Author: பத்மநாபபுரம் அரவிந்தன்

  • சிதைவின் குறியீடு

     
    பத்மநாபபுரம் அரவிந்தன் –

    pagarba

    ஒப்பிடல் என்பதே
    மனச் சிதையின் குறியீடு
    அவன் போல் இவனில்லை
    இவன் போல் அவனில்லை
    எவன் போலும் நானில்லை
    இந்நிலை முற்றிய
    மறுகலின் வெளிப்பாடாய்
    குழந்தைகள் மேல் கவியும்
    அவன் போல் நீயில்லை என நீ
    குழந்தைகளைச் சாடுகையில்
    அவற்றின் அடிமனம் சொல்லும்
    எவன் போலும் நீயில்லை
    எனும் உண்மையை…
    ஒருநாள் நீ
    உன் போல் நீயின்றி மாறி
    எல்லோர் போலும் போய் சேர்வாய்…

     

    படத்திற்கு நன்றி :

    http://arefactsoursolid.wordpress.com/2014/03/03/10-hilarious-things-kids-say/

    Share
  • பேரிழப்பு

    பத்மநாபபுரம் அரவிந்தன்t-images

    ஐம்பூதங்களில் ஒன்றின்
    நெடு நீள நாக்குகள்
    அவனை சுவைத்துத் தின்கிறது

    இலக்கியத்தின் இடுக்கு வழி நுழைந்து
    புதுத் தெரு புகுந்தவன்..
    அவனைப் பற்றிய விளக்கத்தை தவிர..
    எதனைக் கேட்டாலும்
    பதில் வரும்
    எத்தனையோ சிந்தனைகள்,
    கலைகள் குறித்த தொலைநோக்கு

    புத்திக்குள் இத்தனையும்
    குத்தியேற்ற முடியுமாவென்ற
    பெருவியப்பு சகலருக்கும்

    அத்தனையும், அத்தனையும்
    வெண் புகையுடன் எரிகிறது
    அவன் கபாலத்தை பொசுக்கும் வலு
    தீ நாவிற்கு இருந்தாலும்,
    அவன் உடலின் மற்ற பாகங்களை
    நக்கித் தின்றது போல்
    அத்தனை எளிதாக
    இயலாது அவன் மூளையை..

    அவன் மூளையுள் நிறைந்தவை
    புகையோடு காற்றில்
    கலந்துயர்ந்து எழுகிறது
    அவன் இறப்பு அவனைத்
    தெரிந்த சகலருக்கும் பேரிழப்பு
    அவனுக்கான இறுதி சொட்டுக் கண்ணீர்
    மயானத் தரையில் விழுந்து மறைகிறது..

     

    https://blogs.discovermagazine.com/notrocketscience/2011/01/06/tears-as-chemical-signals-smell-of-female-tears-affects-sexual-behaviour-of-men/

    Share
  • வர்ணங்களில் மட்டுமல்ல ஓவியங்கள்

    பத்மநாபபுரம் அரவிந்தன்h-index

    அப்பழைய பெருவீட்டில்

    ஆங்காங்கே வர்ணம் இளகிய

    சுவர்களில்த் தெரிகிறது

    பல உருவங்கள்,  உற்று நோக்க

    கூந்தல் விரித்தப் பெண்ணொருத்தி,

    புல்மேயும் பசுக்கள்,

    நெடும்பெருந் தடாகம்,

    வாள் ஏந்தியப் போர் வீரன்,

    முன்னங்கால்கள் தூக்கியக் குதிரை,

    இலையுதிர்ந்த மரம்,

    மரணப் படுக்கையில் ஒரு முதியவர்..

    இன்னும் எத்தனையோ அவ்வப்போது

    மனநிலைக்கு ஏற்றவாறு..

    உசிந்து பாருங்கள்

    வர்ணம் உதிர்ந்த சுவர்களை

    அப்பொழுது புரிய வரும்

    வர்ணங்களில் மட்டுமல்ல

    ஓவியங்கள் என்பது…

    http://www.thehindu.com/news/cities/bangalore/gullies-over-the-high-street/article4580921.ece

    Share
  • பார்வை

    பத்மநாபபுரம் அரவிந்தன் images

    அதிகாலை எழுந்து
    குளிர் பனியில்
    நடுங்கி தெருவினில்
    போட்ட பூக்கோல அழகில்
    திளைத்து ஆசையுடன்
    அவனுக்கும் காட்ட எண்ணி
    தூங்குமவனை எழுப்பி
    கையோடு அழைத்து வர
    தூக்கம் போன சோகத்தில்
    கண் கசக்கி அவன் பார்த்தது
    கோலத்தின் மேல் வடித்து செல்லும்
    கழிவு நீர் நிறைந்த டேங்கர் லாரியை மட்டுமே..

    Share
  • எண்ணை வயலில் எண்ணப் பூக்கள்

    பத்மநாபபுரம் அரவிந்தன்

    Oil_platform_P-51_(Brazil)

    பாற்கடலைக் கடைந்து

    அமுதெடுத்தப் புராணக்கதை படித்ததுண்டு

    ஆழ்கடலைக் குடைந்து

    எண்ணை எடுக்கும் வேலை எமக்கின்று…

    எங்களுக்கு இரு குடும்பங்கள்

    ஒன்று கடலோடு.. மற்றொன்று கரையோடு..

     

    இரண்டுக்கும் எம் வாழ்வில் சரிபங்குண்டு…

    வருடத்தில் சரிபாதிக் கடலோடும்

    மீதத்தைக் கரையோடும் களிக்கும்

    நாங்கள் கரையில் பிறந்தவரா

    இல்லை கடலின் புத்திரரா?

