கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 34

1

-மேகலா இராமமூர்த்தி

அரசியலறிவும் அதுசார்ந்த அனுபவங்களும் நிரம்பப் பெற்றவனான இராமன், கிட்கிந்தையின் புதிய அரசனாக முடிசூட்டிக்கொண்ட சுக்கிரீவனிடம் நல்லாட்சி நடத்துதற்கு ஓர் அரசனுக்குத் தேவையான பண்புநலன்கள் யாவை என்பவற்றை 11 பாடல்களில் விளக்கியுரைப்பதாக அமைத்துள்ளார் கம்பநாடர்.

”சுக்கிரீவா! இந்த உலகம் எப்படிப்பட்டது தெரியுமா? ஓரிடத்தில் புகை உண்டெனில் ஆங்கே கிளர்ந்தெழும் நெருப்புண்டு என்று ஊகித்தறியும் சிறப்பறிவைக் கொண்டது. ஆதலால், அரசனாகப் பொறுப்பேற்பவனுக்கு நூலில்வல்லாரின் சூழ்ச்சித்திறனும் வேண்டற்பாலது. பகையுடையோரிடத்தும், பயன்கொள்ளும் வகையில், அவர்களின் இயல்பறிந்து பண்போடு நடக்கவும் மலர்ந்த முகத்தினனாய் இன்சொற்கள் பேசவும் ஓர் அரசன் அறிந்திருக்க வேண்டும்.” என்றான் இராமன்.

புகை உடைத்து என்னின் உண்டுபொங்கு
      அனல் அங்கு என்று உன்னும்
மிகை உடைத்து உலகம்
     நூலோர் வினையமும் வேண்டற்பாற்றே
பகையுடைச் சிந்தையார்க்கும் பயன்
      உறு பண்பின் தீரா
நகையுடை முகத்தை ஆகி இன்
      உரை நல்கு நாவால். (கம்ப: அரசியற் படலம் – 4227)

மனத்தில் உள்ள பகைமையை பகைவர்களிடம் வெளிக்காட்டிக் கொள்ளாமல் சூழ்ச்சித் திறத்தோடு நடந்துகொள்ள வேண்டும் என்று அறத்தின் நாயகனான இராமனே குறிப்பிடுவதன்மூலம் எல்லாக் காலத்திலும் சூழ்நிலைக்கேற்ற வகையில் சமயோசிதமாக நடந்துகொள்ளும் அறிவு அரசர்களுக்குத் தேவைப்பட்டிருக்கின்றது என்பதனை நாம் உய்த்துணரமுடிகின்றது.

வள்ளுவரும்,  பகைவர் நண்பராகும் காலம் வரும்போது முகத்தளவில் நட்புக்கொண்டு அகத்தில் நட்புநீங்கி வாய்ப்புக் கிடைத்தபோது அதனையும் விட்டுவிடவேண்டும் என்று கூறியிருப்பதை உன்னுக.

பகைநட்பாம் காலம் வருங்கால் முகநட்டு
அகநட்பு ஒரீஇ விடல்.
(குறள் – 830)

”குடிமக்களைத் தாய்போல் பேணிக் காப்பாய்! அதேசமயம் நாட்டிற்குத் தீமைவந்து சேருமாயின் அத்தீச்செயல்களில் ஈடுபடுவோரை அறத்தின் எல்லை கடவாது தண்டிப்பாய்!” என்று அறிவுறுத்திய இராமன், அடுத்து மிக முக்கியமானதொரு கருத்தைத் தன் சொந்த அனுபவத்தின் அடிப்படையில் சுக்கிரீவனுக்கு உரைக்கின்றான்.

”திரண்ட தோள்களை உடையவனே! நம்மைவிட உருவிலும் திருவிலும் வலுவிலும் சிறியர் என்றெண்ணி யாரையும் இகழ்ந்து துன்பம் செய்துவிடாதே! இந்த நன்னெறியைக் கடைப்பிடியாது யான் (சிறுவயதில்) ஓர் தீமைசெய்த காரணத்தினால் பகையுணர்ச்சி நீண்டு, குறுகிய உடலையுடைய கூனி என்பவளால் வறுமைகள் எய்திக் கொடிய துன்பக்கடலில் வீழ்ந்தேன்!” என்றான்.

