சேக்கிழார் பாடல் நயம் – 138 (அவனுடைய)
திருச்சி புலவர் இராமமூர்த்தி
அவனுடைய வடிவு எல்லாம் நம் பக்கல் அன்பு; என்றும்
அவனுடைய அறிவெல்லாம் நமை அறியும் அறிவு; என்றும்
அவனுடைய செயல் எல்லாம் நமக்கு இனியவாம்; என்றும்
அவனுடைய நிலை இவ்வாறு; அறிநீ’ என்று அருள் செய்தார்.
வரலாறு
இவ்வாறு அந்தணர் சென்றபின், கையில் ஏந்திய வில்லை வளைத்துக் காட்டில் வேட்டையாடித் திண்ணனார் செய்த செயலை மொழிந்து தீவினை தீருவேன் என்று சேக்கிழார் மொழிந்தார். மலைச்சாரலின் பாறைக ளிடையே மேய்ந்த காட்டுப்பன்றிகள், மான் இனங்கள் ஆகியவற்றை ஒளிந்து நின்று கொன்றார். இவ்வாறு பகல்நேரம் வேட்டையாடினர்.
வேட்டையாடிய விலங்குகளை ஓரிடத்தில் சேர்த்து , அவற்றை வாளால் வெட்டித் துண்டுகளாக்கி, அவற்றையோக் கோலில் கோத்துத் தேக்கிலையில் தேனூற்றி, வரிசைப்பட அடுக்கினார். விறகுகளை முறித்து அடுப்பில் அடுக்கி , அரணிக்கட்டையில், தீ மூட்டி வளர்த்து. கோலில் கொத்தி எடுத்த இறைச்சிகளை வேகவைத்து, வதக்கி அம்பு நுனியால் கிழித்து வகிர்ந்து அவற்றின் உறுப்பாகிய தசைகளை ஒரு தேக்கிலையில் வைத்து அவற்றின் சுவை காணாத தொடங்கினார்.
எண்ணற்ற கடவுளருக்கு இடத்தக்க உணவை வேள்வித் தீயில் வைத்தது போல் திருக்காளத்தி இறைவர்க்கு ஏற்கும் வகையில் தம் வாயில் இட்டுச் சுவை பார்த்தார். பதத்துடன் வெந்த இறைச்சியை மீண்டும் தேக்கிலையில் உமிழ்ந்து, தேனைக் கலந்து, எடுத்துக்கொண்டு வழக்கம் போல் பூமாலையைத் தலையிலும், தூய அபிடேக நீரை வாயிலும் எடுத்துக் கொண்டு மலைக்கு வந்து சேர்ந்தார். அவ்வாறு வந்து காளத்தி மலை ஏறி காட்டில் திரிவோர்க்குத் தலைவனாகவும், தேவர்களின் தலைவராகவும் விளங்கும் இறைவனை அடைந்து, முன்பு அந்தணர் செய்த பூசை அடையாளங்களை அகற்றி தாம் செய்த பூசையையே மீண்டும் செய்து முடிப்பார்.
தேக்கிலையில் ஊனையும் அமுதையும் வைத்து, ‘’ இன்று மற்ற நாளை விட விடச் சுவையாக இருக்கும்; பன்றி, மான், வரையாடு, கடமான் இவற்றின் உறுப்புக்களால் நான் அமைத்த இறைச்சி அமுதை முன்னதாக, அடியேனும் சுவைத்துப் பார்த்தேன்; தேனோடு கலந்த இவ்வுணவு தித்திக்கும்!’’ என்று தாயன்போடு கூறினார்; இவ்வாறே உணவூட்டி தம் ஒப்பற்றது பூசைகளைச் செய்து, மேலும் மேலும் பெருகிய அன்புடன் இரவெல்லாம் சிவனெதிரில் உறங்காமல், இரவில் வேட்டையாடிய பொருள்களுடன் வந்து சேருவார்;
சிவகோசரியாரும் நாள்தோறும் வந்து, காட்டுவேடர் தலைவராகிய திண்ணனார் செய்த பூசையைக் கண்டு மிகவும் மனத்தளர்ச்சி யடைந்து, அப்பூசை அடையாளங்களை நீக்கித் தாம் கடைப்பிடிக்கும் ஆகமவிதிப் படியே தம்மாலான அருச்சனை செய்து வந்தார்.