     

    பணி முடித்து ‘உலங்கு வானூர்தியில்*’

    கடல்மீது பறக்கும் போது மனது

    களிக்கப் போகும் விடுமுறை நாட்களை

    கனாக் கண்டு கண் மூடும்…

     

    இருபத்தெட்டு நாட்களுக்குப் பிற்பாடு

    கரை தொட்ட மகிழ்சியில் மனம் கூத்தாடும்..

    விடுப்பின் நாட்கள்

    நொடிகளாய்க் கடந்து மீண்டும்

    கடல் நோக்கி அமையும் எமது பயணம்…

     

    முதல் சில நாட்கள்

    கரையின் மணமே மனதுள் கமழும்

    மெல்ல, மெல்ல கடலோடிணையும்…

    எண்ணையூற்றின் கண்களைத் துளைத்து

    திளைத்தெழும் எண்ணையில்

    ஒளிவிட்டெரிகிறது எங்கள் வாழ்வு..

     

    பாற்கடல் கடைந்து அமுதெடுத்து

    சாகாவரம் பெற்றனர் அவர்கள்..

    ஆழ்கடல் குடைகையில் தவறேதும் நிகழ்ந்தால்

    சாகும் வரம் பெற்றிடுவோம் நாங்கள்…

     

    மனதும், உடலும், உணர்வும்

    ஒன்றிச் செய்யும் இவ்வேலை

    காமத்தையொத்தது… ஓய்வு நேரத்தில்

    மனவோரம் மறைந்திருக்கும்

    குழந்தைகளின் முகமும்

    மனைவியின் சுகமும் படர்ந்தெழும் எம்முள்..

     

    தொலைபேசியும், மின்னஞ்சலும்,

    முகநூலும் குடும்பத்தோடு இணைக்கும்..

    இவை கிடைக்காத போது

    அந்நாட்கள் வதைக்கும்..

    நாங்கள் கடலில் உழைப்பது – எம் குடும்பம்

    கரையில் திளைக்கவே..

     

    ஒன்றினை இழந்தால் தான்

    மற்றொன்றைப் பெறமுடியும்

    என்ற சித்தாந்தம் – மற்றவர்களை விட

    எங்களுக்கு சற்று அதிகமாய்ப் பொருந்தும்…

     

     * உலங்கு வானூர்தி – HELICOPTER

    (பி.கு – இக் கவிதைக்கு தலைப்பிட்டவர் எங்கள் Rig Manager – சேலம் ஸ்ரீதர்)

    Share
  • மெய்க் கீர்த்தி

     பத்மநாபபுரம் அரவிந்தன் rest

    மரங்கள் கூட அசையாத

    வன்னிருட்டில் அவன் நடக்க, நடக்க

    இருள் பழகி பாதை தெரிந்தது..

    விடியலின் போதவன் போகும்

    ஊர் போய் சேர்ந்திருந்தான்.

    வரையவே வராது என்றிருந்தவன்

    வரைந்து பார்ப்போமே என

    வரைந்த ஓவியங்கள்

    பெருந்தொகைக்கு விலை போயின..

    முயன்று பார்க்கலாமென அவன்

    முழு மூச்சாய் முயன்றவை முழுவதையும்

    வென்றெடுத்தான்…

    போதுமென்ற நிறைவோடு

    ஓய்ந்திருக்க

    என்ணியவன் ஒதுங்கி இருக்கையிலே

    மரணம் அவனை ஆரத் தழுவியது…

    படத்துக்கு நன்றி

    http://www.visualphotos.com/image/2×4377802/dubai_uae_man_taking_rest_on_park_bench_along

    Share
  • விரிசலுக்குப் பிற்பாடும்

                                                        – பத்மநாபபுரம் அரவிந்தன் –

     

    உனக்கும் எனக்குமான நட்பில்
    விழுந்த விரிசல் – உன்
    ஒரு சொல்லால் விளைந்தது
    பிற்பாடு நீ கேட்ட மன்னிப்புகள் அத்தனையும்
    உன்னையே நிலை நிறுத்தி
    என்மீதுக் கவிழ்ந்ததாய் இருக்க
    விரிசல் விரிவடைந்த பிற்பாடு
    நீயோ, நானோ பரஸ்பரம்
    பார்ப்பதைத் தவிர்த்தும்
    எதேச்சையாய் உன்னை எங்காவது
    காணும் போதினில் இதயம் சுற்றி
    வலையொன்று இறுக்கும்..

    கண்கள் தானாய் வேறிடம் நோக்கி
    கால்கள் அதுவாய்த் திரும்பி நடக்கும்
    மனதுள் மட்டும் ஏக்கம் புரண்டு
    நீ அழைக்கும் குரல் கேட்க
    காதுகள் விடைத்துக் கூர்மையாகும்

    உனக்கும் வாய்வரை வார்த்தைகள் வரலாம்
    அடக்கிக் கொள்கிறாய் என்னைப் போலவே

    எது எப்படியாயினும் உன்னைப் பற்றி
    தவறாய் எவரேனும் சொல்லும் போது
    என்னையும் அறியாக் கோபம் வரும்
    இன்னமும் உள்ளே
    எங்கோக் கிடக்கிறது உனக்கான
    என் நட்பின் உதிரித் துளிகள் ..

     

    படத்துக்கு நன்றி: http://www.youthkiawaaz.com/2011/04/power-of-friendship/

     

    Share