சிறியர் என்று இகழ்ந்து நோவு
      செய்வன செய்யல் மற்று இந்
நெறி இகழ்ந்து யான் ஓர் தீமை
      இழைத்தலால் உணர்ச்சி நீண்டு
குறியது ஆம் மேனி ஆயக்
      கூனியால் குவவுத் தோளாய்
வெறியன எய்தி நொய்தின் வெந்
      துயர்க் கடலின் வீழ்ந்தேன். (கம்ப: அரசியற் படலம் – 4230)

‘பண்டை நாள் இராகவன் பாணிவில் உமிழ் உண்டை உண்டதனைத் தன் உள்ளத்து உள்ளுவாள்’ என்ற காப்பிய அடிகள் இந்நிகழ்ச்சியை விளக்கும்.

தொடர்ந்து மேலும் சில அறவுரைகளைச் சுக்கிரீவனுக்குச் சாற்றிய இராமன், “அரசர்க்கென்று நூல்கள் வகுத்துச்சொன்ன முறைப்படி ஆட்சிநடத்து! மாரிக்காலம் கழிந்தபின் வாரிதிபோன்ற உன் பெருஞ்சேனையுடன் என்னைக் காண வா! இப்போது கிட்கிந்தைக்குப் போய் வா!” என்று விடைகொடுத்தான்.

சீதையைத் தேடுதற்கு மழைக்காலம் வசதியற்றதாய் இருக்குமாதலின்
‘மாரிக்காலம் கழிந்தபின் வா’ என்றான் இராமன்.

இராமனுக்கு முடிசூட்டத் தயரதன் ஏற்பாடுசெய்த வேளையில், தயரதனின் ஆசானான, வசிட்டர் இராமனுக்கு ஒரு நல்லரசன் எவ்வாறு நடந்துகொள்ளவேண்டும் என்று உபதேசித்ததை இந்த அறவுரைகளோடு நாம் ஒப்பிட்டுப் பார்க்கலாம். அரசப் பதவிக்கு வருபவன் என்னதான் கல்வி கேள்விகளிலும் வீரத்திலும் சிறந்தவனாய் விளங்கினாலும் அவன் பதவியில் அமர்வதற்குமுன்பு அறிவிற்சிறந்த பெரியோர் அவனுக்கு நல்லறிவு கொளுத்தும் நோக்கில் நயமான அறவுரைகளை அந்நாளில் புகன்றிருப்பது வரவேற்பிற்குரிய அணுகுமுறையாகவே இருக்கின்றது.

சீதையைத் தேடுதற்கேற்ற காலம் வரும்வரை இராமலக்குவர்கள் தம்மோடு கிட்கிந்தைக்குவந்து தங்கியிருக்கவேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொண்டு இராமனின் அடியிணைகளில் வீழ்ந்து வணங்கினான் சுக்கிரீவன்.

அதனை முறுவலோடு மறுத்த இராமன், ”தவ வாழ்க்கை மேற்கொள்ள வேண்டிய நாங்கள் உன்னோடுவந்து அரண்மனையில் தங்குதல் பொருந்தாது; நாங்கள் அங்குவந்தால் எம்மை உபசரிக்கவே உனக்கு நேரம் சரியாக இருக்கும்; நீ நல்லாட்சி நடத்தத் தவறிவிடுவாய். அதுமட்டுமன்று! நீ சொல்வதுபோல் நான் உன்னோடுவந்தால் தன் தேவி அரக்கனின் காவலில் அல்லலுற்றிருக்க, இராமன் தன் நண்பர்களோடு இன்பப் பொழுதுபோக்கினான் என்று உலகம் என்னை ஏசாதா? பழிபோட்டுப் பேசாதா? அப்பழியானது என்றும் நிலைத்திருக்குமே!