ஒவ்வொருநாளும் சிவகோசரியார் வந்து, வேடன் செய்த பூசை கண்டு தளர்ச்சியடைந்தார். அது தீமை என்றெண்ணி ஆகம விதிப்படி அருச்சித்தார். திண்ணனாரின் உறவினர்கள் அவரிடம் பலவாறு பேசியும் அவர் கேளாமையால் அவரைக் கைவிட்டனர்.
முன்னமே திருக்காளத்தி இறைந திருவருட் பார்வையால் திண்ணனார் வேதியில் வைத்த இரும்பு பொன் ஆனாற்போல் தான் என்ற உணர்வு நீங்கி, இருவினைகளும் விளக்க மும்மலமும் அற்று அன்பே வடிவமாய்த் திரிந்தார். அதனை அறியாத சிவ வேதியர், ‘’என்தலைவரே, இவ்வாறு தவறு செய்தாரை நீங்களே தண்டிக்க வேண்டும் ‘’ என்று வேண்டினார்.
அன்றிரவு வேதியர் கனவினுள் சிவபெருமான் காட்சி தந்தார். அவனை வலிமை மிக்க வேடுவன் என்று நினைக்காதே! அவன் செய்த நற்செயலை நானே கூறுகிறேன், கேள்.” என்று கூறியதாக சேக்கிழார் பாடுகிறார்.
‘அவனுடைய வடிவு எல்லாம் நம் பக்கல் அன்பு; என்றும்
அவனுடைய அறிவெல்லாம் நமை அறியும் அறிவு; என்றும்
அவனுடைய செயல் எல்லாம் நமக்கு இனியவாம்; என்றும்
அவனுடைய நிலை இவ்வாறு; அறிநீ’ என்று அருள் செய்தார்.
விளக்கம்
வடிவெல்லாம் நம்பக்கல் அன்பு என்றதொடர், இதனையே முன்னர்ப் பொருவில் அன்புருவம் , அன்பு பிழம்பாய் என்றார். பிழம்பு , வடிவம் என்பன ஒரு பொருளன. அன்பே ஒரு உருவமாயிற்று என்பதாம்.
அறிவு எல்லாம் நமைஅறியும் அறிவு என்ற தொடர், அறிவு முழுமையும் நம்மையே யறிந்தது – வேறொன்றினும் செல்லவில்லை. என்பதைக் குறித்தது.
செயல் எல்லாம் நமக்கு இனிய ஆம் செயல்கள் என்ற தொடர் , எல்லாம் நமக்கு இனிமை செய்தற்பொருட்டே நிகழ்ந்தன. அஃதாவது வைகறை எழுந்து போந்து வேட்டையாடி அமுது முதலியன கொண்டுவருதல், மஞ்சனமாட்ட முன்பூசை மலர்களைக் காற் செருப்பால் மாற்றுதல் முதல் இரவிற்றுயிலாது காத்தல் வரை எல்லாச் செயல்களும் நமக்கு இனியவை இவையிவையேயாம் என்று கொண்டு, அதன்பொருட்டே செய்யப்படுவன.
“திருக்காளத்திநாயனார்க் கினிய செய்கை இவைகொ லாமென் றிதுகடைப் பிடித்துக் கொண்டு” செய்யப்பட்டன என முன்னர்க் கூறியது காண்க. இவ்வாறு செய்யப்பட்டன ஆதலின் அவை நமக்கு இனியனவேயாம். இவை நாமே விதித்த ஆகமவிதிப்படி இனியன வல்ல என்று கொள்ளப்படினும், அவ்வாகமங்களே அன்பினை எல்லாவற்றுக்கு மேலாக விதித்தலால் இவை இனியனவென்று அன்பின் பெருக்காற் செய்யப்பட்டன வாதலின் இவையெல்லாம் நமக்கு இனியனவேயாம் என்றபடி.
