலை
மயங்கிக் கருகிடும்.
இருளும் கண்கள் நீர் சொட்ட
கால் முடங்குது.
காபி தம்ளர் கனக்குது,
கையில் வலுவின்றி.
காலன் வந்துவிட்டான்,
மருத்துவமனையில்
காப்பாற்ற
முனையுது மருத்துவக் குழுவும்
துணைக் குழுவும்.
மூக்குக் குழல் வேண்டாம்
நாக்கு முடங்கி
வாய்க் குழல் எதற்கு?
ஆயுள் நீடிப்பு எதற்கு
உயிர்வாயு எதற்கு?
போக விடுவீர் என்னை,
பிழைத்திட முயலாதீர்,
உழைத்தது போதும்,
உயிர் இனி இயங்க
முடியாது,
முடங்கிப் போனது
உடம்பு.
வலி தெரியாது
எடுத்துக்கொள்வீர்:
இருதயம், கிட்னி, காற்றுப் பை,
கண்கள், இவை
என் இறுதிக் கொடை.
அறுத்துக்கொள்வீர்
செத்தும் கொடுப்பேன்,
ஆயினும்
விடுவிப்பீர் எனை.
மீள் பிறப்பு இருந்தால்
மீண்டும்
ஏழ் பிறப்பிலும்
பாரதியார் வாழ்ந்த
தமிழ்த் தாரணியில்
தவழ
எனக்கு வரம் தா.