சுக்கிரீவா! இல்லற நெறியைக் கைவிடாதவர்களுடைய இயல்பினைக் கைவிட்டும், போரில் வில்லறம் துறந்தும் வாழ்பவனாகிய எனக்கு நண்பர்களோடு இனிதாய் இருத்தல் மேன்மையை நல்கா அற்பச் செயலாகும். ஆதலால், நான் செய்திருக்கும் குற்றங்கள் நீங்குமாறு ஒவ்வொரு நாளும் தவம்செய்யப் போகின்றேன்” என்றான் தாமரைக் கண்ணனான இராமன்.

இல்லறம் துறந்திலாதோர் இயற்கையை
      இழந்தும் போரின்
வில் அறம் துறந்தும் வாழ்வேற்கு
      இன்னன மேன்மை இல்லாச்
சில் அறம் புரிந்து
      நின்ற தீமைகள் தீருமாறு
நல் அறம் தொடர்ந்த நோன்பின்
      நவை அற நோற்பல் நாளும். (கம்ப: அரசியற் படலம் – 4241)

கைபிடித்த மனைவியைக் காத்தல் இல்லறக் கடமையாகும்; தான் மனைவியைப் பாதுகாவாது விட்டமை குறித்து, ‘இல்லறம் துறந்திலாதோர் இயற்கையை இழந்தும்’ எனவும், வாலியை மறைந்துநின்று கொன்றது குறித்து, ‘வில்லறம் துறந்தும் வாழ்வேற்கு’ எனவும் இப்பாடலில் இராமன் குறிப்பிடுவதாகக் கொள்ளலாம்.  

 அதன்பின்னர் இராமனைத் தன்னோடு வரும்படிச் சுக்கிரீவன் வற்புறுத்தவில்லை; அவனை வணங்கி விடைபெற்றான்.

அடுத்து, தன்னை வணங்கிய அங்கதனை அருகழைத்து, ”ஒழுக்கத்தில் சிறந்தவனே! சுக்கிரீவனை உன் சிறிய தந்தை என்று எண்ணாதே! தந்தையாகவே எண்ணி அவன் சொற்படி நட” என்று அறிவுறுத்தி அனுப்பினான் இராமன்.

சுக்கிரீவனும் அங்கதனும் போனபின், அங்கே நின்றுகொண்டிருந்த அனுமனிடம், ”பேரெழில் வீரனே! நீ சுக்கிரீவனுக்கு வேண்டுவன ஆற்றி அவனோடு இரு!” என்று இராமன் உரைக்க, அதனை ஏற்கத் தயங்கிய அனுமன்,

“ஐய! நாயேனாகிய நான் உம்முடனேயே இருந்து உமக்குக் குற்றேவல் செய்து வருவேன்” என்று மொழியவே, அதனை ஏற்கமறுத்த இராமன், “அரசர்க்குரிய பண்புநலன்கள் நிரம்பிய ஒப்பற்ற மன்னன் ஒருவன் பாதுகாத்ததும், கடையெல்லை இல்லாததும், எல்லாச் செல்வ வளங்களும் நிறைந்ததுமான அரசாட்சியை வேறோர் அரசன் வலியக் கைப்பற்றிக் கொண்டால் அந்நாட்டில் நன்மைகளேயன்றித் தீமைகளும் (புதிய மன்னனை எதிர்த்துப் புரட்சி முதலியவை) தோன்றக்கூடும். அத்தகு சூழலில் உன்னைப்போல் பொறுமையும் அறிவும் நிறைந்தவர்களாலேயே இவ்வரசு நிலைபெறும். ஆகலின், அறத்தின் வடிவான நீ, சுக்கிரீவனுக்குத் துணையாய் அங்கிருப்பதே நல்லது” என்றுரைத்தான்.

நிரம்பினான் ஒருவன் காத்த நிறை
      அரசு இறுதி நின்ற
வரம்பு இலாததனை மற்று ஓர்
      தலைமகன் வலிதின் கொண்டால்
அரும்புவ நலனும் தீங்கும்
      ஆகலின் ஐய நின்போல்
பெரும் பொறை அறிவினோரால்
      நிலையினைப் பெறுவது அம்மா. (கம்ப: அரசியற் படலம் – 4247)

”தங்கள் கட்டளை அதுவாகில் அவ்வாறே செய்கிறேன்” என்ற மாருதி இராமனை வணங்கிவிட்டுக் கிட்கிந்தை நோக்கிச் சென்றான்.