“இனியன வல்ல வற்றை இனிதாக நல்கு மிறைவன்”
என்ற ஆளுடைய பிள்ளையார் தேவாரமுங் காண்க.
செயல் எல்லாம் – செயல்கள் எவையாயினும் – விலக்கப்பட்டனவாயினும் – அவை முழுதும் என்றும் அறிவித்துப் போயினர்.
நிலை இவ்வாறு – அன்பு இச்சை என்பன ஒரு பொருளனவாதலின் அஃது இச்சையினையும், அறிவு ஞானத்தினையும், செயல் கிரியையினையும் உணர்த்துவன; எனவே அவரது இச்சை முதலிய மூன்றும் இறைவனையே விடயித்து நின்றன ஆதலின்
“அவனே தானே யாகிய வந்நெறி, யேக னாகி யிறைபணி நிற்க,
மலமாயை தன்னொடு வல்வினை யின்றே”
என்று சிவஞானபோதத்திற் சொன்னபடி இறைவனது பணியில் நின்றார் திண்ணனார். அவரது இச்சை முதலியவை வேறொன்றினையும் கருத வில்லை.
இங்கு நிலை இவ்வாறு என்றது இத்தன்மையிற் சிவத்தையேயன்றி மற்றொன்றிலும் செல்லாது சிவத்தோடு ஏகனாகி இறைபணி நின்ற நிலை குறித்தது. இந்நிலையில் நின்றாராதலின் மலமாயை தன்னொடு வல்வினையின்றாயின என்பதனை இந்தத் திருப்பாட்டில் விரித்துக் கூறினார்.
அறிநீ – “அறிவிக்க வன்றி அறியா வுளங்கள்” என்று சிவஞானபோதத்துக் கூறியபடி இறைவன் காட்டு கின்றாராதலின் அறிநீ – என்றார். அறிவிக்கும் முறை அடுத்த பாட்டிற் கூறுகின்றார். அருள் செய்வார் – செய்வாராகி. முற்றெச்சம். அருள்செய்வார் – மறை முனிவர்க்கருள் செய்து என அடுத்த பாட்டுடன் கூட்டுக.
பின் குறிப்பு (1806 – ன்கீழ் “பொருப்பினில் வந்து” என்பது முதலிய ஐந்து பாடல்கள் சில பிரதிகளிற் காணப்படுகின்றன. பல பிரதிகளில் அவை இல்லை. மேலும் கண்ணப்பதேவர் திருமறத்தில் நக்கீரர் அருளிய பொருள்களை அவை அப்படியே கைக்கொண்டு மொழிந்து கொண்டனர் என்பது பின்னர் அவ்வவற்றின்கீழ்த் தந்துள்ள பகுதிகளால் இனிது விளங்கும். சரித ஆதரவாகக் கொள்ளுதலன்றி இவ்வாறு பிறர் பொருளை எடுத்தாளுதல் ஆசிரியர் சேக்கிழார் மரபன்று. அன்றியும் அவற்றிற் பல பொருள்கள் முன்னர் உரைக்கப்பட்டன. ஓரிடத்துரைத்த உவமை முதலியவற்றை ஆசிரியர் கூறியது கூறல் என்னும் குற்றம்படப் பின்னுங்கூறார் அல்லாமலும்
அவற்றின் வாக்கும் போக்கும் ஆசிரியருடையவற்றினின்றும் வேறுபடுகின்றன. இன்னும் பார்க்கின் அவையில்லாமலே சரிதம் தொடர்ந்து செல்கின்றதும் காணலாம். காஞ்சிபுரம் சபாபதி முதலியார், ஆறுமுகத் தம்பிரானார் முதலிய ஆசிரியர்கள் அவற்றை வெள்ளிப் பாடல்கள் என்றே கொண்டனர். இக்காரணங்களால் அவை இடைச்செருகல்கள் என்று அறியப்படுதலின் இங்குப் பதிக்கப்படவில்லை. ஆயினும் சில பிரதிகளிற் காணப்படுதலால் இப்புராண இறுதியிற் குறிப்புக்களுடன் பதிக்கப்பட்டன.