நிரம்பினான் ஒருவன் காத்த நிறையரசு” என்பது இங்கே வாலியின்
ஆட்சிக்கு இராமன் தரும் நற்சான்றுப் பத்திரமாகும்.

அனைவரும் கிட்கிந்தைக்குச் சென்றபிறகு, இராமனும் இலக்குவனும் அருகிலிருந்த பிரசிரவண மலை எனும் மலைக்குச் சென்று தவ வாழ்க்கை மேற்கொள்ளலாயினர்.

மாரிக்காலமும் அதைத்தொடர்ந்து வந்த கூதிர்காலமும் ஒருவாறு கடக்க, அதுவரை ஒடுங்கிக் கிடந்த அன்னங்கள் பொன்னனைய சீதையை நாம் தேடிச்செல்வோம் என்று புறப்பட்டதுபோல் திசைகள்தோறும் பறக்கத் தொடங்கின.

கல்வியில் சிறந்த கணக்காயர் (ஆசிரியர்) பாடத்தைச் சொல்லச் சொல்லக் கூடவே ஆரவாரத்தோடு அதனைத் திருப்பிச்சொல்லும் மாணாக்கர்போல், விடாது கத்திக்கொண்டிருந்த தவளைகளும் தம்சொல் செல்லுபடியாகும் இடத்திலன்றிப் பிற இடங்களில் ஒரு சொல்லையும் சொல்லாத நல்லறிவுடையவர்கள்போல் நாவடங்கின.

கல்வியின் திகழ்
      கணக்காயர் கம்பலைப்
பல் விதச் சிறார் எனப்
      பகர்வ பல் அரி
செல் இடத்து அல்லது
      ஒன்று உரைத்தல்செய்கலா
நல் அறிவாளரின்
      அவிந்த நா எலாம்.  (கம்ப: கார்காலப் படலம் – 4367)

இந்தச் செய்யுளின் கருத்து வால்மீகி இராமாயணத்திலும், துளசிதாசர் இராமாயணத்திலும் காணக் கிடைக்கின்றது.

[தொடரும்]

*****

கட்டுரைக்குத் துணைசெய்தவை:

1. கம்பராமாயணம் – கோவைக் கம்பன் அறநிலை விளக்க உரைக்குழு.
2. கம்பரும் வால்மீகியும் – பேரா. அ. பாண்டுரங்கன், எம்.ஏ., பிஎச்.டி., டிப் (மொழி), தமிழரங்கம் பதிப்பு, புதுவை – 605 008.
3. கம்பர் கருவூலம் – தொகுப்பாசிரியர், பேரா. மு. சாயபு மரைக்காயர், கங்கை புத்தக நிலையம், சென்னை – 600 017.
4. கம்பனில் மக்கள்குரல் – பேரா. ந. சுப்புரெட்டியார், வானதி பதிப்பகம், சென்னை – 17.

 

 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 34

  1. வணக்கம்! அறுசீர்க் ;கழிநெடிலடி ஆசிரிய விருத்தங்களைப் பதிவு செய்வதற்கான நெறி உண்டு. அதனைப் பின்பற்றியிருக்க வேண்டும். காரணம் அது வாய்பாடுஅலகில் அமைவது. கருவிளம் புளிமா தேமா, கூவிளம புளிமா தேமா, தேமாங்காய் புளிமா தேமா, புளிமாங்காய் தேமா தேமா, புளிமாங்காய் புளிமா தேமா என்பன போல. இலலாவிடின் பாடல் மனனம் செய்வதற்கு முற்றிலும் இயலாது. இந்திரன் சசியைப ;பெற்றான் என்பது கூவிளம் புளிமா தேமா, செம்பிட்டுச் செய்த இஞ்சி என்பது தேமாங்காய் தேமா தேமா. ஓவியத் தெழுத ஒண்ணா என்பது கூவிளம் புளிமா தேமா. இவை அரையடிக்கானவை. எல்லா ஆசிரிய விருத்தங்களும் அரையடி இலக்கணம் பெறுவது அதாவது அலகு பெறுவது மரபு. நூல்களில் இதற்கான விதிகள் இல்லை. நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *